திங்கள், ஜனவரி 28, 2008

நோவா

சிறுகதை

தமிழ்மகன்


"நண்பர்களே வணக்கம்.

உலகம் மாகாணக் கூட்டமென்பதால் அனைத்து மொழியினருக்குமான மாற்றுக் கருவியை எல்லோர் இருக்கையிலும் பொருத்துவதில் கூட்டம் சற்றே தாமதப்பட்டுப் போனது. சீன மொழியில் இருந்து உருது மொழிக்கும் ஜார்ஜிய மொழியில் இருந்து குஜராத்தி மொழிக்கும் மாற்றம் செய்வதில் சிற்சில இலக்கணக் குறைபாடுகள் இன்னமும் தவிர்க்கப்படவில்லை. உதாரணத்துக்கு சில இலக்கணப் போலிகளையும் (தசை} சதை, ல்ட்ர்ற்ர்- ச்ர்ற்ர்) சில ஆகு பெயர்களைப் (பிரான்ஸ் தங்கம் வென்றது) புரிந்து கொள்வதில் சில மின்புரி தவறுகள்... அடுத்த உலக மாகாணக் கூட்டத்துக்குள் இவற்றைச் சரி செய்துவிட முடியும் என்று நம்புகிறேன். சரி.. இப்போதைய கூட்டம் அது பற்றியதல்ல....'' சற்றே அமைதிக்குப் பிறகு அனைவருக்கும் ஏற்கெனவே அதைப் பற்றித் தெரியும் என்றாலும் ஒரு முன்னோட்டம் போல அதைப்பற்றி சொல்ல வேண்டிய தம் கடமையை நிறைவேற்றினார் சர்வ தலைவர்.

"....இன்றைய மாநாடு ஒருவர் பற்றி இன்னொருவர் கொள்ளும் அபிப்ராயம் பற்றியது. அதாவது ஒரு அபிப்ராயத்தை அவர் இல்லாத நேரத்தில் மற்றவர்களிடம் பரப்புவது சம்பந்தமானது. இது மனித சமுதாயத்தில் மிகக் கொடிய வன்மமாக இருந்திருக்கிறது. இப்போது இது புழக்கத்தில் இல்லையாயினும் அப்படியான குணம் நான்காம் உலகப் போருக்குக் காரணமாகிவிடக்கூடாது என்பதுதான் இம் மாநாட்டின் நோக்கம். இங்கு கூடியிருக்கும் மனித வள, மொழியியல், மனவியல் அறிஞர்கள் யாருக்காவது அதைப் புரிந்து கொள்ள முடிந்ததா? விளக்க முடியுமா? யென்சான் நீங்கள்..?''
ஜப்பானிய மொழியியல் அறிஞரான அவர்தான் இந்தக் கூட்டத்துக்கே (கூட்டம் என்பதுகூட பொருத்தம்தான். ஏறத்தாழ 170... மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு மீந்தவர்களுக்கான பிரதிநிதிகள் மட்டுமே அங்கு இருந்தனர்) காரணமானவர். கடந்த காலங்களில் நிறைய போர்களுக்கு இதுதான் காரணமாக இருந்தது என்று கண்டுபிடித்தவர் அவர்தான். ஆரம்ப விளக்கம் சிறப்பாக இருந்தால் அதைச் சார்ந்து மற்றவர்களும் தெளிவுபடுத்த முடியும் என்று அவர் நினைத்தார். நிதானமாகவும் தெளிவாகவும் பேச ஆரம்பித்தார் யென்சான்.

"ஒருவர் பற்றி இன்னொருவர் பெருமையான அபிப்ராயங்களைச் சொல்வதைப் புகழ்வது என்று சொல்கிறார்கள். அதற்காக ஒரு காலத்தில் பலரும் ஏங்கியதாகத் தெரிகிறது. ஒருவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது. வாய் மார்க்கமாகவோ, எழுத்து மூலமாகவோ ஒருவரை ஒருவர் இப்படி செய்து கொண்டார்கள். தாம் நிறையப் புகழப் பெற வேண்டும் என்ற பேராசைதான் வன்முறைக்குக் காரணமாகிவிட்டது''

"அந்தக் காலத்தில் அப்படி ஒரு ஆசை இருந்தது உண்மைதான். ஆனால் அதனால் போர்கள் எப்படி உருவாகும்? சகமனிதர்களை வெட்டிச் சாய்ப்பதும் கொல்வதும் எங்கே வந்தது?'' என்ற சந்தேகத்தையும் கூடவே அவருடைய விளக்கத்தையும் முன் வைத்தார் பிரெஞ்சு மனவியல் அறிஞர் வார்னே பிரான்கோ. "ஒருவரை பற்றி ஒருவர் நல்ல அபிப்ராயங்கள் சொல்வது இப்போதும் சில சமயங்களில் கடைபிடிக்கப்படுகிறது. சென்ற மே மாதத்தில் நாமும் அப்படி செய்தோம்...''

"நாமா?'' என்றார் தலைவர் சற்றே திகைப்புடன்.

"ஆமாம். செவ்வாய் கிரகத்தில் வளிமண்டலம் உருவாக்குவதில் நம் விஞ்ஞானிகள் நிறைவுகட்டத்தை அடைந்த போது இதே உலக மாகாணப் பிரதிநிதிகள் சேர்ந்து உணர்ச்சிவசப்பட்டதை நான் கண்ணுற்றேன். இப்போது இங்கு இருக்கும் காப்ரியேல், அந்த விஞ்ஞானிகளை "மறுபுவிகண்ட மாண்பர்கள்' என்று விளித்தார். ஆனால் அது புகழ் வார்த்தைதான். சென்ற நூற்றாண்டின் பழக்க தோஷமாக இருக்க வாய்ப்பிருக்கிறது''

கேப்ரியலுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "அப்படியா சொல்கிறீர்கள்?... அது ஊக்க வார்த்தை வகைப்பட்டதுதானே?''

"நிச்சயமாக இல்லை. அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள். அதிகபட்சமாக அவர்களைப் பார்த்து நிறைவாகச் செய்தீர்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். என்னுடைய ஆய்வில் கடந்த காலங்களில் வெளியூருக்குச் சுற்றுலா போய்விட்டு வந்த அரசியல் தலைவர்களையெல்லாம் தமிழகத்தில் "மலேயா கண்ட மாவீரனே' என்று பாராட்டி வரவேற்று இருக்கிறார்கள். இதைப் போல் நம் தலைவர் வெளிநாடு போய் வரும்போது பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் "உலக நாடுகளின் ஒளிவிளக்கே' என்று மிகைப்படுத்திப் புகழ்ந்தார்கள். இதனால் இந்தக் குழுவினருக்கும் எதிர்க் குழுவினருக்கும் ஆவேசமும் கோபமும் வன்மமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.''

பிரான்கோவின் வாதத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து "அந்தக் காலத்தில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்று வரும் முறை இருந்தது. அதை பொருண்மை ஆற்றல் முறையினால் ராக்கெட் இல்லாமலேயே சென்றுவரும் முறையைக் கண்டுபிடித்ததால் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். மறுபுவிகண்ட மாண்பர்கள்' என்ற வாக்கியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்'' என்றார் கேபிரியல்.

"இது குறித்து மாற்றுக் கருத்து இருப்பவர்கள் சிற்றுண்டி இடைவேளைக்குப் பிறகு பகிர்ந்து கொள்ளலாம்'' தலைவர் திரையில் இருந்து மறைந்தார்.

எல்லோரும் அரங்கத்தின் வெளியே நீண்ட காரிடாரில் நடைபோட்டபடி ஏறத்தாழ ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர்கள்போல நடைபழகிக் கொண்டிருந்தார்கள். உலகம் என்பது அந்த 45 மாடிக் கட்டிடடத்துக்குள் சுருங்கிவிட்டது சகலருக்கும் வருத்தமூட்டுவதாக இருந்து சமீபகாலங்களில் அதற்காக வருத்தப்படும் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார்கள். காடுகள், மலைகள், அருவிகள், மலர்கள், எல்லாமே திரையில் பார்த்து ரசிக்கும் சமாசாரங்கள்தான். "டூன்மேன்' அமைப்பினர் கிராபிக்ஸ் இயற்கை காட்சிகள் உருவாக்கி செயற்கை பறவைகளையும் விலங்குகளையும் உருவாக்கியிருப்பதால் போருக்கு அடுத்த ஐந்தாம் தலைமுறைக்குச் செயற்கை ரசிப்பு மட்டுமே தெரிந்தது, சொல்லப் போனால் மிகவும் பிடித்தும் போனது. சரியாகச் சொன்னால் இந்த "நோவா கப்ப'லில் மனிதர்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டிருந்தனர்.

"என்ன புரதச் சட்டினியும் வைட்டமின் ஆப்பமும்தானா?'' என்று நெருங்கிவந்த ஆப்ரிக்க மரபியல் அறிஞரான முப்பட்டோவைப் பார்த்து ஏதோ நினைவில் இருந்து விடுபட்டவராகச் சிரித்தார் இந்திய ஆன்மிக இயலாளர் குப்தா.

"ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள் போலிருக்கிறதே?'' என்ற முப்பட்டோவின் கையில் கார்போ கூழும் சிட்ரிக் தொக்கும் இருந்தது.
""இது இந்தியர்களின் மரபுரீதியான செயல்தானே?'' சாதுர்யமாக அவருக்குப் பதிலளித்து பதில் சிரிப்பும் செய்தார்.

"தலைவர் இதை இவ்வளவு பெரிய விஷயமாகப் பாவிப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? எப்போதோ வழக்கொழிந்து போன இந்தப் பாராட்டு வார்த்தைகள் குறித்த கருத்தரங்கு எந்தவிதத்தில் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

குப்தா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். "இடைவேளைக்குப் பிறகு இது குறித்துப் பேசலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.. மற்றபடி ஆப்ரிக்க -இந்திய இனவரலாறு ஆய்வு எப்படி இருக்கிறது?''

"நியூஸிலாந்திலும் இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும் பாம்புகள் குறித்தும் லிங்க வழிபாடுகுறித்தும் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த மூன்று பகுதி பழங்குடிகளிடம் இருக்கும் பெயர் ஒற்றுமைகள் ஆச்சர்யமானவை. கிளியோ பாத்ரா} துங்கபாத்ரா, கங்கா}காங்கோ என... மனிதர்கள் எல்லோரும் ஒரே இடத்தில்தான் இருந்திருக்கிறார்கள், இப்போது நாம் இருப்பது போல..'' அரங்க நுழைவாயில் விளக்குகள் ஒளிரவே அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.

திரையில் தலைவர் "ஆரம்பிக்கலாம்'' என்றார்.
குப்தா ஆரம்பித்தார். "அபிப்ராயங்கள் சொல்வதில் இரண்டு விதங்கள் இருப்பதை அறிகிறேன். ஒருவரைப் பற்றி இன்னொருவர் அவர் இல்லாத நேரங்களில் அபிப்ராயம் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆரம்ப அமர்வில் சொல்லப்பட்ட அபிப்ராயங்கள் அனைத்தும் ஒருவர் மற்றவரை மிகைவூக்கப்படுத்துவது சம்பந்தமானதாக இருந்தது. இதில் நான் இன்னொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகிறேன்... அதாவது ஒருவகையில் அதற்கு முரண்படுவதாகவும் இது இருக்கும். அப்படி அபிப்ராயம் தெரிவிப்பதில் குறைவூக்கம் செய்யும் தன்மைகளும் இருந்தன என்பதுதான்.''

"புதிதாக இருக்கிறதே... குறைவூக்கமா? சக மனிதர் ஒருவரை இன்னொருவர் எதற்காக குறைவுபடுத்த வேண்டும்?'' தலைவர் ஆச்சர்யத்தோடு கேள்வியை முன் வைத்தார்.

குப்தாவின் முகம் சலனமற்று இருந்தது. லேசான வருத்தமும் அதில் தென்படுவதை அவருடைய மனவோட்டமானியின் ஊசலாட்டத்தை வைத்து அனைவருமே அறிந்தனர். ஒருவருடைய மனவோட்டத்தைப் புண்படுத்தும்விதமாக யாரும் செயல்படும் சமயத்தில் அதை அறிந்து அந்தச் செயலை மாற்றிக் கொள்ளும் பொருட்டுதான் அக் கருவியே அனைவரின் இருக்கையிலும் இணைக்கப்பட்டிருந்தது. தலைவர் நெகிழ்வோடு, "தாங்கள் வருத்தமுருவதாக அறிகிறோம்'' என்றார்.

"வருத்தம் இந்த ஆய்வின் பொருட்டுதான். குறைவூக்கம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஒரு மனிதனை எதற்காக அவருடைய நிஜமான தன்மையைவிட குறைத்து மதிப்பிட வேண்டும் என்று கேட்டீர்கள்.. அது அந்தக் காலத்தில் இருந்த போலி குணத்தின் விளைவு..''

தலைவர் தீர்மானமான குரலில் "குப்தா அது தெரிந்து கொள்ளகூட தகுதியற்ற விஷயம் என்று சொல்கிறார். அத்தகைய மோசமான விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை. உங்கள் வாக்குகளை அளிக்கலாம்.''

அப்படியான போலியான குணம் பற்றித் தெரிந்து கொள்வதில் உண்மையிலேயே உறுப்பினர்களுக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்தது. 97 விழுக்காடு தெரிந்து கொள்ள விரும்புவதாக பட்டனை அழுத்தினர்.

"நீங்கள் கூறலாம்'' என்றார் தலைவர் குப்தாவை நோக்கி.

"என் கடமையை முடிந்த அளவு தெளிவாகச் செய்ய விரும்புகிறேன்'' என்று குப்தா ஆரம்பித்ததிலிருந்தே அது சிரமமானதொரு விஷயமென்று அனைவரும் அதைப் புரிந்து கொள்ள ஆயத்தமாயினர்.

"குறைவூக்கம் என்ற வார்த்தை இன்றைய நாகரீக உலகத்தில் உருவாக்கப்பட்ட வார்த்தை.. அக் காலங்களில் ஒருவரை ஒருவர் மறைவாக குறைத்து மதிப்பிட்டனர். அப்படிச் செய்து கொள்வதில் அவர்களுக்கு ஒருவித ஆனந்தம் இருந்தது. அதை அக் காலங்களில் அவதூறு சொல்லுதல் என்பார்கள்...'' அமைதியாக அரங்கைப் பார்த்தார் குப்தா. எல்லோர் முகத்திலும் "அதில் ஆனந்தம் இருக்க முடியுமா?' கேள்விக்குறி.
குப்தா தொடர்ந்தார்.. "புறம்கூறல், இல்லாததும் பொல்லாததும் சொல்லுதல், போட்டுக் கொடுத்தல், வதந்தி பரப்புதல், வத்தி வைத்தல்...''

"என்ன பட்டியல் இது?'' தலைவர் இடைமறித்தார்.

"இப்படியெல்லாம் அதைச் சொல்லுவார்கள். நான் சிறுவயதாக இருக்கும்போது என் தாத்தா இந்த வார்த்தைகளைப் பிரயோகித்ததைக் கேட்டிருக்கிறேன்.என் மனதில் இன்றும் அவை பசுமையாக இருக்கின்றன. ஆனால் இப்படிச் சொல்வதால் என்ன நன்மை என்று என்னாலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அக் காலத்தில் கிறிஸ்து என்பவரை முன்னிறுத்தியும் திருவள்ளுவர் என்பவரை முன்னிறுத்தியும் இன்னும் சிலருடைய பெயரிலும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. அவர்கள் கணக்குப்படி ஏறத்தாழ கி.பி. 2200 வரை இது புழக்கத்தில் இருந்திருக்கிறது. என் தாத்தாவுக்கே அவை சொல்லக் கேள்விதான். அவர் அவற்றைப் பிரயோகித்தவராகத் தெரியவில்லை. அப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு அதனால் ஏற்பட்ட விரோதத்தால் அவதியுற்றுவந்தனர்.''

"முதலில் அதில் ஆனந்தம் இருந்ததாகக் கூறினீர்கள் குப்தா'' என்று ஞாபகப்படுத்தினார் ஒரு சீன அறிஞர்.

"அதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. இப்படிப் புறம்கூறுவதால் ஆரம்பத்தில் காரணற்ற மகிழ்ச்சியும் பிறகு அதனால் இருவருக்குள்ளும் மன வருத்தமும் தொடர்ச்சியாக விரோதமும் ஏற்பட்டிருக்கிறது..''

"புறங்கூறுவதால் ஏதேனும் சம்பந்தபட்ட நபருக்கு ஆதாயம் இருந்ததா?'' என்றார் சிலி நாட்டு தொல்லியலாளர்.

"ஆதாயம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆதாயம் கிடைத்தால் கூடுதல் உற்சாகத்தோடு செயல்படுவார்கள்.''

"நம்பவே முடியவில்லை. ஆதாயம் இல்லாமலும் இதைச் செய்வார்களா? ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?''

"உதாரணம் சொல்லுகிற அளவுக்கு எனக்கு விவரம் போதாதாது.. யூகத்தின் அடிப்படையில் சொல்வதென்றால்... ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு லாயக்கானவரா என்று இன்னொருவரிடம் அபிப்ராயம் கேட்டால் "அவனுக்கு என்ன தெரியும்.. மண்ணாங்கட்டியும் அவனும் ஒன்றுதான். பல சந்தர்ப்பங்களில் அவன் மேலதிகாரியிடம் அவமானப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்' என்று தீர்மானமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அவன் அந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானவனாக இருப்பான். மேலதிகாரிகளும் அவன்மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள். ஆனால் மாற்றிச் சொல்லிவிடுவார்கள். அந்தப் பதவியைத் தான் அடைய வேண்டும் என்ற எண்ணமோ, அதற்கான தகுதியோ இல்லாதவரும் அப்படி அபிப்ராயம் சொல்லும் நடைமுறை இருந்தது.''

"உண்மைக்கு மாறானதைச் சொல்வார்கள். அப்படித்தானே? அதாவது அந்தக் காலத்தில் பொய் என்று ஒரு வார்த்தை உண்டே...''

"சரியாகச் சொன்னால் பொய்தான். ஆனால் பொய் என்பது பயத்தின் காரணமாக ஏற்பட்டது... அதிகாரியின் திட்டுகளில் இருந்து, கணவரின் திட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்படுவது... ஆனால் இந்தப் பொய்யில் மன மகிழ்ச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒருவரைப் பற்றி மிகையாகவோ, முற்றிலும் மாறாகவோ சம்பந்தபட்ட நபர் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றி அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்''} இரண்டுக்குமான வித்தியாசத்தை ஓரளவுக்கு விளக்கினார் குப்தா.

அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. "சம்பந்தபட்ட நபர் இருக்கும் நேரத்தில் எப்படி நடந்து கொள்வாராம்?'' சிரிப்பினிடையே கேள்வியைப் போட்டார் தலைவர்.

"குறைகூறிய அதே நபர், யாரை குறையாகக் கூறினாரோ அவரை வலிய அழைத்து "என்னிடம் இப்படி உங்களைப் பற்றி அபிப்பராயம் கேட்டார்கள். நானும் நீங்கள்தான் உலகிலேயே திறமைசாலி என்று சொன்னேன். அந்தப் பதவி நிச்சயம் உங்களுக்குத்தான்' என்று ரகசியமாகவும் பெருமையாகவும் சொல்லுவார்கள்''

"குப்தா இத்துடன் உங்கள் கற்பனையை நிறுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. புறம்கூறும் மனிதன் இப்படி இரண்டுவிதமான மனநிலையில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்?.. புறம் பேசப்பட்டதால் பாதிக்கப்பட்டவனைவிட புறம்கூறியவனை நினைத்தால்தான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. எதற்காக வன்மமும் போரும் ஏற்பட்டது என்ற நம் ஆராய்ச்சி இவ்வளவு கேலிக்கூத்தாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை'' என்றார் தலைவர். அவர் சொல்வது போல் எல்லோர் மனவோட்ட மானிகளும் ஆயிரம் மகிழ்ச்சிப் புள்ளிகளைத் தாண்டியிருந்தது. மிகவும் வேடிக்கையான ஆராய்ச்சியாக இருப்பதால் இதை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்ற கருத்துக்கு 100 சதவீத வாக்கு விழுந்ததால் கூட்டத்தை அத்துடன் கலைத்துவிட்டு எழுந்தனர்.

தூரத்தில் இருக்கும் ஒருவரை உபயோகமற்றவர், மண்ணாங்கட்டி என்று அபிப்ராயம் சொல்வதும் கிட்டே வந்ததும் திறமைசாலி என்பதுமான விளையாட்டை தன் பேரக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்து மன மகிழ்ச்சி ஏற்படுத்தப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் முப்பாட்டோ.
குப்தாவுக்கு அது விளையாட்டான விஷயமாகத் தெரியவில்லை. குழந்தைகள் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகத் தெரிந்தது.

புதன், ஜனவரி 23, 2008

One hundred years of solitude - jyotir mayi


போனில் 10 கேள்விகள்







கல்லூரிக்குப் போகும்போது டைரக்டர் பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டார் என்கிறார்கள். நீங்கள் எப்படி?

இல்லை. என்னை யாரும் அப்படி கூப்பிடலை. நான் ஏசியா நெட் டி.வி.யில் காம்பியரிங் செய்துகிட்டிருந்தேன். அதை பார்த்துட்டுதான் நடிக்கக் கூப்பிட்டாங்க.

நடிக்க வரவில்லை என்றால் டாக்டர் ஆகியிருப்பீர்கள் அப்படித்தானே? (நிறைய பேர் அப்படி சொல்றாங்க...)

குழந்தையா இருந்தப்ப டீச்சர் ஆகணும்னு ஆசை இருந்தது. அப்புறம் ஜர்னலிசம் படிச்சுட்டு டி.வி.யில சேர்ந்துட்டேன்.

கிளாமரா நடிப்பேன், கவர்ச்சியா நடிக்க மாட்டேன் என்கிறார்களே சில நடிகைகள்?

புடவையிலேயே கிளாமரா இருக்கலாம்ங்கறதுதான் என்னோட விளக்கம்.

உங்களைப் பற்றி வந்த கிசு கிசுவில் நீங்கள் ரசிச்சது எது?

ரசிக்கிற மாதிரி எதுவும் படிக்கலை.

பெரியார் படத்தில் நாகம்மையா நடிச்சீங்க. அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?

டைரக்டர் சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன். அவங்க போட்டோ ஒன்னு பார்த்தேன். நான் அவங்க மாதிரி இருக்கேனானு தெரிஞ்சுக்கறதுக்காக.

உங்களுக்கு இந்தப் பெயரை யார் வைத்தார்கள் என்று தெரியுமா?

நிச்சயமா சினிமா டைரக்டர் வெச்சது இல்லை. இது என் சொந்தப் பெயர். அப்பா வெச்சது.

படிக்கும் பழக்கம் உண்டா? இப்ப என்ன படிக்கிறீர்கள்?

One hundred years of solitute என்ற நாவல். கேபிரியல் கிரேஸியா மார்க்யூஸ் எழுதியது

"எப்படி இருந்தவ இப்படி ஆகிட்டேன்' என்று நினைத்ததுண்டா?

கல்லூரி படிக்கிற வரைக்கும் எனக்கு மேக்-அப், ட்ரஸ் இதிலெல்லாம் இன்ட்ரஸ்ட் இருந்ததே இல்லை. என்னோட ஃப்ரண்ட்ஸ் இப்ப என்னைப் பார்த்துட்டு ரொம்ப ஆச்சர்யப்பட்றாங்க.

உங்கள் வெய்ட் எவ்வளவு? (ஹெட்வெய்ட் தனி)

நார்மலா 53 கிலோ. ஹெட் வெய்ட்.... என்கிட்ட பேசறவங்களைப் பொறுத்து வித்தியாசப்படும்.

-தமிழ்

வியாழன், ஜனவரி 17, 2008

ஹும் -சிறுகதை

தமிழ்மகன்

உயிரைக் கீறும் ஓசையாக இருந்தது அது. சொல்லப் போனால் மற்றவர் யாருக்கும் அப்படி ஓசை ஏற்பட்டதாகக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. சுற்றியிருந்த இருபது முப்பது பேரில் ஒருவருக்குமா கேட்டிருக்காது என்று சந்தேகமாக எல்லோரையும் மிரள மிரள பார்த்தேன். இறந்துபோன அப்பாவின் உணர்ச்சியற்ற முகம் என்னை கேலியாகப் பார்ப்பது போல இருந்தது. ஆனால் அவர்தான் ஹீனசுரத்தில் முனகியது போல இருந்தது எனக்கு.
அப்பா இறந்துவிட்டார் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது. இல்லையென்றால் அவரை இப்படி எல்லா சடங்கும் முடிந்து சுடுகாடு வரை தூக்கி வந்து விறகுக் கட்டை மேல் கிடத்தியிருக்க மாட்டோம் என்பது புரியாமல் இல்லை. ஆனால் நான் கேட்டது அப்பாவின் குரல்தான்... அதில் சந்தேகமே இல்லை.

அப்பா இறந்துவிட்டார் என்று உறுதி செய்தது யார்... சொல்லப்போனால் யாரும் இல்லை. உடம்பு சில்லிட்டு இருந்தது. நாடித் துடிப்பே இல்லை என்பது பக்கத்துவீட்டு செட்டியார்தான் அம்மாவின் அழுகையைப் பார்த்துவிட்டு அவசரத்துக்குச் சொன்னது. சொல்லக்கூட இல்லை. உதட்டைப் பிதுக்கி பெருமூச்சு விட்டார். எல்லோரும் அதையே உறுதியான முடிவாக ஏற்றுக் கொண்டோம். 77 வயதில் அப்பாவின் உடம்பு வாகுக்கு நாடித் துடிப்பு என்பதே எளிதில் தெரிந்து கொள்ள முடியாததாகத்தான் இருந்தது. கையால் பார்த்தெல்லாம் அந்தத் துடிப்பை தேர்ந்த டாக்டரால்தான் இனம் காண முடியும். கையால் தொட்டுப் பார்த்து இப்படி முடிவுக்கு வந்தது சரிதானா?
"முன்னையிட்ட தீ .... தம்பி இப்படி வந்து நில்லு... முகத்தை பாத்துக்கோ... முன்னையிட்ட தீ முப்புறத்திலே... அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே...'' பண்டாரம் தோளுக்கு மேல் தண்ணீர் பானையைத் தூக்கி வைத்துச் சுற்றி வரச் சொன்னார்.

அப்பா என்னை எங்கே அழைத்துச் சென்றாலும் டாக்ஸியிலோ ரிக்ஷாவிலோதான் அழைத்துச் செல்வார். தியேட்டர் என்றால் பால்கனி. சர்க்கஸ் என்றால் முன் வரிசை சோபாவில். முதன் முதலில் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றதும், லைப்ரரிக்கு அழைத்துச் சென்றதும் அப்பாதான். குழந்தைகளுக்குச் செல்லம் கொடுப்பது எப்படி என்று போட்டி வைத்தால் அப்பாவை அடித்துக் கொள்ள ஆள் இருக்க மாட்டார்கள். முதுமைக்கே உரிய இயலாமையும் எரிச்சலும் அவரை கடைசி காலங்களில் மாற்றிவிட்டது. இருந்தாலும் அப்பாவை அந்த முதுமைக்கான இலக்கணத்தில் அடக்க முடியாது. அப்பா குழந்தைத் தனமாகத்தான் இருந்தார். மைதானத்தில் கிரிக்கெட் ஆடும் பசங்களோடுதான் சகவாசம். தேர்ட் அம்பயர் வேலையெல்லாம் பார்ப்பார். கடைசிவரை நடமாட்டம் இருந்தது. அடிக்கடி லோ பிரஷர் என்று கண்ணை மூடிக் கொண்டு மயக்கத்தில் படுத்திருப்பார். மீண்டும் உற்சாகமாகிவிடுவார். நாடி ஒடுங்கிப் படுத்துக் கிடப்பார். அல்லது கம்பளி போர்த்திக் கொண்டுதான் உலாவல். "டாக்டராவது கீட்ராவது... வயித்த வெட்டிப் பார்க்கணும். கிட்னிய மாத்திப் பார்க்கணும்னு ஏதாவது சொல்லுவானுங்க... லூஸýப்பசங்க' என ஒரே போடாகப் போட்டதில் நாங்களும் வசதியாக விட்டுவிட்டோம். இப்போது இறந்துவிட்டாரா... அல்லது அப்படியான மயக்கமான உறக்கமா என்று தெரியவில்லை.

இப்போது பாடையில் இருந்து இறக்கி வைத்தபோது வலியோடு முனகிய சப்தம் கேட்டதே... யாருக்குமே கேட்கவில்லையா?
அதிகாலையில் அம்மாவின் அலறல் சத்தம்... 'அப்பா மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்டா'... நான் ஓடிவருகிறேன். அப்பாவின் தலை ஈஸி சேரில் சாய்வுப் பட்டையில் இருந்து சரிந்து ஒருபக்கமாய் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. பதட்டமாக இருக்கிறது.... அப்பாவுடன் புரூஸ் லீ படம் பார்த்தது ஞாபகம் வருகிறது. கட்லெட் வாங்கித் தந்தது ஞாபகம் வந்தது.

பண்டாரம் நிறுத்தி பானையில் இரண்டாவது ஓட்டை போடுகிறார். முதுகில் சில்லென்று வழியும் நீர். முன்னூறு நாள் சுமந்து... டிங் டிங்.. டிங் டிங்.. டிங் டிங்..

பதட்டத்தோடு தலையை நிமிர்த்தி வைத்துவிட்டு ""அப்பா அப்பா'' என்கிறேன் அவர் முகத்தருகே சென்று. அது அப்பாவை எழுப்புவதற்கா, கதறலா என்று எனக்கே புரியவில்லை. அப்பாவின் மரணத்துக்காக அழுவது இதுதான் முதல் முறை... இந்த மாதிரி அழுவதை அப்பா விரும்புவாரா என்ற திடீர் சந்தேகம். ஐயோ கடைசியில் இறந்தே போய்விட்டாரா? பயம் தொற்றுகிறது... இரவு "ஃபேனை போடுடான்னா லைட்டை போட்டுட்டுப் போறியே' என்று கடைசியாகச் சொன்னது நினைவு வருகிறது. எரிச்சலோடு லைட்டை நிறுத்தி விட்டு ஃபேனை போட்டது ஞாபகம் வருகிறது. கடைசி கட்டளை... கொஞ்சம் மகிழ்ச்சியாக அவருடைய ஆசையை நிறைவேற்றியிருக்கலாமோ என்று காலம் கடந்து தோன்றுகிறது. பையன் பின்னாலேயே தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து "அப்பா பிஸ்கட் வேணும்' என்கிறான். "பெசாம இருடா'' என்று அதட்டுகிறாள் மனைவி. என்னையும் அறியாமல் கண் கலங்கி ""தாத்தா நம்மைவிட்டுப் போய்ட்டாருடா'' என்கிறேன் மகனை அணைத்துக் கொண்டு. மகன் 'எங்கே போய்விட்டார்?' போல தாத்தாவைப் பார்க்கிறான்.
மூன்றாவது சுற்று... பானையில் பெரிய ஓட்டையாக விழுந்திருக்க வேண்டும். தண்ணீர் குபுக்கென்று வழிந்துவிட்டு நின்றுவிட்டது. புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்... புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்... அவசரமாக ஒரு தோராய வரிசை... எல்லோரும் ஆளுக்கு நாலனாவோ, எட்டணாவோ சொம்புத் தண்ணீரில் போட்டு நமஸ்கரித்து புண்ணியம் தேடினர்.

அப்பா முகம் தூங்கும் போது இப்படித்தான் இருக்கும்... வாயில் வெற்றிலையை நுணுக்கி சொருகி வைத்திருந்ததுதான் வித்தியாசம்... அவர் வெற்றிலை போடுகிறவர் அல்ல. எப்போதாவது மீன் குழம்பு சாப்பிட்டால் சாஸ்தரத்துக்கு ரெண்டு வெற்றிலை போட்டுக் கொள்வார். அப்பாவுக்கு இன்னும் உயிர் இருக்கிறதா? காலையில் இருந்து இத்தனை களேபரத்தில் எழுந்திருக்க மாட்டாரா? பையன் பென்சிலை கீழே போட்டாலே ""என்னடா சத்தம்... கொஞ்ச நேரம் தூங்க விட்றியா?'' என்பாரே... இவ்வளவு புகை... இத்தனை அழுகை... என்னதான் லோ பல்ஸôக இருந்தாலும் இப்படி மயங்கிக் கிடக்க முடியுமா? குளிப்பாட்டும் போது எழுந்திருந்திருக்க மாட்டாரா?

"புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்... முகத்த பாக்கறவங்க பார்க்கலாம். முக்ததை பார்க்கறவங்கலாம் பார்க்கலாம்'' கையில் வராட்டியுடன் பண்டாராத்தின் அவசரம். வெளியே இன்னொருவரின் பிணம் வந்துவிட்டதாம். பக்கத்திலேயே இன்னொரு விறகு அடுக்கு தயாராக இருந்தது. வந்திருக்கும் உடலை அதில் ஏற்றி வைத்து "முன்னை இட்ட தீ... முன்னூறு நாள் சுமந்து' பாட வேறோரு பண்டாரம் தயாராக இருந்தார். அந்தப் பிணத்துக்குப் புண்ணியாதானம் செய்யவும் முகத்தைப் பார்க்கவும் இன்னொரு பானையில் தண்ணீரும் எல்லாம் சேர்ந்து குழப்பமாகத் தெரிந்தது.
கடைசியாக நாம் ஒருமுறை சோதித்துப் பார்க்காமல் விட்டுவிட்டுவிட்டோமே... நெஞ்சோடு காதை வைத்துக் கேட்டால் மூச்சுவிடுவது தெரியாதா?... பக்கத்தில் நின்றிருந்த செல்வத்திடம் நமக்கு வந்த சந்தேகத்தைச் சொல்லலாமா?

"முடிங்க சீக்கிரம்... இருட்டுதில்ல... வெளிய வெய்ட் பண்றாங்களே... உங்களை மாதிரிதானே இருக்கும் அவங்களுக்கும்?'' இடுகாட்டு பணியாள் குழுமியிருந்தவர்களைப் பார்த்து மொத்தமாகக் குரல் கொடுத்தான்.
அதுதான் சாக்கென்று வராட்டியை அப்பாவின் முகத்தில் மூடுவதற்குத் தயாரானான். என் கை அனிச்சையாக அவனைத் தடுத்தது. என்னை ஆறுதலாகத் தாங்கிக் கொள்வது போல செல்வம் தோளோடு இழுத்து அணைத்துக் கொண்டான். எரிப்பதைத் தடுப்பதா? எழுவதா? என்ற குழப்பத்தில் இறைவன் விட்ட வழி என்று துணைக்குக் கடவுளைச் சேர்த்துக் கொண்டேன்.
ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அப்பா எழுந்து உட்கார்ந்து கொள்ளமாட்டாரா?
கடந்த ஆண்டில் ஒருமுறை அப்பாவுக்கு லோ பல்ஸ் ஆகி மூர்ச்சை ஆனபோது ஹாஸ்பிடல் கூட்டிப்போய் கரண்ட் ஷாக் வைத்து எழுப்பினோம். "இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்திருந்தா அவ்ளவுதான்'' என்றான் அந்தப் பயிற்சி டாக்டர் உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்துடன். ஆனால் அப்போது மூச்சு ஏறி இறங்குவது நன்றாகத் தெரிந்ததே...

அப்பாவின் கால் மாட்டில் கற்பூரம் வைத்து தீப்பெட்டியை நீட்டிக் கொளுத்தச் சொன்னார். கொளுத்தினேன். திரும்பிப் பார்க்காமல் போயிடுங்க...
பாடையை இறக்கி வைக்கும்போது வலியோடு மெலிதாக முணகியது அப்பாதான். ஏற்கெனவே அவர் உடம்பு முடியாமல் இருந்தபோது, காரில் ஏற்றும்போது இப்படி முணகியிருக்கிறார். அப்பாவின் குரல் மகனுக்குத் தெரியாதா?

ஐயோ... உயிரோடுதான் அவரை எரித்துவிடுகிறோமா? அவசரமாக அப்பாவை நோக்கித் திரும்பினேன். "டேய்... டேய் வாடா'' செல்வம் வெளியே இழுக்க... ""சார் திரும்பிப் பார்க்காமக் கூட்டிட்டுப் போங்க'' பண்டாரமும் வெட்டியானும் அதட்டலுடன் வலியுறுத்த செல்வம் இன்னும் வேகமாக வெளியே இழுத்தான்.
""பாடைக்கும் பூவுக்கும் ரெண்டாயிரம்தான் சார் குட்த்தாரு... இன்னும் ஐநூர் ரூபா தரணும்..'' என்று குறுக்கிட்டவனை "தருவாங்க இருப்பா'' என்றபடி செல்வம் என்னைப் பார்க்க நான் சுந்தரத்தின் பக்கம் திரும்பி ஜாடை காட்டினேன். ஐநூரு ரூபாயை வாங்கிக் கொண்டு, "டெத் சர்டிகேட் நானே வாங்கித் தந்துட்டமா... அதுக்குத் தனியா ஐநூர் ரூபா ஆவும்'' என்றான் மறித்தவன்.

இவர்கள் எல்லாம் யார்? அப்பா இறந்த அரை மணி நேரத்தில் எப்படி தகவல் தெரிந்து வந்தார்கள். இவர்களிடம் கொடுக்கிற காசு நியாயமான தொகைதானா...?

என் பதிலை எதிர் பார்க்காமல் "காலைல வாங்க அஸ்தி எடுத்து வெக்கிறேன்" என்றான்.

பண்டாரம் ஓடிவந்து "பதினாராம் நாள் காரியத்துக்கு முன்னாளே ராத்திரி வந்துடுவேன். பசு மாட்டுக்குச் சொல்லிடுங்க... இந்தாங்க லிஸ்ட்டு... நானே வாங்கியாந்துடட்டுமா, நீங்க வாங்கி வெக்றீங்களா?''

"எவ்வளவு தரணும்?''

"நானே வாங்கியார்றதுக்கா? மூவாயிர்ரூபா குடுங்க''
கொடுக்கச் சொல்லி மறுபடி சைகை. "எரியுதா?''

"ஆமா சார்.. நாங்க பாத்துக்றோம் கிளம்புங்க. காலைல அவங்களை கொண்டாந்து கொடுக்கச் சொல்றேன் அஸ்திய... நீங்க போங்க''

"நீ செல்வம் பைக்ல வந்துடுப்பா''யாரோ சொன்னார்கள்.
உயிரோடுதான் கொளுத்திவிட்டோமா? சுடுகாட்டுக்கு வந்து எரித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது இது என்ன கொடுமையான சிந்தனை? இருக்காது. தலையில் எண்ணெயும் சீக்காயும் தேய்க்கும்போதே உறைந்து போய் கிடந்ததே உடம்பு.. "ஹும்' என்ற அப்பாவின் முணகல் பிரமையா?

"போலாமா?'' என்றான் செல்வம்.
தயாரான போது அவனுடைய பைக் கீழே சரிந்து கிடந்ததைப் பார்த்து அலுத்துக் கொண்டான். "ஜனங்களுக்கு என்ன அவசரமோ... சுடுகாட்டுக்கு வந்துகூட''

"ஹும்'' பைக்கை ஒரே மூச்சில் தூக்கி நிமிர்த்தினான். அப்பாவின் அதே ஹும்.
பாடையில் இருந்து அப்பாவை இறக்கும்போது எனக்குப் பக்கத்தில் இருந்தவன் செல்வம்தான். இவன்தான் இப்படி முணகினானோ?
""போகலாம். வேஷ்டி மாட்டிக்கப் போகுது. ஒரு பக்கமா உக்காந்துக்க. காலை வெச்சுக்கிட்டியா?''

"ம்''

எல்லோரும் தலா பைக்கிலோ, நடந்தோ அவரவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். செல்வம் பைக்கைக் கிளப்பினான்.
மனம் விட்டு அழுவதற்கு மனமும் நேரமும் இப்போதுதான் அமைந்தது எனக்கு. பைக்கின் பின்னால் அமர்ந்து முழுசாக அழுதேன். அப்பா முதன் முதலில் என்னை இப்படி ஸ்கூட்டரில் ஸ்கூல் அழைத்துப் போனதில் இருந்து ஞாபக வெள்ளம் கரை புரண்டது. காலில் சுளுக்கு பிடித்த போது அப்பா அவர் மடியில் என் காலை எடுத்து வைத்துக் கொண்டு இரவெல்லாம் அழுத்திக் கொண்டிருந்த அடுத்த சம்பவம். அவருடைய கைச் சூடு நேற்றுவரை என் உடம்பில் பதிந்த ஞாபகம்... அவர் கடைசியாக என்னைத் தொட்ட இடம் என்னிடம் இருந்தது. அப்பா எங்கே?...

உயிர் இருந்ததா என்று கடைசியாக ஒருமுறை பார்த்திருந்திருக்கலாமோ?

வெள்ளி, ஜனவரி 04, 2008

அவாரிய மலைப் பிரவாகம்!

லட்சியவாதங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட துப்பறியும் நாவல்கள், யதார்த்த இலக்கியங்கள், விஞ்ஞான புனைகதைகள், மாயாவாத இலக்கியங்கள் என தமிழ் வாசகனுக்கு சகல நாவல் வாசிப்பு அனுபவங்களும் கைகூடியிருக்கிறது. மிகச் சிறிய குழுவாக இருந்தாலும் அந்த வாசகக் கூட்டத்துக்கு எழுத்துலக "நல்லது கெட்டதுகள்' ஓரளவுக்குக் கைகூடியிருக்கிறது.
இந்த எல்லாவற்றிலும் ஹாஸ்யம், துன்பியில், நையாண்டி, புரட்சிகரம், மங்கலகரம் புத்திசாலித்தனம் விறுவிறுப்பு எல்லாமும் உள்ளடங்கியிருக்கிறது. கதைக்களம் அல்லது எழுத்து நடை இதைத் தீர்மானிக்கிறது.
ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிற முதல் இரண்டு மூன்று பக்கங்களிலேயே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அதாவது இந்தப் புத்தகம் மேலே சொன்னவற்றில் எந்த ரகம் என்பதில்.
மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது நூலிலும் அப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு நான் முதல் சில பக்கங்களைப் புரட்டிக் கொண்டு வந்தேன். ஒரு முடிவுக்கு வருவதற்காகவே நிறைய பக்கங்களைப் படித்து, முடிவு செய்துவிட்டுத்தான் படிக்க வேண்டும் என்ற அவசியத்தை மாற்றிவிட்டது நாவல்.
ஃப்ளாஷ் பேக் உத்தியில் ஒரு பெண்ணின் நீண்ட நினைவுப் பதிவாக விரிகிறது கதை.
நமக்குச் சற்றும் பழக்கமில்லாத பின்னணியில் நகர்கிறது கதை. அவாரிய மலைவாழ் மக்களின் வாழ்க்கை. மலையும் மலைசார்ந்த இடமும்தானே என குறிஞ்சித் திணையைக் கற்பனை செய்து கொள்ள முடியுமா? தேனோ, தினைமாவோ முருகனோ இல்லை. அதற்கு பதிலாக வேறு உணவுகள். கொழுக்க வைத்த மாட்டிறைச்சி.. பாலாடைக்கட்டி, ரொட்டி... முருகனுக்குப் பதில் அல்லா. அங்கிருக்கும் உணவு வேறு, உடைகள் வேறு. பேசும் மொழிவேறு, ஊர் பெயர் ஆசாமிகளின் பெயர் எல்லாம் வேறு.
வெளிநாட்டு இலக்கியங்களைப் படிக்கும்போது எப்போதும் ஏற்படும் உணர்வுதான். ஆனால் நம்மையும் அவர்களையும் இணைக்கும் பொது அம்சம் அது சவால் நிறைந்த இன்னொரு வாழ்க்கையைச் சொல்கிறதா என்பதில்தான் இருக்கிறது. அது காதலிக்கிறவன் கதையோ, கட்டடம் கட்டுகிறவன் கதையோ.. இன்னொரு மனிதனின் சவாலைச் சொல்கிறது, பிரச்சினையைச் சொல்கிறது என்பதுதான் இத்தனைத் தடைகளையும் மீறி நம்மை படிக்க உந்துகிறது. ஷேக்ஸ்பியர் படித்திருக்கிறாயா, டால்ஸ்டாய் படித்திருக்கிறாயா, மார்க்வெஸ் படித்திருக்கிறாயா என்று பேச வைக்கிறது.
பஞ்ச தந்திரக் கதையாக இருந்தாலும் பஞ்ச பாண்டவர் கதையாக இருந்தாலும் பரந்தாமன் கதையாக இருந்தாலும் அவற்றில் வரும் நரியையோ, எம் பெருமான் நாராயணனையோ நாம் மனிதர்களாகத்தான் பார்க்கிறோம். மனித குணங்களை ஏற்றி அவை எதிர் கொள்ளும் பிரச்சினைகளைத்தான் பார்க்கிறோம். அதனால்தான் மனைவியை மீட்க ராமர் பாலம் கட்ட வேண்டியிருக்கிறது. பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை எல்லாம் பின்னே காட்டு விலங்குகளுக்கும் கடவுளுக்குமா பொருந்தும்?
ஆனால் அது இந்த நாவலில் வரும் அவாரிய மக்களுக்குப் பொருந்துகிறது.
மலையில் இருந்து அருவி கொட்டும் சீஸன் ஆரம்பிக்கிறது. முதலில் அதைப் பார்க்கிறவர்கள் என்ன வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்களோ அது நிறைவேறும் என்பது சம்பிரதாயம். பாத்திமாத் என்ற சிறுமி இறந்து போன தன் தந்தை (அகமது) திரும்ப வருவாரா என்று நிராசை கொள்கிறாள்.
மலையில் இருந்து விழும் நீர் எப்படிப் பொங்கிப் பாயுமோ அப்படியேதான் கதையும் நகர்கிறது.
அந்தச் சிறுமியின் தந்தை எப்படி இறந்தான்? அது இயற்கையான மரணம்தானா? பின்னணியில் இருந்த சதி என்ன? பாத்திமாத்தோடு சேர்ந்து மூன்று பெண் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அகமதின் மனைவி பரீஹான் எப்படிக் குடும்பம் நடத்துகிறாள். அவர்களுக்கு உதவும் உமர்தாதா} ஹலூன் தம்பதிகள். அவர்களின் மகன்கள். பரீஹானை அடைய வெறி கொண்டு அலையும் ஜமால். அவனுடைய மகனுக்கு பாத்திமாத்துக்கும் ஏற்படும் காதல் பரவசம்.உமர்தாதாவின் மகனுக்கும் பாத்திமாத்துக்கும் திருமணம் செய்ய பெரியவர்களின் விருப்பம். காதல் முக்கோணத்தில் பாத்திமாத்தின் கவலை. பரீஹான் மீது விழும் கொலைப் பழி. நீதிபதிகளின் முன்னால் வைக்கப்படும் பரபரப்பான ஆதாரம். இரண்டாம் உலகப் போர். அது காவு கொள்ளும் காதல்கள். அத்தனை நிகழ்வுகளுமே அருவி நீரின் பிரவாகத்தோடு சுணக்கமின்றி நகர்கின்றன.
நாம் எப்படி யூகிக்கிறோமோ அப்படியே நகரும் கதையாக இருக்கிறது இது. அப்படி நாம் யூகிப்பதற்கான காரணங்களையும் நாவலின் ஆசிரியரே டிப்ஸ் தருகிறார். நாவல் எழுதும் யாரும் இப்படித் துணிவார்களா என்பது தெரியவில்லை. இந்த நாவல் எப்படி முடியப் போகிறது என்பதும் நாவலின் திருப்பமான விஷயங்கள் என்ன என்பதும் நாவலின் நடுநடுவே சொல்லப்பட்டுவிடுமாயின் அந்த நாவலை மேற்கொண்டு படிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும் என்று நினைப்பது சகஜம்தான்.
உதாரணத்துக்கு அகமது மரணத்தில் சந்தேகம் இருப்பது முதலிலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அதையும் மீறி நாவலைப் படிக்க வைப்பது உமர்தாதா என்ற விவசாயக் கிழவன். மண்ணை அவன் நேசிப்பது போல வேறொருவர் நேசிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவனுடைய தைரியமும் உழைப்பும் நேர்மையும் தியாகமும்தான் நாவலுக்கு நீடித்த சுவாரஸ்யத்தைத் தருகிறது என்பது என் கருத்து. கதையைச் சொல்லிச் செல்வதாக வரும் பாத்திமாத்தோ, கணவனோ பாத்திமாத்தின் தந்தையோ தாயோ அல்ல நாவலின் கதாநாயகன். உமர்தாதா... ஆமாம் அவர்தான்.
மனிதர்களிடம் அவர் காட்டும் கருணை, அநீதியை அவர் தட்டிக் கேட்கும் துணிவு .
அவருடைய பேச்சில் தொனிக்கிற வாழ்வின் அனுபவத் தெறிப்புகள் நிச்சயம் உலகத்துப் பெரிய மனிதர்களுக்கெல்லாம் பொது குணமாக இருக்கும் என்பதை நம்ப வைக்கிறது. எல்லா மறுமொழிகளுக்குமே அவருக்குப் பழமொழிகளே பதிலாக அமைவது பிரமிக்க வைக்கிறது. மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது உட்பட அவருடைய பழமொழிகள் நாவெலெங்கும். பாஸþ அலியெவா அவருடைய சொந்தக் கதை இது என்று சொல்லியிருக்கிறார். அவருடைய மூன்று சகோதரிகள்தான் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்தக் கதையில் வரும் பரீஹான் இந்த நாவல் புத்தகமானபோது உயிருடன் இருப்பதாகவும் முன்னுரையில் கூறியிருக்கிறார்.
உண்மைக் கதை எப்போதும் அதன் சுட்டெறிக்கும் வெப்பத்துடன்தான் இருக்கிறது.



தமிழ்மகன்



மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
பாஸþ அலீயெவா
மொழி பெயர்ப்பாளர்: பூ. சோமசுந்தரம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
அம்பத்தூர்,சென்னை }98.

விலை ரூ. 140

வியாழன், ஜனவரி 03, 2008

சிறுகதை -சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்

என் மகள் கொண்டு வந்த அந்த அழகிய சிறிய புத்தகம் குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் அடங்கிய புத்தகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பள்ளியிலிருந்து கொண்டுவரப்பட்டதிலிருந்து என் மகளால் படிக்கப்படாமல் டேபிளின் மீதே மூன்று நாள்களாகக் கிடந்ததால் அது ஒருவேளை பெற்றோர்களுக்கான புத்தகமோ என்று தோன்றியது. இரவு சாப்பாடு முடிந்து தூங்குவதற்கு முந்தைய ஒரு அசமந்தமான நேரமாக இருந்ததால் அந்தப் புத்தகத்தைக் கண்ணுற்றேன்.
ஏனென்றால் பெற்றோர்}ஆசிரியர் கூட்டத்தில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. அந்தப் பள்ளியின் தாளாளர் எழுதிய புத்தகம் என்றும் அதற்காக குழந்தைகள் எல்லோரும் தலா 25 ரூபாய் கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆசிரியர்களைச் சந்திப்பது என்பது நான் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே பிடிக்காமல் போய்விட்டதால் நான் ஒவ்வொரு முறையும் எப்படியாவது அந்தக் கூட்டங்களைத் தவிர்த்துவிடுவேன். குழந்தைகளின் படிப்பு மேம்படுவதற்காக அவர்கள் சொல்கிற ஒவ்வொரு உத்தியையும் மீற வேண்டும் என்று தோன்றுவதுதான் முதல் காரணம். உதாரணத்துக்கு "தினமும் இரவு 10 மணிவரை படிக்க வேண்டும். காலையில் நான்கு மணிக்கு எழுந்திருந்து படிப்பைத் தொடர வேண்டும்' என்பது குழந்தைகள் படிப்பதற்கான ஓர் உத்தி.
""நானெல்லாம் படித்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்ததோடு சரி'' என்று மனைவியிடம் சொல்வேன்.
""அதான் இப்படி இருக்கிறீர்கள்'' என்பாள் வெடுக்கென.
""வீட்டில் இத்தனை மணி நேரம் படிப்பதற்கு பள்ளிக்கூடம் எதற்காக?''
""பசங்க நல்லா படிக்கறதுக்குத்தான்''
""கொஞ்சமாகப் படித்தால் போதும்''
""நல்லது என்றாலே பிடிக்காதே''
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் நல்லதாக இருக்கிறது. எனக்கு நல்லதாக இருப்பது பெரும்பாலும் கெட்டது என்பது என் மனைவியின் சுலப அபிப்ராயம்.
இப்படியான எண்ண ஓட்டத்தோடுதான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தின் தலைப்பு "சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்'.
சவீதா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய சிந்தனைத் துளிகள் என்பது புரிந்தது. குழந்தைகள் படிப்பைக் குறித்த உத்திகள் அதில் இருக்கும் என்று நான் நம்பினேன். ஆனால் அதில் அப்படியில்லை.
உழைத்தால் உயர்வு கிட்டும், உண்மை பேசு, அன்பே சிறந்தது, கூடி வாழ்ந்தால் குடி உயரும்,எளியவர்க்கு உதவினால் தர்மம் தலை காக்கும் என்ற ரீதியில் அவர் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருந்தார். இது எதிர் பார்க்காத திருப்பம். என்னால் நம்பவே முடியவில்லை. மனித இனம் தோன்றிய காலம் தொட்டுச் சொல்லப்பட்டு வருகிற இத்தகைய அறிவுரைகளை ஒரு மனிதர் தம்முடைய சிந்தனைகளாக சொல்லிக் கொள்வதும் புத்தகமாகப் பிரசுரிப்பதும் மிகப் பெரிய அநீதியாக இருந்தது.
பள்ளி மாணவர்கள் 848 பேரும் அந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். யாருக்குமே இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லையா என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஒரே நாளில் 848 பிரதிகள் விற்பது என்பது தமிழ் நூல் உலக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை. சொல்லப் போனால் முதல் சாதனையாகவும் இருக்கும் என்று நினைத்தேன்.
ஒரு சிறுகதை தொகுதி வெளியிட்டுவிட்டு நூலக ஆணை கிடைக்கப் பெறாமல் அந்த ஆயிரம் பிரதிகளையும் இண்டு இடுக்கு வீட்டில் வைத்து கரையானுக்குப் பாதி, அன்பளிப்பு மீதி என்று அவதிப்பட்டவனுக்குத்தான் சவீதா முத்துகிருஷ்ணன் என்ற எழுத்தாளனுக்குள் ஒளிந்திருக்கிற சாமர்த்தியம் தெரியும்.

""என்னது "என்ன இது அநியாயம்?' அவன் பண்ணினதும்தான் அநியாயம்'' என்று என் மனைவி தொலைக்காட்சி சீரியலைப் பார்த்து ஏதோ சொன்னாள். நான் மனதுக்குள் நினைத்தது வாய்வழி முணகலாகவே வெளிப்பட்டிருக்கிறது. டி.வி.யில் வேறு ஏதோ அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது போலும்.
""இந்தப் புத்தகத்தை ரமேஷ் வீட்டிலும் வாங்கினாங்களா?''
""எந்த புத்தகம்?''
""சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள்''
அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக என் கையில் இருந்த புத்தகத்தை கவனமாகப் பார்த்தாள்.
""எல்லோரும்தான் வாங்கியாகணும்''
""சட்டமா?''
""உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது''
""ரமேஷ் அப்பா இந்தப் புத்தகத்தைப் பார்த்தாரா?''
""அதெல்லாம் எனக்குத் தெரியாது''
ரமேஷ் வீடு எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளிதான். நான் நேராகவே ரமேஷ் வீட்டுக்குப் போய் அவருடைய அப்பாவைத் துணைக்கு அழைத்தேன். அவர் மேற்படி புத்தகத்தை அவர் வீட்டில் இருந்த இரண்டே புத்தகங்களான விநாயகர் அகவல், திருப்பாவை ஆகியவற்றுக்கு அடுத்து இந்தப் புத்தகத்தையும் வைத்திருந்தார். புத்தகத்தின் சைஸ் காரணமாக அங்கு அடுக்கியிருக்கலாம்.
விஷயத்தை விளக்கி, காலம் காலமாக புத்தரும் ஒüவையாரும் திருவள்ளுவரும் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருப்பதை ஒரு மனிதர் தன்னுடைய சிந்தனைகளாகப் புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதுடன் அதை வாங்கியே ஆக வேண்டும் என்று 25 ரூபாய் வேறு வாங்கிவிட்டதைச் சொன்னேன்.
""பரவாயில்லை விடுங்க. எவ்வளவோ செலவு பண்றோம். வீட்டில் புக்குனு ஒண்ணு இருக்கறது நல்லதுதானே?'' என்றார். இரண்டே புத்தகங்கள் உள்ள தம் பூஜையறை நூலகத்தில் மூன்றாவதாக இப்படியொரு புத்தகம் சேர்ந்த மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.
அவருக்கும் மெகா சீரியல் கவலைதான் அதிகமாக இருந்தது. ""இவ்வளவுக்கும் காரணம் இந்த இன்ஸ்பெக்டர்தான்'' என்றார் டி.வி.யைக் காட்டி.
மக்களின் அறியாமை, அலட்சியம், கொடுமை கண்டு பொங்காத மனநிலை, சகிப்புத் தன்மை, அக்கறை இன்மை எல்லாமுமாகச் சேர்ந்து என்னுடைய ஆவேசத்தை அதிகப்படுத்தியது. இதற்காக சுப்ரீம் கோர்ட் வரைகூட சென்று வாதாடுவது என்று தீர்மானித்தபோது மணி இரவு 12}ஐக் கடந்துவிட்டது.

காலை நான் பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து பள்ளியின் தாளாளர் அறையை நோக்கி வேகமாக நடைபோட்டேன். தாளாளரின் கார் பிரமாண்டமாக நின்றிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி நினைவுக்கு வந்தது. வேலை ஏதும் கிடைக்காமல் தாம் பட்ட கஷ்டத்தையும் பிறகு பள்ளிக் கூடம் தொடங்க முடிவெடுத்து வாழ்க்கையில் முன்னேறியது பற்றியும் அவர் அதில் கூறியிருந்தார். "வாழ்க்கையில் வென்றவர்கள்' என்ற தன்னம்பிக்கைத் தொடரில் அது வெளியாகியிருந்தது. இரவு ஏற்பட்ட ஆவேசம் சற்றும் குறையவில்லை எனக்கு. அவருடைய காரைப் பார்த்ததும் அது அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் தாளாளர் அறை நோக்கி வேகமாக நடைபோடுவதைப் பார்த்த காவலாளி படுவேகமாக வந்து என்னைத் தடுத்தான். ""யாரைப் பார்க்கணும்?''
""கரஸ்பாண்டன்ட்''
""அதெல்லாம் சாயங்காலம் நாலு மணிக்கு மேலதான். கிளம்புங்க''

""வழி விடுய்யா''
""யோவ் நில்லுய்யா'' என்றான் அதே மரியாதையுடன்.
எங்கே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவானோ என்று சற்றே தயக்கமாக இருந்தது. அவமானப்படுத்திவிட்டான் என்றால் பிறகு எல்லாமே ஏடாகூடமாகிவிடுமே!
சட்டென என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்.
இரவு நேரங்களில் வீடு திரும்பும்போது போலீஸ்காரன் சந்தேக கேஸ் என்று மடக்கினால் காட்டுவதற்காக அச்சடித்து வைத்திருந்த விசிட்டிங் கார்டு. அதைப் பார்த்து அவன் உடனடியாக மரியாதை கொடுத்தான் என்று சொல்ல முடியாது. என் பெயருக்கு முன்னால் எழுத்தாளர் என்று அதில் போட்டிருந்தேன். ""இதைச் சொல்ல வேண்டியதுதானே? என்னமோ புர்ர்ருனு போறீயே? இங்கயே நில்லு கேட்டுட்டு வந்து சொல்றேன்'' என்றான்.
விசிட்டிங் கார்டுக்கு நல்ல மரியாதை இருந்தது. போன வேகத்தில் காவலாளி வந்து அழைத்தான். காவாளியிடம் அலட்சியத்தைக் காட்டிவிட்டு தாளாளர் அறைக்குள் நுழைந்தேன். அவரைத் தவிர அங்கு மூன்று பேர் இருந்தார்கள். இருவர் பணியாட்கள். அவருடைய சிந்தனைகள் நூலின் வெளியீட்டுவிழா படத்தை பெரிய சைஸில் ஃபிரேம் போட்டு, அதைச் சுவரில் மாட்டுவதற்கான வேலை நடந்து கொண்டிருந்தது.
""வாங்க, எழுத்தாளர். இந்த ஃபோட்டோவை இங்கே மாட்டலாமா பாருங்கள்'' என்று அபிப்ராயம் கேட்டார் தாளாளர். முரட்டு உருவம். பில்டிங் மேஸ்திரி ஆறுமுகம் ஞாபகத்து வந்தார். விபூதியும் குங்குமமும் நெற்றி நிறைய ஆக்ரமித்திருந்தன. அவருக்கு எதிரில் வேறொருவர் உட்கார்ந்திருந்தார். ""இவர்தான் கவிஞர் கவிமுகிலன்'' என்னை நோக்கிச் சொல்லிவிட்டு, ''இவர்....'' என்றபடி என் விசிட்டிங் கார்டில் பெயரைத் தேடினார். கார்முகிலன் அந்தப் போட்டோவில் புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
""உங்களோட புத்தகத்தைப் பார்த்தேன்''
அவருடைய மேஜை அறையைத் திறந்து அவருடைய புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தருவதற்கு எத்தனித்தவர், நான் இப்படிக் கூறியதும் அதை மறுபடி உள்ளே வைத்துவிட்டு ""எப்படி இருந்தது சொல்லுங்க'' என்று பெருமிதம் பொங்க பாராட்டுகளைப் பெறுவதற்காகக் காத்திருந்தார்.
அந்தச் சூழ்நிலையை எதிர் கொள்ள முடியாமல் தவித்தேன்.
""உண்மை பேச வேண்டும் என்பதும் உழைத்து முன்னேற வேண்டும் என்பதும் எப்படி உங்களுடைய சிந்தனையாகும்?'' என்றேன் ஒரு திடீர் உந்துதலில்.
அந்த அறையில் இருந்த நான்கு பேருமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தனர். தாளாளரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஃபோட்டோ மாட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன சைகை செய்தாரோ இருவரும் வெளியேறினர்.
""நீ மட்டும் என்ன பிரமாதமா எழுதிட்டே?'' ஒருமையில் கேட்டார்.
""நான் உங்களைவிட சிறப்பா எழுதுவேன் என்று நிரூபிப்பதற்காக வரவில்லை. எழுத்தாளர் என்ற முறையிலும் வரவில்லை. என் குழந்தையிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து 25 ரூபாய் வாங்கியிருக்கிறீர்கள். இந்தப் புத்தகத்தை வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை''
""இப்ப என்ன 25 ரூபாய் வேண்டுமா?'' என்றபடி ஆவேசமாக பர்ûஸ எடுத்து ஒரு நூறு

ரூபாய் தாளை எடுத்து என் முன் வீசினார்.
""எனக்கு 25 ரூபாய் தந்தால் போதும்'' என்றேன்.
""ஃபிஸ் கவுண்டரில் போய் வாங்கிக்க'' என்றபடி இண்டர்காமில் தகவல் சொன்னார்.
""நீங்க போகலாம்... வயிற்றெரிச்சல் கிராக்கிங்க''
""புலவர்களுக்குள் சச்சரவு ஏற்படுவது சகஜம்தான்... கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கு ஏற்படாத சச்சரவா?'' தாளாளர் முன் அமர்ந்திருந்தவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.





தமிழ்மகன்,

tamilmagan2000@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin