வியாழன், மார்ச் 03, 2011

பத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்!

தமிழ்ஸ்டுடியோ.காம் -இல் நூல் அறிமுகம்




அரசியல் சதுரங்கம் என்பது நகர்த்தப்படும் காய்கள், வெட்டிச் சாய்க்கப்படும் தலைகள், பெறுகின்ற புள்ளிகள், தவற விட்ட வாய்ப்புகள்... என அது ஒரு விறுவிறுப்பான பயணம்.

வாட்டர் கேட் ஊழல், மிசா, ஜேம்ஸ் பாண்டு படத்தில் கே.ஜி.பி., போபர்ஸ், தற்போதைய 2ஜி நீரா ராடியா வரை அலுப்பு தட்டாத சுவாரஸ்யம் அது. ஷா கமிஷன், சர்க்காரியா கமிஷன், இஸ்மாயில் கமிஷன், பால் கமிஷன் என்று கடந்த அரை நூற்றாண்டுகளுக்குள்தான் எத்தனை விசாரணை கமிட்டிகள்? யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டார்கள்? கமிஷன் என்பது கண்துடைப்பு... கண்ணா மூச்சி... அரசியலில்தான் எத்தனை சகஜங்கள்..?

பத்திரிகையாளர்களாக இருப்பவர்களுக்கு இவை எல்லாவற்றையும் தினமும் கண்காணித்து வரவேண்டிய கட்டாயம். ஒரு நல்ல பத்திரிகையாளன் மகாபாரத கிருஷ்ண பரமாத்மா மாதிரி செயல்பட வேண்டியிருக்கிறது. நடக்கப் போகிற எல்லாவற்றையும் கணித்து (அறிந்து) அதில் தானும் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்.

கொலை சதி தீட்டினார்கள் என்று ஒரு கட்சியின் மீது வழக்கு போட்டுவிட்டு அடுத்த மாதத்திலேயே அவர்களுடன் கூட்டணி பேச அமர்ந்துவிடும் கோமாளித்தனங்களையெல்லாம் பத்திரிகையாளர்கள் கவனித்து வரவேண்டும்.

சில தீவிரமான செய்தியாளர்கள் தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் அது சாரம் இல்லாத சக்கை வாழ்க்கை. குதிரைக்கு முன்னால் கொள்ளு கட்டி வசீகரிப்பதுபோல அதைக் கவ்விப் பிடித்துவிட ஓடியபடியே இருந்து என்ன பயன்?

வெகு சிலர் தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை அவர்கள் எழுதும்போது அது பழங்கதை பேசுவதாக இல்லாமல், சரித்திரத்தின் வசீகரமான இன்னொரு பக்கத்தை விவரிக்கக் கூடியதாக இருக்கும்.

குல்தீப் நய்யார் அத்தகைய பத்திரிகையாளர்களில் ஒருவர்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் துவங்குகிறது இவருடைய பத்திரிகை பணி. தேசம் ரத்தக்களறியான அந்த நேரம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை இந்தியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இவருடைய நேரடி பங்களிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

நேருவுக்குப் பின்: அடுத்த வாரிசு யார்? என இதில் ஒரு பகுதி வருகிறது.

தாய்ச் சமூகம் முளைவிட்ட நாளிலேயே இந்த பதவி மோகம் ஆரம்பித்துவிட்டது. விலங்குகள் மத்தியிலும் பூச்சியினங்களின் மத்தியிலும்கூட தலைவன் தொண்டன் சமாசாரமெல்லாம் இருக்கிறது. தேனிக்கள், எறும்புகள் முதல் யானை சிங்கம் வரையிலும் பார்க்க முடிகிறது.

நேரு இறக்கிறார். இறந்த அன்றே பதவி போட்டி ஆரம்பிக்கிறது. காமராசர்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர். இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தாவை காமராசர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் தலைவரும் தமிழகத்துக்காரர், தானும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று டி.டி.கே. நினைத்திருக்கலாம். காமராசர் அவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து இருந்தது மொரார்ஜியும் சாஸ்திரியும்.

அடுத்து தான் பிரதமர் என்பதில் உறுதியாக இருந்தார் மொரார்ஜி. அவருடைய வீட்டில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம். குல்தீப் நய்யார், மொரார்ஜியை சந்திக்கச் செல்கிறார். அவருடைய ஆதரவாளர்களைப் பார்க்கிறார். அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்து சாஸ்திரியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு யாருமில்லை. அவர் தீவிரமாக யோசித்தபடி நடந்து கொண்டிருக்கிறார் (முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் நடந்து கொண்டே இருப்பது அவருடைய வழக்கம்.)

குல்தீப் அவரைச் சந்திக்க வருவதைப் பார்த்ததும் விரட்டுவதுபோல கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.

இதை அப்படியே மறுநாள் பத்திரிகையில் பதிவு செய்கிறார் குல்தீப் நய்யார்.

மறுநாள் மொரார்ஜிக்கு இருந்த ஆதரவு அப்படியே மாறிவிடுகிறது. நேருவின் சடலம் இருக்கும்போதே மொரார்ஜி இப்படி பதவிக்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மன வேற்றுமை. சாஸ்திரியோ நேருவின் மரணத்தால் மனம் ஒடிந்து தனிமையில் கலங்கியிருப்பதாக அமைந்துவிட்டது அந்தக் கட்டுரை. நாடாளுமன்ற படிக்கட்டில் இறங்கிவரும்போது காமராசர் ரொம்ப நன்றி என்கிறார் குல்தீப்பிடம். எதற்கு என்று அப்போது குல்தீப் நய்யாருக்குப் புரியவேயில்லை. குல்தீப் அவருக்கே தெரியாமல் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டார்.

சாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த அந்தக் கடைசி மணித்துளிகள் நெகிழ்ச்சியானவை. தேசத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக அவருடைய குடும்பத்தினரே அவரை நோகடித்ததையும் அவருடைய மரணத்தில் இன்னமும் சொல்லப்பட்டுவரும் மர்மத்தையும் திரை ஓவியம்போல படம் பிடித்திருக்கிறார் குல்தீப். அவருடைய மரணத்துக்குப் பின் மொரார்ஜியா, இந்திராவா என்ற காலகட்டம்.

ஒவ்வொன்றையும் படிக்கும் போது அவ்வளவு விறுவிறுப்பு மோலோங்குகிறது. மொழி பெயர்ப்பு மதுரை பிரஸ் என்று போடப்பட்டிருக்கிறது. இதை யார் மொழி பெயர்த்திருந்தாலும் இதை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் செய்திருப்பதுதான் அவர்களுடைய மகத்தான சாதனை.

செய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகையாளனுக்கு இருக்கும் தாகத்துக்கு ஒரு உதாரணம் இது:

நேருவுக்குப் பிரியமானவராக இருந்த பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கொய்ரோன் மீது ஊழல் குற்றச்சாட்டு. சாஸ்திரி பிரதமராக இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அறிக்கையை முதலிலேயே பெற்று வெளியிட வேண்டும் என்பது குல்தீப் நய்யாரின் ஸ்கூப் மூளையின் ஆவல். மூன்று மந்திரிகள் கொண்ட குழு அந்த அறிக்கையை ஆராய்வதற்காக அமைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மந்திரியாக நோட்டம் விடுகிறார். கடைசியாக பணிவது அசோக்சென் என்ற மந்திரி. அறிக்கையை ஒருமணி நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன் என்று வாங்கி வருகிறார். அப்போது குல்தீப் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அறிக்கையைப் பிரித்து அங்கு வேலை பார்க்கும் எல்லா டெலி பிரிண்டர்களிடமும் கொடுத்து வேகமாக அறிக்கையின் எல்லா பக்கங்களையும் டைப் செய்துவிடுகிறார். ஆனால் அறிக்கையின் பக்கங்கள் அழுக்காகிவிடுகின்றன.

அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர் அப்போது உணரவில்லை. மறுநாள் பஞ்சாப் முதல்வரைப் பற்றிய விசாரணை அறிக்கை யு.என்.ஐ.யில் வெளியாகிவிடுகிறது. எப்படி கிடைத்தது என்று பிரதமர் தவிக்கிறார். அறிக்கையைக் கொடுத்த மந்திரி அசோக்குக்கு தர்மசங்கடம். மூன்று மந்திரிகளிடம்தான் அறிக்கை நகல் இருக்கிறது. அதில் அசோக்கிடம் இருக்கும் அறிக்கை மட்டும் அழுக்காக இருந்தால் சந்தேகத்துக்கு இடமாகிவிடும்.

குல்தீப் இன்னொரு காரியம் செய்கிறார். மற்ற இருவருடைய கையில் இருக்கும் அறிக்கையை அழுக்காக்கிவிட்டால் ஒருவர் மீது இருக்கும் சந்தேகம் ஒழியும் தமக்கு உதவி செய்த அசோக்கைக் காப்பாற்றிவிடலாம். அறிக்கையை வைத்திருக்கும் இன்னொரு மந்திரி டி.டி.கே. அவருடைய உதவியாளரை குல்தீப்புக்கு நல்ல பழக்கம். அவரைச் சந்தித்து அறிக்கையை வாங்கி படுவேகமாக அழுக்காக்கிவிடுகிறார். இப்போது அறிக்கையை யு.என்.ஐ.க்குக் கொடுத்தது யார் என்பதற்கான சந்தேகம் இரண்டு பேரின் மீது பாயும்... இப்படியாக எத்தனையோ சாகஸங்களைக் கொண்ட அரிய வரலாற்றுப் பதிவாக இருக்கிறது இந்த நூல்.

பதவி என்ற சுவாரஸ்யம் அரசியல்வாதிகளுக்கு... ஸ்கூப் என்ற சுவாரஸ்யம் பத்திரிகையாளனுக்கு இந்த இரண்டும் எதிர் கொள்ளும் புள்ளிதான் இந்த நூல்.

ஸ்கூப்
குல்தீப் நய்யார்,

மதுரை பிரஸ்,
60,பி, கோதண்டராமர் கோவில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 33.
மின்னஞ்சல்: maduraipress@gmail.com

செவ்வாய், மார்ச் 01, 2011

ஒரு கலால் ஆணையரின் கடைசி நிமிடங்கள்!





எஸ்.வி.ராமகிருஷ்ணனை நான் நேரில் பார்த்ததில்லை. இனியும் அது முடியாது.

அது அந்தக் காலம், வைசிராயின் கடைசி நிமிடங்கள் என்ற அவருடைய நூல்கள் மூலமாக அவரை அறிந்திருந்தேன். கல்லூரியில் இயற்பியலை படித்திருந்தாலும் அனுபவரீதியான சரித்திரத் தகவல்களின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தின் மூலமாக இந்த நூல்கள் எனக்குப் பிடித்திருந்தன. வெட்டுப்புலி நாவல் எழுதிய போது அதில் சுதந்திரத்துக்கு முந்தைய இருபது, முப்பது ஆண்டுகள் குறித்து அதில் சில தகவல்களைப் பெற்றேன். இப்போது ஞாபகம் இருப்பது நாற்பதுகளின் மையம் வரை சென்னை லயோலா கல்லூரிக்கு அருகே எலக்ட்ரிக் ரயில்கள் நிற்பதில்லை என்ற தகவல்.

மற்றபடி தினமணியில் ஏதாவது சரித்திரப் பிழைகள் வந்தால் அதை தொலைபேசியில் தெரிவிப்பார். உரிய நபரிடம் அதை தெரிவிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசுவார். செல்போன் சுவிட்ச் ஆஃப் என்பதாலோ யாரும் போனை எடுக்கவில்லை யென்றாலோ விட்டுவிடமாட்டார்.

மறுமுறையும் தொடர்பு கொண்டு, ""நான் நேற்று மாலை 3.38க்கு போன் செய்தேன். நீங்கள் எடுக்கவில்லை. ஒருவேளை வண்டியில் சென்று கொண்டிருந்திருக்கலாம்'' என்பார். அதில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கே உரிய புள்ளிவிவரத் துல்லியம் இருக்கும்.

வெட்டுப்புலியை இவருக்கு அனுப்பி வைத்தேன். அதன் ஒவ்வொரு பத்தாண்டுகள் படித்து முடித்ததும் எனக்குப் பேசினார். உங்கள் வயசு என்ன என்று ஆர்வமாகக் கேட்டார். 45 என்றேன்.

"இந்த வயசுக்கு இந்த நாவல் சவாலான வேலைதான். உங்களுக்கு வரலாற்றை கற்பனையில் பார்க்கும் பார்வை இருக்கிறது'' என்றார்.

இரண்டு முக்கியமான பிழைகளை நாவலில் சொன்னார். அடுத்த பதிப்பில் திருத்திவிடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.

"நாற்பதுகளில் சென்னையில் நிறைய பேர் குழாய் பேண்ட் அணிந்திருந்தார்கள் என்று ஒருபதம் வருகிறது. எனக்குத் தெரிந்து அப்போதெல்லாம் பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்று சொல்லுவார்கள். பேண்ட் என்பது அமெரிக்கப்பதம். ட்ரவுசர் இங்கிலாந்து பிரயோகம்'' என்றார்.

இரண்டாவது பிழை அதே நாற்பதுகளில்.. "ஆறுமுக முதலியாருக்கு மோரீஸ் மைனர் கார் வாங்க வேண்டும் என்று ஆசையிருந்தது என்று எழுதியிருக்கிறீர்கள். அப்போது மோரிஸ் என்ற மாடல் இருந்தது. அதில் மைனர் மாடல் வந்தது 50 களில்தான் வந்தது'' என்றார்.

"உங்கள் நாவலுக்கு நூறுவயது மதிப்பிடலாம். அதாவது நூறுவருஷம் நிற்கும்'' என்று பாராட்டினார்.

அவரைப் பற்றி எனக்கு இந்த அளவுக்குத்தான் அறிமுகம். அது என்னை நானே பாராட்டிக் கொள்வது போல அமைந்து போனதற்கு நான் பொறுப்பு இல்லை. அவர் என்னிடம் பேசியது அவ்வளவுதான். இதில் அவர் என் நாவலில் சொன்ன குறைகளையும்தான் சொல்லியிருக்கிறேன்.

எஸ்.வி. ராமகிருஷ்ணன் கோவை தாராபுரத்தில் 1936 ல் பிறந்து, ஐ.சி.எஸ். படித்து (இன்றைய ஐ.ஏ.எஸ்.) கலால் துறையில் ஆணையராக இந்தியாவின் பல இடங்களில் பணியாற்றியவர். இப்போது ஐதராபாதில் இருக்கிறார் என்பது உயிர்மையில் வெளியான அவருடைய புத்தகத்தில் உள்ள தகவல்கள்.

அவர் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி (2011) காலை கேன்சர் காரணமாக உயிரிழந்தார்.

அவர் இறப்பதற்கு முன்னால் அவரிடம் உதவி ஆணையராகப் பணியாற்றிய சுந்தரம் என்பவர் (அவசரத்தில் அவருடைய பெயரை குறித்து வைக்கத் தவறிவிட்டேன். ஞாபகத்தில் இந்த பெயர்தான் இருக்கிறது.) எனக்கு போன் செய்தார். "ஐதராபாதில் உங்கள் நண்பர் எஸ்.வி. ராமகிருஷ்ணனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உங்களுக்கு அவருடைய உடல்நிலை பற்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

நான் உடனே எஸ்.வி.ஆரின் செல்போனுக்குப் பேசினேன். அது ஆஃப் செய்திருந்தது. அவருடைய வீட்டு எண்ணுக்குப் பேசினேன். அதை யாரும் எடுக்கவில்லை. அதோடுவிட்டுவிட்டேன். என்னுடைய முயற்சி அவ்வளவுதான். ஆனால் அவர் அத்தனை சுலபமாக விட்டுவிடக் கூடியவர் அல்ல.

தமிழ் ஸ்டுடியோ டாட் காமில்

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

இன்று சுஜாதாவின் மூன்றாம் நினைவுநாள். அதன் பொருட்டு இந்தத் தொடர்கதை!




சுஜாதாவின் சிருஷ்டி

"என்ன பாஸ்.. ஹெள ஈஸ் லைப்?''
வாழ்க்கை பற்றியெல்லாம் விசாரிக்கும் வசந்தை பெருந்தன்மையுடன் பேராசிரியர் போல பார்த்தான் கணேஷ்.
"வயசாயுடுச்சி வசந்த் உனக்கு..''
"யாருக்காவது ரேகை பார்க்கலாம் என்றால்... வேண்டாம் அங்கிள் என்று அலறுகிறார்கள்''
கணேஷ் சிரித்தான். "வேறு முயற்சிகள் தேவைப்படுகிறது..''
"சுஜாதா சார் இல்லாமல் போனதால் நாம் அப்டேட் ஆகாமல் போயிட்டோம். இருப்பதை வைத்து வண்டி ஓட்டினால் இப்படித்தான்.''
கணேஷ் ஆமோதிப்பதுபோல சிரித்தான்.
தம்முடைய நல்லது, கெட்டது, சவால், வெற்றி, சாதனை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவரை சற்றே ஆகாயத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டான்.
"நாம் யார் யாருக்கோ வாதாடினோம். அவருக்காக வாதாட நமக்கு வழியில்லாமல் போய்விட்டது.. பச்''
"ஏன் பாஸ் அப்படி சொல்கிறீர்கள்?''
"ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் பார்த்தியா?''
"இலக்கியத்தில் அவருடைய இடம் அவருடைய சயின்ஸ் பிக்ஸன் கதைகள், புறநானுறு.. அகநானுறு உரைகள் போன்ற பலவற்றையும் கறராக விமர்சனம் செய்திருக்கிறார். வாசகரை அதன் ஆழத்துக்குக்குக் கொண்டு செல்லாமல் திசை திருப்புபவை என்றும் வணிகரீதியான எழுத்துக்கு ஆட்பட்டவர் என்றும் எழுதியிருந்தாரே.''
கணேஷ் "ஏதாவது பதிலடியாக செய்ய வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது. உனக்குத் தோன்றவில்லையா?''
"பாஸ் உங்களை இவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததே இல்லை.''
"பட்டிருக்கிறேன். வெளியில் காட்டிக் கொள்வதில்லை. லண்டனில் ப்ரியா இறந்து போனதாக நம்ப வைக்கப்பட்டபோது.. பிரிவோம் சந்திப்போம் மதுமிதா ஆக்ஸிடண்டில் இறந்தபோது.. இப்படி நிறைய ஆனால் இது வருத்தமில்லை.. ஆதங்கம்''
"என்ன செய்யலாம் சொல்லுங்கள் பாஸ்?''
"இலக்கிய சர்ச்சைகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.... ஏற்கெனவே தலைவருக்கும் ஜெயமோகனுக்கும் சண்டையில்தான் நட்பே ஏற்பட்டது தெரியுமா? ரப்பர் நாவலுக்காக அவர் அகிலன் விருது பெற்ற போது தமிழில் நாவல்களே வரவில்லை என்பதாகப் பேசினார். நம்ம தலைவருக்கு கோபம். "விருது வாங்கும்போது நம் எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸய்யா மனப்பான்மை வந்துவிடுகிறது. தமிழலக்கியம் பற்றி எதையாவது குறிப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு எதையாவது சொல்கிறார்கள்.'. என்று ஆரம்பித்து ஒரு கட்டு கட்டினார். அதன் பிறகு ஜெயமோகனும் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று மறுத்துக் கூறிவிட்டார். அதெல்லாம் பழைய கதை. அதற்கப்புறம் இரண்டு பேரும் ஆழ்வார்கள் பற்றியெல்லாம் மிகவும் சிலாகித்துப் பேச ஆரம்பித்து நன்றாகவே பழகிவிட்டார்கள்.''
"இப்போது?'' வசந்த் அலுப்புடன் கேட்டான்.
"சுஜாதா இறந்த அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவருடைய நினைவைப் போற்றியவர் ஜெயமோகன். இருக்கட்டும். ஜெயமோகன் சொன்னது இலக்கிய உலகம் சார்பான கேள்வி. அவர் பிரதிநிதி. எல்லோர் சார்பாகவும் அந்தக் கேள்விகளைப் பார்க்கிறேன். இன்னும் சிலரோ காமெடியாக எழுதுவாரே அவரா என்கிறார்கள். வேறு சிலரோ அவரை செக்ஸியாக எழுதுபவர் என்கிறார்கள். விவாதம் என்று வந்துவிட்டால் அதற்குப் பொருத்தமாக பதில் சொல்லியாகவேண்டும். இதுபோன்ற கேள்விக்கெல்லாம் தலைவர் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.''
"75-ல் சொர்க்கத் தீவு எழுதியபோதே அவர் ஆங்கிலக் கதைகளைக் காப்பியடித்து எழுதுகிறார் என்று பிரச்சினை வந்தது.. அந்த நாவலுக்கான முன்னுரையில் அவர் யாரையெல்லாம் காப்பியடித்து அந்த நாவலை எழுதினார் என்று பட்டியலிட்டவர்களுக்கு மேற்கொண்டு அவரே வேறு சில எழுத்தாளர்களின் நூல்களையும் சொன்னார்.''
"வசந்த் நீ எனக்குக் கிடைத்தது வரம். இருக்கட்டும். அதில் அவர் ஜார்ஜ் ஆர்வெல்லின் "1984'-ஐயும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் "பிரேவ் நியூ வேர்ல்டை'யும், ஐரா லெவினின் "திஸ் பர்பெக்ட் டே'வையும் காப்பியடித்து எழுதினார் என்று சொன்ன குற்றச்சாட்டுகளை சுஜாதாவே வழிமொழிவார்... ஆர்தர் கிளார்க், பே பிராட்பரி, ஹென்ரி ஸ்லெஸர், தியோடர் ஸ்டர்ஜென், ஆன்டனி பர்கெஸ் என அதைப் போல எழுதிய எல்லாரையும் சொல்லுவார். நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே காப்பியடிக்க வேண்டும் என்பார்.''
"காப்பியடிப்பதற்கும் ஒரு ஐடியாவை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்த்தெடுப்பது என்பது வேறு. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க அந்த அய்யங்கார் என்ஜினியர் படுகிறபாடு.. ரொம்ப காமெடி... அந்தத் தீவில் சிறுநீர் கழிப்பதை உடலில் இருந்து நீர் அகற்றுவது என்பார்கள்... செக்ஸ் உணர்வுகள் அற்ற பெண்கள்... பெண்களும் ஆண்களைப் போலவே பொது இடத்தில் பனியனைக் கழற்றுவார்கள்... அந்த அய்யங்கார் குறுகுறுவென குற்றம்புரிய தயாராகிற இடம்.. ''
"போதும் நிறுத்து''
"சாப்பிட பால் வேண்டுமா என்று கேட்கும்போது... "இங்கே பாலே இல்லை என்று நினைத்தேன் என்றேன், சிலேடையாக' என்பான்''
"போதும் வசந்த்... இப்போது சுஜாதாவை பாராட்டிக் கொண்டிருப்பதற்காகவா உன்னை வரச் சொன்னேன்?''
"இரண்டு பேரும் மாறி மாறி பாராட்டிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. விவாதிக்க வேண்டும்.''
"அவருடைய இலக்கிய பங்களிப்பு, சினிமா பங்களிப்பு.. அறிவியல் பங்களிப்பு எல்லாவற்றையும் அலச வேண்டும்''
வசந்த் தன் பாஸ் ஏதோ புதிதாக சொல்ல வருவதை உத்தேசித்து காத்திருந்தான்.
"இன்னையிலிருந்து ஒரு வாரத்துக்கு நீதான் சுஜாதாவின் பரம விரோதி... சுஜாதா பற்றி என்னென்ன புகார்கள் உண்டோ அத்தனையும் சொல். நான் பதில் சொல்கிறேன்.''
"ஐயோ பாஸ்... கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கிற 17 மாடி கட்டிடத்தில் இருந்து கீழ குதிக்கச் சொல்லுங்க குதிக்கறேன். மெட்ராஸில் எல்.ஐ.சி.க்கு அப்புறம் உயரம் அதுதானே பாஸ்?''
"கடிக்காதடா.. சீக்கிரம் சுஜாதாவின் விரோதியாக மாறு...''
"எப்பிடி பாஸ் அவருக்கு பரமவிரோதியா...?''
"நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்ன?''
"என்ன ஆச்சு பாஸ்... இது "கௌரவம்' படத்தில் சிவாஜி பேசுகிற டயலாக்''
"தெரியும்.. இதுதான் சுஜாதா கோர்ட். நீதான் பப்ளிக் பிராஸிக்யூட்டர்.. சுஜாதாவின் பரமவிரோதி. ஆரம்பி.''
(அடுத்த வாரம்)

புதன், பிப்ரவரி 23, 2011

தனிமையின் இசையில் அய்யனார்

தனிமையின் இசையில் அய்யனார்
எழுதியிருக்கும் விமர்சனத்தின் ஒரு பகுதி. முழுதும் படிக்க மேலே சொடுக்கவும்.


எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. நன்றி தமிழ்மகன்

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்

வெட்டுப்புலி குறித்து... சுரேஷ் என்பவர் எழுதிய விமர்சனம்... மேலும் படிக்க கீழே சொடுக்கவும்....

தமிழகத்தில் 1930 முதல் இப்போ வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் நடக்குது. பல தருணங்களில் உண்மை சம்பவங்களுக்கு நடுவில் கதை நடப்பது, சுவாரஸ்யமானது. எனக்கு புடிச்சிருந்த்து. என்னுடைய கதைகளும் அந்த மாதிரி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைவதால், எனது கருத்துக்கு ஒத்து வந்த மாதிரி இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சி முதல் கொள்ளைக்காரன் ஆட்சி வரை கதை சொல்லப்படுகிறது. நடுவில் அரசியல், சாதி, சாமி, மருத்துவம், சினிமா, மேல்படிப்பு, இந்திய பிரிவினை, காந்தியின் தொடக்கமும் கொலையும், சுதந்திர இந்தியாவின் தலைவர்களும், நேரு குடும்பமும், இந்திராவின் கொலையும், சஞ்சய் காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையும், அவரது விசித்திரமான மரணமும், ராஜிவ்காந்தி மரணமும், அண்ணா பெரியாரும், எம்.ஜி.ஆர். கருணாநிதியும், கூடவே ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆர். சிவாஜியும், எம்.ஜி.ஆர். ரஜினியும், ரஜினி கமலும், ஸ்டாலின் அரசியலும், ஸ்டாலின் பெண் கடத்தலும், வைகோ மதிமுகவும் என எல்லாமே வரும்.

படிச்சு முடிச்ச போது ஏதோ வரலாறு புத்தகம் படிச்சு முடிச்ச மாதிரி இருந்திச்சு.

கதைக்கு நடுவில் வந்து இவ்வளவையும் அவங்க கதையோட சேத்து சொல்லறாங்க, இந்த கதையின் நாயக, நாயகியர். நாப்பது அம்பது வருடங்களாக ரெண்டு குடும்ப கிளைகளில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

ஒருத்தர் ஒரு ராத்திரிலே ஒரு சிறுத்தையை தனியா கொன்னுடுறார். அது பெரிய விஷயம். அதுக்காக ஒரு புதிய தீப்பட்டி கம்பெனி, அதை அவங்க கம்பெனி அடையாளமா உபயோகம் பண்ணிகுறாங்க. அதுதான் வெட்டுப்புலியின் துவக்கம்.





வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்

புது எழுத்துக்கு விருது

தஞ்சை தமிழ் பல்கலை கழகம் சிறந்த சிற்றிதழுக்காக வழங்கும் விருது ” புது எழுத்து” சிற்றிதழுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ 150000 /லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு. இதை தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து மனோன்மணி தனிப்பட்ட முயற்சியால் நடத்தி வருகிறார். மொழியாக்கங்கள் இலக்கிய விவாதங்களை அதிகமாக வெளியிடுகிறது புது எழுத்து.
நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸுக்கு புது எழுத்து வெளியிட்ட சிறப்பு வெளியீடு மகத்தானது. முன் சொல்லப்பட்ட சாவின் சரித்திரம் என்ற மார்க்வெஸ்ஸின் குறுநாவலொன்று அசதாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருந்தது. மிக அற்புதமான மொழி பெயர்ப்பு.

மனோன்மணி தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர் மனோன்மணிக்கும் புதுஎழுத்துக்கும் வாழ்த்துகள்

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

ஒரு பழைய செய்தி

மணிக்கொடி இதழை நடத்திய ஸ்டாலின் சீனிவாசன்தான் பராசக்திக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிய தணிக்கை அதிகாரி என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆகவே அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
``பராசக்திக்கு தடை போடும் முயற்சி தோல்வி!- படம் நன்றாக இருப்பதாக தணிக்கை அதிகாரி பாராட்டு!
"பராசக்தி"க்கு தடை விதிக்க, பலமுனைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. படத்தைப் பார்த்த தலைமை தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்!
``பராசக்தி" படத்துக்கு கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு தரப்பினரின் எதிர்ப்பும் வலுத்தது. படத்தில் நாத்திக கருத்துக்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பத்திரிகை வாயிலாக உடனுக்குடன் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார், கருணாநிதி.
"பராசக்தி"க்கு தடை விதிக்க வேண்டும் என்பதை ஒரு இயக்கமாக சிலர் நடத்திக் கொண்டிருந்தனர். தடை விதிக்கக்கோரி, தலைமை தணிக்கை அதிகாரிக்கு தந்திகள் குவிந்தன. அப்போது தணிக்கை குழுவின் தலைமை அதிகாரியாக `ஸ்டாலின்' சீனிவாசன் இருந்தார். இவர், ``மணிக்கொடி" என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி, புதுமைப்பித்தன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள், புகழ்பெறக் காரணமாக இருந்தவர். அவர் ஸ்டாலினைப் போன்ற மீசை வைத்திருந்ததால் `ஸ்டாலின்' சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
அவர் ``பராசக்தி" படத்தைப் பார்த்தார். சாதாரணமாகப் பார்க்கவில்லை. கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அந்த மாதிரி பார்த்தார். கடைசியாக அவர் வழங்கிய தீர்ப்பு: ``பராசக்தியில் ஆட்சேபகரமான காட்சி எதுவும் இல்லை. எனவே, படத்துக்கு தடை விதிக்கவோ, காட்சிகளை வெட்டவோ வேண்டிய அவசியம் இல்லை".இப்படி அறிவித்த தணிக்கை அதிகாரி, படம் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்!
``பராசக்தி" பற்றி பத்திரிகைகளில் நடந்த விவாதமும், அதற்கு தடை வரலாம் என்ற எதிர்பார்ப்பும், ``பராசக்தி"க்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. எனவே, தியேட்டர்களில் முன்னிலும் அதிகக் கூட்டம் சேர்ந்தது. தினமும் ``ஹவுஸ்புல்" தான்.
படத்தின் ``கிளைமாக்ஸ்", பராசக்தி கோவிலிலேயே சிவாஜியின் தங்கையாக நடிக்கும் ஸ்ரீரஞ்சனியை பூசாரி கற்பழிக்க முயலும் காட்சியாகும். நடந்ததை அறிந்த சிவாஜி, பூசாரியை பழிவாங்க பராசக்தி சிலைக்கு பின்னால் பதுங்கியிருப்பார்.
``நீ தீர்க்காயுசா இருப்பே" என்று ஒரு பக்தனிடம் பூசாரி கூறும்போது, ``ஏய், பூசாரி! முதலில் உன் ஜாதகத்தை கணித்துக்கொள்" என்ற குரல் அசரீரி மாதிரி கேட்கும்! சிவாஜியின் குரல்தான் அது!
பூசாரி: யார் அம்பாளா பேசுவது?
சிவாஜியின் குரல்: அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?
பூசாரி: தாயே! பராசக்தி!
சிவாஜி (வெளியே வந்து): இந்த பராசக்தி உனக்குத் தாய். என் தங்கை கல்யாணி உனக்கு தாசி! அப்படித்தானே! மானங்கெட்டவனே!
பூசாரி: அப்பனே! இது என்ன விபரீதம்?
சிவாஜி: விபரீதம் வராது என்று எண்ணித்தானே என் தங்கையோடு விளையாடி இருக்கிறாய்?
பூசாரி (பராசக்தி சிலையைப் பார்த்து): தாயே, பராசக்தி!
சிவாஜி: அது பேசாது. பேசமுடியும் என்றால், நீ என் தங்கையின் கற்பை சூறையாடத்துணிந்தபோது, ``அடே பூசாரி! அறிவு கெட்ட அற்பனே! நில்" என்று தடுத்திருக்கும். உன்னிடம் சிக்கிய போது, இந்தப் பராசக்தியை என் தங்கை ஆயிரம் முறை அழைத்தாளாமே! ஓடி வந்து அபயம் அளித்தாளா?

பூசாரி (கூட்டத்தினரைப் பார்த்து): பக்த கோடிகளே! பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே!
சிவாஜி: தேவி பக்தனே! மனித உதவியை ஏன் நாடுகிறாய்? உன் தேவியின் கையில் சூலம் இருக்க, சுழலும் வாள் இருக்க ஏன் பயந்து சாகிறாய்? (இந்த சமயத்தில், சிவாஜியை வெட்டுவதற்கு அரிவாளை பூசாரி ஓங்க, சிவாஜி அதைப்பிடுங்கி பூசாரியை வெட்டுவார்.)
சிவாஜி மீதான வழக்கு விசாரணை படத்தில் ஏறத்தாழ கால்மணி நேரம் இடம்பெறும். குற்றச்சாட்டுகளை மறுக்காமல் சிவாஜி சொல்வார்:
`கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக! பூசாரியைத் தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி, பகல் வேஷமாக ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக!"
இவ்வாறு சிவாஜி கூறும்போது, ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் தியேட்டரை குலுங்கச் செய்யும். ``பராசக்தி"யின் வசனம் புத்தகமாக வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகியது. வசனம் முழுவதும் இசைத்தட்டுகளாக வெளிவந்து சக்கை போடு போட்டது.
``காலத்தை கணிக்க, கி.மு., கி.பி. என்று கூறுவது போல, தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுத வேண்டுமானால் பராசக்திக்கு முன், பராசக்திக்குப்பின் என்று பிரிக்கலாம்" என்று சில விமர்சகர்கள் எழுதினர்.
``பராசக்தி" படத்தில் நடிக்க, சிவாஜி கணேசனுக்கு மாதம் ரூ.250 சம்பளம் கொடுக்கப்பட்டது. இதை சிவாஜியே குறிப்பிட்டிருப்பதுடன், ``பராசக்தியில் இலவசமாக நடிப்பதற்குக் கூட தயாராக இருந்தேன்" என்றும் கூறியுள்ளார்.
``பராசக்தி" படத்துக்குப்பின் சிவாஜியின் ஊதியம் பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க அவர் வீட்டு முன் பட அதிபர்கள் குவிந்தனர்.

திங்கள், ஜனவரி 31, 2011

மாதொரு பாகன்



அவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி நடிக்க சினிமாவாகவும் வந்தது.

குழந்தையில்லாமல் வருந்தும் தம்பதியினர். மலடி என்ற பட்டம்.. வாரிசு இல்லாத வருத்தம்.. தன் கணவன் தாதுவை இன்னொரு பெண்ணின் கருப்பையில் சுமக்க வைத்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் மனைவி. எண்பதுகளின் துவக்கத்தில் பெரிய வட்டமிட்டு அதில் ஏ குறியிட்டு போஸ்டர் ஓட்டப்பட்டபடம்.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் அப்படியான விஞ்ஞான முறையெல்லாம் தெரியாத கணவன் மனைவி பற்றியது. சமூகம் அங்கீகரித்த ஒரு கலாசார அதிர்ச்சி வைத்தியம்தான் கதையின் மையம். தமிழகத்தின் ஒரு சிறு பகுதியில் அது பெண்ணின் மாமியாரும் தாயாரும் ஏற்றுக் கொள்ளும் ஒருவகை தெய்வீக உத்தியாக அது இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு நடப்பை நமக்குத் தெரிவிக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் இருந்தே வருவதுதான் சரியாக இருக்கும். காளி- பொன்னா திருமணம் நடக்கிறது. காளி மாமனார் வீட்டின் வாசலில் தோதான இடம் பார்த்து பூவரசு மரக் கிளை ஒன்று நடுகிறான். அதுவும் கிளைவிரித்து, பூத்து நிழல் பரப்பி நிற்கிறது. ஆனால் பொன்னாவோ குழந்தை பாக்கியம் இல்லாமலேயே ஆண்டுகளைக் கடத்துகிறாள். அவளுக்கு முதல் மாசம் தீட்டுப் பட்டதுமே முகம் சுளிக்கிறாள் மாமியார். அறிவுரைகள் ஆரம்பமாகின்றன. தீட்டுப் பட்ட மூணாம் நாளு இந்த சாறைக் குடி.. இந்த மூலிகையைக் கரைத்துக் குடி என்று அவளுக்கு நாக்கையே மறக்கடிக்கிறார்கள். காலம் ஓடுகிறது.என்னத்த கண்டே இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டுட்டுப் போ என்கிறார்கள். உனக்கென்ன குழந்தையா குட்டியா என்கிறது ஊர். வேர்க்கடலை விதைக்கப் போனால், மலடியின் கை பட்ட விதை முளைக்க வில்லை என்று கதை சொல்கிறார்கள். ஊரும், உறவும், சொந்த தாயும்கூட மலடியாக இருப்பவளை மன்னிப்பதாக இல்லை. மருமகனை வேறு கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லுகிறாள். மறு கல்யாணம் செய்து கொள்வதில் காளிக்கும் விருப்பமில்லை. ஆம்பளையா பொறந்தா ஒழுங்கா தண்ணிப் பாய்ச்சணும்டா
என்பது போன்ற ஜாடை மாடையான எகத்தாளப் பேச்சுகள். காளியின் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு பொன்னாத்தாவை மடக்கப் பார்க்கும் இளசுகள் என்று காளியின் ஆண்மையை உரசிப் பார்க்கும் சங்கடங்கள் தொடருகின்றன.

ஒரு குழந்தை பிறந்தால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்ற நிலமை. குழந்தை என்பது ஒரு அங்கீகாரம். குலம் தழைக்க வந்த வம்ச விளக்கு. வாரிசு.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவில் பதினாலாம் நாள் தேர் திருவிழாவில் அதற்கு ஒரு விடிவுகாலம் இருப்பதாக காளியின் தாயே வழி சொல்கிறாள்.

குழந்தை பிறப்பதற்கான உபாயத்தை தாயிடமிருந்தே மகன் கேட்பது கதையின் உலுக்கலான பக்கங்கள். மகனுக்குத் தெரியாமல் தாயும் தாய்க்குத் தெரியாமல் மகனும் கள் குடிப்பது இருவருக்கும் தெரிந்த விஷயம்தான். தன்னிடம் ஏதோ பேச வந்து தயங்கிக் கொண்டிருக்கும் தாய்க்கு கள் இருக்கு குடிக்கிறியா என்று காளி குடிக்கக் கொடுக்கிறான். மெல்ல மெல்ல பேச்சு வருகிறது. எல்லாம் குழந்தை பிறப்பது பற்றித்தான். யார் மேல குறையோ எதற்கும் திருவிழாவுக்குப் பொன்னாவை ஒரு நடை அழைத்துக் கொண்டு போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதாகச் சொல்கிறாள். இடிந்து போகிறான் காளி.

பதினாலாம் திருவிழாவில் குழந்தையில்லாத பெண்கள் அங்கே ஆண்களோடு கூடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த தினத்தில் அங்கு இருக்கும் எல்லா ஆண்களுமே சாமிகள்தான் என்பது ஐதீகம். காளியும் அவனுடைய மைத்துனனுமே திருமணத்துக்கு முன்பு இந்தத் திருவிழாவுக்கு வந்து பெண்களை வலம் வந்தவர்கள். இந்த ஐதீகம் ஆண்களுக்குத் தெரிந்திருப்பதுபோலவே பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதாவது மகனுக்குத் தெரிந்திருந்தது, அம்மா மூலம் தெரியவருகிறது.

சிக்கலான கதை.

முதல் சிக்கல் தமிழகத்தில் இப்படியொரு வழக்கம் இருந்ததாக எழுதுவது. அதை அம்மாவும் மகனும் பேசுவதாக எழுதுவது.. அதுவும் மாமியாரே தன் மருமகளை அதற்கு ஆட்படுத்துவது பற்றி பேசுவது.. எப்படிப்பட்ட சிக்கலான முடிச்சையும் நேர்மையான நடையின் மூலம் அவிழ்க்க முடியும் என்பதுதான் பெருமாள் முருகன் அவருடைய செறிவான நடையின் மூலம் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. சவாலான கதையம்சம் பொதிந்திருக்கும் கரு. வலிந்து ஆபாசம் எழுதும் கதை போக்கு இருந்தும்கூட இயல்பான தொனியில் கதையைக் கொண்டு சொல்லியிருக்கிறார். நல்லுப் பையன் சித்தப்பா போன்ற ஏட்டிப் போட்டியான கதாபாத்திரங்கள், அவர்களுக்கான ஆபாச மொழிகளை பேசுகிறார்கள். அது முற்றிலும் கதையில் இருந்து விலகாத இயல்பான மொழியாகவும் இருக்கிறது.

காளி தன் மனைவியிடம் கருத்து கேட்கிறான். திருவிழாவுக்கு நீ போகப் போகிறாயா என. உனக்கு விரும் என்றால் போய் வருகிறேன் என்கிறாள். காளிக்கு இரண்டாவது இடி. நான் போக மாட்டேன் என்று சொல்லுவாள் என பெரிதும் நம்பிக்கையோடு அவளிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் அது.

உற்ற தோழனாக பழகிய மைத்துனன் பொன்னாவின் அண்ணன்- அவனும் தன் தங்கை போய்விட்டுவந்தால் குழந்தை பாக்கியம் கிட்டுமே என்கிறான்.

குழந்தை என்றால் குலம் தழைக்க வந்த வாரிசு. இதிலே குலம் எங்கே இருக்கிறது. பிறக்கப் போவது யாருடைய வாரிசு?... காளியின் ஆண்மைக்கு இதைவிட இழுக்கு இருக்க முடியாது. பொன்னாவை அனுப்பிவைக்க முடியாதென மறுக்கிறான். காளிக்கு விருப்பமில்லை என்ற செய்தியையே மறைத்து பொன்னாவை விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பொன்னாவும் காளியும் என்ன முடிவுகள் எடுத்தார்கள் என்பது கதையின் முடிவு... அல்லது கதையின் முடிச்சும்கூட.

தமிழகத்தில் இப்படியொரு முறை இருந்ததாக எங்கேனும் பதிவுகள் இருந்ததா என்று தெரியவில்லை. பெருமாள் முருகன் அப்படியான ஒரு ஆதாரச் செய்தியின் அடிப்படையில்தான் இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.

கதை வெள்ளையர் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக இருந்தாலும் அந்தக் காலக்கட்டத்தைச் சொல்லும் சூழல்கள் கதையில் வலுவாக இடம் பெறவில்லை. குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கல் எறியும் போட்டி ஒன்றை ஒரு வெள்ளைக்கார துரை நடத்துகிறார். என் கவனத்தில் அந்தக் காலத்துக் காசுகள், நோட்டுகள், உடை போக்குவரத்துகள் விவரிக்கப்படவில்லை.

காலம் பற்றிய குறிப்புகள் நாவலை பெரும்பகுதி வாசித்த பின்னரே உணர வேண்டியிருக்கிறது. எல்லோரும் குடுமி வைத்திருந்தார்கள் என்பது அத்தகையதோர் குறிப்பு. ஆனால் இது நாவலின் மையத்தில்தான் கண்டெடுக்க முடிந்தது.

குழந்தையில்லாத ஒரு கணவன் மனைவியின் கதையாக மாதொரு பாகனைப் பார்க்க முடியவில்லை. பல நூறு கணவன்- மனைவிகள் அதில் தெரிகிறார்கள். ஒரு கதையின் பின்னால் பல கதைகள் இருந்திருக்கும் அதிர்வை ஏற்படுத்தும் நாவல்.

மாதொரு பாகன்,

பெருமாள் முருகன்,

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை
நாகர்கோவில் 629 001
விலை: 140
email: kalachuvadu@sancharnet.in

வியாழன், ஜனவரி 27, 2011

சிறுகதை உலகம்




சிறுகதை உலகம்

தமிழ் ஸ்டூடியோ டாட் காம் நிகழ்த்திய சிறுகதை குறித்த இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையில் வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுவாரஸ்யமமான அனுபவம். இரண்டு நாளும் காலை முதல் மாலை வரை நான் படித்த சிறுகதைகள் குறித்து பேசிக் கொண்டே இருந்தேன். ஐந்து நிமிடங்களுக்குப் பேசுவதே சிரமம் என்ற எண்ணத்தில்தான் போனேன். பேசுவதற்கு விஷயங்கள் இருப்பதை அறிந்தேன். படித்தவற்றை நினைவூட்டும் விதமாக இருந்தது. பேசுவதற்காக நான் கையில் குறிப்பெடுத்துச் சென்றேன். அந்தக் குறிப்பு இதுதான்:

தமிழ் மொழியில் இலக்கியம் என்பவை செய்யுள் இலக்கியமாகத்தான் இருந்தன. சங்க இலக்கிய நூல்கள் தொடங்கி கண்ணகி -கோவலன் கதை, ராமன் }சீதை கதை எல்லாமே நமக்கு செய்யுளாகத்தான் கிடைத்தன. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான் எப்படி பேசிக் கொள்கிறோமோ அதே பாணியில் எழுதுவதும் இலக்கியம்தான் என்ற முடிவுக்கு வந்தோம்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலை எழுதினார். பிரதாப முதலியார் சரித்திரம் என்று அந்த நாவலுக்குப் பெயர். வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரோ அதற்கு சம காலத்திலோ ஆ.மாதவையா, மகாகவி பாரதி போன்றோர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருந்தாலும் வடிவம் கூடிவரப் பெற்றது குளத்தங்கரை அரசமரம்தான். இதை ஆமோதிக்கிறார் மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா.
நாம் இன்று எத்தனையோ நாவலாசிரியர்களையும் சிறுகதையாசிரியர்களையும் பெற்றிருக்கிறோம்.
மணிக்கொடி இதழ் நமக்கு அரிய சிறுகதையாசிரியர்களைத் தந்தது. புதுமைப்பித்தன், கு.பா.ரா., மெüனி, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., லா.ச.ரா., போன்ற பலர் அதில் இருந்து புறப்பட்டவர்கள்தான். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சுஜாதா, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றனர்.
இவ்வளவு பேரும் எதற்காக எழுதினார்கள் என்பது எவ்வளவு நியாயமான கேள்வியாக இருந்தாலும் எத்தனையோ ஆயிரம் பேர் இவர்களை வாசித்தார்கள் என்பதே அதற்கு நியாயமான பதிலாக இருக்கிறது. படிக்கிற ஆர்வம் மிக இயல்பான மனப்போக்காக இருக்கிறது. இசை மீது ஆர்வம் கொள்கிறவர்களும் ஓவியத்தின் மீது ஆர்வம் கொள்வபவர்களும் போலவே எழுத்தின் மீது ஆர்வம் கொள்பவர்களும் உருவாகிறார்கள். ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளான ஆர்.கே. நாராயண் எழுத்தாளராகவும் ஆர்.கே. லஷ்மண் ஓவியராகவும் தீர்மானமானது அவர்களின் எத்தனையாவது பிராயத்தில்.. அதில் எந்த தருணத்தில் என்பது புதிர் நிறைந்த கேள்வியாகத்தான் இருக்கிறது.
நீங்கள் கதைகள் பற்றி தெரிந்து கொள்ள குழுமியிருப்பதும் அத்தகைய ஒரு புதிர்தான். நீங்கள் ஏன் ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேலையோ, கார் டீலராகவோ இல்லாமல் புத்தகம் படிப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறீர்கள்?
சினிமா இசையில் உங்களுக்கு இளையராஜாவையோ, ரஹ்மானையோ பிடிக்கலாம். தேவாவையோ சங்கர் கணேஷையோ பிடிக்கும் என்று கூறுபவர்கள் குறைவு. நாம் பல தரப்பட்ட ரசனை கொண்டவர்களாக இருந்தாலும் தனித்தன்மை இல்லாதவர்களைப் பின் தொடர்வதில்லை.
பாடகர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பெரும்பாலும் டி.எம்.எஸ்., பி.பி. சீனிவாசுலு, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் பெயரைச் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தனித்தன்மை இருந்தது. இவர்களைப் போல பாடுகிறவர்கள் சிலர் வந்தார்கள் அவர்கள் எடுபடாமல் போனார்கள். எந்தத் துறையிலும் தனித் தன்மை தேவை. பத்திரிகை ஓவியங்களை எடுத்துக் கொண்டால் சிலருக்கு ம.செ., சிலருக்கு மாருதி, சிலருக்கு ஜெயராஜ், சிலருக்கு கோபுலு சிலருக்கு அரஸ், சிலருக்கு ஷ்யாம்.. இப்படி ரசனை மாறுகிறது. எழுத்துலகில் அது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சிலருக்கு கல்கி பிடிக்கும். சிலருக்கோ அவரை ப் பிடிக்கவே பிடிக்காது. சுந்தர ராமசாமிதான் சிறந்த எழுத்தாளர் என்பார்கள். சிலருக்கோ சுஜாதாதான் படிக்கப் பிடிக்கும். ஜெயமோகனைப் பிடிப்பவர்களுக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காமல் இருக்கும். ரசனை மாறுபாடு இருப்பது வாடிக்கை. எம்.ஜி.ஆருக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது போலவே சிவாஜிக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது அல்லவா?.
மொத்தத்தில் ரசனைகள் மாறுவது இயல்பு. ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமானால் உலகில் ஒரே ஒரு நடிகரும் ஒரே ஒரு நூலும் ஒரே ஒரு இசைக் கலைஞருமாகத்தான் இருக்க முடியும். அது சாத்தியமில்லை; அது சரியுமில்லை.
கணம்தோறும் மாறிக் கொண்டிருக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் அதிசய பொக்கிஷமாக கலைகள் இருக்கின்றன. மனிதனின் அரிய கண்டுபிடிப்பாக கலை இருக்கிறது. குகையில் வாழ்ந்த நாளில் சுவரில் கிறுக்கிய நாளில் உருவான படைப்பாற்றல். விலங்குகளிடமிருந்து மனிதனைப் பிரித்தது அவனுடைய உழைப்பும் கலையும். மனிதன் வேட்டையாட ஆரம்பித்தான். அதற்கான கருவிகள் கண்டுபிடித்தான். அதோடு நிற்கவில்லை. அதை சுவையாக சமைக்கவும் கற்றான். புலியும் வேட்டையாடுகிறது. அது ஒரு போதும் மானை வேட்டையாடி மான் பிரியாணி செய்யப் போவதில்லை. மனிதனின் உழைப்பும் கலையும் ஒன்றாக வளர்ந்தவை.
படைப்பிலக்கியத்தில் இத்தனை வகைகள் இருக்கின்றன. அல்லது இத்தனைவிதமாக எழுதுகிறார்கள் நான் யாரைப் பின்பற்றுவது, யாரைப்படிப்பது என்ற கேள்வி எழலாம். எப்படி டி.எம்.எஸ்.ஸýக்கோ, சிவாஜிக்கோ, ரஹ்மானுக்கோ ரசிகர் ஆனீர்களோ அதுபோலத்தான் இதுவும். உங்கள் மன இயல்புக்கும் உங்கள் அனுபவத்துக்கும் உங்கள் சுபாவத்துக்கும் நெருக்கமான படைப்புகள் உங்களைத் தொடும். அப்போதுதான் அதை உங்களுக்கான இலக்கியமாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அட, நாம் நினைத்தது போலவே இருக்கிறதே என்றோ, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பட்ட அனுபவம்போலவே இருக்கிறது என்றோ, இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றோ ஒரு இலக்கியத்தைப் படிக்கும்போது நாம் நினைக்கிறோம்.
எந்த நூலைப் பற்றியும் உங்கள் அபிப்ராயம் மாறுபடலாம். அதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்த அபிப்ராயம் உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். இன்னொருத்தரின் அபிப்ராயத்தை பிரதிபலிக்காதீர்கள்.
மணிக்கொடி காலத்தில் தழைக்கத் தொடங்கிய சிறுகதை உலகம் தமிழில் தானே ஒரு தடத்தைப் போட்டு அதில் முன்னேறத் தொடங்கியது. மனிதர்களின் அவலங்களை, சந்தோஷங்களை, இயலாமையை, முயற்சியை அவை சொல்ல ஆரம்பித்தன. புதுமைப்பித்தனின் கிண்டல் தொனிக்கும் நடை, கு. அழகிரிசாமியின் கரிசனமான நடை, கு.பா.ரா.வின் மனித சபலங்களைச் சொல்லும் உளவியல் நடை என வாசகர்களின் பல்வேறு மனநிலைகள் அலசப்பட்டன. ந.பிச்சமூர்த்தி, மெüனி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜானகிராமன் என வாசகர்களைச் சுழற்றிப் போட்ட எழுத்தாளர்கள் வரிசையாக உருவாகினர். தமிழ் சிறுகதை உலகின் பொற்காலம் அது.
பெரும்பாலும் கல்கி, நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், அகிலன் போன்றோரின் கதைகளில் வரும் லட்சிய நாயகர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பலருடைய வீட்டில் கதாபாத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த லட்சியக் கதைகள் எதார்த்தமான உலகத்தைப் படைப்பதில் தவறு செய்தது. அது உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலையில் புதிய லட்சியத்தோடு செயல்படுபவர்களைக் காட்டியது. சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்கு காந்திய சமூக சீர்திருந்த தேவையிருந்தது. அவர்கள் உண்மை பேசினார்கள். தியாகம் செய்தார்கள். குற்ற உணர்வு கொண்டு வருந்தினார்கள். அவையெல்லாம் மிகையாக இருந்தன. தேசியம் பேசிய இவர்களுக்குப் போட்டியாக தமிழ் தேசியம் பேசிய அல்லது திராவிடம் பேசிய சிறுகதைகள் உருவாகின. அண்ணா, கருணாநிதி, எஸ்.எஸ். தென்னரசு, டி.கே. சீனிவாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன் போன்ற பலர் அவற்றைச் செய்தனர். தமிழ் தேசிய லட்சிய வாதம், பகுத்தறிவு வாதம், மிராசுதார் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு போன்றவை இக் கதைகளின் அடி நாதமாக இருந்தன. இன்னொரு பக்கம் டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பொன்னீலன் போன்றவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை வலியுறுத்தும் கதைகளோடு வந்தனர். இவர்களில் ஜெயகாந்தன் தன் தனித்துவமான கருத்துப் போக்கினால் அவர்களில் இருந்து விலகியே இருந்தார். அவருடைய கதைகள் அடித்தட்டு மக்கள் பிரச்சினையை பேசுவதில் தொடங்கி, மேல்தட்டு மக்களின் பிரச்சினைக்குக் கைமாறியது. பாரிஸýக்குப் போ, பிரம்மோபதேசம், சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், ஜெயஜெய சங்கர என்று திசைமாறலின் உச்சத்துக்குப் போனார்.
இந்த சமயத்தில்தான் சுஜாதாவின் வருகை. ஏறத்தாழ இந்தக் காலத்தில்தான் நான் படிக்க ஆரம்பித்தேன். மேற் சொன்ன எல்லோரையும்விட அடுத்து வந்த இவரின் ஆதிக்கம் எனக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ அவருடைய எல்லா நூலையும் நான் வாசித்தேன். விஞ்ஞானம், புதுமை, எள்ளல், துறுதுறுப்பு, சுறுசுறுப்பு எல்லாம் இருந்தது இவருடைய கதைகளில். அவரை ஒரு சங்குக்குள் அடக்கமுடியவில்லை. புலனாய்வு கதைகள் எழுதுவார், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று காதல் கதைக்குத் தாவுவார், தலைமைச் செயலகம் என மூளை இயக்கம் பற்றி எழுதுவார், ஆழ்வார் பாசுரம் பற்றி எழுதுவார், சினிமா விமர்சனம் எழுதுவார், விஞ்ஞான கதைகள் எழுதுவார், வரலாற்றுக் கதை எழுதுவார்... மருத்துவம், காபி கொட்டை, சினிமா, இசைக் கச்சேரி, கவிதை எல்லாவற்றையும் எழுதினார். சுமார் 40 ஆண்டுகாலம் தமிழில் அவருடைய ஆட்சி நடைபெற்றது. இப்போதும் அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத எழுத்தாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நிறைய வெளிநாட்டு நடப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், தமிழில் புதிதாக} தரமாக எழுதுபவர்களை இனம் கண்டு அறிவித்தவர் அவர்.
பிறகு தலித் இலக்கியம் என்ற பிரிவில் பாமா, சிவகாமி, ஆதவன் தீட்சன்யா போன்ற பலரது கதைகள் தமிழில் புதிய பாட்டையை ஏற்படுத்தின.
சுந்தரராமசாமியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யூமா.வாசுகி, பாவண்ணன், பெருமாள்முருகன், எஸ்.சங்கரநாராயணன் போன்ற பலர் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் யாரையும் நீங்கள் படிக்கலாம். யாரைப் பற்றியும் அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். முன்னரே சொன்னது போல அது உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக யாரையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கூடாது.
எல்லோரையும் படியுங்கள். அது ஒரு பரவசமான அனுபவம். நீங்கள் கவனித்த அல்லது கவனிக்கத் தவறிய தருணங்களைப் படைப்பிலக்கியங்கள் உங்களுக்கு ஓர் உயரிய தரிசனத்தோடு தட்டில் வைத்துத் தருகிறது.
படைப்பிலக்கியங்கள் ஒரு காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றன. அ. மாதவய்யாவின் குசிகர் குட்டிக் கதைகளையோ, புதுமைப்பித்தனையோ படிக்கும்போது நாம் அந்தக் காலத்தைத் தரிசிக்கிறோம். அப்போதைய சமூகச் சூழல், சமூகப் பழக்க வழக்கம், பேச்சுமுறை எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆனால் அவை சரித்திர சம்பவங்கள் இல்லை. புனைவுகள்.
சமஸ்கிருதம் கலந்த தமிழ் நடை அப்போதைய வழக்கமாக இருந்தது. முதல் சிறுகதையான குளத்தங்கரை அரசமரமாகட்டும் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமாகட்டும் அதில் மணிப்பரவாளம் இருந்தது. தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் தமிழின் போக்கை மாற்றின. பாரதிதாசன் தனித்தமிழில் கவிதை எழுதும் மரபை உருவாக்கினார்.
எதற்காக மனிதன் எழுதவும் படிக்கவும் ஆரம்பித்தான் என்று சிந்திக்கலாம்?
மனிதன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தோடுதான் குகைச் சுவற்றில் கிறுக்க ஆரம்பித்தான். விதம் விதமாக ஒலி எழுப்ப ஆரம்பித்தான். அவனுடைய கிறுக்கல்தான் இப்போது படைப்பிலக்கியமாகவும் ஓவியமாகவும் மாறியிருக்கிறது. விதம்விதமான ஒலிகளின் உருமாற்றம்தான் இன்றைக்கு இசையாகியிருக்கிறது. அனைத்துக்கும் மூல நாயகன் குகைச் சுவற்றில் முதன் முதலில் கிறுக்கிய அந்த மேதைதான்.
நெருப்பை உருவாக்கியவன் விஞ்ஞானியாகவும் குகையில் கிறுக்கியவன் கலைஞனாகவும் வளர்ந்தான்.

தான் அறிந்ததை, உணர்ந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனிதன் நினைத்தான். கூவி கத்தி அழைத்து தகவல்களைச் சொன்னான். புகையை உருவாக்கித் தகவல்களைச் சொன்னான். அது நிரந்தரமாகவும் இன்னும் நீண்ட தூரத்துக்குச் செல்லவும் முடியாததை உணர்ந்து ஓலை அனுப்ப ஆரம்பித்தான். கடிதம் முதல் படைப்பிலக்கியம். கடித இலக்கியம் என்று கி.ராஜநாராயணன், டி.கே.சி. போன்றவர்களின் எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களையும் கலைஞர் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதங்களையும் இங்கே கவனிக்கலாம். கடிதங்கள் ஆச்சர்யங்களை, சோகங்களை, சந்தோஷங்களைச் சுமந்துவருபவை. என்னுடைய இளம் பிராயத்தில் வீட்டுக்குக் கடிதம் வந்தால் அதை யார் முதலில் ஓடிச் சென்று வாங்குவது என்பதில் தொடங்கி அதை யார் முதலில் படிப்பது என்பதவரை ஏகப் போட்டியிருக்கும். கடிதங்கள் சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வருவதாக மனதில் பதிந்திருந்தது. இப்போது அது எஸ்.எம்.எஸ். ஆக சுருங்கிப் போய்விட்டது. இருந்தாலும் கடிதங்கள்தான் சிறுகதைகளின் ஆரம்பம். அதில்தான் மிகச் சில சம்பவங்களையும் சொன்னார்கள். ஒரு நபருக்கு இன்னொரு நபர் தெரிவிக்கும் செய்தி கடிதம். காலப்போக்கில் ஒரு செய்தியைப் பலருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் எற்பட்டது. அவையே இலக்கியமாகின. ஹோமர் இலியட் எழுதினார். வியாசர் பாரதம் எழுதினார். மு.மேத்தா கண்ணீர் பூக்கள் எழுதினார். நாஞ்சில் நாடன் எட்டுத் திக்கும் மதயானை எழுதினார். ஒவியங்கள் டாவின்ஸியாகவும் டாலியாகவும் வான்காவாகவும் பரிணமித்தன.

சிறுகதைக்கான இலக்கணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் 25 பக்கங்களுக்கு இருக்க வேண்டும் என்றார்கள். பத்து பக்கமாகவும் ஐந்து பக்கமாகவும் சிறுகதை சுருங்கிவிட்டது. கதாபாத்திரங்களும் சம்பவமும் படிப்பவர் மனதில் இடம்பிடிக்க தோராயமாக சுமார் 5 பக்கத்திலிருந்து பத்து பக்க விவரணை வரை தேவைப்படுகிறது. ஒரு பக்கக் கதை, இரண்டு பக்கக் கதை என்பவை திடுக்கிட வைக்கும் ஒரு சம்பவத்தை மட்டுமே முன் வைக்கின்றன. அதற்கு நம்மை பழகிக் கொள்வது பிற தரமான கதைகளைப் படிப்பதற்குத் தடையாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இறுதியாக... படித்தால் மூளை குழம்பிவிடும் என்ற கருத்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உண்டு. இறைநூல்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கருதி பல நூலகங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம். புத்தகங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் பல வேளைகளில் ஏழாம் பொருத்தம்தான்.
ஆனால் மக்களுக்கு ஒரு பைபிளோ, ஒரு குரானோ, வேதங்களோ மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு நம்பிக்கை சார்ந்து அவற்றைப் பாதுகாப்பதோடு சமூக வளர்ச்சியைப் பின்தொடர, தொடர்ந்து பல அறிவுச் செல்வங்களைத் தேட வேண்டியிருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சியைவிட அறிவைத் தேடுவதற்கு புத்தகங்கள்தான் இன்றும் முன்னணியில் இருக்கின்றன.
ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மொழிகள் இப்போது உலகில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. அவற்றில் பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் கிடையாது. பல மொழிகளைப் பேசுவதற்கு ஆட்கள் கிடையாது. அதாவது அந்த மொழி பேசுகிறவர்கள் சிதறி வாழ்வதனாலோ, ஆட்சிமொழியாக வேறொரு மொழி அமைந்திருப்பதனாலோ வேறு மொழியைத் தொடர்ந்து பேச வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏசு பேசிய மொழியோ, புத்தர் பேசிய மொழியோ, சாக்ரடீஸ் பேசிய மொழியோ இன்று உலகில் இல்லை. ஆனால் வள்ளுவன் பேசிய மொழி இப்போதும் இருக்கிறது. அதுதான் பெருமை. அதனால் ஒரு நூலை தமிழில் எழுத வேண்டியதும் தமிழில் படித்திட வேண்டியதும் முக்கியம் என்பதை உணர வேண்டும். தமிழும் வேறு மொழியும் தெரிந்தவர்கள் தமிழிலிருந்து வேறு மொழிக்கும் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கிற கடமையைச் செய்ய வேண்டும்.



மேலும் படங்கள்
தமிழ் ஸ்டுடியோ டாட் காமில்


LinkWithin

Blog Widget by LinkWithin