திங்கள், நவம்பர் 01, 2010

அமில தேவதைகள் அத்தியாயம்-4


அறிவியல் குறுந்தொடர்

சந்திரசேகரின் கையில் உள்ள துப்பாக்கியை ஒரு குபீர் பாய்ச்சலில் தட்டிவிட முடியும் என்று நினைத்தார் கருப்பசாமி. அப்படி எதுவும் முயற்சி பண்ண முடியாதபடி அவருக்கு இரண்டு பக்கமும் இரண்டு முரட்டு மருத்துவர்கள் நின்று கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது.

இவரையும் யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான் என்ற வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்? ஆஷா போலவா?

பின்பக்கம் இருந்த இருவரும் ஆளுக்கொரு கையைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிறுத்தினர். கருப்பசாமி பலியாடு போல அவர்களுடன் நடந்தார்.

சந்திரசேகர் ஒருவித அலட்சியப் பெருமிதத்தோடு துப்பாக்கியை மேஜை அறைக்குள் போட்டுவிட்டுப் புன்னகைத்தார்.

அதே நேரம் அறைக்கதவை உடைத்துக் கொண்டு பாயாத குறையாக உள்ளே வந்தார் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி. கையில் துப்பாக்கி.

"ஹாண்ட்ஸ் அப்''

மூவரும் அவ்வளவு எளிதில் கையைத் தூக்கவில்லை. என்றாலும் பயந்து போய் நின்றார்கள்.

மறுநாள் பதினாறு கொலைகளைத் தாம்தான் செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் டாக்டர் சந்திரசேகர் அவருடைய மருத்துவமனையில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் வைத்து விசாரித்ததற்குக் காரணமிருந்தது.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவமனையின் ரகசிய கேந்திரத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார் சந்திரசேகர்.

கொஞ்சம் குழப்பமாக காவல் அதிகாரிகள் அவர் அழைத்துச் சென்ற இடத்துக்கு நடந்தனர். மருத்துவமனையின் பாதாள அறை அது.

முன்னேறிய இயற்பியல் கூடமும் மருத்துவக்கூடமும் கலந்த இடம். கம்ப்யூட்டர் நெட்வொர்க் போல சில இடமும் மைக்ராஸ்கோப் கண்ணாடி சீசாவில் திரவங்கள், அமிலங்கள் அடங்கிய இடமும் கலந்து தெரிந்தது.

சட்டென்று ஒரு இடத்தில் நின்று, "இதோ இருக்காங்க பாருங்க'' என்றார்.

அனைவரும் ஒருகணம் திடுக்கிட்டு அவர் சுட்டிய இடத்தில் பார்க்க... வரிசையாக நீண்ட, நீண்ட கண்ணாடி சீசாவில் தண்டுவடத்தோடு கூடிய மூளைகள் மிதந்து கொண்டிருந்தன.



"இது ஹாஸ்பிடல்ல நர்ஸா இருந்த மேரி..'' என்றார்.

எல்லோரும் அறையப்பட்டவர்கள் மாதிரி நின்று கொண்டிருந்தனர்.


"ஆனா, இவ இப்ப மேரியில்ல, மகாலட்சுமி.''

எல்லோரும் டாக்டர் சந்திரசேகரைக் குத்துமதிப்பாகத்தான் பார்த்தனர். மரைகழன்றுவிட்டதோ என்று உடனடியாக உறுதி செய்யமுடியாத தடுமாற்றத்துடனும் ஏதோ வினோதமாக நிகழ்ந்திருப்பதை எதிர்பார்த்தும் இருந்தனர்.

"இங்க பாருங்க..'' மகாலட்சுமி என்று விளிக்கப்பட்ட சீசாவோடு பிணைக்கப்பட்ட கம்ப்யூட்டரைத் தொடங்கி வைத்து "உன் பெயர் என்ன?'' என்றார்.

திரையில் சின்தûஸஸர் அலை அசைவுகள்.. கூடவே ""ஹலோ என் பெயர் மகாலட்சுமி'' என்ற குரல்.


"பார்த்தீங்களா? நான் சொன்னேன் இல்ல?'' என்று சிரித்தார் சந்திரசேகர்.

"ஓ.கே. டார்லிங்.''

திரையைவிட்டுத் திரும்பி, "புரியல இல்ல? இது மேரியோட ப்ரைன். ஆனா அவளோட ப்ரைன்ல இருந்த அத்தனை செய்தியையும் அழித்துவிட்டு அதில மகாலட்சுமியோட மூளையில் இருந்த தகவலை ஏத்தியிருக்கேன்... அதனால இப்ப இவ மகாலட்சுமியாயிட்டா..'' பெருமிதமாகச் சொன்னார் சந்திரசேகர்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தைரியப்படுத்திக் கொண்டனர்.


"பயந்துடாதீங்க... உங்களுக்கு சிம்பிளா விளக்கிட்றேன். அப்புறம் ஆச்சர்யப்பட்டுப் போயிடுவீங்க. மனிதனுக்கு மரணமே இல்லாம இருந்தா உங்களுக்கெல்லாம் சந்தோஷம்தானே? அதுக்காகத்தான் கொஞ்சம் பேரை மரணமடையச் செய்ய வேண்டியதா போச்சு.''

"இப்ப இதோ கருப்பசாமி இருக்காரு... இவரோட உடம்புல கருப்பசாமிங்கிறது யாரு? இவரோட கையா? காலா? இந்தத் தொப்பையா? இது எதுவுமில்ல. இவரோட மூளைதான் கருப்பசாமி. இன்னும் ஷார்ட்டா சொல்லணும்னா அவருடைய மூளையில் இருக்கிற ஞாபகங்கள்தான் கருப்பசாமி. இப்ப அந்த ஞாபகங்கள் அப்படியே இன்னொரு மூளைக்கு டீகோட் பண்ண முடிஞ்சா கருப்பசாமியும் அந்த மூளைக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுவார். இப்ப மேரிய மகாலட்சுமி ஆக்கினது அப்படித்தான்...''

....'' -சந்திரசேகரைத் தவிர எல்லோரும்.



"இந்த மூளையெல்லாம் மிதக்கறதுக்கு ஒரு திரவம் பயன்படுத்தியிருக்கேன் பாருங்க. அதுக்குப் பேரு, செரிபுரோ ஸ்பைனல் ஃளூயெட். இது நம்ம எல்லார் மூளையைச் சுத்தியும் இருக்கு. இந்த ஆராய்ச்சிக்காக இந்தத் திரவம் நிறைய தேவையா இருந்தது. அதுக்காகத்தான் இந்த காலேஜ் பொண்ணு மண்டையையெல்லாம் உடைக்க வேண்டியதா போச்சு.''

கொலைகள் பற்றி உலகத்தில் உள்ள சட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் அறிந்தே இராத ஞான சூன்யமாக இருந்தார் சந்திரசேகர். ஆராய்ச்சித் தேவைக்காகக் கொஞ்சம் மண்டைகளை உடைத்துவிட்டேன் என்கிறார்.

சந்திரசேகர் தொடர்ந்தார்..

"இதில பாருங்க. டெம்ரோல் லோப்தான் இந்த டீ கோடீங்க்ல ரொம்ப இம்பார்ட்டன்ட். ஆனா ப்ரைன்ல மத்த பகுதியவிட அதுதான் ரொம்ப காம்பிளிகேட்டட். இப்ப உங்ககிட்ட ஸ்ரீபெரும்புதூர்னு ஒரு வார்த்தைய சொல்றேன்னு வெச்சுக்கங்க. ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு ராஜீவ் காந்தி மர்டர், ஒத்தக்கண் சிவராசன், டைகர்ஸ், ராமானுஜர், நாமம் எல்லாம் வரிசையா விரியும். நம்ம ஞாபகத்தில ஸ்ரீபெரும்புதூர் என்பது வெறும் எழுத்துக்களால் மட்டும் ஆனது அல்ல. அது ஒரு கலவை. உங்களுக்கு அங்க ஒரு ஃப்ரண்ட் இருந்தா அவரும் அதில வந்துடுவார். அவரோட போன் நம்பர், அவரோட வழுக்கத்தலை... எல்லாமே ஸ்ரீபெரும்புதூரோட ஞாபகச் சிக்குல இருக்கு. மேரியோட ஞாபகப் பகுதிய எவ்வளவுதான் அழிச்சும்கூட சில நேரங்கள்ல மேரி இருந்துக்கிட்டுதான் இருந்தா. மேரிக்கு ஜான்சன் குடுத்த முத்தம் மகாலட்சுமியின் ஞாபக இடுக்குல சிக்கிடுச்சி. சில நேரங்கள்ல மகாலட்சுமி கர்த்தரேனு அழுவுறா. ஆனா இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திடலாம். தாழ்த்தப்பட்ட பெண்ணான மேரி, பிராமின் பொண்ணு மகாலட்சுமியா மாறியிருக்கிறதால் ஏற்பட்டிருக்கிற சிக்கல் பல நேரங்கள்ல இடிக்குது. என்ன செய்றது? ஆயிரம் ஆயிரம் வருஷமா ஊறிப்போன சங்கதிங்க இல்லையா? இன்டர்னல் காம்ப்ளெக்ஸ்.''

க்ரைம் டி.ஸி.க்கு ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாளவில்லை.

"நான்சென்ஸ்.. 16 பெண்களைக் கொன்னுட்டு நீங்க என்ன புதுவகை பூசணிக்காய் கண்டுபிடிச்ச மாதிரி வியாக்யானம் கொடுக்கறீங்க?'' என்றார்.

"என்ன... ஆஃப்ட்ரால் 16 யூஸ்லெஸ் பொண்ணுகளைக் கொன்னுட்டேன். ஆனா.. இந்த ஆராய்ச்சி சக்ஸஸ் ஆகிட்டா யாருக்குமே மரணமில்ல, புரிஞ்சுக்கங்க. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மகாத்மா காந்தி இவங்கல்லாம் இறக்கறதுக்கு முந்தி இதைக் கண்டுபிடிச்சிருந்தா, இப்ப அவங்களும் நம்மகூட இருந்து உலகத் தமிழ் மாநாடு பத்தியெல்லாம் கருத்து சொல்லியிருப்பாங்க.''

"போதும் நிறுத்துங்க... இந்த ஹாஸ்பிடலுக்கு சீல் வெச்சுட்டு.. இவரை கோர்ட்டுக்குக் கொண்டு போங்க'' துணை கமிஷனர் கொதித்துப் போனார்.


"'நோ.. நோ அப்படியெல்லாம் பண்ணாதீங்க.. ஹாஸ்பிடலுக்கு சீல் வெச்சுட்டா அப்புறம் ஆக்ஸிஜன் கண்ட்ரோல் இல்லாம மகாலட்சுமி செத்துப் போயிடுவா... எஸ்.பி.எஸ். புளூயட் டயாலிசிஸ் பண்ணனும்..'' அவர் புலம்புவதை யாரும் சட்டை செய்யவில்லை.

சந்திரசேகரைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போயினர்.


கருப்பசாமி ஜீப்பில் ஏறுவதற்கு முன் ராமசாமியை அருகில் அழைத்தார்.

"அதுசரி.. நீங்க எப்படி நேத்து சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்தினீங்க?'' என்றார்.

"என்ன சார், எவ்வளவு நாளா உங்களுக்குக்கீழ வேல பாக்கறேன். உங்க தாட் என்னன்னு புரியாதா? நேத்து உங்க ஆபிஸுக்குப் போயிருந்தேன். மர்மமா செத்துப் போன 16 பேரோட தகவல் உங்க டேபிள் மேல இருந்தது. அதில ஒண்ணு மேரியோட தகவல். மேரி, மந்தாகினி ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணின நர்ஸுனு இருந்தது....

அப்புறம் சுரேஷ் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலுக்குப் போனேன். அங்க நீங்க ஜீப்ல ஏறி உக்காந்து பாலவாக்கம் போப்பா'ன்னு நம்ம சென்ட்ரி காதுல விழுற மாதிரி சொல்லிட்டுப் போயிருக்கீங்க. உங்க ஐடியா புரிஞ்சு போச்சு. மந்தாகினிக்கு வந்ததும், நீங்க சந்தரசேகரைப் பார்க்கறதுக்காக பியூனை அடிச்சுத் தள்ளிட்டு உள்ள போனதா சொன்னாங்க. விஷயம் சீரியஸாயிடுச்சுன்னு நானும் துப்பாக்கியோட உள்ள பாஞ்சுட்டேன்'.' ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் ராமசாமி.

கருப்பசாமி சிரித்தார். "பேசாம ஆராய்ச்சிக்கு உன் மூளைய பயன்படுத்தியிருக்கலாம்.''



ஜீப் பறந்தது.

(முற்றும்)

திங்கள், அக்டோபர் 25, 2010

அமில தேவதைகள்


அத்தியாயம்-3


அறிவியல் குறுந்தொடர்

மகேஸ்வரி சொன்னதைத்தான் அங்கும் சொன்னார்கள். அபார்ஷன் பண்ணிக் கொள்வதற்காக வந்தாள். ஆனால் திடுதிப்பென்று சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டாள்.

கைனகாலஜி துறையின் தலைமை மருத்துவர் என அறிமுகப்படுத்தப்பட்ட கிழவி அனாவசியத்துக்கு எரிச்சலுற்றாள்.

"சரியான போதை கேஸ்.. இப்ப நாங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். ஹாஸ்பிடல் பேரைக் கெடுத்துட்டா.''

""போதை கேஸ்னு எப்படி சொல்றீங்க?''

"அவ ரூம்ல சிரிஞ் ஒண்ணு கிடந்தது.. அதையெல்லாம் பத்திரப்படுத்தி எடுத்து வெச்சு வர்றவங்களுக்கெல்லாம் நிரூபிச்சிக்கிட்டு இருக்க முடியுமா?''

"சரி கடைசியா ஆஷாவைப் பார்த்தது யாருன்னு சொல்லமுடியுமா?''

"நான்தான் பார்த்தேன்.. ரூம்ல போய் இருக்கச் சொன்னேன்.''

ஹாஸ்பிடலில் இருந்து இன்ஸ்பெக்டரை அனுப்புவதில்தான் அவளுடைய கவனம் முழுவதும் இருந்தது.தங்கள் மருத்துவமனை சந்தேகத்திற்கான இடமாக மாறுவது அவளை சிரமப்படுத்திக் கொண்டிருந்தது. துல்லியமும் சுத்தமுமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவளுடைய நடவடிக்கைகள் இருந்தன. தேவையே இல்லாமல் தன் மேஜையை டிஸ்யூ பேப்பர் மூலமாக நான்காவது முறையாக சுத்தப்படுத்தினாள்.

"சிரிஞ் இருந்ததை யார் பார்த்தது?''

"நீங்க வீணா இங்க டயம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க''

"பரவாயில்ல'' என்றார் பெருந்தன்மையாக.

"நான் சொன்னது, எங்க டயத்தை.''

கருப்பசாமி "இவ்வளவு நேரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தராததற்கு ரொம்ப நன்றி'' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே வந்தார்.

"ஆஷா இதுவரைக்கும் வந்திருக்கிறாள். இங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் காணாமல் போயிருக்கிறாள். சுமார் இருபது கி.மீட்டர் தூரம் வந்து ரகசியமாக அபார்ஷன் செய்து கொள்ள நினைத்தவள், திடீரென்று என்ன தீர்மானத்துக்கு வந்திருப்பாள்? வேறு யாராவது வந்து அழைத்துப் போயிருப்பார்களா? சுரேஷ்...? நிர்ப்பந்தித்திருப்பார்களா? சுரேஷைத் தவிர வேறுயாரையும் சந்தேகப்படுவதற்குத் தோன்றவில்லை.... அல்லது தெரியவில்லை.

சுரேஷ் தேறுகிற வரை காத்திருக்காமல் வீணாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோமா? ராமசாமி சந்தேகித்ததுதான் சரியா?

லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். கதவு திறக்கும் நேரத்தில் ஒரு வெள்ளுடை பணியாள் ட்ராலி ஒன்றைத் தள்ளிக் கொண்டு அவசரமாக நுழைந்தான்.

கதவு மூடிக் கொண்டது.

"சார், உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணும்... அந்த சிரிஞ்சை எடுத்தது நான்தான்'' மீண்டும் கதவு திறப்பதற்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது அவனிடம்.

கருப்பசாமிக்குத் திகைப்பாகவும் மிகை ஆர்வமாகவும் இருந்தது. பயமுறுத்தாமல் தகவல் பெற வேண்டும் என்ற நிதானத்தோடு, "அது இப்ப உன்கிட்ட இருக்கா?'' என்றார்.

"இல்ல சார்.. அப்பவே குப்பைக் கூடைல போட்டுட்டேன்.''

"...''

"ஆனா.. கொஞ்ச நேரத்திலேயே அதைத் தேடிக்கிட்டு ஒருத்தர் வந்தாரு..''

"அதைத் தேடிக்கிட்டா?''

"ஆர் அண்ட் டி'ல வேல பார்க்கிற டாக்டர் சந்திரசேகர்.''

"ரிஸர்ச் டாக்டரா?'' மேற்கொண்டு ஆச்சர்யப்படுவதற்குள் லிப்ட் தரைத்தளத்துக்கு வந்துவிட்டது. "அவ்வளவுதான் சார் தெரியும். நான் வர்றேன் சார்'' என்று ஏதும் நடவாததுபோல முகத்தை வைத்துக் கொண்டு நகர்ந்தான்.

ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் பிரிவில் வேலை பார்க்கும் ஒரு டாக்டர் ஆஷா பயன்படுத்திய சிரிஞ்சைத் தேட வேண்டிய அவசியம் என்ன? அது முக்கிய தடயமா? ஆஷா காணாமல் போனது இங்கிருந்து புறப்பட்டபோதா? அல்லது இங்கிருந்தபோதா?

லிஃப்டுக்குப் பக்கத்தில் இருந்த பித்தளைப் பலகையைப் பார்த்தார். தாம் போய் வந்த மாடியிலேயேதான் ஆர் அண்டு டி பிரிவு செயல்படுவது தெரிந்தது.

மறுபடி லிஃப்டைப் பிடித்து மேலே விரைந்தார்.

"சார்... சார்.. பேஷண்டெல்லாம் இந்தப் பக்கம் வரக் கூடாது'' ப்யூன் ஒருவன் தடுப்பதற்காக அவசரப்பட்டான்.

"நான் பேஷண்ட் இல்லை. போலீஸ்.. டாக்டர் சந்திரசேகரைப் பார்க்க வேண்டும்.''

பியூன், முதல் கட்டமாக எப்படி அனுமதி மறுப்பது என்று யோசித்துவிட்டு, காரணம் போதாமல் ""கொஞ்ச நேரம் இருங்க. கேட்டுட்டு வந்து சொல்றேன்'' என தயங்கியபடி போனான்.

சில நிமிடங்களில் திரும்பி வந்து ஒரு விண்ணப்பப் படிவத்தை நீட்டி, " இதை ஃபில் அப் பண்ணுங்க சார்" என்றான்.

வந்திருப்பவரின் பெயர், பார்க்க விரும்பும் நபரின் பெயர், பார்க்க விரும்பும் காரணம், பணியாற்றும் மருத்துவமனை, நோயாளி பற்றிய குறிப்பு, நோய் சம்பந்தமான விவரம் என்று விண்ணப்பம் கருப்பசாமிக்குப் பொருத்தமில்லாமல் இருந்தது.

பெயரை குறிப்பிட்டுவிட்டு, அருகிலேயே இன்ஸ்பெக்டர் என்று இடுக்கி இடுக்கி எழுதினார். பிறகு, பார்க்க விரும்பும் நபர் என்ற இடத்தில்.. ‘டாக்டர் சந்திரசேகர். நோயாளி பற்றிய குறிப்பு என்ற இடத்தில்... ‘ஆஷா காணாமல் போனது சம்பந்தமாக என்று எழுதினார்.

வாங்கிச் சென்ற ப்யூன் பந்து போல திரும்பி வந்து எரிச்சலாக சொன்னான்.. ""ஏன் சார் உயிர் எடுக்கிறீங்க.. ஆஷான்னா யாருனு தெரியாதுனு கத்தறார் சார். அவரு பெரிய டாக்டர் சார்.. தேவையில்லாம தொந்தரவு பண்ணா கோச்சுப்பாரு''

கருப்பசாமி நிதானமிழந்தார்.

"நீ டிஸ்டர்ப் பண்ணாத்தானே கோச்சுப்பாரு.. விடு நானே பண்ணிக்கிறேன்.'' ப்யூனை ஓரமாகத் தள்ளிவிட்டு உயரமான கண்ணாடிக் கதவை உதைத்துத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே சென்றவர் அதிர்ந்தார். எப்பேர்ப்பட்டவர்களையும் அந்த இடம் பணியச் செய்துவிடும்போல இருந்தது. பளிங்கு சுத்தமும் குபீரென்ற அமைதியும் அவரது ஆவேசத்தை சட்டென தணித்துவிட்டது. ஒரு அரை வட்டம் போல இடம். அதில் மூன்று கதவுகள் இருந்தன.

சந்திரசேகர் என்று குறிப்பிட்டிருந்த அறைக்கதவை நோக்கி நடந்தார். வெளியே தள்ளிவிட்டு வந்த ப்யூன் மீண்டும் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டரின் கையை முரட்டுத்தனமாகப் பிடித்துக்கொண்டு "சொன்னா கேளுங்க சார்.. இதுக்குள்ள யாரும் வரக் கூடாதுனு சொல்லியிருக்காரு சார்'' முகத்தில் மிரட்டலும் குரலில் கெஞ்சலுமாக கருப்பசாமியைப் பிடித்து இழுத்தான்.

கருப்பசாமி அவனை இழுத்தபடியே சந்திரசேகர் என்ற எழுத்திட்ட அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த டாக்டர் ஒருவர் "வாட் நான்ஸென்ஸ்'' என்றார்.

"ஆஷாவோட கொலை சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும்'' கருப்பசாமி தீர்மானமாக கொலை என்றே சொன்னார்.

"ஆஷான்னா யாருன்னு தெரியாதுன்னு சொல்லி அனுப்பிச்சேனே.. உங்களுக்கின்னா மூளை கெட்டுப் போச்சா? நான் கமிஷனர் கிட்ட பேசறேன்..''

"ஆஷா உங்களுக்குத் தெரியலைன்னா பரவாயில்லை.. அவ ரூம்ல இருந்த சிரிஞ்சை ரொம்ப பத்திரமா எடுத்து வெச்சிருக்கீங்க.. அது ஏன்னு தெரிஞ்சுக்கணும்''

சந்திரசேகர் வினாடியில் மெல்லிய இழை திடுக்கிட்டதை கருப்பசாமி கவனித்தார். விரலைச் சுண்டி, ப்யூனை வெளியே போகச் சொல்லி சமிக்ஞை செய்தார்.

"சொல்லுங்க.. அந்த சிரிஞ்சை வெச்சு என்ன பண்ண போறீங்க'' அலட்சியமாகக் கேட்டார்.

"என்ன சிரிஞ்? எனக்கு ஒண்ணுமே புரியலை''

"நீங்களே உண்மையச் சொல்லிட்டா நல்லது.'' கருப்பசாமி தோராயமாகத் தன் விசாரணையை ஆரம்பித்தாலும் இடியாப்பச் சிக்கலில் கிடைத்த ஏதோ ஒரு நுனியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சந்திரசேகர் கண்ணை மூடிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார். இண்டர்காமை அழுத்தி, "வேகமாக வா'' என்றார்.

சில வினாடிகளில்..

அதே அறையின் ஒரு சுவர் சட்டென்று விரிய, உடம்பெல்லாம் பச்சைப் பசேலென்ற அங்கி அணிந்திருந்த இருவர் வெளிப்பட்டு கருப்பசாமியைக் கேள்விக்குறியுடன் பார்த்தனர்.

சந்திரசேகர், "ஆஷா மர்டர் விஷயமா வந்திருக்காரு... இவரையும் பயன்படுத்திக்கிறதைத் தவிர வேறு வழியில்லை'' என அபிப்ராயம் தெரிவிப்பது போல சொன்னார்.

இரண்டு பசுமைக்காரர்களும் தீர்மானமாக கருப்பசாமியை நெருங்க, ஏதோ வில்லங்கமாக நடக்கப் போவதை உணர்ந்து வேகமாக எழுந்தார்.

சந்திரசேகர் "ரொம்ப அலட்டிக்காதீங்க.. அப்புறம் கஷ்டமாகிடும்.'' ஊசி போட்டுக் கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைக்கு அறிவுரை போல சொன்னார்.

கருப்பசாமி திரும்பிப் பார்க்க... சந்திரசேகர் கைகளில் துப்பாக்கியோடு தீட்சண்யமாக நின்று கொண்டிருந்தார்.

( தொடரும்)


செவ்வாய், அக்டோபர் 19, 2010

அமில தேவதைகள்



அறிவியல் குறுந்தொடர்கதை

அத்தியாயம்-2

கருப்பசாமியின் காவல்துறை அனுபவத்தில் இத்தனை விஞ்ஞான பூர்வமான பணியை எதிர் கொண்டதே இல்லை. இன்னமும் வீச்சரிவாள், அம்மிக்கல், பிளேடு இவற்றால் நடத்தப் பெறும் கொலைகளைத்தான் கேள்விப்பட்டிருந்தார்.

தடய அறிவியல் துறையில் இருந்து அவருக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையைக் கொண்டு எங்கிருந்து விசாரணையைத் துவங்குவதென்றே குழப்பமாக இருந்தது.

தலையைத் துண்டிப்பதற்கு சக்தி வாய்ந்த லேசர் ஒளிக்கற்றை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரத்தம் ஒரு சொட்டுகூட வெளியேறியிருக்க வாய்ப்பே இல்லை. கைரேகை தடயங்கள் இல்லை. கல்யாணம் ஆகாத ஆஷா கர்ப்பமாக இருந்தாள் என்ற செய்தி கொஞ்சம் கூடுதல் தகவலாக இருந்தது.

ஆஷாவின் தோழி ஈஸ்வரி சொன்ன ரகசியங்களைக் கொண்டு சுரேஷைத் தேடுவதில் கவனம் செலுத்தினார். சுரேஷின் மீது தொண்ணூற்று ஐந்து சதவீத சந்தேகத்தைத் திருப்பினார்.

காதலித்தவன் இத்தனை கொடூரமாகக் கொலை செய்ததற்குக் காரணம் இருக்க வேண்டும். ரேடியேஷன் லேஸர் டெக்னாலஜி என்ற படிப்பெல்லாம் படித்தவன் என்று ஈஸ்வரி எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் சொன்னது அவருடைய சந்தேகத்தின் சதவீதத்தை உயர்த்தியது.

தொலைபேசி காலிங் பெல் போல அடித்தது.

முறுமுனையில் சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி. "சுரேஷைப் பிடிச்சுட்டோம்'' என்றார்.

"நல்லது. ரொம்ப பயமுறுத்தாம இங்க கூட்டிட்டு வந்துடுங்க'' தொலைபேசியை நிதானமாக வைத்துவிட்டு அந்த வினாடி முதலே சுரேஷுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

"வீட்ல திட்டுவாங்க'' என்று காதலில் பின்வாங்கியவன் இவ்வளவு விஞ்ஞான பூர்வமாகக் கொலை செய்வதற்குத் தயாராவானா? தன் வெளிநாட்டு வேலைக்குப் பாதகமாக அமைந்துவிடுவாள் என்று ஆள் வைத்துத் தீர்த்துக் கட்டியிருப்பானா? தலையை மட்டும் துண்டித்துவிட்டால் அடையாளம் தெரியாது என்று நினைத்துவிட்டானா?

மறுபடி போன்.

ராமசாமிதான் பேசினார்.

"சாரி சார். வர்ற வழியில... எதிர்பார்க்கவேயில்ல சார்... ஓடற ஜீப்ல இருந்து கீழ குதிச்சுட்டான்.''

"என்ன பேசறீங்க ராமசாமி? தப்பிச்சுட்டானா?''

"இல்ல சார்... எதிர்ல வந்த கார்ல மோதி...''

"உயிர் இருக்கா?''

"இருக்குது சார்.'' தன்னையும் அறியாமல் மகிழ்ச்சியாகத் தெரிவித்தார் ராமசாமி.

"எந்த இடம்?''

"ராயப்பேட்டை.''

"ஹாஸ்பித்திரி இருக்கிற இடம்தான்... உடனே சேர்த்துட்டு கூடவே இருந்து பார்த்துக்கங்க.. நான் உடனே புறப்பட்டு வர்றேன்.''

கருப்பசாமி ஹாஸ்பிடலை அடைந்தபோது தலை, கை, கால் என்று சர்வ பாகங்களும் பாதிக்கப்பட்டு வாயில் ஆக்ஸிஜன் திணிக்கப்பட்டு ரத்தம், குளுகோஸ் ஏற்றங்கள் சகிதம் இருந்தான்.

"ஒரு வாரத்துக்குப் பேச முடியாது'' டாக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார். இருந்த ஒரே தடயம் இப்படி ஒரு வாரத்துக்குப் பயனில்லாமல் போனது ஏமாற்றமாக இருந்தது.

ராமசாமியை அழைத்து "பிடிச்சபோது ஏதாவது சொன்னானா?'' என்றார்.

"இல்லை சார்... ஆஷா கொலை விஷயமா உங்களை விசாரிக்க வேண்டியிருக்குனு சொன்னோம். ‘நா கொல்லல சார்... காட் பிராமிஸ் சார்' என்று தலையில் கைய வெச்சு அழுதான்... ஸ்டேஷன்ல வந்து சொல்லுனு ஜீப்ல ஏத்திக்கிட்டு வந்தேன்... வீசா கூட வந்துடுச்சி சார்.னு புலம்பிக்கிட்டே இருந்தான். திடீர்னு எகிறி குதிச்சுட்டான்... ஐயர் வூட்டுப் பையன்.. அதான் யோசனையா இருக்குது''

"என்ன யோசனை?''

"ஐயர் பையன் கொல்லுவானான்னுதான்..''

"இதுக்குக்கூடவா ஜாதி?''

ராமசாமி பலமாக விவாதிக்க விருப்பமில்லாமல், ஸேம் சைட் கோல் அடித்தார்: "இந்தக் காலத்தில யாரை நம்ப முடியுது சார்?''

"நமக்குக் கிடைச்ச ஒரே ஆதாரம் இவன். இவன்தான் கொன்னானான்னு முடிவு பண்றதுக்கு இதுவரைக்கும் ஒரு ஆதாரமும் இல்லை.... விசாரிக்கணும்னா இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும்.'' சூழ்நிலையை அடுக்கிக் கொண்டே போனார் கருப்பசாமி.

"ஒருவிதத்தில பார்த்தா அமெரிக்காவுக்குப் போகணுங்கிறதுக்காக கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கான். அதுவே ஒரு கொலைதான சார்... ஆஷா பிடிவாதம் பிடிக்கவே கருவைச் சுமக்கறவளையும் சேர்த்தே கொன்னுட்டான்... பிஸிக்ஸ் படிக்கிறவன். லேசர் சம்பந்தமான படிப்பு. இதுவே எவிடென்ஸ்...''

"எலை சாயற பக்கம் குலை சாயற மாதிரி சாயக் கூடாதுய்யா... அவசரப்பட்டு முடிவுக்கு வந்துட்டா அப்புறம் அதிலயேதான் போவே... மொதலல எத்தனை பாஸிபிலிட்டி இருக்குனு பாரு. அப்புறம் முடிவுக்கு வா...''

"ஜஜூ.வி.ல கூட தலைகள் ஜாக்கிரதை.. தலைநகர் பயங்கரம்னு மாபியாவோட லிங்க் பண்ணி எழுதியிருந்தாங்க சார்... ‘நக்கீரன்ல ஆயிரம் தலை வாங்கும் அக்கரகார தலைக்காரன்னு எழுதியிருக்காங்க...''

"எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிடுங்க.. ஏதாவது க்ளு கிடைக்கும்.''

"சரி சார்.''

கருப்பசாமி வேலையில் கடும் சிரத்தை உள்ளவர். காக்கி சட்டை வேலையில் சேர்ந்த பின்பும் உடற்பயிற்சி செய்து வரும் மிகச் சில காவல்துறை அதிகாரிகளில் ஒருவர். நிறத்தைப் பார்த்துதான் பெயர் வைத்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். கைக்கெட்டும் தூரத்தில் குற்றவாளிகள் கிடைத்துவிட வேண்டும் என்ற சோம்பேறித்தனம் இல்லாதவர். சுரேஷின் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, கவனத்தை வேறுபக்கம் திருப்பினார்.

இருந்தாலும் யாரைச் சந்தேகிப்பது என்று பெரிய வெற்றிடமாக இருந்தது.

ராமசாமியிடம் சொன்ன வேலை டேபிளின் மீது குவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் புலன் விசாரிக்கும் இதழ்கள் இத்தனை இருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆஷாவின் தலையில்லாத உடலைப் போட்டு எல்லா பேப்பர்களிலும் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சொல்லி வைத்தாற்போல எல்லா செய்தித்தாள்களிலும் புதுப் புதுக் கோணங்கள் இருந்தன. ஆஷாவின் கொலை செய்தி தவிர கடந்த வாரங்களில் வெளியான வேறு சில செய்திகளில் இருந்த ஒற்றுமை அவரை வியப்பில் ஆழ்த்தியது.

கமிஷனர் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு பி.ஆர்..வுக்கு லைன் கேட்டார்.

"கடந்த வியாழக்கிழமை பிரஸ் மீட்ல இந்த ஒரு மாசத்தில மட்டும் பதினாறு இளம் பெண்கள் காணாமல் போனதாக வந்திருக்கிறதே மணி?''} விசாரித்தார்.

"ஆமா சார்.''

"அந்தப் பதினாறு பேரோட டீடெய்ல்ஸ் வேணும். போட்டோ, அட்ரஸ்...''

"ஒரு மணி நேரத்தில குடுத்தனுப்பறேன் சார்.''

"தேங்க்ஸ் மணி.''

நூல்கண்டில் சிக்கு ஏற்பட்டால் ஏதாவது முனையைப் பிடித்து இழுத்து முடிச்சை அவிழ்க்கிற வேலைதான் இது. சமயத்தில் மேலும் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் இழுத்துப் பார்த்தார்.

வெள்ளைத்தாளில் ஆஷோவோடு பதினேழு என்று எழுதி வைத்தார்.

மாலை. சுரேஷ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றதும் அங்கு காவலுக்குப் போட்டிருந்த போலீஸ்காரன், அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் அவரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான்.

"சப் இன்ஸ்பெக்டர் எங்கே?''

"சுரேஷோட பேரன்ட்ஸைப் பார்க்கப் போனாரு''

"வந்ததும் என்னைக் கான்டாக்ட் பண்ணச் சொல்லு''

தலைமை மருத்துவரைப் பார்க்கக் கிளம்பினார்.

"என் பேர் மகேஸ்வரி'' என்ற அறிமுகத்தோடு ""ஆஷா இறந்து போனதா சொல்ற அதே நாள் இங்க வந்தா''அதிரடியாக ஈர்த்தார் அந்தப் பெண் மருத்துவர்.

"அப்படியா?'' சற்றும் எதிர்பார்க்காத தகவலால் ஆர்வமானார் கருப்பசாமி.

"அபார்ஷன் பண்றதுக்காக'' தொடர்ந்தார்.

"சரி.''

"நா அபார்ஷன் கேஸையெல்லாம் ஒத்துக்கறதில்லை. வேற நர்ஸிங் ஹோமுக்கு அனுப்பி வெச்சேன்.''

"எந்த நர்ஸிங் ஹோம்?''

"மந்தாகினி மெடிக்கல் ரிஸர்ச் பவுண்டேஷன்''

"பாலவாக்கம் பக்கத்தில..?''

"அதேதான்..''

"அங்க யார்கிட்ட அபார்ஷன்..''

"யார்கிட்டயும் பண்ணலைனுதான் போஸ்ட்மார்ட்டம் சொல்லுதே...''

"அதில்ல.. அவ யாரைப் போய் பார்த்தான்னு தெரிஞ்சுக்க முடியுமா?''

"அங்க போயிருக்கா... ஆனா அபார்ஷன் பண்ணிக்காம திரும்பிட்டா.''

"வேற ஏதாவது தெரியுமா?''

"அவ எந்த காலேஜ்ல படிச்சாங்கிறதுகூட பேப்பர்ல பாத்துதான் தெரியும்''

கருப்பசாமி சிரித்தார். "தகவலுக்கு நன்றி.''

வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்தார். "பாலவாக்கம் போப்பா'' என்றார் டிரைவரை நோக்கி.

(தொடரும்)

திங்கள், அக்டோபர் 18, 2010

அமில தேவதைகள்






அறிவியல் குறுந்தொடர்

அத்தியாயம்-1

இரண்டுபுறமும் மரங்கள் நிறைந்த நீண்ட சாலை. மந்தாகினி பாலிகிளினிக் செல்வதற்கான பிரத்யேகப் பாதை அது. சாயங்காலம் ஆறுமணிக்கே அமானுஷ்யம் நிலவியது. சருகுகள் இங்குமங்கும் நகர்ந்து சரசரத்துக் கொண்டிருந்தது.

ஆஷா இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்த தோல் பையை வலதுக்கு மாற்றிக் கொண்டு நடந்தாள். தனிமை உணர்வைத் தவிர்க்கும் பொருட்டு ஏதாவது பாட்டுப்பாட நினைத்தாள். எந்தப் பாடலையும் பாடுவதற்கு அசுவாரஸ்யப்பட்டு மேலும் வேகமாக நடக்க முடிவெடுத்தாள்.

தூரத்தில் கண்ணாடிச் சுவர்களால் அலங்கரிக்கப்பட்ட மருத்துவமனை கண்களுக்குத் தெரிய ஆரம்பித்ததும் சற்றே தெம்பு பிறந்தது அவளுக்கு.

சே, இனி இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் தனியாக வரக்கூடாது என யோசித்தவள், தான் சிந்தித்த சொற்றொடரில் தனியாக என்ற வார்த்தையை அழித்தாள்.

கண்ணாடிக் கதவைத் திறந்தபோது காத்திருந்த மாதிரி ஹாஸ்பிடல் வாசனை உடம்பைத் தழுவிக் கொண்டது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறை தோரணையில் இங்கும் அங்கும் ஒரு ஆணும் பெண்ணும் ஆழ்ந்த சிரிப்புடன் வரவேற்க காத்திருந்தார்கள். ஆஷா அவர்களை நிராகரித்து, லிஃப்டுக்குப் பக்கத்தில் இருந்த எந்த மாடியில் என்ன பிரிவு இயங்குகிறது என்ற பித்தளை பலகையைப் பார்வையிட்டாள்.

நான்காவது மாடியில் என்றிருந்த இடத்தின் அருகே கைனகாலஜி ஆர் அண்டி செக்க்ஷன் என்ற பதங்கள் இடம் பெற்றிருந்தன.

நான்காவது மாடிக்கு விரைந்தாள். அங்கு அம்புக்குறி காட்டிய திசையில் நடந்து இருபக்கமும் தனித்தனி படுக்கை அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்த இடங்களைக் கடந்தாள்.

பாதை இரண்டாகப் பிரிந்த இடத்தில் ஆய்வகம் என்ற பித்தளை பொறிப்பு.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்தான் அதற்குள் ஏகப்பட்ட வெண் சட்டை மருத்துவர் மற்றும் இதர பணியாளர்கள் இருப்பது தெரிய வந்தது. இத்தனை பேர் இருக்கும் இடத்தில் இத்தனை அமைதி நிலவுவது இயற்கைக்கு விரோதம் போலவும் தவறு போலவும் இருந்தது.

"யெஸ்?'' விளித்த பழுத்த வெள்ளுடை மூதாட்டியை அணுகினாள். அவள் பார்வை வழி தவறி வந்தவளை எதிர்கொள்வது போல இருந்தது.

"ஆஷா... அபாயின்ட்மென்ட் வாங்கியிருந்தேன்... நேத்து.. போன்ல'' மிகுதியான பெயர்ச்சொற்களை அடுக்கியே வாக்கியத்தை முடித்தாள். மூதாட்டிக்கும் அதுவே போதுமானதாக இருந்தது.

கொஞ்சம் ரோபோ தன்மையோடு எதிரில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கிவிட்டு ""தி. நகரிலிருந்து?'' என்றாள். அந்த அம்மா உதடு பிரிக்காமல் பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.

உடனே அடையாளம் கண்டுகொண்டதற்காக ஆஷா நன்றியைப் புன்னகையாகத் தெரிவித்தாள்.

"24 வயசா?''

"...''

"படிக்கிறியா?''

"ஆமா?''

"ஏன்? தி.நகர்ல எந்த ஹாஸ்பிடலும் கிடைக்கலையா?''

"யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னுதான்''

"கூட யாரும் வரலையா?''

"இல்லை.''

"மகேஸ்வரி சொன்னாளேன்னுதான் உன்னை அட்மிட் பண்றேன். ரூம் நெம்பர் 4 -பி ல போய் இரு. அப்புறம் கூப்பிட்டு அனுப்புறேன்.''

"சரி மேடம்'.'

ஆஷா குற்ற உணர்வுடன் விடைபெற்று 4-பி இலக்கமிட்ட அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, கதவு மூடிக் கொள்வதற்கு முன், வசமிழந்து அழுதாள். யாரும் வருவதற்குள் அழுது முடித்துவிட வேண்டும் என்ற அவசரமும் தொற்றிக் கொண்டது.

வீட்டுக்குத் தெரிந்தால் அவமானம் தாங்காமல் அனைவரும் செத்துப் போய்விடுவார்கள் என்பது பயத்தை ஏற்படுத்தியது. இரண்டு நாள் தங்கியிருந்து கலைத்துக் கொண்டு ஒரு தடயமும் இல்லாமல் ஹாஸ்டலுக்குப் போய்விடவேண்டும். ஹாஸ்டல் வார்டனிடம் அவசரமாகப் பெற்றோரைப் பார்த்துவிட்டு வரவேண்டியிருப்பதாக அனுமதி வாங்கியாயிற்று. யாருக்கும் தெரியாமல் மீண்டும் மிக இயல்பாக கல்லூரிக்குப் போகலாம். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும். கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

இவ்வளவையும் செய்துவிட்டு சுரேஷ் ""ஸ்டேட்ஸ்ல ஆஃபர் வந்திருக்கு. இந்த நேரத்தில் உன்னைக் கட்டிக்கப் போறேன்னு சொன்னா ஆத்துல யாரும் சம்மதிக்க மாட்டா'' என்று காரணம் சொன்னான். அபார்ஷனுக்கு ஆகும் செலவை அடுத்த மாசம் தருவதாகக் கடன் சொல்கிறான்.

கோழைத்தனமான செயலை எவ்வளவு துணிச்சலாகச் செய்கிறான், ராஸ்கல்.

இனி யாரிடமும் ஏமாறக்கூடாது என்று உறுதிப்படுத்திக் கொண்டாள். வாஷ்பேஸினில் முகத்தைக் கழுவிக் கொண்டு கொஞ்சம் தன்னைப் புதுசு பண்ணுகிற முயற்சியில் இறங்கினாள்.

சல்வார் கம்மீஸ் கழற்றிவிட்டு தயாராகக் கொண்டு வந்திருந்த நைட்டிக்கு மாறிய... அவன் கொடுத்த ப்ரா... திருட்டு நாய்... அவசரமாக ப்ராவைக் கழற்றி எறிய முற்பட்ட நேரத்தில் டொக்... டொக்.

"ஒன் செகண்ட்'.'

லேசாக கதவைத் திறந்து முகத்தை மட்டும் காட்டி, "நைட்டிதான போடணும்?'' என்றாள்.

பச்சை நிறத்துணியால் வாய்ப் பகுதியை மூடியிருந்த இரண்டு வெள்ளை அங்கி மனிதர்கள், "பரவாயில்லை. நாங்க உங்களுக்கு வேறு ஆடை கொடுப்போம், நீங்கள் எந்த ஆடையிலும் வரலாம்'' என்றது வடிகட்டி வந்தது.

"நான் நைட்டிக்கு மாறிட்டேனே?''

"எதுவாக இருந்தாலும் பரவாயில்லை'' கண்களில் குறும்பு தெரிந்தது. ஏன் பெண் நர்ஸ் யாரும் இல்லையா?

"சரியா போட்டுக்கிட்டு வந்திர்றேன்...''

"வந்துக்கிட்டே போட்டுக்கலாம்.. வாங்க.''

கிண்டலடிக்கிறார்களா, அவசரமாக அழைக்கிறார்களா.. யூகிக்க முடியாமல் அவர்கள் பேசுவதை வேடிக்கையாகத் தாம் எடுத்துக் கொண்டதாக மிரட்சியோடு சிரித்தாள்.

கண் இமைக்கும் நேரத்தில் சரேல் என இருவரும் உள்ளே நுழைந்தனர். பக்கத்தில் இருந்த ஏதோ துணியால் உடம்பைப் போர்த்திக்கொண்டு, "வாட் நான்சென்ஸ்.. நான் மகேஸ்வரி மேடம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவேன்''- கத்தினாள்.

அதற்குள் ஒருவன் பாக்கெட்டில் மருந்து நிரம்பிய சிரிஞ்சை எடுத்து அவளது உடம்பில் அகப்பட்ட இடத்தில் குத்தினான்.

மற்றொருவன் வாயை அமுக்கி, மெல்ல அவளை ஸ்ட்ரெச்சரில் கிடத்த... அவளது நைட்டி முழுவதுமாக நழுவித் தரையில் விழுந்தது.

துரிதமாக அவள் கொண்டு வந்திருந்த பையை சுருட்டி அவளுக்கு அருகே ஒரு பக்கத்தில் போட்டான். ஒரு வெள்ளைத் துணியால் அவளை முழுதும் போர்த்தி தூக்கிக் கொண்டு வெளியேறும்போது ஆஷா முற்றிலும் மயங்கி கடைசி வார்த்தையாக "ராஸ்கல்ஸ்' என்று முணகினாள்.

சுமார் எட்டு மணி வாக்கில் 4-பி அறையைப் பார்த்துவிட்டு வந்த ஹாஸ்பிடல் பணியாள், " அந்த ரூம்ல யாருமே இல்ல மேடம்'' என்றான்.

பெரிய டாக்டர் எரிச்சலுற்று, "நல்லா பார்த்துட்டு வா.. பாத்ரூம்ல இருப்பா'' விரட்டினாள்.

"அரைமணி நேரம் தேடறேன் மேடம்.. அங்க யாருமே இல்ல. பாத்ரூம் திறந்துதான் கிடக்குது..''

"மனசு மாறி கிளம்பிப் போய்ட்டாளா?''

"தெரியல மேடம்''

"ரூம்ல அவ கொண்டு வந்த பை இருந்ததா?''

"இல்லையே.''

"ஒழியட்டும்'' சலித்துக்கொண்டு "இந்த மாதிரி லூஸ்ங்களுக்கெல்லாம் மகேஸ்வரி எதுக்கு சப்போர்ட் பண்றா...'' கர்சீப்பால் விசிறிக் கொண்டாள்.

"அந்த ரூம்ல இந்த சிரிஞ் கெடந்தது மேடம்'' சிப்பந்தி நீட்டிய ஊசியை ஏறெடுத்தும் பார்க்காமல், "சரியான போதை கேஸா இருப்பா.. எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும்.. அதை அந்த பேஸ்கட்ல போட்டுட்டுப் போய் ஒரு காபி கொண்டுவா... கையை அலம்பிடு.'' அவன் கிளம்புவதற்குள் கடைசி வரியை உரக்கச் சொல்லி ஞாபகப்படுத்தினாள்.


(தொடரும்)

நன்றி: உயிரோசை


LinkWithin

Blog Widget by LinkWithin