புதன், ஜூன் 17, 2009

படித்தேன் ரசித்தேன் -1

உலக மனிதர்களின் வீடியோ ஆல்பம்



மிக சுவாரஸ்யமான நாற்பத்தியாறு சிறுகதைகளை படிக்கிறீர்கள். ஒவ்வொரு சிறுகதையும் மலைக்க வைக்கின்றன. அதில் இடம் பெறும் சம்பவங்களும் அதை விவரித்திருக்கும் முறையும் இப்படியெல்லாம் நாம் வாக்கியங்கள் அமைக்கவில்லையே என்று ஏங்க வைக்கின்றன. படைப்பின் பிரமிப்பே இதுபோல் நாம் ஏன் உருவாக்கவில்லை என்ற ஏக்கத்தை உருவாக்க வைப்பதுதானே? இந்த நூல் அதைச் செய்கிறது.

ஆனால் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுதி அல்ல. எல்லா அத்தியாயங்களுக்குள்ளும் இழையாக ஒரு தொடர்பு இருக்கிற போதும் இது நாவலும் அல்ல. இது சுயசரிதை. எல்லோருக்குமே பிறந்து, வளர்ந்து, சாதித்து, தவறி வீழ்ந்து, எழுந்து என்று எத்தனையோ அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நாற்பத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட சுயசரிதை என்று தெரிந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒருபோதும் ஞாபகத்தில் தங்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான ஆரம்பமும் அதன் பிறகு திருப்பங்களும் ஒரு எதிர்பார்க்காத முடிவும் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

சூடானில் ஒரு இரவு விருந்துக்குப் போய் வந்ததை எழுதியிருக்கிறார்.

ஒரு சோறு பதம்போல அதை இங்கே பார்ப்போம்.

"இடம் சூடான். வருடம் 1989. மாதம் ஞாபகமில்லை. ஒரு சனிக்கிழமை இரவு. நேரம் 7.58." முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது.

சம்பவம் நடந்த இடம் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். அதிலும் ஒரு நாட்டில் வேலை பார்த்தபோது நடந்த சம்பவமென்பதால் அதில் பிசகு இருக்காது. ஆண்டும் அப்படித்தான். இவர் அங்கு பதவி ஏற்ற ஆண்டு அது. மாதம் ஞாபகமில்லை ஆனால் கிழமை ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் ஒரு வார இறுதி நாளின்போதுதான் அந்த விருந்து நடைபெற்றது. இரவு என்பதும் ஓ.கே. நேரம் 7.58..? அவருக்கு முன்னால் கடிகாரம் ஒளிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். எவ்வளவு நம்பகத்தன்மையோடும் நுட்பமாகவும் இருக்கிறது பாருங்கள்.

புதிதாக குடிவந்த நாட்டில் வழக்கம் போல அவருடைய மனைவிதான் இந்தப் புதிய நட்பை உருவாக்கக் காரணமாக இருக்கிறார்.

ஒரு பெரிய பிளேட்டில் உணவு அவருக்கு வைக்கப்பட்டிருந்தது. அவர் சாப்பிடப் போவதை மூன்று ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன என்கிறார். ஒன்று அவருடன் வந்த அவருடைய மனைவியினுடையது. இரண்டாவது விருந்துக்கு அழைத்த எலேனாவின் கண்கள். மூன்றாவது கண்களுக்குச் சொந்தக்காரர் யாரென்று அவர் சொல்லவில்லை.

எலேனா சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்பதையும் சொல்லிச் செல்கிறார். நடந்து வருவதைப் பார்த்தாலே அவர் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பது தெரிந்துவிடும் என்கிறார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை அவருக்கு ஞாபகம் வருகிறார். அவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற டென்னிஸ் வீராங்கனை. "209 வாரங்களுக்கு டென்னிஸ் உலகத்தில் பெண்களுக்கான முதலாம் இடத்தைக் கைப்பற்றியவர் அவர். அவரைப் போலவே தோற்றம் எலேனாவுக்கும்' என்கிறார்.

எலேனாவின் கணவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ள ஒரு என்ஜினியர். இவர்கள் விருந்துக்குப் போன போதும் அவர் ஏதோ நாட்டுக்குப் போயிருக்கிறார்.

இரண்டு முறை எலேனா இவர்கள் வீட்டிக்கு விருந்துக்கு வந்திருக்கிறார். இது இவர்கள் முறை. மரக்கறிக்குப் பழகியிருந்த முத்துலிங்கம் புதுப்புதுவிதமான கற்பனைகளை ஜோடித்து விருந்துகளில் இருந்து தப்பித்து வருகிறார். ஆனால் எலேனா பிடிவாதக்காரியாக இருக்கிறார். இவருடைய வீட்டுக்குத் தொலைபேசி வருகிறது. இவருக்கு என்னென்ன காய்கறிகள் பிடிக்கும், என்னென்ன பிடிக்காது என்று இவருடைய மனைவியிடம் புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர் பியர் குடிப்பாரா என்பது அதில் ஒரு கேள்வி. பதில் ஆம் என்று தெரிவிக்கப்படுகிறது.

விருந்துக்குக் கிளம்புகிறார்கள். ஒம்டுர்மான் நகரத்தில் நைல்நதிக் காற்றி வீசும் தூரத்தில் எலேனாவின் வீடு இருக்கிறது. எலேனா வாசல் வரை வந்து வரவேற்கிறார். அவருடைய புஜங்கள் வசீகரமானவை. ஆனால் அன்று அவர் அணிந்திருந்த பட்டு ஆடை, புஜங்களை மறைத்ததோடு அல்லாமல் அவருடைய அழகிய பாதங்களையும் மறைத்து தரையில் தவழ்ந்து கிடக்கிறது. அவர் கடந்து போன சில வினாடிகள் கழித்து அவர் அணிந்திருந்த ஆடையின் கடைசி நுனி கடந்து போகிறது.

முகமன் கூறும் முன்னரே பாதையில் அவர்கள் பார்த்த வயலட் பூ கன்றுகள் பற்றி பேச்சு ஆரம்பமாகிவிடுகிறது. உலகத்தில் காணப்படும் அத்தனை வண்ணங்களிலும் அவரிடம் பூச்செடிகள் இருப்பதாகக் கூறுகிறார் எலேனா.

இப்போது மூன்றாவது ஜோடி கண்ணுக்குச் சொந்தக்காரர் அறிமுகமாகிறார். அவர் பீட்டர். அந்த வீட்டின் வேலைக்காரன். கென்யா நாட்டைச் சேர்ந்தவன். யாரோ பொருத்திவிட்டது போல தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி எல்லா வேலைகளையும் செய்கிறான். பூப்பபோட்ட சட்டையும் கண்களைக் கூச வைக்கும் நீலநிற பேண்டும் சாலையோரத்தில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். வசதி குறைந்தவர்களுக்கு அங்குதான் வியாபாரம். எத்தனையோ விருந்தினருக்குப் பணிவிடை செய்த அனுபவம் அவனிடமிருக்கிறது. எலேனாவின் உபசாரம் சற்றே சுணங்கும் இடங்களில் அதை நிவர்த்தி செய்பவனாக இருக்கிறான்.

தான் உணவு தயாரிக்க எடுத்த முயற்சியை விவரிக்கிறார் எலேனா. சுவிஸ் உணவில் பியர், முட்டை, தக்காளி, காளான் போன்ற கூட்டுப் பொருள்கள் கலக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதன் இறுதி வடிவம், பதம் தப்பிப் போன உளுத்தம் களி போல தென்படுகிறது.

அப்போது அங்கு சாதிக் அல் மாஹ்டியின் ஆட்சி நடக்கிறது. மது வாங்க, விற்க, குடிக்க தடை. சுவிஸ் உணவைப் பரிமாற வேண்டும் என்ற ஆசையில் எங்கிருந்தோ இருபது மடங்கு விலை கொடுத்து பியர் வாங்கி அதைத் தயாரித்திருக்கிறார். முதல் துண்டை வாயில் போட்டதும் அம்மா மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயில் ஊற்றிய ஆமணக்கு எண்ணெய்யின் மணம் ஞாபகம் வருகிறது. உணவை உண்ணும் கஷ்டத்தோடு வாயில் புன்னகையைத் தவழவிடுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது அவருக்கு. மனைவியைக் கடைக்கண்ணால் பார்க்கிறார். அவர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைப் போலவே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

வயிற்றுக்குள் செலுத்தப்பட்ட உணவு திரும்பி வருவதற்கு விருப்பம் காட்டுகிறது. நல்ல சிந்தனைகளையும் நல்ல வாசனைகளையும் நினைத்து அதைக் கட்டுப்படுத்துகிறார். தக்காளி கிச்சப்பையும் கோக்கையும் குடித்து சமாளிக்கப் பார்க்கிறார். முடியவில்லை. குமட்டல் அபாயகரமான கட்டத்தைத் தாண்டுகிறது. தன்னுடைய நாட்டவர், மூதாதையர், வேலை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மனைவி, பிள்ளைகள் எல்லோருடைய கௌரவமும் வாயின் நுனியில் அந்தக் கணம் நிற்கிறது. இனி எழுந்து கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில் பீட்டர் தோன்றுகிறான். சொர்க்கத்தின் கதவின் சாவியை யேசுவிடம் பெறுவதற்கு ஓடியவரின் வேகத்தோடு ஓடிவந்து மீதி உணவையும் முத்துலிங்கத்தின் தட்டில் பிரியத்தோடு பரிமாறுகிறான். எலேனாவின் உபசாரம் சுணங்கிய தருணங்களில் பீட்டர் அதை இட்டு நிரப்புவான் என்றாரே, அதுதான் இது.

தாம் ஆசையாகச் சாப்பிட்ட உணவை பார்சலும் செய்து தருகிறார் எலேனா. பியர் ஊற்றி தயாரிக்கப்பட்ட அந்த உணவு புளிக்கப் புளிக்க சுவை கூடும் என்கிறார். அதை ஒரு கையிலும் ஆப்ரிக்க வயலட் செடிக் கன்று மறுகையிலுமாக காரை நோக்கி நடக்கிறார். கார் சாவி அவருடைய வாயிலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

அன்றைய விருந்தில் அவருடைய வாயின் உச்சபட்ச பயன்பாடு அதுதான்.... இப்படி முடிகிறது அந்த அத்தியாயம்.

இதிலே நாம் கவனிக்க வேண்டியது அவருடைய நகைச்சுவை உணர்வு. அதை அவர் பிரத்யேகமான ஒரு நடையில் சொல்வது அடுத்தது. மூன்றாவது நைல் நதிக்காற்று வீசும் வீடு போன்ற நுணுக்கமான கவனிப்பு.

இது மூன்றும் இவருடைய மிகப் பெரிய பலம். அவருடைய நண்பர் ஒருவரை டொராண்டோவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வைத்தியம் பார்க்கக் கொண்டு செல்கிறார்கள். அற்பக் காரியத்துக்காகவும் வேறு ஒருவருடைய உதவியை எதிர்பார்க்கும் நிலைமை. கண்கள் மட்டுமே இப்படியும் அப்படியும் அசைகின்றன. அங்கே சென்று வைத்தியம் பார்த்த பிறகும் இறந்து போகிறார். டொரான்டோவுக்கும் கலிபோர்னியாவுக்கும் மூன்று மணி நேர வித்தியாசம். அன்றைக்கு அவர் சாதித்ததெல்லாம் ஒரே நாளில் மூன்று மணிநேரம் அதிகமாக வாழ்ந்ததுதான் என்கிறார்.

ஆப்ரிக்காவில் இவர் தலைமையில் நடந்த பஞ்சாயத்து வேடிக்கையானது. ஆழ்ந்து யோசித்தால் அது நம் கற்பு பற்றிய கற்பிதங்களைத் தூள் தூள் ஆக்குகிறது.

முயலைப் பார்க்க வரும் பெண்ணை ஒரு ஆப்ரிக்கன் விரட்டி அடிக்கிறான். கொஞ்ச நாளில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. அவள் தாய்மை அடைந்ததற்கு விரட்டி அடித்த ஆப்ரிக்கன்தான் காரணம்.

எப்போது அவளை நீ கர்ப்பமாக்கினாய் என்று விசாரிக்கிறார் முத்துலிங்கம். அவனோ அவளை விரட்டும் போது அவள் சிக்கிக் கொண்ட போதெல்லாம் அப்படிச் செய்தேன் என்கிறான். போததற்கு அவளாகவே சில நேரம் சிக்கிக் கொண்டதாகவும் சொல்கிறான்.

எங்கே உறவு வைத்துக் கொண்டாய்? என்று கேட்கிறார். ஆனால் இது அவசியமற்ற கேள்வி என்பது அ.மு.வுக்குத் தெரிகிறது. அங்கேதான் நிற்கிறார் முத்துலிங்கம். அவருடைய ஆப்ரிக்க அனுபவங்கள் வேறெங்கும் படித்திருக்க முடியாதவை. ஏரோப்ளேனில் துண்டு போட்டு சீட்டு பிடிக்க முடியுமா? நடக்கிறது. பாஸ் போர்ட்டை ஒருத்தனிடம் கொடுத்துவிட்டு அதற்கான ரசீதாக ஏதோ தினசரியின் ஒரு துண்டு மூலையில் பெற்றுக் கொண்டு திண்டாடுவது, மலேரியா காய்ச்சல் என்று ஆப்ரிக்கா அனுபவங்கள் அனைத்தும் படிக்கத் திகட்டாதவை.

தஸ்தயேவஸ்கியின் சூதாடி நாவலில் வரும் கதாநாயகன் பற்றிய குறிப்பு, சினுவா ஆச்சுபியின் சிதைவுகள் நாவலில் வரும் கதாபாத்திரம் பற்றிய குறிப்பு என அனைத்து விதத்திலும் ஆச்சர்யம் தருகிறார். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்கா, கனடா என அவருடைய அனுபவப் பரப்பு விரிந்து கொண்டே போயிருப்பது அனைவருக்கும் கிடைக்க முடியாத சிறப்பம்சம்.

மனிதர்களையும் சம்பவங்களையும் ஒரு விடியோ ஆல்பம் போல மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிற இவர், தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம்.

நூல்: உண்மை கலந்த நாட்குறிப்புகள்
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

உயிர்மை வெளியீடு,
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராம புரம்,
சென்னை- 18.
விலை: 170

www.thamizhstudio.com இல் இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்.

செவ்வாய், ஜூன் 16, 2009

காந்தமுள்

மு.க. அழகிரி திருமணம்!





பெரியார் திடலுக்குள் முதல் முறையாக நான் சென்றது என்னுடைய ஏழாவது வயதில். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது. 72}ஆம் ஆண்டு. மிகச் சரியாக தேதியோடு சொல்ல வேண்டுமானால் மு.க. அழகிரியின் திருமணநாளில். அங்குதான் அவருக்குத் திருமணம் நடந்தது. முகப்பிலேயே வரவேற்க நின்றிருந்தார் கலைஞர். பெரிய கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அவருக்குப் பக்கத்தில் காவலுக்கு ஒரு போலீஸ்காரர் நின்றிருந்ததாக ஞாபகம்.

என் தாத்தாவோடு இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்லும்போது பெரியவர்களைப் பார்க்கும்போது காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருந்ததால் அவரைப் பார்த்ததும் அப்பாவின் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு அவர் காலை நோக்கி ஓடினேன். கலைஞர் என்னைத் தடுத்தது ஞாபகமிருக்கிறது. அதற்குள் அப்பா ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டார். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் தமிழ்நாடு மின்வாரிய செயலக சங்கத்தின் 5-ஆம் ஆண்டுவிழாவை அதன் தலைவராக இருந்த என் தந்தை க.பாலகிருஷ்ணன், அன்றைய முதல்வரான கலைஞரின் தலைமையில் நடத்தியிருந்தார். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

அன்றைய விழா என் வாழ்வில் மறக்க முடியாததாக பின்னாளில் மாறியது. நாங்கள் அரங்கத்தின் ஓரத்தில் ஓர் இருக்கையில் இருந்தோம். வந்த பிரபலங்கள் எல்லோரும் எங்களை ஒட்டியே கடந்து போயினர். பெரியார் நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். பாபு ஜெகஜீவன்ராம், காமராஜர் போன்றவர்கள் என்னைக் கடந்து போன போது மிக அருகில் அவர்களைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அப்பாவுக்குப் பக்கத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர் வருவாரா என்று கேட்டுக் கொண்டிருந்தார். "கட்சியிலிருந்து பிரிஞ்சு போனா என்ன, கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவாரு'' என்று என் தந்தை அவருக்கு மட்டுமன்றி தனக்காகவும் ஆறுதலாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பிரபலம் உள்ளே நுழையும்போதும் மக்கள் பின்னால் திரும்பி ஆரவாரக்குரல் எழுப்பினர். எம்.ஜி.ஆர்.தான் வந்துவிட்டதாக ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் அங்கு மேடையில் இருந்தவர்கள் எல்லோரையும்விட எம்.ஜி.ஆர்தான் எனக்கும் முக்கியமானவராக இருந்தார்.



சிறை வாழ்க்கைக்குப் பிறகு எம்.ஆர்.ராதா அந்தத் திருமணத்துக்கு வந்தார். "ராதா வந்துட்டாரா... போச்சு. அப்ப எம்.ஜி.ஆர். வரமாட்டாரு'' என்று ஒருவர் குண்டைத் தூக்கிப் போட்டார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுப் பிரிந்திருந்தாலும் உதிர்ந்த இலையின் தழும்பு ஆறாத நிலைமை அது என இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோரும் வாழ்த்திப் பேச ஆரம்பித்தனர். இனிமேல் எம்.ஜி.ஆர் வரமாட்டார் என்று சமாதானமாகிவிட்டனர். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆர். வருவார் என்றுதான் என்னை அழைத்து வந்திருந்தார் என் தந்தை. பெரியவர்களைப் போல என்னால் சட்டென மாறிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக ரிக்ஷாக்காரன் மற்றும் நல்லநேரம் ஆகிய எம்.ஜி.ஆரின் படங்களை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் முறையே பாலாஜி, மேகலா திரையரங்குகளில் பார்த்ததோடு சரி. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துச் சென்றதில்லை. என்னையும் பார்க்க அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர். மீது கடும்கோபம் இருந்தது என் தந்தைக்கு. எம்.ஆர்.ராதாவையும் திட்டினார், சரியாகச் சுடவில்லை என்பதற்காக. பிஜு பட்நாயக் எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியபோது என் தந்தைக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மிக அற்ப காரணத்துக்காக அது நிறைவேறாமல் போய்விட்டதும் அவர் உடைந்து போய்விட்டார். கலைஞரையும் எம்ஜிஆரையும் நேசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்த மிகப் பெரிய மனப் போராட்டத்தை நான் கண்கூடாகப் பார்த்தேன். எந்த நேரத்திலும் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு ‘மலைக்கள்ளனை'யோ, ‘அரசிளங்குமரி'யையோ, ‘புதுமைப்பித்தனை‘யோ இணைந்து வழங்குவார்கள் என்று தவித்தனர். பலருக்கு எம்.ஜி.ஆர் இறந்த பின்னர்தான் இனி அது நடக்காது என்ற உண்மை உறைத்தது என்பது எனக்குத் தெரியும். அத்தகையவர்களின் பாசத்தை எம்.ஜி.ஆரும் கலைஞரும் கண்டு கொள்ளாதது ஏன் என்ற துயரம் தோய்ந்த கேள்வி அந்தப் பாசக்காரர்களின் பிள்ளைகளாக இருந்த என் போன்ற சிறுவர்களின் புரிந்து கொள்ள முடியாத பிரச்சினையாக இருந்தது.



அழகிரியின் திருமணத்துக்கு வந்தவர்களுக்குச் சாப்பாடு போடவில்லை. கலைஞர் இறுதியாக மைக்கைப் பிடித்து "கையில் கொண்டு வந்திருக்கும் மொய்ப் பணத்தை தமிழகத்தின் எந்த ஓட்டலிலும் செலுத்தலாம். அங்கேயே சாப்பிடலாம்'' என்று கூறி அரங்கத்தில் சிரிப்பொலியை எழுப்பினார். அப்பா என்னை எழும்பூரில் இம்பாலா ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். அழகிரிக்கான மொய்ப் பணத்தை நாங்கள் அங்குதான் செலுத்தினோம். எம்.ஜி.ஆர் வராத வருத்தம் பாசந்தி சாப்பிடும் போது மறைந்தது.

சமீபத்தில் அழகிரி, தமக்கு வருத்தமாக இருக்கும் சமயங்களில் எம்.ஜி.ஆர். பாடல்களைக் கேட்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எனக்கு அழகிரியை நினைக்கும்போது எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாத வருத்தம் வந்து போகும்.

திங்கள், ஜூன் 15, 2009

காந்தமுள்

ஹலோ ‘பைக்' டெஸ்ட்டிங்!




புதுக்கருக்குக் குறையாத பாத்திரம் போலவும் அப்போதுதான் நெய்து மடித்த துணியைப் போலவும் இருந்தது என் புதிய பைக். முழுசாக ஒரு மாசம்தான் ஆகியிருந்தது அதை வாங்கி. அத்தனை நாளாக ஸ்கூட்டரில் திரிந்து கொண்டிருந்தவனுக்கு பைக்கில் இருந்த சொகுசு திளைத்துத் தீர முடியாத சந்தோஷமாக இருந்தது.

ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். எழும்பூர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் காவல்துறை இணை இயக்குநர் அலுவலகம் அருகே இருந்தது எங்கள் பத்திரிகை அலுவலகம். நீதிமன்றமும் காவல்துறையும் பத்திரிகையும் சூழ இருந்த இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் புதிய பைக், நிமிட நேரத்தில் திருடு போய்விட்டது. அலுவலகம் இருந்த மூன்றாவது மாடிக்குப் போய்விட்டு திரும்ப வருவதற்குள் காணவில்லை. முதலில் நாம் இன்று பஸ்ஸில் வந்தோமா என்று நினைத்தேன். வண்டியை வேறு எங்கோ நிறுத்தினோமா, பக்கத்தில் பார்க் செய்திருந்த பைக் காரர் வண்டியை எடுக்க வசதி இல்லாமல் நம் பைக்கை வேறு இடத்தில் இழுத்துப் போய் நிறுத்திவிட்டாரா என்று நல்லவிதமாகத்தான் நினைத்தேன். என் அனைத்து நல்லவிதமான யோசனைகளையும் நிராகரித்துவிட்டு பைக் காணாமல் போயிருந்தது.

பிரக்ஞையே இல்லாமல் மீண்டும் மாடிக்கு ஓடினேன். யாரிடம் இதைச் சொல்வதென்று தெரியவில்லை. அங்கே எம்.ஆர்.ராதாவுக்கு நினைவு நாளோ, பிறந்தநாளோ வரப்போவதை ஒட்டி ஆவேசமான ஒரு கட்டுரை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கே புகுந்து என் பைக்கைக் காணவில்லை என்று சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. என் முக லட்சணத்தைப் பார்த்து அவர்களாகவே ""என்னாச்சு உங்களுக்கு'' என்றனர். இதற்காகவே காத்திருந்தது போல் பதட்டத்துடன் விஷயத்தைச் சொன்னேன். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்கச் சொன்னார்கள். நான் அதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதில்லை. தலைகீழாகக் கட்டி வைத்து அடிக்கும் இடம் என்பதாக எனக்கு போலீஸைப் பற்றிப் பதிந்திருந்தது. துணைக்கு ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குப் போனேன்.



ஆண்ட்ரூஸ் என்று நினைக்கிறேன். அவர்தான் வரவேற்றுப் பேசினார். அவர் ஏட்டா, எஸ்.ஐ.யா என்றெல்லாம் தெரிந்து கொள்வதற்கும் பயமாக இருந்தது. பத்திரிகை என்பதால் உட்கார வைத்து பொறுமையாகக் கேட்டார். யாரையாவது கட்டி வைத்து அடிக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன். டீ வந்தது. எனக்கு ஒரு டம்ளரை நீட்டினார். பயத்தில் வாங்கிக் கொண்டேன். அடுத்து "டீ குடிக்கிறியாடா?'' என்றார் ஏகவசனமாய். மறுபடியும் பயந்து போய் டீயை டேபிளில் வைத்துவிட்டேன். ""குடிக்கிறன் சார்'' என்று என் காலுக்குக் கீழே டேபிளுக்கு அடியில் இருந்து சன்னமாய் ஒரு குரல் வந்தது. அலறி எழுந்துவிட்டேன். ஒருவன் என் காலுக்கு அருகில் டேபிள் காலோடு விலங்கிடப்பட்டு வெறும் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான். ஆண்ட்ரூஸ் "அவன் கிடக்கிறான் நீங்க உக்காருங்க சார்'' என்றார்.

எனக்குக் கீழே, மேலே என எல்லா பக்கமும் பயமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரி வாங்க என்று என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அது புதுப்பேட்டைக்குள் அவர் சொல்கிற சந்துகள் வழியாக நுழைந்து அவர் நிறுத்தச் சொன்ன வீட்டின் முன்னால் நின்றது. வெளியே இருந்தபடியே "டேய் ரியாஸ்'' என்றார்.

ரியாஸ் என்பவர் வெளியே வந்தார். "டேய் இன்னிக்கு பைக் எதுவும் எடுத்தியா? சார்

பத்திரிகைல இருக்காரு. பைக் காணமாம்..''

"எங்க ஸார்?'' என்றார் ரியாஸ்.

"கமாண்டர் இன் சீஃப் ரோட்ல''

"ஐயோ.. அங்க நான் எடுக்கல ஸார்''

வேறு எங்கு, யார் வண்டியை எடுத்தாய் என்பதை போலீஸ்காரர் விசாரிக்கவில்லை. "உண்மையைச் சொல்லுடா டேய்'' போலீஸ்காரர் விசாரிக்கிறாரா, கெஞ்சுகிறாரா என்று புரியாத தொனி.

"சொல்றனே ஸார்..'' என்று அலுத்துக் கொண்டான். இப்படி நம்பிக்கை இல்லாமல் துருவித் துருவிக் கேட்பது அவனுக்கு வருத்தமாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் திருடன் போலீஸ் விளையாட்டுதான் ஞாபகம் வந்தது.

"பொய் சொல்ல மாட்டான் ஸார்.. '' என்றார் போலீஸ் என்னைப் பார்த்து.

விசாரணை முடிந்துவிட்டது. இப்போது மூவருமாக சேர்ந்து "பைக் எங்கே போயிருக்கும்" என்று வருந்தினோம். மூன்று வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மூவர் ஒரு விஷயத்துக்காக ஒன்றாக வருந்தியது அந்த நேரத்தில் அது மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது.

கிளம்பும் போது "இன்னா பைக் ஸார்'' என்றார் ரியாஸ்.

டி.வி.எஸ். மேக்ஸ் 100 ஆர் என்ற என் வண்டியின் தயாரிப்பின் பெயரைச் சொன்னேன்.

"ஸார் அது இன்னேரம் கடல்ல இருக்கும் ஸார்...''

"கடல்லயா?''

"போட்ல மாட்டினா ஈரமா இருந்தாலும் ஓடுறது டி.வி.எஸ். ஒண்ணுதான்... அதுக்குத்தான் ஸார் இப்ப கிராக்கி. கிடைக்கவே கிடைக்காது ஸார்'' என்று தீர்மானமாகச் சொன்னான்.

நாளைக்கே திருடப் போவது போல நானும் ஆண்ட்ரூஸும் "அப்படியா?'' என்று கேட்டுக் கொண்டோம்.

செவ்வாய், ஜூன் 09, 2009

மெஹர்

"நீங்கள் மதராஸியா?' என்று அவள் கேட்டபோது, "இல்லை நான் தமிழ்நாடு' என்று சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றியது. இப்படியொரு விளக்கம் கொடுத்து அவளுடைய கேள்வியை மறுத்துவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சலீமுடன் காஷ்மீர் வருவது உறுதியானதும் இங்கே எனக்கான ஒரு காதலி பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்று என்னால் எப்படி யோசித்திருக்க முடியும்? ஒரு தேசத்தின் இரு எல்லையில் பிறந்தவர்களுக்கு ஏற்படப் போகும் பிணைப்பை நினைத்தபோதே சிலிர்த்தது. ஒருவாரம் கல்லூரி விடுமுறை என்ற காரணத்தால்தான் வந்தேன். இங்கு வருவதற்கு வேறு ஒரு காரணமும் எனக்கு இருக்கவில்லை. சலீமுக்கு மிகப்பெரிய பூ வனம் சொந்தமாக இருந்தது. அதில்தான் நான் மெஹரைச் சந்தித்தேன். கை நிறைய பூக்களோடு அவள் அந்தப் பூவனத்தில் இருந்தாள். சலீம் என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். செக்கச் சிவந்த அவளுடைய முகத்தில் கரிய இமைகளோடு அந்த விழிகளைப் பார்த்தேன். வியப்பும் வினாக்களும் பொதிந்து கிடந்த அபூர்வமான கண்கள்.
பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் மிகச் சிறந்த யோசனை ஒன்று அப்போது தோன்றியது. நாம் இங்கேயே தங்கிவிடலாமா, அல்லது அவளை அழைத்துச் சென்றுவிடலாமா?.. படபடவென அவள் இமைச் சிறகு அடித்துக் கொண்ட அந்த நொடியில் மிக இயல்பாக ஏற்பட்ட யோசனை அது.
காஷ்மீரில் சம்பிரதாயமான சில நடவடிக்கைகளை செய்ய வேண்டியிருந்தது. அங்கிருக்கிற தால் ஏரி, ரோஜா தோட்டம், அரசு வனப் பூங்கா, படகு சவாரி, ஹூக்கா என.. ஆனால் எனக்கு மெஹர் இருக்கும் இடத்தைவிட்டு அதிகதூரம் விலகியிருக்கும் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. சலீம் காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் எனக்குச் சாதாரணமாக இருந்தன. பனித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், ஸ்வெட்டர் போட்ட மனிதர்கள், ஆவி பறக்கும் ஆனால் சூடாக இல்லாத டீ... எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தது. "மோதிலால் நேரு படித்த பள்ளி இதுதான்' என்றான்.
எல்லோரும் எங்காவது படிக்கத்தானே செய்கிறார்கள்? நானும் சலீமும் இப்போது தில்லிக்கு வந்து படிப்பதுமாதிரி. "இது எந்தப் பிரபலமும் படிக்காத பள்ளிக்கூடம்' என ஒன்றைக் காட்டினாலாவது ஆச்சர்யப்பட்டிருப்பேன். புத்தி பேதலித்துதான் போய்விட்டது எனக்கு. அவன் மெஹர் படித்த பள்ளியைக் காட்டியபோது அதை ஆச்சர்யமாகவும் தவிப்புடனும் பார்க்கத் தவறவில்லை. "தினமும் இந்தப் பள்ளிக்குத்தான் போவாளா?' என்ற அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு சலீம் பார்த்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வெட்கத்தால் திக்கிப் போனேன். மேற்கொண்டு இது போன்ற உளறல்களைத் தவிர்க்க நான் அங்கிருந்த அத்தனை நாளும் படாத பாடுபட்டேன்.
எனக்கு ஏற்பட்ட மாதிரி மெஹருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவளை வசீகரிக்கக் கூடிய சிறந்த அம்சம் எதுவும் என் தோற்றத்தில் இல்லை. அவளுடைய அழகின் முன்னால் எனக்கு இவ்வளவு நாளாய் இருப்பதாக நினைத்திருந்த திறமையும்கூட துச்சமாக இருந்தது. சலீம் என்னை அறிவாளியாகப் போற்றிப் பழகி வருகிறான். அதற்காக நான் அவள் தங்கைக்கு அறிவாளியாகத் தோன்ற வேண்டுமா என்ன? அவள் மீது காதல் கொள்வதற்கு என்னிடம் என்னதான் தகுதி இருக்கிறது என்று தத்தளித்தேன். அவளோ தேவதையாகத் தோன்றினாள். கவிஞர்கள் பொய்யாக வர்ணிக்கவில்லை என்பதைச் சத்தியமாக இதோ என் இருபத்தி இரண்டாவது வயதில்தான் முதல் முறையாக ஏற்றுக் கொள்கிறேன். அவளைச் சுற்றி எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. பெரும்பாலும் எனக்கு எதிர்பட்ட நேரங்களில் அவள் கருப்பு அங்கி அணிந்திருந்ததால் நான் அவள் விழிகளை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் துடித்தேன். ஆனால் ஒரு வினாடியில் பத்தில் ஒரு பகுதி நேரம்கூட அவள் விழியை நான் பார்க்க முடிந்ததில்லை.
பூர்வீகமான பழைய வீடு. பூந்தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்தது. மெஹர், அவளுடைய அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் பின் கட்டில் இருந்தனர். சலீமின் அறை முகப்பிலேயே இருந்தது. அதிலேதான் நானும் இருந்தேன். வந்த மூன்றாம் நாள்தான் அவள் "நீங்கள் மதராஸியா?' என்று கேட்டது. ஆனால் நான் அந்த வாய்ப்பை அப்படியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? ஏதாவது முக்கியமான ஒரு சொல்லை அந்த நேரத்தில் நான் பதிலாகத் தந்திருக்க வேண்டாமா? எனக்கு அறிவு அவ்வளவுதான். காதலின் தெய்வீகத்தைச் சுருக்கமாகச் சுண்டக் காய்ச்சிய "ஒரு சொல் கவிதை' ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். தமிழ்நாடு என்று திருத்துவதுதான் அத்தனை முக்கியமா? அவளுக்குத் தமிழ்நாடு எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூட அத்தனை உறுதியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. சரி என்று தலையசைத்து... தலையசைத்தாள் என்று சொல்ல முடியாது.
சரி என்றது போல ஏதோ ஒரு எதிர்வினை அவளிடம் வெளிப்பட்டது. "பேச்சுக்குக் கேட்டேன்... இவ்வளவு உறுதியாக எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்ற எள்ளல் பாவனை போலவும் இருந்தது. அடுத்த நாள் அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் காலடி ஓசையை நான் சுலபமாகக் கணிக்கக் கூடியவனாக மாறியிருந்தேன். அவளது குரலும்கூட எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. மொழி புரியவில்லை. ஆனால் அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். அது இசையின் ஒரு வடிவம்.
நீங்கள் மதராஸியா என்பதை அவள் எனக்காக இன்னொருதரம் சொல்வதாக இருந்தால் அதை ஒலி நாடாவில் பதிவு செய்து வைத்துக் கொள்ளச் சித்தமாக இருந்தேன். அல்லது அது போல ஏதாவது வேறு ஒரு வார்த்தை என்னிடம் பேச வேண்டியிருந்தால் அதை...
ஐந்தாவது நாள் அவளைத் தோட்டத்தில் பார்த்தேன். பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். பூக்கள் அவளால் பறிக்கப்படுவதை எதிர்பார்த்துக் கிடப்பதை நான் பார்த்தேன். அந்த விரல்கள் பூக்கள் பறிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவானவை போல இருந்தன. மிக நளினமான, மென்மையான விரல்கள். அது அசைவது வழக்கமாக எல்லோரது விரல்களின் அசைவு போல இல்லை. பூக்களுக்கும் அந்த விரல்களுக்குமிடையே சிறிய உடன்பாடு இருப்பதாகத் தோன்றியது. இல்லையென்றால் அத்தனை மென்மையான விரல்களால் அந்தப் பூக்களைப் பறித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். பூக்கள் தானாகவே தங்களை அவளிடம் வழங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய விரல்களை நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிற வாய்ப்பு கிடைத்தது. சலீம் கடைக்குப் போயிருக்கிறான் இப்போது வந்துவிடுவான் என்ற தகவலை இந்தியில் சொன்னபடி அவனுடைய அம்மா தேநீர் கோப்பையை என்னிடம் கொடுத்தார். ""உன் அம்மா, அப்பால்லாம் மதராஸ்லதான் இருக்காங்களா?'' }இதுவும் இந்தியில். மற்றபடி அவர்கள் வீட்டில் எப்போதும் உருது பேசினார்கள். சாப்பிடும்போதும் அவர்கள் வரை உருதிலும் சப்பாத்தி வேண்டுமா என்பது போன்றவற்றை என்னிடம் இந்தியிலும் பேசினார்கள்.
ஆறாவது நாள்...
அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று பார்த்து தூர்தர்ஷனின் மதிய ஒளிபரப்பாக ஒரு பாடாவதி தமிழ்ப் படத்தைப் போட்டிருந்தார்கள். ஆனாலும் அப்போது அதை நான் இப்போது போல பாடாவதி படம் என்று நினைக்கவில்லை. 80 களில் அதை வரம் போல பார்த்தேன். அசாமி படம் போட்டாலும் அதை நகராமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.
மெஹர் வந்து அண்ணன் இல்லையா என்று கேட்டுவிட்டு அதற்கான பதிலை அறையில் தேடித் தெரிந்து கொண்டு புறப்பட்டாள். அண்ணன் வந்ததும் சொல்கிறேன் என்ன விஷயம் என்றேன்.
"இல்லை எழுதுவதற்கு பேனா வேண்டும், அதற்காகத்தான்'' என்றாள்.
அவளுடைய சிவந்த உதடுகள் அந்த வார்த்தைகளை எப்படித் தயாரிக்கின்றன என்று ஆழ்ந்து பார்த்தேன்.
"என்னிடம் கேட்டால் தரமாட்டேனா?'' என்று என் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொடுத்தேன்.
பெண்கள் நாணத்தால் கால் விரல்களால் தரையில் கோலமிடுவது பொது அம்சம் போலிருக்கிறது. அவள் பாதங்களில் மிளகாய்ப் பழச் சிவப்பில் மிளகாய் போலவே மருதாணி அலங்காரம். பேனாவை வாங்கிக் கொண்டு "ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றாள்.
என்னால் தகுந்த பொய்யைத் தயாரிக்க முடியவில்லை. உண்மையையும் சொல்ல முடியவில்லை. தலையிறங்கி நின்றேன். நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லையே... சாதாரணமாகத்தான் பார்த்தேன் என்று சொல்ல நினைத்தேன். அதைச் சொல்வதற்கு எனக்கு இந்தியில் புலமை போதாது என தயங்கினேன்.
காஷ்மீரில் இருந்து ஏழாம் நாள் நானும் சலீமும்தான் புறப்படுவதாக இருந்தோம். மதப் பிரச்சினை முற்றிக் கொண்டிருப்பதாகக் கூறி என்னை மட்டும் பாதுகாப்பாக டாக்ஸி பிடித்து அனுப்பி வைக்க முடிவெடுத்தான்.
தயாராக இருக்கச் சொல்லிவிட்டு டாக்ஸிக்கு ஓடினான். அவனுடைய அம்மா அந்த நேரத்திலும் குங்குமப் பூ, ஸ்வெட்டர், பாதாம் இருந்தால் வாங்கி வா என்றார்கள். சலீம் சற்று நேரம் நின்றான். "கடையெல்லாம் அடைத்துவிட்டார்கள்' என்ற தகவலைச் சொன்னான். "எங்காவது இருக்கிறதா பார்' என மெஹரும் "எதற்கு அதெல்லாம்?' என நானும் ஒரே நேரத்தில் சொன்னோம். எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.
மெஹர் என்னைவிட மூன்று வயதாவது இளையவளாக இருக்கக் கூடும். ஆனால் அவள் பார்வையில் என்னைப் பணிய வைத்துவிடும் மிடுக்கு இருந்தது. "மெஹர் சொல்கிறபடியே செய்' என்று சலீமை அழைத்துச் சொல்லிவிடுவேன் போல இருந்தது. நல்லவேளையாக அப்படி நான் சொல்வதற்குள் சலீம் அங்கிருந்து போய்விட்டான்.
நான் துணிகளை எல்லாம் சுருட்டி பைக்குள் சொருகிவிட்டு, தோட்டத்தில் போய் நின்றேன். காஷ்மீரையும் மெஹரையும் அப்படியே மனதுக்குள் பருகிவிடவேண்டும் என்று பரபரத்தது.
உடனே ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல இருந்தது. புகையோடு சேர்த்து நினைவுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் அரிய அனுபவம். பாக்கெட்டைத் துழாவிய போது சிகரெட் மட்டும் இருந்தது. தீப்பெட்டி? அடடா... சலீம் வருவதற்குள் சிகரெட் குடித்தால்தான் நான் மெஹரையும் காஷ்மீரையும் மனதுக்குள் பருக முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. ஐயோ நான் எங்கே போவேன்? சாலைக்கு மறுபுறம் ஓடி தீப்பெட்டி வாங்கிக் கொண்டு வந்து புகைக்கலாம் என்றாலும் கடைகளை அடைத்துவிட்டார்கள் என்கிறார்களே? சலீம் வந்துவடுவானோ என்ற பயமும் சூழ்ந்தது. பதட்டம்... என் நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால் சிகரெட்டின் மூலம் அது சாத்தியமாகும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவறவிடக் கூடாதல்லவா?
யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி அப்போது என் வாழ்வில் நடந்தது. வாயில் சிகரெட்டுடன் நான் பாக்கெட்டுகளைத் துழாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளே வந்தாள். அவள் கையில் தீப்பெட்டி இருந்தது.
"ஒரு நாளைக்கு எத்தனை?'' என்றாள் கிண்டலாக. நியாயமான உண்மையான பதிலைச் சொல்வதற்காக நான் மனதில் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் பதில் சொல்வதற்குள் அவள் "உங்களுக்குத் தங்கை இருக்கிறாளா?'' என்றாள். தலையசைத்தேன். "எத்தனை பேர்?'' என்றாள். "மறுபடியும் எண்ண ஆரம்பித்துவிடாதீர்கள்'' என்று சிரித்துக் கொண்டே ஓடினாள்.
வாழ்நாளெல்லாம் நான் காதலித்து மகிழ எனக்கான முகம் அது என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் கேமிரா இல்லாமலேயே அவள் முகத்தை என் கண்களால் விழுங்கிக் கொண்டேன். டேப் ரிக்கார்டர் இல்லாமலேயே அவளுடைய குரலை என் காதுகளால் பதிவு செய்து கொண்டேன். கண்களும் காதுகளும் எவ்வளவு முக்கியமானவை என்பது அந்தக் கணத்தில் எனக்கு வலுவாகப் புரிந்தது. என்னுடைய கண்களும் காதுகளும் தவம் செய்தவை என்று தோன்றியது. முக்கால் நிமிட நேரம் நாங்கள் இருவரும் பேசியிருப்போம். ஆனால் அது பொக்கிஷ நிமிடமல்லவா? யோசித்துப் பாருங்கள்.. நமக்குச் சற்றும் தேவையற்ற பேச்சை நாம் நாளெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிரில் இருப்பவர் பேசுகிறாரே என்பதற்காக நாமும் பேசுகிற பேச்சா இது? ஒரு நாளில் நாம் ஆத்ம சுத்தியோடு எத்தனை வார்த்தை பேசுகிறோம்? தினம் ஒரு வார்த்தையாவது தேறுமா? எல்லாமே யாரையோ வசை பாடுவதற்காக, தேவைக்கு அதிகமாகப் புகழ்வதற்காக, ஒருவர் பேச்சை ஒருவர் விஞ்சி நிற்பதற்காக, கூழைக் கும்பிடு போடுவதற்காக... எல்லாமே குப்பை வார்த்தைகள்.
மெஹர் என்னிடம் பேசியவை இரண்டு ஆத்மாக்களின் கோடி வாக்கியங்களின் சுருக்கம். அதை வேறு வார்த்தைகளால் விவரித்து இட்டு நிரப்பவும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் கோடி வாக்கியங்களை விஸ்தரிப்பது மொழிகள் சொல்லும் சொற்களால் சாத்தியமில்லை என்று தோன்றியது. அது மனதின் மொழி. அதாவது சம்பந்தபட்ட எங்கள் இருவரின் மனதின் மொழி. ஒருவேளை மெஹரால்கூட இது முடியுமா என்று தெரியவில்லை. என் ஒருவனுக்கான மொழி. அதே போல அந்த முகம். அது என் வாழ்நாளுக்கெல்லாம் போதுமானதாக இருந்தது.
டாக்ஸி புறப்படும்போது சலீமின் அப்பாவுக்குப் பின்னால் அவளுடைய முகம் வழியனுப்பியது. அதில் இன்னும் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ வார்த்தைகள் ஏக்கத்தோடு நின்றன.

சனி, ஜூன் 06, 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் இன்று காலை நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்குச் சென்றுவந்தேன். இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்தபோது தினமணி அலுவலகத்தில் என்னைச் சந்தித்துவிட்டுப் போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவசர அவசரமாக இரண்டு முறை சந்தித்துக் கொண்டது நிலையாமையை வலிக்க வலிக்க உணரவைக்கிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.

வெள்ளி, ஜூன் 05, 2009

தகவல்

வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது. இதுவும்கூட வழக்கமான ஒன்றுதான். இது எல்லாமே முருகனுக்கான வழக்கம் பற்றியது. அவன் அலுவலகத்தில் கெடுபிடி அதிகம். ஒரு ஜெர்மன் நிறுவனத்துடன் முருகன் வேலை பார்க்கும் அலுவலகம் ஒப்பந்தத்தில் இருந்தது. அதற்காக அதனுடைய வேலை நேரம் முதற் கொண்டு எல்லாமே சராசரி இந்த அலுவல் நேரங்களுக்கு மாறுபட்டிருந்தது. காலை ஏழு இருபத்தெட்டுக்கு அவனுக்கான அலுவல் நேரம் தொடங்கும். நான்கு முப்பத்திரண்டுக்கு வெளியே அனுப்புவார்கள். ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்று பணியாளர்களுக்குச் சுட்டிக் காட்டத்தான் இந்த ஏற்பாடு.

"உச்சி வெயில்ல எங்கடா கிளம்பிட்டே?', "விளக்கு வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்'.. என நேரத்தைக் குத்து மதிப்பாகச் சொல்கிற குடும்பச் சுழலில் அவன் இந்த ஏழு இருபத்தெட்டு விஷயத்தை காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் என்றுதான் சொல்ல முடிந்தது. அவர்களும் அதை எட்டு மணிக்குள் என்று புரிந்து வைத்துக் கொண்டு சாப்பாடு தயார் செய்வதையோ, முருகனை தயார் செய்வதையோ செய்து வந்தனர். வீட்டுக்கு நிலைமையை விளக்குவது சிரமம் என்று முருகனுக்குத் தெரியும். அதனால் ஆபிஸில் புரிந்து கொள்வார்கள் என்று அவனாக எதிர்பார்த்தான். அதாவது அவன் ஐந்து- பத்து நிமிடங்கள் தாமதமாக வருவது காலப் போக்கில் அவர்களுக்குக் குற்றமாகத் தெரியாமல் போய் பரிதாபத்துக்குரியவனாக எண்ணுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவனைப் பொருட்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஒரு மின்னணு எந்திரத்திடம் இருந்தது. அவனுடைய கட்டைவிரல் ரேகையின் மூலம் அவனுடைய வருகைப் பதிவேற்றம் நிகழ்த்தப்பட்டது. விநாடி சுத்தமாக இருந்தது அந்தப் பதிவு. நான்கு தாமதங்களுக்கு ஒரு முறை அவனுக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்தது அது. இப்படியாக அவனுக்கு மாதத்துக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டபோது அம்மட்டில் பிரச்சினைகள் ஓய்ந்தது என்று சந்தோஷம்தான்பட்டான். வீட்டில் சம்பளமே அவ்வளவுதான் என்று சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பொறுத்தவரை முருகனுக்கு அவ்வளவுதான் சம்பளம் தரமுடியும் என்று நம்பினார்கள். அலுவலகத்திலும்தான்.

அன்றும் முருகன் தன் இடது கட்டை விரலைப் பதித்தபோது இரண்டு நிமிடம் தாமதம்தான். நாளையில் இருந்து ஆறே கால் மணிக்கு வரும் பேருந்தைப் பிடித்தால்தான் சரி பட்டு வரும் என்பதையும் வழக்கம்போல நினைத்துக் கொண்டான்.

மூன்றாவது மாடியில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட டிபன் பாக்ஸ் ஸ்டேண்டில் சாப்பாட்டை ஒழுக ஒழுக வைத்துவிட்டு, சில்லென்று தண்ணீர் பிடித்துக் குடித்தான். அவனுக்கான பிரத்யேக ஆடையை எடுத்து அணிந்து கொண்டான். மஞ்சள் நிற பருத்தித் துணியில் எல்லார் மேசை, நாற்காலி, கணினிகளைத் துடைக்க வேண்டும். எட்டு மணிக்கு இவன் துடைத்து வைத்தவற்றை அழுக்காக்குபவர்கள் வருவார்கள். அதனால் மேஜையைத் துடைக்கும்போது அதற்கான நாற்காலியில் அமர்ந்து கொள்வது, அப்படியே கிர்ர் என ஒரு சுற்று சுற்றுவது எல்லாம் செய்வான். அறையில் கேமிரா பொருத்தியிருப்பதைச் சொன்ன பிறகு அப்படி செய்வதில்லை. கேமிரா எதிரில் வரும்போது சட்டென அடக்கமான- ஒழுக்கமான- பரிதாபமான முகத்தை எதேச்சையாக காட்டுவதுபோல காட்டுவான். யாரோ உயர் அதிகாரியின் பார்வையில் பட்டு தன் அடக்கத்துக்கும் பரிதாபகரமான தோற்றத்துக்கும் இரக்கம் சுரந்து அது சம்பள உயர்வாக மாறும் என்பது அவன் ஐந்தாண்டு கனவு. தன் விசுவாசம் கேட்பாரற்றுக் கிடப்பதாக அவனுக்கு வருத்தம் இருந்தது. மேஜையைத் துடைக்கும் போது அதிலிருந்த துண்டுக் காகிதங்களைத் தன் பிரத்யேக ஆடையில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பேப்பர்களைப் பச்சைக் கூடையிலும் பிளாஸ்டிக் உறைகளை மஞ்சள் கூடையிலும் போட வேண்டும்.

அடுத்து என்ன செய்வது என்று கிழக்கு பக்க ஜன்னலோரத்தில் நின்று யோசித்தான். அங்குதான் பெரிய மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. கொஞ்ச நேரம் நின்றாலும் தெரியாது. ஜன்னலை ஒட்டிய தெருவில் ஒரு பையன் இரண்டு கையையும் மேலே தூக்கியபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். கைகளை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஓட்டுவதைவிட சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்து ஓட்டுவதுதான் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் கஷ்டப்பட்டு அப்படி செய்வது யாருக்கும் பலனின்றி போவதோடு மற்றவர்களுக்கு உபத்திரவமாகவும் போய்விடும் போலவும் இருந்தது. அதாவது அவன் யார் மீதாவது இடித்துவிடக் கூடும். போன வாரத்தில் ஒருநாள் அந்தப் பையன் இதே போல வந்தான். அவனைத் திடுக்கிட வைத்து அனுப்பினான் முருகன். திடுக்கிட வைத்த பின்பு அந்தப் பையன் சைக்கிளை ஒழுங்காக ஓட்டிச் செல்ல ஆரமம்பித்தான். அந்தப் பையன் தெருமுனை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தான். முருகன் போன வாரம் போலவே சட்டென அவனைசலனப்படுத்த ஆசைப்பட்டான். பாக்கெட்டில் துழாவிய கையில் கிடைத்த பேப்பரைச் சுருட்டி பையனை நோக்கி எறிந்தான். அது பையன் தலைமீது விழுந்ததா என்று எட்டிப் பார்த்தான். பையன் காகிதம் வந்து விழுந்த திசையை திடுக்கிடலோடு பார்த்துவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான். முருகனுக்கு தன் பொருட்டு உலகில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மகிழ்ச்சி பொங்கியது. அப்படி இருந்தவனை இப்படி ஆக்கிய சந்தோஷம். கீழே வந்து அந்தந்த அறைக்கான டேபிள் டாப் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு போய் வைக்கத் தொடங்கினான்.

நாள் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருந்தது.

பதினோரு மணி வாக்கில் அவனுடைய ஹவுஸ் கீப்பிங் துறை கண்காணிப்பாளர் அழைத்தார். இடுக்கான ஒரு அறை. வெளிச்சம் குறைவு. அங்கிருந்த பீரோவுக்கு சில ஃபைல்களும் ஏராளமான டாய்லட் கிளினிங் அமில பாட்டில்களும் வாசனை தரும் பொருள்களும் பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறைமுழுதும் அவற்றின் கலவையான மணம் சூழ்ந்திருந்தது. பெரும்பாலும் அந்த அறையிலேயே இருப்பதால் அவர் மீதும் அந்த வாடை பரவியிருந்தது.

"எத்தனை மணிக்கு வந்தாய்?'' என்றார்.

முருகன் தலையைச் சொறிந்தான். சரியான நேரத்துக்கு வரவில்லை என்பதை அப்படித் தெரியப்படுத்தினான். கண்காணிப்பாளர், கடுமையான முகத்தோடு இருந்தார்.

"வந்ததும் என்ன செய்தாய்?''

"எல்லா அறை மேஜை, நாற்காலியையும் துடைத்தேன்''

"அப்புறம்?''

"தண்ணீர் குடுவைகளை...''

"அதற்கப்புறம்?''

எந்த மேஜையாவது சுத்தமாக இல்லை என்று புகார் வந்திருக்கக் கூடுமோ? கணினி விசைப்பலகையின் கீழே எங்காவது தூசு தப்பித்திருந்திருக்கக் கூடும்.

"உங்கள் வீடு எங்கிருக்கிறது?''

சொன்னான். முழு முகவரியையும் எழுதிக் கொண்டார்.

"போன் நம்பர் இருக்கிறதா?''

"இல்லை. தம்பியிடம் இன்னொரு செல் போன் இருக்கிறது''

அந்த நம்பரை முகவரிக்குக் கீழே குறித்துக் கொண்டார்.

"எல்லாத்தையும் சுத்தமாகத்தான் துடைத்தேன்'' முருகன் சொன்னதைக் கவனித்தில் கொள்ளாது, ""நீ வேலை எதுவும் செய்ய வேண்டாம். ஓய்வறையில் இரு'' என்ற கண்காணிப்பாளரின் குரலில் அவனுடைய ஓய்வு முக்கியமானதாகத் தெரியவில்லை.

டாய்லட்டுகளுக்கு பெனாயில் உற்ற வேண்டிய நேரத்தில் எப்படி ஓய்வெடுப்பது என்று முருகனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது.

ஓய்வறை என்பது பணியாளர்கள் திடீர் சுகவீனம் அடைந்தால் சற்றே படுத்திருக்க சில மரப் பலகைகள் அடிக்கப்பட்ட கூடம். அங்கே கிடந்த பழைய தினத்தாளை மரப் பலகை மீது விரித்துப் படுத்தான். ஒரே ஓரு மின் விசிறி தலைக்கு மேல் இருப்பதை வெகு நேரம் கழித்தே கவனித்தான். அதைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்த கணத்தில் ஒரு பணியாள் வந்து மனிதவள அதிகாரி அழைப்பதாகச் சொன்னான். அவர் இருப்பது இரண்டாவது மாடி. அந்த அறையைத்தான் தாம் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்று தீர்மானித்து போனதும் மன்னிப்பு கேட்கத் தயாராக அவர் அறைக்குள் நுழைந்தான்.

"காலையில் வந்ததும் என்ன செய்தாய்?'

"இனிமே சுத்தமா துடைச்சுவிட்டிர்றேங்க''

"கேட்டதுக்கு பதில் சொல்''

கண்காணிப்பாளரிடம் சொன்ன தகவலை மறுபடி சொன்னான். கண்காணிப்பாளர் போலவே இவரும் திரும்பத் திரும்பக் கேட்டார். அவர்கள் தாம் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதைத் தெளிவுபடுத்தினால் அந்தச் சரியான வாக்கியத்தைச் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்பதுதான் முருகனின் சிந்தனையாக இருந்தது.

"உன் தம்பிக்கு நீதான் செல் போன் வாங்கித் தந்தாயா?''

இந்தக் கேள்விக்கு "எப்படித் தெரியும் என்பதா?, ஆமாம் என்பதா' என்பதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது முருகனுக்கு. அந்த முகக் குறிப்பு மனித வள அதிகாரிக்கும் புரிந்தது.

"சரி. என்ன விலை'' அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.

அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை என்று கருதுபவன்தான் முருகன். ஆனால் அதிகாரிகளுக்கு இப்படியெல்லாம் கேட்பதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று தத்தளித்தான். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்பதற்கு அவனுக்கு நா எழவில்லை. அதனால் அதிகாரி கோபமடைந்துவிடக்கூடும் என்பது அவன் யூகம்.

அந்த யூகத்தினூடே அதிகாரிக்குக் கட்டுப்படவில்லையாயின் அது நம் வேலையைப் பாதிக்குமா என்பதையும் யோசித்தபடியே விலையைச் சொன்னான்.

"உன் சம்பளத்துக்கு இந்த விலை கட்டுபடியாகுமா? வீட்டில் வேறு யார் சம்பாதிக்கிறார்கள்?''

"நானும் இந்த மாதத்திலிருந்து தம்பியும்''

"அப்படியானால் போன மாதம் வரை நீ மட்டும்தான்'' }இப்படித் தெளிவாகக் கேட்பதின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமும் அதைத்தானே சொன்னோம், நாம் சொன்னதை அவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி ஏன் திரும்பச் சொல்கிறார்கள் என்பதும் முருகனுக்குப் புரியவில்லை.

"பைக் வாங்கியிருக்கிறாயா?''

"மாதத் தவணை... அம்மா வளையலை வைத்து... தம்பிதான்... '' அதிகாரி அனைத்தையும் குறித்துக் கொள்வதைப் பார்த்து ஓர் அசட்டு தைரியத்தில் "எதுக்கய்யா கேட்கிறீங்க?'' என்றான் மெதுவாக. அது அதிகாரியின் காதில் விழாமல் இருந்தால் நல்லது போல இருந்தது அந்தக் குரலின் வலிமை. அதிகாரியும் அவன் கேட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது முருகனுக்கு. ஏசி அறை அதிக குளிர்ச்சியுடன் இருந்தது. அதிகாரியிடம் அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்டுவிட்டது சரியா, தவறா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மணிக்கு மேல் பொது மேலாளரைப் பார்க்கும்படி கூறிவிட்டு வெளியே செல்லச் சொன்னார். பொதுமேலாளரைப் பார்க்கும்வரை வேலை செய்யலாமா கூடாதா என்று யாரும் கட்டளையிடவில்லை. என்ன நடக்கிறது, எல்லா பணியாளரையும் இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாரிப்பது வழக்கம் என்று பதில் சொல்வார்களா? நம் வேலையில் ஏதாவது குற்றம் கண்டார்களா? ... அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் தம்மால் யோசிக்க முடியாது என்பது தெரிந்திருந்தாலும் நாம் நினைப்பதில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கும் போல தோன்றியது அவனுக்கு. சாப்பாட்டுக்கூடையில் கொட்டிய நிலையிலேயே இருந்த சாப்பாட்டைப் பக்குவமாக வெளியே எடுத்து சாப்பிட்டான். டிபன் பாக்ûஸக் கழுவி பைக்குள் திணித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால், இன்னும் இரண்டு மணி ஆவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டிருக்க வேண்டாமோ?.. ஆனால் அதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது என்பது தெரியாமல்தான் பசியே எடுக்காத நிலையிலும் அவன் சாப்பிட்டான். காத்திருக்கும் நேரம் விரைவாகவும் கடிகார ஓட்டம் மெதுவாகவும் இருந்தது. ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தான். சாலை மரங்களின் இடைவெளியில் வெயில் இருந்தது. ஆள் நட மாட்டம் இல்லை. திரும்பி பணியாளர் ஓய்வறையில் சென்று அமர்ந்தான். பல மணி நேரங்களுக்குப் பிறகே இரண்டு மணி நேரம் கடந்தது.

இப்போது பொது மேலாளரின் கேள்வி நேரம்.

முதல் இரண்டு பேர் கேட்ட கடுகடுப்பும் இல்லாத தொனியில் ஆனால் கூர்மையான பார்வையோடு அவர் கேட்டார். அவருடைய கேள்வி மிக இயல்பான விசாரிப்பாக இருந்தது. அவருக்குத் தமிழும் தெரிகிறதே என்ற ஆச்ச்ர்யம் முருகனுக்கு. அவர் அறையில் இருந்து யாருடனாவது பேசியபடியே வெளியே வரும்போதும், யாருடனோ லிப்ட்டுக்காகக் காத்திருக்கும்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதைப் பார்த்திருக்கிறான். சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது மேனேஜருக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரிவதை பழனியிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான். பழனியைக் காலையிலிருந்தே பார்க்க முடியவில்லை. காலையில் இருந்தே யாரையும் பார்க்க முடியவில்லை. யாரையும் பார்க்காமல் இப்படி அரை நாளை எப்படிக் கழிக்க முடிந்தது? ஏன் யாரும் தம்மைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை?

"திடீர் என்று உங்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது?'' மேலாளரின் கேள்வி வெளியே அலைந்து கொண்டிருந்த முருகனை இறுக்கிப் பிடித்தது.

இரண்டு நாளுக்கு முன் சம்பளம் வாங்கியதால்.. என்ற பதில் மேலாளருக்கு முருகனின் தெனாவட்டு போல இருந்திருக்க வேண்டும். ஏறிட்டுப் பார்த்துவிட்டு குனிந்தார்.

"ஏன் அடிக்கடி ஜன்னல் பக்கம் போனாய் என்ற காரணத்தை மட்டும் உண்மையாக ஒப்புக் கொண்டால் உன்னை விட்டுவிடுவோம்'' என்றார்.

முருகன் உறைந்த நிலையில் இருந்தான். "விட்டுவிடுவதென்றால் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?'

"எதற்கு?'' என்ற வார்த்தை அவனுடைய பயம் காரணமாக உரக்க வெளியானது.

தன் மேஜை அறையில் இருந்து ஒரு கசங்கிய தாளை வெளியே எடுத்தார். அதை மேஜை மீது வைத்து நீவிவிட்டுக் கொண்டே முருகனின் முகத்தைப் பார்த்தார். அந்தக் கசங்கிய தாள் அவருடைய அறையின் மதிப்பைக் குறைத்து விட்டதாகத் தோன்றியது. மேலாளரின் கோட்டுக்கும் தங்க பிரேம் போட்ட கண்ணாடிக்கும் பளபளக்கும் கிரானைட் மேஜை மேற்பரப்புக்கும் அது பொருத்தமில்லாமல் இருந்தது. அந்தக் காகிதத்தை அவன் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருடைய பார்வையில் தெரிந்த காரணத்தால் சுய காரணம் இல்லாமல் பார்த்தான்.

இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்ட வினாடியில் "இது என்ன தெரிகிறதா?'' என்றார்.

அவன் அப்போதும் உண்மையைச் சொன்னான். "தெரியவில்லை''

"இதைக் காலையில் நீ தெருவில் எறிந்திருக்கிறாய்''

"ஓ.. அதுவா சார்..?''

"நீதானே எறிந்தாய்?''

"எப்பவுமே பச்சைக் குப்பைக் கூடையில்தான் போடுவேன். இது வந்து ஒரு பையனை...''

"எத்தனை முறை இப்படி எறிந்தாய்?''

"இரண்டு.. மூன்று தடவை... ''

"உண்மையைச் சொல்.. எத்தனை வருடமாக இது நடக்கிறது?''

மேலாளரின் குரல் மாறிவிட்டது. "போலீஸோடு போய் காலையில் உங்கள் வீட்டில் தேடிப் பார்த்தோம்... வேறு எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்?''

"என்ன சார் சொல்றீங்க?'' ரொம்ப தாமதமாக இந்தக் கேள்வியைக் கேட்டான்.

மேலாளர் பதில் சொல்லவில்லை. காலால் ஏதோ பட்டனை அழுத்தினார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். எப்படி சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது.

முருகனை ஏற இறங்க பார்த்துவிட்டு அமர்ந்தனர்.

"இவன்தானா?'' போலீஸ் அதிகாரி தீர்மானமாகக் கேட்டார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் விளக்க ஆரம்பித்தார். முருகனுக்கு ஆங்கிலம் புரியாது. அதிலும் மேலாளரின் ஆங்கிலம் மிகுந்த வேகம் கொண்டது. பின் தொடர முடியாதது. ஓரிரு வார்த்தையாவது புரியுமா என்று கவனித்தான். தன்னைப் பற்றி தவறாக எதையோ புரிந்து கொண்டு அதை உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.

இந்த நாள் தன் வழக்கமான நாளாக இல்லாமல் போனதற்காக முருகன் வருந்திக் கொண்டிருந்த வேளையில் மேலாளர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான்... "எங்களின் எல்லா அறையும் கண்காணிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் நாங்கள் உடன்படிக்கைப் போட்டிருக்கும் ஜெர்மன் நிறுவனத்துக்கும் அந்த பதிவுகளை அனுப்புகிறோம். அப்படி ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. அவர்கள்தான் இவனின் நடவடிக்கையை எங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சில டெண்டர்கள் எங்களுடைய போட்டியாளர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இவனுடைய சில ஆயிரம் ரூபாய் பேராசைக்காக நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். எப்படி விசாரிப்பீர்களோ, ஆனால் எவ்வளவு ஆவணங்கள் கடத்தப்பட்டுள்ளன, யார் யாருக்கெல்லாம் போயிருக்கிறது என்பது தெரியவேண்டும். இப்போது இவனை விசாரிப்புக்குக் கூட்டிச் செல்லலாம்''

போலீஸ் அதிகாரிகள் விடைபெறும்போது முருகனை நோக்கி "சரி, வா'' என்றனர்.

மேலாளரின் மேஜை கடிகாரத்தைப் பார்த்தான் சரியாக நான்கு முப்பத்திரண்டு.




நன்றி வார்த்தை மே மாத இதழ்

செவ்வாய், ஜூன் 02, 2009

காந்த முள் -1 புதிய தொடர்



சொல்லுங்க சிவகாமி எப்படி இருக்கீங்க?


யாரோ ஒரு பெண்மணி முன் பின் பழகி இருக்காத ஒரு ஆணிடம் "உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்று சொல்வது விபரீதமாகத் தோன்றலாம். நடக்கவே நடக்காத கற்பனை என்று சொல்கிற அப்பாவிகளும் இருப்பார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் அது ஏதோ காதல் விவகாரமாக இருக்கும் என்று நினைப்போம்.



அது காதல் அல்லது காமம் சம்பந்தப்பட்டது இல்லை என்றால் வேறு எப்படி சாத்தியம்?

டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராக இருந்தால் இது சாத்தியம் என்பது புரிந்திருக்கும்.

தொலைக்காட்சியில் சில சினிமாப் பாடல்களையோ காமெடி நிகழ்ச்சிகளையோ விரும்பிக் கேட்க நினைக்கும் பெண்கள், டி.வி. அறிவிப்பாளராகத் தோன்றும் ஆண்களிடம் இப்படி வெளிப்படையாகத் தெரிவிப்பது கலாசாரமாக மாறிவருகிறது.

பாடல் ஒளிபரப்பும் சானல் ஒன்றில் காலையில் நிகழ்ந்த உரையாடல் இது.
"ரொம்ப நாளா உங்கக் கிட்ட பேசணும்னு ட்ரை பண்ணேங்க.. இன்னைக்குத்தான் லைன் கிடைச்சது''
"கிடைச்சுடுச்சில்ல.. உங்க பேரைச் சொல்லுங்க''

"எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஹீ..ஹி''

"உங்க பேரைச் சொல்லுங்க''

"சிவகாமி''

"சொல்லுங்க சிவகாமி, எப்படி இருக்கீங்க?''

"நீங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஹி..ஹி..ஹிக். என் தங்கச்சி பேசணுமாம்.''

"கொடுங்க''

"என் பேர் பானுமதி''

"எங்க இருந்து பேசறீங்க, பானுமதி?''

"வீட்ல இருந்து''

"கடிக்காதீங்க பானுமதி.. எந்த ஊர்ல இருந்து பேசறீங்க?''

"அரக்கோணம்''

"அரக்கோணத்தில விவசாயம்லாம் எப்படி நடக்குது. மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?''

மறுமுனையில் தங்களை விவசாயிகள் என்று நினைத்துவிட்டதில் ஏற்பட்ட பதற்றம்.

"ஐய்யய்யோ நாங்க விவசாயம் பண்ணலை... சர்பத் கடை வெச்சிருக்கோம்''

டி.வி. வர்ணனையாளருக்குத் தாம் செய்த தவறு புரிந்து "ஐ ஆம் சாரி'' எனத் துடிக்கிறார்.

"எங்களுக்கு என்ன பேசறதுன்னே தெரியலை''

"வீட்ல என்ன சமையல்?''

"கிச்சன்..''

"ஓ.. சிக்கனா?''

"இல்ல கிச்சன்''

"சரி அ,தை விடுங்க.. உங்களுக்கு என்ன பிடிக்கும்.. பொழுது போக்கு என்ன?''

"என்ன பேசறதுன்னே தெரியலை.. உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசை''

"உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க?''

"எனக்கு மியுசிக் பிடிக்கும். எங்க அக்காவுக்கு செக்ஸ் ஆடுறது பிடிக்கும்.''
டய்யங்.. டய்யங்.

டி.வி.நிலையத்தில் விபரீதம் புரிந்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள்.

தொலைபேசியில் பேசிய சகோதரிக்கு செஸ் விளையாட்டு பிடிக்கும் என்பது நமக்குப் புரிகிறது. உச்சரிப்பில் நேர்ந்த பிழை.

இந்த மேற்படி உரையாடலைத் தொடர்ந்து ஒரு காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து வேறு ஒரு சிவகாமி (பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளது.) பேசினார்.

மேற்படி பேச்சு உலகமெலாம் பரவும் வகை செய்யப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சு பேசிய அந்த மூவருக்கும் ஏதேனும் பயனளித்திருக்குமா? வர்ணனையாளருக்கு சம்பளம் தருகிறார்கள்.

அதற்காக அவர் பேசுகிறார். மறுமுனையில் பல மாதமாகப் போராடி தம் சொந்தச் செலவில் போன் செய்து என்ன பேசுவதென்றே தெரியாமல் தவித்த சகோதரிகளுக்கு? அது ஒரு உளவியல் திருப்திதான். அவர்கள் மூளைக்குள் நிகழ்ந்த பெருமகிழ்ச்சி விளைவைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினம்தான். உலகமெலாம் இந்த உரையாடலைக் கேட்டார்களே அவர்கள் அடைந்த பயன்? போனில் பேசிய சகோதரிகளின் உளவியலைப் புரிந்து கொண்டபின் அணுக வேண்டிய அடுத்த கட்டம் இது. ஏனென்றால் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற பலர் அடுத்து தம் சமையல் அறை விஷயத்தையும் படுக்கை அறை விஷயத்தையும் (கணவன் மனைவிக்கான நிகழ்ச்சி
தனி) பகிர்ந்து கொள்வதற்காகப் போன் செய்து லைன் கிடைக்காதவர்கள். அல்லது பார்வையாளராக மட்டும் இருந்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள். நிகழ்ச்சியால் யாருக்கு லாபம் என்று யோசிப்பதோ, கேட்பதோ பலருக்குப் பிடிக்கவும் இல்லை. ஏனென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போகிற போக்கில் சானலுக்குப் போன் செய்து பேசினால் வீடு தேடி வந்து உருட்டுக்கட்டையால் அடிப்போம் (வடிவேலுவோ, செந்திலோ அடிவாங்குவதைத்தானே மக்கள் காமெடி என்ற பெயரில் பார்த்து ரசிக்கிறார்கள்?)

என்று ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாகலாம். இன்ட்ராக்டீவ் காமெடி நிகழ்ச்சியாக இருக்கும்.

ஒரு சலிப்பில்தான் இப்படி நான் சொல்கிறேன். ஆனால் அது உண்மையாகிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பழைய முத்தாரம் இதழில் முரசொலி மாறனிடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்.

‘எம்ஜிஆருக்கு நாடாள வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து?'

இது வாசகர் கேட்ட கேள்வி.

முரசொலி மாறன் சலிப்புடன் பதில் சொல்லியிருந்தார்..

‘இப்படியே போனால் ஜெயலலிதாவும்கூட அரசியலுக்கு வந்து நாடாள நினைப்பாரோ என்னவோ?'

சலிப்பின் காரணமாக நாம் தரும் யோசனை எப்படிப் பலிக்கிறது பாருங்கள்?

புதிய தொடர் உயிரோசை.காம் -இல் வெளியாகிறது

வெள்ளி, மே 29, 2009

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்

அறிஞர் அண்ணா எழுதிய இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் என்று நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது. அண்ணாவுக்குப் பேரன் எழுதியதாக நினைத்தால் தப்பில்லை.



தம்பிக்காக...


மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது (1993) தமிழ்ப் பாட வகுப்பில் பேராசிரியர் இ. மறைமலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் தாங்கள் வாசித்த பிடித்தமான புத்தகங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போது எனக்குப் பிடித்தமான புத்தகமாக "இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்'' என்றேன். ஏதோ புத்தகத்தின் தலைப்பு என்று விட்டுவிட முடியவில்லை. தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். "யார் எழுதியது?'' என்றார். "அண்ணா எழுதியது?'' என்றேன்.

"அண்ணாவா?'' என்று வியப்போடு கேட்டுவிட்டு மற்ற மாணவர்களிடம் வரிசையாகக் கேட்டுக் கொண்டே போனார்.

தமிழறிஞருக்குத் தெரியாத ஒரு புத்தகத்தை நாம் சொல்லிவிட்டோம் என்று பெருமிதமாக இருந்தது. எல்லா மாணவரிடத்தும் கேட்டு முடித்துவிட்டு மீண்டும் என்னிடத்தில் வந்தார்.
"எதைப் பற்றி எழுதியிருக்கிறார்?'' என்றார்.

"நெப்போலியன் வாழ்க்கை வரலாற்று நூல்''

"எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது?''

"பதிப்பகம் தெரியவில்லை. தமிழ்நாடு மின்சார வாரிய செயலகச் சங்க ஆண்டுவிழா மலரில் (1972) இது வெளியாகி இருக்கிறது''

"மின்வாரிய மலரா?''

"என் தந்தையார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர்தான் மலரில் அதை வெளியிடக் காரணமாக இருந்தார்' 'என்றேன்.

அண்ணாவின் நூல்கள் பார்வதி பி.ஏ. ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகை, செவ்வாழை, ரோமாபுரி ராணிகள் உள்ளிட்ட நூல்களை புத்தகக் கடைகளிலோ, நூலகங்களிலோ பார்க்க முடிகிறது. திராவிடர் கழகக் கூட்டங்களில் "தீ பரவட்டும்', "ஆரியமாயை', "கம்பரசம்' போன்ற நூல்களின் மலிவுப் பதிப்பைப் பார்க்க முடியும். இது ஏனோ எங்கும் என் கண்ணில் பட்டதே இல்லை. பலருக்கும் இப்படியொரு நூல் அண்ணாவால் எழுதப்பட்டது தெரிந்திருக்கவில்லை.

பதிப்பாளர்களும் இந்த நூல் பெரிய அளவில் விற்பனை ஆகாது என்று நினைத்தோ என்னவோ பதிப்பில் இருந்தே விடுபட்டுப் போயிருந்தது. அல்லது தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு யார் கண்ணிலும் படாமலே போய்விட்டதோ தெரியவில்லை.

இப்போது என் ஆச்சர்யமெல்லாம் இரண்டு.

முதல் ஆச்சர்யம், நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை மின்வாரிய ஆண்டு மலரில் என் தந்தை ஏன் பிரசுரித்தார்?

அதற்கு இப்படியொரு சமாதானம் சொல்லிக் கொள்வேன்.

என் தந்தைக்கு அண்ணாவை மிகவும் பிடிக்கும். நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழில் உதவியாசிரியராக சில மாதங்கள் பணியாற்றிய நேரத்தில் அண்ணாவோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சம்பவத்தைச் சொல்லுவார்.

தனக்கு வைத்த அப்பளத்தை அண்ணா வேகமாகச் சாப்பிட்டுவிட்டதால் தன் இலையில் இருந்த அப்பளத்தை அவருக்குக்

கொடுத்தேன். அண்ணா "ஏன் அப்பளம் பிடிக்காதா?'' என்றார்.
"உங்களுக்குப் பிடிக்கிறதே என்று வைத்தேன்'' என்றேன்.

அண்ணா ரசித்துச் சிரித்தார்.

இதைச் சொல்லும்போது என் தந்தையின் கண்கள் கலங்கிவிடும். அப்படியொரு பிரியம். அவர் படித்த நாளிதழ் எல்லாம் நாத்திகம்,

திராவிட நாடு, முரசொலி மட்டுமே. கல்லூரியில் படித்த காலத்தில் அதை அண்ணா எழுதிய சூட்டோடு இதைப் படித்தவராக என் தந்தை இருந்திருக்கக் கூடும். பசுமரத்தாணியாய் அப்போதே பதிந்துபோய் இருக்கலாம்.

இரண்டாவது ஆச்சர்யம். நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை அண்ணா தம் தம்பிகளுக்கு எழுதியது ஏன்?

நெப்போலியனும் அண்ணாவைப் போல் அதிக உயரம் இல்லாதவர்தான். ஆனால் நிச்சயமாக இந்த நூலை எழுதுவதற்கு அது காரணமாக இருக்காது.

தம்பிகளுக்கோ, அவர் அப்போது எதிர் கொண்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கோ நெப்போலியன் கதை எந்தவிதத்தில் துணைபுரிந்தது.

அடிப்படையில் முழு நேர எழுத்தாளர் அல்ல. அரசியல்வாதி. பேச்சாளர்.

ஆனால் பெரிய வாசிப்பாளராகவும் கிடைத்த அரிய நேரத்தில் எழுதிக் கொண்டே இருந்தவராகவும் தெரிகிறார். அரிய திரைப்படங்களைத் தேடிச் சென்று பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

அவருக்கென்று ஓர் அடுக்கு மொழி நடை வைத்திருந்தார். அது மிடுக்கானது; ஆனால் அதில் அவர் சிக்கிக் கொண்டவராகத் தெரிகிறார். அவர் படித்த மிக உன்னதமான விஷயங்களையும் அந்த நடையில் கொடுக்க முயன்றதால் மலிவாகத் தெரிந்தது மற்றவருக்கு.

கட்சிக்காரர்களுக்காக அவர் சற்று இறங்கிவந்து எழுதியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

ஒரு நாள் இரவு. பெங்களூர் ஓட்டல் ஒன்றில் அண்ணா ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஈ.வே.கி. சம்பத் இருக்கிறார்.

சம்பத்துக்கு அண்ணாவின் திராவிட நாடு கொள்கை உறுதியானதுதானா என்ற சந்தேகம். "திராவிட நாடு கொள்கையில் உங்களுக்கு நிஜமாகவே நம்பிக்கை இருக்கிறதா?'' என்கிறார். அண்ணா தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பதிலே சொல்லவில்லை.

இரண்டு மூன்று முறை இதைப் பற்றி கேட்கிறார். அண்ணா பதில் சொல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்.

அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த புத்தகம். அது டி.ஹெச். லாரன்ஸ் எழுதிய லேடி சாட்டர்லீஸ் லவ்வர் என்ற ஆங்கில நாவல்.

திராவிட நாடு கோரிக்கையும் சாதி மறுப்பு கோரிக்கையும் காங்கிரஸ்கட்சி எதிர்ப்பும் பேசி வந்த ஒருவருக்கு லேடி சாட்டர்லீஸ் படிப்பது அவருடைய விருப்பங்களை மீறிய வாசிப்புத் தேடலாகவே இருக்கிறது.

மேடைகளிலே சாக்ரடீஸ், அலெக்ஸôண்டர், வால்டேர், ரூúஸô, ரஷ்ய புரட்சி என்று பேசியவர். உலகின் அத்தனை பெரிய நதிகளையும் பற்றி அவர் ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் பேசியதை என் தந்தை கூறியிருக்கிறார். ஒருமுறை கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன என்கிறார் அண்ணா. மாணவர்களுக்கு தலைப்பு கொடுத்துப் பேசச் சொல்வதாக எண்ணமே இல்லை. ஆகவே ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதையே தலைப்பாக்கி ஒன்றுமில்லை என்பது குறித்து ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார். உலகு தழுவிய பரந்துபட்ட ஞானம் அவருக்கு இருந்தது. அவர் தேடித் தேடி வாசித்த படிப்பாளி.

ஆனால் தமிழக அரசியலில் தொண்டர்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டியதோ மிகச் சொற்பம்தான். சொல்லப்போனால் அவர் தொண்டர்களுக்குத் தனியாகவும் அவருக்காகத் தனியாகவும் செயல்பட்டவராகவே இருக்கிறார். நிறைய கூட்டங்களில் சொற்பொழிவு, கட்சிப் பணி, நாடகப் பணி, திரைக்கதை வசனம், ஓயாத சுற்றுப் பயணம், பத்திரிகைப் பணி எல்லாம் கொண்ட மனிதராகவும் இந்தச் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட ரசனையும் உள்ளவராகவும் அண்ணா இருக்கிறார். அதனால்தான் நெப்போலியன் வாழ்க்கைக் கதையைப் படிக்கவும் அதைத் தமிழில் எழுதவும் அவருக்கு முடிந்திருக்கிறது. எல்லாவுக்கும் மேலாக அதைத் தம்பிக்காக எழுத முடிந்திருக்கிறது.


கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எலினா தீவிலே இறக்கிறான். இந்த இரண்டுத் தீவுக்கிடையில் அவன் கண்ட ராஜ்ஜியங்கள் என்ன பெயரென்ன புகழென்ன?

பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எப்படி பிரெஞ்சு தளபதியானான்? ஜோஸபினைச் சந்திப்பதும் காதலிப்பதும் மணந்த மறுநாளிலேயே இத்தாலி மீது படையெடுத்தது , ரஷ்யாமீது போர்த் தொடுத்து அடைந்த இன்னல்கள் எல்லாம் இருக்கிறது.
ஆனால் இது சரித்திர நாவலா, சரித்திரமா என்பதில்தான் முடிவெடுக்க முடியாத நிலை. சரித்திரக் குறிப்புகள் உள்ளன.

நெப்போலியன் பிறந்த ஊர், பிறந்த ஆண்டு, மணந்த ஆண்டு, முடிசூட்டிக் கொண்ட ஆண்டு, கொள்கை முடிவுகள், குழப்பங்கள்

எல்லாம் இருக்கின்றன. கூடவே தம்பிகளுக்கு எடுத்துச் சொல்கிற வியாக்யானங்களும் உண்டு. தம்பிகளுக்குப் பிடித்ததே அந்த வியாக்யானங்கள்தான். சரித்திர மாணவர்களுக்கோ இவருடைய வியாக்யானங்கள் அத்தனை முக்கியமில்லை. அவர்களுக்குத் தேவை சரித்திரக் குறிப்புகள்.

அதனால்தான் இந்த நூல் அந்த இரு தரப்பினராலும் போற்றத் தக்க நூலாகவோ புறக்கணிக்கப்பட்ட நூலாகவோ இருக்கிறது இப்போதும்.

தமிழ்மகன்
சென்னை -50
06-11 -2008

கையேடுகளின் நிரந்தர ஆட்சி!

உலகின் எத்தனையோ தத்துவம மரபைப் போலவே திராவிட இயக்க சிந்தனைக்கும் ஆழமான ஒரு தத்துவ தரிசனம் உண்டு. அது இப்போது தடம் மாறி சாதீய மதவாத கட்சிகளோடு தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீர்த்துப் போயிருப்பதாகக் கூறினாலும் அதன் ஆரம்ப குறிக்கோள்கள் வீரியத்தோடுதான் இருந்தன.

"பரத்தியாவதேதடா பனத்தியாவதேதடா' போன்ற சித்தர் சித்தாந்தமும் "சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் சோதியைக் கண்டேனடி' என்ற வள்ளலாரின் சிந்தனையும் பவுத்த சிந்தனை மரபும் ஊறித் திளைத்து விளைந்த ஒரு இயக்க ரீதியான செயல் தத்துவம் இது.

பெண் விடுதலை, தன்மான உணர்வு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, நாத்திகவாதம், இன உணர்வு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுத்தன்மையோடு திராவிட இயக்கம் உருவானது.

மேடைப் பேச்சு, பிரசுரங்கள் மூலமே கட்டப்பட்ட ஒரு இயக்கமாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். உரம் ஏறிப் போயிருந்த இன்னொரு எழுச்சியைப் பிளந்து கொண்டு பிறந்த இந்த இயக்கத்தின் பெரும் பலம் பிரசுரங்கள்தான். சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் எழுச்சி பெற்றிருந்த மக்கள் மத்தியில் தன்னந்தனியராக எழுந்தவர் பெரியார். மிகவும் உண்மையானவராகவும் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும் இருந்ததால்தான் சுதந்திரத்துக்கு மாற்றாகவும் அல்லது சுதந்திரத்தைவிட உடனடி தேவையாகவும் "மக்கள் இழிவு இன்றி வாழ வேண்டும்' என்பதை முக்கியம் என்று அவரால் வலியுறுத்த முடிந்தது.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவருடைய பேச்சில் மக்களுக்கு இன்னமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. சுதந்திர வேட்கைக்கு சமமான ஒரு ஆதரவோடு, எழுச்சியோடு திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய உழைப்பும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்த துணிச்சலும் பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கை உயர்த்தியது.

அவருடைய மிக நேர்மை தொனிக்கும் எளிமையான பேச்சில் மக்கள் ஈர்க்கப்பட்டனர். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அவரே இருக்க முடியாத சூழலைத் துண்டுப் பிரசுரங்கள் தீர்த்து வைத்தன. அவருடைய பேச்சும் எழுத்தும் சிறிய சிறிய பிரசுர நூல்களாக வந்தன. அது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் படிப்பவரைத் தூப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டாக்களின் நிலைக்குத் தள்ளியது.

அவருடைய சுயமரியாதை பிரசார வெளியீடுகள் மிக மலிவான விலையில் வெளியாகின. மக்களுக்குப் புதிய சிந்தனையை -மாற்று சிந்தனையை - ஊற்றெடுக்க வைப்பதாக அவை அமைந்தன.

"சோதிடப் புரட்டு' என்ற நூலில் சோதிடம் கணிப்பவர்கள் பூமியை மையமாக வைத்து சூரியன் அதைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத ஒரு விஷயத்தை மக்கள் நம்புவது முட்டாள்தனமாக இல்லையா? என்ற நுணுக்கமான கேள்வியை பெரியார் முன் வைத்தார்.

கைரேகை பார்த்து சோதிடம் சொல்வதென்றால் குரங்குகளுக்கும் கையில் ரேகை இருக்கின்றதே, அதற்கும் வேலை வாய்ப்பு, சொத்து வரவு எல்லாம் உண்டா? என்பார்.

மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியை, அவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை கல்வியின் அவசியத்தை அந்தத் துண்டுப் பிரசுரங்கள் செய்தன. ஒரேயடியாக மூடநம்பிக்கை புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் சாதி, மத பிரிவினையால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பிரசுரங்கள் அதிரடி வைத்தியமாக இருந்தன. வேதங்கள் பெண்களை ஐந்தாம் வர்ணமாக பிரிவினை செய்திருப்பதை அவை தோலுரித்துக் காட்டின. திருமண மந்திரங்கள் என்ற பெயரில் உச்சரிக்கப்படும் பிற்போக்குத்தனங்களை மக்கள் அறிந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் வேகமாக நடந்தன.

கலப்பு மணம் என்ற வார்த்தையையே அவர் கிண்டல் செய்கிறார். "நான் என்ன மாட்டுக்கும் மனுஷனுக்குமா திருமணம் செய்கிறேன். மனிதனுக்கும் மனிஷிக்கும்தான் திருமணம் செய்கிறேன். இது எப்படி கலப்பு மணம் ஆகும்' என்ற நியாயமான கேள்வியில் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மறுமணங்களை ஆதரித்தும் தாலி என்ற லைசென்ஸ் அடையாளத்தை நீக்கியும் அவர் மறுமலர்ச்சி செய்தார். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த சடங்குகளை சில ஆண்டு பிரசாரத்தின் மூலம் அவர் ஆட்டம் காணவைத்தார்.

தத்துவவிளக்கம் என்ற அவருடைய சிறிய துண்டு பிரசுரம் வேதங்களும் மதகுருமார்களும் என்னென்ன சொல்லி வந்திருக்கிறார்கள். அதில் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று தோலுரித்தன. அவர் இசை, கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பேசுவதினும் முக்கியமாக சமத்துவத்தைப் போற்றியதால் இவற்றை அவர் தன் வாழ்நாளில் இருந்து தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அன்னா கரீனினாவையோ ஆன்டன் செகாவையோ படிக்காமல் போனது தமிழகத்துக்கு நேர்ந்த இலக்கிய இழப்புதான். ரத்தமும் சதையுமாக உண்மை சொட்டும் அவருடைய நடையில் அவருடைய ஆர்வம் இன்றியே இலக்கியத் தன்மை இருந்தது. எழுத்தாளர் க.நா.சு இவருடைய எழுத்து நடையைச் சிலாகித்திருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.

சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் - மூட நம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்; என்று விமர்சிக்கிறார்.

ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் போன்ற தமிழின் தலைசிறந்த நூல்களாக எண்ணுகின்ற அனைத்தைப் பற்றியும் அவருக்கு இப்படியான கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. மனிதன் சாதி வாரியாக கேவலப்பட்டுக் கொண்டிருப்பதையும் புரோகிதர்களின் புரட்டுகளையும் கண்டிக்காமல் என்ன ரசனை வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். இது குறித்து "தமிழர், தமிழ் இலக்கியங்கள்' என்ற வெளியீடு ஒன்று வெளியாகியுள்ளது.

அவருடைய அறிவு விருந்து என்ற பிரசுரத்தில் "கடவுளும் தண்டிக்கிறான், மனிதனும் தண்டிக்கிறான். கடவுளும் பழி வாங்குகிறான், மனிதனும் பழி வாங்குகிறான். இவையெல்லாம் மனிதன் கற்பித்தவை என்பதாலேயே இப்படி மனித குணத்தோடு இருக்கின்றன' என்கிறார்.

"புரட்டு இமாலய புரட்டு', "நீதி கெட்டது யாரால்?', "காந்தியாரின் படத்தை எரிப்பது ஏன்?', "புரட்சி அழைப்பு', "சுதந்திர தமிழ்நாடு ஏன்?', "பாரத ஆராய்ச்சி' போன்ற பல தலைப்புகளில் வெளியீடுகள் வந்துள்ளன. இந்த வெளியீடுகள் 1930-களின் துவக்கத்தில் இருந்து இப்போதும் .. இன்றைய பிரச்னைகளான இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற தலைப்புகளில் வெளியீடுகள் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடாக வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் தவிர கைவல்ய சாமி, குத்தூசி, அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களின் பேச்சுகள்- எழுத்துகளும் இத்தகைய பிரசார வெளியீடுகளாக வந்திருப்பதைக் காண முடிகிறது.
அறிஞர் அணண்ணாவின் "தீபரவட்டும்', "ஆரிய மாயை' போன்ற பேச்சு வெளியீடுகள் அன்றைய இளைஞர்களுக்கு ஆவேசத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பல பல்வேறு ஆட்சிச் சூழல்களில் தடைசெய்யப்பட்ட நூல்களாகவும் அதனாலேயே அதிகம் பரபரப்புக்கு ஆளான நூல்களாகவும் விளங்கின.

பகுத்தறிவு பிரசார வெளியீடு, திராவிடப் பண்ணை, நாத்திகம் வெளியீடு, பெரியார் மையம், சிந்தனையாளன் வெளியீடு போன்ற பல அமைப்புகளும் இத்தகைய துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன.

ரேடியோ, தொலைக்காட்சி, அலை பேசி, தொலைபேசி, வாகன வசதி, சாலை வசதி, கமம்ப்யூட்டர் தொழில்மமநுட்பம், இண்டர் நெட் போன்றவை அறவே õல்லாத நிலையிõல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில் இந்தத் துண்டுப் பிரசுரங்களின் பங்கு மகத்தானது.

தமிழரின் பேச்சில் எழுத்தில் வாழ்வில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தியிருக்கும் மகத்தான மாற்றம் என்ன வென்றால் இப்போது பக்கத்து மாநிலங்களான ஆந்திரத்திலும் கேரளத்திலும் கர்நாடகத்திலும் நாயுடு என்றும், நாயர் என்றும் ராவ் என்றும் ஆட்சியாளர்களேகூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் சகலருக்கும் கூச்சம் இருக்கிறது. மறைவில் சாதி அதன் வன்மத்தோடு தயாராகக் காத்திருப்பதை மறுக்கவில்லை. ஓட்டுக்கு ஏங்கிகளால் அது எப்படியெல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சாதியை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் காட்டுகிற தயக்கம், சாதி மறுப்பு, மறுமணம் போன்றவற்றில் ஏற்பட்ட சிறிய வெற்றியை இந்த பிரசுரங்கள் சாத்தியமாக்கின. ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த சில மாற்றங்களுக்குப் பின்னும் இந்த காலணா கையேடுகளின் உத்வேகம் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இக் கையேடுகளின் ஆட்சி நிரந்தமானது.

சமரசம் செய்ய வேண்டிய இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெரியார் உதறித்தள்ளியதற்கான கணிப்பையும் இப்போது தெளிவாகவே உணர முடிகிறது.

வெள்ளி, மே 15, 2009

சினுவா ஆச்சுபியுடன் ஓர் ஆப்ரிக்கப் பயணம்!

ஒரு இனம் அல்லது ஒரு மொழி அதன் தொன்மையை எப்படி பறைசாற்றுகிறது?

அதனுடைய ஆழமான இலக்கியச் செறிவு, உணவுப் பழக்க முறைகள், பண்பாட்டு கூறுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓர் இனத்தின் தொன்மை அளக்கப்படுகிறது. கிரேக்க, எகிப்து, இந்திய பழந்தன்மையைப் பார்த்தால் அவற்றுக்கான இதிகாசங்கள், ஆன்மிக வசாரங்கள், அறிவியல் தேடல்கள், உணவு} உடை } அணிகலன் பழக்கங்கள் என சில பொதுத் தன்மையைக் காண்கிறோம். கலாசார ரீதியில் வளர்ந்த ஒரு நாகரிகத்தோடு இன்னொரு நாகரிகத்துக்கு குறிப்பட்ட அளவிலான தொடர்பு இருந்ததைதையும் சில பரிவர்த்தனை இருந்ததையும் பார்க்க முடிகிறது.

ஆனால் ஆதி இன மக்களிடம் இந்தச் சமரசம் இருந்ததில்லை. அவர்கள் சிறிய குழுவாக இருந்தாலும் அவர்களின் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதில் பிடிவாதமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பல நூறாண்டுகளாக அவர்களிடம் அந்த நம்பிக்கைகள் பிடுவாதங்களோடு இருக்கின்றன. முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொள்வது, ஆடையில்லாமல் இருப்பது, தலையில் பறவையின் இறகுகளைச் சொருகிக் கொள்வது என்று அவர்களின் நம்பிக்கை மிகுந்த இயற்கைத் தன்மையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆப்ரிக்க, அமேசான், அந்தமான், ஆஸ்திரேலிய காடுகளில் இன்னமும் இந்த ஆதி இன மக்கள் மனிதச் சமூக உறவுகள் அறுந்து துண்டுச் சங்கிலிகளாக வாழ்வதைப் பார்க்க முடிகிறது. நம்முடைய கி.மு., கி.பி., இரண்டாம் உலகப் போர், 123, நியூக்ளியர் போர் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. நம்முடைய பிட்ஸô,
ரவா உப்புமா எதுவும் தெரியாது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அதே சமமயத்தில் அவர்களுக்கான பிரத்யேக அடையாளங்களோடு உலகில் ஏராளமான இனக்குழுக்கள் உள்ளன.

இந்த ஆதி இனக் குழுக்களின் அடையாளம்? அதன் வேடிக்கையான நம்பிக்கைகள்தான் அதன் தொன்மையின் அடையாளமாக இருக்கிறது.

ஆப்ரிக்க எழுத்தாளரான சினுவா ஆச்சுபி தன் 28 வயதில் எழுதிய சிதைவுகள் (ற்ட்ண்ய்ஞ்ள் ச்ஹப்ப் ஹல்ஹழ்ற்) இப்படியான மூர்க்கத்தனமான நம்பிக்கைகள் கொண்ட ஒர் இனக்குழுவின் கதை.

கதையைப் படிக்க ஆரம்பித்ததுமே ஆப்ரிக்க செம்மண் பூமியில் மலைகளும் மரங்களும் சூழ்ந்த ஒரு பொட்டல் பூமியை மனச் சித்திரமாகப் பார்க்கிறோம். நாவல் நம்மை மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பிக்கிறது. நாமே நாவலின் ஒரு கதாபாத்திரம் போல மாறத் தொடங்குகிறோம். நமக்கு மிகவும் அன்னியப்பட்ட களம்தான். ஆனாலும் மரபார்ந்த நம்முடைய சில நம்பிக்கைகள் நம்மை ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அவர்களுடன் ஒருங்கிணைக்கிறது. நம் கற்பனையில் ஒரு மலைவாழ் கிராமத்தையும் பழங்குடி மக்களையும் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய விவசாய முறை, உணவு முறை எல்லாம் நமக்குப் புரிபட ஆரம்பிக்கிறது. பளீரென்ற ஒரு தருணத்தில் நாம் அந்தப் பொட்டல் காட்டில் நிற்கிறோம். அவர்களின் அனைத்து சம்பிராதாயங்களோம் சடங்குகளோடும் ஏற்றுக் கொண்டு உடனிருக்கிறோம்.

ஒக்கொங்வோ என்ற துணிச்சல் மிக்கவனை நாவலின் முதல் வரியிலேயே அறிமுகப்படுத்துகிறார். அவன் ஒரு மல்யுத்த வீரனை வீழ்த்துகிறான். குழுவே அவனைக் கொண்டாடுகிறது. அடுத்து வேறொரு பிரச்னைக்காக பக்கத்தில் இருக்கும் இன்னொரு இனக் குழுவினருடன் மோதி பணயமாக அங்கிருந்து ஒரு சிறுவனையும் ஒரு இளம் பெண்ணையும் பெற்றுவருகிறார்கள். பெண் யாருக்கோ அனுப்பிவைக்கப்பட்டு என்ன ஆனாள் என்பதுகூட இரண்டாம்பட்சமாகிவிடுறது. அதாவது மாற்றுக் குழுவில் இருந்து பிடித்துக் கொண்டு வரப் பட்டவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. அந்தச் சிறுவனை ஓராண்டு வரை வைத்திருக்கும் பொறுப்பு ஒக்கொங்வோவுடையது. என்ன காரணத்தாலோ மூன்றாண்டுகள் வரை அவனை குழுப் பொறுப்பாளிகள் மறந்துவிடுகின்றனர். அவன் ஒக்கொங்வோவின் வீட்டில் குழந்தைகளுடனும் சகோதரனாகவும் அவனுடைய நான்கு மனைவி


மார்களுடனும் மகனைப் போலவும் பழகிவிடுகிறான்.

இந்த நேரத்தில் ஓராண்டு மட்டுமே ஒக்கொங்வோவின் பராமரிப்பில் விடப்பட்ட சிறுவனைப் பற்றி முடிவெடுக்க குழு கூடுகிறது. அவனை எல்லோரும் சேர்ந்து ஓர் இரவில் உமோஃபியா கிராமத்துக்கு வெளியே அழைத்துச் செல்கிறார்கள். பையனுக்கு தம்மை தன் வீட்டில் அழைத்துச் சென்றுவிட்டுவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிரிந்து வந்த தன் சொந்த சகோதரியையும் தாயையும் பற்றி ஏகப்பட்ட ஆசைகளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். திடீரென்று எல்லோரும் பின் தங்கி விடுகிறார்கள். அந்தத் தனிமை அவனை அச்சமூட்டுகிறது. குழுவில் இருந்த ஒருவன் பெரிய கத்தியை எடுத்து அவனுடைய கழுத்தை வெட்ட பாய்கிறான். சிறுவன் தப்பி ஓடிவந்து தன்னை வளர்த்த ஒக்கொங்வோவை நோக்கி அபயம் தேடி ஓடிவருகிறான். அருகில் வந்ததும் சுலபமாக அவனை வெட்டிவிடுகிறான் ஒக்கொங்வோ.

இதில் எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நம்முடைய நீதி மன்றத்தில் அவர்களைப் பொருத்திப் பார்ப்பது அபத்தம். நம்முடைய (இந்த "நம்முடைய' நாகரீகக் குழுக்கள் என்று சொல்கிற உலகத்துக்கானது) கிராம நீதி மன்றத்தில் யார் கற்பழித்தானோ அவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்கிற தீர்ப்புகளும் பசிக்காகத் திருடியவனைச் சிரச்சேதம் செய்வதும் பிறகொரு காலத்தில் காட்டுமிராண்டித்தனமானதாகக் கட்டம் கட்டப்படும்.

கதைக்கு வருவோம்.

இதே ஒக்கொங்வோ ஒரு கேளிக்கையின் போது தம் இனச் சிறுவனைக் தவறுதலாக உயிர்ச்சேதம் செய்துவிடுகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல் தவறுதலாக நேர்ந்த இந்த விபத்துக்கு அவனை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிரார்கள். ஏழாண்டுகாலம் அவன் தம் இனத்தைப் பிரிந்து வாழ்கிறான்.

இத்தகைய நம்பிக்கைகளும் ஒழுங்கென வகுக்கப்பட்ட ஒழுக்கங்களும் நிரம்பிய பிராந்தியத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் தேவ பிதாவோடு வருகிறார்கள். இரும்பு குதிரை (சைக்கிள்)யில் வந்த ஒரு பாதிரியாரைக் கட்டி வைத்து உதைக்கிறார்கள். ஆனால் இப்படி அறியாமையில் இருக்கும் மக்களை மீட்க ஒருவர் பின் ஒருவராக பாதிரி மார்கள் வந்து சேர்கிறார்கள். தேவாலயம் எழுப்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வேலையும் கல்வியும் புதிய மத அடையாளங்களும் ஏற்படுத்தப்படுகிறது. ஆதி இனக்குழுவின் முதியவர்கள் பாதிரிமார்களையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களையும் எதிர்க்கிறார்கள். ஐரோப்பியர்கள் நீதி அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அதாவது அநீதியாக இருக்கிறது.

நீதிமன்ற ஏவலாளை வெட்டிச் சாய்த்த குற்றத்துக்காக ஒக்கொங்வோ தேடப்படுகிறான். ஆனால் நீதி மன்றக் காவலர்களால் அவனைத் தூக்குமரத்தில் இறந்து தொங்கும் நிலையில்தான் கைப் பற்ற முடிகிறது. அவனை கீழே இறக்குவதற்கு அவனுடைய இன மக்கள் யாருமே வரவில்லை. எந்த இனத்துக்காக அவன் தன் வாழ்நாளெல்லாம் போராடினானோ எந்த இனத்துக்காக உயிரை விட்டானோ அந்த இனத்து மக்கள் அவனை மரத்தில் இருந்து கீழே இறக்கவோ, புதைக்கவோ வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இன வழக்கப்படி தற்கொலை செய்து கொள்வது குற்றம். அது எந்தக் காரணத்துக்காக இருப்பினும். கதை முடிகிறது.

காலனி ஆதிக்கம் அந்த மனிதர்கள் மீது நிகழ்த்தப் போகும் நாகரீகத்தின் திணிப்பு நம்மை திகில் கொள்ள வைக்கின்றன. யேசுவுக்குப் பதிலாக அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிற கடவுளும் ஐரோப்பிய சட்டங்களுக்குப் பதிலாக அவர்களுடைய சட்டங்கள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும்கூட அந்த அச்சத்தின் காரணமாக நினைக்கத் தோன்றுகிறது.

அவர்களை ஜீன்ஸ் பேண்ட் போட வைப்பதும் கேக் சாப்பிட வைத்து தேவாலயத்தில் ஆமென் சொல்ல வைப்பது அவ்வளவு முக்கியமா?

ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை.

கதையின் களத்தில் நாமும் ஒரு மனிதராக கலந்து பிரயாணிக்கிற உணர்வைத் தருவதால் நமக்கும்கூட "உமோஃபியா'வின் உரிமைமீது அக்கறை ஏற்படுகிறது. காலனி ஆதிக்கத்தின் மீது "இனம் புரிந்த' கோபம் ஏற்படுகிறது. நாவலின் வெற்றியாக நான் நினைப்பது அதைத்தான்.

(நன்றி புத்தகம் பேசுது இதழ்- மே 2009)

சனி, மே 09, 2009

மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

மீன்மலர்
நூல் அறிமுகம்
வாசகனுடனான உரையாடல்

ஐ.சிவகுமார்


வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.

இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.

சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.

‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.

தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.

தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85

கடைசி புத்தகம் சிறுகதை பற்றி அ.முத்துலிங்கம்

அன்பு நண்பருக்கு,
வணக்கம்.
கடைசி புத்தகம் சிறுகதை அருமையான ஆரம்பம். இட்டாலோ கல்வினோவைப் படித்ததுபோலவே இருந்தது.
மூதிர்ச்சியான எழுத்து. வாழ்த்துக்கள்.
உ.க்.நா படித்துவிட்டு அதைப்பற்றி திண்ணையில் எழுதுங்கள்.

அன்புடன்

அ.மு

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பட்டியலில் நான்

2008: நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்
In Books, Literature, Magazines, Tamilnadu on ஏப்ரல் 23, 2009 at 2:45 பிற்பகல்



1. அஜயன்பாலா - சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்

2. திருச்செந்தாழை - கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி

3. வாமுகோமு - சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி

4. சுந்தர புத்தன் - ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.

5. லதா - சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.

6. தமிழ்மகன் - சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.
7. பாலமுருகன் - மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.

8. மலர்செல்வன் - கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.

9. திசேரா - புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.

10. பஹீமாஜஹான்- நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.

நன்றி: எஸ் ராமகிருஷ்ணன்

வெள்ளி, மே 08, 2009

மணமகள்

மணமகள்



பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.

எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.

நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.


உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.


பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.


அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.


யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.


பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.

விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.


ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.


"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.


"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.

அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.


கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.


வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'


இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.


"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.


ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.


முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.

அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.

"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.


"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார்.


பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.


கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.


யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.

மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.

திண்ணை.காம், தினமணி கதிர்.

செவ்வாய், ஏப்ரல் 28, 2009

அன்பால் ஆனதொரு மருத்துவம்!

"வசூல்ராஜா' எம்.பி.பி.எஸ். பார்த்திருந்தால் அதில் கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியத்தை மறந்திருக்க மாட்டீர்கள். நோயாளிகள் மீது நாம் காட்டும் அக்கறைதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மருந்தைவிட முக்கியமானது என்பது கதையின் முடிச்சு. அது நகைச்சுவைப் படம். பாலியேடிவ் கேர் என்று அழைக்கப்படும் இதன் நிஜ வடிவத்தில் காமெடிக்கு இடமில்லை. அரவணைப்பும் ஆறுதலும் நிறைந்த இந்த வைத்திய உலகம் நெகிழ்ச்சியானது.



சென்னையில் தன் "லஷ்மி பாலியேடிவ் கேர் கிளினிக்' நடத்திவரும் டாக்டர் மல்லிகா திருவதனனைச் சந்திக்கச் சென்றபோது அந்த நெகிழ்ச்சியை ரத்தமும் சதையுமாக உணரமுடிந்தது.

"என்னம்மா நீ கொடுத்த மருந்து வலியைக் குறைக்கவேயில்லையே. ரெண்டே நாள்ல மறுபடி வலிக்க ஆரம்பிச்சுடுச்சே'' என்கிறார் கேன்சர் வலியால் அவதிப்படும் ஒரு பெரியவர். "அடடா'' என்று அன்பாகக் கேட்கிறார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு வளைந்து அமர்ந்து மீண்டும் அந்தப் பெரியவர் சொல்கிறார்...

"ரொம்ப வலிக்குதும்மா...'' என்று கண்களில் பயம் கொப்பளிக்க இறைஞ்சும் குரல். கேட்கும் நமக்கே வலிக்கிறது. நம்மை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் ஆதரவோடு விசாரித்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார். "வழக்கமாக மருத்துவத்துக்கும் இதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். அவர்கள் cure என்பதில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் care என்பதில் கவனமாக இருக்கிறோம்'' என்று ஆரம்பித்தார். "பாலியம் என்பது ஓர் அரபுச் சொல். அதற்கு அணைத்துக் கொள்ளுதல் என்பதுதான் பொருள். பாலியேடிவி கேர் என்பது அதிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை.

கேன்சர், நுரையீரல் நோய், இதய நோய், இளம்பிள்ளை வாதம், கிட்னி பாதிப்பு, அல்சைமர், கணையம் பழுதடைதல், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற எத்தனையோ பாதிப்புகளால் மக்கள் வலியில் துடிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குணமாக்குதல் என்பதைவிட, வலிநிவாரணமளிப்பதுதான் முக்கியம். இந்த மருத்துவ முறை மேலை நாடுகளில் வழக்கத்துக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியாவில் 1986 முதல் இந்த மருத்துவம் செயல்படுகிறது. பேராசிரியர் எம்.ஆர்.ராஜகோபால் என்பவர்தான் இதை முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்தியாவைப் பொறுத்தவரை பாலியேடிவ் கேரின் தந்தை என்று அவரைச் சொல்லலாம். கேரளத்தைச் சேர்ந்த அவரால்தான் இப்போதும் இந்தியாவிலேயே அங்கு இது பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இதற்கான ஆரம்பங்கள் செயல்பட்டன. எங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகின்றன. ஆர்.எம்.டி., டீன் பவுண்டேஷன், ஜீவோதயா, வேலூர் சி.எம்.சி. போன்றவை பேலியேடிவ் கேருக்காக அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான வலி போக்கும் மருந்தாக மார்ப்பைன் வழங்குகிறோம். ஓபியம் வகைசார்ந்த இந்த மருந்தை, எல்லா மருத்துவரும் தருவதற்கு அனுமதியில்லை. இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரே வழங்க முடியும். ஆகவே இதற்கான எட்டுவாரப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அதில் மூன்று நாள்கள் மட்டுமே நேரடிப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரு நாள் தேர்வு இருக்கும். அவ்வளவுதான். இதற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஓபியம் கலந்த மருந்து என்பதால் இதில் போதைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நோயாளிகளின் உடல்நிலை, வலி ஆகியவற்றைப் பொறுத்தே இது வழங்கப்படுகிறது. மேலும் இதை ஊசி மூலம் செலுத்துவதில்லை. மாத்திரையாகத்தான் வழங்குகிறோம். நிம்மதியான தூக்கமும் வலியற்ற நிலையுமே இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நோயாளிகள் மீது அக்கறை உள்ள மருத்துவர் எவரும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். நோயாளிகள் என்றதும், அவர்களைக் குணப்படுத்துவது மட்டுமே டாக்டர்கள் நோக்கமாக இருக்கிறது. இன்னும் சில நாளில் இறந்துவிடக் கூடியவருக்கும் தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கிறார்கள். பலர் நிலம், வீடு விற்று வைத்தியம் பார்க்கிறார்கள். நகைகளை விற்கிறார்கள். குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் உயிரைத் தக்க வைப்பதற்கு இப்படி வைத்தியம் செய்வதைவிட, ஆறுதல் வைத்தியமான இது மிக்க பலன் அளிப்பதைக் கவனிக்கிறோம்.

வலி இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலேயே சாப்பிடவும் நம்பிக்கை பெறவும் ஆரம்பித்து புத்துணர்வு அடைகிறார்கள். சிகிச்சையால் கிடைக்காத பலன், சில சமயங்களில் இந்த நம்பிக்கையால் கிடைத்துவிடுகிறது.

உள்ள ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான, நம்பிக்கைகள் ரீதியான ஓர் அரவணைப்பாக இருக்கும் இச் சிகிச்சை, எல்லா மருத்துவமனையிலும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மருத்துவப் படிப்பிலும் இது சப்ஜெக்டாக நடத்தப்பட்டால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும்'' என்று அவர் சொல்லி முடித்ததும் நோயாளிகள் சார்பாக நிம்மதி பெருமூச்சுடன் விடைபெற்றோம்.

contact nos: 2532 2684, 2641 1597 (Laxmi paliyative care centre)

திரைக்குப் பின்னே- 30

டி.வி. சானல் நதியா!

‘சின்னமேடம்' முடிந்து அமெரிக்காவுக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார் என்பது உறுதியானதும்தான் எனக்கு நதியா அறிமுகம். அவரைப் பார்க்காமலேயே அவரைப் பற்றிய செய்திகளை எழுத ஆரம்பித்தேன். நதியாவுக்குக் கிடைத்த ஒரு ரசிகர்தான் காரணம். சலபதி என்ற அந்த ரசிகர் தன் பெயரையே நதியா சலபதி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.

நதியாவை மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள். "அக்கா இப்போது முன்பைவிட அழகாக இருக்கிறார். சென்ற வாரம் மும்பை வந்த போது பார்த்தேன்'' என்றோ, "அங்கே டி.வி. சானலில் பணியாற்றி வருகிறார். அவரை அங்கே நாடகத்தில் நடிக்க அழைக்கிறார்கள்'' என்றோ நதியாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து என்னைச் சந்திக்க பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து இப்படி ஏதாவது ஒரு வரி தகவலையோ அவருடைய சமீபத்திய போட்டோவையோ கொடுத்துவிட்டுச் செல்ர். நதியா நாய் வளர்க்கிறார், பூனை வளர்க்கிறார், அமெரிக்க சானலைவிட்டு பிரிட்டன் சேனலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்... இப்படி வாசகர்களுக்கும் பிடித்தமான செய்தியாகத்தான் இருக்கும் அவர் சொல்லும் செய்தியெல்லாம்.

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அவருக்கு முக்கியமான வேடமும் சம்பளமும் வாங்கித் தருவதற்கு காரணமாக இருந்தார். அந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் நதியாவை நான் ஒரே ஒரு முறை சந்தித்தேன்.

"டி.வி. சானல் வேலையை விட்டு விட்டீர்களா?" என்றேன்.

"அதுதான் எனக்குப் புரியவில்லை. பார்க்கிற பலரும் இதையே கேட்கிறார்கள். நான் எந்த சேனலிலும் வேலை பார்த்ததில்லையே.. எப்படி இப்படியொரு செய்தி பரவிற்று என்றே தெரியவில்லை. ஆனால் நான் தமிழகம் வந்ததும் நூறு பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள்'' என்றார்.

நான் பக்கத்தில் இருந்த ’நதியா சலபதி'யைப் பார்த்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை மிகச் சாதாரணமாகப் பார்த்தார். "டீ சாப்பிட்றீங்களா?'' என்றார் அந்தச் செய்திக்குச் சம்பந்தமே இல்லாதவராக.



ஒரு புறக்கணிக்கப்பட்ட பாட்டு!



ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பாடல் ஒரு படத்தையே தூக்கி நிறுத்தியதோடு அதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்ட பலரின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ’திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற ’மன்மதராசா மன்மதராசா' சுமார் ஓராண்டுக்காலம் தமிழகத்தை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருந்த பாடல். ஆனால் அந்தப்பாடலை கவிஞர் யுகபாரதி வேறொரு படத்துக்காகத்தான் எழுதினார். அந்தப் படத்தில் பயன்படுத்த இயலாத இந்தப் பாடலை ’திருடா திருடி' படத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயக்குநர் சுப்ரமணியம் சிவாவும் இசையமைப்பாளர் தினாவும் யுகபாரதியும் விரும்பினர்.

என்ன காரணத்தாலோ தயாரிப்பாளருக்கு இதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. எல்லாம் பொருளாதார நெருக்கடியால்தான். வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோகூட படப்பிடிப்பை நடத்த இயலாத நிலை. நெய்வேலி அனல் மின் நிலையத்தின் நிலக்கரி வெளியில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டியதாக இருந்தது. ஆடை அணிகலன்களிலும்கூட செலவு செய்ய முடியாமல் இருந்ததால் படத்தில் அப் பாடலில் பயன்படுத்திய கறுப்புத் துணியை மலிவுவிலைக் கடையான சரவணா ஸ்டோர்ஸில்தான் வாங்கினார்கள். உடன் ஆடுவதற்கு நடனக் கலைஞர்கள் அமர்த்தவும் யோசனை. சரி... தனுஷ், சாயாசிங் இருவர் மட்டுமே போதும் என்று முடிவாகியது. பாடகி? புதிய பாடகிதான். மாலதி அறிமுகப்படுத்தப்பட்டார். பாடகர் மாணிக்க விநாயகம். எல்லாவிதத்திலும் ஒரு மாத்து கம்மிதான் என்று தெரிந்தே உருவாக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சிதான் தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளிலும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது. டி.வி. சேனல்களில் லட்சம் தடவைக்கு மேல் ஒளிபரப்பாகியது. படம் ஓடியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாடகர், பாடல் எழுதியவர், இயக்குநர். நடிகர்- நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என எல்லோர் வாழ்க்கையையும் சில அடி உயர்த்தியது.

தமிழ் சினிமா எல்லார் கணிப்பையும் ஏமாற்றி கண்ணில் மண் தூவி கரகாட்டம் ஆடிவிடும் என்பதற்கு ஓர் எளிய உதாரணம்தான் ’மன்மதராசா'.


எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?



தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்குமுன்னர் இப்படி ஒரு பதவியும்கூட தமிழ்சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.

எம்.ஜி.ஆருக்கு ’ரிக்ஷாகாரன்' படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள்கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச் செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.

72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார். கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் "தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்'' என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.

வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் "அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்'' என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.

"ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?'' என்றனர் மற்றவர்கள்.

"அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே'' என்று புலம்பியிருக்கிறார்.

மீண்டும் உள்ளே சென்று "நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.'' என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.

இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்பட்ட கொடுமை இது?

செவ்வாய், ஏப்ரல் 21, 2009

திரைக்குப் பின்னே- 29

பழைய ஞாபகங்களும் புதிய ஞாபகங்களும்

எல்டாம்ஸ் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்கப் போனேன். இன்னமும் லட்சிய நடிகரின் கணீர் குரல் ‘பூம்புகாரை', ‘வானம்பாடி'யையோ நினைவு படுத்தியது. அவருக்குக் கலைஞரைப் பற்றி நிறைய விரோதமான கருத்துகள் இருந்தன. அவரைப் பற்றிக் கிண்டலாக சில விஷயங்களைச் சொன்னார். அண்ணாவுக்கும் அவருக்குமே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் கலைஞர் மீது அண்ணா பல முறை கோபமுற்று இருந்ததாகவும் கூறினார். தி.மு.க.வில் இருந்து கலைஞரும் முரசொலி மாறனும் விலகிக் கொள்ள முடிவெடுத்த நேரத்தில் அதைத் தாம்தான் மறுத்து பிரச்சினையை சரி செய்ததாகவும் கூறினார்.

இதையெல்லாம் புத்தகமாகப் போடும் நோக்கத்தோடு அதை டைப் செட் செய்து வைத்திருந்தார். (இப்போது புத்தகமாக வந்திருக்கக் கூடும்.) அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பக்கம் பக்கமாக வாசித்துக் காட்டினார். நான்கு, ஐந்து மணி நேர சந்திப்புக்குப் பின் அந்தச் சந்திப்பு முடிந்தது. அவரிடம் எதைப்பற்றிk கேட்பதற்காகச் சென்றேனோ அது முடியவில்லை. அதைத் தவிர வேறு விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு வந்ததாகத் தோன்றவே மீண்டும் மறுநாள் சந்திப்புக்கு நேரம் கேட்டேன்.

மறுநாளும் சந்திப்பு தொடர்ந்தது. நேற்றைய சந்திப்பின் ஜெராக்ஸ் போல மீண்டும் பேசிக் கொண்டு போனார். மீண்டும் அதே பக்கங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய சம்பவங்களை அவர் அத்தனை ஞாபகமாக நேற்று நடந்தது போல சொன்னார். ஆனால் என்னிடம் நேற்று சொன்னதை முழுதுமே மறந்து விட்டார் என்று தெரிந்தது. நடுநடுவே எனக்கான தகவல்களை கிரகித்துக் கொண்டு விடைபெற்றேன்.

கிளம்பும்போது "நேற்று யாரோ ஒருத்தர் வந்து இதே மாதிரி கேட்டாரே'' என்றார் என்னிடமே.


ஒரு நடுநிசியில் ரஹ்மானுடன்!



"முட்டாள்கள்தான் இரவிலே தூங்குவார்கள்" என்று எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சொன்னதாகச் சொல்வார்கள். கரிச்சான் குஞ்சுவின் கணிப்பின்படி ஏ.ஆர். ரஹ்மானும் அவரிடம் இசை கேட்டு வரும் திரைப்படத் துறையினரும் அதிமேதாவிகள். ஏனென்றால் ரஹ்மானின் உலகம் இரவு பத்துமணிக்கு மேல்தான் விடியும். இந்தியாவில் முக்காவாசிப்பேர் உறங்க ஆரம்பித்து மீதி இருப்பவரும் அதற்கான முயற்சியில் இருக்கும்போது அவர் விழிப்பார். அவர் விழித்திருக்கும் நேரத்தில் அவரைச் சந்திக்க வேண்டியவர்களும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.

நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது இரவு பதினொன்று. இன்னும் எழுந்திருக்கவில்லை. "லேட்டாத்தான் தூங்கினார்'' என்றனர். அதாவது எல்லோரும் விழித்த பின்னர் தூங்கியிருப்பார் என்று புரிந்தது. அவரை எதிர்பார்த்து இந்திப் பட உலகினர் சிலரும் பாடகர் ஹரிகரனும் வசந்த் (ரிதம்), ராஜீவ் மேனன் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) ஆகிய இயக்குநர்களும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தின (பாய்ஸ்)மும் காத்திருந்தனர். பத்திரிகையாளர்களில் நானும் தினத்தந்தி நிருபர் பழனிகுமாரும்.

ரஹ்மானின் அம்மா வந்து எல்லாரையும் சாப்பிடச் சொன்னார். அவருடைய வீட்டின் ஒரு பக்கத்தில் சிறிய தோட்டமும் பக்கத்தில் சமையல்கூடமும் உண்டு. அங்கு பொதுவாக எல்லா இரவிலும் பிரியாணி தயாராக இருக்கும் என்றார்கள். காத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அங்கே சம பந்தி போஜனம்தான். சமயத்தில் தோட்டக்காரனுக்குப் பக்கத்தில் அமீர்கான் அமர வேண்டியிருக்கும் எனவும் சொன்னார்கள்.

சாப்பிட்டுவிட்டு வந்த சிறிது நேரத்தில் ரஹ்மான் வந்தார்.

வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருந்த பூங்கொத்துகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். அனுப்பியிருப்பவர்களின் பெயரைப் பார்த்து உதடுகளில் புன்னகை மலர்கிறது. காத்திருந்த மனிதர்களைப் பார்த்தபோது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புன்னகைவீதம் வழங்கினார். எதிர்பார்க்காதவராகவோ, மிகவும் நெருக்கமானவராகவோ இருந்தால் கண்கள் விரிய சிறிய ஆச்சரியத்தைக் காட்டினார். அவருக்குப் பழனிகுமாரைத் தெரிந்திருந்தது. முதலில் அவரிடம் பேசினார். "இவருக்கு ஒரு பேட்டி வேணும், ரொம்ப நாளா கேட்டுகிட்டிருக்கார்" என்றார் என்னைக்காட்டி.

"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாம்தான் நீங்க எழுதிடறீங்களே.. என்னைப் பத்தி என்னைவிட உங்களுக்குத்தான் நல்லா தெரியுது'' என்றார். பொதுவாக பத்திரிகைகளைப் பற்றி அவர் அப்படிச் சொன்னார்.

அவருடைய குடும்பச் சூழல், அவருடைய அடுத்த திட்டங்கள், ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் போன்றவற்றில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அது தானாகவே செய்தியாகிவிடுகிறது. இசையைப் பற்றியோ, சில நபர்களைப் பற்றியோ அவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்கள், அவருடைய பிரத்யேகக் கனவுகள், வதந்திகளுக்கான விளக்கங்கள் போன்றவற்றுக்குத்தான் அவருடைய நேரடியான பதில் தேவையாக இருந்தது.

"இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்... இன்னொரு நாள் பேசலாமா?'' என்றார்.

வந்தததற்கு ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கலாம் போல, "எதற்கு இவ்வளவு முடி வளர்த்து வைத்திருக்கிறீர்கள்?'' என்றேன்.

சிரித்தார். "அதான் சொல்லிட்டேனே'' என்றார்.

எந்தப் பத்திரிகைக்காக எப்போது சொன்னார் என்று நினைவில்லாமல் "எப்போ?'' என்றேன்.

"கான்ட்ராக்ட் ஸைன் பண்ணியிருக்கேன். அது முடியறவரைக்கும் இப்படித்தான் இருக்கணும்''

பதிலைச் சொல்லிவிட்டு அடுத்து இருந்தவரைப் பார்த்தார். இந்தப் பார்வைக்காகக் காத்திருந்தவராக அடுத்து அவர் பேச ஆரம்பித்தார்.


புனைவும் நினைவும்!



குங்குமத்தில் ’நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பமானபோது எழுத்தாளர் சுஜாதா மீது ஆரம்பித்த பிரமிப்பு விகடனில் அவர் மறைவதற்கு முந்தின வாரம் எழுதிய கற்றதும் பெற்றதும் வரை குறையவே இல்லை. பாதி ராஜ்ஜியம், சொர்க்கத்தீவு, சிறுகதை எழுதுவது எப்படி, நடுப்பகல் மரணம், கொலையுதிர் காலம், தலைமைச் செயலகம், ஜீனோ, பிரிவோம் சந்திப்போம் என்று அவருடைய எழுத்துகள் ஒன்றுவிடாமல் படித்திருந்தாலும் அவரை நேரில் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அது நான் சினிமா நிருபராகி அவரும் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற, இருக்கிற தருணத்தில்தான் சாத்தியமானது.

பத்திரிகைக்காக ஒரு முறை வரும் ஆண்டு சினிமா எப்படி இருக்கும் என்று கட்டுரை கேட்டு போன் செய்த போது எத்தனை எழுத்துகள் இருக்க வேண்டும் என்று அவர் திருப்பிக் கேட்டபோது, அவர் எவ்வளவு புதுசாக இருக்கிறார் என்பதை மீண்டும் புரிந்து கொண்டேன்.

ஆனாலும் நேரில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.

’ஆளவந்தான்' பட விழா சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் நடந்தது. காலையில் ஆரம்பித்து மதியம் முடிந்த விழா அது. சுஜாதா வந்திருந்தார். விழா முடிந்து அனைவரும் வெளியே வரும்போது நடிகர்கள் மீது ஆர்வம் கொண்டு மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தபோது, சுஜாதா கூட்டத்திலிருந்து விலகி நடந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் அலைமோதாத வருத்தம் ஏற்பட்டு நான் அவருக்கு வழித்துணைபோல பின்னாலேயே சென்றேன். அவர் காரை அடைந்தார். ஆடம்பரமற்ற சிறிய மாருதி 800 கார். நீல நிறம். அவர் காரில் ஏறிய பின்பு திரும்ப நினைத்தவன் காரின் ஒரு டயர் காற்று இல்லாமல் இருப்பதை அறிந்து ஓடிப்போய் சொன்னேன். அவர் நான் சொன்ன விஷயத்தை டிரைவரிடம் சொல்லிவிட்டு டயர் மாட்டுகிற வரை வேர்க்க விறுவிறுக்க காரிலேயே அமர்ந்திருந்தார்.

இன்னொரு தரம் அவருடைய வீட்டுக்குப் போய் இயக்குநர் ஷங்கர் பற்றி நான் எழுதிய புத்தகத்துக்கு முன்னுரை கேட்டேன். இப்போதெல்லாம் யாருக்கும் எழுதுவதில்லை என்று கூறிவிட்டார். சுமார் கால் நூற்றாண்டுக்காலமாக அவருடைய எழுத்துகளை வேதம் போல படித்தவன் என்பதை சில நிமிடங்களில் எனக்கு எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. எனக்குப் பேச்சே வரவில்லை. அங்கே பத்திரிகையாளர் சந்திரன் இருந்தார். பரிதாபப்பட்டாவது இரண்டு வரி எழுதித் தரமாட்டாரா என்று தன்னிரக்கம் சூழ்ந்தது.

"நீங்கள் எழுதினா ரொம்ப பெருமைப்படுவேன் சார்'' என்றேன்.

"புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே'' என்றபோது "சாரி சார்'' என்று வாசல் நோக்கி நகர்ந்துவிட்டேன்.


அவர் இறந்த அன்று அவர் எனக்கு இமெயில் அனுப்பியதாக ஒரு சிறுகதை எழுதினேன். என்னுடைய ஆசையை இப்படி புனைவாகத்தான் தீர்த்துக் கொள்ள முடிந்தது. அவருடைய முதலாண்டு நினைவு நாளின் போது அவருடைய பெயரிலான அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் அறிவியல் புனைகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. இதையெல்லாம் பார்க்க அவர் இல்லாமல் போய்விட்டாரே என்று பரிசளிப்பு நாளின் போது நினைத்தேன், வேதனையின் கிறுக்கில்.

திங்கள், ஏப்ரல் 20, 2009

சுஜாதா நினைவு பரிசு போட்டி புகைப்படங்கள் -2

சுஜாதா நினைவு பரிசு போட்டி


அமைச்சர் தென்னரசு, ராஜீவ் மேனன், திருமதி சுஜாதா



இயக்குனர்கள் பாலுமகேந்திரா, வசந்த், ஆழி செந்தில்நாதன்

LinkWithin

Blog Widget by LinkWithin