செவ்வாய், அக்டோபர் 27, 2009

'ராஜா' கைய வெச்சா அது 'ராங்காகவும் போவும்!




பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் வாய்த் தகராறில் ஆரம்பித்து அது கைத்தகராறில் முடிவதைப் பார்த்திருக்கிறேன். அவர் இசையமைக்கிற எல்லா பாடல்களுமே தேவகானமாக இருந்தது. இப்பவும் இருக்கிறதுதான்.ஒரு சபையில் மிகவும் துணிவான ஆசாமிகள்தான் அவரைத் தாக்கிப் பேச முடிந்தது. கொஞ்சம் இளப்பமான ஆசாமியாக இருந்தால் சுற்றியிருப்பவர்கள் அவரை அடித்தே போட்டுவிடுவார்கள்.


நேற்று என் மகனைத் தேடி வந்திருந்த அவனுடைய நண்பர்கள் சம்பாஷணையின் போது, "இளையராஜாகிட்ட புதுசா ரிசர்ச்சே இல்லடா.. அதே டண்டணக்குத்தான்...'' என்று பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
அவர்களுக்கு இளையராஜாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கமோ ஆர்வமோ இல்லை. மிகவும் இயல்பான விமர்சனமாக இருந்தது. இளையராஜா வந்த போது விஸ்வநாதனை அப்படிச் சொல்வதைக் கேட்டிருந்ததால் இப்போது ரஹ்மான் வந்துவிட்ட பின்பு இளையராஜாவைச் சொல்வதையும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டேன்.


இந்த மாதிரி காலம் தோறும் தலைமுறைகளுக்கிடையை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன. வால்காவில் இருந்து கங்கை வரை நூலில், ஆதிநாளில் ஒருவன் ஏர் ஓட்டி உழவு செய்ய ஆரம்பித்த போது ஏற்பட்ட எதிர்ப்பலையைப் பற்றி எழுதியிருப்பார். "நிலத்தைக் கீறுவது மாபெரும் பாவம். தானாக உற்பத்தியாகும் உணவை மட்டுமே புசிக்க வேண்டும். நாமாக பயிர் செய்ய நினைப்பது இறைவனுக்கு எதிரான செயல்'' என்பதாகப் பேசுவார் ஒரு பெரியவர்.எல்லா காலத்திலும் மாற்றத்துக்குத் தடையும் எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது.


இவான் துர்கனேவ் எழுதிய தந்தையும் தனயரும் இந்தத் தலைமுறை இடைவெளியை உணர்த்தும் உன்னதமான நாவல்.தன் மகன் வருகைக்காகக் காத்திருக்கிறார் தந்தை. மகன் அர்க்காதி தன் நண்பன் பஸாரவ் -வுடன் வந்து இறங்குகிறான். சென்ற தலைமுறை ஆசாமிக்கும் பஸாரவ்வுக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் பட்டு வராமல் போவது ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் வனத்தில் ஓடும் ஓடையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை ரசிக்கும் வினோதமான ஆர்வங்கள் பஸாரவ்வை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.அவனுடைய சட்டை, தலைமுடி, பேச்சு எதையுமே அர்க்காதியின் பெரியப்பாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்குமான வேற்றுமை நாவல் முழுவதும் நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஆளுக்கொரு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.


யாருக்கு சாமார்த்தியம் இருக்கிறதோ அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அர்க்காதியின் பெரியப்பா முதலில் சுடுகிறார். அவருடைய குறி தவறிவிடுகிறது. அடுத்தது பஸாரவ். மிகச் சரியாகச் சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான்.அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறான். இப்போது பஸாரவ்வை எதிர்க்கொள்வதற்கு அர்க்காதியின் பெரியப்பாவுக்குச் சங்கடமாக இருக்கிறது.


இதனிடையே பஸாரவ் மீது காதல் கொள்ளும் பெண் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸôரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான்.


அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.அதுதான் பஸாரவ்.


"இந்த நாவலின் பஸாரவ் பாத்திரத்தை உருவாக்குவதற்காக நான் என்னிடம் இருந்த அத்தனை வண்ணங்களையும் இழந்துவிட்டேன்' என்று இவான் துர்கனேவ் கூறியிருக்கிறார்.


ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இயந்திர யுகம் காரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த நிலை கொள்ளாத அலைபாயும் மனத் தன்மை நாவலின் பின்னணிக் களமாக இருப்பதை உணர முடியும். அன்றைய இளைஞர்களுக்குள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த இஸங்களின் ஆதிக்கத்தையும் நாவலில் பார்க்க முடிகிறது. அதன் காரணமாகவே நாவல் ஒரு நூற்றாண்டின் மனச்சித்திரத்தை உருவாக்கும் தரத்தோடும் மிளிர்கிறது.


பூ. சோமசுந்தரத்தின் மிக நேர்த்தியான மொழி பெயர்ப்பு நம்மை நாவலோடு கட்டிப் போட்டுவிடுகிறது.தலைமுறைகள் கடந்தும் தலைமுறை இடைவெளியை அலசும் இந்த நாவல் சிலாகிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதன் ரகசியமும் அந்தத் தலைமுறை இடைவெளியில்தான் ஒளிந்திருக்கிறது.


தந்தையரும் தனயரும்

இவான் துர்கனேவ்

சந்தியா பதிப்பகம்,

57, 53-வது தெரு,9-வது அவென்யூ,

அசோக் நகர்,

சென்னை- ௮௩

ரூ. 100

1 கருத்து:

RAGUNATHAN சொன்னது…

இளையராஜாதான் என்றைக்கும் இனிமை. துர்கனேவ் போல...

நல்ல புத்தகம் அறிமுகம் செய்ததற்கு நன்றி சார் :)

LinkWithin

Blog Widget by LinkWithin