புதன், மே 12, 2010

கும்பகோணம்- கனவு இல்லமும் கணித மேதையும்



மாக்ஸிமுக்கு உடம்பு மிகவும் முடியாமல் இருந்தது. பசி எடுக்கிறது என்பான். சாப்பிட உட்கார்ந்ததும் வினோதமாக இரண்டு ஏப்பம் வரும். வயிறு நிறைய சாப்பிட்டு முடித்துவிட்டதுமாதிரி நெளிவான். எனக்கு மனது கஷ்டமாக இருந்தது. புரோட்டா இரண்டு துணுக்குகளைச் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்தான். கூடவே ஓயாத இருமல் வேறு. சேத்தியாதோப்பில் சாப்பிட்டுவிட்டு அணைக்கரையைக் கடக்கும்போது சரியான ட்ராபிக் ஜாம்.
இரவு.. இருட்டின் அடர்த்தியும் அதிகமாக இருந்தது. முன்னால் போகிற வாகனம், வருகிற வாகனம் சரியாகத் தெரியவில்லை. எங்களுக்கு முன்னால் கருப்பு பின்னி துப்பட்டாவைப் போர்த்திக் கொண்டு நடுச்சாலையில் நிதானமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். வந்த வேகத்தில் அத்தனை நெருக்கத்தில் அவரை கவனித்தேன். கரணம் தப்பினால்... மரணடைவதற்காகவே ஏற்பாடோடு வந்தவர் போல போய்க் கொண்டிருந்தார்.
ஒருவழியாக (பாண்டிச்சேரியில் இருந்து செல்வதற்கு அந்த ஒரு வழிதான் இருந்தது) கும்பகோணம் சென்று சேரும்போது இரவு பதினோரு மணி.
சேத்தியாத்தோப்பில் புரோட்டாவோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தபோதே கலை விமர்சகர் தேனுகாவோடு தொடர்பு கொண்டு ""அறை கிடைப்பதற்கு ஒன்றும் தொந்தரவு இருக்காதே'' என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.
"மகம் என்பதால் நெரிசல் அதிகமாகத்தான் இருக்கிறது. நல்லவேளையாக நான் கும்பகோணம் டவுனில்தான் இருக்கிறேன். விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்'' என்றார்.
ராயர் ஹோட்டல்தான் கும்பகோணத்தில் சிறப்பானது. ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கு எதிரில் ஒரு ஹோட்டலில் இடம் கிடைத்திருப்பதாகச் சொன்னார். தங்கி, காலையில் எழுந்து கும்பேஸ்வரர் கோவில் குளத்தை பார்வையிட்டோம், ஜெயலலிதா ஞாபகம் வந்தார். சசிகலாவும் அவரும் மகாமகத்துக்குக் குளித்த இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்த்தேன். நான்கு பக்கமும் மண்டபம் போல ஓர் அமைப்பு இருந்தது.
தேனுகா போன் செய்தார்.
உடனே அவருடைய வீட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய வீடு பல ஆச்சர்யங்களுக்கு வழி வகுத்தது. செவ்வகம், முக்கோணம், அறுகோணம், சதுரம் போன்ற பல்வேறு வெட்டுத் தோற்றம் கொண்ட வீடு. வீட்டுக்கான வண்ணத்துக்கும் ஏதோ காரணங்கள். வீட்டுக்குப் பக்கவாட்டில் தனியாக ஒரு சுவர். இந்தச் சுவரை பாருங்கள் என்று காட்டினார். குறும்படம் திரையிட வசதியான ஒரு சுவர்.
ஆனால் அந்தச் சுவரை இரு சதுரமும் ஒரு செவ்வகமுமாகப் பிரிக்கலாம் என்றும் அந்தச் செவ்வகத்தை மேலும் ஒரு செவ்வகமும் சதுரமாகவும் பிரிக்கலாம் என்றும் சொன்னார். தொடர்ந்து அதைப் பிரித்துக் கொண்டே செல்ல முடியும் என்ற போது ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு கலை நுணுக்கங்கள் அந்த வீட்டில் இருந்தாலும் இப்படி கட்டுவதற்கு அனுமதித்த அவருடைய மனைவிக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். நான் சொன்னேன். வசதியான அறைகள், பெரிய ஹால், மேலே இரண்டு மாடிகள் இப்படித்தான் பெரும்பாலும் கனவு இருக்கும். வீட்டுக்கு வருகிறவர்கள் எத்தனை பேர் எப்படியெல்லாம் கருத்து சொல்லி அவரைக் குழப்பியிருப்பார்கள்? ரிடையர் ஆன பணத்தில் இப்படி ஒரு கனவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதுதான் தேனுகாவின் விருப்பம்.
மாக்ஸிம் தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பதைப் பார்த்து நெய்யில் மிளகை வதக்கிச் சுடச் சுட சாப்பிடச் சொன்னார் திருமதி தேனுகா. மாக்ஸிமுக்கு அதோடு இருமல் வரவேயில்லை.
நாங்கள் கணிதமேதை ராமானுஜம் வாழ்ந்த வீட்டைப் பார்க்கக் கிளம்பினோம். சாரங்கபாணி கோயிலுக்கு அருகே இருந்தது அந்த மகத்தான மேதையில் எளியவீடு. உள்ளே நுழைந்தபோது பெரும்பரவசம் ஏற்பட்டது. புதுவையில் பாரதி வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற போது ஏற்பட்ட அதே பரவசம். சிலிர்ப்பு. என்னதான் நாத்திகம் பேசினாலும் இதெல்லாம் மூளைக்குள் இருக்கும் மிகப் பாரம்பர்யமான உணர்வுதான்.
அவர் குறித்து வைத்திருந்த சில கணிதப் புதிர்களை அட்டையில் எழுதி மாட்டி வைத்திருந்தனர். ஒரு எண்ணை தொடர்ந்து வர்க்க மூலம் காண்பதாக ஒரு புதிர் எழுதியிருந்தார். அந்த வர்க்க மூலங்களில் இருக்கும் ஆச்சர்யமான ஒற்றுமையை சொல்லியிருந்தார். எண்கள் அவருக்கு வாழ்க்கையாகவும் பொழுது போக்காகவும் புதிராகவும் எல்லாமுமாக இருந்திருக்கிறது.
லண்டனில் கேம்பிரிட்ஜில் தாமஸ் ஹார்டியுடன் ராமானுஜம் பணியாற்றியது ஒரு பொற்காலம். ஆனால் லண்டன் பனி ராமானுஜத்துக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. கடும் பாதிப்புக்கு ஆளாகி இரண்டு மூன்று முறை தற்கொலைக்கும் முயன்று காப்பாற்றப்பட்டார்.
1916 முதல் 19 வரை ஹார்டியுடன் அவர் பழிகியிருந்தார். அந்த நான்கு ஆண்டு பழக்கத்திலேயே ஹார்டிக்கு ராமானுஜம் மீது அதீத மரியாதை ஏற்பட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் பணியாற்றிய கணித மேதைகளை தரவரிசைபடுத்திய போது தாமஸ் ஹார்டி தனக்கு 25 மதிப்பெண்களும் ராமானுஜத்துக்கு 100 மதிப்பெண்களும் வழங்கியதிலிருந்து அவர் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதை உணர முடியும்.
ராமானுஜத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாகி லண்டனிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப இருந்த நேரத்தில் அவரைப் பார்க்க வந்த ஹார்டி தன் கார் தாமதத்துக்குக் காரணம் என்று கூறி, அந்தக் காரின் எண்ணிலும் ஒரு சுவாரசியமும் இல்லை என்று நொந்து கொண்டார். "காரின் எண் 1729. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்றார் ஹார்டி.''
உடல்நிலை மோசமாக இருந்தும் அல்சரில் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும் ராமானுஜம் சொன்னார்: "இது சுவாரசியமான எண்தான். பத்தின் மும்மடங்கையும் ஒன்பதின் மும்மடங்கையும் கூட்டினால் இந்த எண் வரும். அதே போல் பனிரெண்டின் மும்மடங்கையும் ஒன்றின் மும்மடங்கையும் கூட்டினாலும் இந்த எண் வரும்''.
ஹார்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
32 வயதில் இறந்துபோன அந்த மாமேதையின் வீட்டில் அவர் குளித்த கிணற்றடியில் நின்று கொண்டு இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது உடல் சிலிர்த்தது. அதிலென்ன தவறு இருக்கிறது? சிலிர்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

(இன்னும் கொஞ்சம் இருக்கிறது)

திங்கள், மே 10, 2010

தி ஹிந்து



தமிழில்
அன்று, அன்றாடம் உபயோகப் படுத்திய தீப்பெட்டி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? திட சரீரமுள்ள இளைஞன் கையில் அரிவாளுடன் சீற்றம் கொண்டு நிற்கும் புலியைத் தாக்க ஆயத்தமாக இருக்கும் காட்சியை அதில் காணலாம். அது அப்படியே உறைந்து போன காட்சிதான். இந்தப் போராட்ட்த்தில் வென்றது யார்? மனிதனா அல்லது விலங்கா என்பது நம் யூகத்திற்கு விடப்பட்டது!

20 வது நூற்றாண்டின் முதல் தலைமுறைகளில் மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் போராட்டங்கள் என்பவை சகஜமான நிகழ்வுகளாகத்தான் இருந்தன. நமக்குக் கதை சொல்லும் ஆசிரியர் செய்வதெல்லாம் தனது மூதாதையர் ஒருவர் இந்தப் புலி குடும்பத்தில் உள்ள ஒருவரை வீழ்த்திய நிகழ்வு பற்றிய விவரங்களைச் சேகரிக்க முன்னடி எடுத்து வைப்பது தான். இது சார்ந்த நீண்ட பயணத்தை அவர் மேற்கொண்டு இவ்விஷயம் பற்றிக் கண்டிருந்த, கேட்டிருந்த அல்லது ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்ட எல்லா தரப்பினரிடமும் மொழியாட, இந்த நாவல் ஒரு நிதான கதியில் நம்மை இட்டுச் செல்கிறது.

ஒரு பெரிய வீச்சுடைய இந்த நாவலானது ஒரு பெரும் ஓவிய தளத்தில் புனையப் பட்டது போல, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொன்றிற்கும், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும், ஒரு அன்பான அணுகுமுறையுடன் காலத்தின் நகர்தலையும், வரும் பாத்திரங்களின் போக்குகளையும் – இவர்கள் எல்லாம் இந்த முழுக்கதையில் ஒரு பாகம் வகிப்பவர்கள்தானே? – நமது கண்முன்னே கொண்டு வைக்கிறது. பாத்திரங்களுள் சில நிஜமானவை, சில கதைக்கப்பட்டவை. கதைக்கப்பட்டவைக்கு நிஜ முலாம் பூசியிருக்கலாம் ; நிஜமானவற்றிற்கு கதை என்ற வர்ணத்தையும் பொழிந்திருக்கலாம். அரசியல், சினிமா இன்னும் மற்ற எத்தனையோ இலாக்காக்களை நாவல் தொட்டுச் செல்கிறது. தலைமுறைகளின் வளர்ச்சி அபாரமான கட்டுரை வடிவத்தில் வரும. அதிலிருந்து கதையம்சம் பொருந்தியவற்றை அவ்வப்பொழுது நாடி நழுவி சுவாரஸ்யமாகச் சென்று விடும்.

மகிழவைக்கும் ஒரு இடம், ஜமீந்தாரின் குதிரைக் கொட்டகையிலிருந்து கட்டிய குதிரையை அவிழ்த்து விட்டு, ஆங்கில அலுவலரின் குதிரையின் மீது அந்த இளைஞன் சவாரி செய்வது. இதை அவன் பலமுறை செய்கிறான், பிடிபட்டும் கொள்கிறான். இதற்கு அவனுக்கு கிடைப்பது என்ன என்பது பின்னர் விவரிக்கப் படுகிறது.

பொறுமையாய் படிப்பவர்கள், இந்த நாவலின் திருப்பங்களையும், திருப்பு முனைகளையும் சந்திக்க சந்திக்க, அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலும் அதற்குப் பின்னும் உண்டானவை பற்றிய ஒரு உண்மைத்தனம் நிறைந்த ஒரு ஆவணமே!








Vettupuli review in The Hindu

அரசியலும் சினிமாவும் இணைந்திராத , வெள்ளைக்காரன் காலத்து சென்னை..

ஒரு தீப்பெட்டி . அதன் அட்டையின் மேல் படம் . கட்டுமஸ்து இளைஞன் ஒருவன் கையில் வெட்டரிவாளோடு சிறுத்தையை எதிர்கொள்ளுகிறான். அது யாராக இருக்கும்? ஏன் சிறுத்தைய வெட்டணும்? ஏன் புலியோ சிங்கமோ இல்ல? ஒரு வேளை அது உண்மை சம்பவமோ? கேள்விகள் நம்மை எப்போதும புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்பவை. இந்தக்கேள்வியும் நம்மை காலச்சக்கரத்தில் ஏற்றிவைத்துக்கொண்டு காலத்தை திருகுகிறது. அது சின்னாரெட்டியென்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிஜமாகவே சிறுத்தையை வெட்டிய வீரன் என்றும் வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.

சின்னாரெட்டியின் கதைத்தேடலில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் இதே சென்னை.. காடுகளடர்ந்த சென்னை நகரம். இங்கே அரசியலும் சினிமாவும் இணைந்திராத , வெள்ளைக்காரன் காலத்து சென்னை.. சென்னைக்குடிநீருக்காக சிலபல கிராமங்களை காலி செய்து அவர்களை கொண்டே ஏரிகள் உருவாக்கிக்கொண்டிருந்த காலம்... ஜாதீயமும் , நிலபிரபுத்துவமும் ஒவ்வொருவருடைய மனதிலும் கொடிக்கட்டிப் பறந்த சென்னை. கூவத்தில் குளியல் போட முடிகிற சென்னை. காபி என்கிற வஸ்துவை முதன்முதலாக 'மாம்பலத்துல ஐயமாருங்க இப்பலாம் அததான் குடிக்கிறாங்களாம்.. நானும் குடிச்சேன் தித்திப்பா இருந்துச்சு' என்று பேசும் ஆச்சர்ய மனிதர்களின் காலம். சினிமா தியேட்டரை முதன்முதலாக பார்த்து என்ன ஒரே இரைச்சலா இருக்கு... உப்புசமா இருக்கு என்று வியக்கும் மனிதர்கள். சென்னையிலிருப்பவர் இன்று நின்று கொண்டிருக்குமிடம் எப்போதோ யாராவது விவசாயம் செய்து கொண்டிருந்த இடமாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் கிராமத்து மைனர் சினிமாகனவுகளோடு நின்று கொண்டிருக்கலாம்.


அரசியலில் சினிமாவின் தாக்கம் உருவாகத்தொடங்கிய காலகட்டத்திலிருந்து அழகிரி அரசியல்வரைக்குமான ஒரு நூற்றாண்டின் அரசியல் மாற்றங்களை அடிகோடிட்டு காட்டுகிறது வெட்டுபுலி. இங்கே பார்ப்பனீயத்திற்கெதிரான அரசியலின் வளர்ச்சியும் , திராவிட இயக்கங்களின் வளர்ச்சியும் அதையொட்டி நிகழ்ந்த சினிமா அரசியலும் என நூறாண்டு கால வரலாற்றிலின் சில தருணங்களை அருகிலிருந்து தரிசிக்கும் ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது!.


தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் நமக்கு அந்த அனுபவத்தை ஓரளவுக்கேனும் திருப்தியாய் தருகிறது. ஆக்சன் படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் குதிரை வேக சேஸிங்கில் துவங்குகிறது லட்சுமண ரெட்டியின் கதை. நூல் பிடித்தது போல காதல், காமம், காமெடி என மசாலாவாக பயணிக்கும் நாவலில் திடீரென எம்.ஜி.ஆர், அறிமுக நாயகனாக வருகிறார். பெரியார் ஒரு அத்தியாயம் முழுதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார். யாரோ ராம்ச்சந்தர்ன்னு ஒரு பையன் நல்லா நடிக்கிறான்பா அவன ஹீரோவா போடலாமா என்று ஒரு அறிமுக புரொடியுசர் பேசுகிறார். அந்தந்த காலத்தின் அரசியல் கதையில் நிகழும் சம்பவங்களினூடகவும் வசனங்களின் மூலமாகவும் நமக்கு சொல்லப்படுகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய மக்களின் அரசியலும் , அதற்கு பிறகான அரசியல் நிலைப்பாடும் மாற்றங்களும், இங்கே திராவிட இயக்கங்கள் வித்திட்ட சமூகப்புரட்சியின் பிண்ணனியும் கதையின் வேராக ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. அரசியல் மற்றும் சினிமாவுக்குமான தமிழக உறவை அரசியல் வரலாறோடு சினிமாவின் வரலாறையும் சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். ஆனால் இரண்டுமே மேலோட்டமாக ஆங்காங்கே அறிமுகங்களாக அடங்கிவிடுவது.


தமிழகத்தின் கடைசி நூறு வருட வரலாற்றில் தவிர்க்க இயலாதவை திராவிட கட்சிகள். அந்த இயக்கங்களாலும் அவற்றால் விளைந்த மாற்றங்களாலும் குடும்பத்தை இழந்து அழிந்து போனவர்கள் , வளர்ந்தவர்கள், அதன் வளர்ச்சியோடு தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் என மூன்று வகையினரையும் பல்வேறு பாத்திரங்களின் வழியே சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். அதில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். திராவிட சித்தாந்தங்களை வாசல் வரைக்கும் வைத்து கொள்ளுபவர், அதை பற்றி எப்போதாவது மனைவியோடு பேசுபவர், படுக்கையறை வரைக்கும் திராவிடம் பேசி நாத்திகம் பேசி நாசமாகினவர் என மூன்று கிளை கதைகள் உண்டு. இங்கே பார்ப்பனீய எதிர்ப்பு இன்றளவும் தீராமல் புகைந்து கொண்டிருக்கிற அல்லது மேடைகளில் பற்றி எரிகிற ஒன்று. அதன் ஆணிவேரையும் காலப்போக்கில் பார்ப்பன எதிர்ப்பின் தமிழக அரசியல் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து நீர்த்துப்போனது, பெரியாரின் திராவிட அரசியலுக்கும், அண்ணாவின் அரசியலுக்குமான வித்தியாசங்கள், ஏன் ஜஸ்டிஸ் கட்சி திகவானது, ஏன் அது திமுகவாய் பிரிந்தது, மாதிரியான அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை இங்கே வாய்வழியாக சொல்லப்படும் கதைகளை தொகுத்தும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்து நாவல் முழுக்க சம்பவங்களாக்கியிருக்கிறார் தமிழ்மகன். நம்பகத்தன்மை குறித்து கவலைப்படுகிறவர்கள் கவலைப்படுவார்கள். வரலாற்றின் நம்பகத்தன்மை அதைப்படிப்பவர்களின் மனதிலே இருப்பதாய் எண்ணுகிறேன்.


நாவல் முழுக்க வரலாற்றில் நமக்குத்தெரிந்த சுவாரஸ்யமான பக்கங்கள் கதையினூடாக தொகுக்கப்பட்டுள்ளதால் , வேர்க்கதை தொய்வடையும் போதெல்லாம் சம்பவங்கள் வேகம் கூட்டுகின்றன.


வரலாற்று உண்மைகள் அவரவர்க்கு ஏற்றாற் போல விவரிக்கப்படுகின்றன. இங்கு டிவியின் வருகைக்குப் பின் வரலாறு கூட முன்தீர்மானத்துடன் சொல்லப்பட்டன. அதற்கு முன் பத்திரிக்கைகள் யார் கையில் இருக்கிறதோ அவர்களுடைய பார்வையில் வரலாறு திரிந்தது. அப்படி திரிந்ததும் புனைந்ததுமான தமிழகத்தின் சமகால வரலாற்றை திராவிடத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் ஊடாக நடுநிலையோடு சொல்ல முயன்றிருக்கிறார் நூலின் ஆசிரியர்.


இந்நாவலில் காலம் ஒவ்வொரு பத்தாண்டும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வேகமெடுக்கிறது. அதைப்போலவே முப்பதுகள் பொறுமையாகவும் 90கள் அதீத வேகத்திலும் பயணிக்கிறது. சென்னையை ஓரளவுக்கேணும் அறிமுகமிருந்தால் கதையோடு நாமும் ஜாலி சவாரி செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் கையில் மேப்போடு உட்கார்ந்து கொண்டும் படிக்கலாம், புது அனுபவமாக இருக்கக்கூடும்.


சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை படித்துவிட்டு பல நாட்கள் நினைத்திருக்கிறேன். அந்த கதை நிகழும் ஊரைப்போய் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று! அந்த மனிதர்களை சந்திக்க வேண்டுமென்று! அவர்களுடைய குரலில் அந்த மொழியை உணரவேண்டுமென்று! ஏனோ அதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை வாய்க்கவில்லை. அதே மாதிரியான உணர்வை வெட்டுப்புலி நாவலும் எனக்குத் தருகிறது. ஜெகனாதபுரம் , ரங்காவரம் , பூண்டி, ஆந்திரா செல்லும் சாலை , தொடர்ந்து சென்னையில் சில பகுதிகள் என எனக்கு மிக அருகிலேயே இருக்கிறது. பார்க்க வேண்டும்.


புத்தகத்தின் பல இடங்களில் எழுத்துப்பிழை. தாறுமாறாக!. மற்றபடி இது தீவிர இலக்கிய நூலாவென்று நிர்ணயிக்க முடியவில்லை. வரலாற்றின் சுவாரஸ்யத்திற்கு மேல் அது குறித்த தேடலை உண்டாக்குகிறது. நிச்சயம் என்னைப் போன்ற ஜனரஞ்சக நாவல் வாசிப்பாளனுக்கு முழுமையான திருப்தி அளிக்கிறது. அரசியல் பிடித்தவர்களுக்கும் சினிமா பிடித்தவர்களுக்கும் சென்னை பிடித்தவர்களுக்கும் பிடிக்கும்!

அதிஷா

ஞாயிறு, மே 09, 2010

சேலத்தில் தமிழ்மகனின் வெட்டுப்புலி!

சேலத்தில் நடைபெற்ற வெட்டுப்புலி விமர்சனக்கூட்டத்தில் நண்பர் சிவராமன் எழுதி அளித்த விமர்சனம்.
அனைவருக்கும் வணக்கம்.

இப்படியொரு வாய்ப்பு அமைந்தது தற்செயல்தான் என்றாலும் மனம் முழுக்க நிரம்பி வழியும் துக்கத்தை எந்த சொற்களாலும் விளக்கிவிட முடியாது.

ஆமாம். வெட்டுப்புலி குறித்து பேச வந்திருக்கிறேன்.

வெட்டப்பட்ட புலியின் சரித்திரத்தை பேச வந்திருக்கிறேன்.

இன்னும் 10 நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத அழிவின் சோகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்தத் தருணத்தில்தான் வெட்டுப்புலி குறித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதிலும் தமிழனால் வெட்டப்பட்ட புலி அது என்பது அழுத்தம்திருத்தமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

தலைமுறை தலைமுறையாக வெட்டுப்பட்ட புலியின் சோகத்தை, தீரத்தை, சரித்திரத்தை, சறுக்கலை நாம் கடத்தித்தான் ஆக வேண்டும். ஒரு இனத்தை உயிர்ப்பிக்கும் விஷயமாக அதுவே இருக்கும்.

என்னடா இது... இவன் நாவலை குறித்து பேசாமல் வேறு எதையோ பேசுகிறானே... அதுவும் அரசியல் சார்ந்ததாக இருக்கிறதே... கூட்டத்தில் கலகம் உண்டாக்குவதுதான் இவன் நோக்கமா...

என்று நீங்கள் நினைக்கலாம்.

நினைக்க வேண்டும்.

காரணம், நான் பேசுவது வெட்டுப்புலி நாவல் குறித்து என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை -

ஆரம்பத்தில் நான் பேசியதை வைத்து உங்கள் மனதில் எழுந்த எண்ணங்களும், பிம்பங்களும்.

இது அரசியல் நாவல். ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு இயக்கத்தின் வரலாற்றை சொல்லியும், சொல்லாமலும் செல்லும் நாவல். சொல்லப்பட்டதை வைத்து சொல்லப்படாததை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நிரப்ப வேண்டும் என்பது இந்நாவல் உணர்த்தும் அழுத்தமான செய்தி. அதனால்தான் சாதாரண குடும்பங்களின் வழியே அசாதாரணமான 75 ஆண்டுக் கால சரித்திரம் எழுத்துக்களாக இடைவெளியுடன் கோர்க்கப்பட்டிருக்கிறது.

இறுதி அத்தியாயத்துக்கு முந்தைய அத்தியாயத்தின் இறுதி பத்தி வெட்டுப்பட்ட ஒரு முகத்தின் மீது திரும்பத் திரும்ப மீடியாக்களின் வழியே மக்களின் கவனம் குவிக்கப்பட்டதை சொல்கிறது. அது நம்பிக்கை அளித்த முகம். ஓர் இனத்தின் குறியீடு. சுதந்திரத்துக்கான விதையாக அந்த முகத்தை பலரும் பார்த்தார்கள். நேசித்தார்கள். வழிபட்டார்கள். அந்த முகம் ஒருபோதும் வெட்டப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், அந்நிகழ்வு நடந்துவிட்டது. அது கொடுத்த அதிர்ச்சி நடராஜனை அழ வைக்கிறது. பல ஆண்டுகளாக நினைவிழந்து பித்துப் பிடித்தது போல் காணப்பட்ட அவனுக்கு நினைவு திரும்பியது... தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்த வெட்டுப்பட்ட முகத்தை பார்த்தபோதுதான்.

இதனையடுத்து நாவலின் இறுதி அத்தியாயம், மு.க.அழகிரி மத்திய அமைச்சராவது குறித்து சொல்கிறது.

உண்மையில் நாவல் ஆரம்பமாவது இந்த இடத்திலிருந்துதான். இங்கிருந்து தொடங்கும் நாவலை எழுதும் பொறுப்பு வாசகர்களிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவல் வெற்றியடையும் பொறி இதுதானா?

வெட்டுப்புலி (Cheeta Fight) தீப்பெட்டியை நாம் பார்த்திருப்போம். சிறுத்தையை ஒரு மனிதன் நேருக்கு நேர் நின்று அரிவாளால் வெட்டும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி அது. எதற்காக அப்படியொரு படத்தை தீப்பெட்டியில் அச்சிட்டிருக்கிறார்கள் என்று நான் இதுவரை யோசித்ததில்லை. ஒரு கம்பீரத்துக்காக அப்படி வரைந்து பெட்டியில் பொறித்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது தமிழ்ச்செல்வனின் தாத்தாவின் பெரியப்பா - அதாவது கொள்ளுத் தாத்தாவின் - நிஜமான புகைப்படம் என்று அறிந்தபோது பிரபாஷ், ஃபெர்னாண்டஸ் போலவே எனக்கும் ஆச்சர்யமும், பதட்டமும் ஏற்பட்டது.

அதனாலேயே தமிழ்செல்வன் தன் கொள்ளுத்தாத்தாவின் வரலாற்றை தேடி பயணப்பட்டபோது அவனது மூன்றாவது நண்பனாக நானும் எனது வேலையை எல்லாம் விட்டுவிட்டு பயணம் செய்தேன். அதற்கு காரணம் இருக்கிறது.

சிறுத்தையை - கவனிக்க நான் மட்டுமல்ல தமிழ்ச்செல்வனும் புலி என்று குறிப்பிடவில்லை - கத்தியால் வெட்டிய சின்னா ரெட்டி உண்மையில் தமிழ்ச்செல்வனின் அப்பா வழி சொந்தமல்ல. அம்மா வழி சொந்தம்.

இந்த உண்மை தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, என்னையும் திடுக்கிட வைத்தது. மனதளவில் ஏற்பட்ட நெகிழ்வில் சட்டென்று தமிழ்ச்செல்வனின் தோள் மீது ஆதரவாக கைபோட்டேன். அவன் என் இனம். தாய்வழி சமூகத்தை தேடி புறப்படும் ஆதித் தமிழனின் வேர் என்னைப் போலவே அவனிடமும் இருக்கிறது.

நாங்கள் கை கோர்த்தபடி சின்னா ரெட்டியின் வரலாற்றை அறிய புறப்பட்டோம். எங்கள் கண்முன்னால் விரிந்தது இரு குடும்பங்களின் கதை. அந்தக் கதையினுள் நான் நுழைய நுழைய எனக்குள் உணர்ச்சிப்பூர்வமான மாறுதல்கள்.

ஓவென்று அலறி தமிழ்ச்செல்வனை கட்டிப் பிடித்து நான் கதறியதை பிரபாஷும், ஃபெர்னாண்டஸும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். தமிழ்ச்செல்வனாலேயே என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை புரிந்துக் கொள்ள முடியாதபோது மற்ற இருவரால் எப்படி உணர முடியும்?

உண்மையில் நாங்கள் அறிந்தது தமிழ்ச்செல்வனின் தாய்வழி கொள்ளுத் தாத்தாவின் வரலாற்றை அல்ல. எனது கொள்ளுத் தாத்தா, தாத்தா, மாமா, பெரியப்பா, பெரியம்மா... என சகலரின் சரித்திரமும் அதில் அடங்கியிருக்கிறது. ஆமாம், இது என் குடும்பத்தின் கதை...

இப்படி இக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருமே உணர முடியும் என்பதுதான் இந்நாவலின் பலம்.

தமிழக அரசியலோடு நம் ஒவ்வொருவரின் குடும்பமும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சின்னா ரெட்டி, லட்சுமண ரெட்டி, தசரத ரெட்டி, நடராசன், தியாகராசன், ஹேமலதா, விசாலாட்சி, நாகம்மை... என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.

இந்நாவல் சொல்லப்பட்ட முறையிலும் சரி, சொன்ன களனிலும் சரி... புதிதாக இருக்கிறது. சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் திருவல்லிக்கேணி, தங்கச்சாலை, மயிலாப்பூர் மிஞ்சிப் போனால் பட்டாளம், ஓட்டேரி என குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றியபோது -

இந்நாவல் செங்குன்றத்துக்கு அடுத்துள்ள சோழவரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. சென்னையின் குடிநீர் விநியோகத்துக்காக வெள்ளையனிடம் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்ததோடு, பிழைப்புக்காக தன் நிலத்தை தானே வெட்டும் குடிமக்களின் சோகத்தை இந்நாவல் கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் இந்திய விடுதலைக்கு ஆதரவான காங்கிரசும் அதனை இன மற்றும் மொழி ரீதியாக விமர்சித்த நீதிக்கட்சியும் செல்வாக்கு பெற்றிருந்தன. நீதிக்கட்சி பின்னர் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கமாகியது. இந்த நெடிய வரலாறு... இந்நாவலில் உயிர் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபத்திரத்துடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

பெரியார், அண்ணா, கலைஞர் மட்டுமல்ல... எம்.ஜி.ஆர்., ரஜினியும் இந்நாவலில் வருகிறார்கள். 'எண்டர் தி டிராகன்' ஏற்படுத்திய அதிர்வை கனவுகள் உதிரும் கட்டமாக நாவல் மாற்றியிருக்கிறது.

பாலச்சந்தரை குறித்து தியாகராசன் பொருமும் இடம் அழுத்தமானது என்றால் -

கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை அளித்த பாஸ்கரனை 'வண்ணத்திரை' அலுவலகத்தில் ரவி சந்தித்து பேசும் இடம் ஆழமானது.

'நாடார் குரல் மித்ரன்' நாளிதழில் வெளிவந்த பெரியார் குறித்த செய்தியை லட்சுமண ரெட்டி அறியும் கட்டமும், அ.ச.ஞானசம்பந்தத்தை விமர்சிக்கும் தியாகராசனின் செயலும், பெரியார்தாசனுடன் தேநீர் பருகும் நடராசனின் உள்ளக் கொந்தளிப்பும் -

எதை உணர்த்துகிறது? அதை ஒவ்வொரு வாசகனும் கண்டறியும்போது -

எழுதப்பட்ட பிரதிகளுக்கு அப்பால் அலைந்தபடி இருக்கும் வரலாற்றை சட்டென பிடிக்க முடியும்.

திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆறுமுக முதலி, டூரிங் டாக்கீஸ் கட்டியதுடன் நின்றுவிடுகிறார். ஆனால், அவரது மகன் சிவகுரு படம் தயாரிக்கிறான். அந்தப்படம் பாதியுடன் நின்றுவிடுகிறது. இறுதியில் கோயில் வாசலில் பிச்சைக்காரனாக சிவகுரு இறந்து போகிறான்.

வனஜா என்னும் நடிகையின் மீது சிவகுரு கொள்ளும் மையல், பின்னால் நடிகை செண்பகாவை ரவி முதன்முதலாக பேட்டி காண்பதுடன் தொடர்புடையது. செண்பகாவின் தாய் பெயர் வனஜா என்று போகிற போக்கில் பதிவான வாக்கியம் தமிழ்ச்செல்வன், பிரபாஷ், ஃபெர்னாண்டஸை மட்டுமல்ல நம்மையும் யோசிக்க வைக்கிறது. எழுதப்படாத வனஜாவின் கதையை - அவளது கனவை - வாசகன் இங்கு எழுத ஆரம்பித்தால் அவனுக்கு இன்னொரு நாவல் கிடைக்கும்.

இந்நாவலில் சில காதல் கதைகள் நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. லட்சுமண ரெட்டி தாழ்த்தப்பட்ட பெண்ணான குணவதி மீது கொள்ளும் காதல், முதலாவதாக வருகிறது. இந்தக் காதலால் ஒரு சமூகமே எப்படி கருகிப் போகிறது என்பது உணர்ச்சியுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வாசகனான என்னை மிகவும் பாதித்த காதல் தியாகராசன் - ஹேமலதா வாழ்க்கைதான். கடவுள் மறுப்பாளனாக வளரும் தியாகராசனுக்கு அமைந்த மனைவி தீவிர கடவுள் பக்தை. இந்த முரண்பாடுகள் அவர்களது வாழ்க்கையை எப்படியெல்லாம் கலைத்துப் போடுகிறது என்பது ரத்தமும் சதையுமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மணிகண்டனுக்கு பிறந்த குழந்தையை தன் குழந்தையாக தியாகராசன் பாவிப்பதும், மருத்துவமனையில் தன் குழந்தையின் பெயராக தன் மாமியாரின் பெயரான புனிதாவின் பெயரை ஹேமலதா உச்சரிப்பதும் தனியாக எழுதப்பட வேண்டிய ஒரு நாவலின் ஹைக்கூ.

பிராமணப் பெண்ணாக இருப்பதாலேயே கிருஷ்ணப் ப்ரியாவின் காதலை ஏற்க மறுக்கும் நடராசன், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தேவகியை மணக்கிறான். ராஜீவ்காந்தியின் மரணத்தை தொடர்ந்து அவனுக்கு சித்தபிரமை பிடிக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் சுயநினைவின்றி வாழ்கிறான். அப்போதும் தேவகி அவனுடனேயே வாழ்கிறாள். ஆண்டுக்கு ஒருமுறையாவது நட்பின் அடிப்படையில் கிருஷ்ணப் ப்ரியா அவனை பார்த்துவிட்டு செல்கிறாள்.

இந்தப் பகுதியை சற்றே வேறுவிதமாக வாசித்துப் பார்ப்போம். ஒருவேளை கிருஷ்ணப் ப்ரியாவை நடராசன் திருமணம் செய்துக் கொண்டிருந்தால் -

அவனுக்கு சித்த பிரமை பிடித்த நிலையிலும் அவனுடன் கிருஷ்ணப் ப்ரியா வாழ்ந்திருப்பாளா?

இந்தக் கேள்விக்கான விடையில் மறைந்திருக்கிறது 21ம் நூற்றாண்டின் கதை!

வயதான காலத்தில் மருத்துவமனையில் படுத்திருக்கும் லட்சுமண ரெட்டி முணுமுணுப்பது குணவதியின் பெயரைத்தானே? முதல் காதல் இறுதிவரை தொடரவே செய்யும் என்பது எவ்வளவு அனுபவப்பூர்வமான உண்மை?

திராவிட கழக அனுதாபியான லட்சுமணரெட்டி, தன் குடும்பத்தை சாதி மறுப்பு குடும்பமாக மாற்ற முடியாமல் தவிக்கிறார். தன் மகளுக்கு வேறு சாதியில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பமே அனுமதி தர மறுக்கிறது. அப்போது அவருக்குள் நிகழும் போராட்டம், ஒரு தலைமுறையின் மனப்போராட்டம். அபசகுனம் பிடிச்ச பெண் என உறவினர்கள் குற்றம்சாட்டும் பெண்ணை விடாப்பிடியாக திருமணம் செய்து கொள்வதன் மூலமாக தனது கொள்கையை ஓரளவு காப்பாற்றிக் கொள்கிறார். அவரால் அந்தச் சூழலில் முடிந்தது அவ்வளவுதான்.

திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர்கள் ஒரு கட்டத்தில் அன்னை, சாய்பாபா என்று மாறுவதை வாழ்க்கையின் போக்கிலேயே நாவல் உணர்த்துகிறது.

குறிப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி... என ஆண்கள் உயிருள்ள தலைவர்களுக்கு பின்னால் அணி திரள்வதற்கு மாற்றாக -

வாழும் தெய்வங்கள் என சமூகத்தால் மதிக்கப்படும் மனிதர்களுக்கு பின்னால் அவர்களது குடும்பங்கள் அணி திரள்கிறது. இது அந்த குடும்ப ஆணை எதிர்க்க வேண்டும் என்பதற்காக செய்யும் செயல். அதனாலேயே அவன் யாரை மதிக்கிறானோ -

யாரது கோட்பாடுகளை பின்பற்ற துடிக்கிறானோ -

அதற்கு எதிரான பக்கத்துக்கு மூர்க்கத்துடன் செல்கிறார்கள்.

இந்த முரணுக்கு காரணம் எது?

அரசியல் தலைவர்களா?

இயக்கமா?

அல்லது சமூகமா?

வருங்கால தலைமுறை ஆராய வேண்டிய இந்த நிகழ்கால அவலத்தை பதிவு செய்திருக்கும் நாவலின் பகுதி, முக்கியமான விவாதத்தை முன் வைக்கிறது.

பத்து பத்து ஆண்டுகள் கொண்ட பாகமாக இந்நாவல் அச்சிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாகத்திலும் அந்தந்த காலத்தில் நடந்த அனைத்து அரசியல் நிகழ்வுகளும் பதிவாகியிருப்பதாக சொல்ல முடியாது. ஆசிரியரின் தேர்வு சார்ந்த விஷயங்களே நாவல் களத்தில் வருகின்றன. அதில் தவறும் இல்லை.

ஆனால், தேர்வு செய்யப்படாத அரசியல் நிகழ்வுகள் இருக்கிறதே... அது முக்கியம்.

அவை ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணமே, நமது இப்போதைய பிற்போக்குத்தனத்துக்கு காரணம்.

இதைதான் அழுத்தம் திருத்தமாக இந்நாவல் உணர்த்துகிறது.

இந்நாவலை எழுதிய தமிழ்மகனின் நண்பனாக -

சில வருடங்கள் அவருடன் ஒன்றாக பணிபுரிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

என் குடும்ப வரலாறாக சொல்லப்பட்ட நிகழ்வுகளின் வழியே அறியப்படாத உறவுகளின் சரித்திரத்தை நான் கண்டடைய உதவியதற்கு நன்றி நண்பா...

வாருங்கள்...

புலிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டதற்காக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலைப்படும் இந்த நேரத்தில் -

வெட்டுப்புலியின் சரித்திரத்தை தெரிந்து கொள்வோம்...

வெட்டுப்புலி என்று இப்போது நான் குறிப்பிட்டது நாவலை மட்டுமல்ல....

-------

இன்று சேலத்தில் நடக்கும் 'சொற்கப்பல்' நாவல் விமர்சன அரங்கில் வாசிக்கப்பட உள்ள கட்டுரை இது. தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் சேலம் செல்ல முடியவில்லை. ஆனால், கட்டுரையை அனுப்பிவிட்டேன். என் சார்பில் கட்டுரையை வாசிக்கும் நண்பருக்கும், வாய்ப்பளித்த 'சொற்கப்பல்' அமைப்பாளர்களுக்கும் நன்றி. 8-5-2010.

சனி, மே 08, 2010

சொல்வனம்- புத்தகவிமர்சனம்


புத்தகவிமர்சனம்
வெட்டுப்புலி
க.குணசேகரன் |

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இன்றைய திருவள்ளூர் மாவட்டத்து நிஜமான ஒரு கதாநாயகனை மையப்படுத்திப் படைக்கப்பட்ட நூல் ‘வெட்டுப்புலி’. இந்திய வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் ஷெர்ஷா சூரி என்கிற ஆப்கானிய வீரன் கையாலேயே புலியை வீழ்த்தி அதனாலேயே, ‘ஷெஹர்’ என்கிற புலி வழங்கும் பெயரையும் ஆட்கொண்டவன். ஆள்பவன் என்கிற ‘ஷா’வையும் சேர்த்து ஷெர்ஷா என அவன் அழைக்கப்பட்டான். ஆனால் இந்தப் படைப்பில் நிஜமாகவே தன் கருக்கரிவாளால், நேர்கொண்ட சிறுத்தையை வெட்டி வீழ்த்திய வீரனை சின்னா ரெட்டி என்ற சொந்தப் பெயராலேயே சனங்கள் வழங்கினர். வேறு அடைமொழி எதுவும் தரவில்லை. இன்றுள்ள நகரச்சுவர்களை நாறடிக்கும் சுவரொட்டிகளில் படையே நடத்தாமல் தளபதிகளும், பாதுகாப்பு வீரர்களுடன் உயிருக்கு பயந்து பயணம் செய்கிற மாவீரர்களும், மிரட்சியோடு எதையும் பார்க்கிற அஞ்சாநெஞ்சர்களும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம்.

சென்னை நகரமும், நகரம் சார்ந்து வளர்ந்துவரும் புறநகரமும் நாற்பதாண்டுகள் அளவில் பரிச்சயப்பட்டவர்களுக்கு இதன் களம் நன்கு உள்வாங்கப்பட்டு உணர்ந்து கொண்டாடப்படும். புதிதாய் இந்தக் களத்தைப் புரிந்து கொள்வது, அன்றைய பிரதேசங்களின் அழகைக்கொன்று வளர்ந்துநிற்கும் இன்றைய கான்கிரீட் கட்டடங்களின்மீது இனம்புரியா வெறுப்பை உருவாக்கும்.

சின்ன வயதில் கோலி, பம்பரம், தீப்பெட்டிமேல் ஒட்டும் வண்ணப்படங்கள், பழைய கில்லி-தண்டு, தேய்ந்துபோன கிரிக்கெட் மட்டை, மூன்று சக்கர சைக்கிள், டயர் ஓட்டிப்போதல், அக்காவின் வளையலை உடைத்து முப்பட்டைக் கண்ணாடிக்குள் போட்டுச் செய்த கலைடாஸ்கோப்… இப்படி என் ஏராளமான இளவயது விளையாட்டுப் பொருட்களை, அம்மா எதோ தேடச் சொன்னபோது பரணில் இருந்து மூட்டைபிரித்துப் பார்த்தாப் போல ஒரு நெருக்க உணர்வை இந்த நாவல் எனக்கு அளித்தது.

இந்த நூலில் நிகழும் சம்பவங்களின் இடங்கள் நான் கால்புழுதிபட சுற்றித் திரிந்தவை. பருவ வயதில் உடல் வலிமை பெற உடும்பு பிடித்துத் தின்னப் போனதெல்லாம் நினைவுமேல் வந்தது. நானும் நண்பன் பாச்சியும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி எல்லாம் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் சென்று சத்தியவேடு காட்டை அடைவோம். உடும்பு தான் கவ்வியது தன் வால் என்றே உணராது. அதனால் உடும்பை வட்டமாகச் சுருட்டி அதன் வாலை அதன் வாய்க்குக்ளேயே திணித்து கொடிநாரால் கட்டி எடுத்துக் கொள்வோம். கூச்சமில்லாமல் சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக வருவோம். வரும் வழியில் பூண்டி ஏரி, பொன்னேரி அல்லது சோழாவரத்தில் வெயிலுக்கு இதமாக சுகமான குளியல். மூலக்கொத்தளத்து நரிககுறவன் வாகாக தலையை வெட்டி தோலைப் பிரித்து கறியை வெட்டித் தருவான். அதை இரும்பு உலக்கையில் பஞ்சுபோல் மென்மையாக இடிப்போம். பிறகு சமையல்! வீட்டுக்குத் தெரிந்தால் கொன்றுவிடுவார்கள். ஒவ்வொருத்தன் வீட்டிலிருந்தும் ஆளக்கொரு சாமான் கொண்டு வரவேண்டும். எண்ணெய். கடாய். கரண்டி. பூண்டு. வெங்காயம். சமையல் தெருவே மணக்கும். தெருப்போக்கிரியாக வலம்வந்த சின்னத்தம்பி நாயக்கர் எங்கள் ரகசியச் சமையலைப் பார்த்துவிட்டு வந்து மிரட்டுவார். அவருக்கும் பங்கு தர வேண்டியிருக்கும்.

”நல்ல ருசியா இருக்குடா, சுறா புட்டு மாறி… எங்கடா புட்சீங்க?”

”சத்யவேட்டுல…”

சீட்டா வெட்டுப்புலி ஊர்ப்பக்கமா போனீங்க?”

”ஆமா. அங்க நெசம்மாவே புலி இருந்திச்சா நைனா?”

”அதெல்லாங் காடுடா. நரி, பாம்பு, புலி எல்லாங் கெடக்கும். அப்டிதான் ஒரு பொதர்லேர்ந்து சீட்டாப்புலி வந்திச்சுதாங்காட்டியும் ஒரு ஆளு அதை வெட்டுனாரு… அதத்தான் தீப்பெட்டி படத்துல போட்டாங்க…”

முப்பதாண்டுக்கு முன்பு நைனா பேச்சுவாக்கில் சொன்ன தகவல். தமிழ்மகன்அந்தக் களத்துக்கே சென்று விசாரித்து உயிர்ப்போடு அதைப் படைத்துள்ளார்.

இன்றுள்ள அரசியல் போக்கில் திராவிட இயக்கங்கள் புரிந்துள்ள தாக்கம் மகத்தானது. தீண்டாமை நானறிந்தவரை நகருக்குள்ளும் நிலவியது. சோற்றுப்பஞ்ச காலத்தில் பெருகிய டீக்கடைகளில் கூட தாழ்ந்த சாதியினர் தனியே பித்தளை டீகுவளைகளைக் கொண்டுபோய் டீ வாங்கி அருந்துவார்கள். இந்த நிலையில் பொதுக்கூட்டம் என்றும், போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும் களைகட்டிய திராவிட இயக்க அரசியல் களம் தீண்டாமையை ஓரளவு விரட்டியது. இதில்வரும் இலட்சமணனின் குதிரையேற்றம்,, சக மனிதர்களாய் மற்றவரை பாவித்து, கூடமாட மண் சுமந்து ஒத்தாசை செய்வது, ஒடுக்கப்பட்ட குணவதிமீது அவன் கொண்ட காதல் ஊருக்குத் தெரிந்து, அந்த இனமே விரட்டியடிக்கப் படும்போது அவர்களைத் தானே தேடிப்போகும் இலட்சுமணன், பின்னர் வீடு திரும்புவது. வீட்டார் பேச்சை மதித்து, சொந்த இனத்தில் திருமணம் புரிவது, தானே சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்தபோது, நீதிக்கட்சி, பெரியார் மீதான மரியாதை என வளர்ந்து, தன் வாரிசுக்கு ஜாதிவிட்டு ஜாதியில் திருமணம் செய்ய முயற்சிப்பது… இலட்சுமணன் என்கிற தனி நபரின் உள்ளே ஏற்பட்ட முற்போக்கு ரசவாதத்தால், தான் மாறி, ஊரையும் மாற்றி உடன்பட வைக்கும் செயல்கள் அனைத்துமூ திராவிட இயக்கத்தின் தாக்கம் அன்றி வேறென்ன?

இன்றைக்கு ரெண்டு படத்தில் தலைகாட்டி விட்டால் தான் ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. என நினைக்கிறான் நடிகன். அவனுக்குள் இந்தத் துணிச்சல் உருவாக என்ன காரணம்? பெரியாரின் சுயமரியாதைக் கட்சியில் அவருக்குக் கீழ் இருந்தவர்கள் பதவியாசை இல்லாத நிலையில் நாட்டிற்கு தியாகம் புரிந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வந்தனர். பொது மக்களுக்கு பயந்தனர். சு.ம. கட்சியில் உழைப்புக்கு இலாபம் இல்லை என்பதால், முதன்முதலாக பதவியில் இருந்த நீதிக்கட்சியையும் உள்ளிழுத்தனர். பெரியார் அமைதி காத்தார். மெல்ல மெல்ல அவரையும் தேர்தலில் போடடியிடும் அமைப்பாக கட்சியையே மாற்றிவிடுவார்களோ என அச்சம் ஏற்பட்டபோது சிலர் விலகினர். தி.மு.க. பிறந்தது.

இன்றைய சமூகத்தில் நிலவும் சர்வரோகங்களுக்கும் காரணமானதாக விவரமறிந்தோர் சினிமாவைக் கூறுவார்கள். அது, இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை சென்றுவிட்டது.

பலநாட்கள் தயாரித்த, ஆய்வுசெய்த அறிக்கைகளை அன்று மக்கள் முன்பு கொள்கைவிளக்கமாகக் கூட்டங்களில் பேசுவார்கள். மக்களைக் கூட்டம்சேர்க்கும் கழைக்கூத்தாடி டமடமவென்று தொடக்க மேளச்சத்தம் எழுப்புவதுபோல, கலைநிகழ்ச்சி போர்வையில் அரிதாரம் பூசியவர்கள் பின்னர் அரங்கேறலாயினர். நாளடைவில் இவர்கள் இருந்தால்தான் கொள்கையே பேசமுடியும் என்கிற அளவுக்கு மேடைகள் தலைகீழாயின. ஏனென்றால் தேசத்தொண்டு, தியாகம் புரிந்திருந்தால் அதைமதித்து கூட்டம் சேரும். ஒன்றுமில்லாத நிலையில் கூட்டம் சேர்க்க கலையுலகம் கைகொடுத்தது. இதை ‘வெட்டுப்புலி’ அழகாய்ப் பதிவு செய்திருக்கிறது.

தியாகராயநகர் சிவா விஷ்ணு கோவில் பூக்காரி ”ஐய்யரே, சும்மா இருக்க மாட்டியா நீ? எவங் காதுலயாவது விழுந்தா ரெண்டாப் பொளந்துருவான். ராமன் ஆண்டா இன்னா? ராவணன் ஆண்டா இன்னா? யார் ஆண்டாலும் நீ நாலு தர்ப்பைக் கட்டைவித்துத்தான் பொழைக்கணும். நான் நாலுமுழம் பூ வித்துத்தான் பொழைக்கணும்” எனும்போது இன்றைய சமூகத்தின் நிலையைப் புரிந்துகொள்ள வெட்டுப்புலி உதவுகிறது.

பிராம்மணர்கள் மீதான தாக்குதல் அன்று எவ்வாறெல்லாம் நடந்தது, என்கிற பதிவு இதில் காணக் கிடைக்கிறது. கூடவே எண்பதுகளுக்குப் பின்னால் என்ற பகுதியில் கிருஷ்ணப்ரியாவும் நடராஜனும் ஊரே அல்லோலகல்லோலப் படும்போது கன்னிமரா நூலகப் படிக்கட்டில் உலக விஷயம் பேசியபடி இருந்த நிலையில் போலிசார் நெருங்கி வந்து ”லவ்வா?” என்று கேட்க, கிருஷ்ணப்ரியா ”அப்டில்லாம் இல்ல சார். இது எங்க மாமா பையன், ஒண்ணாத்தான் படிக்கிறோம்” எனும்போதும், ”இவர் என்கூடப் படிக்கிறவர். தொணைக்கு வந்திருக்கார்” என்று தந்தையிடம் அறிமுகம் செய்யும்போதும், இத்தனைகாலம் பிராம்மணன், அப்பிராம்மணன் என்ற பேதத்தின் மேல் எழுப்பப்பட்ட எல்லாம் சிதறுகிறது.

நவீன உலகம்தான் ஆனாலும் ஒவ்வொருவர் உள்ளத்துள்ளேயும் சாதியம், சங்கம் இருந்தாலும், அதையும் தாண்டி சமூகத்திற்காகவே சிந்தித்த பெரியாரை ”ஐ லைக் பெரியார் யூ. நோ, புரோக்ரசிவ் மேன், அவர் இறந்து இத்தனை வருஷமாகியும் அவரை நம்மால பீட் பண்ண முடியலியே. எங்களைத் திட்டறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு. இப்ப இருந்திருந்தாருன்னா எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு. உங்களைத்தான் திட்டியிருப்பாரு” எனும்போது இன்றைய தலைமுறை எந்தளவுக்கு ஒவ்வொன்றையும் உள்வாங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி பிரபாஷ் உலக மனிதனாக, பார்வயாளனாகப் பேசுவது அருமை. பிரபாஷ் என்ற பிராம்மணன் பெரியாரின் உழைப்பை, ஆழமான சமூக சிந்தனையை, ”சாமிய வெச்சிப் பிழைப்பு நடத்தறவன் வேணுன்னா பெரியாரைத் திட்டுவான். யோசிச்சிப் பார்த்தா வெரி பிரில்லியண்ட்” என்று பாராட்டுகிறான்.

வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்ப விவரிக்கப்படுகிறது என்பது உகண்மைதான். ஆனாலும் நாவல் என்ற கோட்பாட்டுக்குள் நிஜமாய் நடந்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு சொல்வது சிரமம். தமிழ்மகன் லாவகமாகச் செய்திருக்கிறார்.

கடந்தகால எச்சங்களில் நிலவிய மங்கலானவற்றை வரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கடமையைப் படைப்பாளியாக நிறைவேற்றியிருக்கிறார் தமிழ்மகன்.

சாதாரண சின்ன தீப்பெட்டியில் அச்சிடப்பட்ட படம், அதைச்சுற்றி நடந்த, நடந்துவரும் கால நிகழ்வுகள், அதை ஊடாடி எழும் பிரச்னைகள் என நாவல் தொட்டுச் செல்கிறது. இதை நாவல் என்பதைவிட பிரபலமான பத்திரிகையின் பைன்ட் செய்த ஒரு நூறாண்டிதழ்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.

சின்னா ரெட்டியின் கைக்கத்தி வெட்டுப்புலியின் தலையில் ஆழமாக இறங்கி, கத்தியோடு அது உருமிச் சென்றதாகப் பதிவு செய்துள்ளார்.

”பெரியாரின் பெரும் உழைப்பில் குத்தூசி குருசாமி அவர்களின் பங்களிப்பை, இன்றைய திராவிட இயக்கத்தவர்கள் ஏனோ அவ்வளவாகப் பதிவு செய்வதில்லை. தமிழ் எழுத்து சீர்திருத்தத்தில் அவர் பங்கு மகத்தானது. தமிழ்மகனின் இந்த நாவலிலும் அவரைப் பதிவு செய்யவில்லை.

இதழ்: 24 தேதி: 01/05/2010
சொல்வனம்

LinkWithin

Blog Widget by LinkWithin