செவ்வாய், ஜூலை 28, 2009

அண்ணாவுக்கு அரிதாரம் பூசினேன்!



எஸ்.எஸ்.ராஜேந்திரன்



காங்கிரஸ் இயக்கத்துக்குத் திரையுலகம் சார்பாக ஓர் "அன்னை இல்லம்' இருந்தது. திராவிட இயக்கத்துக்குத் திரையுலகம் சார்பாக அன்று சென்னையில் செயல்பட்டது "அண்ணா இல்லம்'. அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு. இது லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் வீடு. ஆனால் இரண்டாவது வீட்டின் தீவிரம் முதல் வீட்டில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

திராவிட நாடு நாளிதழை ஆரம்பிக்க அண்ணா நிதி திரட்டத் தொடங்கிய நாளில் எஸ்.எஸ்.ஆருக்கும் அண்ணாவுக்கும் முதல் அறிமுகம். அந்த நாள் தொடங்கி அண்ணாவின் இறுதி மூச்சுவரை தொடர்ந்தது அந்த நெருக்கம். அணைபோட்டுத் தடுக்கப்பட வேண்டிய மூன்று ஆறு(ஆர்)களில் ஒன்றாக காங்கிரஸ் பிரமுகர்களால் வர்ணிக்கப்பட்ட ஆர்களில் கே.ஆர்., எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். ஆகியோரில் முதன்மையானவர் எஸ்.எஸ்.ஆர். முக்கியமானவரும்கூட.

அண்ணாவுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அவருக்கு இருந்த ஈர்ப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.


"ஈரோட்டில் டி.கே.எஸ். கலைக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த நேரம்.

ராமாயணம் நாடகம் நடந்து கொண்டிருந்தது. எனக்குப் பரதன் வேடம். அண்ணனின் பாத அணிகளையே பூஜிக்கும் வேடம். ஆனால் உண்மையில் அண்ணாவின் மீதுதான் எனக்கு அப்படியொரு பக்தி இருந்தது. ஆனால் அவர் எப்படியிருப்பார் என்று தெரியாது. அண்ணாவின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேனே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. அந்த நாள்களில் கட்டுரை எழுதியவர்களின் படங்களையும் பிரசுரிக்கிற வழக்கம் அவ்வளவாக இல்லை. ப்ளாக் எடுத்து போட்டோவைப் பிரசுரிப்பது அக் காலத்தில் செலவு பிடிக்கிற சமாசாரமாக இருந்தது. அவருடைய எழுத்தால் மட்டுமே ஈர்க்கப்பட்டு, அவரை எப்போது காண்போம் என்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஈரோட்டில் எங்கள் நாடக அரங்கிலேயே அண்ணா நடிக்க வருகிறார் என்ற தகவல்தான் அது. அந்த நாளை மறக்கவே முடியாது. ஆம்! 19.11.43... அண்ணனை நேரில் கண்ட நாள்.

அந்த முதல் சந்திப்பு சுவாரஸ்யமானது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வளர்ச்சி நிதிக்காக "சந்திரோதயம்' நாடகத்தை நடிப்பதற்காக அவர் வருகிறார் என்றார்கள். அண்ணா எப்போது வருவார் எப்போது வருவார் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன் நான். டி.கே.எஸ். அவர்கள், "சந்திரோதயம்' நாடகத்தில் நடிப்பதற்காக வந்திருந்தவர்க்கெல்லாம் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களை ஒப்பனை போடுமாறு கூறினார். எங்களுக்கு ஆளுக்கொரு முகத்தைக் கொடுத்தார்கள். எனக்கு வாய்த்த முகம் அவ்வளவு ஈர்ப்புடையதாக இல்லை. அதுவுமில்லாமல் அவர் இங்கும் அங்கும் திரும்பிப் பேசியபடியே இருந்தார். எனக்கு எரிச்சல் என்றால் எரிச்சல். சற்று தூரத்தில் ஒரு பெரியவர் அமைதியாக மேக்-அப் போட்டுக் கொண்டு இருந்தார். அவர்தான் அண்ணா என்று முடிவு செய்துவிட்டேன்.

இவரை இப்படித் திரும்பு... அப்படித் திரும்பு, தலையை மேலே தூக்கு, போதும் கீழே இறக்கு என்று ஆணையிட்டுக் கொண்டிருந்தேன். என் கவனமெல்லாம் பக்கத்தில் இருந்த பெரியவர் மீதே இருந்தது. மெல்ல நான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவரிடம் "அவர்தானே அண்ணா?'' என்றேன், அந்தப் பெரியவரைக் காட்டி.

அவர் பொறுமையாக "இல்லை. நான்தான் அண்ணா. அவர் ஈழத்தடிகள்'' என்றார்.

இவ்வளவு நாள்களாக யாரைப் பார்க்க வேண்டும் என்று துடித்தோமோ அந்த அண்ணாவையா நாம் இவ்வளவு நேரம் இந்தப் பாடுபடுத்தினோம் என்று பதறிப்போனேன். எனக்குக் குற்ற உணர்வாகிவிட்டது. அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று துடித்ததைச் சொன்னேன். அண்ணா அமைதியாகச் சிரித்துவிட்டுத் தட்டிக் கொடுத்தார்.

பின் நாள்களில் நான் சினிமாவில் பிரபலமான காலங்களில் அண்ணா அதைப் பலரிடம் நினைவுபடுத்திச் சிரிப்பார்.

50 -களில் மதுரை பகுதிகளில் தி.மு.க. என்றால் பலருக்குத் தெரியாது. இப்போது போல பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அப்போது இல்லை. தனி நபர் செல்வாக்கு முக்கியமானதாக இருந்தது. எங்கள் பகுதிகளில் நான் இருக்கும் கட்சி என்பதால் ராசேந்திரன் கட்சி, ராசேந்திரன் கொடி என்றுதான் தி.மு.க.வையும் கருப்பு சிவப்பு கொடியையும் மக்கள் சொல்லுவார்கள்.
ஒரு சம்பவம் சொன்னால் அப்போதிருந்த நிலைமை ஓரளவுக்குப் புரியும். ஒருமுறை முதுகளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணா கலந்து கொள்வதாக ஏற்பாடு. எதனாலோ அவர் வருவதற்குத் தாமதமாகிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அண்ணா வந்துவிடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து "அண்ணா வர்ற வரைக்கும் அண்ணாதுரையையாவது பேசச் சொல்லுங்களேன்'' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணா வருகிறவரை, அண்ணாதுரையை எப்படிப் பேச வைப்பது?

கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது. நாங்களெல்லாம் அண்ணா அண்ணா என்று பேசுவோம். எதிர்க்கட்சிக்காரர்கள் அண்ணாவை, அண்ணாதுரை என்றே அழைப்பார்கள். அண்ணா, அண்ணாதுரை என்று தி.மு.க.வில் இரண்டு பேச்சாளர்கள் இருப்பதாக அவர் நினைத்துவிட்டார். அப்படியொரு நிலைமையில்தான் ஐம்பதுகளின் துவக்கம் ஆரம்பமானது.

தேவர் சமுதாயத்தினரிடையே தி.மு.க. செல்வாக்கு பெருவதற்கு -குறிப்பாக கம்பம், தேனி, மதுரை பகுதிகளில் -நான் காரணமாக இருந்தேன் என்பதற்காக இதைச் சொல்கிறேன். ராசேந்திரன் கட்சி என்பதற்காகவே கூட்டம் சேருவார்கள்.

1962 பொதுத்தேர்தல் எங்களுக்கெல்லாம் படு உற்சாகமான தேர்தல். அண்ணா பதட்டமாகத்தான் இருந்தார். முழுவீச்சோடு களம் இறங்கியிருந்தோம். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ஜவஹர்லால் நேரு வந்திருந்தார். தேனி மாவட்டத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை பகுதிகளில் நாம் ஜெயிப்பது கடினம்தான் என்று எண்ண ஆரம்பித்துவிட்டோம். அப்போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. நேருவின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்தவர் இறுதியில் "நம் ராஜாங்கத்துக்கே வாக்களிக்க வேண்டுகிறேன்' என்பதாக மொழிபெயர்த்தார். தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டவர் பெயர் ராஜாங்கம். நேருவே ராஜங்கத்துக்கு ஓட்டுப் போடச் சொல்லிவிட்டார் என்று மக்களில் பாதிப் பேர் தவறாகப் புரிந்து கொண்டு ஓட்டுகளை வாரி வழங்கினர். அப்போது தி.மு.க. பிரமுகர்களுக்கு பிரசாரத்துக்கு கார் தந்து அனுப்புவது நான்தான். அண்ணா, நெடுஞ்செழியன் என யார் சுற்றுப் பிரயாணம் செய்வதானாலும் என்னுடைய காரை அனுப்பிவிடுவேன். தேர்தல் சமயங்களில் என்னுடைய ஜீப், ப்ளைமூத், வேன்கள் எல்லாமே களத்தில் இருக்கும்.

தி.மு.க.வின் ஆரம்பக் கட்டத்தில் இருந்து அதில் பணியாற்றி வந்ததற்கு எனக்கு இருந்த ஒரே ஒரு காரணம் அண்ணா என்ற மூன்றெழுத்து மட்டும்தான். சினிமாவில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்திலும் நடிப்புக்கு நடுவே தி.மு.க. கூட்டங்களில் பிரசாரத்துக்குத் தொடர்ந்து செல்வேன். வில்லுப்பாட்டு கச்சேரிகள் நடத்துவேன். தி.மு.க. அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாகவும் அதில் அண்ணா முதலமைச்சராகவும் நெடுஞ்செழியன் கல்வி அமைச்சராகவும் ஈ.வி.கே. சம்பத், கலைஞர் கருணாநிதி போன்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதவி கொடுத்து பாடுவேன். அதில் இறுதியில் "எனக்கு என்ன பதவின்னு கேட்கிறீர்களா? இறுதிவரைக்கும் அண்ணாவின் அன்புத் தொண்டனாக இருப்பேன்' என்று முடிப்பேன்.

அதே போல் 1967 -ல் அண்ணா முதல்வரானபோது என் வீட்டில் இருந்துதான் மந்திரிசபையே அமைக்கப்பட்டது. என் வீட்டு போனில் இருந்துதான் நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்கள் அழைக்கப்பட்டு அவரவர்களின் அமைச்சரவையை அறிவித்தார் அண்ணா. எனக்கு எந்தப் பதவியும் பெற்றுக் கொள்ளவில்லை.
கருணாநிதியை என் வீட்டுக்கு அழைத்துவிட்டு, "இப்ப கருணாநிதி வந்ததும் எனக்கு போலீஸ் மந்திரி சபை வேண்டும்னு கேட்பார் பாரு'' என்றார். அதேபோல் கருணாநிதி வந்ததும் போலீஸ் மந்திரி பதவி வேண்டும் என்றார். "முதலமைச்சர் பதவியை வேண்டுமானால் கேள், போலீஸ் அமைச்சராக நான் பொறுப்பேற்க இருக்கிறேன்' என்று அண்ணா அப்போது சொன்னார். கருணாநிதியை அந்த அளவுக்கு அண்ணா கணித்து வைத்திருந்தார்.

அண்ணாவுக்கு முதன்முதலாக பெரிய அளவில் பிறந்தநாள் கொண்டாடியவன் நான்தான். எல்டாம்ஸ் ரோடில் என் புதுவீட்டுக்கு "அண்ணா இல்லம்' என்று பெயரிட்டு அதன் திறப்புவிழாவோடு அண்ணாவின் 50 -வது பிறந்தநாளைப் பொன்விழாவாகக் கொண்டாடினேன். அதே போல் 51 -வது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவருக்குப் பிறந்த நாள் நினைவாக 51 பரிசுகள் கொடுக்கத் தீர்மானித்தேன். வாட்ச், பேனா, சட்டை, வேட்டி என 50 பரிசுகளை எடுத்துக் கொடுத்தேன்.

"51 -வது பரிசு எங்கே?'' என்று அண்ணா சிரித்துக் கொண்டே கேட்டார். நான் என் சட்டைப் பையில் இருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொடுத்தேன்.
அதில் 51

}வது பரிசு என் உயிர் என்று எழுதியிருந்தேன்.
அண்ணா கண்கலங்கிப் போனார்.

"வாழ வேண்டியவன் இப்படியெல்லாம் எழுதலாமா?'' என்று கண்டித்தார்.

அண்ணாவுக்கு தெருகூத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஒருமுறை அண்ணாவும் நானும் சிவகங்கையில் ஒரு பொதுகூட்டத்துக்குப் போய்விட்டு இரவு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அண்ணா வருகிறார் என்றால் நான் பின் சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். அவர் முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு வருவார். திருச்சிக்கு அருகே கார் நின்றிருந்தது. நான் எழுந்து பார்த்தபோது அங்கே நடந்து கொண்டிருந்த தெருக்கூத்தில் முன் வரிசையில் அண்ணா உட்கார்ந்து தலைப்பாகைச் சுற்றிக் கொண்டு "சத்யவான் சாவித்திரி' நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். தூக்கம் கலைந்து நானும் அண்ணாவுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தேன். "நீ நிம்மதியாகத் தூங்குவாய் என்றுதானே காரை நிறுத்திவிட்டு வந்தோம். நீ ஏன் எழுந்து வந்தாய்?'' என்றார். கூத்து பார்க்க நானும் அண்ணாவும் வந்துவிட்டதில் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பரம திருப்தி. அண்ணாவை மேடைக்கு அழைத்து இரண்டு வார்த்தை பேசச் சொன்னார்கள். எமதர்மன் வந்துவிட்டான். எங்களுக்கு மேலுலகம் செல்வதற்கு இன்னும் காலம் இருப்பதால் இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறோம் என்று சுருக்கமாகப் பேசினார்.

ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் அவர் மேலுலகம் செல்வார் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். என் தாய் இறந்தபோதுகூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. அண்ணாவின் மறைவு என்னால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயராக இருந்தது. அந்தத் துயரை மறக்க விடாமல் குடிக்க ஆரம்பித்தேன். தினமும் கடற்கரைக்குச் சென்று அங்கேயே குடித்துவிட்டு அவர் கல்லறைக்கு அருகிலேயே படுத்துக் கிடந்த நாள்கள் உண்டு. படப்பிடிப்புக்குப் போகமுடியவில்லை, வீட்டில் தங்க முடியவில்லை, யாருடனும் பேசிப் பழக முடியவில்லை. குடிதான் எனக்குத் தீர்வாக இருந்தது. சீக்கரமே குடல் கெட்டுப் போனது. அரசுப் பொது மருத்துவமனையில் என்னைக் கொண்டு போய் சேர்த்தார்கள்.என் நிலைமை கேட்டு தந்தை பெரியார் என்னைச் சந்திக்க மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். உரிமையாகத் திட்டினார். என்னை நீ வந்து பார்க்க வேண்டிய வயதில் நான் உன்னை வந்து பார்க்க வேண்டியிருக்கிறதே என்றார்.

"என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, இனிமேல் இப்படிக் குடிக்க மாட்டேன்'' என அவர் கையைப் பிடித்துக் கலங்கியபடி சொன்னேன்.

அண்ணா இறந்த சில ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.

மணிமகுடம் படப்பிடிப்பு. மிகப் பெரிய செட் அமைத்து ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்தோடு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஃபிலிம் சுருள் தீர்ந்து போனது. ஒரு காரை அனுப்பி லேபிலிருந்து ஃபிலிம் சுருளை எடுத்து வரச் சொன்னேன். போன கார் போனதுதான். என்ன ஆனதென்றே தெரியவில்லை. இப்போது போல உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை. அத்தனை பேரும் காத்திருக்கிறோம். எனக்கு எரிச்சல் என்றால் எரிச்சல். வேறு ஒரு காரை அனுப்பி ஃபிலிம் சுருளைக் கொண்டு வர ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு முதலில் அனுப்பிய கார் வந்து சேர்ந்தது.

"அவனை அப்படியே போகச் சொல்லுங்கள்'' என்று என் உதவியாளரிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். ஆனால் அந்தக் கார் டிரைவர் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்புவதாகச் சொன்னார்கள். கோபத்தோடு "என்னய்யா?'' என்றேன்.

"அய்யா இது அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாரின் கார். இந்தச் சவாரியில் வரும் பணத்தில்தான் அவர்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. பழைய கார் திடீரென்று பழுதாகிவிட்டது. அதைச் சரி செய்து கொண்டுவருவதில்தான் தாமதமாகிவிட்டது'' என்று விளக்கினார்.

அண்ணாவின் குடும்பத்துக்கா இந்த நிலை? என்று துடித்துப் போனேன். உடனடியாக ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டு போய் அம்மையாரிடம் கொடுத்தேன். தன் குடும்பத்துக்கென பேரையும் புகழையும் தவிர எதையுமே சேர்த்து வைத்துக் கொள்ளாத தன்னிகரில்லாத் தலைவன் அண்ணா என்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?



சந்திப்பு: தமிழ்மகன்



தினமணி அண்ணா நூற்றாண்டு மலர் -2009

4 கருத்துகள்:

குப்பன்.யாஹூ சொன்னது…

will ssr tell the story about how much he begged to ammaaa for his son's MP seat

Unknown சொன்னது…

//"அய்யா இது அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாரின் கார். இந்தச் சவாரியில் வரும் பணத்தில்தான் அவர்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. பழைய கார் திடீரென்று பழுதாகிவிட்டது. அதைச் சரி செய்து கொண்டுவருவதில்தான் தாமதமாகிவிட்டது'' என்று விளக்கினார்.//

anna = ______

Arun சொன்னது…

நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும்.

தமிழ் பக்கங்களை Reedit.com, Digg.com என்று submit செயும்போது கிடைக்கும் ஹிட்ஸ்கலை விட தமிழ் திரட்டிகளில் submit செயும்போது அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அதுவே இந்தியா சார்ந்த ஆங்கில தளங்கள் என்றால் Hotkilix, Humsuffer போன்ற இந்திய ஆங்கில திரட்டிகளில் இருந்து அதிக ஹிட்ஸ் கிடைக்கும் .

தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக இந்திய மொழி தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் . இதை நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.


தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை
வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம் தளத்தில் add செய்வதற்கு பதில் ஒரு Buttonலையே எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .


Add-தமிழ் பட்டன் பெறுவதற்கான இணையதள முகவரி : இங்கு கிளிக் செய்யவும்
www.findindia.net

உடன்பிறப்பு சொன்னது…

அண்ணாவை பற்றிய உங்கள் இடுகைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்

LinkWithin

Blog Widget by LinkWithin