புதன், செப்டம்பர் 19, 2012

கவாத்துக்கு தப்பிய செடிகள்




இம் மாத ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் இலங்கையின் மலையக பகுதிகளுக்குச் சென்றுவந்தேன். அதைப் பற்றி கடந்த ஜூனியர் விகடனில் எழுதியிருந்தேன்.


டைட்டானிக் கப்பலில் சென்ற ஆயிரத்துச் சொச்​சம் பேர் கடலில் மூழ்கிப் போனது பற்றி இதுவரை பத்து திரைப்​படங்​கள் வெளிவந்துவிட்டன. மூவாயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன. இலங்கைக்குத் தேயிலை பறிக்க தமிழக மக்களை ஏற்றிச் சென்று மூழ்கிப்போன ‘ஆதிலட்சுமி’ கப்பலை எத்தனை பேருக்குத் தெரியும்? மலைகளில் ஏறிவிட்டாலும் வாழ்க்கையில் கரை ஏற முடியாத ஏழை மக்களின் துயரம்,  சொல்லால் வடிக்க முடியாத சோகம்.
அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்தேன். அப்போதைய மனவோட்டம்தான் இது. இலங்கையில் 2&ம் தேதி இறங்கினேன். தமிழர்ப் பகுதிகளான மட்டக்களப்பிலும் அனுராதபுரத்திலும் 8&ம் தேதி தேர்தல் நடக்க இருந்ததை ஒட்டி எல்லாக் கட்சி​யினரும் மேடைகளில் முழங்கிக்கொண்டு இருந்தனர். தமிழகத்தில் சுற்றுப்பயணம் வந்த சிங்களவர்களைத் திருப்பி அனுப்பிய செய்தி அந்தப் பிரசார மேடைகளில்  விவகாரம் ஆகிவிட்டது. லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்த... அந்த ரத்தம் காயாத நிலையில் ராஜபக்ஷே, ‘மக்கள் இனவாதத்தை விட்டுவிட வேண்டும்’ என்று தமிழில் வேண்டுகோள் வைத்தபடி இருந்தார். கடையடைப்பு செய்ய இருப்பதாகத் தகவல்கள். இன விரோதம் தூண்டிவிடப்படுமானால், அது இரண்டு பக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு திருப்பத்திலும் புத்தர் சிலைதோறும் துப்பாக்கியுடன் நிற்கும் ஆர்மிக்காரர்கள் ஏற்படுத்தும் மிரட்சி போதாதென்று இது வேறு. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. தேர்தல் நேரம் என்பதாலேயே அடக்கிவாசிக்கிறார்கள் என்று பேசிக்கொண்டனர் .
கொழும்பிலிருந்து ஹட்டன் மலையகப் பகுதி சுமார் 150 கி.மீ.  சரிபாதி சிங்களரும் தமிழரும் கலந்து வாழும் பகுதி.  தேயிலைத் தோட்டத்தில் நண்பரின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கி இருந்த​தால், காலையில் எழுந்ததும் தோட்ட வேலைக்கு செல்லும் மக்களைச் சந்திக்க முடிந்தது. முதுகில்  மூங்கில் கூடைகளுடன் தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் ஏறிச் சென்றுகொண்டு இருந்தார்கள். சேற்றில் கால் சறுக்கிவிடாமல் இருப்பதற்காக அவர்கள் கையாளும் உத்தி செருப்புப் போட்டுக்​கொள்ளாமல் இருப்பதே. மழையில் நனையாமல் தப்பிக்க பிளாஸ்டிக் கோணிப் பைகள். கடந்த 200 வருடங்களில் ஏற்பட்ட எந்த விஞ்ஞான முன்னேற்றமும் அவர்களின் இந்த உத்திக்கு மேல் உதவவே இல்லை.
குளவி கடித்தால் சுண்ணாம்பு, ரத்தம் உறிஞ்சும் அட்டையை அகற்றுவதற்கு மூக்குப் பொடி... இதற்கு மேல் எந்த வைத்தியமும் இல்லை.
தினம் 20 கிலோ வரை கொழுந்து பறிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு எழுதப்படாத கட்டளை. மாதத்தில் 17 நாட்கள் வேலை பார்த்தாக வேண்டும். உடல் நிலை சரியில்லாமல் படுத்துவிட்டால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு நாள் சம்பளத்தைப் பாதியாக்கி, செய்த நாளுக்கான கூலியைக் கணக்கிட்டுக் கொடுப்பார்கள்.  உரிமை​களுக்​காகக் குரல் கொடுக்கும் ஈழ மக்களுக்கும் உணவுக்காக அல்லல்படும் மலையக மக்களுக்கும் வாழ்க்கை வித்தியாசம் ஏராளம். காலை முதல் கொட்டும் மழையில் கொழுந்து பறித்துவிட்டு குளிரில் வெடவெடத்து நீரில் ஊறிப்போன கை கால்களோடு அந்தி சாயும் நேரத்தில் அவர்கள் வீடு திரும்புகிறார்கள்.
அதன் பிறகு அவர்கள் சமையல் செய்கிறார்கள். குழந்தைகளைக் கவனிக்​கிறார்கள்... கணவனைக் கவனிக்கிறார்கள். ஆண்​களுக்கு வேறு சில தோட்ட வேலைகள்... தேயிலை நாற்றுப் பராமரிப்பு,மருந்து தெளித்தல், கானு வெட்டு​தல், கவாத்து செய்தல், களை வெட்டுதல், குழி தோண்டு​தல் என்று தினம் தினம் வேலைகள் வேறுபடும்.
அவர்களில் சிலரின் களைப்​பைப் போக்க அதிவிசேஷமான பொருள் ஒன்று மாலை ஆனதும் கைகொடுக்கிறது. அங்கு விற்பனையாகும் சாராயத்தின் பெயர் அதிவிசேஷம்.
நான் சந்தித்த தோட்டத்து மக்கள் எல்லோரும் பேசிவைத்துக்கொண்டதுபோல ஒரு கேள்வியைக் கேட்டார்கள். ‘‘எங்களைப் பற்றி ஏன் தமிழக அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை?’’
மலையகத்தில் இருக்கும் இந்த 15 லட்சம் பேரின் பிரச்னைகள் வேறு. இவர்கள் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக கடந்த 200 ஆண்டுகளில் இடம் பெயர்ந்தவர்கள். இலங்கைத் தமிழர்கள் என்று அவர்களைப் பொதுமைப்படுத்துவதில் ஒரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

குழந்தை பெற்ற பெண்கள் மூன்று மாதங்களுக்குள் தேயிலை பறிக்கச் செல்ல வேண்டி இருந்தது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ‘பிள்ளை மடுவம்’ என்று ஒன்று தோட்டத்தில் உண்டு. இன்றைய ‘கிரீச்’சின் பண்படாத நூற்றாண்டு வடிவம் அது. ஒரு கூடாரத்தில் வரிசையாகத் தொட்டில்கள் தொங்குகின்றன. குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். டார்வின் சித்தாந்தப்படி இயற்கைத் தேர்வு செய்த குழந் தைகள் மட்டுமே இங்கு தப்பிப் பிழைக்கும். இப்போது அங்கு, படித்த பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.
ஒரு முதியவர், மகனும் மருமகளும் இறந்து போய்விட்டதால் தன் இரண்டு பேரக் குழந்தைகளையும் தான்தான் வேலைக்குப்போய் காப்பாற்றி வருவதாகச் சொன்னார். இதுபோன்ற சோகக் கதைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. வறுமை, நோய், சாதி இழிவு, வந்தேறிகள் என்ற அவமானம் எல்லாம் கலந்த கதைகள் அவை.
காடாய்க்கிடந்த இடத்தில் 200 ஆண்டு உழைப்பில் தோட்​டம் உருவாக்கி தங்கள் ரத்தத் தையும் வேர்வையையும் இட்டு தேயிலை வளர்த்த​வர்​களுக்கு அதைக் குடிக்கும் அனுமதி இல்லை. சோகத்தின் உச்சம் இது.
மலையக மக்களோடு இருந்ததில் ஒரு விஷயம் புரிந்​தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் இந்தியத் தமிழர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் பேச்சு​நடை மாறவில்லை. உணவில் கூட மாற்றம் இல்லை. இனக் கலவரம் வெடித்தபோதெல்லாம் சுலபமாகத் தாக்கப் பட்டவர்களும் இவர்கள்தான்.
வெகு சில தோட்டத் தமிழர்களின் வாரிசுகள் மட்டுமே படித்து வேறு வேலைக்குச் சென்று குடும்பத் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். சிலர் ஆசிரியர் வேலைக்குப் போவதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் பேன்ட், சட்டை அணிந்து நகரத்துக்குச் சென்று வருகிறார்கள்.
தோட்டத்தைச் சுற்றித் திரிந்த இரண்டு நாட்களில் நண்பர் ஒரு மரத்தைக் காட்டி, ‘‘இது என்ன மரம் என்று தெரிகிறதா?’’ என்று கேட்டார். என் விவசாய அறிவுக்கு எட்டாத மரம். ‘‘தெரியவில்லை’’ என்றேன். ‘‘இது தேயிலைச் செடிதான். தேயிலைச் செடி என்றால் மூன்று அடிக்கு மேல் வளரவிடாமல் அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களால் கொழுந்து பறிக்க முடியும். இது கவாத்துக்குத் தப்பிவிட்ட செடி... மரமாக வளர்ந்துவிட்டது’’

ஆசிரியர் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் சிலரும் அப்படி கவாத்துக்குத் தப்பிய செடிகள்தான்!


LinkWithin

Blog Widget by LinkWithin