சனி, ஜூன் 26, 2010

வெட்டுப்புலி – ஒரு பார்வை -ஆர். முத்துக்குமார்

‘வெட்டுப்புலி தீப்பெட்டியின் முகப்பில் இருக்கும் மனிதர் என்னுடைய கொள்ளுத்தாத்தா. அவருடைய வரலாறைத் தேடிச் செல்கிறேன். நண்பர்கள் பிரபாஷும் ஃபெர்ணாண்டஸும் துணைக்கு வருகிறார்கள்’ என்கிறார் தமிழ்ச்செல்வன். தேடலின் வழியே சில குடும்பங்களை, மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் மூலம் முப்பதுகளில் தொடங்கி புத்தாயிரத்தின் முதல் ஒன்பது ஆண்டுகள் வரையிலான சமூக அமைப்பை, பழக்கவழக்கங்களை, சாதிச் சிக்கல்களை, ஏற்றத்தாழ்வுகளை நினைவுபடுத்துகிறார்.

முக்கியமாக, திராவிட இயக்க அரசியலை அதிகமாகப் பேசுகிறது இந்த நாவல். தமிழகம் மற்றும் தமிழினத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட திராவிட இயக்கத்தின் தோற்றத்தை, பரிணாம வளர்ச்சியை கதாப்பாத்திரங்கள் மூலம் நாவல் நெடுக சொல்லிச் செல்கிறார் தமிழ்மகன்.

சமூக ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் பிராமணர் – பிராமணர் அல்லாதார் இருவரிடம் மட்டுமே நிலவுகின்றன என்பதை நானும் ஏற்கவில்லை. நாவலும் ஏற்கவில்லை. நாவலின் இந்த அம்சம்தான் என்னை ஈர்த்தது.

முப்பதுகள், நாற்பதுகள் என்று பத்து ஆண்டுகளுக்கு ஒரு பகுதி என்ற உத்தியுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் வெறும் தகவல்கள் மட்டும் பதிவாகவில்லை. மனிதர்கள். அவர்களுடைய குணநலன்கள். அவர்களுடைய முக்கியத்துவம். அவர்களுடைய பங்களிப்புகள். தேவைக்கு ஏற்றவகையில் பதிவாகியுள்ளன. தேவைக்கு ஏற்ப என்றால் நாவலாசிரியரின் தேவைக்கு ஏற்ப. அவரைப் பாதித்த, அவருக்குப் பிடித்தமான அல்லது பிடிக்காத மனிதர்களும் அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

புனைவு எழுத்தாளருக்கே உரித்தான சில உரிமைகளை அவர் பயன்படுத்திக்கொண்ட விதம் அபுனைவில் மட்டுமே ஆர்வம் செலுத்தும் என்னைப் பொறாமை கொள்ளவைக்கிறது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் – கலைஞர் பற்றி அப்போது வழக்கத்தில் இருந்த கேலிச் சொற்றொடர்களை அவர் பயன்படுத்திய நாசூக்கு.

நாவலில் என்னைக் கவர்ந்த, என்னை சிலிர்க்க வைத்த, என்னை ஆச்சரியப்படுத்திய சில வசனங்களை, சில வரிகளை இங்கே பதிவு செய்கிறேன். ஏன் என்பதைப் படிக்கும்போதே புரிந்துகொள்ளமுடியும்.

‘என்னென்னமோ பலகாரங்க. ஆகாரமா.. ருசியான்னு ஆகிப்போச்சி. வெள்ளைக்காரனுங்க மாதிரி ஐயர் வூடுகள்லயும் காப்பிக் குடிக்க ஆரம்பிச்சுட்டானுங்களே..’

0

‘காந்தி குசுவுக்கு சமானம்னு சொல்றானே மணி ஐயரு. வெள்ளக்காரனை ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறது அவன் அபிப்ராயம்’

‘அவன் கிடக்கிறான். அப்புறம் காந்தி ஆட்சிய புடிச்சுட்டா அவர்தான் தெய்வம்னு சொல்லிடுவான்’

0

‘பாரேம்மா என் தம்பியோட தைரியத்தை? வெரிகுட்.. வெரிகுட்.. சினிமாவுக்குத்தான் ஜனங்க ஆளா பறக்குறாங்களே.. நல்ல யோசனைதான். பாப்பானுங்க நுழையறதுக்குள்ள நுழைஞ்சுடு.. ம்ம்..வெரிகுட்’

‘ராஜாஜி வடக்கில் தம் பெண்ணைக் கட்டிக்கொடுத்து விட்டதால் வடக்குத் தெற்கு எல்லாம் இணைந்துவிட்டதாக நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்!’

0

‘தருமன் ரெட்டியார்தானா?‘

‘எதுக்குக் கேக்கிற இப்ப? தொட்டுப்புட்டானா?’

‘அதெல்லாம் இல்ல’

‘தொட்டுகிட்டுப் பேசினான்னா சொல்லு.. பிச்சிப்புட்றேன் பிச்சி..’

0

அவனும் அவனுடைய கூட்டாளிகளும் இன்றும் ஒருமுறை ‘மனோகரா’ படம் பார்க்கக் கிளம்பினர். அது அவர்களின் கோபத்தை அணையாமல் பார்த்துக்கொள்ளும் கவசமாகவும் ஊதி அதிகப்படுத்தும் உலைக்களமாகவும் இருந்தது.

0

யாரோ ஒருவன் மேடையைப் பார்த்துக் குரல் கொடுத்தான். பெரியார் மேடையில் இருப்பவர் பக்கம் திரும்பி என்ன சொல்கிறார் அவர் என்று கேட்டார். குத்தூசி குருசாமியோ, யாரோ முதுகுக்குப் பின்னாடி வந்து நின்று ‘நாடகத்தை ஆரம்பிக்கச் சொல்றாங்க’ என்றார்.

பெரியார் கொதித்துப் போனார். ‘அதுக்குத்தான் வெங்காயம் இந்த நாடகம் கூத்தெல்லாம் வேணாம்னு தலையில அடிச்சுக்கிட்டேன். முக்கியமான பேச்சப்போ திசை மாறிட்டான் பாரு? வேணுமா இதெல்லாம்? என்று மைக்கிலேயே முழங்கினார். அண்ணா வெலவெலத்துப் போனார்.

0

கட்டிலில் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற திராவிடர் கழக வெளியீட்டை ஹேமலதாவின் கையில் கொடுத்துப் படிக்கச் சொல்லக் காத்திருந்தான். அவள், ‘எப்பப் பார்த்தாலும் புக்ஸு புக்ஸு’ என்றபடி அதைப் பிடிங்கி கீழே வைத்தாள்.

‘இது நான் படிக்கறதுக்கு இல்ல, நீ படிக்கறதுக்கு’

‘எனுக்கா? கீழே கிடந்த புத்தகத்தை ஆர்வம் பொங்க எடுத்தாள். ‘அழகுதான்.. எனக்கு அரவம் ஒரு அட்சரம் படிக்கத் தெல்லதே..’ கட்டிலில் அதை வீசிவிட்டு முந்தானையை விலக்கினாள். பேரதிர்ச்சியோடு பார்த்தான். அங்கே தாலி தொங்கிக் கொண்டிருந்தது.

‘அம்மாதான் கழுத்து மூலியா இருக்க ஒத்துனு செப்பி அரை சவ்ரன்ல தாலி எடுத்துக் குடுத்துச்சி’ என்றாள்.

0

‘ஐயர் இன்னா மந்திரம் சொல்றாரு தெரியுமா? உம் பொண்டாட்டிய அக்னி தேவன் தன் அனுபோகத்தில வெச்சிருந்தான்.. வாயு தேவன் வெச்சிருந்தான்.. இப்ப நான் வெச்சிருக்கேன்.. இனிமே நீ வெச்சுக்கோன்னு சொல்றான்.. இந்தக் கருமத்தைச் சொன்னாத்தான் கல்யாணமா? உலகம் ஃபுல்லா இப்பிடித்தான் சொல்லி கல்யாணம் பண்ணிக்கறானா? த பார்ப்பா.. ஐயர் வந்துதான் பண்ணனும்னா எனக்குக் கல்யாணமே வேணாம். சொல்லிட்டேன்’

0

‘அவா, இவா, நேக்கு, நூக்கும்பானுங்க. அதிலதான் இருக்கு அவனுங்க உயிரே.. நல்லா தமிழ்ல பேசிக்கினே இருப்பான். அவனுங்க ஆளுங்கன்னு தெரிஞ்சதும் ஜலம் சாப்பிட்றேளானு மாறிடுவான். லோகம் கெட்டுக் கெடக்குன்னுவான்.. த்தா’

0

‘யாரை நொள்ளைக் கண்ணன்னு சொன்ன? கொன்னுப் போட்டுடுவேன் தெவடியா பசங்களா?’ முகம் சிவக்கப் படபடப்புடன் வெகுண்டார்.

‘த்தா இன்னா? கருணாநிதியதான் சொன்னேன். இன்னா பண்ணிடுவே? கண்ணு நொள்ளையா இருந்தா சொல்லாம இன்னா சொல்லுவாங்க?’

மொத்த பேரையும் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்.. சும்மா என்கிட்ட விளையாடாதீங்க..’‘

‘இன்னா பெரியவரே.. பசங்க ஏதோ கத்திக்கிட்டுப் போறானுங்க.. விடுங்க.. இதுக்கெல்லாம் சண்டைக்கி வந்தா எப்பிடி..உங்க ஆளுங்க கூடத்தான் பொட்டைன்னு கத்தறானுங்க.. நாங்க பதிலுக்கு அடிச்சா சரியாயிடுமா?’

0

‘பொஸ்தகம்னா பிராமின்ஸ் எழுதறதுதானே..? பாரதியார், வ.வே.சு., தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன்.. எல்லாம் யாரு?’

‘எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுக்கிட்டு பாக்காதீங்க.. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்லா உங்க ஆளுங்கதானே?’

‘உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதால வுட்டு வெச்சிருக்கீங்க’

லட்சுமண ரெட்டி - குணவதி, தியாகராஜன் – ஹேமலதா, நடராசன் – கிருஷ்ணப்ரியா இந்த மூன்று ஜோடிகள் பேசும்போது வெளிப்படும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்கவும். அவற்றில்தான் கடந்த எண்பது ஆண்டுகால சமூக வாழ்க்கையும் அரசியலும் புதைந்துகிடக்கின்றன.

0

எட்டிப் போடா சூத்திரப் பயலே! என்ற ஐயர் பேச்சும் ஆரியம்தான்.

கிட்ட வராதே சேரிப்பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்.

படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியம்தான்.

மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட!

தேவர் வருகிறார், எழுந்து நில்!

நாடார் அழைகிறார், ஓடி வா!

செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு!

- என்று ஆரியம் பலப்பல முறைகளில் தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்.

தமிழ்மகன் எழுதிய ‘வெட்டுப்புலி’யைப் படிக்கும்போது அடிக்கடி என் நினைவுக்கு வந்த அண்ணாவின் வரிகள் இவை.


Tags: சாதி, நாவல், வெட்டுப்புலி. திராவிட இயக்கம்
Posted in அரசியல், புத்தகம்

செவ்வாய், ஜூன் 15, 2010

யுவகிருஷ்ணா விமர்சனம்

வெட்டுப்புலி!
June 14, 2010


இந்நாவல் மாதிரியாக என்னை அலைக்கழித்த, சுவாரஸ்யப்படுத்திய, சோகப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய, கடுப்பூட்டிய, களிக்கவைத்த எழுத்தை இதுவரை நான் வாசித்ததே இல்லை என்று உறுதியாக கூறலாம். மொத்தத்தில் பன்முகத்தன்மையோடு கூடிய உணர்வுகளால் படுத்தி எடுத்து விட்டது. என்னோடு சேர்த்து என் அப்பா, பெரியப்பா, மாமா, அண்ணாவென்று பரம்பரையே கண்ணாடி முன்நின்று தனக்குத்தானே கதை சொல்லிக் கொண்டதை போன்ற உணர்வினைத் தந்தது. இந்நாவலின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் என் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். ரத்தமும், சதையுமாக இன்னமும் உயிர்வாழ்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
So called திராவிடப் பாரம்பரிய குடும்பங்களின் வயது மிகச்சரியாக முக்கால் நூற்றாண்டு. திராவிட அரசியல் மற்றும் தமிழ் சினிமாவின் வயதும்கூட இதேதான். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இருக்கும் நம்மை, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளுக்கும், நாற்பதுகளுக்கும் அனாயசமாக ஆட்டோவின் பின்சீட்டில் நம்மை உட்காரவைத்து சவாரி செய்கிறார் தமிழ்மகன். காலயந்திரம் இன்னமும் விஞ்ஞானத்தால் கண்டறிப்படவில்லை. பரவாயில்லை. நம் எழுத்தாளர்களிடம் பேனா இருக்கிறது.
சிறுத்தையை வெட்டிய தாத்தாவின் கதையை தேடிச்செல்வது என்பது நொண்டிச்சாக்கு. முக்கால் நூற்றாண்டு வரலாற்றை முன்னூற்றி ஐம்பது பக்க கேப்ஸ்யூலாக தருவதுதான் நாவலின் முக்கிய நோக்கம். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அழகிரி – மொத்தமே இவ்வளவுதான். வேண்டுமானால் இடையிடையே ராஜாஜி, ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்று பெயர்களை போட்டுக் கொள்ளலாம். உங்களிடம் இப்போது 75 ஆண்டுக்கால வரலாறு ரெடி. வெட்டுப்புலி செய்திருப்பது இதைத்தான். ஆந்திராவை ஒட்டிய தமிழகத்தின் வடமாவட்ட அரசியல்போக்கு இவ்வளவு நுணுக்கமாக ஒரு புனைவில் பதிவு செய்யப்பட்டிருப்பது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.
முப்பதில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டு நிகழ்வுகளையும் பாத்திரங்களின் போக்கில் கொண்டுசெல்கிறார். முப்பதுகள் மிக நீண்டது. நாற்பதுகள் நீண்டது. ஐம்பதுகள் இயல்பான நீளம். அறுபதுகள் கொஞ்சம் குறைவு. எழுபதுகள் குறைவு. எண்பதுகள் வேகம். தொண்ணூறுகள் வேகமோ வேகம். புத்தாயிரம் மின்னல் வேகம். நாவல் இந்த உத்தியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்த காலக்கட்டங்கள் இயல்பாகவே இப்படித்தான் இயங்கியிருக்கிறது என்பதை குறியீடாக உணர்த்துகிறார். நாம்கூட சிறுவயதில் ஓராண்டு கடந்த வேகத்தையும், இப்போதைய அதிவேகத்தையும் உணரும்போது இந்த உத்தியின் லாவகத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
தசரத ரெட்டியில் தொடங்கி லட்சுமண ரெட்டி, நடராஜன், தமிழ்செல்வன் என்றொரு குடும்ப பாரம்பரியம். ஆறுமுக முதலி, அவரது மகன் சிவகுரு, சகோதரர் கணேசன், கணேசனின் மகன்கள் நடேசன், தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இன்னொரு குடும்பம். இரண்டு குடும்பங்களின் பார்வையில் விரிகிறது திராவிட இயக்க வரலாறு. பெரியாரின் சிந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்கள் பலவற்றையும், அவற்றை தவறாக உள்வாங்கிக் கொண்டு நாசமாகப் போன சிலரையும் எந்த சமரசமுமின்றி நடுநிலையாக பதிவு செய்கிறது வெட்டுப்புலி.
லட்சுமண ரெட்டி அனுபவப்பூர்வமான நிகழ்வுகளால் திராவிட இயக்கத்தின் சார்புள்ளவராக மாறுகிறார். தேவைப்படும் இடங்களில் சிறுசிறு சமரசங்களுக்கும் உடன்பட்டு வாழ்வதில் அவருக்கு பெரியதாக பிரச்சினை எதுவுமில்லை. மாறாக கணேசன், தியாகராசன், நடராஜன் போன்றோர் மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக சித்தாந்தங்களை குடும்பங்களிலும் நிறுவமுயன்று தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்கிறார்கள்.
இன்றும் கூட திராவிட இயக்கத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட ஒருவன் அவ்வளவு எளிதாக சாதிமறுப்புத் திருமணம் செய்துவிட முடியாது. அவனுக்கு மனைவியாக வரக்கூடியவள் வெள்ளிக்கிழமைகளில் சிகப்புப்புடவை அணிந்துகொண்டு அம்மன் கோயிலுக்கு போவாள். விரதம் இருப்பாள். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவதற்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு இருக்கும். இதெல்லாம் அவனுடைய வாழ்வியல் சிக்கல்கள். சித்தாந்தங்களும், யதார்த்தமும் இருவேறு முனைகளில் நிற்கும் கந்தாயங்கள். நாம் விரும்புகிறோமே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு புள்ளியில் சந்தித்துவிடாது. இரண்டுக்கும் இடையே இயந்திரமாக மனவுளைச்சலோடு வாழ்ந்து தீர்த்துத்தான் தொலைக்க வேண்டும். இதுதான் இயல்பானது. இல்லை சித்தாந்தங்கள் காட்டிய வழியில்தான் வாழ்வேன். எச்சூழலிலும் கைவிடமாட்டேன் என்பவர்கள், முதலில் குடும்பம் என்ற ஒருமுறையிலிருந்து வெளிவந்து, சமூகத்தை புறந்தள்ளி தனிமனிதனாக வாழ திராணி உள்ளவனாக இருக்க வேண்டும்.
வெட்டுப்புலி போதிப்பது இதைத்தான். தியாகராசனின் மனைவி ஹேமலதா தாலி அணிந்துக் கொள்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு போகிறாள். எம்.ஜி.ஆர் படம் பார்க்கிறாள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறாள். இதெல்லாம் ஒரு பிராசஸாக / தியாகராசனுக்கு எதிர்வினையாக அமையும் சூழல். இடைப்பட்ட காலத்தில் இயந்திரத்தன வறட்டு சித்தாந்த உணர்வால் அவனுக்கு வேலை போகிறது. குடிகாரனாகிறான். குடும்பம் பிளவுபடுகிறது. ஒருகட்டத்தில் வாழ்வின் எல்லைக்கே இருவரும் ஓடி களைப்படைந்து மீண்டும் இணைகிறார்கள். இப்போது தியாகராசனுக்கு அரசியல் முக்கியமல்ல. கொள்கைகள் முக்கியமல்ல. புதுவை அரவிந்தர் ஆசிரம அன்னையின் தீவிர பக்தனாகிறான். வேலைக்கு ஒழுங்காக போகிறான். வாழ்வு அவன் போக்குக்கு வருகிறது. தியாகராசனது வாழ்க்கை ஒரு சோறு பதம்.
தமிழகத்தில் சினிமாவின் ஆளுமை குறித்து விஸ்தாரமான அலசல் கிடைக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்க திட்டமிட்டு சென்னைக்கு வந்து ஸ்டுடியோக்களை நோட்டமிடுகிறார். பிற்பாடு ஒரு டெண்டு கொட்டாய் கட்டியதோடு திருப்தியடைந்து விடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா மோகத்தில் சொத்தினை அழித்து, பிச்சைக்காரனாகி மடிகிறான்.
பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை குறித்த காரசார விவாதம் ஆங்காங்கே முன்வைக்கப் படுகிறது. நடராஜனுக்கும், அவன் காதலிக்க விரும்பும் பார்ப்பனப் பெண் ப்ரியாவுக்கும் இடையில் கன்னிமாரா வாசலில் நடைபெறும் விவாதம் முக்கியமானது. பார்ப்பனர்களுக்கும் வர்க்கப்பேதம் உண்டு என்பதை ப்ரியா அழுத்தமாக முன்வைக்கிறாள். முதலாளி வர்க்க பார்ப்பனன், ஒட்டுமொத்த சமூகத்தையும் காலில் போட்டு நசுக்குகிறான் என்று நடராஜன் எதிர்வாதம் வைக்கிறான்.
வர்க்க அடிப்படையில் பின் தங்கியிருக்கும் பார்ப்பனர்களுக்கான நியாயம் ஒன்றும் இருக்கத்தானே செய்யும்? ‘சோ’ போன்ற பிரபல பார்ப்பனர்கள் இன்றைய நிலையில் அதை பேசுவதில்லை என்றாலும், எஸ்.வி.சேகர் மாதிரியான ஆட்கள் ‘பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு’ என்று பேசுகிறார்கள். மிகச்சிறுபான்மை வாதமான அது பெரியளவில் பேசப்படாததற்கு, வர்க்கத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களே காரணமாக இருக்கக்கூடும்.
பார்ப்பன மேலாதிக்க விவாதங்களுக்கு இன்றுவரை திட்டவட்டமான விடை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாவலின் கடைசி அத்தியாயங்களில் நியூயார்க்வாழ் பார்ப்பனரான பிரபாஸின் அப்பா சொல்கிறார் “சட்டசபை எங்க கையில இல்ல, நீதித்துறை எங்க கையில இல்ல, நிர்வாகமும் எங்க கையில இல்ல.. பாப்பான் ஒக்காந்திருக்கிருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையில.. ராஜாஜி இல்ல, வக்கீல் வரதாச்சாரி இல்ல, கலெக்டர் காமேஷ்வரன் இல்ல.. ஆமாவா இல்லையா?
எங்களைத்தான் நாட்டைவுட்டே வெரட்டி அடிச்சிட்டாங்களே இந்த கோட்டா, அந்த கோட்டா, ரிஸர்வேஷன்னு.. செரி அதவுடு.. ஷேம்மாத்தான் இருக்கோம். இல்லாட்டி போனா அங்கே கோயில்ல மணி ஆட்டிக்கிட்டு இருக்கணும்..”
வைதீக பார்ப்பனராகிய அவரது மகன் சொல்கிறான். “ஐ லைக் பெரியார் யூ நோ.. புரோகிரஸிவ் மேன். என்ன கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரு.. அவர் இறந்து இத்தனை வருஷம் ஆகியும் அவரை நம்மால பீட் பண்ணமுடியலையே? எங்களைத் திட்டுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு.. இப்ப இருந்திருந்தாருனா.. எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு.. உங்களைத்தான் திட்டியிருப்பாரு.. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிறாங்க.. என் ஜாதிதான் பெருசு.. உன் ஜாதிதான் பெருசுன்னு.”
முன்பாகவே ஒரு கதாபாத்திரம் சுட்டிக் காட்டுகிறது. பெரியார் சொன்ன பெண்களுக்கான சீர்த்திருத்தத்தை முதலில் ஏற்றுக் கொண்டது பார்ப்பனர்கள்தான். தமிழக சமூக சூழலில் அவர்கள் வீட்டுப் பெண்கள் தான் முதன்முதலாக பணியாற்ற படிதாண்டு வருகிறார்கள். அக்காலக் கட்டத்தில் பெரியாரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியவர்கள் தங்கள் குடும்பப் பெண்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது குறித்தே தயக்கத்தில் இருந்தார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோரைவிட எப்போதும் பத்து/இருபது ஆண்டுகள் எல்லாவற்றிலும் முன்பாகதானிருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு.
தமிழ்மகனின் நடை மிக முக்கியமானது. அந்தந்த காலக்கட்டத்தை கண்முண் கொண்டுவந்து நிறுத்துவதில் அவரது உழைப்பு அலாதியானது. பீரியட் நாவல் என்பதுகுறித்த வறட்சித்தன்மை ஏதுமில்லாத மசாலா விவரிப்பு. புனைவு என்றாலும் நடந்த சம்பவங்கள் நறுக்குத் தெறித்தாற்போல ஆங்காங்கே சுவைக்காக தூவப்பட்டிருக்கிறது.
அண்ணாசாலை கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர் மரணமடைந்த அன்று ஒரு இளைஞனால் கடப்பாரை கொண்டு இடிக்கப்படுகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அது படச்செய்தியாக வந்திருந்ததாக நினைவு. கலைஞர் அந்தப் படத்தை எடுத்து முரசொலியில் போட்டு படக்குறிப்பு எழுதியிருந்தார். “ஏவியோர் எள்ளி நகையாட அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை. நெஞ்சிலேதான் குத்தினான். வாழ்க.. வாழ்க!” – இச்சம்பவம் நாவலின் போக்கிலே கொண்டுவரப் படுகையில் என் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை வடிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை.
1991 ராஜீவ்காந்தி கொலை, 1998 திமுக – பாஜக உறவு, 2001 கலைஞர் கைது போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் விரிவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது எனக்கு நாவலில் படும் சிறு குறை. ஏனெனில் மேற்கண்ட சம்பவங்கள் என் குடும்பத்தில் ஏற்படுத்திய பாதிப்பை நேரிடையாக கண்டிருக்கிறேன். திமுக – பாஜக உறவு மலர்ந்தபோது என்னுடைய பெரியப்பாவுக்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. கலைஞர் கைதின்போது சன் டிவியில் கண்களில் நீர்கசிய பராசக்தி பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு உடல்நலிவுக்கு ஆளானார். பிழைப்புக்காக சினிமா பத்திரிகையாளராகி விட்ட நடேசனின் மகன் ரவி கதாபாத்திரம் என்னை எனக்கே நினைவுபடுத்துகிறது.
கலைஞருக்கு கலைஞர் பட்டம் கொடுத்த எலெக்ட்ரீஷியன் பாஸ்கர், முரசொலி அலுவகத்தை கண்டு ஆச்சரியப்படுகிறார். “இது கருணாநிதிக்குச் சொந்தக் கட்டடமா?”
பதினைந்து ஆண்டுக்காலமாக கிட்டத்த கோமா நிலையிலிருந்த நடராஜன் வெட்டுப்பட்ட முகமொன்றை டிவி சானலில் கண்டு, ஞாபக வெடிப்புகளில் மீள்கிறான். கால்களில் நடுக்கத்தோடு, கண்களில் நீர்வழிந்து கட்டிலில் விழுகிறான். அழகிரி மத்திய மந்திரி ஆகிறார். “வைகோ பேசாம இங்கேயே இருந்திருக்கலாம்” என்ற ஆதங்கத்தோடு நாவல் முடிகிறது.
வெட்டுப்புலி – சமகால தமிழ் சமூகத்தின் கண்ணாடி!


யுவகிருஷ்ணா

புதன், மே 12, 2010

கும்பகோணம்- கனவு இல்லமும் கணித மேதையும்



மாக்ஸிமுக்கு உடம்பு மிகவும் முடியாமல் இருந்தது. பசி எடுக்கிறது என்பான். சாப்பிட உட்கார்ந்ததும் வினோதமாக இரண்டு ஏப்பம் வரும். வயிறு நிறைய சாப்பிட்டு முடித்துவிட்டதுமாதிரி நெளிவான். எனக்கு மனது கஷ்டமாக இருந்தது. புரோட்டா இரண்டு துணுக்குகளைச் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்தான். கூடவே ஓயாத இருமல் வேறு. சேத்தியாதோப்பில் சாப்பிட்டுவிட்டு அணைக்கரையைக் கடக்கும்போது சரியான ட்ராபிக் ஜாம்.
இரவு.. இருட்டின் அடர்த்தியும் அதிகமாக இருந்தது. முன்னால் போகிற வாகனம், வருகிற வாகனம் சரியாகத் தெரியவில்லை. எங்களுக்கு முன்னால் கருப்பு பின்னி துப்பட்டாவைப் போர்த்திக் கொண்டு நடுச்சாலையில் நிதானமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். வந்த வேகத்தில் அத்தனை நெருக்கத்தில் அவரை கவனித்தேன். கரணம் தப்பினால்... மரணடைவதற்காகவே ஏற்பாடோடு வந்தவர் போல போய்க் கொண்டிருந்தார்.
ஒருவழியாக (பாண்டிச்சேரியில் இருந்து செல்வதற்கு அந்த ஒரு வழிதான் இருந்தது) கும்பகோணம் சென்று சேரும்போது இரவு பதினோரு மணி.
சேத்தியாத்தோப்பில் புரோட்டாவோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தபோதே கலை விமர்சகர் தேனுகாவோடு தொடர்பு கொண்டு ""அறை கிடைப்பதற்கு ஒன்றும் தொந்தரவு இருக்காதே'' என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.
"மகம் என்பதால் நெரிசல் அதிகமாகத்தான் இருக்கிறது. நல்லவேளையாக நான் கும்பகோணம் டவுனில்தான் இருக்கிறேன். விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்'' என்றார்.
ராயர் ஹோட்டல்தான் கும்பகோணத்தில் சிறப்பானது. ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கு எதிரில் ஒரு ஹோட்டலில் இடம் கிடைத்திருப்பதாகச் சொன்னார். தங்கி, காலையில் எழுந்து கும்பேஸ்வரர் கோவில் குளத்தை பார்வையிட்டோம், ஜெயலலிதா ஞாபகம் வந்தார். சசிகலாவும் அவரும் மகாமகத்துக்குக் குளித்த இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்த்தேன். நான்கு பக்கமும் மண்டபம் போல ஓர் அமைப்பு இருந்தது.
தேனுகா போன் செய்தார்.
உடனே அவருடைய வீட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய வீடு பல ஆச்சர்யங்களுக்கு வழி வகுத்தது. செவ்வகம், முக்கோணம், அறுகோணம், சதுரம் போன்ற பல்வேறு வெட்டுத் தோற்றம் கொண்ட வீடு. வீட்டுக்கான வண்ணத்துக்கும் ஏதோ காரணங்கள். வீட்டுக்குப் பக்கவாட்டில் தனியாக ஒரு சுவர். இந்தச் சுவரை பாருங்கள் என்று காட்டினார். குறும்படம் திரையிட வசதியான ஒரு சுவர்.
ஆனால் அந்தச் சுவரை இரு சதுரமும் ஒரு செவ்வகமுமாகப் பிரிக்கலாம் என்றும் அந்தச் செவ்வகத்தை மேலும் ஒரு செவ்வகமும் சதுரமாகவும் பிரிக்கலாம் என்றும் சொன்னார். தொடர்ந்து அதைப் பிரித்துக் கொண்டே செல்ல முடியும் என்ற போது ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு கலை நுணுக்கங்கள் அந்த வீட்டில் இருந்தாலும் இப்படி கட்டுவதற்கு அனுமதித்த அவருடைய மனைவிக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். நான் சொன்னேன். வசதியான அறைகள், பெரிய ஹால், மேலே இரண்டு மாடிகள் இப்படித்தான் பெரும்பாலும் கனவு இருக்கும். வீட்டுக்கு வருகிறவர்கள் எத்தனை பேர் எப்படியெல்லாம் கருத்து சொல்லி அவரைக் குழப்பியிருப்பார்கள்? ரிடையர் ஆன பணத்தில் இப்படி ஒரு கனவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதுதான் தேனுகாவின் விருப்பம்.
மாக்ஸிம் தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பதைப் பார்த்து நெய்யில் மிளகை வதக்கிச் சுடச் சுட சாப்பிடச் சொன்னார் திருமதி தேனுகா. மாக்ஸிமுக்கு அதோடு இருமல் வரவேயில்லை.
நாங்கள் கணிதமேதை ராமானுஜம் வாழ்ந்த வீட்டைப் பார்க்கக் கிளம்பினோம். சாரங்கபாணி கோயிலுக்கு அருகே இருந்தது அந்த மகத்தான மேதையில் எளியவீடு. உள்ளே நுழைந்தபோது பெரும்பரவசம் ஏற்பட்டது. புதுவையில் பாரதி வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற போது ஏற்பட்ட அதே பரவசம். சிலிர்ப்பு. என்னதான் நாத்திகம் பேசினாலும் இதெல்லாம் மூளைக்குள் இருக்கும் மிகப் பாரம்பர்யமான உணர்வுதான்.
அவர் குறித்து வைத்திருந்த சில கணிதப் புதிர்களை அட்டையில் எழுதி மாட்டி வைத்திருந்தனர். ஒரு எண்ணை தொடர்ந்து வர்க்க மூலம் காண்பதாக ஒரு புதிர் எழுதியிருந்தார். அந்த வர்க்க மூலங்களில் இருக்கும் ஆச்சர்யமான ஒற்றுமையை சொல்லியிருந்தார். எண்கள் அவருக்கு வாழ்க்கையாகவும் பொழுது போக்காகவும் புதிராகவும் எல்லாமுமாக இருந்திருக்கிறது.
லண்டனில் கேம்பிரிட்ஜில் தாமஸ் ஹார்டியுடன் ராமானுஜம் பணியாற்றியது ஒரு பொற்காலம். ஆனால் லண்டன் பனி ராமானுஜத்துக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. கடும் பாதிப்புக்கு ஆளாகி இரண்டு மூன்று முறை தற்கொலைக்கும் முயன்று காப்பாற்றப்பட்டார்.
1916 முதல் 19 வரை ஹார்டியுடன் அவர் பழிகியிருந்தார். அந்த நான்கு ஆண்டு பழக்கத்திலேயே ஹார்டிக்கு ராமானுஜம் மீது அதீத மரியாதை ஏற்பட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் பணியாற்றிய கணித மேதைகளை தரவரிசைபடுத்திய போது தாமஸ் ஹார்டி தனக்கு 25 மதிப்பெண்களும் ராமானுஜத்துக்கு 100 மதிப்பெண்களும் வழங்கியதிலிருந்து அவர் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதை உணர முடியும்.
ராமானுஜத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாகி லண்டனிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப இருந்த நேரத்தில் அவரைப் பார்க்க வந்த ஹார்டி தன் கார் தாமதத்துக்குக் காரணம் என்று கூறி, அந்தக் காரின் எண்ணிலும் ஒரு சுவாரசியமும் இல்லை என்று நொந்து கொண்டார். "காரின் எண் 1729. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்றார் ஹார்டி.''
உடல்நிலை மோசமாக இருந்தும் அல்சரில் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும் ராமானுஜம் சொன்னார்: "இது சுவாரசியமான எண்தான். பத்தின் மும்மடங்கையும் ஒன்பதின் மும்மடங்கையும் கூட்டினால் இந்த எண் வரும். அதே போல் பனிரெண்டின் மும்மடங்கையும் ஒன்றின் மும்மடங்கையும் கூட்டினாலும் இந்த எண் வரும்''.
ஹார்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
32 வயதில் இறந்துபோன அந்த மாமேதையின் வீட்டில் அவர் குளித்த கிணற்றடியில் நின்று கொண்டு இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது உடல் சிலிர்த்தது. அதிலென்ன தவறு இருக்கிறது? சிலிர்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

(இன்னும் கொஞ்சம் இருக்கிறது)

திங்கள், மே 10, 2010

தி ஹிந்து



தமிழில்
அன்று, அன்றாடம் உபயோகப் படுத்திய தீப்பெட்டி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? திட சரீரமுள்ள இளைஞன் கையில் அரிவாளுடன் சீற்றம் கொண்டு நிற்கும் புலியைத் தாக்க ஆயத்தமாக இருக்கும் காட்சியை அதில் காணலாம். அது அப்படியே உறைந்து போன காட்சிதான். இந்தப் போராட்ட்த்தில் வென்றது யார்? மனிதனா அல்லது விலங்கா என்பது நம் யூகத்திற்கு விடப்பட்டது!

20 வது நூற்றாண்டின் முதல் தலைமுறைகளில் மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் போராட்டங்கள் என்பவை சகஜமான நிகழ்வுகளாகத்தான் இருந்தன. நமக்குக் கதை சொல்லும் ஆசிரியர் செய்வதெல்லாம் தனது மூதாதையர் ஒருவர் இந்தப் புலி குடும்பத்தில் உள்ள ஒருவரை வீழ்த்திய நிகழ்வு பற்றிய விவரங்களைச் சேகரிக்க முன்னடி எடுத்து வைப்பது தான். இது சார்ந்த நீண்ட பயணத்தை அவர் மேற்கொண்டு இவ்விஷயம் பற்றிக் கண்டிருந்த, கேட்டிருந்த அல்லது ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்ட எல்லா தரப்பினரிடமும் மொழியாட, இந்த நாவல் ஒரு நிதான கதியில் நம்மை இட்டுச் செல்கிறது.

ஒரு பெரிய வீச்சுடைய இந்த நாவலானது ஒரு பெரும் ஓவிய தளத்தில் புனையப் பட்டது போல, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொன்றிற்கும், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும், ஒரு அன்பான அணுகுமுறையுடன் காலத்தின் நகர்தலையும், வரும் பாத்திரங்களின் போக்குகளையும் – இவர்கள் எல்லாம் இந்த முழுக்கதையில் ஒரு பாகம் வகிப்பவர்கள்தானே? – நமது கண்முன்னே கொண்டு வைக்கிறது. பாத்திரங்களுள் சில நிஜமானவை, சில கதைக்கப்பட்டவை. கதைக்கப்பட்டவைக்கு நிஜ முலாம் பூசியிருக்கலாம் ; நிஜமானவற்றிற்கு கதை என்ற வர்ணத்தையும் பொழிந்திருக்கலாம். அரசியல், சினிமா இன்னும் மற்ற எத்தனையோ இலாக்காக்களை நாவல் தொட்டுச் செல்கிறது. தலைமுறைகளின் வளர்ச்சி அபாரமான கட்டுரை வடிவத்தில் வரும. அதிலிருந்து கதையம்சம் பொருந்தியவற்றை அவ்வப்பொழுது நாடி நழுவி சுவாரஸ்யமாகச் சென்று விடும்.

மகிழவைக்கும் ஒரு இடம், ஜமீந்தாரின் குதிரைக் கொட்டகையிலிருந்து கட்டிய குதிரையை அவிழ்த்து விட்டு, ஆங்கில அலுவலரின் குதிரையின் மீது அந்த இளைஞன் சவாரி செய்வது. இதை அவன் பலமுறை செய்கிறான், பிடிபட்டும் கொள்கிறான். இதற்கு அவனுக்கு கிடைப்பது என்ன என்பது பின்னர் விவரிக்கப் படுகிறது.

பொறுமையாய் படிப்பவர்கள், இந்த நாவலின் திருப்பங்களையும், திருப்பு முனைகளையும் சந்திக்க சந்திக்க, அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலும் அதற்குப் பின்னும் உண்டானவை பற்றிய ஒரு உண்மைத்தனம் நிறைந்த ஒரு ஆவணமே!








Vettupuli review in The Hindu

அரசியலும் சினிமாவும் இணைந்திராத , வெள்ளைக்காரன் காலத்து சென்னை..

ஒரு தீப்பெட்டி . அதன் அட்டையின் மேல் படம் . கட்டுமஸ்து இளைஞன் ஒருவன் கையில் வெட்டரிவாளோடு சிறுத்தையை எதிர்கொள்ளுகிறான். அது யாராக இருக்கும்? ஏன் சிறுத்தைய வெட்டணும்? ஏன் புலியோ சிங்கமோ இல்ல? ஒரு வேளை அது உண்மை சம்பவமோ? கேள்விகள் நம்மை எப்போதும புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்பவை. இந்தக்கேள்வியும் நம்மை காலச்சக்கரத்தில் ஏற்றிவைத்துக்கொண்டு காலத்தை திருகுகிறது. அது சின்னாரெட்டியென்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிஜமாகவே சிறுத்தையை வெட்டிய வீரன் என்றும் வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.

சின்னாரெட்டியின் கதைத்தேடலில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் இதே சென்னை.. காடுகளடர்ந்த சென்னை நகரம். இங்கே அரசியலும் சினிமாவும் இணைந்திராத , வெள்ளைக்காரன் காலத்து சென்னை.. சென்னைக்குடிநீருக்காக சிலபல கிராமங்களை காலி செய்து அவர்களை கொண்டே ஏரிகள் உருவாக்கிக்கொண்டிருந்த காலம்... ஜாதீயமும் , நிலபிரபுத்துவமும் ஒவ்வொருவருடைய மனதிலும் கொடிக்கட்டிப் பறந்த சென்னை. கூவத்தில் குளியல் போட முடிகிற சென்னை. காபி என்கிற வஸ்துவை முதன்முதலாக 'மாம்பலத்துல ஐயமாருங்க இப்பலாம் அததான் குடிக்கிறாங்களாம்.. நானும் குடிச்சேன் தித்திப்பா இருந்துச்சு' என்று பேசும் ஆச்சர்ய மனிதர்களின் காலம். சினிமா தியேட்டரை முதன்முதலாக பார்த்து என்ன ஒரே இரைச்சலா இருக்கு... உப்புசமா இருக்கு என்று வியக்கும் மனிதர்கள். சென்னையிலிருப்பவர் இன்று நின்று கொண்டிருக்குமிடம் எப்போதோ யாராவது விவசாயம் செய்து கொண்டிருந்த இடமாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் கிராமத்து மைனர் சினிமாகனவுகளோடு நின்று கொண்டிருக்கலாம்.


அரசியலில் சினிமாவின் தாக்கம் உருவாகத்தொடங்கிய காலகட்டத்திலிருந்து அழகிரி அரசியல்வரைக்குமான ஒரு நூற்றாண்டின் அரசியல் மாற்றங்களை அடிகோடிட்டு காட்டுகிறது வெட்டுபுலி. இங்கே பார்ப்பனீயத்திற்கெதிரான அரசியலின் வளர்ச்சியும் , திராவிட இயக்கங்களின் வளர்ச்சியும் அதையொட்டி நிகழ்ந்த சினிமா அரசியலும் என நூறாண்டு கால வரலாற்றிலின் சில தருணங்களை அருகிலிருந்து தரிசிக்கும் ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது!.


தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் நமக்கு அந்த அனுபவத்தை ஓரளவுக்கேனும் திருப்தியாய் தருகிறது. ஆக்சன் படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் குதிரை வேக சேஸிங்கில் துவங்குகிறது லட்சுமண ரெட்டியின் கதை. நூல் பிடித்தது போல காதல், காமம், காமெடி என மசாலாவாக பயணிக்கும் நாவலில் திடீரென எம்.ஜி.ஆர், அறிமுக நாயகனாக வருகிறார். பெரியார் ஒரு அத்தியாயம் முழுதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார். யாரோ ராம்ச்சந்தர்ன்னு ஒரு பையன் நல்லா நடிக்கிறான்பா அவன ஹீரோவா போடலாமா என்று ஒரு அறிமுக புரொடியுசர் பேசுகிறார். அந்தந்த காலத்தின் அரசியல் கதையில் நிகழும் சம்பவங்களினூடகவும் வசனங்களின் மூலமாகவும் நமக்கு சொல்லப்படுகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய மக்களின் அரசியலும் , அதற்கு பிறகான அரசியல் நிலைப்பாடும் மாற்றங்களும், இங்கே திராவிட இயக்கங்கள் வித்திட்ட சமூகப்புரட்சியின் பிண்ணனியும் கதையின் வேராக ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. அரசியல் மற்றும் சினிமாவுக்குமான தமிழக உறவை அரசியல் வரலாறோடு சினிமாவின் வரலாறையும் சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். ஆனால் இரண்டுமே மேலோட்டமாக ஆங்காங்கே அறிமுகங்களாக அடங்கிவிடுவது.


தமிழகத்தின் கடைசி நூறு வருட வரலாற்றில் தவிர்க்க இயலாதவை திராவிட கட்சிகள். அந்த இயக்கங்களாலும் அவற்றால் விளைந்த மாற்றங்களாலும் குடும்பத்தை இழந்து அழிந்து போனவர்கள் , வளர்ந்தவர்கள், அதன் வளர்ச்சியோடு தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் என மூன்று வகையினரையும் பல்வேறு பாத்திரங்களின் வழியே சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். அதில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். திராவிட சித்தாந்தங்களை வாசல் வரைக்கும் வைத்து கொள்ளுபவர், அதை பற்றி எப்போதாவது மனைவியோடு பேசுபவர், படுக்கையறை வரைக்கும் திராவிடம் பேசி நாத்திகம் பேசி நாசமாகினவர் என மூன்று கிளை கதைகள் உண்டு. இங்கே பார்ப்பனீய எதிர்ப்பு இன்றளவும் தீராமல் புகைந்து கொண்டிருக்கிற அல்லது மேடைகளில் பற்றி எரிகிற ஒன்று. அதன் ஆணிவேரையும் காலப்போக்கில் பார்ப்பன எதிர்ப்பின் தமிழக அரசியல் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து நீர்த்துப்போனது, பெரியாரின் திராவிட அரசியலுக்கும், அண்ணாவின் அரசியலுக்குமான வித்தியாசங்கள், ஏன் ஜஸ்டிஸ் கட்சி திகவானது, ஏன் அது திமுகவாய் பிரிந்தது, மாதிரியான அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை இங்கே வாய்வழியாக சொல்லப்படும் கதைகளை தொகுத்தும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்து நாவல் முழுக்க சம்பவங்களாக்கியிருக்கிறார் தமிழ்மகன். நம்பகத்தன்மை குறித்து கவலைப்படுகிறவர்கள் கவலைப்படுவார்கள். வரலாற்றின் நம்பகத்தன்மை அதைப்படிப்பவர்களின் மனதிலே இருப்பதாய் எண்ணுகிறேன்.


நாவல் முழுக்க வரலாற்றில் நமக்குத்தெரிந்த சுவாரஸ்யமான பக்கங்கள் கதையினூடாக தொகுக்கப்பட்டுள்ளதால் , வேர்க்கதை தொய்வடையும் போதெல்லாம் சம்பவங்கள் வேகம் கூட்டுகின்றன.


வரலாற்று உண்மைகள் அவரவர்க்கு ஏற்றாற் போல விவரிக்கப்படுகின்றன. இங்கு டிவியின் வருகைக்குப் பின் வரலாறு கூட முன்தீர்மானத்துடன் சொல்லப்பட்டன. அதற்கு முன் பத்திரிக்கைகள் யார் கையில் இருக்கிறதோ அவர்களுடைய பார்வையில் வரலாறு திரிந்தது. அப்படி திரிந்ததும் புனைந்ததுமான தமிழகத்தின் சமகால வரலாற்றை திராவிடத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் ஊடாக நடுநிலையோடு சொல்ல முயன்றிருக்கிறார் நூலின் ஆசிரியர்.


இந்நாவலில் காலம் ஒவ்வொரு பத்தாண்டும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வேகமெடுக்கிறது. அதைப்போலவே முப்பதுகள் பொறுமையாகவும் 90கள் அதீத வேகத்திலும் பயணிக்கிறது. சென்னையை ஓரளவுக்கேணும் அறிமுகமிருந்தால் கதையோடு நாமும் ஜாலி சவாரி செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் கையில் மேப்போடு உட்கார்ந்து கொண்டும் படிக்கலாம், புது அனுபவமாக இருக்கக்கூடும்.


சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை படித்துவிட்டு பல நாட்கள் நினைத்திருக்கிறேன். அந்த கதை நிகழும் ஊரைப்போய் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று! அந்த மனிதர்களை சந்திக்க வேண்டுமென்று! அவர்களுடைய குரலில் அந்த மொழியை உணரவேண்டுமென்று! ஏனோ அதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை வாய்க்கவில்லை. அதே மாதிரியான உணர்வை வெட்டுப்புலி நாவலும் எனக்குத் தருகிறது. ஜெகனாதபுரம் , ரங்காவரம் , பூண்டி, ஆந்திரா செல்லும் சாலை , தொடர்ந்து சென்னையில் சில பகுதிகள் என எனக்கு மிக அருகிலேயே இருக்கிறது. பார்க்க வேண்டும்.


புத்தகத்தின் பல இடங்களில் எழுத்துப்பிழை. தாறுமாறாக!. மற்றபடி இது தீவிர இலக்கிய நூலாவென்று நிர்ணயிக்க முடியவில்லை. வரலாற்றின் சுவாரஸ்யத்திற்கு மேல் அது குறித்த தேடலை உண்டாக்குகிறது. நிச்சயம் என்னைப் போன்ற ஜனரஞ்சக நாவல் வாசிப்பாளனுக்கு முழுமையான திருப்தி அளிக்கிறது. அரசியல் பிடித்தவர்களுக்கும் சினிமா பிடித்தவர்களுக்கும் சென்னை பிடித்தவர்களுக்கும் பிடிக்கும்!

அதிஷா

ஞாயிறு, மே 09, 2010

சேலத்தில் தமிழ்மகனின் வெட்டுப்புலி!

சேலத்தில் நடைபெற்ற வெட்டுப்புலி விமர்சனக்கூட்டத்தில் நண்பர் சிவராமன் எழுதி அளித்த விமர்சனம்.
அனைவருக்கும் வணக்கம்.

இப்படியொரு வாய்ப்பு அமைந்தது தற்செயல்தான் என்றாலும் மனம் முழுக்க நிரம்பி வழியும் துக்கத்தை எந்த சொற்களாலும் விளக்கிவிட முடியாது.

ஆமாம். வெட்டுப்புலி குறித்து பேச வந்திருக்கிறேன்.

வெட்டப்பட்ட புலியின் சரித்திரத்தை பேச வந்திருக்கிறேன்.

இன்னும் 10 நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத அழிவின் சோகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்தத் தருணத்தில்தான் வெட்டுப்புலி குறித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதிலும் தமிழனால் வெட்டப்பட்ட புலி அது என்பது அழுத்தம்திருத்தமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

தலைமுறை தலைமுறையாக வெட்டுப்பட்ட புலியின் சோகத்தை, தீரத்தை, சரித்திரத்தை, சறுக்கலை நாம் கடத்தித்தான் ஆக வேண்டும். ஒரு இனத்தை உயிர்ப்பிக்கும் விஷயமாக அதுவே இருக்கும்.

என்னடா இது... இவன் நாவலை குறித்து பேசாமல் வேறு எதையோ பேசுகிறானே... அதுவும் அரசியல் சார்ந்ததாக இருக்கிறதே... கூட்டத்தில் கலகம் உண்டாக்குவதுதான் இவன் நோக்கமா...

என்று நீங்கள் நினைக்கலாம்.

நினைக்க வேண்டும்.

காரணம், நான் பேசுவது வெட்டுப்புலி நாவல் குறித்து என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை -

ஆரம்பத்தில் நான் பேசியதை வைத்து உங்கள் மனதில் எழுந்த எண்ணங்களும், பிம்பங்களும்.

இது அரசியல் நாவல். ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு இயக்கத்தின் வரலாற்றை சொல்லியும், சொல்லாமலும் செல்லும் நாவல். சொல்லப்பட்டதை வைத்து சொல்லப்படாததை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நிரப்ப வேண்டும் என்பது இந்நாவல் உணர்த்தும் அழுத்தமான செய்தி. அதனால்தான் சாதாரண குடும்பங்களின் வழியே அசாதாரணமான 75 ஆண்டுக் கால சரித்திரம் எழுத்துக்களாக இடைவெளியுடன் கோர்க்கப்பட்டிருக்கிறது.

இறுதி அத்தியாயத்துக்கு முந்தைய அத்தியாயத்தின் இறுதி பத்தி வெட்டுப்பட்ட ஒரு முகத்தின் மீது திரும்பத் திரும்ப மீடியாக்களின் வழியே மக்களின் கவனம் குவிக்கப்பட்டதை சொல்கிறது. அது நம்பிக்கை அளித்த முகம். ஓர் இனத்தின் குறியீடு. சுதந்திரத்துக்கான விதையாக அந்த முகத்தை பலரும் பார்த்தார்கள். நேசித்தார்கள். வழிபட்டார்கள். அந்த முகம் ஒருபோதும் வெட்டப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், அந்நிகழ்வு நடந்துவிட்டது. அது கொடுத்த அதிர்ச்சி நடராஜனை அழ வைக்கிறது. பல ஆண்டுகளாக நினைவிழந்து பித்துப் பிடித்தது போல் காணப்பட்ட அவனுக்கு நினைவு திரும்பியது... தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்த வெட்டுப்பட்ட முகத்தை பார்த்தபோதுதான்.

இதனையடுத்து நாவலின் இறுதி அத்தியாயம், மு.க.அழகிரி மத்திய அமைச்சராவது குறித்து சொல்கிறது.

உண்மையில் நாவல் ஆரம்பமாவது இந்த இடத்திலிருந்துதான். இங்கிருந்து தொடங்கும் நாவலை எழுதும் பொறுப்பு வாசகர்களிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவல் வெற்றியடையும் பொறி இதுதானா?

வெட்டுப்புலி (Cheeta Fight) தீப்பெட்டியை நாம் பார்த்திருப்போம். சிறுத்தையை ஒரு மனிதன் நேருக்கு நேர் நின்று அரிவாளால் வெட்டும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி அது. எதற்காக அப்படியொரு படத்தை தீப்பெட்டியில் அச்சிட்டிருக்கிறார்கள் என்று நான் இதுவரை யோசித்ததில்லை. ஒரு கம்பீரத்துக்காக அப்படி வரைந்து பெட்டியில் பொறித்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது தமிழ்ச்செல்வனின் தாத்தாவின் பெரியப்பா - அதாவது கொள்ளுத் தாத்தாவின் - நிஜமான புகைப்படம் என்று அறிந்தபோது பிரபாஷ், ஃபெர்னாண்டஸ் போலவே எனக்கும் ஆச்சர்யமும், பதட்டமும் ஏற்பட்டது.

அதனாலேயே தமிழ்செல்வன் தன் கொள்ளுத்தாத்தாவின் வரலாற்றை தேடி பயணப்பட்டபோது அவனது மூன்றாவது நண்பனாக நானும் எனது வேலையை எல்லாம் விட்டுவிட்டு பயணம் செய்தேன். அதற்கு காரணம் இருக்கிறது.

சிறுத்தையை - கவனிக்க நான் மட்டுமல்ல தமிழ்ச்செல்வனும் புலி என்று குறிப்பிடவில்லை - கத்தியால் வெட்டிய சின்னா ரெட்டி உண்மையில் தமிழ்ச்செல்வனின் அப்பா வழி சொந்தமல்ல. அம்மா வழி சொந்தம்.

இந்த உண்மை தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, என்னையும் திடுக்கிட வைத்தது. மனதளவில் ஏற்பட்ட நெகிழ்வில் சட்டென்று தமிழ்ச்செல்வனின் தோள் மீது ஆதரவாக கைபோட்டேன். அவன் என் இனம். தாய்வழி சமூகத்தை தேடி புறப்படும் ஆதித் தமிழனின் வேர் என்னைப் போலவே அவனிடமும் இருக்கிறது.

நாங்கள் கை கோர்த்தபடி சின்னா ரெட்டியின் வரலாற்றை அறிய புறப்பட்டோம். எங்கள் கண்முன்னால் விரிந்தது இரு குடும்பங்களின் கதை. அந்தக் கதையினுள் நான் நுழைய நுழைய எனக்குள் உணர்ச்சிப்பூர்வமான மாறுதல்கள்.

ஓவென்று அலறி தமிழ்ச்செல்வனை கட்டிப் பிடித்து நான் கதறியதை பிரபாஷும், ஃபெர்னாண்டஸும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். தமிழ்ச்செல்வனாலேயே என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை புரிந்துக் கொள்ள முடியாதபோது மற்ற இருவரால் எப்படி உணர முடியும்?

உண்மையில் நாங்கள் அறிந்தது தமிழ்ச்செல்வனின் தாய்வழி கொள்ளுத் தாத்தாவின் வரலாற்றை அல்ல. எனது கொள்ளுத் தாத்தா, தாத்தா, மாமா, பெரியப்பா, பெரியம்மா... என சகலரின் சரித்திரமும் அதில் அடங்கியிருக்கிறது. ஆமாம், இது என் குடும்பத்தின் கதை...

இப்படி இக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருமே உணர முடியும் என்பதுதான் இந்நாவலின் பலம்.

தமிழக அரசியலோடு நம் ஒவ்வொருவரின் குடும்பமும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சின்னா ரெட்டி, லட்சுமண ரெட்டி, தசரத ரெட்டி, நடராசன், தியாகராசன், ஹேமலதா, விசாலாட்சி, நாகம்மை... என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.

இந்நாவல் சொல்லப்பட்ட முறையிலும் சரி, சொன்ன களனிலும் சரி... புதிதாக இருக்கிறது. சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் திருவல்லிக்கேணி, தங்கச்சாலை, மயிலாப்பூர் மிஞ்சிப் போனால் பட்டாளம், ஓட்டேரி என குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றியபோது -

இந்நாவல் செங்குன்றத்துக்கு அடுத்துள்ள சோழவரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. சென்னையின் குடிநீர் விநியோகத்துக்காக வெள்ளையனிடம் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்ததோடு, பிழைப்புக்காக தன் நிலத்தை தானே வெட்டும் குடிமக்களின் சோகத்தை இந்நாவல் கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் இந்திய விடுதலைக்கு ஆதரவான காங்கிரசும் அதனை இன மற்றும் மொழி ரீதியாக விமர்சித்த நீதிக்கட்சியும் செல்வாக்கு பெற்றிருந்தன. நீதிக்கட்சி பின்னர் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கமாகியது. இந்த நெடிய வரலாறு... இந்நாவலில் உயிர் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபத்திரத்துடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

பெரியார், அண்ணா, கலைஞர் மட்டுமல்ல... எம்.ஜி.ஆர்., ரஜினியும் இந்நாவலில் வருகிறார்கள். 'எண்டர் தி டிராகன்' ஏற்படுத்திய அதிர்வை கனவுகள் உதிரும் கட்டமாக நாவல் மாற்றியிருக்கிறது.

பாலச்சந்தரை குறித்து தியாகராசன் பொருமும் இடம் அழுத்தமானது என்றால் -

கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை அளித்த பாஸ்கரனை 'வண்ணத்திரை' அலுவலகத்தில் ரவி சந்தித்து பேசும் இடம் ஆழமானது.

'நாடார் குரல் மித்ரன்' நாளிதழில் வெளிவந்த பெரியார் குறித்த செய்தியை லட்சுமண ரெட்டி அறியும் கட்டமும், அ.ச.ஞானசம்பந்தத்தை விமர்சிக்கும் தியாகராசனின் செயலும், பெரியார்தாசனுடன் தேநீர் பருகும் நடராசனின் உள்ளக் கொந்தளிப்பும் -

எதை உணர்த்துகிறது? அதை ஒவ்வொரு வாசகனும் கண்டறியும்போது -

எழுதப்பட்ட பிரதிகளுக்கு அப்பால் அலைந்தபடி இருக்கும் வரலாற்றை சட்டென பிடிக்க முடியும்.

திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆறுமுக முதலி, டூரிங் டாக்கீஸ் கட்டியதுடன் நின்றுவிடுகிறார். ஆனால், அவரது மகன் சிவகுரு படம் தயாரிக்கிறான். அந்தப்படம் பாதியுடன் நின்றுவிடுகிறது. இறுதியில் கோயில் வாசலில் பிச்சைக்காரனாக சிவகுரு இறந்து போகிறான்.

வனஜா என்னும் நடிகையின் மீது சிவகுரு கொள்ளும் மையல், பின்னால் நடிகை செண்பகாவை ரவி முதன்முதலாக பேட்டி காண்பதுடன் தொடர்புடையது. செண்பகாவின் தாய் பெயர் வனஜா என்று போகிற போக்கில் பதிவான வாக்கியம் தமிழ்ச்செல்வன், பிரபாஷ், ஃபெர்னாண்டஸை மட்டுமல்ல நம்மையும் யோசிக்க வைக்கிறது. எழுதப்படாத வனஜாவின் கதையை - அவளது கனவை - வாசகன் இங்கு எழுத ஆரம்பித்தால் அவனுக்கு இன்னொரு நாவல் கிடைக்கும்.

இந்நாவலில் சில காதல் கதைகள் நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. லட்சுமண ரெட்டி தாழ்த்தப்பட்ட பெண்ணான குணவதி மீது கொள்ளும் காதல், முதலாவதாக வருகிறது. இந்தக் காதலால் ஒரு சமூகமே எப்படி கருகிப் போகிறது என்பது உணர்ச்சியுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வாசகனான என்னை மிகவும் பாதித்த காதல் தியாகராசன் - ஹேமலதா வாழ்க்கைதான். கடவுள் மறுப்பாளனாக வளரும் தியாகராசனுக்கு அமைந்த மனைவி தீவிர கடவுள் பக்தை. இந்த முரண்பாடுகள் அவர்களது வாழ்க்கையை எப்படியெல்லாம் கலைத்துப் போடுகிறது என்பது ரத்தமும் சதையுமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மணிகண்டனுக்கு பிறந்த குழந்தையை தன் குழந்தையாக தியாகராசன் பாவிப்பதும், மருத்துவமனையில் தன் குழந்தையின் பெயராக தன் மாமியாரின் பெயரான புனிதாவின் பெயரை ஹேமலதா உச்சரிப்பதும் தனியாக எழுதப்பட வேண்டிய ஒரு நாவலின் ஹைக்கூ.

பிராமணப் பெண்ணாக இருப்பதாலேயே கிருஷ்ணப் ப்ரியாவின் காதலை ஏற்க மறுக்கும் நடராசன், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தேவகியை மணக்கிறான். ராஜீவ்காந்தியின் மரணத்தை தொடர்ந்து அவனுக்கு சித்தபிரமை பிடிக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் சுயநினைவின்றி வாழ்கிறான். அப்போதும் தேவகி அவனுடனேயே வாழ்கிறாள். ஆண்டுக்கு ஒருமுறையாவது நட்பின் அடிப்படையில் கிருஷ்ணப் ப்ரியா அவனை பார்த்துவிட்டு செல்கிறாள்.

இந்தப் பகுதியை சற்றே வேறுவிதமாக வாசித்துப் பார்ப்போம். ஒருவேளை கிருஷ்ணப் ப்ரியாவை நடராசன் திருமணம் செய்துக் கொண்டிருந்தால் -

அவனுக்கு சித்த பிரமை பிடித்த நிலையிலும் அவனுடன் கிருஷ்ணப் ப்ரியா வாழ்ந்திருப்பாளா?

இந்தக் கேள்விக்கான விடையில் மறைந்திருக்கிறது 21ம் நூற்றாண்டின் கதை!

வயதான காலத்தில் மருத்துவமனையில் படுத்திருக்கும் லட்சுமண ரெட்டி முணுமுணுப்பது குணவதியின் பெயரைத்தானே? முதல் காதல் இறுதிவரை தொடரவே செய்யும் என்பது எவ்வளவு அனுபவப்பூர்வமான உண்மை?

திராவிட கழக அனுதாபியான லட்சுமணரெட்டி, தன் குடும்பத்தை சாதி மறுப்பு குடும்பமாக மாற்ற முடியாமல் தவிக்கிறார். தன் மகளுக்கு வேறு சாதியில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பமே அனுமதி தர மறுக்கிறது. அப்போது அவருக்குள் நிகழும் போராட்டம், ஒரு தலைமுறையின் மனப்போராட்டம். அபசகுனம் பிடிச்ச பெண் என உறவினர்கள் குற்றம்சாட்டும் பெண்ணை விடாப்பிடியாக திருமணம் செய்து கொள்வதன் மூலமாக தனது கொள்கையை ஓரளவு காப்பாற்றிக் கொள்கிறார். அவரால் அந்தச் சூழலில் முடிந்தது அவ்வளவுதான்.

திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர்கள் ஒரு கட்டத்தில் அன்னை, சாய்பாபா என்று மாறுவதை வாழ்க்கையின் போக்கிலேயே நாவல் உணர்த்துகிறது.

குறிப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி... என ஆண்கள் உயிருள்ள தலைவர்களுக்கு பின்னால் அணி திரள்வதற்கு மாற்றாக -

வாழும் தெய்வங்கள் என சமூகத்தால் மதிக்கப்படும் மனிதர்களுக்கு பின்னால் அவர்களது குடும்பங்கள் அணி திரள்கிறது. இது அந்த குடும்ப ஆணை எதிர்க்க வேண்டும் என்பதற்காக செய்யும் செயல். அதனாலேயே அவன் யாரை மதிக்கிறானோ -

யாரது கோட்பாடுகளை பின்பற்ற துடிக்கிறானோ -

அதற்கு எதிரான பக்கத்துக்கு மூர்க்கத்துடன் செல்கிறார்கள்.

இந்த முரணுக்கு காரணம் எது?

அரசியல் தலைவர்களா?

இயக்கமா?

அல்லது சமூகமா?

வருங்கால தலைமுறை ஆராய வேண்டிய இந்த நிகழ்கால அவலத்தை பதிவு செய்திருக்கும் நாவலின் பகுதி, முக்கியமான விவாதத்தை முன் வைக்கிறது.

பத்து பத்து ஆண்டுகள் கொண்ட பாகமாக இந்நாவல் அச்சிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாகத்திலும் அந்தந்த காலத்தில் நடந்த அனைத்து அரசியல் நிகழ்வுகளும் பதிவாகியிருப்பதாக சொல்ல முடியாது. ஆசிரியரின் தேர்வு சார்ந்த விஷயங்களே நாவல் களத்தில் வருகின்றன. அதில் தவறும் இல்லை.

ஆனால், தேர்வு செய்யப்படாத அரசியல் நிகழ்வுகள் இருக்கிறதே... அது முக்கியம்.

அவை ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணமே, நமது இப்போதைய பிற்போக்குத்தனத்துக்கு காரணம்.

இதைதான் அழுத்தம் திருத்தமாக இந்நாவல் உணர்த்துகிறது.

இந்நாவலை எழுதிய தமிழ்மகனின் நண்பனாக -

சில வருடங்கள் அவருடன் ஒன்றாக பணிபுரிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

என் குடும்ப வரலாறாக சொல்லப்பட்ட நிகழ்வுகளின் வழியே அறியப்படாத உறவுகளின் சரித்திரத்தை நான் கண்டடைய உதவியதற்கு நன்றி நண்பா...

வாருங்கள்...

புலிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டதற்காக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலைப்படும் இந்த நேரத்தில் -

வெட்டுப்புலியின் சரித்திரத்தை தெரிந்து கொள்வோம்...

வெட்டுப்புலி என்று இப்போது நான் குறிப்பிட்டது நாவலை மட்டுமல்ல....

-------

இன்று சேலத்தில் நடக்கும் 'சொற்கப்பல்' நாவல் விமர்சன அரங்கில் வாசிக்கப்பட உள்ள கட்டுரை இது. தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் சேலம் செல்ல முடியவில்லை. ஆனால், கட்டுரையை அனுப்பிவிட்டேன். என் சார்பில் கட்டுரையை வாசிக்கும் நண்பருக்கும், வாய்ப்பளித்த 'சொற்கப்பல்' அமைப்பாளர்களுக்கும் நன்றி. 8-5-2010.

சனி, மே 08, 2010

சொல்வனம்- புத்தகவிமர்சனம்


புத்தகவிமர்சனம்
வெட்டுப்புலி
க.குணசேகரன் |

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இன்றைய திருவள்ளூர் மாவட்டத்து நிஜமான ஒரு கதாநாயகனை மையப்படுத்திப் படைக்கப்பட்ட நூல் ‘வெட்டுப்புலி’. இந்திய வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் ஷெர்ஷா சூரி என்கிற ஆப்கானிய வீரன் கையாலேயே புலியை வீழ்த்தி அதனாலேயே, ‘ஷெஹர்’ என்கிற புலி வழங்கும் பெயரையும் ஆட்கொண்டவன். ஆள்பவன் என்கிற ‘ஷா’வையும் சேர்த்து ஷெர்ஷா என அவன் அழைக்கப்பட்டான். ஆனால் இந்தப் படைப்பில் நிஜமாகவே தன் கருக்கரிவாளால், நேர்கொண்ட சிறுத்தையை வெட்டி வீழ்த்திய வீரனை சின்னா ரெட்டி என்ற சொந்தப் பெயராலேயே சனங்கள் வழங்கினர். வேறு அடைமொழி எதுவும் தரவில்லை. இன்றுள்ள நகரச்சுவர்களை நாறடிக்கும் சுவரொட்டிகளில் படையே நடத்தாமல் தளபதிகளும், பாதுகாப்பு வீரர்களுடன் உயிருக்கு பயந்து பயணம் செய்கிற மாவீரர்களும், மிரட்சியோடு எதையும் பார்க்கிற அஞ்சாநெஞ்சர்களும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம்.

சென்னை நகரமும், நகரம் சார்ந்து வளர்ந்துவரும் புறநகரமும் நாற்பதாண்டுகள் அளவில் பரிச்சயப்பட்டவர்களுக்கு இதன் களம் நன்கு உள்வாங்கப்பட்டு உணர்ந்து கொண்டாடப்படும். புதிதாய் இந்தக் களத்தைப் புரிந்து கொள்வது, அன்றைய பிரதேசங்களின் அழகைக்கொன்று வளர்ந்துநிற்கும் இன்றைய கான்கிரீட் கட்டடங்களின்மீது இனம்புரியா வெறுப்பை உருவாக்கும்.

சின்ன வயதில் கோலி, பம்பரம், தீப்பெட்டிமேல் ஒட்டும் வண்ணப்படங்கள், பழைய கில்லி-தண்டு, தேய்ந்துபோன கிரிக்கெட் மட்டை, மூன்று சக்கர சைக்கிள், டயர் ஓட்டிப்போதல், அக்காவின் வளையலை உடைத்து முப்பட்டைக் கண்ணாடிக்குள் போட்டுச் செய்த கலைடாஸ்கோப்… இப்படி என் ஏராளமான இளவயது விளையாட்டுப் பொருட்களை, அம்மா எதோ தேடச் சொன்னபோது பரணில் இருந்து மூட்டைபிரித்துப் பார்த்தாப் போல ஒரு நெருக்க உணர்வை இந்த நாவல் எனக்கு அளித்தது.

இந்த நூலில் நிகழும் சம்பவங்களின் இடங்கள் நான் கால்புழுதிபட சுற்றித் திரிந்தவை. பருவ வயதில் உடல் வலிமை பெற உடும்பு பிடித்துத் தின்னப் போனதெல்லாம் நினைவுமேல் வந்தது. நானும் நண்பன் பாச்சியும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி எல்லாம் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் சென்று சத்தியவேடு காட்டை அடைவோம். உடும்பு தான் கவ்வியது தன் வால் என்றே உணராது. அதனால் உடும்பை வட்டமாகச் சுருட்டி அதன் வாலை அதன் வாய்க்குக்ளேயே திணித்து கொடிநாரால் கட்டி எடுத்துக் கொள்வோம். கூச்சமில்லாமல் சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக வருவோம். வரும் வழியில் பூண்டி ஏரி, பொன்னேரி அல்லது சோழாவரத்தில் வெயிலுக்கு இதமாக சுகமான குளியல். மூலக்கொத்தளத்து நரிககுறவன் வாகாக தலையை வெட்டி தோலைப் பிரித்து கறியை வெட்டித் தருவான். அதை இரும்பு உலக்கையில் பஞ்சுபோல் மென்மையாக இடிப்போம். பிறகு சமையல்! வீட்டுக்குத் தெரிந்தால் கொன்றுவிடுவார்கள். ஒவ்வொருத்தன் வீட்டிலிருந்தும் ஆளக்கொரு சாமான் கொண்டு வரவேண்டும். எண்ணெய். கடாய். கரண்டி. பூண்டு. வெங்காயம். சமையல் தெருவே மணக்கும். தெருப்போக்கிரியாக வலம்வந்த சின்னத்தம்பி நாயக்கர் எங்கள் ரகசியச் சமையலைப் பார்த்துவிட்டு வந்து மிரட்டுவார். அவருக்கும் பங்கு தர வேண்டியிருக்கும்.

”நல்ல ருசியா இருக்குடா, சுறா புட்டு மாறி… எங்கடா புட்சீங்க?”

”சத்யவேட்டுல…”

சீட்டா வெட்டுப்புலி ஊர்ப்பக்கமா போனீங்க?”

”ஆமா. அங்க நெசம்மாவே புலி இருந்திச்சா நைனா?”

”அதெல்லாங் காடுடா. நரி, பாம்பு, புலி எல்லாங் கெடக்கும். அப்டிதான் ஒரு பொதர்லேர்ந்து சீட்டாப்புலி வந்திச்சுதாங்காட்டியும் ஒரு ஆளு அதை வெட்டுனாரு… அதத்தான் தீப்பெட்டி படத்துல போட்டாங்க…”

முப்பதாண்டுக்கு முன்பு நைனா பேச்சுவாக்கில் சொன்ன தகவல். தமிழ்மகன்அந்தக் களத்துக்கே சென்று விசாரித்து உயிர்ப்போடு அதைப் படைத்துள்ளார்.

இன்றுள்ள அரசியல் போக்கில் திராவிட இயக்கங்கள் புரிந்துள்ள தாக்கம் மகத்தானது. தீண்டாமை நானறிந்தவரை நகருக்குள்ளும் நிலவியது. சோற்றுப்பஞ்ச காலத்தில் பெருகிய டீக்கடைகளில் கூட தாழ்ந்த சாதியினர் தனியே பித்தளை டீகுவளைகளைக் கொண்டுபோய் டீ வாங்கி அருந்துவார்கள். இந்த நிலையில் பொதுக்கூட்டம் என்றும், போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும் களைகட்டிய திராவிட இயக்க அரசியல் களம் தீண்டாமையை ஓரளவு விரட்டியது. இதில்வரும் இலட்சமணனின் குதிரையேற்றம்,, சக மனிதர்களாய் மற்றவரை பாவித்து, கூடமாட மண் சுமந்து ஒத்தாசை செய்வது, ஒடுக்கப்பட்ட குணவதிமீது அவன் கொண்ட காதல் ஊருக்குத் தெரிந்து, அந்த இனமே விரட்டியடிக்கப் படும்போது அவர்களைத் தானே தேடிப்போகும் இலட்சுமணன், பின்னர் வீடு திரும்புவது. வீட்டார் பேச்சை மதித்து, சொந்த இனத்தில் திருமணம் புரிவது, தானே சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்தபோது, நீதிக்கட்சி, பெரியார் மீதான மரியாதை என வளர்ந்து, தன் வாரிசுக்கு ஜாதிவிட்டு ஜாதியில் திருமணம் செய்ய முயற்சிப்பது… இலட்சுமணன் என்கிற தனி நபரின் உள்ளே ஏற்பட்ட முற்போக்கு ரசவாதத்தால், தான் மாறி, ஊரையும் மாற்றி உடன்பட வைக்கும் செயல்கள் அனைத்துமூ திராவிட இயக்கத்தின் தாக்கம் அன்றி வேறென்ன?

இன்றைக்கு ரெண்டு படத்தில் தலைகாட்டி விட்டால் தான் ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. என நினைக்கிறான் நடிகன். அவனுக்குள் இந்தத் துணிச்சல் உருவாக என்ன காரணம்? பெரியாரின் சுயமரியாதைக் கட்சியில் அவருக்குக் கீழ் இருந்தவர்கள் பதவியாசை இல்லாத நிலையில் நாட்டிற்கு தியாகம் புரிந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வந்தனர். பொது மக்களுக்கு பயந்தனர். சு.ம. கட்சியில் உழைப்புக்கு இலாபம் இல்லை என்பதால், முதன்முதலாக பதவியில் இருந்த நீதிக்கட்சியையும் உள்ளிழுத்தனர். பெரியார் அமைதி காத்தார். மெல்ல மெல்ல அவரையும் தேர்தலில் போடடியிடும் அமைப்பாக கட்சியையே மாற்றிவிடுவார்களோ என அச்சம் ஏற்பட்டபோது சிலர் விலகினர். தி.மு.க. பிறந்தது.

இன்றைய சமூகத்தில் நிலவும் சர்வரோகங்களுக்கும் காரணமானதாக விவரமறிந்தோர் சினிமாவைக் கூறுவார்கள். அது, இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை சென்றுவிட்டது.

பலநாட்கள் தயாரித்த, ஆய்வுசெய்த அறிக்கைகளை அன்று மக்கள் முன்பு கொள்கைவிளக்கமாகக் கூட்டங்களில் பேசுவார்கள். மக்களைக் கூட்டம்சேர்க்கும் கழைக்கூத்தாடி டமடமவென்று தொடக்க மேளச்சத்தம் எழுப்புவதுபோல, கலைநிகழ்ச்சி போர்வையில் அரிதாரம் பூசியவர்கள் பின்னர் அரங்கேறலாயினர். நாளடைவில் இவர்கள் இருந்தால்தான் கொள்கையே பேசமுடியும் என்கிற அளவுக்கு மேடைகள் தலைகீழாயின. ஏனென்றால் தேசத்தொண்டு, தியாகம் புரிந்திருந்தால் அதைமதித்து கூட்டம் சேரும். ஒன்றுமில்லாத நிலையில் கூட்டம் சேர்க்க கலையுலகம் கைகொடுத்தது. இதை ‘வெட்டுப்புலி’ அழகாய்ப் பதிவு செய்திருக்கிறது.

தியாகராயநகர் சிவா விஷ்ணு கோவில் பூக்காரி ”ஐய்யரே, சும்மா இருக்க மாட்டியா நீ? எவங் காதுலயாவது விழுந்தா ரெண்டாப் பொளந்துருவான். ராமன் ஆண்டா இன்னா? ராவணன் ஆண்டா இன்னா? யார் ஆண்டாலும் நீ நாலு தர்ப்பைக் கட்டைவித்துத்தான் பொழைக்கணும். நான் நாலுமுழம் பூ வித்துத்தான் பொழைக்கணும்” எனும்போது இன்றைய சமூகத்தின் நிலையைப் புரிந்துகொள்ள வெட்டுப்புலி உதவுகிறது.

பிராம்மணர்கள் மீதான தாக்குதல் அன்று எவ்வாறெல்லாம் நடந்தது, என்கிற பதிவு இதில் காணக் கிடைக்கிறது. கூடவே எண்பதுகளுக்குப் பின்னால் என்ற பகுதியில் கிருஷ்ணப்ரியாவும் நடராஜனும் ஊரே அல்லோலகல்லோலப் படும்போது கன்னிமரா நூலகப் படிக்கட்டில் உலக விஷயம் பேசியபடி இருந்த நிலையில் போலிசார் நெருங்கி வந்து ”லவ்வா?” என்று கேட்க, கிருஷ்ணப்ரியா ”அப்டில்லாம் இல்ல சார். இது எங்க மாமா பையன், ஒண்ணாத்தான் படிக்கிறோம்” எனும்போதும், ”இவர் என்கூடப் படிக்கிறவர். தொணைக்கு வந்திருக்கார்” என்று தந்தையிடம் அறிமுகம் செய்யும்போதும், இத்தனைகாலம் பிராம்மணன், அப்பிராம்மணன் என்ற பேதத்தின் மேல் எழுப்பப்பட்ட எல்லாம் சிதறுகிறது.

நவீன உலகம்தான் ஆனாலும் ஒவ்வொருவர் உள்ளத்துள்ளேயும் சாதியம், சங்கம் இருந்தாலும், அதையும் தாண்டி சமூகத்திற்காகவே சிந்தித்த பெரியாரை ”ஐ லைக் பெரியார் யூ. நோ, புரோக்ரசிவ் மேன், அவர் இறந்து இத்தனை வருஷமாகியும் அவரை நம்மால பீட் பண்ண முடியலியே. எங்களைத் திட்டறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு. இப்ப இருந்திருந்தாருன்னா எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு. உங்களைத்தான் திட்டியிருப்பாரு” எனும்போது இன்றைய தலைமுறை எந்தளவுக்கு ஒவ்வொன்றையும் உள்வாங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி பிரபாஷ் உலக மனிதனாக, பார்வயாளனாகப் பேசுவது அருமை. பிரபாஷ் என்ற பிராம்மணன் பெரியாரின் உழைப்பை, ஆழமான சமூக சிந்தனையை, ”சாமிய வெச்சிப் பிழைப்பு நடத்தறவன் வேணுன்னா பெரியாரைத் திட்டுவான். யோசிச்சிப் பார்த்தா வெரி பிரில்லியண்ட்” என்று பாராட்டுகிறான்.

வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்ப விவரிக்கப்படுகிறது என்பது உகண்மைதான். ஆனாலும் நாவல் என்ற கோட்பாட்டுக்குள் நிஜமாய் நடந்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு சொல்வது சிரமம். தமிழ்மகன் லாவகமாகச் செய்திருக்கிறார்.

கடந்தகால எச்சங்களில் நிலவிய மங்கலானவற்றை வரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கடமையைப் படைப்பாளியாக நிறைவேற்றியிருக்கிறார் தமிழ்மகன்.

சாதாரண சின்ன தீப்பெட்டியில் அச்சிடப்பட்ட படம், அதைச்சுற்றி நடந்த, நடந்துவரும் கால நிகழ்வுகள், அதை ஊடாடி எழும் பிரச்னைகள் என நாவல் தொட்டுச் செல்கிறது. இதை நாவல் என்பதைவிட பிரபலமான பத்திரிகையின் பைன்ட் செய்த ஒரு நூறாண்டிதழ்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.

சின்னா ரெட்டியின் கைக்கத்தி வெட்டுப்புலியின் தலையில் ஆழமாக இறங்கி, கத்தியோடு அது உருமிச் சென்றதாகப் பதிவு செய்துள்ளார்.

”பெரியாரின் பெரும் உழைப்பில் குத்தூசி குருசாமி அவர்களின் பங்களிப்பை, இன்றைய திராவிட இயக்கத்தவர்கள் ஏனோ அவ்வளவாகப் பதிவு செய்வதில்லை. தமிழ் எழுத்து சீர்திருத்தத்தில் அவர் பங்கு மகத்தானது. தமிழ்மகனின் இந்த நாவலிலும் அவரைப் பதிவு செய்யவில்லை.

இதழ்: 24 தேதி: 01/05/2010
சொல்வனம்

சனி, மார்ச் 13, 2010

கும்பகோணம்




புதுச்சேரி மார்க்கமாக கும்பகோணம் வரை காரில் பயணம் செய்துவிட்டுவந்தேன். எனக்கு துணையாக என் மகன் மாக்ஸிம். ஈஸிஆர் சாலையில் பயணம் செய்வது மிகவும் ஆசையான பயணமாக இருந்தது. இப்போது அப்படியில்லை. இடப் பக்கம் கடற்கரையைப் பார்க்கிற வாய்ப்பே கிடைக்கவில்லை. பண்ணை இல்லங்கள், ஹோட்டல்கள், தீம் பார்க்குகள், பாஸ்ட் ஃபுட் உணவகங்கள் எல்லாமாக சேர்ந்து கடற்கரைச் சாலையில் பயணம் செய்கிற அனுபவத்தை மாற்றி விட்டன. நாள்கள் போனால் அண்ணா சாலையில் பயணம் செய்கிற களைப்பையே இதுவும் ஏற்படுத்திவிடும் என்று தோன்றுகிறது. புதுவையில் பாரதிதாசன் பல்கலைக் கழக வாசலில் வந்து காத்திருந்து தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் நண்பர் பாரதிவசந்தன். அவருடைய இல்லத்தில் மதிய உணவு. அவருடைய இரண்டு வயது மகளுக்கு தமிழ்மகள் என்று என் நினைவாகப் பெயரிட்டதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. பேராசிரியர் ராஜ்ஜா கல்லூரி விழாவில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. சட்டசபைக்கு அருகே இருக்கும் நிரந்தரப்புத்தகச் சந்தையில் சேத்தன் பகத்தின் இரண்டு நகரங்கள் வாங்கினேன். மூன்று ஆண்டுகளில் 161 பதிப்புகள் ஆகியிருப்பதாகப் போட்டிருந்தார்கள். தென்னிந்தியப் பெண்ணைக் காதலித்து மணக்கும் வட இந்திய பையனின் கதை. கேட் தேர்வில் பாஸாகி, எஐம்மில் படிக்கும் மாணவர்களின் பின்னணி போன்றவை நாவலை நவீனப்படுத்துகின்றன. மற்றறபடி விறுவிறுப்பான நடையில் அமைந்த வணிகரீதியான கதை. தன் புத்தகங்களின் விலை எப்போதும் 100 ரூபாய்க்கு மேல் மிகாதவாரு பார்த்துக் கொள்வேன் என்று அவர் கூறியிருந்தது இந்த நாளிதழில் பிரசுரமாகியிருந்தது. அவருடைய அத்தனை நூல்களும் 95 ரூபாய் விலையில் இருப்பதை கவனித்தேன்.இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டு எழுத முடியுமா என்று தெரியவில்லை.

பிரெஞ்ச் இன்ஸ்டிட்டியூட்டில் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன்.வெட்டுப்புலி நாவலை மிகவும் பெருமையாக கூறினார். இன்னும் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கலாம் என்பது அவருடைய அபிப்ராயம். வெட்டுப் புலி தீப்பெட்டியின் பழைய லேபிளையே பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருக்கும் என்று ம் சொன்னார்.
தமிழில் இந்த ஆண்டு வந்த பல நூல்களைப் பற்றி பேச்சு திரும்பியது. இருட்டத் தொடங்கியதும் கும்பகோணம் போய்ச் சேர வேண்டிய ஞாபகம் வந்தது. நானும் மாக்ஸிமும் விடைபெற்றுக் கொண்டோம்.
(தொடரும்)

புதன், மார்ச் 03, 2010

கிருஷ்ண பிரபு

வெட்டுப்புலிக்கு நண்பர் கிருஷ்ண பிரபு எழுதியுள்ள விமர்சனம் இது. நாவல் பிரயாணிக்கும் பகுதிகளான சோழவரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் சென்னை பிராந்தியங்கள் அவருக்கும் அத்துப்படி ஆனதால் நாவலை அவர் ரசித்திருக்கும் விதம் அலாதியானது.



2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 'வெட்டுப்புலி' நாவல் வெளியீட்டு விழாவிற்கு நேரில் சென்றிருந்தேன். அப்பொழுதே "நம்ம ஊரைச் சுற்றி நடக்கும் கதைதான்... வாசித்துப் பாருங்கள்" என்று தமிழ்மகன் என்னிடம் சொல்லி இருந்தார். புத்தக அட்டையைப் பார்த்த பொழுது என்னுடைய சிறுவயது விளையாட்டுகள் ஞாபகம் வந்தது.

கிராமங்களில் பனமட்டைகள், உடைந்த வளையல்கள், உபயோகமில்லாத சைக்கிள் டயர், கில்லி, கோலி, பம்பரம், சிகரெட் அட்டைகள், தீப்பெட்டிகளின் முன் அட்டைகள் என பல விஷயங்களை சேகரித்து விளையாட்டுப் பொருளாக்குவோம். அப்படி விளையாடுவதற்காக தீப்பெட்டியின் விதவிதமான அட்டைகளை சிறுவயதில் சேகரித்த அனுபவம் உண்டு. கற்களை வைத்து உருட்டி விளையாடும் விளையாட்டிற்கு (சிசர்ஸ்) தீப்பெட்டிகளின் அட்டைகளும், சிகரெட் அட்டைகளும் தான் ஆதாரம். அதில் பாய்ந்து வரும் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்கு எத்தனிக்கும் ஒருவனின் படமும் இருக்கும். ஒருமுறையேனும் அந்த அட்டைப் பட வடிவமைப்பிற்கான காரணங்களை யோசித்ததில்லை. பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் தமிழ்மகன் அதற்கான தேடலைத் தன் புனைவின் மூலம் அணுகியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து விடுமுறையைக் கழிக்க தமிழ்ச்செலவன் சென்னைக்கு வருகிறான். Cheeta Match Box-ன் முன் அட்டையிலுள்ள சிறுத்தைப் புலியை வெட்டும் நபர் அவனுடைய தாத்தா சின்னா ரெட்டி தான் என்று பாட்டியின் கதை மூலம் தெரிந்து கொண்டதை உறுதிப்படுத்த நண்பர்களுடன் சொந்த ஊரான ஜகநாத புறத்திற்குப் பயணமாகிறான். அங்கிருந்து புழல், காரனோடை, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், சோழவரம், பூந்தமல்லி, பொன்னேரி, சென்னை என பல இடங்களுக்குச் சென்று சின்னா ரெட்டியின் தகவலைச் சேகரிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள் என்றால் இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்து போனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு முரண்பட்ட தகவல்களுக்கு இடையில் உண்மையைத் தேடி அலைகிறார்கள்.


கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, சின்னா ரெட்டியைத் தேடிச்சென்ற பயணம் ஆங்கிலேயர் ஆட்சி, ஜமிந்தார் ஆட்சி முறை, காங்கிரஸின் நிலைப்பாடு, நீதிக்கட்சி, சுதந்திர இந்தியா, திராவிடக் கழகங்களின் தோற்றம் (திக - திமுக - அதிமுக), சினிமா என்ற மாய ஊடகத்தின் வளர்ச்சி என்ற பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. முப்பதுகளின் தொடக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்கள் வரை நாவல் விரிவதால் ஈ வெ ரா, எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இளையராஜா, ரஜினி, கனிமொழி, அழகிரி வரை பல பிரபலங்கள் பாமரர்களின் சாதாரண உரையாடல்களில் வந்து செல்கிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்த பயணம் முப்பதுகளுக்குத் தாவி அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமீப காலங்களுக்கு நகர்கிறது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நாவல் பயணிப்பதால், அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கமும், மனோபாவங்களும் நுண்மையாக சித்தரிக்க வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கால சமுதாய மாற்றத்தை நாவலில் கொண்டுவரும் பொழுது ஏகப்பட்ட தகவல்களைத் திரட்ட வேண்டியதிருக்கும். அதனைத் தமிழ்மகன் சிறப்பாக செய்திருக்கிறார். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை சித்தரிப்பதற்கு அவர் திரட்டிய தகவல்கள் மெச்சப்பட வேண்டிய ஒன்று. ஏராளமான வரலாற்று மற்றும் பிரபலங்களின் தகவல்களை நாவலில் சொல்லியிருந்தாலும் எதுவுமே நாவலின் வேகத்தைக் குறைக்கவில்லை.

சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பொழுது ஏராளமான கிராமங்கள் மூழ்கியிருக்கிறது. வீட்டை இழந்த கிராம மக்களே அதற்கான கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். நாவலில் இதனைப் படிக்கும்பொழுது அதிர்ச்சியாக இருந்தது.

நாம் வாழும் வாழ்க்கை யதார்த்தமானது என்று நினைத்தாலும், அரசியல் மற்றும் சினிமாவின் தாக்கம் மூர்கமாக நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இவையிரண்டும் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. அந்த வகையில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் சமுதாய மற்றும் மனித மாற்றத்தை பதிவு செய்துள்ள முக்கியமான படைப்பாக வெட்டுப் புலியை எடுத்துக் கொள்ளலாம்.

சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் எழுதியவர்கள் புறநகர்ப் பகுதிகளில் வாழும் அல்லது வாழ்ந்து மடிந்த யாரையும் தனது படைப்புகளில் முழுமையாகக் கொண்டு எழுதியதில்லை. தமிழ்மகன் அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் பல படைப்புகள் சென்னைப் புறநகர் சார்ந்து வருமெனில் அது தமிழ் மகனுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.


நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

ஜனவரி மாத புத்தகம் பேசுது இதழில் ஜ.சிவகுமார் எழுதிய வெட்டுப்புலி விமர்சனம்

பதிவர் ஆதவன் எழுதிய வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு

சனி, பிப்ரவரி 13, 2010

திராவிட சமுதாயத்தின் நூற்றாண்டு வாழ்க்கை

ஜனவரி மாத புத்த்கம் பேசுது இதழில் வெட்டுப்புலி விமர்சனம்
ஜ.சிவகுமார்


கடந்த நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் - குறிப்பாக தமிழக அரசியல், சமூகம், நிலவியல் மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் - நிகழ்ந்த மாறுதல்களை மையப்படுத்தி தமிழ்மகன் எழுதிய 'வெட்டுப்புலி' நாவல் வெளிவந்துள்ளது. வெட்டுப்புலி (Cheeta Fight) தீப்பெட்டியை நாம் பார்த்திருப்போம். சிறுத்தையை ஒரு மனிதன் நேருக்கு நேர் நின்று அரிவாளால் வெட்டும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி அது. உண்மையிலேயே நிகழ்ந்த இச்சம்பவத்தின் தரவுகளைத் தேடி தமிழ்ச்செல்வன், பிரபாஷ், ஃபெர்னாண்டஸ் ஆகிய மூவரும் செல்கின்றனர். அதற்குள்ளிருந்து இரண்டு குடும்பங்களின் கதையும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்த இக்குடும்பங்களின் கதை சொல்லப்படும் முறை மட்டுமல்ல; களனும் கூட புதியது. சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் திருவல்லிக்கேணி, தங்கச்சாலை, மயிலாப்பூர் மிஞ்சிப் போனால் பட்டாளம், ஓட்டேரி எனத் தன் நிகழ்வுகளை முடித்துக் கொள்கின்றன. புறநகர்ப் பகுதிகளில் நிலத்தோடும் விவசாயத்தோடும் அங்கேயே தங்கியிருந்த மக்களைப் பற்றி இதுவரை எவ்விதப் பதிவுமில்லை.

இந்நாவல் செங்குன்றத்துக்கு அடுத்துள்ள சோழவரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. சென்னையின் குடிநீர் விநியோகத்துக்காக வெள்ளையனிடம் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்ததோடு, பிழைப்பிற்காக தன் நிலத்தை தானே வெட்டும் குடிமக்களின் சோகத்தை தமிழ்மகன் பதிவு செய்கிறார். அதேசமயம் சாதாரண மக்கள் தங்களை ஆள்வது வெள்ளையனா? இந்தியனா? என எந்த அக்கறையும் பாதிப்புமற்று வாழ்ந்திருந்தலையும் பதிவு செய்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் இந்திய விடுதலைக்கு ஆதரவான காங்கிரசும் அதனை இன மற்றும் மொழி ரீதியாக விமர்சித்த நீதிக்கட்சியும் செல்வாக்கு பெற்றன. நீதிக்கட்சி பின்னர் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கமாகியது. பார்ப்பனர்கள் தன்வயப்படுத்தாத அல்லது தன்வயப் படுத்த முடியாத இயக்கமாகவும் திராவிட இயக்கம் வளர்ந்தது. எனவே (வட) தமிழகத்தில் பிராமரணல்லாதார் பங்களிப்பும் எதிர்பார்ப்பும் உடையதாக இவ்வியக்கம் இருந்தது. இந்தப் பின்னணியில் தான் சின்னா ரெட்டி மற்றும் ஆறுமுக முதலி குடும்பங்களின் கதை சொல்லப்படுகிறது.சிறுத்தையை நாயுடன் வெட்டிக் கொன்ற சின்னாரெட்டி குறித்து தேடிப் போகிறவர் களுக்கு அங்கு வெவ்வேறு கதைகளையும் நபர்களையும் தெரிந்து கொள்கின்றனர்.

குறிப்பாக தசரத ரெட்டியின் மகன் லட்சுமண ரெட்டி, அதாவது தி.க. அனுதாபம், பறையர் பெண்ணைக் காதலித்து அவளையே திருமணம் செய்ய வேண்டும் எனத் தேடுவதும், பின்னர் சகுனம் பார்ப்பது மூடநம்பிக்கை என்பதை நிரூபிக்க விசாலாட்சியைத் திருமணம் செய்வது, தனது மகள்களுக்கு சாதி மீறிய திருமணம் செய்ய முயன்று முடியாமல் போவது, மகன் நடராஜன் தீவிர திராவிட இயக்கப் போராளியாவது, சாதி மீறி திருமணம் செய்வது, பின்னர் போராட்டத்தில் அடிபட்டு சித்த பிரமையாகி கிடப்பது வரை தொடர்கிறது. மற்றொரு புறம் ஆறுமுக முதலியின் சினிமா ஆர்வமும் தி.க. அனுதாபமும், அவரது மகன் சிவகுரு சினிமா ஆசையால் பிச்சைக்காரனாக வீதியில் இறப்பதும் சொல்லப்படுகிறது. ஆறுமுக முதலியின் அண்ணன் கணேசன் தீவிர தி.க. போராளியாகவே இறப்பது, அவரது மகன் தியாகராசன் தீவிர தி.மு.க. ஆதரவாளனாக இருப்பது, குடிப்பது, மிசாவில் கைதாகி சித்திரவதை செய்யப்படுவது, வாழ்வில் பிடிப்பேதுமற்ற தியானத்தில் ஈடுபடுவது எனக் கணேசனின் குடும்பக் கதை சொல்லப்படுகிறது.

தியாகராசன் தன் மனைவி ஹேமலதாவிடம் தன் கொள்கைகளைத் திணிக்க முயன்று அதனாலேயே அவள் தீவிர அ.தி.மு.க. அனுதாபி ஆகிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து, மனைவி வேறொருவனுக்குப் பிள்ளைப் பெறுகிறாள். துன்பக் காலத்தில் இருவரும் புரிந்து கொண்டு ஒன்று சேர்கின்றனர். இவ்வாறு இந்நாவலின் மனித உணர்வுகளின் பல பரிமாணங்களும் யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளன. தசரதன் தன் அண்ணிதான் இரவில் காலைச் சுரண்டியவள் என யூகித்து அடையும் அதிர்ச்சியும் குறுகுறுப்பும் இரவில் அவன் அடைந்த பதைபதைப்புகளும் ஏமாற்றமும் குழப்பமும் வாசகரையும் தொற்றிக் கொள்கின்றன.

இந்நாவலை எழுதுவதற்காக, தரவுகளைத் திரட்டுவதற்காக இவர் எடுத்துக்கொண்ட முயற்சி மதிக்கத்தக் கவை. அண்ணா பெரியாரைப் பிரிந்தது, கலைஞரை எம்.ஜி.ஆர். பிரிந்தது, மிசா காலம், இந்திரா காந்தி இறந்தது முதலான தகவல்களை எளிதாகத் தேடிப் பயன்படுத்தலாம்.

ஆனால் முப்பதுகளில் கிராமத்தார் காபி குடித்ததைச் சொல்வதிலுள்ள வெட்கம் கலந்த தற்பெருமை, பெண்கள் செருப்புப் போட்டுக் கொள்வதிலிருந்த கூச்சம், பெரியாருக்காக காமராசர் தற்போதுள்ள பெரியார் திடலை விட்டுத் தருமாறு பேசியது, நாடார்குல மித்தரனில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சி குறித்துப் பேசியது முதலான அரிய தரவுகளை கதைப் போக்கினூடாக தந்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரே சாதிக்கு பல பட்டங்கள் இருப்பதைத் தொட்டுக் காட்டுகிறார்.

தவிரவும் மூன்று தலைமுறைகளாக செங்குன்றம் - பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கான வழித்தடத்தில் ஏற்பட்ட மாற்றம், கிராமத்துக்குள் கரண்ட், ரேடியோ, டி.வி. முதலானவற்றின் வருகையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ரேடியோவில் பாட்டு கேட்பவர்கள் ரேடியோவுக்குப் பின்னிருந்து யாரேனும் பாடுகிறார்களா என அடையும் சந்தேகமும், டி.வி.யில் ஏரியலோடு மல்லக்கட்டுவதும் வாசகனை தன்னனுபவத்துக்கு இட்டுச் செல்லும்.

தவிரவும் திரைப்படத் துறைக்கும் அரசியலுக்குமான உறவும் முரணும் தெளிவாக சித்திரிக்கப் பட்டுள்ளது. இத்தனைத் தரவுகளைத் தேடியதும் நாவலில் பயன்படுத்தியதும் மட்டுமல்ல இவரது சிறப்பு. இது எதுவுமே நாவலில் துருத்திக் கொண்டு நிற்காமல், கதைப்போக்கினோடு ஒட்டியே புனைந்ததுதான் இவரது உச்சபட்ச வெற்றி.

திராவிட இயக்கங்களோடு பயணித்த நபர்களுக்கு ஒரு கட்டத்தில் தேக்கம் ஏற்படுகிறது. தியாகராசன் தன் மனைவியோடு 'அன்னை' ஆசிரமத்துக்குச் சென்று தியானம் செய்கிறான். கணேசனால் கலைஞரைத் தாண்டிப் போகமுடியவில்லை. தன் கல்லூரி நாட்களில் ஈழப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற நடேசன் சுய நினைவற்ற நிலையிலும், தொலைக் காட்சியில் வெட்டுண்ட பிரபாகரனைப் பார்த்து உறைந்து போகிறான் தமிழ்ச் சமூகத்தைப் போல.

நாவலின் முன்னுரையில் இதனைத் திராவிடக் கண்ணாடி அணிந்து படிப்பது அவசியம் என்கிறார். ஆனால் எந்தவொரு தனி மனிதரையோ குறிப்பிட்ட இயக்கத்தையோ இவர் குற்றம் சாட்டவில்லை.

கதாபாத் திரங்கள் அவரவர் சமூக மற்றும் வரலாற்றுச் சூழல்களில் மௌனமான விமர்சனத்தோடு சித்திரிக்கப் பட்டுள்ளனர். தசரத ரெட்டியின் மனைவிக்கு புருஷன் முன்னால் சாப்பிடுவது கூட மரியாதையற்ற செயல். ஹேமலதாவுக்கு தன் மீது கொள்கைகளைத் திணிக்கும் கணவனைப் பழிவாங்க அ.தி.மு.க.வில் சேருவது சரியான செயல்.

நடராஜனுக்கு சாதி ஏற்றத்தாழ்வு களை உருவாக்கி நாட்டைக் கெடுத்த பார்ப்பனர்கள் மீது வெறுப்பு; பிராமின் எனும் ஒரே காரணத்தால் கிருஷ்ண ப்ரியையை மணக்க மறுக்கிறான். கிருஷ்ண ப்ரியைக்கு நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை, பிறகு ஏன் நடராஜன் நம்மை வெறுக்கிறான் எனும் கேள்வி.

இப்படி அவரவர்களுக்கு அவரவர் நியாயம் என்றாலும் பார்ப்பனர்கள் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலமாகவே அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர் எனும் தொனி நாவல் முழுதும் இருக்கிறது.

அதேசமயம் சாதியை ஒழிக்க வந்த திராவிட இயக்கங்கள் இந்துத்துவ அரசியலுக்குள்ளும், குடும்ப அரசியலுக்குள்ளும், சாதிய அரசியலுக்குள்ளும் இருந்து விடுபட்டு சமத்துவத்தை நோக்கி நகர்வது எப்போது எனும் கேள்வி மௌனமாக எழுப்பப்படுகிறது.

மொத்தத்தில் இந்நாவல் விறுவிறுப் பான கதைக்காக மட்டுமல்லாமல், 20-ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றையும் அறிய தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதவும். திராவிட இயக்கத்தினை எதிர்பார்த்து, நம்பி இக்குடும்பங்களைப் போல் பலர் சந்தித்த இழப்புகளுக்கு அர்த்தம் என்ன? சாதியை ஒழிக்கப் பிறந்த திராவிட இயக்கம் சார்ந்த கட்சிகளே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தாலும் சாதி சங்கங்களும் அதன் செல்வாக்கும் அதிகரித்ததற்கு என்ன காரணம்? அரசியல் கட்சியாகத் தொடங்கி பின்னர் நெருக்கடிகளால் பண்பாட்டுச் செயல்பாடுகளில் 'அக்கறை' காட்டிய தேசிய இயக்கத்தின் தோல்வியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் பண்பாட்டு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு அதனாலேயே மக்களுடைய ஆதரவும் பெற்று ஆட்சியைப் பிடித்த திராவிடர் இயக்கங்கள் பண்பாட்டு நடவடிக்கை களைத் தொடராமல் போனதேன்? இது ஆட்சியாளர்களின் பிரச்சனையா? அல்லது சமூகத்தின் பிரச்சனையா? முதலான கேள்விகள் இந்நாவலை வாசித்ததன் ஊடாக எழுகிறது.

நாவலுக்குள் இதற்கான விடை மௌனம்தான். இந்த மௌனம்தான் வாசகருக்கு பற்பல தேடல்களையும் அவதானங்களையும் உருவாக்கக் கூடியவை.

-ஜ.சிவகுமார்

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஆனந்தவிகடன்


வெட்டுப்புலி நாவல் குறித்து ஆனந்தவிகடன் (17.2.10) வார இதழில் வெளியான அறிமுகக் குறிப்பு.

திங்கள், பிப்ரவரி 01, 2010

வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.

மலரும் நினைவுகள் என்ற வலைப்பதிவில் நண்பர் ஆதவன் எழுதிய புத்தக அறிமுகம் இது.

வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்..
(திறனாய்வு அல்ல.. புத்தக அறிமுகம் மட்டுமே..)

புத்தகம்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை.
விலை: ரூபாய் 220/- (நாவலின் ஆசிரியர் உழைப்புக்கு இது மிகக் குறைவு)


நீண்ட நாட்களுக்கு பிறகு மிகக் குறைந்த நாட்களில் நான் படித்து முடித்த புத்தகம் வெட்டுப்புலி. படிக்கத் தொடங்கியதும், என்னைத் தானாகவே அடுத்தடுத்த பகுதிகளுக்கு இட்டு சென்றது புத்தகத்தின் சரடுகளே.. ஒரு நாவலாசிரியரின் வெற்றியும் அதுவே. படிக்கும் வாசகனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாமல், தோள் மீது கைப்போட்டு, அழைத்து சென்று ஒரு புதுப் பரவசத்தை ஏற்படுத்த வேண்டிய தன்னுடைய பொறுப்புணர்வை உணர்ந்த எல்லா நாவலாசிரியர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெட்டுப்புலி நாவல் மூலம் தமிழ்மகனும் தன்னை இணைத்துக் கொள்கிறார்.


"cheeta fight" என்கிற தீப்பெட்டியில் ஒருவன் அருவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுத்தைப் புலியை வெட்டப்போகும் காட்சி நாம் எல்லோரும் பார்த்ததே. ஆனால் அந்த ஒற்றைக் கட்சியின் வழியாக நூற்றாண்டு கால சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்கள் பற்றிய மிக ஆழமான பதிவை தனது இந்த நாவலின் வழியாக சொல்லி இருக்கும் தமிழ் மகன் நிச்சயம் வரலாற்றில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர்.


எந்த விதத் திரிபும் இல்லாமல், ஒரு சாரார் பக்கம் மட்டுமே சாய்ந்துவிடாமல், இவ்வளவு நடுநிலைமையோடு ஒரு ஒரு பரப்பின் வரலாற்றை பதிவு செய்திருப்பது, அதுவும் புனைவுகளோடு, உயர்ந்த இலக்கியத் தரத்திற்கு ஈடாக உண்மைக் கலந்த கதையை, வரலாற்றோடு இணைத்து பதிவு செய்திருப்பது மிக போற்றத்தக்க முயற்சி.


ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலேயே இப்படியாக சொல்லி இருப்பார். "வேறு வழியின்றி இந்த நாவலை திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தது. படிப்பவர்களும் திராவிட கண்ணாடி அணிந்து படிப்பது அவசியமாக இருக்கிறது. முன் முடிவும், விரோத மனப்பான்மையும் இல்லாமல் வாசித்தால் அப்பாவித்தனமான குடும்பங்கள் ஓர் இயக்கத்தின் வேர்களாக இருந்ததை உணரலாம்."


திராவிட இயக்க நாவலாக வடிக்க நேர்ந்தாலும், இந்த நாவல் அந்தக் கால சூழ்நிலையை தழுவி செல்கிறதே தவிர, அந்தக் கட்சியின் பக்கம் சாய்ந்து செல்லவில்லை. மிக சவாலான பணியது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணியை நாவலின் வழியாக படிக்கும்போது நாமும் அதே காலக்கட்டத்துக்கு சென்று வருவது நாவலின் காட்சிப்படுத்துதலுக்கு சிறப்பு. இந்த நாவலில் அண்ணா வருகிறார். கலைஞர் வருகிறார். பிரபாகரன் வருகிறார். பெரியார் வருகிறார். திராவிட இயக்கங்களின் வேரான திரைப்படத் துறையும் அதன் வளர்ச்சியும் இந்த நாவலின் வழியாக மிக சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.


மதுரை, திருநெல்வேலி, போன்ற தென் மாவட்டங்களைப் பற்றி ஒரு விதமான பரவசத்துடனும், சென்னை போன்ற மாநகரத்தைப் பற்றி ஒருவிதக் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கும் தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் இந்த நாவலில் ஏதாவது ஒரு பகுதியை முழுமையாக படித்தால் (நேர்மையோடு) கூட சென்னை சார்ந்த ஒரு சிறந்தக் காவியம் உருவாகக் கூடும். சினிடோன் நாராயணன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுக முதலியார் எனும் கதாபாத்திரம் திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சென்னை சென்ட்ரலில் வந்து இறங்குவதில் தொடங்கி, தன் முயற்சியில் தொடர் தோல்விகள் அடைவது வரை மட்டுமே யாராவது திரைப்படமாக எடுத்தால், தற்கால சூழலில் அது மிக யதார்த்தமான படமாக இருக்கும்.


"பெரிய பாளையம் வரும்போதே உச்சி பொழுது ஆகிவிட்டது. கோவில் வாசலிலேயே உட்கார்ந்துக் கொண்டு வந்திருந்த கூழையும், ஊறுகாயையும் ஒரு பிடி பிடித்துவிட்டு இருவரும் சற்று நேரம் களைப்பாறினார். வேப்பமரத்து நிழலும் நடந்த களைப்பும் சட்டென இருவரையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சற்று தூரத்தில் குருவிக்காரர்கள் சிலர் உண்டிகோல் செய்துகொண்டும் மைனா, கிளி, அணில்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர்."


மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். ஏதோ மதுரை மாசி வீதியிலோ, திண்டுக்கல் நெய்க்காரன் பட்டியிலோ, நடந்த சம்பவம் அல்ல மேற்சொன்னது. இது நடந்தது சென்னையில். சென்னைப் புறநகரான பெரியபாளையம் பகுதியில்.


சென்னையில், குருவிகள் இல்லை, மைனா என்றொரு பறவையே இங்கு இருந்திருக்குமா என்று சந்தேகம் எழுப்பும் எல்லா மேதாவிகளும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் கூட சென்னை நகரின் மீது (நினைவிருக்கட்டும் நான் கூட சென்னையை பிறப்பிடமாக கொண்டவன் அல்ல.) கொண்ட அளவுக் கடந்த பாசத்தினால் நாவலை சென்னை சார்ந்த படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாவலாசிரியர் அப்படி எவ்விதமான பிரக்னையுமின்ரி சென்னை சார்ந்த எல்லா விசயங்களையும், இந்த ஒற்றை நாவலில் பதிவு செய்திருக்கிறார். பிற்காலத்தில் சென்னை நகரின் வரலாறு தவறாக திரிக்கப்படுமாயின் அதற்கு இந்த நாவல் மிக சரியான பதிலாக அமையும்.


ஒரு நாவலின் மிக முக்கிய பணி, எல்லாவற்றையும் மிக தெளிவாக, மிக நுணுக்கமாக விவரிப்பது. வெட்டுப்புலி நாவலில் சென்னையில் வாழ்ந்த மனிதர்களின் பழக்க வழக்கங்களும், அவர்களின் உயர்ந்த பண்புகளும், மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.


நாவல் பற்றி சொல்ல வந்த எதை விடுவது, எதை தொடுவது என்கிற குழப்பம் எனக்குள் மேலோங்கி இருப்பதால், நான் எனக்கான, சென்னை நகரின் மேன்மையைப் போற்றும் ஒரு சில விடயங்களை மட்டுமே மேற்கோள் காட்டியிருப்பேன். புனைவுக் கலந்த நாவல்தான் என்றாலும், அதன் ஆசிரியரே, எது நிஜம், எதுக் கற்பனை என்பதை முதலிலேயே சொல்லி விடுவதால் எவ்விதக் குழப்பமும் இன்றி நாவலை வாசிக்க முடிகிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதால், ஒவ்வொரு பகுதியும், மிக கவனமாக வாசிக்கப்பட வேண்டியிருக்கிறது. வாசிப்பு உலகிற்கு புதிதாக வந்தவர்கள் கூட எந்த வித தயக்கமுமின்றி வாசிக்க வேண்டிய நாவல் வெட்டுப்புலி. காரணம் அதன் எளிய நடையும், மொழி வடிவமும். நமக்கு புரியாத ஒரு சில சொற்களுக்கு ஆசிரியரே பொருள் கூறிவிடுவதால் நமக்கு படிப்பதும், கதையை தொடர்ந்து செல்வதும் எளிதாகி விடுகிறது.


முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கினால் போதும், அடுத்தடுத்த பகுதிகளுக்கு இந்த நாவல் உங்கள் கைப்பிடித்து அழைத்து செல்லும்.

வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு.

எல்லோரும் அவசியம் வாசிக்க, நேசிக்க வேண்டிய நாவல்

வியாழன், ஜனவரி 21, 2010

தமிழக அரசு விருது பெறும் நிகழ்ச்சியில்...

நான் எழுதிய எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதிக்கு தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. 2008 ஆண்டு தமிழ் நூல்களுக்கான விருது இது. என்.சி.பி.ஹெச். நிறுவனம் வெளியிட்ட நூல் இது.


திங்கள், ஜனவரி 11, 2010

துவிஜன்


என்னுடைய இரண்டு நண்பர்களைப் பற்றிச் சொல்வதற்காகத்தான் இந்தக் கதை. அதில் முதல் நண்பன் இந்த இகபர உலகத்தில் அவ்வளவு முக்கியமானவனாக நினைக்கத்தக்கவன் அல்ல. அவனைப் பற்றி இரண்டாவதாகச் சொல்கிறேன். இப்போது இரண்டாவது நண்பனைப் பற்றி...

அவன் மிகப் பெரிய சோதிடன். சோதிடனானது எனக்கு சமீபத்தில்தான் தெரியும். என்றாலும் அதை வைத்துத்தான் அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும். சொன்னதும் உங்களுடைய நண்பரா என்று ஆச்சர்யப்படுவீர்கள். அவனைச் சந்திப்பதற்கு நேரம் வாங்கித் தரச் சொல்லி என்னை நச்சரிப்பீர்கள்.. கருணாமூர்த்தி. அவரா என்று நீங்கள் ஆச்சர்யமாகலாம். நான் ஒருமையில்தான் பதில் சொல்வேன். ஆம் அவனேதான்.

எந்தப் பிரச்சினையோடு போனாலும் அவனிடம் உடனடியாகத் தீர்வு இருந்தது. வயிற்றில் அடிக்கப்பட்டவர்கள், முதுகில் குத்தப்பட்டவர்கள், அதிர்ஷ்டம் கெட்டவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், தீராத வியாதியாளர்கள், தீராத பகையாளிகள், கல்யாணம் தள்ளிப் போனவர்கள், குழந்தை தள்ளிப் போனவர்கள்.. என நெருக்கியடிக்கும் கூட்டம். பிரச்சினையைச் சொல்ல வருகிறவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இது போன்ற துக்கங்களை எல்லாம் ஏற்கெனவே பலமுறை எதிர் கொண்டவன் போல தீர்க்கமாக உள்வாங்கிய நோக்கில் தலையை ஒரு ஸ்பிரிங் ஆக்ஷன் போல மேலும் கீழும் அசைத்துக் கேட்டுக் கொண்டிருப்பான். எதிர்முனையில் பேரதிர்ச்சியான செய்திகளை மிகுந்த நடுக்கத்தோடு சொல்லும்போதும் கண்ணை மூடிய நிலையிலேயே மறக்காமல் ஒரு புன்முறுவலைத் தவழவிடுவான்.

முதன் முதலாக அவன் சோதிடனாகிவிட்டதாகத் தகவல் தெரிந்த போது நம்பவே முடியவில்லை. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பாக்கு இடித்துப் புகையிலை போட்டுக் கொண்டிருக்கும் உங்கள் பாட்டி மறுநாள் பல்கலைக் கழக துணை வேந்தராகிவிட்டதாகச் சொன்னால் என்ன அதிர்ச்சி ஏற்படுமோ, அது ஏற்பட்டது. அவனால் எப்படி சோதிடனாக முடியும் என்றேன். சோதிடராவதற்கும் குடும்பப் பாரம்பர்யம் இருக்க வேண்டும் என்பதாகவும் ஒரு எண்ணம் இருந்தது. இவனோ காரல் மார்க்ஸ் பாசறையில் இருந்தவன். பத்தாண்டு இடைவெளியில் எப்படி ஒரு தோழர், சோதிடராகிவிட மாறிவிட முடியும்?

அவன் சோதிடன் ஆனது எனக்கு முதலில் சிரிப்புமூட்டும் விஷயமாகத்தான் இருந்தது.

ஆரம்பத்தில் இத்தகவலை என்னிடம் சொன்னபோது நான் கேலியாக ஏதோ கமெண்ட் அடித்தேன். போன் நம்பர் வாங்கி அவனிடம் நேரடியாக அந்தக் கிண்டலைத் தெரிவிக்கலாம் என்று நினைத்துத் தொடர்பு கொண்டேன். "உன்கிட்ட வருகிறவர்களுக்கு நல்ல காலம் பிறக்கிறதோ இல்லையோ, உனக்குப் பிறந்தாயிற்று'' என்று சொன்னால் அவனும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று யோசித்து வைத்திருந்தேன். மறு முனையில் "நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்தவரா?' என்று கேட்டார்கள். "நான் அவருடைய நண்பர்' என்று சொன்னேன். "மாலை ஆறு மணிக்குப் பேசுங்கள்' என்று பெயரைக் குறித்துக் கொண்டார்கள். அப்போதே கிண்டலடிக்கும் எண்ணம் எல்லாம் குறைந்து போய்விட்டது. இயல்பாகப் பேசினால் மட்டும் கிண்டல் அடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டேன். மிகவும் ஆத்மார்த்தமாகப் பேசும் சந்தர்ப்பமாக அமைந்தால் "என்னடா இது கூத்து?' என்று சொல்லலாம் எனவும் சீரியஸôக பேசினால் "எப்படி இந்த ஞானம் வந்தது' என்று கேட்கலாம் எனவும் மனம் ஒத்திகை செய்ய ஆரம்பித்துவிட்டது.

அங்கு போகும் முன்னர் அந்த இடத்தை மஞ்சள், குங்குமம், தாயத்துகள், பெரிய சாமி படங்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன். நான் யோசித்து வைத்திருந்த எதுபோலவும் இல்லாமல் இருந்தது அது. மஞ்சள், குங்குமம் பார்த்திராத நாகரீக முகத்துடன் ஒரு பெண் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்ப்பதற்காக வந்தது போலவே இருந்தது அவளுடைய வியப்புகள் வெளிப்படுத்தின. அவள் என்னைப் பார்த்து ரொம்ப நாள் பழகியவள் போல் சிரித்தாள். என் நினைவுகளில் அவளைப் பற்றிய ஒரு தடயமும் இல்லை. எங்கே பார்த்திருக்கிறோம் என்று அவசர அவசரமாக நினைவோட்டிப் பார்த்தேன். தபால் கொடுக்க வந்தவர், தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனை செய்ய வந்தவன் எல்லோருக்கும் அதே மாதிரி சிரிக்கவே, கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

அறை குளிரூட்டப்பட்டிருந்தது. அவளுக்கு எதிரே பிரபல மருத்துவமனைகளில் காத்திருப்பவர்கள் மாதிரி வரிசையாகக் கோர்க்கப்பட்டிருந்த நாற்காலிகளில் மக்கள் அமர்ந்திருந்தனர். சத்தம் போட்டு பேசவும் தயக்கம் இருந்தது. அப்படி யாரோ மெல்ல பேசினாலும் அதில் வல்லின மெய் எழுத்துகளை மட்டும் ஓரளவுக்குக் கேட்க முடிந்தது.

புதுப்பித்துக் கொள்ளாத மனிதன் எழுதப்படாமலேயே மங்கிப் போய்விட்ட காகிதத்துக்குச் சமம்.

-எமர்சன்

என்று ஒரு பொன்மொழி சட்டம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. எமர்சன் அப்படி சொல்லியிருப்பாரா என்று திடீரென்று சந்தேகித்தேன்.

அதற்குள் என்னை உள்ளை அழைத்தார்கள்.

வரிசையில் இருந்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்னை முதலில் அழைத்தான் என் நண்பன். எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான் என்று நான் வியக்க, அதை நான் உணர்கிறேனா என்பதில் அவனும் கவனமாக இருந்தான். தலைக்கு மேல் ஒரடி உயர்ந்து இருக்கும் சாய்மானம் உள்ள நாற்காலியில் பிறைவட்டம் போல் அசைந்தபடி பேசினான். சாஃப்ட் வேர் கம்பெனி எம்.டி. போல இருந்தான். என்னைப் பார்த்து அவன் ஏதாவது கமெண்ட் அடித்தால் கேட்டுக் கொள்ளலாம் போல இருந்தேன். "தணிகாசலம் வரவில்லையா?' என்றான். தணிகாசலம் என்பது நான் இரண்டாவதாகச் சொல்லப் போகிற முதல் நண்பன்.

ஆள் மழமழவென வேறு தோல் போர்த்தியது மாதிரி இருந்தான். பட்டுச் சட்டை அணிந்து நெற்றியில் சந்தனம், விபூதி தீற்றியிருப்பான் என்ற என் எதிர்பார்ப்பும் வீணாகிப் போனது.

"என்ன சாப்பிட்றே?' என்று கேட்டபடி பொத்தானை அழுத்தினான். அழுத்திய விரலை எடுப்பதற்குள் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் வந்தான்.

டேபிள் வெயிட்டை சுழற்றிவிட்டபடி, "அந்தக் காலத்தை மறக்கவே முடியாதில்ல?' என்றான். மனிதன் வசதி வந்துவிட்டால், வசதியாக இல்லாமல் இருந்த காலத்தை "அந்தக் காலம்' என்று சொல்கிறான்.

நிறைய அமைச்சர்களோடு போட்டோ எடுத்து மாட்டி வைத்திருந்தான். சினிமா நட்சத்திரங்கள் சிலருடனும் போட்டோ இருந்தது.

எல்லாவற்றிலும் இவனுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்பியதுபோல ஒரு தோற்றம் இருந்தது. நண்பரின் முக பாவனை அப்படியானது.

சீரியஸôகவும் இயல்பாகவும் இருந்தது அவனுடைய பேச்சு. "காரல் மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ்னு நமக்கு எவ்வளவு கனவு.. இல்ல?'' சிரித்தான்.

அதெல்லாம் கனவாக- பழங்கதையாக மாறிவிட்டதா என உறுதியாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அதற்காக அவசரப்பட்டுச் சிரிக்கிற அளவுக்கு தைரியம் இல்லை. எதிரில் இருப்பவர் சிரிப்பதற்காக பதிலுக்குச் சிரித்துவிடக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தேன்.

"தணிகாசலம் மாறிட்டானா இல்லையா?'' மாறித்தான் இருப்பான் என்ற நம்பிக்கையோடு கேட்டான். கண்களில் "எல்லாம் அவ்வளவுதான்.. இதில் என்ன கேள்வி வேண்டியிருக்கிறது' என்ற கேலி இருந்தது. அவன் பழனிக்கு மொட்டைப் போடப் போயிருக்கிறான்... சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறான் என்று ஆதரவாக பதில் வரும் என்ற எதிர்பார்ப்பு அவன் கண்களில் இருந்தது. தணிகாசலம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பிய வேகத்திலேயே அதை நம்பவும் செய்தான்.

உடனடியாக அவனுடைய ஆர்வத்தைச் சாகடிக்கத் தோன்றவில்லை. ""அப்பிடியேதான் இருக்கான்'' ஏனோ அவன் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துவிடக்கூடாது என்று ஒருவித அலட்சியம் தொனிக்குமாறு சொன்னேன். அவன் கண்ணை மூடி ஸ்பிரிங் போல தலையை மேலும் கீழும் ஆட்டி உள்வாங்கிக் கொண்டான்.

"லேட் மேரேஜ். பொண்டாட்டி ஸ்கூல் டீச்சரா வேல பாக்குது.. இவன் இன்னமும் ஜோல்னா பை. மங்களூர் பீடி.. பைல "அணு ஆயுத ஒப்பந்தம் தேவையா'னு ஒரு அறிக்கை..''

நண்பன் தன் நிலைமைக்குச் சற்றும் பொருந்தாத அந்த உலகுக்கு ஒரு கணம் போய்விட்டு வந்ததை அவன் முகக் குறிகள் மூலம் உணர்ந்தேன்.

""ஒரு மசால்வடை டீ குடிச்சுட்டு படுத்துத் தூங்கியிருக்கோம்ல?''

நானும் என்ன சொல்வதென்று தெரியாமல் ""அது ஒரு காலம்'' என்று கூறிவிட்டேன்.

"இரண்டு பேருக்குமே தணிகாசலம் பற்றிய பேச்சிலிருந்து வெளியே வருவதற்கு பிரயாசைப்பட்டோம். சிறிது நேரம் பேசாமல் இருந்து வேறு தலைப்புக்கு மாறுவதற்கு விரும்பினோம்.

அவன் சோதிடக் கலையைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

"நாம் பிறக்கும் நேரத்தில் இருக்கும் நட்சத்திர, கிரக நிலைக்கு ஏற்பத்தான் நம் வாழ்க்கை அமையும். அப்போதைய கிரகங்களின் ஆதிக்கம் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறது. இது முழுமையான விஞ்ஞானம். பெயரில் ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்துக் கொள்வது, கை ரேகை எல்லாமே பொய். ஆனால் கிரகங்களின் ஆட்சி மெய்யானது. எனக்கு சோதிடம் கற்பித்தவர் பெரிய மகான். பத்து பைசா காசு வாங்க மாட்டார். அவருக்கு எல்லோருடைய தலையெழுத்தும் டி.வி.யில் பார்க்கிற மாதிரி தெரியும். ஆனால் யாருக்கும் எதுவும் சொல்லமாட்டார். எல்லாம் விதியின் படி நடக்கும், மாற்ற முடியாது என்பார். அதற்கு பிராயசித்தமும் இல்லை என்பார். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்துவிடுவதால், கோயிலில் தீபம் ஏற்றினால் விதி மாறிவிடுமா என்ன.. விதி வலியது என்பது அவருடைய தீர்மானம்.

ஒரு முறை அவரைப் பார்க்க வந்த ஒரு குடும்பத்தினர், வீட்டுக்குக் கிளம்ப காரில் எறியபோது.. இதில் இரண்டு பேர்தான் வீடு போய் சேருவார்கள் என்றார். காரில் ஆறு பேர் கிளம்பிப் போனார்கள். எனக்கு திக் என்று இருந்தது. தடுத்திருக்கலாமே என்றேன். சூரியனும் வியாழனும் சுற்றுவதைத் தடுக்க முடிந்தால் இதைத் தடுக்கலாம் என்றார். விழுப்புரம் பக்கத்தில் ஆக்ஸிடென்ட். இரண்டு பேர்தான் பிழைத்தார்கள்.'- இப்படியாகச் சொல்லிக் கொண்டு போனான்.

தணிகாசலமாக இருந்தால் இன்னேரம் எழுந்து ஒரு அறைவிட்டுவிட்டு பீடி கொளுத்திக் கொண்டு போயிருப்பான். ""பணக்காரனா பொறக்கறது அவன் தலைவிதி. ஏழையா பொறந்தது என் தலைவிதி. சமத்துவம் வந்துடணும்னு நினைக்காதே.. இதானே சொல்ல வர்றே.. ஏமாந்தா எடுத்து வாயில வெச்சுடுவியே?'' என்று கேட்டிருப்பான்.

நான் பேசாமல் இருந்தேன். "நீ என்ன ராசி?'' என்றான்.

"அட விடுப்பா'' என்று என் குரலில் பாசாங்கு அதிகமாக இருந்தது. ""சிம்ம ராசி..''

"நட்சத்திரம்?''

"அட.. பூரம்''

தலையை ஆட்டி கண்கள் சொருக தியானித்தான்... அதாவது இருந்தான்.

"பிறந்த நாள்.. நேரம் தெரியுமா?''

சொன்னேன். பிறந்த இடம் எது என்றான். சென்னையில் மயிலாப்பூர் என்பதையும் சொன்னேன்.

பெரிய சைஸ் கம்ப்யூட்டர் டிஜிட்டல் மானிட்டர் போல இருந்த திரையை ஒளிரச் செய்து அறை விளக்குகளை அணைத்தான்.

திரையில் அண்டசராசரமும் தெரிந்தது. கிரகங்கள், சூரியன், நட்சத்திரம்.. கொஞ்ச நேரம் பார்த்தால் நம்பிக்கை வந்துவிடும்போல இருந்தது. நீ பிறந்த போது கிரகங்களின் நிலை எப்படி இருந்தது என்பதை இப்போது இதில் என்னால் உருவாக்கிக் காட்ட முடியும் என்றான். இருபத்தேழு டிகிரி துல்லியத்தில் சொல்வது கம்ப்யூட்டரால் சாத்தியமாகியிருக்கிறது..

பேசியபடியே 1964 டிசம்பர் 24-ம் தேதி இரவு 10.53 மணிக்கு கிரகங்கள் எப்படியிருந்தன என்று காட்டினான். அதாவது நான் பிறந்த நேரத்தில்.

அறையின் குளிரும் இருட்டும் திரையில் தோன்றிய காட்சியும் சேர்ந்து சிலிர்க்க வைத்தது. ஏதோ ரகசியம் அவிழ்ந்து கொண்டது மாதிரி நெஞ்சு அடித்துக் கொண்டது.

""சரிப்பா லைட்டை போட்டுடு'' என்றேன் தைரியமாக.

அவன் இதற்கு மேல் நீ தாங்க மாட்டாய் என்பதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு விளக்கை எரியவிட்டான்.

"தணிகாசலம் இதையெல்லாம் நம்ப மாட்டான்'' என சம்பந்தமில்லால் சொன்னேன்.

"இதில் இருக்கிற விஞ்ஞானத்த என்னவிட அவனாலதான் நல்லாத் தெரிஞ்சுக்க முடியும். அவன ஒருவாட்டி அழைச்சுட்டு வா..''

அவன் வரமாட்டான். கூப்பிட்டால் காறித்துப்புவான்.

"போன எலக்ஷனுக்கு கட்சிக்காரங்க வந்து எல்லாருக்கும் ஆயிரம் ரூபா கொடுத்தாங்க. குடுக்க வந்தவனை செருப்பைக் கழட்டி அடிச்சி அனுப்பிட்டான்.. டி.வி. குடுக்குறேன்.. செல் போன் தர்றேன் வந்தவனுங்களையும் சட்டைய பிடிக்காத குறை. அவ்வளவு ஏன்.. நம்ம முதலமைச்சர்ங்க மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு ரெண்டாயிரம் கொடுத்தபோதும் சண்டதான்... இத்தனைக்கும் அன்னைக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல.. என் கிட்டதான் அம்பது ரூபா கடன் வாங்கிக்கிட்டு போனான்...'' என்று தணிகாசலத்தைக் குறைத்து மதிப்பிடாதே என்பதாக இதைச் சொன்னேன்.

"சமஸ்கிருதத்தில் துவஜன் என்பார்கள். தாயின் வயிற்றில் பிறப்பது ஒரு ஜனனம். இரண்டாவது ஜனனம் நம் ஞானத்தால் உருவாவது. துவி என்றால் இரண்டு. (ஜெர்மனியில் ஜுவை என்றால் இரண்டு, டிரை என்றால் மூன்று. ஏங்கெல்ஸின் மூல நூல் ஒன்றில் படித்திருந்தேன். சமஸ்கிருதத்தில் துவி என்றால் இரண்டு.. த்ரி என்றால் மூன்று என்கிறார்கள். அட தணிகாவிடம் சொன்னால் ஹிட்லர் போற்றிய ஆர்யன்.. இங்குள்ள ஆரியன் என்று கட்டுரை எழுதுவான்.. ஞாபகமாக சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டேன்.) ஜன் என்றால் ஜனனம்.. முதல் ஜனனத்தின் கிரகப் பலன்கள் எப்படி இருந்தாலும் நம் இரண்டாவது ஜனனத்தினால் அதை மாற்றிவிட முடியும். என்னுடைய குருநாதர் பிறப்பின் பலனை மாற்றவே முடியாது என்றார். நான் மனிதர்களை மீண்டும் ஒரு நல்ல தருணத்தில் பிறக்க வைக்கிறேன்... நல்ல பலன்களை அடைய வைக்கிறேன். ஒரு செயற்கை நட்சத்திர மண்டலத்தை உருவாக்கி அவை நம்மீது பிரயோகிக்கும் ஆற்றலை மீண்டும் செலுத்துகிறேன்.'' நான் திகைத்துப் போய் பார்க்கிறேனா என்று அவன் கவனித்தான்.

"இந்த அறைக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில் அந்தச் செயற்கை மண்டலம் இருக்கிறது. தணிகாசலத்தையும் அழைத்துவா. இருவருக்குமே இரண்டாம் பிறப்பை அளிக்கிறேன். ஆட்சியை இழந்தவர்கள் வருகிறார்கள். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். கூட்டணி அமைப்பதற்கு தருணம் கேட்கிறார்கள்.. எல்லாமே பலிக்கிறது... மூன்று படம் ஓடாமல் போன ஹீரோ என்னிடம் வந்த பின்பு மகத்தான வெற்றிப்படத்தைக் கொடுத்தார்... நான் சொல்வது ஏதோ அதிர்ஷ்டவசமாக நடப்பதாக நினைத்தாலும் தற்செயலாக நினைத்தாலும் காரண காரியங்களோடு நடப்பதாக நினைத்தாலும் அதனால் எனக்கு வருத்தமில்லை. நாம் மூவரும் எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே அறையில் தங்கியிருந்து கஷ்டப்பட்டவர்கள் என்பதால் சொல்கிறேன்..'' வியாக்யான தொனியில் பேசிக் கொண்டு போனான்.

விவாதம் எதுவும் செய்யாமல் வெளியே வந்துவிட்டேன். இருக்கும் கொஞ்ச காலத்துக்கு மார்க்ஸியவாதியாகவே இருந்துவிட்டுப் போய்விடலாம் என்று தோன்றியது.

தணிகாசலத்திடம் என்னுடைய அனுபவத்தைச் சொல்வதற்கே பயமாக இருந்தது. கருணா ஒரு முனையில் என்றால் தணிகா மறுமுனையில் இருந்தான். என்னைப் போன்ற நடுவாந்திர ஆசாமிக்குத்தான் பிரச்சினையே. ஒரே பாசறையில் இருந்த மூவர், மூன்றுவிதமாக இருந்தோம். மறு ஜென்மம் எடுத்துவிட்டவன் கருணா மட்டும்தான்.

என்னைப் பார்ப்பதற்காக கம்பெனி வாசலில் வந்து காத்திருந்த தணிகாசலம், "என்ன தோழர் எப்படி போகுது வாழ்க்கை' என்றார். நான் கருணாவைப் பார்த்துவிட்டு வந்ததைப் பற்றி சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தேன். குறுக்கும் நெடுக்குமாக அவனைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கிருந்து ஆரம்பித்தால் ஓரளவுக்காவது காது கொடுத்துக் கேட்பான் என்று ஒத்திகை பார்த்தேன். எங்கிருந்து ஆரம்பித்தாலும் தணிகாசலம் ஓவென சிரிப்பான் என்றே தோன்றியது.

வழக்கம் போல டீ சாப்பிட நின்றோம். கண்ணாடி டம்ளரை வாயருகே கொண்டு போனதும் ஏதோ திடுமென ஞாபகம் வந்தது மாதிரி பீடியைக் கொளுத்திக் கொண்டான். டீயை உறிஞ்சிய வேகத்தில் "பானுமதி இப்ப மூர்த்திகூட வாழப் போயிட்டாப்பா'' என்றான். பானுமதி அவனுடைய மனைவி. அதாவது ஓடிப் போய்விட்டாள்.

அதிர்ச்சியாக எப்ப, எதுக்கு என்று கேட்க நினைத்தேன். வெகு நாள்களாக இருவருக்கும் இருந்த மனக்கசப்பும் ஆறுதல் சொன்னாலும் விரும்ப மாட்டான் என்பதும் தெரியும். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தேன். "சேலம் போயிட்டு தோழர் ஆறுமுகத்தைப் பார்க்கப் போறேன்.. லிப்ரன் கமிஷன் அறிக்கையையும் வோரா அறிக்கையையும் வெச்சு ஒரு புத்தகம் போடலாம்னு திட்டம்...''

நான் புரிந்து கொண்டு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். இவனை ஏன் என் முதல் நண்பன் என்று சொன்னேன் என்று எனக்கு அறுதியாகத் தெரியவில்லை. சோதிட நண்பனுக்கு முன்னால் பழக்கமானவன் என்பதாக இருக்கலாம். அதைத் தவிரவும் மனதிலும் எப்போதும் இவனுக்கு முதலிடம் இருந்தது.

முதல் நண்பனைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஒருவரியில் சொல்லிவிடலாம்.

மாற்றம் ஒன்றுதான் நிலையானது என்ற கருத்தில் இருந்து அவன் மாறவே மாட்டான்.


இருவாட்சி- பொங்கல் சிறப்பு வெளியீடு- 2010

LinkWithin

Blog Widget by LinkWithin