செவ்வாய், மே 31, 2011

அறிவியல் அறிவோம்

அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய இணைய தளம். அறிவியல் செய்திகளை அத்தனை எளிமையாக தருகிறார். அறிவியல் அறிவோம்.

ஞாயிறு, மே 29, 2011

என் விகடன் என் பேட்டி


கடந்த வார என் விகடனில் என் பேட்டி வெளியானது. என்னுடைய ஊரைப் பற்றிய சுருக்கமான நினைவுத் தொகுப்பு. என்னுடை எல்லா கதைகளுக்கும் ஏதோ கதாபாத்திரத்தையாவது இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கும் கிராமம் அது. சுருக்கமாக சொல்லியிருப்பினும் அதற்கு விகடன் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சி பிரமிப்பானது. என்னுடைய ஊருக்கு நிருபரும் போட்டோ கிராபரும் வந்திருந்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததையும் ஊரைப்பற்றி அக்கறையோடு விசாரித்தையும் பத்திரிகையாளனாக இருந்தும்கூட வியப்பாக எதிர் கொண்டேன்.

நடிகை ரேவதி முதன் முதலாக தன்னை திரையில் பார்த்தபோது அத்தனை பெரிய சைஸிஸ் தன்னைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டதாக அவர் ஆரம்பத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.
லே அவுட்டில் காட்டியிருக்கும் கவனத்தைப் பார்க்கும்போது அதற்கு சற்றே குறைவான ஓர் அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.






25.5.11 vikatan

வெள்ளி, மே 27, 2011

முகவரி மாறிவிட்டது

அ.முத்துலிங்கம் அவர்களின் வலைதள முகவரி மாறிவிட்டது. கீழ்கண்ட முகவரியை சொடுக்கவும்.

அ.முத்துலிங்கம்

ஞாயிறு, மே 01, 2011

கவர்னர் மாளிகையில் ஜெயந்தன் விருது!



எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செயல்படும் செந்தமிழ் அறக்கட்டளையின் முதலாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஜெயந்தனின் அனைத்து கதைகளையும் தொகுத்து வெளியிடும் நிகழ்ச்சியும் சென்னை ராஜ்பவனில் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது.
பாதுகாப்பு கருதி நிறைய கட்டுப்பாடுகள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அசைந்தாலும் ஆபத்துபோல அமர்ந்திருந்தனர் பலரும். செல் போனை ஆப் செய்துவிடுங்கள், கையில் டிஜிடல் கேமிரா வைத்திருந்தால் அதை பாட்டரியை கழற்றிவிட்டு பைக்குள் வைத்துவிடுங்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். தடவிப் பார்க்கும்போது என் பாக்கெட்டில் இருந்த ஹோமியோபதி மாத்திரை குப்பிகளைப் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசித்தார்கள். நான் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.
பொதுவாக இலக்கிய நிகழ்ச்சி என்றால் விழா தொடங்கிய அடுத்த வினாடி முதல் எல்லோரும் வெளியே செல்லத் தொடங்கி, உள்ளே அரங்கத்துக்குள் இருப்பவரைக் காட்டிலும் அதிக அளவில் மக்கள் வெளியே புகைப் போக்கியபடி பேசிக் கொண்டிருப்பார்கள். இங்கே கவர்னர் எழுந்து போகும் வரை யாரும் எழுந்திருக்கவில்லை.
விழாவில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரது பேச்சுகள் சமூகமும் இலக்கியமும் என்பதைத் தொட்டுப் பார்த்துத் திரும்பின. தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ம.ராசேந்திரன் ஜெயந்தனின் சிறுகதைகளையும் கவிதைகளையும் குறிப்பி்ட்டுப் பேசினார். இளம்பிறை தாம் தேர்வு செய்த கவிதைத் தொகுப்புகளை
உதயசந்திரன் தமிழர்கள் நிலைமை பற்றி குறிப்பிட்டார். நறுக்கென்று சுடுவதுபோன்ற பேச்சு அது. வெட்டுப்புலி நாவலை கடந்த ஆண்டே படித்ததாகக் குறிப்பிட்டு நாவலில் வரும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மக்களுக்கு நன்மை விளைவித்ததா, சீர்குலைத்ததா என்ற அடிப்படையான கேள்வி இருப்பதாகச் சொன்னார். 380 பக்க நாவலை ஒருவரியில் சொல்லச் சொன்னால் இதைச் சொல்லிவிடலாம். அவருடைய வாசிப்பு பிரமிக்க வைத்தது.
வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்கள். தோல்வியடைந்தவர்களின் வரலாற்றை இலக்கிய வாதிகள் எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னதுகூட என் நாவலுக்கு நெருக்கமாக இருந்தது.

பிரபஞ்சன்.. நாலரை நிமிடம்தான் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் நாவலைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். காலையில் கூட மீண்டும் ஒரு தரம் படித்துக் கொண்டிருந்தேன் என்றார்.
நாலரை நிமிட உரையில் என் நாவலைப் பற்றி மூன்றரை நிமிடம் பேசினார். நாவலில் வரும் பல பத்திகளை அப்படியே சொல்லிக் கொண்டு போனது ஆச்சர்யமாக இருந்தது.
கவர்னர் பர்னாலா தமிழின் தொன்மையை பல மொழிகளில் தமிழின் ஆதிக்கத்தைப் பற்றி கூறினார்.
நாடகத்துக்கு வேலு சரவணனும் மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் முனுசாமியும் கவிதைக்கு கடற்கரய், அ.வெண்ணிலா, பொன். இளவேனில், பா.சத்தியமோகன் ஆகியோரும் சிறுகதைக்கு விஜயமகேந்திரன், ஜனநேசன் உயிர்வேலி ஆலா ஆகியோரும் விருது பெற்றனர்.
வரவேற்புரையை கவிஞர் தமிழ்மணவாளனும் நன்றியுரையை ஜெயந்தன் சீராளனும் நிகழ்த்தினர்.
சிறுகதை விருதுகளைத் தேர்வு செய்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசன் விழாவுக்கு வரவில்லை.

வியாழன், ஏப்ரல் 28, 2011

எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது




தகுதியான எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்திருப்பதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

விருதுகுறித்த விவரம்:

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் எஸ். ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.



விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

•••

திங்கள், ஏப்ரல் 11, 2011

காதுகள் : காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.





எம்.வி. வெங்கட்ராம்



"என்ன வேலை செய்கிறீர்கள்?"

"எழுத்தாளரா இருக்கேன்.''

"அதுசரி சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?''

ராஜாஜி ஒரு எழுத்தாளரிடம் நடத்திய உரையாடலின் ஒரு பகுதியாக இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எழுத்தாளராக இருப்பது ஒரு வேலையல்ல. சொல்லப்போனால் எழுத்து எழுதுபவனைக் காப்பதைவிட அவனுடைய உயிரை வதைப்பதாகத்தான் இருக்கிறது. ஜெயகாந்தன் போன்ற வெகுசிலரே எழுத்தின் மூலமே போராடி வாழ்ந்து காட்டியவர்கள். எழுத்தாளனாக வாழலாம் என்று நினைத்த பலர் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களால் புறக்கணிக்கப்பட்டு மனத்தாக்குதலுக்கு ஆளானவர்கள்தான். குறிப்பாக தமிழில் இதற்கு தடுக்கி விழுந்தால் உதாரணங்கள் உண்டு.

புதுமைப்பித்தன் தொடங்கி ஜி.நாகராஜன், பிரமிள், நாரண. துரைக்கண்ணன், கோபி கிருஷ்ணன் என்று நிறையபேரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தை நம்பியே ஜீவிதம் நடத்தியவர்களில் மிக முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். எழுத்து ஒரு மனிதனை எப்படி விழுங்கும் என்பதற்கு ஒரு சாதனை உதாரணம் அவர்.

படைப்பிலக்கியத்தின் மூலம் வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் அறிஞர்களின் வாழ்க்கைக் கதை, சுயமுன்னேற்ற நூல்கள் என எழுதி வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. (இதை சமீபத்தில் அறம் என்ற சிறுகதையாகப் படைத்திருந்தார் ஜெயமோகன்.)

ஓயாத மன உளைச்சல். அவருக்குள்ளேயே வேறு குரல்கள் கேட்க ஆரம்பித்தன. காதுக்குள் எந்நேரமும் யார் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். உறங்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. எதிலும் கவனம் கொடுக்க முடியவில்லை. குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. எதையுமே கவனிக்க முடியவில்லை என்பதுதான் சரி.

இந்த அனுவபத்தை அவர் காதுகள் என்ற நாவலாக்கினார். எழுத்தாளன் தன்னை வருத்தி அந்த அனுவபத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகச் செய்யும் மாபெரும் தியாகம் அது. உன்னை யார் கேட்டார்கள் என்று வெளியிலிருந்து ஒரு நபர் சுலபமாகக் கேட்டுவிட முடியும். ஆனால் எழுத்தாளன் அப்படியொரு அனுபவத்தைத் தருவதற்காகத்தான் தவமிருக்கிறான். யாருடைய எதிர்பார்ப்பையும் பலனாக எதிர்பார்க்காமல் அதைச் செய்கிறான். அவனுக்காக எங்கோ, எப்போதோ கிடைக்கப் போகிற வாசகனுக்காக அதைச் செய்கிறான். இந்த தியாகத்துக்கு எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகாதமி கிடைத்தது.

காதுக்குள் எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் சப்தம் தரும் ஹிம்சையை வாசகனுக்கு இறக்கி வைப்பதில்தான் வெங்கட்ராமின் முழு ஆளுமையும் வெளிப்பட்டிருக்கிறது. நாவலில் பார்வதியும் பரமசிவனும் சண்டை போட்டுக் கொள்ளுவார்கள். பச்சை பச்சையான வார்த்தைகள்.. கெட்ட வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சரமாறித் திட்டிக் கொள்வார்கள். பராசக்தி அந்த நாவலின் கதாநாயகன் மீது காம இச்சை கொண்டு புலம்புவாள். தன் காமத்துக்கு இணங்கும்படி ஏங்குவாள், மிரட்டுவாள், அழுவாள்...

திடீரென்று வேறுசில நபர்களும் குறுக்கிட்டுக் கத்துவார்கள். நாயகனால் சாப்பிட முடியாது, தூங்க முடியாது. சொந்தமாகத் தொழில் செய்ய பணம் ஈட்ட கிளம்புவான் வழியிலேயே காதுக்குள் இருக்கும் நபர்கள் விவகாரம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

நாயகனுக்கு நிறைய குழந்தைகள். மனைவி கர்ப்பமாக இருப்பாள். அவளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க முடியாது. குழந்தைகள் பசியிலும் பட்டினியிலும் துவளும். குடும்பத்தைக் காக்க வேண்டிய நாயகனுக்கு இப்படியொரு பிரச்சினை. குழந்தைகள், மனைவியின் நிலைமை புரியும். ஆனால் அதை மாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாது.

மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள். மனைவி பலவீனமாக இருப்பாள். குழந்தையோ மனைவியோ இறந்து போய்விடுகிற நிலை. சைக்கிள் எடுத்துக் கொண்டு போவார். குழந்தை இறந்துபோய்விடும். அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய மருத்துவமனையில் காசு கேட்பார்கள். காசு இருக்காது. நாவலின் பரிதாபத்தின் உச்சம் இது.

குழந்தையைத்தானே அடக்கம் செய்து கொள்வதாக வாங்கி வருவார். சைக்கிளில் கேரியரில் குழந்தையை வைக்க முடியாது. முன் பக்க ஹாண்டில் பாரில் ஒரு பையில் போட்டு மாட்டிக் கொண்டு வீடு வந்து சேருவார். சைக்கிள் ஹாண்டில் பாரில் காய் காறி வாங்கிவருவதுபோல இறந்து போன தன் குழந்தையைத் தூக்கி வரும் அந்தக் காட்சி அதிர்ச்சியானது.

வறுமையின் கையாலாகத்தனத்தின் வறட்சியான சித்திரம். அங்கே குழந்தை, பாசம், நாகரிகம், பழக்க வழக்கம், மரபு, சடங்கு போன்ற அத்தனைச் சொற்களும் பொருளிழந்து தொங்கும்.

வீட்டுக்கு வந்து சேருவார். வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைப்பார். அப்போது பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு பெண் அதைப் பார்த்துவிடுவாள். எங்கள் வீட்டின் பக்கம் ஏன் புதைக்கிறாய் என்று கூப்பாடு போடுவாள். அவர் பால்மாறாமல் மீண்டும் தோண்டி எடுத்து தன் வீட்டுக்கு நெருக்கமாக இன்னொரு குழியைத் தோண்டி குழந்தையை மீண்டும் புதைப்பர். இந்தக் காட்சிகளின் போது நாம் பேசி வருகிற சமூக கோட்பாடுகள் அத்தனையும் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி எதிரில் வந்து நிற்கும்.

இறுதியில் அவர் காதுகளின் குரலில் இருந்து விடுபட்டு மீள்வதோடு கதை முடியும்.

இந்த நாவல் இப்போது என்னிடம் இல்லை. படித்த ஞாபகத்தில் இருந்துதான் எழுதியிருக்கிறேன். நாவலை மறுபடி புரட்டிப் பார்த்துவிட்டு எழுதுவதைவிட மனதில் வடுவாக பதிந்திருக்கும் காட்சியை எழுதுவது மேலும் உண்மையாக இருக்கும் என்றே நினைத்து இதை எழுதியிருக்கிறேன்.

பியூட்டிபுல் மைண்ட் என்றொரு உண்மைக் கதை நூல். ஒரு எகனாமிஸ்ட்டின் உண்மைக் கதை அது. அவருக்கும் காதுக்குள் குரல்கள் கேட்கும். பொருளாதார பெரிய மேதையான அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டு வருவதுதான் கதை. அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. எம்.வி.வெங்கட்ராமின் வாழ்க்கையேப் போலவே மிக லேசான ஒற்றுமை அந்த உண்மை மனிதனின் கதையிலும் காணக்கிடைத்தது. பியூட்டிபுல் மைண்ட் சினிமாவாகவும் வந்து ஏராளமான ஆஸ்கர் பரிசுகளையும் வென்றது.

உலுக்கி எடுக்கும் உண்மைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இது.

காதுகள்
எம்.வி. வெங்கட்ராம்
அன்னம் அகரம் பதிப்பகம்
பிளாட் 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007.
தொ.பே.: 04362-279288


ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

இடம் மாறியது (2011-04-01)

பிரபஞ்சன் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவருடைய கனடா பயணம் பற்றி எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதியுள்ள அனுபவ குறிப்பு இது. படித்த போது இருவருமே என்னை நெகிழசெய்துவிட்டனர். அ.முத்துலிங்கத்துக்கு நன்றி.



பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை வர்களிடம் செல்கிறார். பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். தான் வரும் வழியில் கவனம் செய்த பாடல் ஒன்றை பிள்ளையின் முன் பாடி அதற்கு பொருளையும் சொல்கிறார். கவிராயருக்கு யாசகம் கேட்டு பழக்கமில்லை. கூச்சத்துடன் நிலத்தை பார்த்தபடி நிற்கிறார்.
பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். கவிராயர் முகம் பரவசமடைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவரை பரிசுகளுடன் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கிறபோது பிள்ளை சொல்வார் ‘இப்போதைக்கு ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது. கவலைப்படாதீரும்.’
பிரபஞ்சன் படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவலைத்தான். அது படித்து இன்றைக்கு 15 வருடம் ஆகியிருக்கும். அந்த நாவலில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான். இன்றுவரை ஞாபகத்தில் நிற்கிறது. ‘ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது.’ உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஓர் இடத்தில் ஒழித்தால் இன்னொரு இடத்தில் முளைத்துவிடும். இடம் மாற்றத்தான் முடியும். John Steinbeck என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Grapes of Wrath நாவலிலும் இப்படி ஓர் இடம் வரும். இந்த உலகில் செல்வந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் நிரந்தரமானவர்கள். அவர்களை ஒழிக்க முடியாது. இந்த இரண்டு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமை என்னை வியப்படைய வைத்தது.
பிரபஞ்சனைப் பற்றி அந்தக்காலம் தொட்டு எனக்குள் பெரிய மதிப்பிருந்தது. ஆனால் புத்தக அட்டையில் காணப்படும் அவருடைய சதுரக் கண்ணாடி படத்தை பார்க்கும்போது ஓர் அச்சம். கடுமையானவராக இருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைச் சந்தித்தது கிடையாது. சமீபத்தில் உதயன் விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்க முடிந்தது. ஸ்டைலாக தொப்பி அணிந்து, கறுப்புத்தோல் அங்கி மாட்டி வந்த அவர் அப்படியே என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். இருபது வருடமாக பிரிந்திருந்த நண்பர்கள் சந்தித்ததுபோல அது இருந்தது. இரண்டு நிமிட நேரத்துக்கு பிறகு அவர் பேசப் பேச நானும் நண்பர்களும் நிறுத்தாமல் சிரித்தபடியே இருந்தோம். அவர் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வெளியேபோய் சிகரெட் பிடித்துவிட்டு வருவார். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுப்போம். மறுபடியும் உள்ளே வந்து அவர் பேசத் தொடங்கியதும் சிரிக்கத் தொடங்குவோம்.
பேச்சு ’வானம் வசப்படும்’ நாவலைப்பற்றி திரும்பியது. அது சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சரித்திர நாவல். அதை எழுதுவதற்கு எப்படி தூண்டுதல் கிடைத்தது. சரித்திர நாவல் என்றால் வரலாறு படிப்பதில் நிறைய நேரம் போய்விடும். ஆராய்ச்சிக்குறிப்புகள் எழுதி வைக்கவேண்டும். எப்படி அந்த நாவலை எழுதி முடித்தார் எனக் கேட்டோம். அவர் ஆனந்தரங்கம்பிள்ளை நாட் குறிப்பை படித்திருக்கிறார். அப்போதே விதை விழுந்துவிட்டது. அந்த நாட்குறிப்பு வித்தியாசமானதாக இருக்கும். 18ம் நூற்றாண்டு பேச்சுத் தமிழுக்கு ஒரே உதாரணம் அந்த டைரிதான். பல இடங்களில் தமிழா அல்லது வேறு மொழியா என ஐயம் தோன்றிவிடும். அந்த டைரியை முழுக்கப் படித்து, புரிந்து அது சம்பந்தமான வரலாற்று நூல்களையும் ஆராய்ந்து முடித்த பின்னரே நாவல் சாத்தியமானது. பத்து வருடத்து உழைப்பு என்று கூறினார்.
அந்த நாவலில் பானு என்றொரு தாசி வருவாள். விருந்து ஒன்றில் அலாரிப்பு ஆடிய பின்னர் பதம் ஆடுவாள். ‘ஆறுதலாரடி? அந்த மாதொருபாகனைத் தவிர’ என்று தொடங்கும் அருமையான பாடல். இதை யார் எழுதினார்கள் என்று கேட்டதற்கு அவர் தானே அதை எழுதியதாகக் கூறினார். பல வருடங்களாக என் மனதில் கிடந்த சந்தேகத்தை அன்றுதான் என்னால் போக்க முடிந்தது.
பிரபஞ்சனிடம் எழுத்து துறைக்கு எப்படி வந்தீர்கள்? எந்த வயதில் எழுதத் தொடங்கினீர்கள்? என்று கேட்டேன். நண்பர் ஜேசுதாசன் வீட்டு இரவு விருந்துக்கு அவர் வந்திருந்தார். அதே விருந்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். பிரபஞ்சன் வெளியே சென்று சிகரெட் பிடித்துவிட்டு திரும்பினார். பெரிய கதை பிறக்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது. விருந்துக்கு வந்திருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.
பிரபஞ்சனிடம் காணப்பட்ட முக்கியமான வித்தியாசம் அதுதான். அவர் ஓர் எழுத்தாளரைப் போலவே இல்லை. அந்த வீட்டு செல்ல நாய்களுடன் விளையாடினார். குழந்தைகளை இழுத்து வைத்து பேசினார். பெண்களுடன் சினிமா பற்றியும், புதுமுக நடிகைகள் பற்றியும் தொலைக்காட்சி தொடர்கள் பற்றியும் பேசினார். அவர்கள் எல்லோரும் ஒருவர் தவறாமல் அவர் பேச்சில் மயங்கியிருந்தது தெரிந்தது. என்னுடைய மனைவி அடுத்தநாள் காலை சொன்னார். ‘பிரபஞ்சன் பெரிய எழுத்தாளர். ஆனால் என்ன நல்ல மனுசன். அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சுவாரஸ்யமாக வேறு பேசுகிறார். பெரிய அறிவு ஜீவிபோல முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பயமுறுத்தவில்லை. எல்லோரையும் சக மனுசராகப் பார்க்கிறார்.’ என் மனைவி தன் மனதில் தொகுத்து வைத்திருந்த எழுத்தாளர் பிம்பத்தை பிரபஞ்சன் போட்டு உடைத்துவிட்டார். என் மனைவியிடமிருந்து ஒரு நற்சான்றிதழ் லேசாகப் பெறக்கூடியது அல்ல. நாற்பது வருட காலமாக நான் அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்டை முடித்துவிட்டு பிரபஞ்சன் உள்ளே நுழைந்தார். அவருடைய மதுக் கோப்பையை யாரோ நிறைத்திருந்தார்கள். ‘எனக்கு பதினாறு வயதானபோது அப்பா ஒரு நல்ல நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதன் பளபளப்பான ஒற்றைகளைக் கிழித்து காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். அப்படி காதல் கடிதங்கள் எழுதியே அரைவாசி நோட்டுப் புத்தகம் முடிந்து போனது. காரணம் நான் அப்பொழுதெல்லாம் ஒரு கொள்கை வைத்திருந்தேன். எந்தப் பெண்ணை பார்த்தாலும் ஒரு காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று. ஒரு பெண் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கோயிலை ஒருதரம் சுற்றிவிட்டு வீட்டுக்கு போவாள். இவளை எப்படியோ தவறவிட்டு விட்டேன். இவளிடம் கடிதம் கொடுப்பதற்கு சரியான இடம் கோயில்தான் என்று தீர்மானித்தேன். நோட்டுப் புத்தகத்தில் பக்கங்களை கிழித்து ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஐந்தே முக்கால் பக்கம் அவளை வர்ணித்தது. மீதியில் என் காதலைச் சொல்லியிருந்தேன்.
கோயிலில் அவள் சுற்றியபோது நானும் சுற்றினேன். முதல்நாள் கடிதம் கொடுப்பதற்கு போதிய தைரியம் வரவில்லை. இரண்டாவது நாள் அவள் பின்னாலேயே போய் பின்னுக்கு நின்றபடி கடிதத்தை நீட்டினேன். அவள் பெற்றுக்கொண்டாள். அதுவே பெரிய வெற்றி. வழக்கம்போல என்னுடைய முகத்தில் எறியவில்லை. துணிச்சலாக கடிதத்தை பெற்றுக் கொண்டவளுக்கு அதை ஒளித்து வைக்கும் சாமர்த்தியம் இல்லை. பிடிபட்டுப் போனாள். கடிதத்தை தூக்கிக்கொண்டு அவளுடைய அப்பா என் வீட்டுக்கு வேகமாக வந்ததை நான் பார்த்துவிட்டேன். நான் அதே வேகத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி முதல் வந்த பஸ்ஸை பிடித்து காசு தீருமட்டும் பயணம் செய்து கடைசி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நின்றேன். இருட்டிக்கொண்டு வந்தது, போக இடமில்லை. எப்படியோ சித்தப்பா தேடி அங்கே வந்து என்னை பிடித்து திரும்ப வீட்டுக்கு அழைத்துப் போனார்.
என்னை நிற்கவைத்து ஆறுபக்க கடிதத்தையும் அப்பா வாசித்து முடித்தார். இந்த பூலோகத்தில் நான் அனுபவித்த அவமானத்தில் அதனிலும் கீழான ஒன்று என் வாழ்கையில் பின்னர் நடக்கவில்லை. கடிதத்தை வாசித்து முடித்த பிறகு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அவர் சொன்னார், ‘இவ்வளவு நல்லாய் எழுதுறாயே. இதுவெல்லாம் உனக்கு தேவையா?’ அவ்வளவுதான். என்னை தண்டிக்கவில்லை, என் எழுத்து திறமையை பாராட்டினார். எனக்குள் ஏதோ படைப்பாற்றல் இருக்கிறது என்று என்னை உணரவைத்த தருணம் அதுதான்.
’உங்களுடையது காதல் திருமணம்தானா?’ இது அடுத்த கேள்வி. ‘எனக்கு வீட்டிலேதான் பெண் பார்த்தார்கள். சொந்தத்துக்குள்ளே. அப்பா இதுதான் பெண் என்றார். நான் சரி என்றேன். உடனேயே மணமுடித்து வைத்துவிட்டார்கள். எனக்கு வேலை இல்லை. நானா கல்யாணம் வேணும் என்று கேட்டேன். திருமணம் ஆன பின்பு அப்பா என் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டார். நான் எழுத்து வேலையில் மும்முரமானேன்.’
கனடா வந்த பின்னர் அவருடைய மனைவியிடம் பேசினாரா என்று கேட்டேன். வந்த மறு நாளே தொலைபேசியில் அழைத்ததாகவும், மறுபடியும் அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) பேசப் போவதாகவும் சொன்னார். இரவு நடுநிசியாகிவிட்டது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினார்கள். நானும் மனைவியும் விருந்துக்கு அழைத்த தம்பதியினரிடம் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். பிரபஞ்சனிடம் மூன்று நாட்கள்தான் பழகியிருந்தேன். ஆனால் நீண்ட வருடங்களாக அவரை தெரியும் என்பதுபோல ஓர் உணர்வு. அவரிடம் விடை பெற்றோம். இரண்டு கைகளையும் விடாமல் பற்றிக்கொண்டு விடை தந்தார்.
விருந்து நடந்தது வெள்ளிக்கிழமை இரவு. ஒரு நாள் கழித்து பிரபஞ்சனுக்கு ஒரு தொலைபேசி வந்தது. பிரபஞ்சனின் மனைவி பாண்டிச்சேரி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டார். பிரபஞ்சன் அந்தச் செய்தியை யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தச் செய்தியுடனே முழு இரவையும் கழித்தார். தன்னை ரொறொன்ரோவுக்கு அழைத்தவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். அது அவருடைய பெருந்தன்மை. திங்கள் காலை ரொறொன்ரோவிலிருந்து புறப்படும் விமானத்தை பிடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தியை அழைத்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இடிபோல வந்திறங்கிய மரணச் செய்தியை கேட்டு அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும். விமானத்தில் பயணம் செய்த அந்த நீண்ட தூரத்தை எப்படி அவர் தனிமையில் கழித்திருப்பார்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்தில் பிரபஞ்சனை சுற்றியிருந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் அவர் மனைவி என்ன செய்திருப்பார். அவர் உடல் நலமாக இருந்தாரா அல்லது அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதியாகிவிட்டாரா? தான் மனைவியிடம் சனிக்கிழமை காலை பேசப்போவதாக பிரபஞ்சன் சொன்னார். ஆனால் பேசினாரா என்பது தெரியவில்லை. நான் அவருக்கு என்ன ஆறுதல் கூறமுடியும். முதன்முதல் சந்தித்தபோது அவர் என்னை ஆரத் தழுவி கட்டிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன். அதையே அவருக்கு திருப்பி தருகிறேன்.
பிரபஞ்சனின் நாவலில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை சொன்னதுபோல உலகத்தில் நிச்சயமானது ஏழ்மைதான். அதை ஒழிக்க முடியாது, இடம் மாற்றி வைக்கலாம். மரணமும் அப்படித்தான், நிச்சயமானது. ஆனால் ஒரே இடத்தில் தங்காது. இடம் மாறிக்கொண்டே இருக்கும்.

ஞாயிறு, மார்ச் 27, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-5

"காந்தளூர் வசந்தகுமாரன் பற்றி பேச்சு வந்ததால் சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... அதில் சரித்திரக் கதைக்கான அத்தனை தரவுகளையும் பெற்றிருந்தார். சில வாக்கியங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருந்தன. நிறைய பழைய தமிழ் வார்த்தைகளைச் சொல்லியிருந்தார்... உதாரணத்துக்கு குதிரை என்பதற்கு சுமார் பத்து தமிழ் வார்த்தைகள்.. இரவு என்பதற்கு.. என்ன மாதிரியான அளக்கும் முறைகள் இருந்தன என்பதற்கு...'' வசந்த் விளக்கிக் கொண்டிருப்பதைப் பாதியில் அறுத்து கணேஷ் தொடர்ந்தான்: "பொலிசை என்றால் கடன், தொய்யான் என்றால் துணி தைப்பவன், இவுளி என்றால் குதிரை, திருட்டு என்றால் கரவடம்... தவிர கழிஞ்சு, அரைக்காணி, நாழிகை என்று பழந்தமிழர்களின் அளவீட்டு முறைகளைச் சொல்லிக் கொண்டே போவார்... அதற்கென்ன இப்போது?''
"ஆசானே அவசரப்படாதீர்கள்... சரித்திரக் கதைக்காகத் திரட்டிய அத்தனை வார்த்தைகளையும் ஆவணங்களையும் படபடவென்று சொல்லிக் கொண்டே போவது சரியா? பக்கம் 156}ல் ஒரு உரையாடல்...
"கோயிலுக்கு மொத்த வருவாய் எத்தனை வேண்டுமாம் என்று கணக்கிட்டிருக்கிறீரா?'
"இறை கட்டின நிலம் முப்பத்தொன்றரையே மூன்று மாக்காணி. அரைக்காணிக் கீழ் முக்கால் நான்கு மா. முக்காணிக்கீழ் முக்காலே ஒரு மா, பொன் காணி...'
"விளங்கவில்லை'
"இத்தனை நுட்பமாகக் கணக்கிட்டிருக்கிறோம் என்ற சொல்ல வருகிறேன்'
இந்த விவரங்கள் பிரமிப்பானவை... ஆனால் இந்த விவரத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தின் காரணமாக உரையாடல் இயல்பாக இல்லாமல் போய்விடுகிறது...
இன்னொரு இடத்தில்,
"இரவு மிச்சமிருக்கிறது. கன்னியர் கொங்கைகளில் மச்சமிருக்கிறது. கால்களில் கெச்சமிருக்கிறது. கண்களில் அச்சம்.. கன்னங்களில் ஒச்சம்'
"ஒச்சம் என்றால்?'
"வெட்கம்'
இன்னொரு இடத்தில் பொய் என்பதற்கு என்னென்ன வார்த்தைகள் உள்ளன என்ற அவசப்பட்டியல்... கைதவம் பகர்ந்தான் என்கிறார், பொய் சொன்னான் என்பதற்கு...'' வசந்த் அடுக்கிக் கொண்டே போவதை கணேஷ் விரும்பவில்லை.
"வசந்தகுமாரன் சதி செய்தான் என்ற குற்றச்சாட்டு வரும்போது, கணேச பட்டர் சதி என்ற சொல்லுக்கு மனைவி என்ற பொருள் மட்டும்தான் தெரியும் இவனுக்கு' என்றாரே..''
"அதை நானும் ரசித்தேன். எத்தகைய அவசரத்திலும் அவரால் எழுத்தை ஆள முடிந்ததற்குச் சான்று அது. அதே நேரத்தில் சரித்திர நூலுக்கான உழைப்பை அவர் அவசர கோலத்தில் எழுதியிருக்கிறார்... காரணம் அவர் எல்லாவற்றையுமே வாரத் தொடர்களாக எழுதியதுதான். ஒரே நேரத்தில் ஆறேழு தொடர்கதைகள்... போதாதற்கு அலுவலகத்திலும் முக்கியப் பொறுப்பு.. ''
தமிழாசிரியர் கனைத்துக் கொண்டு, ""இவ்வளவு எழுதுவதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பது அவர் கையில்தானே இருக்கிறது?'' என்றார்.
"பத்திரிகை அதிபர்களின் வேண்டுகோள்கள்.. இவர் பணம் சம்பாதித்தார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அவரிடம் இருந்த திறமையை அவர் குறைந்த விலைக்கே விற்றார்.. கடைசியாக ஷங்கரிடம் சம்பளம் வாங்கியதுதான் ஓரளவுக்கு நியாயமான தொகை.. ஆகவே அவர் அன்புக்குக் கட்டுப்பட்டார். ஒரு பக்கம் சாவி, இன்னொரு பக்கம் எஸ்.ஏ.பி., இன்னொரு பக்கம் ஆனந்தவிகடன் பாலசுப்ரமணியன், கலைஞரின் குங்குமம், கல்கி... எந்தப் பத்திரிகையையும் நிராகரிக்க முடியவில்லை.. அவரைப் பிழித்தெடுத்துவிட்டார். இதற்கிடையில் கணையாழிக்கு இலவசமாகவும் எழுதிக் கொண்டிருந்தார்.'' கணேஷ் பட்டியலிட்டான்.
"ஒரு பத்திரிகை ஆசிரியர் சொன்னார்.. அக்கதையின் நாயகி ஒருத்தி காரில் கிளம்பினாள் என்று கதையை ஆரம்பித்திருந்தார். வீடு வந்துவிடவே ஆட்டோவைவிட்டு இறங்கினாள் என்று காரை நடுவே ஆட்டோ என்று மாற்றி எழுதிவிட்டார்... என்று. அதை சுஜாதாவுக்குச் சுட்டிக் காட்டியபோது, காரிலிருந்து இறங்கினாள் என்று மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே? இதற்கெல்லாம் போன் செய்ய வேண்டுமா என்றாராராம்....''
"அதானே?'' விழித்துக் கொண்டது போல குரல் கொடுத்த பிரியா, ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டாள்.
"கணேஷ் என்னை இப்போ மெகா சீரியல்ல நடிக்க கூப்பிடறாங்க. ஜெயிக்கப் பிறந்தவள்னு பேர் வெச்சிருக்காங்க.. நான்கு தலைமுறைக்கு முன்னால அவங்க கொள்ளுத்தாத்தாவின் மரணத்துக்கான காரணம் ராஜேஸ்வரியின் குடும்பம்தான்னு தெரிய வருது. அதனால பழிக்குப் பழி வாங்கறேன். அந்தக் குடும்பத்தையே தீர்த்துக் கட்டி, அதை நாகதோஷத்தால் அழிந்து போனதாக சாதிக்கிறேன்... ''
"இதை வைத்து நானூறு வாரங்கள் ஓட்டலாமே? சினிமா சான்ஸ் குறைஞ்சுட்டா டி.வி.யில் வந்து பழி வாங்கறாங்க. அல்லது குலுங்கிக் குலுங்கி அழறாங்க... நீங்க குலுங்கிக்கிட்டே சாதிக்க வாழ்த்துகள்''
வசந்தை செல்லமாக அடித்தாள் பிரியா.
"தேங்க்ஸ்'' என்றான் வசந்த்.
"சுஜாதா நாடகம்லாம் எழுதலையா?'' பிரியா அடுத்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தாள்.

(தொடரும்)

வியாழன், மார்ச் 24, 2011

காவியப் பாடம்!


அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் எழுத்தாளர் அமர்நாத் எழுதிய உறுதுணை தேடுமின் என்ற நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை.



"திடீரென்று', "உறுதுணை தேடுமின்' என்கிற நாவல் இரண்டையும் அடுத்தடுத்து வாசிக்கக் கொடுத்தவர் எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன். இரண்டும் அமர்நாத் எழுதியவை.
எஸ். ஷங்கரநாராயணன் மூலமாகத்தான் அமர்நாத்தைப் பார்க்கிறேன். படிக்கிறேன். எழுத்தாளர்களை ஆராதிப்பதில் எஸ்.ஷ.வுக்கு நிகராக இன்னொருத்தரை நான் பார்த்ததில்லை. செல்போன், ஈ மெயில் இல்லாத காலத்தில் என்னை தொடர்பு கொள்ள அவரிடம் இருந்த ஒரே கருவி, சைக்கிள். என்னைப் பார்ப்பதற்காக அண்ணாநகரிலிருந்து ஓட்டேரிக்கு சைக்கிளில் தேடிவந்தார். என் மதிப்பு எனக்குள் உயர்ந்த தருணம்.
ஒரு எழுத்தாளர் தேடி வந்து பேசுவதெல்லாம் எனக்குப் புதிது. இதைப் படித்தீர்களா? அதைப் படித்திருக்கிறீர்களா? என்று நிறைய ஆர்வம் கிளறிவிட்டவர் அவர்தான். இப்போது அமர்நாத் எழுதிய கதைகளைக் கொடுத்ததும் அதே ஆர்வத்தோடு படித்து முடித்தேன்.
அமர்நாத்தை வியப்பதற்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அவர் அமெரிக்காவில் வாழ்கிறவர், விஞ்ஞானி.
இந்த இரண்டு அடிப்படைகள் போதும் ஒருவர் மொழி ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு. ஆனால் அமர்நாத் படைப்பிலக்கிய ஆர்வம் கொண்டு இருப்பதே அவரைப் பாராட்டுவதற்கு போதுமான காரணமாக இருக்கிறது.
எதிர் மறையான விஷயங்களையே தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அவர். அவருடைய கதைக்களம் அமெரிக்கா. விஞ்ஞான பின்னணியில் கதைகள் எழுதுகிறார். தடையாக இருக்கும் என்று நினைத்த இரண்டு பிரச்னைகளும் தீர்ந்தன.
உறுதுணை தேடுமின்..
ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் கதையின் அடிநாதம். கண்ணகியைப் பிரிந்த கோவலன் மாதவியிடம் சிலகாலம் இருந்துவிட்டுத் திரும்பி வருவது போன்ற மெல்லிய ஒற்றுமை உறுதுணை தேடுமினுக்கும் இருப்பதால் இதில் இடம்பெறுகிற அத்தியாயங்களுக்குக் காதை தலைப்புகள் இட்டு பெருமைபடுத்துகிறார்.
செல்வகுமாரி அமெரிக்காவில் பணிபுரியும் பெரியசாமியை மணந்து, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் கணவனின் போக்கை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவள். கணவன் நீக்ரோ பெண் சுகத்துக்காக வேதியியல் ஆய்வுக் கூடத்தில் எம்பிபிபி என்ற வேதிபொருளை உருவாக்குகிறான். அது ஒரு போதைப் பொருள்.
அந்த நீக்ரோ பெண்ணுக்கு அது தேவை. பெரியசாமிக்கு அந்த நீக்ரோ பெண் தேவை. செல்வகுமாரியும் பெரியசாமியும் இயல்பாக பிரிந்து போகிறார்கள். நீக்ரோ பெண்ணோ இன்னும் நிறைய எம்பிபிபி தயாரிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறாள். பெரியசாமி அதில் உருவாகும் ஆபத்தை உணர்ந்து விலக முடிவெடுக்கிறான். அம்பிகா என்ற அவனுடைய முன்னாள் தோழி உதவுகிறாள். பெரியசாமி அம்பிகாவோடு சில காலம் வாழ்கிறான். அவளுடைய பதவியும் வேலை மாற்றங்களும் பெரியசாமியை அவளைச் சார்ந்து பின் தொடர்ந்து செல்லுமாறு செய்கின்றன. அந்த வாழ்விலும் தயக்கங்கள் ஏற்பட்டு, அவளிடமிருந்தும் பிரிந்து வந்து கல்லூரி பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
தமிழகம் வந்து சேர்ந்த செல்வகுமாரி துணையாக இருந்த தந்தையை இழந்து, உடனிருந்த சகோதரியின் போக்கு பிடிக்காமல் தனியாக இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறாள். அவளை மணக்க விரும்பும் ராகவனின் நோக்கம் புரிந்து அவனைத் தவிர்க்கிறாள். காலம் அவளைத் தன்காலில் நிற்கும் தைரியத்தைக் கொடுக்கிறது. பிறகு அமெரிக்காவுக்கே திரும்புகிறாள். இந்த செல்வகுமாரிக்கு அமெரிக்க நாசூக்கும் நாகரிகமும் நன்றாகவே கைவந்துவிடுகிறது. வேலைக்குப் போகிறாள். மூத்த மகன் அமெரிக்கனின் சதி திட்டத்தால் செக்ஸ் வலையில் வீழ்கிறான். இதே நேரத்தில் கணவனும் எந்தவித குற்றமும் இல்லாமல் செக்ஸ் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறான். எல்லாம் ஒரு புள்ளியில் சரியாகி செல்வகுமாரியும் பெரியசாமியும் மீண்டும் இணைகிறார்கள்.
இந்தக் கதையை அமெரிக்கப் பின்னணி இல்லாமல் சொல்லுவதும் வேதியியல் பின்புலம் இல்லாமல் சொல்லுவதும் இயலாத காரியம்.
இதைத்தான் அமர்நாத்தின் பலமாக மாறியிருக்கிறது என்றேன்.
உரைநடையில் அமைந்த வேகமான நடை. பெரும்பாலும் பேச்சுகள் மூலமாகவே கதை நகர்கிறது. நறுக்குத் தெறிப்பதுபோல ஓரிருவரியில்தான் விவரணைகள்.
சிக்கனமான தந்தி வாக்கிய அமைப்பைப் போன்றது அமர்நாத்தின் வாக்கிய அமைப்பு. இது அமெரிக்க வாழ்க்கை முறையால் அவருக்கு ஏற்பட்டுவிட்ட ஓட்டமெடுக்கும் நடையமைப்பாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். எந்த அவசரத்தின் பாதிப்பு இல்லாமலும் அவர் அப்படி அவசர நடையில் எழுதுவதைத் தம் பாணியாகக் கருதியும் இப்படி எழுதியிருக்கலாம் என்ற முடிவுக்கே வரமுடிந்தது. அவருடைய எல்லா கதைகளிலும் சரவணப்பிரியா, சாமிநாதன் என்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுவது போல அது அவருடைய எழுத்து பாணி.
கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வாசகனும் அதே ஓட்டம் ஓடவேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் நம்பகத் தன்மையை வெளிப்படுத்த பிரயத்தனப்படுவதும் சில இடங்களில் மிகுந்து காணப்படுகிறது. உதாரணத்துக்கு... "சனி காலை எட்டுமணி தாண்டியபோது சென்ட்ரல் அபார்ட்மென்ட் தொகுப்பிலிருந்து வெளியே வருமிடத்தில் ஆண்டர்சன் தெருவின் ஓரத்தில் சரவணப்பிரியா காத்திருந்தாள். சாமி பயன்படுத்தும் பழைய நிஸôன் காரின் கண்ணாடி ஜன்னல்கள் கறுப்பாக இருக்குமென்று அதை ஓட்டி வந்தாள்.'
இதில் கிழமை, நேரம், பொழுது, இடம், இடத்தில் அடையாளம், பயன்படுத்தும் வாகனம், அதைப் பயன்படுத்தியதற்கான காரணம் என்று எல்லாவற்றையும் ஓரே வரியில் சொல்லிச் செல்கிறார்.
"வெள்ளி மாலை. குமாரி ஹோம் டிப்போவுக்குச் சென்று லிசா குறிப்பிட்டபடி லேடெக்ஸ் பெயின்ட் இருபது காலன் வாங்கி வந்தாள். தோசைக்கு அரைத்துவைதாதாள். சனி காலை வாழைப்பழம் சேர்த்துத் தயாரித்த மாஃபின்கள் சாப்பிட்ட பிறகு பழைய உடையில் இருவரும் வேலையைத் தொடங்கினார்கள். சுவர்களைச் சுத்தம் செய்து அவை உலரும்போது மதிய உணவாக தோசை. தொட்டுக் கொள்ள காரக்குழம்பு.'
பிற்காலத்தில் புரட்டிப் பார்த்து ஆச்சர்யப்படும்படியான மெய்கீர்ததி ஆவணங்களைப் போலவும் டைரி குறிப்புகளைப் போலவும் கிழமை, நேரம், சாப்பிட்ட உணவு, வாங்கிய பெயின்ட்டின் பெயர், வாங்கிய அளவு, வாங்கிய கடையின் பெயர் என்று ஏராளமான தகவல்களைத் தருகிறார். இது நாவலின் பல இடத்திலும் தொடர்கிறது. கிட்டத்தட்ட எல்லா அத்தியாயத்திலும் கிழமை, நேரம், இடம், மாதம் என்று சொல்லிச் செல்கிறார்.
அமர்நாத்திடம் கவனிக்க வேண்டிய அம்சம் இது. அமர்நாத் கவனிக்க வேண்டிய அம்சமும்கூட.
இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோரை இழந்து கணவரைப் பிரிந்து போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கை. அவளைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்கள் கூட்டம். மகனுக்கு சர்க்கரைநோய் என்று குமாரிக்குப் போராட்டமான வாழ்க்கை. அவளுடைய வாழ்க்கை எத்தனை வலி நிறைந்தது, சுமையானது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை அவர் எங்கும் நிலைகுலைந்து அழுது புலம்ப வைக்கவில்லை. வாசகன் தானாகவே அதை உணர வேண்டும் என்று அமர்நாத் நினைத்திருக்கலாம். வாசகர்கள் கதைச் சித்தரிப்பில் எந்த அளவுக்கு ஆழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இதில் எழுத்தாளரின் வெற்றி அமையும்.
அமெரிக்க வாழ்க்கையில் இருக்கும் ஆடம்பரமும் கொஞ்சம் சபலப்பட்டால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் ஆபத்தும் மிக நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சென்றுவிட்டதால் பாலசந்தரின் 47 நாட்கள், அவர்கள் போன்ற திரைப்படங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பேச இப்போதைய படங்களுக்குத் தகுதி இல்லை என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
அவருடைய நாவல்களில் அவர் பயன்படுத்தும் நாவல்களின் பெயர்களும் பழையவை. இருபது வருடத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்லும்போது அந்தப் படங்களும் நாவல்களும் அந்தக் காலத்தைச் சேர்ந்ததாகத்தானே இருக்க முடியும் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் நிகழ்காலப் பதிவிலும் இன்றைய கதைகளும் சினிமாக்களும் இடம் பெற்றிருந்தால் அதை மேலும் சமன்செய்திருக்கும்.
நவீன கோவலன்}கண்ணகியின் காதை எப்படியிருக்கும் என்ற சுவையான கற்பனையை இது விவரிக்கிறது. இதில் மாதவி, கண்ணகி எல்லோருமே 21-ம் நூற்றாண்டு பெண்கள். யாரும் ஐந்து செகண்டுகளுக்கு மேல் அழுகிற சாதியில்லை. சொல்லப் போனால் ஆண்கள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. செக்ஸ் குற்றச் சாட்டுகள் பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கின்றன. நாவலில் யாரும் நீதி கேட்டு சிலம்பை உடைக்கவில்லை. அவரவர் நியாயம் அவரவரிடம் அப்படியே இருக்கின்றன. அடுத்தவர் நியாயம் நம்மை பாதிப்பதாக இருந்தால் நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
உறுதுணை எது என பிரிதல் நிமித்தம் உணர்வது காவிய மரபில் இருந்து இன்றுவரை மனித குலம் கண்டுணர்ந்த பாடம். அதை அமெரிக்க, விஞ்ஞான பின்னணியில் தந்திருக்கும் அமர்நாத்துக்கு வாழ்த்துகள்!

-தமிழ்மகன்,
சென்னை-50.
10.10.10

வெளியீடு
சொல்லங்காடி,
சென்னை-19.
cell : 96770533933

bookudaya@rediffmail.com

திங்கள், மார்ச் 21, 2011

கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...!






வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும் மாஸ்லவாவும் மிஸ்கினும் நாஸ்தென்காவும் நம்மில் ஒருவராகி பீட்டர்ஸ்பெர்க் நகரமே நம்ம ஊராக மாறிவிடும் ஒரு தருணம் கைக்கூடும். அப்புறம் நடை, பிரயோகம், கதை வெளிப்படுத்தும் தரிசனம், மெல்லிய இழையாக உடன் வரும் பிரசாரம் எல்லாமே இருட்டுக்குள் நுழைந்தவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாகத் தட்டுப்படுவதுபோல தெரிய ஆரம்பிக்கும்.

கொற்றவை பற்றிச் சொல்லும் முன் இந்த பீடிகை அவசியமாகிறது.

இதன் கதை என்ன என்று கேட்டால் அத்தனை சுலபமாக சொல்ல முடியாது. கண்ணகியின் கதை என்று சொன்னால் அதுதான் தெரியுமே அதை ஏன் இவர் மறுபடியும் அறுநூறு பக்கத்துக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற கேள்வி வரும்.

இதில் மனித குல வரலாறு சொல்லப்படுகிறது. ஆயினும் இது வால்காவில் இருந்து கங்கை வரை மாதிரியான ஒரு நூலும் அல்ல. இதில் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் சமூகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகுல சாங்கிருத்தியாயன் வட ஆசியாவில் ஆரம்பித்து இந்தியா நோக்கி வருவார். இது தென் இந்தியாவில் ஆரம்பிக்கிறது.. அதாவது இப்போது வரைபடத்தில் இருக்கிற தென்னிந்தியா அல்ல. கடல் கொண்டுவிட்ட தென்னிந்தியா.... தமிழகம். தமிழகத்திலேயே முடிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஆரம்பித்து தமிழகத்தில் முடிகிறது.

கபாடபுரம் தமிழகத்தின் தலைநகராக இருந்து கடலில் மூழ்கிப் போனது என்று சிலவரி தகவல்களாகப் படித்த சம்பவங்கள் அசாதாரண கற்பனையின் சிறகடிப்பாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதி மனிதன் தான் பிரமித்த ஒவ்வொன்றுக்கும் எப்படி பெயரிட்டான் என்று சொல்கிறார். வரலாற்றுக்கு முந்தைய அனுமானங்களை கற்பனையில் ஓட்டிப் பார்க்கிற மகத்தான பக்குவம் எழுதியவருக்குத் தேவைப்பட்டது போலவே வாசிப்பவருக்கும் தேவைப்படுகிறது. நிலவியல் அமைப்புகள், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், செவிவழிக் கதைகள், இளங்கோவடிகள் சொன்னது.. அவர் சொல்லாமல் விட்டதை இவர் இட்டு நிரப்பியது என்று பிரம்மாண்டமான ஒரு உலகம் இந்த 600 பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அதிலிருந்து நாகங்களையும் வினோத சடங்குகளையும் ஊழியின் பெரும் காட்டாட்டத்தையும் மனக்கண்ணால் கிரகித்துக் கொண்டே போகிறோம்.

நிரம்பியிருந்ததால் அதை நீர் என்கிறோம். கடந்தமையால் அதை கடல் என்றோம். என வார்த்தைகளின் உருவாக்கத்தை, சொல்லின் வேரை சொல்லிய வண்ணம் இருக்கிறார். கடல் ஊழியில் இருந்து தப்பி வந்த பண்டைய மனிதனை பண்டையோன் என்கிறார்கள். அதுவே பாண்டியனாகிறது. கபாட புரத்தில் இருந்து வெளியேறி கோழிய நாட்டை உருவாக்கியவர்கள், கோழியர்களாகவும் சோழியர்களாகவும் சோழர்களாகவும் பெயர்கள் மருவிக்கொண்டே போகின்றன. கடல் ஓரத்தில் ஆமைக் குஞ்சுகளை உண்ண சூழ்கின்றன மயில்கள். அது மயில்துறை யாகிறது. பின்னர் மயிலாடுதுறை ஊழிக்குப் பின் சிலர் குமரி மலைத் தொடரின் மேற்கே சென்று நாகர் இன மக்களோடு சேர்கிறார்கள். அது நாகர் கோவிலாவதை உணர முடிகிறது. உழும் கருவியான நாஞ்சில் பயன்படுத்தப்பட்ட இடம் நாஞ்சில் நாடு. கபாடபுரத்தில் இருந்து கடல் கொள்ளும் முன் புறப்படும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றும் மீன் விழி அன்னை தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கேட்கிறாள். அதுவே பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோவிலாகிறது. கன்னியாகுமரி அன்னை கடலின் எல்லையில் காவல் காக்கும் கதை, அகத்திய முனியின் கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றிய கதை, புத்தமதம் செழித்தோங்கிய வரலாறு, கவுந்தி என்ற பெண் பாத்திரம் புத்தமதத்தில் எப்படி இடம்பெற்றார். பெண்கள் புத்த மதத்தில் இடம் பெற்ற கதை.. என கொற்றவையை வாசிக்க நிறைய வரலாறுகளும் மொழியின் சிறப்பும் கற்பனையும் தேவைப்படுகிறது.

நாவல்கள் என்பதைப் பற்றி தமிழில் நமக்கு சில உதாரணங்கள்.. அறிமுகங்கள் உண்டு.

புயலிலே ஒரு தோணி, காதுகள், புத்தம் வீடு, பசித்த மானுடம், புளியமரத்தின் கதை, கரைந்த நிழல்கள் போன்ற விதம்விதமான முயற்சிகள் தொடங்கி பொன்னியின் செல்வன், நடுப்பகல் மரணம் பெரும்பான்மையினரை குறி வைத்து எழுதப்பட்ட நாவல் வரை தமிழில் கவனம் கொள்ளத் தக்க நாவல்கள் பல உண்டு.

இப்படியான பரீட்சார்த்தங்கள் நடைபெறும்போது சில சமயங்களில் சில நாவல்கள் நாவல் இலக்கணத்துக்கு வெளியே போய்விட்டதாக கருத்துகளும் எழுந்ததுண்டு. உதாரணம் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். சுந்தர ராமசாமி இதை நாவலாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இது நாவல் இல்லையென்றால் இதற்கு வேறு பெயர் இடுங்கள் என்ரார் கி.ரா.

மகாபாரதத்தை புதிய கற்பனைகளோடு வேறு கதை அடுக்குகளோடு எஸ்.ராமகிருஷ்ணன் உப பாண்டவம் படைத்தபோது இது நாவல்தானா என்றனர் சிலர். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்வது நாவலா என்பது கேள்வியாக இருந்தது. கண்ணகியின் கதையைக் கொற்றவையாக்கும்போதும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. வழக்கமான நாவல் உத்திகளில் இருந்து விலகி, புதிய பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தும்போது இது, அது போல இல்லையே என்று ஒப்பிடுவது இயல்புதான். நாவல் தளத்தில் வைக்க முடியவில்லையென்றால் தாவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெயரில் என்ன இருக்கிறது. வாசிப்பு தரும் பரவசம்தான் முக்கியம். நல்லவேளையாக ஜெயமோகன் இதைப் புதுக்காப்பியம் என்றுதான் அறிவிக்கிறார்.

வரலாற்று சம்பவங்கள், வரலாற்றுக்கு முந்திய ஆதாரங்கள், ஆதாரங்களையொட்டிய யூகங்கள், அமானுஷ்யமான செவி வழிக் கதைகள், மொழி வரலாறு என அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். பெரும்பாலும் கடந்த காலத்தைக் குறிக்கும் நடையாகவே முழு கதையும் செல்கிறது. அதாவது சரித்திர நூல் போன்றே வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நூலில் இடம் பெற்ற சில வாக்கியங்கள்...

கடல் கொண்ட குமரிக் கோட்டுக்குத் தெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே...
அங்கே சம்பர்களின் எட்டுத் தலைமுறையினர் மன்னர்களாக ஆண்டனர். உலோகமாபதன் என்ற மன்னன் ஆண்டபோது மாரி பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.... பெருவாயிற்புரத்து வேளாண் குடிகள் குமரிமலை ஏறி மறுபக்கம் நாகர் நிலத்தில் பஃறுளியின் கரையில் குடியேறி மண் திருத்தி வயல் கண்டன....

பரதவர் வாழும் சிற்றூராக இருந்த பூம்புனற்கரை மரக்கல வணிகர் மொழியில் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது...

இது நூலுக்கு அணி செய்யும் நடை. காலத்தை தரிசிக்க வைக்கும் காட்சிகளாக ஓடுகின்றது இதன் வாக்கிய அமைப்பு. நூல் முழுக்கவே சிரத்தையாக இதைக் கையாண்டிருக்கிறார். வாசிப்புப் பயிற்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இது. காலமெல்லாம் பெண் தெய்வங்கள் தமிழ் மரபில் போற்றப்பட்டு வந்ததின் தொடர்ச்சியாக கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நாவல்... அல்லது புதுக்காப்பியம் இது.
கொற்றவை
ஜெயமோகன்,
தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14.
ரூ. 280

ஞாயிறு, மார்ச் 20, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-4





"நீங்கதானா அது? தவறு.. நீங்கள்தானா அவர்?.. இதுதான் சரி.'' பிரியாவின் ஆச்சர்யத்தைத் திருத்திக் கொண்டிருந்தார் தமிழாசிரியர்.
அதற்குள் வசந்த் வெளிப்பட்டு "என்ன சார்.. வேற ஏதாவது மெடீரியல் வெச்சிருக்கீங்களா?'' என்றான். தமிழாசிரியர் மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். "நீங்க எந்த ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். எனக்கும் சில ஐயங்கள் உண்டு... அதை முன் வைக்கலாம் என..''
தமிழாசிரியர் கதையில் உலகில் தமிழே பிரயோகத்தில் இருக்காது. இரண்டு பேர் ஆர்வமாக தமிழ் கற்றுக் கொள்ள வருவார்கள். பல்கலைக் கழகத்தில் அந்தத் தமிழ் பிரிவே அந்த இருவர் தமிழ் கற்க வந்ததால்தான் தப்பிப் பிழைத்து இருக்கும். நன்றாகக் கற்றுக் கொண்டு வருகிற வேளையில் இருவரும் வகுப்புக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். தமிழ்த்துறையை அதோடு நிறுத்துவதற்கு ஆணை பிறப்பிக்க விசாரணை நடத்துவார்கள். இந்த நேரத்தில் வேறு இடத்தில் வேறு இருவர் தமிழ் பேசுவதை தமிழாசிரியர் கேட்பார். அவர்களுக்கு எப்படி தமிழ் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருக்கும். தன்னிடம் தமிழ் பயின்றவர்கள்தான் அவர்களுக்குத் தமிழ் கற்பித்தார்கள் என்பதை அறிவார். உலகில் அவர்களுக்கு மட்டுமே தமிழ் தெரியும் என்பதால் அதை சங்கேத மொழியாக புரட்சி இயக்கத்துக்காகப் பயன்படுத்துவார்கள்.... இப்படி முடியும் கதை.
தண்ணீர் கொடுத்து உபசரிக்கும்போது, பிரியா அவரை எதிர்காலத்தில் இருந்து வந்தவராகவே பார்த்துக் கொண்டிருந்தாள். "இது அந்தத் தமிழாசிரியர் இல்லை. எனக்குப் பழைய தமிழ் சிறுபத்திரிகைகளை விலைக்கு விற்ற தமிழாசிரியர்.'' வசந்த் விளக்கினான்.
"புறநானூறு, அகநானூறுக்கெல்லாம் சுஜாதா உரை எழுதினார். அதிலே விளக்கம் போதவில்லை. சுருக்கமாகத் தருகிறேன் என்று சில உவமைகளை தவிர்த்துவிட்டார்'' என்றார் தமிழாசிரியர்.
கணேஷ், "நீங்கள் வசந்த் கட்சியா? நல்லது. பொதுவாக தமிழறிஞர்களுக்குச் சுஜாதாவைப் பிடிக்காது'' என்றான்.

"அதண் ஏறிந்தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே' என்று ஒரு சங்கப் பாடல். இந்தச் செய்யுளுக்கு சுஜாதா என்ன உரை எழுதியிருக்கார்..?
"தோல் நிறமுள்ள
சேற்று நிலத்தில்
துரத்தப்பட்ட மான் போல
தப்பி ஓடிவிடலாம் என்றால்
வாழ்க்கை தடுக்கிறது.'
-அதற்கு இதுவா அர்த்தம்?'' தமிழாசிரியர் ஒரு முடிவோடுதான் வந்திருந்தார்.
"இதிலிருக்கிற எறிந்தன்ன, நெடுவெண் களர், ஒருவன், ஒக்கல் போன்ற வார்த்தைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டார்.''

"இதுபற்றி ஜெயமோகன் எழுதியதை படித்தேன்'' கணேஷ் சாதாரணமாகத்தான் அறிவித்தான்.
"யாரோ எழுதியதைப் படித்துவிட்டுப் பேசுவதாக நினைக்கிறீர்களா? தமிழ்படித்த சாதாரண குழந்தைகூட இந்தத் தவறைச் சுட்டிக் காட்டும்..''
அவருடைய கோபத்தில் இருக்கிற நியாயத்தை ஏற்றுக் கொள்ளும்விதமாக தலையசைத்துச் செவி சாய்த்தான். "ரொம்ப விளக்கமாகச் சொல்வதால் பல மாணவர்கள் விலகிப் போய்விடுகிறார்கள். இதெல்லாம் ஒன்றுமில்லை சாதாரணமாக படிக்கக் கூடியதுதான் என்று தோள்மீது கைபோட்டுக்கூட்டிக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் 401 காதல் கவிதைகள், புறநானூறு ஓர் எளிய விளக்கம் போன்றவையெல்லாம்.... ''
"அதுக்காக?''
"அதுக்காகத்தான்'' கணேஷ் குரலில் பிடிவாதம் தெரிந்தது.
வந்தவர் சிரித்தார். "எளிமையாக புரிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை... பல தமிழறிஞர்கள் எழுதிய உரையைப் படித்து மகிழ வேண்டுமானால் நிறைய அவகாசம் தேவைப்பட்டது. இந்தக் காலத்தில் பொறுமையில்லை. அத்தகையவர்களை உணர்ந்து இது எழுதப்பட்டிருக்கலாம்''
"பின் தமிழறிஞர்களுக்காகவா அவர் இதை எழுதினார்? இதை ஆரம்பத்தில் படிக்கட்டும். பிறகு உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை, ச.வே.சுப்ரமணியம், தமிழண்ணலுக்குப் போகட்டும். ஒரு அபடைஸர் மாதிரிதான் இது. அகநானூறை அறிமுகப்படுத்தும்போதே "குறுந்தொகை சங்க காலத்தைச் சேர்ந்த நூல். இது ஒரு தொகை நூல். இப்போது கவிதைத் தொகுப்பு, கதைத் தொகுப்பு என்கிறார்களே அதுபோல்...' என்று எழுதியிருப்பதிலிருந்தே மிகவும் அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கானது என ஒதுங்கிக் கொள்வது தெரிகிறது.''
தலையசைத்து மறுத்தார் தமிழாசிரியர். வசந்த் தம் பாடு மிச்சம் என்று பிரியாவின் கண்களில் இன்னமும் இருக்கும் ஜீவனை ரசிப்பதில் இறங்கிவிட்டான்.
"குறுந்தொகை பாடல்களை செய்யுள்களாகப் பார்க்காமல் கவிதைகளாகப் பார்ப்பதற்கு சில சமயம் உரைக்காரர் தடையாக இருக்கிறார்.. என்று உ.வே.சா.வையே அல்லவா உரசுகிறார் உங்கள் சுஜாதா?'' தமிழாசிரியர் அண்ணாதுரைபோல சடுதி நேரத்தில் மூக்குப் பொடி போட்டதை கணேஷ் தவறவிடவில்லை.
"அடுத்த வரியிலேயே ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் பார்க்காமல் நவ கவிதைகளாக பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே.. இதில் ஆஸ்பத்திரி சுத்தத்தை எதிர்பார்க்காதீர்கள். இது தமிழ்க் குழந்தைகளுக்கானது. அரிச்சுவடி... மேலை நாட்டு மோகம் பிடித்து எரிகா ஜங் படிக்கப் போய்விட்டவர்களைக் கூட்டி வருவதற்கு..''
தமிழாசிரியர் ஆஸ்பத்திரி சுத்தத்தை ரசித்தார் போலத்தான் தெரிந்தது.
"குளிர்ந்த கடல் அலைகள் வெளிப்படுத்தும்
அயிரை மீன்களை
வெண் சிறகு நாரைகள் உண்ணும்
"மரந்தை' நல்ல ஊர்தான்.
தனியாக வாழும்போதுதான்
வருத்துகிறது-னு குறுந்தொகையில் ஒரு பாட்டுக்கு விளக்கம் எழுதியிருக்கார் பாஸ். நிறைய தனிமை... ஏக்கம்... தலைவன் எப்போது திரும்புவானோ என்ற தவிப்பு குறுந்தொகையில் நிறைய இருக்குது... அப்பவும் துபாய்க்கு வேலைக்குப் போயிட்டாங்களா பாஸ் எல்லாரும்?''
"காந்தளூர் வசந்த குமாரன் கதையில் நீ யவனன் விஷயத்தில் மாட்டிக் கொண்டதால் நான் பட்ட பாட்டை மறந்துவிட்டாயா? ஏதேன்ஸ் நகருக்கு வணிக நிமித்தம் போய் வந்திருப்பார்கள்.... இந்தியாவிலேயே வேறு நகரங்களுக்குச் சென்றிருப்பார்கள்.. போர்புரிய போயிருப்பார்கள்.. ஆ நிரை கவர வேண்டி போயிருக்கலாம்... தலைவன் எதற்காக பிறதேசம் போயிருக்கிறான் என்பதை மெல்லிசாகச் சொல்லியிருக்கிறார்கள்.''
"ஆனால் ஒரு விஷயம் பாஸ்'' வசந்த் தீவிரமாக ஏதோ ஒரு கேள்வியை சொந்தமாகக் கேட்க முற்படுகிறான் என்று தெரிந்தது.

(தொடரும்)

சனி, மார்ச் 19, 2011

வெங்கட் சாமிநாதன் கடிதம்


அன்புள்ள வெங்கடேசன்,

தமிழ்மகன் என்ற பெயர் அச்சுக்கே இருக்கட்டும். என்னவோ ஒரு மாதிரியாக இருக்கிறது.

உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அநியாயம் செய்கிறேன். உங்களுக்கும் மிக மன வருத்தம் இருக்கும். கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டியது தான். இது உங்களுக்கு மாத்திரம் செய்யும் அநியாயம். நீங்கள் இதில் புது வரவு. பத்து வருஷமாக என் அந்நியாயத்தை சகித்துக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு தோழமையோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

உங்கள் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் ஃநினைப்பில் கடந்த 70 வருட காலமாக திராவிட கழகம் அதன் கிளைக் கழகங்களும் தமிழ் வாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டு நல்லதற்கோ கெடுதலுக்கோ விளைவுகளுக்கு தமிழ் நாட்டை இரையாக்கிக் கொண்டிருப்பதை உங்களைத் தவிர வேறு யாரும் பேசவில்லை தம் நாவல்களில்/சிறு கதைகளில் ஒரு வேளை பேசுகிறார்கள் தான். ஆனால் அவை பொருட்படுத்தத் தக்கதல்ல. நீங்கள் தான் முதல் தடவையாக ஒரு இலக்கிய கவன்ம் பெறவேண்டிய எழுத்தைத் தந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நான் இது பற்றிப் பேசும் போது இது ஒரு முக்கிய விஷயமாக இருக்கும்.

உங்கள் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிறைய. யார் எப்போது வருகிறார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன உறவு. அவர்களுடைய எண்ணங்கள் என்ன என்பதை மனதில் இருத்திக் கொள்வது மிகக் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் உங்களிடம் அந்த விவரங்கள் கேட்டேன். நீங்களும் கொடுத்தீர்கள். நான் மறுபடியும் அந்த விவரப் பட்டியலை உடன் வைத்துக்கொண்டு நாவலைப் படித்து, பட்டியல் உதவியில்லாமலே என்னுள் வாங்கிக்கொண்டு எழுத வேண்டும் என்று இருக்கி?றேன். கட்டாயம் எழுத வேண்டிய எழுத்து உங்களது. ஆனால் கொஞ்சம் எனக்காகக் காத்திருங்கள்.

உங்கள் எழுத்தோ நீங்களோ அலட்சியப்படுத்தப் படவில்லை என்பதைச் சொல்லவே இந்தக் கடிதம்.

அன்புடன்,

வெ.சா.

திங்கள், மார்ச் 14, 2011

யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்!





பகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம்.

இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்... இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது.

நாவலில் அப்துல் கரீமின் கனவில் வந்து பக்கீர் சொல்கிறார்.. ""கரீமே... சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.''

எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையில் நாவல் நகர்கிறது. மானிடர் என்ற மாபெரும் கூட்டத்தின் நறுக்குகளாக சிலபிரதிநிதிகளை நாவலின் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஐந்து நாவல்களை கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தியொன்று நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்து நாவல்கûளை எடுத்துக் கொண்டு, முதல் நாவலில் இருந்து ஒரு முதல் அத்தியாயம், இரண்டாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், மூன்றாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், நான்காவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், ஐந்தாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம் என்று அடுக்க வேண்டும். அப்படியே அந்த நாவல்களின் இரண்டாவது அத்தியாயங்கள். அப்படியே மூன்றாவது நான்காவது அத்தியாயங்கள்... இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த நாவல் அத்தியாயத்தின் கதாபாத்திரங்களோடு ஒருபோது கலப்பதில்லை. முழுநாவலிலும் மறந்தும்கூட அது நடந்ததாகத் தெரியவில்லை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரயில் தடம்போல போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஒரு நாவலாக மாற்றுவது இரவு... யாமம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இரவின் தரிசனமான காமம்.

கதை ஒன்று...

பனி பொழியும் குளிர். இரவு கிழட்டு குதிரை போல அலைந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். அது பதினேழாம் நூற்றாண்டின் மையம். கம்பெனியார் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்சிஸ் டே இந்தியாவில் தம் கோட்டையை அமைக்க இடம் தேடுகிறான். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்குமிடம் அவனுக்குப் பிடித்துப் போகிறது. கிளாரிந்தா என்ற வேசை அவனுக்குப் பரிச்சயமாகிறாள். இது வரலாறும் கற்பனையும் கைகோர்க்கும் இடமாக இருக்கலாம்.

கிளாரிந்தா நோய்வாய்ப்படுகிறாள். அவளைக்காக்க இந்திய மருத்துவமுறையை நாடுகிறார்கள். வைத்தியமும் நோயின் தீவிரமும் போட்டி போடுகின்றன. இது சென்னையில் பிரிட்டீஷார் காலூன்ற கதையை ஆரம்பித்து வைக்கிறது.

இன்னொரு கதை...

அப்துல் கரீம் அத்தர் யாமம் என்ற சென்ட் தயாரித்து விற்பவர். ஆண் வாரிசு இருந்தால்தான் அதைத் தொடர்ந்து தயாரித்து அளிக்க முடியும் என்பது பக்கீரின் வாக்கு. அவருக்கு மூன்று மனைவிகள். ரஹ்மானி, ஹபீசா, சுரையா. இரவும் பகலும் அவருக்கு காமம் சாத்தியப்படுகிறது. வாசனை திரவியத்தோடு சம்போகிக்கிறார்கள். ஆனால் யாருக்குமே ஆண் வாரிசு வாய்க்கவில்லை. அவர் குதிரை ரேஸ் பிரியாகி சொத்து சுகத்தையெல்லாம் இழந்து திடீரென்று காணாமல் போகிறார். மனைவிமார்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். பிஸ்கட் கடையில் வேலை செய்கிறார்கள். சென்னையில் காலரா காலத்தில் அவதியுறுகிறார்கள்.

கதை மூன்று...

கிருஷ்ணப்ப கரையாளர் பெரும் தனவந்தர். கூடவே சொத்து பிரச்சனை. சென்னை இம்பாலா ஹோட்டலில் தங்கியிருந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எலிசபெத் என்ற வேசையுடன் தன் தனிமைக்குத் தீர்வு காண்கிறார். தமக்குச் சொந்தமான மேல்மலைக்கு அவளை அழைத்துச் செல்கிறார். அடர் காடு. விதம்விதமான தாவரங்கள். இயற்கை. விலங்குகள்... அவர் இயற்கையால் வசீகரிக்கப்பட்டு, தன் சொத்துக்கள் அனைத்தையும் எலிசபெத்துக்கே எழுதி வைத்துவிடுகிறார். அவள் பிரிட்டனுக்குப் போய் வருவதாகக் கிளம்பிச் செல்கிறாள். பின்னாளில் அந்த மலைப் பகுதி தேயிலைத் தோட்டங்களாக மாறப்போவதை அவள் அப்போது யோசித்து வைத்திருக்கவில்லை.

நான்காம் கதை...

பத்ரகிரி விசாலா, திருச்சிற்றம்பலம் தையல் கதையிது. பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும் சகோதரர்கள். திருச்சிற்றம்பலம் கணித மேதை. லண்டனுக்குச் சென்று ஆய்வுப்படிப்பைத் தொடர்கிறான். அவனுடைய மனைவி பத்ரகிரியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். பத்ரகிரிக்கும் தையலுக்கும் காமம் பற்றிக் கொள்கிறது. குடும்பம் சிதைகிறது. தம்பி படிப்பை முடித்துவிட்டு வரும்போது தையல் மனச்சிதைவுக்கு ஆளாகி இருக்கிறாள்.

ஐந்தாம் கதை...

சதாசிவ பண்டாரம் ஒரே மகனாகப் பிறந்து ஆன்மிகத் தேடலில் வீழ்ந்தவன். அவனை ஒரு நாய் வழி நடத்துகிறது. அது செல்லும் இடம் தோறும் செல்கிறான். அது தங்குகிற இடத்தில் தங்குகிறான். அது மலையோர கிராமம் ஒன்றில் தனித்திருக்கும் கனகாவின் வீட்டின் முன் தங்குகிறது. எடுபிடி வேலைகள் செய்து கொண்டு அங்கே தங்கியிருக்கிறான் பண்டாரம். ஒருநாள் இரவு கனகா அவனருகில் வந்து படுத்துக் கொள்கிறாள். உறவு கொள்கிறார்கள். அவளிடம் மரிக் கொழுந்து வாசனை வீசுவதை அறிகிறான். கர்ப்பம் தரிக்கிறாள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நாய் அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறது. வள்ளலார் போல ஒரு அறைக்குள் பூட்டிக் கொள்கிறான். அவன் காற்றில் கரைந்து போய்விட்டதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த ஐந்து கதைகளும் காமமெனும் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத இழையால் கட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவற்றை ஒரு நாவலாக்குவது அதுதான்.

இந்த ஐந்து கதைகளிலும் வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக இந்த நாவல் முழுதும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பல நேரத்தில் காமத்தை ஒரு வாசனையின் அடையாளமாக சொல்லியிருப்பதும்கூட ஐந்தையும் இணைக்கும் ஆதாரமாக கருத வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணன் இப்படி உத்தேசிக்காமலேயேகூட இதை எழுதியிருக்கலாம். அதை வாசகன் வியாக்யானத்தால் கண்டெடுக்கிற சுவை அம்சமாக இருந்தாலும் மகிழ்ச்சிதானே?

மீ புனைவைப்போல அப்துல் ஹகிமின் கனவில் பக்கிர் பேசுவதாக ஆரம்பமாகும் நாவல், அடுத்து லண்டன் மாநகரில் இந்தியாவில் வர்த்தக உரிமை வேண்டி மகாராணியின் அரண்மனையின் முன் நிற்கும் இங்கிலாந்து வணிகர்களின் கோரிக்கையோடு வரலாற்றுச் சூட்டை ஏற்றிக் கொள்கிறது.

நாவலில் அதன் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை. இங்கிலாந்தின் 17 ஆம் குளிர் இரவையும் தெருக்களையும் கற்பனை செய்வது அபாரம். அது முழுக்கவே கற்பனையால் மட்டுமே சாத்தியமாக்க வேண்டிய கட்டாயம். அதற்கு இதே போன்ற காலகட்டத்தை காட்டும் ஒவியங்களும் சினிமாக்களும் நூல்களும் பக்கபலமாக இருந்தாலும் ராமகிருஷ்ணன் தீட்டும் காலச் சித்திரம் மலைக்கவைக்கிறது.

தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் சென்னையில் நடைபெறுவது அதில் தையல் காணால் போய் பத்ரிகரி தேடிக் கண்டுபிடிப்பது, பொப்பிலி ராஜாவுக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகையெடுத்துதான் சர்க்கஸ் நடைபெற்றதாக கூறுவது போன்ற பல்வேறு தகவல்கள் நாவலின் சம்பவங்களுக்கும் சரித்திரத்தைப் பின்னணியை விளக்குவதற்கும் பொருந்தி வந்திருக்கிறது. பத்ரகிரி நிலவியல் வரைபடம் தயாரிக்கும் பணியாளனாக இருப்பதால் பரங்கி மலையிலிருந்த ஆரம்பமாகும் பணியின் ஆரம்பக்கட்ட வேலைகளை அழகாக விவரிக்கிறார். சூரத்தில் வந்து இறங்கும் நில அளவீடு செய்வதற்கான தியோலைட் கருவி... அதை ஏற்று நடத்தும் லாம்டன் துரை. இம்பாலா ஓட்டலில் இருந்த இரண்டு பûனைமரங்கள், பாப்பாத்தி கிணறு, மதராச பட்டணம் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமாக பிரிந்து கிடந்த வரலாறு, காலரா வியாதி, சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் என நாவல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன சென்னையின் வளர்ச்சியைச் சொல்லும் தகவல்கள்.

ஓவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்துவது ரசனையின் உச்சம். சாப்பாட்டு பித்துப் பித்துப் பிடித்த சுரையா, எதைக் கொடுத்தாகிலும் மகிழ்ச்சியை அடையத் துடிக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஆடம்பரப் பிரியனாக இருந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சற்குணம், வெளிநாட்டில் இருக்கும் கணவனைப் பிரிந்து வாழும் தையல், தன்னைவிட்டுப் பிரிந்துவிடக்கூடாது என்று ஆரம்பத்தில் பொஸஸிவாக இருந்து பிறகு அதை ஏற்றுக் கொள்ளும் விசாலா.. என ஒவ்வொரு பாத்திரத்தின் பல்வேறு உளவியலின் வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது.

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களின் திருப்திக்காக ஒவ்வொரு அம்சங்களை பணயம் வைக்கிறார்கள். தையல் கற்பை பணயமாக்குகிறாள். கிருஷ்ணப்ப காரையாளர் சொத்தை, சதாசிவ பண்டாரம் பந்தத்தை, திருச்சிற்றம்பலம் தன் சுகத்தை என ஒன்றை அடைய ஒன்றை இழந்து.. அந்தச் சுழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவல் முடிந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வாக அது நம்மிடம் தங்கிவிடுகிறது.

எல்லோருடைய கணக்கிலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ ஒரு பிழை ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. மனித திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிற எதார்த்தத்தை அழகான பின்னலாக வெளிப்படுத்தும் நாவல்.

யாமம்
எஸ்.ராமகிருஷ்ணன்,
உயிர்மை வெளியீடு,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை}18
தொ.பே: 24993448.
மின்னஞ்ஞல்:: uyirmmai@gmail.com

கிடைக்குமிடம் -

டிஸ்கவரி புக் பேலஸ்
முனுசாமி ரோடு,
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கலைஞர் நகர், சென்னை.

Ph: 9940446650

சனி, மார்ச் 12, 2011

சுஜாதா சிருஷ்டி -3

"சுஜாதாவை ஜெயமோகன் அளவுக்குப் பெருமையாக அலசி ஆராய்ந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய பிளாகில் சுஜாதா என்று தட்டினால் பத்துமணிநேரத்துக்கு படிப்பதற்கு விஷயம் இருக்கிறது. நமக்கு எங்கே இடிக்கிறது என்றால் அவர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளை அப்படியே புறக்கணித்துவிடலாம் என்று ஒரு பிரயோகத்தில் சொல்கிறார். அதிலும் குறிப்பாக அவருடைய தமிழாசிரியர் கதையை...'' கணேஷ் சுருக்கமாக விவரித்தான்.
"எல்லாத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கு பாஸ்'' வசந்த் இப்படி சொன்னதும் பிரியா தன் இரண்டு பக்கங்களை அவசரமாக சரிபார்த்துக் கொண்டாள். வசந்துக்கே தான் சிலேடையாக சொல்லிவிட்டோம் என்பது கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்தது.
"அந்தக் கதையில் அவர் விஞ்ஞானம் என்று என்னதான் சொல்ல வருகிறார்?''
"இந்த மாதிரி மொட்டையாகக் கேட்காதே''
"ஹிப்பியாவே கேட்கிறேன். சயின்ஸ் கதையென்றால் இன்றிலிருந்து ஒரு ஐநூறு வருஷம் தள்ளி நடக்க வேண்டும். வேற மாதிரி பேச வேண்டும்... வேற மாதிரி சாப்பாடு சாப்பிட வேண்டும்... வேறு கிரகங்களுக்குப் போக வேண்டும்.. அவ்வளவுதானா?''
"நீ சொன்னதெல்லாம் சப்போர்ட்டுக்கு. உண்மையில் ஒரு எதிர்காலம் அதில் தெரிந்தால் கதைக்கு வலு சேர்க்கும். வருங்காலத்தை நம்பகமான முறையில் யூகிக்கிற திறமையிருக்க வேண்டும். தமிழாசிரியர் கதைக்கே வருவோம். அது எதிர்காலத்தில் இருக்கிறது. அப்போது தமிழ் டெலிகிராம்போல போயிருக்கிறது...''
"இது நம்பிக்கை வறட்சிதானே?''
"கடந்த இரண்டாயிரம் வருஷத்தில் மொழி இந்தளவுக்கு மாறியிருக்கும்போது அது அப்படி மாறிவிடும் என்ற அபாயத்தைச் சொல்வது நம்பிக்கை வறட்சியில்லை... எச்சரிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது இப்போதே இன்னா டமாலா? புட்டுக்சா? லவ் யு டா டைப்பில்தான் பேசுகிறார்கள்.. அவர் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லும்போதுதான் அது கதையாக ரசிக்கத் தூண்டுகிறது. நீங்கள் சயின்ஸ் பிக்ஸன் ஏதாவது படிச்சிருக்கீங்களா?''
பிரியா இல்லை என்பதாக தலையாட்டிவிட்டு, "ஈ.டி., ஸ்டார் வார்ஸ், டெர்மினேட்டர், அவதார் எல்லாம் பார்த்திருக்கிறேன்'' என்றாள்.
"ரைட்... அதில் எல்லாம்கூட பாசம், காதல், அநீதியை எதிர்த்தல் எல்லாம்தான் மையம். மனிதன் அவனுடைய தர்மத்தையும் நியாயத்தையும் காலம் கடந்தும் எதிர்பார்க்கிறான். எதிர்காலத்தில் எதை நியாயம் என்பது? திருமணம் என்பது தடைசெய்யப்பட்ட முறையாக மாறிப்போய்விடலாம். வனவிலங்குகளை ஜூ என்ற சிறைச்சாலையில் அடைத்துவைக்கக் கூடாது என்று சட்டமாகலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை வரலாம். தமிழ்த்துறையில் படிப்பதற்கு ஆள்கள் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்வது அத்தகைய ஒன்றுதான்.''
"நான் அந்தக் கதையைப் படிக்கவில்லை'' இந்த நேரத்திலாவது உண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும் என்ற குற்ற உணர்வு தெரிந்தது பிரியாவின் தொனியில்.
கணேஷ் பிரியாவுக்காக தமிழாசிரியர் கதையைச் சொன்னான். ""வெரி இன்ட்ரஸ்டிங்'' என்றாள்.
கணேஷ் பிரசங்கம் போல தொடர்ந்து கொண்டிருந்தான். "பிரெய்ன் கண்ட்ரோல் பற்றி "நில்லுங்கள் ராஜாவே'னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். காலமானார், பதிமூன்றாம் கதை என்று நிறைய முயற்சி செய்தார்.... தொடர்ந்து முயற்சி செய்தார்.
"அவர் எழுதப் புகுந்த காலம் பொன்னியின் செல்வன், கல்லோ காவியமோ, பொன்விலங்கு என்று சரித்திரமும் பேராசிரியத் தமிழும் பின்னிப் பிணைந்திருந்த காலம். இவர் எழுதிய "இடது ஓரத்தில்..' என்ற சிறுகதை இப்படியும் எழுதலாமா என்று யோசிக்க வைத்தது. நைலான் கயிறு பழிவாங்கலை... புதுமாதிரி சொல்லியது.
கொலையுதிர் காலம் பேய் இருக்கிறதா, இல்லையா என்று பேசியது. அவர் எதிலும் தீர்மானமாக இல்லை. புதுமைப்பித்தன் பேய் நம்பிக்கையில்லாமல் பேய் என்றால் பயமாக இருக்கிறது என்று சொன்னது மாதிரி, எனக்குப் பெருமாள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் பக்தி இருக்கிறது என்று சொல்ல முடிந்தது.''
வசந்த் இடைமறிக்க எண்ணி குறும்பாகச் சிரித்தான். ""ஏதாவது தீர்மானமா இருந்திருக்க வேண்டும். எல்லாத்தையும் கிண்டலாகப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போவது வாசகனை சொறிந்துவிடும் வேலை என்றுதான் பலர் திட்டியிருக்கிறார்கள்.''
"நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது என்றாய்?'' வசந்த் பிரியாவைப் பார்த்துவிட்டு.. "அது வேற பாஸ்''..
"சுஜாதாவா நல்லா காமெடியா எழுதுவாரு.... தமிழ் நடையையே நீர்த்துப் போக வைத்தவர் அவர்தான்னு ஒருத்தர் சொன்னார்...''
"என்கிட்டயும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள்'' வசந்த் பின் பாட்டு பாடினான்.
"இந்தக் குற்றச்சாட்டு மேலோட்டமானது... தமிழாசிரியர் கதையிலேயே மாணவர்கள் யாரும் தமிழ் படிக்க வராததால் அந்த ஆசிரியரை அசதி பிரிவில் பணியாற்றச் சொல்லுவார்கள். அடைப்புக் குறியில் சதி- அசதி என்று போட்டிருப்பார். இந்த அடைப்புக்குறிக்குள் ஒரு நகைச்சுவை ஒளிந்திருக்கிறது. ஆனால் வலிந்து எட்டிய துணுக்குத் தோரணமல்ல. கதையில் அந்த நாளைய தமிழ் எப்படி இருந்தது என்று ஏற்கெனவே சொல்லிக் கொண்டு வருவார். மொழி என்பது சுருக்கமான பரிவர்த்தனையாக மாறிவிடும் என்பது அவருடைய கணிப்பு. அதை அவர் சொர்க்கத் தீவிலிருந்தே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார். ஆத்மா, நித்யா விஞ்ஞான சிறுகதைகள் தொடங்கி என் இனிய இயந்திரா வரைக்கும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.. நமக்கு அதை ஏற்றுக் கொள்வதில் மனத்தடை இருக்கிறது''
பிரியா டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று பிரிட்ஜை திறக்கப் போய்விட்டாள்.
"ஏன் மொழி இன்னும் சிறப்பாக செழித்தோங்கி வளர்ந்ததாக கற்பனை செய்யக்கூடாதா?'' என்றான் வசந்த்.
"ஒன்று கேட்கிறேன். புறநானூற்று காலத்திலிருந்து இப்போது மொழி வளர்ந்திருக்கிறதா தேய்ந்து கொண்டிருக்கிறதா?''
நெற்றி நரம்பை தேய்த்துவிட்டுக் கொண்டான்... "தேய்ந்த மாதிரிதான் இருக்கிறது... முன்னாள் அமைச்சர் காளிமுத்து ஒரு மீட்டிங்கில் பேசும்போது கேட்டேன்... ஒருவிஷயத்தை சொல்லுவதை தமிழர்கள் முப்பத்தி மூன்றுவிதமாக தெரிவித்தார்கள் என்று... சொல்லுதல், நவில்தல், செப்புதல், கூறுதல், அறிவித்தல், இயம்புதல் என்று சொல்லப்பட்ட விதத்தைப் பொறுத்து அது முப்பதுத்து மூன்று வகைப்படும் என்றார். இப்போது எல்லாமே சொன்னான் என்று ஆகிவிட்டது. இது தேய்மானம்தானே?''
வசந்த் எதற்காக காளிமுத்து கூட்டத்துக்குப் போனான் என்பதில் ஆச்சர்யப்பட்டு அதை அடக்கிக் கொண்டான். "இப்போது எல்லாமே சொன்னான்தான். ஆனால் வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தம் புரிந்து கொள்கிறோம். மேனேஜர் ஃபைலை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். இது அறிவித்தல். அவன் அவளிடம் ஐ ல்வ் யூ சொன்னான்... ஒரு வாழைப்பழம் நான்கு ரூபாய் என்று சொன்னான்... இந்த சொன்னான்களில் உள்ள வகைகளை நான் மனதில் வாங்கிக் கொள்கிறோம்... மலரை முகர்ந்துவிட்டு என்னே அருமையான நாற்றம் என இனிமேல் நாம் சொல்ல முடியுமா? நாஷ்டா துன்ட்யா வரைக்கும் வந்துவிட்டது.''
"அப்படியாயானால் செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ யறியும் பூவே - என்றெல்லாம் தமிழை வளர்க்க முடியாதா?''
"வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... தமிழ் எப்படியும் பத்தாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டும் மூவாயிரம் ஆண்டுகளாக யாரும் கிட்டே நெருங்க முடியாதபடிக்கு செய்யுள் எழுதியும் வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருவதனாலேயே பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் பெரிதும் வித்தியாசப்பட்டு இருக்கிறது. மற்ற மொழிகளில் பெரிதாக வட்டார வழக்குகள் இல்லை. பிரிட்டன் இங்கிலீஷ் அமெரிக்கன் இங்கிலீஷ் அளவுக்குத்தான் பிரிவினை. இங்கே ஒவ்வொரு நூறு கிலோ மீட்டரிலும் வித்தியாசம் இருக்கிறது. எப்படி? அவ்வளவு தொன்மை. குறைந்தபட்சம் இரண்டாயிரம் வயசாவது இருந்தால்தான் பேச்சும் எழுத்தும் வித்தியாசப்படும்... பக்கத்தில் இருக்கிற கேரளத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவுக வந்துட்டாகளா? என்று பேசுகிறவர்களும் அவர்கள் வந்துவிட்டார்களா என்றுதான் உரைநடைத் தமிழில் எழுதுவார்கள். குஸ்டு அஸ்ட்டாம்பா என்பாரும் குடித்துவிட்டு அடித்துவிட்டான் என்பதுதான் உரைநடைத் தமிழ் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவசரத்துக்குப் பேசினாலும் எழுதும்போது எல்லாம் சரியாக வந்துவிடும். இது மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு.''
பாஸ், பேசுகிறாரா, எழுது வைத்து வாசிக்கிறாரா என்று சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு.
அழைப்பு மணி அடித்தது.
"நான் திறக்கிறேன்'' பிரியா கதவைத் திறந்தாள்.
நான்கு முழம் வேட்டி, வெள்ளை கதர் சட்டை. கையில் சற்றுமுன் மடக்கி வைத்த குடை. பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. வெயிலில் நடந்து வந்த சூடு அவர் மீதிருந்து தாக்கியது.
"நான் தமிழாசிரியர்'' என்றார் அவர்.
"நீங்க தானா அது?''

(அடுத்த வாரம்)

வியாழன், மார்ச் 10, 2011

நாஞ்சில் நாடன் குறிப்பு

நாஞ்சில் நாடன் தன் வலை தளத்தில் வெட்டுப்புலி நாவல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஒரே வரி குறிப்பென்றாலும் மகிழ்ச்சியாக இருந்தது. இது இங்கே... முழு கட்டுரைக்கு சொடுக்கவும்.

செவ்வாய், மார்ச் 08, 2011

மானுடப் பண்ணையும் எட்டாயிரம் தலைமுறையும்


மானுடப் பண்ணை நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்ற படம் சமீபத்தில் கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் (இப்போது இந்த அரங்கம் புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டுவிட்டது)நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் அமைச்சர் காளிமுத்துவும் அமைச்சர் பொன்னுசாமியும் விருதை வழங்கினர். செல்வி ஜெயலலிதா ஆட்சி.


எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்புக்காக தமிழக அரசு விருது துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் அமைச்சர் அன்பழகனும் வழங்கினர்.அருகே நக்கீரன் கோபால். (2009- திருவள்ளுவர் தினம். வள்ளுவர் கோட்டம்.)

வெள்ளி, மார்ச் 04, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-2

எதிர்பார்த்தது மாதிரியே ஏகப்பட்ட குறிப்புகளும் பழைய சிற்றிதழ் கட்டுகளுமாக வந்தான் வசந்த்.
"கன்னிமராவுல சுட்டியா?''
"ஒரு ஏழை எழுத்தாளர் கிட்ட அப்படியே கிரயம் பேசிட்டேன். போறவன் வர்றவன் எல்லாம் திட்டியிருக்காங்க பாஸ்... திட்டினவன் எல்லாம் என்ன ஆனானுங்கன்னே தெரியல. மகளிர் அமைப்பு, மத அமைப்பு, சாதி அமைப்பு, சிற்றிதழ் எழுத்தாளர்கள், பெரிய இதழ் எழுத்தாளர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள்.. ஒருத்தர் பாக்கியில்லை. எப்படித்தான் மனுஷன் இவ்வளவையும் தாங்கிக்கிட்டாரோ தெரியவில்லை... அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேயில்லை என்று தெரிகிறது. நான் அவர் சார்பாக வாதாடுகிறேன். நீங்கள் அவருக்கு எதிராக வாதாடினால் நன்றாக இருக்கும்.''
கணேஷ் சற்றே சீரியஸôக "உம்ம்!'' என்றான்.
வசந்த் தோளை குலுக்கிக் கொண்டு தயார் என்பதுபோல சிறிய பாக்கெட் நோட்டை எடுத்து வைத்துக் கொண்டான்.
"முதல் விஷயம் இவர் எழுத்தில் அழுத்தமில்லை.. எல்லாம் நுனிப்புல் மேய்ந்தவை...''
கணேஷ், மானுக்கருகில் வந்து பாய்வதற்கு ஆயத்தமாகியிருக்கும் சிறுத்தையென பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்படி பார்க்காதீங்க பாஸ்... என் முதல் கேள்விக்கு பதில்...?''
"உன்னுடைய முதல் கேள்வியில் ஏராளமான துணைக்கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது... முதலில் எழுத்து என்றால் என்ன? இரண்டாவது அழுத்தம் என்றால் என்ன? மூன்றாவது நுனிப்புல் என்பது எத்தனை செ.மீ.வரை?''
வசந்த் ஒரு மைக்ரோ செகண்ட் பிரயத்தனத்திலேயே எதற்கு வம்பு என்ற முடிவுக்கு வந்து "நீங்களே சொல்லிவிடுங்கள் பாஸ்'' என்றான்.
"முதலில் எழுத்தை எடுத்துக் கொள்வோம்'' வாணலியை எடுத்துக் கொள்வோம் மாதிரி ஆரம்பித்தான். "உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பிடித்த எழுத்தை ஆண்டவனால்கூட உருவாக்க முடியாது. எங்களுடைய கடவுள் சொன்னதுதான் சரி என்பதை நிலை நாட்டுவதற்காக துப்பாக்கியும் வெடி குண்டும் உருட்டுக்கட்டையும் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதிலிருந்தே இது நிரூபணம் ஆகிவிட்டது. ஒரு குழுவுக்கு ஆண்டவன் சொன்னது இன்னொரு குழுவால் புறம் தள்ளப்படுகிறது. அடுத்து மனிதனுக்கு வருவோம். ஷேக்ஸ்பியர் எழுதியதெல்லாம் குப்பை என்று சொல்வதற்கெல்லாம் கழகங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். டால்ஸ்டாய் எழுதி அவருக்கே மிகவும் பிடித்த புத்துயிர்ப்பு நாவல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கம்பரை எதிர்த்துக் கலவரமே வெடித்தது. கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என்றார்கள். ஆக, எல்லோருக்குமான எழுத்து என்று உலகில் ஒன்று இல்லை.''
அடுத்த கேள்வியைக் கேட்கும் அவசரத்தில் பாக்கெட் நோட்டை நோட்டம்விட்ட வசந்தை அடக்கி, "இன்னும் உன் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிக்கவில்லை'' என ஞாபகப்படுத்தினான்.
"நாம் எழுதியது நல்ல எழுத்தா என்பதை அதை எழுதிய ஆசிரியரே தீர்மானிக்க முடியாது என்பது நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை ஏற்கெனவே சொல்லிவிட்டேன்''
வசந்து முந்திக் கொண்டு "டால்ஸ்டாய்... புத்துயிர்ப்பு''


"ரைட்.. சொந்த எழுத்தையே தீர்மானிக்க முடியாமல் போவது பக்கத்துவீட்டு எழுத்தாளனின் எழுத்துக்கும் பொருந்தும்... எழுத்தை எழுத்தாளர்களைவிட மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.. சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் என்ன விமர்சனம் எழுதினார் என்று தெரியுமில்லையா?''
"தெரியும். ஆயிரம் பக்க அபத்தம் என்றும் யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம் என்றும் இரண்டு அத்தியாயமாக கிழிகிழி என்று கிழித்தார்.. படிக்கும்போது எனக்கே கிழிகிற சத்தம் கேட்டது பாஸ்''
"ஜெயமோகன் எழுதியதையும் படித்தாயல்லாவா?''
"பின்னே?.. தமிழில் வெளியான முதல் வரலாற்று நாவல் என்றார்... விறுவிறுப்பான மொழியின் சிறப்பையும் பாராட்டியிருந்தார்.. இறுதிப் பகுதியை டால்ஸ்டாயின் இலக்கியத்துக்கு ஈடாக ஒப்பிட்டிருந்தார்''
"இவர் எத்தனை அத்தியாயம் எழுதியிருந்தார்?''
"நான்கு அத்தியாயம்..'' வசந்த் கூடவே விரல்களையும் காட்டினான்.

"குட்... இப்போது யார் எழுதியது சரி என்பது கோர்ட் விடுமுறைக்குப் பிறகு வாய்தாவுக்கு ஓட வேண்டிய நமக்குத் தேவையில்லாத வேலை... இரண்டு பக்கம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். "ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்ததும் நல்லவேளை நான் தப்பித்தேன். அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை' என்றார் சாருநிவேதிதா. வந்த வேகத்தில் மூன்று முறை படித்துவிட்டேன் என்றார் தமிழ்ச் செல்வன்... ஒருநூலை வாசிப்பதில் அரசியல், புவியியல், சமூக விஞ்ஞானம், அவரவர் ரசனை.. எல்லாம் இருக்கிறது. அடுத்தது அழுத்தம்.. எதையும் எளிமையாக ஜாலியாக சொன்னால் அது அழுத்தமானது இல்லை என்று நினைக்கிறார்கள்..''

"பாஸ் ஒன்று சொல்லவா? ப்ரியாவில் "இவன் செய்கிற ஒரே எக்ஸர்சைஸ் வாட்சுக்கு சாவி கொடுப்பதுதான்' என்று சொல்லியிருந்தார். இதையே.. அவன் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. தண்டால் எடுப்பதோ, ஜாக்கிங் போவதோகூட இல்லை. உடற்பயிற்சிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை.... இப்படியெல்லாம் விவரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... நான் சொல்வது சரியா பாஸ்?''
கணேஷ் எதற்கு வாயை விடுகிறாய் என்பதாக "உன்னிடம் வந்து சொன்னார்களா?'' என்றான். "இப்படி ஏதாவது உதாரணம் சொன்னால் நாம் மாட்டிக் கொள்வோம்.. எளிமையாக சொல்ல முடிவது வாசகனுக்கு நெருக்கமானது. அதை அவர் செய்தார். ஆறு லட்சம் பிரதி போய்க் கொண்டிருந்த குமுதத்தில் ஐந்து லட்சம் பேர் அவருடைய எழுத்தை இதழ் வந்ததும் படித்தார்கள். அதுவும் ஒரே நேரத்தில் அவர் ஆறு பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார், அலுவலகத்திலும் சின்சியராக வேலை பார்த்துக் கொண்டே. அது அவருடைய சாமர்த்தியம். அவருடை வாசகனை அவர் அப்படியொன்றும் ஏமாற்றிவிடவில்லை. ஜனரஞ்சக பத்திரிகை தாங்கும் அழுத்தத்துக்கு அதிகமாகவே அழுத்தியிருக்கிறார்...''
"எரிகா ஜங், எரிக் பிராம், சிக்மண்ட் பிராய்ட், ராபர்ட் பிராட் பரி, ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்று போகிற போக்கில் நிறைய அறிமுகங்களைத் தட்டிவிட்டுப் போவோர். அவர்களில் இருந்து ஒரு நறுக்கை மட்டும் எடுத்துப் போடுவார். மீதியைக் கண்டெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்புபோல.. அடுத்தது நுனிப்புல்லுக்கு வந்துடுங்க பாஸ்..''
கணேஷ் சிரித்தான். உதடுகள் அதை முடிப்பதற்குள் காலிங் பெல் சப்தம் கேட்டது. வசந்த் எழுந்து சென்று வாசலில் பார்த்தான். "ஓ... பிரியா... வாட் எ சர்பிரைஸ்... இப்பத்தான் உங்களைப் பத்தி பேசிக் கொண்டிருந்தோம்...'' வசந்த், நடிகை பிரியாவைப் பார்த்த பரவசத்தில் வழிவிட்டு வரவேற்பறைக்கு அழைத்தான்.
"நீங்க என்னைப் பற்றி என்ன பேசினீர்கள் என்று நான் சொல்லவா?''
"உங்கள் யூகம் சரியா என்று பார்க்கிறேன், சொல்லுங்கள்.."'
"லண்டனில் நான் ஓடிவந்து கணேஷிடம் "இங்கே யாரும் பிரா அணிவதில்லை' என்று சொன்னேனே அதைத்தானே?''
"அதற்கு கணேஷ், "தெரியும்' என்றார். நீங்கள் "நானும்தான்' என்றீர்கள். கணேஷ் உடனே "தெரிகிறது' என்றார்''
"சரியாக யூகித்தேன் பார்த்தீர்களா?'' என்றாள் பிரியா.
"நாங்கள் இதைப் பற்றிப் பேசவில்லை"
"பின்பு விலாவரியாக சொல்கிறீர்கள்..?'' அவளுடைய கேள்விக் குலுங்களில் இப்போதும் அணியவில்லை என்று தெரிந்தது.
"மறக்க முடியுங்களா?''
கணேஷ் உள்ளேயிருந்து "யாரது?'' என்றபடி வெளியே வந்தான்.
பிரியா பவ்யமாக எழுந்து "போனவாரம் சுஜாதா சிருஷ்டி படிச்சேன்... உடனே புறப்பட்டு வந்துட்டேன். நானும் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்றேனே?'' என்றாள்.
"ஆமாம் பாஸ். இருக்கட்டும்''- வசந்த் அனுமதி கேட்டானா, அறிவித்தானா என்பது தெரியவில்லை.
(அடுத்த வாரம்)

வியாழன், மார்ச் 03, 2011

பத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்!

தமிழ்ஸ்டுடியோ.காம் -இல் நூல் அறிமுகம்




அரசியல் சதுரங்கம் என்பது நகர்த்தப்படும் காய்கள், வெட்டிச் சாய்க்கப்படும் தலைகள், பெறுகின்ற புள்ளிகள், தவற விட்ட வாய்ப்புகள்... என அது ஒரு விறுவிறுப்பான பயணம்.

வாட்டர் கேட் ஊழல், மிசா, ஜேம்ஸ் பாண்டு படத்தில் கே.ஜி.பி., போபர்ஸ், தற்போதைய 2ஜி நீரா ராடியா வரை அலுப்பு தட்டாத சுவாரஸ்யம் அது. ஷா கமிஷன், சர்க்காரியா கமிஷன், இஸ்மாயில் கமிஷன், பால் கமிஷன் என்று கடந்த அரை நூற்றாண்டுகளுக்குள்தான் எத்தனை விசாரணை கமிட்டிகள்? யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டார்கள்? கமிஷன் என்பது கண்துடைப்பு... கண்ணா மூச்சி... அரசியலில்தான் எத்தனை சகஜங்கள்..?

பத்திரிகையாளர்களாக இருப்பவர்களுக்கு இவை எல்லாவற்றையும் தினமும் கண்காணித்து வரவேண்டிய கட்டாயம். ஒரு நல்ல பத்திரிகையாளன் மகாபாரத கிருஷ்ண பரமாத்மா மாதிரி செயல்பட வேண்டியிருக்கிறது. நடக்கப் போகிற எல்லாவற்றையும் கணித்து (அறிந்து) அதில் தானும் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்.

கொலை சதி தீட்டினார்கள் என்று ஒரு கட்சியின் மீது வழக்கு போட்டுவிட்டு அடுத்த மாதத்திலேயே அவர்களுடன் கூட்டணி பேச அமர்ந்துவிடும் கோமாளித்தனங்களையெல்லாம் பத்திரிகையாளர்கள் கவனித்து வரவேண்டும்.

சில தீவிரமான செய்தியாளர்கள் தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் அது சாரம் இல்லாத சக்கை வாழ்க்கை. குதிரைக்கு முன்னால் கொள்ளு கட்டி வசீகரிப்பதுபோல அதைக் கவ்விப் பிடித்துவிட ஓடியபடியே இருந்து என்ன பயன்?

வெகு சிலர் தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை அவர்கள் எழுதும்போது அது பழங்கதை பேசுவதாக இல்லாமல், சரித்திரத்தின் வசீகரமான இன்னொரு பக்கத்தை விவரிக்கக் கூடியதாக இருக்கும்.

குல்தீப் நய்யார் அத்தகைய பத்திரிகையாளர்களில் ஒருவர்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் துவங்குகிறது இவருடைய பத்திரிகை பணி. தேசம் ரத்தக்களறியான அந்த நேரம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை இந்தியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இவருடைய நேரடி பங்களிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

நேருவுக்குப் பின்: அடுத்த வாரிசு யார்? என இதில் ஒரு பகுதி வருகிறது.

தாய்ச் சமூகம் முளைவிட்ட நாளிலேயே இந்த பதவி மோகம் ஆரம்பித்துவிட்டது. விலங்குகள் மத்தியிலும் பூச்சியினங்களின் மத்தியிலும்கூட தலைவன் தொண்டன் சமாசாரமெல்லாம் இருக்கிறது. தேனிக்கள், எறும்புகள் முதல் யானை சிங்கம் வரையிலும் பார்க்க முடிகிறது.

நேரு இறக்கிறார். இறந்த அன்றே பதவி போட்டி ஆரம்பிக்கிறது. காமராசர்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர். இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தாவை காமராசர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் தலைவரும் தமிழகத்துக்காரர், தானும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று டி.டி.கே. நினைத்திருக்கலாம். காமராசர் அவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து இருந்தது மொரார்ஜியும் சாஸ்திரியும்.

அடுத்து தான் பிரதமர் என்பதில் உறுதியாக இருந்தார் மொரார்ஜி. அவருடைய வீட்டில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம். குல்தீப் நய்யார், மொரார்ஜியை சந்திக்கச் செல்கிறார். அவருடைய ஆதரவாளர்களைப் பார்க்கிறார். அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்து சாஸ்திரியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு யாருமில்லை. அவர் தீவிரமாக யோசித்தபடி நடந்து கொண்டிருக்கிறார் (முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் நடந்து கொண்டே இருப்பது அவருடைய வழக்கம்.)

குல்தீப் அவரைச் சந்திக்க வருவதைப் பார்த்ததும் விரட்டுவதுபோல கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.

இதை அப்படியே மறுநாள் பத்திரிகையில் பதிவு செய்கிறார் குல்தீப் நய்யார்.

மறுநாள் மொரார்ஜிக்கு இருந்த ஆதரவு அப்படியே மாறிவிடுகிறது. நேருவின் சடலம் இருக்கும்போதே மொரார்ஜி இப்படி பதவிக்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மன வேற்றுமை. சாஸ்திரியோ நேருவின் மரணத்தால் மனம் ஒடிந்து தனிமையில் கலங்கியிருப்பதாக அமைந்துவிட்டது அந்தக் கட்டுரை. நாடாளுமன்ற படிக்கட்டில் இறங்கிவரும்போது காமராசர் ரொம்ப நன்றி என்கிறார் குல்தீப்பிடம். எதற்கு என்று அப்போது குல்தீப் நய்யாருக்குப் புரியவேயில்லை. குல்தீப் அவருக்கே தெரியாமல் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டார்.

சாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த அந்தக் கடைசி மணித்துளிகள் நெகிழ்ச்சியானவை. தேசத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக அவருடைய குடும்பத்தினரே அவரை நோகடித்ததையும் அவருடைய மரணத்தில் இன்னமும் சொல்லப்பட்டுவரும் மர்மத்தையும் திரை ஓவியம்போல படம் பிடித்திருக்கிறார் குல்தீப். அவருடைய மரணத்துக்குப் பின் மொரார்ஜியா, இந்திராவா என்ற காலகட்டம்.

ஒவ்வொன்றையும் படிக்கும் போது அவ்வளவு விறுவிறுப்பு மோலோங்குகிறது. மொழி பெயர்ப்பு மதுரை பிரஸ் என்று போடப்பட்டிருக்கிறது. இதை யார் மொழி பெயர்த்திருந்தாலும் இதை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் செய்திருப்பதுதான் அவர்களுடைய மகத்தான சாதனை.

செய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகையாளனுக்கு இருக்கும் தாகத்துக்கு ஒரு உதாரணம் இது:

நேருவுக்குப் பிரியமானவராக இருந்த பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கொய்ரோன் மீது ஊழல் குற்றச்சாட்டு. சாஸ்திரி பிரதமராக இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அறிக்கையை முதலிலேயே பெற்று வெளியிட வேண்டும் என்பது குல்தீப் நய்யாரின் ஸ்கூப் மூளையின் ஆவல். மூன்று மந்திரிகள் கொண்ட குழு அந்த அறிக்கையை ஆராய்வதற்காக அமைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மந்திரியாக நோட்டம் விடுகிறார். கடைசியாக பணிவது அசோக்சென் என்ற மந்திரி. அறிக்கையை ஒருமணி நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன் என்று வாங்கி வருகிறார். அப்போது குல்தீப் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அறிக்கையைப் பிரித்து அங்கு வேலை பார்க்கும் எல்லா டெலி பிரிண்டர்களிடமும் கொடுத்து வேகமாக அறிக்கையின் எல்லா பக்கங்களையும் டைப் செய்துவிடுகிறார். ஆனால் அறிக்கையின் பக்கங்கள் அழுக்காகிவிடுகின்றன.

அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர் அப்போது உணரவில்லை. மறுநாள் பஞ்சாப் முதல்வரைப் பற்றிய விசாரணை அறிக்கை யு.என்.ஐ.யில் வெளியாகிவிடுகிறது. எப்படி கிடைத்தது என்று பிரதமர் தவிக்கிறார். அறிக்கையைக் கொடுத்த மந்திரி அசோக்குக்கு தர்மசங்கடம். மூன்று மந்திரிகளிடம்தான் அறிக்கை நகல் இருக்கிறது. அதில் அசோக்கிடம் இருக்கும் அறிக்கை மட்டும் அழுக்காக இருந்தால் சந்தேகத்துக்கு இடமாகிவிடும்.

குல்தீப் இன்னொரு காரியம் செய்கிறார். மற்ற இருவருடைய கையில் இருக்கும் அறிக்கையை அழுக்காக்கிவிட்டால் ஒருவர் மீது இருக்கும் சந்தேகம் ஒழியும் தமக்கு உதவி செய்த அசோக்கைக் காப்பாற்றிவிடலாம். அறிக்கையை வைத்திருக்கும் இன்னொரு மந்திரி டி.டி.கே. அவருடைய உதவியாளரை குல்தீப்புக்கு நல்ல பழக்கம். அவரைச் சந்தித்து அறிக்கையை வாங்கி படுவேகமாக அழுக்காக்கிவிடுகிறார். இப்போது அறிக்கையை யு.என்.ஐ.க்குக் கொடுத்தது யார் என்பதற்கான சந்தேகம் இரண்டு பேரின் மீது பாயும்... இப்படியாக எத்தனையோ சாகஸங்களைக் கொண்ட அரிய வரலாற்றுப் பதிவாக இருக்கிறது இந்த நூல்.

பதவி என்ற சுவாரஸ்யம் அரசியல்வாதிகளுக்கு... ஸ்கூப் என்ற சுவாரஸ்யம் பத்திரிகையாளனுக்கு இந்த இரண்டும் எதிர் கொள்ளும் புள்ளிதான் இந்த நூல்.

ஸ்கூப்
குல்தீப் நய்யார்,

மதுரை பிரஸ்,
60,பி, கோதண்டராமர் கோவில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 33.
மின்னஞ்சல்: maduraipress@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin