புதன், ஜூலை 06, 2011

வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு

காலை(6.7.11)யில் கவிஞர் மனுஷ்யபுத்திரனைச் சந்தித்தேன்.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் எழுதிய வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது என்றார்.

வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் ஒரு ஆண்டுக்குள் ஒரு நூல் இரண்டாம் பதிப்பு வெளியாவது இதுவே முதல்முறை என்றும் சொன்னார்.
ரொம்ப பெருமையாக இருந்தது.
பிளாகில் எழுதிவரும் இளம் எழுத்தாளர்களின் பங்களிப்பே இந்த நூலின் விற்பனைக்குப் பெரும் பங்கு வகித்தது.
யுவகிருஷ்ணா, ஆதிஷ, கிருஷ்ண பிரபு, கேபிள் சங்கர், தனிமையின் இசை அய்யனார், ரோமியோ, சுரேஷ், சிவராமன், கிழக்கு ஆர். முத்துக்குமார், சொல்வனத்தில் எழுதிய க.குணசேகரன், புத்தகம் பேசுது இதழில் எழுதிய ஆய்வு மாணவர் ஐ. சிவகுமார், தமிழ் ஸ்டூடியோ அருண் போன்ற பலர் வெட்டுப்புலி நாவல் குறித்து தங்கள் விமர்சனங்களை, பாராட்டுகளை பகிர்ந்து கொண்டார்கள்

யுகமாயினியில் கவிஞர் மதுமிதா எழுதிய நீண்ட ஆய்வும் வடக்கு வாசலில் பேராசிரியர் எம்.ஏ. சுசீலா ஆய்வும் பெருமை சேர்ப்பவை. புதுச்சேரி பேராசிரியர் ராஜ்ஜா, எழுத்தாளர் பாரதிவசந்தன், நாடகக் கலைஞர் பாரதி மணி, விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் போன்றோரும் நாவலைப் படித்துவிட்டு பாராட்டிப் பெருமைப்படுத்தினர்.
எழுத்தாளர் ஜெயந்தன் நினைவுப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த எழுத்தாளர் பிரபஞ்சனிடம் என் நன்றியைத் தெரிவித்தபோது இத்தனை அரிய நாவலைத் தந்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியது பெருமையிலும் பெருமை.
நாவலை வெளியிட்டுச் சிறப்பித்ததோடு நாவல் எழுதவதற்கு முன் பேசியிருந்தால் இன்னும் நிறைய தகவல்களைச் சொல்லியிருப்பேன் என நெகிழ வைத்த எங்கள் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அண்ணாவின் வாழ்க்கை வரலாறை பென்குவின் பதிப்பகத்துக்காக எழுதிய கண்ணன் என ஊக்கமளித்தவர்களை பட்டியல் இட்டால் பெரிய பெயர் பட்டியலாகிவிடும்.
பாதிநாவல் படித்தேன். அண்ணன் படிப்பதற்காக வாங்கிச் சென்றார்.. முழுதும் படித்துவிட்டு எழுதுகிறேன் என்று சொன்ன எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன், உங்கள் நாவல் பற்றி கேள்விப்பட்டேன்.. விரைவில் படிக்கிறேன் என்று சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தினத்தந்தி, இந்து, தினமணி, தினமலர், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளியான விமர்சனமங்கள் நாவலை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின.
காலச்சுவடு இதழில் கவிஞர் பெருந்தேவி விமர்சனம் எழுத இருக்கிறார்... பெரும்பாலும் அடுத்த இதழில் வெளியாகலாம் என்று சொன்னதற்காக அதன் பொறுப்பாசிரியர் தேவிபாரதிக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

LinkWithin

Blog Widget by LinkWithin