திங்கள், டிசம்பர் 05, 2011

ஆறு கோணங்களில் ஆண்பால் பெண்பால்


ஆண்பால் பெண்பால் நாவல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டு விழாவின் போதே அறுபத்தைந்து எழுபது பிரதிகள் வரை விற்றுவிட்டதாக மனுஷ்யபுத்திரன் மறுநாள் காலை சொன்னதில் இருந்து விழாவின் வெற்றியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டில் மைக் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது என்ற விதத்தில் இந்த விழா மறக்க முடியாத விழாவாக மாறிவிட்டது.
புக் பாயிண்ட் அரங்கத்துக்கான மைக் வைத்திருக்கும் அந்த மர்ம நபர் கூட்டம் ஆரம்பிக்கும்போது தலைமறைவாகிவிட, செல்போன், ஈ மெயில் போன்ற எந்த தொழில்நுட்பத்துக்கும் அகப்படாமல் போகவே, உரத்தகுரலில் பேசி எல்லோரும் அரங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
வரவேற்புரை நிகழ்த்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகம் தெரியாத அந்த மைக் ஆசாமி மீதும் புக் பாயிண்ட் நிர்வாகத்தின் மீதும் மிகுந்த கோபமடைந்தார்.
வெட்டுப்புலி நாவல் வெளியான ஆண்டிலேயே மறுபதிப்புக்கு போனது வலைப்பூக்களினால்தான் என்று பாராட்டினார்.
தலைமைதாங்கி நடத்திய எழுத்தாளர் சா.கந்தசாமி, நாம் மைக் பற்றி பேசுவதற்கா வந்தோம், நாவல் பற்றி பேசுவோம் என்று ஆரம்பித்து விழாவின் இறுக்கத்தைத் தளர்த்தினார். பத்திரிகையாளர்கள் கதைகளின் அருமைபற்றித் தெரியாதவர்களாக இருப்பதில் ஆரம்பித்து பத்திரிகையில் இருப்பவர்களின் எழுத்தில் தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததை தமிழ்மகன் தகர்த்திருக்கிறார் என்றார்.
பாரதி, புதுமைப்பித்தன், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.சு செல்லப்பா, கு. அழகிரிசாமி, கல்கி, பிரபஞ்சன், வண்ணநிலவன், விந்தன், ஜி.முருகன் போன்ற பலரும் பத்திரிகையாளர்கள்தான். கடந்த நூறாண்டு பத்திரிகை வரலாற்றில் இரண்டு டஜன் பேர்கூட தேறவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கலாம்.
நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் நாவலின் எளிமை, உத்தி என அவர் அரை மணிநேரம் வரை பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
வெறும் 500 சொற்களை வைத்தே இத்தனை அழுத்தமான அடர்த்தியான நாவலை படைத்திருப்பதற்காகப் பாராட்டினார்.
ஞாநி முன்னுரையை மட்டுமே படித்ததாகச் சொன்னார். இந்த நாவலை நான் எழுதவில்லை என்று அழுத்தம் திருத்தமாக ஆதாரபூர்வமாக நான் விவாதித்திருப்பதை ஞாநி சிலாகித்தார். அந்த முன்னுரையும் சேர்த்து நாவலின் ஒரு பகுதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
நூலை வெளியிட்ட திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர்கு.கருணாநிதியின் பேச்சு மிகமிக எதார்த்தமாக இருந்தது. சிறுவயதில் எம்.ஜி.ஆருக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த நேரம். பெரிய கூட்டம் அவருக்கு மாலை போட காத்திருக்கிறது. அவருக்கு மாலை போடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். இவரை எடுத்துக் கொஞ்சியபடி, உன் பெயர் என்ன என்று கேட்கிறார். இவர் கருணாநிதி என்கிறார். எம்.ஜி.ஆர் முகத்தில் சிறிய அதிர்ச்சி... அல்லது வியப்பு.ஒரு முத்தம் தந்து கீழே இறக்கிவிடுகிறார். எம்.ஜி.ஆரின் கரங்கள் என் மீது பட்ட காரணத்தினாலேயே மக்கள் அவரை எப்படிக் கொண்டாடினார்கள் என்று சொன்னார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவர் வாயில் சர்க்கரை போட்ட பாட்டியை நினைவுகூர்ந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்னரே தெரிந்திருந்தால் இதை நாவலில் சேர்த்திருப்பேன். நாவலுக்கு இந்த மாதிரி விஷயங்கள்தான் எனக்குத் தேவையாக இருந்தது. நாவலில் நான் எந்த மாதிரி விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து அவர் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.
நூலை பெற்றுக் கொண்ட இயக்குநர் ஜனநாதன், விழாவுக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அன்று காலையில்தான் அவருடைய பால்ய சினேகிதர் இறந்து போய்விட்டதாகவும் நெடுநாளாக அவனைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். பலமுறை அவன் போன் செய்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மத்தியானம் என்னிடம் தெரிவித்தார். அவரை வற்புறுத்தி அழைப்பதற்கு சங்கடமாக இருந்தது. அந்த மனநிலையிலும் அவர் வந்திருந்தது என்னை நிலைகுலைய வைத்தது.
எந்த விஷயமும் மைக் மூலமாக வெளி உலகுக்குச் சென்றடைவதில்லை. இங்கு இந்தக் கூட்டத்தைக் கேட்டவர்கள் அடுத்து இருப்பவர்களுக்குச் சொல்வதன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த நல்ல நாவல் அப்படித்தான் வெளியே பிரபலமாகும் என்றார்.



கரு.பழனியப்பன் பேச்சு அரங்கத்தைக் கட்டிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர்தான் எம்.ஜி.ஆரைப் பற்றி இந்த நாவலில் இடம் பெற்ற அத்தனை விவகாரத்தையும் தீவிரமாக எடுத்து வைத்தவர். அவர் சொன்ன டிராகுலா உதாரணம் ரசிக்கும்படி இருந்தது.
நாவலில் மொத்தம் ஐந்தே காட்சிகள்தான் என்று அவர் சினிமா போல விவரித்தார். அதையே ஆண் ஒரு முறை சொல்லி முடிக்கிறான். பிறகு பெண் ஒரு முறை சொல்லி முடிக்கிறாள்... ஆனால் எப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடிந்தது இவரால்? எனக் கேட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது என்பதை என் நாவல் மூலமாகவே நிரூபிக்க நினைத்தார். அதற்காகத்தான் இந்த நாவலுக்கு அப்படியொரு முன்னுரையையே நான் எழுத வேண்டியதாக இருந்தது. எம்.ஜி.ஆரை நாவலின் ஒரு பாத்திரமாக அமைத்திருப்பதின் வெற்றியை அவர் பெரிதும் பாராட்டினார். நிறைய தெரிந்தவர்களாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்களா என்பதை நாவலில் வரும் ரகு கதாபாத்திரத்தோடும் எழுத்தாளர் சுஜாதாவோடும் ஒப்பிட்டது அவருடைய நுண்ணிய வாசிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல்ரீதியான சிக்கலைப் பற்றி பேச ஆரம்பித்தார் கவிதா முரளிதரன். கோர்வையாக அவருடைய கருத்துகளை எழுதியே எடுத்துவந்திருந்தார். கதையின் க்ளைமாக்ஸில் இருந்து நாவலை அவர் விமர்சிக்க ஆரம்பித்தார். நாவலின் க்ளைமாக்ûஸ சொல்லிவிடுவதால் இந்த நாவலின் சுவாரஸ்யம் குறைந்துவிடாது என்று அவர் நம்பிக்கையாக கூறியது எனக்குப் பிடித்திருந்தார். கணவன் அருண், மனைவி பிரியா இருவருக்குமான பிரச்சினை என்பது நாவலின் கடைசி அத்தியாயத்தில் அடியோடு மாறிப்போய்விடுவதாக அவர் சொன்னது அவருடைய கவனமான வாசிப்பைக் காட்டியது.
நாவலில் சொல்லப்பட்ட உளவியல் சிக்கல்களை அவற்றின் பெயர்களோடு சொன்னார் பெரியார்தாசன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இருக்கும் உளவியல் நோய்க்கூறு எத்தகையது என்று அவர் விவரித்தார். மிக நீண்ட உரை. அழமானது. நாவலில் நான் ஒரு பத்தியில் மிகக் கடுமையான வாக்கிய அமைப்பை எழுதியிருந்தேன். அதைக் குறிப்பு எதுவும் இல்லாமல் அப்படியே சொன்னார். இத்தனைக்கும் நாவலை அவருக்கு விழா நாளுக்கு முதல்நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டுபோய் சேர்த்தேன். இரவே நாவலை படித்து முடித்துவிட்டு கதாபாத்திரங்களை அக்குவேறு ஆணிவேராக ஆய்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
ஏறத்தாழ எல்லாருமே வெட்டுப் புலி நாவல் பற்றி ஒருவரியாவது பேசினார்கள். எல்லா புகழும் மனுஷ்யபுத்திரனுக்கே.
அந்த நாவலின் கரு என்ன என்பதை நான்கு வரியில் சொன்னேன். உடனே எழுதித்தாருங்கள் என்று அவர் என்னை ஊக்குவித்தார். வெட்டுப்புலியை எழுதியது அப்படித்தான். ஆண்பால் பெண்பால் பற்றி இரண்டுவரிதான் சொன்னேன். இதோ இப்படியொரு விழா நடத்தி பெருமைபடுத்திவிட்டார்.
என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்.
விழாவில் பேசிய எல்லோரும் ஒருவர் சொன்னது போல இன்றி இன்னொருவிதமான கோணத்தில் அலசியிருந்தனர். அரசியல்ரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக, பெண்ணிய நோக்கில், இலக்கிய நோக்கில், சினிமா பார்வையில் என விதவிதமாக இருந்தது.
ஆண்பால் பெண்பால் பற்றிய என்னுடைய கோணம் என்னுடைய நாவலாக வந்திருக்கிறது என்று என் ஏற்புரையில் சொன்னேன்.

5 கருத்துகள்:

Romeoboy சொன்னது…

ஒரு வாரமாக ஊரில் இல்லாததால் விழாவுக்கு வர முடியாமல் போய்விட்டது, மன்னிக்கவும். புத்தகம் படிக்க வெகு ஆவலாக உள்ளேன் - ரோமீயோ

RAGUNATHAN சொன்னது…

இந்நாவலும் இன்னொரு வெட்டு புலியாக வெற்றிப் புலியாக வாழ்த்துகள் சார் -:)

skpkaruna சொன்னது…

Thank you for inviting me and glad that you liked my speech too.
skpkaruna.

skpkaruna சொன்னது…

Thank you for inviting me and I am glad that you liked my speech too.
skpkaruna.

Vediyappan M சொன்னது…

நிகழ்வுக்கு கொஞ்சம் தமதமாக வந்தேன். இப்போது உங்கள் பதிவு அந்த குறையை போக்கிவிட்டது. புத்தகத்தைப் பற்றி நல்லதகவல்கள் வந்துகொண்டிருக்கிறன. விற்பனையும் நன்றாகவே துவங்கி இருக்கின்றன. விரைவில் நானும் படித்துவிட்டு ஒரு விமர்சனம் எழுதுவேன் என்று எதிர்பார்க்கலாம். வாழ்த்துக்கள்!

LinkWithin

Blog Widget by LinkWithin