வியாழன், ஜனவரி 26, 2012

இலங்கையில் மாற்றம் புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!




ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசம் இருப்பதும். தொடர்ச்சியான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகுதூரம் விலகி வசித்துவரும் விருட்சங்களாகிப் போன அவர்களில் ஒருவர் கவிஞர் சேரன். அவர் தன் ‘காடாற்று’, மற்றும் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பலகலைக் கழகத்தில் சமூகவியல்& மானிடவியல் துறை பேராசிரியராக இருக்கும் அவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினோம்.


உங்களின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘காடற்று’ எத்தகைய பிரச்னைகளை முன் வைத்து எழுதப்பட்டவை?

இந்தத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் இலங்கையில் நடந்த 2009 மே 16 போர் ஏற்படுத்திய இனப்படுகொலையின் தாக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை. அதனால்தான் ‘காடாற்று‘ என்று பெயரிட்டேன். காடாற்று என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இறந்து போனவர்களுக்குச் செய்யும் சடங்கு. இறந்துபோனவர்கள் பற்றிய சோகத்துக்கும் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆக வேண்டிய வேண்டிய அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான சடங்கு அது. ஆனால் இலங்கையில் நடந்த படுகொலைக்கு அப்படி காடற்று செய்ய முடியாது. ‘போர்முடிந்துவிட்டது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி அடுத்து ஆக வேண்டிய அபிவிருத்தி வேலைகளில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அரசு விரும்புகிறது.. ஆனால் அது அப்படி இல்லை என்பதுதான் என் கவிதைகளின் மையம்.


இலங்கை பிரச்னையில் இந்தியா அரசு எடுத்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள?
போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும்வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இந்திய உதவியில்லாமல் போரில் அவர்கள் வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரின் கூற்றும் இதை உறுதிபடுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கையும் இதை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் கார்டன் வைஸ், ‘கேஜ்’ என்ற தன் நூலில் அதை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அதை ‘கூண்டு’ என்ற தலைப்பிலே தமிழில் வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டிருப்பது விளங்கும். எத்தனை அப்பாவி மனிதர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த உடன்படிக்கையால்தான் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தன.
சிலவேளைகளில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் யோசிக்கக்கூடும். ஆயினும், போரின் விளைவுகளையும் வழிமுறைகளையும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதுதான் இந்தியாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.
அதேபோல், வடகிழக்கு மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை இவர்களாகவே முடிவு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருவது தமிழர்களுக்குப் பெரும்பாலும் பயனளிப்பதாக இல்லை. இப்போது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்துள்ளது. அதிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் குறைவுதான்.

வீடு கட்டித்தருவதை ஏதோ ஒரு கட்டட நிறுவனம் செய்துதானே ஆகவேண்டும்? அது பன்னாட்டு நிறுவனமாக இருப்பதில் என்ன தவறு?
அபிவிருத்தித் திட்டங்கள் அந்தப் பிராந்திய மக்களின் நலன்களுக்குப் பாதகமில்லாமல் இருக்க வேண்டும் என்பார் அமெர்த்தியா சென். மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டியெடுப்பது நல்லது என்பது பொதுவாக சரியான கருத்துதான். அது அங்கு வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாதல்லவா? சத்தீஸ்கரில் அதுதானே நடக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுமக்களின் நலனை எதிபார்க்கவே முடியாது.
இலங்கை வடகிழக்குப் பகுதியில் நடைபெறும் பல அபிவிருத்தி திட்டங்களில் அமெரிக்க, சீன கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையும் பொருளாதார பயன்கள் அதிகம். அங்கு அமைக்கப்படும் காற்றாலைகள் மலேசியாவில் இருக்கும் சீனர்களின் நிறுவனம். இந்தியாவும் அமெரிக்கவும், சீனாவும் அங்கு நடப்பதாகச் சொல்லும் பல நலத்திட்டங்களைப் போருக்குப் பிறகு பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே அந்த நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான். மக்கள் நலன் அதில் குறைவாகவே இருக்கிறது.

லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதமிருப்போர் முள்வேலியில் அடைபட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.
1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்த காய்தல்,. உவத்தல் இல்லாத சுயவிமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.
2. இனிவரும் போராட்டம் பன்முகப்பட்ட& பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங்கை தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்..
3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் ‘உணர்வுத் தோழமை‘ என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல் பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.
4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப்போனதால் அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.
5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசியகீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவை இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

நாடுகடந்த தேசிய அடையாளத்தை நோக்கிப் பயணிப்பது என்றால்?
கடந்த வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் ‘நடந்த நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை’ பற்றி பேசியிருக்கிறார். அதுபோன்ற ஒரு ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பொதுவாக இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் அதிபர் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பத்து லட்சம் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்.

எலக்ட்ரானிக் ஓட்டுரிமை சாத்தியமாக எத்தனை காலம் ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
செல்போன், இணையதளம் மூலம் ஓட்டளிக்கும் வசதிகள் இந்தியாவிலேயே ஒரு இடத்தில் பரீட்சார்த்தமாக செய்து பார்த்ததாக அறிகிறேன். குறைந்தது ஐந்திலிருந்து பத்தாண்டுக்குள் இது பரவலாக சாத்தியமாகலாம். வரிசையில் நின்று ஓட்டளிப்பதில் மக்களுக்கு இருக்கும் மனச்சோர்வு, அக்கறையின்மை போன்றவை இந்த எலக்ட்ரானிக் ஓட்டுரிமையை துரிதப்படுத்தும். அதனால் வேகமாக இந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் ஏற்கெனவே இந்த ஓட்டளிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாங்கள் கற்பனை செய்துவைத்திருந்த ‘நாடு கடந்த தேசியம்’ சாத்தியமாவதற்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறாம்.

உங்கள் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்திருப்பது குறித்து?
கனகநாயகத்தின் மொழிபெயர்ப்பில் ‘யூ கெனாட் டர்ன் அவே’ என்ற தொகுப்பும் லஷ்மி ஹோம்ஸ்டரம்& சாஷா எபெல்லிங் மொழிபெயர்ப்பில் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ என்ற தொகுப்பும் வந்துள்ளன. இப்போது கவிஞர் ஆனந்த் என்னுடைய ஒரு கவிதைத் தொகுதியை மொழிபெயர்த்து வருகிறார்.

புகலிடச் சூழல் அனுபவங்கள் படைப்பின் செயல்பாடுகளை எப்படி பாதிக்கிறது?

தமிழகச் சூழலில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து படைக்கிற இலக்கியம் வேறு.. இருபது வயது வரை ஒரு தேசம், பிறகு இன்னொரு தேசம், இன்னொரு சூழல், இன்னொரு தேசிய கீதம், இன்னொரு நாட்டுடன் விசுவாசம் என்று வாழும் புகலிட தமிழர்களின் இலக்கிய பங்களிப்புகள் வேறு. அந்தவிதத்தில் இது புதிய படைப்பனுபவத்தை முன்வைக்கிறது.
பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவில்லாத நிலை இருக்கிறதே?
பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு ‘மல்டிபிள் சாய்ஸ் கேள்வி’ மூலமாக பதில் சொல்ல விரும்புகிறேன்.
பிரபாகரன் இருக்கிறார். திரும்பிவருவார்.
இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
கனத்த மௌனம்.
மேற்கூறிய யாவையும் சரி.
- இந்த ஐந்து பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்.

நன்றி: விகடன்

வெள்ளி, ஜனவரி 20, 2012

எழுத்தாளர்களும் நடிகை வடிவுக்கரசியும்- ஒரு சவால்!

சனிக்கிழமை (21.01.12) இரவு எட்டுமணிக்கு ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் எழுத்தாள்ர்கள் சுற்று இடம்பெறுகிறது. சாருநிவேதிதா, அஜயன்பாலா, அராத்து ஆகியோருடன் நான் பங்கேற்று இருக்கிறேன்.
எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.
இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.

திங்கள், ஜனவரி 16, 2012

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.

இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.

இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.

’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

திறமைக்கு மரியாதை



சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக ஆண்பால் பெண்பால் நாவலை விகடன் ஆசிரியர் குழு தேர்வு செய்திருக்கிறது. திறமைக்கு மரியாதை என்று தலைப்பிட்டு கெள்ரவித்திருப்பது பெரு மகிழ்ச்சி தந்தது.

நன்றி விகடன்.

LinkWithin

Blog Widget by LinkWithin