சனி, ஆகஸ்ட் 24, 2013

‘‘மொழிபெயர்ப்பு என்பது ஒரு சமூகச் செயல்பாடு’’

எழுத்தாளர்  எம்.ஏ . சுசீலா அவர்கள்  பேட்டி

எம்.ஏ.சுசீலா அவர்களுடன் நானும் நண்பர் சிவகுமாரும்



ஃப்யோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய ‘இடியட்’ என்ற ஆயிரம் பக்க நாவலை ‘அசடன்’ என மொழியெர்த்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இதற்காக இந்த ஆண்டின் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ வழங்கும் மொழிபெயர்ப்புக்கான இயல் விருது, ‘திசை எட்டும்’ மொழியாக்க இலக்கிய விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்தின் ஜி.யூ.போப் விருது என வரிசையாகக் கௌரவிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்’ நாவலை ‘குற்றமும் தண்டனையும்’ என மொழிபெயர்த்தார். இரண்டு நாவல்களுமே மனித உணர்வின் ரத்தமும் சதையுமான சித்திரங்கள். இரண்டையும் மொழிபெயர்த்தது அசாத்தியமான பணி.
தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற எம்.ஏ.சுசீலா, மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றபின் புரிந்த சாதனைகள் இவை.


தாஸ்தேயேவஸ்கியின் க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட், இடியட் இரண்டு நாவல்களும் அவருடைய மகத்தான படைப்புகள். பல ரஷ்ய இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட சோவியத் அரசாங்கமும் கூட இவற்றை மொழி பெயர்க்காமல் விட்டுவிட்டன. ஓர் அரசாங்கம் செய்யத் தயங்கிய வேலையை நீங்கள் எடுத்து முடித்தீர்கள் என்று இதைச்சொல்லலாமா? அதாவது சோவியத் அரசு இந்தக் காவியங்களை மொழி பெயர்க்காமல் விட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
உலக இலக்கிய மாமேதை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்   ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகிய இரண்டு பேரிலக்கியங்களும் தனி மனித உளவியல் சிக்கல்களுக்கும், அவற்றோடு பிணைந்து வரும்  உணர்ச்சிப் போராட்டங்களுக்குமே முன்னுரிமை அளிப்பவை. சோவியத் அரசு மிகுதியான மொழியாக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த காலகட்டத்தில் முன்னிறுத்த விரும்பிய கருத்துக்கள் இப்படைப்புக்களில் அதிகம் இல்லாமலிருந்ததாக ஒருக்கால் அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்; மற்றபடி இவ்விரு நாவல்களையும் நான் அடுத்தடுத்து மொழி பெயர்க்க நேர்ந்தது என்பது மிகமிகத் தற்செயலான நிகழ்வுதானே ஒழிய -சோவியத் அரசு மொழி பெயர்க்காமல் விட்டதைச் செய்ததாகவோ ஓர் அரசாங்கமே செய்யத் தயங்கிய வேலையை  எடுத்து முடித்ததாகவோ மிகையாகப் பெருமை பாராட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
36 ஆண்டுக்கால பேராசிரியப் பணியை அப்போதுதான் நிறைவு செய்திருந்த ஒரு காலகட்டத்தில் மதுரை,பாரதி புக் ஹவுஸ் உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்கள் "குற்றமும் தண்டனையும்" நாவலை மொழிபெயர்த்துத் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதுவரையில் சிறுகதைப் படைப்புக்களையும் [’90களில் என் சிறுகதைகள் சில விகடனிலும் வெளிவந்திருக்கின்றன] கட்டுரைகளையும் மட்டுமே அவ்வப்போது எழுதி,வெளியிட்டு வந்த நான், நெடுங்காலம் ஆற்றி வந்த பணியிலிருந்தும், ஊரிலிருந்தும் விலகியிருக்க நேர்ந்ததால் விளைந்திருந்த வெறுமை உணர்வைப் புறம் தள்ளுவதற்கான ஆக்கபூர்வமான  ஒரு துணையாக மட்டுமே தொடக்கத்தில் இந்த முயற்சிக்கு ஒப்புதலளித்தேன். எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து எழுத்துடனும், இலக்கியத்துடனும் ஊடாடவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது. அதற்குள் ஆழ்ந்து ஈடுபடத் தொடங்கிய பிறகு ஒரு கட்டத்தில் அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டது;
குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்துக்கு நான் எண்ணியதற்கும் மேலாகவே வாசகர்கள், சக எழுத்தாளர்கள், மற்றும் திறனாய்வாளர்களிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பு , அடுத்து  அசடன் நாவலை மொழியாக்கும் தூண்டுதலை அளித்தது; தொடர்ந்து அதையும் செய்து முடித்தேன். இப்பணிகளைத் தொடங்கியபோது என் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சுவடுகளைப் பதிக்கப்போகும் குறிப்பிடத்தக்க இரு பெரும் பயணங்களாக இவை அமையவிருக்கின்றன என்பதை நான் சற்றும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. இந்த இரண்டு மொழியாக்கங்களையும் மேற்கொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்து இவற்றை மிகப் பிரம்மாண்டமான முறையில் ரஷியத் திரைப்படக்காட்சிகளோடு பதிப்பித்திருக்கும் பதிப்பாளர் துரைப்பாண்டி அவர்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும்.

இந்த இரண்டு நாவல்களுமே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப் பட்டவை. மொழி, கலாசாரங்களில் நம்மிடம் இருந்து மிகவும் விலகி இருப்பவை. காலம், கலாசாரம், மொழி எல்லாமே முற்றிலும் அந்நியப்பட்டவை. மொழிபெயர்க்கும்போது இதனால் ஏற்பட்ட இடையூறுகளைச் சொல்லுங்கள்? உணர்வுப் போராட்டங்களை நினைவோட்டமாக விவரிக்கும் இந்த நாவல்களைமொழிபெயர்க்கும் போது உங்களூக்கு ஏற்பட்ட சிரமங்கள் என்ன? எவ்வளவு காலம் ஆகியது?
''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.’’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்.பொதுவாகவே பிறநாட்டு/பிற மாநிலப் பின்புலம் கொண்ட படைப்புக்கள் நம்மிடம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்திவிடுவது போல நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பதனாலேயே  அவற்றைப் படிப்பதில் நமக்குள் நிரந்தரமான ஒரு தயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.மொழியாக்கங்கள் போதியஅளவு விற்பனை செய்யப்படாமல்இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையை  ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அயல்நாட்டு இலக்கியங்களைப் படிக்கும்போதும்/மொழிபெயர்க்கும்போதும் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்-[suக்ஷீஸீணீனீமீ]-மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள் ,அதனால் பரவலாக நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கும் பல மாற்றுப்பெயர்கள், தட்ப வெப்ப சூழல் மாற்றங்கள் ,உணவு வகைகள்,இடப் பெயர்கள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கமும் மலைப்பும் ஏற்படுவது இயல்புதான்.
ஆனால், ’’விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’ மொழியாக்கம் முயல்கிறது’’ என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருப்பதைப்போல,அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனிதஇயற்கையும்,மானுட உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும்  உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிந்து கிடப்பதை  விளங்கிக்கொண்டு விடலாம்.
மொழி இனம்,நாடு என்று பலஎல்லைக்கோடுகளைவகுத்துக்கொண்டாலும்,தனிமனித உணர்வுப்போராட்டங்கள், அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்கள், அவற்றை மீறித் தளும்பும் காருண்யம் ஆகியவை உலகின் எந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவை ,சகலர்க்கும் பொதுவானவை .
ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு அவதிப்படும்  ‘குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்நிகோவ் போன்றவர்கள் நாடு,இனம்.மொழி என்ற பேதமின்றி நம்மைச்சுற்றி நிறைந்திருப்பதை நாளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். .
’அசடன்’ நாவலில் பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைந்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாகத் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா , ஜெயகாந்தனின் கங்காவையே (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துகிறாள்.
ஒரு சில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள்வாங்கிக்கொண்டபடி நாவலின் முதல் ஐம்பதுஅறுபது பக்கங்களைக்கடந்து விட்டால் உணர்ச்சிமயமானதும், நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதோடு மகத்தான ஓர் உலக இலக்கியத்தைத் தவற விட்டு விடவில்லை என்ற ஆத்ம திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.
நல்லவனும் நேர்மையாளனுமான ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்து விட்டு அதன் பின் படும் அவதிகளை,மன உளைச்சல்களை,உணர்வுக்கொந்தளிப்புக்களை மட்டுமே மையப்படுத்தி, - அந்த ஒற்றைப் பார்வையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஆக்கம் ‘குற்றமும் தண்டனையும்’.என்பதால் ஒரே ஓட்டத்தில் கிடத்தட்ட எட்டு மாதங்களுக்குள் அந்த மொழியாக்கப்பணியை என்னால் முடித்து விட முடிந்தது.
இடியட்/அசடன் அப்படிப்பட்டதல்ல; பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(tஹ்ஜீமீs) பாத்திரங்களையும் கொண்டது.பல்வேறு முடிச்சுக்களும்,உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவையாய் இருப்பது. ஆழமான உளவியல்,தத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்ட மனஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டே செல்வது. இடையிடையே ஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவை விரவி வருவது. அதனால் அசடன் மொழிபெயர்ப்பை நிறைவு செய்ய கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன.
இங்கே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.
இவ்விரண்டு மொழிபெயர்ப்புக்களுமே -  ஆங்கிலத்தின் வழியாகச் செய்யப்பட்டவைதான்.
பொதுவாக பிறமொழிப் படைப்புக்களுக்குப்  பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருப்பதால்,’குற்றமும் தண்டனையும்’மற்றும் ‘அசடன்’நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்தபோது ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்குஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கிய பிறகே அவற்றுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டிருக்கின்றன.
மூலத்துக்கு மிக நெருக்கமாகவும் சிறப்பாகவும் சிகிஸிழிகிசிணி நிகிஸிழிணிஜிஜி இன் மொழிபெயர்ப்பே கருதப்பட்டு வருவதால் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பே இவ்விரு நாவல்களுக்கும்   முதன்மையான அடிப்படைநூலாக அமைந்தது.தெளிவு கிடைக்காத சில இடங்களில்,மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆங்கிலமொழிபெயர்ப்புக்கள், வேர்ட்ஸ்வர்த் கிளாசிக்மொழியாக்கங்கள் ஆகியவற்றை ஒப்புநோக்கி சில புரிதல்களைப்பெற முடிந்தது.
மொழிபெயர்ப்பின் தெளிவுக்காகப்பல முறை,-பல பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,’நவில்தொறும் நூல் நயமாக’ இந்நாவல்களின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துகொண்டே வந்தன.தஸ்தயெவ்ஸ்கி என்னும் கதைசொல்லியின் கதைக்கூற்று மாயத்தில் தன்வயமிழந்து போய்விட முடிந்து விட்டதால், கதைப்போக்குடன் கூடிய உணர்வுப் போராட்டங்களை நினைவோட்டமாக விவரிக்கும் கட்டங்களை மொழிபெயர்க்கும்போது எந்தச் சிக்கலும் எனக்கு ஏற்படவில்லை; அசடன் நாவலில் பலவகையான தத்துவங்களை முன் வைத்து உரையாடும் ஒரு சில கட்டங்கள் மட்டுமே மொழிபெயர்ப்புக்குக் கொஞ்சம் சவாலான பகுதிகளாக இருந்தன . இந்த இரு நாவல்களாலும் ஆட்கொள்ளப்பட்டு அவற்றில் நான் கரைந்து போயிருந்த அந்தப்பொழுதுகளில் அவற்றை நான் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதாகவோஞ்அதில் ஏதேனும் தடங்கல் தட்டுப்படுவதாகவோ எனக்குத் தோன்றவே இல்லை என்பதே மிகையற்ற உண்மை.. அவற்றை வார்த்தை வார்த்தையாக மொழிபெயர்ப்புச் செய்து கொண்டு போகும்போது மூலநூலாசிரியனுக்கு மிக நெருக்கமாகச் சென்றுவிடும் அனுபூதி நிலை - ஒரு மகத்தான தரிசனம் - காட்சியாவதையே  நான் உணர நேரிட்டது.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கியே என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போகிறாரோ என்பது போன்ற மனமயக்கமும்  அவரது சொற்களைத் தமிழில் வைக்க நான் ஒரு கருவியாக மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறேனோ என்ற எண்ணமும் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.
இந்த இருபயணங்களையும் மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது என்னுள் விளைந்த பரவசச் சிலிர்ப்பு சொல்லுக்குள் அடங்காத மகத்துவமும் உன்னதமும் வாய்ந்தது; அந்தப் பேரனுபவத்தின் ஒருசில துளிகளையாவது இம்மொழிபெயர்ப்புக்கள் அளித்திருக்குமானால் அதுவே இம்முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.

பொதுவாக மொழிபெயர்ப்பில் இருக்கும் சவால்கள் என்னென்ன? தமிழில் பெயர்க்கப்பட்ட சிறந்தமொழிபெயர்ப்பு என நீங்கள் நினைப்பவை?
உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான பலதருணங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள். மேற்குறித்த தருணங்களில்உணர நேரும் இத்தகைய உச்ச கட்ட கணங்களை - அவற்றிலிருந்து முரண்படாத உயிரோட்டத்துடன் தரவேண்டுமெனில் அதற்கேற்றதாக மொழிபெயர்ப்பாளனின் மொழி அமைந்தாக வேண்டும்; தட்டையான-நேரடியான மொழியாக்கத்தைத் தவிர்த்து மூலப்படைப்பிலேயே பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் - அதுவே ஒரு தனிப்படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளன் சற்றுக்கூடுதலான உழைப்பைச் செலவிட்டே ஆக வேண்டும்.எளிய சொற்களில் ,மிகச்சரளமான இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுவதே அந்நிய மொழிச் சூழல் கொண்ட ஒரு படைப்புக்குள்அலுப்புத் தட்டாமல்,சோர்வை ஏற்படுத்தாமல் வாசகனை ஆழ்த்தக்கூடியது.
குறிப்பிட்ட ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு, இன்னொரு மொழியில் உரு மாறி வருகையில்,அதிலும் அப்படைப்பின் ஜீவனும் வீரியமும் குறையாத சொற்களில் அது முன் வைக்கப்படும்போது மட்டுமே  முன்னவர் கற்பனை செய்திருக்கும் மூலப்பொருளை இன்னொரு மொழியில் காட்சிப்படுத்துவது சாத்தியமாகிறது.
நவீன- பின் நவீன வாசிப்புப்பழக்கம் கொண்ட வாசகனாயினும், நல்ல எழுத்துக்களைத் தேடிக்கண்டடையும் எளிய வாசகனாயினும் இன்றைய வாசகனை மொழியாக்கத்துக்குள் கொண்டுவர...அதில் அவனை ஈடுபடச்செய்யத் தேவைப்படுவது, இன்றைய காலகட்டத்தோடு ஒட்டிய தேய்வழக்குகள் தவிர்த்த- நவீன நடைமட்டுமே. சமகாலப்புனைவுகள் அ-புனைவுகள் இவற்றோடு மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்கும் தொடர்ந்த ஊடாட்டமும்,தொடர் வாசிப்புமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விட்டு, அத்தகைய மொழிநடையை நமக்கு வசப்படுத்துபவை.
மூலநூலை உரிய முறையில் உள்வாங்கிக் கொள்வதற்காக- அதன் வாசிப்பு பல முறை நிகழ்த்தப்படுகையில் மூலநூலாசிரியனுக்கு மிக அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவன் பெற்ற அகக்காட்சிகளை - அவன் உணர்த்த விரும்பிய செய்திகளை - அவனது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காண்பதும் சாத்தியமாகிறதென்பது ஓர் அரிய அனுபவம். அந்த நுண்வாசிப்பு அளிக்கும் அனுபவத்தின் அடித்தளத்தில் காலூன்றி நிற்கும்போதே  மூலமொழியாசிரியனை விட்டு விலகாத மொழிபெயர்ப்பு - இன்னொரு மொழிக்கு அதைக்கொண்டு செல்லும்போது மூலத்திற்கு துரோகம் செய்யாமல் -அதிலிருக்கும் செய்தியை மழுங்கடிக்காமல் - மிகையும் படுத்தாமல் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் மொழியாக்கம் வசப்படுகிறது.
தமிழில் பெயர்க்கப்பட்ட பல பிறமொழிப் படைப்புக்களை நான் விரும்பி வாசித்து அவையும் என்னை வசப்படுத்தியிருந்தபோதும் குறிப்பாக க நா சு மொழிபெயர்த்த பேர்லாகர் குவிஸ்டின் பாரபாஸ்,கா ஸ்ரீ ஸ்ரீயின் மொழிபெயர்ப்பில் வந்த காண்டேகரின்  யயாதி , கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்தில் வந்த மகாஸ்வேதாதேவியின் 1084இன் அம்மா ஆகியவை என்னை மிகவும் ஈர்த்த தமிழ் மொழியாக்கங்கள் என்று சொல்லலாம்.

படைப்பாளிகள்- மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள்.. அல்லது ஒன்றுபடுகிறார்கள்?
மொழியாக்கமும் கூடப்படைப்பிலக்கியம் சார்ந்த ஒரு கலையே என்பதை அறிந்து வைத்திருந்தபோதும், சொந்தப் படைப்புத் திறனை மழுங்கடித்துவிடக்கூடிய இயந்திரத்தனமான ஒரு செயலாக அது ஆகிவிடுமோ என்னும் அச்சமும், மனத்தடையும் தொடக்க நிலையில் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தன. முதல் முயற்சியான ‘குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பைத் தொடங்கி ஒரு சில அத்தியாயங்கள் முன்னேறியதுமே அத்தகைய பொய்யான பிரமைகள் என்னிலிருந்து விடுபடத் தொடங்கின. மொழி மாற்றம் - அதிலும் குறிப்பாகப் புனைகதை சார்ந்த மொழிமாற்றம் - சுயமான படைப்பாக்கத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள் இருந்து - நம்மைச் செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே - நாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராகச் சிறக்க முடியும் என்பதையும் அனுபவ பூர்வமாக நான் கண்டுகொண்ட கணங்கள் அவை. குறிப்பாக சிறுகதை நாவல் போன்றவற்றை மொழியாக்கம் செய்கையில் நமக்குள்ளும் ஒரு கதை சொல்லி இருந்து நம்மை இயக்கும்போது மட்டுமே இயந்திரத்தனமான -வறட்டுத்தனமான-உயிரோட்டமற்ற மொழியாக்கங்களைத் தவிர்க்க முடியும்;மொழிபெயர்ப்புச் செய்பவர் படைப்பிலக்கியப்பயிற்சி உடையவராகவும் இருக்கும் தருணங்களிலேயே அது சாத்தியமாகும்.
’’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்..கலைச்செல்வங்கள் யாவும்
  கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’என்றும்,‘’பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’’ என்றும்கூறிய பாரதியின் வரிகளின் வழி நாம் பெறும் செய்தி, ’மொழிபெயர்ப்பு என்பது அறிவுத் தளத்திலான ஒரு சமூகச்செயல்பாடு’ என்பதே.
 த நா குமாரசுவாமி, த நா சேனாபதி ,கா ஸ்ரீ ஸ்ரீ ,சு.கிருஷ்ணமூர்த்தி,ரகுநாதன்,சரஸ்வதி ராம்நாத்,டி எஸ் சொக்கலிங்கம்,க நாசு போன்றோரின் வழியாகவே பல இந்திய,உலக இலக்கியங்களை அணுக முடிந்திருந்த நான், அத்தகையதொரு சமூகச்செயல்பாட்டுப் பேரியக்கத்தின் சக்கரமாக இருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியிருப்பது பெரும்பேறு என்பதை உணர்ந்து கொண்டேன்.
5. பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சுந்தர ராமசாமி போன்ற ஆகச் சிறந்த எழுத்தாளர்கள் பலரும் மொழி பெயர்ப்பில் ஆர்வம் காட்டினார்கள். எழுத்தாளர்களே மொழிபெயர்ப்பவர்களாகவும் இருந்தார்கள். இப்போது படைப்பாளிகள் தனியாகவும் மொழிபெயர்ப்பவர்கள் தனியாகவும் மாறிவருகிறார்கள்.. லதா ராமகிருஷ்ணன், ஜி.குப்புசாமி, முருகவேள் இப்படி.. இதை எப்படிப் பார்க்கிறீர்கள். வளர்ச்சியா? சரிவா?
பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சுந்தர ராமசாமி  போலவே சமகாலப்படைப்பாளிகளாகிய ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன்,இந்திரன் ,கவிஞர் புவியரசு ,சுகுமாரன் எனப் பலரும் ,தங்கள் சொந்தப்படைப்புக்களுடன் கூடவே - அவற்றுக்கு இணையாகவே- பல நல்ல மொழிபெயர்ப்புக்களையும் செய்திருக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். எனவே இன்றைய சூழலில் படைப்பாளிகள் தனியாகவும் மொழிபெயர்ப்பவர்கள் தனியாகவும் மாறிவருவதாக- ஒரேயடியாக ஒரு முடிவுக்கு வருவது சரியில்லை என்றே நான் கருதுகிறேன். அதே வேளையில் மொழிபெயர்ப்பை மட்டுமே மேற்கொண்டு செய்து வருவோரும் இருக்கவே செய்கிறார்கள்.

மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் எப்படியிருக்கிறது?
தேர்ந்த பிறமொழிப் படைப்புக்களைத் தவற விட்டு விடாமல் படித்து விட வேண்டும் என்ற தாகம் கொண்ட வாசகர் கூட்டம் ஒன்று எல்லாக்கால கட்டங்களிலும் இருந்து வருவதால் அவர்களது வாசிப்பின் வழி கிடைக்கும் அங்கீகாரம் எப்போதுமே உண்டு; சமகாலச் சூழலில் அது இன்னும் கூடுதலாகி வருவது மனதுக்கு நிறைவளிக்கக்கூடியது. பரிசுகள் மற்றும் விருதுகளின் வழி படைப்பிலக்கியத்தை ஒத்த அங்கீகாரத்தையும் பாராட்டையும் மொழிபெயர்ப்புக்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற மனப்போக்கும் இன்றைய சூழலில் மிகுதியாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

உங்கள் குடும்பத்தைப் பற்றி.. அவர்கள் அளித்த ஒத்துழைப்பு பற்றி?
பேராசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் மைய அரசுப்பணியில் இருக்கும் என் ஒரே மகளுடன்தான் நான் வசித்து வருகிறேன்.அவளுக்கு இரு குழந்தைகள்; மருமகன் வனத் துறையிலிருப்பவர். அவர்களுக்குப் பணி மாற்றல் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் நானும் உடன் சென்று அங்கேயே தங்கியிருக்கிறேன்.அவ்வாறு ஏழு ஆண்டுக்காலம் புதுதில்லியில் வசித்தபோதுதான் இந்த இரு பெரும் மொழியாக்கங்களையும் என்னால் மேற்கொண்டு நிறைவு செய்ய முடிந்தது. வேலைக்கும்,பள்ளிக்கும் எல்லோரும் சென்றபின் கிடைத்த தனிமையான சூழல் மன ஒருமைப்பாட்டுடன் இப்பணியில் ஈடுபட உகந்ததாக அமைந்தது. வாசிக்கப்பழகிய நாள் முதல் நான் எழுதும் ஒவ்வொரு படைப்பையும் முனைப்போடு படித்துத் திருத்தமும் சொல்லுபவள் என் மகள். குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தையும் அவ்வாறே செய்தாள். எனக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இலக்கியப்பணிகளில் - எழுத்துத் துறையில் நான் இயங்குவதை என் குடும்பச்சூழல் எப்போதும் வரவேற்றும் கொண்டாடியுமே வருகிறது.

பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் விலகியிருக்கும் சூழல் நிலவுகிறது. தனிப்பட்ட விரோதங்கள், கொள்கை சார்ந்த விரோதங்கள் நிலவுகின்றன. ஒருவரின் வெற்றியை இன்னொருவர் கொண்டாடுவதில்லை. இது எழுத்துகில் எப்போதும் இருப்பதுதானா? அப்படி இருப்பதுதான் எழுத்துலகின் இலக்கணமா?
சமகாலத் தமிழ் இலக்கியத்தில் நிலவும்/ நிகழும் வேறுபட்ட போக்குகளையும் வளர்ச்சி நிலைகளையும்,மாற்றங்களையும் தவற விட்டுவிடாமல் - அது தன் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி எவ்வாறு முன்னகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவதானிப்பதிலும் அதைக் கண்டு மகிழ்வதிலும்தான் என் அக்கறையும் ஆர்வமும் குவிந்திருக்கிறதே தவிர எழுத்துலகில் நிலவும் குழு அரசியலில் நான் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை; புலமைக்காய்ச்சல் என்பது எல்லாக் கால கட்டங்களிலும் இருந்து வருவதுதான் என்றாலும் அத்தகைய  போக்குகள்  தவிர்க்கப்பட வேண்டியவை  என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை.
என் மொழியாக்கப் பணிகளைப் பொறுத்தவரை எல்லாத் தரப்புக்களைச் சேர்ந்த எழுத்தாளர்களும் - ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், நாஞ்சில்நாடன், கோணங்கி, தமிழ்ச்செல்வன், பொன்னீலன், கு.சின்னப்ப பாரதி, சி.மோகன், தமிழ்மகன் எனப்பலரும்- இம்முயற்சிகளையும், இவற்றுக்குக்கிடைத்த அங்கீகாரங்களையும் தமிழுக்குக் கிடைத்த வரவாகப் போற்றிப் பாராட்டி எனக்கு வாழ்த்துக்கூறியிருப்பதும் இவை பரவலாக வாசகர்களைச் சென்றடையத் தொடர்ந்து இப்படைப்புக்களைத் தங்கள் இணையதளங்களிலும்,சொற்பொழிவுகளிலும்  பரிந்துரைத்துக்கொண்டிருப்பதும் எனக்கு உற்சாகமளிப்பவை.

உங்களின் அடுத்த முயற்சிகள் என்ன?
வாழ்க்கை வரலாற்றுப் பாணியிலான புனைவு ஒன்றை எழுதி முடித்து அதைச் செம்மைப்படுத்தும் பணியில் இருக்கிறேன். அதை அச்சுக்கு அனுப்பியதும் தமிழில் இதுவரை பெயர்க்கப்படாத இன்னும் சில உலகப்பேரிலக்கியங்கள்ளை மொழியாக்க விருப்பம். குறிப்பாக தஸ்தயெவ்ஸ்கியின் ‘கீழுலகின் குறிப்புக்க’ளை அடுத்துச் செய்வதாகத் திட்டம்; இடையிடையே சிறுகதைகள்,குறுநாவல் போன்ற சில சொந்தப்படைப்புக்களை எழுதும் எண்ணமும் உண்டு

பேராசியர் பணி காலத்தில் நீங்கள் செய்த முக்கிய பங்களிப்பாகக் கருதுவது?
உண்மையில் என் பங்களிப்பின் தாக்கத்தை மதிப்பிட வேண்டியது என் மாணவர்கள்தான்...!
மொழி, இலக்கியக் கல்வியை ஊதியம் பெறுவதற்கு வழி காட்டும் கல்வியாக மட்டுமே ஆக்கி விடாமல் இலக்கியத்தின் மீதான மெய்யான ஆர்வத்தையும் தாகத்தையும் வளர்த்தெடுக்கும் பட்டறைகளாக என் வகுப்பறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. மரபிலக்கியப் பயிற்சியோடு தேங்கிப்போய் விடாமல் சம கால நவீனத் தமிழிலக்கியங்களையும் விமரிசனங்களையும், திறனாய்வுகளையும் மாணவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியையும் என்னால் இயன்ற வரையில் செய்திருக்கிறேன். பல்வேறு தன்னாட்சிக்கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுவில் இருந்தபோது சமகாலப்போக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வடிவமைக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சரிவரப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். படைப்பாளிகளாகப் பரிணாமம் கொள்ளக்கூடிய மாணவர்களை இனம் கண்டு அவர்களது படைப்பாற்றல் மேம்படத் தூண்டுதல் அளித்திருக்கிறேன்.அவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகவும் முத்திரை பதித்திருக்கிறார்கள். பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணி ஆற்றியதால், பெரும்பாலான நேரங்களில் பாடங்களோடு ஒருங்கிணைத்துப் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரியான புரிதலுடன் முன் வைப்பதற்கு ஏற்ற களமாக என் வகுப்பறையே எனக்கு அமைந்து போனது;
அவற்றைச் சரியான கோணத்தில் உள் வாங்கிக் கொண்டு பல பெண்ணியச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும், இயக்கப் போராளிகளும் கூட என் மாணவிகளிலிலிருந்து உருவாகி இருக்கிறார்கள்.

பெண் எழுத்தாளர்களுக்கான் படைப்புச் சுதந்திரம் எப்படி உள்ளது? நீங்கள் போற்றும் பெண் எழுத்தாளர்கள்?
படைப்புச் சுதந்திரம் என்பது தனிப்பட்ட படைப்பாளிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தது மட்டுமே. அதில் ஆண்-பெண் என்ற பாலினப் பாகுபாடுகளுக்கு  இடமில்லை. அவரவர் முன் வைக்க விரும்பும் கருத்தைச் சொல்லும் உரிமையும், சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு.
ஆர் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், காவேரி லட்சுமிகண்ணன், அம்பை, கிருத்திகா, வாஸந்தி, பாமா, சிவகாமி ஆகியோர் என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய பெண் படைப்பாளிகள். சமகாலப் பெண் படைப்பாளிகளில் கவிஞர்கள் மிகுந்திருக்கும் அளவுக்குப் புனைகதை எழுத்தாளர்கள் அதிகமில்லை என்பது சற்றே வருத்தமும் சோர்வும் அளிக்கிறது.

கலை இலக்கியங்களைக் காக்க அரசு செய்ய வேண்டியது என்ன? சினிமாவுக்கும் மதுவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கலை, இலக்கியத்துக்கு அரசுகள் கொடுப்பதில்லையே?
திரைப்படமும் மதுவும் அளிக்கும் வருவாயைப் பிற கலைகளும், இலக்கியங்களும் அளிப்பதில்லையல்லவாஞ்? வருங்காலத் தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற மெய்யான ஆர்வமும், தரமான கலை இலக்கியங்கள் வழியாகத்தான் அவற்றை சாதிக்க முடியும் என்ற விழிப்போடு கூடிய முனைப்பும் அரசியல்வாதிகளுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் வரையில் இன்றைய நிலையில் புதிதாக எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை.  ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தரமான படைப்புக்களை அரசு நூலகங்களுக்கு வாங்குவதற்கான ஆணை சரிவர நெறிப்படுத்தப்பட்டால் கூட அது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கும்.

LinkWithin

Blog Widget by LinkWithin