செவ்வாய், அக்டோபர் 16, 2007

சர்ச்சை: கற்றது தமிழ்..! பெற்றது?






கற்றது தமிழ் என்றால் பெற்றது என்னவாக இருக்கும்?

இவனுக்கென்ன பைத்தியமா என்ற பட்டப் பெயரும் குறைந்த சம்பளமும் அவமானங்களும்தான் அவனுக்கு வாய்க்கும் விஷயங்களாக இருக்கும் என்கிறது "கற்றது தமிழ்' திரைப்படம்.


"தமிழ் எம்.ஏ.' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் இப்போது வரிச்சலுகை கிடைக்காதோ என்ற கவலையில் "கற்றது தமிழ்' என வெளியாகி, தமிழ் பேசும் நல்லுலகை உலுக்கியிருக்கிறது.

படத்தின் இயக்குநர் ராம், ""நான் எந்த ஊர் என்பது அத்தனை சரியாகச் சொல்ல முடியாது. வணிகவரித் துறையில் அப்பாவுக்கு வேலை. இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் ஊர் என்று நிறைய மாறிவிட்டேன். நான் ஊர்களில் இருந்ததைவிட ரயில் பெட்டிகளில்தான் அதிகம் வசித்திருப்பதாகச் சொல்வேன். மதுரையில் இளங்கலை தமிழும் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முதுகலை தமிழும் படித்தேன்.




பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், ராஜ்குமார் சந்தோஷி போன்றவர்களின் திரைப் படங்களுக்குப் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் படிப்பவர்கள் நிலை எப்படியிருக்கிறது என்பதைப் படத்தின் மையமாக வைத்து தமிழ் படித்தவனின் வாழ்க்கைத் தரம் சார்ந்த பார்வையைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். நான் சந்தித்த ஒருவனின் கதை அல்ல இது. பலரின் கதை... பலரின் அனுபவம்.

சொல்லப்போனால் இது தமிழ் படித்தவனின் கதை மட்டுமல்ல, இது கலைத்துறை படிப்பு படித்தவர்களின் கதையாகவும்தான் சொல்லியிருக்கிறேன்.

பிறதுறை மாணவர்களுக்கும் கலைத்துறை மாணவர்களுக்குமான மனவியல் சிக்கல் இது. கோவிந்த் நிகிலானி என் ஆதர்ஷ இயக்குநர். "ஒவ்வொரு செய்தியிலிருந்தும் ஒவ்வொரு வசனத்திலிருந்துமே ஒரு படத்தை உருவாக்கிவிடமுடியும்' என்பார் அவர். அப்படியான ஒரு படைப்புதான் "கற்றது தமிழ்'.

படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா பூரித்துப் போனார். ""ஆசியாவின் முதல் ஐந்து படங்களைச் சொல்ல வேண்டுமானால் அதில் "கற்றது தமிழ்' நிச்சயம் இடம் பிடிக்கும். டப்பிங் செய்திருக்கும் உத்தி, திரைக்கதை உத்தி எல்லாமே தமிழ் சினிமாவுக்குப் புதிது'' என்றார். பார்த்திபன் பார்த்துவிட்டு இந்தியாவின் சிறந்த இயக்குநர் என்ற இடம் இவருக்கு உண்டு என்றார். தனுஷ், ""இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடிக்காமல் போய்விட்டேனே'' என்கிறார். பெயர் தெரியாத எத்தனையோ பேர் போன் செய்து பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் இயக்குநர் ராம்.

படத்தில் ஒரு காட்சி:

""நீ ஏன் தமிழ் படிக்க வந்தாய்? என்று கேட்கிறார் பேராசிரியர். ஏதாவது டிகிரி இருந்தா லோன் தருவாங்க''னு படிக்கிறேன்.

இன்னொரு மாணவனைக் கேட்கிறார்.

வேற கோர்ஸ் சேருவதற்கு மார்க் இல்லை என்கிறான்.

நாயகன் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துவிட்டு தமிழ் படிக்க வந்திருப்பது தெரிகிறது. ""ஏதாவது என்ஜீனியரிங் காலேஜில் சேராமல் இங்கு ஏண்டா வந்தாய்'' என்கிறார். தமிழ் படிக்கும் ஆசையில் வந்தேன் என்கிறான்.

-இப்படி ஆரம்பிக்கிறது கதை.




ஆனால் படித்து முடித்ததும் இரண்டாயிரம் வருஷமா இருக்கிற தமிழைப் படித்த படத்தின் நாயகனுக்கு இரண்டாயிரம் சம்பளம்தான் கிடைக்கிறது. பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படிப்புக்கு 2 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இந்த வித்தியாசம் அதிர்ச்சியூட்டுகிறது. கூடவே அவனுடைய வாழ்வின் சிக்கல். நேசித்த படிப்பும் அவனைக் காப்பாற்றவில்லை. காதலும் கை கூடவில்லை... மனநலம் பாதிக்கப்படுகிறது... மரணத்தை நோக்கிப் போகிறான் இப்படி முடிகிறது படம்.

படமாக்கியிருக்கும் நேர்த்தியும் திரைக்கதையின் வலிமையும் இழுத்துப் பிடித்து உட்கார வைத்தாலும் விமர்சனங்களும் படத்துக்கு உண்டு. பொழுது போக்குக்குக்கான படங்களுக்கு இல்லாத சிக்கலை இது போன்ற சீரியஸ் படங்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது வாடிக்கைதான்.

""தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. பெரிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்'' என்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன். தமிழ் படித்தால் மூன்று விதங்களில் வேலை வாய்ப்பு உண்டு. தமிழாசிரியர் ஆகலாம். கல்லூரியில் பேராசிரியராகலாம். பண்பாடு- கலாசாரத் துறைகளில் பணியாற்றலாம். செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு நிறைய நூல்கள் பதிக்கப்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லாக் கல்விக்கும் போல இதிலும் மேற்படிப்புகளுக்கு ஏற்பதான் வேலை வாய்ப்பு. இது இல்லாமல் அரசு நடத்தும் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள் எழுதலாம். 40 ஆயிரம் இடங்களுக்கான சர்வீஸ் கமிஷன் தேர்வு நடைபெறுகிறது. இதில் தமிழ் படித்தவர்கள் எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே?


எழுத்தாளர்கள், வசனகர்த்தாக்கள் இருக்கிறார்கள். வைரமுத்து, மு.மேத்தா, கபிலன், முத்துக்குமார் தமிழில் பட்டம் வாங்கியவர்கள்தானே? மு.வ. எழுதி சம்பாதித்தவர்தானே? அகிலன் எழுதி சம்பாதித்தவர்தானே? கல்கி, ஜெயகாந்தன் என்று எத்தனை எழுத்தாளர்கள்... எத்தனை துணை வேந்தர்கள்? படத்தை எடுத்த டைரக்டரே தமிழ் எம்.ஏ. படித்தவர் என்கிறார்கள். இப்போது அவர் டைரக்டராக உயர்ந்திருக்கிறாரே... தெரியாத்தனமாக தமிழ்படித்தவர்கள் எல்லாம் உயர்ந்திருக்கிறார்கள். தமிழ்தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் ஏன் உயர முடியவில்லை என்று தெரியவில்லை.

என்ஜீனியரிங் படித்துவிட்டு 2000 ரூபாய் சம்பளம்கூட கிடைக்காதவர்கள் இருக்கிறார்களே... பொதுவாக வேலை வாய்ப்பு இன்மையும் சம்பளம் குறைவாக இருப்பதும் வேறு சமூக பிரச்சினைகள்... அந்தப் பிரச்சினை தமிழுக்கும் இருக்கிறது, கெமிஸ்ட்ரிக்கும் இருக்கிறது'' என்கிறார் பெரியார்தாசன் உறுதியாக.

3 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

இளங்கலை,முதுகலைப் பட்டங்களும் அதன் கருப்பு வெள்ளை நிழற்படங்களும் வீட்டின் சுவர்களை ஆட்சி செய்த காலமுண்டு.தற்போதைய அரசாங்க உத்தியோக உயர் பதவி வகிப்பவர்கள் உட்பட இதில் அடக்கம்.தற்போதைய கணனியின் உதவி தமிழை இன்னும் சீராகப் படிக்க பயன்படும் என்பது எனது தொலை நோக்கு.கற்றது மட்டும் தமிழ் என்பதில்தான் பிரச்சினையே.ஆனாலும் பலர் அதிலும் கொடி நாட்டியுள்ளார்கள்.

PRINCENRSAMA சொன்னது…

//பதிப்பிக்க அவசியமில்லை//
வணக்கம் அய்யா! உங்களை இணையம் வழி தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி... பதிவு கண்டேன்.. தொடர்ந்து இணையத்தில் இயங்கவும்.. நல்ல பதிவுகள் வழங்கவும்... வாழ்த்துகள்!

பெரியார் படப்பிடிப்பில் சந்தித்தோம் நினைவிருக்கும் என்று கருதுகிறேன்.

உங்களிடம் இருந்து பகுத்தறிவு அறிவியல் சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம்.
எனது பதிவு பார்க்க...
princenrsama.blogspot.com

mail: princenrsama@gmail.com

gayathri சொன்னது…

வாழ்த்துக்கள்;
பல நாட்களுக்குப் பிறகு தங்கள் படைப்புகளை இணையத்தில் படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்; இந்த சர்ச்சை பகுதியில் உள்ள பேராசிரியர் பெரியார்தாசனின்
கருத்துக்களுடன் உடன் படுகிறேன்; இதுகுறித்து அப்பட இயக்குனரின் கருத்தையும் கண்டறிந்து வெளியிட்டு இருக்கலாமே;

LinkWithin

Blog Widget by LinkWithin