வெள்ளி, மே 29, 2009

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்

அறிஞர் அண்ணா எழுதிய இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் என்று நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது. அண்ணாவுக்குப் பேரன் எழுதியதாக நினைத்தால் தப்பில்லை.



தம்பிக்காக...


மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது (1993) தமிழ்ப் பாட வகுப்பில் பேராசிரியர் இ. மறைமலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் தாங்கள் வாசித்த பிடித்தமான புத்தகங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போது எனக்குப் பிடித்தமான புத்தகமாக "இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்'' என்றேன். ஏதோ புத்தகத்தின் தலைப்பு என்று விட்டுவிட முடியவில்லை. தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். "யார் எழுதியது?'' என்றார். "அண்ணா எழுதியது?'' என்றேன்.

"அண்ணாவா?'' என்று வியப்போடு கேட்டுவிட்டு மற்ற மாணவர்களிடம் வரிசையாகக் கேட்டுக் கொண்டே போனார்.

தமிழறிஞருக்குத் தெரியாத ஒரு புத்தகத்தை நாம் சொல்லிவிட்டோம் என்று பெருமிதமாக இருந்தது. எல்லா மாணவரிடத்தும் கேட்டு முடித்துவிட்டு மீண்டும் என்னிடத்தில் வந்தார்.
"எதைப் பற்றி எழுதியிருக்கிறார்?'' என்றார்.

"நெப்போலியன் வாழ்க்கை வரலாற்று நூல்''

"எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது?''

"பதிப்பகம் தெரியவில்லை. தமிழ்நாடு மின்சார வாரிய செயலகச் சங்க ஆண்டுவிழா மலரில் (1972) இது வெளியாகி இருக்கிறது''

"மின்வாரிய மலரா?''

"என் தந்தையார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர்தான் மலரில் அதை வெளியிடக் காரணமாக இருந்தார்' 'என்றேன்.

அண்ணாவின் நூல்கள் பார்வதி பி.ஏ. ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகை, செவ்வாழை, ரோமாபுரி ராணிகள் உள்ளிட்ட நூல்களை புத்தகக் கடைகளிலோ, நூலகங்களிலோ பார்க்க முடிகிறது. திராவிடர் கழகக் கூட்டங்களில் "தீ பரவட்டும்', "ஆரியமாயை', "கம்பரசம்' போன்ற நூல்களின் மலிவுப் பதிப்பைப் பார்க்க முடியும். இது ஏனோ எங்கும் என் கண்ணில் பட்டதே இல்லை. பலருக்கும் இப்படியொரு நூல் அண்ணாவால் எழுதப்பட்டது தெரிந்திருக்கவில்லை.

பதிப்பாளர்களும் இந்த நூல் பெரிய அளவில் விற்பனை ஆகாது என்று நினைத்தோ என்னவோ பதிப்பில் இருந்தே விடுபட்டுப் போயிருந்தது. அல்லது தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு யார் கண்ணிலும் படாமலே போய்விட்டதோ தெரியவில்லை.

இப்போது என் ஆச்சர்யமெல்லாம் இரண்டு.

முதல் ஆச்சர்யம், நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை மின்வாரிய ஆண்டு மலரில் என் தந்தை ஏன் பிரசுரித்தார்?

அதற்கு இப்படியொரு சமாதானம் சொல்லிக் கொள்வேன்.

என் தந்தைக்கு அண்ணாவை மிகவும் பிடிக்கும். நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழில் உதவியாசிரியராக சில மாதங்கள் பணியாற்றிய நேரத்தில் அண்ணாவோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சம்பவத்தைச் சொல்லுவார்.

தனக்கு வைத்த அப்பளத்தை அண்ணா வேகமாகச் சாப்பிட்டுவிட்டதால் தன் இலையில் இருந்த அப்பளத்தை அவருக்குக்

கொடுத்தேன். அண்ணா "ஏன் அப்பளம் பிடிக்காதா?'' என்றார்.
"உங்களுக்குப் பிடிக்கிறதே என்று வைத்தேன்'' என்றேன்.

அண்ணா ரசித்துச் சிரித்தார்.

இதைச் சொல்லும்போது என் தந்தையின் கண்கள் கலங்கிவிடும். அப்படியொரு பிரியம். அவர் படித்த நாளிதழ் எல்லாம் நாத்திகம்,

திராவிட நாடு, முரசொலி மட்டுமே. கல்லூரியில் படித்த காலத்தில் அதை அண்ணா எழுதிய சூட்டோடு இதைப் படித்தவராக என் தந்தை இருந்திருக்கக் கூடும். பசுமரத்தாணியாய் அப்போதே பதிந்துபோய் இருக்கலாம்.

இரண்டாவது ஆச்சர்யம். நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை அண்ணா தம் தம்பிகளுக்கு எழுதியது ஏன்?

நெப்போலியனும் அண்ணாவைப் போல் அதிக உயரம் இல்லாதவர்தான். ஆனால் நிச்சயமாக இந்த நூலை எழுதுவதற்கு அது காரணமாக இருக்காது.

தம்பிகளுக்கோ, அவர் அப்போது எதிர் கொண்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கோ நெப்போலியன் கதை எந்தவிதத்தில் துணைபுரிந்தது.

அடிப்படையில் முழு நேர எழுத்தாளர் அல்ல. அரசியல்வாதி. பேச்சாளர்.

ஆனால் பெரிய வாசிப்பாளராகவும் கிடைத்த அரிய நேரத்தில் எழுதிக் கொண்டே இருந்தவராகவும் தெரிகிறார். அரிய திரைப்படங்களைத் தேடிச் சென்று பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

அவருக்கென்று ஓர் அடுக்கு மொழி நடை வைத்திருந்தார். அது மிடுக்கானது; ஆனால் அதில் அவர் சிக்கிக் கொண்டவராகத் தெரிகிறார். அவர் படித்த மிக உன்னதமான விஷயங்களையும் அந்த நடையில் கொடுக்க முயன்றதால் மலிவாகத் தெரிந்தது மற்றவருக்கு.

கட்சிக்காரர்களுக்காக அவர் சற்று இறங்கிவந்து எழுதியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

ஒரு நாள் இரவு. பெங்களூர் ஓட்டல் ஒன்றில் அண்ணா ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஈ.வே.கி. சம்பத் இருக்கிறார்.

சம்பத்துக்கு அண்ணாவின் திராவிட நாடு கொள்கை உறுதியானதுதானா என்ற சந்தேகம். "திராவிட நாடு கொள்கையில் உங்களுக்கு நிஜமாகவே நம்பிக்கை இருக்கிறதா?'' என்கிறார். அண்ணா தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பதிலே சொல்லவில்லை.

இரண்டு மூன்று முறை இதைப் பற்றி கேட்கிறார். அண்ணா பதில் சொல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்.

அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த புத்தகம். அது டி.ஹெச். லாரன்ஸ் எழுதிய லேடி சாட்டர்லீஸ் லவ்வர் என்ற ஆங்கில நாவல்.

திராவிட நாடு கோரிக்கையும் சாதி மறுப்பு கோரிக்கையும் காங்கிரஸ்கட்சி எதிர்ப்பும் பேசி வந்த ஒருவருக்கு லேடி சாட்டர்லீஸ் படிப்பது அவருடைய விருப்பங்களை மீறிய வாசிப்புத் தேடலாகவே இருக்கிறது.

மேடைகளிலே சாக்ரடீஸ், அலெக்ஸôண்டர், வால்டேர், ரூúஸô, ரஷ்ய புரட்சி என்று பேசியவர். உலகின் அத்தனை பெரிய நதிகளையும் பற்றி அவர் ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் பேசியதை என் தந்தை கூறியிருக்கிறார். ஒருமுறை கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன என்கிறார் அண்ணா. மாணவர்களுக்கு தலைப்பு கொடுத்துப் பேசச் சொல்வதாக எண்ணமே இல்லை. ஆகவே ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதையே தலைப்பாக்கி ஒன்றுமில்லை என்பது குறித்து ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார். உலகு தழுவிய பரந்துபட்ட ஞானம் அவருக்கு இருந்தது. அவர் தேடித் தேடி வாசித்த படிப்பாளி.

ஆனால் தமிழக அரசியலில் தொண்டர்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டியதோ மிகச் சொற்பம்தான். சொல்லப்போனால் அவர் தொண்டர்களுக்குத் தனியாகவும் அவருக்காகத் தனியாகவும் செயல்பட்டவராகவே இருக்கிறார். நிறைய கூட்டங்களில் சொற்பொழிவு, கட்சிப் பணி, நாடகப் பணி, திரைக்கதை வசனம், ஓயாத சுற்றுப் பயணம், பத்திரிகைப் பணி எல்லாம் கொண்ட மனிதராகவும் இந்தச் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட ரசனையும் உள்ளவராகவும் அண்ணா இருக்கிறார். அதனால்தான் நெப்போலியன் வாழ்க்கைக் கதையைப் படிக்கவும் அதைத் தமிழில் எழுதவும் அவருக்கு முடிந்திருக்கிறது. எல்லாவுக்கும் மேலாக அதைத் தம்பிக்காக எழுத முடிந்திருக்கிறது.


கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எலினா தீவிலே இறக்கிறான். இந்த இரண்டுத் தீவுக்கிடையில் அவன் கண்ட ராஜ்ஜியங்கள் என்ன பெயரென்ன புகழென்ன?

பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எப்படி பிரெஞ்சு தளபதியானான்? ஜோஸபினைச் சந்திப்பதும் காதலிப்பதும் மணந்த மறுநாளிலேயே இத்தாலி மீது படையெடுத்தது , ரஷ்யாமீது போர்த் தொடுத்து அடைந்த இன்னல்கள் எல்லாம் இருக்கிறது.
ஆனால் இது சரித்திர நாவலா, சரித்திரமா என்பதில்தான் முடிவெடுக்க முடியாத நிலை. சரித்திரக் குறிப்புகள் உள்ளன.

நெப்போலியன் பிறந்த ஊர், பிறந்த ஆண்டு, மணந்த ஆண்டு, முடிசூட்டிக் கொண்ட ஆண்டு, கொள்கை முடிவுகள், குழப்பங்கள்

எல்லாம் இருக்கின்றன. கூடவே தம்பிகளுக்கு எடுத்துச் சொல்கிற வியாக்யானங்களும் உண்டு. தம்பிகளுக்குப் பிடித்ததே அந்த வியாக்யானங்கள்தான். சரித்திர மாணவர்களுக்கோ இவருடைய வியாக்யானங்கள் அத்தனை முக்கியமில்லை. அவர்களுக்குத் தேவை சரித்திரக் குறிப்புகள்.

அதனால்தான் இந்த நூல் அந்த இரு தரப்பினராலும் போற்றத் தக்க நூலாகவோ புறக்கணிக்கப்பட்ட நூலாகவோ இருக்கிறது இப்போதும்.

தமிழ்மகன்
சென்னை -50
06-11 -2008

கையேடுகளின் நிரந்தர ஆட்சி!

உலகின் எத்தனையோ தத்துவம மரபைப் போலவே திராவிட இயக்க சிந்தனைக்கும் ஆழமான ஒரு தத்துவ தரிசனம் உண்டு. அது இப்போது தடம் மாறி சாதீய மதவாத கட்சிகளோடு தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீர்த்துப் போயிருப்பதாகக் கூறினாலும் அதன் ஆரம்ப குறிக்கோள்கள் வீரியத்தோடுதான் இருந்தன.

"பரத்தியாவதேதடா பனத்தியாவதேதடா' போன்ற சித்தர் சித்தாந்தமும் "சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் சோதியைக் கண்டேனடி' என்ற வள்ளலாரின் சிந்தனையும் பவுத்த சிந்தனை மரபும் ஊறித் திளைத்து விளைந்த ஒரு இயக்க ரீதியான செயல் தத்துவம் இது.

பெண் விடுதலை, தன்மான உணர்வு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, நாத்திகவாதம், இன உணர்வு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுத்தன்மையோடு திராவிட இயக்கம் உருவானது.

மேடைப் பேச்சு, பிரசுரங்கள் மூலமே கட்டப்பட்ட ஒரு இயக்கமாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். உரம் ஏறிப் போயிருந்த இன்னொரு எழுச்சியைப் பிளந்து கொண்டு பிறந்த இந்த இயக்கத்தின் பெரும் பலம் பிரசுரங்கள்தான். சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் எழுச்சி பெற்றிருந்த மக்கள் மத்தியில் தன்னந்தனியராக எழுந்தவர் பெரியார். மிகவும் உண்மையானவராகவும் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும் இருந்ததால்தான் சுதந்திரத்துக்கு மாற்றாகவும் அல்லது சுதந்திரத்தைவிட உடனடி தேவையாகவும் "மக்கள் இழிவு இன்றி வாழ வேண்டும்' என்பதை முக்கியம் என்று அவரால் வலியுறுத்த முடிந்தது.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவருடைய பேச்சில் மக்களுக்கு இன்னமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. சுதந்திர வேட்கைக்கு சமமான ஒரு ஆதரவோடு, எழுச்சியோடு திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய உழைப்பும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்த துணிச்சலும் பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கை உயர்த்தியது.

அவருடைய மிக நேர்மை தொனிக்கும் எளிமையான பேச்சில் மக்கள் ஈர்க்கப்பட்டனர். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அவரே இருக்க முடியாத சூழலைத் துண்டுப் பிரசுரங்கள் தீர்த்து வைத்தன. அவருடைய பேச்சும் எழுத்தும் சிறிய சிறிய பிரசுர நூல்களாக வந்தன. அது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் படிப்பவரைத் தூப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டாக்களின் நிலைக்குத் தள்ளியது.

அவருடைய சுயமரியாதை பிரசார வெளியீடுகள் மிக மலிவான விலையில் வெளியாகின. மக்களுக்குப் புதிய சிந்தனையை -மாற்று சிந்தனையை - ஊற்றெடுக்க வைப்பதாக அவை அமைந்தன.

"சோதிடப் புரட்டு' என்ற நூலில் சோதிடம் கணிப்பவர்கள் பூமியை மையமாக வைத்து சூரியன் அதைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத ஒரு விஷயத்தை மக்கள் நம்புவது முட்டாள்தனமாக இல்லையா? என்ற நுணுக்கமான கேள்வியை பெரியார் முன் வைத்தார்.

கைரேகை பார்த்து சோதிடம் சொல்வதென்றால் குரங்குகளுக்கும் கையில் ரேகை இருக்கின்றதே, அதற்கும் வேலை வாய்ப்பு, சொத்து வரவு எல்லாம் உண்டா? என்பார்.

மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியை, அவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை கல்வியின் அவசியத்தை அந்தத் துண்டுப் பிரசுரங்கள் செய்தன. ஒரேயடியாக மூடநம்பிக்கை புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் சாதி, மத பிரிவினையால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பிரசுரங்கள் அதிரடி வைத்தியமாக இருந்தன. வேதங்கள் பெண்களை ஐந்தாம் வர்ணமாக பிரிவினை செய்திருப்பதை அவை தோலுரித்துக் காட்டின. திருமண மந்திரங்கள் என்ற பெயரில் உச்சரிக்கப்படும் பிற்போக்குத்தனங்களை மக்கள் அறிந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் வேகமாக நடந்தன.

கலப்பு மணம் என்ற வார்த்தையையே அவர் கிண்டல் செய்கிறார். "நான் என்ன மாட்டுக்கும் மனுஷனுக்குமா திருமணம் செய்கிறேன். மனிதனுக்கும் மனிஷிக்கும்தான் திருமணம் செய்கிறேன். இது எப்படி கலப்பு மணம் ஆகும்' என்ற நியாயமான கேள்வியில் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மறுமணங்களை ஆதரித்தும் தாலி என்ற லைசென்ஸ் அடையாளத்தை நீக்கியும் அவர் மறுமலர்ச்சி செய்தார். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த சடங்குகளை சில ஆண்டு பிரசாரத்தின் மூலம் அவர் ஆட்டம் காணவைத்தார்.

தத்துவவிளக்கம் என்ற அவருடைய சிறிய துண்டு பிரசுரம் வேதங்களும் மதகுருமார்களும் என்னென்ன சொல்லி வந்திருக்கிறார்கள். அதில் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று தோலுரித்தன. அவர் இசை, கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பேசுவதினும் முக்கியமாக சமத்துவத்தைப் போற்றியதால் இவற்றை அவர் தன் வாழ்நாளில் இருந்து தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அன்னா கரீனினாவையோ ஆன்டன் செகாவையோ படிக்காமல் போனது தமிழகத்துக்கு நேர்ந்த இலக்கிய இழப்புதான். ரத்தமும் சதையுமாக உண்மை சொட்டும் அவருடைய நடையில் அவருடைய ஆர்வம் இன்றியே இலக்கியத் தன்மை இருந்தது. எழுத்தாளர் க.நா.சு இவருடைய எழுத்து நடையைச் சிலாகித்திருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.

சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் - மூட நம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்; என்று விமர்சிக்கிறார்.

ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் போன்ற தமிழின் தலைசிறந்த நூல்களாக எண்ணுகின்ற அனைத்தைப் பற்றியும் அவருக்கு இப்படியான கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. மனிதன் சாதி வாரியாக கேவலப்பட்டுக் கொண்டிருப்பதையும் புரோகிதர்களின் புரட்டுகளையும் கண்டிக்காமல் என்ன ரசனை வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். இது குறித்து "தமிழர், தமிழ் இலக்கியங்கள்' என்ற வெளியீடு ஒன்று வெளியாகியுள்ளது.

அவருடைய அறிவு விருந்து என்ற பிரசுரத்தில் "கடவுளும் தண்டிக்கிறான், மனிதனும் தண்டிக்கிறான். கடவுளும் பழி வாங்குகிறான், மனிதனும் பழி வாங்குகிறான். இவையெல்லாம் மனிதன் கற்பித்தவை என்பதாலேயே இப்படி மனித குணத்தோடு இருக்கின்றன' என்கிறார்.

"புரட்டு இமாலய புரட்டு', "நீதி கெட்டது யாரால்?', "காந்தியாரின் படத்தை எரிப்பது ஏன்?', "புரட்சி அழைப்பு', "சுதந்திர தமிழ்நாடு ஏன்?', "பாரத ஆராய்ச்சி' போன்ற பல தலைப்புகளில் வெளியீடுகள் வந்துள்ளன. இந்த வெளியீடுகள் 1930-களின் துவக்கத்தில் இருந்து இப்போதும் .. இன்றைய பிரச்னைகளான இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற தலைப்புகளில் வெளியீடுகள் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடாக வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் தவிர கைவல்ய சாமி, குத்தூசி, அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களின் பேச்சுகள்- எழுத்துகளும் இத்தகைய பிரசார வெளியீடுகளாக வந்திருப்பதைக் காண முடிகிறது.
அறிஞர் அணண்ணாவின் "தீபரவட்டும்', "ஆரிய மாயை' போன்ற பேச்சு வெளியீடுகள் அன்றைய இளைஞர்களுக்கு ஆவேசத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பல பல்வேறு ஆட்சிச் சூழல்களில் தடைசெய்யப்பட்ட நூல்களாகவும் அதனாலேயே அதிகம் பரபரப்புக்கு ஆளான நூல்களாகவும் விளங்கின.

பகுத்தறிவு பிரசார வெளியீடு, திராவிடப் பண்ணை, நாத்திகம் வெளியீடு, பெரியார் மையம், சிந்தனையாளன் வெளியீடு போன்ற பல அமைப்புகளும் இத்தகைய துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன.

ரேடியோ, தொலைக்காட்சி, அலை பேசி, தொலைபேசி, வாகன வசதி, சாலை வசதி, கமம்ப்யூட்டர் தொழில்மமநுட்பம், இண்டர் நெட் போன்றவை அறவே õல்லாத நிலையிõல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில் இந்தத் துண்டுப் பிரசுரங்களின் பங்கு மகத்தானது.

தமிழரின் பேச்சில் எழுத்தில் வாழ்வில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தியிருக்கும் மகத்தான மாற்றம் என்ன வென்றால் இப்போது பக்கத்து மாநிலங்களான ஆந்திரத்திலும் கேரளத்திலும் கர்நாடகத்திலும் நாயுடு என்றும், நாயர் என்றும் ராவ் என்றும் ஆட்சியாளர்களேகூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் சகலருக்கும் கூச்சம் இருக்கிறது. மறைவில் சாதி அதன் வன்மத்தோடு தயாராகக் காத்திருப்பதை மறுக்கவில்லை. ஓட்டுக்கு ஏங்கிகளால் அது எப்படியெல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சாதியை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் காட்டுகிற தயக்கம், சாதி மறுப்பு, மறுமணம் போன்றவற்றில் ஏற்பட்ட சிறிய வெற்றியை இந்த பிரசுரங்கள் சாத்தியமாக்கின. ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த சில மாற்றங்களுக்குப் பின்னும் இந்த காலணா கையேடுகளின் உத்வேகம் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இக் கையேடுகளின் ஆட்சி நிரந்தமானது.

சமரசம் செய்ய வேண்டிய இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெரியார் உதறித்தள்ளியதற்கான கணிப்பையும் இப்போது தெளிவாகவே உணர முடிகிறது.

வெள்ளி, மே 15, 2009

சினுவா ஆச்சுபியுடன் ஓர் ஆப்ரிக்கப் பயணம்!

ஒரு இனம் அல்லது ஒரு மொழி அதன் தொன்மையை எப்படி பறைசாற்றுகிறது?

அதனுடைய ஆழமான இலக்கியச் செறிவு, உணவுப் பழக்க முறைகள், பண்பாட்டு கூறுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓர் இனத்தின் தொன்மை அளக்கப்படுகிறது. கிரேக்க, எகிப்து, இந்திய பழந்தன்மையைப் பார்த்தால் அவற்றுக்கான இதிகாசங்கள், ஆன்மிக வசாரங்கள், அறிவியல் தேடல்கள், உணவு} உடை } அணிகலன் பழக்கங்கள் என சில பொதுத் தன்மையைக் காண்கிறோம். கலாசார ரீதியில் வளர்ந்த ஒரு நாகரிகத்தோடு இன்னொரு நாகரிகத்துக்கு குறிப்பட்ட அளவிலான தொடர்பு இருந்ததைதையும் சில பரிவர்த்தனை இருந்ததையும் பார்க்க முடிகிறது.

ஆனால் ஆதி இன மக்களிடம் இந்தச் சமரசம் இருந்ததில்லை. அவர்கள் சிறிய குழுவாக இருந்தாலும் அவர்களின் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதில் பிடிவாதமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பல நூறாண்டுகளாக அவர்களிடம் அந்த நம்பிக்கைகள் பிடுவாதங்களோடு இருக்கின்றன. முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொள்வது, ஆடையில்லாமல் இருப்பது, தலையில் பறவையின் இறகுகளைச் சொருகிக் கொள்வது என்று அவர்களின் நம்பிக்கை மிகுந்த இயற்கைத் தன்மையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆப்ரிக்க, அமேசான், அந்தமான், ஆஸ்திரேலிய காடுகளில் இன்னமும் இந்த ஆதி இன மக்கள் மனிதச் சமூக உறவுகள் அறுந்து துண்டுச் சங்கிலிகளாக வாழ்வதைப் பார்க்க முடிகிறது. நம்முடைய கி.மு., கி.பி., இரண்டாம் உலகப் போர், 123, நியூக்ளியர் போர் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. நம்முடைய பிட்ஸô,
ரவா உப்புமா எதுவும் தெரியாது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அதே சமமயத்தில் அவர்களுக்கான பிரத்யேக அடையாளங்களோடு உலகில் ஏராளமான இனக்குழுக்கள் உள்ளன.

இந்த ஆதி இனக் குழுக்களின் அடையாளம்? அதன் வேடிக்கையான நம்பிக்கைகள்தான் அதன் தொன்மையின் அடையாளமாக இருக்கிறது.

ஆப்ரிக்க எழுத்தாளரான சினுவா ஆச்சுபி தன் 28 வயதில் எழுதிய சிதைவுகள் (ற்ட்ண்ய்ஞ்ள் ச்ஹப்ப் ஹல்ஹழ்ற்) இப்படியான மூர்க்கத்தனமான நம்பிக்கைகள் கொண்ட ஒர் இனக்குழுவின் கதை.

கதையைப் படிக்க ஆரம்பித்ததுமே ஆப்ரிக்க செம்மண் பூமியில் மலைகளும் மரங்களும் சூழ்ந்த ஒரு பொட்டல் பூமியை மனச் சித்திரமாகப் பார்க்கிறோம். நாவல் நம்மை மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பிக்கிறது. நாமே நாவலின் ஒரு கதாபாத்திரம் போல மாறத் தொடங்குகிறோம். நமக்கு மிகவும் அன்னியப்பட்ட களம்தான். ஆனாலும் மரபார்ந்த நம்முடைய சில நம்பிக்கைகள் நம்மை ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அவர்களுடன் ஒருங்கிணைக்கிறது. நம் கற்பனையில் ஒரு மலைவாழ் கிராமத்தையும் பழங்குடி மக்களையும் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய விவசாய முறை, உணவு முறை எல்லாம் நமக்குப் புரிபட ஆரம்பிக்கிறது. பளீரென்ற ஒரு தருணத்தில் நாம் அந்தப் பொட்டல் காட்டில் நிற்கிறோம். அவர்களின் அனைத்து சம்பிராதாயங்களோம் சடங்குகளோடும் ஏற்றுக் கொண்டு உடனிருக்கிறோம்.

ஒக்கொங்வோ என்ற துணிச்சல் மிக்கவனை நாவலின் முதல் வரியிலேயே அறிமுகப்படுத்துகிறார். அவன் ஒரு மல்யுத்த வீரனை வீழ்த்துகிறான். குழுவே அவனைக் கொண்டாடுகிறது. அடுத்து வேறொரு பிரச்னைக்காக பக்கத்தில் இருக்கும் இன்னொரு இனக் குழுவினருடன் மோதி பணயமாக அங்கிருந்து ஒரு சிறுவனையும் ஒரு இளம் பெண்ணையும் பெற்றுவருகிறார்கள். பெண் யாருக்கோ அனுப்பிவைக்கப்பட்டு என்ன ஆனாள் என்பதுகூட இரண்டாம்பட்சமாகிவிடுறது. அதாவது மாற்றுக் குழுவில் இருந்து பிடித்துக் கொண்டு வரப் பட்டவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. அந்தச் சிறுவனை ஓராண்டு வரை வைத்திருக்கும் பொறுப்பு ஒக்கொங்வோவுடையது. என்ன காரணத்தாலோ மூன்றாண்டுகள் வரை அவனை குழுப் பொறுப்பாளிகள் மறந்துவிடுகின்றனர். அவன் ஒக்கொங்வோவின் வீட்டில் குழந்தைகளுடனும் சகோதரனாகவும் அவனுடைய நான்கு மனைவி


மார்களுடனும் மகனைப் போலவும் பழகிவிடுகிறான்.

இந்த நேரத்தில் ஓராண்டு மட்டுமே ஒக்கொங்வோவின் பராமரிப்பில் விடப்பட்ட சிறுவனைப் பற்றி முடிவெடுக்க குழு கூடுகிறது. அவனை எல்லோரும் சேர்ந்து ஓர் இரவில் உமோஃபியா கிராமத்துக்கு வெளியே அழைத்துச் செல்கிறார்கள். பையனுக்கு தம்மை தன் வீட்டில் அழைத்துச் சென்றுவிட்டுவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிரிந்து வந்த தன் சொந்த சகோதரியையும் தாயையும் பற்றி ஏகப்பட்ட ஆசைகளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். திடீரென்று எல்லோரும் பின் தங்கி விடுகிறார்கள். அந்தத் தனிமை அவனை அச்சமூட்டுகிறது. குழுவில் இருந்த ஒருவன் பெரிய கத்தியை எடுத்து அவனுடைய கழுத்தை வெட்ட பாய்கிறான். சிறுவன் தப்பி ஓடிவந்து தன்னை வளர்த்த ஒக்கொங்வோவை நோக்கி அபயம் தேடி ஓடிவருகிறான். அருகில் வந்ததும் சுலபமாக அவனை வெட்டிவிடுகிறான் ஒக்கொங்வோ.

இதில் எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நம்முடைய நீதி மன்றத்தில் அவர்களைப் பொருத்திப் பார்ப்பது அபத்தம். நம்முடைய (இந்த "நம்முடைய' நாகரீகக் குழுக்கள் என்று சொல்கிற உலகத்துக்கானது) கிராம நீதி மன்றத்தில் யார் கற்பழித்தானோ அவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்கிற தீர்ப்புகளும் பசிக்காகத் திருடியவனைச் சிரச்சேதம் செய்வதும் பிறகொரு காலத்தில் காட்டுமிராண்டித்தனமானதாகக் கட்டம் கட்டப்படும்.

கதைக்கு வருவோம்.

இதே ஒக்கொங்வோ ஒரு கேளிக்கையின் போது தம் இனச் சிறுவனைக் தவறுதலாக உயிர்ச்சேதம் செய்துவிடுகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல் தவறுதலாக நேர்ந்த இந்த விபத்துக்கு அவனை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிரார்கள். ஏழாண்டுகாலம் அவன் தம் இனத்தைப் பிரிந்து வாழ்கிறான்.

இத்தகைய நம்பிக்கைகளும் ஒழுங்கென வகுக்கப்பட்ட ஒழுக்கங்களும் நிரம்பிய பிராந்தியத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் தேவ பிதாவோடு வருகிறார்கள். இரும்பு குதிரை (சைக்கிள்)யில் வந்த ஒரு பாதிரியாரைக் கட்டி வைத்து உதைக்கிறார்கள். ஆனால் இப்படி அறியாமையில் இருக்கும் மக்களை மீட்க ஒருவர் பின் ஒருவராக பாதிரி மார்கள் வந்து சேர்கிறார்கள். தேவாலயம் எழுப்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வேலையும் கல்வியும் புதிய மத அடையாளங்களும் ஏற்படுத்தப்படுகிறது. ஆதி இனக்குழுவின் முதியவர்கள் பாதிரிமார்களையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களையும் எதிர்க்கிறார்கள். ஐரோப்பியர்கள் நீதி அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அதாவது அநீதியாக இருக்கிறது.

நீதிமன்ற ஏவலாளை வெட்டிச் சாய்த்த குற்றத்துக்காக ஒக்கொங்வோ தேடப்படுகிறான். ஆனால் நீதி மன்றக் காவலர்களால் அவனைத் தூக்குமரத்தில் இறந்து தொங்கும் நிலையில்தான் கைப் பற்ற முடிகிறது. அவனை கீழே இறக்குவதற்கு அவனுடைய இன மக்கள் யாருமே வரவில்லை. எந்த இனத்துக்காக அவன் தன் வாழ்நாளெல்லாம் போராடினானோ எந்த இனத்துக்காக உயிரை விட்டானோ அந்த இனத்து மக்கள் அவனை மரத்தில் இருந்து கீழே இறக்கவோ, புதைக்கவோ வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இன வழக்கப்படி தற்கொலை செய்து கொள்வது குற்றம். அது எந்தக் காரணத்துக்காக இருப்பினும். கதை முடிகிறது.

காலனி ஆதிக்கம் அந்த மனிதர்கள் மீது நிகழ்த்தப் போகும் நாகரீகத்தின் திணிப்பு நம்மை திகில் கொள்ள வைக்கின்றன. யேசுவுக்குப் பதிலாக அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிற கடவுளும் ஐரோப்பிய சட்டங்களுக்குப் பதிலாக அவர்களுடைய சட்டங்கள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும்கூட அந்த அச்சத்தின் காரணமாக நினைக்கத் தோன்றுகிறது.

அவர்களை ஜீன்ஸ் பேண்ட் போட வைப்பதும் கேக் சாப்பிட வைத்து தேவாலயத்தில் ஆமென் சொல்ல வைப்பது அவ்வளவு முக்கியமா?

ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை.

கதையின் களத்தில் நாமும் ஒரு மனிதராக கலந்து பிரயாணிக்கிற உணர்வைத் தருவதால் நமக்கும்கூட "உமோஃபியா'வின் உரிமைமீது அக்கறை ஏற்படுகிறது. காலனி ஆதிக்கத்தின் மீது "இனம் புரிந்த' கோபம் ஏற்படுகிறது. நாவலின் வெற்றியாக நான் நினைப்பது அதைத்தான்.

(நன்றி புத்தகம் பேசுது இதழ்- மே 2009)

சனி, மே 09, 2009

மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

மீன்மலர்
நூல் அறிமுகம்
வாசகனுடனான உரையாடல்

ஐ.சிவகுமார்


வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.

இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.

சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.

‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.

தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.

தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85

கடைசி புத்தகம் சிறுகதை பற்றி அ.முத்துலிங்கம்

அன்பு நண்பருக்கு,
வணக்கம்.
கடைசி புத்தகம் சிறுகதை அருமையான ஆரம்பம். இட்டாலோ கல்வினோவைப் படித்ததுபோலவே இருந்தது.
மூதிர்ச்சியான எழுத்து. வாழ்த்துக்கள்.
உ.க்.நா படித்துவிட்டு அதைப்பற்றி திண்ணையில் எழுதுங்கள்.

அன்புடன்

அ.மு

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பட்டியலில் நான்

2008: நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்
In Books, Literature, Magazines, Tamilnadu on ஏப்ரல் 23, 2009 at 2:45 பிற்பகல்



1. அஜயன்பாலா - சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்

2. திருச்செந்தாழை - கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி

3. வாமுகோமு - சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி

4. சுந்தர புத்தன் - ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.

5. லதா - சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.

6. தமிழ்மகன் - சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.
7. பாலமுருகன் - மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.

8. மலர்செல்வன் - கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.

9. திசேரா - புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.

10. பஹீமாஜஹான்- நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.

நன்றி: எஸ் ராமகிருஷ்ணன்

வெள்ளி, மே 08, 2009

மணமகள்

மணமகள்



பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.

எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.

நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.


உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.


பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.


அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.


யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.


பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.

விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.


ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.


"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.


"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.

அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.


கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.


வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'


இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.


"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.


ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.


முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.

அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.

"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.


"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார்.


பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.


கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.


யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.

மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.

திண்ணை.காம், தினமணி கதிர்.

LinkWithin

Blog Widget by LinkWithin