செவ்வாய், டிசம்பர் 29, 2009

பலுபலுக்கன்மா?




ஒரு மொழியின் உச்சபட்ச பயன்பாடு விளம்பரங்களில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே ஒரு சொல் மனிதர்களை ஆட்டிப் படைத்துவிடுகிறது. தெறிக்கும் நட்சத்திர பிரகாச படத்தின் நடுவே "இலவசம்' என்று பெரிதாக எழுதியிருந்தால் உடனே மக்கள் ஒரு கணம் அங்கே உறைந்து போகிறார்கள்.

அது, ஒரு புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசமாக இருக்கும். ஒரு வீடு வாங்கினால் ஒரு வீடு இலவசம்... ஒரு பேப்பர் வாங்கினால் ஒரு பேப்பர் இலவசம்... எதுவாகவும் இருக்கலாம். நம்மில் பெரும்பான்மையானவர்கள் அதற்கு முன்னால் எத்தனை அனுபவம் அடைந்திருந்தாலும் அதிக வட்டிக்காக ஒரு பெனிபிட் ஃபண்டில் மீண்டும் மீண்டும் பணத்தைப் போடுகிறார்கள். பளிச்சிடும் வெண்மை தரும் என்று புதிய சோப்பை வாங்குகிறார்கள். நான்கே நாள்களில் சிவப்பாக மாறிவிடலாம் என்று புதிய கிரீமை வாங்குகிறார்கள். இந்த விளம்பரங்களை நம்பி ஏமாறுகிறவர்கள் பற்றி எழுத வேண்டியது தனிக் கட்டுரை... இங்கே அந்த விளம்பரத்தில் நாம் எதிர் கொள்ளும் தமிழைப் பற்றியதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விளம்பரம்.
ஒரு சிவந்த பெண்மணி சீரியஸôன முகத்துடன், ""உங்களுக்கு ஸ்பூன் பலுபலுக்கன்மா... துண்மினி பலுபலுக்கன்மா?'' என்று கேட்டுவிட்டு ""எங்கல் சோப்பப் போட்டா துணிலாம் பலுபலுக்கும்'' என்றார்.

அது ஒரு சோப்பு விளம்பரம் என்பது புரிந்தது. ஆரம்பத்தில் பலுபலுக்கன்மா என்கிறாரே அது என்ன என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

டி.வி. பார்க்கிற சிலர் சோப்பில் இருக்கும் ஏதோ முக்கியமான மகத்துவம் பற்றிச் சொல்கிறார் என்று விளக்கம் சொன்னார்கள். அப்படி என்ன ரசாயனமாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. கடைசிவரை எனக்குத் தெரிந்த "கெமிஸ்ட்ரி எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை'.

பிறிதொரு நாள் வேறு ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும்போது என் குழப்பத்துக்கு விடை கிடைத்தது.

அது இன்னொரு சோப்பு கம்பெனியின் விளம்பரம். அந்த சோப்பை வாங்கினால் ஒரு ஸ்பூன் இலவசம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். முன்னர் பார்த்த சோப்பு விளம்பரத்தில் என்ன சொல்கிறார்கள் என்பது வேகமாக விளங்க ஆரம்பித்தது. கெமிஸ்ட்ரிக்கு பதிலாக லாஜிக் ஒர்க் அவுட் ஆனது...

சோப்பு வாங்கினால் இலவசமாக ஸ்பூன் தருகிறார்கள். அதை நம்பி அந்த சோப்பை வாங்குகிறீர்களே... உங்களுக்கு ஸ்பூன் பளபளக்க வேண்டுமா? துணி மணிகள் பளபளக்க வேண்டுமா? என்பதைத்தான் முந்தைய விளம்பரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே சொன்னதுபோல் ஸ்பூன் என்பது தூண்டிலில் வைக்கும் புழு. இலவச ஸ்பூன் என்பதை வைத்து ஒருவன் சோப்பு விற்கிறான். அது எப்படியோ போகட்டும்.
நம்முடைய அடுத்த கவலை.. இப்படியான தமிழை நம் தலையில் கட்டுவதைப் பற்றியது.
இதைக் கேட்கிற குழந்தைகள் "பளபளக்க வேண்டுமா?" என்று கேட்பதைவிட "பலுபலுக்கன்மா?' என்று கேட்பதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதையே ரசிக்கிறார்கள். இது ஒரு ஆபத்தின் அறிகுறியாக இருந்தது. நல்ல வேளையாக அந்த சோப்பு நம் மக்களிடம் வெகுநாள்கள் தாக்குப் பிடிக்கமுடியாமல் போய் அந்த விளம்பரமும் அல்பாயுளில் முடிந்து போனது.

இப்போது விளம்பரம்...

இரண்டு குழந்தைகள் வீட்டு வாசல்படியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கின்றன. பெரியவன். இளையவள்.

இளையவள் கேட்கிறாள்..""அணா, நாமப்பயேன் தொங்கறம்?''
""அம்ம பாக்கணும்னுதான்''
""அம்ம பாத்தா என்னாஹும்''
""அம்ம நமக்கு காம்ப்ளான் குடுப்பாங்க''
} புத்திசாலித்தனமான குழந்தைகள். தம்முடைய அம்மாவுக்குத் தாங்கள் உயரமாக வளரவிரும்புவதை இப்படித் தொங்குவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

ஹிந்தியில் தயாரான இந்த விளம்பத்தில் இந்தக் குழந்தைகள் இதே போல் புத்திசாலித்தனமாகத்தான் உணர்த்தியிருப்பார்கள். தமிழில் மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் இருந்தது.

இந்தக் குழந்தைகளுக்காகத் தமிழில் வேறு இரு குழந்தைகள் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆனால் உச்சரிப்பில் ஒருவித வசீகரிக்கும் தவறு இருக்கிறது. இப்படி வித்தியாசமான குரல்களை மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகே விளம்பரப் படம் எடுப்பவர்கள் கண்டெடுப்பதாக அறிந்தேன். விளம்பர வசனங்கள் சட்டென ஈர்த்து நிறுத்த வேண்டும் என்பது விளம்பரதாரர்களுக்கு முக்கியமான கோரிக்கை. எங்க சேனலில் சன் டி.வி., கே.டி.வி., சன் மியூஸிக் எல்லாமே தெரியும்... என்று கூறிவிட்டு டண் டணா டன் என்று சொல்வது இதற்காகத்தான். வினோதமான குரலில் விபரீதமாக எதையாவது சொல்ல வேண்டும்.

ஒரு பெயிண்ட் கம்பெனி விளம்பரம். இந்த பெயிண்டைத் தடவிவிட்டால் எவ்வளவு புழுதி பறந்தாலும் சுவரின் மீது தூசு ஒட்டாது என்பது விளம்பரம் செய்ய வேண்டிய செய்தி.

துணிச்சலான மன்னர். அவரை நோக்கிப் புழுதிக்கால் பிடறிப்பட ஓடி வருகின்றன சில நூறு குதிரைகள். அரசர் அசையாமல் நிற்கிறார். கூட்டமாக நிற்கும் மக்கள் அவருடைய துணிச்சலை வியக்க வேண்டும். ஆனால் புழுதியால் போர்த்தப்பட்டுக் கிடக்கும் மன்னரை கவனிக்காமல் அவருக்குப் பின்னால் இருக்கும் மாளிகை தூசி படாமல் ஜொலிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருவன் சொல்கிறான்... ""மாலிக... மாலிக மின்னுது''} அதாவது எவ்வளவு தூசு பட்டாலும் மாளிகை மின்னிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் அப்படி வினோதமாகச் சொல்கிறான்..

இப்படியான பிழையான தமிழில் பேசுவதற்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள். இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் மும்பையில் தயாராகின்றன. பெரும்பாலும் இந்தி பேசும் சூழலில் இந்த விளம்பரங்கள் உருவாகின்றன. பின்பு அதே விளம்பரங்கள் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஓரிய, கன்னட என மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இந்தி தெரிந்த அந்தந்த மொழிகாரர்களை அணுகி வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள். இப்படி மொழி பெயர்க்கும்போதே சில நேரங்களில் தவறு நடந்துவிடும். பிறகு அந்தத் தவறான தமிழை உச்சரிக்க அங்கேயே உள்ள மாநில மொழி பேசுபவர்களை அணுகிறார்கள். மும்பையில் செட்டிலாகி, தங்கள் பிராந்திய மொழியை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் வாயின் வழியாக அது மேலும் தவறாக மாறி, நம்மை வந்து அடைகிறது.} இது இன்னொரு வகை ஆபத்து.

விளம்பரங்கள் குழந்தைகளை எளிதில் வசீகரிக்கக் கூடியவை. செய்திகளோ, வயலும் வாழ்வு நிகழ்ச்சியோ, நேருக்கு நேர் அரசியல் அரங்கமோ அவர்களை அவ்வளவாகத் தூண்டுவதில்லை. இந்த விளம்பரத் தமிழ் குழந்தைகளை பாதிக்கும் என்றே தோன்றுகிறது. தூசுகளை அண்டவிடாத பெயிண்டுகளையோ, அழகுதரும் கிரீமையோ விற்பதாகச் சொல்லி இப்படி ஆபத்தை வரவேற்கலாமா?

மேலும் ஒரு சொல் நமக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள்தரக்கூடியதாக இருக்கிறது. சிங்கம் என்ற சொல் ... இந்த நான்கு எழுத்துகள் நம் கண் முன் ஒரு உருவத்தை கொண்டு வந்து நிறுத்துகிறது. அது காட்டில் வாழும். மான்களைக் கடித்துத் தின்னும். குகைக்குள் படுத்திருக்கும் என்று பல்வேறு எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் ஒரு மனிதனைக் காட்டி சிங்கம்யா அவன் என்பதையும் கேள்விப்படுகிறோம். அவனும் காட்டுக்குள் கையில் படுத்து உறங்குவான் என்ற எண்ணமோ, மான்களை விரட்டிச் சென்று கடிப்பான் எண்ணமோ ஏற்படுவதில்லை. மாறாக அவனை வீரன் என்று பழக்கப்படுத்திக் கொள்கிறோம். எழுத்துகளை மாற்றி உச்சரிக்கும் போது அது வேறுசில குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே விளம்பரதாரர்கள் சரியாக பிரயோகிப்பது நல்லது.
நான்கு எழுத்துகளின் சேர்க்கை ஒருவனை கோபமூட்டுவதாகவோ, மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகவோ மாறிவிடுகிறது. ஒருவனை முட்டாள் என்றதும் கோபப்படுகிறான். அறிவாளி என்றால் சந்தோஷம் அடைகிறான். சொல் என்பது வெறும் அர்த்தம் மட்டுமில்லை. அது நிறைய உணர்வுகளை வழங்குவதாக இருக்கிறது.

கொஞ்ச நாளைக்கு முன் புதிதாக ஒரு மிக்ஸி விற்பனைக்கு வந்தது. வட இந்தியரின் கம்பெனி அது. மிக்ஸியின் பெயர் "கஞ்சன்'. இங்கு யாருமே அதை வாங்கவில்லை. தமிழ் நாட்டில் ஏன் யாரும் கஞ்சன் மிக்ஸி வாங்கவில்லை என்பது தெரியாமலேயே அந்த கம்பெனி மூடப்பட்டுவிட்டது.



--

சனி, டிசம்பர் 26, 2009

தினமலரில்...

'உயிர்மை' பதிப்பக நூல் வெளியீட்டு விழா
டிசம்பர் 26,2009,

சென்னை:""நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம், சமூகம் சார்ந்த அறிவை மாணவர்கள் பெற முடியும்,'' என எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பேசினார்."உயிர்மை' பதிப்பகத்தின் சார்பில், 12 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், "உயிர்மை' பதிப்பக நிர்வாகி மனுஷ்ய புத்திரன் பேசும் போது, ""நல்ல நூல்களை உருவாக்குவதன் மூலம், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தரமான நூல்கள் வெளிவருவது அதிகரிக்க வேண்டும்.மாணவர்கள் நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் சமூகம் சார்ந்த அறிவை பெற முடியும். இன்றைய அரசியல் நிகழ்வுகள், வாழ்க்கை தத்துவங்கள் உள்ளிட்டவைகளை, பல நூல்களை கற்றுத் தேர்வதன் மூலமே அறிந்து கொள்ள முடியும்,'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், மனுஷ்ய புத்திரன் எழுதிய என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம், அதீதத்தின் ருசி, பிரபஞ்சன் எழுதிய தாழப்பறக்காத பரத்தையர் கொடி, சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய அவரவர் வழி, சுப்ரபாரதி மணியன் எழுதிய தண்ணீர் யுத்தம், கோமுவின், சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும், தமிழ்மகன் எழுதிய வெட்டுப் புலி, ஜெயபாலனின், அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது, தமிழ்நதியின் கானல் வரி, லஷ்மி சரவணக்குமார் எழுதிய நீல நதி, விஜய் மகேந்திரனின் நகரத்திற்கு வெளியே, உமா சக்தி எழுதிய வேட்கையின் நிறம் உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை கவிஞர் ஞானகூத்தன், தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாரதி மணி, சுகுமாரன், முருகேச பாண்டின், தேவேந்திர பூபதி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

வெள்ளி, டிசம்பர் 25, 2009

வெட்டுப்புலி நூல் வெளியீட்டு விழா-தினமணி




உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​ திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​


சமகால படைப்புகள் பாடத்திட்டத்தில் கூடாது: தினமணி ஆசிரியர்

சென்னை, ​​ டிச.25: "சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது' என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது:

""எல்லாக் காலங்களிலும் படைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.​ எல்லா எழுத்தாளனுக்குமே தான் படைத்த படைப்பெல்லாம் இலக்கியம்தான்;​ சிறந்ததுதான்.​ இதில் எதை நாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வது?​ இலக்கியம் என்கிற அங்கீகாரம் பெற என்னதான் அளவுகோல்?

காலம் என்கிற பரிசோதனைச் சாலையில் அங்கீகாரம் பெறாத எந்த எழுத்தும் இலக்கியமாகாது.​ குறைந்தது ஒரு தலைமுறையைத் தாண்டி அந்தப் படைப்பு நின்றால் மட்டுமே அது இலக்கியம்.​ எழுதப்படும்,​​ வெளியிடப்படும் படைப்புகளில் 90% படைப்புகள் காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை.​ ​அதேபோல,​​ சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி,​​ கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது.​ குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகள் மட்டுமே பாடத் திட்டத்தின் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.​ சமகாலப் படைப்புகளை ஏற்றுக் கொள்ளும்போது,​​ ஆட்சிக்கும்,​​ பாடத்திட்டக் குழுவுக்கும் வேண்டியவர்களின் தரமற்ற இலக்கியப் படைப்புகள்கூடப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாகத் தரப்பட்டுவிடும் ஆபத்து உண்டு.​ இதன் தொடர் விளைவாகத் தரமற்ற நாளைய தலைமுறை உருவாகிவிடும் என்பது மட்டுமல்ல,​​ இலக்கியத்தின் தரமும் தாழ்ந்துவிடும்.

நமது எழுத்தும்,​​ பேச்சும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்;​ மாற்றத்திற்கு வழிகோல வேண்டும்;​ அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்'' என்றார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.

இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு​ பி​ரபஞ்சன் அழைப்பு

First Published : 26 Dec 2009 01:44:55 AM IST

Last Updated :

உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள்

வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​

கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​

சென்னை, ​​ டிச.25: ""இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்'' என்று திரைப்படத் துறையினருக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அழைப்பு விடுத்தார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:

""இலக்கிய அறிவு இல்லாத எங்களை எதற்கு இந்த விழாவுக்கு அழைத்தீர்கள்?'' என்று இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

இலக்கியத்தோடு பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவே அவர்களை மனுஷ்ய புத்திரன் அழைத்துள்ளார்.​ 1960}70}ம் ஆண்டுகளில் படைப்பாளிகள் ஓவியர்களோடு இணைந்து பணியாற்றினார்கள்.​ அதன் மூலம் சிறந்த ஓவியர்கள் உருவானார்கள்.​ சிறந்த படைப்புகளும் உருவாகின.

அதுபோல,​​ திரைப்படத் துறையினரும்,​​ படைப்பாளிகளும் இணைந்து பணியாற்றினால் சிறந்த படைப்புகள் உருவாகும்.​ சிறந்த இயக்குநர்களும் உருவாக முடியும்.​ இலக்கியத் துறையில் இருந்து திரைப்படத் துறைக்குச் சென்ற பலர் சாதனை படைத்துள்ளனர்.

ஆண் }​ பெண் உறவுச் சிக்கல்களை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை.​ அதனால்தான் சமுதாய முன்னேற்றம் தடைபடுகிறது.​ அதனை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் தனது "அவரவர் வழி' என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் நமக்கு புரிய வைத்துள்ளார்' என்றார் பிரபஞ்சன்.​ முன்னதாக 11 எழுத்தாளர்கள் எழுதிய 12 நூல்களை "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர்கள் பிரபஞ்சன்,​​ சாரு நிவேதிதா,​​ பாரதி மணி,​​ தேவேந்திர பூபதி,​​ சுகுமாரன்,​​ திரைப்பட இயக்குநர்கள்​​ தங்கர்பச்சான்,​​ எஸ்.பி.​ ஜனநாதன்,​​ வெற்றிமாறன்,​​ அறிவழகன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

வெளியிடப்பட்ட நூல்களும்,​​ எழுத்தாளர்களும்:​ "தாழப்பறக்காத பரத்தையர் கொடி' }​ கட்டுரைகள் ​(பிரபஞ்சன்),​​ "என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்' }​ கட்டுரைகள்,​​ "அதீதத்தின் ருசி' }​ கவிதைகள் ​(மனுஷ்ய புத்திரன்),​​ "வெட்டுப் புலி' }​ நாவல் ​(தமிழ்மகன்),​​ "அவரவர் வழி' }​ சிறுகதைகள் ​(சுரேஷ்குமார் இந்திரஜித்),​​ "தண்ணீர் யுத்தம்' }​ சுற்றுச் சூழல் கட்டுரைகள் ​(சுப்ரபாரதி மணியன்),​​ "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்' }​ நாவல் ​(வா.மு.​ கோமு),​​ "அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது' }​ குறுநாவல்கள் ​(வ.ஐ.ச.​ ஜெயபாலன்),​​ "கானல் வரி' }​ குறுநாவல் ​(தமிழ் நதி),​​ "நீலநதி' }​ சிறுகதைகள் ​(லஷ்மி சரவணக்குமார்),​​ "நகரத்துக்கு வெளியே' }​ சிறுகதைகள் ​(விஜய் மகேந்திரன்),​​ "வேட்கையின் நிறம்' கவிதைகள் ​(உமா ஷக்தி).

வெளியிடப்பட்ட 12 நூல்கள் பற்றி 12 பேர் விமர்சன உரையாற்றினார்கள்.​ கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

புதன், டிசம்பர் 23, 2009

தமில் பேசுவது தப்பா? -2 பஞ்ச் டயலாக்!





திரைப்படங்களில் கதாநாயன் ஒரு சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது பஞ்ச் டயலாக் என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு படத்தில் இப்படியொரு வசனம் கேட்டேன்:

"நான் ஒரு முடிவு எடுத்துட்டா அப்புறம் நானே என் பேச்சைக் கேட்க மாட்டேன்.''

}இது என்ன பரிதாபம் என்றுதான் முதலில் தோன்றியது. நம்மமுடைய பேச்சை இரண்டாவது நபரோ, மூன்றாவது நபரோ கேட்காமல் போவது சரி. நாமே நம் பேச்சைக் கேட்காமல் போவதா? இந்த நிலைமை நமக்கு ஜென்மத்துக்கும் ஏற்படக்கூடாது.

"சாமி கிட்ட சாந்தமா பேசுவேன். சாக்கடைங்க கிட்ட சாந்தமா பேச மாட்டேன்' என்று அதே நடிகரின் அடுத்த அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ரூம்போட்டு யோசிக்கிறார்கள் என்பது உண்மைதான். அதிலும் இதை பூஜை ரூமில் யோசித்தார்களா? பாத் ரூமில் யோசித்தார்களா என்று அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

"இது எப்படியிருக்கு' என்று பதினாறு வயதினிலே படத்திலேயே ரஜினிக்கு இப்படி பஞ்ச் டயலாக் பேசியிருந்தாலும் இதற்குப் பெயர் சூட்டுவிழா நடத்தியது நான்தான் என்று என் ஞாபகம்.

அருணாச்சலம் படம் துவங்குவதற்கு முன்பு பஞ்ச் டயலாக் என்று சொல்வது புழக்கத்தில் இருந்ததாக எனக்கு நினைவில்லை. அப் படத்தின் அறிவிப்புக்கு ரஜினி பத்திரிகையாளர் சிலரை மட்டும் தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். பட அறிவிப்பு, யாரெல்லாம் நடிக்கிறார்கள், எங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது இப்படியாகப் பேசி முடித்துவிட்டுக் கிளம்பினோம். ரஜினியிடம் இந்தப் படத்தில் நீங்கள் அடிக்கடி பேசும் வசனம் என்ன என்று கேட்டேன். நான் என்ன கேட்கிறேன் என்று அவருக்கு சட்டென்று விளங்கவில்லை. "பஞ்ச்சாக ஒரு டயலாக் பேசுவீர்களே அது'..

"பஞ்ச் டயலாக்... நல்லா இருக்கில்ல...? பஞ்ச் டயலாக்..' என்று சிரித்தார். ரஜினி அந்த வார்த்தையை அப்போதுதான் கேள்விபடுவதாக பூரித்ததனால் அந்த நிமிடம் வரை அவருடைய அத்தகைய வசனங்களுக்குப் பெயர் சூட்டப்படாதது தெரிந்தது.
பிறகு சுந்தர் சியிடம் கேட்டு, "ஆண்டவன் சொல்றான்.. அருணாசலம் கேட்கிறான்' என்ற பஞ்ச் டயலாக்கை பத்திரிகையில் வெளியிட்டேன். ரஜினியின் பஞ்ச் டயலாக் என்ற வரிகள் என்ற பிரயோகம் அதன் பிறகு, பரவலாகப் பரயோகிக்கப்பட்டது. சிம்பு, தனுஷ், விக்ரம், அஜீத், விஜய் போன்ற பலர் இப்படித் திரும்பித் திரும்பிச் சொல்லும் வசனங்களுக்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. நடிகர் விவேக் படத்துக்குப் படம் பஞ்ச் டயலாக் என்ற வார்த்தையைப் பிரபலப்படுத்தினார். இப்போது சினிமாவில் விலேஜ் சப்ஜெக்ட், சிட்டி சப்ஜெக்ட் என்பது போல ஒரு வார்த்தையாகிவிட்டது.

இதற்காக நான் பெருமை பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. ஆப்பிள் எவ்வளோவோ காலமாக கீழே விழுந்து கொண்டிருந்தாலும் அதற்குப் புவியீர்ப்பு விசை என்று பெயர் சூட்டிய நியூட்டனோடு என்னை ஒப்பிட்டுக் கொள்கிற விஷயமல்லவே இது. அதுவுமில்லாமல் இந்த டயலாக்குகள் மீது எனக்கு எப்போதும் அதீத வெறுப்பு உண்டு.

"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி'' என்பதெல்லாம் எந்த கணக்கு அமைவுகளுக்கும் பொருந்தாதவை. அது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதாகத்தான் மனது அடித்துக் கொள்ளும். ஒரு தடவை சொல்வது ஒரு தடவை சொல்வதற்குத்தான் சமமாக இருக்க முடியும்.

இப்படி தவறான தமிழை அல்லது தவறான மொழியை சினிமாவில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான வசனங்களின் போது
இன்னொரு ஆபத்தையும் கவனிக்கலாம்.

அப்படி வசனம் பேசுகிறவர்கள் "துளசி வாசம் மாறினாலும் மாறும்.. இந்த தவசி பேச்சு மாற மாட்டான்டா'' என்று பேசுகிறார்கள். "இந்த சாரதிகிட்ட சண்டை வெச்சிக்கிட்டவங்க தப்பிச்சுப் போனதா சரித்திரம் இல்லடா'' என்றோ, "எம் பேரு சிம்பு.. என்கிட்ட வெச்சுக்காத வம்பு'' என்றோ.. "இந்த அண்ணாமலையை பகைச்சுக்கிட்டா இதுதான்டா தண்டனை... இந்த வாங்கிக்கோ டுமீல்'' என்றோ டயலாக் பேசுகிறார்கள்.


இந்த உலகில் யாருமே இப்படி பேசுவதற்கு வாய்ப்பில்லை. "என்னைப் பகைச்சுக்கிட்டா இதுதான்டா தண்டனை' என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. "நான் பேச்சு மாற மாட்டேன்டா' என்பானா "இந்த தவசி பேச்சு மாற மாட்டான்டா' என்பானா? தானே தன் பெயரைத் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும் விபரீதம் தமிழ் மொழிக்குப் புதிது.. எனக்கு உலக மொழிகள் பற்றி தெரியாது. அதிலும்கூட இப்படி இருக்காது என்று நம்புகிறேன். தொடர்ந்து இத்தகைய வசனங்களைக் கேட்கும் குழந்தைகள், அதைப் போல பேசுவதற்கு ஆரம்பிக்கின்றன. "எம்பேரு அஷோக்கு.. இந்தா புஸýக்கு'

என்று பேசுகின்றன. சில பெற்றோர்கள் பூரித்துப் போய் பக்கத்துவீட்டுக்காரர்களை அழைத்துக் காட்டவும் செய்கிறார்கள்.

சில குழந்தைகளோ சினிமாவில் வருகிற மாதிரி அன்று தகராறு செய்த அந்த ஆட்டோகாரனிடம் தம் அப்பா ஏன் டயலாக் பேசவில்லை, சுழன்று சுழன்று சண்டை போடவில்லை என்று மனம் பாதிக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு மொழிச் சிதைவும் மனச் சிதைவும் அரங்கேறி வருகிறது.

ஒரு சிலர் அஜீத் கால்ஷீட் வேண்டும் என்பதற்காக, விஜய்யை மட்டம் தட்டி சில டயலாக்குகளை எழுதி அவருடைய மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

விஜய்க்கு "திருமலை' படம் ரிலீஸôன நேரத்தில் "எவன்டா மலை.. நான்தான்டா தல' என்பது போன்ற டயலாக்குகளை எழுதுகிறார்கள். விஜய்யும் அஜீத் ரேஸ் ஓட்டுவதைக் கிண்டல் செய்து, "ரேஸ்ல ஃபர்ஸ்ட்டு மொதல்ல வர்றது முக்கியமில்லடா.. கடைசியில மொதல்ல வர்றதுதான்டா முக்கியம்' என்பார் அவருடைய படத்தில். தியேட்டரில் விசில் பறக்கும். இப்படியான தனிமனித துவேஷத்தை வளர்ப்பதும் தமிழில்தான் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

பஞ்ச் டயலாக் எழுதும் வசனகர்த்தாக்கள் இயக்குனர்கள் மனம் வைப்பர்கலா?

also see in www.koodu.in

செவ்வாய், டிசம்பர் 22, 2009

சனி, டிசம்பர் 19, 2009

வெட்டுப்புலி நாவல் முன்னுரை



நாவலுக்குள்...

இப்போதுதான் இந்த நாவலை இன்னொரு தரமும் படித்துவிட்டு வெளியே வந்தேன். எனக்கு நெருக்கமான ஒருவரின் டைரியைப் படித்தது மாதிரி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மனதில் வெவ்வேறு வடிவம் கொண்டு இப்போது தாளில் இறக்கி வைத்துவிட்டபின்பு கைவிட்டுப் போனதுபோல இருக்கிறது. அதன் காரணமாகவே ஏற்படும் அன்னியத்தன்மையும் சேர்ந்து கொள்கிறது. ஒரு சுதந்திரமும் சோகமும் ஆயாசமுமாக இருக்கிறது.

எனக்கு நன்கு பரிச்சையமான பலரும் இந்த நாவலில் வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நானே வருவது போலவும் பிரமைதட்டுகிறது. ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதா பாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் இந்தியச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதை விமர்சிக்கும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மத, மொழி, இன ரீதியான பல பிரிவினரும் சேர்ந்து பாரதக் குடையின் கீழ் சேர்ந்து இருப்பதில் நிறைய யோசனையும் தயக்கமும் ஏற்படத் தொடங்கியது.
ஒரு கூட்டுக் குடும்பப் பெரியவர் மண்டையைப் போடும் தருணத்தில் குடும்பத்தில் இருக்கும் நாற்பது ஐம்பது உறுப்பினர்களுக்கும் பாகம் பிரிக்கும் போது ஏற்படும் மனக்கசப்புகளைப் போன்றது அது. ஒருவரோ பெரியவர் போய்ச் சேரட்டும் அப்புறம் நம் பிரிவினைகளைப் பார்ப்போம் என்றார். மற்றொருவரோ பெரியவர் இருக்கும்போதே பிரித்துக் கொள்ளலாம் என்கிறார். வெள்ளைக்காரனைக் குடும்பத்தலைவர் என்று உவமித்ததை அப்படியே ரேடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. உதாரணங்கள் நூறு சதவீதம் பொருத்தமானவையாக இருப்பதில்லை.

மராட்டியத்தில் ஜோதிராவ் புலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நாட்டின் விடுதலையைவிட சமூக விடுதலை முக்கியமானது.. பிரிட்டாஷார் மட்டும் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியாவுக்கு சாபவிமோசனமே ஏற்பட்டிருக்காது. அவர்கள் இந்தியாவுக்குக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று கூறியிருக்கிறார். பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை அடைவதுதான் முதல் கடமை என்பது அவருடைய வாழ்நாள் பிரசாரமாகக் கொண்டிருந்தார்.

ஏறத்தாழ ஜஸ்டிஸ் பார்ட்டிக்கும் அதே போன்ற நோக்கம்தான். ஜஸ்டிஸ் பார்ட்டி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செயல்பட ஆரம்பித்தது.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது போல திராவிட நாடு என்று பிரித்துக் கொள்வதற்கும் சிலர் ஆசைப்பட்டனர். பாகிஸ்தான் பிரிந்து போனது போலவே அதுவும் மோசமான முடிவாக மாறியிருக்கக்கூடும். ஆனால் அந்த யோசனையை தகுந்த நியாயங்களோடு பிரிவதற்கு ஆசைப்பட்டவர்கள் முன் மொழிந்தனர். வழி நடத்த சிலர் நிஜமாகவே ஆசைப்பட்டனர். பலர் சத்தியாவசத்தோடு தியாகம் செய்தனர்.

வேறு மதத்தவன் நம்மை ஆளுவதா என்ற கோபம் சிலருக்கு. வேறு நாட்டவன் நம்மை ஆளுவதா என்பது இன்னும் சிலருக்கு. பார்ப்பனர்கள் வேறு நாட்டினர் என்றும், இந்தியாவில் குடியேறிய வேறு சமய நம்பிக்கைகள் கொண்டவர்கள் என்றும் வலியுறுத்தியவர்களுக்கு முதல் விடுதலை ஆரியர்களிடமிருந்து தேவைப்பட்டது. கிருஸ்தவர்கள் வந்தார்கள், அதற்கு முன்னர் இஸ்லாமியர் வந்தார்கள், அதற்கும் முன்னர் மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர் வந்தார்கள்.... எங்களுக்கு முதல்விடுதலை ஆரியர்களிடமிருந்து... என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

வரலாற்று உண்மைகள்.. அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்ப விவரிக்கப்படுகிறது.

``ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவனைஇவ்வளவு தாமதமாக எதிர்ப்பது ஏன்?'' என்ற கேள்வி எழுந்தது..

``இல்லை, புத்தரே பிராமண கருத்துகளுக்கு எதிராக எழுந்தவர்தான் என்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகள் புத்த தத்துவத்தைத் தழுவியர்களின் ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றது...''

ஆனாலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லையா என்ற இயல்பான இன்னொரு கேள்வி..

சங்கரரும் ராமாநுஜரும் மீண்டும் இந்து தத்துவங்களைத் தழைக்கச் செய்துவிட்டனர்.

அட இந்தியா முழுதும் கோலோச்சிக் கொண்டிருந்த ராஜாங்கத்தை இவர்கள் எப்படி அழிக்க முடியும்..?

சிந்து சமவெளி நாகரீகமே ஆரியர் படையெடுப்பால்தானே அழிந்தது? மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் வசித்தவர்களை தென்னிந்தியா நோக்கி விரட்டி அடித்தவர்கள் அவர்கள்தானே? ஆயிரம் ஆண்டுகளில் எல்லாம் அவர்களை அழித்துவிட முடியாது. அவர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்..

அவ்வளவு எதிர்ப்பு சக்தி கொண்டவர்களா அவர்கள்..?

ஆலகால விஷங்கள்... அழிக்கவே முடியாதவர்கள்...

இந்திய ஒற்றுமையைக் குலைக்க காலனி ஆதிக்கத்தின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட சதிகள் இவை யாவும். இந்தியா வேதங்களின் நாடு, உலகத் தத்துவங்களுக்கெல்லாம் உயர்ந்த தத்துவத்தை உருவாக்கி வைத்திருக்கும் நாடு. இதன் பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கலாமா? அரசியல் ஆதாயத்துக்காக அபாண்டமான கருத்துகளைச் சொல்லும் இந்தப் பாவிகளுக்குக் காலம்தான் பதில் சொல்லும்?

வானியல் சூத்திரங்கள், கணிதக் கோட்பாடுகள், ஆழ்ந்த இதிகாசங்கள்... அடடா இதையெல்லாம் இடக்கையால் புறம்தள்ளிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு வால் பிடிக்கும் அக்கிரமக்காரர்களை வருங்காலம் மன்னிக்காது..


நீ சூத்திரனாகப் பிறந்ததற்கு உன் விதிதான் காரணம்... எல்லாம் அவன் செயல்... என்கிற பிற்போக்குச் சிந்தனைகள்தான் வேதங்கள். ஒவ்வொருத்தனுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் வைத்திருக்கும் மடத்தனம்தான் இதிகாசங்கள். காட்டு மிராண்டியாக இருந்த மனிதர்களுக்குச் சொன்ன கதைகளைக் கண்டு மலைக்காதே... அவை காலத்துக்கு ஒப்பாதவை...

இந்தியத் தத்துவ தரிசனங்களை அறியாத மூடர்கள் ஒட்டு மொத்தமாக இப்படிஒதுக்கித் தள்ளுகிறார்கள். இப்படி வேறு மதத்தின் தத்துவங்களை இவர்களால் விமர்சிக்க முடியுமா? கொன்றுவிடுவார்கள். இந்திய மதங்கள் சகிப்புத் தன்மை மிக்கவை...

அயோத்தியில் மசூதியை இடித்தபோதும் குஜராத்தில் உயிரோடு கொளுத்தியபோதும் தெரிந்துவிட்டதே இவர்களின் சகிப்புத்தன்மை...

மாற்று மதத்தினர் இந்து மதத்தை அழிக்க ஆண்டுக்கு எத்தனை கோடிகள் செலவிடுகிறார்கள் என்று தெரியுமா?

........கருத்து மோதல்கள்.. அவரவர் ஈடுபாட்டுக்கு ஏற்ப சத்தியாவேசங்கள்...

இது போன்ற சில சத்தியாவேசங்களுக்குத் தடையாக இருந்ததாகக் கருதப்பட்டதால் மகாத்மா காந்தியும் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தங்கள் இன்னுயிரை பலி கொடுக்க நேரிட்டது.



கிராமராஜ்ஜியம், ராட்டை, கிராமங்களின் தன்னிறைவு என்று மகாத்மா காந்தி கனவு கண்டு கொண்டிருந்தபோது, டெஸ்ட் ட்யூப் பேபி, ஒரு குடியிருப்புப் பகுதிக்கு ஒரே ஒரு சமையலறை என்று பரவலானஎல்லைகளைத் தொட்டார் பெரியார் ஈ.வே.ரா.

நடு இரவில் நகைகள் அணிந்த பெண் தனியாக சுற்றி வந்தால்தான் சுதந்திரம் என்றார் காந்தி. பெண்கள் நகைகள் அணியாமல் அலங்காரம் செய்யாமல் ஆண்கள் போல் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும் என்றார் ஈ.வே.ரா. மகாத்மா இங்கிலாந்து அரசினரால் சிறை வைக்கப்பட்டவர். பெரியார் இந்தியர்களால் ஆளப்பட்ட அரசினரால் சிறை வைக்கப்பட்டவர். காந்திக்கும் பெரியாருக்குமான முக்கியப் புள்ளி இது.
மேலோட்டமாக பார்க்கும்போது தேவையில்லாமல் காந்தியையும் பெரியாரையும் இணைத்துப் பேசுவவதாகவே தோன்றும். தென்துருவத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் வட துருவம் என்ற ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. காந்தத் துண்டு ஒன்றுதான். ஒரு துருவம் இல்லாமல் இன்னொரு துருவம் இல்லை.

காந்தியை ஹீரோ என்பவர்களுக்குப் பெரியார் வில்லன். பெரியாரை ஹீரோ என்பவர்களுக்கு காந்தி வில்லன். சரியாகப் புரிந்து கொண்டால் இருவருமே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோக்கள் என்பது புரியும்.
சுந்திரத்துக்காகப் போராடிய காந்தி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரத்தை வரவேற்கவில்லை. சுதந்திரத்துக்கு இப்போது அவசரமில்லை என்று அவர் கருதினார். பெரியார் அதையே கொஞ்சம் முன்னாடி சொன்னார்.
காந்திக்கு எல்லா மதமும் ஒற்றுமையாக இருக்கும் நாளில் சுதந்திரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. பெரியாருக்கு எல்லா சாதியும் சமமாக இருக்கும் நாளில் சுதந்திரம் கிட்ட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது.


இப்படியாக ஒரு மாற்று அரசியல் சிந்தனை இந்தியா முழுக்க இருந்தது போலவே சென்னை, செங்கல்பட்டு பிராந்தியத்தையும் தழுவிக் கொண்டிருந்தது. திராவிட பின்னணியில் சில குடும்பங்கள் செயல்பட்டன. தென் தமிழகத்தைவிட வட தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகம் இருந்தது. திராவிட கட்சிகளின் அரசாட்சியும் சேர்ந்து கொள்ள அவர்களில் தீவிரமான சிலர் எந்தவித பலனுமின்றியே அந்த இயக்கங்களுக்கு வேராக இருந்து மடிந்தனர். வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க வேண்டியிருந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும் விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்.

வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதை இந்தக் கதையைப் பின்னிச் செல்லும் அடிச்சரடு. முடிந்த அளவுக்கு அது ஒரு உண்மைக்கதைதான். தீப்பெட்டியின் மேல் இருக்கும் படம்... கடந்த முக்கால் நூற்றாண்டு திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மவுன சாட்சியாக இருக்கிறது. இந்த மூன்றையுமே தொடர்புபடுத்த முடிந்திருப்பது இதை ஒரு படைப்பிலக்கியமாக்க உதவியிருக்கிறது.

பூண்டி அணைக்கட்டுக்குப் போய் சிறுத்தையை வெட்டியவர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டுவரலாமா என்று கேட்டதும் "சரி வா'' என்று அடுத்த நொடி என்னை அழைத்துச் சென்ற என் மைத்துனர் விவேகானந்தன்.. அவர் உதவி இல்லையென்றால் இந்த நாவலை நான் இப்படித் தொடங்கியிருக்கமுடியாது.

நிகழ்கால சரித்திரக்கதையாக இருப்பதால் முடிந்த அளவு ஜாக்கிரதையாகத்தான் எழுத வேண்டியிருந்தது. முதல் வாசகராக இருந்து அபிப்ராயங்கள் சொன்ன கே.ரகுநாதனுக்கு என் முக்கியமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பல தயக்கங்களுக்கு அவர் விடையாக இருந்தார்.

நண்பர்கள் கடற்கரய், ரெங்கையா முருகன், த.அரவிந்தன், மரக்காணம் பாலா போன்றவர்கள் வெட்டுப்புலி பின்னணியை வெகுவாக உற்சாகப்படுத்தியவர்கள்.

நாவலின் காலகட்டத்தைத் தவறில்லாமல் சித்திரிக்க "தினத்தந்தி' ஐ.சண்முகநாதன், "ராணி' அ.மா.சாமி, அண்ணாவோடு நெருங்கிப் பழகிய ஜே.வி.கண்ணன், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம்.உமர், தினமணி சிவகுமார், வரலாற்றறிஞர் பெ.சு.மணி, நடிகர் எஸ்.எஸ்.ஆர். ஆகியோரிடம் பேசும்போது கிடைத்த பல தகவல்களைப் பயன்படுத்திக் கொண்டேன். நாவலில் ஒரு வரியாகவோ, ஒரு சம்பவமாகவோ அவை உருமாறியிருக்கின்றன. அவர்களுக்கு என் நன்றிகள். என் மனைவி திலகவதி நாவலில் இடம் பெறும் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பேசும் வழக்கு மொழியும் நாவலுக்கு மிகவும் பயன்பட்டது. ஒரு நூற்றாண்டைத் தழுவி எழுதுவதற்கே ஏராளமான நூல்களின் துணை தேவையாக இருந்தது. இன்னொரு பத்தாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டுமானாலும் சுமார் ஆயிரம் சந்தேகங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

இங்கிருந்து இந்த இடத்துக்குச் செல்ல சாலை இருந்ததா? அந்த இடமே அப்போது இருந்ததா? எத்தகைய வாகனத்தில் சென்றனர். என்ன உடை உடுத்தினர். எதற்காகச் சென்றனர். என்னவிதமான பொருளீட்டினர்? எப்படி சேமித்தனர். என்ன நாணயம் இருந்தது. என்ன பேச்சு இருந்தது? யார் ஆண்டனர், எப்படி வரி வசூலித்தனர், யார் மூலமாக வசூலித்தனர். சினிமா இருந்ததா, பேப்பர் இருந்ததா, என்ன முறையில் அச்சடித்தனர், எப்படி பேசினர், யாரை எதிர்த்துப் பேசினர், யார் யார் பேச்சைக் கேட்டனர், என்ன உண்டனர், எப்படி உழைத்தனர், என்ன சிகிச்சை, கிராமம் எப்படி இருந்தது, நகரம் எப்படி இருந்தது... என்ன கோயிலில் என்ன சாமி.. எப்படி வழிபட்டனர்.. குடுமி வைத்திருந்தவர் எத்தனை சதவீதம், யாரெல்லாம் ஓட்டு போட்டனர், எப்படியெல்லாம் வீடு கட்டினர்.. எதற்கெல்லாம் கோபப்பட்டனர், எதற்கெல்லாம் சந்தோஷப்பட்டனர், அந்த சந்தோஷம் எந்த மாதிரியானது?

போன தலைமுறை சந்தோஷங்களும் துக்கங்களும் வேறு மாதிரி இருந்தன. ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. கிராமத்தில் குழந்தை ஒன்று காணாமல் போய்விட்டது. பத்து இருபது வீடுகள் மட்டுமே இருக்கும் கிராமத்தில் அப்படி எங்கு தொலைந்துவிட முடியும்? நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை. கொசஸ்தலை ஆற்றில் இறங்கி விளையாடப் போயிருக்கலாம் என்று சந்தேகித்தனர். நேரம் இருட்டிக் கொண்டு வந்தது. எல்லோரும் பதறிக் கொண்டிருக்க, வீட்டின் பெரியவர் சொன்னார்: "நரி சாப்பிட்டுட்டு இருக்கும்மா... பெசாம படுங்க... காலைல பாத்துக்கலாம்''

குழந்தையைக் கொஞ்சுவதிலெல்லாம் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பார். திடீரென்று இல்லாமல் போய்விட்டால் தாங்கிக் கொள்வீர்களா? என்பார். குழந்தைகள் சிறிய சீக்கு வந்தாலும் இறந்துவிடக் கூடியவை என்பது அவர் நம்பிக்கை. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக பிரியம் வைப்பதே அவருக்கு வியப்பாக இருந்தது. அவர் குழந்தைகள் மீது வைத்திருந்த பாசம் வெளியில் தெரியாத ரகசியமாக இருந்ததை நான் அறிவேன். என் மகனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த நேரத்தில் அவர் சொன்னார்: "இன்னும் நாலு வருஷம் சமாளிச்சு வளத்துட்டியனா பையன் தருப்தி ஆயுடுவான்''

(தருப்தி ஆயுடுவான் என்பதின் பொருள் உலகின் ஒரு நபராக கணக்கில் வந்துவிடுவான் என்பது. அவருடைய உலக மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கணக்கில் வருவார்கள்.)

டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளும் பெற்றோர்களும் கொஞ்சிக் கொள்வது புதிதாக கற்பித்த உணர்வாக இருக்கிறது. டி.வி.மூலமாக புதுவிதமான பாசத்தைக் கற்றுக் கொண்டு வருவது தெரிகிறது. கணவனும் மனைவியும் கூலிவேலைக்குச் சென்றுவிட இரண்டு வயதுகூட நிரம்பாத குழந்தை தனியாக வீட்டில் கிடக்கும். பசி எடுக்கும்வேளையில் கூழ் பானையில் கையைவிட்டு எடுத்து உடம்பெல்லாம் பூசிச் சாப்பிட்டுக் கொள்ளும். மாட்டுக்கு வைத்த தண்ணீரைக் குடித்துக் கொள்ளும். முப்பது ஆண்டுகளில் அதே கிராமம் மாறிப் போய்விட்டது. மம்மி சொல்லு, மம்மி சொல்லு என்று கொஞ்சுகிறார்கள். கான்வென்ட் வேனில் ஏற்றிவிட்டு "இன்னும் ஒழுங்கா டை கட்ட தெரியலை..'' என்று இரண்டாம் கிளாஸ் பையனை நொந்தபடி செல்கிறார் தாய்.
தி.மு.க.வுக்கு முன் தி.மு.க.வுக்குப் பின்.. சினிமாவுக்கு முன் சினிமாவுக்குப் பின்.. சன் டி.வி.க்கு முன்.. சன் டி.வி.க்குப் பின் என்றெல்லாம் கடந்த நூற்றாண்டின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சிலர் நினைவுகூரும் சம்பவங்கள் இதில் இருந்தாலும் முப்பதுகளில் இருந்துதான் கதை நகர ஆரம்பிக்கிறது. பெரியார், அண்ணா, எஸ்.எம். உமர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பலர் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். எம்.ஆர்.ராதா, கலைஞர், பெரியார்தாசன், சுப.வீ., டி.வி., சன் டி.வி., தமிழ்நாடு மின்சார வாரியம், ஏவி.எம். ஸ்டூடியோ போன்ற பல விஷயங்கள் இந் நாவலின் சரித்திர முக்கியத்துவத்துக்கு உதவும். செங்கல்பட்டை காசி வரை இணைத்த சாலை எங்கோ மறைந்து போய் அருகிலேயே புதிய தங்க நாற்கர சாலை உருவானதும் பத்தடி ஆழத்தில் கவளை ஓட்டி நீர் இறைத்துக் கொண்டிருந்த கிணறு இப்போது நூற்றி ஐம்பது அடி ஆழ ஆழ்துளை கிணறாக மாறிப்போய்விட்டதும் சமூக மாற்றத்தின் நீள ஆழத்தைச் சொல்லும் முக்கிய காரணிகள். சமூக, அரசியல் நிலைகளை சார்புத்தன்மை இல்லாமல் பார்க்க முடிவதில்லை. காந்தியையும் சோனியா காந்தியையும் காங்கிரஸ்வாதி என்பதும் பெரியாரையும் ஜெயலலிதாவையும் திராவிட இயக்கத்தினர் என்பதும் ஒரு சுவையான முரண்பாடு.

என்னுடைய சிறுவயதில் ஒருவரை இப்போதும் நடுக்கத்தோடு நினைத்துப் பார்க்க முடிகிறது. அவர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் குடித்துவிட்டு, தெருவில் கலைஞர் வாழ்க என்று சாக்பீஸôல் எழுதுவார். பக்கத்தில் இருக்கும் அதிமுக மன்றத்திற்கு அருகே போய் நின்று கொண்டு கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க என்று உயிர் போகிற வரை கத்துவார். கோபத்தில் அந்த மன்றத்து ஆள்கள் அவரை அடித்து நொறுக்குவார்கள். இன்று மாலைக்குள் அவர் இறந்துவிடுவார் என்று பதறுவேன். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த அந்தப் பத்து ஆண்டுகளும் அவர் அப்படித்தான் கத்திக் கத்தி உதைபட்டுக் கொண்டிருந்தார்.

அரசியலில் எல்லாம் சகஜமாகிவிட்டது. காங்கிரஸýம் திமுகவும் கூட்டணி வைத்தபோது அதிர்ச்சி அடைந்த திமுக தொண்டன், பாஜகவும் திமுகவும் கூட்டணி வைத்தபோது அரசியலில் எல்லாம் சகஜம் என்பதன் பொருள்புரியாமல் விழித்தான்.



இதுதான் கதை நடக்கும் காலகட்டம். படைப்பின் தர்மத்தை மீறாமல் இந்தக் கதையை நான் சொல்லியிருக்கிறேன்.

நாவலோடு தொடர்புடைய ஒரே ஒரு விஷயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன். இது கொஞ்சம் புனைவு கலந்த குறிப்புதான்...

சிறுத்தையால் தாக்கப்பட்ட சின்னா ரெட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அங்கே மருத்துவ உதவிகள் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் மருத்துவமனையின் வாசலில் இருந்த ஒரு கல் திண்டில் படுத்துக் கொண்டு தானே தனக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டார்.
எந்த மருத்துவ முறையை பிறருக்குச் சொன்னால் பலிக்காது என்று அவர் கருதினாரோ அதை அவர் ஒரு சிறிய சபலத்துக்காக மீற வேண்டியதாகிவிட்டது. பக்கத்தில் சென்ரல் சினிமா தியேட்டரில் சினிமா படம் ஓடுவதாக ஒரு முஸ்லிம் பெரியவர் தகவல் சொன்னார். ஏற்கெனவே ஆறுமுக முதலி சினிமா எடுப்பதற்கு மூங்கில் கேட்டுவிட்டுப் போனசம்பவம் சின்னா ரெட்டிக்கு நினைவு வந்தது. தம் மகன் வருகிற வரை பொறுத்திருக்க அவருக்கு முடியவில்லை. ஓர் அணா இருந்தால் படம் பார்த்துவிட முடியும் என்ற நிலையில் தம் ரண சிகிச்சை மருத்துவத்துக்கான மூலிகை இதுவென்று அந்த பாயிடம் சொல்லி இரண்டணா பெற்றுக் கொண்டார். அவருடனேயே சென்று படம் பார்த்தார். சினிமா உற்சாகம் வேறு சில மருத்துவ உத்திகளையும் அவரிடம் சொல்லுவதற்குக் காரணமாகிவிட்டது. அணையில் ஏற்பட்ட சிறுவெடிப்பு இத்தனை நாள் பாதுகாக்கப்பட்ட மொத்த நீரையும் வெளியேற்றுவதற்குக் காரணமாக இருந்துவிடுவதில்லையா? அப்படித்தான் ஆகிவிட்டது.

அதன் பிறகு சின்னா ரெட்டிக்கு தம் மருத்துவத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. இனி அது பலிக்காது என்று நம்ப ஆரம்பித்தார். சிறுத்தை அடித்துப் பிழைத்தவர் சிறிய வண்டு கடித்து இறந்து போனதற்கும் அவருடைய பிடிமானம் கைநழுவிவிட்டதுதான் காரணம். அந்த முஸ்லிம்தான் பின்னாளில் மஞ்சள் காமாலைக்கும் எலும்பு முறிவுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை செய்பவராக மாறி, ஏராளமான பணம் சம்பாதித்து மும்பையில் குடியேறிவிட்டவர்.

நாவலில் இந்தப் பகுதியை எங்கே சேர்ப்பதென்று எனக்குப் புலப்படவில்லை. நாவலுக்கு இது அத்தனை முக்கியமா என்பதும் தெரியவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இது நாவலை முடித்து அச்சுக்குக் கொடுத்த பின்புதான் நினைவுக்கு வந்தது. இதை எங்காவது புகுத்தப் போய் ஏடாகூடமாய் தொக்கி நிற்குமோ என்றுவிட்டுவிட்டேன். வாசகர்கள் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தால் பொருத்தமான இடத்தில் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வாசித்துக் கொள்ளலாம்.

மற்றபடி,

ஒன்றுமில்லை.

திங்கள், டிசம்பர் 14, 2009

மெகா ஆராய்ச்சி!




தமிழ் சானல் ஒன்றில் பல ஆண்டுகளாக ஒரு மெகா சீரியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிப்பதற்கு என்னுடைய அறியாமையே காரணம். இந்தியாவில் உள்ள அனைத்துச் சானல்களிலும் இப்படி பல ஆண்டுகளாக பல மெகா சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சீரியல்கள் அனைத்துமே முதலிலேயே கதை தீர்மானிக்கப்பட்டு ஒன் லைன் தயாரிக்கப்பட்டு வசனம் எழுதப்பட்டு படப்பிடிப்புக்கு போனவை அல்ல. இதன் பொது அம்சம் பிரதானமாக ஒரு பெண் பாத்திரம் இருக்க வேண்டும். செல்வி, அரசி, தங்கம், அபி.. இப்படி. இந்தக் கதைகளில் ஒரு விஷயத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொள்வார்கள். நம் கதாநாயகிக்குத் துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கும். காலை எழுந்து இரவு வரை துன்பம்தான். சுற்றியிருப்பவர்கள் பலரும் முதுகில் குத்துவார்கள். கருணையே வடிவான கதாநாயகி, பரவாயில்லை இருக்கட்டும் என்றபடி அடுத்தபடிக்கட்டில் கால் வைப்பாள். வாழ்க்கையில் உயர்ந்து லேடி பில்கேட்ஸ் நிலைக்கு வருவாள். அப்பாடா கதை இந்த வாரம் முடிந்துவிடும் என்று பார்த்தால், அந்த வாரம்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் வகித்திருக்கும்.

"நல்லாத்தானே இருக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே?''} இது சானல் சஜஷன்.

விடுவார்களா, மீண்டும் கூடவே இருந்த அவளுடைய தம்பி கள்ள நோட்டு வழக்கில் அவளைச் சிக்க வைத்து அவளை ஆரம்பநிலைக்கே கொண்டு வந்துவிடுவான்.

மீண்டும் புதிய புதிய ஆள்கள் கதைக்குள் நுழைந்து அவளை ஏமாற்றுவார்கள், காட்டிக் கொடுப்பார்கள், கற்பழிக்க துரத்துவார்கள், கொலை செய்ய முயலுவார்கள்... அவ்வப்போது வருகிற பத்திரிகை செய்திகள், ஹாலிவுட் படக் காட்சிகள் எல்லாமே தமிழலங்காரம் செய்யப்பட்டு அதில் அரங்கேற்றப்படும். வீண் பழி சுமத்திய தம்பி, அவளுக்கு தம்பியே இல்லை என்பது தெரியவரும். இருபத்தைந்து வருஷங்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த ஒரு ரகசியத்தை அப்போதுதான் அவன் ஆரம்பிப்பான்.

கதை எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று யாரும் அணுமானிக்க முடியாது... சுருக்கமாகச் சொன்னால் எல்லோரும் ஆசைப்படும் திருப்பங்களோடு வளரும்.

எனக்குப் பொய் சொன்னா பிடிக்காது என்று சொன்ன கேரக்டர் பொய்யாகச் சொல்லிக் கொண்டு போகும். கொலை செய்வதற்காக ஊருக்கு வந்தவன் தான் வந்த வேலையை மறந்துவிட்டு சமூக சேவை செய்து கொண்டிருப்பான். கதைக்கு எப்போது திருப்பம் தேவையோ அப்போது அவன் கொலை வாளினை எடுப்பான். இப்போது மட்டும் ஏன்டா எடுத்தாய் என்று கேள்வி கேட்க முடியாது. இருக்கவே இருக்கிறது "இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன்'' என்று ஒரு வரி வசனம்.

தொடரில் நடிப்பவர்கள் கதாபாத்திரங்களாக ஆண்டு கணக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதில் பல்வேறு சிக்கல்கள்.. உதாரணத்துக்கு ஒரு சீரியல் நாயகி, குண்டாக.. ஒல்லியாக என பல்வேறு மாற்றங்கள் பெற்றுவிட்டார். நடுவிலே இரண்டு முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைகளும் இப்போது ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்துவிட்டன. கதைப்படி அக் கதையின் நாயகி கணவனைப் பிரிந்து வாழ்கிறார். அப்புறம் எப்படி கர்ப்ப காட்சிகளையெல்லாம் சமாளித்தார்கள் என்பது அந்தத் தொலைக் காட்சித் தொடரைவிட சுவாரஸ்யமானது.

தமிழில் வரும் தொடர்களில் பெண்களுக்கு மட்டும் விசேஷமான பிரச்சினைகள்.

சில லட்சிய வாதப் பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கு ஒரு காரணமும் இல்லாமல் முட்டுக் கட்டையாக இருக்கும் ஆண்களோடு மல்லு கட்டுகிறார்கள். சில கதைகளில் குடும்பப் பகை காரணமாக ஒரு வம்சத்தையே அழிக்க வீறு கொண்டு எழுகிறாள் ஒரு பெண். அவள் போன் செய்தால் சர்வதேச மாபியா கும்பல் எல்லாம் தொடை நடுங்கி, சரி மேடம் என்று சலாம் போடுகிறது.
ஐந்து பெண்களின் தந்தை அந்தப் பெண்களை கல்யாணம் செய்து வைத்து ஒவ்வொரு பெண்ணாகக் கரையேற்றுகிறார். இரண்டாம் தாரத்துப் பெண்களும் முதல் தாரத்துப் பெண்களும் சமரசமாக பழகிக் கொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள். பெண்டாட்டியைத் தீர்த்துக் கட்டி விட்டு இன்ஸþரன்ஸ் பணத்தை அடைய நினைக்கிறான் கணவன். வாடகைத் தாய், தான் பெற்றுக் கொடுத்த குழந்தையைக் காண முடியாமல் துடிக்கிறாள். பிறந்தவீட்டினர் தம் கணவனை அகவுரவப் படுத்துவதைக் காணச் சகிக்காமல் பொறுமுகிறாள் ஒருத்தி.

நாகங்களைப் பிரியமாக வழிபடும் பெண்களை கழுகு அரக்கர்களிடமிருந்து காப்பாற்றும் நாகக் கன்னி. அது பாம்பாக இருந்தாலும் ஒரு பெண் பாம்பின் வைராக்கிய கதையைத்தான் சொல்ல வேண்டும்போல ஒரு தீவிரம் தெரிகிறது.

மேற்படி காட்சிகளெல்லாம் டி.வி.யைப் பார்க்கும் பெண்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை மிகச் சிறந்த உளவியல் மேதைகளாலும் ஆய்ந்துணர முடியாது. பெண்கள் இந்தத் தொடர்களை இமை கொட்டாமல் பார்க்கிறார்கள். மாமியார், மருமகள், மகள், தாய் என பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு சீரியலில் ஒவ்வொருவரின் மேன்மைகள் சொல்லப்படுகின்றன. சில சீரியல்களில் இரண்டு மூன்று உறவுகளின் மேன்மைகள்.

காட்சிகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களுக்கு மேல் இழுக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி (சற்றே வேறுவிதமாக). ஒருவர் அமைதியாக பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். வேவ்வேறு கோணங்களில் அவர் பேப்பர் படிப்பது காண்பிக்கப்படுகிறது. இன்னொருவருவர் வேகமாக வருகிறார். ஆனால் நிதானமாக பேசுகிறார்.

"விஷயம் தெரியுமா?'' என்கிறார்.

"சொன்னாத்தானே தெரியும்?''

"ஊருக்கே தெரிஞ்சிருக்கு. உங்களுக்குத் தெரியாதா?''

"அட அப்படி என்ன விஷயம்.. எனக்குத் தெரியாமா போச்சி?''

"தெரிஞ்சுக்கிட்டு தெரியாத மாதிரி நடிக்கிறீரோனு சந்தேகமா இருக்கு..''

"ரயில் கட்டணம் உயர்ந்துட்டதா பேப்பர்ல போட்டிருக்கானே அதச் சொல்றீங்களா?""

"அட உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா?''

"எதுவா இருந்தாலும் சொல்லுங்க?''

"நம்ம வனிதாவோட புருஷனுக்குக் கேன்சராமே?''

-இதைச் சொல்வதற்கு இவ்வளவு இழுத்தது ஏன் என்பது புரியாமல் தவிக்கிறோம். கேமிரா ஜூம் இன் ஜூம் அவுட் என்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரின் அதிர்ச்சியைக் காட்டுகிறது. பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுகிறார். இப்போது சமையல் அறையில் இருந்த அவருடைய சம்சாரம் வருகிறார். மயங்கிக் கிடக்கும் கணவரைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

"என்ன ஆச்சு?''

வந்தவர் "உங்களுக்காவது விஷயம் தெரியுமா'' என்கிறார்?

"என்ன விஷயம்?''

"அந்தவிஷயத்தைச் சொன்னதும் மயங்கி விழுந்துட்டாரு..''

"அப்படி என்ன விஷயம்?''

"அப்படினா உங்களுக்கும் தெரியாதா?''

"சத்தியமா தெரியாது..''

"உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு மட்டும் தெரியாம போனது ஆச்சர்யமாத்தான் இருக்கு... நம்ம வனிதவோட புருஷனுக்கு கேன்சராம்...''

"அடக் கொடுமையே'' என்று சம்சாரம் அலற.. அவருடைய மருமகள் வருகிறாள்..

"மாமிக்கும் மாமாவுக்கும் என்ன ஆச்சு?''

நம்ப மாட்டீர்கள்.. வந்தவர் மீண்டும் ஆரம்பிக்கிறார்... "உங்களுக்கும் விஷயம் தெரியாதா? ''

"நான் உள்ள வந்தேன். உங்க மாமா பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தாரு... என்னங்க விஷயம் தெரியமானு கேட்டேன். தெரியாதுனு சொன்னார். நிஜமாவே தெரியாதானு கேட்டேன்.. அப்புறம் விஷயத்தைச் சொன்னேன்.. அதிர்ச்சியில மயக்கமாயிட்டாரு. அத பாத்துட்டு உங்க மாமியார் ஓடி வந்தாங்க...''

-மன்னிக்கவும் நான் அடைந்த எரிச்சலை இதற்கு மேல் விளக்குவதற்காகக் கூட முடியவில்லை.

இவ்வளவு இழுவையாக இழுத்துவிட்டு இறுதியில் இவ்வளவையும் அண்ணிக்காரி ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக முடிக்கிறார்கள். அது ஏன் என்பது மறுநாள் வரை நீடிக்க வேண்டிய சஸ்பென்ஸ்.



முத்தமிழில் இளைய தமிழான நாடகத் தமிழுக்கு இப்படி ஒரு சோதனை. மக்களின் வாசிப்பு தாகத்தையும் இந்தத் தொலைக் காட்சி மோகம் பாதிப்பதால் வேதனை இரட்டிப்பாகிறது. தவறான பொழு போக்கு, நல்ல வாய்ப்புகளையும் நேரங்களையும் சேர்த்துக் கொல்கிறது. நம் இலக்கிய மரபை கேலி செய்கிறது. படைப்புலகத்தைப் பாழாக்குகிறது என்கிற கவலைகூட ஒருபுறம் இருக்கட்டும். ஒருவரிடம் எப்படி தெளிவாகப் பேச வேண்டும் என்பதையும் மழுங்கடிக்கிறது அதுதான் உச் சகட்டம். டி.வி.யில் ஆயிரம் காட்டுவான், ரிமோட் கண்ட்ரோல் நம் கையில்தானே இருக்கிறது என்கிறீர்களா?

ஒரு புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் தாம் எழுதிக் குவிப்பதற்கு டி.வி.க்கு நன்றி சொல்லியிருந்தார்.

டி.வி.யைப் பார்த்து எப்படி எழுதிக் குவிக்க முடியும்?

"டி.வி. யைப் போட்டதும் தாள முடியாத வெறுப்பு ஏற்படும். உடனே என் அறைக்குச் சென்று எழுத ஆரம்பிப்பேன்.. நான் இவ்வளவு எழுதியதற்கு டி.வி. நிகழ்ச்சிகள்தான் காரணம்'' -இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதைத்தான் நம் திருவள்ளுவர் "கேட்டினும் உண்டோர் உறுதி' என்கிறார்.

LinkWithin

Blog Widget by LinkWithin