திங்கள், மார்ச் 30, 2009

திரைக்குப் பின்னே- 26

படிப்பில் இருந்து நடிப்புக்கு...!

’செந்தமிழ்ப் பாட்டு’ படம் படு தீவிரமாக ஓடிக் கொண்டிருந்த நாளில் அப் படத்தின் கதாநாயகியான கஸ்தூரியைப் பார்க்கப் போனேன். அவருடைய அம்மா ஒரு அட்வகேட். தந்தை பொறியியல் பயின்றவர். கஸ்தூரி ரங்கன் சாலையில் சோவியத் கல்சர் சென்டர் அருகே அவருடைய வீடு இருந்தது. அவருடைய சுடிதாரை அயர்ன் செய்து கொண்டும் டிபன் சாப்பிட்டுக் கொண்டும் அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
"காலேஜுக்கு ரொம்ப டயமாயுடுச்சு நான் வர்றேன்'' என்று புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு ஓடும் போதுதான் அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயமே தெரியும். கல்லூரியில் படித்துக் கொண்டே படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் கஸ்தூரி. 91ஆம் ஆண்டு மிஸ் சென்னையாகத் தேர்வாகி அதே வேத்தில் நடிக்க வந்தவர். நான் பேட்டிக்குச் சென்ற போது அவர் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.
ஒரு சினிமா நடிகையாக தன்னை முழுதாக மனதில் நிரப்பிக் கொள்ளாத அந்தத் தருணம் அவரிடம் பேசுவதற்கு சுலபமாக இருந்தது. சினிமா பற்றியில்லாமல் கல்லூரி அரட்டைகள், படிக்கிற புத்தகங்கள் பற்றி நிறைய பேசினார். ஜெஃப்ரி ஆர்ச்சர் என்றால் உடனே அவருடைய நாவல்களில் தனக்குப் பிடித்த நாவல் அதுதான். தமிழில் அப்படியொரு நாவல் சான்ஸே இல்லை என்பார். ஜெஃப்ரி ஆர்ச்சரின் மேட்டர் ஆஃப் ஆனர் பற்றி அப்படி புகழாரம் சூட்டினார். கூட படிக்கிற பசங்களுக்கெல்லாம் நான் ஜோசியம் சொல்வேன் என்றார். உங்க பிறந்த தேதி சொல்லுங்க உங்க ஜாதகத்தைச் சொல்றேன் என்றார் உற்சாகமாக. அப்புறம்தான் ஜோடியாக் ஸேன் ஜோதிடத்தில் நிபுணரான லிண்டா குட்மேன் புத்தகங்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
படப்பிடிப்புத் தளங்களில் பார்த்தாலும்கூட பேட்டிக்காக என்று இல்லாமல் ஏதாவது ஒரு புத்தகம் பற்றி பேச முடிந்தது இவரிடம். ஆரம்பத்தில் கிசுகிசுக்களையும் ஜாலியாகத்தான் எடுத்துக் கொண்டார். அமெரிக்காவுக்குப் போன இந்திய சாமியார் கதையைச் சொன்னது இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அமெரிக்க பத்திரிகையாளர்கள் இந்திய சாமியாரின் வாயைக் கிளறுகிறார்கள். அவரோ படு ஜாக்கிரதையாகப் பேசுகிறார். அமெரிக்காவில் விபசார விடுதிகள் இருக்கும் இடங்கள் பற்றித் தெரியுமா என்பார் பத்திரிகையாளர். சாமியாரும் படு ஜாக்கிரதையாக அதெல்லாம் எனக்குத் தெரியாது என்பார். மறுநாள் பத்திரிகையில் இப்படி செய்தி வெளியாகும்: "விபசார விடுதிகள் எங்கே இருக்கின்றன? இந்திய சாமியார் ஆர்வம்'. இந்தக் கதையை கஸ்தூரிதான் சொன்னார்.
சினிமாவில் இருந்த போட்டியும் தேவையும் அவரை மெதுவாக மாற்றிக் கொண்டிருந்தது. கிசு கிசுக்கள் வர ஆரம்பித்தன. அவருடன் சுற்றுகிறார். இவருடன் சுற்றுகிறார் பாணியில். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் மாணவியாக இருந்து நடிகையாக மாறியதைப் பார்த்தேன். புத்தகங்கள் பற்றிப் பேசுவது குறைந்து போனது. பேசுவதற்கு அவருக்கு அதைவிட முக்கியமாக வேறுவிஷயங்கள் உருவாகிவிட்டன.

முதல்வரிடம் மனு!

சினிமாவில் மார்க்கண்டேயர் என்று சிவகுமாரைச் சொல்வார்கள். இன்னொருவரைச் சொல்வதென்றால் முரளியைச் சொல்லலாம். சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இன்றி ஒரே மாதிரி தோன்றியவர் அவர்.
பெப்ஸி - படைப்பாளி என்று பிரச்சினை வலுத்துக் கொண்டிருந்தபோது படைப்பாளிகள் தனியாகவும் தொழிலாளர்கள் தனியாகவும் முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்தனர். சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு இருந்ததால் இவர்கள் தரப்பில் மனு கொடுக்கும்போது பெரிய ஊர்வலமே நடந்தது.
நடிகர்கள் திரளாக வந்திருந்தனர். முதல்வரைச் சந்திக்க செயலகத்தில் காத்திருந்த நேரத்தில் சத்யராஜ், தீவிரமாக ஒரு யோசனையை முன் வைத்தார். முதல்வரிடம் நாம் இன்றைக்கு இன்னொரு கோரிக்கை மனுவையும் முன் வைக்க வேண்டும் என்றார். இருந்த தீவிரத்தில் நடிகர்கள் அனைவரும் சொல்லுங்கள் குறித்துக் கொள்கிறோம் என்றார்கள்.
"நம்ம முரளி இருக்காறே, அவர் பதினைஞ்சு வருஷமா காலேஜ் பையனாவே நடிச்சுக்கிட்டு இருக்காரு. அடுத்த வருஷம் அவருடைய பையன் காலேஜ் போகப் போறார். இன்னமும் இப்படி வம்பு பண்ணிக்கிட்டு இருக்கறது நல்லதில்ல. முதல்வர்கிட்டயே இதுக்கு ஒரு நல்ல முடிவெடுக்கச் சொல்லிடுவோம்'' என்றார்.

முரளிக்கு வெட்கம் தாளவில்லை. "போங்கண்ணே.. நான் ஏதோ சீரியஸா கோரிக்கை சொல்லப் போறீங்கன்னு நினைச்சா...'' என்றார்.
"அட சீரியஸாதாம்பா சொல்லிக்கிட்டு இருக்கேன்'' என்றார் சத்யராஜ்.


திராவிட ராஜேஷ்?

பத்திரிகையாளர்கள் சில நேரங்களில் புதுமுக நடிகர்களுக்கு யோசனைகள் வழங்குவதுண்டு. யாரை மேனேஜராக வைத்துக் கொள்ளலாம், எந்த இயக்குநர் படத்தில் நடிக்கலாம், எந்தத் தயாரிப்பு நிறுவனம் சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிப்பார்கள்... இந்த மாதிரி யோசனைகள் சொல்லுவோம். புதிதாக நடிக்க வருபவர்களுக்கு அதெல்லாம் வேதவாக்காக இருக்கும்.
நல்ல யோசனை சொல்வதாக நினைத்து நான் செய்த ஒரு காரியத்தை நினைத்து வருந்துவதற்கும் சிரிப்பதற்கும் ஒரு விஷயம் இருக்கிறது.
’வெயில்' படத்துக்கு முன்பு வசந்தபாலன் இயக்கிய ’ஆல்பம்' படத்தில் கதாநாயகனாக தெலுங்குப் பட உலகின் பிரபல ஹீரோ கிருஷ்ணாவின் மகன் ஆர்யன் ராஜேஷ் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது,
தமிழக அரசியல் சூழ்நிலை பற்றியெல்லாம் விளக்கி, ஆர்யன் என்ற வார்த்தை தமிழர்களுக்குப் பிடிக்காத வார்த்தை என்றும் ஆரிய- திராவிட போர்கள் பற்றியும் சொன்னேன்.
அவர் ஆச்சரியப்பட்டும் பதறியும் போனார். "எனக்கு யாருமே இந்த விஷயத்தைச் சொல்லவே இல்லையே?'' என்றார்.
போதாதா?
கேரளத்தில் மோகன்லால் நடித்து வெளியான ஆர்யன் என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகும்போது திராவிடன் என்று மாற்றி அதில் சத்யராஜ் நடித்தார் என்றேன். மலைப்பின் உச்சிக்கே போய்விட்டார். விட்டால் திராவிட ராஜேஷ் என்று பெயர் வைத்துக் கொள்வார் போல மாறிவிட்டார்.
அடுத்து வந்த பட அறிவிப்புகளில் தன் பெயரை வெறும் ராஜேஷ் என்று மாற்றிக் கொண்டார். பட நிறுவனம், இயக்குநர், தன் தந்தையிடமெல்லாம் என்ன விளக்கம் கொடுத்து இந்த மாற்றத்தைச் செய்தாரோ தெரியாது. என்னுடைய அறிவுரையின்படி அவர் பெயரை மாற்றிக் கொண்டது எனக்கும் பெருமையாக இருந்தது.
பிறகு ஆர்யா என்ற பெயரிலேயே ஒரு நடிகர் வந்து, வெற்றி நட்சத்திரமாக இப்போதைய நான் கடவுளாகவே கோலோச்சிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆர்யன் ராஜேஷ் என்ன நினைக்கிறாரோ? தமிழர்களின் ஆர்ய வெறுப்பும் எப்படி மறைந்ததோ? புதிராகத்தான் இருக்கிறது.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

aryan rajesh is telugu director dsathya narayana's son.

by
ramesh ,mayavaram

பெயரில்லா சொன்னது…

aryan rajesh is telugu director dsathya narayana's son.

by
ramesh ,mayavaram

butterfly Surya சொன்னது…

நடமாடும் தமிழ் சினிமா லைப்ரரியே..

வாழ்த்துகள்.

LinkWithin

Blog Widget by LinkWithin