சனி, ஜூலை 22, 2006

மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...


மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...

'சினிமா நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் இல்லையென்றால் இனிமேல் எங்களால் படமெடுக்க முடியாது' என்று ஒற்றைக்காலில் நிற்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். 'ஓடுகின்ற குதிரையின் மீதுதானே பணம் கட்டுகிறீர்கள். தரமில்லாத சரக்கு என்றால் எதற்காக அதற்குப் போட்டி போடுகிறீர்கள்?' என்கிறது நடிகர் சங்கம். ஒரு படம் கருவாகி, உருவாகி, வெளியாகி ஓடுவதற்கு எத்தனை பிரிவினரின் உழைப்பு தேவைப்படுகிறது? பட்டியல் இடுவோம். கதாசிரியர், இயக்குநர், வசனகர்த்தா, உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவாளரின் உதவியாளர்கள், லைட்மேன்ஸ், ஆர்ட் டைரக்டர், அவருடைய உதவியாளர்கள், ஸ்டன்ட், நடனக் கலைஞர்கள், துணை நடிகர்கள், புரொடக்ஷன் ஆட்கள், புரொடக்ஷன் மேனேஜர், வாகனம் ஓட்டுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள், பரிமாறுகிறவர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடுபவர்கள், பேசுபவர்கள், ஆடை வடிவமைப்பவர்கள், பத்திரிகைத் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஷ¥ட்டிங் ஸ்பாட் ஏஜெண்டுகள்... இன்னும் சொல்ல மறந்த எத்தனையோ பேரின் உழைப்பு சினிமா வெற்றிக்குத் துணை நிற்கிறது.

இவ்வளவு உழைப்புக்கும் பணம் செலவிடுகிற தயாரிப்பாளர், அவருக்குத் துணை நிற்கிற விநியோகஸ்தர்கள், சினிமா தியேட்டர் அதிபர்களின் திரையீடு உத்திகளும், திறமைகளும், பணம் புரட்டப் படும் பாடுகளும் உழைப்பின்றி வேறென்ன? மேலே குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினரின் உழைப்பு, நடிகர்களின் உழைப்புக்குச் சற்றும் சளைத்ததில்லை. அப்படியென்றால் இத்தனை குதிரைகள் இழுத்துக் கரை சேர்க்கும் சினிமா தேரை, நடிகர்கள் மட்டும் இழுத்துக் கரை சேர்த்ததாகச் சித்திரிப்பது, எந்த வகையில் நியாயம்?

லைட்மேன் 'குதிரை'யின் மீதோ, வட இந்திய நடிகர்களுக்குக் குரல் கொடுத்து அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டும் பின்னணிக்குரல் தரும் 'குதிரை'யின் மீதோ யாரும் பணம் கட்டாதது ஏன்? அஜீத்தும், விஜய்யும், ரஜினிகாந்தும், ஜோதிகாவும் மட்டுமே முழுப் படத்தின் வெற்றியைச் சுவைப்பது எப்படி நியாயம்? இது தமிழ் நடிகர்களுக்கு மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்களுக்குமான நியாயமாகவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு, பழக்கத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டது.
ஆம்! வெறும் பழக்கம்தான். வாழ்க்கையே சில பழக்கங்களின் தொகுப்பு எனும்போது இது மட்டும் பழக்கமாக இருக்கக்கூடாதா? நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் பழக்கமும், அவர்களுக்கு விதம்விதமான பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்தி விருதுகள் வழங்கும் பழக்கமும், நடிகர்களின் காதல்களையும் கல்யாணங்களையும், விவாகரத்து விவகாரங்களையும் தலைப்புச் செய்திகளாக்கிய பத்திரிகைகளின் பழக்கமும், குழந்தைகளுக்குக் கடவுள், தேசத் தலைவர், மகான்களின் பெயர்களை விட நடிகர்களின் பெயர்களைச் சூட்டி மகிழும் பழக்கமும், அவர்களைப் போலவே ஆடையும், அலங்காரமும் செய்து கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதுதான் நடிகர்களை முன்னுதாரணப் பிரதிநிதிகளாக்கியிருக்கிறது. அவர்கள் பேசும் சினிமா வசனங்கள் பொன்மொழிகளாக - ஆட்டோ வாசகங்களாக - மனக் கல்வெட்டாக மாறும்போது அந்த உயர்ந்த மனிதர்களுக்கு உயர்ந்த ஊதியமும் வழங்குவதில் தவறு இல்லைதானே? எந்தக் கலெக்டருக்கு, காவல் துறை அதிகாரிக்கு மக்கள் ரசிகர் மன்றம் அமைத்தனர். நல்லவர்கள் போற்றப்படுவதில்லை. ஊழல் செய்யும் ஒன்றிரண்டு அதிகாரிகளைக் கிழிகிழி என்று மீடியாக்கள், லஞ்சமே வாங்காதவர்களுக்குக் 'காலமானார்' பகுதியில் கூட இடம் தருவதில்லையே... நடிகர்கள் சிறந்த நடிகர் விருது வழங்கும் அமைப்புகள்தான் எத்தனை? மத்திய அரசும், மாநில அரசும் மட்டும் இதில் விதிவிலக்கா? சிறந்த விவசாயியையோ, சிறந்த விஞ்ஞானியையோ, சிறந்த எழுத்தாளரையோ இப்படி போட்டி போட்டுக் கொண்டு அமைப்புகள் கெளரவிக்கின்றனவா? நடிகர்களின் வீட்டில் மட்டும் கேடயங்கள் அணிவகுப்பு ஏன்? சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நகரின் மிகப் பெரிய அரங்கில் விழா. அனைத்துப் பிரபலங்களும் விழாவுக்கு வந்து போக விமான ஏற்பாடுகள், கார் ஏற்பாடுகள்,

''நடிகர்களை இத்தனைச் சிறப்பாகக் கெளரவிப்பதில் இந்த விழாவை நடத்தும் சினிமா பத்திரிகைக்கு என்ன லாபம்?'' என்று என்னிடம் கேட்டார் விழாவில் விருது பெற்ற ஒரு நடிகை.
''பத்திரிகைக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும்'' என்றேன். ''அதற்காக எவ்வளவு செய்கிறார்கள்?''
''ஏறத்தாழ ஒன்னரை கோடி ரூபாய்" ''அவ்வளவு பணம் திரும்பக் கிடைக்குமா?''
''கிடைத்து விட்டது''
''எப்படி?''
''ஒரு இரண்டு சக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனி ஸ்பான்சர் செய்திருக்கிறது"
''அவர்கள் அந்தப் பணத்தைப் திரும்ப எடுத்து விடுவார்களா?''
''இந்நேரம் எடுத்திருப்பார்கள்'' நடிகையின் புருவம் உயர்ந்தது
''எப்படி?''
''ஒன்னரை கோடி என்பது அந்த நிறுவனத்தின் 100 வண்டிகளின் விலை. இந்த விழா விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு 500 வண்டிகளாவது விற்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செலவு செய்தது மாதிரி ஐந்து மடங்காகப் பணம் திரும்பும்...''
''அப்படியானால் இவ்வளவு செலவையும் எற்றுக் கொள்பவர்கள்?...''
''வேறு யார்? மக்கள்'' என்றேன்.
பக்கத்தில் இருந்த என் நண்பர் திருத்தினார் : ''வழக்கம் போல...''
-தமிழ்மகன்

2 கருத்துகள்:

-L-L-D-a-s-u சொன்னது…

ஆஹா அருமையானப் பதிவு ..

நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் மட்டுமா வைக்கிறார்கள் !! அது சாமான்யன்கள் செய்யும் வேலை.. அரசாங்கம் அதனை விட பெரியது இல்லையா.. ஆதலால், சிலையும் வைக்கிறார்கள் .. மாமனிதராம் ..மஹாத்மாவாம்.. ம்.ம்ம்.. தெயவமாவது எப்போதென்று தெரியவில்லை .

துளசி கோபால் சொன்னது…

என் மனசை அப்படியே எக்ஸ்ரே எடுத்தாப்போல இருக்கு இந்தப் பதிவு.

நிழல்களை மதிக்கத்தெரிந்த மனிதனுக்கு நிஜங்களை நினைக்கக்கூட நேரமில்லை(-:

LinkWithin

Blog Widget by LinkWithin