செவ்வாய், மே 22, 2012

இரண்டு அதிர்ச்சிகள்



முன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் என்றொரு படம் வந்தது. அதன் பிறகு நான் அதில் காணாமல் போனேன். எப்போது தேடினாலும் விஜய், ஸ்ரேயா, நமீதா பற்றிய செய்திகள்தான் படும்.
நான் ஆத்திரப்படுவதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இப்படி இடையூறாகிவிட்டது அவர்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல.
சில நாட்களுக்கு முன் அழகிய தமிழ்மகன் படத்தின் சில காட்சிகளை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும் அதிர்ச்சி. கவிஞர் மு.மேத்தா அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் வந்தார். அதாவது கவிஞர் மு.மேத்தாவாகவே. அவர் என்னுடைய கல்லூரி பேராசிரியர். எனக்கு சந்தோஷமாக இருந்தது. படத்தில் விஜய்யின் கவிதையைப் பாராட்டி அவர் தமிழ்மகன் என்று சிறப்பித்தார். விஜய் அழகாக இருப்பதால் அழகிய தமிழ்மகன் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதில் அதிர்ச்சி அடைவதற்கு எனக்கு ஒரு காரணம் இருந்தது. கல்லூரியில் படித்த காலத்தில் என் கவிதைத் தொகுப்பு வெளியான நேரத்தில் எனக்கு ஒரு புனைப் பெயர் வேண்டும் என்று கோரிய போது எனக்கு அந்தப் பெயரை வைத்தவர் கவிஞ‌ர் மு. மேத்தா அவர்கள்தான்.
என் வாழ்க்கையில் நமீதா, ஸ்ரேயா ஆகியோரைக் குறுக்கிட வைத்தவர் என் ஆசானா?

சரி என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

கலகலப்பு என்று ஒரு படம். சுந்தர்.சி இயக்கி சந்தானம், விமல், அஞ்சலி, ஓவியா போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
அதில் சந்தானத்தின் பெயர் வெட்டுப்புலி. அது நான் எழுதிய நாவலின் பெயர்.
அதிர்ச்சி அடைவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு தானே?

என் நாவலில் சிறுத்தையோடு போரிட்ட என் கொள்ளு தாத்தாவின் வீரத்தைச் சொல்லிவிட்டு, அது எப்படி ஒரு தீப்பெட்டிக்கு சின்னமாக மாறியது என்று சொல்லி இருப்பேன். சந்தானமும் தன் பெயர் காரணத்துக்கு அதையேதான் சொல்கிறார்.
படத்தின் இரண்டாவது பாதியில் சந்தானம் பல இடங்களில் வெட்டுப்புலியின் வீர தீரத்தைச் சொல்கிறார்.
எப்போதுமே ஏதாவது ஒரு திரைப்படம் வெளியான பிறகு காமெடி நடிகர்கள் அந்தப் படத்தைப் போலவே காட்சிகள் அமைத்துக் கிண்டல் அடிப்பார்கள். விவேக், சந்தானம் போன்றவர்களிடம் அடிக்கடி சிக்கிக் கொள்பவர்  நடிகர் கமல்ஹாசன். வெட்டுப்புலி நாவலை திரைப்படமாக எடுக்க விரும்பி சில இயக்குநர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது படமாக வருவதற்கு முன்பே சந்தானமும் சுந்தர்.சி யும் முந்திக் கொண்டது ஒரு விதத்தில் ஆச்சர்யம்தான்.

ஞாயிறு, மே 13, 2012

கிருஷ்ணா டாவின்ஸிக்காக சென்னையில் ஒரு இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. அதைப்
பற்றி ஜூனியர் விக்டனில் நான் ஒரு பக்கத்தில் எழுதினேன்.  அது ...


கிருஷ்ணாவும் டாவின்ஸியும்

கிருஷ்ணா டாவின்சி... பத்திரிகைகள் வாசிக்​கும் பழக்கம் உள்ள அனை
வருக்கும் அறிமுகம் ஆன பெயர்!
இளம்வயதிலேயே மரணத்தைத் தழுவிய அவரை நினைவு கூர்​வதற்கு நிறையச்
செய்திகள் இருந்ததை, ஞாயிற்றுக்​கிழமை சென்னையில் நடந்த அவருக்​​கான
நினைவேந்தல் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. தமிழில்வெளியாகும் அத்தனை
செய்தி நிறுவனங்​களில் இருந்தும் வந்திருந்து அரங்கை நிறைத்திருந்தனர்
பத்திரிகை​​யாளர்கள்.
கிருஷ்ணாவின் சகோதரியும் எழுத்தாளருமான உஷா, ‘கிருஷ்​ணா​வின் முதல்
பள்ளிநாள் நினை வுகளில் இருந்து அவர் மரணப்படுக்கையில் பயமில் லாமல்
புன்னகைத்தது’ வரை நெகிழ்ச்சியாக எடுத்து ரைத்தார். ‘கிருஷ்ணா
டாவின்சியின் புன்னகை ஒரு ஞானியின் புன்னகையைப் போல இருக்கும்’ என்றார்
எழுத்தாளர் மதன். ‘மரணத்தைக் கண்டு கலங்காத, அதை வாழ்வின் இன்னொரு
தரிசனமாகப் பார்த்தவருக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்தது
பொருத்தமானதுதான் ’ என்று, அவருடைய தந்தை பெருமைப்பட்டார்.
தொடர்ந்து பேசிய பலரும் கார்கில் போரின் போது கிருஷ்ணா, நேரடி ரிப்போர்ட்
செய்தது, இலங்கை சென்று பிரபா​கரனின் நேர்காணலை எடுத்து வந்தது, ஒரு
குறிப்பும் இல்லாமல் ரஜினியின் பேட்டியை ஆறு வாரங்களுக்கு எழுதி
ரஜினியிடம் பாராட்டுப் பெற்றது என்று சிலாகித்​தார்கள்.
கிருஷ்ணா டாவின்சியின் குழந்தை நேயா நடனமாட இவர் கிடார் இசைத்துப் பாடும்
வீடியோ ஒன்றைத் திரைஇட்டார்கள். எல்லா நேரமும் குழந்தையுடன் விளையாடி,
குழந்தைக்காகப் பாடி, குழந்தையோடு சுவரெல்லாம் கிறுக்கி மகிழ்ந்த
நினைவுகளை பார்க்க முடிந்தது.  சினிமா, அரசி​யல், சூழலியல், புத்தகங்கள்,
இலக்கியம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என அனைத்துத் துறை யிலும்
அவருடைய எழுத்து முத்திரை இருந்தது. இசைப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு
இருந்த இன்னொரு முகம் நெருங்கிப் பழகியவர்களுக்கே தெரியும். இறுதிக்
காலத்தில் இசைபற்றியே அவர் நிறைய எழுதினார். ‘இசையாலானது’ என்ற நூலும்
அக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இயக்குநர் லிங்குசாமி வெளியிட குழந்தை
நேயா பெற்றுக் கொண்டாள். ‘‘நேயாவின் எதிர்காலத்துக்காக எம்மாதிரியான
உதவியும் செய்யக் காத்திருக்கிறேன்’’ என்ற லிங்குசாமியின் அறிவிப்பும்
‘‘கிருஷ்ணா டாவின்சியின் பெயரில் பத்திரிகையாளர் விருது வழங்கப்பட
வேண்டும்’’ என்ற ‘பாலை’ செந்தமிழனின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டிய
ஆத்மார்த்தமான செயல் திட்டங்கள்.
விஜய் டி.வி.யில் நடிகர் சூர்யா நடத்தும் ‘கோடீஸ்​வரன்’ நிகழ்ச்சிக்கான
ஒத்திகையை கிருஷ்ணா டாவின்சியை வைத்தே செய்திருக்கிறார்கள். அதில்
‘உங்கள் பெயரில் டாவின்சி இணைந்ததற்கு என்ன காரணம்’ என்கிறார் சூர்யா.
புன்முறுவலோடு அவருடைய பதில்: ‘‘டாவின்சியை மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்
என்பார்கள். ஜாக் ஆஃப் ஆல் சப்ஜெக்டாக.. அதாவது எல்லாவற்றிலும்
நுனிப்புல்லாவது மேயலாமே என்றுதான் வைத்துக் கொண்டேன்’’
அது, கிருஷ்ணா டாவின்சியின் தன்னடக்கம்.!

LinkWithin

Blog Widget by LinkWithin