திங்கள், அக்டோபர் 29, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!





பத்ரி

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.


""இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு "கெஸ்ட் ஆஃப் ஹானர்' என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். "இந்தியன் ரைட்டிங்ஸ்' என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் "தி லைன் ஆஃப் ஃபயர்' நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை'' என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

""தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?'' என்றோம்.

""நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் "அள்ள அள்ள பணம்' என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை'' என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

கையேந்தும் நிலையில் கோட்டை அரசர்கள்!







விண்ணப்பப் படிவங்களில் இப்படி ஒரு கட்டம் இருப்பதை நிச்சயம் எல்லோரும் பார்த்திருப்பார்கள்.



ரெங்கையா முருகன்


நீங்கள் பழங்குடியினரா? அதில் பெரிய ஆர்வம் இருக்காது பலருக்கும். உண்மையில் பழங்குடியினர் என்பவர் யார்? அவர்களுக்கு எத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஏன் பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது ஆழ்ந்த சமூக ஆய்வுக்குரிய பொறுப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. சென்னையில் இயங்கிவரும் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் அதற்கான மகத்தான ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் நூலகராகவும் ஆய்வாளராகவும் பழங்குடி செயல்பட்டு வருகிறார் ரெங்கையா முருகன். இந்தியா முழுக்க உள்ள பழங்குடியினரின் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து அவரிடம் பேசினோம்.

பழங்குடியினர் பற்றிய ஆய்வு ஏன் தேவைப்படுகிறது?

இந்தியாவின் மற்ற குடியினருக்கும் பழங்குடியினருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். மரங்களை வெட்டாத, கலப்பை கொண்டு நிலத்தை உழுவதைக் குற்றம் என்று கருதும் பழங்குடி வகுப்பினர் இருக்கிறார்கள். அவர்கள் சடங்குகளும் தெய்வங்களும் நம்பிக்கைகளும் இயற்கையோடு இணைந்தவை. இந்திய சமூகம் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தும் பசுமை புரட்சி, தொழில் புரட்சி எதுவுமே அவர்களுக்கு முக்கியமில்லாதவை, அதைப்பற்றி அவர்கள் தெரிந்திருக்கவும் இல்லை. ஆனால் நம்முடைய இந்தப் புரட்சிகளை நிகழ்த்துவதற்கு சம்பந்தமுள்ள அடிப்படைப் பொருள்கள் அங்குதான் கிடைக்கின்றன. அவர்கள் வசிக்கும் இடத்தில்தான் நாம் நம் வளர்ச்சிக்கான பாக்சைட்டையும் நிலக்கரியையும் தோண்டுவதற்காக அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறோம். இயல்பான இயற்கையான வாழ்க்கையை நாம் கேள்விக் குறியாக்கியிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறையிலிருந்து அவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதற்காகவும் அவர்கள் வாழ்க்கை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய ஆய்வுகள் தேவையாக இருக்கிறது.

இத்தகைய ஆய்வுகளில் உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் எத்தகையவை?




பழங்குடிப் பெண்


இடர்பாடுகள் என்பது அவர்கள் இருக்கும் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படுகிறது. உதாரணத்துக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடிகளான ராபா இனத்தவரை ஆய்வு செய்யச் சென்ற போது அவர்கள் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. குளிர் காலங்களுக்கான உணவை அவர்கள் ஒரு குடிலின் நடுவே கட்டித் தொங்க வைத்திருக்கிறார்கள். அது காட்டெருமை (மிதுன்) இறைச்சி. பனியின் காரணமாக கெட்டுப் போகாமல் உறைந்த கொழுப்போடு தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தேவைப்படும் போது அறுத்து எடுத்து வேக வைத்து உண்கிறார்கள். என்னால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடாமல் ஆரஞ்சு பழச் சுளையை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். மூன்றாம் நாளில் இருந்து பழங்குடி மக்கள் என்னைக் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்தான் மூன்று நாளாக சாப்பிடாதவர் என்று என்னை ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தி ஆச்சர்யமும் வருத்தமும் அடைந்தனர்.

முடிந்த அளவு அவர்கள் போலவே நாமும் உடையணிந்து, அவர்கள் போலவே சாப்பிட்டு அவர்கள் போலவே நடனமாடி அவர்களுள் ஒருவராக மாறவேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதைத் திறக்க முடிகிறது. சில சமயங்களில் கூட்டமாக அமர்ந்து புகைபிடிப்பார்கள். அவர்களோடு நாமும் அமர்ந்து அந்த எச்சில் உக்காவை இழுக்க வேண்டும். அஸ்ஸôம் உல்பா இயக்கத்தினருக்கும் ராணுவத்தினருக்கும் நடக்கும் சண்டைகள் உயிர்பலிகள் பழங்குடிகளை மிகவும் பாதித்திருக்கிறது. டுமில் டுமில் என்று வெடிச்சத்தம். நாமும் அவர்களோடு ஒருவராக ஓட வேண்டியிருக்கிறது. ராணுவத்தினர், இயக்கத்தினர் இருவருமே நம்மை விரோதிகளாக நினைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பழங்குடியினரிடம் நீங்கள் பிரமிக்கும் அம்சம்?

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைத்தான் சொல்ல வேண்டும். நமக்கெல்லாம் 10 தாவர வகைகளின் குண இயல்புகள் தெரிந்திருந்தால் பெரிய விஷயம். அவர்கள் குறைந்தது பத்தாயிரம் தாவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். விலங்குகள், பறவைகள் பற்றிய அறிவு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. பூகம்பம், புயல் பற்றிய நுண்ணுணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாரம்பர்யமிக்க கலையம்சங்கள் அவர்களிடம் இருக்கிறது. பல பழங்குடியினர் சிமெண்ட், கம்பி, ஆணி போன்றவற்றைப் பயன்படுத்தாமலேயே வீடுகள் கட்டுகிறார்கள். உறுதியானவையாகவும் கடும் குளிரைத் தாங்கக் கூடியவையாகவும் இருக்கின்றன அவர்களுடைய தொழில் நுட்பங்கள். அவர்களின் ஆயுதங்களும் எந்த விலங்குகளிடத்தும் போராடும் உறுதி படைத்தவை.

அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது?

இந்தியாவில் மொத்தம் 624 பழங்குடி பிரிவினர் இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இருக்கிறார்கள். பழங்குடியினர் என்றாலே ஒன்றும் தெரியாதவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது மக்களுக்கு. ஏதோ கை நிறைய வளையல் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பவர்கள் என்பதாகத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள். அணைக்கட்டுகள் கட்டுவதற்காகவும் பாக்சைட், அலுமினியம், வைரச் சுரங்கம், இரும்புத் தாது சுரங்கம் போன்றவற்றுக்காகவும் அவர்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துகிறார்கள். மாத ஊதியம் செய்தோ, பணத்தைச் சேமித்தோ பழக்கமில்லாதவர்கள் அவர்கள். பலர் பணத்தின் தேவையே இல்லாமல் வாழ்பவர்கள். நம்முடைய நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அவர்களுக்குத் தேவையற்ற வாழ்க்கையை அவர்களை வாழச் செய்கிறோம். அவர்களுக்குத் தேவையற்ற கல்வியைத் திணிக்கிறோம். அவர்களை அல்ஜீப்ரா படிக்கச் சொல்வதும் ஆர்கமிடிஸ் கோட்பாடு படிக்கச் சொல்வதும் பொருத்தமாக இல்லை.

உதாரணத்துக்கு ஒரிசாவில் உள்ள கோண்டு இன மக்கள் அவர்களின் மொழியைத் தாண்டி ஒரிய மொழியையும் இந்தி மற்றும் ஆங்கில மொழியையும் பயில வேண்டியிருக்கிறது. இத்தனை மொழிகள் அவர்களுக்கு எதற்கு?

அஸ்ஸôமில் நான் பார்த்தவர்கள் பழங்குடிகள் சேமித்த உணவுப் பொருட்களை எல்லாம் ஒரு பொதுவான இடத்தில்தான் வைக்கிறார்கள். ஒரு முக்கியமான விழாநாளில் அந்த உணவுப் பொருட்கள் எல்லாருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அந்தச் சமத்துவ வாழ்க்கை முறையும் நம்மால் பாதிக்கப்படுகிறது இப்போது.





மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோட்டை


அப்படியானால் அவர்கள் அப்படியே இருக்க வேண்டியது தானா?

அவர்கள் 90}100 வயது வரை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மாலை நேரங்களில் ஒன்றாகக் கூடி அவர்களின் பாரம்பர்யக் கதைகளைப் பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தேவை, உணவு, சடங்குகள் குறித்து விவாதிக்கிறார்கள். ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதை விடுத்து நாம் வாழ்கிற வாழ்க்கைதான் சிறந்தது என்று நாமாகவே முடிவு செய்து அதைத்தான் அவர்களும் வாழ வேண்டும் என்பது சரியில்லை. உதாரணத்துக்கு கோண்டு இன மக்களின் 52 கோட்டைகள் இப்போதும் இருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அந்த அரசர்களின் சரித்திரங்கள் கற்பிக்கப்படுவதில்லை. ராஜ்புத் அரசியாக ராணி துர்காவதியைச் சொல்கிறார்கள். ஆனால் அவர் கோண்டு இன அரசன் தல்பத்ஷாவை மணந்தவர் என்பது பாடங்களில் இல்லை. மத்திய பிரதேசத்தில் ராணி துர்காவதி பெயரில் பல்கலைக் கழகம் இருக்கிறது. ஆனால் அவருடைய கணவர் பழங்குடி இனத்தவர் என்பதால் இந்த இருட்டடிப்பு. எதற்காகச் சொல்கிறேன் என்றால் அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. கோட்டையும் கொத்தளங்களோடு தொழில்நுட்பத் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டு அவர்கள் எதும் அறியாதவர்கள் என்பது எப்படி நியாயம்? அவர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்கும் பணியைச் செய்வதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாக இருக்க முடியும்.




கிக்ரி இசைக் கருவியுடன் பர்கானியா


80 பழங்குடி கிராமங்களுக்கு ஒரு பர்கானியா (மதகுரு போன்றவர்) இருக்கிறார். அந்த 80 கிராம மக்களின் வீட்டுச் சடங்குகளுக்கு அவர்தான் மதகுரு போல. சடங்குகளின் போது தம் இனத்தின் சரித்திரத்தை அவர் இசைப் பாடலாகச் சொல்கிறார். அவர் கையில் கிக்ரி என்று ஒரு இசைக் கருவியும் உண்டு. ஆனால் இப்போது இந்த வழக்கங்கள் எல்லாம் வழக் கொழிந்து வருகிறது. பலருக்கு அவர்களின் மொழியே பழக்கத்தில் இல்லை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடிகள் பலர் கிருத்துவ மிஷினரிகளில் பயிற்சியின் காரணமாக ஆங்கிலத்தைத் தாய் மொழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி மொழியைத் தொலைத்துவிட்டு நிற்கிற பழங்குடிகளுக்குப் பெண் தராத பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். மொழியையே காப்பாற்ற முடியாதவன் பெண்ணை எப்படிக் காப்பாற்றுவான் என்பது அவர்களின் வாதம். இத்தனைச் சூழல்களிலும் அவர்களில் யாரும் பிச்சை எடுக்காதவர்களாகவும் உழைத்துப் பிழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதுதான் பழங்குடி மக்களின் பிரதான அடையாளமாக இருக்கிறது. சமூக வளர்ச்சி என்ற பெயரில் அந்த இயற்கையின் அரசர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் வருத்தத்துக்குரிய அச்சம்.

தமிழ்மகன்

வெள்ளி, அக்டோபர் 26, 2007

தொட்டனைத்தூறும் "மன'ற்கேணி

தமிழ்மகன்

"இத்தனை நிர்மலமான வானத்தின் கீழ்தான் முட்டாள்களும் முசுடர்களும் இருக்கிறார்களா?' என்ற ஆச்சர்யத்தோடு தொடங்குகிறது இந் நாவல். அந்த முதல்வரியேகூட படிப்பதற்கான மனநிலையைத் தந்துவிடும் பலருக்கு.
வெண்ணிற இரவுகளை வாசிப்பது என்பது வெண்ணிற இரவுகளில் வசிப்பது என்று பொருள். வாசிப்பது, வசிப்பது என்பது ஏதோ வார்த்தை ஜோடனை என்று நினைப்பவர்களுக்கு அதற்கான தாகத்தோடு இன்னும் அந்தக் குறுநாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். உண்மையில் ஒரு நாவலைப் படிப்பதற்கான மனநிலையும் தாகமும்கூட தேவையாகத்தான் இருக்கிறது.
நான் முதன் முதலில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அதைப் பற்றிச் சிலாகித்துத்துச் சொல்ல ஒருத்தரும் இல்லை எனக்கு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தபோதும் என்னை அது ஈர்த்துக் கொண்டது. இருப்பினும் மொத்தமாக இது என்ன மாதிரியான கதை என்ற ஆர்வம் மட்டும்தான் அது.

சுமார் 20... 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம். 5 ரூபாய் விலையுள்ள அந்த அழகிய புத்தகத்தை என்.சி.பி.ஹெச். நண்பர் ஒருவரின் அறிமுகம் காரணமாக 20 சதவீதம் விலைக் கழிவுடன் வாங்க முடிந்ததில் அத்தனைத் திருப்தி. அப்போது ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும் கார்க்கியும் மட்டுமே அறிமுகமாகியிருந்தார்கள். "புத்துயிர்ப்பு'ம் "தாயு'ம் படித்திருந்தேன். கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் மனதில் நிறுத்துவது சிரமமாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது. கத்யூஸô, மாஸ்லவா, நெஹ்லூதவ், குருஷேவ், ப்ரஷ்னெவ், ஆந்த்ரபோவ் என்று அந்தப் பெயர்கள் மீது ஒருவித தூரத்துச் சொந்தங்கள் போல ஒரு பாசம் வந்திருந்தது எனக்கு. தூரம் என்றால் பீட்டர்ஸ்பெர்க் தூரம்.

தொகுப்பில் வெண்ணிற இரவுகள் தவிர வேறு சில கதைகளும் இருந்தாலும் வெண்ணிற இரவுகளைத்தான் முதலில் படித்தேன். படித்துப் பார்த்த போது ஏற்கெனவே படித்திருந்த ரஷ்யக் கதைகளுக்கான அடையாளங்களோடு ஒரு தீவிரமான காதல் கதையாக மனதில் பதிவானது. செகாவ், துர்கேனிவ், நிகோலய் கோகல், ஷோலகவ், ஐத்மாத்தவ், வஷிலியேவிச், போன்ற பலருடைய கதைகளையும் படிக்க ஆரம்பித்து மாஸ்கோ நகரில் சுற்றித் திரிகிற மாதிரி பழகியிருந்தது மனசு.

இத்தகைய தருணத்தில் மீண்டும் ஒரு முறை வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அப்போது பலரும் என்னிடம் இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா என்று விசாரிப்பு வகையிலான சிபாரிசு செய்திருந்தார்கள். இந்த முறை சற்று நிதானமாகப் படித்தேன். முதல்முறை மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று மட்டுமே பார்த்தேன். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பது மட்டுமே கதையென்று முடிவு செய்து படித்úது ஞாபகம் இருந்தது. இந்த முறை வரிகளில் கவனம். நம் கதாநாயகன் எப்படி தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறான், நாஸ்தென்கா எப்படி தன் கதையைச் சொல்கிறாள் என்பதை கவனமாகப் பார்த்தேன். இப்படியெல்லாம் உணர்வுச் சிக்கல்கள் இருக்குமா என்ற வியப்பு. மனிதர்கள் இப்படியெல்லாம் ஏங்குவார்களா என்று ஆச்சர்யம். இரவு வெண்மையாக இருக்குமா என்ற சந்தேகம். பரிச்சயம் இல்லாத ஆணிடம் ஒரு பெண் நள்ளிரவில் சந்தித்து தன் சொந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வாளா என்ற தர்க்க நியாயம்... இப்படியெல்லாம் சின்னச் சின்னத் தயக்கங்களும் நானும் தஸ்தயேவஸ்கி படித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதும் பழக்கமாகியிருந்தது எனக்கு.

புதுவசந்தம் என்றொரு சினிமா வந்தது. டைரக்டர் விக்ரமன் இயக்கியது. அதில் ஒரு பெண் தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா, எங்கிருக்கிறான் என்ற குழப்பங்கள். அவன் வரும் வரை அவளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறார்கள் நான்கு நண்பர்கள். காதலன் வருகிறான். காதலனோடு செல்வதா? நண்பர்களோடு இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ""அட அப்படியே வெண்ணிற இரவுகள் கதைப்பா இது'' படம் பார்த்துவிட்டு வந்து நான் பெருமையாக நண்பர்களிடம் சொன்னேன். ரஷ்யக் கதையை தமிழ்நாட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சினிமாவோடு ஒப்பிட்டுப் பேச முடிந்தபோது பெருமிதமாக இருந்தது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை வேகமாகப் புரட்டினேன். சொன்னது சரிதானா என்று சரிபார்த்துக் கொள்கிற தற்காப்புக்காக.

அதன் பிறகு இரண்டு பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கிற மாதிரியோ, இரண்டு பெண்கள் ஒரு பையனைக் காதலிக்கிற மாதிரியோ வந்த சினிமாக்களில் இந்தச் சாயல் தெரிவதை கவனித்தேன். இறுதியாக இயற்கை படம் வந்தபோது வெண்ணிற இரவுகளின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக சினிமா ஆக்கியிருக்கிறார்கள் என்று வியந்து அந்தப் படத்தை பல முறை பார்த்தேன். நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் எத்தனைக் கதைகள். இதன் அடிப்படையில் எத்தனை நாவல்கள்? எல்லாமே வெண்ணஇற இரவுகளை நினைவுபடுத்தும் சந்தர்ப்பங்களாகவே இருந்தன.

இப்போதெல்லாம் வெண்ணிற இரவுகளை மிகநிதானமாகப் படிக்கிறேன். சில நாட்களில் வெண்ணிற இரவுகளின் ஒரு இரவை (ஒரு அத்தியாயம்) மட்டும் படித்துவிட்டு மூடிவிடுகிறேன். படித்த நேரத்தைவிட அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஏதோ ஒரு விஷயம் என்னை அந்த நாவலோடு பின்னிப் பிணைத்திருப்பதை அதைப் படிக்கிற அல்லது நினைக்கிற ஒவ்வொரு முறையும் கவனிக்கிறேன். இதயம்விட்டு இதயம் பாய்ந்து நம்மையும் அந்தக் கதாநாயகனாக்கிவிடுகிற பலம் அந்த நாவலுக்கு இருக்கிறது. 160 ஆண்டுகளாக ஒரு நாவல், அதைப் படிக்கிறவர்கள் எல்லோருக்குமான சொந்த அனுபவமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதன் வெற்றி என்ன? எத்தனையோ சினிமாக்களாக, வேறு வேறு கதைகளாக இது மாறிக் கொண்டே இருந்தாலும் தனித்துவமான மூலநதியாக பிரவகித்துக் கொண்டிருக்கிறது வெண்ணிற இரவுகள், காரணமென்ன?

இத்தனை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை நம்மால் பிரயோகிக்க முடியுமா, இப்படியொரு உணர்வை நாம் சினிமா ஆக்கிவிடமுடியுமா என்ற முயற்சிகள்தான் இத்தனை கதைகளும் சினிமாக்களும் என்று தோன்றுகிறது எனக்கு.

தம்மிடம் பேசும் பழகும் பெண்கள் அனைவரையுமே நாஸ்தென்காவாக நினைத்துப் பாதுகாக்கிற குணம் கொண்டவர்களே வெண்ணிற இரவுகளை வாசிக்க உகந்தவர்களோ என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு. எனக்கான சில நாஸ்தென்காக்கள் நினைவுக்கு வருகிறார்கள். என்னைப் போல தஸ்தயேவஸ்கிக்கு உலகம் முழுக்கப் பல வாசகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி.

பலமுறை படித்திருந்தாலும் இப்போது வாசிக்கும்போது இரண்டு வரிகளுக்கு நடுவே புதைந்திருக்கும் உணர்வுகளை அசைபோட ஆரம்பித்திருக்கிறது மனம். முதல் முறை படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் நடுவே இருபது ஆண்டுகள். இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்து என்ன கண்ணா மூச்சி காட்டுமோ? என்று எதிர்பார்ப்பும் பயமும் இருக்கிறது எனக்கு.


.


நூல் : வெண்ணிற இரவுகள்
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிட்கோ
அம்பத்தூர் எஸ்டேட்,
சென்னை

புதன், அக்டோபர் 24, 2007

மறுபடியும் ஆரம்பிக்கலாம், வழக்கம் போல...!




நோபல் பரிசு பெற்ற டோரிஸ் லெஸ்ஸிங் நேர்காணல்!


வடக்கு லண்டன் பகுதியில் சிறிய வரிசை வீட்டில் உளவியல் அறிஞர் சிக்மெண்ட் ஃப்ராய்டின் கல்லறைக்கு அருகே அமைந்திருக்கிறது டோரிஸ் லெஸ்ஸிங்கின் பறவைசூழ் இல்லம். 25 ஆண்டுகளாக அதே வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார். 87 வயது நோபல் பரிசு வெற்றியாளரான அவர் ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு கண்விழிக்கிறார். பிறகு பலநூறு பறவைகளுக்குத் தீனியிடுகிறார். பிறகு வீடு திரும்பியதும் காலை உணவு.... பெரும்பாலும் அப்போது காலை ஒன்பது மணி ஆகியிருக்கும். பிறகு எழுதுகிறார்... மிகவும் எளிமையாக சாதாரணமாக... ""நான் செய்வதெல்லாம் இவைதான்'' என்கிறார்.


கடந்த ஆண்டு கடுமையான பனி பொழிந்து கொண்டிருந்த மதிய வேளை. வானியல் அறிஞர்கள் சொன்னது போல இங்கிலாந்தின் மிகக் கடுமையான குளிர்காலமாக அது இருந்தது. லெஸ்ஸிங் தன் சமீபத்திய நாவலான "தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் அண்ட் மாராஸ் டாட்டர், கிரியோட் அண்ட் த ஸ்நோ டாக்' பற்றி பேசுவதற்குச் சம்மதித்திருந்தார். எதிர் காலத்தின் பனிக்கால (ஐஸ் ஏஜ்) பயங்கரம் பற்றி சொல்லப்பட்டிருந்த அந்த நாவலின் நாயகன் டேன், இவருடைய "மாரா & டேன்' நாவலிலும் இடம்பெறுகிறான். அதில் டேனும் அவனுடைய சகோதரியும் ஆப்ரிக்க வறட்சியில் இருந்து தப்பிப்பதை கதை விவரிக்கிறது.

தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன்... படிக்கத்தூண்டும் நாவல். யூகத்தின் அடிப்படையில் பின்னப்பட்ட அதே சமயம் நம்காலத்துக்கான நீதியைச் சொல்வதாகவும் இருக்கிறது. ஆனால் இந்த உள்ளுணர்வை நீங்கள் கடந்த காலத்தோடு கட்டுப்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது. நீங்கள் இப்போதும் அது சரிதான் என்று உணர்கிறீர்களா?

நான் "மாரா & டேன்' என்று ஒரு புத்தகம் எழுதினேன். பரிதாபத்துக்குரிய டான்}ஐ சார்ந்துதான் கதை நகர்கிறது. சிலர் அவனை வெறுக்கிறார்கள். வன்முறையைத் தூண்டக் காரணமாக இருந்தவன் என்கிறார்கள். ஆனால் நான் அவனை நேசித்தேன். அதற்கான சம்பவங்களைக் கோர்வைப்படுத்தினேன். நான் பாதி அளவு மூழ்கிய உலகத்தை உருவகித்திருந்தேன். அதனால் அதற்கான புவி அமைப்பைக் கதைக்குள் கொண்டு வருவதும் எனக்கு கடினமாக இல்லை. "மாரா & டேன்' முழுவதுமே வறட்சி காலத்தில் நடக்கும் கதை. அதாவது நான் பார்த்த ஆப்ரிக்காவின் பின்னணியில். என்னுடைய மகன் ஜானும் காப்பித் தோட்ட விவசாயி ஒருவரும் அங்கே இருந்தார்கள். நீங்கள் எப்போதாவது வறட்சியை அனுபவித்திருக்கிறீர்களா?

இல்லை.

கொடுமையானது அது. மக்கள் மடிந்து கொண்டு இருப்பார்கள். தண்ணீர் வறண்டபடி இருக்கும். மரங்கள் காய்ந்து மரணத்தைத் தழுவும். தாளமுடியாத பயங்கரம். அதைக் கற்பனை செய்யக்கூட விரும்பவில்லை.

அகதிகளைப் பற்றிய விவரணைகள் எனக்கு எண்பதுகளில் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தை நினைவுபடுத்தின. அதாவது அப்போது பெஷாவருக்குத் தப்பி ஓடிக் கொண்டிருந்தவர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதை .

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றவர்கள் அனைவருமே அகதிகள்தான் என்பது வெகுகாலம்வரை எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மக்கள் எல்லோரும் வறட்சியின் காரணமாகவோ, வெள்ளம், போர்கள் காரணமாகவோ வேறு இடம் தேடி ஓடுகிறார்கள். ஆனால் இந்த எல்லா வகையான அகதிகளும் வந்து சேருவது ஒரே சாலையில்தான். அவர்களில் பலதரப்பட்ட திறமைசாலிகள் இருப்பார்கள். பலர் அங்கு சென்று மரவேலை செய்பவரையோ, குழாய் ரிப்பேர் செய்பவரையோ வேறு வகையானவர்களையோ தேடி எடுத்துக் கொள்கிறார்கள். என் தோழி ஒருத்தி அவளுக்கு எதாவது தேவையென்றால் அங்கு சென்றுவிடுவாள். அவர்கள் எல்லாம் திறமையானவர்கள்.

நீங்கள் 1949}ல் லண்டனுக்கு வந்தீர்கள். லண்டன் அப்படியேதான் இருக்கிறதா?

இல்லை. அப்போது நான் சந்தித்தவர்கள் எல்லோரும் ராணுவ வீரர்களாகவோ, கடற்படை ஆசாமிகளாகவோ இருந்தார்கள். ஆகவே அவர்கள் பேச்சும் எப்போதும் போர் பற்றியதாகவே இருந்தது. 50}களின் நடுப்பகுதி வரை அவர்கள் பேச்சு அப்படியே தொடர்ந்தது. அப்புறம் என்ன... புதிய தலைமுறைக்குப் போரில் விருப்பமில்லை. சடாரென்று ஒரு நாள் போர் பேச்சுகள் ஓய்ந்து போயின. அதை அந்த வகையில் வலியான விஷயமாகத்தான் பார்க்கிறேன். அந்த மோசமான கடந்த காலத்தின் தடயங்கள் தெரியாமல் உங்களால் வாழ்ந்துவிட முடிவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன். முடியுமா உங்களால்?

வித்தியாசமானதுதான். அதன்பிறகு அதைப் போலவே பாழாக்கியதில் சில கம்யூனிஸ சிந்தனையாளர்களுக்கும் பொறுப்பிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இன்றோ ஒருத்தருக்கும் மதத்தைத் தாண்டி மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

யாரும் எல்லாக் காலங்களிலும் ஒன்றையே நம்பிக் கொண்டிருப்பதில்லை. உங்களுக்குத் தெரியும் வியட்நாம் போரைப்பற்றிப் புளித்துப் போகும் அளவுக்கு எத்தனை சினிமாக்களும் டி.வி. படங்களும் வெளிவந்தன என்று. அது அமெரிக்கா என்றுதான் நினைத்தோம். இப்போது என்ன ஆனது?

காதல் கதை எழுத வேண்டும் என்று நீங்கள் எப்போதும் நினைத்ததில்லையா?

ஒன்று தெரியுமா? காதலைப் பற்றி குற்றம் குறை காண்பது போல எழுத முடியாது. எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படி எழுதுகிறார். அவர் தீவிரமான சோஷலிசவாதி. ""நினைவு வைத்துக் கொள் டோரிஸ். இந்த விஷயத்தை நீ தமாஷாக எழுதிவிட முடியாது. கடவுளுக்கு நன்றி... எனக்கு அதற்கான பிரத்யேக உணர்வுபூர்வமான நரம்புகள் இருக்கின்றன'' என்றார். நல்லவேளை அவர் மற்றவர்களைவிட நன்றாகவே எழுதுகிறார்.

1950}களில் நீங்கள் எழுத ஆரம்பித்த காலங்களில் எதார்த்த நாவல்கள் தவிர வேறு எந்த உத்திகளும் இருந்ததில்லை அல்லவா?

இல்லை. இப்போது எல்லா எல்லைகளையும் உடைத்துவிட்டார்கள். நான் எழுத ஆரம்பித்த நேரத்தில் விஞ்ஞான புனைகதைகள் எழுத ஆரம்பித்திருந்தார்கள். வெகுசிலரே அதைப் படிக்கவும் செய்தார்கள். இப்போதோ... சல்மான் ருஷ்டியை எடுத்துக் கொள்ளுங்கள்... அல்லது தென் அமெரிக்க எழுத்தாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் மாயாவாத எதார்த்தவாதிகள் என்று சொல்லப்படுகிறார்கள்.

பல்வேறு நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்களிடம் மக்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் புத்தகம் எத்தகையவை?

என்னுடைய விஞ்ஞான கதைகள்தான். 'கனோபஸ் இன் அர்கோஸ்" பெரிய அளவில் வாசகர்களைப் பெற்றது. அது ஒரு மதத்தையே உருவாக்கும் அளவுக்குப் போனது. சிகாஸ்தா (அந்த வரிசையில் முதலாக வந்த நாவல்) அதை அப்படியே எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் ஒரு கூட்டுவாழ்க்கை முறையாகவும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் எனக்கு எழுதும் கடிதங்களில் ""எப்போது கடவுள் எங்கள் முன் தோன்றுவார்?'' என்று கேட்கிறார்கள். ""இது மேல் லோகம் சம்பந்தமானது இல்லை... இது என் கண்டுபிடிப்புதான்'' என்று பதில் எழுதுகிறேன். ஆனால் அவர்களோ ""நீங்கள் எங்களைச் சும்மா சோதிக்கிறீர்கள்'' என்று மறுபடி கடிதம் எழுதுகிறார்கள்.

இன்று இப்படியெல்லாம் நடக்கிறதா என்று என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.

அப்போது வேறுமாதிரி இருந்தது. நான் சான்பிரான்சிஸ்கோவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். பெரிய மக்கள் கூட்டத்தின் முன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, ""இனிமேல் நீங்கள் இந்த மாதிரியான வறண்ட எதார்த்தவாத நாவல்களை எல்லாம் எழுதமாட்டீர்கள் என்று நம்புகிறேன்'' என்றார். இன்னொருவரோ ""டோரீஸ் இனிமேல் கத்துக்குட்டித்தனமான விஞ்ஞானப் புனைகதைகளை எழுதி நேரத்தை வீணாக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்'' என்றார். மொத்தக் கூட்டமும் விவாதத்தில் இறங்கிவிட்டது. இப்போது இப்படியெல்லாம் நடக்குமா என்று எனக்குத் தோன்றவில்லை.

60 களுக்குப் பிறகு கலாசாரப் புரட்சி ஏற்பட்டதாக நம்புகிறீர்களா?

கடுமையான போதை வஸ்துகளின் நடமாட்டம் நின்றுவிட்டது. மரிஜோனாவோடு நிறுத்திக் கொண்டார்கள், அதுதான் நடந்தது.
பாலியல் புரட்டி எனப்படுவதும் ... அதைப் புரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த சிரமம் இருக்கிறது... ஏனென்றால் அதற்கு முன்னால் பாலியல் புரட்சி எதுவும் ஏற்பட்டதில்லை போல பேசுகிறார்கள். போர்க்காலங்களில் செய்யப்படாத பாலியல் புரட்சிகளா? போர் காலத்தில் எல்லா பாலியல் புரட்சிகளையும் ராணுவத்தினர் செய்து முடித்துவிட்டனர்.

தி கோல்டன் நோட் புக் மிகவும் பிரபலமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பெண்ணிய சிந்தனை குறித்த என் முதல் நாவல் என்பதால் இருக்கலாம். அதே சமயத்தில் அதற்காக நான் நிறைய சக்தியைச் செலவிட்டேன். 50}களின் கடைசியில் என்னுடைய சொந்த வாழ்க்கை பெரும் குழப்பத்தில் இருந்தது. கம்யூனிஷம் உங்கள் கண் முன்னால் கிழிபட்டுக் கொண்டிருந்தது. இவை எல்லாம் என் நாவலின் கருப் பொருளாகின. என் மொத்த சக்தியையும் இதற்காகச் செலவிட்டேன். இப்படிப் பிரபலமாகும் என்றும் எதிர்பார்த்தேன்.

தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் நாவலிலும் போதுமான சக்தியைச் செலவிட்டிருப்பது தெரிகிறது... உங்கள் 86 வயதிலும்!

ஆனால் இதில் எந்தச் சித்தாந்தத்துக்கும் சவால்விடவில்லை. தி கோல்டன் நோட் புக் எழுதும்போது அதை ஒரு பெண்ணிய நாவலாக்கும்படியாக எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. பெண்களின் சமையல் அறைப் பேச்சுகளை அதில் எழுதியிருந்தேன். எழுதப்படும் சிலவற்றைப் போல சொல்லப்படும் சிலவற்றுக்கு ஆற்றல் இருப்பதில்லை. நான் ஏதோ பிரமாதமாக எழுதிவிட்டதாகச் சொல்கிறார்கள். நான் பெண்கள் பேசிக் கொள்வதைத்தான் எழுதினேன்.

முந்தைய பேட்டியின் போது இனி வரப்போகும் பனி யுகம், நியுக்ளியர் பயங்கரத்தை சிறிய நாய்க்குட்டியாக மாற்றிவிடும் என்று கூறியிருந்தீர்கள். தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் அதற்கான எச்சரிக்கையா?

நான் அப்படித்தான் நினைக்கிறேன். நாம் பல பனி யுகங்களைச் சந்தித்திருக்கிறோம். மிகச் சீக்கிரத்தில் இன்னொன்றைச் சந்திக்கப் போகிறோம். இதில் எனக்கு வருத்தமான விஷயம் என்னவென்றால் மனித சமுதாயம் உருவாக்கியவை என்று சொல்லப்படுபவை எல்லாமே கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில்தான் உருவானவைதான். அதில் பெரும்பான்மையானவை சமீப காலங்களில் உருவாக்கப்பட்டவை. அதை எல்லாவற்றையும் வரப்போகும் பனியுகம் துடைத்தெறிந்துவிடும். நாம் மறுபடியும் ஆரம்பிக்கலாம், வழக்கம்போல.

}தமிழ்மகன்

நன்றி: நியூல்டே.காம்

திங்கள், அக்டோபர் 22, 2007

எட்டாயிரம் தலைமுறை

(காதல் கதை)

தமிழ்மகன்



எட்டாயிரம் தலைமுறைக்கு முன்னால் எங்கள் பரம்பரையில் நிகழ்ந்த கதை இது. வெளியில் சொல்ல வெட்கப்பட்டோ, இதையெல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் என்றோ, எங்கள் குடும்ப வாரிசுகள் அன்றி வேறு யாருடனும் இதைப் பகிர்ந்து கொள்வதில்லை.

ஏறத்தாழ எட்டாயிரத்து ஒன்றாம் தலைமுறையில் இது வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. ராமானுஜர் தனக்குப் புண்ணியம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொர்க்கத்துக்குப் போகும் மந்திரத்தை கோபுரத்தில் ஏறி மக்களுக்குச் சொன்னதுபோல நானும் சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டேன்.


முந்தாநாள் நடந்த இந்திய சுதந்திரத்தைப் பற்றியே ஆளுக்கொரு முரண்பாடுகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த எட்டாயிரம் தலைமுறைக் காதலில் எத்தனை கண்கள் காதுகள் மூக்குகள் ஜோடிக்கப் பட்டிருக்கும் என்று பயப்பட வேண்டாம். இதில் என் மூதாதையரின் சொந்தக் கற்பனைகளோ சொந்தச் சரக்கோ வந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதோடு நான் அறிந்தவரை என் தாத்தா என் அப்பாவிடம் சொல்லியதைத்தான் சத்தியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.


ஓர் உண்மை இந்த சயநல யுகத்தில் மூன்று தலைமுறையாக ஒரேமாதிரியாக இருப்பதே அசாதாரணம் எனும் பட்சத்தில் இதற்க முந்தைய அப்பழுக்கற்ற மனிதர்களின் புயத்திலும் அதற்கு முந்தைய மொழியே உருவாகாத காலத்திலும் எந்தக் கற்பனையும் கலப்படாகியிருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது.


விஷயத்துக்கு வருவோம்.


என் தாத்தா ஏழாயிரத்தித் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்று ஒன்பதாவது தடவையாக இந்தக் கதையை என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் ஒட்டுக் கேட்டுவிட்டேன். ஒவ்வொரு புதிய வாரிசு உருவாகும்போதும் நெல்லைப் பரப்பி அதில் வாரிசு எண்ணை எழுதும் வழக்கம் எங்கள் மரபில் இருந்து வருகிறது. ஒரு தலைமுறைக்கு முப்பது ஆண்டுகள் என்று கணக்கிட்டாலும் இருபத்தி நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.


சொல்லப்போனால் அப்போது தமிழ்மொழிகூட எழுத்துக்களை உருவாக்கி யிருக்கவில்லை. எழுத்து என்ன எழுத்து ? தமிழன் ஒரு கோடு போடுவதற்குக் கூட அறிந்திருக்கவில்லை. காட்டெருமை ஒன்றைக் கல்லால் அடித்து வீழ்த்தி ரத்தம் சொட்டச் சொட்ட அதை குகைக்கு இழுத்து வந்தபோது மண்புழுதியில் ரத்தத்தால் ஏற்பட்ட கோடு அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. விரலால் காட்டெருமையின் ரத்தத்தைத் தொட்டு குகையிலும் இங்கும் அங்கும் கோடுகள் போட்டான். அவனுக்கு பிரமிப்பு தாளவில்லை. திகைத்துப் போய் அந்தக் கோடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ரத்தத்தை இப்படி விரயமாக்குவதற்காக சக கூட்டாளிகளின் கோபமான கர்ஜனைக்கு ஆளானான் அவன். அந்த கர்ஜனையைத் தமிழ் கர்ஜனை என்றுதான் இன்று நினைக்கத் தோன்றுகிறது.


மொழியோ ஆடையோ கலாபூர்வமான சிந்தனைகளோ இன்றி அந்தக் கூட்டத்தினர் வாழ்ந்த பிரதேசமே கூட எது என்று இன்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதியா, அதற்கும் மேலே இருக்கும் பிராந்தியமா என்று தெரியவில்லை.


நல்ல நிலவொளியில் காட்டெருமை இறைச்சியைப் புசித்துவிட்டு குகைவாசலில் ஆளுக்கொரு தினுசாய் மல்லாந்திருந்த வேளையில், எதிர்ப்பாறையில் சாய்ந்திருந்த இளம்பெண் நிலவொளியின் பிரதிபலிப்பில் ஒளிவிளிம்பாகத் தெரிந்தாள், ரத்தக்கோடு போடும் நம் கதாநாயகனுக்கு.


ஆரம்பத்தில் எதேச்சையாகப் பார்த்த அவனுக்கு அந்தப் பெண்ணின் ஒளிவளைவுகளில் எதோ வசியம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் பார்த்தான். இதற்கு முன்பெல்லாம் பசிநேரத்தில் அகப்படும் ஏதோ கிழங்குவகையோ முயலோ அவளை அப்படிப் பார்க்கத் துாண்டியிருந்தாலும் இது வித்தியாசமான பார்வை என்பது அவனுக்குப் புரிந்தது. மற்றவர் யாரும் தன்னுடைய நடவடிக்கையை வித்தியாசமாகப் பார்க்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் அவன். இனப்பெருக்க வேட்கை போன்ற வழக்கமான உணர்வுகள்போல் அவள்மீது தாவாமல் வெறுமனே ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவனது நோக்கமாக இருந்தது.


இது என்னமாதிரியான உணர்வு என்பதை அவனது மூளையால் இனம்காண முடியாமல் மகா அவஸ்தையோடு திடாரென்று கத்தினான். ஒருவிதமான ஊளை. காலைப் பின்னிக்கொண்டு பாறைமீது சாந்திருந்த பெண்ணுக்கு இந்த ஊளைச்சத்தம் தன்பொருட்டு எழுந்ததுதான் என்பது புரிந்து சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.


அவளுடைய தோரணையும் நிலவொளி அவள்மீது ஏற்படுத்தி யிருக்கும் ஒளித்தடயமும் நம் கதாநாயகனைப் பரிதாபமான நிலைக்குத் தள்ளியது. அவளை... அவள் இருக்கும் காட்சியை எப்படியாவது பதிவுசெய்ய வேண்டும் என்ற பொருள்படும் படியான ஒன்று அவன் மூளையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. சிந்தனையின் அழுத்தத்தால் திணறினான்.


அவளை எழுதுகோலால் கவிதையாக வடிக்கவோ, இசைக்கருவி கொண்டு சங்கீதமாக வாசிக்கவோ, ஒரு துாரிகைகொண்டு ஓவியமாக்கவோ அவன் நினைத்திருக்கக் கூடும்!


ஆவேசமாக ஒரு கூரான கல்லை எடுத்தான். மிகுந்த சிரமப்பட்டு அவன் அமர்ந்திருந்த பாறையின்மேல் பெருக்கல் குறி போன்ற ஒன்றைக் கீறினான். அந்தப் பெருக்கல் குறிக்கு மேலே ஒரு வட்டம் போட்டான். அவள் அமர்ந்திருக்கும் காட்சியைத்தான் அப்படிப் பதிவாக்கினான்.


அவன் அடைந்த பூரிப்பில் தலை, நாடி, வயிறு என்று பல இடங்களில் தானே பிறாண்டிக் கொண்டான்.


ஒரு பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி மனிதன் படைத்த முதல் படைப்பு அது. மனிதன், கல் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரிந்த தொழிலாளியாகி, இப்போது கலைஞனாகவும் மாறிவிட்டான் என்பதைக் கொண்டாடத் தெரியாத அவனுடைய சகக் கூட்டம் மிதப்பான குறட்டையில் அயர்ந்து கிடந்தது.


நம் கதாநாயகனின் படைப்புசார் பூரிப்பால் ஏற்பட்ட குதியாட்டம் நம் நாயகிக்கு 'இது என்னடா இம்சை ' என்பது போன்ற கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவள் அப்படியே முட்டிபோட்டு நகர்ந்தவாறே நம் நாயகனை நெருங்கி, அவன் பாறையில் ஏற்படுத்தி யிருந்த படைப்பை, சித்திரத்தை, அவனது கிறுக்கலைப் பார்த்தாள். அவள் கண்களில் திகைப்பு. அவன் படைத்தது என்ன என்று புரிந்துவிட்டது அவளுக்கு. முதல் வாசகி, முதல் ரசிகை, முதல் விமர்சகி.


எத்தனையோ இஸங்களாக, இலக்கியச் சர்ச்சைகளாக, காப்பியங்களாக தமிழும், அதன் இலக்கியங்களும் காலவோட்டத்தில் செய்யவிருக்கிற அதியற்புதமான மாற்றங்களை யூகிக்கமுடியாத ஆதிமனித ஆச்சர்யம் அது. பாராட்டும் விதத்திலோ நன்றி தெரிவிக்கும் பொருட்டோ பூனைபோல அவனை உரசினாள் அவள்.


மறுநாட் காலை முட்புதர்களை அகற்றிக் கொண்டிருந்தான் நாயகன்.


அந்த மனிதக் கூட்டம் வசித்துவந்த குகைப் பகுதியில் நிரந்தரமான ஒரு பெருந்தொல்லை நிலவி வந்தது. விலங்குகளிடமிருந்து ஏற்பட்ட தொல்லையைவிட கொடுமையானதாக இருந்தது அது. எந்த விலங்கும் ஒருமுறை கல்லால் அடித்துக் கொன்றபின் மீண்டும் உயிர்கொண்டு வருவதில்லை.


அந்த இனம் பாடுபட்டுக் கொண்டிருந்தது முட்செடிகளால். குகையைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கும் அந்த முட்செடிகளால் நாம் வசிப்பிடம் இன்றி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக சைகைகளால் தீர்மானமாகச் சொல்லி யிருந்தாள் அவர்களின் குழுத்தலைவி. அப்போது தாய்வழி சமூகஅமைப்பு நிலவியது. ஆகவே பசியாறுதல், இனப்பெருக்கம் செய்தல், ஓய்வெடுத்தல் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு, தீ மூட்டுதல், முட்செடிகளை அழித்தல் போன்ற கடமைகளும் அவலர்களுக்கு இருந்தது. இந்த இனக்கரிசனம் காரணமாக உந்தப்பட்டு புதர்களை வேரடிமண்ணாக அழித்துக் கொண்டிருந்தான் நாயகன்.


நம் நாயகியும் அங்கே வந்துசேர்ந்தாள். அந்தப் பெருக்கல்குறி ஓவியம் அவன்மீது அவளுக்கு மரியாதையை ஏற்படுத்தி யிருந்தது. எதிர்பார்க்காத வண்ணம் அவனைநோக்கிப் பற்களைக் காட்டினாள். நம் நாயகனுக்கு அது ஓநாயின் சீற்றத்தை ஞாபகப் படுத்தியது. பயந்துதான் போனான். ஆனால் அது சீற்றம் இல்லை என்று உடனடியாக விளங்கி விட்டது. காலையில் புதிதாகப் பார்ப்பதற்கு அடையாளம் போல அப்படிச் செய்தாள். பதிலுக்கு நாயகனும் அப்படிச் செய்தான். பிற்காலங்களில் இந்த வழக்கத்துக்கு 'பு ன் ன கை ' என்று பெயரிட்டனர்.


நாயகன் வெட்டியெறிந்த செடிகளில் வண்ணமயமான ஒரு பகுதி அவளை வசீகரித்தது. அது அந்தத் தாவரத்தின் பூ என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் இன்னும் சற்று நெருங்கிவந்து அந்தப் பூக்களை மட்டும் தனியே கிள்ளி எடுத்தாள் கைநிறையப் பூக்களோடு அவள் நிற்பது அவனுக்குப் பயங்கரமான.கிளர்ச்சியை உண்டுபண்ணியது. மீண்டும் ஒரு சித்திரம் தீட்டும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். உடனே அவளை அந்தப் பூக்களோடு குகைவாசலுக்கு இழுத்துவந்தான். ஒரு கூரான கல்லை எடுத்து சித்திரம் கீறத் தொடங்கினான். குச்சி உருவ சித்திரம். அவனுடைய படைப்புத் தவிப்பின் நேர்த்தி அதில் மிளிர்ந்தது. கீறி முடியும் தறுவாயில்தான் தங்களைச் சுற்றி தம் இன மக்கள் சூழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது அவர்களுக்கு.


தலைவி மிகுந்த ஆவேசத்தோடு ஒரு கல்லை எடுத்து நாயகன்மீது எறிந்தாள். சுற்றி நின்றிருந்த மற்றவர்களும் உடனே ஆளுக்கொரு கல்லை எடுத்தனர். தங்கள் குல எதிரியாகக் கருதிவந்த முட்செடியின் ஒரு பகுதியை ஒரு பெண் கையில் சுமந்து கொண்டிருப்பதும் அதை ஒருவன் குகையில் சித்திரமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும் ஒரு பேராபத்தின் முன்னறிவிப்பாகத் தோன்றியது அவர்களுக்கு.


எல்லோரும் சொல்லிவைத்தது மாதிரி கற்களை எறியத் தொடங்கினர். உருட்டுக்கட்டை கொண்டு அவர்களைக் கொன்றுவிடும் நோக்கத்தில் சிலர் பாய்ந்தனர். பூக்களை வைத்திருந்த நாயகனுக்கும் நாயகிக்கும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து புரிந்தது. இருவரும் ஓட ஆரம்பித்தனர்.


தங்கள் கூட்டத்தை விட்டு வெகுதுாரம் ஓடினர். வேறொரு குகையில் வாழ்க்கையைத் தொடங்கினர். முட்செடிகளைப் பயிரிட்டு மகிழ்ந்தனர். பின்னாட்களில் அது ரோஜா என்று பெயர்பெற்றது. இப்போதும் காதலின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகிறது.


புதுக் குகையில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு (8000 - 1 தலைமுறைக்கு முன்) ஏகப்பட்ட சைகைகளின் மூலமாகவும், சித்திரக் கோட்டோவியங்கள் மூலமாகவும் தங்கள் கதையைச் சொன்னான் நம் நாயகன். இந்தக் கதையின் அடையாளமாகத்தான் எங்கள் வீட்டுத் தொட்டியில் ஒரு ரோஜாச்செடி இருக்கிறது இப்போதும்.


(காதலர் தின சிறப்புக் கதை)

செவ்வாய், அக்டோபர் 16, 2007

வனமும் இனமும்!







"ஆட்டோ சங்கர்' நெடுந்தொடருக்குப் பிறகு சந்தனக் கட்டை வீரப்பன் கதை(சந்தனக்காடு)யை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. இந்த இரண்டுத் தொடர்களையும் இயக்கியிருப்பவர் வ. கெüதமன். சர்ச்சைக்குரிய மனிதர்களை கதாநாயகர்களாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவருக்கு வாடிக்கையாகியிருக்கிறது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, "இத் தொடர் வெளிவந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்' என்று கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் இயக்குநர் கெüதமனைச் சந்தித்தோம்.

ஆட்டோ சங்கர், வீரப்பன் என்று நிஜ மனிதர்களின் கதையையே தொடர்களாக்கிக் கொண்டிருப்பதற்குப் பிரத்யேகக் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?

அது நிஜக் கதையாகவோ, புனைகதையாகவோ இருப்பதுபற்றி எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஜெயகாந்தனின் "சினிமாவுக்குப் போன சித்தாளு' கதையை குறும்படமாகத் தயாரித்தேன். அது புனைகதைதான். ஆனால் நிஜமாகவே தமிழகத்தில் அப்படியொரு சூழல் இல்லையென்று சொல்ல முடியுமா? சொல்லுங்கள், அது ஒரு புனைகதை மட்டுமேதானா? படைப்பு நிஜ உலகை பிரதிபலிப்பதாக இருப்பதைப் போலவே நிஜக்கதையை படமாக்குவதையும் நான் அதே பார்வையில்தான் பார்க்கிறேன்.


இது சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளாகப் பார்க்கப்பட்ட வர்களை ஹீரோக்களாக்குவதாக அமையாதா?

கதைக்கு ஹீரோ என்பது ஒரு வசதிக்காகச் சொல்கிற வார்த்தைதான். என்னைப் பொறுத்தவரை அவர்கள் நமக்கு அறிமுகமான அளவுக்கு வில்லன்கள் இல்லை என்பதுதான். ஆட்டோ சங்கரோ, வீரப்பனோ முதலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளாலேயே ஊக்குவிக்கப்பட்டவர்கள்தான். பிரச்சினை என்று வந்தபோது கைவிடப்பட்டவர்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களின் பிரச்சினைகளை அவர்களே எப்பாடு பட்டேனும் சமாளிக்க வேண்டியதாகவும் ஆனது. அவர்கள் தள்ளப்பட்ட சூழல்தான் முக்கியமே தவிர அதில் இடம் பெறும் ஹீரோக்கள் அல்ல.



சந்தனக்காடு தொடரில்....


"சந்தனக்காட்டை' எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தினீர்கள்?

ஏறத்தாழ சந்தனக் காட்டுப் பகுதியில்தான். வீரப்பன் படுத்த, நடந்த, ஓடிய இடங்களில்தான் முழுபடப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ரத்தமும் சந்தனமும் மணந்த காட்டுப் பகுதிகளில் படம் பிடித்திருக்கிறோம். இதுவரை மேட்டூர், மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம், ஏமனூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். வீரப்பன் பிறந்த கிராமமான செங்கம்பாடி (இது கர்நாடகாவில் இருக்கும் தமிழ் கிராமம்)யிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.


படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி?

காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு என்பதால் தினமும் அதிகாலை 4 மணிக்கு தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து புறப்பட்டால்தான்

விடியற்காலையில் படப்பிடிப்பைத் தொடங்க முடிகிறது. அடர்த்தியான காட்டுப்பகுதி. திக்கு திசை தெரியாமல் போய்விடும் ஆபத்துகள் அதிகம் இருக்கிறது. வனவிலங்குகள் அதிகம் கண்ணில்படுகின்றன. கரடிகள், குரங்குகள், மான்கள், பாம்புகள், விஷப் பூரான்கள், காட்டு எருதுகள் பல வற்றைப் பார்த்தோம். படமாக்கியிருக்கிறோம்.


வீரப்பனைப் பற்றிய தகவல்களை எங்கே சேகரித்தீர்கள்?

வீரப்பனைப் பற்றி மற்ற யார் சொல்வதையும்விட அவனை பார்த்த அவனுடன் பேசிய மக்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு. நான் சந்தித்த சில பெண்கள் கர்நாடக, தமிழக காவல்துறையினரால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். "நாங்கள் தாயும் மகளுமாகக் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டோம். எங்களுக்கு நேர்ந்த வேதனையைக் கேட்டு நாங்கள் கற்பழிக்கப்பட்ட ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷனை தரைமட்டமாக்கிய எங்கள் அண்ணன் அவர்' என்கிறார்கள்.



படப்பிடிப்பில் சந்தனக்காடு...

அதே போல சுள்ளி பொறுக்க வந்து வழி தவறிவிட்ட பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டு கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து, "ஆடு வாங்கி ரெண்டை நாலாக்கிப் பொழைச்சுக்கோ' என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். இப்படி மனிதநேயம் பாராட்டும் விஷயங்கள் ஏராளம் வீரப்பன் வாழ்க்கையில் இருக்கின்றன. ஏற்கெனவே மீடியா மூலமும் காவல்துறை மூலமும் தெரிந்த விஷயங்களும் உண்டு.


வீரப்பனின் மனைவி இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து?

நான் டேப்பில் பதிவு செய்துவிட்டேன் என்று கூறுவதெல்லாம் வீணான கற்பனை. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன் என்று கூறியிருக்கிறார். நான் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேசினேன். அவர் பயப்படும் அளவுக்கு எதுவும் இத் தொடரில் இல்லை என்பதை பலமுறை தொலைபேசியில் விளக்கிவிட்டேன். டி.வி.டி. ஒன்றும் கொடுத்தனுப்பினேன். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். வழக்கு முடிவும் எங்களுக்குச் சாதகமாகத்தான் வந்திருக்கிறது.


"சந்தனக்காடு' தொடர் மூலம் சொல்லவிரும்பும் செய்தி?

உண்மையை உடைத்துச் சொல்ல முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறோம். வனமும் இனமும் சிதைந்த வரலாறு இது. மனித நேயம் நிறைந்த வீரப்பனுடைய பிற்காலத்தையும் இன்னொரு பக்கத்தையும் சொல்ல விரும்புகிறோம்.

தமிழ்மகன்

சர்ச்சை: கற்றது தமிழ்..! பெற்றது?






கற்றது தமிழ் என்றால் பெற்றது என்னவாக இருக்கும்?

இவனுக்கென்ன பைத்தியமா என்ற பட்டப் பெயரும் குறைந்த சம்பளமும் அவமானங்களும்தான் அவனுக்கு வாய்க்கும் விஷயங்களாக இருக்கும் என்கிறது "கற்றது தமிழ்' திரைப்படம்.


"தமிழ் எம்.ஏ.' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் இப்போது வரிச்சலுகை கிடைக்காதோ என்ற கவலையில் "கற்றது தமிழ்' என வெளியாகி, தமிழ் பேசும் நல்லுலகை உலுக்கியிருக்கிறது.

படத்தின் இயக்குநர் ராம், ""நான் எந்த ஊர் என்பது அத்தனை சரியாகச் சொல்ல முடியாது. வணிகவரித் துறையில் அப்பாவுக்கு வேலை. இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் ஊர் என்று நிறைய மாறிவிட்டேன். நான் ஊர்களில் இருந்ததைவிட ரயில் பெட்டிகளில்தான் அதிகம் வசித்திருப்பதாகச் சொல்வேன். மதுரையில் இளங்கலை தமிழும் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முதுகலை தமிழும் படித்தேன்.




பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், ராஜ்குமார் சந்தோஷி போன்றவர்களின் திரைப் படங்களுக்குப் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் படிப்பவர்கள் நிலை எப்படியிருக்கிறது என்பதைப் படத்தின் மையமாக வைத்து தமிழ் படித்தவனின் வாழ்க்கைத் தரம் சார்ந்த பார்வையைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். நான் சந்தித்த ஒருவனின் கதை அல்ல இது. பலரின் கதை... பலரின் அனுபவம்.

சொல்லப்போனால் இது தமிழ் படித்தவனின் கதை மட்டுமல்ல, இது கலைத்துறை படிப்பு படித்தவர்களின் கதையாகவும்தான் சொல்லியிருக்கிறேன்.

பிறதுறை மாணவர்களுக்கும் கலைத்துறை மாணவர்களுக்குமான மனவியல் சிக்கல் இது. கோவிந்த் நிகிலானி என் ஆதர்ஷ இயக்குநர். "ஒவ்வொரு செய்தியிலிருந்தும் ஒவ்வொரு வசனத்திலிருந்துமே ஒரு படத்தை உருவாக்கிவிடமுடியும்' என்பார் அவர். அப்படியான ஒரு படைப்புதான் "கற்றது தமிழ்'.

படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா பூரித்துப் போனார். ""ஆசியாவின் முதல் ஐந்து படங்களைச் சொல்ல வேண்டுமானால் அதில் "கற்றது தமிழ்' நிச்சயம் இடம் பிடிக்கும். டப்பிங் செய்திருக்கும் உத்தி, திரைக்கதை உத்தி எல்லாமே தமிழ் சினிமாவுக்குப் புதிது'' என்றார். பார்த்திபன் பார்த்துவிட்டு இந்தியாவின் சிறந்த இயக்குநர் என்ற இடம் இவருக்கு உண்டு என்றார். தனுஷ், ""இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடிக்காமல் போய்விட்டேனே'' என்கிறார். பெயர் தெரியாத எத்தனையோ பேர் போன் செய்து பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் இயக்குநர் ராம்.

படத்தில் ஒரு காட்சி:

""நீ ஏன் தமிழ் படிக்க வந்தாய்? என்று கேட்கிறார் பேராசிரியர். ஏதாவது டிகிரி இருந்தா லோன் தருவாங்க''னு படிக்கிறேன்.

இன்னொரு மாணவனைக் கேட்கிறார்.

வேற கோர்ஸ் சேருவதற்கு மார்க் இல்லை என்கிறான்.

நாயகன் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துவிட்டு தமிழ் படிக்க வந்திருப்பது தெரிகிறது. ""ஏதாவது என்ஜீனியரிங் காலேஜில் சேராமல் இங்கு ஏண்டா வந்தாய்'' என்கிறார். தமிழ் படிக்கும் ஆசையில் வந்தேன் என்கிறான்.

-இப்படி ஆரம்பிக்கிறது கதை.




ஆனால் படித்து முடித்ததும் இரண்டாயிரம் வருஷமா இருக்கிற தமிழைப் படித்த படத்தின் நாயகனுக்கு இரண்டாயிரம் சம்பளம்தான் கிடைக்கிறது. பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படிப்புக்கு 2 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இந்த வித்தியாசம் அதிர்ச்சியூட்டுகிறது. கூடவே அவனுடைய வாழ்வின் சிக்கல். நேசித்த படிப்பும் அவனைக் காப்பாற்றவில்லை. காதலும் கை கூடவில்லை... மனநலம் பாதிக்கப்படுகிறது... மரணத்தை நோக்கிப் போகிறான் இப்படி முடிகிறது படம்.

படமாக்கியிருக்கும் நேர்த்தியும் திரைக்கதையின் வலிமையும் இழுத்துப் பிடித்து உட்கார வைத்தாலும் விமர்சனங்களும் படத்துக்கு உண்டு. பொழுது போக்குக்குக்கான படங்களுக்கு இல்லாத சிக்கலை இது போன்ற சீரியஸ் படங்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது வாடிக்கைதான்.

""தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. பெரிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்'' என்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன். தமிழ் படித்தால் மூன்று விதங்களில் வேலை வாய்ப்பு உண்டு. தமிழாசிரியர் ஆகலாம். கல்லூரியில் பேராசிரியராகலாம். பண்பாடு- கலாசாரத் துறைகளில் பணியாற்றலாம். செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு நிறைய நூல்கள் பதிக்கப்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லாக் கல்விக்கும் போல இதிலும் மேற்படிப்புகளுக்கு ஏற்பதான் வேலை வாய்ப்பு. இது இல்லாமல் அரசு நடத்தும் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள் எழுதலாம். 40 ஆயிரம் இடங்களுக்கான சர்வீஸ் கமிஷன் தேர்வு நடைபெறுகிறது. இதில் தமிழ் படித்தவர்கள் எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே?


எழுத்தாளர்கள், வசனகர்த்தாக்கள் இருக்கிறார்கள். வைரமுத்து, மு.மேத்தா, கபிலன், முத்துக்குமார் தமிழில் பட்டம் வாங்கியவர்கள்தானே? மு.வ. எழுதி சம்பாதித்தவர்தானே? அகிலன் எழுதி சம்பாதித்தவர்தானே? கல்கி, ஜெயகாந்தன் என்று எத்தனை எழுத்தாளர்கள்... எத்தனை துணை வேந்தர்கள்? படத்தை எடுத்த டைரக்டரே தமிழ் எம்.ஏ. படித்தவர் என்கிறார்கள். இப்போது அவர் டைரக்டராக உயர்ந்திருக்கிறாரே... தெரியாத்தனமாக தமிழ்படித்தவர்கள் எல்லாம் உயர்ந்திருக்கிறார்கள். தமிழ்தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் ஏன் உயர முடியவில்லை என்று தெரியவில்லை.

என்ஜீனியரிங் படித்துவிட்டு 2000 ரூபாய் சம்பளம்கூட கிடைக்காதவர்கள் இருக்கிறார்களே... பொதுவாக வேலை வாய்ப்பு இன்மையும் சம்பளம் குறைவாக இருப்பதும் வேறு சமூக பிரச்சினைகள்... அந்தப் பிரச்சினை தமிழுக்கும் இருக்கிறது, கெமிஸ்ட்ரிக்கும் இருக்கிறது'' என்கிறார் பெரியார்தாசன் உறுதியாக.

வெள்ளி, அக்டோபர் 12, 2007

பால்- சைவமா? அசைவமா?

குடியரசுத் தலைவராவதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சைவ- அசைவ உணவு குறித்துப் பேச்சு எழுந்தது.

பாலும் அசைவம்தான் என்றார் காந்திஜி. பால் சாப்பிடுவது மாட்டின் இறைச்சியைச் சாப்பிடுவது போலத்தான் என்பது அவருடைய வாதம்.

""நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தாய்ப் பாலும் அசைவம்தான். அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே நர மாமிசம் சாப்பிடுபவர்கள்தான்'' என்றார் ராதாகிருஷ்ணன்.

சமயோசிதமான பதில் காந்திஜியை மிகவும் கவர்ந்து விட்டது.

சிஸ்டர்ஸ் ஃப்ரம் 'செவன் சிஸ்டர்ஸ்'!





இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸôம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மலை மாநிலங்கள் நமக்கு லாட்டரி சீட்டு வகையில்தான் பழக்கம். ஆனால் இன்று இந்த ஏழு மாநிலங்களிலிருந்தும் புறப்பட்டிருக்கும் இளைஞர்கள் இப்போது உலகமெங்கும் பணியாற்றுகிறார்கள். சென்னையிலும் இப்போதெல்லாம் தடுக்கி விழுந்தால் இந்த "ஏழு சகோதரி' பிரதேசத்தில் இருந்து வந்த சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். என்ன காரணம்?
பெங்களூரில் உள்ள ஒரு பிபிஓ நிறுவனத்தின் தலைவர் நாகராஜன், தங்கள் நிறுவனத்தில் கணிசமான அளவு வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதாகக் கூறுகிறார். ""அவர்களைத் தேர்வு செய்ததற்குக் காரணம் நிஜமாகவே அவர்கள் பேசும் நல்ல ஆங்கிலத்துக்காகத்தான். நல்ல தரமான ஆங்கிலம் அவர்களுக்குக் கால் சென்டர், பிபிஓ சென்டர், ஃபிரண்ட் ஆபிஸ் போன்ற வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய துறையில் அவர்களுக்குப் பிரகாசமான வரவேற்பைத் தந்திருக்கிறது. இப்போது புதுதில்லி, பெங்களூர் நிறுவனங்களில் இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக இருக்கிறது. சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இன்னும் பெருக வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் நாகராஜன்.

பெங்களூரில் இருக்கும் சன்னிஸ் நிறுவன அதிபர் அர்ஜுன் சஜ்ஜானி, ""ஆங்கிலம் ஒரு காரணம். கூடவே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். வேலை செய்வதற்காக வெகு தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பதால் இவர்கள் அடிக்கடி தங்கள் பாட்டிமார்களையும் உறவினர்களையும் நோய்வாய்ப்படுத்துவதோ, சாகடிப்பதோ இல்லை. ஒழுங்காக வேலைக்கு வந்துவிடுகிறார்கள்'' என்கிறார்.

வடகிழக்கு மாகாணத்தவர்களுக்கு எப்படி இந்தத் திடீர் மவுசு?

""வடகிழக்குப் பிராந்திய இளைஞர்களுக்கு அவர்களின் தாய்மொழியைவிட ஆங்கிலம் நன்றாகத் தெரிவதற்கு கிருஸ்துவ மிஷினரிகள்தான் காரணம்'' என்கிறார் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தின் நூலகரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ரெங்கையா முருகன். வடகிழக்கு மாநில பழங்குடியினர் பற்றிய மிக முக்கியமான கள ஆய்வை நிகழ்த்தியிருப்பவர் இவர்.

""கிருஸ்துவ அமைப்புகள் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவது ஆங்கிலத்தைத்தான். பழங்குடியினருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிப்பதை முக்கிய செயல்பாடாக வைத்திருக்கிறார்கள். சென்ற தலைமுறையினர்தான் அங்கெல்லாம் அவர்களின் தாய் மொழியில் பேசுகிறார்கள். இளைய தலைமுறையின் பரிவர்த்தனை எல்லாம் ஆங்கிலத்தில்தான். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் வெளிமாநிலத்துக்குச் செல்கிறார்கள். அதே போல் அங்குள்ள இளைஞர்களுக்குத் தென்னிந்தியாவில் படிப்பதும் வேலைபார்ப்பதும் மிகப் பெரிய கனவாக இருக்கிறது. காரணம், இங்கே படித்த இளைஞர் என்றால் அவர்களுக்கு வரதட்சணையே பிரம்மாண்டமாக இருக்கும்.

பிறந்ததிலிருந்தே ஆங்கிலத்தில் பேசுவதாலும் மங்கோலிய முகத்தோற்றத்தாலும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அடையாளம் கிடைக்கிறது. கொஞ்சகாலம் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றுகிறவர்கள் உடனே வெளிநாட்டுக்குத் தாவிவிடுகிறார்கள்'' என்கிறார் ரெங்கையா முருகன்.

சென்னையில் அஜுபா சொல்யூஷன் என்ற பிபிஓ நிறுவனத்தின் பைனான்ஸ் இயக்குநராக இருக்கும் ஷங்கர் நரசிம்மன், ""தில்லியோடு ஒப்பிடும்போது சென்னையில் வடகிழக்கு இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் எஸ்.ஐ.ஈ.டி., இந்துஸ்தான் கல்லூரிகளில் இருந்து இதுவரை 15 பேர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றனர். இது அவர்களின் வருகையைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இருப்பதாகத்தான் உணர்த்துகிறது'' என்கிறார்.

எங்கோ மலை முகட்டில் பிறந்தவர்களுக்கு ஆங்கிலம் என்ற மொழி இத்தனை பெரிய அங்கீகாரத்தைத் தந்திருப்பது ஆச்சர்யம்தான். கூடவே சிறிய வருத்தம். தங்கள் மொழி, கலாச்சார அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது.

-தமிழ்மகன்

டேல் ஆஃப் தி வீக்

வயதான அந்தப் பாதிரியார் அவரது நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதியையும் தமது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் அந்த முதியவரின் படுக்கை அறைக்கே வந்திருந்தனர். இருவரும் அவருக்கு இருபுறமும் அமர்ந்தனர். இருவரின் கைகளையும் பிடித்தபடி தமது இறுதி நிமிடங்களின் போது இருவரையும் கூடவே இருக்குமாறு கேட்டுக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்தவாறு இருந்தார்.

இருவரும் குழப்பமாக அமர்ந்திருந்தனர். எதற்காக இப்படியொரு வேண்டுகோள் என்று இருவருக்கும் புரியவில்லை. இறுதியாக செரிடியன் கேட்டார், ""எதற்காக பாதர் எங்கள் இருவரையும் தங்கள் கடைசி நிமிடங்களின்போது தங்களின் இருபுறமும் இருக்குமாறு வேண்டுகிறீர்கள்?'' என்றார்.

பாதிரியார் மரணத்தறுவாயில் மெல்ல முனகினார்.

""யேசு இரண்டு திருடர்களுக்கு மத்தியில்தான் தன் உயிரை விட்டார். அதே மாதிரி இறப்பதற்கு ஆசைப்பட்டேன்.''

புதன், அக்டோபர் 10, 2007

மஸ்தானா... சரிதானா?



அலசல்:


திரைப்படத்தில் ஒரு காட்சி...

மூன்று பெண்கள் மிகுந்த பதட்டத்துடன் வந்து ஆட்டோ பிடிக்கிறார்கள். என்னவோ ஏதோ என்று பதறிப் போகிறார் ஆட்டோ டிரைவர்.

""சூர்யாவ கடத்திகிட்டுப் போயிட்டாங்க. அவ வாழ்க்கை என்ன கதியாகும்னே தெரியல...''

""ஆமா... அவ அண்ணனும் ஜெயில்ல இருக்கான்... தூக்குல போட்டுடுவாங்க போல இருக்கு''

ஆட்டோ டிரைவர் மேலும் பதறுகிறார்.

""மாமியார்காரியும் அவளோட புருஷன் கிட்ட இருந்து பிரிச்சுட்டா. சொந்தமா தொடங்கிய பிசினஸýம் சரியா வரலை. எதிரிங்க ஒரு பக்கம் கொலை செய்ய அலையறாங்க''

இவ்வளவு பிரச்சினைகளுடன் இருக்கும் அந்தப் பெண்ணைச் சமாளிப்பதற்காகச் செல்பவர்களை உடனே அவர்கள் சொல்லும் இடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டுமே என்று வேகவேகமாக ஓட்டிச் செல்வார். இறங்கும்போது ""பரவாயில்லை முன்னாடியே கொண்டு வந்து விட்டுட்டான் அம்பி... இன்னும் பத்து நிமிஷம் இருக்கு சீரியல் ஆரம்பிப்பதற்கு'' என்றவாறு இறங்கிச் செல்வார்கள்.

""அடிப்பாவிகளா சீரியலுக்கா இந்த டென்ஷன் பண்ணீங்க'' என்று அலுத்துக் கொள்ளுவார் ஆட்டோ டிரைவர். ஆட்டோ டிரைவராக நடித்தவர் விவேக். இப்போது மனத்திரையில் அந்த ஆட்டோவை ஓட்டிப் பாருங்கள்...





ஆனால் இப்படிக் காமெடியாகத்தான் இருக்கிறது சீரியலுக்கும் மக்களுக்குமான உறவு.

எந்த சானல் என்றில்லாமல் எல்லா சானல்களுக்கும் பொது அம்சமாக இருக்கிறது இந்த மெகா தொடர்கள். எல்லா தொடர்களிலும் கோர்ட்- கேஸ், போலீஸ், ஆள் கடத்தல், பரம்பரைப் பகை, கொலை வெறி, பழி வாங்கல், அளவுக்கதிகமான நேர்மை எல்லாமே இருக்கிறது. நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம்தான் வித்தியாசம்.

தமிழக சானல்களுக்கு இலக்கணம் வகுத்த பெருமை சன் டி.வி.யைத்தான் சேரும். அதைப் போலவே செய்தி, அதைப் போலவே சீரியல்கள், அதைப் போலவே சினிமா விமர்சனம், அதைப் போலவே காமெடி நிகழ்ச்சிகள், அதைப் போலவே "டாக் ஷோ' என்றே எல்லோரும் பாதை வகுத்துக் கொண்டார்கள். எல்லோரும் அதைப் போல செய்வதில் ஆர்வம் காட்டி இந்தப் போராட்டத்தில் தோல்வி கண்டிருந்த நேரத்தில் எங்கள் வழி தனிவழி என இலக்கணம் வகுத்தது விஜய் டி.வி.

இவர்கள் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார்கள். "கலக்கப் போவது யாரு', "ஜோடி நம்பர் ஒன்', "சூப்பர் ஸிங்கர்' போன்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கினர்.

விளைவு? அதே நிகழ்ச்சிகள் இப்போது ஏறத்தாழ எல்லா சானல்களிலும். "ஜோடி நம்பர் ஒன்' சன் டி.வி.யில் "மஸ்தானா மஸ்தானா'வாக மாறியிருக்கும். கலைஞர் டி.வி.யாக இருந்தால் "மானாட மயிலாட'வாக மாறியிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.




இந்த ஸ்டீரியோ-டைப் இழுவைகளுக்கு தனித்துவமாக முயற்சி செய்யும் தன்மை இல்லாததுதான் காரணம். வெற்றி பெற்ற நிகழ்ச்சியை உல்டா செய்வதிலேயே சானல்கள் அக்கறை காட்டுகின்றன. ஒரு காலத்தில் தமிழில் வெளிவந்து கொண்டிருந்த வார இதழ்களின் அட்டையைப் பிரித்துவிட்டால் எல்லா இதழ்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்று சொன்ன நிலை இன்று சானல்களுக்கு.

வெற்றி பெற்ற சானல்களில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்களையே எவ்வளவு செலவானாலும் சரி நம் சானலுக்கு இழுத்துவா என்ற போக்கும் இருக்கிறது.

இதற்கு என்ன காரணம்...? ""தமிழ் சானல்கள் எல்லாம் பெரும்பாலும் முதலாளிகளின் கையிலேயே இருக்கிறது. அவர்களின் ரசனை எப்போதும் வெற்றி பெற்ற விஷயங்களைப் பின் தொடர்வதிலேயே இருக்கும். படைப்பாளிகளை நம்பி நிகழ்ச்சிகளை ஒப்படைக்கும் நிலை இன்னும் இங்கு வரவில்லை. மக்கள் தொலைக்காட்சி ஓரளவுக்கும் அதிகமாகவே தமிழர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

காப்பியடிப்பது தப்பில்லை. வெளிநாட்டு சானல்களில் இருந்து காப்பியடிக்க நினைத்தாலாவது இந்த நிலைமை மாறும். தமிழக காடுகளைப் பற்றியும் அங்கிருக்கும் உயிரினங்கள் பற்றியும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தால் யாரும் பார்க்க மாட்டார்களா என்ன? போட்டியில் தோல்வி அடைந்த சிறுவர்கள் கதறி அழுது கொண்டு செல்வதும், எங்கோ அவர்களின் பெற்றோர்கள் கோவிலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருப்பதும் என்ன கேலி கூத்து இது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.




""கடந்த பொது தேர்தலின் போது ஜெயலலிதாவுக்காகப் பிரசாரம் செய்த சிம்ரன், கோவை சரளா போன்ற பலரும் இப்போது கலைஞர் டி.வி.யில் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சன் டி.வி.யில் புறக்கணிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் இப்போது அங்கே பிரதான செய்தி ஆதாரங்களாக இருக்கிறார்கள்.

தொலைக் காட்சிகளில் பளிச் சென்று தெரிகிற புதுமை இது ஒன்றுதான்!'' -தொலைக்காட்சி சானலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர் ஒருவரின் புலம்பல் இது.

""சீக்கிரத்திலேயே இந்தத் தொடர்கள் மக்களுக்கு போரடித்துவிடும். அல்லது இதுமாதிரி நன்கு விற்கக்கூடிய நிகழ்ச்சிகளை ஒன்று போல எல்லோரும் தயாரிக்க ஆரம்பிப்பார்கள்'' என்கிறார் லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் பேராசிரியர் ச.ராஜநாயகம்.

""பொதுவாக மக்களும் சேர்ந்து செயல்படும் நிகழ்ச்சிகளுக்கு இப்போது பெரிய வரவேற்பு இருப்பதால் எல்லோருமே அதையே செய்கிறார்கள். ஒரு சினிமா ஓடினால் அதே போல சினிமா தொடர்ந்து வருவதுபோலத்தான் இதுவும். இது இங்கு மட்டுமல்ல, லாப நோக்கமுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். இது தமிழ்நாட்டுக்கானது இந்தியாவுக்கானது என்று நினைக்க வேண்டியதில்லை. சொல்லப் போனால் சில நாடுகளில் வெற்றி பெற்ற ஃபார்முலாவைப் பின்பற்றி அதே போல படம் எடுப்பதும் நிகழ்ச்சி தயாரிப்பதும் இந்தியாவைவிட அதிகமாகவே இருக்கிறது'' என்கிறார் அவர்.

""படைப்புக்கும் வணிகத்துக்குமான பொதுவான போராட்டம்தான் இப்போது டி.வி.யின் போக்குக்கும் காரணமாக இருக்கிறது. தரமான சினிமாக்கள் என்று ஒருபக்கம் முயற்சிகள் நடப்பதுபோல இதிலும் தரமான நிகழ்ச்சிகள் என்று கலந்து உருவாகும்'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஒரு சினிமா இயக்குநர்.

அப்படி நடந்தா சரிதான்.

தமிழ்மகன்

சனி, அக்டோபர் 06, 2007

ராகசுதாவிலிருந்து, நிர்மலானந்தாவுக்கு...

திரையுலகில் பிரபலமாக இருந்துவிட்டு திடீரென்று ஒரு நடிகை சந்நியாசம் மேற்கொண்டால், வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் முதல்கேள்வி ""எதுக்காக வாழ்க்கை மீது அப்படி ஒரு வெறுப்பு?''

மைசூரிலுள்ள பரமஹம்ச நித்தியானந்தரின் நித்தியானந்த பீடத்தில் சந்நியாசியாக இருக்கிறார் நடிகை ராகசுதா, சரியாகச் சொன்னால் சுவாமி நிர்மலானந்தா.
""பலர் என்னிடம் அப்படித்தான் கேட்டார்கள். நான் வாழ்க்கையை வெறுத்து சந்நியாசத்துக்கு வரவில்லை. வாழ்க்கை மீது உள்ள அளவுகடந்த விருப்பத்தால் சந்நியாசி ஆகியிருக்கிறேன்.

வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தனிமனித விரக்தி காரணமாகச் சந்நியாசத்தை மேற் கொள்பவர்கள் ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்திவிடுகிறார்கள்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற என் கனவு பலித்தது. பல தமிழ்ப்படங்களில் நடித்தேன். "தங்கத்தின் தங்கம்' எனக்குப் பெரிய பிரேக். தொடர்ந்து கன்னடப் பட உலகில் பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தேன். மலையாளத்திலும். கடைசியாக வெளியான "தம்பி' படம் வரை தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தேன். வீடும், காரும் போன்ற லெüகீக கனவுகள் எல்லாம் எனக்குச் சாத்தியமாயிற்று. ஆக, எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போகும் நிலைமை ஏற்படவேயில்லை. நான்கைந்து ஆண்டுகளாக நான் பல தியான வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். பதஞ்சலி யோகா முதல் நான் செல்லாத யோகா வகுப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஞானத்தைத் தேடி அலைந்தேன். தனவணிகன் என்ற ஒரு சிற்றிதழில் மகா அவதார் பாபாவின் தீட்ஷை பெற்றவர் என்ற தலைப்பில் நித்தியானந்தர் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. இயல்பான ஆர்வத்தில் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் தியான வகுப்பு எடுப்பதாக அறிந்து அங்கு சென்றேன். நித்தியானந்தரை முதலில் நேரில் பார்த்தது அங்குதான். என்னையும் அறியாமல் அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினேன். தொடர்ந்து திருவண்ணாமலையில் அவருடைய தியான வகுப்புக்குச் சென்றேன்.

ஆன்மிக ஆனந்தம் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது நித்தியானந்தரின் அணுகுமுறையாக இருக்கிறது. அதை அவர் ஆன்மிக விஞ்ஞானம் என்கிறார். எப்படி விஞ்ஞானம் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாகவும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறதோ அப்படியே ஆன்மிகமும் இருக்கிறது. இது உங்களுக்குப் புரியாது, இது சரிபட்டுவராது என்று யாரையும் ஒதுக்கித் தள்ள முடியாது.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது யார் கூட்டினாலும் வரக்கூடிய ஒரே விடை போலத்தான் ஆன்மிக ஆனந்தமும். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஐரோப்பியன் கூட்டினாலும் அமெரிக்கன் கூட்டினாலும் ஈரான் காரன் கூட்டினாலும் கிடைக்கக் கூடிய ஒரே பதில் போல ஆன்மிகப் பலனும் கிடைக்கவேண்டியது அவசியம். விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில் ரிஸர்ச் அண்ட் டெவலப்மென்ட் நடப்பதுபோல ஆன்மிகத்திலும் த & ஈ தேவைப்படுகிறது. நம் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளாதது இல்லை இப்போதைய பிரச்னை. நம் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளாததுதான் பிரச்னையே.

நான் நைஷ்டீக பிரம்மச்சர்யம் மேற் கொண்டு இங்கு ஆச்சார்யாவாக இருக்கிறேன். தியான வகுப்புகள் எடுக்கிறேன். தியான வகுப்பு எடுப்பவர்களுக்கான வகுப்புகள் எடுக்கிறேன். நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை என்னுடைய பெற்றோர், சகோதரி, பெரியம்மா கே.ஆர்.விஜயா, திரைப்படத்துறை நண்பர்கள் நடிகர்கள் சரத், ஸ்ரீமன், நடிகைகள் வினோதினி, மெüனிகா, டைரக்டர் பாலுமகேந்திரா ஆகியோர் நன்றாக அறிவார்கள்.

ஆகவே நான் ஆனந்தமாகத்தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வாழும் கலையின் ஓர் அங்கம்.

-தமிழ்மகன்

சரண்யாவாகிய நான்...


"காதல் கவிதை', "நீ வருவாய் என' படத்திலிருந்து சுமார் ஒரு டஜன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் "காதல்' சரண்யா.

"காதல்' படத்தில் சந்தியாவின் தோழியாக வந்தவர் இப்போது கதாநாயகி ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி வரையான பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...


சினிமாவுக்கு வருவதற்கு எல்லாருக்கும் ஏதாவது சந்தர்ப்பம் இருந்திருக்கும்... உங்களுக்கு?

அகத்தியன் சார் இயக்கிய காதல் கவிதை படத்தில் இஷா கோபிகருடன் நடிப்பதற்கு நான்கைந்து சிறுமிகள் தேவைப்படுகிறார்கள் என்று எங்கள் குடும்ப நண்பர் சொன்னார். அப்படித்தான் சினிமாவுக்கு நான் அறிமுகமானேன்.

காதல் படத்தில் முதலில் நீங்கள்தான் நாயகியாகத் தேர்வானீர்களாமே?

ஆமாம். "காதல்' படத்தில் நாயகியாக என்னைத்தான் தேர்வு செய்தார்கள். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிறகு சந்தியாவைப் பார்த்ததும் படக்குழுவினர் அவர் அந்த வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டார்கள். படத்தில் முதல் பகுதியில் பள்ளிக்கூட மாணவியாக நடிப்பதற்கு வேண்டுமானால் நான் பொருத்தமாக இருப்பேன். பிற்பகுதியில் மணமானப் பெண்ணாக நடிப்பதற்கு என்னுடைய தோற்றம் சரியாக இருக்காது என்று கூறிவிட்டனர்.

அந்தப் படத்திலேயே கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்குச் சம்மதித்திருக்கிறீர்கள். எப்படி?

வருத்தம் இல்லாமல் இருக்குமா? அதே படத்தில் ஃப்ரண்ட் வேடம் இருக்கிறது என்று கேட்டபோது அழுகையே வந்துவிட்டது. நல்ல கதை- நல்ல பேனர்... ஏதோ ஒரு வேடத்தில் நடித்தால் போதும் என்ற ஆசையும் இருந்தது. சம்மதித்து மதுரைக்கு ரயிலேறி விட்டோம். தூக்கமே இல்லை. அழுதபடியே ஷூட்டிங் போன முதல் பெண் நானாகத்தான் இருக்கும். படம் நடிக்க ஆரம்பித்ததும் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது.

சந்தியாவும் என் வயது தோழியாக மாறிவிட்டார். செம ஜாலியாக அரட்டை அடித்து கதாநாயகி வேடம் கிடைக்காத துக்கம் முழுக்கவே மறைந்துவிட்டது எனக்கு. படம் வெளியீட்டுக்கு நெருங்க நெருங்க படத்தைப் பற்றி வந்த எதிர்பார்ப்புகள் மறுபடி எனக்குள் ஏமாற்ற உணர்வை உண்டாக்கின. அதுவும் படம் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றதும் ஒவ்வொருவரும் படத்தைப் பற்றிப் பாராட்ட பாராட்ட எனக்கு மீண்டும் தாளமுடியாத துக்கம்.

இப்போதாவது அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே வந்து விட்டீர்களா இல்லையா?

"காதல்' திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனது. தெலுங்கிலும் வெற்றி. அந்தப் படத்தைப் பார்த்து தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் பரத்துடன் நடிக்க முடியாமல் போன ஏக்கம் அங்கு தெலுங்கு பரத்துடன் கதாநாயகியாக நடித்தபோது தீர்ந்தது. இப்போது தமிழில் "திருத்தம்', "இளவட்டம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன்.

இப்போது ப்ளஸ் டூ முடித்துவிட்டு அஞ்சல் வழியில் பிபிஏ படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இனி முழு மூச்சாக நடிக்க முடியும் என்ற தீவிரம் வந்திருக்கிறது. பரீட்சை லீவில் நடிப்பதற்கும் முழு நேரமாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிறைய வேடங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான நேரம் இருக்கிறது என்ற நிதானமும் மனதில் இருக்கிறது. துக்கமெல்லாம் போயே போச்சு...

என்ன மாதிரி வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

"அம்முவாகிய நான்' படத்தில் பாரதி ஏற்றிருந்த பாத்திரம் துணிச்சலானதாக இருந்தது. அது போன்ற கான்ட்ரோவர்ஸியான வேடங்களை நான் எதிர்பார்க்கிறேன்.

-தமிழ்மகன்

புதன், அக்டோபர் 03, 2007

காமிராவும் நானும்..!



கையில் காமிராவைப் பிடித்ததும் மனசுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு... கூட்டுப் புழு, பட்டாம்பூச்சியானது போன்ற மாற்றம் அது.


சினிமாவின் சகலத் துறைகளிலும் பெண்கள் வெற்றிக் கோப்பைகள் அள்ளிவரும் காலம் இது. ப்ரியா இயக்கும் "கண்ணா மூச்சி ஏனடா' படத்தின் ஒளிப்பதிவாளரும் ஒரு பெண்தான். பெயர் ப்ரீத்தா.

"மொழி' படத்துக்குப் பிறகு பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்க இருக்கும் படமான "அபியும் நானும்' படத்துக்கான லொகேஷன் தேர்வுக்காக மூணாறு சென்று திரும்பிய ஓய்வான உற்சாகத்தில் இருந்தார் அவர்.

அவரிடம்...

ஆண்கள் சினிமாவுக்கு வருவதற்கும் பெண்கள் சினிமாவுக்கு வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சினிமா ஆண்கள் சூழ் உலகமாக இருப்பதுதான் காரணம். நீங்கள் எப்படிச் சினிமாவுக்கு வந்தீர்கள்..?

சொல்லப் போனால் நான் கணக்குப் பாடத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய தந்தையார் ஐ.ஐ.டி. மாணவராக இருந்தும்கூட எனக்குக் கணக்கு எட்டிக் காயாகத்தான் இருந்தது. சி.பி.எஸ்.சி. சிலபûஸத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்டேட் போர்டுக்கு மாறினேன். அதிலும் கணக்குப் பாடத்தைத் தவிர்த்தேன். சயின்ஸ் குரூப். மேற்கொண்டு படிப்பதற்கு எது விருப்பம் என்பது எனக்குத் தோராயமாகத்தான் தெரிந்தது. ஆனால் அப்போது அதைச் சொன்னால் எவ்வளவுபேர் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. ஏனென்றால் எனக்குச் சினிமாதான் பிடித்திருந்தது.

சினிமாவைப் பிடிப்பதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே?

ஆமாம். என் மாமா பி.சி. ஸ்ரீராம் அவர்களுக்கு நிறைய சினிமா காட்சிகளுக்கு அழைப்பு வரும். சிறுவயதிலிருந்தே சினிமா ப்ரிவியூ பார்க்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. எல்லாப் படங்களையும் பார்ப்பேன். வழக்கமான சினிமா பார்க்கும் ஆசைதான் அது. ஆனால் "நாயகன்' படம் பார்த்தபோது அது தமிழிலும் இப்படிப் படங்கள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. அதன் பிறகுதான் எமக்குத் தொழில் சினிமா என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது. தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா படிப்புகளுக்கான அறிவிப்பு வந்தது. அங்கு போய் சேர்ந்ததும்தான். சினிமா பயணத்திற்கான சரியான பாதையைக் கண்டேன். கையில் காமிராவைப் பிடித்ததும் மனசுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு... கூட்டுப் புழு, பட்டாம்பூச்சியானது போன்ற மாற்றம் அது. நம்மை வெளிப்படுத்துவதற்கான கருவி இதுதான் என்ற சுதாரிப்பு...

அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் காமிராவுக்கான மேற்படிப்பைப் படித்தேன். அங்கு சென்ற போதுதான் இங்கு எவ்வளவு வசதிகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?





உதாரணத்துக்கு அங்கு இன்னமும் பீட்டா காமிராவில்தான் படப்படிப்பு நடத்த வேண்டும். இங்கோ வெகுகாலமாக செல்லுலாய்டில் படம்பிடிக்கிற அனுமதி இருந்தது. சொல்லித் தருவதிலும் இங்கு பலரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அப்போது எனக்கு இங்கே ஜி.பி. கிருஷ்ணா, ஸ்ரீனிவாசன் போன்ற சிறந்த பேராசிரியர்கள் பாடம் எடுத்தார்கள்... நம் இன்ஸ்டிடியூட்டை கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்.

படிப்பு முடிந்ததும்...?

பி.சி.சார் கிட்டதான் வேலைக்குச் சேர்ந்தேன். "குருதிப் புனல்' தொடங்கி "மே மாதம்' வரை 5 படங்கள் அவருடன் பணியாற்றினேன். எல்லாவிதமான படங்களும் அதில் இடம்பெற்றன. எனக்கு அது சரியான பயிற்சிக் களமாக இருந்தது.

நீங்கள் சொந்தமாக ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்த அனுபவங்கள்?




முதலில் விளம்பரப் படங்களில் பணியாற்ற ஆரம்பித்தேன். ஐசிஐசிஐ பாங்க் விளம்பரங்கள் செய்தேன். "என்னை மறந்ததேன்' என்று டீ கோப்பை ஒன்று கண்ணீர் மல்கும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அது நான் படமாக்கியதுதான். இப்படி 10- 15 விளம்பரப் படங்களில் பணியாற்றினேன். அதன் பிறகு பென்டபோர் சார்பாக அனிதா சந்திரசேகர் இயக்கிய 'ஓய்ர்ஸ்ரீந் ஓய்ர்ஸ்ரீந் ஐ ஹம் ப்ர்ர்ந்ண்ய்ஞ் ற்ர் ம்ஹழ்ழ்ஹ்' ஆங்கிலப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். நல்ல படம். "பகீர் ஆஃப் வெனீஸ்' என்ற இந்தி படத்துக்குப் பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து "கண்ணா மூச்சி ஏனடா' இவை இரண்டுமே விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதைத் தொடர்ந்து இப்போது ராதாமோகனின் "அபியும் நானும்'.

இதுவரை இரண்டு பெண் இயக்குநர்களிடம் பணியாற்றி இருக்கிறீர்கள். இப்போது தமிழில் அபியும் நானும் படத்துக்காக ஆண் இயக்குநருடன் பணியாற்ற இருக்கிறீர்கள்.... இதில் ஏதாவது சிக்கல்...?

எல்லாத் துறைகளிலுமே இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இது சினிமாவுக்கு மட்டுமானது இல்லை. சினிமா டென்ஷனான துறை. அதற்கான ஏச்சும் பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஆண் பெண் பேதமில்லை. அதிகம் திட்டிய பெண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஆண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், ராதாமோகன் யூனிட் சொல்லவே வேண்டாம். ப்ரியாவுடன் "கண்ணா மூச்சி..'யில் பணியாற்றியதைவிட மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

டைரக்ஷன் செய்யும் ஆசை இருக்கிறதா?

நான் உண்டு, என் காமிரா உண்டு என்று இருக்கிறேன். எனக்குத் தெரியாத வேலையை எல்லாம் நான் செய்ய மாட்டேன்.

தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin