செவ்வாய், அக்டோபர் 27, 2009

'ராஜா' கைய வெச்சா அது 'ராங்காகவும் போவும்!




பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் வாய்த் தகராறில் ஆரம்பித்து அது கைத்தகராறில் முடிவதைப் பார்த்திருக்கிறேன். அவர் இசையமைக்கிற எல்லா பாடல்களுமே தேவகானமாக இருந்தது. இப்பவும் இருக்கிறதுதான்.ஒரு சபையில் மிகவும் துணிவான ஆசாமிகள்தான் அவரைத் தாக்கிப் பேச முடிந்தது. கொஞ்சம் இளப்பமான ஆசாமியாக இருந்தால் சுற்றியிருப்பவர்கள் அவரை அடித்தே போட்டுவிடுவார்கள்.


நேற்று என் மகனைத் தேடி வந்திருந்த அவனுடைய நண்பர்கள் சம்பாஷணையின் போது, "இளையராஜாகிட்ட புதுசா ரிசர்ச்சே இல்லடா.. அதே டண்டணக்குத்தான்...'' என்று பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
அவர்களுக்கு இளையராஜாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கமோ ஆர்வமோ இல்லை. மிகவும் இயல்பான விமர்சனமாக இருந்தது. இளையராஜா வந்த போது விஸ்வநாதனை அப்படிச் சொல்வதைக் கேட்டிருந்ததால் இப்போது ரஹ்மான் வந்துவிட்ட பின்பு இளையராஜாவைச் சொல்வதையும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டேன்.


இந்த மாதிரி காலம் தோறும் தலைமுறைகளுக்கிடையை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன. வால்காவில் இருந்து கங்கை வரை நூலில், ஆதிநாளில் ஒருவன் ஏர் ஓட்டி உழவு செய்ய ஆரம்பித்த போது ஏற்பட்ட எதிர்ப்பலையைப் பற்றி எழுதியிருப்பார். "நிலத்தைக் கீறுவது மாபெரும் பாவம். தானாக உற்பத்தியாகும் உணவை மட்டுமே புசிக்க வேண்டும். நாமாக பயிர் செய்ய நினைப்பது இறைவனுக்கு எதிரான செயல்'' என்பதாகப் பேசுவார் ஒரு பெரியவர்.எல்லா காலத்திலும் மாற்றத்துக்குத் தடையும் எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது.


இவான் துர்கனேவ் எழுதிய தந்தையும் தனயரும் இந்தத் தலைமுறை இடைவெளியை உணர்த்தும் உன்னதமான நாவல்.தன் மகன் வருகைக்காகக் காத்திருக்கிறார் தந்தை. மகன் அர்க்காதி தன் நண்பன் பஸாரவ் -வுடன் வந்து இறங்குகிறான். சென்ற தலைமுறை ஆசாமிக்கும் பஸாரவ்வுக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் பட்டு வராமல் போவது ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் வனத்தில் ஓடும் ஓடையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை ரசிக்கும் வினோதமான ஆர்வங்கள் பஸாரவ்வை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.அவனுடைய சட்டை, தலைமுடி, பேச்சு எதையுமே அர்க்காதியின் பெரியப்பாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்குமான வேற்றுமை நாவல் முழுவதும் நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஆளுக்கொரு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.


யாருக்கு சாமார்த்தியம் இருக்கிறதோ அவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அர்க்காதியின் பெரியப்பா முதலில் சுடுகிறார். அவருடைய குறி தவறிவிடுகிறது. அடுத்தது பஸாரவ். மிகச் சரியாகச் சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான்.அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறான். இப்போது பஸாரவ்வை எதிர்க்கொள்வதற்கு அர்க்காதியின் பெரியப்பாவுக்குச் சங்கடமாக இருக்கிறது.


இதனிடையே பஸாரவ் மீது காதல் கொள்ளும் பெண் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸôரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான்.


அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.அதுதான் பஸாரவ்.


"இந்த நாவலின் பஸாரவ் பாத்திரத்தை உருவாக்குவதற்காக நான் என்னிடம் இருந்த அத்தனை வண்ணங்களையும் இழந்துவிட்டேன்' என்று இவான் துர்கனேவ் கூறியிருக்கிறார்.


ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இயந்திர யுகம் காரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த நிலை கொள்ளாத அலைபாயும் மனத் தன்மை நாவலின் பின்னணிக் களமாக இருப்பதை உணர முடியும். அன்றைய இளைஞர்களுக்குள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த இஸங்களின் ஆதிக்கத்தையும் நாவலில் பார்க்க முடிகிறது. அதன் காரணமாகவே நாவல் ஒரு நூற்றாண்டின் மனச்சித்திரத்தை உருவாக்கும் தரத்தோடும் மிளிர்கிறது.


பூ. சோமசுந்தரத்தின் மிக நேர்த்தியான மொழி பெயர்ப்பு நம்மை நாவலோடு கட்டிப் போட்டுவிடுகிறது.தலைமுறைகள் கடந்தும் தலைமுறை இடைவெளியை அலசும் இந்த நாவல் சிலாகிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதன் ரகசியமும் அந்தத் தலைமுறை இடைவெளியில்தான் ஒளிந்திருக்கிறது.


தந்தையரும் தனயரும்

இவான் துர்கனேவ்

சந்தியா பதிப்பகம்,

57, 53-வது தெரு,9-வது அவென்யூ,

அசோக் நகர்,

சென்னை- ௮௩

ரூ. 100

சனி, அக்டோபர் 24, 2009

பறக்கும் குதிரை!


தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் ஒட்டு மொத்த சாராம்சமாக ஒரு கதையை எப்போதும் நினைவில் கொள்வேன்.

அரசன் ஒருநாள் தன் அமைச்சர் மீது கோபம் கொண்டு அவருக்கு சிரச்சேதம் அளிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான். அதே நேரத்தில் இவ்வளவு நாள் பழகிய தன் அமைச்சர் மீது அவருக்கு ஒரு மெல்லிய பரிதாபம். அமைச்சருக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தால் அதை நிறைவேற்றும்படி கூறிவிடுகிறார்.
சேவகர்கள் கடைசி ஆசையை விசாரிக்கிறார்கள்.
அமைச்சருக்கு ஒரு திடீர் யோசனை. அங்கே கட்டி வைத்திருக்கும் குதிரையைக் காட்டி, "எனக்கு இந்தக் குதிரைக்குப் பறக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஒரு ஆசை இருக்கிறது. அனுமதிப்பீர்களா?'' என்கிறார் அமைச்சர்.
சேவகர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். குதிரை பறக்குமா?
அரசனிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். அரசருக்கும் குதிரை பறக்குமா என்று திடீர் ஆர்வம் ஏற்படுகிறது. அமைச்சரின் ட்ரிக்ஸ் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம்.
"ஆறுமாசம் அவகாசம்.. அதற்குள் பறக்க வைத்துவிட வேண்டும்.. அதன் பிறகு சிரச்சேதம்'' என்கிறார் அரசர்.
எல்லோரும் போன பின்பு சேனாதிபதி வந்து அமைச்சரிடம் கேட்கிறார்.. "அமைச்சரே.. குதிரை பறப்பது சாத்தியமா? என்ன இது வேடிக்கை?'' என்கிறார்.
"சேனாதிபதி.. இந்த ஆறுமாத அவகாசத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் இயற்கையாகவேகூட இறந்துவிடலாம். அல்லது வேறு ஒரு அரசர் நாட்டைப் பிடிக்கலாம். அல்லது அரசர் நான் குற்றமற்றவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்... இவ்வளவு ஏன் குதிரையேகூட பறப்பதற்குப் பழகிக் கொண்டுவிடும்..''
-கால அவகாசம் என்ன மாற்றத்தையும் செய்யும் என்பதற்கு உதாரணமாக இதைச் சொன்னார்.
மிகவும் பொறுமையான மனிதராக இருந்தார் அவர். ஒரு முறை அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை எனக்குத் தமிழ் ஊடகப் பேரவையில் வழங்கினார்கள். என்னுடைய பேச்சுத் திறமை ஒரு நிமிடத்தில் பாதி அளவுக்குக்கூட நீடிக்கவில்லை.
தகவல்களை எப்படிப் பெறுகிறேன்? என்ற தலைப்பில் அவர் ஒரு மணிநேரத்துக்குப் பேசினார். ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வரும் பெரும்பான்மையான கதைகளை எடுத்து நாட்டு நடப்புக்கு ஏற்பப் பயன்படுத்துவேன் என்று சொன்னார்.
ஒருமுறை ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் கமலாத்மானந்தர், ரேடியோ ஸ்டேஷனுக்குப் போன் செய்து தென்கச்சியைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னாராம். வசமாக மாட்டிக் கொண்டோம் என்று தென்கச்சி சந்திக்கச் சென்றிருக்கிறார். கமலாத்மானந்தர், "உங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்... கதைகள் மிக அருமையாக இருக்கின்றன. அதைப் பிரசுரிப்பதற்கு அனுமதித்தால் விஜயத்தில் தொடர்ந்து வெளியிடுவேன்'' என்றாராம்.
இப்படியாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் கேள்வி நேரம்.
ஒரு பதிலுக்கு அவர், "எனக்கு எந்த லட்சியமும் இல்லை. அதனால் நான் ஆனந்தமாக இருக்கிறேன். லட்சியவாதிகள் யாரேனும் அவர்கள் வாழ்க்கையில் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற முடிகிறதா? காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள், காரல் மார்க்ஸை எடுத்துக் கொள்ளுங்கள், பெரியாரை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும்போது முதலில் பலியாவது அவனுடைய ஆனந்தம்தான்'' என்றார்.
கூட்டத்துக்கு வந்திருந்த பலருக்கு இதில் உடன்பாடில்லை. பெரியார் மட்டும் இல்லை என்றால் நாமெல்லாம் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்று கூச்சலிட்டனர்.
"அது உண்மைதான். ஆனால் பெரியார் எத்தனை இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதைத்தான் சொல்கிறேன். அதுவுமில்லாமல் நான் என்னுடைய ஆனந்தத்தின் ரகசியத்தைத்தான் சொல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்போதுகூட நீங்களெல்லாம் லட்சியவாதியாக இருப்பதால்தான் கோபப்படுகிறீர்கள்.. இப்போதும் சொல்கிறேன் நான் அலட்சியவாதிதான்'' என்று கூறிவிட்டார்.
அவருடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் ஒரு தனிமனிதனாக எல்லாவற்றுக்கும் மனதைத் திறந்து வைத்திருக்கிற ஒரு மனப்பான்மை என்று எடுத்துக் கொண்டேன். எந்தக் கருத்தையும் அப்படியே நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதற்கும்
அது எல்லா விஷயத்திலும் பொருத்தமானதாக நினைக்க வேண்டியதில்லை என்பதற்கும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவரிடம் இதே போல் கேள்வி நேரத்தின்போது விடைகிடைத்தது.
நகைச்சுவைக் கதைகள் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.. உங்களால் சோகமான கதையைச் சொல்ல முடியுமா? என்று கேட்டார்கள்.
"கதை சொல்ல வேண்டியதில்லை... ஒரு வரியே போதும்... அதைவிட ஒரு சோகக்கதை இருக்க முடியாது...
இலங்கைத் தமிழர்கள்'' என்றார்.

சின்ன.. சின்ன ஊசிகள்!



பத்திரிகையாளர்களின் பீஷ்மராகப் போற்றப்படுபவர் சின்னக்குத்தூசி. இன்டர்நெட் உலகம் தழைத்தோங்கும் முன்னர் அவர்தான் இணைக்கும் தளமாக இருந்தார். எந்தத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைத்தார்கள். யார் எத்தனை இடங்களில் ஜெயித்தார்கள்... என்று ஒரு போன் காலில் தெரிந்து கொள்ளலாம். புதிய கல்விக் கொள்கை குறித்து கட்டுரை எழுத வேண்டுமா, திராவிட இயக்க வரலாறு குறித்துத் தகவல் தெரியவேண்டுமா, நேரில் போய் அமர்ந்தால் அத்தனை தகவல்களும் சரமாரியாக வந்துவிழும். திருமணம் செய்து கொள்ளாமல் தன்னையே தகவலாகத் தந்து கொண்டிருக்கிறார் அவர்.
ஒரு பத்திரிகையில் வேலை போய்விட்டதா, அடுத்த பத்திரிகையில் சேர வேண்டுமா.. அவரிடம் சிபாரிசு கேட்டு வந்துநிற்பார்கள். தமிழகத்தின் எல்லா பத்திரிகை ஆசிரியரிடமும் அவருக்கு நல்ல நெருக்கம் உண்டு. ஆனால் அந்த அத்தனை நெருக்கத்தையும் முரசொலி நிறுவனருக்காக உதறித் தள்ளக்கூடிய அளவுக்கு அவருக்கு அந்த நிறுவனரிடத்தில் அத்தனை ஈடுபாடு.
இதயம் பேசுகிறது வார இதழ் நடத்திய இளைஞர் ஆண்டு நாவல் போட்டியில் எனது தொடர்கதை முதல் பரிசு தேர்வான அறிவிப்பை ஒரு நபரை வீட்டுக்கு அனுப்பித் தெரிவிக்கச் சொன்னார் ஆசிரியர் மணியன்.
நான் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓட்டேரியில் இருந்து என் நண்பனுடன் கிண்டியில் இருந்த இதயம் அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்தேன். மணியனின் மருமகன் ஸ்ரீராம், இவர்தான் உங்கள் நாவலைத் தேர்வு செய்தார். மொத்தம் இருநூறு நாவல்கள் போட்டிக்கு வந்தன என்றெல்லாம் சொன்னார். என் நாவலைத் தேர்வு செய்தவர் வெள்ளைக் கதர் வேட்டி, சட்டையில் ஒல்லியாக இருந்தார். அவர் பெயரை தியாகராசன் என்று அறிமுகப்படுத்தினார்.
ஆறு ஆண்டுகள் கழித்து கலாநிதி மாறன் முழுக்க வண்ணத்தில் வெளியிட்ட தமிழன் நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தபோது முரசொலியில் இருந்து சின்னக்குத்தூசி அழைப்பதாகத் தெரிவித்தார்கள். (இரண்டு நாளிதழும் அடுத்தடுத்த மாடியில் இயங்கின) சந்தித்தபோது என்னைத் தெரிகிறதா என்றார். தெரியவில்லை என்று சொன்னேன்.
"நான்தான் உங்கள் நாவலை இதயம் பேசுகிறது இதழில் தேர்வு செய்தவன்'' என்றார்.
"அது தியாகராசன் என்பவர் என்று அறிமுகப்படுத்தினார்களே?''
வேகமாக ஆறு ஆண்டுகளுக்கு முன் சில நிமிடங்கள் பார்த்த அந்த முகத்தை நினைவுபடுத்த முயன்றேன்.
"வெங்கடேசன் என்று உங்களுக்கு இயற்பெயர் இல்லையா? அப்படி எனக்கு தியாகராசன் என்பது இயற் பெயர்''
"மன்னிக்கணும் சார்.. எனக்கு இந்தப் பெயர் குழப்பத்தால தெரியாம போயிடுச்சி'' என்றேன். சொல்லி முடிப்பதற்குள் கூச்சமும் அவமானமும் போட்டி போட்டுக் கொண்டு பிடுங்கித் தின்றன. சின்னக்குத்தூசி என்றால் முரசொலி என்றுதான் யாருக்குமே நினைவு வரும். அவர் எப்படி மணியன் இதழில் நாவல் போட்டி நடுவராக இருக்க முடியும் என்பதால்கூட அவரையும் இவரையும் சேர்த்துப் பார்க்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதுவும் இல்லாமல் நாவல் போட்டி தேர்வான சமயத்தில் எனக்கு இருபத்தோரு வயது. மணியனையே சென்று சந்திக்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. பரிசாக டி.வி.எஸ். 50 பெற்றுக் கொண்டதைக்கூட அவரிடம் தெரிவிக்கவே இல்லை. கையில் ஏழு ரூபாய் இருந்தால் போதும் பெட்ரோல் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு முரசொலியில் இருந்த அத்தனை சந்தர்ப்பங்களிலும் சின்னக்குத்தூசியை எதிர் கொள்ளும் நேரங்களில் குற்ற உணர்வு பொங்க ஒரு வணக்கம் வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். பல முறை வேலை வாய்ப்புகளை இழந்த சமயங்களிலும் அவரிடமிருந்து ஒரே ஒரு சிபாரிசையும் பெற்றதில்லை. எந்தக் கட்டுரைக்கும் அவரிடமிருந்து தகவல்கள் கோரியதில்லை. அவருடைய மேன்ஷன் எங்கிருக்கிறது என்பதைக்கூட தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் இதயம் பேசுகிறது நாவல் போட்டியில் என் நாவலைத் தேர்வு செய்ததன் மூலம் அவர் எல்லா சிபாரிசையும் செய்து முடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இன்னமும் அதுதான் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆண்களுக்கான திருமண வயது 21!



வீட்டுக்குப் புதிதாகக் குடித்தனம் வந்தார் ஒரு பேச்சலர். வயது இருபத்தொன்று முடிந்து சில நாள்களாவதாகச் சொன்னார். வேலை பார்த்தபடியே படிக்க வேண்டியிருப்பதால் தனிமை தேவைப்படுவதாகச் சொல்லி வீடு கேட்டு வந்தார். என்ஜினியரிங் முடித்திருந்த அவருக்குக் கல்லூரியில் படிக்கும்போதே நல்ல வேலைக்குத் தேர்வாகிவிட்டார். படித்தாகிவிட்டது, வேலையும் கிடைத்துவிட்டது, பிறகு என்ன படிக்கிறீர்கள் என்றேன்.
என்ஜினியரிங் படிப்பைவிட இப்போது கேட் படிப்புக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஐஐஎம் படிப்புக்கு மொத்தம் மூன்று லட்சம் பேர் எழுதுகிறார்கள்... தேர்ந்தெடுக்கப்போவது மூவாயிரம் பேர்கள்தான் என்றெல்லாம் சொன்னார். எனக்கு கேட் பற்றியெல்லாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. படித்து முடித்த பின் என்ன டிகிரி தருவார்கள் என்றேன். எம்.பி.ஏ. என்றார். அஞ்சல் வழிக் கல்லூரியிலேயே இப்போது எம்பிஏ படிக்கும் வசதி வந்துவிட்டதே என்று என் புத்திசாலித்தனத்தைக் காட்டினேன். அவருடைய முகக் குறிப்பில் எனக்கு விளக்குவது தேவையற்றது என்பது அவருடைய முகக் குறிப்பில் கொட்டை எழுத்தில் தெரிந்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன்னியல்பாக என்னுடைய 21 வயது நினைவுக்கு வந்தது.
என்னுடைய இருபத்தொன்றாம் வயதில் கடைசி ஆண்டு பி.எஸ்ஸி. தேர்வுக்கு ஒன்றுக்கும் போகாமல் கன்னிமரா நூலகத்துக்குப் போய் நாவல் எழுதும் வேலையில் தீவிரமாக இருந்தேன். ஏனென்றால் நாவல் போட்டி இருபத்தோரு வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
கல்லூரிப் பாடம் பாக்கியிருந்ததால் காலையில் எழுந்ததும் எங்கே போவதென்ற பிரச்சினை. லைப்ரரி.. லைப்ரரி என்று போய் வந்து கொண்டிருந்ததால் சும்மாதானே இருக்கிறான் என்று அடுத்த சில மாதங்களிலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். ஆண்களுக்கான திருமணத்துக்கான வயது 21 என்ற விளம்பர அறிவிப்பு மட்டுமே என் திருமணத்துக்குத் தகுதியாக இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருக்கும்போதே திருமண நாள் நெருங்கிவிட்டது. சொல்லச் சொல்ல கேட்காமல் கல்யாணம் செய்ததற்காகப் பழி வாங்கும் நோக்கமிருந்தது.
திருமணமான புதிது. வேலைக்குப் போகிற ஆசையெல்லாம் வரவேயில்லை. என்ன மாதிரி அலுவலகத்தில் என்னமாதிரி வேலை செய்யத் தெரியும் என்ற அவதானிப்பும் இருக்கவில்லை. அப்போது பேச்சாளர்களை அழைத்துச் சென்று என் மாமனார் ஊரில் கூட்டங்கள் போடுவதுதான் முழு நேரப் பணியாக இருந்தது. மாதத்துக்கு ஒரு தரம் பெரியார் தாசன், சுப.வீரபாண்டின் போன்றவர்களை ஊருக்கு அழைத்துச் சென்று சீர்திருத்தக் கூட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். வருகிறவர்களுக்கு வீட்டில் அசைவ விருந்து நடக்கும். இத்தனைக்கும் என் மாமனார் வள்ளலார், ராமகிருஷ்ணர் ஆகியோரின் தீவிர பக்தர்.
வருகிறவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் வேறு. திண்ணையில் அமர்ந்து கடவுளைக் கிண்டலடித்துப் பேசிக் கொண்டிருந்தனர். சமயத்தில் என் மாமனாரும் அவர்களுடன் கடவுள் பற்றிய கிண்டல்களுக்குச் சிரித்துக் கொண்டிருந்தார். என்னால் அவரைப் பழிவாங்கவே முடியவில்லை. சகிப்புத் தன்மையும் பொறுமையும் கடைசியில் எனக்குத் தொற்றிக் கொண்டதுதான் மிச்சம்

புல்லுக்கு இறைத்த நீர்... நெல்லுக்கும் புசிந்து..




எம்.ஜி.ஆர்.- லதா, ரஜினி- ஸ்ரீ ப்ரியா, கமல் ஸ்ரீதேவி என்று எழுதப்பட்ட அந்தச் சிறிய ராட்டினத்தை எத்தனை பேர் கவனிக்கிறோம்? கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அந்த ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு வந்து குழந்தைகளை உட்கார வைத்து கையால் சுழற்றிச் சந்தோஷப்படுத்தும் அந்த நபரை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இத்தகைய ராட்டனங்கள் தயாராகும் பட்டறை எங்கே இருக்கிறது?
தோளில் சாய்த்திருக்கும் மூங்கில் கொம்பில் ஜவ்வு மிட்டாயைச் சுற்றி விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்திருக்கிறீர்களா? வண்ணப்பட்டைகளாக ஈ மொய்க்கும் அந்த இனிப்பு நினைவில் இனிக்கிறதா இப்போதும்? கையில் ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டிவிட்ட கையோடு சின்னத் துண்டைப் பிய்த்து உங்கள் கன்னத்தில் ஒட்டிவிட்டது நினைவுக்கு வருகிறதா?
பை நிறைய பலூன் வைத்துக் கொண்டு, கேட்கும் குழந்தைகளுக்கு வாய் வலிக்க ஊதித் தரும் முதியவரிடம் உங்களுக்கும் பரிச்சயம்தானே?
திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல தீபாவளி நேர நெரிசலில் ப்ளாஸ்டிக் பை நிறைய பாப் கார்ன் விற்றுக் கொண்டிருக்கும் பாட்டியைக் கொஞ்சம் நினைவுபடுத்தினால் அடையாளம் காண முடிகிறதுதானே?
பரபரப்பான சிக்னல் நடுவே மஞ்சள் துணி விற்கும் சிறுவர் சிறுமியர் தெரிகிறதா?
நான்கு சைக்கிள் சக்கரங்களால் கோர்க்கப்பட்ட நான்கு சக்கர வண்டியில் ஆய்வுச் சாலையில் இருக்கும் பெரிய கண்ணாடிப் பேழை போன்ற புட்டியில் சோன் பப்படி விற்பவர் தெரிகிறதா? அவர் அந்த புட்டியை எங்கே வாங்குகிறார்? யார் தயாரிக்கிறார்கள்... இந்த புட்டி சோன்பப்படி தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
இந்தத் தொழில்களையெல்லாம் யார் தீர்மானித்தார்கள். யார் வழி மொழிந்தார்கள்? நாம் இந்தத் தொழிலைச் செய்யலாம் என்று இதைச் செய்பவர்களுக்கு எப்படித் தோன்றியது? அப்படித் தோன்றுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதா... திணிக்கப்பட்டதா?
பலூனும் எம்.ஜி.ஆர்- லதா ராட்டினமும், ஜவ்வு மிட்டாயும் வியாபாரம் ஆகி அதில் குடும்பம் நடத்த முடியும் என்று எப்படி நம்புகிறார்கள்?
என் சிறு வயதில் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் ஒருவர் இந்த மாதிரியான தள்ளு மாடல் ராட்டினம் வைத்திருந்தார். அதை நிறுத்துவதற்கு வீட்டின் முன்னால் மூத்திரசந்தின் மூலையில் ஒரு இடம் எப்போதும் இருக்கும். அதை தினமும் சங்கிலி போட்டு பூட்டி வைப்பார். ராட்டினத்தைத் தள்ளிக் கொண்டு செல்வதற்கு உதவும் சிறுவர்களுக்கு இனாமாக சுற்றுவதற்கு அனுமதி. அதாவது காசு கொடுத்து ராட்டினம் சுற்றுபவர்கள் இரண்டு பேர்தான் இருந்தார்கள் என்றால்.. மறுபக்கம் பாலன்ஸ் செய்வதற்கு இரண்டு சிறுவர்களை இனாமாக உட்கார வைப்பார்.
அந்த ராட்டினத்துக்குச் சொந்தம் கொண்டாடி அவரும் அவருடைய தம்பியும் கட்டி உருண்டனர் ஒரு நாள். அது தனக்குத் தான் சொந்தம் என்பதில் இருவருக்கும் கொலைவெறி கரை புரண்டது. ஐந்து ஐந்து பைசாவாகச் சம்பாதித்துக் கொடுக்கும் அந்த ராட்டினத்தை நம்பி இருவர் சண்டை போட்டுக் கொண்டது இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. அது ஒரு குலத் தொழில் போல இருந்தது அவர்களுக்கு. அவருடைய அப்பாவும் அந்த ராட்டினத்தை நம்பித்தான் இவர்களை ஆளாக்கினாரோ என்னவோ? அடுத்த தலைமுறையைத் தயாரிக்க அது இப்போதும் தேவைப்படுவதால்தான் அந்தச் சண்டை நடந்தது என்று தோன்றுகிறது.
பண்டிகை நாள்களில் செல் போன் விற்பவர்களும் போத்தீஸ் கடையிலும் தீபாவளி ஆஃபர் என்ற பெயரில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த உப தொழில்களுக்கும் கொஞ்சம் ஈரம் பாயப்படுவதை நினைக்கும்போது எந்தப் பண்டிகையையும் மன்னித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
--

ஞாயிறு, அக்டோபர் 18, 2009

படுகொலைகளைப் பார்ப்பது எப்படி? -



சாதாரணமாக அலுவலகங்களில் இப்படி ஒரு காட்சியைப் பார்க்கலாம். இரண்டு பேருக்கு மனஸ்தாபம் என்றால் அதை எரியவிட்டுக் குளிர் காய்ந்து ஆதாயம் தேடும் மனிதர்கள் இருப்பார்கள். இரண்டு கிராமங்களுக்கு, இரண்டு மனித இனங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு என்று இதை வளர்த்துக் கொண்டே போகலாம். பிரச்சினை ஏற்படும் தளத்துக்கு ஏற்ப ஆதாயமும் பிரச்சினையை எரியவிடும் போக்கும் பிரம்மாண்டமாக இருக்கிறது.


உதாரணத்துக்கு ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்குப் பிறகு சீக்கியர்களுக்கும் இந்திரா காந்திக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இந்திராகாந்தி கொல்லப்படுகிறார். சீக்கியர்கள் எண்ணிறந்த பாதிப்புகளுக்கும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள்.

சிங்களர்களின் கொடுமைகளுக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் அமைதி ஏற்படுத்த விரைந்த இந்திய ராணுவமே இலங்கைத் தமிழர்களுக்கு விரோதிகளானார்கள். ராஜீவ் காந்தி படுகொலையில் வந்து முடிகிறது. இப்போது ஒரு லட்சம் தமிழர்கள் வரை பலியாகியிருக்கிறார்கள். இதெல்லாம் நேரடியான ஒற்றைப்படையான நமது பார்வைகள். இந்தப் பிரச்சினைகளை எரியவிட்டுக் குளிர் காய்கிறவர்கள் யார் என்பது அதிர்ச்சியூட்டும் திகில் கதைக்கு ஒப்பானதாக இருக்கிறது.ஜான் பெர்கின்ஸ் எழுதியுள்ள "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற நூல் நாம் மேற்படி விஷயங்களை வேறு மாதிரியாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஒரு நாட்டின் அதிபர் திடீரென்று மரணம் அடைவதில் பொதுவாக ஆதிக்க நாடுகளுக்கு ஏற்படும் எண்ணிறந்த ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நாடு தன் நிலைத்தன்மையை, தன்னிறைவை இழக்கும் தருணம்தான் ஆதிக்க நாடுகளுக்கு வரப்பிரசாதம். அவர்களின் கரங்களை சுரண்டுவதற்காக நீட்டுவதற்கான அரிய சந்தர்ப்பம் அது.


பொதுவான லத்தின் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக ஈகுவாடாரில், இந்தோனேஷியாவில், சவுதி அரேபியாவில் என அமெரிக்கக் கைகூலிகள் எப்படி செயல் பட்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த நூல். (கூலிகள் என்பதால் ரயில்வேகூலியை, விவசாயக்கூலியையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. இவர்கள் உலகின் மிக உயர்ந்த பி.எம்.டபிள்யு காரில் கோட் சூட் அணிந்து பிரயாணிப்பவர்கள்). ஜான் பெர்கின்ஸ் "மெய்ன்' என்ற நிறுவனத்தில் கட்டடப் பொறியாளர் வேலைக்குச் சேருகிறார். இவருடைய திடமான மனமும் உடற்கட்டும் இவருக்கு நிறைய சலுகைகளை வாரி வழங்குகிறது. அடுத்தடுத்து பதவி உயர்வுகள். ஒரு பெண்மணி வந்து சந்திக்கிறார். அவருடைய முதல் பேச்சே ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது என்கிறது. அவர்கள் சொல்லும் நாட்டுக்கு உடனடியாக பயணிக்க வேண்டும். அங்கே நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளை வேகமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்னென்ன கட்சிகள் இருக்கின்றன, யாருக்கு செல்வாக்கு அதிகம்?, எந்த மாதிரியான ஆவேசமான சூழல் நிலவுகிறது? எந்த விஷயத்தைத் தொட்டால் மனிதர்கள் செண்டிமென்ட்டாக பாதிக்கப்படுவார்கள்? என்றெல்லாம் தகவல் தர வேண்டும். இது முதல் கட்டம். (இரண்டாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும். உதாரணத்துக்கு விநாயகர் ஊர்வலம் போனால் மக்கள் கலவரத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்றால் அங்கு கலவரத்தை வெடிக்க வைக்க வேண்டும்.. சீக்கியர்களை உசுப்பிவிட்டு இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டும்) .
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நேரடியாக இன்னொரு நாட்டில் தனது ஆட்களை இறக்குமதி செய்து பணத்தை அனுப்பிக் காரியம் சாதிக்க முடியாது என்பதால் மெய்ன் போல பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக வேறு நாடுகளுக்குள் இறங்குகின்றன. அது கட்டடம் கட்டும் நிறுவனமாக இருக்கலாம். செல் போன் நிறுவனமாக இருக்கலாம். மெயின் நிறுவனத்தின் மெய்ன் பிஸினஸ் நாட்டைச் சுரண்டுவது... பிரச்சினை ஏற்படுத்துவது... சைடு பிசினஸ்தான் கட்டடம் கட்டுவது. ஜான் பெர்கின்ஸுக்கு இந்த வேலை மிகவும் பிடிக்கிறது. வேகமாக காரியங்களைச் சாதிக்கிறார். பதவி உயர்வுகள்.. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தின் டைரக்டருக்கு நிகரான சம்பளமே அவருக்கு வழங்கத் தயாராகிறது. ஈகுவடாரிஸ் அணைகள் கட்டி, எண்ணெய் வளத்தைச் சுரண்டி, அங்குள்ள மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையே பாழாக்கி, இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியை சின்னா பின்னமாக்கி, அந் நாட்டு அதிபரைக் கொன்று.. என இவர் விவரித்துக் கொண்டே போகிறார். நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. பக்கத்தில் "டயம்" என்ன என்று கேட்டால் கூட ஏதாவது அதில் உள் நோக்கம் இருக்குமா?' என்று அஞ்ச வேண்டியதாக இருக்கிறது. 2001 செப்டம்பர் பதினோரம் தேதி இரட்டைக் கோபுரமும் பென்டகன் நிறுவனமும் தாக்கப்பட்டன. அத்தனை பாதுகாப்புகள் நிறைந்த அமெரிக்காவிலேயே பின்லேடன் உள்ளே நுழைந்துவிட்டானே என்று ஆச்சர்யப்படுவது மேலே குறிப்பிட்டபடி இந்த விஷயத்தை நேரடியாக அணுகுவது. பெர்கின்ஸ் தரும் குறிப்புகளைப் பாருங்கள்..
"ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக 1971 லிருந்து 1977 வரை பணியாற்றிய காலத்திலும் 76 முதல் 77 வரை சி.ஐ.ஏ.வின் தலைவராகவும் பணியாற்றிய போதும் பின்லேடன் குடும்பத்தினருக்கும் புஷ் குடும்பத்தினருக்கும் உறவுகள் வேர்விட்டு வளர்ந்தன. கடந்த 20 ஆண்டுகளாக வணிக, அரசியல் உறவாக அது நீடித்து வருகிறது. செப்டம்பர் பதினொன்றாம் தேதி தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் குடும்பத்தினர் மற்றும் பணம் படைத்த சவுதி அரேபியர்கள் அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்த விமானங்களைப் பறக்க அனுமதித்து யார் என்று இதுவரை தெரியவில்லை.''இப்படி உலகத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப் பின்னணியில் பதுங்கியிருக்கும் மற்றொரு அதிர்ச்சியை நூல் முழுக்கச் சொல்லிக் கொண்டே போகிறார் பெர்கின்ஸ்.


தான் செய்யும் தொழில் மீது அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறது. எப்படி ஒரு பெண்ணின் மூலம் இந்தத் தொழிலில் இறங்குவதற்குக் காரணமாக இருந்தேனோ அதே போல் இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் இந்த இழி செயலைப் புரிந்து கொண்டேன் என்கிறார். எந்த கணத்தில் அவர் அதை உணர்ந்தாரோ அப்போது முதலே அவருடைய நிறுவனத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்பும் ஆபத்தும் வரும் என்பது புரிந்து போகிறது. தனது உயிருக்கு நாள் குறிக்கப்பட்டு விடும் என்று தெரிந்து கொள்கிறார். நிறுவனமோ அவருக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறது. "நீங்கள் நமது நிறுவனத்துக்கு எதிரான கருத்துத் தொனிக்கும் கட்டுரையை எழுதியிருப்பதாக அறிகிறோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் சலுகைகளும், பதவிகளும் காத்திருக்கின்றன'' என்று எலிக்கு மசால் வடை காட்டி அழைத்துப் பார்க்கிறார்கள். அதிலே மிரட்டலும் ஒளிந்திருக்கிறது. மறுத்தால் அந்த இடத்திலேயே கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்து போகிறது. சம்மதம் தெரிவித்துவிட்டு வெளியே வருகிறார். அவருக்குத் தான் செய்யும் தொழில் விபசாரத்துக்கு ஒப்பான தொழிலாக கேவலமாகப்படுகிறது. ஆனாலும் வேறுவழியில்லை.


ஆப்ரிக்காவில் தம் செயலால் சுரண்டப்பட்ட பகுதிகளைப் பார்க்கிறார்.அவருடைய நடையிலேயே அப்படியே தருகிறேன்...

"கடலிலிருந்து ஒரு கணம் பார்வையைத் திருப்பியபோது ஆப்ரிக்க இல்லங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட அடிமைகளால் கட்டப்பட்ட சுவர்கள் கண்ணில் பட்டன. அதைக் காணச் சகிக்காமல் அப்பால் திரும்பியபோது தரையில் கிடந்த ஒரு பருமனான தடியைக் கண்டேன். பாய்ந்து அதை எடுத்துக் கொண்டு கல் சுவர்களை அதனால் விளாசத் தொடங்கினேன். உடலில் உள்ள சக்தியெல்லாம் வற்றிப் போகும் வரை சுவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டே இருந்தேன். பின்பு புல்லில் விழுந்து உயரத்தில் மேகங்கள் நகர்வதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.என்ன செய்ய வேண்டுமென்று எனக்குப் புரிந்துவிட்டது. இனி பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்றால் அவ்வளவுதான். ஒழிந்தே போக வேண்டியதுதான். சம்பள உயர்வுகளும், சலுகைகளும் லாபங்களும் கட்டிப் போட்டுவிடும். பணியில் நீடிக்க, நீடிக்க வெளியேறுவது மென்மேலும் கடினமாகிவிடும். அடிமையாகிவிடுவேன். தப்பி ஓடிவிட வேண்டும்... இரண்டு நாள் கழித்து பாஸ்டன் திரும்பினேன். 1980 ஏப்ரல் 1 அன்று பால் பிரிட்டியின் அலுவலகத்துக்குச் சென்று வேலையை ராஜினாமா செய்தேன்.''ராஜினாமா செய்த பிறகு பெர்கின்ஸஸுக்குத் தொடர்ந்த மிரட்டல்களும் அதன் பின்பு இந்த நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியானதும் துப்பறியும் நாவலுக்குரிய இன்னொரு பாகம்.இரா. முருகவேள் சுவாரஸ்யமான காவிய நடையில் இதை மொழி பெயர்த்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது இந்த மொழி பெயர்ப்பு நூல்.நாமிருக்கும் உலகம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள உதவும் ஒப்பற்ற நூல்.


பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்கின்ஸ்

தமிழில்:இரா. முருகவேள்

விடியல் பதிப்பகம்,

11, பெரியார் நகர்,

மசக்காளி பாளையம் (வடக்கு),

கோயமுத்தூர்- 641 015.

மின்னஞ்சல்: sivavitiyal@yahoo.co.inphone: 0422 - 25776772

செவ்வாய், செப்டம்பர் 15, 2009

மில்லும் மில் சார்ந்த இடமும்


















சாதாரண விஷயம் எப்படி செய்தியாகிறது என்பதற்கு உலக அளவில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கும். குறிப்பிட்ட கால வித்தியாசத்தில் ஒரு நபரையோ, ஒரு இடத்தையோ பார்க்கும்போது ஒரு அழகான ஆச்சரியம் இருப்பதும் சாதாரணம் செய்தி ஆவதில் ஒரு வகை.
சிறுவயதில் ஓட்டேரியில் பதினாலு குடித்தனங்கள் இருந்த ஒண்டிக் குடித்தன வீட்டில் இருந்தேன். அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் ஏற்பட்டது பற்றிப் பார்ப்போம்.
அந்த வீட்டில் பெரும்பாலும் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் வசித்தனர். அதாவது 12 குடித்தனக்காரர்கள் அங்குதான் வேலை செய்தனர். மீதி இரண்டு பேரில் என் அப்பா ஒருவர். சுற்றுப்பட்டில் இருந்த எல்லா வீட்டிலும் இதுதான் நிலைமை. சுமார் பதிமூன்றாயிரம் பேர் அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தனர். மூன்று ஷிப்ட். ஷிப்டுக்கு நான்காயிரம் பேர் நடமாட வேண்டிய சாலை. ஆலைச் சங்கு காலை பதினோரு மணிக்கு ஒரு தடவை கூவும். பெண்கள் தம் கணவன்மார்களுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு ஓடுவார்கள்.
பி அண்ட் சி ஆலை மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதையே நம்பியிருந்த பதிமூன்றாயிரம் தொழிலாளர் குடும்பங்களும் என்னென்ன விபரீதங்களுக்கு ஆளாயின என்பது ஆய்வுக்கான விஷயம். உளவியல் ரீதியான உலுக்கல் அது. அங்கே தடுக்கிவிழுந்தால் டீக்கடை. தொழிலாளர்களின் பிரதான உணவு. சரஸ்வதி, மகாலட்சுமி தியேட்டர்கள் அவர்களின் மையப் பகுதி. மேற்கே மேகலா தியேட்டரும் கிழக்கே புவனேஸ்வரி தியேட்டரும் தெற்கே ராக்ஸி தியேட்டரும் எல்லைகள். அப்போது மேகலாவில் எம்.ஜி.ஆர். படமும் புவனேஸ்வரியில் சிவாஜி படமும் ரிலீஸ் ஆகும். இப்போது எம்.ஜி.ஆரும் இல்லை, சிவாஜியும் இல்லை. அந்தத் தியேட்டர்களும் இல்லை. இதில் மகாலட்சுமியின் உயிர் மட்டும் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது. மற்றவை வேறு கான்கிரீட் அவதாரம் எடுத்துவிட்டன. டீக்கடைகள் இருக்கின்றன, இப்போதும் இருக்கும் உதிரித் தொழிலாளர்களின் உணவாக.
ஒரு பெரிய தொழிற்சாலை அங்கிருந்த சுற்றுப்பட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. அப்படியே ஒரு நாள் அது காணால் போனது. திரு.வி.க. அதன் தொழிற் சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தத் தொழிற்சாலைக்கு நிலக்கரி சுமந்து வரும் ரயில் ஒன்று உண்டு. அது தொழிற்சாலைக்குள்ளேயே போய் இறக்கும் வசதி இருந்தது. கூவம் ஆறும் அதனுள் ஓடும். அதில் படகுகள் மூலம் பஞ்சுப் பொதிகளும் தயாரித்த ஆடைகளும் வருவதும் போவதுமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் படகுகள் போய் வருவதை நானும் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் அந்தத் தொழிற்சாலையில் ரஜினிகாந்தும் ஸ்ரேயாவும் ‘சிவாஜி’ படத்துக்காக ஒரு நடனம் ஆடினார்கள். அந்தப் பக்கம் போயிருந்த போது மக்கள் முகத்தில் ரஜினி வந்திருக்காரு என்ற பரவசத்தைப் பார்த்தேன். உலகத்துக்கே துணி அளந்து கொண்டிருந்த ஒரு பேக்டரியின் இறுதி மூச்சைக் கேட்டேன்.
அத்தகைய சாதாரணர்கள் இருந்த வீடுதான் அது. இப்போது அதிமுக பிரமுகர் சேகர் பாபு அந்த வீட்டை வாங்கி அவருடைய இல்லமாக புணரமைத்துக் கொண்டார். ஏழைகளின் பெருமூச்சுகளால் நிரம்பியிருந்த அந்த வீடு இப்போது பளபளப்பாக நிம்மதியாக இருக்கிறது. ஒரு வேளை அவருடைய தந்தையும் அதில் வேலை பார்த்திருக்கலாம். அத்தனை உறுதியாகத் தெரியாது. ஆனால் சேகர் பாபு என்னுடன் அப்பு செட்டியார் பள்ளிக் கூடத்தில் படித்தார். ஏழாவது படிக்கும் போதே வாத்தியாரிடம் சண்டை போட்டுவிட்டு பள்ளியை விட்டு நின்றுவிட்டார்.

இப்போது அந்த வீட்டுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

செவ்வாய், செப்டம்பர் 08, 2009

பெரிய மனிதர்.. சின்ன வீடு!

எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இரண்டு முறை பேசியிருக்கிறேன். ‘ஊருக்கு நூறு பேர்', ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி', ‘ஆயுத பூஜை' என்று அவருடைய லட்சியம் பேசும் கதைகளைத்தான் முதலில் படித்திருந்தேன். "சில நேரங்களில் சில மனிதர்கள்', ‘கங்கை எங்கே போகிறாள்', ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற அதற்கு முந்தைய நாவல்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மன உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருப்பதாக ஒரு மேலோட்டமான அபிப்பிராயம் இருந்தது. இந்த வாசிப்புப் பின்னணியில்தான் ஜெயகாந்தனைச் சந்தித்தேன்.
முதல் முறை பேசியது டெலிபோனில்.
போலீஸ் செய்தி என்ற புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றியபோது அந்தப் பத்திரிகையின் ரத்தவாடையைப் போக்கிவிட நினைத்து நான் எடுத்த முயற்சியின் ஒரு பங்காக சிலவிதமான குற்றங்களுக்கு எழுத்தாளர்களின் கருத்துகளை வாங்கிப் போடலாம் என்று யோசனை சொன்னேன். உதாரணத்துக்குக்கற்பழிப்பு' என்ற குற்றம் குறித்து சேலம் அருள்மொழி, ஜெயகாந்தன் இருவரையும் பேச வைக்கலாம் என்று திட்டமிட்டேன். ஜெயகாந்தனிடம் இதைச் சொன்னபோது "நான் இப்போது பத்திரிகைகளுக்கு எழுதுவதையோ, பேசுவதையோ தவிர்த்துவிட்டேன்'' என்று கூறிவிட்டார்.
போலீஸ் செய்தி பத்திரிகையை சமூக இலக்கிய ஏடாக மாற்றும் யோசனையை பிரபஞ்சனிடம் வாசகர் கேள்விகளுக்கு பதில் வாங்கிப் போட்டதன் மூலம் ஓரளவுக்குத் தீர்த்தேன்.
அதன் பிறகு போலீஸ் செய்தி வேலை இழந்து (சசிகலா) நடராசன் நடத்திய தமிழரசி இதழில் ஃப்ரிலான்ஸராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு விக்ரமன் ஆசிரியராக இருந்தார். பாக்யராஜ் இயக்கத்தில் வெளியானசின்னவீடு' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
சின்னவீடு' என்று ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பது எவ்வளவு கேவலம்? இது குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தார் விக்ரமன்.
போனில் பேசினால் தவிர்த்துவிடுவாரோ என்ற தயக்கம். காலையில் நேரில் அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.
மீசையைத் தடவிவிட்டுக் கொண்டு மிடுக்காக விசாரித்தார். என்னவோ ஒரு வசீகரம் இருந்தது அவரிடத்தில். பிரமிப்பும் இருந்தது. எனக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் நாக்குழற ஏதோ பேசினேன்.
"மேலே இருங்கள் வருகிறேன்'' என்றார்.
மாடியில் ஓலை வேய்ந்த கொட்டகை இருந்தது. அங்கே அவர் பைப் பிடிப்பது போல பெரிய போட்டோ ஒன்று மாட்டியிருந்தது. எனக்கு மாக்ஸிம் கார்க்கி மனதில் ஓடினார்.
சின்னவீடு' பற்றிப் பேசுவதற்கு எனக்கே கூச்சமாக இருந்தது.
தோளின் மீது ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு உள்ளே நுழைந்தார் ஜெயகாந்தன். நான், வெளிவந்திருக்கும் அந்தப் படத்தின் தலைப்பைப் பற்றிச் சொன்னேன்.
"சின்னவீடு என்றால் என்ன அர்த்தம்?'' என்றார். அவர் தெரிந்து கொண்டே கேட்கிறாரா தெரியாமல் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
"முதல் மனைவிக்குப் பிறகு ஒருவர் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை சின்னவீடு என்று சொல்கிறார்கள். அது பெண்களை கொச்சைப் படுத்துவதாக இருக்கிறது... உங்கள் கருத்து வேண்டும்'' என்றேன்.
"எனக்கு இந்த மாதிரியான சீப்பான வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாது'' என்று கூறிவிட்டார்.
"சரி சார்'' என்று எழுந்து வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
பின்னாளில் அவருக்கு இரண்டு மனைவியர் என்ற செய்தியும் தெரிந்த போது அவரிடம் போய் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுச் சங்கடப்படுத்திவிட்டோமே என்று அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது.
ஒருசில அறிமுகங்கள் பிறகு அவர்களை எப்போதும் சந்திக்க வழியில்லாமல் சுவர் எழுப்பிவிடும். ஜெயகாந்தனுடனான இந்தச் சந்திப்பும் அப்படியான ஒன்றுதான். அதன் பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை.

அவருதாம்பா இவரு!




















வாழைப்பழ காமெடியை தமிழ்கூறும் நல்லுலகம் இன்னும் ஒரு கால் நூற்றாண்டுக்காவது மறக்காது என்பது திண்ணம். அந்த நகைச்சுவையை எழுதியவர் ஏ.வீரப்பன்.
டணால் தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் காலத்திலிருந்து இவருடைய நகைச்சுவை தமிழ் சினிமாவில் வயிறு குலுங்க வைத்திருக்கிறது, மனது நிறைய வைத்து வந்துள்ளது. சமீபத்திய காலங்களில் கவுண்டமணி, செந்தில் டைப் காமெடி என்று ஒரு பெயர் ஏற்படுத்திய காமெடி இவருடையதுதான். எனக்குத் தெரிந்து வடிவேலு, விவேக் காலம் வரை இவருடைய நகைச்சுவை தொடர்ந்துகொண்டிருந்தது.
இவருடைய நகைச்சுவை படம் நெடுக்க தொடர்புடைய நகைச்சுவையாக இருக்கும். அங்கங்கே தனித்தனியாகக் கட்டித் தொங்கவிட்ட சிரிப்புத் தோரணமாக இருக்காது. ஒரு படத்தில் கவுண்டமணி மரத்துக்கு மரம் சாமி படம் போட்டு உண்டியல் கட்டி தினமும் அலுவலகம் வருகிற மாதிரி வந்து கலெக்ஷன் செய்துகொண்டு போவார். முதலில் நடந்து வருவார். பிறகு சைக்கிள், டி.வி.எஸ். 50 என்று கடைசியில் காரில் வந்து கலெக்ட் செய்வதுவரை போகும் அந்த காமெடி. மெல்லிய சமூக அங்கதம் கலந்த அவை படம் ஆரம்பித்ததும் ஆரம்பித்து படம் முடிவதற்கு சற்று முன்பு வரை நம்மை தொடர்ச்சியாக பங்கெடுத்துச் சிரிக்க வைக்கும்.
ருத்ரதாண்டவம் என்ற படம் இவர் கதை வசனத்தில் வெளியான மிகவும் முக்கியமான படம். கடவுள் பூமிக்கு வந்து அவருடைய பார்வையில் சமூகப் பிரச்சினைகளை அலசியிருப்பார். பொதுவாக அவருடைய எல்லா நகைச்சுவையிலும் சமூகப் பிரச்சினை உருளும். ஒரு படத்தில் கவுண்டமணி தேங்காயில் பாம் வைத்துவிட்டதாகப் புரளி கிளப்பிவிட நாடு முழுக்க தேங்காய்கள் உடைக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாகச் சொல்லியிருப்பார். பணத்துக்கு ஆசைப்பட்டு ஊமையனாக நடிப்பார் ஒரு படத்தில் கவுண்டணி. ஆனால் அவருக்கு இளையராஜாவின் இசையில் பின்னணி பாட வேண்டும் என்பதாக ஆசை இருக்கும். இப்படி நிறைய சொல்லலாம்.
ஒருநாள் காலை வண்ணத்திரை செக்யூரிட்டி ஆபிஸர் என்னைத் தொடர்பு கொண்டு வீரப்பன் என்பவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொன்னபோது நான் இவரை எதிர்பார்க்கவில்லை.
தட்டுத் தடுமாறி அறைக்குள் வந்தார். கைத்தாங்கலாக அவரை ஒருவர் அழைத்துவந்திருந்தார். முள்ளென முளைத்திருந்த சிறிய தாடியினாலும் பார்வை தெரியாதவராக இருந்ததாலும் அவரை சட்டென நான் அடையாளம் காண முடியவில்லை. உடன் வந்தவர்தான் அறிமுகம் செய்தார். எத்தனையோ காமெடி நடிகர்களை ஆளாக்கிவிட்ட இவரை இப்போது யாரும் கண்டுகொள்வதே இல்லை என்று உடன் வந்தவர் வருந்தினார்.
ஏ.வீரப்பன் கையை உயர்த்தி "இருக்கட்டும் இருக்கட்டும் அதனாலென்ன?' என்பது போல சைகையால் சொன்னார்.
"உங்கள் பத்திரிகையில் ஏதாவது காமெடி தொடர் எழுத முடியுமா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் வந்தேன்'' என்றார்.
"தாராளமாக எழுதுங்கள்'' என்றேன்.
"நான்கு சேப்டர் எழுதி அனுப்புகிறேன். பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்'' சினிமாவில் கிடைக்கும் சம்பாத்தியம் போல பத்திரிகையில் கிடைக்காது. அவர் ஒரு படத்துக்கு எழுதுவதை அவர் ஒருவருடமெல்லாம் பத்திரிகையில் எழுதினாலும் சம்பாதிக்க முடியாது என்பதைத் தெரிவித்தேன்.
"அது தெரியும்'' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். மனசு நகைச்சுவைக்கு இடம் தருவதாக இருந்தாலும் வயது இடம் தராத நிலைமை அவருக்கு. பார்வையில்லாமல் தடுமாற்ற நடையில் இன்னொருவர் துணையோடு நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய நகைச்சுவையின் முகம் மாறிப்போய்விட்டதை உணர முடிந்தது.
அவர் போன பிறகு அலுவலக ஊழியர்கள் யார் அவர் என்று விசாரித்தார்கள். அவரைப் பற்றிச் சொன்னேன்.
"அவரா இவரு?'' என்று ஒருவர் ஆச்சர்யப்பட்டார்.
இன்னொருவர் வாழைப்பழ காமெடியின் தொனியிலேயே "அவர்தாம்பா இவரு'' என்றார். எல்லோரும் சிரித்தனர்.
நகைச்சுவை என்பது இன்னொருவரை செல்லமாகப் புண்படுத்துவது என்று சொல்லுவார்கள். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிரிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்தவர் இன்று இன்னொருவர் கைத்தாங்கலாக வந்து வாய்ப்பு கேட்டபோது வருத்தமாக இருந்தது. நான் சிரிக்கவில்லை.

திங்கள், ஆகஸ்ட் 24, 2009

அப்பா தந்த அதிர்ச்சி!!



இளம்பிராயத்தைக் கிராமத்தில் கழித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படிச் சொல்வது கொஞ்சம் பழமையான உதாரணமாக இருக்கலாம். ஆனாலும் அந்தச் சொர்க்க வாழ்க்கையை விவரிப்பதற்கு வேறு வார்த்தையில்லை.
பிரேம் சந்த் சிறுகதைகள் என்ற இந்த சாகித்ய அகாதமி வெளியீட்டில் 8 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவருடைய மிகச் சிறந்த கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. அவருடைய பிரபலமான சிறுகதைகள் பட்டியலில் இதில் உள்ள மூன்று கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


உத்திரபிரதேச மாநிலத்தில் கிராமம் ஒன்றில் பிறந்த இவர் இந்தியிலும் உருதிலும் சேர்த்து சுமார் 300 சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.இந்த 8 கதைகளில் அடிநாதமாக ஓர் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக எல்லாக் கதையிலும் கிராமம் இருக்கிறது. அதில் ஒரு சிறுவன் இருக்கிறான்.
உண்மையும், இரக்க குணமும், விளையாட்டு குணமும் கொண்ட அவர்களில் பிரேம் சந்த் ஒளிந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்தச் சிறுவர்கள் மூலமாக அவர் தன் கடந்து போன ஞாபகங்களை மறு பிரதி எடுப்பது நன்றாகத் தெரிகிறது. அதை தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கிறது.. ஏனென்றால் முழு கற்பனாவாதக் கதைக்கும் பழம் நினைவுகளைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்வதற்கும் தெளிவான வித்தியாசம் இருக்கிறது.


பிரேம்சந்த் கிட்டிப்புள் மீது பைத்தியமாக இருந்திருக்க வேண்டும். இந்த எல்லா கதைகளிலும் ஒரு எசிறுவன் கிட்டிப்புள் விளையாடுகிறான். போதாததற்குக் கிட்டிப்புள் என்றே ஒரு சிறுகதையும் இதில் இருக்கிறது.சிறுவயதில் மிகப் பிரமாதமாகக் கிட்டிப்புள் ஆடுகிறான் இவரைவிட வயதில் மூத்த இவருடைய கிட்டிப்புள் தோழன். அந்த விளையாட்டில் புள்ளை அடிப்பதில்தான் சுவாரஸ்யம். எதிரில் நின்று அதைப் பிடிப்பதில் அத்தனை ஈர்ப்பு இருக்காது. பிடிப்பது அத்தனை எளிதானதும் இல்லை. ஆனால் பிரேம் சந்துக்கு கிட்டிப்புள் அடிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிராளி தோற்பதாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில் பிரேம் சந்த் தன்னை வீட்டில் திட்டுவார்கள் கிளம்புறேன்.. என்று நழுவப் பார்க்கிறார். எதிராளி விடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் அழ ஆரம்பிக்கிறார்.விளையாட்டில் போட்டி போட முடியாமல் அழுவது கேவலமான விஷயம்தான். ஆனால் பிரேம் சந்த்துக்கு வேறு வழி தெரியவில்லை. அழுது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்.


அப்பாவின் வேலை நிமித்தம் ஊரை விட்டுச் சென்று விடும் அவர், பின்னாளில் பெரும் பதவியோடு அந்த ஊருக்கு வருகிறார். அன்று தன்னை விளையாட்டில்அழ வைத்த அந்தத் தோழனை அழைத்து இப்போது கிட்டிப்புள் ஆட ச் சொல்கிறார். காலம் அவனை வயதால் மூத்தவனாகவே வைத்திருக்கிறதே தவிர வறுமையால் இறக்கி வைத்திருக்கிறது. ஐயா அப்போது ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன் என்கிறான் அவன். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று தவிர்க்கிறான். கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று ஊருக்கு வெளியே வெட்ட வெளியில் ஆட்டம் தொடங்குகிறது. புள், கிட்டியில் பட்டாலும் "இல்லை அது ஏதோ கல்லில் பட்டு சப்தம் கேட்கிறது' என்பது போல அவனாகவே தோற்றுப் போகிறான். அவன் வேண்டுமென்றே தோற்றது தெரிந்ததும் பிரேம் சந்த் மிகவும் வருந்துகிறார். அவன் தோற்றதன் மூலம் தன்னை வெற்றி கொண்டு விட்டான் என்று முடிகிறது கதை.


கிட்டிப்புள் மீது அவருக்கு இருந்த ஆர்வம் எல்லா கதைகளிலும் தெரிகிறது. அண்ணாச்சி என்ற அவருடைய புகழ் பெற்ற கதை இதில் இடம் பெற்றிருக்கிறது. அண்ணன், தம்பி இருவரும் ஒரு அறை எடுத்துத் தங்கிப் படிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணன் தினமும் தம்பிக்கு அறிவுரை சொன்னபடியே இருக்கிறான். படிப்பது அத்தனை சுலபமான விஷயமில்லை. வரலாற்றில் ஒரே மாதிரி பெயர்கள் பல இருக்கும். பல அரசர்களுக்குப் பெயர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ ஹென்றி ஓன்று, ஹென்றி இரண்டு என்றெல்லாம் பெயர் வைத்திருப்பார்கள் .. கணக்கு அத்தனை சுலபமானதல்ல... எந்த நாடு எங்கே இருக்கிறது என்பதை மனப்பாடம் செய்வது கஷ்டமானது ... இப்படியெல்லாம் சொல்கிறான். ஆனால் அந்த ஆண்டு அண்ணன் பெயில் ஆகிறான். தம்பி பாஸ்.ஒரு தடவை பாஸ் ஆகிவிடுவது சுலபம். இதை வைத்துக் கொண்டு மனப்பால் குடிக்காதே.. எப்போது பார்த்தாலும் கிட்டிப்புள் ஆடுவதை நிறுத்து என்று அறிவுரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அடுத்த ஆண்டும் அண்ணன் தேர்ச்சி பெற முடியவில்லை. விளையாட்டுத் தம்பி பாஸ் ஆகிறான். இப்போதும் அண்ணன் அறிவுரை சொல்கிறான். நான் அறிவுரை சொல்வது உனக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் அப்பா நமக்காக பணம் அனுப்பிப் படிக்கவைக்கிறார். நாம் பொறுப்பில்லாமல் இருப்பது சரியா என்கிறான். அண்ணன் தொனி மாறுகிறது. அண்ணன் மீண்டும் பின் தங்குகிறான். இறுதியில் பள்ளிப் படிப்பை விட அனுபவப் படிப்புதான் முக்கியம் என்கிறான் அண்ணன். மிக அருமையான உரையாடல் மூலம் நகர்த்தப்பட்டிருக்கும் இந்தக் கதையின் முரண் முடிச்சு.. வாழ்க்கையில் முன்னெச்சரிக்கை என நாம் நினைப்பது கவிழ்த்து விடுவதும் அலட்சியமாக இருந்தவன் முன்னேறிச் செல்வதும் மட்டுமல்ல. சறுக்கல்கள் மூலமாக அறிவுரையின் தொனியில் ஏற்படும் மாற்றமும்தான்.


வீட்டு நாய்கள் எஜமானர்கள் முன்னால் எடுத்துக் கொள்ளும் உரிமையும் தைரியமும் அவர்களை விட்டுப் பிரிந்து விட்டபோது பலவீனமாகிவிடுவதை, ஒரு விசுவாசமான ஊழியனின் மனப்பாங்குக்கு ஒப்பிடுகிற கஜாகி சிறுகதை மனதைத் தொடுகிறது.


ராம லீலா சிறுகதை... அந்தக் காலத்திலும் ஊழலுக்கான அம்சங்கள் இருந்ததைச் சொல்லும் ஒரு ஆவணம். ஊரே பல் இளிக்கும் கணிகையிடம் தன் தந்தை கம்பீரமாக நடந்து கொள்வார் என்று எதிர் பார்க்கும் சிறுவனின் தலையில் இடி விழும் அந்தக் காட்சி சிறுவனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி வேதனையானது. போலீஸ் வேலை பார்க்கும் சிறுவனின் தந்தை எந்த விஷயத்தையும் மிடுக்குடன் எதிர் கொள்பவர். ஆனால் அந்தக் கணிகை, திருவிழாவில் அவரை வருடிச் செல்லும் போது அசட்டுத்தனமாக சிரிப்பது அந்தச் சிறுவனுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது. வறிய பிச்சைக்காரர்களுக்குக் காசு தருவதற்கு கண்டிப்பு காட்டும் அவர், அந்தப் பெண்ணுக்குப் பளிச்சென்று 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகிறார்... இதில் உள்ள எல்லா கதைகளும் சிறுவர்களின் பார்வையில் இருந்து எழுதப்பட்டிருப்பது வியப்பான ஒற்றுமை. கதையின் எளிமையும், அது தரும் மன அதிர்வுகளும் எதிர்ப்பார்க்க முடியாத இரண்டு துருவங்களாக இருக்கின்றன.


பிரேம்சந்த்தின் சிறந்த கதைகள்,

முதல் தொகுதி சாகத்திய அகாதமி வெளியீடு

தமிழில் : என். ஸ்ரீதரன்,சி.ஐ.டி. வளாகம்,

தரமணி,

சென்னை-

விலை: 50

ஒரு தூக்கு மேடை குறிப்பு



கலைஞரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார் அந்தப் பெரியவர். பார்வைக் கணிப்பிலேயே 80 வயதை மதிப்பிட முடிந்தது. முரசொலி அலுவலகத்தில் அன்று கலைஞரைப் பார்க்க நிறைய பேர் வந்திருந்தார்கள். பெரியவரால் கலைஞரைப் பார்க்க முடியவில்லை. கலைஞர் கார் கிளம்பும்போது எப்படியும் அவர் தம்மைக் கவனித்துவிடுவார் என்ற அவருடைய நம்பிக்கையும் வீணாகிவிட்டது. மற்றவர்கள் போல காரின் கதவுப் பக்கம் ஓடித் தங்கள் முகத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளும் சாகஸம் எதுவும் அவரிடம் இல்லை. கார் கிளம்பியதும் சோர்ந்து நின்றுவிட்டார்.

அவரை அணுகி பேச்சுக் கொடுத்தேன். "பரவால்ல பட்ட கஷ்டத்துக்கு இப்ப வசதியா இருக்குது.. அது போதும். பாவம் இந்த வயசிலயும் ஓயாத வேலை இதுக்குது அதுக்கு'' என்றார். இதுக்கு, அதுக்கு என்று அவர் சொல்வது கலைஞரை என்பது தெரிந்ததும் ஒருவித அச்சம் வியாபித்து, என் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

அவர் பெயர் பாஸ்கர். எம்.ஆர்.ராதா நாடக கம்பெனியில் வேலை பார்த்தவர்.
"திருச்சில அண்ணாவோட வேலைக்காரி நாடகம் நடக்கும்போதுதான்.. இதோட தூக்குமேடை நாடகமும் நடந்தது. அண்ணா நாடகத்துக்கு ‘அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி'ன்னு விளம்பரம் பண்ணியிருந்தாங்க.. நாங்க ‘கருணாநிதியின் தூக்குமேடை'னு போட்டிருந்தோம். அன்னைக்கு காலீல எனக்கு ஒரு யோசனை.. அனாவுக்கு அனாவா போட்டதுமாதிரி நாம க'னாவுக்கு க'னா போட்டு "கலைஞர் கருணாநிதி'னு போட்டா என்னனு ராதாண்ணகிட்ட கேட்டேன். அண்ணன் சரிடான்னுட்டாரு.. நான்தான் மொத மொதல்ல சாக்பீஸ்ல இவரை கலைஞர் கருணாநிதினு எழுதினேன்.. ராதா அண்ணனும் இவரை மேடைக்கு வரவழைச்சு கலைஞர்னு சொன்னாரு. என்னை நல்லா தெரியும்.. அதான் ஒருவாட்டி பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்.''

உண்மையா, உயர்வு நவிற்சியா என்ற சந்தேகம் வரவில்லை. ஏனென்றால் அவர் பேசும் தொனி உண்மைக்கு நெருக்கமானதாக இருந்தது. ஒல்லியாக இளம்பிராயத்தில் ஓடியாடி உழைத்தவராகத் தோன்றினார். சுறுசுறுப்பின் மிச்சம் அவருடைய நடுக்கம் நிறைந்த வேகத்தில் வெளிப்பட்டது.
"என்னைப் பார்த்துட்டா வுடவே வுடாது.. எம் மேல அவ்ளோ பிரியம்.. ''
வீட்டில் இவர் சொல்வதை நம்புபவர்களாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. கலைஞரின் நண்பர் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்திருக்கலாம். முதுமையின் அலைபாயலில் தொலைந்த நட்பைப் புதுப்பிக்க நினைத்திருக்கலாம். ஞாபகம் வைத்திருக்கிறாரா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிற ஆசையாக இருந்திருக்கலாம். ஏதோ உதவி தேவைப்பட்டிருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவரையும் கலைஞரையும் சந்திக்க வைக்க ஆசைப்பட்டேன். என்னுடைய யூகங்களில் எது சரியானது என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வம்.

இன்னொரு முறை வாருங்கள் எப்படியாவது சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பினேன். அவர் இன்னொரு முறை வந்த போது கலைஞர் முரசொலிக்கு வரவில்லை. இன்னொரு முறை போன் செய்துவிட்டு வாருங்கள் என்றேன்.

அதன் பிறகு அவர் அங்கு வரவில்லை. எங்கள் குங்குமம் பிரிவை மயிலாப்பூர் தினகரனுக்கு மாற்றிவிட்டார்கள். எனக்கு வேறு அலுவலக முகவரியும் வேறு தொலைபேசி எண்ணும் அமைந்தது. அவர் என்னைத் தேடியிருப்பாரா... கலைஞரைச் சந்தித்தாரா? வீட்டில் நம்பாமலேயே போய்விட்டார்களா? கலைஞரைச் சந்திக்க வருகிற எத்தனையோ தொண்டர் குவியல்களில் இந்த மாதிரி ஆதாயம் கோராத பல கொடி மரத்து வேர்கள் உண்டு. அவர்களின் எல்லா கதைகளையும் கேட்க நேரம் இருப்பதில்லை.

எல்லோருக்கும் வேறு இடங்களில் வேறு கதைகள் காத்துக் கொண்டே இருக்கின்றன.

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

டைரக்டர் ஷங்கருக்கு நண்பராகாதவர் பற்றிய குறிப்பு


நண்பர்கள் தினத்தன்று சுமார் 40 எஸ்.எம்.எஸ்.கள். என்னுடைய நண்பர் கோவர்தனை நினைத்துக் கொண்டேன். அவர் அந்த நாளில் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
நாள்கள்- நிகழ்வுகள் சார்ந்து அவர் பேசுவதும் இல்லை. ஒரு நாள் பஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து படப்பைக்குப் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போது போன திங்கள் கிழமை ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என்று கேட்டேன். அவர் ""ஓ சாரி.. எனக்கு கல்யாணம் நடைபெற்றதால் வரமுடியவில்லை'' என்றார். அதிர்ச்சி ஒரு நண்பர் இப்படியும்கூட செய்வாரா என. ஆனால் அந்த அதிர்ச்சியை அவர் அடுத்த வினாடியே போக்கிவிட்டார், இன்னொரு அதிர்ச்சியின் மூலமாக. "இன்னும் அண்ணனுக்குக்கூட சொல்லலை'' என்றார். அவருடைய அண்ணன் எங்கள் இருக்கைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அதாவது நாங்கள் அவருடைய அண்ணன் தலைக்கு மேலே இருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு இதைப் பேசிக் கொண்டிருந்தோம். எதையும் ஏற்றுக் கொள்ளும்விதமாகச் சொல்லுவதில் வல்லவர். முற்போக்கான சிந்தனைகள் உள்ளவர்.
இத்தகைய லெளகீக சமாசாரங்களுக்கு அவர் அதற்கு மேல் முக்கியத்துவம் தராதவராக இருந்தார். ஒரே ஒரு பையன் உண்டு. எட்டு வயசு. ஒரு தடவை போன் செய்த போது, அவருடைய மனைவி போனை எடுத்தார். "பையனை தூக்கிக் கொண்டு கடைக்குப் போயிருக்கிறார்'' என்றார்.
"தூக்கிக் கொண்டா? வந்ததும் பேசச் சொல்லுங்கள்.''
போன் வந்தது. "பையனுக்கு இன்னைக்கு லீவா?'' என்றேன்.
"இதுக்குள்ள ஸ்கூலா? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்''
"ஏற்கெனவே படித்துக் கொண்டுதானே இருக்கிறான்? இதுக்குள்ள ஸ்கூலா என்கிறீர்கள்?''
"இந்த மாதிரி விஷயங்கள்தான் மறந்து போகிறது... இவன் இன்னொரு பையன்... போன வருஷம் பிறந்தான்''
இப்படியாக அவர், வீடு மாறினாலோ, போனை மாற்றினாலோ, கார் வாங்கினாலோ, வேலை மாறினாலோ என்னிடம் அதைப்பற்றி ஒரு உடனடி பரிமாற்றமாகப் பகிர்ந்து கொண்டதே இல்லை. அவர் இருப்பது பெங்களூருவில். பார்ப்பதும் பேசுவதும்கூட அரிது.
இதையெல்லாம் புறந்தள்ளி கடந்த இருபத்தைந்தாண்டுகளாக முதல் வரிசை நண்பர் பட்டியலில் அவருக்கு நானும் எனக்கு அவரும் இருப்பது விந்தையாகத்தான் இருக்கும். இடுக்கண் களைவதில் உடுக்கை இழந்தவன் கைபோலத்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். மிக முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ரசனையில் இருந்த ஒற்றுமை எங்களை இணைத்ததாக நினைக்கிறேன். குமுதத்துக்காக எழுதிய டைரக்டர் ஷங்கர் வாழ்க்கைத் தொடரான சங்கர் முதல் ஷங்கர் வரை நூலை அவருக்கு டெடிகேட் செய்திருந்தேன்.
இவரைப் போல
இருக்க முடியவில்லையே என்று
என்னை என்றென்றும் ஏங்க வைக்கும்
நண்பர். இரா. கோவர்தன்
அவர்களுக்கு...
என்று எழுதியிருந்தேன்.
"யார் இவர்'' என்று ஷங்கர் கேட்டார்.
என்னைவிட அவருக்குத்தான் அவர் நன்கு தெரிந்திருக்க வேண்டும். "நீங்கள் சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த அதே 80- 84 ஆண்டில்தான் அவரும் அங்கு படித்தார்'' என்றேன்.
"எப்படி இருப்பார் எனக்கு நினைவு வரவில்லையே'' என்றார். விளக்கிச் சொல்ல முனைந்தேன். அவருக்கு நினைவு வரவில்லை. "அதன் பிறகு நீங்கள் ஹால்டா டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்தீர்களே.. அங்கேதான் அவர் எலக்ரானிக் பிரிவு தலைவராக இருந்தார்'' என்றேன். "அடடா அப்படியா?'' என்றார். அப்போதும் அவருக்கு நினைவு வரவில்லை.
பாலிடெக்னிக்கில் படித்தது, ஹால்டாவில் வேலை பார்த்தது எல்லாவற்றையும் அவர் அந்தத் தொடரில் சொல்லியிருந்தார்.
கோவர்தனுக்கும் ஷங்கரை நினைவு வரவில்லை. இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே கல்லூரியில் படித்ததையும் வேலை பார்த்ததையும் அவர்களுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன். ஆனால் பலனில்லை இருவருக்குமே ஞாபகம் வரவில்லை. இப்போது ஒருமுறை சந்தித்துக் கொள்கிற விருப்பமும் இருவரிடத்திலும் இல்லை.
"பிராமின்கள் நல்லவர்கள் போலவும் நான் பிராமின்ஸ் பலரும் கெட்டவர்கள் போலவும் அவருடைய படத்தில் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அதை அவர் தெரிந்துதான் செய்கிறாரா'' என்று கேட்டார் கோவர்தன்.
ஆங்கிலத்தில் "இப்படியிருந்திருந்தால்களும் ஆனால்களும்..' (ifs and buts) என ஒரு பிரயோகம் உண்டு. யூகமாக சில யோசனைகளை முன் வைப்பதற்காக இதைச் சொல்லுவார்கள். ஷங்கரும் இவரும் கல்லூரி நாள்களிலேயே நண்பர்களாக ஆகியிருந்தால் ஷங்கர் இப்படி ஒரு கேள்விக்கு ஆளாகியிருக்க மாட்டார் என்று நிச்சயமாகத் தோன்றுகிறது.
ஆனால்?

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

என் நூல் வெளியீடு

திரைக்கு பின்னே என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் புத்தகமாக வெளியாகிறது. உயிர்மை வெளியீடு. வெளியீடு விழா அழைப்பு.

உயிர்மை பதிப்பகம் மதுரையில் ஆகஸ்ட் 30, 2009 ஞாயிறு காலை 9.30 மணிக்கு உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழாவினையும் மாபெரும் புத்த்க வெளியீட்டு விழாவினையும் நடத்தவிருக்கிறது. தமிழின் முண்ணனி எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் வெளியிடப்படும் நூல்கள் அனைத்தும் கடந்த ஓராண்டில் உயிரோசையில் எழுதப்பட்ட தொடர்களின் தேர்ந்தெடுக்கபட்ட ஆக்கங்களின் நூல்வடிவமாகும். ஒரு இணைய இதழ் ஓராண்டின் நிறைவில் தான் வெளியிட்ட ஆக்கங்களிலிருந்து பத்து நூல்களை வெளியிடுவது இதுவரை இணைய தளவரலாற்றில் நிகழ்ந்திராத ஒரு சாதனை. முற்றிலும் மாறுபட்ட துறைகளையும் பார்வைகளையும் சார்ந்து இந்த நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இது உயிரோசையில் கடந்த ஓராண்டில் வெளிவந்த ஆக்கங்களில் சிறிய பகுதி மட்டுமே. தொடர்ந்து பல நூல்கள் இந்த வரிசையில் வெளிவர உள்ளன.
இத நிகழ்வில் உயிரோசையின் வாசகர்களை பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் மதுரை புத்தக கண்காட்சி வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை மதுரையில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் மாலை வேலைகளில் சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், எம்.யுவன், சுகுமாரன் உள்ளிட்ட எழுத்தாளர்களை சந்தித்து உரையாடலாம்.
புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் உயிர்மை-உயிரோசை வாசகர்கள் எல்லா நாட்களிலும் என்னை மதுரையில் சந்திக்கலாம்.
எனது தொடர்பு எண்: 9444366704
நிகழ்ச்சி நிரல்
மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

நாள்: 30.8.20009, ஞாயிறு காலை 9.30 மணி
இடம்: ஹோட்டல் சுப்ரீம்

110. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
மதுரை-625001
முதல் அமர்வு

நூல் வெளியீட்டு விழா

தலைமை: கே.வைத்தியநாதன்ஆசிரியர், தினமணி
1. கடலில் ஒரு துளி ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை: தமிழவன்
2. கிராமத்து தெருக்களின் வழியேஆசிரியர்: ந.முருகேசபாண்டியன்
கருத்துரை: சுந்தர் காளி
3. இடம்-காலம்-சொல்ஆசிரியர்: இந்திரஜித்
கருத்துரை: சமயவேல்
4. வேறு வேறு உலகங்கள்ஆசிரியர்:அ.ராமசாமி
கருத்துரை: சுரேஷ்குமார இந்திரஜித்
5. செல்லுலாயிட் சித்திரங்கள்ஆசிரியர்: தமிழ்மகன்
கருத்துரை: நடிகர் சண்முகராஜா
6. தெய்வங்கள் எழுகஆசிரியர்: வாஸந்தி
கருத்துரை: மனோஜ்
7. இன்னும் மிச்சமிருக்கும் இருள்ஆசிரியர்: மாயா
கருத்துரை: அ.ராமசாமி
8. தமிழுணர்வின் வரைபடம்ஆசிரியர்: தமிழவன்
கருத்துரை. ந.முருகேச பாண்டியன்
9. இன்றிரவு நிலவின் கீழ்நூறு நவீன ஹைக்கூ கவிஞர்கள்தமிழில்: ஆர். அபிலாஷ்
கருத்துரை: யுவன் சந்திர சேகர்
10. சினிமாவின் மூன்று முகங்கள்ஆசிரியர்: சுதேசமித்திரன்
கருத்துரை: சுகுமாரன்
இரண்டாம் அமர்வு
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்
உயிரோசையை முன் வைத்து



சிறப்புரைகள்
சாருநிவேதிதா
எஸ்.ராமகிருஷ்ணன்

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

சாருலதாவின் உலகம்!


நாம் யாரும் தனிமைச் சிறையில் அகப்பட்டுக் கிடக்கவில்லை. திசை மாறிச் சென்று ஏதோ தீவில் தரைதட்டி தனிமையில் வாழ நேரவில்லை. ஆனால் தனிமை வாட்டுவதாக வருந்தாத மனிதர்கள் உலகில் எத்தனை பேர்? சரியாகச் சொல்லப் போனால் இந்த 600 கோடி பேருமே ஏதாவது ஒரு தருணத்தில் தனிமையால் வாடியதாகப் புலம்பியிருக்கிறார்கள். தனிமை என்பது என்ன? உலகில் இருக்கும் 600 கோடி பேரில் நம்மைப் புரிந்து கொண்ட ஒருத்தரும் அமையாமல் தவிப்பதுதான். அப்படி இருக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் அப்படி அமைந்துவிடும் நினைத்துப் பார்க்க முடியாத தருணங்களால் ஆனதுதாக இருக்கிறது வாழ்க்கை.

தேர்ந்த இணை என்பது உடலின் தனித்து இயங்கும் இன்னொரு பகுதியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் இணையை வாழ்நாளெல்லாம் தேடித் தேடிச் சோர்ந்து போகிறார்கள். எல்லா அம்சங்களிலும் ஒத்துப் போகிற ஒரு இணை, ஒரு சகா, அந்த மறு பாதியை அடைய முடியாமலேயே போராடித் தோற்றுக் கொண்டிருப்பதாகப்படுகிறது. மனிதன் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து காதல் காவியம் படைத்தபடி இருக்கிறான். அணையாத தீபமாக மனித இனத்தின் கடைசி கட்டம் வரை இந்த நெருப்பு சுடர்விட்டபடி இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் முழுமையான அந்த இணை, காலம் தோறும் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டே இருக்கிறது. தனிமை கொடியது. அதுவும் இளம் பருவத்தில் தனிமையில் வாடுவது வற்றிய ஓடையில் இருந்தபடி மழைக்காக ஏங்கும் மீனின் நிலைமைக்குச் சமம்.

சென்ற நூற்றாண்டின் முதல் ஆண்டில் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய சிறிய நாவல் சிதைந்த கூடு.

இளம் மணப் பெண் சாருலதா. அவளுடைய கணவன் பூபதி பத்திரிகை நடத்துவதில் பித்து பிடித்தவனாக இருக்கிறான். யாராவது அவனுடைய எழுத்துகளைப் பாராட்டி அவன் தொடர்ந்து பத்திரிகையாளனாக இருக்கும்படியாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள். மனைவியின் தனிமையை அவன் உணர்ந்தானில்லை. யாரோ சுட்டிக் காட்டும்போதுதான் அதை அவன் நினைத்துப் பார்க்கிறான். உடனே தன் உறவினன் ஒருவனை அவனுடைய மனைவி சகிதம் தன் வீட்டில் வந்து தங்கியிருக்க ஏற்பாடு செய்கிறான். ஆனால் வந்து தங்கும் உமாபதியும் அவன் மனைவி மந்தாகினியும் பவுதீக ஆதாரமாக இருக்கிறார்களே தவிர மனோரீதியான பரிவாக தோன்றவில்லை.

காலப் போக்கில் உமாபதி பத்திரிகை சந்தா போன்ற விஷயங்களில் ஊழல் செய்து பூபதிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துபவனாக இருக்கிறான். மந்தாகினி சாருலதாவுக்கு ஏற்படுத்தும் மனோரீதியான நஷ்டம்தான் கதையின் உயிர்.

பூபதிக்கு அமல் என்ற தம்பி இருக்கிறான். சாருலதாவும் அமலும் போட்டி போட்டுக் கொண்டு கட்டுரைகள் எழுதுகிறார்கள். அதை ஒருவரிடம் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் வெட்கம் ததும்பும் தருணங்கள் சுவையானவை. வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் அமர்ந்து அந்தத் தோட்டத்தை எப்படி புதிதாக வடிவமைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். எங்கே குளம் வெட்ட வேண்டும்.. எங்கே படகு நிறுத்த வேண்டும். எங்கே என்னென்ன மரங்கள் நட வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுகிறார்கள். சிறிய சப்போட்டா மரத்தின் நிழலில் அமர்ந்து அவர்கள் உலவும் கற்பனை உலகம் அவர்களுக்கு மட்டுமே ஆனது.

ஆனால் மந்தாகினி வந்த பின்பு இருவர் மட்டுமே இருந்த அந்த உலகில் மூன்றாவது நபரின் இடையூறு ஏற்படுகிறது. அமல், மந்தாகினியிடமும் பேசுகிறான். அது சாருலதாவுக்குப் பிடிக்கவே இல்லை. பொஸஸிவ்னஸ் அவர்களுக்குள் மெல்லிய இடைவெளியை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் வரிசல் அவளை விபரீத கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. மந்தாகினியும் அமலும் தவறாகப் பழகுகிறார்களோ என்றும் எண்ணுகிறாள். அளவுக்கு மீறிய அன்பின் குரூரம் அது. அவளுடைய மன உலகம் அமலனிடமிருந்து மெல்ல நழுவுகிறது. அண்ணன், தன்னையும் சாருலதாவையும் சேர்த்துச் சந்தேகிப்போரோ என்று வருந்துகிறான் அமலன். அண்ணனை எதிர் கொள்ள முடியாமல் குற்ற உணர்வுடன் தயங்கி விலகுகிறான். பூபதி, சாருலதா, அமலன், மந்தாகினி என்ற நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமலேயே நான்குவிதமான கருத்துகள் உருவாகி நால்வரையும் அலைக்கழிக்கிறது.

அதிகம் பாதிக்கப்படுவது சாருலதா. அவளுக்குக் கணவன், மந்தாகினி, அமல் எல்லோர் மீது ம் வெறுப்பு கவ்வுகிறது. உமாபதியின் ஊழல் காரணமாக அவனும் மந்தாகினியும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். அமல் கல்யாணம் நிச்சயமாகி, இங்கிலாந்துக்குப் படிக்கப் போய்விடுகிறான். பத்திரிகை தொழில் நசிந்த நிலையில் பூபதி மைசூரில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியனாகக் கிளம்புகிறான்.

நாவலின் கடைசி காட்சி..

மைசூருக்கு நீ வேண்டாம் அங்கு உனக்கு தனிமையாக இருக்கும் என்கிறான் பூபதி. சாருலதா எங்கே இருந்தால் தனிமை என்று வாசகர்களே குழம்பும் விசித்திர கட்டம்.

நானும் வருகிறேன் என்கிறாள் சாருலதா. ஏற்கெனவே தனிமைகள் தந்த வடு அப்படிச் சொல்ல வைக்கிறது.

கொஞ்சம் யோசித்து பூபதி சரி நீயும் வா என்கிறான்.

அவளுக்குத் தனிமையை எங்கு அனுபவித்தால் என்ன என்ற கண நேர யோசனை.

நான் இங்கேயே இருந்துவிடுகிறேன் என்கிறாள்.

கதை முடிந்துவிடுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாகூர் இந்த நாவலை எழுதியிருக்கிறார். சாருலதாவின் தனிமையும் மனப் போராட்டங்களும் மைத்துனனான இனிமையான கனவு நாள்களும் மிக எளிமையாக விவரித்திருக்கிறார். எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் மொழியாக்கம் இருபதாம் நூற்றாண்டின் செல்வந்தர் குடும்பத்துப் பெண்ணின் சூழலை வடித்துக் காட்டுவதாக இருக்கிறது.

சத்யஜித் ரே இக் கதையில் சில மாற்றங்களுடன் சாருலதா என்ற பெயரில் படமாக எடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி இந்தியப் பெண்களின் புரிந்து கொள்ளப்படாத பக்கங்களை இந்த நாவல் படம் பிடித்தது. அதை ரே திரைப்படமாக அலங்கரித்தார்.

சிதைந்த கூடு
ரவீந்திரநாத் தாகூர்
தமிழில் : திலகவதி
விலை 60

அம்ருதா பதிப்பகம்,
5, ஐந்தாவது தெரு,
எஸ்.எஸ்.அவின்யூ,
சக்தி நகர், போரூர்,
சென்னை
போன்- 2252 2277

வியாழன், ஆகஸ்ட் 13, 2009

அண்டை நாட்டில்... அடிக்கிறார்கள்

அமெரிக்காவில் இந்தியர்கள் சிலரைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது நினைவிருக்கலாம். இந்திய அரசாங்கம் உடனடியாக கண்டனம் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை அடித்த அடியில் இந்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அனுப்பி விசாரித்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் கொத்தடிமையாக இந்தியர்கள் பலர் நடத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. மீட்புக்குழு அனுப்பி வைக்கப்படுகிறது.

"இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருப்பது இதிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால் அவர்கள் இந்தியர்கள் இல்லை, இது அண்டை நாட்டில் வசிக்கும் இரண்டு இனத்தவரின் பிரச்சினை' என்று சுலபமாகக் கை கழுவிவிட முடிகிறது. அவர்கள் அண்டை நாட்டவர்கள் என்பது முதல் இந்திய பிரதமர் நேருவுக்கும் அதன் பின்னர் வந்த இந்திரா காந்திக்கும் தெரியாமல் போய்விட்டது . அவர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தினம் நூறு மார்வாடியையோ, தினம் நூறு பஞ்சாபியரையோ வெளிநாட்டில் கொன்று கொண்டிருந்தால் இந்தியா இப்படி வெளிநாட்டுப் பிரச்சினை என்று இருந்துவிடக் கூடாது என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கும்.

ஏனென்றால் ஒருமைப்பாடு குறித்து தமிழர்களுக்கு இயல்பாகவே நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. "யாவரும் கேளிர்' பாடிய காலத்திலிருந்தே இதற்கு உதாரணங்கள் சொல்ல முடியும். இப்போதும் திருவள்ளுவருக்கு சிலை வைக்க பெங்களூருவில் எதிர்ப்பு.18 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு பலத்த பாதுகாப்போடு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கே சர்வக்ஞர் சிலை மகிழ்ச்சியாக திறக்கப்பட இருக்கிறது.

ஆக, இப்போது சொல்ல வருகிற விஷயம் அண்டை நாட்டினர் பற்றியல்ல, இந்தியர்களைப் பற்றியதுதான். அதாவது வெளிநாட்டில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது பற்றி.

பிரான்ஸில் நாகரத்தினம் கிருஷ்ணா சென்னை வந்திருந்தார். அமுதசுரபி மாத இதழின் சார்பில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு.

ஏன் பல நாடுகளிலும் வேலை பார்க்கப் போயிருக்கும் இந்தியர்களை வெளிநாட்டினர் உருட்டுக் கட்டையால் அடிக்கிறார்கள் என்று அவருடைய ஒரு பதிலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியர்கள் பொதுவாக சகிப்புத் தன்மை மிக்கவர்களாக இருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். நன்றாக உழைக்கிறார்கள்.. அதுதான் வெளிநாட்டினரின் ஆத்திரத்துக்குக் காரணம்.

முதலாவது இங்கிருந்து செல்கிறவர்கள் உழைத்துச் சம்பாத்து ஊருக்குள் செல்வச் செழிப்போடு வாழ ஆசைப்படுகிறார்கள். அதனால், கிடைத்த வெளிநாட்டு வேலையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். எட்டு மணி நேரத்தைக் கடந்து.. சிலர் 12 மணி நேரம்கூட வஞ்சனை இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

இரண்டாவது, விடுமுறை நாள்களில் வரச் சொன்னாலும் வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுற்றுலா மாதங்கள். பலர் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் அல்லது உலகம் சுற்றுகிறார்கள். நம்மவர்களில் பலர் அவர்களின் சுற்றுலா மாதங்களில் பணியாற்றுவதால் நிறைய சம்பளம் ஈட்ட முடிகிற மகிழ்ச்சி. விடுப்பு எடுப்பதில்லை.

எனது பள்ளி நாள்களில் பட்டை அடித்து, தலை மொழுகி வாரி, சுத்தமான கையெழுத்தில் வீட்டுப் பாடங்கள் முடித்து, நல்ல மதிப்பெண்ணும் வாங்கிவிடும் மாணவர்கள் சிலர் இருப்பார்கள். இது போதாதென்று விடுமுறை நாளில் வாத்தியார் வீட்டுக்கும் போய் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். வகுப்பில் சுமாரான பையன்களின் எண்ணிக்கைதான் எப்போதும் பெரும்பான்மையாக இருக்கும். அவர்களுக்கு வாத்தியார் அடித்தால் அவர் மீது ஏற்படும் கோபத்தைவிட அந்தப் பட்டை போட்ட பையன் மீது கோபம் அதிகமாக இருக்கும். அவன்தான் நம்மை மாட்டிவிடுகிறவன் என்கிற சந்தேகமும் சேர்ந்து கொண்டால் ஆத்திரம் வலுக்கும். சென்னையில் ""டேய் டாபர் மாமா'' என்பார்கள்.

அதுதான் நடக்கிறது இப்போது வெளிநாடுகளில். உண்மையில் நாம் உழைக்கிறோம். அளவுக்கு அதிகமாக சிரத்தையுடன் இருக்கிறோம். அதுவே குற்றமாகிவிடுகிறது.

புதன், ஆகஸ்ட் 05, 2009

தமிழ்மகன்: மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

தமிழ்மகன்: மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

ஐ.சிவகுமார்

வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.

இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.

சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.

‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.

தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.

தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85

புத்தகம் பேசுது மார்ச் 2009



செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

மண்ணுளிப் பாம்புகள்!




எங்களூரில் இருந்து சென்னை திரும்புவதற்காக பஸ்ஸýக்குக் காத்திருந்தேன். யூனியன் ஆபிஸ் பக்கம் போடப் பட்டிருந்த கடப்பா கல் திண்டில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். முதல் பார்வையில் அவர்களை இரண்டாம் தடவை பார்க்க வேண்டியிருக்காது என்றுதான் தோன்றியது. ஆனால் என்னுடைய கணிப்பை ஒருவினாடியில் அடித்து நொறுக்கிவிட்டனர். காரணம், அவர்கள் பேச்சு.

"என்னால 80 லட்சம் ரூபா வரைக்கும் வாங்கித் தர முடியும்.. அதுக்கு மேல வம்பு பண்ணாதே'' என்று அ தில் ஒருவர் சொன்னார். என்னதான் இருந்தாலும், தூசி பறக்கும் ஒரு எதிர் வெயிலில் லுங்கியும் கட் பனியனும் போட்டுக் கொண்டு ஒருவர் அந்த வார்த்தையைப் பிரயோகிப்பது அதீதமாகப் பட்டது.

மற்றவர் பிடிவாதமாக ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.




எனக்கு ஆர்வம் தாளவில்லை. நான் ஒட்டுக் கேட்பதனால் அவர்கள் மேற் கொண்டு பேசாமல் நிறுத்திவிடுவார்களா என்ற தயக்கத்தில் அவர்கள் விஷயத்தில் அக்கறை அற்றவனாக நடித்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் சர்வ சாதாரணமாக கோடிகளில் புரண்டு கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியின் பாதரச மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது.

"இந்தா இந்த ஐநூரை வெச்சுக்கோ... நைட்டு நெப்போலியன் அடிச்சுட்டு வண்ணாந்தொறை, ஏரிக்கரை பக்கம் ஒரு ரவுண்டு வா'.. கிடைச்சா ஒரே அமுக்கு. நம்ம மல்லையன் ஒண்ணு புடிச்சுட்டானாமே நிஜமா?'

"அட அது தத்துனூன்டு.. 300 கிராம்கூட இல்ல..''

"மூணு கிலோ இருந்தாத்தான் அந்த விலை..'' அதாவது எண்பது லட்சத்தைச் சொல்கிறார்.




இப்போது என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருப்பது மண்ணுளிப் பாம்பு வியாபாரம் பற்றி. அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் புரியாத சில விஷயங்களையும் இப்போது சேர்த்துவைத்துத் தைத்து விஷயத்தைச் சீராக்கிக் கொண்டேன்.


அவர்களின் வியாபார தலைமையகம் எங்கிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. பொதுவாக அவர்கள் வெளிநாட்டில் மண்ணுளிப் பாம்பை வாங்குகிறார்கள் என்றும் மருந்து தயாரிக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.

இயல்பான ஆர்வத்தோடு அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் இருவருமே இதுவரை எந்த பாம்பையும் வியாபாரம் செய்யவில்லை. அண்ணா நகரில் ஏதோ ஒரு இடத்தில் மண்ணுளிப் பாம்பை வாங்கிக் கொள்ளும் ஒருவர் இருப்பதாகவும் அவர்தான் அதை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். என்ன மருந்து என்று தெரிந்திருக்கவில்லை. "கை தடிமன் இருந்தாத்தான் வாங்கிக்குவாங்களாம்'' என்று அவருடைய கையைக் காட்டினார். ஊரில் சிலர் மண்ணுளிப் பாம்பைப் பிடித்து அது மூன்று கிலோவுக்கு மேல் பெருகுவதற்காகத் தீனி போட்டு வளர்த்து வருவதாகச் சொன்னார்.

ஒரு பாம்பின் விலை ஒரு கோடிக்குப் போகிறதென்றால் அந்தப் பாம்பைக் கொண்டு சென்றவன் அதை வைத்து ஒரு கோடியே ஒரு லட்சமாவது சம்பாதிக்க வேண்டியிருக்கும். அது சாத்தியமா என்று கேட்டேன். அப்படி ஒரு மருந்து தயாரிக்க முடிந்தால் இந்திய அரசாங்கமே தயாரிக்குமே? மண்ணுளிப் பாம்பை இனவிருத்தி செய்வதைவிட்டுவிட்டு அதைக் கொன்று குவிக்க வேண்டியதில்லையே என்பதாக சில கேள்விகளைக் கேட்டேன்.

என்னுடைய அசுவாரஸ்யப்படுத்தும் பேச்சு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. "நாங்க சும்மா பேசிக்குனு இருந்தோம் சார்'' என்று போய்விட்டனர்.

சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத ஒரு தொகையை ஒரு மண்ணுளி பாம்பின் மூலம் அடைய முடியும் என்பது எப்பேர் பட்ட பேராசை? எத்தனை பேர் இதை நம்பி இரவும் பகலும் பாம்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். வதந்திக்கு மட்டும் எப்படி இப்படியொரு வலிமை? எத்தனைபேரின் நம்பிக்கை விரயமாகிறது.. எவ்வளவு பேராசை?

அந்தப் புரளியில் இருந்த பிரம்மாண்டம் ஒரு காரணம். சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் பிரம்மாண்டம். அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.

இந்தமாதிரி கற்பிதங்களை உருவாக்குகிறவன் அயோக்கியனென்றும் அதை நம்புகிறவன் முட்டாளென்றும் வெளிப்படையாகவே தெரிந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin