வெள்ளி, மே 23, 2008

கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை

கூட்டத்தின் கடைசியில் காத்திருந்தான் மைக்கேல்.

எல்லோருக்கும் உளவியல் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தன. மைக்கேலுக்கு அடுத்து அமர்ந்திருந்தவர் "பணம் சாப்டா பசியாறுமாடா?' என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் இவரைக் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டார். மைக்கேலுக்கு மறுபக்கம் அமர்ந்திருந்தவர் அடிக்கடி டயம் கேட்டுக் கொண்டிருந்தார். அரை நிமிடத்துக்கு ஒருமுறை அவர் நேரம் கேட்டபோதும் அலுத்துக் கொள்ளாமல் சொல்வது தம் கடமை என்று நினைத்தான் மைக்கேல். ஒருவர் திடீரென்று திமிறி ஓடும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட்டார். சிலர் அமைதியாக இருந்தாலும் அவர்களுக்குள் ஓர் மெüனப் புயல் அடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

காத்திருப்பவர்களுக்கான டோக்கன் எண் அட்டையை வழங்கிக் கொண்டிருந்த பெண்மணி ""உங்க பேஷண்ட் இப்ப வந்துடுவாங்களா?'' என்றாள் மைக்கேலிடம்.

"நான்தான் பேஷண்ட்''

இருக்கவே முடியாது என திகைத்தாள். மிக நேர்த்தியாக முடிவெட்டி பிரெஞ்ச்பேட் தாடி வைத்து சீராக உடை உடுத்திய நாகரீக மனிதனை என்ன மாதிரியான வியாதிக்குள் அடக்குவது என அவள் குழம்பினாள். அந்தப் பெண் கேள்வியோடு பார்த்துவிட்டு அவனுக்கு ஒரு சலுகை போல மருத்துவரைப் பார்க்க சீக்கிரமே அனுமதி தந்தாள்.

டாக்டர் பரதன் நகரின் பிரசித்தி பெற்ற மன நல மருத்துவர். போதை மருந்துக்கு அடிமையானவர்கள், தேர்வு நேரத்தில் மாணவர்கள் மனநிலை உள்ளிட்ட கட்டுரைகளை பத்திரிகையில் எழுதுவோர் அவரிடம் கருத்து கேட்டு எழுதுவார்கள். அவரும் சளைக்காமல் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய மனோ நிலைகள் பற்றி கருத்து கூறி வருவார்.

"மிஸ்டர் மைக்கேல்?''

"யெஸ்''

"உங்கள் பிரச்சினை என்னவென்று சொல்ல முடியுமா?''

"என்னுடைய பிரச்சினை எளிமையானதுதான்'' என்று தயங்கிச் சிரித்தவன், "ஒருவேளை கடினமானதாகவும் இருக்கலாம்'' என்று முடித்தான்.

டாக்டரும் நாகரீகமாகப் புன்னகைத்துவிட்டு ""சொன்னால்தான் முடிவு செய்ய முடியும்?''
"என்னை ஒரு ரஜினிகாந்துக்கோ, விஜயகாந்துக்கோ ரசிகனாக்கிவிட்டால் போதும்''
டாக்டர் பத்திரிகையில் அடிக்கடி பேட்டி கொடுக்கிற பழக்கம் உள்ளவராக இருந்ததால் மைக்கேல் சொன்னது அவருக்குள் இப்படி கொட்டை எழுத்தில் ஒலித்திருக்க வேண்டும். சுதாரித்துக்கொண்டு "சுவாரஸ்யமான பிரச்சினைதான்'' என்றார்.
"இப்படி ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உணர்ந்தேதான் சொன்னேன்.''
சிரித்தார். "ரஜினிகாந்துக்கு ரசிகராவது ஒரு டாக்டரிடம் முறையிடும் விஷயமாகத் தெரியவில்லை''

"ரஜினியை ரசிக்கவிடாமல் என்னை பல்வேறு விஷயங்கள் ஆக்ரமித்துவிடுகின்றன. அதுதான் என் பிரச்சினை''

"எதனால் அப்படி?''

"இப்ப வரும்போது பஸ்ஸில் இடம் காலியாக இருந்தும்கூட ஒருத்தன் ஒரு பொண்ணுமேல வேணும்னே உரசிகிட்டு வந்ததைப் பார்த்தேன்... ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தமாகிவிட்டது. சாலையில் இசை வாத்தியம்போல ஹார்ன் இடித்துக்கொண்டு போகிறார்கள். எல்லோரையும் நிறுத்தி எதற்காக இப்படி ஹார்ன் அடிக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் போல தோன்றுகிறது. ஆட்டவில் கூடுதல் இரைச்சல் ஏற்படுவதற்காக சைலன்ஸரில் ஏதோ தகடு வைக்கிறார்கள் என்று அறிந்தேன். மனசு பதறுகிறது ஐயா''

டாக்டர் இத்தகைய கேஸ்களை நிறைய அலசியவர் போலத்தான் தலையை ஆட்டினார்.

"உங்களுக்குச் சமூக அக்கறை அதிகமாக இருக்கிறது. எல்லாம் ஒருநாளில் மாறிவிட வேண்டும் என்று அவசரப்படுகிறீர்கள். நாம் எல்லோரும் விலங்கிலிருந்து வந்தவர்கள் அநிமல் நேச்சர் நம் எல்லோரிடமும் இருக்கிறது. சிலருக்கு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. நீங்கள் கொஞ்ச நாள் டி.வி. பார்க்காமல் இருங்கள். பத்திரிகையும் படிக்காதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்'' என்றார்.

"நான் மட்டும் படிக்காமல், பார்க்காமல் இருந்தால் போதாது. மக்களும் பார்க்காமல் இருந்தால்தான் இது சாத்தியம்''

"மற்றவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்களை மட்டும் யோசியுங்கள்''

மைக்கேல் டாக்டருக்குத் தன் நிலைமையை விவரிக்க முடியாமல் தவித்தான்.

"டாக்டர் நீங்களாவது என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்குச் செய்தியைச் சார்ந்துதான் வாழ்க்கையே. ஓயாமல் செய்திகள் நாடி அலைகிறார்கள். "என்ன ஸôர் கும்பகோணம் டிராஜிடியைக் கேட்டீங்களா' என்று சகஜமாக விசாரித்துவிட்டு அதை வளர்த்துகிறார்கள். அது மாதிரி நிகழாமல் இருக்க யோசனைகள் பரிமாறிக் கொள்கிறார்கள். நாடே சுத்த மோசம் என்கிறார்கள். அதே வேகத்தில் டி.வி. டிராமா பற்றி கொஞ்ச நேரம் பேசுகிறார்கள். யாருக்கும் நிஜமான அக்கறை இல்லை. அந்த டீச்சரை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளின் சாவுக்குக் காரணமான டீச்சரையா? அல்லது மெகா சீரியலில் வரும் டீச்சரையா என்று தெரியவில்லை. இப்படியா இருப்பார்கள்? குடி நீருக்காக விழுந்து விழுந்து அலைகிறார்கள். "நேத்து அதிகாரிகள் எல்லாம் புழல் ஏரியை பார்த்துவிட்டு தண்ணி குறைவா இருக்கறதால இனிமே மூணு நாளுக்கு ஒரு தரம்தான் தண்ணி விட்றதா முடிவு பண்ணியிருக்காங்களாம்' என்று பேசிக் கொள்கிறார்கள். செய்திகளைப் படித்துவிட்டுத்தான் அப்படி பேசுகிறார்கள். நீங்களே சொல்லுங்கள். அதிகாரிகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் இப்படி ஏரியை எட்டிப் பார்ப்பதும் நீர் குறைந்துவிட்டதைக் கண்டுபிடிப்பதும் பிறகு மூன்று நாளுக்கு ஒருதரம் தண்ணீர் திறந்து விடுவதும் நியாயமா சொல்லுங்கள்? மக்களுக்குப் பேசுவதற்கு ஏதோ செய்தி வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்கள். இந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கிற விபரீதம் என்னைப் பாடாய்படுத்துகிறது. இரவெல்லாம் தூக்கம் வராமல் தத்தளிக்கிறேன். என்னால் முடியவே இல்லை. நான் மட்டும் பேப்பர் படிக்காமல் இருந்தால் மட்டும் இது சாத்தியமா? மக்கள் எல்லோரும் இந்த அபத்தச் செய்திகளைப் பேசாமல் இருந்தால்தானே சாத்தியம்?''

டாக்டர் அவனை சற்று விபரீதமாகப் பார்த்தார். பெருந்தன்மையாகப் பார்ப்பதாகவும் இருந்தது.
"எனக்கு இந்த மாதிரி எண்ணங்களெல்லாம் இல்லாமல் செய்ய வேண்டும். செய்திகள் எல்லாம் மிகையாகவோ அல்லது தவறாகவோ இருக்கிறது. "உடலுறவுக்குத் தடையாக இருந்ததனால் பச்சைக் குழந்தை கொலை' என்று போடுகிறார்கள். இதெல்லாம் நிஜமா? எனக்கு வேண்டாம் ஸôர். இந்தச் செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராயும் திராணி போய்விட்டது எனக்கு. ரஜினிபடம் எப்போது வரும் என்பது மாதிரியான லேசான கவலைகளைத் தாருங்கள். அது போதும்''

டாக்டர் முகத்தில் தீவிரம் கூடியது. "ஒழுங்காகப் பசிக்கிறதா?'' என்றார்.

"குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் இல்லை. சில நேரங்களில் பசித்து சாப்பிடுவேன். சில நேரம் சாப்பிட வேண்டிய நேரம் என்பதற்காகச் சாப்பிடுவேன்.''

மைக்கேலுக்கு வைத்தியமா பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவர் போல தலையை மேலும் கீழும் அசைத்தார். நிறைய கேள்விகள் கேட்டு கேஸ் இஸ்ட்ரி எழுதிக் கொண்டார்.

"எங்கள் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டுமானால் உங்கள் சார்பாக யாராவது கெயெழுத்துப் போட வேண்டும். நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள். உங்கள் உறவினர் யாரையாவது நாளை அழைத்து வர முடியுமா?''என்றார்.

"சரி''

மைக்கேலின் உறவின் முறை வட்டாரம் ஊழல் புரியாதவர்கள் பட்டியல் போல குறுகியதுதான். அவர்களும் தூத்துக்குடி பகுதியில் இருக்கிறார்கள். சென்னையில் அழன் ஈடு இருக்கும் உறவினன் என்றால் அது சார்லஸ் ஒருவன்தான். தனக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய இன்னலை அவனுக்கு விளக்குவதற்கே மைக்கேலுக்குப் பெரும்பாடாக இருந்தது. "உனக்கென்னடா பிரச்சினை, ஏன் இப்படி மனசைக் குழப்பிக்கிறே?'' என்றான். மைக்கேல் எம்.என்.சி. அந்தஸ்துள்ள கடன் வழங்கும் நிறுவனத்தில் காசோலையில் கையெழுத்திடும் தகுதியாளனகப் பணியாற்றுகிறவன். "இப்படி பைத்தியக்கார ஹாஸ்பித்திரியில் வைத்தியம் பார்த்துக் கொள்வது வெளியில் தெரிந்தால் அது அவனுடைய பணி சம்பந்தமான நெருக்கடிகளுக்கு வழி வகுக்கும்' என்றும் கூறினான். மைக்úல் அந்த வேலை பற்றிக் கவலையில்லை என்றான்.

தானாகவே முன்வந்து தன் னநிலை குறித்து விவரித்தற்காகப் பெருமைப்பட்டார் டாக்டர். மைக்கேலுக்கு அடக்கமான சிறிய அறையை ஒதுக்கியிருந்தார். இரண்டாவது மாடியில் சில அறைகள் ùயில்கள் போலவே இருந்தன. அதனுள் இருந்தவர்கள் கம்பிகளைப் பிடித்தபடி சோர்ந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தனர். முதல்மாடியில் மிதவாதிகள் மைக்கேலைப் பொறுத்தவரை மற்ற அறையில் இருப்பவர்கள் போல் பச்சை நிற அங்கியை அவன் அணிய வேண்டியதில்லை என்றும் டாக்டர் கூறியிருந்தார். சுலபமான சில யோகா பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தார்கள். இரவு நிóமதியாக உறங்குவதற்கு சில மாத்திரைகள் கொடுத்தார்கள்.

இரவு இரண்டு மணிவாக்கில் ஏதோ சலசலப்பு கேட்டுவிழித்தான். சற்றே பிரச்சினைகளிலிருந்து விலகியிருப்பதில் மைக்கேலுக்கு ஒரு சுகம் இருந்தாலும் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பது தீர்வல்ல என்றும் சமூகத்தை எதிர் கொள்ளத் தயங்குவது அவமானமாகவும் தோன்றியது. இப்போது சலசலப்பு அதிகமாகக் கேட்டது. யாரோ அலறும் சப்தமும் சிலர் ஓடுவது போலவும் யூகிக்க முடிந்தது. மைக்கேல் எழுந்து வெளியே வந்தான். பச்சை நிற அங்கி அணிந்த நோயாளி ஒருவரை ஐந்தாறு சேவகர்கள் சுவர் ஓரமாகத் தள்ளி அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தனர். நோயாளி பயந்துபோய் குண்டுகட்டாக அமர்ந்திருந்தார்.

மைக்கேல் "ஏன் அவரை கஷ்டப்படுத்துகிறீர்கள்?'' என்றான்.

சேவகர்கள் மைக்கேலே ஆச்சர்யமாகப் பார்த்தனர். "இந்த நேரத்தில் எப்படி வெளியே வந்தாய் நீ?' என்பதான ஆச்சர்யம்.

"விடுங்கள் அவரை'' என்றான்.

அலட்சியத்துடன் மைக்கேலின் கையைத் தட்டிவிட்டான் ஒருவன். மைக்கேல், "அவரை என்னிடம் விடுங்கள் சமாதானப்படுத்துகிறேன். முரட்டுத்தனம் வேண்டாம்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒருவன், "நீ எப்படி வெளியே வந்தே? மாத்திரை போட்டியா இல்லையா?'' என்றான்.

"வெளியே வருவதற்கு தடை எதுவும் சொல்லவில்லையே... மாத்திரை போட்டுக் கொண்டனே''

"பச்சை கவுன் எங்கே?''

"டாக்டர் வேணாம்னு சொல்லிட்டாரு''

சேவர்கள் ஒருவரை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர். ""டாக்டர் சொன்னாரா? அப்படினா நீ டாக்டராதான் இருக்கணும். நாளைல இருந்து டாக்டர் ட்ரஸ் போட்டுக்க... இப்ப இந்த ட்ரஸ்ûஸ போட்டுக்க'' அங்கே மாட்டி வைத்திருந்த ஒரு பச்சை கவுனை எடுத்து வந்து கொடுத்தான். அது பெனாயில் வாசனை அடித்தது.

"விளையாட்டில்லை.. டாக்டர்தான் சொன்னார்...''

"சரி... சரீய்... எல்லாம் காலைல பேசிக்கலாம். முதல்ல நீ இதப் போடு''

"இதை அணிந்து கொள்வதில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் டாக்டர் அனுமதிச்சதை நீங்க ஏன் மறுக்கிறீங்க? அதுவுமில்லாம என்னை ஒருமையில அழைக்கிறதும் சரியில்லை''

எதிரில் நின்றிருந்தவன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். இவனை இப்படி டீல் செய்யக்கூடாது என்ற தலையசைப்பு.

சுவரோரமாக ஒடுங்கி உட்கார்ந்திருந்த நோயாளியை ஓர் அதட்டல் போட்டு அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, எல்லோரும் மைக்கேல் பக்கம் திரும்பினர். ஒருவன் சட்டென மைக்கேலின் முஷ்டியை முறுக்கி பின்பக்கம் மடித்தான். ஒருவன் அப்படியே தலையை அழுத்தி "பெசாம உட்காரு'' என்றான்.

அதற்குள் ஒருவன் வேகமாக பச்சை அங்கியை எடுத்து அதில் மைக்கேலைச் சொருகினான்.

தன்னைத் தவறாக நடத்துவதைப் புரிந்து கொண்டு மைக்கேல் சுதாரிப்பதற்குள் அவனுடைய லுங்கியை நட்ட நடுஹாலில் அவிழ்த்தெறிந்தான் ஒரு சேவகன். இந்தக் களேபரத்தில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தவன் அஞ்சி ஓட ஆரம்பித்தான். சேவகர்களின் கோபம் இரட்டிப்பாகிவிட்டது. மைக்கேலை இழுத்தபடியே ஓடியவனை விரட்ட ஆரம்பித்தனர். எதிர்பார்க்காத இந்த வன்முறையினால் வசமிழந்து போனான் மைக்கேல். நிறைய சிராய்ப்புகளால் வலி பொறுக்க முடியாமல் திமிறினான். அதற்குள் ஒருவன் அவனை அவசரப்பட்டு அடிக்கவும் செய்தான்.


"என்ன நடந்தது மைக்கேல்?'' என்றார் டாக்டர்.

மைக்கேல் ரொம்பவும் தொய்ந்து போயிருந்தான். இரவு நடந்த களேபரம், அதன் பிறகு போட்ட இன்ஜெக்ஷன் எல்லாம் அவனை எதையுமே சிந்திக்கவிடாமல் செய்தன. பிரயத்தனப்பட்டுப் பேச வேண்டியிருந்தது.
"அந்த நோயாளியிடம் அவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டிருக்கலாம். அதனால்தான் பிரச்சினையே''

"நேற்று நீங்கள் செய்த குளறுபடியால் அந்த நோயாளி மருத்துவமனையை ùüவிட்டே ஓடிவிட்டார். அதனால்தான் உங்களிடம் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது...''

"இல்லை... என்னிடம் அப்படி நடந்து கொண்டதால்தான் அவர் ஓட வேண்டியதாகிவிட்டது''

"இரண்டும் ஒன்றுதான். காவல்துறையில் கம்ப்ளென்ட் செய்திருக்கிறோம். இனி இப்படிப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள்'' என்றார். அவருடைய குரலில் உஷ்ணம் தெரிந்தது. இரண்டும் ஒன்றா என்பதைப் பற்றி யோசிக்க திராணியில்லாமல் இருந்தான் மைக்கேல்.

அவனை அறைக்கு அனுப்பிவிட்டு வெளியே அமர்ந்திருந்த சார்லûஸ அழைத்தார். "நல்லவேளை நல்ல நேரத்தில் இங்கே அனுமதித்தீர்கள். இல்லையென்றால் அவர் ஸ்பிலிட் பர்ஸனாலிட்டியாக மாறுவதற்கு வாய்ப்பிருந்தது. நேற்று தூங்குவதற்கு சப்ரஷன் டேப்ளட்ஸ் ஹெவி டோஸ் கொடுத்திருந்தேன். இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்து கொண்டு இந்தப் பாடுபடுத்தியிருக்கிறார். அவருக்கு எவ்வளவு நாளா இப்படியிருக்கு?''

காட்சிகள் எப்படி மாறுகின்றன. நான் எங்கே அனுமதித்தேன். அவன் தானாக வந்துதானே அனுமதியானான் என்பதை சார்லஸ் சொல்லவில்லை.

"எப்படி?''

"இந்த மாதிரியான சோஷியல் டிப்ரஷன்... சமூக கவலை?''
"சின்னவயசிலிருந்தே நாடு நல்லா இருக்கணும்னு சொல்லுவான் சார்''
"க்ரானிக்... ஐ ஸீ... இன்னைக்கு இன்னும் கொஞ்சம் கவனமா இருப்போம். இந்த மாதிரி ஆசாமிகள் சிலருடைய மன எழுச்சியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. சங்கிலியால கட்டி வைக்க வேண்டியிருக்கும். உங்கள் நண்பருக்கு அந்தநிலை ஏற்படாம பாத்துக்கிறேன் போதுமா?''

"என்னால் நம்பவே முடியல ஸôர்'' என்று திகைத்த சார்லஸ் அவனை பழையபடி வீட்டுக்கே கூட்டிச் சென்றுவிடலாமா என்று யோசனை கேட்ட அஞ்சி, "அவன் ரொம்ப நல்லவன் ஸôர்'' என்றான். அதாவது அவனை விட்டுடுங்க ஸôர் என்ற தொனியில் அதைச் சொன்னான்.

டாக்டர் பயப்பட வேண்டியதில்லை நான் பாத்துக்கிறேன் தொனியில் "ரொம்ப நல்லவனா இருக்கறதும் மனநல குறைபாடுதான்'' எனப் புன்னகைத்தார்.


மைக்கேல் தன் அறையில் இருந்து ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தான். எதிர்ப்புற சுவரில் 100 என்ற எண்ணின் மீது நடிகன் ஒருவன் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அழன் நடித்த படம் நூறுநாள்கள் ஓடியிருக்கிறது என்பது புரிந்தது. தெருவில் வண்டியில் ஒருவன் வாழைப்பழம் விற்றுக் கொண்டுபோனான். உச்சி வெயில். அந்தப் படம் நூறுநாள் ஓடக் காரணமானவனில் ஒருவனாக இருக்கக் கூடும் என்று நினைத்தான் மைக்கேல்.

செவ்வாய், மே 20, 2008

மீதமிருக்கும் சொற்கள்

பெண் எழுத்தாளர் சிறுகதைகள்

தொகுப்பு : அ.வெண்ணிலா

ழுத்தாளர்களைப் பெண் எழுத்தாளர்கள், ஆண் எழுத்தாளர்கள் என்று வகை பிரிப்பது அவசியமா?

நிச்சயம் அவசியம்!

ஒரு உதாரணம் சொல்கிறேன்... ‘கேரள நடிகைகளின் கவர்ச்சிக்குக் காரணம் என்ன?’’ இந்தக்கேள்வியை பெண் எழுத்தாளர்களிடம் கேட்டால் இதையெல்லாம் ஒரு கேள்வியாகவே பொருட்படுத்த மாட்டார்கள். அல்லது கவர்ச்சி என்ற பதம் எதைக்குறிக்கிறது என்று கோபப்பட்டு ஆணாதிக்க சமூகத்தின் மொழி உருவாக்கம் குறித்து அலச ஆரம்பிப்பார்கள். வேறு ஏதோ சொல்லுவார்கள். ஆனால் இதோ இப்படியரு பதிலைச் சொல்லவே முடியாது.

எபத்தாளர் சுஷாதா சொன்ன பதில் இது:
‘தேங்காய்!’

கேரள நடிகைகளின் கவர்ச்சிக்கு தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு விளைபொருளின் மருத்துவ குணங்கள்தான் காரணம் என்று சொல்லுகிற ஆசாமி இல்லை அவர். நிஷமாகவே தேங்காய்க்கு அப்படியரு மருத்துவகுணம் இருந்து அதை ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருந்தால் வாசகரும் அதே அர்த்தத்தில் பொருள் கொள்வார்.
எழுதியவர் சுஷாதா என்ற ஆண் எழுத்தாளராயிற்றே.

ஒரே ஒரு வார்த்தையை ஆண் சொல்வதற்கும், பெண் சொல்வதற்கும் இத்தனை ‘அரசியல்’ இருக்கிற சூழலில்,,, ஒரு சிறுகதை, ஒரு நாவல் என்று பார்க்கும்போது நிச்சயம் அது மிகுந்த வித்தியாசங்களைக் கொண்டு இருக்கிறது.

அதனால்தான் ஷி. நாகராஷனால் ‘நாளை மற்றுமொரு நாளே’வையும் ‘குறத்தி முடுக்கு’வையும் எழுத முடிகிறது. பாஸ§ அலியாவா ‘மண் சட்டியை காற்று அடித்துப் போகாது’ எழுதுகிறார்.

எல்லா உயிரினங்களிலும் ஆண் - பெண் பால்களில் உள்ள வித்தியாசம் மனித சமூகத்தில் உளவியல் சிக்கல்களோடு சேர்ந்து மேலும் கடினப்பட்டு இருக்கிறது.

பொதுவாக உயிரினங்களில் பால் பிரிவினை என்பது ஆண் யானைக்குத் தந்தம் உண்டு; பெண் யானைக்குத் தந்தம் இல்லை போலவோ, பெண் கொசு இரத்தம் உறிஞ்சும்; ஆண் கொசு இரத்தம் உறியாது போலவோ உடலியல் சார்ந்ததாகவே உள்ளது.

பெண் கரப்பான் பூச்சிகளுக்கு கற்பு நெறி வலியுறுத்தப்படவில்லை. பெண் குதிரைகள் பூமி பார்த்து நடக்க வேண்டும் என்று கட்டாயமில்லை; பெண் பல்லிகளுக்கு இரவு பதினோரு மணிக்கு மேல் வெளியே போய் வருவதால் ஆண் பல்லிகளில் ஆபத்தோ கட்டுப்பாடோ இல்லை.

ஆக, உடலியல், உளவியல் காரணங்களும் பெண் எழுத்துக்களில் உண்டு.
பெண் எழுத்தாளர் அ.வெண்ணிலா தொகுத்த இந்த தொகுப்பில் 45 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் உள்ளன. வை,மு.கோதை நாயகி அம்மாள் தொடங்கி அ.வெண்ணிலா வரை 1930 முதல் 2004 வரையான கால இடைவெளியில் உருவான கதைகள் இவை.

ஆண் எழுத்தாளர்கள் சிலர் பெண்கள் பெயரில் எழுதியதால் ஏற்பட்ட குழப்பம் முதல் ஒரே பெயரில் இரு எழுத்தாளர் என்பது வரை இவற்றைத் தொகுக்க மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார்; சில தவறுகள் கடைசி நிமிடத்தில் களையப்பட்டிருக்கின்றன.
‘என் குழந்தைகளுக்கும்
தாயாய் இருக்கும்
அம்மா வசந்தாவுக்கு...’
என இந்த நூலைத் தாய்க்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் வெண்ணிலா.
தாய்க்கு சமர்ப்பணம் என்று ஆண்களும் எழுதுகிறார்கள். ‘என் குழந்தைகளுக்கும்’ என்பதில் இருக்கிறது பெண் எழுத்து.

இந்த 75 ஆண்டு கால கனவுகளையும் அவற்றை எழுதியவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கண்டெடுப்பதிலுமே எவ்வளவு அவதிப்பட்டிருக்கிறார்கள். ‘ஆவணப் பாதுகாப்பு உணர்வு’ அற்ற சூழல் இதற்குக் காரணம். எவ்வளவு பேர் கணக்கில் வராமல் போனார்களோ என்றும் கூட எண்ண வேண்டியிருக்கிறது. இந்தத் தருணத்திலாவது இவற்றைத் தொகுத்து வெளியிட்டது காலத்தின் அவசியமாக இருக்கிறது. இதில் தொகுக்கப்பட்ட கதைகள் அந்தப் பெய் எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த கதையா என்ற விவாதங்கள் ஏற்படலாம். அது அவ்வளவு முக்கியமல்ல. எது சிறந்த கதை என்பது தொகுப்பவர்களின் ரசனைபாற்பட்டது. அது மாறுபடும். கால வரிசைப்படி தொகுத்ததே சாதனைதான். அதற்காக வெண்ணிலாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

திங்கள், மே 19, 2008

மீன் மலர் சிறுகதை

தமிழ்மகன்





"இசையின் இயற்பியல் கூறுகள்'' என்றான் அவன்.

கல்லூரி முதல்வருக்கு அவன் சொல்வதின் அர்த்தம் புரியவில்லை. ""இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?'' என்றார்.

"72 மேள கர்த்தா ராகங்கள் இருப்பதை அறிவீர்கள். அது பற்றித் தெரியவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. அவற்றின் பெர்முடேஷன் காம்பினேஷனில் }நிகழ்தகவு அடிப்படையில்} எத்தனையோ லட்சம் இசைக் கோர்வைகள் உருவாக்க முடியும், ஜன்ய ராகத்தில் எவற்றையெல்லாம் பூர்வாங்க ராக மேளகர்த்தாக்களாகவும் எவற்றையெல்லாம் உத்தராங்கமாகவும் பாவிக்கலாம் என்பதை அறிவியல் ரீதியாக கணக்குகளாக ஆய்வு செய்தேன். ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு எண். எத்தனையாவது லட்சத்து ராகம் என்பதைச் சொன்னால்போதும் அந்த ராகத்துக்கான லட்சணங்கள் என்ன என்பதை...''

"அது இல்லை, மிஸ்டர் ரவி... இந்த ஆய்வினால் என்ன பயன் என்று இன்னும் நேரடியாகச் சொல்ல முடியுமா?''

"மிகச் சிறந்த இசை மேதைகள் எல்லாம்கூட எல்லா மேளகர்த்தா ராகங்களிலும் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதாவது நன்றாக கைவரும் ராகங்களில் மட்டுமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். மனிதர்களுக்குச் சில எல்லைகள் உண்டு.சிலருக்கு சில ராகம் மிகவும் ரம்மியமாக இருக்கும். வேறு சிலருக்கு வேறு ராகங்கள் அப்படி அமைந்துவிடும். பாடுபவர்களுக்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்கும் இப்படியான எல்லைகள் உண்டு. ஆனால் நம்முடைய விருப்பு வெறுப்புகளை மீறி உலகில் இத்தனை இசைமுடிச்சுகள் இறைந்து கிடக்கின்றன. நதியின் சலசலப்பில், பறவைகளின் குரலோசையில், கோவில் மணியின் ரீங்காரத்தில்... இதையெல்லாம் ஒரு ஃபார்முலாவில் அடக்க முடிந்தால் கணினி மூலமாகவே அத்தனை ராகங்களையும் பெற முடியும். உதாரணத்துக்கு 75 ஆயிரமாவது ஜன்ய ராகம் கேட்க வேண்டுமா... ஜஸ்ட் 75 ஆயிரம் என்பதற்கான எண்ணை அழுத்திவிட்டு "எண்டர்' தட்டினால் போதும். அதைக் கேட்க முடியும். இது இந்த ஆய்வின் நேரடிப் பயன். இதைத் தொடர்ந்து பலருக்கு இசை ஆய்வு செய்வதற்கு இதைப் பயன்படுத்த முடிவது அடுத்த பயன்கள்''

முதல்வர் கோட்டை சற்றே இழுத்துவிட்டுக் கொண்டு அடுத்த கேள்விக்குத் தயாரானார். ரவியும் தயாராகத்தான் இருந்தான்.

சற்றும் எதிர்பாராத கேள்வியாக "நீங்கள் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்றார்.

"இண்டர்வியூ முடிந்துவிட்டதா? எனக்கு வேலை கொடுப்பதென்று முடிவு செய்துவிட்டீர்களா?'' என்றான் ரவி.
அவன் முகத்தில் மிகுந்த ஆர்வம் தெரிந்தது.

"வேலை தருவதில் சிக்கல் இல்லை, நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம்தான் இப்போது தடையாக இருக்குமோ என்று நினைக்கிறேன்.''

"அடுத்த ஆண்டில் கனடாவில் எனக்கு வேலை கிடைத்துவிடும்.அது இசை ஆய்வுப் பணி. இந்தியாவில் கற்பனை செய்ய முடியாத சம்பளம். அதுவரை டயாபடீஸ் அம்மாவைப் பாதுகாக்கிற சம்பளம் தேவை. அவ்வளவுதான்.''

"சரி. நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் சில கேள்விகள்.''

"இன்னுமா?''

"உங்களுக்குத் தெரிகிறதா என்று பார்ப்பதற்காக அல்ல, எனக்குத் தெரிந்து கொள்வதற்காக''
சிரித்தான்.

"சொல்லப்போனால் இங்கிருந்துதான் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். இசை என்றால் என்ன?''
ரவி உண்மையிலே அதிர்ச்சி அடைந்தான்.

முதல்வர் மறுபடி தொடர்ந்தார். "பேரதிர்ச்சி ஏற்படுத்தும் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.""

"எதற்காக இப்படி கேட்கிறீர்கள்?'' என்றான் நிதானமாக.

"உண்மையாகத்தான் கேட்கிறேன். என்னால் இசையை ரசிக்க முடியவில்லை. அதைப் புரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த சந்தேகங்கள் இருக்கின்றன. எல்லோரும் இசையை ஏன் ரசிக்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. இசையை ரசிப்பதற்கு காது நன்றாகக் கேட்டால் மட்டும் போதாது என்று தோன்றுகிறது. சொல்லப் போனால் காது சரியாகக் கேட்டாக இசை மேதைகள் எல்லாம் இருந்தார்கள் என்கிறார்கள். இசையை அறியும் புலன் காது இல்லை. அது காதும் கலந்த ஒன்று அது எனக்கு வாய்க்கவில்லையோ என்று கவலையாக இருக்கிறது. மியூசிக் அகாதமி, நாரதகான சபா போன்றவற்றில் மிக முக்கியமானவர்கள் கச்சேரிக்கெல்லாம் போய் வந்தேன். என்னால் மெய் மறந்து கரைந்து போக முடியவில்லை. அப்படி என் முன் இருப்பவர்களைப் பார்த்தால் நடிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் நான் உண்மையாகவே ரசிக்க முயற்சி செய்தேன். நிறைய கேசட்டுகள் வாங்கிக் கேட்டேன். இதோ என் டேபிளின் மீது பார்... இதோ இந்த டேப் ரிக்கார்டரில் இப்போதுகூட லால்குடி இருக்கிறார். என்ன பிரயோஜனம்? இசையை ரசிப்பது எனக்கு சவாலான விஷயமாகிவிட்டது.''

ரவி, "படித்தவர் பாமரர் அனைவரையும் இசை மயங்க வக்கிறது என்கிறார்கள். ஆடு மாடுகள்கூட வேணு கானத்தில் மயங்குவதாகச் சொல்கிறார்கள். சேக்ஸ்பியர் "மெர்செண்ட் ஆஃப் வெனிஸி'ல் இசை இல்லாத மனிதனை ராஜ துரோகி என்கிறார்'' என்றான்.

"அப்படியானால் இது என் ரசிப்புக்கு ஏற்பட்ட சவால் இல்லை; இசைக்கு ஏற்பட்ட சவால் என்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் நான் இவ்வளவு முயற்சி செய்தும் ரசிக்க முடியவில்லையே. இப்போது சொல்லுங்கள், இசை என்றால் என்ன?'' முதல்வர்.

"உங்கள் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே வாருங்கள். ஏதாவது ஒரு இடத்தில் தெளிவு கிடைக்கலாம். இசை என்றால்... கேட்ட மாத்திரத்தில் மனதில் சந்தோஷத்தைப் பரவச் செய்யும் இனிய த்வனிகளின் சேர்க்கை''

"இனிய த்வனிகள் என்றால்...?''

"ம்ம்.. ட்ராஃபிக் ஜாம் இரைச்சலை ரசிக்க முடிகிறதா உங்களால்...?''

"எரிச்சலாக இருக்கிறது.''

"குயிலோசை?''

"அது அவ்வளவு எரிச்சலாக இல்லை...''

சிரித்தான். "ரசித்தேன் என்று சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். .... சரி. கோயில் மணி?''

"சகித்துக் கொள்ள முடிகிறது''

ரவி அமைதியாக முதல்வரைப் பார்த்தான். "சரி. சினிமா பாடல்கள் கேட்பீர்களா?''

"சில பாடல்களைப் பாடுகிறேன். அதுகூட ரேடியோவிலும் டி.வி.யிலும் திரும்பப் திரும்பக் கேட்டு பாடல்வரிகள் பிடித்துப் போய் அதை உச்சரிக்கிறேன், அவ்வளவுதான். பின்னணி இசை இல்லாமலும் அந்தப் பாடல்வரி பிடித்திருக்கிறது. ஆனால் பாடல் வரிகள் இல்லாமல் அதை இசைக்கும்போது அப்படி ரசிக்கிறேனா என்று தெரியவில்லை. இசையிலும் எனக்குப் பாடல் வரிகள்தான் ஓடுகின்றன. ஏதோ ஒரு கட்டத்தில் இசையின் சூட்சமம் பற்றிக் கொள்ளும் என்ற என் ஆசை நிறைவேறவே இல்லை. பாட்டு என்றால் அந்த வரிகளைத் திரும்பச் சொல்கிறேன் அவ்வளவுதான்.''

"குறிப்பாக எந்தப் பாடல்..?''

"நிறைய இருக்கிறது. எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள், சிவாஜியின் தத்துவப் பாடல்கள் என.. சிரிக்க வேண்டாம். உங்களுக்குச் சட்டென பிடிபட வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன். ஏட்டில் எழுதி வைத்தேன். எழுதியதைச் சொல்லி வைத்தேன்... அல்லது சின்ன சின்ன ஆசை... தென்பாண்டிச் சீமையிலே தேனோடும் வீதியிலே''

"இது போதும். உங்கள் மனதில் இசை இருக்கிறது. பாட்டரி வீக்...ஷெல்ப் எடுக்கவில்லை. தள்ளிவிட்டுதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும்'' }சிரித்தான்.

"நீங்களே சொன்னீர்கள். சிலருக்கு சில ராகம் மிகவும் பிடிக்கும் என்று. இசை என்பது கேட்பவரைப் பொறுத்ததுதானா?''

"அதிலென்ன சந்தேகம்...? யாரும் அற்ற சபையில் நாற்காலிகள் மட்டும் இசையை ரசிக்குமா? கேட்பதற்கு மனிதர்கள் இருந்தால்தான் நாதத்துக்குப் பெருமை. ரசிப்பவர்கள் இருந்தால்தான் இசை என்று ஒன்று இருக்க முடியும்''

"அதுசரி. என்னைப் போன்ற நூறுபேர் ஒரு சபையில் உட்கார்ந்திருந்தால் அந்தக் கச்சேரி நடந்தென்ன பயன்?''
ரவி சிரித்தான். இப்படி ஒரு ஆசாமியிடம் மாட்டிக் கொண்டோமே என்ற சிரிப்பு.

"சிரித்தாலும் பரவாயில்லை. நான் என் சந்தேகங்களைக் கேட்டுவிடுகிறேன். இசையைக் கேட்டதால் பசுக்கள் நன்றாகப் பால்கறந்ததாகவும் பயிர் நன்றாக வளர்ந்ததாகவும் அம்ஷவர்த்தினி பாடியதால் மழை பெய்ததாகவும் அக்பர் அரசவையில் ராகம் பாடி தான்சேன் தீபம் ஏற்றியதாகவும் தியாகய்யர் பிலஹரியில்பாடி இறந்த பிராமணனை உயிர்ப்பித்ததாகவும் கூறுவதெல்லாம்? இறந்தவனுக்கும் மேகங்களுக்கும் ரசிக்கும் மனது இருக்கிறதா?''

"சப்த ஸ்வரங்கள் என்பதை சிரநாஸி முனிவரின் ஏழு குழந்தைகள்தான் என்கிறார்கள். இசைக்கு ஒரு தெய்வீகத் தன்மை இருப்பதை சொல்லும் நம்பிக்கைகள். இப்போது இறைத்தன்மை குறித்த நம்பிக்கைகளை விட்டுவிடுவோம்.''

முதல்வர் சிரித்தார். ""பயிர் செழித்து வளர்ந்ததும் பசு பால் கறந்ததும்?''

"அது விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ரம்மியமான ஒலிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. மகிழ்ச்சி ஆரோக்கியம் தருகிறது...''

"ரம்மியமான ஒலி என்பதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு எனக்கு லட்டு மிகவும் பிடிக்கிறது. என் மகனுக்கு லட்டு பிடிக்கவேயில்லை. பிட்ஸô என்றால் உயிர்.. ஒன்று பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பது பழக்கத்தால் ஏற்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வருகிறவனுக்கு நம்மைப் போல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை வளைத்துக் காட்டி சாப்பிட முடியுமா? அல்லது நாம்தான் பெர்கர் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துவிட முடியுமா?''

"மேலை நாட்டிலிருந்து நம்மைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறவர்கள் அதிகரித்துவருகிறார்கள். இப்படி ஒன்று இருப்பது தெரிந்ததும் அவர்களை அவர்களே மறு பரிசீலனை செய்கிறார்கள். எல்லோரும் உயர்ந்த கலையைத்தான் தேடுகிறார்கள். நம்முடைய இசையும் கலையும் தத்துவமும் இப்போது மேலை நாட்டை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. எண்ணெய் கத்திரிக்காய் இல்லாததால் பீட்ஸô சாப்பிடுகிறார்கள். கிடைக்குமிடம் தெரிந்ததும் தேடி வருகிறார்கள்.''

"அமெரிக்கன் எம்பஸி வாசலில் விசா கேட்டு காத்திருப்பவர்கள் அதைவிட அதிகரித்திருக்கிறார்கள். பழகினால் சில பிடித்துப் போகிறது. ராமகிருஷ்ணர் கதை ஒன்றில் மீன்காரிகள் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பூக்காரியின் வீட்டில் தங்க வேண்டியிருக்கும். இரவெல்லாம் பூ வாசத்தால் அவர்களால் தூங்கவே முடியாமல் போகும். கடைசியில் மீன் கூடையை முகத்தில் மூடிக் கொண்டு தூங்குவார்கள். சீனப் படம் பார்த்தால் எல்லா நடிகையும் வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரி இருப்பதுபோல தோன்றுகிறது. ஆனால் அந்த ஊரில் கேட்டால் இவளைவிட இவள்தான் அழகி ஒருத்தியை அடையாளம் காட்டுகிறார்கள். சிநேகா அழகியா, சாண்ட்ரா புல்லக் அழகியா என்றால் நமக்கு சிநேகா, அமெரிக்கனுக்கு சாண்ட்ரா புல்லக். ''

"இங்கே கர்னாடிக்... அங்கே வெஸ்டர்ன் மியூசிக் என்று இருப்பது போல... அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்?''

"ரூசி, அழகு, வாசனை, இசை எல்லாமே நாமே கற்பித்துக் கொண்டவை, சமீப காலங்களாக. அதாவது சில ஆயிரம் ஆண்டுகளாக. அதற்கு முன் அப்படியில்லை.எல்லா கண்டத்திலும் பச்சையாக மாமிசம் சாப்பிட்டார்கள். எல்லோரும் இனப் பெருக்கம் செய்தார்கள். இதுதான் பொது குணமாக இருந்தது. குளிரில் இருந்தவன் கம்பளி ஆடை செய்தான். இங்கே பருத்தி ஆடை செய்தான். அங்கே ட்ரம்ஸ்.. இங்கே மிருதங்கம். அங்கே கிடார்... இங்கே தம்புரா.''

"சரி. அதற்கும் இசையை ரசிக்க முடியவில்லை என்பதற்கும் என்ன சம்பந்தம்?''

"சமூக வளர்ச்சியில் இசைக் கருவியைக் கண்டுபிடித்தது ஒரு கட்டம். அவனுக்குக் கையில் கிடைத்ததை வைத்துதானே கருவிகள் உருவாக்கியிருக்க முடியும்? அதில் உருவாக்கப்பட்ட இசையைத்தானே ரசிக்கத் துவங்கியிருப்பான்? எது கிடைத்ததோ அதை ரசிக்க ஆரம்பித்தான். அவன் மனதில் ரம்மியமான இசையை நினைத்து, அதைப் பெறுவதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் ஒருவனுக்கு கானா பாட்டு பிடிக்கிறது. ஒருவனுக்கு கர்னாடிக் பிடிக்கிறது. ஒருவன் ஓஸிபிஸô கேட்கிறான். ஒருவன் மாண்டலின் சீனிவாசன் கேட்கிறான். எல்லாம் பழக்கம். ரசனை என்பது பழக்கம். சிவப்பு தோல் உள்ள ஐரோப்பியன் மென்மையும் அழகும் அறிவும் பொருந்தியவனாகவும் கருப்பு தோல் உள்ள ஆப்ரிக்கன் முரட்டுத்தனமும் குரூரமும் அறிவற்றவனாகவும் நாம் பழகிக் கொண்டோம். அது உண்மையில்லை அல்லவா? ரொம்பவும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்''

"புரிகிறது. நாம் ரசித்துக் கொண்டிருப்பதெல்லாம் புவியியல், சமூக காரணங்களால் எற்பட்ட பழக்கங்கள்தான். நாம் அமெரிக்காவில் பிறந்திருந்தால் இப்போதிருக்கிற ரசனையோடு இருந்திருக்க மாட்டோம் என்கிறீர்கள். இப்போது ரம்மியமாக இருக்கிற ஒன்று ரம்மியமில்லாமல் போயிருக்கலாம் என்கிறீர்கள்.''

முதல்வருக்கு ரவியின் விளக்கம் ஓரளவுக்குச் சரிதான் போல இருந்தது.

"இதுதான் இசையை ரசிக்க முடியாமல் நான் தவிப்பதற்கான சிக்கல். நாளை இசையில் வேறு வடிவங்களும் வேறு கருவிகளும் ஏற்பட்டு ரசனை மாறிப்போகுமா?''

"உங்கள் சிக்கலை தீர்க்க முடியுமா பார்க்கிறேன். இசையை விட்டுவிடுங்கள். உங்களுக்குத் திருக்குறள் பிடிக்குமா?''
"பிடிக்கும்.''

"ஆனால் இப்போது போஸ்ட் மார்டனிஸம், மேஜிகல் ரியலிஸம் எல்லாம் எழுதுகிறார்கள். ஒருவேளை இவை பிடிக்கிறது என்பதற்காகத் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் தூக்கி எறிந்து விடுவீர்களா? இசை, ஓவியம் எல்லாவற்றிலும் இதுதான் நடக்கும்.''

"ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இசைக்குச் சொல்லப்படுகிற புனிதத் தன்மை. நீங்கள் இயற்பியல் பேராசிரியர். விஞ்ஞான பூர்வமாகச் சொல்லுங்கள். சூத்திரங்களை உள் வாங்கிக் கொண்டால் கம்ப்யூட்டரும் ஒரு இசை மேதையாக முடியும், அல்லவா?''

"அப்படி சொல்ல முடியாது. ஒன்றைப் போல தத்ரூபமாகப் பிரதியெடுக்க புகைப்படம் போதும். ஆனால் ஓவியத்தின் தேவையும் இருக்கிறதல்லவா? படைப்பின் சூத்திரம் அங்குதான் இருக்கிறது. கலையும் இலக்கியமும்தான் மனிதனை மனிதனாக்கியிருக்கிறது.மனிதனைத் தொடர்ந்து மனிதனாக இருக்க வைப்பதற்குத்தான் கலைகளுக்கு இந்த இறைத்தன்மை தேவைப்படுகிறது. எல்லா படைப்புத் திறன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை அமரத்தன்மையுடன் இருந்தால்தான் மனிதர்கள். இறைத்தன்மை என்பது படைப்புக்கு ஒரு கவசம் அவ்வளவுதான். உங்களுக்குத் தேவையில்லை இல்லை என்றால்...''
முதல்வர் "என்ன என்றார்'' உள்ளே நுழைந்த ப்யூனிடம். ஏதோ விசிட்டிங் கார்டை காட்டினான். முதல்வர் அலுப்புடன் அதை நோக்கிவிட்டு, "நீங்கள் சற்று வெளியே இருக்கிறீர்களா? பேசி அனுப்பிவிட்டு அழைக்கிறேன்.'' மிக முக்கியமான கட்டத்தில் ப்யூன் உள்ளே நுழைந்தது அவருக்கு கோபத்தைகூட ஏற்படுத்தியது. வந்த ஆசாமியை இரண்டே வினாடியில் வெளியே அனுப்பினார்.

"புதன்கிழமை வந்து பார்'' அவ்வளவுதான் பேசினார்.
அனுப்பிவிட்டு, தன்னை ஆயாசப்படுத்திக் கொள்ளும் விதமாக எதிரில் இருந்த லால்குடியின் வயலின் கேசட்டைத் தட்டிவிட்டு கண் மூடி கேட்டார். கம்பியின் முதல் இழைப்பு சட்டென உயிரைத் தொட்டது. இதில் ஏதும் இறைத்தன்மை இல்லை என மனது சொல்லிக் கொண்டிருக்கும்போதே அடுத்த அலை. சிந்தனைகளைப் புரட்டித் தள்ளிவிட்டு அடுத்த அலை. எங்கோ புரண்டு விழுந்த பிரமிப்பு. அதிலேயே திளைக்க வேண்டும் என உந்துதல். ஏதோ தடை நீங்கியது போல உணர்வு. படைப்பின் சூத்திரம் புரிபட்டது போல தகிப்பு. ரம்மியம், ரசனை கைகூடிவிட்டது.... வண்ணங்களின் கலவை. நிறங்களின் ஜாலம். நட்சத்திர பெருவெளியில் ஊர்வலம். மனதில் குளுமை. ஆனந்த சாரல். கண்ணைத் திறந்துவிடாமல் அதை அப்படியே பருகிக் கொண்டிருக்க வேண்டும் என்று தவித்தார் முதல்வர். தென்றல் தவழும் இயற்கை வனத்தில் பிரயாணிக்கிற தரிசனம். எங்கிருக்கிறோம் எனும் நிலை மறந்த மயக்கம். ஆஹா... சூட்சமம் பற்றிக் கொண்டது. டக் என்ற சப்தத்துடன் டேப் ரிகார்டர் நின்றது. முக்கால் மணிநேரம் போனதே தெரியவில்லை. அட இசையை ரசிக்க முடிகிறது. கண்ணைத் திறந்துவிட்ட ரவியைப் பற்றி அப்போதுதான் நினைவு வந்தது.

பியூனை அழைத்து ரவியை வரச் சொன்னார்.

"அவர் அப்போதே போய்விட்டார். இந்தச் சீட்டை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.''
முதல்வர் வாங்கிப் பார்த்தார்.

"உங்களுக்குச் சொன்ன விளக்கங்கள் பயனளித்தால் மகிழ்வேன். வருகிறேன்."

அவன் கொடுத்திருந்த செல் நம்பரை அழுத்தினார். "அப்படி ஒரு எண் உபயோகத்தில் இல்லை'' என்றது மறுமுனை. "இறைவன்'' என்றார் முதல்வர்.

வியாழன், மே 08, 2008

முன்னாள் தெய்வம்

சிறுகதை

தமிழ்மகன்


தூரத்தில் லாந்தர் விளக்கின் வெளிச்சம் மினுக், மினுக் என்று தள்ளாடியது.

"வர்றாங்க சாமீ. நீங்க போயி படுங்க'' என்றபடி இனி எல்லாம் சரியாகிவிட்டது என்பதுபோல், இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறிக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டான் சுடலை. கோபத்தின் உச்சத்தில் இருந்தார் பெருமாள் ரெட்டியார். சுடலையின் இந்த சால்ஜாப்புக்கெல்லாம் சமாதானமாகி விடுகிற நிலையில் இல்லை அவர்.

"சவுட்டு மண்ணு ஓட்ட வேண்டிய நேரத்தில் சினிமா கொட்டாய்ல படம் பார்த்துட்டு வர்றானுங்களே... பொறுக்கலுங்க. வரட்டும்...''

லாந்தர் விளக்கு வெளிச்சத்தோடு, இப்போது மாட்டு வண்டி மணிச் சத்தமும் கேட்டது. மாட்டு வண்டி நிதானமாக வந்தது. அடியாட்கள் இரண்டு பேரும் வண்டியிலிருந்து இறங்கி, நடந்து வந்துகொண்டிருந்தனர். 'திருட்டுத்தனமா சினிமா பார்த்துட்டு வர்றவனுங்க இவ்வளவு பொறுமையா வரமாட்டாங்களே' கண்களைத் தீட்டிக் கொண்டு பார்த்தார் ரெட்டியார்.

"என்னடா லேட்டு?'' என்று கேட்டுக் கொண்டே மீண்டும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வண்டிக்கு எதிரே வந்து நுகத்தடியைப் பிடித்து வண்டியை நிறுத்தினான் சுடலை.

வண்டிக்காரன் பதட்டத்துடன் முன்னால் ஓடிவந்து, ""மண்ணெடுக்குற இடத்தில் சாமி சிலை கெடைச்சது ரெட்டியாரே'' என்றான்.

"என்னடா சொல்றே?'' வண்டியின் பின்புறம் சென்று ஒருவித பக்தி பயத்துடன் நோட்டமிட்டார் பெருமாள் ரெட்டியார்.

உத்தேசமாக மூன்றடி உயரமுள்ள கருங்கல் சிலை . அம்பாள்! "ஆத்தா' என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்... "கீழ் எறக்கி வையுங்கடா... டேய் இந்த இடத்தைச் சுத்தமா பெருக்குங்கடா'' படபடவென கட்டளையிட்டார் ரெட்டியார். ""வீடு கட்ட ஆரம்பிச்ச நேரம்... ஆத்தா என்னைக் கோயில் கட்ட ஆணையிட்டிருக்கா'' என்று அவருக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார்.

"இல்ல ரெட்டியாரே... புது வாயல்காரனுங்க எங்க ஊர் எல்லைல தான் சிலை கிடைச்சது. அதனால இது எங்களுக்குத்தான் சொந்தம்னுட்டாங்க. நான் விடல "இது ரெண்டு ஊரு எல்லை. இது எங்களுக்குத்தான் சொந்தம்'னு சொல்லி எடுத்துக்கிட்டு வந்துட்டேன். அவனுங்க பெரிய மனுஷங்களோட புறப்பட்டு வர்றோம்னு சொல்லியிருக்கானுங்க.''

"விடக்கூடாது ரெட்டியாரே'' என்று ஆவேசமாகக் குரல் கொடுத்தான் சுடலை.

அம்பாள் சிலையை இப்போதைக்குப் பிள்ளையார் கோவிலிலேயே வைத்திருப்பதென்றும் வருகிற சம்பா பட்டத்துக்குள் அம்பாளுக்குத் தனியாகக் கோவில் கட்டுவதென்றும் ஊரின் பெரிய தலைக்கட்டுகள் ஐந்தாறு பேர் முடிவெடுத்து முடிப்பதற்கும் புதுவாயல்காரர்கள் ஜலஜலவென்று இரண்டு மாட்டு வண்டியில் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

வீட்டுத் திண்ணையிலேயே ரெண்டு ஜமுக்காளத்தை விரித்துப் போட்டு வந்தவர்கள் அனைவரையும் உட்காரச் சொன்னார்.

புது வாயல்காரர்கள் சார்பாக மாரியப்ப ரெட்டியார் பொறுமையாகப் பேசினார். "சிலை கிடைச்சது எங்க ஊரு எல்லைல. ஏதோ பெருமாள் ரெட்டியார் படியாளுங்களாச்சேன்னு வம்பு பண்ணாம கொடுத்தனுப்பிச்சோம்.''

"இப்ப என்னாங்கறீங்க?'' என்றார் பெருமாள் ரெட்டியார்.

"எங்க ஊரு எல்லைல கிடைச்சது எங்களுக்குத்தான் சொந்தம்னு சொல்றோம்.''

"மொதல்ல அது உங்க ஊரு எல்லை இல்லை. ரெண்டு ஊருக்கும் பொது எல்லை. பொறம்போக்கு நிலம். நாங்க மண்ணெடுக்கும்போது கிடைச்சிருக்கு... ஆத்தா எங்க ஊருக்கு வரணும்னு விருப்பப்பட்டிருக்கா. இல்லாட்டி போன வாரம் முழுக்க பள்ளிக்கூடம் கட்ட உங்க ஊருக்கு மண்ணெடுத்துக் கிட்டிருந்தீங்களே... அப்ப கிடைச்சிருக்க மாட்டாளா?'' கூர்மையாக ஒரு கேள்வியைப் போட்டார் பெருமாள் ரெட்டி.

இதே விஷயத்தை இரு தரப்பினரும் மூன்று மணி நேரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாள் ரெட்டியாரின் சம்சாரம் அந்த இரவு நேரத்திலும் ஒரு அண்டா நிறைய காபி போட்டுக் கொண்டு வந்து கோயிலுக்குப் பக்கத்தில் வைத்தாள்.

"டேய் சுடலை ... எல்லாருக்கும் காபி குடுடா''

மாரிமுத்து ரெட்டியார் ரோஷமாக, "காபி இருக்கட்டும். இதுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்க...'' என்றார்.

இந்த நேரத்தில்தான் ஒருவிதமாக முறுக்கிக் கொண்டு, கண்களை அகல விரித்துக் கொண்டு நிற்க முடியாமல் ஆடினான் சுடலை.

`'டேய் சுடலை'' என்று அவனை உசுப்பினார் பெருமாள் ரெட்டியார்.

"டேய்... பொன்னியம்மாடா நானு... உங்களையெல்லாம் எல்லைல நின்னு காக்கறதுக்காக வந்தேன்டா... டேய் ரெண்டு ஊருக்கும் எல்லைல எனக்குக் கோயில் கட்டுங்கடா...'' சுடலை மீது சாமி வந்திருப்பதை ஒரு வினாடி தாமதத்தில் புரிந்து கொண்ட அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

ஊர் எல்லையில் கோயில் கட்டுவதில் இரு தரப்பினருக்குமே மாற்று கருத்து இல்லை. புதுவாயல்காரர்களும் சந்தோஷமாகக் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பினர்.

"டேய் சுடலை, உம்மலே சாமி வருமா?'' என்று விசாரித்தார், பெருமாள் ரெட்டியார்.

"இதுதான் முதத் தடவை ரெட்டியாரே!""

அடுத்த தடவைகளில் தேர்ந்த சாமியாடி ஆகியிருந்தான் சுடலை. ஊர் எல்லையில் பொன்னியம்மன் கோயில் கட்டி முடித்ததும் 5 நாள் திருவிழா. கோவிலுக்கு ஆடு, கோழி பலியிடக்கூடாது என்று சாமியாடி அறிவித்ததுகூட சுடலைதான். ஆத்தாவுக்குக் காவு கொடுப்பது பிடிக்காமல் போனதில் ஜனங்களுக்குச் சின்ன ஏமாற்றம் இருந்தாலும் சுடலை மேல் வந்து சொல்லிவிட்டாளே என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
திருவிழாவில் முதல் நாளன்று பொங்கல் பானைகளோடு ஊரே திரண்டு நின்றது. உடம்பெல்லாம் மஞ்சளும், குங்குமமுமாக ஆவேசமாக இருந்தான் சுடலை. உடுக்கையின் லயத்துக்குத் தலையைச் சுழற்றி சுழற்றி ஆடிக் கொண்டிருப்பது சாமானிய வேலையாக இல்லை. இயல்பாகவே அவன் திடகாத்திரமானவன். ஒரு கையில் வேப்பிலைக் கொத்தும், இன்னொரு கையில் பிரம்பும் வைத்துக் கொண்டிருந்தான் சுடலை. பம்பை, உடுக்கைக்காரர்களும் அவன் முன்னே செல்ல ஊரே எல்லைக் கோயிலுக்குத் திரண்டது.

எல்லையை நெருங்க, நெருங்க எதிர் திசையில் இருந்து இன்னொரு உடுக்கைச் சத்தமும் கேட்டது. புதுவாயல்காரர்களும் பொங்கல் வைக்க வந்து கொண்டிருந்தனர். எந்த ஊருக்கு முதல் மரியாதை என்பதுபோல் கூட்டத்தினுள் பேச்சு எழுந்தது. இந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக சுடலை, எதிரே வரும் கூட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான். சுதாரித்து அவனைப் பின் தொடரக்கூட முடியவில்லை. அப்படியொரு ஓட்டம்.

புதுவாயல் சார்பாகச் சாமியாடிக் கொண்டு வந்தவனை உலுக்கிப் பிடித்து ""யாருடா நீ? சாமின்னு சொல்லி ஊரை ஏமாத்தறயா?... உன்னை...'' தலைமுடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி கையில் இருந்த பிரம்பால் விளாச ஆரம்பித்தான்.

இரண்டு ஊர் மக்களும் திகைத்துப் போய்விட்டனர். இப்படியும் நடக்குமா என்றிருந்தது இரு தரப்பினருக்கும். விளாசிய விளாசலில் கதிகலங்கிப் போய் ஒரு ஓரமாக நின்று விட்டான். புதுவாயலுக்காகச் சாமி ஆடிக் கொண்டு வந்தவன்.

"பொன்னியம்மா இங்கே இருக்கேன்டா... எவனாவது ஏடாகூடமா பண்ணீங்க.... தொலைச்சுருவேன்...''
புதுவாயல் சார்பாக மாரிமுத்து ரெட்டியார் இரண்டடி முன்னே வந்து "மன்னிச்சிடு தாயே'' என்று கற்பூரத்தை ஏற்றி சுடலையின் உள்ளங்கையில் வைத்தார். தகதகவென எரியும் கற்பூரத்தோடு மூன்று முறை சுற்றி வாய்க்குள் போட்டுக்கொண்டான் சுடலை. அதற்குப் பிறகு, யார் மீதும் பொன்னியம்மா சாமியாட வருவதில்லை.

அடுத்த 25 வருஷத்துக்கு பொன்னியம்மா என்றால் அது சுடலை என்று ஆகிவிட்டது.
பெரிய குங்குமப் பொட்டு, உடம்பெல்லாம் விபூதி என மணம் வீசும் மனிதனாகிப் போனான் சுடலை. உழுவதும் மருந்தடிப்பதும், களையெடுப்பதும் அவனுக்கு உகந்த தொழிலாக இல்லாமல் போனது. கோயில், கும்பாபிஷேக வேலைகள், நன்கொடை வசூல் என்று ஒருவித அறப்பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.
கோயிலுக்கு முன்னால் இருந்த புறம்போக்கு நிலத்தில் மின்சார வாரிய துணை மின்நிலையம் வந்ததும் கோயிலுக்கு மவுசு குறைந்து போனது. சப்}ஸ்டேஷன் வந்ததால் ஊருக்கு நிறைய பம்ப் செட் இணைப்பும் ரைஸ் மில்லும், சில கம்பெனிகளும் இயங்க ஆரம்பித்தன. கோயிலுக்கு இரண்டு பக்கமும் வரிசையாக ஃபேக்ட்டரிகள்.

காது குத்துவதற்குப் பிரார்த்தித்துக் கொண்டவர்கள் மட்டும் எப்போதாவது கோயிலுக்கு வந்தார்கள். சுடலையும் கோயிலுக்குச் சற்றுத் தள்ளியிருந்த ப்ளாஸ்டிக் பைப் செய்யும் கம்பெனியில் வாட்ச்மேனாகச் சேர்ந்து விட்டான். எல்லாம் மருமகள் வந்த ராசி!

கோயிலுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சுடலை ஒரு சமயம் ஆவேசமாகச் சாமி வந்து ஆடியபோது, "இன்னா பெருசு... சும்மா இருக்க மாட்டியா?'' என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டனர். அதன்பிறகு சுடலை மீது சாமி வருவதில்லை.

பொன்னியம்மாளும் அந்தக் கோயிலை விட்டு வெளியேறிவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள்.

LinkWithin

Blog Widget by LinkWithin