சனி, ஆகஸ்ட் 27, 2011

திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு -வெங்கட் சுவாமிநாதன்



தமிழகத்தின் மிக முக்கியமான இலக்கிய விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன். வெட்டுப் புலி நாவல் குறித்த அவருடைய விமர்சனம் இது.
கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.


குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.


ஒன்று விலகி இருந்து சாட்சி பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு

கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.


ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.


தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.

வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.


இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப் படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.


எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்பு லிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.


வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டிதான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்வத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலெயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சிதான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.


பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.


ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .


ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும் நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது.


தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.


“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.


அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”


இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.

பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.


“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”


மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”


இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.


இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில்
“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா


“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”


அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி.


“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”


பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.


“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”


“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”


இது ஒரு காட்சி.


இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.


இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங் களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார் தமிழ்மகன்.


இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.


பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.


இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.


ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.


இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.

நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.

“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.


வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.

அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?


அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.

”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..


லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.


முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.


லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.


இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.


ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.

வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.


நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.


அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:


நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?


(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).


எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.


இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”


அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.


“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.


“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.


“அப்படியாடா? “ என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.


நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.


இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.


பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.


“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.


கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.


தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.


அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.


”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?”


எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.


இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.


“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?


இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”


“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?


பிரேமா இங்கே வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.


”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.


”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”


பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…


எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.


திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.


தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.


நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.


தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.


திராவிட இயக்கத்தைப் பர்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.


எல்லா புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.




வெட்டுப்புலி: தமிழ் மகன் (நாவல்) உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை- 600018 ப..374 விலை ரூ. 220

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

நல்லதோர் அடையாளம்


சாகித்திய அகாதமி உறுப்பினர் முனைவர் திரு. ராமகுருநாதன் வெட்டுப்புலி நாவல் குறித்து எழுதிய அனுப்பிய பாராட்டுரை.

நாவல்களைப் படிப்பது என்பது அருகிவரும் காலமாகிப் போகிவிட்டதோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்குமாறு இன்றைய கால கட்டம் இருக்கிறது. மிக அதிகமான பக்கங்களைக் கொண்ட படைப்புகளுக்குத் தொடக்க காலத்தில் இருந்த வரவேற்பினை இன்று காணுமாறு இல்லை. வரலாற்று நாவல்களைப் படித்து மனசைப் பரவசத்திற்கு உள்ளாக்கிய காலம் அன்று இருந்தது. இன்றும் ஒரளவே இருக்கிறது. அன்று பிரபலமான நாவலாசிரியர்கள் சிலரின் சில படைப்புகளைப் படித்து ரசிப்போர் இன்றும் இருக்கவே செய்கின்றனர்.
காட்சி ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு புனைகதையைப் படிப்பதற்கான சூழ்நிலை குறைந்து வருவதைக் கணக்கெடுக்கவேண்டும். இருப்பினும் இன்றைய நாவல் உலகில் தேர்ந்தெடுத்துப் படிக்கக்கூடிய அளவிற்கு வாசகர்கள் இருக்கின்றனர். அவர்களிடையே தீவிர வாசிப்புத் தன்மை கூடுதலாக இருப்பது வரவேற்புக்கும். நல்ல இலக்கியம் வளர்ந்துவருவதற்கும் உரிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்று தமிழ் மகனின் வெட்டுப்புலி என்னும் நாவலாகும்.
வெட்டுப்புலி என்ற தலைப்பே ஓர் குறியீட்டு உத்தியைக் கொண்டிருப்பதாகக் கருத இடமுள்ளது. அது நாவலாசிரியரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகலாம். அதற்குரிய போதிய தடயங்களைக் காணமுடிகிறது.
ஓரு நூற்றாண்டு கால வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெறும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல், கதைமாந்தரின் குணங்களில் கலந்தும் கரைந்தும் கதைப்பின்னலாக நகர்த்திச் சென்றிருப்பது ஆசிரியரின் திறத்தைக் காட்டுகிறது.
வரலாற்று நாவல்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவது தவறான பிரயோகம். தமிழில் வரலாற்று நாவல்கள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் வரலாற்றுப் புனைகதைகள் உண்டு. உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புனைவுடன் எழுதுவதையே வரலாற்று நாவல்கள் என்கின்றனர். இது தவறு. வரலாற்றுப் புனைகதை என்ற சொற்பிரயோகம்தான் சரியானது. பொன்னியின் செல்வன் தொடங்கி இதுகாறும் வெளிவந்துள்ளவற்றை அவ்வாறுதான் அழைக்கவேண்டும். அலையோசை போன்ற நாவல்கள் ஓரளவு கற்பனை கலந்த சமகால வரலாற்றுணர்வுடையது.
வெட்டுப்புலி முற்றிலுமாக வேறுபட்ட, மிகைப்படுத்தப்படாத சமகால வரலாற்றைக் கூறுகிறது. நாற்பதுகள் தொடங்கிப் புத்தாயிரம் வரையிலான நீண்டதொரு காலத்தில் நாவல் பயணிக்கிறது. ஆசிரியர் சொல்லியிருப்பது போல, இது நூறுவயது பயணம். கடந்த கால நிகழ்வுகளோடு மட்டுமன்றி, நிகழ்கால உண்மைகளையும் மூடிமறைக்காமல் எழுதப்பட்டதாக உள்ளது.
ஆசிரியரின் முன்னுரையாக, 'நாவலுக்குள்' என்ற பகுதியிலிருந்து சில உண்மைகளை அறிகிறோம்.
'இந்த நாவலைத் திராவிட இயக்க நாவலாக வடிக்கவேண்டியிருக்கிறது; திராவிட கண்ணாடி அணிந்துபடிப்பது அவசியமாக இருக்கிறது'
என மனந்திறந்து பேசுகிறார். திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மௌனசாட்சியாக இருப்பதை வெட்டுப்புலியைப் படமாகக் கொண்ட தீப்பெட்டி உணர்த்திவிடுகிறது. ஒரு தீப்பெட்டியில் அடங்கியுள்ள குச்சிகளைப் போலவே நாவலிலும் எண்ணிக்கை அதிகமான கதைமாந்தர்கள்!. அவர்களின் அகமன வெளிப்பாடுகள் ஒருபுறம்! தீக்குச்சியின் தலையில் இருக்கும் கந்தகக் கொண்டைகளாகக் கதைமாந்தர்களின் உணர்வுகளை-உறவுகளை - உரசல்களை - உரசிப் பார்க்கத் தீப்பெட்டியின் வெளிப்புறத்தில் இருக்கும் கந்தகப் பட்டை!
இப்படி அகமும் புறமுமாகக் கொழுந்து விட்டு எரியும் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ஆசிரியர். உரசிலில்தானே எதுவும் பற்றி எரியும். கதைமாந்தரின் குணாதிசயங்களும் அப்படிப்பட்டவையே.
கதைமாந்தர்கள் பட்டவர்த்தனமாகப் பேசும் உரையாடல்கள் நாவலுக்கு வலுசேர்த்திருக்கிறது. இந்த நாவலில் யாரும் நிழல் மனிதர்களாக இல்லாமல், நிசமனிதர்களாக்கி இருப்பதும் நாவலுக்கு வலிமை சேர்த்துள்ளது.
நாற்பதுகளின் மையப்பகுதியில், சிறுத்தையைக் கொன்ற கொள்ளுத்தாத்தாவின் படம் வெட்டுப்புலித் தீப்பெட்டியில் காட்சி அளிக்கவும், தாத்தா பற்றிய வரலாற்றுண்மையை அறிந்துகொள்வதற்காக நண்பர்களோடு ( பிரபாஷ், பெர்ணான்டஸ்) கிராமப்புறம் நோக்கிப் பயணிப்பதாகக் கதைக்களத்தினெ தொடக்கம் அமைந்திருப்பது தமிழுக்குப் புதியது.
ஆசிரியர் சார்ந்துள்ளள ஜெகநாதபுரத்தையும், ரங்காவரத்தையும் குளோசப் ஷாட், மிட்டில் ஷாட் என்ற வகைகளில் காட்டியிருப்பது கதைக்கு ஒரு நம்பகத்தன்மை அளிப்பதோடு, ஆசிரியரின் சுயவரலாற்றையும் உணர்த்திவிட்டுள்ளது. நாவலுக்கு ஒரு 'நேட்டிவிட்டி'யைத் தந்துவிடுகிறது.
நாவலில் கதாநாயகனோ, வில்லனோ புகுந்துவிடாது, யாவருக்கும் சம்பங்கு அளித்திருப்பது உண்மையின் உலகம் என்பதனை உறுதி செய்கிறது. நாவலில் பேராசிரியர்கள் சிலரும், கவிஞர்கள் சிலரும், மாவீரன் பிரபாகரனும் இடம் பெற்றிருப்பது ஒரு வகையில் நாவலாசிரியரைப் பாதித்த பெயர்களாக- அவர்கள் 'மின்னல்' வருகையாக வந்துபோவது இயல்பாக உள்ளது. லட்சுமணன் தொடக்க முதல் இறுதி வரை நாவலில் உலாவந்தாலும் அவனை ஆசிரியர் கதாநாயகனாக ஆக்கிவிடவில்லை.
வெள்ளையர் குதிரையில் சவாரி செய்துபார்த்துவிடுவது என்ற லட்சுமணின் எண்ணம் கதையைத் தொடங்குவதற்கும், தொடர்வதற்குமுரிய எதிர்பார்ப்பைத் தருகிறது. வெள்ளைக் காரனின் குதிரையைச் சவாலாக ஏற்றுக்கொண்டு சவாரி செய்வது கூட நம்மை அடக்கி ஆண்ட வெள்ளையரை நாம் அடக்கிவிடவேண்டும் என்ற ஆதங்கத்தை அவன்பால் காணலாம்.
நாற்பதுகளில் தசரத ரெட்டியின் சகலை சிறுத்தையை வெட்டியது இயல்பான வருணனையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. முப்பதுகளில் சின்னா ரெட்டி சொக்கலிங்க ரெட்டியின் உடலில் ஏற்பட்ட கட்டிக்கு வைத்தியம் பார்த்ததும் அவ்வாறே இயல்பான நிகழ்ச்சியாக வந்துபோகிறது. தசரத ரெட்டி முத்தம்மா மீது கொண்டிருந்த சபல எண்ணம் பிராய்டின் உளவியல்படி அழுத்தமானதோர் அகமனப்பதிவு. நாற்பதுகளில் லட்சுமணன் குணவதி மீதுள்ள விருப்பமும் அப்படிப்பட்டதே. முத்தம்மாள் கணவன் ருத்ரா ரெட்டி ஒரு வித்தியாசமான படைப்பு. இன்றும் கூடக் கிராமப் புறங்களில் அவனைப் போலவே சிலர் இருப்பது நிசம். ஆறுமுக முதலியார்- சுந்தராம்பாள் குடும்ப உணர்வு யதார்த்தம். அவர்கள் உரையாடலும் இயல்பான வெளிப்பாடு. கணேசன் பெரியார் மீது கொண்டுள்ள தீவிரப் பற்றும், பிராமணர்கள் மீது கொண்டிருந்த தீவிர வெறுப்பும் நாவலுக்கு இன்னொரு பரிமாணம் தருகிறது. இந்த அளவிற்குத் தமிழ் நாவல்களில் துணிச்சலாக இவ்விரண்டையும் அலசியவர்கள் யாருமில்லை. தியாகராசன்-ஹேமலதா வாழ்க்கை முரண்கள் சற்றே வித்தியாசமானவை. தியாகராசனிடம் நிலவி வந்த பிராமண வெறுப்பு ஒரு சிறு நிகழ்ச்சியால், மாறிவிடுகிறது. அவன் தன் போக்கையும் எண்ணத்தையும் மாற்றிக் கொண்ட பின், அவனது பண்பு சற்று மாற்றுக் குறைவாகவே உள்ளது. சினிமா எடுக்க முயன்று சீரழிவைத் தேடிக் கொண்ட சிவகுரு வாழ்வு ஒரு நல்ல படப்பிடிப்பு.
திராவிட இயக்கம் பெரியாரால் சாதித்தது பற்றிய கண்ணோட்டம்- அவர் வாழ்வின் இறுதிப் பயணத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது, சௌந்திரபாண்டிய நாடார் லட்சுமண ரெட்டிக்கு, பெரியார் காங்கிரஸில் இருந்த கால கட்டத்தில் அதாவது, ஆயிரத்து இருபத்தி நான்கில், நாடார் குல மித்திரனில் வெளிவந்த பெரியார் பேச்சை வெளியிட்டிருப்பதைப் படித்துக் காட்டுவதும். அதனை லட்சுமண ரெட்டி நம்ப மறுப்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
கன்னிமரா நூலகத்தில் நடராசன், பிராமணப் பெண்ணான கிருஷ்ணப்பிரியாவைச் சந்தித்துப் பேசுவது நாவலின் முக்கிய கட்டம். அவள் பேச்சு நாவலுக்கு ஓர் இறுதித் தீர்ப்பை வழங்குவது போல உள்ளது. அவள் வினாத் தொடுப்பது தமிழன் என்பவனுக்கு ஒரு சாட்டை அடியாகத்தான் இருக்கும். அவள் கேட்கிறாள் :
''அவன் கிட்ட( செத்த மாட்டைச் சாப்பிட்டு வாழறவன்) மொதல்ல விரோதம் பாராட்னது யாரு? அவனை மாடு தண்ணி குடிக்கிற குளத்திலே தண்ணி குடிக்கக்கூட அனுமதிக்காம ஒதுக்கிவெச்சது யாரு.....உங்க ஊர்ல இருக்க கோயில் குருக்கள்தான் அப்படி ஒதுக்கி வெச்சாரா? எல்லா ஊர்லயும் குருக்கள் ஆட்சிதான் நடக்குதா? மனசாட்சி தொட்டு சொல்லுங்க?
கிருஷ்ணப்பிரியாவின் இந்தக் கேள்வி விஷமத்தனமானதில்லை. விஷயத்தனமாகத் தெறிக்கிறது. நாவலை முடிப்பதற்கு உரிய சூழல், அவள் வழியாகவே - ஒரு சமரசத் தீர்வுக்கு உள்ளாகுவதாகவே தோன்றுகிறது. அவளது பேச்சு இன்றைய சமுதாயத்திற்கு ஓர் அறைகூவலாகவே தெரிகிறது.
நாவலாசிரியர் யாரும் சொல்லத்துணியாத அரசியல் தலைவர்களைப் பற்றித் துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார். அதனை நாவலில் எடுத்தாள்வதே பெரிய விஷயம். அதனைக் கச்சிதமாக இடம் நோக்கிச் செருகியுள்ளார்.
ஒரு நாவலைப் படிக்கிறோம் என்ற உணர்வில்லாமல். ஓர் உண்மை உலகை- ஒரு நடப்பியல் உலகை நம்முன் காண்கிறோம் என்ற மனநிலையைத் தோற்றுவிக்குமாறு நாவல் அமைந்துள்ளது. அன்று கிராமங்களில் இருந்த மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் நடை உடை பாவனை, வட்டார மொழி வழக்கு, சாதிய ஆதிக்கம் முதலானவை ஒரு நடப்பியல் உலகை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.
சென்னையில் அன்றிருந்த சினிமா தியேட்டர்கள், அந்தக்காலத்தில் கோலோச்சியிருந்த நடிகர்கள், வெலிங்டன் தியேட்டரில் அந்தக் காலத்திய திரைப்படங்கள் வெளியிட்டப்பட்டமை. ஒற்றைவாடை தியேட்டர், கொப்பூருக்கு இராமனுசர் வருகை தந்தது, பாய்ஸ் கம்பெனி, தினத்தந்திக்காக ஆதித்தனார் சென்னையில் இடம் தேடியது, சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்யம் நாடகம் பற்றிய கருத்து, ஸ்ட்ராபோர்ஃடு கிரிப்பன் மிஷன் பற்றிய தகவல், பெரியார். அண்ணா, சஞ்சய்காந்தி. இராஜீவ் பெரியார். எம்.ஜி. ஆர் மரணம் முதலானவற்றை ஆங்காங்கே இடம்நோக்கிப் பதிவு செய்திருப்பது நாவலை ஓர் உண்மைகளின் உலகமாக்கியிருக்கிறது.
ஒரு நல்ல நாவலுக்குரிய அனைத்து அடையாளங்களும் இதில் தென்படுவதனை மறுக்கமுடியாது. இந்த நூலைப் படைத்தளித்தமைக்குப் பாராட்டுகள்.




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

கலந்துரையாடல்

வெட்டுப்புலி கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. நாவலின் நுட்பம் குறித்து பேராசிரியர் ராமகுருநாதன், கவிஞர் மனுஶ்யபுத்திரன், கேபிள் சங்கர், நடிகர் எழுத்தாளர் பாரதிமணி, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் மிகச் சிறப்பாக பேசினர். அனைவருக்கும் என் நன்றி.
அலுவலக வேலை காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
படங்கள் பார்வைக்கு...





வியாழன், ஆகஸ்ட் 11, 2011

அழைப்பிதழ்

டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன் வெட்டுப்புலி நாவல் குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான அழைப்பிதழ் இது.


ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல்
“வெட்டுப்புலி”
குறித்த கலந்துரையாடல்.
__________________________​_______________

... நாள் : 13/08/2011 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்
6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78
( பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
_________________
தலைமை
பேராசிரியர்.இராமகுருநாதன்

பங்குபெறுவோர்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்
எழுத்தாளர் நடிகர் பாரதிமணி
பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ)
கேபிள் சங்கர்

ஏற்புரை
எழுத்தாளர் தமிழ்மகன்

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

களப்பிரர்கள் செய்த தவறு

களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன.
களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏறத்தாழ ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ஆண்டுக்கு மேலான தொன்மையுடையது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக கண்டங்கள் யாவும் ஆரம்பத்தில் கோக்வாண்டா கண்டமாக இணைந்திருந்து, பல லட்சம் ஆண்டுகளாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியிருப்பினும் ஆஸ்திரேலியா பிரிந்து சென்றது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. காரணம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினர். அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதற்கு அவர்களிடம் மிச்சமிருக்கும் சில ஒலிக்குறிப்புகளும் சில ஆதி நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக அவர்கள் நாக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் எருது இலச்சினைகளையும் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். இன்னமும் அவர்கள் பயன்படுத்தும் ஓரசை, ஈரசைச் சொற்கள் தமிழ் மொழியை ஒத்திருக்கின்றன. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதைத் தெளிவுபடுத்த இந்த சிறிய உதாரணத்தை முன் வைக்கிறேன்.
இந்தியாவில் பரவலாக வசித்து வந்த இந்த இனம் சிந்து சமவெளியிலும் தென்னிந்தியாவிலும் வசித்து வந்த தடயங்கள் கிடைத்துள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த இனக்குழு ஈரான், ஆப்கானிஸ்தான், மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம். தெற்கே கடல் கொண்டுவிட்ட குமரியில் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி உருகல் காலத்தில் சுமார் 300 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தபோது இலங்கை பரப்பு தனித்துப் போனதோடு, குமரி கண்டத்தின் கடைசி நிலப்பரப்பும் மூழ்கிப் போனது தெரிகிறது.
அதற்கு முன்பு உலக கடல் மட்டத்தில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது. பனி உருகல் காரணமாக ஏற்பட்ட அந்த இரண்டு கடல் ஊழியில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த குமரிப்பரப்பு சுத்தமாகவே அழிந்து போனது. கடல் கொண்டுவிட்ட அந்த நிலப்பகுதியில்தான் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டதாக அதன் பின்னர் வந்த புலவர்களின் பாக்களில் இருந்து அறிய முடிகிறது.
இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடுகள் கடலில் மூழ்கியிருப்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கடற்கோள், பனி ஊழி, அயலவர் படையெடுப்பு என தமிழினம் ஏராளமான நசிவுகளை காலம்தோறும் சந்தித்தாலும் அது ஸ்பினிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுவதுபோல மீண்டும் மீண்டும் எழுந்துவந்திருப்பதைப் பார்க்கிறோம். ஐரோப்பிய மொழிகளோ, கிரேக்க, எகிப்து மொழிகளோ இத்தனைச் சிரமங்களை எதிர் கொள்ளாமலேயே மறைந்து போயிருப்பதைப் பார்க்கும்போது தமிழுக்கு இருக்கும் தொன்மையும் பலமும் விளங்கும்.
இவ்வளவு தொன்மையான மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பலமாகவும் அமைந்திருக்கிறது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பதாகவே சொல்லலாம்.
தமிழ்மொழி சுமார் பத்தாயிரம் ஆண்டுகளில் செழுமையடைந்து, தழைத்து தென்னிந்திய லப்பரப்பில் பிரதான தொடர்பு மொழியாகவும் இலக்கியத்தில் மிக உயர்ந்த லையிலும் செயல்படத் தொடங்கியது. மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்-டதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. உலகில் வேறெந்த மொழியிலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இங்கு தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை இயம்பப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு தமிழகத்தில் நிலைபெற்றிருந்த ஆட்சியே களப்பிரர் காலம்.
கி.பி. 250க்குப் பிறகும் கி.பி. 550க்கு முன்புமான இக்காலகட்டத்தில் தமிழில் இலக்கியச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் பிராகிருதம், பாலி மொழிகளே நிலைநாட்டப்பட்டன. அதே சமயம் அவர்கள் தமிழை வளர்த்தார்கள் என்று விவாதிப்போரும் உண்டு. நாலடியார், சீவகசிந்தாமணி, காரைக்காலம்மையார் நூல்கள், இறையனார் களவியல் ஆகிய நூல்கள் இக்காலத்தைச் சேர்ந்தவைதான் என்பது ம.சீ.வேங்கடாமி நாட்டாரின் கருத்து. முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இக்காலத்தைச் சேர்ந்தவை என்கிறார் பண்டாரத்தார். ஆனால் இந்த நூல்கள் பலவும் அறத்தை முன்னிறுத்திப் பாடியதாகவே இருந்தன. மு.ரா.நல்லபெருமாள் முதலியார் சொல்வது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து பார்க்க வைக்கிறது. "களப்பிரர்கள் என்பரோர் தமிழரே. அவர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் தம் ஆதிக்கத்தை இழந்திருந்தனர். அதனால்தான் அந்தக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்.' என்கிறார். நாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஆதிசங்கரரும் ராமானுஜரும் தோன்றி சமணத்துக்கு எதிராக சைவத்தையும் வைணவத்தையும் முன்னெடுத்துச் சென்றனர். பதினாயிரம் சமணர்களை கூன்பாண்டியன் கழுவேற்றினான் என்ற குறிப்பின் மூலம் சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதோடு அவர்களின் சமய நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன என யூகிக்க முடிகிறது.
பார்ப்பனர்கள் ஆதிக்கம் மீண்டும் உருவானதால் அந்தத் தமிழர் ஆட்சிக்காலம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருண்டகாலம் என்று ஆகிப்போனது என்பாரும் உண்டு. மயிலை சீனி. வேங்கடசாமி, தேவநேயப் பாவாணர் போன்ற பலர் இந்தக் கருத்துக்கு உடன்பட்டவரே. களப்பிரர் காலத்துக்குப் பிறகு சைவமும் வைணவமும் தழைத்தது என்பது உண்மை. கி.பி. 600க்குப் பிறகு தமிழில் சைவமும், வைணவமும் பக்தி இலக்கியத்தை ஆவேசத்தோடு வளர்த்திருப்பதைப் பார்க்கலாம். வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை களப்பிரர்கள் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலேயே இங்கு நூல்கள் இயற்ற முயன்றதையும் சமண மதத்தை வளர்க்க முற்பட்டதையும் ஆராய்கிறார்.
பாண்டி நாட்டில் சமண கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்ததாக சீன பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 600 நூற்றாண்டு வாக்கில் அவர் தமிழகம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. களப்பிரர்கள் காலத்துக்கு பின்னர் தோன்றிய திருநாவுக்கரசர் சமணர்களோடு வாதாடியதையும் அவரைச் சுண்ணாம்புக் காலவாயில் போட்டு சித்தரவதை செய்ததையும் தமிழிலக்கியங்கள் விவரிக்கின்றன. ஆக, களப்பிரர்கள் காலம் என்பது சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் என்பதில் ஐயம் யாருக்கும் இல்லை. அவர்கள் தங்களின் சமய நூல்களையும் தங்களின் மொழியையும் இங்கே பரப்புவதில் பெரும் வேகம் காட்டினர். தமிழகத்தில் சித்தன்ன வாசல் குடைவரைக் கோவில்களும் சிலப்பதிகாரத்தைப் போலவே, சமண, பௌத்த சமயத்தை போதிக்கும் சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய நூல்களில் அச் சமயத்தினர் இங்கே செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.மொழி ஆராய்ச்சியாளர் ப. சிவனடி இக் கருத்தை வலியுறுத்துகிறார். தமிழ் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டிலேயே செழிக்கத் தொடங்கிய சமணமும் பெüத்தமும் பிறகு ஏன் தமிழர்களுக்கு எதிராக மாறியது என்பது யூகிக்க உகந்தது. அவர்கள் சமண சமயத்தைப் புகுத்தினர் என்பது காரணமாகத் தெரியவில்லை. சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமண சமயத்தைத் தழுவுகிறார். கவுந்தி அடிகள், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்கள் சமண சமயத்தைத் தழுவியதாக படிக்கிற நாம் எப்போது அதன் எதிரியாக மாறினோம் என்பது யோசித்தல் முக்கியம்.
அவர்கள் நம் மொழியின் மீது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியதில் இருந்துதான் களப்பிரர்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடுகள் பெருகத் தொடங்கியிருக்க வேண்டும்.இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது அன்று துவங்கப்பட்ட திராவிட சங்கம். பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி. 470). அவருடைய நோக்கமே சமண சமய நூல்களை தமிழில் இயற்ற வேண்டும் என்பதே. பதினென் கீழ் கணக்கு நூல்கள் பலவும் இச் சங்கத்தின் முயற்சியினால் தோன்றியிருக்கலாம் என்பது கே.கே. பிள்ளையவர்களின் வாதம். பாலி பிராகிருத மொழியில் நூல்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்று தமிழகத்துக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டதே தமிழுக்கு நேர்ந்த சோதனைக் காலத்தைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி தமிழர்களை ஒருங்கிணைக்க முயன்றது. இதனால் தமிழர்கள் தமிழில் தமிழுக்கு நெருக்கமான இறைநூல்களைப் பாடுவதில் இயல்பாகவே ஈடுபட்டிருக்கலாம்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக சொல்வது உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. அதே போல பக்தி இலக்கியத்தின் காலத்தையும் தமிழ் வளர்ச்சியின் பங்களிப்பாகக் கொள்ள முடியும். சமணத்துக்கு மாற்றாக மட்டுமின்றி பாலி மொழிக்கு மாற்றாகவும் தமிழ் செயல்பட்டது. தமிழர்களுக்கு மொழி மிகவும் முக்கியமானதாக இருந்ததை பல்வேறு கால கட்ட நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. மொழிக்காக உயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக அவர்கள் இருந்தனர். சைவம், வைணவ பாடல்களில் தமிழைச் சிறப்பித்துப் பாடுவதை நாம் பார்க்கிறோம். "மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர்'-என தேவாரத்தில் சமணரைப் பழிக்கிறார் ஞான சம்பந்தர்.
- இத் தகவல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தமிழர் வரலாறு நூலில் பி. இராமநாதன் தெரிவிக்கிறார்.1938 இந்தித் திணிப்பின் போது தாளமுத்து, நடராசன் உயிர்த் தியாகமும், 1965 ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமும் உயிரிழப்புகளும் தமிழீழத்துக்காக உயிர் நீத்தவர்களும் தமிழர்கள் மொழிமீது அதீத பாசம் கொண்டிருந்ததற்கு சமீபத்திய உதாரணங்கள். இதற்கு முன்னர் சைவர்களும் வைணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு சமயத்தை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்ததை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். சுண்ணணாம்புக் காலவாயில் சுட்டெரித்தபோதும் சைவத்தை மட்டுமின்றி அவர்கள் தமிழையும் நேசித்ததை அறிய முடிகிறது. அதற்கும் முந்தைய காலங்களில் அவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் இறைவனையே அதற்கு தலைவனாக்கியதும் இலக்கியம் தரும் தகவல்கள்.
புதிதாக வேறு ஒரு சமயத்தைப் புகுத்தியதோடு மட்டுமின்றி வேறொரு மொழியையும் புகுத்தியதே தமிழர்கள் முற்றாக அவர்களை அழிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.களப்பிரர்கள் ஏந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. களப்பிரர்கள் என்பார் கர்நாடகத்திலிருந்து தமிழர் மீது ஆக்ரமிப்பு செய்தவர்கள் என்று பரவலாக அறியப்படுகிறது.
இக்கருத்தில் ஆய்வாளர்கள் பலருக்கும் ஒத்த கருத்து உண்டு. மைசூர் ராச்சியத்தின் பேலூர் கல்வெட்டு ஒன்று அங்கு களப்போரா எனும் பெயரில் ஒரு வம்சத்தினர் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறது. (கே.கே. பிள்ளையின் தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் ( பக்.185) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.) களப்பிரர்கள் தெற்கு ஆந்திரப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பார் சிலர். வேங்கடத்தை ஆண்டுவந்த களவர் என்னும் இனத்தவரே பல்லவரின் கை ஓங்கியதாலும் சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் தென் தமிழகத்துக்கு பெயர்ந்து தமிழகத்தை ஆக்ரமித்ததாக அதே நூல் தகவல் தருகிறது. இது தவிர களப்பிரர் தமிழரே என்ற கருத்து ஒன்று உண்டு. பாவாணர், க.ப. அறவாணன் போன்றோர் இக் கருத்து உடையவர்கள். களப்பிரர் என்ற தமிழர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு இழந்து இருந்ததால் அக் காலகட்டத்தை இருண்ட காலமாக வர்ணிக்கின்றனர் என்கின்றனர்.
வரலாற்றை யூகிப்பது ஒரு சுவையான அம்சம். எது உண்மையாக இருக்கும் என்று அலசுவதும் தேவை.

LinkWithin

Blog Widget by LinkWithin