சனி, நவம்பர் 29, 2008

திரைக்குப் பின்னே- 9

நம்பியார் - பரங்கிமலை!

தமிழகத்தில் கருப்புச் சட்டை என்றால் அது பெரியார் கட்சிக்குத்தான் சொந்தம். தனிமனித ஒழுக்கத்தினும் பொது ஒழுக்கம் முக்கியம் என்பதற்காகப் போராடியவர். அறுபது எழுபதுகளுக்குப் பிறகு அதிகரித்த கருப்புச் சட்டைகளுக்கு நம்பியார் முக்கிய காரணம். குறைந்தபட்சம் ஒரு மண்டலம் தனிமனித ஒழுக்கமாக இருப்பதற்கான உத்தியைக் கொண்டுவந்தவர் என்பதற்காக மகிழ்ந்து கொள்ளலாம்.



ஒரு தீபாவளி இதழுக்காக அவரைச் சந்தித்தேன். நம்பியாரைச் சந்திக்கத் தயாரானபோது "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் புத்தர் இருக்கும் புனிதமான ஆலயத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்குவாரே அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் இருந்தது. நம்பியாரின் வில்லத்தனத்திலேயே அதைத்தான் மன்னிக்க முடியாத குற்றமாக மனதில் பதித்து வைத்திருந்தேன். இது புனிதமான இடம் இங்கு சண்டை வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். எவ்வளவோ பொறுமையாக எடுத்துக் கூறியும் நம்பியார் அவரை அடிப்பார். அடிக்க அடிக்க எம்.ஜி.ஆர். மெல்ல ஆலயத்துக்கு வெளியே வந்துவிழுந்துவிடுவார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். அடிக்கிற அடி இருக்கிறதே... அதில் நேர்மை, நாணயம், கொள்கை எல்லாம் தெரிந்தது எனக்கு. அந்த மன பிம்பத்தோடு நான் நம்பியார் வீட்டுக்குப் போனேன். முன் வாசலில்- அவர் பின் கட்டில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். நான் வீட்டின் பின் கட்டுக்குச் சென்றேன். அங்கு ஒரு கதவு இருந்தது. அது சாத்தியிருக்கவே மெல்ல கதவைத் தட்டி "சார்?' என்றேன்.

"வாங்க... வாங்க'' என்று குரல் கேட்டது. பல திரைப்படங்களிலும் மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் கேட்டுப் பழகிய அதே குரல்.

நான் இந்தப் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறேன்.. என்று கதவுக்கு மறுபக்கம் இருந்து அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

"அதெல்லாம் சரிதான். நாம ரெண்டுபேரும் இப்ப சந்திச்சுப் பேசறது இப்ப உங்க கையிலதான் இருக்கு. கதவை நீங்கதான் திறக்கணும்.'' என்றார்.

"வெளிப்பக்கம் திறந்துதான் இருக்கு'' என்றேன்.

"தெரியும். கதவை அழுத்தித் திறங்க''

புதிதாக வருகிறவர்களிடம் இப்படியெல்லாம் விளையாடுவாறோ என்ற குழப்பம் தொற்றிக் கொண்டது. அவர் சொன்ன படி கதவைத் தள்ளிப் பார்த்தேன். திறக்கவில்லை.

"என்னப்பா திறந்துவிடச் சொன்னா என்ன பண்றே அங்கே?'' குரலில் அலுப்பும் அழுத்தமும் வெளிப்பட்டது.

"சார் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறேன்.''

"காலையில சாப்பிட்டியா இல்லையா? நல்லா தள்ளுப்பான்னு சொல்றேன்''

நான் திரையில் பார்த்து பிரமித்துப் போயிருந்த ஒரு நடிகர். பேட்டி எடுக்க வந்த நேரத்தில் இப்படித் தடுப்புக்கு இருபுறமும் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே அறிமுகமாகிக் கொண்டிருப்பது வேடிக்கையாகவும் இருந்தது.

கதவை வேகமாக ஓர் உதைவிடச் சொன்னார்.

அப்படியே செய்தேன். மழையால் ஊறி பிடித்துக் கொண்டிருந்த கதவு படாரென்று திறந்தது. வெள்ளை ஜிப்பா, வேட்டியில் நம்பியார்.

காமுகன், கொள்ளைக்காரன், சதிகாரன், அயோக்கியன், திருடன், நயவஞ்சகன், செய் நன்றி மறந்தவன், துரோகி என்று நம்பியாரை உருவகிக்க நிறைய கருத்துருவம் இருந்தது. ஆனால் அது அத்தனையும் அவரைக் கதவைப் பிளந்து கொண்டு பார்த்த அந்த ஒரு நொடியில் தொலைந்தது.

அவர் அமைதியாக இட்லி சாப்பிட்றீங்களா என்று உபசரிக்க ஆரம்பித்து, இந்திய மலைகளிலேயே பரங்கிமலைதான் வயதில் மூத்த மலை என்பது குறித்து நீண்ட நேரம் பேசியது நினைவு இருக்கிறது. உதகையையோ, இமயத்தையோதான் பிரமித்து இருக்கிறோம். பரங்கிமலை பல லட்சம் ஆண்டு மூத்ததாக இருந்தும் அப்படி ஒரு மலை இருப்பதையோகூட நாம் கவனிப்பதில்லை என்றார்.

அவர் வயதில் பாதி வயது நிரம்பாதவர்கள்கூட பத்மஸ்ரீ விருது வாங்கிவிட்டார்கள். அவருக்கு விருது எதுவும் கிடைத்ததே இல்லை. அவர் இறந்த அன்று எனக்கு பரங்கிமலைதான் ஞாபகத்துக்கு வந்தது.




இசையமைதி!

பொறுமையாகச் செயல்படுவதில் இசையமைப்பாளர் தேவாவைப் போல இன்னொருத்தரைப் பார்க்க முடியாது. ஆண்டுக்கு 30 படங்கள் இசையமைத்த நேரத்திலும் அவரிடம் ஆர்ப்பாட்டமான, அகம்பாவமான நடவடிக்கையைப் பார்த்ததில்லை. செய்து வைத்தது மாதிரி ஒரு பாவனையோடு ஒரு முகம். இன்னும் சொல்லப் போனால் பழகிவிட்டவர்களிடம் மனம் திறந்து பல உண்மைகளைச் சொல்லுவார்.




"கொஞ்சமா பேசறுதுல ஒரு நன்மை இருக்கு. வாயைக் குடுத்து மாட்டிக்காம இருக்கலாம். வேகமா பேசினா நமக்கு மெட்ராஸ் பாஷைதான் வருது. அதனாலதான். லைட்டா ஒரு புன் சிரிப்போட நிறுத்திக்கிறேன்'' என்பார்.

சத்யராஜ் ஒரு ஒலிநாடா வெளியீட்டு விழாவில், "தேவாசார் மாதிரி பொறுமையான ஆளை நான் பார்த்ததே இல்லை. அவர் மியூசிக் கம்போஸ் பண்ணும்போது அந்த ஆர்மோனியப் பெட்டியில கறுப்பும் வெள்ளையுமா இருக்கிற கட்டைகள்ல நாலை பிடுங்கிக்கிட்டாகூட கோபப்படாம அமைதியா சிரிப்பாரு'' என்றார். அவருடைய அமைதியை இந்த அளவுக்கு மிகைப்படுத்தியதற்காகவாவது தேவா கோபப்பட்டிருக்கலாம். மேடையில் இருந்த தேவா அப்போதும் சிரித்தார்.

இளையராஜாவின் பல பாடல்களை தேவா அப்படியே காப்பியடித்து இசையமைப்பதாக பல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள். எந்தப் பத்திரிகை மீதும் அவர் கோபப்பட்டதில்லை. நேரடியாக ஒரு முறை இதைக் கேட்டேன்.

"சில டைரக்டர்கள் ஒரு சில பாட்டைச் சொல்லி அந்த மாதிரி வேணும்னு சொல்லுவாங்க. நாண அந்தமாதிரி போட்டா அவங்களுக்குத் திருப்தியா இருக்காது. சில நேரங்களில் அதையை போட்டுத் தர வேண்டியதா இருக்கு. உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்றேன். கும்பகோணத்துப் பக்கத்தில ஒருத்தன் கோவில் தேரை எரிச்சுட்டான். ரொம்ப பழைய தேர். குப்புனு எரிஞ்சுபோச்சு. கோர்ட்ல கேட்டாங்க. "ஏன்டா தேரை எரிச்சே'னு. அதுக்கு அவன் "சாமிதான் கனவுல வந்து அந்தத் தேரை எப்படியாவது எரிச்சுடுன்னு கேட்டுக்குச்சு. அதனாலதான் எரிச்சேன்'னு சொன்னான்.''

எதற்காக இந்தச் சம்பவம் என்று புரியவில்லை.

"எதுக்காகடா சாமித் தேரைக் கொளுத்தினேன்னு கேட்டா, சாமி சொல்லித்தாந் கொளுத்தினேன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அவன் சாமிக்கு விரோதமா செஞ்சான்னு சொல்ல முடியுமா? ஏன்டா இளையராஜா மியூசிக்கைக் காப்பியடிக்கிறேன்னு கேட்டா, அவரோட மியூசிக்தான் எனக்கு ரொம்பப் பிடிக்குது. இதுதான் பதில்'' என்றார்.

தேவா அப்படித் தன்னடக்கத்தோடு சொன்னாலும் அவருடைய தனித்துவமான பல பாடல்களைச் சொல்ல முடியும். ஆசை, அண்ணாமலை, வாலி, காதல் கோட்டை போன்ற பல படங்களின் பாடல்களைக் கேட்கும்போது அவர் சுதந்திரமாகவும் சிரத்தையாகவும் செயல்பட்டதை உணரமுடியும்.

உச்சக்கட்ட புகழில் இருந்தபோது தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பாடலாசிரியர்களும் மொய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் இப்படி இறங்கி வந்து பதில் சொல்லியிருக்க வேண்டியதில்லை.

இதுபோல் பதில் சொல்வதற்கு தன்னடக்கம் மட்டும் போதுமா என்று தெரியவில்லை. தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும் சிலரால்தான் இப்படிப் பதில் சொல்ல முடியும்.


இழக்கும் ஆச்சர்யங்கள்!

நடிகை சுவலட்சுமியின் வீட்டில் சத்யஜித் ரே புகைப்படம் இருக்கும். அவருடைய படம் ஒன்றில் நடித்திருப்பதாகப் பெருமையாகக் கூறுவார். கூர்மையான அவதானிப்பு உள்ள நடிகை அவர். "ஆசை' படத்தில் அஜீத் ஜோடியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த்.




"என் ஆச ராசாவே' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜிகணேசன் ஓய்வாக அமர்ந்திருந்தார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சுவலட்சுமி தூரத்தில் உட்கார்ந்தபடியே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"அவரை ஏன்அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றேன்.

அங்கே அமர்ந்திருந்த மற்ற நடிகர்களைக் காட்டினார். "வித்தியாசம் தெரிகிறதா?'' என்றார்.

அது சாப்பாட்டு இடைவேளை. எல்லோருமே உண்ட களைப்பை அனுபவிப்பது மாதிரி ஓய்வில் உட்கார்ந்திருந்தனர் . "வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை'' என்றேன்.

"அவர் மட்டும்தான் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கிறார். மற்றவர் எல்லோரும் சரிந்தும் சாய்ந்தும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர் தியேட்டரில் இருந்து வந்தவர். அவருக்கு இது பால பாடம். அரிதாரம் பூசிவிட்டால் இப்படியும் அப்படியும் அசைந்து அதை உடையெல்லாம் பூசிக் கொள்ளக் கூடாது. கழுத்தில் இருக்கும் அரிதாரம் காலரில் படக்கூடாது என்கிற அக்கறையோடு அவர் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள். காலையில் ஆறு மணிக்கு வந்ததிலிருந்து அதே விரைப்போடு நிமிர்ந்தே உட்கார்ந்திருக்கிறார்'' என்று ஆச்சர்யப்பட்டார்.

ஆச்சர்யமாகத்தான் இருந்தது. கவனித்து ஆச்சர்யப்பட வேண்டிய நிறைய விஷயங்களை நாம் நம் அலட்சியத்தால் கணம் தோறும் இழந்து கொண்டே இருக்கிறோம்.

வியாழன், நவம்பர் 27, 2008

சனிக்கிழமை

வசந்தி கணக்கில் கொஞ்சம் வீக். கணக்கு வாத்தியாரோ உடல் ரீதியாக மிகவும் ஸ்ட்ராங். என்ன நடக்கும்? கணபதி வாத்தியார் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவதற்கு மறந்துவிடுவார் அவ்வளவுதான்.

வெள்ளிக்கிழமை மாலை அநேகமாகக் கடைசி பீரியட் சர்குலர் வரும். சனிக்கிழமை பற்றிய செய்தி வாசிக்கப்படும்.அப்படி வாசிக்கப்பட்டது.

"சனிக்கிழமை பள்ளி நாளென்றால் ஐந்து பீரியட் நடக்கும். பள்ளியின் ஏகோபித்த விருப்பம் எதுவாக இருக்குமென்றால் கணபதி வாத்தியார் வகுப்பு ஆறாவது பீரியட், ஏழாவது பீரியட் என வரும் வார நாளின் டயம் டேபிளை வேண்டுவதாக இருக்கும்.''

வசந்தியின் வகுப்பு செவ்வாய்க் கிழமைக்கு ஏங்கியிருந்தபோது "புதன்கிழமை அட்டவணைப்படி வகுப்புகள் நடக்கும்' என்று வாசித்து முடிக்கப்பட்டது.

புதன்கிழமை கணபதி வாத்தியார் மூன்றாவது பீரியட்.

புதன்கிழமை ஒரே ஒரு செüகர்யம் இருந்தது. இரண்டாவது மணியில் ஆங்கிலம். ஜோக்கர் வாத்தியார் வகுப்பு. ஜோக்கர் வாத்தியார் வகுப்பென்றால் கிராஃப் வரைவதற்கும் மேப் ட்ராயிங் புக்கைப் பிரித்து பசிபிக் கடலுக்கு நீல வண்ணம் தீட்டுவதற்கும் இன்னபிற ஆங்கிலம் சம்பந்தப்படாத வேலைகளுக்கும் பாத்ரூம் போய் வருதலுக்கும் வசதியாக இருக்கும். ஜோக்கர் வாத்தியார் வகுப்பென்றால்தான் எல்லோருக்கும் பாத்ரூம் போகிற ஆசை வரும்.

கணபசி அப்படியில்லை. ஒருமுறை மிகவும் உண்மையாக பாத்ரூம் முட்டவே எழுந்து பர்மிஷன் கேட்ட சுந்தரியை அடியோ அடியென்று அடித்ததில் அவள் பயந்து போய் நடு வகுப்பில் சிறுநீர் கழித்து வெட்கம் தாளாமல் பள்ளியைவிட்டு நின்று போனாள். டி.சி. வாங்கக் கூட வரவில்லை.

வாத்தியார் என்ற பெயரில் அவர் நடத்தி வந்த வன்முறைக்குப் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களின் பாராட்டும் அதிகம்.

"கணபதி சாரோட கிளாஸ்தான் ரொம்ப கொய்ட்''என்பார் ஹெட்மாஸ்டர்.

சுதந்திர தினம் போன்ற நாள்களில் பள்ளி மைதானத்தில் நடக்கும் விழாவில் பள்ளிக்கூடமே அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும். காக்கையின் கரைதலும் பேச்சாளரின் சுதந்திர தின அறிவுரையும் மட்டும் அங்கே ஒலி அலைகளை ஏற்படுத்துவனவாக இருக்கும்.

கணபதி புறநானூறு என்றால் ஜோக்கர் (நிஜப் பெயர் ஜெ.கே.ராமன்- ஜெ.கே.ஆர். என அழைக்கப்பட்டு ஜோக்கர் என மருவினார்.) புதுக்கவிதை.

"எல்லோரும் கவனிங்க'' என்று அடிக்கடி குரல் கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்கு இங்கிலீஷ் புத்தகத்தைப் படித்துக் கொண்டு போவார். ரொம்பவும் கோபம் வந்து விட்டால் "பெஞ்சு மேல ஏறி நில்லு..'' என்பார். கணபதி வாத்தியாரோடு ஒப்பிடுகையில் இவர் புறக்கணிக்கத் தக்கவர்.

முதல் பீரியடின்போது செவன்த் பி செக்ஷன் வாசலில் ஏழு பெண்கள் முட்டி போட்டுக் கொண்டிருந்ததை வசந்தி ஆறாம் வகுப்பு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். "கணபதி சார் வந்துட்டாரா?' என்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

பனிரெண்டாவது வாய்ப்பாட்டை இருபது முறை எழுதிக் கொண்டு வரச் சொல்லியிருந்தார். பதினான்கு முறைதான் எழுதியிருந்தாள்.

இரவு ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கு முன்பு கொஞ்சம் எழுதினாள். பவர் கட் ஆனதால் தூங்க நேர்ந்து மூன்று மணிக்குக் காலை தண்ணீர் நாளாக அமைந்து }அம்மா தலைவாறும்போது கொஞ்சம் எழுத முடிந்தது.

ஜே.கே.ஆர். பீரியட்டைதான் நம்பிக் கொண்டிருந்தாள். பத்து பதினைந்து நிமிடங்கள் போதும். முதலில் வரிசையாக 1,2,3.. என இருபது வரை எழுதிக் கொள்ள வேண்டும். அடுத்து இண்ட்டு.... இண்ட்டு... இண்ட்டு. அடுத்து வரிசையாக ஈக்குவல் குறி. அதற்கடுத்துதான் வாய்ப்பாட்டைப் பார்த்து எழுத வேண்டும். வசந்தி சுலபமாக வாய்ப்பாடு எழுதும் வழி இதுதான்.

முதல் மணி முடித்து அடுத்த வகுப்பு துவங்க, ஆவேசமாக நிறையப் பெண்கள் அவரவர்க்கு இடப்பட்ட கணிதக் கட்டளைகளை முடிக்க ஆயத்தமாயினர்.

ஜே.கே.ஆர். வரவேயில்லை. எந்த வகுப்பிலும் ஆசிரியர்கள் நுழையவில்லை. பள்ளிக்கூடம் காட்டுக் கூச்சலாக இருந்தது.

எல்லா ஆசிரியர்களும் மந்தையாகப் பேசிக் கொண்டு போனார்கள். ஸ்டாப் ரூமில் நுழைந்தவர்கள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.

ஆசிரியர்கள் வகுப்புகளில் நுழைய ஆரம்பித்த பின் படிப்படியாகச் சத்தம் குறைந்தது. ஜே.கே.ஆர். வந்தார் வழக்கத்தைவிட நிதானமாக.

"நம்ம கணபதி சாரோட அப்பா இறந்துட்டாராம். இப்பதான் நியூஸ் வந்தது..''

வகுப்பு ஒருமாதிரியாக முழித்தது.

"முதல்ல ஒரு பெல் அடிக்கும் எல்லோரும் எழுந்து நிக்கணும். அவருக்கு மெüன அஞ்சலி செலுத்தறதுக்காக. அப்புறம் ஒரு பெல் அடிக்கும் உக்காரணும்''

பெல் அடித்தது. நின்றார்கள். அடுத்த பெல் அடிப்பதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டதுபோன்ற உணர்வு. வசந்திக்குப் பின்னால் யாரோ }மல்லிகாவாக இருக்கலாம்} குபுக் என்று சிரித்த சப்தம் கேட்டது. வசந்திக்கும் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டாள்.
அடுத்த பெல்.

சலசலப்போடு அமர்ந்தனர்.

வசந்தி மெல்லத் திரும்பி "நீ தான சிரிச்ச?'' என்று மல்லிகாவை விசாரித்தாள்.

"அப்ப இன்னிக்கி வரமாட்டாரு'' பூரித்தாள் குமுதா.

"இன்னும் ஒரு வாரத்துக்கு நம்மளை வாய்ப்பாடே கேட்கமாட்டாரு'' என்று தெம்பூட்டினாள் அங்கயற்கண்ணி.

ஏறத்தாழ எல்லா வகுப்பிலும் லீவு போல பேசிக் கொண்டார்கள்.

"அவங்க வீட்ல வாரம் ஒர்த்தர் செத்துட்டா கணபதி சார் அடிக்கவே மாட்டார் இல்ல?'' என்று யோசனை சொன்னவளைப் பார்த்து, "ச்சீ பாவம்டீ'' என்றாள் வசந்தி.



கணையாழி- 1989
தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வானது

புதன், நவம்பர் 26, 2008

வெள்ளிக்கிழமை

"அப்பா பேப்பர் கேட்டார்'' என்றாள் லட்சுமிபதியின் மகளான மகேஸ்வரி.

"படிச்சிட்டு முரளிக்கிட்ட குடுத்தனுப்பறேன்'' என்று சொல்லிவிட்டு தினகரனின் நான்காவது பக்கத்திலிருந்து ஐந்தாவது பக்கத்தைத் திருப்பினார் மோகன்தாஸ்.

தினகரனின் ஆரம்பநாள் முதல் விடாப்பிடியாகப் படித்துவருபவர் மோகன்தாஸ். எக்காரணம் கொண்டும் வேறு பத்திரிகை வாங்கியதில்லை. எம்.ஜி.ஆர். இறந்த செய்தியை எல்லாப் பத்திரிகையிலும் போட்டாலும் தினகரன் பார்த்த பின்பே நம்பினார்.

பத்தாவது ப்ளஸ் டூ போன்ற தேர்வு முடிவுகளும் அப்படியே. கலைஞர் பேச்சென்றால் பரீட்சைக்குப் படிப்பது போல படிப்பார். தினமும் இலவசத்தில் லட்சுமிபதியும்} ஜனதா ஆதரவாளராக இருந்தும்கூட படிப்பார். என்.ஜி.வோ}வைப் பற்றிச் செய்தி வந்தால் மட்டும் கணேசன் வாங்கிச் சென்று படிப்பார். மற்றபடி மதிய நேரத்தில் பெண்கள் டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி அலசிவிட்டு சமையல் குறிப்பு படிப்பார்கள்.

மோகன்தாஸ் வீட்டில் சாமிபடங்களைவிட அண்ணா, பெரியார் என்று தலைவர்கள் படங்கள் அதிகம். மனைவிக்கு தெய்வ வழிபாடென்றால் இவருக்குத் தலைவர் வழிபாடு.

"எப்பிடினா ஒழி'' என்று சட்டென்று எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார் மோகன்தாஸ்.

"நான் ஒழிஞ்சாத்தான் உங்களுக்கு நிம்மதி. ஒழிஞ்சி போறேன். நாளும் கிழமையுமா சாபம் குடுத்திட்டீங்களே.. எனக்கு வோணும்'' நிமிடத்தில் கண்ணீர் கொப்பளித்தது.

"எல்லாம் பாப்பானுங்க பண்ண வேலை. தமிழனை அழிச்சதே அவனுங்கதான்'' முணகிக் கொண்டே வெளியே போனார் மோகன்தாஸ்.

லட்சுமி மூக்கை சிந்திக் கொண்டு கத்திரிக்காயைப் போட்டு சாம்பாரும் மோரும் மட்டும் செய்து வைத்துவிட்டு யாருடனும் பேசாமல் கோபமாய்ப் படுத்துக் கிடந்தாள்.

பதினோரு மணி சுமாருக்கு பழனிச்சாமியின் மனைவி நாகபூஷணம் உள்ளே வந்து. ""என்னாங்க வெளியே தலை காட்ல இன்னிக்கி?'' என்றாள்.

லட்சுமி படுத்துக் கொண்டே "ஒண்ணுல்லங்க'' கண்களைத் துடைத்துக் கொண்ட போதே சுவாரஸ்யம் ஏதோ இருக்கிறதுபோல மேற்கொண்டு அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்தாள்.

கேட்பதற்கு இப்படியாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த லட்சுமி தன் கணவர் நல்ல நாளும் போதுமாக இப்படிச் சாபம் கொடுத்த கதையைச் சொன்னாள்.

"அட, நீங்க ஏன் இதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிறீங்க? சினிமாவுக்கு வர்றீங்களா போவலாம்?'' என்றாள்.

"யார் யார் போறீங்க?''

"நானும் ராஜேஷ் அம்மாவும். நீங்களும் வாங்களேன். வூட்லயே இருந்தா இன்னும் கஷ்டமாத்தான் இருக்கும்''

"நா வர்ல. போயிட்டு வாங்க''

அதற்குள் மாலதி வந்து "மகாலட்சுமில புதுப்படம் போட்ருக்கான்...பிரபுது'' என்றாள்.

லட்சும் "இன்னா படம்?'' என்றாள்.

"கலியுகம்''

"காத்தால படமா?''

"டயமாய்டுச்சிங்க. சீக்ரம்''

"நா சும்மா கேட்டேன். நீங்க போய்ட்டு வாங்க'' தன் வருத்தத்தைச் சட்டென விட்டுவிடமுடியாத தயக்கம் இருந்தது.

"அட கிளம்புங்க, டயமாச்சின்றேன்...'' மாலதி மறுபடி உசுப்ப, எழுந்து உட்கார்ந்து ""டிக்கெட் கெடைக்காதுங்க.. இப்பவே பதினொன்னு ஆய்ட்ச்சி'' என்றாள் லட்சுமி.

"வாங்கில்லாம் வாங்க''

மறுநிமிடத்தில் மூவரும் தயார். போகும்போது கீதாவின் அம்மா எதிர்ப்பட, ""சினிமாவுக்கு வர்றீங்களா?'' என்றனர் போகிற போக்கில். நிச்சயம் வரமாட்டார்கள் என்ற தைரியம். இவர்களைவிட கீதா அம்மா வயதில் மூத்தவர். வசந்தியின் அம்மாவுக்கும் நாகபூஷணத்துக்கும் முறைவாசல் விஷயத்தில் சண்டை என்பதால் வசந்தி அம்மாவைக் கூப்பிடவே இல்லை. அதே போலத்தான் ராஜேஷ் அம்மாவுக்கும் மகேஷ் அம்மாவுக்கும்.

அவர்கள் தனி செட்டாகப் போவார்கள்; அநேகமாக நாளைக்கு.
(தொடரும்)

செவ்வாய், நவம்பர் 25, 2008

வியாழக்கிழமை

சரியாக நான்கு மணி சுமாருக்கு முதல் தேதி அதன் முழு அர்த்தத்தையும் அடைந்தது. சம்பளம் கைக்குக் கிடைத்த மறுவினாடி ஒவ்வொருவருமே மேஜை அறையைத் திறந்து வைத்து அதனுள் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு சற்றே மறைவாய்} பணத்தை எண்ணினார்கள்.

ரயில்வே துறையின் அந்த எளிய அறையில் லட்சுமிபதியோடு சேர்த்து ஆறுபேர் இருந்தார்கள். வரிசைக்கு மூன்றாய் இரண்டு வரிசை மேஜைகள். இவர்கள் வரைக்கும் ஒரு பிளைவுட் தடுப்பு. ஆறுபேருமே அப்படித்தான் எண்ணினார்கள். எண்ணிக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்க்க நேர்ந்ததால் சிரித்துக் கொண்டார்கள்.

பிடித்ததெல்லாம் போக லட்சுமிபதியின் பே ஸ்லிப்பில் போட்டிருந்த தொகை ஆயிரத்து முன்னூற்று இருபத்தொன்று. இது அப்படியே முழுசாக வந்து சேர வேண்டும் என்ற மனைவியின் கண்டீஷனை மீறியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார் அவர்.

காலையில் ஆபிஸýக்கு வந்ததும் சங்கீதராவ் நூறு ரூபாய் கைமாற்றாய் கேட்டிருந்தார். எத்தனையோ முறை கொடுத்து உதவியிருக்கிறார். முடியாது என்று சொல்ல முடியவில்லை. அதுவும் பொண்டாட்டி ஆஸ்பத்திரியில் இருப்பதாலும் உறவினர் வந்துவிட்டதாலும் சமாளிக்க முடியாமல் கேட்டிருந்தார். சொசைட்டியில் லோன் போட்டிருப்பதால் பத்து தேதிக்குள் கிடைத்துவிடும் திருப்பித் தருகிறேன் என்று வேறு சொன்னார்.

மனைவி சொல்லை மீறி நூறு ரூபாய் தாளைத் தனியே எடுத்து மேல் பாக்கெட்டில் வைத்தார். மீதியை பாண்ட் பாக்கெட்டில் வைத்தார்.

இப்படி ஒவ்வொருவரும் முதல் தேதி பணத்தை இந்தப் பாக்கெட்டும் அந்தப் பாக்கெட்டும் மாற்றி வைப்பதும்கூட முதல் தேதியின் சகஜம்.

சரியான நேரத்தில் நுழைந்தார்கள் கூட்டமாக ஐந்து பேர். கையில் நீண்ட லிஸ்ட்.

லட்சுமிபதி "என்னது?'' என்றார்.

"நம்ம அக்கெüண்ட் சேக்ஸன் எழுமலை பொண்ணுக்கு இந்த மாசம் கல்யாணம் இல்ல...'' என்று நினைவுபடுத்தினார் ஒருவர்.

இது வழக்கம். அலுவலக ஊழியர் வீட்டில் திருமணம் என்றால் அதற்கு எல்லோருமாகச் சேர்ந்து பணம் போட்டு ஒரு பிரஸர் குக்கரோ} பெரும்பாலும் அதுதான்} அல்லது டேபிள் ஃபேனோ வாங்கி "அன்பளிப்பு ரயில்வே ஊழியர்கள்' என்று பெயர் போட்டுக் கொடுப்பது நெடு நாளைய நடைமுறை.

லபக் முதல் தேதியில் பிடித்துவிட்டார்கள்.

லட்சுமிபதி பத்து ரூபாயை பேண்டிலிருந்து எடுத்துக் கொடுத்து "எம் பேரை டிக் பண்ணிடுங்கப்பா'' என்றார்.

இப்படி யாராவது ஒருவர் கல்யாணம் செய்வதும் ரிடையர்ட் ஆவதும் அதற்கான பணம் சேகரிப்பதும் முதலீடு செய்வது மாதிரி அனைவரும் பணம் கொடுப்பதும் சராசரியாய் எல்லா மாதமும் நிகழும்.

பஸ் ஸ்டாப்பில் நின்ற போது "கட்ச்சி டிக்கெட் சார். சீக்கிரம் சார்'' என்று சீட்டாடுபவன் மாதிரி விசிறியாக லாட்டரி சீட்டை நீட்டினான் ஒருவன்.

லட்சுமிபதியின் கட்டுப்பாடெல்லாம் குலைந்தது. காலையிலேயே பேப்பரில் இந்த வாரம் எப்படி? இருக்கும் என்று தனுசு ராசியில் போட்டிருந்ததை மனப்பாடமாய் படித்திருந்தார்.

கணவன் மனை உறவு அன்புடையதாக இருக்கும் என்பதற்கும் கீழ் "மொத்தத்தில் சுமாரன வாரம் அதிர்ஷ்ட எண் 1' என்று போட்டிருந்தான்.

லாட்டரி சீட்டை ஆர்வமாகப் பார்த்தார். எல்லாச் சீட்டிலும் முதல் இலக்கம் ஒன்று. முதல் பரிசும் ஒரு லட்சம் இன்று தேதியும் ஒன்று. எல்லாமே கூடி வந்தது.

"எத்தினி டிக்கெட் இருக்கும்?''

"எட்டு சார். கண்டிப்பா அடிக்கும் சார்''

"என்னைக்கு குலுக்கல்?''

"இன்னைக்கு நாளைக்கு ரிசல்ட். நாளைக்கு நெறைஞ்ச வெள்ளி. லட்ச ரூபா உங்களுக்குத்தான் சார்''

இப்படிப்பட்ட நல்ல டிக்கெட்டை அவன் வைத்துக் கொள்ளாமல் நமக்கேன் கொடுக்கிறான் என்றெல்லாம் லட்சுமிபதியால் யோசிக்க முடியவில்லை.

வாங்கிக் கொண்டார்.

"ஒண்ணாந்தேதி சம்பளத்தைச் சாமி படத்தாண்ட வச்சிட்டு செலவு பண்ணனும்னு எத்தினா வாட்டி சொல்லி அனுப்பிச்சேன்?' என்று மனதில் திட்டினாள் மனைவி.

"ஒரு லட்சம் வேண்டாம். அம்பதாயிரம் இருந்தா போதும் பொண்ணு கல்யாணத்தை முடிச்சிட்லாம். நாளைவரை காத்திருக்கணும்.

"போன வாரம்கூட மெட்ராஸ்தான் ஒருத்தன் லக்கா அடிச்சுக்குனு போனான்.' பரிசுத் தொகையில் கல்யாணத்தை முடித்துவிட்டால் ரிடையர்ட் ஆகிற பணத்தில் வீட்டைக் கட்டி விடலாம் என்று திட்டம் தீட்டினார்.

பணம் எடுத்தே எடுத்தாகிவிட்டது. ஒட்டலுக்குப் போய் ஒரு தோசையும் காப்பியும் சாப்பிடலாம் என்று நினைத்து கீதா கஃபேவில் நுழைந்து ஃபேன் சுற்றுகிற இடமாகப் பார்த்து அமர்ந்தார்.

வீட்டு வாடகை, மளிகை, ரேஷன், பஸ் பாஸ், பால் அட்டை போன்ற ஆயுள் தண்டனைகள் போக ஜுரம், சளி, விருந்தினர் வருகை, கோவில், பயணம் போன்ற லாக்-அப் விஷயங்கள் சர்வர் வருவதற்குள் தோராயமாக ஒரு கணக்குப் போட்டு மிரண்டார்.

சர்வர் "என்ன சார் வேணும்'' என்றான்.

லட்சுமிபதி கல்யாண வயதில் இருக்கிற பெண்ணையும் பையனையும் உத்தேசித்து "ஒரு காப்பி மட்டும் கொடுப்பா'' என்றார் நிதானமாய்.
(தொடரும்)

திங்கள், நவம்பர் 24, 2008

திரைக்குப் பின்னே- 8

தருமி முதல் தசாவதாரம் வரை

நாகேஷ் என்றால் நகைச்சுவை. புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸும் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.




திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு காமெடிகள். உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன அதில். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த காமெடிகள்.

நான் அவரை இரண்டாவது இன்னிங்ஸ் காலத்தில்தான் சந்தித்தேன். இரண்டொரு முறை பேட்டி கேட்டபோதும் அதை அவர் தவிர்த்துவிட்டார். பேட்டி தருவதில் பெரிய விருப்பம் எதுவுமில்லை அவருக்கு. மிகவும் விருப்பமுள்ளவர்கள் அல்லது ஏற்கெனவே பழகியவர்களிடத்தில் மட்டும்தான் அவர் பேசினார். அப்படிப் பேசும்போது அங்கே தொடர்ந்து நகைச்சுவைப் பட்டாசு வெடிக்கும்.

கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார்:

"இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார்.... உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்'' என்றார்.

ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று தோன்றுகிறது.

’அபூர்வ சகோதரர்கள்', 'காதலா காதலா', 'பஞ்சதந்திரம்,' 'தசாவதாரம்' என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும்தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.

'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது.

கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமாக அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து "என்னப்பா... கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே?'' என்றார் கூலாக.

கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷுக்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.


பட்டு என்பது பெயர் காரணம்

மோகன் ஸ்டுடியோவில் பிரபு நடித்துக் கொண்டிருந்த ’உழவன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் பிரபுவைப் பார்க்கத்தான் சென்றிருந்தேன். பாதிப் பேட்டியில் வண்ணத்திரையில் அவரைப் பற்றி வந்த கிசுகிசுவைச் சுட்டிக்காட்டி அதே கோபத்தில் பேட்டி போதும் என்று விடைகொடுத்துவிட்டார்.



அதே ஸ்டுடியோவில் ’சில்க்' ஸ்மிதா வேறு ஏதோ படத்துக்காக நடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவ்வளவாகக் கெடுபிடி இல்லாமல் பேசினார். பேட்டி என்றால் பொதுவாக "இத்தனாம் தேதி இந்த இடத்துக்கு இத்தனை மணிக்கு வாங்க” என்பார்கள் பலரும். ஆனால் இவரோ தன் தொடையை மறைக்கும் விதமாக ஒரு சின்னத் துண்டைப் போர்த்திக் கொண்டு "கேளுங்க" என்றார் சாதாரணமாக.

என்னிடம் கைவசம் கேள்விகள் எதுவும் இல்லை. திராபையான கேள்விகளாகக் கேட்டேன். ”இப்போது என்ன படங்களில் நடிக்கிறீர்கள்” என்பது என் முதல் கேள்வி. அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த நான்கைந்து படங்களின் பெயர்களைச் சொன்னார். "என்ன வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்” என்பது என் இரண்டாவது கேள்வி. "பிச்சைக்காரியா நடிக்கணும்னு ஆசை” என்றார். "உங்களுக்குப் பிடித்த நடிகை யார்” என்று மூன்றாவது கேள்வி. அவர் ”சாவித்திரி” என்று சொன்னதாக ஞாபகம்.

அவ்வளவுதான் பேட்டி. வண்ணத்திரை போன்ற குட்டிப் பத்திரிகையிலேயே அரைப் பக்கத்துக்கு மேல் அதை இழுக்க முடியாது. அப்படியொரு ரத்தினச் சுருக்கப் பேட்டி அது.

நடிகைகளிடம் நீங்கள் நடிக்க விரும்பும் கேரக்டர் என்று கேட்டால் பிச்சைக்காரியாக நடிக்க விரும்புகிறேன் என்பதும் பைத்தியக்காரியாக நடிக்க விரும்புகிறேன் என்பதும் அப்போது பேஷனாக இருந்தது. கவர்ச்சியாக நடிப்பீர்களா என்றால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். ஆனால் கிளாமராக நடிப்பேன் என்பார்கள். இதெல்லாம் நடிகைகளின் ரெடிமேட் பதில்கள். நாங்களும் இந்தப் பதில்களை விடாமல் கேட்டுப் பிரசுரித்துக் கொண்டிருப்போம். வாசகர்களும் ’நடிகை... யின் பதில் அபாரம்' என்று, வாசித்துக் கடிதம் எழுதுவார்கள். சங்கிலித் தொடர் போன்ற பழக்கம்போல இதைச் செய்து கொண்டிருந்தோம். ஆனால் அவர், அவருடைய தொடர்ச்சியான வேடங்கள் குறித்து அதிருப்தியாகத்தான் இருந்தார் என்று பிறகு தெரிந்தது.

வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்தது. ஆனால் அவர் மீது இருந்த முத்திரை கடைசி வரை மறையவே இல்லை. அவரை அரைகுறை ஆடையுடன் ஆடுவதற்குத்தான் அழைத்தார்கள். சமீபத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் கடையம் ராஜுவைச் சந்தித்தபோது "அனாதை ஆஸ்ரமங்களுக்காகக் கலை நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் நான் இலவசமாகவே நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்'' என்று சில்க் ஸ்மிதா அவரிடம் சொல்லியிருந்ததைக் கூறினார்.

அவர் சொன்ன சில பதில்கள் உண்மையானவையாகவும் இருந்தன என்று முடிவு செய்வதற்கு சமயத்தில் அந்த நபர் உயிரையும் தர வேண்டியிருப்பதாகத் தோன்றுகிறது.

தற்கொலை என்பது சமூகத்துக்குத் தரும் தண்டனை என்பார்கள். பல நேரங்களில் தங்களை நம்ப வைப்பதற்காகச் செய்கிற கடைசிக் கட்ட முயற்சியாகவும் அது இருக்கிறது. சில்க் ஸ்மிதாவை எத்தனை பேர் நம்பினார்கள் என்று தெரியவில்லை. அவருடைய பிணம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அந்தப் ’பட்டு' மேனி கேட்பாரற்றுக் கிடந்தபோது அவருடைய கடைசிமுயற்சியும் தோற்றுப் போனதாகவே தெரிந்தது.


நடிகைக்காகவே பிறப்பெடுத்த கேள்விகள்

சில்க் ஸ்மிதாவிடம் கேட்டது மாதிரி பல நேரங்களில் கேள்வி கேட்கத்தான் வேண்டியிருக்கிறது. அந்தவிதத்தில் சில நடிகைகள் பிரமிக்க வைக்கவும் செய்திருக்கிறார்கள். அப்படி பிரமிக்க வைத்த ஒரு நடிகையைத் தெரிந்து கொள்வதற்கு முன்... பொதுவாக நடிகை எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள் என்று பார்ப்போம்.




நடிகைகள் என்றதும் ஆணாதிக்கத்தோடு இன்னும் கொஞ்சம் வக்கிரம், கொஞ்சம் அலட்சியம், கொஞ்சம் கவர்ச்சி ஈர்ப்பு எல்லாம்தான் கலந்து கொள்கிறது.

நம் இயக்குநர்களும் அவர்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். அவர்கள் குறைவான உடையோடு குலுங்கிக் குலுங்கி ஓடுவதற்காகவே பிறந்தவர்களாகப் பாவிக்கிறார்கள். ஆல்ப்ஸ் மலைச் சிகரத்திலும் இமயத்தின் வெள்ளைப் பனி மலையின் மீதுலாவும்போதும் நடிகைக்கு மார்பகமும் தொடையும் தொப்புளும் தெரிகிற மாதிரிதான் உடை. அவர்களும் சந்தோஷமாக பனிக்கட்டி மீது உருண்டு புரண்டு ஆடுவார்கள். உடன் நடிக்கும் நடிகரோ ஜெர்க்கின் போட்டுக் கொண்டு தலையில் விலங்கின் ரோமத்தால் ஆன குல்லா அணிந்து கையில் தோல் கிளவுஸ் மாட்டிக் கொண்டு கம்பீரமான ஆண் மகனாக சிகரெட் புகைத்தபடி ஸ்டைல் காட்டுவார்.

நடிகைகளை வெறியுடன் காமுகிக்கும் எந்திரம்போலச் சித்திரிப்பதில் சினிமாதுறையினரும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் கனவுக் கன்னிகளாக மாறவேண்டும் என்பது தலைவிதி.. அல்லது தலையாயவிதி. அப்படிக் கனவுக்கன்னியாக நாம் திகழவேண்டும் என்று சம்பந்தப்பட்ட சில நடிகைகளே விரும்புவது வேறு.

இதில் பத்திரிகையாளர்கள் இந்த இருதரப்புக்கும் இடையே தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

நடிகைகள் என்றால் எப்போ கல்யாணம், காதல் கல்யாணமா, கவர்ச்சியாக நடிப்பீர்களா, உங்களுக்கும் அவருக்கும் இதுவாமே, நடிக்க வராமல் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள், (யாரைப் பிடித்து) எப்படி நடிக்க வந்தீர்கள், உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார், கல்யாணம் ஆன பிறகும் நடிக்க வருவீர்களா, நம்பர் ஒன் நடிகை ஆவது எப்போது, எதற்காக நாய் வளர்க்கிறீர்கள்? (நான் சில்க்கிடம் கேட்ட கேள்விகளையும் சேர்த்துக் கொள்ளலாம்) இந்தக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு கேள்விகேட்ட தமிழ் நிருபர் யாரேனும் இருந்தால் அந்தத் தனித் தன்மைக்காக அவரை நோபல் பரிசுக்குக்கூட சிபாரிசு செய்யலாம்.

நடிகை ஜோதிர்மயி என்னை ஆச்சரியப்படுத்திய நடிகை. என்ன மாதிரி பொழுது போக்குவீர்கள் என்று கேட்டேன். படிப்பேன் என்றார். இப்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் என்ன என்றேன். கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் ஹண்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட் என்றார். தொடர்ந்து அவர் லத்தீன் அமெரிக்கப் புனைவுலகம் பற்றி படபடவெனப் பேச ஆரம்பித்துவிட்டார். நான் இந்தக் கேள்விக்கு முந்தைய கேள்வி வரை அவரை எப்போ கல்யாணம் டைப்பில்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். சட்டென அவமானமாகிவிட்டது எனக்கு.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். தொழில் கண்டும் எள்ளாமை வேண்டும். இதையும் எங்காவது சொல்லியிருப்பாரோ என்னவோ?

புதன்கிழமை

மற்ற விரலையெல்லாம் மடக்கிக் கொண்டு கட்டை விரலை மட்டும் வாயருகே நீட்டி, "கிடைக்குமா?'' என்றார் பழனிச்சாமி.

வாசு நாயகருக்குப் புரிந்தாலும் ஊர்ஜிதமாகத் தெரிந்து கொள்வதற்காக, ""கள்ளா? சாராயமா?'' என்றார்.

"சாராயம்தான்'' என்றார் அப்படியும் அப்படியும் பார்த்துக் கொண்டு.

"அந்தப் பழக்கம் உண்டா?''

"ஆட்டோ ஓட்றவங்களுக்கு அது இல்லாம முடியாதே'' என்றார் தீர்மானமாக.

"இங்க ஏகப்பட்ட பேர் காச்றாங்க''

"காய்ச்சர்தா? ஆந்திரா சரக்கு கிடைக்காதா?''

"இத்தாண்ட எந்தச் சரக்கும் ஒண்ணும் பண்ண முடியாது... ஒருவாட்டி சாப்டு பாரேன்'' வாசு நாயகர் தெம்பாக நடந்தார்.

வானம் பார்த்த பூமி. சுற்றிலும் அடையாளத்துக்கும் பச்சை இல்லாத வயல்கள். நான்கு மணி வெய்யிலும்கூட இவ்வளவு சூடாக இருந்தது. பழனிச்சாமி குத்தகைப் பணம் வாங்குவதற்காக வருடத்துக்கு ஒருமுறை வருவார். வருடத்தில் இரண்டாவது முறையாக வந்ததன் காரணம் அந்த ஒரு பயணத்தையும் நிறுத்திவிடுவதற்காகத்தான். அவசரமாய் நிலத்தை விற்றுவிட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கிக் கொள்வதாகத் திட்டம்.

வருஷத்துக்கு நான்கு மூட்டை நெல் என்ற கணக்கில் நிலத்தை வாசு நாயகரிடம் குத்தைக்கு விட்டிருந்தார் பழனிச்சாமி. மூட்டைக்கு இன்ன ரேட் என்று பழனிச்சாமி வந்ததும் எண்ணி வைத்துவிடுவார் வாசு நாயகர். நேர்மை, நாணயம் இவற்றையெல்லாம் அவர் நம்பி வந்தார்.

"கொஞ்ச நாள் கழிச்சு வித்தா கொஞ்சம் வெல ஏறும்'' அபிப்ராயம் சொன்னார் வாசு.

"எங்க ஏறுது? எங்கப்பன் காலத்துல இருந்த மாதிரிதான் இருக்குது''

"உம்..'' என நின்று மறுத்துவிட்டு, மேற்கொண்டு நடந்தார். ""உங்கப்பா காலத்துல ஒரு செண்ட் ஏழு ரூபா... இப்ப என்ன வெல தெரியுமா?''

"எவ்ளோ?''

"எர் நூர் ரூபா''

"ஒரு செண்ட்டா?''

"ஆமா..'' என்றார் ரகசியம்போல்.

பழனிச்சாமி இவ்வளவு எதிர்பார்க்கவில்லை. ஒரு ஏக்கரும் பத்து செண்டும்... நூற்றிப்பத்து செண்ட்டுகள்... இருபத்தி ரெண்டாயிரம். சேட்டிடம் இருபதாயிரம். கொஞ்சம் நகை விற்கலாம். சொந்தமாக ஆட்டோ வாங்க போதும்...

"வருஷத்துக்கு நாலுமூட்டை... ஆட்டோ வாங்கினா கேரண்டியா டெய்லி நூர் ரூபா நிக்கும் கைல''

"வாஸ்தவம்தான். ஆனா நிலத்துக்கு மதிப்பு ஏறிக்னே இருக்குதே? ஆட்டோ அப்படி ஏறுமா?''

"இப்ப பொழைக்கறது எப்படி? வெல ஏர்றத பாத்துக்னு இருந்தா வயிர் ரொம்பிடுமா?''

பழனிச்சாமி இப்படிக் கேட்டுவிடவே வாசு நாயகர் மேற்கொண்டு பதில் சொல்வதற்குக் கொஞ்சம் யோசித்தார்.

"விக்கறதால எனக்கொன்னும் இல்ல... வேணும்னா நாளைக்கேகூட ஏற்பாடு பண்றேன். ரோட்டுமேல இருக்கிற நிலம். இப்பவே கம்பெனிகாரனுங்க வந்து கேட்டுட்டுப் போறானுங்க. ஐநூர் ரூபா வெல வித்தாதான் குடுக்கறதுனு ஊரே ஸ்ட்ராங்கா இருக்குது. உங்ககிட்ட இப்ப இருநூர் ரூபாய்க்கு வாங்கி அடுத்த வருஷம் ஐநூர் ரூபாக்கு வித்தா நாளைக்கு ஏண்டா சொல்லலன்னு கேட்றகூடாது. அதுக்குத்தான் சொல்லிட்டேன் ''

பழனிச்சாமி யோசித்தார்.

"கேரண்டியா அடுத்த வருஷம் ஐநூறு விக்கும்னா காத்துக்குனு இருக்கலாம்''

"விக்கும்''

மோசமான முள்வேலிகளைக் கடந்து ஏறி நின்று ""ஆட்டோ எவ்ளோ?'' என்றார்.

"அம்பதாயிரம் வெச்சா அருமையான வண்டி''

"இப்ப வித்தா அவ்ளோ வராதே?''

"அஞ்சு பைசா வட்டிக்கி சேட்டு கிட்ட கேட்ருக்கேன்''

"வட்டிக்கிலாம் வாங்கி என்னாத்த பண்ணுவே? வேணாம்.. வேணாம். கொஞ்சம் பொறுத்து விக்கலாம். நல்ல வெலவந்தா நானே சொல்றேன்''

பழனிச்சாமி பேசவில்லை. அப்போது ஆட்டோ விலையும் ஏறிவிடுமா? என்ற யோசனை.

ஏரிக்கரையின் பனைமர வரிசையில் ஒருவன் வெளிப்பட்டான்.

"ரெண்டு பேருக்கும் குட்றா'' என்றார் வாசு அவனைப்பார்த்து.

புதரில் முப்பத்தைந்து லிட்டர் கேனில் இருந்து ஒரு தகர டப்பாவில் ஊற்றி ஆளுக்கொரு டம்ளர் நீட்டினான்.

பழனிச்சாமி, "எவ்ளோ?'' என்று பாக்கெட்டில் கையைவிட்டவாறு கேட்டார்.

"ரெண்டு பேருக்கும் சேத்து எட் ரூபா''

"உறையே மூன் ரூபாதான்'' என்றார் பழனி.

"சாப்டீங்களே.. இது எப்பிடி? ஒறை எப்படி?''

"நீயே காச்சுவியா?''

"காச்சுவேன். அதுக்கெல்லாம் கொஞ்சம் துட்டு வேணும். வாங்கியாந்து விக்றேன்''

"காச்சறதுனா எப்பிடி?'' ஆர்வமாக விசாரித்தார் பழனி.

"வேணாம் சார். அதெல்லாம் சொன்னா வெறுத்துடுவீங்க''

"அட சொல்லுப்பா... இனிமேபட்டு நா எங்க வெறுக்கறது?''

கொஞ்சம் தயங்கி "இன்னா ரெண்டு மூட்டை வெல்லம். அழுகல் பழம் ஒரு புட்டுக்கூடை. அப்புறம் பாமா பாஸ் அரை மூட்டை'' என்று சொல்லிக் கொண்டு போனான்.

"அடப்பாவி பயிருக்கு வாங்கி போட்ற மாதிரி இருக்குதே'' என்றார் வாசு.

"பழனி, பாமா பாஸýனா என்ன?''

"பயிறுக்குப் போட்ற மருந்து. பாஸ்பேட்டு..''

"சொல்லாதப்பா... போலிஸ் பிரச்னைலாம் எப்பிடி?''

"காச்சும்போது வந்தா அம்பதோ நூறோ வாங்கினு பூடுவான்''

"புடிக்கமாட்டானா?''

"அதெப்படி புடிச்சுடுவான்? அவனை வெட்டி அடுப்புல போட்ற மாட்டாங்களா?''

பழனிச்சாமி சிரித்தார்.

"ஒருவாட்டி உள்ள தள்ளி இடி இடினு இடிச்சாத்தான்டா புத்திவரும்'' என்றார் வாசு பெருமிதமாகச் சிரித்துக் கொண்டே.

"துன்றதுக்கு எதனா இருக்குதா?'' என்று விசாரித்தார் பழனி.

"இருக்குது. உங்களுக்கு அதெல்லாம் வேணாம்'' என அவனே நல்லெண்ணம் கருதி தவிர்த்தான். தூரத்தில் கூர்ந்து பார்த்துவிட்டு "உங்க வாய் முகூர்த்தம் பலிச்சுடுச்சு. இன்னிக்கு இன்னா கிழம?'' என்றான் வாசுவை.

"புதன்கிழம''

"இன்னிக்கி எதுக்கு வரான் போல்சு?''

"போலீசா? எதா வர்றான்?'' என்றார் பழனி.

"வர்ற சனிக்கிழமதான் மாமூல். இன்னிக்கும் வர்றாம்பாரு...''

"சரி நாங்க வர்றோம்'' என்று இருவரும் நடந்தார்கள். ""எங்க போலீஸ் காணமே?'' என்றார் பழனி.

"நம்ம கண்ணுக்கெல்லாம் தெரியாது. இதே லைன்ல இருக்கவனுக்குத்தான் அதெல்லாம் தெரியும்''

ஆட்டோ ஓட்டும் போதுதான் எப்.சி. பண்ணிட்டியா, டாக்ஸ் கட்டிட்டியானு உயிரெடுப்பானுங்க. இங்கே கூடவா? என்று நினைத்துக் கொண்டே நடந்தார்.

"போலீஸ் மேலயே மரியாதை போய்ட்து'' என்றார் பழனி.

"இன்னா பண்றது ஏதோ இல்லாத கொறைதான் அவனுக்குத் தேவையான்து கெடச்சிட்டா ஏன் இப்டி பண்றான்? திருடங்கூட எதுக்காகத் திருட்றான்?'' என்று கடைசியில் ஒரு கேள்வியைக் கேட்டார், போலீûஸத் திருடனுக்கு ஒப்பிடும் பிரக்ஞை இல்லாமலேயே.

(தொடரும்)

ஞாயிறு, நவம்பர் 23, 2008

செவ்வாய்க்கிழமை

"நா அக்கா வீட்டு வரைக்கும் போயிட்டு வந்திர்றேன் பாமாயிலும் சர்க்கரையும் வாங்கி வெக்கிறியா?'' என்று கேட்டுவிட்டு}மகேஷ் அதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டது போல்} ஐம்பது ரூபாய் எண்ணிக் கொடுத்தாள் பங்கஜம்.

"எனக்கொரு வேலை இருக்குதுமா'' என்றாள்.

"ரேஷன் வாங்கறதுக்கு இன்னிக்கிதான் கடைசி நாளு. உன் வேலைய நாளைக்கி வெச்சிக்கோ... சீக்கிரமா போய் லைன்ல நில்லு. அப்புறம் ஆயிடும்'' என்று சொல்லிவிட்டு ஒயர் பையில், அக்கா வீட்டுக்குக் கொண்டு போக வேண்டிய சில சமாச்சாரங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.

"வேலை விஷயமா போறேம்மா... இன்னிக்கி போனாத்தான்...''

"ரேஷன் வாங்கிட்டுப் போய்வா...''

"ஏழு மணிக்கி அங்க இருக்கணும்''

"சரி... போய்ட்டு வந்து வாங்கு...''

"வர்றதுக்கு எவ்ளோ நேரமாகும்னு தெரில''

"லேட் ஆகிற மாதிரி இருந்தா. நாளைக்கி வர்றேங்கனு தன்மையா சொல்லிட்டு வா, நானும் இன்னிக்கி வர்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்... எல்லோரும் திருவேற்காடு கோயிலுக்குப் போறோம். எல்லாரும் காத்துக்குனு இருப்பாங்க''

"அம்மா''

"என்னடா''
"அங்க செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமைதான் ஆள் எடுப்பாங்க.. நா போகணும்''

"அப்பன்னா அடுத்த வாரம் போ. இல்லாட்டி வேற யாரையாவது ஏற்பாடு பண்ணு. டெய்லி சுத்தரியே கண்டவன் கூட... இந்த வேலைசெய்யச் சொல்வான் பார்க்கலாம்?'' என்று கோபம் ஆனார்கள்.

மகேஷ் பேண்டை எடுத்து ஆவேசமாய் நுழைந்தான். சட்டை போட்டான். "ட்ரங்க்' பெட்டி திறந்து "ப்ள்ஸ்டூ' படித்த அடையாளக் காகிதங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டான். ஒரு நோட்டில் வைத்துக் கொண்டு, "நா வரேன்'' என்றான்.
பங்கஜம் "வீட்டுக்கு ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லை'' என்று விளக்கிக் கொண்டிருந்ததைப் பாதி கேட்டான், மீதியை யூகித்துக் கொண்டே வெளியே போனான்.

அது வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் செய்யும் நிறுவனம். இருநூறு, முன்னூறு பேர் வேலைக்கு இருந்தார்கள். தொண்ணூறு சதவீதம் பேர் தற்காலிக வேலையாளர்கள். சி.எல். மூன்று மாதத்திற்கொருமுறை நிறுத்தி விடுவார்கள். பாதிப்பேர் துன்பம் தாளமுடியாமல் ராஜினாமா செய்வார்கள். சிறிது அஜாக்கிரதையாக இருந்தால் உயிரையே பாதிக்கும் வேலைகள். எப்படியும் வாரத்திற்கொரு முறை ஆளெடுத்தாக வேண்டும். குறைந்து போனவர்களைக் கூட்டுகிற நாள் செவ்வாய், எல்லாம் தெரிந்து கொண்டுதான் மகேஷ் வந்திருந்தான். மகேஷ் எண்ணிவிட்டான். இவனோடு சேர்த்து மொத்தம் பதினேழுவர். நிறைய பேர் லூங்கியில் இருந்தார்கள்.

பேசிக் கொண்டிருந்த விதமும் இவனுக்குத் தோதாய் இல்லை. யாருடனும் பேசவில்லை. அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

"மச்சி கெடைக்குமா?''

"பாக்கலாம். போனவாரம் பாஞ்சிபேர் எடுத்தாங்களாம்.''

"பாஞ்சி பேரா?... எத்தினி பேர் வந்தாங்க?''

"இன்னா ஒரு முப்பது பேர் இருக்கும்... இன்னிக்கிப் பரவால்லயே... அன்னைக்கி நீ வந்திருந்தே...எள்சிட்டிருப்பே''

"ஏன்?''

"குமார கேட்டுப்பாரு, ஒரு மணி நேரம். செமையா எள்சிட்டான்''
மகேஷுக்கு நிம்மதி. ஐந்தே பேரை எடுத்தாலும் நமக்கு வேலை உண்டு என்று தீர்மானமானான்.
அங்கு வந்திருந்தவர்களில் "டீசென்ட்' விஷயத்தில் முதல் மார்க் போட்டுக் கொண்டான். நோட் புக்கின் பக்கங்களைக் கட்டை விரலால் "சார் சார்' என்று நீவினான். ப்ள்ஸ் டூ படித்த சான்றிதழின் நகலை நம்பிக்கையோடு பார்த்தான்.
மோகன்தாஸ் சாரோட முயற்சியால் தொகுதியின் மாணவர் அணி அமைப்பாளரைப் பிடித்து, மாவட்ட அணிச் செயலாளர் வரைக்கும் போனான் மகேஷ்.

"இப்படி மொட்டையா வந்து வேலை வேணும்னு கேட்டா எப்பிடி?''

"....''

"எம்ப்ளாய்மெண்ட்ல பதிவு பண்ணியிருக்கியா?''

"எண்பத்ரெண்ல பண்ணன் சார்''

"அங்க எவனையாவது பிடிச்சி "இண்டவியூ கார்ட்' வாங்கினு வா... அப்புறம் பாக்லாம்'' என்று சொல்லிவிட்டான். மறுபடி கட்சி பிரமுகர் தயவில் "எம்ப்ளாய்மெண்டில் ஆளைப்பிடித்து விசாரித்ததில், முன்னூறு ரூபாய்க்குக் குறைந்து பண்ணுவதில்லை என்று பிடியாய் இருந்தான்.

இதற்கு மேல் மோகன்தாஸ் என்ன செய்வார்?

முன்னூறு ரூபாய் இருந்தால், எம்ப்ளாய்மெண்டில் இருந்து கார்ட் வரவழைக்கலாம். இப்போதிருக்கும் அரசியல் பிரமுகர்களின் அறிமுகத்தால் வேலைக்குச் சேர்ந்துவிடலாம். மகேஷை நம்பி முன்னூறு ரூபாய் தருகிற அளவுக்கு வீடு இல்லை. இந்த நேரத்தில்தான் கோபி சொன்னான். இப்படி ஒரு கேஷுவல் லேபர் ஐடியாவை.

வாட்ச்மேன் கேட்டைத் திறந்து எல்லோரையும் உள்ளே வந்து நிற்கச் சொன்னான். நிற்கச் சொன்ன இடத்தில் மண்ணெல்லாம் கறுப்பாய் } இரும்புச் சத்து நிறைந்து இருந்தது. கறுப்பு நிறத்தில் காக்கி உடையில் இருந்த ஒருவன் கடந்து போனான்.
மேனேஜர் பளீரென்ற வெள்ளை சஃபாரியில் வந்தார்.

"எத்தனை பேர்?''

செக்யூரிட்டி, பதினேழு பேர் சார்'' என்றான்.

""ம்...பன்னென்டு பேர் போதும்... அஞ்சுபேர் அதிகம் இல்ல... '' என்று கணக்குப் போட்டார்.

"நீ இப்பிடி வா... ம் நீ...நீ... நீயும் வா....'' என்று ஒவ்வொருவராய் அழைத்தார். தனியே வரச் சொன்னவர்களை வீட்டிற்கு அனுப்பவா, வேலைக்குச் சேர்க்கவா என்பது புரியவில்லை.

மகேஷ் சற்றே முன்னே வந்து "சார்'' என்றான். மேனேஜர் கூர்ந்தார்.
பவ்வியமாய் அருகில் போய், நோட் புக்கைப் பிரித்து, "சர்டிபிகேட்' டை நீட்டினான். மேனேஜர் வாங்கி கவனமாகப் பார்த்தார்.

அனைவரும் மகேஷையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மகேஷுக்குச் சற்றே பூரிப்பாய் இருந்தது. எல்லோரையும் அலட்சியமாய் விரலால் வரச் சொல்லிக் கொண்டிருந்த மேனேஜருக்குப் பக்கத்தில்தான் ஒரு கெüரவமான நிலையில் நின்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான்.

"மேனேஜர் சான்றிதழைக் திருப்பிக் கொடுத்தார்.''

"இந்த மாதரி வேற யாராவது சர்டிபிகேட்லாம் கொண்டாந்திருக்கீங்களா?... அப்படி இருந்தா அவங்கள்லாம் கையைத் தூக்குங்க...'' என்றார்.

யாரும் தூக்கவில்லை.

மெதுவாய் மகேஷ் பக்கம் திரும்பி, "சரிப்பா... உருப்படியா வேற வேலை ஏதாவது பார் போ... '' என்றார்.

"சார்...?''

"இந்த வேலைக்குப் படிப்பு அவசியம் கெடையாது அதுக்குச் சொல்றேன்...''

"வேல வேலக்கி ட்ரை பண்றேன் சார்... அதுக்கு தான்...''
மேனேஜர் கவனிக்கவில்லை. ஒரு நான்கு பேரைத் தனியே அழைத்து வெளியேற்றினார்.

"இத பாருங்க... இங்கயே சேர்ந்து பர்மனன்ட் ஆய்ட்லாம்னுலாம் கனவு காணாதீங்க... மூணு மாசத்துக்கப்புறம் வீட்டுக்கு அனுப்பிச்சிருவோம். அப்புறம், எல்லாச் சிப்டும் வந்தாகணும். இல்லாட்டி எடுத்துருவோம். முதல் வாரம் சம்பளம் தரமாட்டம்...
கடைசில தான் தருவோம். ரெண்டாவது வாரத்ல இருந்து ஆடாமாடிக்கா சம்பளம் வரும். ஒரு நாளைக்கி பன்னெண்டு ரூபா... ஓ.டி.செய்தா பத்து ரூபா''

மகேஷ் மேனேஜருக்குப் பின்னால் நின்றிருந்தான்.

"நாலு, நாலு பேரா நில்லுங்க'' என்றார் எதிரில் இருந்த பன்னிருவரை.
நின்றார்கள்.

"இவங்க "ஏ' சிப்ட். இது "பி" இது "சி'..'' என்று செக்யூரிட்டியைப் பார்த்துச் சொன்னார். "பேரெல்லாம் எழுதிக்கய்யா'' என்றார்.
மேனேஜர் திரும்பியதும், ""சார்'' என்றான் மகேஷ்.

"நீ இன்னும் போலையா?'' என்றார்.

"வேற ஒரு வேலைக்கு ட்ரை பண்றான் சார்... அதனாலதான்...''

"வெரிகுட்...'' என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.
மகேஷ் அவர் போவதையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் புரியாமல் நின்றிருந்தான்.
வாட்ச்மேன் காத்திருந்து பார்த்துவிட்டு "வாய்யா வெளிய'' என்றான் கேட்டைத் திருந்து வைத்தபடி.

(தொடரும்)

சனி, நவம்பர் 22, 2008

திங்கட்கிழமை

`உங்கள் விருப்ப'த்தில் இரண்டாவது பாட்டும் போட்டு விட்ட நேரம். 8.40 -க்கு லேடீஸ்- ஸ்பெஷல் உண்டு. அதைப் பிடித்தாக வேண்டும். அது அவ்வளவு சொகுசானது என்றல்ல. இரண்டு வருடமாய் இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டாகிவிட்டது. கீதாவுக்கு.
அடுத்து வருகிற பொது பஸ்களில் ஏறினால், ஆடவர்களின் அழுத்தமும், அடர்த்தியும் அதிகமாக இருக்கும். முதுகில் வந்து ஒருவன் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதாலோ, அவசர, "பிரேக்'கின் போது, அளவுக்கதிகமாய் ஒருவன் மேலே சாய்வதாலோ, காலைச் சீண்டுவதாலோ, ஏற்படுகின்ற எரிச்சலை, கோபமாய் ஒரு முறை திரும்பிப் பார்ப்பதன் மூலம் சரி செய்ய முடியும்.
இருந்தாலும் லேடீஸ்}ஸ்பெஷலை விட்டுவிட்டதாகத் தெரிந்தாலே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது மாதிரி கீதாவுக்கு வேர்க்க ஆரம்பித்துவிடும். கால்மணி, அரை மணி லேட்டாகப் போனாலும் கோபிக்காத "ப்ரைவேட்' நிறுவனம்தான். சைக்காலஜிக்காக அன்றைய பொழுது அவஸ்தையானதாய் மனம் முடிவு கட்டிவிடும்.
கல்யாணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அப்பா இறந்துவிட, அவர் வேலை செய்த, "புரஜெக்டர் ஆபரேட்டர்' வேலைக்காக தியேட்டர் ஓனர் மூவாயிரம் கொடுத்தான். இவ்வளவு பெரிய தொகையைப் பார்க்க அப்பாவுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

கம்மலை மீட்டது போக மீதியிருந்த பணத்தில் இரண்டு மாத வாழ்க்கையை ஓட்ட முடிந்தது.
உடன் படித்த தோழியின் மூலம் ஏகப்பட்ட அலைச்சலுக்குப் பின் கிடைத்த " ஸ்டோர் கீப்பர்' வேலையால் அப்பா ஸ்தானத்தை அடைந்தாள். "பொம்பளை' அப்பா.
கீதாவோடு வேலை செய்த பெண்களில் ஒருத்தி கணவன் ஸ்தானத்தில் இருந்தாள். கணவனுக்கு சீட்டாடிக் களைத்துப் போனால், குடித்துவிட்டு உதைப்பது என்பது போன்ற வேலைகள் இருந்தன.
நல்லவேளையாய் லேடீஸ் ஸ்பெஷலைப் பிடித்து, டிக்கெட் எடுக்கும் நேரத்திற்குள் சித்தி வினாயகர் கோவிலை பஸ் கடக்கவே, "ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்'' என்று சொல்லிக்கொண்டே கன்னத்திலும் போட்டுக் கொண்டாள்.

திங்கட்கிழமையின் அவசரம் தவிர்க்க முடியாதது. ஒரு நாள் விடுமுறையை அனுபவித்ததாலோ என்னவோ திங்கட்கிழமை காலையில் - அது மதியம் வரை கூட நீடிக்காது - ஒருவித துரிதம் நிலவும். எல்லோரும் இது எங்கே? அது எங்கே? என்று குதிப்பார்கள். டைப் அடிப்பார்கள். போட்டுப் பார்த்துவிட்டு தப்பு கண்டுபிடிப்பார்கள்.

கீதாவுக்கு அப்படியில்லை மந்தமான "ஸ்டோர்கீப்பர்' வேலை. எவ்வளவு பேப்பர்கள், எத்தனை "இங்க் பாட்டில்கள், எத்தனை பென்சில், கார்ப்ன் பேப்பர், ஸ்டேப்ளர் பின், டைப்ரைட்டிங் ரிப்பன் கொடுக்கப்பட்டது என்பதைக் கணக்கு வைக்க வேண்டும். எது எது தீர்ந்தது போய்விட்டதென்று தெரிவிக்க வேண்டும். வந்தவற்றைக் கணக்குப் பார்க்க வேண்டும்... வாரப் பத்திரிகை படித்துக் கொண்டே செய்கிற வேலைகள்.

இண்டர்காமை அழுத்தி சுஜாவை அணுகினாள். "நாலு நாளாச்சு இன்னும் இந்த வாரம் குமுதம் எனக்கு வரலை'' என்று தெரிவித்தாள் கீதா.

"வந்ததும் வராததும் என்ன குமுதம்? மானேஜர் பொண்டாட்டிக்கிட்ட சண்டை போல இருக்குது. கத்துது கிழம்... ஒரு மணி நேரம் கழிச்சு வரேன்'' வைத்துவிட்டாள்.

பதினொன்றே காலுக்கு வந்தாள் சுஜா.

"கவர்மெண்ட் வேலையா பாத்துக்கிட்டு போயிடணும்டி'' என்றாள்.

"என்னாச்சு இன்னைக்கு?''

"கொஞ்சம்கூட மரியாதையே இல்லாம பேசினார்.''

"யாரு''

"மானேஜர்''

"என்னவாம்?''

"அதான் சொன்னனே... பொண்டாட்டி சண்டதான்"'

"இந்த வயசுல என்னவா இருக்கும்?'' என்று சிரித்தாள் கீதா.

"திட்டினாரா?''

"எதுக்குன்னு இல்லாம எல்லாத்துக்கும் கத்தல்.... கேசுவலா நடக்கற விஷயத்தையெல்லாம் பெரிசு பண்ணி, ஆபீஸ் நேரத்தில எதுக்கு சிரிக்கிறீங்கன்னு கேக்குது... பியூன் சின்னசாமி பீடி பிடிச்சதுக்கு போட்டு கன்னத்துல அறைஞ்சிருக்கு....''

"அதுக்கு என்ன ப்ராப்ளமோ...வுடு''
சுஜா, எதிரில் இருந்த வார இதழை லேசாய் புரட்டி, ""நதியும் கரையும் படிச்சிட்டியா?'' என்று தொடர்கதைப் பற்றி விசாரித்தாள்.

"இன்னும் இல்ல''

"ராஸ்கல்... கடைசில என்ன பண்ணாந் தெரியுமா?... கல்யாணத்துக்கு அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு வரேன்னு ஊருக்குப் போனான் இல்ல..?''

"ஆமா...''

"அவங்க அம்மாவுக்குப் பயந்து அத்தை பொண்ணையே கட்டிக்றேன்னு சொல்லிவிட்டான்...''

"அடப் பாவமே...''

"அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு காதலிச்சிருக்கணும்... நைன்டி நைன் பர்சண்ட் இப்படித்தான் இருக்கானுங்க. காதல்னாவே பயமா இருக்கு... நீ யாரையாவது "லவ்' பண்றியா?'' என்றாள் அறைந்தாற்போல்.

"ச்சேச்சே...''

"அதானே காதலிக்கறதுக்கு நமக்கு ஏது நேரம்?... உன் தம்பிய மெக்கானிக் ஷெட்ல விட்டயே எப்படி இருக்கான்?...''

"சரியா போமாட்றான்... அடிக்கடி லீவ். ரெண்டு ரூபா கெடைச்சா சினிமா. ரஜினி ரசிகர் மன்றத்துக்கு போஸ்டர் ஒட்டறது. எப்படி ஆவான்னு தெரிலை''

"எங்க அண்ணன் சம்பாதிக்கிற பணம், அவன் "சைட்' அடிக்கறதுக்கே பத்தல. முந்நூர் ரூபால ஷு வாங்கி இருக்கான். வாடகை எப்படிக் குடுக்கறதுனு நா தவிக்றேன்...''

"ச்சூ... எம்ப்ளாய்மென்ட்ல ரிஜிஸ்டர் பண்ணிட்டியா?''

"எனக்கு வேலைக்குப் போற ஐடியாவே இல்ல... எங்கப்பா "எக்ஸ்பயர்ட்' ஆனதும்தான் பண்ணேன்.''

"ஆள் தெரிஞ்சா பதிவு பண்ண மூணா நாள்கூட "ஆர்டர் வருது. நமக்குப் பத்து வருஷமானாலும் வராது'' என்று எழுந்தாள் சுஜா,

"கொஞ்ச நேரம் இருடி... ரொம்ப வெறுப்பா இருக்கு...''

"வேணாம்பா, கிழவனுக்கு நா பதில் சொல்ல முடியாது. "லஞ்ச்'ல பார்ப்போம்...'' மறைந்து போனாள் சுஜா.
கீதா இண்டர்காமில் ஆபரேட்டரிடம் ஒரு நம்பரைச் சொல்லிக் காத்திருந்தாள்.

"ஹலோ...''

"ஹலோ... எம் எல் டி லிமிட்டெட்?''

"யெஸ்''

"குட் யூ கால் மிஸ்டர் பாஸ்கர்?''

"பிளீஸ் லைன்ல இருங்க'' இருந்தாள்.

"ஹலோ பாஸ்கர் இயர்''

"நான் கீதா''

"ஹொ டூ யூ டூ?''

"ஒரு வாரமாச்சு பாத்து'' என்றாள்.

"மார்க்கெட்டிங்ல போட்டுட்டாங்க... எப்ப எந்த ஊருக்குப் போக வேண்டியிருக்கும், தெரிலை... "இன்பார்ம்' பண்றதுக்குக் கூட டயம் இல்ல... சாரி''

"உங்கம்மாவுக்கு நம்ம விஷயம் சொல்லிட்டிங்களா?''

"என்ன திடீர்னு எங்கம்மா...? அவுங்க உயிரோட இல்ல''

"ஐம் சாரி... ஏன் முதல்லயே சொல்லல?''

"பழய விஷயம். நானே எங்கம்மாவ பாத்ததில்ல''

"அப்பா?''

"அரோக்கோணத்தல இருக்கார்'' கீதா ஏதோ கேட்க நினைத்தாள்.

"சரி. ஈவனிங் பாப்பமா?'' என்றாள்

"ஓ.கே''

பாஸ்கர் ரிஸீவரை வைக்கும் சத்தம் கேட்டதும், ரிஸீவரை மெல்ல வைத்தாள் கீதா.

(தொடரும்)

வெள்ளி, நவம்பர் 21, 2008

மொத்தத்தில் சுமாரான வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சுகமும், துக்கமும் மாதிரி குழாயில் தண்ணீர் வராத நாள், தண்ணீர் வருகிற நாள் ஆகிவிட்டது. தண்ணீர் வராத நாள்தான் சுகம். நிம்மதியாய்த் தூங்க முடிகிற நாள். அவசரஅவசரமாய் எட்டு மணிக்கெல்லாம் தூங்க முயன்று, அறைகுறையாய் நடு இரவில் விழித்து, ஏழு குடித்தனங்களுக்குள் போட்டியிட்டுப் பம்ப்பைப் பிடிக்க வேண்டிய அவசியமற்ற நாள்.

அதன்படி இன்று துக்கநாள்.

அதிகம் தூங்கிவிட்டோமோ எனப் பயந்து எழுந்து பக்கத்தில் படுத்திருந்தவளை உசுப்பிவிட்டு, விளக்கைப் போட்டதில், சமீபத்தில் பனிரெண்டு மணியாகியிருந்தது. கடிகாரத்தின் பக்கத்திலே காலண்டர். பனிரெண்டுதான் ஆகிவிட்டதே என நினைத்து, கையோடு கையாய் நேற்றைய நாளை "விசுக்' கென அலட்சியமாய் கிழித்...அட! சிவப்பு நிறத்தில் ஞாயிற்றுக்கிழமை மாயத்துளிராய் மகிழ்ச்சி. முதலிலேயே தெரியாமல் போனதே என்று இருந்தாலும், இப்படி எதிர்பாராத அதிர்ச்சியாய் அமைந்து போனதால் மகிழ்ச்சியோடு மகிழ்ச்சி. முதலிலேயே தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருப்பான் என்று தெரியவில்லை.

"பம்ப்'பை அடிக்கிற சத்தம் இன்னமும் கேட்கவில்லை. இன்று நாம்தான் முதலில் அடிக்கப் போகிறோம் என்ற பேராசையோடு தயாரானான் கணேசன்.

மாலதி உசுப்பிவிட்டும் எழுந்திருக்காமல் இருந்தாள்.

"மாலு...''

"...ம்?'' என்றாள்.

"சீக்கிரம்''

"போய் "லைன்' போடுங்க வரேன்'' கனவுபோல் பேசிக்கொண்டிருந்தாள்.

"லைன்' லாம் தேவை இல்ல... இன்னைக்கி நாமதான் "பர்ஸ்ட்' ... இன்னும் யாரும் எழுந்துக்கல''

"டயம் இன்ன இப்ப?...'' என்று கடிகாரத்தின் பக்கம் தலையைத் திருப்பி கண்களைத் திறந்தாள்.

"பன்னெண்டுதான் ஆச்சி... அப்புறம் அட்சிக்கிலாம் படுங்க'' என்று போர்வையை இழுத்துப் போர்த்தியவள் போர்வையை அவசரமாய் தூர வீசினாள். போர்வையில் ஈரம்.

குழந்தை சில்லென்ற பரப்பில் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து அவனை வேறொரு இடத்தில் சுடச்சுடப் படுக்க வைத்துவிட்டு, "மூத்திரம் பேஞ்சிட்டு இருக்கானே... தூக்கி வேற இடத்தில் படுக்க வெச்சா என்ன?'' என்று முறைத்தான்.

"நா கவனிக்கலையே''

"கவனிக்க மாட்டீங்க.... அப்புறம் சளி புடிச்சா அவஸ்தைப் பட்றது யாரு...?''

"சரி...சரி ஜனங்க எழுந்துட்டா ரிஸ்க்''
எழுந்து புடவையை முழுவதுமாய் இடுப்பிலிருந்து எடுத்து மறுபடி கொசுவ ஆரம்பித்தாள். பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனை, "நீங்க போய் அடிங்க, வரேன்'' என்றாள்.
இரண்டு நாளைக்குமாகச் சேர்த்து இருபத்தைந்து குடங்களாவது அடிக்க வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை, அமாவாசை என்று விசேஷங்கள் வந்துவிட்டால், இரவோடு இரவாய் வீட்டைக் கழுவி, அண்டா, "பைலர்' என்று எடுத்துப் போட்டு துலக்க அதிகமாய் ஐந்து குடம்.
மூன்று குடம் அடிப்பதற்குள் மோகன்தாஸýம் அதற்கடுத்து லட்சுமிபதியும் வந்து "லைன்' போட்டுவிட்டு, ""யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்ம, நிலம மாறப்போறதில்ல'' என்று நடு இரவில் அரசியல் பேசினார்கள்.

"எங்க சார்... இருவரும் எம்ஜார் ஸ்டைல்ல அரசி குடுக்றேன், முட்டை குடுக்றேன்னு ஆரம்பிச்சிட்டாரே?'' என்றார் லட்சுமிபதி.

"கிருஷ்ணா ப்ராஜக்ட் விஷயமா, என்டியார் கிட்ட பேசியிருக்காரே... என்னமோ கிருஷ்ணா' "வாட்டர் வந்துட்டா பிரச்னை வுட்டுது...''

மோகன்தாஸ் ஆந்திரா பக்கமாகப் பிரச்னையைத் திருப்பினார்.

"தண்ணி பூண்டிக்கி வந்து, ரெட்ஹில்ஸ்ல லிங்க் பண்ணுவாங்க இல்ல சார்?...'' என்று கணேசன் தெரிந்த விஷயத்தையே சும்மானாலும் கேட்டு வைத்தான்.

"யெஸ்...யெஸ்... பூண்டில இருந்து "ரெட்ஹில்'ஸýக்கு ஆல்ரெடி கனெக்ஷன் இருக்குது... பட்' மோகன்தாஸ் அரசியல் விஷயங்கள் பேசும்போது இப்படியாகத் துண்டு, துண்டாய் ஆங்கிலம் பேசுவார். அப்போதுதான் தேர்ந்த அரசியல் நிபுணர் மாதிரி இருக்கும் என்று அவர் முடிவுடன் இருந்தார்.

கீதாவின் அம்மா ஒரு குடத்தைக் கொண்டு வந்து "லைன்ட போட்டுவிட்டுப் படுக்கப் போனார்.
கணேசனுக்கு மூச்சு முட்டி, வேர்த்துப் போய் மயக்கம் வருகிற கட்டத்தில் மாலதி, ""இந்தக் குடத்தோடு அவ்ளதான்'' என்றாள்.

"நீங்க உஷாரா எழுந்து சீக்கிரமா முடிச்சிட்டிங்க...'' என்று மோகன்தாஸ் அன்பாகப் பொறாமைப் பட்டார்.

அடுத்து மோகன்தாஸ் தம்பதியர் தண்ணீர் பணியில் ஈடுபட, மகேஷ் அம்மா குடவரிசையில் குடத்தைக் கொண்டு வந்து வைத்தாள்.

கணேசனும், மாலதியும் முழுவதுமாக விழித்துவிட்டிருந்தாலும், மறுபடி தூங்குகிற மாயையை ஏற்படுத்திக் கொண்டு, பம்பின் தாளலயத்தில் தூங்க முயன்றார்கள்.

வாசல் எப்போதும் காலையில் பரபரப்பாக இருக்கும். வலது புறம் வரிசையாய் மூன்று குடித்தனங்களும் இடது புறம் வரிசையாய் நான்கு குடித்தனங்களும் போக, இடையில் இருந்த நீளமான வெளி, வாசல் என்றழைக்கப்பட்டது. அதன் கடைசியில் வலது, இடது புற வீடுகளின் இடைப் பகுதியில் பாத்ரூமும் அதன் பக்கத்தில் துணி வைக்க, பாத்திரம் துலக்க என்று கொஞ்சம் இருக்கும்.

வாசலில் நெரிசலாய் இருந்தது.

யாராவது ஒருவர் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருப்பார்கள். குளித்துவிட்டுப் போகிறவர்கள், குளிக்கப் போகிறவர்கள், துணி காயப் போடுகிறவர்கள், பாத்திரம் கழுவுகிறவர்கள், முன் பக்கம் மீட்டர் "பாக்ஸ்' பக்கத்தில் சைக்கிளை நிறுத்துகிற இடத்தில் - கொஞ்சம் மண்ணெண்ணை எடுத்துப் போய் வைத்துக் கொண்டு சைக்கிளைத் துடைக்கிறவர்கள், அல்லது அதன் எதிரே கக்கூஸýக்கு "பக்கெட்'டை எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்கள் இப்படியாக இருக்கும் காலைப் பொழுது. சகலரும் எத்தனை மணிக்குத் தூங்க ஆரம்பித்திருந்தாலும் அல்லது தூங்கவில்லை என்றாலும் காலை என்பது இப்படித்தான் இருக்கும்.
பெண்களில் யாருக்கேனும் ஜவ்வரிசி வத்தல், முறுக்கு வத்தல் போடுகிற ஆசை ஏற்பட்டு விட்டால், அவ்வாசை உடனடியாய் அனைவருக்கும் பரவி, அடுத்தடுத்த நாட்களில் வாசலெல்லாம் வேட்டியாய், வேட்டியெல்லாம் வத்தலாய் பிழியப்படும். ஒரு வாரம், பத்து நாள் ஒரு கூத்துப் போல முடியும்.

வெய்யில் காலம் வந்து இவ்வளவு நாளாகியும் யாரும் அது பற்றி யோசிக்காததை ஒரு முறை லட்சுமிபதியும், கணேசனும் ரகசியமாய்ப் பேசிக் கொண்டார்கள்.

"என்னங்க ராஜேஷ் அம்மா... முடிஞ்சிட்ச்சா?'' என்று மாலதியைக் கேட்டுவிட்டு பக்கெட்டில் புடவையை அலசுகிறேன் பேர்வழி என்று மூர்க்கமாய், முக்கிமுக்கி எடுத்தாள் வசந்தியம்மா. - அதாவது வசந்தியோட அம்மா.

"ஒரு வேலையும் முடியலைங்க...'' என்று பச்சையாய் புளுகிவிட்டு, ""மார்க்கெட் போகும்போது கொஞ்சம் கூப்புடுங்க...'' என்றாள் மாலதி.

வசந்தி அம்மா ஒருவித சீரியலோடு "டி.வி.ல. திரைமலர் போயிடுமே...'' என்றாள்.

"திரைமலர் முடிஞ்சதும் போலாங்க''

"இன்னிக்கின்னா படம்?''

"சாயங்காலமா?'' என்று யோசித்து, "நல்லதங்காள்'' என்றாள் மாலதி.

"அட, இல்லங்க வேற இன்னமோ சொன்னாங்க... பாடும் பறவைகளோ, பறவைகள் பல விதமோ... என்னமோ ஒண்ணு. பறவைனு வரும்.''

"அதெல்லாம் புது படம்... இப்ப போடமாட்டாங்க'' என்று மாலதி உறுதியாய் மறுத்தாள்.
வசந்தியம்மா கொஞ்சம் சத்தமாய் "ஏங்க... முரளியம்மா...'' என்றழைக்க வீட்டு சொந்தக்காரியான அவள் தலையை மட்டும் வெளியே நீட்டி, "என்னதுங்க'' என்று கேட்டாள்.

"டி.வி.ல இன்னைக்கு இன்னா படம்?''

"மத்யானப்படமா? சாயங்காலப் படமா?''

"இன்னிக்கு ரெண்டு படமா?'' என்று வாசலே வியக்க, வேலைக்குப் போகிறவள் என்ற காரணத்தால் அவ்வளவாக வாசலில் வந்து அரட்டை அடிக்காத கீதா கூட உள்ளே இருந்து வெளிப்பட்டாள்.

"மத்யானம் சில நேரங்களில் சில மனிதர்கள், சாயங்காலம் ஏதோ சிவாஜி படம்...'' முரளியம்மாவின் வீட்டில்தான் டி.வி. இருந்ததால் எல்லோரும் தேவ வாக்காய் நம்பினார்கள்.

கீதா, லட்சுமிபதியைப் பார்த்து, "சில நேரங்களில் சில மனிதர்கள்'' ஜெயகாந்தன் எழுதின ஸ்டோரிதானே சார்?'' என்று வாசல் ஜனங்களிலிருந்து வித்தியாசமாய் டி.வி. மீது ஆர்வம் கொண்டாள்.

அவ்வளவெல்லாம் தெரிந்திராத லட்சுமிபதி, "காந்த் நடிச்சது...'' என்று சொல்லிவிட்டு பாத்ரூமில் புகுந்தார்.

டீ.வி. விஷயங்களால் உற்சாகம் புரண்டதால் எல்லோரும் ஜாலியான மன நிலையில் இருக்க, திரைமலர் வேறு நெருங்க, "ஒரு வேலையும் முடியலை'' என்று சலித்துக் கொண்டாள் வசந்தியம்மா.

மாலதி, "வசந்தி என்ன பண்ணுது?'' என்றாள்.

"எங்கன்னே தெரியலை... ஃப்ரண்ட் வூட்டுக்குப் போயிட்டு வரேன்னு போனாள். அவளை ஆறாவதோடு நிறுத்தில்லாம்னு பாக்றேன்....''

"அட படிக்கட்டும்... பத்தாவது வரைக்கும் படிக்க வைங்க'' என்று எல்லை வைத்தாள் மாலதி.

"ஒரு வேலைக்கும் பிரயோஜனம் இல்லீங்க?''

"படிக்கறதுக்குப் போயிருப்பா...''

"வேலைனாதான் படிப்பு ஞாபகம் வரும்... டி.வி. வைக்கட்டும்... எங்க இருந்தாலும் வராளா; இல்லையா? பாருங்களேன்''

"திரைமலர் எட்டுக்குத்தான...? எட்டாயிருக்குமே'' என்றபடி மாலதி உள்ளே போய் கடிகாரத்தைப் பார்த்து விட்டு வர, அதற்குள் முரளியம்மா வாசலுக்கு வந்து, "திரைமலர் போட்டாச்சு... ரஜினிது'' என்று சொல்லி விட்டு ஓட்டமாய் உள்ளே போனாள்.

வாசல் ஆவேசமாய் முரளி வீட்டில் நுழைந்தது.

"டி.வி.னா ஏன் இப்பிடி ஓட்றீங்க?'' என்று கேட்டபடி, டவலை முதுகின் மேல் விரித்துக் கொண்டு டி.வி. பார்க்கப் போனான் கணேசன்.


(தொடரும்)



கணையாழி- 1989
தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வானது

வியாழன், நவம்பர் 20, 2008

பிரபஞ்சக் கைகுட்டை

"வான் விஞ்ஞானத்தில் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக ஆய்வு செய்து வரும் குடும்பத்தின் பிரதிநிதி என்பதற்காகவே உங்கள் பெயரை நோபல் பரிசுக்குழுவுக்குச் சிபாரிசு செய்யலாம்'' என்று விக்டர் பால் சொன்னான்.



கிண்டல் செய்கிறானா? புகழ்ந்தானா? என்று சுதாரிப்பதற்குள் சுற்றியிருந்தவர்கள் பெருமிதமாகப் புகழ்ந்து கையில் இருந்த கோப்பைகளை உயர்த்தி "ரகுநாத்தின் ஆய்வு வெற்றி பெற'' என்று சியர்ஸ் சொல்லிக் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
விக்டர் பால் மரபியல் விஞ்ஞானத்தில் செயற்கை டி.என்.ஏ.வை இயற்கை டி.என்.ஏ.விடமிருந்து வேறுபடுத்தும் கூறுகளில் முக்கியமான ஆய்வுகள் செய்தவன். அதைக் கொஞ்சம் தீவிரப்படுத்தினால் ஒருவேளை இயற்கையாகவே செயற்கை மனிதனைத் தயாரிக்க முடியும். கொஞ்சம் மிச்சமிருக்கும் அந்த ஆராச்சியின் எல்லையை எட்டப் போகும் திமிர் விக்டரிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் பரவலாக அபிப்ராயப்பட்டார்கள்.


ரகுநாத்தின் ஆராய்ச்சி என்ன என்பதற்கு முன்னால் ரகுநாத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. அவருக்கு 54 வயது. திருமணம் பற்றியெல்லாம் தம் வாழ்வின் பெரும்பகுதி வரை கவனமற்று இருந்தார். நாற்பத்தி சொச்சம் வயதில் பிடிவாதமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அநியாயத்துக்கு ஒல்லி. விஞ்ஞானக் கூட்டங்களில் ஐன்ஸ்டைன் மாதிரி யாராவது வேகமாக அவரை நோக்கிப் புகைவிட்டால் ஒடிந்து போகச் சாத்தியம் உண்டு. ஆனால் ஒல்லிக்கும் அவரது வைராக்கியத்துக்கும் முடிச்சுப் போட முடியாது. சாப்பிடுகிற இரண்டு துண்டு ரொட்டி அந்த வைராக்கியத்துக்கே செலவாகிவிடும்.

தான் பணிபுரியும் இந்திய வானியல் துறையில் அவர் செய்து கொண்டிருக்கும் ஆய்வு, அவர் தனிப்பட்ட முறையில் செய்து கொண்டிருக்கும் ஆய்வின் துணையம்சம்தான். ஆராய்ச்சியின் பெரும் பகுதியை மிகவும் ரகசியமாக வைத்திருப்பதற்குக் காரணமே அது பூரணமான பின்பே அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே.

ரகுநாத்தின் தாத்தா காலத்தில் இருந்தே வான் விஞ்ஞானத்தைத்தான் குறிக்கோள் போல பயின்றார்கள்.

ரகுநாத் ஐந்து வயதாக இருக்கும்போது நட்சத்திரங்களைக் காட்டி நிறைய தகவல்களைச் சொல்லியிருக்கிறார். நிலாவில் ஆயா வடை சுடும் கதையைக் கேட்க வேண்டிய வயதில் "உனக்கு ஆண்ட்ரமீடா பத்தி சொல்றேன் கேளுடா'' என பேரனுக்குப் புரியவில்லை என்றாலும் ஆவேசமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார் ரகுநாத்தின் தாத்தா.

ரகுநாத்தின் அப்பா கிருஷ்ணகுமார் ஆன்ட்டிகிராவிட்டியில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் செய்து ஆனால் சாதனை செய்ய முடியாமல் போனவர். வேற்றுக் கிரகம் அவருடைய லட்சியம். பிக் பாங் தியரியில் நிறையவாதங்கள் செய்து விஞ்ஞானக் கழகங்களிடம் அதிருப்தி சம்பாதித்தவர்.

"படித்து டாக்டராகப் போகிறாயா? வக்கீல் ஆகப் போகிறாயா?'' என்று குழந்தைகளிடம் கேட்கப்படுகிற சம்பிரதாயமான கேள்விக்கு, "அஸ்ட்ரோ பிஸிகிஸ்ட்'' என்று பதில் சொன்ன போது ரகுநாத்துக்கு வயது எட்டு.

ரகுநாத்தின் கனவுகள் ரகசியமானவே. ஆன்டிகிராவிட்டிக்கான கண்டுபிடிப்புகளோடு, பிளாக் ஹோல் சித்தாந்த்தையும் இணைத்துவிட்டால் மனிதன் ஒளி வேகத்தில் பிரயாணிக்க முடியும் எத்தனை ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தையும் சுலபத்தில் அடைந்துவிட முடியும் என்பது அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படை.

பதினெட்டாம் நூற்றாண்டின் பெர்பெச்சுவல் மோட்டார்ஸ் சித்தாந்தத்தோடு இவருடைய ஆய்வை ஒப்பிட்டு சில அறிவியல் சஞ்சிகைகள் கேலி செய்தபோதும் தன் ஆராய்ச்சியின் சில சிக்கலான கட்டங்களை அவர் தாண்டிவிட்டது பலருக்குத் தெரியாது.


உடல் திராணிக்கான இரண்டு மாத்திரைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டு ரகுநாத்தின் மனைவி "ராஜிக்கு ரெண்டு நாளாக உடம்பு சரியில்லை. ராமநாதன்கிட்ட கூட்டிட்டுப் போனால், உங்கள் பையன் கெமிக்கல்ஸ்லதான் உயிர் வாழ்றான். கொஞ்சம்கூட சத்தே இல்லை' என்கிறார்'' என வருத்தப்பட்டாள்.

"சிந்தடிக்கை ஆர்கனிக்கா மாத்தறதா சொல்றானே அவனைத்தான் கேட்கணும்'' என்று விக்டர் பாலைச் சமயம் பார்த்துப் பழி தீர்த்துவிட்டது மாதிரி பதில் சொன்னார் ரகுநாத்.

குழப்பமாக அங்கிருந்து புறப்பட்டு, "அறிவியல்லயே பேசறீங்க'' என்றாள்.

அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளும் அவகாசம் இல்லாமல் தன் குச்சி போன்ற கைகளினால் கணிப்பொறியின் தட்டச்சுக்கு நோகாமல் ஏதோ தட்ட ஆரம்பித்தார். "ரிச்சர்ட் ஃபெய்ன் மென் இருந்திருக்கணும் இப்ப. அவன்தான் லாயக்கு'' என்றார்.

அவர் சொன்னதைக் கேட்க அவள் அங்கே இல்லை.

உதகையில் இப்படி ஒரு ஆய்வுக்கூடம் இருப்பது பலருக்கு} மன்னிக்க} யாருக்கும் தெரியாது. அது ரகுநாத் குடும்பத்தாரின் தனிப்பட்ட சொத்து. தலைமுறை தலைமுறையாக தோற்று வருவதாகக் கொண்டாலும் மெல்லிய வெற்றியின் சேகரிப்புக் கூடமாக அதைப் பராமரித்து வந்தார் ரகுநாத்.

"சும்மாதானே இருக்கே? செத்த வாயேன்'' மாதிரிதான் பத்ரியை அங்கு அழைத்து வந்திருந்தார் ரகுநாத். வந்த இரண்டு நாள்களா ரகுநாத் பெரிய ஜெனரேட்டர் மாதிரியான வஸ்துவுடன் கம்ப்யூட்டர் இணைப்புகள் கொடுப்பதும் திடீரென்று ஞாபகம் வந்தவராகப் பேப்பரில் எதையோ கிறுக்குவதுமாக இருந்தார். இந்த இரண்டு நாள்களில் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டைக் கூட அவர் முழுதாகச் சாப்பிடவில்லை. அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு வேலைக்காரன் மணியடித்ததும் வந்து. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து வைப்பது தண்ணீர் கொண்டு வந்து வைப்பது மாதிரியான காரியங்களை உடம்பு நோகாமல் முடித்துவிட்டுப் போனான்.

பத்ரி அவனை அழைத்து, "உனக்கும் பிஸ்கட்தானா?'' என்றான்.

"நானே தனியா சமைச்சுக்கிறேங்க'' "நல்லவேளையா' என்பதை மறைபொருளாக உணர்த்தினான்.

பத்ரி, முந்தைய சந்தர்ப்பங்களில் அங்கே கொண்டு வரப்பட்டிருந்த பத்திரிகைகளை ஒரு அட்சரம் விடாமல் படித்து வெறுப்பாகிப் போய், "என் மாமா பையனுக்குத் திங்கக் கிழம கல்யாணம். போயிட்டு இன்னொரு சமயம் வர்றேனே'' என்று நழுவப் பார்த்தான்.

ரகுநாத் பதறாமல், "இதோ முடிந்துவிட்டது'' என்று அருகில் வந்து அமர்ந்தான்.

"இன்னும் சில நிமிடங்களில் நான் விண்வெளியில் பிரயாணிக்கப் போகிறேன். நான் இந்த அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டதும் நான் சொல்லிவிட்டுப் போகிற சில பொத்தான்களை இந்தக் கீ போர்டில் அழுத்தினால் போதும்'' என்று பெரிய அளவு குளிர்பதனப் பெட்டி போல இருந்த அறையைக் காட்டினார்.

பத்ரி அதிர்ச்சியில் உறைந்துபோய், இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என மனதுக்குள் பின் வாங்கினான்."கல்யாணம் முடிஞ்சு..'' என்று ஏதோ ஆரம்பித்து, "நல்லா யோசிச்சு முடிவு செய் ரகு'' என்றான்.

"பத்ரி, நான் டைமிங் எல்லாம் செட் பண்ணிட்டேன். உடனே நான் சொல்வதைப் புரிந்து கொள்ள தயாராகு'' ரகு ஒருவித தீர்மானத்தோடு சொன்னார்.

ரகு நோய்வாய்பட்ட கிழட்டு வில்லன் மாதிரி தோன்றினான் பத்ரிக்கு.

"இதோ இருக்கே இந்த அறைதான் ஆன்ட்டி கிராவிட்டி சேம்பர். அதுக்குள்ள நான் போனதும், இந்த கீ போர்ட்ல ஏ எழுத்தை அழுத்து. அறைக் கதவெல்லாம் சுத்தமா மூடியாச்சு. பயணத்துக்குத் தயாரா... ஆம்... இல்லைனு மானிட்டர்ல வாசகம் தெரியும். அப்போ நீ ஒய் என்ற எழுத்தை அழுத்தினா போதும். இதே மாதிரி அடிக்கடி ஆம், இல்லை வரும்போதெல்லாம் நீ ஒய் எழுத்தை அழுத்தினா போதும். அதற்கான புரோகிராம் எல்லாம் நான் பண்ணி வெச்சிருக்கேன். கொஞ்ச நேரத்தில நான் திரும்பி வந்துடுவேன். பயப்பட்றதுக்கு ஒண்ணுமேயில்லை...''

"ரகு, நல்லா யோசிச்சுக்க. வேணும்னா அந்த வேலைக்காரனை அனுப்பி சோதனை பண்ணு. நீயெதுக்கு?''

"சொன்னா நம்ப மாட்டே. அவன் போன வாரம் போய்ட்டு வந்தவன்தான். "எல்லா நட்சத்திரத்தையும் பாத்துட்டேன் சார். சூப்பர் சார். இன்னொரு ரவுண்டு போய்ட்டு வந்துடட்டுமா'ன்னு கேட்கிறான். அவனுக்கு அவ்வலவு ஆசை இருக்கும்போது எனக்கு எவ்வளவு ஆசையிருக்கும்? என் மேல அக்கறையிருந்தா நீ வேணா போய்ட்டு வா''

பத்ரி எச்சில் விழுங்கினான்.

"பயப்படாதே. அவனுக்கு ஒய் அழுத்தறதுக்குத் தெரிஞ்சிருந்தா உன் உபகாரம் எதிர்பார்த்திருக்க மாட்டேன். சரி பேச நேரமில்லை. நான் போய்ட்டு வரேன். தயார்தானே?'' என்றார் ரகுநாத்.

"எந்தப் பக்கமா போவே?'' எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான் பத்ரி.

"உன் ஒருவனுக்காவது கொஞ்சம் இதைத் தெரிந்து கொள்வதில் விருப்பமிருப்பதில் சந்தோஷம்.''

"எல்லா பொருளுக்கும் எதிர் பொருள் இருப்பதாகக் கருதிக் கொண்டு பெüதீகத்தில் சில யூகங்களை விவரிப்பதைக் கேள்விப்பட்டிருப்பாய். அதாவது "பொருள் அற்ற பொருள்' கணிதத்தில் சொல்ல வேண்டுமானால் தலைகீழி. ஈர்ப்பு சக்தியின் தலைகீழியே உருவாக்க முடிந்துவிட்டால் எந்தப் பொருளையும் எடையற்றதாக்கிவிட முடியும் கூடவே நாம் ஒளிவேகத்தில் பிரயாணிக்கிற வசதியும் கை கூடினால் பிரபஞ்சம் கைக்குட்டை அளவுதான்.

ஒளிவேகத்தில் பிரயாணிக்கக் கூடுதல் சக்திக்காக ஒரு பிளாக் ஹோலை காந்த அலை வரைபடத்தின் மூலம் கண்டுபிடித்தேன். பிளாக் ஹோல் என்பது நட்சத்தின் ஒரு நிலை.. தெரியுமில்லையா பத்ரி?''

பத்ரிக்கு அப்போது அவன் பெயரே மறந்து போயிருந்தது.

ரகுநாத் கவலைப்படாமல், "ஒளி உமிழ் திறனை இழந்தபின் நட்சத்திரங்கள் இந்த நிலையை அடைகின்றன. அப்போது அதன் ஆகர்ஷணம் பல கோடி மடங்கு அதிகரித்துவிடும். தன் சுற்றுப்பட்டில் உள்ள நட்சத்திரங்களைக்கூட அவை ஈர்த்துத் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கின்றன. அத்தனையும் மிக அடர்த்தியான கோளமாக இருக்கும். அடர்த்தியென்றால் அப்படியொரு அடர்த்தி. ஒரு மயிரிழையளவு பிளாக் ஹோல் துகளை உன் மீது வைத்தால் நீ நசுங்கிப் போய்விடுவாய். அத்தனை அடர்த்தியாக இருக்கும். டாப்ளரின் இரண்டாம் அலைகள் பற்றிய விதியோ, ஹாப்பிளின் நட்சத்திரங்கள் பற்றிய கருதுகோள்களையோ நீ அறிந்திருந்தால் என் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.
பரவாயில்லை அதெல்லாம் எதற்கு? ஒரு பிளாக் ஹோலைக் கண்டுபிடித்தேன். நான் கண்ட பிளாக் ஹோலின் விசேஷம் என்னவென்றால் அந்த பிளாக் ஹோலில் ஒரு மெகா துவாரம் இருப்பதுதான். எ பிளாக் ஹோல் வித் ஹோல் ஹா..ஹா.. அந்தத் துவாரத்தை நோக்கிப் பிரயாணிக்க முடிந்தால்?

நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. விருட்டென்று பாய்ந்து அந்த வேகத்தில் இந்தப் பிரபஞ்சத்தை வலம் வந்துவிடலாம்... சரி நேரமாகிவிட்டது. ஜெனரேட்டர் தயார் என்று சமிக்ஞை செய்கிறது பார்.''

ரகுநாத் அந்த அறையை நோக்கி நகர்ந்தார்.

பத்ரி தொடர்ந்து ஒய் என்ற எழுத்தை அழுத்திக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ரகுநாத் அந்தக் குளிர்ப்பதன அறையில் இருந்து வெளியே வந்தார். அவர் முகத்தில் பிரமாதமான மகிழ்ச்சி ரேகைகள்.

தன் உதவியாளனிடம், "பத்ரியைச் சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும் என்று ஆகிவிட்டது. உண்மையில் அவன் உட்கார்ந்து இருந்ததுதான் ஆன்ட்டிகிராவிட்டி சேம்பர். அவனைத்தான் இப்ப விண்வெளிக்கு அனுப்பியிருக்கேன். பத்ரி என்றாவது ஒரு நாள் திரும்பி வருவான். அன்றுதான் என் ஆராய்ச்சியின் மகிமை தெரியும். விக்டர்பால் அப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்கிறான் பார்ப்போம்'' என்றார்.

பத்ரி இருந்த அறையை உதவியாளன் எட்டிப் பார்த்தான். அது யாருமற்று மெüனமாக இருந்தது. சொல்லப்போனால் அது அவனுக்கு அதிர்ச்சியாகக் கூட இல்லை.

உதவியாளன் தன் அறைக்குப் போய் சாக் பீஸ் எடுத்து ஏற்கெனவே இருந்த ஐந்து கோடுகளுக்குப் பக்கத்தில் ஆறாவதாக ஒரு கோடு போட்டான்.


தினமணி கதிர்- 1997

செவ்வாய், நவம்பர் 18, 2008

சம்பா

"நிசப்தத்தை யார் உடைப்பது என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தது மாதிரி இருந்தது. வேட்டியை முழங்கால் வரை தூக்கிவிட்டு, மரத்தடி சிமெண்ட் திண்டு மீது குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த மாரிமுத்து நாயகர் "க்கும்'' என்று கனைத்துக் கொண்டார். அதாவது நான் ஆரம்பிக்கிறேன் என்று அதற்கு அர்த்தம்.

"ஜீப் எதுக்குப்பா வந்துட்டுப் போச்சு?'' என்று கேட்டார்.
இதற்கான பதில் அங்கிருந்த சோமசுந்தரம், கருப்புசாமி, திருமலை, சண்முகாசாரி எல்லோருக்குமே தெரிந்ததுதான். கேள்வியைக் கேட்ட மாரிமுத்து நாயகருக்கும் தெரியும்தான். இருந்தாலும் கேட்டார். விஷயத்தை ஆரம்பிக்க வேண்டுமே?

"ஆபிஸரும், பி.டி.ஓ.வும் வந்தாங்க'' என சொக்கலிங்கம் ஆரம்பித்ததும் ""பி.டி.ஓ.வும் ஆபிஸர்தான்டா'' திருமலை ஓவெனச் சிரித்தான்.

"குழா பேண்ட் போட்டுக்குனு ஜீப்ல வந்தா உடனே ஆபிஸர்னு சொல்றதா?'' திருமலையின் சிரிப்பில் ஆத்திரமுற்றவராகப் பேச ஆரம்பித்தார் சண்முகாசாரி. ""ஒரு ஏக்கர் நெலம் குடுத்தா ஆஸ்பித்திரி கட்டி தர்றேங்கிறானுங்க. அவசர அங்கலாப்புன்னா நமக்கு வைத்தியம் பாத்துக்க முடியல. நம்ம புத்தூரார் பையன பாம்பு கடிச்சப்ப ஊசி போடறதுக்கு ஒரு டாக்டர் இருந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம்.. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி யாராவது ஒருத்தர் அநியாயமா மண்டைய போட்றாங்க..''

"ராமாயணத்தை எடுத்துக் கிட்டார்பா. இப்ப நெலத்துக்கு ஒரு வழி சொல்லிங்கப்பான்னா..'' திருமலை விஷயத்துக்கு இழுத்தான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் மாரிமுத்து நாயகருக்குச் "சேர்ந்தாப்ல ஒரு ஏக்கர் நெலம்னா... காவாக்கரை மேடு. கணக்கன் மேடு ஓடை, கோயில் கம்பத்தம்' போன்ற ஊர் பொதுச் சொத்துக்களாக உள்ள இடங்களைப் பற்றிய கணக்கு ஓடிக் கொண்டிருந்தது.

நான்கு பிரசவ வார்டும், மருந்து கொடுக்கிற இடமும் கொண்ட டவுனில் இருப்பது மாதிரியான ஒரு மருத்துவமனையை மனத்திரையில் கட்டி முடித்துவிட்டு மேலே சொன்ன இடங்களில் ஒவ்வொன்றாக அதைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் மனதில் இருந்த கட்டடத்துக்கு அம்சமான இடம் கோவில் கம்பத்தம்தான்.

"இதில பேசறதுக்கு என்னடா இருக்குது? கோயில் நிலம்தான் சரி'' என்றார்.

மாரிமுத்து நாயகர் துணிச்சல்காரர். அவரால் மட்டும்தான் இப்படித் தேங்காய் உடைத்தது மாதிரி சொல்ல முடியும் என்று அங்கிருப்பவர்களுக்குத் தெரியும்.

ஆஸ்பத்திரி கட்டறதுக்குக் கோயில் நிலம்தான் சரியான இடம் என்பதைச் சொல்வதற்கு என்ன துணிச்சல் தேவை என்று நினைக்கலாம். கோயில் நிலத்தில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் பார்த்துக் கொண்டு வருபவர் காளி நாயகர். கோயிலுக்குச் சேர வேண்டிய வாரத் தொகையாக வருஷத்துக்கு ஆறுமூட்டை நெல்லை கோயிலுக்கு அளந்துவிட்டுத் தம் சொந்த நிலம் போலவே ஆண்டு வருபவர் அவர். அது கோயில் சொத்து என்ற விவரம்கூட அவருக்கு ஞாபகம் இருப்பதில்லை. கோயிலுக்குத் தானமாக நெல் அளப்பது போலத்தான் அவரது நடவடிக்கை இருக்கும்.

அப்படி ஒருவரின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலத்தை டப்பென்று காட்டிக் கொடுப்பதுதான் துணிச்சலுக்கான சமாசாரம்.

அவரிடமிருந்து நிலத்தை மீட்பதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்ற எண்ணம் ஏறத்தாழ எல்லார் மனதிலும் ஒரே நேரத்தில் உதித்தது.

காளி நாயகர், ஆத்திரப்படுவார், ஊரே இரண்டுபடப் போகிறது என்றுதான் அவரிடம் கோவில் நிலம் கேட்டுப் போனவர்கள் எதிர்பார்த்தார்கள்.

"மோர் இருந்தா குடும்மா வந்திருக்கவங்களுக்கு'' என மகளிடம் கூறிய இயல்போடு, ""ஆஸ்பித்திரி கட்டறதுக்கு அதுதான்டா சரியான இடம்'' என்றும் உறுதியாகச் சொன்னார்.

அவர் இவ்வளவு சுலபமாக உடம்பட்டது அசாதாரணமாகத் தோன்றவே, ""ஊர் ஜனங்க எல்லாருக்கும் பயன்பாடா இருக்கட்டுமேன்னுதான் இப்படி யோசிச்சோம்''} சொக்கலிங்கம் வலிந்து விளக்கம் தந்தார்.

"நீ குடுத்த ஐடியாத்தானா இது? சரியான எடத்தத்தான் ராசா சொல்லியிருக்கே'' என்று சொக்கலிங்கம் பக்கம் திரும்பினார் காளி நாயகர். சொக்கலிங்கம் பயந்து போய், ""நான் சொல்லல. மாரிமுத்து நாயகர்தான்'' என பதறினார்.

"அட என்னய்யா... யாரோ சொன்னாங்க. நல்ல இடம்... அதுதான் பொருத்தமா இருக்கும் இல்லையா?'' என்றார்.

வந்திருந்வர்கள், ""ஆமா அதுக்காகத்தான்'' என ஆமோதித்து ""நீங்க இதில சங்கடப்படக் கூடாது'' என்றனர்.

வந்திருந்தவர்கள் இப்படித் தர்மசங்கடப்படுவதை ரசிப்பவர் மாதிரி, ""பின்ன... ஜனங்களுக்குப் பயன்பாடா இருக்கறதுக்குதத்ôனே ஆஸ்பித்திரி. தொல்லை குடுக்கறதுக்கா?'' சொக்கலிங்கத்தைப் பார்த்து சம்மதம் கேட்பதுபோல தலையாட்டிவிட்டுச் சிரித்தார் காளி நாயகர்.

"ஆனாப்பா ஒரு விஷயம்'' என்று மீண்டும் காளி நாயகரே ஆரம்பித்தார். ""ஊர்க்காரங்க வீடுகட்ட இடமில்லாம ஏரியில குடிசைபோட்டு இருக்கானுங்க. மழைக்காலத்தில இதனால எவ்வளவு அவஸ்தைப் படறாங்கன்னு தெரியுமா''

"தெரியும் நாயக்ரே. அதுக்கு என்ன பண்ண முடியும், சொல்லுங்க?'' என்றார் வந்திருந்தவர்களில் ஒருவர்.

"நமக்குக் கொஞ்சம் ஓய்வு இருக்கிற சமயம்னா அது இந்தச் சம்பா காருதான். மனசு வெச்சா இந்த நேரத்தில அவங்களுக்கும் நல்லது செய்யலாம். ஊர்கூடி இழுத்தா தேர் நகரும்.''
"எப்படி?'' நிஜமாகவே ஆர்வமாகக் கேட்டார் சொக்கலிங்கம்.

"ஏரிய ஒரு பக்கம் மேடாக்கி அந்த இடத்தில ஆஸýபித்திரியக் கட்டிட்டு... எங்கப் பாட்டன் காலத்தில தூர்வாரினதோட சரி. அது இப்பவே மேடாத்தான் இருக்கு. அதனால அங்க ஆஸýபித்திரியக் கட்டிட்டு கோவில் நெலத்தில அங்க குடிசைபோட்டுக்கிட்டு அவஸ்தைபட்றவனுக்கு வீடுகட்ட இடம் கொடுத்தா என்ன?... உங்க இஷ்டம்தான். அரசாங்கத்துக்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நாம ஒரு முடிவா இருக்கணும். என்ன சொல்றீங்க... கோவில் நிலம் ஊரோட இருக்கு ஏரியில வீடு கட்டிக்கிட்டு இவனுங்க ஏன் தனியா இருக்கணும்? அதுதான் என் யோசனை''

இதில் ஏதோ போர்த் தந்திரம் இருப்பதாக உணர்ந்த சொக்கலிங்கம், ""பெரிய வூட்டுக்காரங்க எல்லாரையும் கலந்து பேசித்தான் முடிவெடுக்கணும்'' என்று பாதுகாப்பாக ஒரு வார்த்தைப் போட்டார்.


பெரிய வீட்டுக்காரர்கள் என்று ஊரில் ஐந்து பேர் இருந்தார்கள். அய்யாவூடு. தென்னந்தோப்பு ரெட்டியார் வீடு, குதிரை நாயகர் வீடு, ஆசாரி வீடு ஆகிய ஐந்து குடும்பத்தின் வம்சா வழியினர்தான் ஊரின் பூர்வ குடிகள். இந்த ஐந்து வீட்டுப் பிரதிநிதிகள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட விஷயம் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும்.

ஊருக்குப் பள்ளிக்கூடம் கட்ட, நீர்த் தேக்கத் தொட்டி கட்ட, காட்டுக் கோவிலைப் புதுப்பிக்க என்று ஐந்து வீட்டுக்காரர்களும் சம்மதம் தெரிவித்து, நிறைவேறிய திட்டங்கள் நிறைய உண்டு.

சம்பா பட்டம் ஐந்து மாதப் பயிர்ப் பருவம். விவசாயிகள் தினமும், ஏர்பிடிப்பதும், களையெடுப்பதுமாகச் சொல்லி வைத்ததுமாதிரி தினம் ஒரு வேலையில் தங்களை மூழ்கடித்துக் கொள்வது, சம்பாச் சாகுபடியின்போது சற்றே குறையும். பெரிய வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறவர்களையும் கோவில் வாசலில் அமர்ந்து அரசியல் நிலைமைகளை அசை போட்டுக் கொண்டிருப்பவர்களையும் அந்த நேரத்தில்தான் அதிகம் பார்க்க முடியும். பொது விவகாரங்கள் பேசப்படுவதும் வீண் சண்டைகள் உருவாவதும்கூட அப்போதுதான்.

இந்தச் சம்பா பருவ நேரத்திலேயே ஆஸ்பத்திரி விவகாரத்தையும் ஏரிக்கரையில் குடிசை போட்டு இருப்பவர்களின் வீட்டு நிலப் பிரச்சினையையும் முடித்துவிடுவது என்று ஐந்து வீட்டுப் பிரதிநிதிகள் முதல் சமீபத்தில் வந்து குடியேறிய முத்து நாடார் வரை ஆர்வப்பட்டார்கள்.

"ஏரியில் குடிசைப் போட்டு இருக்கவனுக்கு மட்டும்தான் கோவில் நெலத்துல எடம் தரப் போறாங்களா? ஊர்க்காரனுங்ககூடத்தான் வீடு போதாம எடம் தேடிக்கிட்டு இருக்கான். அவங்களுக்கும் எடம் ஒதுக்குவாங்களா?''டீக்கடையில் அமர்ந்திருந்தபோது திருமலைதான் இப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டான்.

"வீட்டுக்கு எடம் இல்லாதவன் எல்லாருக்கும்தான். மனை குடுக்கணுனா ஏரியில குடிசை போட்டிருக்கணும்னு சட்டமா?'' என்று மாரிமுத்து நாயகரும் சூடாக இருந்த டீயை ஊதி ஆற்றிக் கொண்டே பதில் அளித்தார்.

மாரிமுத்து நாயகரே சொல்லிவிட்டார் என்று ஊர்க்காரர்கள் சிலர் தங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். ஆளாளுக்கு வெள்ளை பேப்பரில் மனு எழுதிக் கொண்டு வந்தனர்.

"எனக்குக் குடியிருக்க வீட்டுமனை இல்லாததால் எனக்கும் மனை ஒதுக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்' என்று ஆறுமுக ஆசிரியர் யாரோ ஒருவருக்கு எழுதித் தந்ததையே அனைவரும் வரிவரியாகக் காப்பியடித்து எழுதி வந்தனர். வந்த மனுவைப் பார்த்தால் ஏறத்தாழ இன்னொரு ஊர் தயாராகிவிடும் போல இருந்தது.

இது சம்பந்தமாக மீண்டும் கோயில் பிரகாரத்தில் கூடினர்.

"ஊர்க்காரன்ல இவனு எடம் தந்து அவனுக்கு எடம் தரலன்னா பிரச்சினை வராது?'' காளி நாயகர் கேட்டார்.
"யார் யாருக்கு வேணும்னு சொல்லட்டும். ஒரு வீட்டு மனைக்கு இன்ன விலைன்னு நிர்ணயிப்போம். கோவில் செலவுக்கு ஆகும். வாங்கறவங்க வாங்கிக்கட்டும்'' புதிதாக விலையைப் பற்றி பேச ஆரம்பித்தார் சொக்கலிங்கம்.

"என்னப்பா இது... ஏரிக்கரையில இருக்கிற கொட்டாயை விட்டுட்டு வர்றவனும் அதே விலை குடுக்கணுமா?'' காளி நாயகர் கேட்டார்.

"நம்ம நோக்கம் ஆஸ்பித்திரிக்கு எடம் வேணும்''ஞாபகப்படுத்தினார் மாரிமுத்து நாயகர்.

"ஏரிக்கரைல கட்றதா, கோவில் நெலத்தில கட்றதான்னு முடிவு பண்ணுங்கன்னு சொல்றேன். அவ்வளவுதான்'' காளி நாயகர் தெளிவுபடுத்தினார்.

"ஏரியில நாங்க எப்படியாவது சாவறம். நீங்க கோவில் நெலத்துல ஆஸ்பித்திரி கட்டுங்கப்பா''துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு விருட்டென்று வெளியேறினான் படவேட்டான்.

"ஏரித் தண்ணில வெள்ளத்தில தவிக்கிறவனுக்கு வீடுகட்றதுக்கு இடம் கொடுங்கப்பா... ஆஸ்பித்திரியாவது மண்ணாங்கட்டியாவது'' என்றார் சோமசுந்தரம்.

"என்னய்யா இது அநியாயம். ஆஸ்பித்திரி கட்றம்னு ஆரம்பிச்சு இப்ப வீட்டு மனைனு விவகாரம் பண்றீங்க?'' மாரிமுத்து நாயகர் சொன்னது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.

"சரிப்பா. நீங்க பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டுச் சொல்லுங்க. எனக்கு ஒடம்பு முடியல. கிளம்பறேன். கோவில் நெலத்தை எப்ப வேணும்னு கேட்டாலும் கொடுக்கறதுக்கு நா ரெடி'' கைத்தாங்கலாக கருப்புசாமியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார் காளி நாயகர்.
வீட்டு வாசலில் காலைக் கழுவியபடி, ""பயலுகளுக்குச் சும்மா இருக்கிற நேரத்தில இப்படியெல்லாம் சமூக அக்கறை வந்துடும். பிரச்சினையைத் திருப்பி விட்டாச்சு. அடுத்த சம்பா வரைக்கும் வரமாட்டானுங்க''என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டே கயிற்றுக் கட்டிலை நோக்கி நடந்தார் காளி நாயகர்.



தினமணிகதிர் - 1997

திங்கள், நவம்பர் 17, 2008

எதிர்மென் அரக்கன்

அவசரமாக அழைத்தார் அதிகாரி. குரலில் சுவாரஸ்யம் தெரிந்தது. "ஜெயகாந்தனும் ஜெயமோகனும் சேர்ந்து ஒரு கதை எழுதியிருக்கிறார்கள். இப்போதுதான் கேள்விப்பட்டேன். எப்படியாவது அந்தக் கதையைக் கண்டுபிடித்துத் தருவது உன் பொறுப்பு'' என்றார்.



அவர் இப்படிச் சொல்வதற்கு முன்பே, வேறொரு ஆசாமி தந்த தகவல் மூலம் இந்த இருவரும் சேர்ந்தெழுதிய கதையை த் தேட ஆரம்பித்து முடியாமல் விட்டுவிட்டேன். அப்படி ஒரு கதை இருந்தால் அதிகாரியிடம் சொல்லலாம்; இல்லையென்றால் அப்படியே அமுக்கிவிடலாம் என்றுதான் ரகசியமாக தேடிப்பார்த்தேன். மீண்டும் எனக்கே அந்தத் தலைவலி. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அவர்கள்பற்றிய எல்லாச் செய்திகளையும் புரட்டிப் பார்த்துவிட்டேன். இல்லை, அப்படி ஒரு கதை இல்லவே இல்லை.




அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் உதவியோடு எல்லாவற்றையும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். எது சுலபமோ அதுவே கஷ்டத்தையும் கொடுத்துவிட்டது. இப்போதோ ஒவ்வொரு புத்தகமாகத் தேட வேண்டியிருக்கிறது. இருந்த சஞ்சிகைகள், நூல்கள், ஆவணங்கள், பஸ் டிக்கெட்டுகள் எல்லாமே முக்கியம். காகித வடிவில் எது தென்பட்டாலும் பொக்கிஷம். எல்லாவற்றிலும் தேடியாகிவிட்டது. இருவரும் சேர்ந்து எழுதிய கதையும் இல்லை; குறிப்பும் இல்லை.

மீவெண் அலைவரிசை மார்க்கமாக "அவர்கள்' செலுத்திய "எதிர்மென் அரக்கன்' என்னும் வைரஸ் நெüமென் பொருள் கத்தியின்றி, ரத்தமின்றி உலக ராஜ்ஜியங்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் சாய்த்துவிட்டது. இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதைப் போல வேறு ஏதோ வெடிவிபத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது பேரிடி. அமெரிக்கா மட்டுமின்றி உலகில் வல்லரசுளென வாலாட்டிக் கொண்டிருந்த ஜப்பான், சீனா, 2020-யில் வல்லரது கனவு கண்டு கொண்டிருந்த இந்தியா எல்லாமே புஸ்...

இப்படி இடர்வருமென யாருமே எதிர் பார்க்கவில்லை. திடும் என பிரபஞ்சமே இருண்டுவிட்டது. மதவாத அடிப்படைவாதிகளுக்குக் கணிப்பொறி மீதும் இணையத்தின் மீதும் இப்படியொரு கோபம் இருக்கும் என யாரும் கவனம் கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

"மைக்ரோ சிப்கள் தந்த மதிப்பில் பேப்பர்களுக்கான மரங்கள் வெட்டப்படுவது மாபெரும் குற்றம் என்று இயக்கம் ஆரம்பித்தார்கள். புதிதாகப் புத்தகங்களே உருவாக்கக் கூடாது என்று சர்வேச அளவில் தடைபோட்டார்கள். இப்போது என்ன ஆயிற்று? õ}குப்பை என்று மைக்ரோ சிப்புகளையும் டிஸ்க்குகளையும் உலகம் முழுதும்திட்டிக் கொண்டிருக்கிறார்கள்... எதிலும் அவசர முடிவு... அதை நடைமுறைப்படுத்துவதில் அத்தனை தீவிரம்... பொறுமையே இல்லை'' என்று பொதுவாக எல்லா விஞ்ஞான வளர்ச்சி குறித்தும் கவலை தெரிவித்தார், உடன் பணியாற்றும் முத்துவேலர்.

அவருடையில் வேதனையில் ஆழமான நியாயமிருக்கிறது.

"சென்ற செப்டம்பரில் "தினமானி'யில் ஒரு கட்டுரை வெளியானது. கத்திரிக்காயைப் பற்றி... உலகிலேயே பிரயோஜனமில்லாத ஒரு காய்கறி உண்டென்றால், அது கத்திரிக்காயாகத்தான் இருக்கும் என்று விளாவரியாக எழுதியிருக்கிறார்கள். இதோ இந்த ஆகஸ்ட்டில் கத்திரிக்காய் ஒன்றுதான் கேன்ஸருக்கான ஒரே மருந்து. அதைத் தொடர்ந்து உட் கொண்டவர்களுக்கு கேன்ஸர் வருவதில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் இரண்டையும் எழுதியது ஒருவரே'' என்று அலுத்துக் கொண்டார்.

"பாவம் கத்திரிக்காய்.அதற்கு என்ன தெரியும்?'' என்றபடி "இந்த விஷயத்துக்கு ஜெய" விஷயத்துக்கு 'ஒரு பிரிகாரம் சொல்லுஙகள்'' என்றேன்.

நண்பர் சற்றே சோர்ந்தபடி யோசித்துவிட்டு திடீரென்று பிரகாசித்தார். "புலித்தேவரிடம் பார்த்திருக்கிறேன். ஜெயகாந்தன் படைப்புகள் முழுத் தொகுதி, ஜெயமோகன் படைத்தவை முழுத் தொகுதி... இரண்டுமே அவரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.''

இரவே குரோம்பேட்டையில் இருக்கும் புலித்தேவரின் வீட்டுக்கு மின் புயல் மூலம் கிளம்பினோம். உதவும் மனநிலையில்தான் இருந்தார் அவர். ஆனால் புத்தகங்களை எடுத்துச் செல்லக் கூடாது. அங்கேயே பார்த்துவிட்டு தந்துவிட வேண்டும். என்ற கண்டிப்புடன்தான் அந்த உதவி. கம்ப்யூட்டர் அழிவுக்குப் பின் இலக்கிய ஆய்வாளர்கள் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்திருப்பது தெரிந்தது. நானும் முத்துவேலரும் ஆளுக்கொரு நூலை ஆராய்ந்தோம்.

இரண்டு பேரில் யாருடைய நூலிலாவது இந்த இருவரும் சேர்ந்து எழுதிய கதை தொகுக்கப்டாமலா போயிருக்கும்?... எங்கள் கண்கள் ஆர்வ மிகுதியால் பக்கங்களை அள்ளிக் குடித்தன. ஆயிரக்கணக்கான பக்கங்களை அங்குலம் விடாமல் அளந்துவிட்டன கண்கள். இல்லை... இல்லவே இல்லை.

"நாட்டுடமை ஆக்கப்பட்ட பின்பு பதிப்பித்த நூல்களில் லாப நோக்கமுó கலந்துவிடுவதால் பல கதைகளை சுருக்கியும் வெட்டியும் அல்லது முழுவதுமாக நீக்கியும் விடுகிறார்கள். நாட்டுடமைக்கு முந்தைய இவர்களின்நூல்களைத் தேடினால் ஒரு வேளை கிடைக்கலாம்'' என்று வழி சொன்னார் புலித்தேவர்.

நள்ளிரவு இருவரும் சென்னை திரும்பும்போது சூப்பர் மார்க்கெட் ஆகிவிட்ட மீனம்பாக்கம் நிலையத்தைப் பார்த்தோம்.

"மீனம் பாக்கம் எவன் பெயரிட்டானோ? கடைசியில் மீன் மார்க்கெட்டாகவே மாறிவிட்டது. விமானநிலையத்தை வேலூருக்கு மாற்றியபின் இந்தப் பகுதியே பொலிவிழந்து போய்வட்டது இல்லையா?'' என்றார் நண்பர். இந்தப் பகுதியைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் அவர் சொல்வதாகத் தோன்றியது.

என்றாவது மீண்டும் கம்ப்யூட்டர் உபயோகத்துக்கு வந்துவிடும் என்ற கனவும் பகல் கனவாகிவிட்டது.

பில்கேட்ஸýக்குப் பிறகு கம்ப்யூட்டர் சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக விளங்கிய ஜேம்ஸ் வில்லியம்ஸ், கம்ப்யூட்டரை சரி செய்வதற்கு பதில் கல்லுடைப்பதற்குக் கற்றுக் கொள்ளலாம்' என்று அலுப்புடன் பேட்டி கொடுத்தார் போன வாரம்.

மீண்டும் மருத்துவம், கணக்கியல், பத்திரிகை துறை, தகவல் தொழில் நுட்பம் அனைத்துமே ஒரு நூற்றாண்டு காலம் பின் தங்கிவிட்டது.

நான் அச்சுத்துறையியல் பணியில்தான் வேலைபார்த்து வருகிறேன். பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவாக இது செயல்படுகிறது. மொழிகுறித்த ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிப்பது எங்கள் துறையின் வேலை. பழைய ஈய அச்சுக் கோப்பு முறையில் புத்தகங்களை அச்சிட்டு வருகிறோம்.

மீண்டும் அழைத்தார் அதிகாரி. "முடிந்ததா?'' என்றார். நான் என்னத்தைச் சொல்ல?

அக் காலத்தில் வந்த சினிமா விமர்சனம் ஒன்றின் முடிவில் "கமலஹாசன்- ரஜினிகாந்த் சேர்ந்து நடித்த படம் நீ... ஜெயகாந்தன் -ஜெயமோகன் சேர்ந்து எழுதிய கதை நீ'' என்ற பாடல் பிரமாதம்' என்று எழுதிய இருந்த வரிதான் என் அதிகாரிக்குக் கிடைத்த ஆதாரம். வேறு எதில் இந்த வரி இடம் பெற்றிருந்தாலும் அலட்சியப்படுத்திவிடலாம். தினமானியில் வந்திருப்பதால் அது தவிர்க்கமுடியாத ஆய்வுப் பொருளாக இருக்கிறது என்றார் அதிகாரி.

"அவர்கள் இருவரும் சேர்ந்து எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து நடித்தார்களா என்று தெரியவில்லை. இரட்டிப்பு சிறப்பு கொண்டவன் (ள்) என்று புகழ்வதற்காக அந்த நாளில் ஒரே துறையில் பிரபலமாக இருந்த இருவரையும் சேர்த்து இப்படி புகழ் எழுதியிருக்கலாம். அந்த நாட்களில் ஒரு பெண்ணை இப்படியெல்லாம் கற்பனையாகப் புகழ்ந்து வர்ணிப்பது புழக்கத்தில் இருந்தது'' என்று முற்றுப் புள்ளி வைத்தேன்.

மூன்றாம் நாள் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்து நடித்த படங்களின் பட்டியல் மட்டுமின்றி அவர்கள் இருவரும் தோன்றும் "என்னடி மீனாட்சி நீ சொன்னது என்னாச்சு?' என்ற பாடல் காட்சியைக் கொண்டு வந்து திரையிட்டுக் காண்பித்தார்.

அதன் பிறகு ஜெயகாந்தனும் ஜெயமோகனும் சேர்ந்து கதை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாமல் போனது எனக்கு. அதிகாரியோ இருவரும் சேர்ந்து கதை எழுதியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதற்கான ஆதாரங்களை அடுக்óகிக் கொண்டே போனார். அந்த நாட்களில் இரண்டு புகழ்மிக்க எழுத்தாளர்கள் ஒரு வித்தியாசத்ததுக்காகச் சேர்ந்து எழுதும் வழக்கம் இருந்தது என்றார். "புஷ்பா தங்கதுரை என்பவரும் இந்துமதி என்óபவரும் ஒரு தொடர்கதையை எழுதியிருக்கிறார்கள். அதற்கும் முந்தைய கால கட்டத்தில் இளங்கோவடிகள் எழுதிய "சிலப்பதிகாரம்' என்ற காப்பியத்தைத் தொடர்ந்து அதன் தொடர்காப்பியமான "மணிமேகலை'யை சீத்தலைசாத்தனார் எழுதினார்' என்றார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர்களிடம் இப்படியொரு பழக்கம் இருந்தது என்பதைக் குறித்து நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதுமாறும் என்னை நிர்பந்தித்தார். எனக்கு வேலையே அதுதான். கிடைக்கும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கட்டுரை எழுதுவது, அல்லது ஆதாரங்களைத் தேடி அலைவது இதுதான் என் வேலை.

கம்யூட்டர் நிரந்தரமானதென நம்பி ஏராளமான தாள் ஆதாரங்களை அலட்சியப்படுத்தியிருந்தனர். உலகமே இ} புத்தகங்கள் படிக்கும் நிலைக்கு மாறிப் போயிருந்ததால் புத்தகம் வைத்திருப்பவரை ஆதிமனிதன் போல பாவித்தனர். புலித்தேவரின் புத்தகப் பித்தைக் கிண்டலடித்து இ} புத்தகங்களின் நிறைய கட்டுரைகள் வெ ளியாகின. "மின்கொன்றை'இதழில் அவருடைய பரம்பரையையே கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார் ஜெயசாந்தன். இப்போதோ அந்த ஆதி மனிதர்தான் அதிமுக்கிய மனிதராகிவிட்டார்.

மின்கொன்றையையோ சாந்தனையோ குறை சொல்லி என்ன பயன்? நடுவர்க்கத்தினருக்கு அரசு வழங்கும் "இல்'களில் குறுந்தகடுகளுக்கே இடம் இருப்பதில்லை. இதில் புத்தகத்தை எங்கே வைப்பது?

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். ஒழித்துப் போட்ட நூல்களில் இருந்த வாழ்க்கையைத் தேடுகிறார்கள். வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளில்தான் இதுபோன்ற மீள் நவீனத்துவ இலக்கியம் ஆரம்பமாகியது. "டிராகுலா'வை எழுதிய பிராம் ஸ்டாகருக்கும் ஆஸ்கர் ஒயில்டுக்கும் ஒரே பெண்ணைக் காதலிப்பது தொடர்பான ஏதோ பிரச்சினை இருந்ததாக ஒருவரிச் செய்தி கிடைத்தது. அதைப்பிடித்துக் கொண்டு ஆஸ்கார் ஒயில்ட் தம் காதலியை அபகரித்துவிடுவாரோ என்ற கவலையில்தான் அவரை டிராகுலா போன்ற கதாபாத்திரத்தில் பிராம் ஸ்டாகர் சித்திரித்தார் என்றும் ஆஸ்கார் ஒயில்டும் ஒரு டிராகுலா வகையைச் சேர்ந்தவரா என்றும் ஆய்வுகள் செய்து வருகிறார்கள்.



கணிப்பொறி யுகம் இப்படி திடுதிப்பென முடிவுக்கு வந்துவிட்டதால் இலக்கியம் சம்பந்தமான எல்லாமே எங்களுக்கு ஆதாரமாகின. நேற்று முக்கரும்பு அருகே (திருவல்லிக்கேணி பின்னாலில் "ட்ரிபில் கேன்' ஆகி, அதை இப்படி தமிழ்ப்படுத்திவிட்டார்கள்.) ஒருவர் நடைபாதையில் எஸ்ராவின் பவுண்டு வால்யூம் என்னிடம் இருக்கிறது என்று பேசிக் கொண்டு போனார். எனக்கு எஸ்ராபவுண்டும் எஸ்.ராமகிருஷ்ணனு(எஸ்.ரா.)ம் ஞாபகத்துக்கு வந்தார்கள். சடாரென மின்னல் வெட்டியது.

"உபபாண்டவம்' எழுதியது ஏஸ்ரா பவுண்டா, எஸ்.ராமகிருஷ்ணனா? என்றெல்லாம் இல் அடையும் வரை குழப்பம் நீடித்தது எனக்கு. நல்லவேளை என் அதிகாரி அருகில் இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் அது ஒரு ஆய்வுக்கட்டுரை ஆகியிருக்கும்.


(சண்டே இன்டியன்- 2008)

சனி, நவம்பர் 15, 2008

சோறியம்

விஷுவல் டெலிஃபோன் சிணுங்கியது. பத்மனாபன் ரிமோட்டை அழுத்திவிட்டுக் காத்திருந்தான்.

திரையில் கிர்ணிப் பழ முகத்துடன் ரிச்சர்ட் ஸ்டோன்.

"காலை வணக்கம் பத்மனாபன்.. உனது புத்திசாலித்தனத்துக்கு ஒரு பரீட்சை வைக்கப் போகிறேன்'' என்றான்.

"காத்திருக்கிறேன்'' என்றான் பத்மனாபன்.

"இன்னும் ஒரு மாதத்துக்குள் தஞ்சாவூர் பெரிய கோவில் தரைமட்டம் ஆக வேண்டும்''





ஆடிப் போனான் பத்மனாபன். எதற்காக என்று கேட்கக் கூடாது. ஏன்? எதற்கு என்று கேள்வி கேட்காமல் இருப்பதற்குத்தான் பத்மநாபனுக்கு மாதந்தோறும் அவ்வளவு ரூபாய் சம்பளமாகத் தரப்பட்டு வருகிறது. எள்ளென்றால் எள்ளாக இருக்க வேண்டும். எண்ணெய்யாக மாறினாலும் தவறுதான்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையின் கைக்கூலியாக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் என்ன ஆணையிட்டாலும் "ஏன்?' என்று கேட்காமலேயே ஒரு சில விஷயங்களை பத்மனாபனால் யூகித்துவிட முடியும்.

ஆனால்.. தஞ்சைப் பெரிய கோயில்?

"முதல்முறையாகக் குழம்புகிறாய்'' என்றான் ஸ்டோன்.

"குழப்பமில்லை.. புரிந்து கொள்ள முடியவில்லை''

"தஞ்சைக் கோயிலைத் தரைமட்டம் ஆக்க வேண்டும் என்று கூறியது புரியவில்லை?''

"எதற்காக என்பது?''

"ஒப்பந்தத்தை மீறுகிறாய்''

"மன்னிக்க வேண்டும்''

"பரவாயில்லை, முடித்துவிடுவீர்கள் இல்லையா?''

"முடிக்கிறேன்''

"ஞாபகம் இருக்கட்டும்... ஒரு மாதத்தில்"'

"இந்த அவகாசம் போதும். இந்தியர்களைக் கோயில் விஷயங்களில் ஏமாற்றுவது சுலபம். உதாரணம் அயோத்தியா பிரச்சினை''

"நல்லது. முடித்துவிடு''

திரை இருண்டது.

குருக்கள் லேசாகச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

"நீங்க சொல்றதெல்லாம் நிஜம்தான். இந்தக் கோயிலும் விருத்தியாகல, இங்கே வந்துட்டுப் போனவாளும் விருத்தியாகல. இதைக் கட்டின சோழர் காலத்திலேர்ந்து அப்படியேதான் இருக்கு. சோழர்கள் ஆட்சி இழந்ததே இதனாலதானோ என்னவோ? யார் கண்டா? எங்க பாட்டனார் காலத்தில் எம்.ஜி.ஆர்.னு ஒருத்தர் முதல்வரா இருந்தார். இங்க வந்துட்டுப் போனப்பறம்தான் சிக்ல படுத்தார். கருணாநிதினு ஒருத்தரும் அப்படித்தான். ராஜராஜன் விருது வாங்கிட்டு அப்படியே ஆட்சிய விட்டுப் போய்ட்டார். அத்தோட அந்த விருதும் போச்சு. அந்தக் கதையெல்லாம் எதுக்கு? போன வருஷத்திலே என்ன ஆச்சு? ஜெர்மன்ல இருந்து நாலு பேரு கோபுரத்தை ஆராய்ச்சி பண்றேன்னு வந்தா. உச்சிலேர்ந்து விழுந்து மண்டை நொறுங்கி செத்தா. பாபம் பிடிச்ச கோயில்னு நல்லா தெரியறது. நானும் நீங்களும் நினைச்சு என்ன பண்ண முடியும் சொல்லுங்கோ?''

"ரொம்ப நல்லா சொன்னீங்க. பாவம் பிடித்த கோயில்.. இதையே தலைப்பா வெச்சிடலாம்'' என்றார் பாரத் அப்சர்வர் பத்திரிகையின் தலைமை நிருபர்.

"பேஷா வையுங்கோ.. ஆனா என் பேர் வேண்டாம். ஒரு குருக்கள் சொன்னார்னு சொல்லுங்கோ போதும்.''

தலைமை நிருபருடன் வந்த புகைப்படக் கலைஞர் முழு கோபுரத்தை கேமிராவுக்குள் அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.


"இடித்துவிட்டு வேறு இடத்தில் வேண்டுமானால் கட்டிவிடலாம். மக்கள் ஆதரவு இல்லாமல் எந்தக் கலைப் பொக்கிஷத்தையும் நம்மால் பாதுகாக்க முடியாது. நம்மிடம் உள்ள விஞ்ஞானக் கருவிகள் மூலமாக அந்தக் கோயிலின் ஒரு தூணுக்குக்கூட பாதிப்பு ஏற்படுத்தாமல் பெயர்த்தெடுத்து வேறொரு இடத்தில் கோயிலை நிர்மாணிக்க முடியும்'' என்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு சர்மாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசியவர்கள் மிகவும் சொற்பம்.

"ஒரு மூட நம்பிக்கையைக் காரணம் காட்டி வரலாற்றுச் சான்று ஒன்றைத் தரைமட்டம் ஆக்குறதை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்று பெரியார் கட்சி கண்டித்தது. வெகுசன பத்திரிகைகள் கிண்டலடித்தன.

"பெரியார் கட்சி ஆத்திகத்தில் அடியெடுத்து வைக்கிறது...''

சொல்லி வைத்தாற் போல எல்லாப் பத்திரிகைகளிலும் பெரிய கோவில் பற்றிக் கட்டுரைகள், விவாதங்கள்.

பொதுமக்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 12 பேர் கொண்ட குழுவில் கோவிலைத் தகர்க்கலாமா என்று கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

பெரிய சாதனைகள் பல செய்துவிட்டு வயதாக முடங்கப் படுத்துக்கிடக்கும் பெரியவர் மாதிரி இருந்தது அந்தக் கோவில். முடிவெடுத்த வினாடியில் வேண்டாம் என்று புறம் தள்ளிவிட முடியாத சங்கடம் இருக்கத்தான் செய்தது. பிரம்மாண்டமான கோயில், கட்டிடக் கலைக்குச் சவால்விடும் கோபுரம். கோயிலைச் சுற்றி அகன்ற மதில். அதன் மேல் நந்தி, சிவலிங்கம்... எதற்காக இத்தனை நுணுக்கமாக ஓர் அரசன் கோவில் கட்டினான்; அதற்கு ஏன் மக்கள் வரவேற்பில்லாமல் போனது? மாடுகளும், ஆடுகளும் காக்கைக் குருவிகளும் அணிலும் ஓணானும் வெüவாலும் குடியிருக்கவா இத்தனை பெரிய கோவில்?

ஆனாலும் என்ன குழுவில் வந்தவர்களில் கோவிலை இடக்க வேண்டாம் என்று சொன்னவர்கள் மூன்று பேர்தான்.

"கடவுள் என்று ஒன்று உண்டோ இல்லையோ... கட்டிடக் கலைக்காகவாவது இது பாதுகாக்கப்பட வேண்டும். தோஷம் உள்ள கோவில் என்பது வேடிக்கையாக இருக்கிறது'' என்றனர் அந்த மூவரும்.

"எவ்வளவோ உயிர்களையும் ராஜ்ஜியங்களையும் பலி வாங்கிய கோவிலை வேடிக்கையாக நினைக்கவில்லை'' என்றனர் மற்றவர்கள்.

"நாங்கள் வேடிக்கை என்றது பலியானவர்களை அல்ல; அது தோஷம் உள்ள கோயிலாக இருந்தால் நீங்கள் வேறொரு இடத்தில் உள்ள கோயிலுக்குப் போங்கள். சரித்திரக் கால மனித உழைப்பைப் பாழ்படுத்துவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.''

பிரதிநிதிகள் குழு இவ்வாறு விவாதித்துக் கொண்டிருந்தது.

விஞ்ஞானப் பத்திரிகை ஒன்று ஐ.ஐ.டி.யின் இயற்பியல் துறை தலைமைப் பேராசிரியரைப் பேட்டி கண்டு வெளியிட்டது.

"ராஜராஜ சோழன் கோயிலுக்குச் சென்று வந்த பலர் ஏதாவதொரு இழப்பைச் சந்திப்பதாகச் சொல்வது மூடநம்பிக்கையா? ஏதாவது விஞ்ஞானம் இருக்கிறதா?''

"இயற்பியல் எல்லா இயற்கை நிகழ்வுக்கும் காரணம் தேடுகிறது. ஆப்பிள் தலையில் விழுந்தாலும் பூமியில் விண்கள் வந்து விழுந்தாலும் பனி உருகினாலும் எல்லாவற்றையும் காரண காரியமாகப் பார்க்கிறது. பிரபஞ்சத்தின் எல்லாச் செயல்களுக்கும் விஞ்ஞானபூர்வமாக விளக்கம் இருந்தே தீர வேண்டும். அந்தக் கோவிலைப் பர்றி யோசிக்கும் போது, அங்கிருக்கும் காந்தவிசைச் செறிவு மனிதனைப் பாதிக்கக் கூடியதாக இருக்கலாம்.''

"கதிர்வீச்சும் காந்தவிசையும் மனிதனின் உடலைப் பாதிக்கலாம். பதவி இறக்கம் செய்யுமா?''

"ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறந்த நேரத்தை ஒட்டி ஜோடியாக் நட்சத்திர ஆளுமை இருப்பதைச் சொல்லவில்லையா? அது போல இருக்கலாம்.''

"அதாவது ராசி?''

"பழமைவாதிகள் ராசி என்கிறார்கள். நாங்கள் கதிர்வீச்சு என்கிறோம். இவ்வளவுதான் வித்தியாசம்''


"இன்னும் ஐந்து நாள்கள்தான் இருக்கின்றன பத்மனாபன்'' ரிச்சர்ட் ஸ்டோன் நினைவுபடுத்தலில் கிண்டல் அதிகம் தொனித்தது.

"முடித்துவிடுவேன்''

"வீராப்பு பேசாதே...''

"எங்கள் உதவி எது வேண்டுமானாலும் கேள். உடனடியாக அனுப்பி வைக்கிறேன்''

"எதுவும் வேண்டாம்''

"நம்புகிறேன்''

இந்தியா முழுவதுமே ராஜராஜ சோழன் கோவிலைச் சபிக்கும்படி ஆகிவிட்டது.

"பெரிய கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த மத்திய அமைச்சர் மாரடைப்பால் மரணம்..'

மத்திய மந்திரி முன்னாள் நடிகர் என்பதால் கலவரம் அதிகமாக இருந்தது. ரசிகர்கள் கோவிலில் நுழைந்து இடித்துத் தகர்க்க ஆரம்பித்தனர். போலீஸ், ராணுவம் என்று கோவில் முழுக்கக் கண்ணீர் புகையாக இருந்த நேரத்தில்... கோவில் கோபுரம் தானாகவே சரிந்து விழ ஆரம்பித்தது.


"வெல்டன் பத்மனாபன். எப்படி இரண்டே நாளில்?...''

"மத்திய மந்திரிக்கு மாரடைப்பு வரவழைத்தேன். கோவிலில் நடந்த கலவரத்தில் உயர்ந்தபட்ச ஒலியலைகளைச் செலுத்திக் கோபுரத்தை வீழ்த்தினேன்''

"வெரிகுட். என்ன பரிசு வேண்டுமோ கேள்...''

"நிச்சயமாக?''

"நிச்சயம்''

"இப்போதாவது சொல்லுங்கள். எதற்காக இவ்வளவும்?''

"சொல்லிவிடுகிறேன். அந்தக் கோவில் இருக்கும் பிரதேசத்தின் கீழே நூறு மீட்டர் ஆழத்தில் ஒரு தனிமம் இருக்கிறது. மென்டலீஃப் தனிம அட்டவணையின் புதிய குழந்தை இது. ஜப்பானியர்களை வீழ்த்த நாங்கள் அதை முதலில் பெற்றாக வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு அவசரப்பட்டுவிட்டோம்.''

"அந்தத் தனிமத்துக்கு என்ன சிறப்பம்சம்?''

"கதிர்வீச்சுத் தன்மை கொண்ட தனிமம் இது. யுரோனியம் மாதிரி. அந்தத் தனிமம் அந்தக் கோயிலுக்கு அடியில் செயற்கைக் கோள்கள் சத்தியம் செய்கின்றன''

பத்மனாபன் "இன்ட்ரஸ்டிங்'' என்றான்.

"அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு க்ளூ கொடுக்கிறாயா?... ஏனென்றால் இது முழுக்க முழுக்க உன்னால் கிடைத்த வெற்றி...''

பத்மனாபன் சோழா என்று வைக்கலாமா என்று யோசித்தான்.... சோழநாடு சோறுடைத்து... என்று சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது... சோறு.. "சோறியம்'' என்றேன்.

ஸ்டோன், "சோறியம்.. நைஸ் நேம்'' என்றான்.





(அசுரன் 1992)

வெள்ளி, நவம்பர் 14, 2008

வீடு

முன் குறிப்பு: இதை நீங்கள் கதை என்று நினைத்துவிட்டால் என் இதயம் வெடித்துவிடும்.
- ஒரு பரிதாபத்துக்குரிய நிருபன்



நான் அப்போது தினமானியில் நிருபர் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காலை ஒன்பது மணி. ஒரே ஒரு அட்டண்டர் மட்டும்தான் வந்திருந்தார். எனக்கு காலை எழு மணிக்கு அப்படியொரு அûஸன்மென்ட். உலக அழகி ஜெனிபர் தமிழ் சினிமாவில் நடிக்கும் படத்தின் பூஜை. "என்க்கு டமில் புட்கும்ட என்று அவர் திருவாய் மலர்ந்ததை முதல் பக்கத்தில் கட்டம் கட்டிப் போட வேண்டியிருக்கும் என்ற யோசனையில் அவர் சொன்ன வரியை அப்படியே நோட்ஸ் எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். (என்க்கு டமில் புட்கும்).

அலுவலகம் வந்த இரண்டாவது நிமிடத்தில் வேலை முடிந்துவிட்டது.

சென்னை ஏப்.18.

உலக அழகி ஜெனிபர் "என்க்கு டமில் புட்க்கும்' என்று கூறினார். அவர் நடிக்கும் "நானும் பெண்தான்' படத்தின் ஆரம்ப விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரபல இயக்குநர் பரமேஷ்வர் இப் படத்தை இயக்குகிறார் இதில் ஜெனிபர் தமிழ்ல் சொந்தக் குரலில் பேசி நடிக்கப் போவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் "என்க்கு டமில் புட்க்கும்' என்று கூறினார்.

அவ்வளவுதான் செய்தி. ஏப்.18 தானே என்றும் செவ்வாய்க்கிழமை தானே என்றும் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டேன்.
டெலி பிரிண்டர் சத்தம் டக டக டக டர்ர் அட்டண்டர் பி.டி.ஐ. செய்திகளைச் சன்னமாகக் கிழித்து அடுக்கிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த போன் வந்தது.

சோம்பலாக எடுத்து "ஹலோ''

"தமிழ்மகன்தானே?''

"ஆமா... நீங்க?''

"பெற்றோர் இட்ட பெயரா?''

"நானே சூட்டிக்... '' சே "நீங்க யாரு?''

"நான் யாருன்னு சொன்னால் நீங்க விளையாட்டா எடுத்துக்கக் கூடாது''

"நான் யாரா இருந்தாலும் விளையாட்டா எடுத்துக்க மாட்டேன். நீங்க யாரு?''

"என் பெயர் திருவள்ளுவன்''

"சரி''

அடுத்து அவர் சொன்ன வரிகளில்தான் நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் விஷயம் இருந்தது.

"திருக்குறள் எழுதினேனே, அந்தத் திருவள்ளுவன். தெய்வப்புலவர் செந்நாப் போதர், பொய்யா மொழிப் புலவர் என்றெல்லாம் சொல்கிறீர்களே அந்தத் திருவள்ளுவன்''
"காலங்கார்த்தால!''

"நீங்கள் நம்பவில்லையா?'' என்றது மறுமுனை குரல்.

"சாமி.. ஆளைவிடுங்க'' பக்கத்தில் படபடத்துக் கொண்டிருந்த காலண்டரில் திருவள்ளுவர் ஆண்டு 2060 என்று போட்டிருந்தது.

"வள்ளுவரா இருந்தா இரண்டாயிரத்து அறுபது வயசாயிருக்கணும், இப்ப உங்களுக்கு. ஏங்க இப்படிக் காலைல?''

"இரண்டாயிரத்து அறுபது இல்ல தம்பி. அதுக்கும் மேல. போனவாரம் புக் பாய்ண்ட்ல திருவள்ளுவர் இருந்திருந்தால்'னு ஒரு கட்டுரை வாசிச்சீங்களே... அதுக்கப்புறம்தான் உங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்''

புக்பாயிண்ட், ஃபாலோ போன்ற உச்சரிப்புகளைக் கவனித்தேன். திருவள்ளுவருக்கு ஆங்கிலம் தெரியுமா?

"புக் பாயிண்ட், ஃபாலோ எல்லாம் பேசிப் பழகிவிட்டது தம்பி'' என்றார் என் நினைவுகளுக்குச் சவுக்கடி போல.

"'நீங்க யார் ஸôர்? எங்கிருந்து பேசறீங்க?'

"உங்கள் முதல் கேள்விக்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன். இரண்டாவது கேள்விக்குப் பதில்: இப்பவும் (அழுத்தமாக) மயிலாப்பூர்ல இருந்துதான் பேசறேன்''

இந்தமாதிரி ஆசாமிகளை அவர்கள் வழியிலேயே போய் அடிப்பதுதான் சரி.

"சரி நான் என்ன பண்ணனும் திருவள்ளுவர்?''

"நான் பிறந்த ஆண்டைத் தவறாகச் சொல்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். என் குறளுக்குத் தப்புத் தப்பாக வியாக்யானம் சொல்கிறார்கள்; நடுவே "திரிக்குறள்', "திருக்குறள்'வில்லங்கம் வேறு. இதுவும் பரவாயில்லை. ஏதோ காலமாற்றத்துக்குப் பொருத்தமான உதாரணம் சொல்கிறார்கள் என்றுவிட்டுவிடலாம். இடைச் செறுகலாக நிறைய குறள்களைச்சேர்த்துவிட்டார்கள். என் வாழ்நாளில் இதைத் திருத்திவிட்டுப் போகணும். அதுதான் என் ஆசை. நீங்கள்தான் உதவ வேண்டும்.''

"யாருமே நம்ப மாட்டாங்களே.. நீங்கதான் திருவள்ளுவர் என்பதற்கு என்ன எவிடன்ஸ்... சாரி.. சே... ஆதாரம்?''

"எவிடன்ஸ்னாவே புரியும் தம்பி. நிறைய ஆதாரம் இருக்கிறது. நேரில் வந்தால் காட்டுவேன்.''

"எங்க தங்கி இருக்கீங்க?''

அட்டண்டர் செல்வராஜ் வந்து "சார் இன்னொர் லைன்ல போன் வந்திருக்கு. எடிட்டோரியல் பேஜ்ல பல்கலை மானியம் பயன்தருமா? கட்டுரை போட்டம்ல, அதபத்தி பேசணுமாம்'' என்றார்.

"அப்புறம் பேசச் சொல்லுங்கப்பா... நீங்க சொல்லுங்க. உங்க அட்ரஸ்?''

"என் நண்பன் பூங்குன்றன் சொன்னது மாதிரி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' நீங்கள் என் அறைக்கு வரவேண்டாம். பழைய புத்தகக் கடைபோல இருக்கும். ட்ரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு வருகிறீர்களா? ஒரு கோப்பை தேநீர் பருகியது போலவும் இருக்கும். அடையாளம் கதர் வேட்டி, கதர் சட்டை''


நான் ஒரு மாதிரி குழப்பமாகக் கிளம்பினேன். போட்டோகிராபரை வரச் சொல்லலாமா... "திருவள்ளுவரா ஹ..ஹ.. ஹா '' என்று சிரிப்பானோ என்று தயக்கமாக இருந்தது. திருக்குறளிலும் வள்ளுவரிலும் எனக்கு இருக்கும் தாகம் அவனுக்கு இருக்குமா?

நான் கிளம்பும் போது பிரேமாவும் காயத்ரியும் எதிரில் வந்தார்கள். ஹாஸ்டல்வாசிகள். ஹாஸ்டலில் பொங்கல் சாப்பிட்டு முடித்ததும் தினமானி. "என்ன ஸôர் வந்ததும் கிளம்பிட்டீங்க?''

"போய்ட்டு வந்து சொல்றேன்''

ட்ரைவ்- இன் ஹோட்டலில் கதர்வேட்டி, சட்டையுடன் ஒரே ஒருவர்தான் தென்பட்டார். மா நிறம். ரப்பர் செருப்பு போட்டிருந்தார். கக்கத்தில் ஒரு மஞ்சள் பை. சிலைகளில் இருப்பது போல குடுமியோ, அந்த நீளத்துக்குத் தாடியோ, அகன்ற நந்தி முகமனைய மார்போ இல்லை. வயசு? கணிக்க முடியவில்லை. ஐம்பதில் இருந்து எண்பதுக்குள் ஒரு வயது.

என்னைப் பார்த்ததும் புன்முறுவல்.

"தேநீர்?'' என்றார்.

தயாராக டோக்கன் வாங்கி வைத்திருந்தார்.

"உங்க நேரத்தை அதிகம் எடுத்துக்க மாட்டேன்''

"பராவால்ல சொல்லுங்க''

"இடைச் செறுகல் திருக்குறள் பற்றியெல்லாம்கூட அப்புறம் பேசுவோம். வாசுகி போனப்புறம் "வீடு' (வீடு பேறு) என்ற அதிகாரத்தை எழுத ஆரம்பித்தேன். இங்கில்லை. இமயத்துக்குப் போய்ட்டேன். எழுதி முடித்து இறங்கி வருவதற்கு நாளாகிவிட்டது. அதற்குள் நான் இறந்துவிட்டதாக முடிவு செய்துவிட்டார்கள் ''

"அடடா...''

"திரும்பி வந்தபோது களப்பிரர் காலம். சொல்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. கிழித்துக் கொளுத்திப் போட்டுவிடுவார்களோ என்ற பயம். அப்படியேவிட்டுட்டேன். நேரம் வரட்டும் என்று பிற்கால சோழர்கள் காலத்தில் ராஜராஜ சோழனைப் பார்த்து சொல்லலாம் என்று நினைத்தேன். அவர் சிவ பக்தர். என்னை சமணர் என்று ஒதுக்கும் வாய்ப்பு இருந்தது. அப்புறம் வந்தவர்களும் பொதுவாக சமணர் என்றால் கழுவேற்றுவது, சுண்ணாம்புக் காலவாயில் போடுவது என "சமய'ப் பிரச்னையில் தீவிரமாக இருந்தனர்.''

"நடுவில் யார் கிட்டயும் சொல்ல முடியலையா?''

"இன்னொரு காரணம். என்கிட்ட இருக்கும் ஓர் அபூர்வ மூலிகை. இமயத்தில் கண்டெடுத்தேன். அதைச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் வெறும் காற்றைப் புசித்து காற்றில் கரைந்து காற்றாகவே வாழலாம். மீண்டும் உருவம் வரும். தேவைப்பட்டால் வாழலாம். இல்லை காற்றோடு காற்றாக...''

"அப்படியா?''

"மீண்டும் வந்த போது விஜயநகர பேரரசு. தமிழகம் முழுவதும் தெலுங்கு ஆட்சி. அப்புறம் வந்தபோது நவாபுகள்! ஒன்றும் பலிக்கவில்லை. மீண்டும் வந்து பார்க்கிறேன். பிரிட்டீஷ் காரர்கள். இர்வின் பிரபு காலத்தில் வந்தேன். அதோடு இப்போதுதான் வருகிறேன். காந்தியைக்கூட சுட்டுவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்'' என்று வருத்தப்பட்டார்.

"எல்லாம் சரிங்க. இப்ப நீங்கதான் திருவள்ளுவர் என்பதற்கு...?''

"எவிடன்ஸ்..?''

"ஆமா!''

"இருக்கிறது தம்பி. நான் எழுதின வீடு அதிகாரம் அப்படியே இருக்கிறது. கார்பன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் இரண்டாயிரம் வயசு தெரியும்.''

மஞ்சள் பையில் இருந்த ஓலைச் சுவடியை எடுத்துப் பிரித்தார். பழுத்துக் காய்ந்து போயிருந்தது சுவடி. பழைய தமிழ் எழுத்துக்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அக்கம் பக்கத்தில் இருக்கும் எல்லோரையும் கூவி அழைத்து 1331- வது குறளைப் படித்துக் காட்ட வேண்டும் என்று பரபரப்பாக இருந்தது.

எழுத்துக்களின் தலைக்கு மேல் புள்ளி வைக்கிற வழக்கம் அப்போது இல்லை.எழுத்துக்களின் வடிவங்களைப் பார்த்தபோதே இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சமாச்சாரம் என்று தெரிந்தது.

ஐயோ... என்ன ஒரு ஸ்கூப் செய்தி... கட்டம் கட்டிப் போட வேண்டியது ஜெனிபர் தமில் பேசும் செய்தி அல்ல.. திருவள்ளுவர் பற்றியது.

"சார்.. ஸôரி... ஐயா. வாங்க தினமானிக்குப் போகலாம்'' என்றேன். திருவள்ளுவரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்ற பெருமை எனக்குக் கிட்டட்டும்.

"இல்லை தம்பி. அவசரப் படாதே இந்த முதல் குறள் ஏட்டை உன்னிடம் தருகிறேன். இதைப் பரிசோதித்து, காலம் கண்டு உங்கள் பத்திரிகையில் பிரசுரியுங்கள். அதிகாரிகளும் மக்களும் ஏற்றுக் கொண்டால் நானே உங்கள் அலுவலகம் வருகிறேன்.''

ஒரே ஓர் ஓலையை மட்டும் தனியாக எடுத்தார்.

"இதில் என்ன எழுதியிருக்கிறீர்கள்?''

"இம்மையும் மறுமையும் வேண்டாவாம் யாக்கைக்குத்
தம்மையே உணர்வார் தலை''

"ஆஹா...''

குறித்துக் கொண்டேன்.

"நாளை தினமானியில் இதுகுறித்து செய்தி வெளியானால் உலகம் என்னை ஏற்றுக் கொண்டது என்று கொள்வேன். இல்லையேல் இந்த மூலிகை உண்டு. அடுத்த நூற்றாண்டில் என்னைப் புரிந்து கொள்வோரைத் தேடுவேன்.''

"அடுத்த நூற்றாண்டு அவசியமே இல்லை. இதோ இன்றே இந்த உலகத்துக்குப் புரிய வைக்கிறேன். "யாமறிந்த புலவரிலே வள்ளுவன் போல்...' நாளைக்கு நியூஸ் பார்த்ததும் வந்துடுங்க ஐயா""

"நியூஸ் வரவில்லை என்றால் காற்றிலே கரைந்து போவேன்.''

இதைவிட வேறு என்ன செய்தி வேண்டும். சுவடியைப் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பறந்தேன். நாளை உலகமே என்னைக் கொண்டாடப் போகிறது. என்னைச் சுற்றி வெப்பம். இல்லை.. ஏதோ கதிர் வீசிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

ஆசிரியர் அறையைத் திறந்து "ஸôர்'' என்றேன் ஆர்வம் பொங்க.

"என்னப்பா?''

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியவில்லை.

மேல் பாக்கெட்... ஐயோ... சுவடியைக் காணவில்லை. வந்த வேகத்தில் வழியில் எங்கோ விழுந்திருக்க வேண்டும். என்ன கொடுமை!

"என்னப்பா பேயறைஞ்ச மாதிரி நிக்கிறே?''

"இல்ல ஸôர் ஒரு நியூஸ்...'' இப்படிச் சுவடியைத் தொலைத்ததைச் சொன்னால் கண்டபடி திட்டுவார்.

"என்ன நியூஸ்?''

"உலக அழகி ஜெனிபர் "என்க்கு டமில் புட்கும்னு...''



(ஆனந்த விகடன் - 2004)

LinkWithin

Blog Widget by LinkWithin