வியாழன், நவம்பர் 15, 2007

சிறுகதை எழுதுவது எப்படி?

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டு பேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல் புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும்போது நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம்; மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன் மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை.

கலைஞர் உணர்வு மயமாக ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம் உள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும். ஆனால் மெய் மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

-எழுத்தாளர் தி.ஜானகிராமன்

தள்ளாத கி.வா.ஜ.

ஒருமுறை எழுத்தாளர்கள் சிலர் வெளியூர் நிகழ்ச்சிக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர். பாதி வழியில் கார் பழுதடைந்து விட்டது. காரில் இருந்தவர்கள் எல்லாம் கீழே இறங்கி காரைத் தள்ளும் முயற்சியில் இறங்கினர்.

காரில் இருந்த பெரியவர் கி.வா.ஜ. அவர்களும் காரில் இருந்து இறங்கி காரைத் தள்ளுவதாகச் சொன்னார். மற்ற எழுத்தாளர்கள் அவர் வயதில் மூத்தவர் என்பதால் இறங்க வேண்டாமென மறுத்துவிட்டனர். உடனே கி.வா.ஜ. ""நான் என்ன தள்ளாதவனா?'' என்று போட்டாரே ஒரு போடு.

திங்கள், நவம்பர் 12, 2007

சர்ச்சை: அட்வான்ஸ் நிகழ்ச்சிகள்... ஆட்டம் கண்ட திரைத்துறை!








விருதுகள் என்பவை சாதனை படைத்தவர்களைக் கெüரவிக்கவா, வேறு ஆதாயங்களை எதிர்பார்க்கவா என்பது காலம் காலமான கேள்வி.

ஃபைன் ஆர்ட்ஸ்- சபாக்கள் வழங்கும் விருதுகளில் இருந்து நோபல்- ஆஸ்கர் விருதுகள் வரை இந்த சர்ச்சை பொருந்தும்.

விருது அறிவிப்பு விஷயத்தில் சர்ச்சை என்ன தெரியுமா?

""ஒரு சமூக அவலத்தை எதிர்த்துப் போராடும் போராளியாக- நாயகனாக "ஈ' படத்தில் நடித்திருந்தார் பசுபதி. அந்தப் படத்தில் அவருக்கு எதற்கு வில்லன் விருது என்று விருது கமிட்டிக்கு எப்படிப் புரியாமல் போனதோ? அதே போல் ஒவ்வொரு தேர்விலும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதிலே இருப்பதால் விருது பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி விருதின் கெüரவத்தை நீர்த்துப் போகவைப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆடல் பாடல் கச்சேரியாகவும் டி.வி. சானல்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் வணிகரீதியான போக்கும் விருது வழங்கும் விழாவில் கலந்து விட்டதால் பலருக்கு விருது வழங்குகிறார்கள் என்றால் ஒரு ஆயாசம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

சர்ச்சைக்குள் ஒரு சர்ச்சையான விஷயம் ஒன்று தமிழக திரைப்பட விருது சம்பந்தமாக நடந்தது. சர்ச்சை பற்றிய சிறுகுறிப்பு இதுதான்: கடந்த ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் வழங்கியபோது அதை ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் டி.வி. பெற்றிருந்தது. தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாவதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டி.வி.யில் தமிழ்த் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான போது பலருக்கு அதிர்ச்சி. அடுத்த அதிர்ச்சி கலைஞர் டி.வி.யில். விஜய் நடித்த "கில்லி' படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது, தீபாவளிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்புவதாக இருந்தது.

சரியாக அரைமணி நேரத்துக்கு இந்தச் சானலில் வெளியாக வேண்டிய நிகழ்ச்சி அந்தச் சானலிலும் அந்தச் சானலில் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சி இந்தச் சானலிலும் ஓடிக் கொண்டிருக்க, "கில்லி' படத்தைத் தயாரித்த ஏ.எம். ரத்னம், தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சானலுக்கு ரைட்ஸ் கொடுத்திருக்க இன்னொரு சானலில் படம் ஓடிக் கொண்டிருந்தால்... ஓடமாட்டாரா பின்னே? பிறகு சட்டு புட்டென்று இரண்டு சானல் தரப்பும் சமரசமாகி, வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால் "அப்ரூட்டாக' அடுத்த நிகழ்ச்சிக்குத் தாவினர்.

சன்னில் பூவெல்லாம் உன் வாசம் படமும் கலைஞரில் பைரவி படமும் சடாரென்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. மக்களும் கண நேர குழப்பத்துக்குப் பிறகு அந்தப் படங்களைப் பார்க்கத் தொடங்கினர்.

இது குறித்துப் பேச இரண்டு தரப்புமே தயாரில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனிடம் ""கில்லி திரைப்படம் ஒளிபரப்பானது குறித்தும், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது குறித்தும் சங்கத்தின் நிலைப்பாடு என்ன, ஏ.எம். ரத்னம் தரப்பு புகார் குறித்து நடவடிக்கையில் இறங்குவீர்களா?'' என்றோம்.

""இது குறித்துக் கருத்து கூற வேண்டியது நானல்ல, சானல்களிடம் பேசுங்கள். நான் கருத்துகூற விரும்பவில்லை'' என்றார் சுருக்கமாக.

எது எப்படியோ தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருவாரம் முன்னதாகவே மக்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்.

தமிழ்மகன்

30 செகண்ட் சவால்!









ஒரு பழைய சம்பவம். லண்டன் சுரங்க ரயில் பாதையில் புகைப்பிடிப்பதற்குத் தடை. பல இடங்களில் சர் ள்ம்ர்ந்ண்ய்ஞ்பலகைகள் இருக்கும். டர்க்கி சிகரெட் கம்பெனி சுரங்கப் பாதையில் தங்கள் சிகரெட்டை யாரும் புகைக்க வேண்டாம் என்று விளம்பரப்படுத்த விரும்புவதாக அரசிடம் அனுமதி வாங்கியது. அவர்கள் செய்திருந்த விளம்பர வாசகம் என்ன தெரியும்? அரசாங்கம் வைத்திருந்த சர் ள்ம்ர்ந்ண்ய்ஞ் பலகைக்குக் கீழே உஸ்ங்ய் பன்ழ்ந்ண்ள்ட் என்று போட்டிருந்தார்கள். (புகைப்பிடிக்காதீர்கள்- டர்க்கீஸ் சிகரெட்டாக இருந்தாலும்)

உஸ்ங்ய் என்ற நான்கே எழுத்துக்கள்தான். இதை வைத்து எப்படி விளையாடி இருக்கிறார்கள் பாருங்கள்? டர்க்கீஸ் போன்ற சிறந்த சிகரெட்டாக இருந்தாலும் இந்த இடத்தில் புகைக்காதீர்கள் என்பதுதான் அதில் இருக்கும் விளம்பரம்.

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்று ஓர் உதாரணத்துக்குச் சொல்லுவோம். இனிமேல் அந்த உதாரணம் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. பத்திரிகைகளிலும் இன்டர் நெட்டிலும் டி.வி.யிலும் பொக்கே ஷாப் விளம்பரங்கள் நிறைய வருகின்றன.

சினிமா மட்டுமன்றி விளம்பரப் படத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து வருபவரில் ஒருவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். "அந்நியன்', "வேட்டையாடு விளையாடு' படங்களுக்குப் பிறகு "தசாவதார'த்தில் பணியாற்றி வருகிறார். அவரைத் தொடர்பு கொண்டோம்.

இரவெல்லாம் "தசாவதாரம்' படப்பிடிப்பு. காலை வந்து படுத்தவர் பிற்பகல் 3 மணிக்குத்தான் எழுந்ததாகச் சொல்கிறார். படு சீக்ரெட்டாக நடைபெற்று வரும் "தசாவதாரம்' படம், நேற்று இரவெல்லாம் நடந்ததாகச் சொன்னதே அரிய தகவல்தான். அவரை அதற்கு மேல் சங்கடப்படுத்தாமல் விளம்பரப் படங்கள் பற்றி மட்டும் கேட்டோம். பேச ஆரம்பித்தார்.

""ரீஜினல் படங்கள், நேஷனல் படங்கள், இன்டெர் நேஷனல் படங்கள் என பல விளம்பரப் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். உதாரணத்துக்குப் பட்டுச் சேலை என்றால் ரீஜினல் வேல்யூதான். பைக் விளம்பரம், பவுடர், சோப்பு விளம்பரம் போன்றவை நேஷனல் வேல்யூ





உள்ளவை. வெளிநாட்டுக் கார், சாக்லெட் போன்றவை சர்வதேச விளம்பரங்கள். தமிழ்நாட்டில் ஏராளமான விளம்பர ஏஜென்ஸிகள் உள்ளன. இருப்பினும் வட இந்தியர்கள்தான் விளம்பரத்துறையில் சக்கைபோடு போடுகின்றனர். இப்போது நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் மும்பை தயாரிப்புகள்தான்.

ஆனால் அதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் முதல் பத்துபேரை எடுத்தால் அதில் ஆறுபேர் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதுதான் மகிழ்ச்சியான விஷயம்.

பி.சி. ஸ்ரீராம், ரவி.கே. சந்திரன், ராஜீவ் மேனன், கே.வி. ஆனந்த், நட்ராஜ் சுப்ரமணியன் போன்ற பலரும் தமிழகத்தைச் சேர்ந்த கேமிரா மேன்கள்தான். விளம்பரப் படங்களில் இயக்குநருக்கு இணையாக ஒளிப்பதிவாளர்களுக்கு முக்கியத்துவம் உண்டு.

நேஷனல் விளம்பரங்கள் என்றால் இந்திய அளவில் தெரிந்த பிரமுகராகத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள். இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் அல்லது கிரிக்கெட் பிளேயர்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். அல்லது இந்திய முகமாகத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. லொகேஷன் தேர்வு செய்வதில் ஒளிப்பதிவாளரின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

கான்செப்டைப் பொறுத்தவரை விளம்பர ஏஜன்ஸிகள் முடிவு செய்கிறார்கள். சிலர் இயக்குநர்களிடம் கலந்து கான்செப்ட் பிடிப்பார்கள். நான் எடுத்த ஒரு பவுடர் விளம்பரத்துக்கு "ரன் ரோலா ரன்' என்ற ஜெர்மன் படத்தில் வருவது போல விளம்பரமே ஓட்டமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

காலை பரபரப்பில் ஒரு பெண்ணின் கையில் பவுடர் டின் இருக்கிறது. பிறகு வேறொருவர் கையில். மதியம் வேறொருவர் கையில். மாலை ஒரு குழந்தையின் கையில்... என்று ஒருநாளில் பவுடர் கை மாறுவதை எடுத்துக் கொடுத்தேன்.

நேஷனல் லெவல் விளம்பரங்களில் சில ப்ராடக்ட் சில மாவட்டங்களில் எடுபடாமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சில ப்ராடக்டின் பெயர்களே பிற மொழிகளில் வேறு அர்த்தம் தருவதாக அமைந்துவிடும். அதே போல் இந்தியில் பேசும் வசன உச்சரிப்புக்கு ஏற்ற மாதிரி தமிழில் வசனம் எழுத வேண்டியிருக்கும். தொலைக்காட்சியில் வெளிவந்த "ஜுனூன்' இந்தி தொடர், தமிழில் வெளியான போது அதைத் தமிழ்ப்படுத்தியபோது ஜுனூன் தமிழ் என்ற பிரயோகமே உருவானது. அதை மக்கள் ரசித்தார்கள். அப்படித்தான் சில தமிழ்ப்படுத்தப்பட்ட விளம்பரங்களும் ரசிக்கப்படுகின்றன.

இந்தி விளம்பரத்துறையில் அசோக் மேத்தா, வினோத் பிரதான், பரூன் முகர்ஜி ("ராஜபார்வை' பட ஒளிப்பதிவாளர்), கிரண் தியோன் போன்றவர்கள் தயாரிக்கும் விளம்பரப்படங்கள்தான் இந்திய அளவில் பேசப்படுகின்றன.

அதே போல் இந்தியில் பிரபலமான கான்ùஸப்ட் நிபுணர்கள் இருக்கிறார்கள். ப்ரூசூன் பாண்டே (டைரக்டர்), ப்யூஸ் பாண்டே (கான்செப்ட் ரைட்டர்) போன்றவர்கள் முக்கியமானவர்கள். உதாரணத்துக்கு ஃபெவிகால் டப்பாவில் கோழித் தீவனத்தைத் தின்ற கோழியின் முட்டை, உடைக்கவே முடியாத அளவுக்குக் கடினமாக மாறிவிட்டதாகச் சொன்னது அவருடைய விளம்பரம்தான். சில விளம்பரங்களில் உண்மையை மிகைப்படுத்திச் சொல்வதை மக்கள் ரசிக்கிறார்கள்.

முப்பது செகண்டுக்குள் ஒரு சிறுகதை போல சொல்லும் விளம்பரங்களும் உண்டு. ஒரு செல்போன் விளம்பரம். தாத்தா பாட்டியைப் பார்க்க மாட்டு வண்டிப் பிரயாணம் எல்லாம் செய்து பேரன் வருகிறான். தாத்தாவுக்குக் கோபம். "20 வருஷமா பேசாதவனோட பையன் இப்ப எதுக்கு வந்தான்?' என்கிறார். "அப்பாவைக் கூட்டிகிட்டு வந்திருக்கேன் தாத்தா' என்கிறான் பேரன். தாத்தா முகத்தில் சின்ன எதிர்பார்ப்பு. பேரன் செல் போனை நீட்டுகிறான். "என்னை மன்னிச்சுடுங்கப்பா' என்கிறது செல்போன் குரல். "அட அதனால என்னடா' என்று தாத்தா அவரது மகனிடம் செல்போனில் சமாதானமாகிறார்.

இதுதான் விளம்பத்தின் விந்தை. இரண்டரை மணிநேர சினிமாவை 30 செகண்டில் சொல்ல வேண்டிய சவால்.

விளம்பரப் படம் எடுத்தவர்கள் சினிமாவுக்கு வரும்போது ரொம்ப நுணுக்கமாகக் காட்சிகளை வைப்பதைப் பார்க்கலாம். தேவையில்லாமல் ஒரு ஷாட் கூட இருக்காது. ராஜீவ் மேனன், பி.சி. ஸ்ரீராம் படங்களில் இதை உணரலாம்.

டி.வி. வந்ததால் சினிமா பாதித்ததாகக் கருத்துகள் உண்டு. ஆனால் டி.வி. வந்தபிறகு விளம்பரப் படங்கள் எடுப்பவர்கள் அதிகரித்தார்கள்.

என் குழந்தை டி.வி.யில் வருகிற விளம்பரங்களைப் பார்த்துவிட்டுத்தான் என்ன ஐஸ் கிரீம் வேண்டும், எந்தக் கடையில் துணி எடுக்க வேண்டும் என்கிறாள். சமூகத்தின் மீது விளம்பரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பிரமிக்க வைக்கிறது. அது நல்லதா என்பது வேறு விஷயம்.

டி.வி.யில் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் விளம்பரப் படங்களின் ஆட்சிதானே?'' என்று முடித்தார் ரவிவர்மன்.

டி.வி.யை மட்டுமல்ல, வாழ்க்கையின் பாதியையும் விளம்பரம்தானே ஆக்கிரமித்திருக்கிறது?

தமிழ்மகன்

சனி, நவம்பர் 10, 2007

என் கணவர் எனக்கு ஜீனியர்..!







கணவனும் மனைவியும் ஒரே துறையில் இருப்பது பல நேரங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருக்கும். சில நேரங்களில் அதுவே இடையூறாக இருக்கும். அதுவும் படைப்பு சார்ந்த துறைகளாக இருந்தால் ஈகோ எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடும். புகழும் பணமும் செல்வாக்கும் நிறைந்த சினிமா துறையில் கேட்கவே வேண்டாம். இந்த எழுதப்படாத வரையறைகளை மீறி சில தம்பதிகள் இருக்கிறார்கள். இதோ "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியாவும் அவருடைய கணவர் பூஷணும் அதற்கான உதாரண தம்பதிகள்.

தீபாவளிக்கு தம் படத்தைத் திரையிட வேண்டிய மும்முர பணியில் இருந்த ப்ரியா அத்தனை வேலை அழுத்தத்திலும் கலகலப்பாகப் பேசுகிறார்.




எப்படி இத்தனை இறுக்கமான நேரத்திலும் அமைதியாக இருக்க முடிகிறது? என்று ஆரம்பித்தோம்.

குடும்பத்தின் பக்க பலம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. காலையில் 9 மணிக்கு உங்களை இங்கே வரச் சொல்லிவிட்டு நான் கணவருக்கு டிபன் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் நான் இங்கு வர முடியுமா? இன்று என் வேலையை என் கணவர்தான் பார்த்துக் கொள்கிறார். இங்கே என் வேலையைப் பகிர்ந்து கொள்கிற உதவியாளர்கள்... அப்புறம் அமைதியாகப் பணியாற்றுவதில் என்ன சிக்கல்?




நமக்குத் தொழில் சினிமா என்று நீங்கள் இந்த வேலையைத் தேர்வு செய்த சந்தர்ப்பத்தில் உங்கள் வீட்டில் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?

எனக்கு ஒரு அண்ணன், இரண்டு அக்கா. அண்ணனுக்கும் எனக்கும் 14 ஆண்டு இடைவெளி. வீட்டில் எனக்குக் கடைக்குட்டிக்கான முக்கியத்துவம் இருந்தது. நானே முடிவெடுக்கிற சுதந்திரமும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. பள்ளிப்பருவத்தில் நாடகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, என்னை கிறித்துவக் கல்லூரிக்கும் அதன் பிறகு திரைப்படக் கல்லூரிக்கும் இட்டுச் சென்றது. கிறித்துவக் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை சுகாசினி எனக்குப் பழக்கமாகி "பெண்' சீரியலில் நடிக்கவும் வைத்தார். ஆனால் எனக்கு இயக்குநர் ஆவதில்தான் விருப்பம் என்பதால் அவரிடமே உதவி இயக்குநராகி "இந்திரா'வில் பணியாற்றினேன். அதன் பிறகு "இருவர்' படத்தில் மணிரத்னத்தின் உதவியாளரானேன். அவரிடம் தொடர்ந்து நான்கு படங்கள் பணியாற்றினேன். தொடர்ந்து சிக்கல் இல்லாமல் என் பயணம் சென்று கொண்டிருந்ததால் எந்தக் கேள்வியும் எழவில்லை.

கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்பது போல "கல்யாணத்துக்குப் பிறகு படம் இயக்குவீர்களா?' என்ற கேள்வியை எதிர் கொண்டீர்களா?.

இல்லவே இல்லை. என் குடும்பத்தில் எனக்குச் சுதந்திரம் கொடுத்தது போலவே என் மாமியார் வீட்டிலும் எனக்கான சுதந்திரத்தை அனுமதித்திருக்கிறார்கள். என் கணவரும் சினிமா துறையைச் சார்ந்தவர் என்பதால் அதற்கான சிரமங்களைத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அவர் ஷியாம் பெனகலிடம் பணியாற்றிவிட்டு இப்போது தெலுங்கில் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த விதத்தில் நான் அவருக்கு சீனியர். "கண்டநாள் முதல்' படத்தைத் தொடர்ந்து "கண்ணா மூச்சி ஏனடா' படத்தையும் இயக்கிவிட்டேன் (சிரிக்கிறார்).

இந்தப் படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் (ராதிகா), ஒளிப்பதிவாளர் (ப்ரீதா), பாடலாசிரியர் (தாமரை) எனப் பலரும் பெண்களாக இருந்தது உங்களுக்குப் பணியாற்ற வசதியாக இருந்ததா?

முதல் படத்தில் எல்லாத் தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆண்கள்தான். அதிலுமே எனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லையே... பெண் என்பதால் எனக்கு எந்தச் சலுகையும் இருந்ததில்லை. சங்கடங்களும் இருந்ததில்லை.


தமிழ்மகன்

படங்கள்:மீனம் மனோ

திருவாளர் 50%... திருமதி 50%...









ஸ்ரீதர் இயக்கிய "தென்றலே என்னைத் தொடு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயஸ்ரீ. தொடர்ந்து "திருமதி ஒரு வெகுமதி', "தாலிதானம்' போன்ற குடும்பப்பாங்கான படங்களில் நடித்ததாலோ என்னவோ இப்போது குடும்பப் பாங்கான நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். சன் டி.வி.யின் திருவாளர் - திருமதி நிகழ்ச்சியை இவர் சமாளிப்பதே அலாதிதான். தம்பதியருக்கு அன்புச் சவால்விடுவதும் பின்பு அவர்களை கண்ட்ரோலுக்குக் கொண்டு வருவதும் இவருடைய ஸ்பெஷாலிட்டி.
இத்தனைக்கும் இவர் அமெரிக்காவில் இருந்து வந்து திருவாளர்- திருமதிகளைக் கலாய்த்துவிட்டுச் செல்கிறார் என்றால் யாராவது நம்புவார்களா?






26 -வது எபிசோட் நிகழ்ச்சியை நடத்தித் தருவதற்காகச் சென்னை வந்திருந்த அவரை மடக்கிக் கலாய்த்தோம்.

இங்கிருக்கும் தம்பதிகளைக் கலாய்ப்பதற்கு அமெரிக்காவில் இருக்கும் இருக்கும் உங்களைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம்?

நான் அமெரிக்கா போய் 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக யாராவது வெளிநாட்டில் இருந்தால் இங்கே மறந்தே போயிருப்பார்கள். ஆனாலும் நான் இங்கேயே இருப்பதைப் போல ஒரு தோரணையை உருவாக்கி வந்திருக்கிறேன். அதுதான் இந்த நிகழ்ச்சி எனக்குக் கிடைப்பதற்குக் காரணம். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் இங்கே மீடியாவுக்குத் தெரிகிறமாதிரி ஏதாவது செய்துவிட்டுச் செல்வதுதான் அதற்குக் காரணம். ஒருமுறை வந்தபோது கே.எஸ். ரவிகுமார் இயக்கிய "பிஸ்தா' படத்தில் நக்மாவின் அக்காவாக நடித்தேன். அடுத்தமுறை வந்தபோது ராமராஜன் இயக்கிய "விவசாயி மகன்' படத்தில் தேவயானியின் அக்காவாக நடித்துவிட்டுச் சென்றேன். இங்கேயே இருந்து கொண்டு படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறேன். ராதிகாதான் அதிரடியாக இந்த வேலையைக் கொடுத்து நிரந்தரமாக திரையில் தோன்ற வழி செய்தார்.

நான் அமெரிக்காவில் இருக்கும்போதும் ராதிகா, சுஹாசினி போன்றவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். ராடான் டி.வி.க்காக ராதிகா தயாரித்த இந்த நிகழ்ச்சிக்கு நான் பொருத்தமானவளாக இருப்பேன் என்று முடிவெடுத்து என்னை அழைத்தார். ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் அடுத்த சில வாரங்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து விடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்தால் போதும், தேவையான நிகழ்ச்சிகள் ரெடி!.

என்னுடைய இரண்டு மகன்களும் குழந்தைகளாக இருந்தபோது அடிக்கடி வரமுடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். பெரியவனுக்கு 13 வயது ஆகிவிட்டது. (அட, அவ்வளவு பெரிய பையனா?) இனிமேல் அடிக்கடி வந்து போகமுடியும் என்பதால் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின்போது, இது நிகழ்ச்சி என்பதையும் மறந்து தம்பதிகளை எல்லைமீறிப் போகும்படி செய்கிறீர்களே நியாயமா?

நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே அதுதானே? அப்படி எல்லை மீறுகிறவர்கள் சுவாரஸ்யம் கருதி அதைப் புரிந்தே செய்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். நிகழ்ச்சி நன்றாக வருவதற்குக் கலந்து கொள்பவர்களின் "இன்வால்வ்மெண்ட்' முக்கியமாக இருக்கிறது.

கணவன் மனைவி பிரச்சினை என்பது பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடியதுதான் என்பதே இதன் அடிநாதமான அம்சம். பிரச்சினைகளைப் பேசாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பதால் அது தீர்ந்து விடப்போவதில்லை. பேசுங்கள்... சண்டையிடுங்கள்... இறுதியில் முடிவுக்கு வாருங்கள்... என்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்.

வெளியிடங்களில் உங்களைச் சந்திக்கிற தம்பதிகளிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவம் ஏதாவது உண்டா?

தம்பதியரைச் சிக்கலில் மாட்டிவிட்டு ரசிப்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அப்பாவும்- அம்மாவும் மாட்டிக் கொண்டு முழிப்பது குழந்தைகளுக்குத் தமாஷாக இருக்கிறதோ, என்னவோ? பாஸ்டன் நகரில் நாங்கள் ஒரு ஹோட்டலில் பிட்ஸô சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது எங்களுக்கு அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் இந்தியக் குடும்பத்தில் இருந்து ஒரு சிறுமி என்னிடம் வந்து திருவாளர் நிகழ்ச்சியைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டாள். எங்கள் வீட்டுக்கருகே எனக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. அப்படி அவர்கள் புகழும்போது என்னுடைய பெரிய மகனின் ரியாக்ஷனைப் பார்க்க வேண்டுமே... "இதெல்லாம் ரொம்ப ஓவர்' என்பதுபோல கண்ணை மேலே உருட்டி பாவனை காட்டுவான். சின்னவனுக்கு அம்மாவை எல்லோரும் பாராட்டுவது ஆச்சர்யமாக இருக்கும். "எப்படிம்மா உன்னை எல்லாருக்கும் தெரியுது?' என்று ஆச்சரியமாகக் கேட்கிறான்.

அது சரி... இன்னும் "உங்கள்' திருவாளர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?






என் கணவர் பெயர் சந்திரசேகர். இப்படி நிகழ்ச்சியெல்லாம் நடத்த அனுமதித்திருப்பதிலிருந்தே அவர் எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் சிலிகான் வேலியில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நான் பொழுதுபோகாமல் இருப்பதைப் பார்த்து என்னை சாஃப்ட்வேர் படிக்க வைத்து அங்கு பணியாற்றவும் உதவினார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு படித்து வேலைக்குப் போனேன். எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார். குடும்பப் பிரச்சினைகளில் இருவரும் சேர்ந்தே முடிவுகள் எடுக்கிறோம். ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்வோம். அதற்குத் தடையில்லாதவாறு என்னுடைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ள சொல்வதுதான் அவருடைய ஒரே கண்டிஷன். குடும்பத்தில் திருவாளர், திருமதி இருவரும் 50% 50% ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் 100% மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தியத் தம்பதிகள் } அமெரிக்கத் தம்பதிகள் உங்கள் பார்வையில்?

குடும்பங்கள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அங்கேயும் மாமியார் சண்டை, நாத்தனார் சண்டை இருக்கிறது. ஒரே வித்தியாசம் அங்கே ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சமயங்களில் 'தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்' சண்டைக்கான ஒரு காரணமாக அமைந்துவிடும்.

அது என்ன தேங்க்ஸ் கிவ்விங் ஃபங்ஷன்?

அமெரிக்கர்களுக்கு கிருஸ்துமஸ்ஸýம் தாங்க்ஸ் கிவ்விங்கும் முக்கியமான விழாக்கள். கிருஸ்துமஸ் டிசம்பரில் வரும் அதற்கு முந்தைய மாதத்தில் அதாவது நவம்பர் கடைசி வியாழக்கிழமை நன்றி தெரிவிக்கும் விழா.

அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குச் செவ்விந்தியர்கள் அளித்த விழா இது. சோளத்தையும் வான்கோழியையும் விருந்துக்குப் பயன்படுத்துவார்கள். யாருக்கு நன்றி சொல்லி கெüரவிக்க நினைக்கிறோமோ அவர்கள் வீட்டுக்குச் சென்று இப்படி விருந்தளிக்க வேண்டும். இப்போதும் அமெரிக்கப் பெண்மணிகள் இந்த வருஷம் தேங்க்ஸ் கிவ்விங் எங்கள் பெற்றோருக்குத்தான் என்பார்கள். ஆண்கள் தங்கள் பெற்றோர் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்பார்கள். நன்றி சொல்வதற்கு அவர்களுக்குள் போராட்டமே வெடிக்கும்.

திருமதி ஒரு வெகுமதி.... திருவாளர் திருமதி ஒப்பிட முடியுமா?

அது சினிமா.... இது டி.வி. அங்கு என்னை இயக்கினார்கள். இங்கு நான் இயக்குகிறேன். சினிமா கொஞ்சநாள் கழித்து டி.வி.க்கு வந்து விடுகிறது. டி.வி. நிகழ்ச்சிகள் சினிமாவில் வருவதற்கு வாய்ப்பில்லை.

தமிழ்மகன்

வீட்டில் இருந்தே விண்வெளி ஆய்வு!





விஞ்ஞானம் பல அறிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானம் படித்த அறிஞர்களால் இன்றியும் நிகழ்த்தியிருக்கிறது. டைனமோ கண்டுபிடித்த மைக்கேல் ஃபேரடே, மரபியல் சோதனைகளை நிகழ்த்திய கிரிகெர் மென்டல் தங்கள் கல்லூரிகளில் அதற்கான விஞ்ஞானப் படிப்புகளைப் படிக்காமல் விஞ்ஞானிகள் என்று போற்றப்படுகிறவர்கள். சென்னை பாடியில் ஆதம் ஆரம்பப் பள்ளிக் கூடம் நடத்திவரும் ஜெகநாதன் பெனலன் அப்படிப்பட்ட ஒருவர்தான்.

""நான் ஒரு விசித்திரப் பிறவி. பகலெல்லாம் தூங்கி இரவில் கண்விழித்துக் கிடப்பேன். மண்ணுலகைவிட விண்ணுலகம்தான் எனக்கு அதிக பரிச்சயம்.

இருபது ஆண்டுகளாக என் அறையைப் பகிர்ந்து கொள்வது புத்தகங்கள்தான்'' என்று அவர் படுக்கையில் இறைந்து கிடக்கும் புத்தகங்களைக் காட்டுகிறார். விண்வெளி சம்பந்தமான ஆய்வறிக்கைகள், சஞ்சிகைகள், கார்ல்சேகன் புத்தகங்கள் என்று பாதியிடத்தைப் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. இயல்பாக நமக்குள் கேள்வி பிறக்கிறது.

எப்படி உங்களுக்கு விண்வெளி ஆய்வில் ஈடுபாடு ஏற்பட்டது?

நான் பிறந்து ஒன்றரை வயதில் என் தாயார் இறந்து விட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தேன். அம்மாவைக் கேட்டு அழும்போதெல்லாம் பாட்டி நிலாவைக் காட்டி "உங்க அம்மா அங்கதான் இருக்கா வந்துடுவா' என்பார். எனக்கு நிலாமீது மெல்ல மெல்ல ஈர்ப்பு ஏற்பட்டது. வானம் என்னுள் எல்லையற்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

யாருமற்ற நான், என் சொந்த அக்கா வீட்டில் தங்கிப் படித்தேன். பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு என் மைத்துனர் காமாட்ஷி, புலவர் குழந்தை, மன்னை நாராயணசாமி ஆகியோர் பழக்கத்தில் கலைஞரின் "பரப்பிரம்மம்' நாடகத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பள்ளிப்பருவம் முடித்த இளைஞனாக இருந்தேன். அந்த நாடகத்தை 40 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறேன். சிவாஜி, கலைஞர் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். அது ஒரு கட்டம். பின்னர் வாழ்க்கை என்னைத் துரத்தியது. என் பாலிடெக்னிக் படிப்பை ஒட்டி பாடியில் தொழில்துறையில் இறங்கினேன். நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் என் மனம் தொடர்ந்து அமைதியையும் விண்வெளியையும் நாடிக் கொண்டிருந்தது. பள்ளிக் கூடம் ஒன்று துவங்கி அதை என் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு முழுநேர விண்வெளி ஆய்வில் இறங்கினேன்.

வீட்டில் இருந்தபடியே ஆய்வு செய்கிறீர்களா? இது எந்த வகையில் பயனளிக்கிறது?

வீட்டில் இருந்தே விண்வெளியைப் பார்ப்பதற்கான சகல வசதிகளையும் வைத்திருக்கிறேன். இவற்றைப் பாடியில் இன்டஸ்ட்ரி வைத்திருக்கும் பலர் எனக்கு ஸ்பான்ஸர் செய்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்கள் சேர்ந்து "டேன் அஸ்ட்ரானமி அúஸôசியேசன்' நடத்தி வருகிறோம். அப்துல் கலாம், மு. அனந்தகிருஷ்ணன், முன்னாள் தமிழக அரசு செயலர் டி.வி. வெங்கடராமன் போன்ற பலர் எங்களுக்குப் பெரிய ஆதரவளித்துப் போற்றியிருக்கிறார்கள். நான் அந்த அமைப்பின் ஃபவுண்டர்

செகரட்டரி.

இதனால் இந்தியா முழுக்க இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரியிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. வடமூலையில் இருக்கும் ஒருவரின் பார்வைக்குக் கிட்டாத ஒரு நட்சத்திரத்தைத் தென்பகுதியில் பார்க்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் ஆராய விரும்பும் கோள்களையோ, நட்சத்திரத்தையோ எங்களை அப்ஸர்வ் செய்யச் சொல்லுவார்கள். எங்களுக்குத் தேவையானபோது அவர்களிடம் செல்வோம்.

உங்கள் அமைப்பின் வேறு செயல்பாடுகள் என்ன?

அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலில் இருக்கும் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி, பிர்லா கோளரங்கம் போன்ற இடங்களிலும் ஆய்வுக்குக் குழுவாகச் செல்வோம். என்னுடைய கட்டுரைகள் பல பிர்லா கோளரங்கத்தின் பிரைவேட் சர்குலேஷன் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உதகையில் மலைச் சிகரங்களில் கூடாரம் அமைத்தும் ஆய்வுகள் மேற்கொள்வோம்.

லண்டனில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலும் எங்கள் அமைப்பைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். எங்கள் கட்டுரைகள் தான். "தீஸிஸ்' வகையைச் சார்ந்தவை அல்ல. விஞ்ஞானிகளின் கட்டுரைகள் தீஸிஸ் எனப்படும். எங்களைப் போன்றோர் ஆய்வுகளை "ஹைபாதீஸிஸ்' வகை கட்டுரைகள் என்பார்கள்.

உங்களுடைய கட்டுரை களுக்குக் கிடைத்த வரவேற்பு ஏதாவது?

சூரியனிலிருந்து ஏராளமான நியூட்ரினோக்கள் வெளியாகின்றன. ஆனால் அவை பூமியை வந்தடைவதில்லை. என்னுடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அவை பூமிக்கு நியூட்ரினோக்களாக வருவதில்லையே தவிர, அவை வேறு வடிவங்களாக இங்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன என்று எழுதியிருந்தேன். பென்சில்வேனியாவைச் சேர்ந்த டாக்டர் ராம்னட் டேவிஸ் என்ற விஞ்ஞானி அதே ஆய்வைச் செய்து, நியூட்ரினோக்கள், தாவோ நியூட்ரினோவாகவும் மூவி நியூட்ரினோவாகவும் உருமாறி பூமிக்கு வருவதாகச் சொன்னார். அவருக்கு 2006 ஆம் ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது. இது என்னுடைய ஆய்வுக்குக் கிடைத்தப் பெருமையாக நினைக்கிறேன்.

இத் துறையில் நீங்கள் வியக்கும் இந்திய விஞ்ஞானிகள்...?

நிறைய இருக்கிறார்கள். ஆனால் மறக்கப்பட்டுவிட்ட விஞ்ஞானிகளைப் பற்றித்தான். என்னுடைய கவலை. 1921- ஆம் ஆண்டில் கொடைக்கானல் அப்ஸர்வேட்டரியில் தன் ஐந்தாண்டுகால ஆய்வுக்குப் பின் ஏ.ஏ.நாராயண ஐயர் என்ற விஞ்ஞானி வீனஸ் கிரகம் எதிர் கடிகாரச் சுற்றாகச் சுழல்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்.

அது வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்களால் சிலாகிக்கப்பட்டு அவர்களின் பதிவேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இதுவரை யாராலும் எடுத்துச் சொல்லப்படவில்லை. "அஸ்ட்ரானமி இன் இந்தியா' என்ற நூலிலும் விடுபட்டுள்ளது. இந்நூல் புதுதில்லியில் உள்ள "இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி' வெளியிட்ட ஆவணநூலாகும்.வீனஸ் கிரகம் இடப்பக்கம் சுழல்வதை 1963-க்குப் பிறகு அங்குச் செயற்கைகோள்கள் அனுப்பிய பிறகுதான் அறிவித்தார்கள். இந்தப் பேட்டியின் மூலம் மறந்துபோன அந்த சாதனை வெளி உலகத்துக்குத் தெரிந்தால் அதுவே போதும்.

உங்கள் ஆய்வு மையத்தில் பொது மக்களை அனுமதிக்கிறீர்களா?

ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு எட்டுமணியிலிருந்து பத்துமணிவரை மக்களை அனுமதிக்கிறேன். இது தவிர "அஸ்ட்ரானமி ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் எனது ஆய்வுச் சாலையை தமிழகம் முழுதும் கொண்டு செல்ல இருக்கிறேன். அதை செப்டம்பரில் அப்துல்கலாம் துவங்கி வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

தமிழ்மகன்

வெள்ளி, நவம்பர் 09, 2007

மெட்ராஸ் டூ அயோவா!








ஆசியாவிலேயே சினிமா ஸ்டூடியோக்கள் மிக அதிக அளவில் இருந்த இடம் சென்னை என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஏறத்தாழ 20 ஸ்டூடியோக்கள் சின்னதும் பெரிதுமாக சென்னையில் இருந்தன. இப்போது இரண்டு, மூன்று ஸ்டூடியோக்கள் தவிர மற்றவை எல்லாம் அப்பார்ட்மென்டுகளாகவும் கொடோவுன்களாகவும் மாறிவிட்டன. சினிமாவில் பிரமாண்டங் களைக் காண்பித்துவிட்டு நிஜத்தில் காணாமல் போன அந்த ஸ்டூடியோக்களைப் பற்றி ஆய்வு செய்துவருகிறார் அமெரிக்கப் பேராசிரியர் சொர்ணவேல். ஒருமாத பயணமாகச் சென்னை வந்திருக்கும் அவரைச் சந்தித்தோம்.

உங்களைப் பற்றியும் உங்கள் ஆய்வைப் பற்றியும் சில வார்த்தைகள்...?

நான் "அயோவா பல்கலை'யில் ஃபிலிம் ஸ்டடீஸ் டிப்பார்ட்மென்டில் பேராசிரியர். சிகாகோவிலிருந்து 3 மணி நேர தூரத்தில் எங்கள் பல்கலை அமைந்திருக்கிறது. நான் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவன். பூனாவில் டி.எஃப்.டி. முடித்தேன். சிலகாலம் டைரக்டர் சேகர்கபூரிடம் பணியாற்றினேன். கடந்த ஆறு ஆண்டுகளாக அயோவா பல்கலையில் பணியாற்றுகிறேன்.

நீங்கள் இப்போது செய்துவரும் ஆய்வு எத்தகையது? அதற்கு என்ன அவசியம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

"தி மெட்ராஸ் ஸ்டூடியோ சிஸ்டம்' என்பது என் ஆய்வின் தலைப்பு. மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் இங்கு ஸ்டூடியோக்கள் இயங்கின. ஆனால் அவை இருந்ததற்கான தடயங்களைக்கூட இப்போது பெற முடியாத நிலை. அவை பற்றிய சரியான புத்தகங்களும் இல்லை. அப்போது கோல்டன் ஸ்டூடியோ மிகப் பெரிய ஸ்டூடியோவாக இயங்கி வந்தது. ஆனால் அந்த இடத்தில் இப்போது அந்த ஸ்டூடியோ ஃப்ளோர்கள் கொடவுன்களாக இருக்கின்றன. அங்கு விசாரிக்கச் சென்றால் "இங்கே ஸ்டூடியோ இருந்ததா' என்று நம்மையே ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். உலக சினிமாவோடு போட்டி போட்டு வியாபாரம் செய்யும் நிலைக்கு தமிழ் சினிமா உயர்ந்திருந்தாலும் நம் சினிமாவுக்கான சரித்திரம் ஆதாரம் போதுமானதாக இல்லை. அதேசமயம் இந்தி பட உலகுக்கு சரித்திர சான்றுகள் உள்ளன. எங்கள் பல்கலையிலேயே இந்தி திரையுலகம் சம்பந்தமான புத்தகங்களை எங்கள் பல்கலையே பிரசுரித்திருக்கிறது. தமிழில் அத்தகைய நிலை உருவாக வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த ஆய்வு.

இந்த ஸ்டூடியோக்களின் அரிய சாதனைகள் என்று நீங்கள் கருதும் சில அம்சங்கள்?

ஏவி.எம்.ஸ்டூடியோ புத்தகங்களாக சில சம்பவங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ட்ராலி இல்லாத நேரத்தில் ரயில் தண்டவாளங்களைப் பயன்படுத்தி மெய்யப்பச் செட்டியார் படப்பிடிப்பில் புதுமைச் செய்திருக்கிறார். எஸ்.எஸ். வாசன் பிரம்மாண்டமான செட்டுகளால் பிரமிக்க வைத்தார். "சந்திரலேகா' ஆங்கிலப் படங்களுக்கு நிகராக தயாரான படம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் ஆங்கிலப் படங்களைத் தழுவி பல படங்களை உருவாக்கினார். வாகினி, பிரசாத் ஸ்டூடியோக்கள் பிரம்மாண்டமான ஃப்ளோர்களை வைத்திருந்தார்கள். இந்தி படக்குழுவினர் எல்லாம் இந்த பெரிய தளங்களுக்காகவே இங்கு வந்து படம் எடுத்திருக்கிறார்கள். பட்ஷிராஜாவின் "மலைக்கள்ளன்' தமிழிலும் பிறகு இந்தியிலும் தயாரான படம். திலிப் குமார், மீனா குமாரி போன்ற அந்நாளைய பெரிய நட்சத்திரங்களை வைத்து சென்னையில் உருவாக்கப்பட்ட படம். அரங்குகள் அதை வடிவமைத்த விதம், அங்கு படமாக்கப்பட்ட விதம் என்று என் ஆய்வில் முக்கிய பகுதிகள் உண்டு.

தமிழ் திரையுலகம் குறித்து ஆங்கிலத்தில் பெரிய அளவில் புத்தகங்கள் வெளிவராதது முக்கிய குறையாக இருக்கிறதா?

பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு அதை வெளியே தெரிவிக்காமல் இருக்கிறோம். அதுதான் குறை. நம்மைவிட குறைவாகச் சாதனை செய்தவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு. தியோடர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் நூல் எழுதியிருக்கிறார். வெங்கட் சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்றோர் விமர்சன கட்டுரை வடிவில் சில நூல்கள் தந்திருக்கிறார்கள். அறந்தை நாராயணன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார்கை போன்றோர் தகவல் திரட்டு வடிவத்தில் நூல்கள் தந்திருக்கிறார்கள். எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஹரிகரன் போன்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் முக்கியமானவை. "பராசக்தி' படத்தைப் பற்றி மட்டுமே எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இன்னும் சில நூல்களும் கிடைத்திருக்கின்றன. ஆயினும் இவை போதாது. முழு தமிழ் சினிமாவையும் பற்றிய போதுமான திரட்டாக இவற்றை மட்டும் சொல்ல முடியாது.

உங்கள் ஆய்வில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் காலகட்டம்?

1947-லிருந்து 1975 வரை. ஸ்டூடியோக்களின் பிரம்மாண்டமும் இந்தக் காலகட்டத்தில்தான் முழுவீச்சில் இருந்தது. அதன் பிறகு ஸ்டியோவிலிருந்து காமிராக்கள் வெளியே பிரயாணிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கு முக்கிய காரணம், சினிமா வண்ணத்தில் வெளியாக ஆரம்பித்தது. இன்னொரு காரணம் அதிக எடையுள்ள மிட்ச்சில் காமிராவிலிருந்து எடை குறைந்த ஹாரி காமிராக்கள் உருவானது. இது வெளியே கொண்டு செல்ல ஏதுவானது. பிறகு ஹாண்டி கேமிராக்கள் உருவாகின. இது மேலும் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு உதவியது. இதையெல்லாம்விட முக்கிய காரணம், சினிமாவில் உருவான புதிய அலை, புதிய கருத்தோட்டம், எதார்த்தவாதம், புதிய தொழில்நுட்பம் ஆகியவை. அதன்பிறகு அரங்குகள் என்பவை கனவுக் காட்சிகளுக்கானது என்று மாறிப்போனது.

உங்களுடைய பார்வையில் தமிழ்சினிமா பற்றி?

தொழில்நுட்ப ரீதியாக அதி முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். வி.சி. கணேசன் (சிவாஜி) அறிமுகமான "பராசக்தி' படத்தையும் அவர் பெயரில் ரஜினி நடித்திருக்கும் படத்தையும் ஏவி.எம். நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதிலும் ஹீரோ வெளிநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். இதிலும் ரஜினி வெளிநாட்டிலிருந்து வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். அதிலும் கல்யாணி என்ற கதாபாத்திரம் அப்பாவியாக இருக்கிறார். ஸ்ரேயாவும் ஜாதகப்படி திருமணம் செய்தால் கணவர் இறந்துவிடுவார் என்று நம்புபவராக, முடிவெடுக்க முடியாதவராக அழுகைப் பாத்திரமாக இருக்கிறார். அது திராவிடக் கொள்கை பேசியது. இது குளோபலைசேஷன் பேசுகிறது. சம்பவங்கள் வேறு, தொழில்நுட்பம் வேறு. யோசித்துப் பார்த்தால் அடிநாதமாக ஒரு ஃபார்முலா இதில் ஒளிந்திருப்பதைப் பார்க்கலாம். தமிழ் சினிமாவுக்கு தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பர்யம் இருப்பதைப் பார்க்கிறேன்.

தமிழ்மகன்

பச்சைத் தமிழனும் வெள்ளைத் தமிழனும்!




தமிழ்ப் படத்தில் நடிக்கும் தமிழ் நடிகைகள் யார் யார் என்று கேட்டால்... ரசிகர்கள் ரொம்பத்தான் குழம்பிப் போவார்கள். அசின், நமீதா, நயன்தாரா, ஸ்ரேயா, மாளவிகா, மீரா ஜாஸ்மின், ஜோதிகா, சிம்ரன்.... அட யாருமே தமிழ் நடிகை இல்லையே?

""மிக அதிக நாட்களாக தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை மனோரமாதான்'' என்று ஒருமுறை நடிகர் சத்யராஜ் நகைச்சுவையாகச் சொன்னார். ஆனால் இது நகைச்சுவையான விஷயம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். மீனா, த்ரிஷா, சங்கீதா... என பத்து விரல்களுக்குள் அடங்கிவிடுவார்கள்.



""தமிழ் ரசிகர்களுக்கு நடிகைகள் என்பவர்கள் வெள்ளை வேளேர் என்று இருக்க வேண்டும். கறுப்பாகவோ, மாநிறமாகவோ ஒரு நடிகையை தமிழ் ரசிகர்கள் கற்பனைகூட செய்து பார்ப்பதில்லை. கறுப்பு- வெள்ளை பட காலத்தில்தான் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லை நன்றாக நடித்தால் போதும் என்று நினைத்தார்கள். கலர் படங்கள் வெளிவர ஆரம்பித்ததுமே வண்ணம் ஒரு முக்கிய அம்சமாக மாறிவிட்டது'' என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

""நடிகைகள் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாராவது ஊர்வலம் போனார்களா...? தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவர்களாகவே இப்படி முடிவெடுக்கிறார்கள். அதை ரசிகர்களின் முடிவாகத் தெரிவிக்கிறார்கள். கதாநாயகி வேடத்தை விடுங்கள். நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஒரு படத்தின் கல்யாண காட்சி. நிறைய துணை நடிகைகள் தேவைப்பட்டார்கள். வந்திருந்த துணை நடிகைகளில் பாதி பேர் கறுப்பாக இருப்பதனால் நிராகரிக்கப்பட்டதைப் பார்த்தேன். கேட்டதற்கு "சிவப்பாக இருந்தால்தான் ஸீன் நன்றாக இருக்கும்' என்றார்கள். நிஜ வாழ்க்கையில் தமிழ் நாட்டில் எந்தக் கல்யாண ஆல்பத்தைப் பார்த்தாலும் பலர் கறுப்பாகத்தானே தெரிகிறார்கள்? அப்புறம் எப்படி இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை'' என்கிறார் தங்கர்பச்சான். கறுப்பாக இருந்தாலும் நந்திதா தாஸ்தானே இவருடைய "அழகி'?

ஒரு சந்திப்பின் போது தன்னுடைய படங்களில் எல்லாம் தொடர்ந்து வட இந்திய நடிகைகளாக இறக்குமதி செய்வதாக டைரக்டர் ஷங்கர் மீது ஒரு கேள்விக் கணையைப் பாய்ச்சியபோது அவர் சொன்ன பதில் இது:

""என்னுடைய முதல் படத்தின்போது கதையைப் பற்றி மட்டும்தான் யோசித்து வைத்திருந்தேன். "ஜென்டில்மேன்' படக் கதையை கமல்ஹாசன், சரத்குமார் என்று பலரிடம் சொன்னேன். கடைசியில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் தரப்பு பிரச்சினையால் அவர் நடிக்க முடியாமல் போனது. படத்துக்கு பூஜை தேதியெல்லாம் குறித்துவிட்டதால் உடனே வேறு ஒருவரை அவசரமாக முடிவு செய்ய வேண்டியிருந்தது.



சினிமா டைரக்டரியை எடுத்து ஹீரோ பெயர்களைப் பார்த்தபோது அகர வரிசைப்படி முதலில் அர்ஜுன் பெயர் இருந்தது. அவரையை பேசலாம் என்றேன். அதே போலத்தான் நாயகிகள் விஷயத்திலும் அப்போது பிரபலமாக இருந்த ரோஜா, மீனா ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது கால்ஷீட் கிடைக்கவில்லை. கதைக்குப் பொறுத்தமாக யார் கிடைக்கிறார்களோ அவர்களை வைத்து எடுப்பது என்று போனைச் சுழற்றினோம். மதுபாலா கிடைத்தார்.

அடுத்து "காதலன்' படத்தில் கவர்னரின் பெண் என்பதால் வட இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து நக்மாவைப் பிடித்தோம். தமிழக கவர்னர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்களாக இருப்பதனால் அந்த முடிவு. அப்புறம் "இந்தியனி'ல் சுகன்யாவும் கஸ்தூரியும் நடித்தார்கள். அவர்கள் தமிழ் நடிகைகள்தானே?'' என்றார் ஷங்கர். "சிவாஜி'யில் ரஜினியே வெள்ளையாக இல்லை என்று ஸ்ரேயா சொல்கிறார். ரஜினியும் வெள்ளைக்காரன் போல வேடமிட்டுக் கொண்டு "இதுவரை நான் பச்சைத் தமிழன் இனிமேல் வெள்ளைத் தமிழன்' என்று பாடியிருக்கிறார்.

இதில் பாடல் காட்சியில் மட்டுமே தேவைப்படுகிற நாயகிகளின் நிலை?

கதையும் பிரம்மாண்டமும் கதாநாயகனும் அமைந்துவிட்டால் போதும். கதாநாயகி பாடல்காட்சியில் டான்ஸ் ஆடுவதற்கு மட்டும்தான் என்ற நிலை இருக்கிறது. அதற்கு கொழுக் மொழுக் என்று சிவப்பான ஒரு கிளாமர் டால் இருந்தால் போதும் என்பதுதான் இன்றைய தமிழ்சினிமாவின் நிலை. என்ன சொல்கிறார்கள் தமிழ் படஉலகினர்?

""தமிழ்சினிமா என்று பிரித்துப் பார்ப்பது சரியாக இருக்காது. தமிழ்ப்படம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஓவர் சீஸ் எனப்படும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் விநியோகிக்கப்படுகிறது. நடிகையின் முகம் இந்திய லட்சணத்தோடு இந்திய அளவில் பிரபலமாக இருந்தால் அது பிசினஸýக்கு நல்லது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் ஒரு மீரான் சாஹிப் விநியோகஸ்தர்.

வளர்ந்து வரும் ஒரு தமிழ் நடிகையின் தாய்க்குலம் சொன்ன விஷயம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.



""வேறு மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் நாம் நடிப்பது நம்ம ஊரு மக்களுக்குத் தெரியப் போவதில்லை என்ற தைரியத்திலேயே அளவுக்கு அதிகமாகக் கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள். இங்கே பிறந்தவர்களுக்கு அப்படி நடித்துவிட்டு மீண்டும் இங்கே நடமாடுவதில் கூச்சம் இருக்கிறது'' என்கிறார்.

குஜராத்தில் இருந்து வந்த தேஜாஸ்ரீயிடம் இதற்கு பதில் கேட்டபோது, ""ஏன் இங்கே கூச்சமாக இருந்தால் இவர்கள் எல்லாம் ஹிந்தி படத்தில் போய் கலக்க வேண்டியதுதானே?'' என்கிறார்.

மணமகள் தேவை பகுதியில் பெண்களுக்கு வயது.சிவப்பு நிறம் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. மனைவியாக வரப் போகிறவள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது எல்லா நிறத் தமிழனின் ஆசையாகவும் இருக்கும் போது கதாநாயகிகள் மட்டும் சிவப்பாக இருக்கக் கூடாதா என்ன?

குஷ்பு, தேவயானி என முன்னணி நடிகைகள் எல்லாம் நம்ம ஊரு மருமகள்களாகிவிட்டார்கள். நம்ம ஊரு ஹேமமாலினி, ஸ்ரீதேவி எல்லாம் வட இந்திய மருமகள்களாகிவிட்டார்கள். அப்புறம் எதுக்குசார் சண்டை? யார் கண்டது அடுத்த தமிழக மருமகள் தேஜாஸ்ரீயாகக்கூட இருக்கலாம்.

-தமிழ்மகன்

செவ்வாய், நவம்பர் 06, 2007

கிளியின் கழுத்து வளையல் வேண்டும்!





""உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?'' என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ""ஆலங்குயில் கூவும் ரயில்'' பாடலில் ஆராதிக்கப்பட்டு ""எகிறி குதித்தேன் வானம் இடித்தது'' பாடலுக்குப் பிறகு உச்சம் தொட்டவர் கவிஞர் கபிலன். "தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசனோடு கடந்த ஆறுமாதமாக நடித்து வருகிறார் கவிஞர் கபிலன். அதுவும் கவிஞர் கபிலனாகவே.

"கமல் உங்களை நடிகராக்கியதற்குக் காரணம் இருக்க வேண்டுமே?' என்று ஆரம்பித்தோம் கபிலனிடம்.

""என்னைப் பாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்த ஆசைபட்டவர் அவர்தான். என்னுடைய "தெருவோவியம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்காக "தெனாலி' படப்பிடிப்பில் இருந்து வந்து போகும் போது விமானம் கிடைக்காமல் ரயிலில் சென்றார். எனக்காக இப்படி ஒரு தியாகம். அந்தப் படத்தில் பாடல் வாய்ப்புக்காகவும் சொன்னார். ரஹ்மானிடம் என்னுடைய ""உன் சமையல் அறையில்'' பாடலைக் கொடுத்தேன். ஆனால் அதற்குள் பாடல் கம்போஸிங் வேலைகள் எல்லாமே கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் அந்தப் படத்தில் அப் பாடலைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. அந்தப் பாடலை விக்ரம் நடித்த தில் படத்தில் பயன்படுத்தினார் இயக்குநர் தரணி.

இப்போது நடிப்பு அறிமுகம். திடீரென்று அழைத்து அவருடைய காரிலேயே மாமண்டூர் பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். ""படத்தில் பாட்டெழுதும் வாய்ப்புக்காக கூப்பிடவில்லை. நடிப்பதற்காக'' என்றார். ""நான் நடிப்பதா?'' என்று தயக்கத்தைத் தெரிவித்தேன். கவியரங்கத்தில் கவிதை வாசிப்பது போல சில கவிதைகளை வாசித்தால் போதும் என்றார். மைக்குக்குப் பதில் கேமிரா இருக்கும்; அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் நீங்களாகவே வந்தால் போதும்'' என்று காட்சிகளையும் சொன்னார்.

மகா கலைஞனோடு நடிக்க வேண்டிய பயமும் ஆர்வமும் சேர்ந்து ஆட்டிப் படைத்தது. அவருடைய நட்பு தந்த தைரியத்தில் சம்மதித்தேன். ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வேலை, அக்டோபர் வரை என்னை ஆட் கொண்டுவிட்டது. நடித்ததில் ஒரு சுவாரஸ்யம். கவியரசர் வைரமுத்துவின் "பூமரங்களின் சாமரங்க'ளையும் "பனிவிழும் மலர் வன'த்தையும் தியேட்டரில் முன் வரிசையில் உட்கார்ந்து கைதட்டி ரசித்தவன் நான், இப் படத்தில் இடம் பெறும் நடன அரங்கேற்றத்துக்காக அவர் எழுதிய பாடலுக்கான காட்சி ஒன்றை படம் பிடித்தார்கள். நான், கமல், கே.ஆர்.விஜயா, நாகேஷ் எல்லோரும் உட்கார்ந்து ரசிப்பதாகக் காட்சி. நடிப்புக்காக ரசித்தது வித்தியாசமான அனுபவம். ஓய்வு கிடைத்தால் எல்லோரும் குடும்பத்தோடு கோவிலுக்குப் போவார்கள். அல்லது சுற்றுலாவோ, சும்மாவோ இருந்து பொழுதைக் கழிப்பார்கள். கமல்ஹாசனுக்கு ஓய்வு என்றால் சுஜாதா, மதன், புவியரசு, ஞானக்கூத்தன் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுவது. அந்த வரிசையின் கடைசி உறுப்பினராக நானும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார் கபிலன்.

நடிப்பு வேலை முடிந்தது. ""கிளியின் கழுத்தில் இருக்கும் வளையல் வாங்கி அணிய வேண்டும்'' என்று விஜி இயக்கும் "வெள்ளித்திரை' படத்துக்கான பல்லவியோடு கம்போஸிங் ஸ்பாட்டுக்குப் புறப்பட்டார் அவர். கமல் படத்தில் கபிலனாகவே நடிப்பது அப்படியான ஒரு மகிழ்ச்சிதான் அவருக்கு.

-தமிழ்மகன்

வெள்ளி, நவம்பர் 02, 2007

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்!





சென்னைக்கு இது 368- வது வயது.

ஏறத்தாழ 368 ஆண்டுகளுக்கு முன் தமிழகக் கடற்கரை ஓரம் இருந்த ஒரு சிறு மீனவக் குப்பத்தில் இருந்துதான் சென்னையின் சரித்திரம் துவங்குகிறது. விறுவிறுப்பான சினிமா போல அமைந்த சென்னையின் கதை:

வாணிபம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் குடிபெயர்ந்த இடம் நிசாம் பட்டினம் மற்றும் பெத்தபள்ளி.

அங்கு நிலவிய தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை. அங்கிருந்து சிறு சிறு படகுகளில் தங்கள் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டு பழவேற்காட்டுக்கு வடக்கே சில கிலோமீட்டர் தூரத்தில் ஆறுமுகப் பட்டனத்தை ( அழ்ம்ஹஞ்ர்ய்)1626 -ல் அடைந்தனர். அங்கும் துறைமுக வசதி சரியாக இல்லை.

கண்டேன் சென்னையை!

ஆறுமுகப் பட்டனத்தில் கிடங்கின் தலைவனாகப் பணியாற்றி வந்த பிரான்சிஸ் டே என்பவன் 1637-ல் இடம் தேடி பாண்டிச்சேரி வரை கடற்கரையோரமாகப் பயணித்தபோது, பழவேற்காட்டுக்குத் தெற்கே இருந்த இடம் நெசவுப் பொருள்களை மலிவாக வாங்கவும் கிடங்கு அமைப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதைக் கண்டான்.

அந்த இடம் கிழக்கே கடலாலும், தெற்கே கூவம் ஆற்றாலும், மேற்கே பின்னாளில் எழும்பூர் ஆறு என அழைக்கப்பட்ட ஆற்றாலும் சூழப்பட்டிருந்தது. மூன்று பக்கத்திலும் இயற்கை அரண்கள் இருந்ததால் இந்த இடம் பிரான்சிஸ் டேக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. டே தேர்ந்தெடுத்த அந்த இடம்தான் "சென்னைப் பட்டினம்'. தேர்ந்தெடுத்த ஆண்டு 1637.

இங்குத் தொழில் தொடங்க அனுமதி பெற அப்போது தொண்டை மண்டலத்தை ஆண்ட நாயக்கர்களை அணுகினார்கள். அவர்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த நிலப்பகுதியைச் சொன்னதும் வேங்கடபதி சந்தோஷமாகச் சம்மதித்தார். ஆங்கிலேயர் மூலமாகப் பாதுகாப்பையும் அதே சமயத்தில் வருவாயையும் ஈட்ட முடியும் என்ற திருப்திதான் வேங்கடபதி நாயக்கரின் மகிழ்ச்சியான ஒப்புதலுக்குக் காரணம்.

ஒப்பந்தம்

1639 -ல் ஆகஸ்ட் 22- தேதி பாளையக்காரர்கள் -டே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆண்டுக்கு 1,200 வராகன் கிஸ்தி கட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் ஒப்புக் கொண்டனர். இதைத்தான் சென்னை பிறந்த ஆண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

வாழைத் தோட்டத்தில் கோட்டை

கடற்கரையோரமெங்கும் சிறு சிறு மீனவக் குப்பங்கள் திருவொற்றியூர் முதல் திருவல்லிக்கேணி வரை இருந்தன. இப்பொழுது "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை' இருக்கும் இடம் அப்போது மதுரசேனன் என்ற மீனவனின் வாழைத் தோட்டமாக இருந்தது. அதனருகே நரிமேடு எனும் குன்று இருந்தது. அதனருகே சிறு தீவு (இப்போது தீவுத் திடல்). கடற்கரை ஓரமாக நின்று பார்த்தால் நகிரி மலையின் உச்சி தெரியும். கப்பல் மாலுமிக்கு அதுதான் கலங்கரை விளக்கம்.

பிராட்வே சாலை இருக்கும் இடத்தில் சிறு கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. கால்வாய்க்கு மேற்கே விளை நிலங்கள். அவற்றின் பாசனத்துக்கு உதவியாக ஏரிகள் இருந்தன.

"பூவிருந்தவல்லியிலிருந்து சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சந்திரகிரி அரசன் கீழ் வேங்கடபதி நாயக்கர் ஆண்டுவந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு நான்கு சிற்றூர்களைத் தந்தார்' என்று மெக்கன்சியின் கைப்பிரதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை முறையே மதறாஸ் குப்பம், சென்னைக் குப்பம், ஆர் குப்பம், மேலுப்பட்டு.

பண்டகச் சாலைக் கட்டட வேலை 1640 மார்ச் முதல் தேதி தொடங்கப்பட்டது. இக் கட்டடத்தின் ஒரு பகுதி "செயின்ட் ஜார்ஜ் தின'த்தில் கட்டி முடிக்கப்பட்டதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயரிட்டனர். பணப்பற்றாக்குறை காரணமாக மெதுவாகவே வளர்ந்தது கோட்டை. 14 ஆண்டுகள் கழித்து 1653 -ல் கோட்டை முழுமையடைந்தது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும் தெற்குப் பகுதி மதறாஸ் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மெட்றாஸ் என்றனர். தமிழர்கள் சென்னப்பட்டனம் என்று அழைத்தனர். 1653-ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும் 1741-ல் மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு ஆளானது. 1746-ல் பிரெஞ்சு ஆட்சியர்களின் கைக்கு மாறியது.

மீண்டும் ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதன் பிறகு 1758-ல் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி. ஆனால் இரண்டே மாதத்தில் ஆங்கிலேயர்கள் மீட்டனர். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடையும் வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் வசமாகவே இருந்தது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று 1968-ம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது. அதே போல் மெட்றாஸ் என்ற பெயரும் 1997-ல் சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரம், இன்று 60 லட்சம் பேர்களோடு மகத்தான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை மட்டுமின்றி மக்களின் கண்ணோட்டத்திலும் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதும் மறுக்க முடியாது.

"சென்னை' என்று பெயர் பெற்றதற்கும் இருவேறு கருத்துகள் உள்ளன. வேங்கடபதி நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவாக சென்னப் பட்டனம் என்று பெயர் வந்ததென்றும் இங்கிருந்த "சென்ன கேசவபுரம்' என்ற இடம்தான் சென்னை என்று மாறிப்போனதென்றும் பெயர்க் காரணங்கள் நிலவுகின்றன. எது எப்படியோ சென்னையை இப்போது நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறதல்லவா?

-தமிழ்மகன்
august 22nd 2007

திங்கள், அக்டோபர் 29, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!





பத்ரி

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.


""இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு "கெஸ்ட் ஆஃப் ஹானர்' என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். "இந்தியன் ரைட்டிங்ஸ்' என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் "தி லைன் ஆஃப் ஃபயர்' நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை'' என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

""தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?'' என்றோம்.

""நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் "அள்ள அள்ள பணம்' என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை'' என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

கையேந்தும் நிலையில் கோட்டை அரசர்கள்!







விண்ணப்பப் படிவங்களில் இப்படி ஒரு கட்டம் இருப்பதை நிச்சயம் எல்லோரும் பார்த்திருப்பார்கள்.



ரெங்கையா முருகன்


நீங்கள் பழங்குடியினரா? அதில் பெரிய ஆர்வம் இருக்காது பலருக்கும். உண்மையில் பழங்குடியினர் என்பவர் யார்? அவர்களுக்கு எத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஏன் பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது ஆழ்ந்த சமூக ஆய்வுக்குரிய பொறுப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. சென்னையில் இயங்கிவரும் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் அதற்கான மகத்தான ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் நூலகராகவும் ஆய்வாளராகவும் பழங்குடி செயல்பட்டு வருகிறார் ரெங்கையா முருகன். இந்தியா முழுக்க உள்ள பழங்குடியினரின் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து அவரிடம் பேசினோம்.

பழங்குடியினர் பற்றிய ஆய்வு ஏன் தேவைப்படுகிறது?

இந்தியாவின் மற்ற குடியினருக்கும் பழங்குடியினருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். மரங்களை வெட்டாத, கலப்பை கொண்டு நிலத்தை உழுவதைக் குற்றம் என்று கருதும் பழங்குடி வகுப்பினர் இருக்கிறார்கள். அவர்கள் சடங்குகளும் தெய்வங்களும் நம்பிக்கைகளும் இயற்கையோடு இணைந்தவை. இந்திய சமூகம் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தும் பசுமை புரட்சி, தொழில் புரட்சி எதுவுமே அவர்களுக்கு முக்கியமில்லாதவை, அதைப்பற்றி அவர்கள் தெரிந்திருக்கவும் இல்லை. ஆனால் நம்முடைய இந்தப் புரட்சிகளை நிகழ்த்துவதற்கு சம்பந்தமுள்ள அடிப்படைப் பொருள்கள் அங்குதான் கிடைக்கின்றன. அவர்கள் வசிக்கும் இடத்தில்தான் நாம் நம் வளர்ச்சிக்கான பாக்சைட்டையும் நிலக்கரியையும் தோண்டுவதற்காக அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறோம். இயல்பான இயற்கையான வாழ்க்கையை நாம் கேள்விக் குறியாக்கியிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறையிலிருந்து அவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதற்காகவும் அவர்கள் வாழ்க்கை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய ஆய்வுகள் தேவையாக இருக்கிறது.

இத்தகைய ஆய்வுகளில் உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் எத்தகையவை?




பழங்குடிப் பெண்


இடர்பாடுகள் என்பது அவர்கள் இருக்கும் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படுகிறது. உதாரணத்துக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடிகளான ராபா இனத்தவரை ஆய்வு செய்யச் சென்ற போது அவர்கள் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. குளிர் காலங்களுக்கான உணவை அவர்கள் ஒரு குடிலின் நடுவே கட்டித் தொங்க வைத்திருக்கிறார்கள். அது காட்டெருமை (மிதுன்) இறைச்சி. பனியின் காரணமாக கெட்டுப் போகாமல் உறைந்த கொழுப்போடு தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தேவைப்படும் போது அறுத்து எடுத்து வேக வைத்து உண்கிறார்கள். என்னால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடாமல் ஆரஞ்சு பழச் சுளையை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். மூன்றாம் நாளில் இருந்து பழங்குடி மக்கள் என்னைக் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்தான் மூன்று நாளாக சாப்பிடாதவர் என்று என்னை ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தி ஆச்சர்யமும் வருத்தமும் அடைந்தனர்.

முடிந்த அளவு அவர்கள் போலவே நாமும் உடையணிந்து, அவர்கள் போலவே சாப்பிட்டு அவர்கள் போலவே நடனமாடி அவர்களுள் ஒருவராக மாறவேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதைத் திறக்க முடிகிறது. சில சமயங்களில் கூட்டமாக அமர்ந்து புகைபிடிப்பார்கள். அவர்களோடு நாமும் அமர்ந்து அந்த எச்சில் உக்காவை இழுக்க வேண்டும். அஸ்ஸôம் உல்பா இயக்கத்தினருக்கும் ராணுவத்தினருக்கும் நடக்கும் சண்டைகள் உயிர்பலிகள் பழங்குடிகளை மிகவும் பாதித்திருக்கிறது. டுமில் டுமில் என்று வெடிச்சத்தம். நாமும் அவர்களோடு ஒருவராக ஓட வேண்டியிருக்கிறது. ராணுவத்தினர், இயக்கத்தினர் இருவருமே நம்மை விரோதிகளாக நினைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பழங்குடியினரிடம் நீங்கள் பிரமிக்கும் அம்சம்?

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைத்தான் சொல்ல வேண்டும். நமக்கெல்லாம் 10 தாவர வகைகளின் குண இயல்புகள் தெரிந்திருந்தால் பெரிய விஷயம். அவர்கள் குறைந்தது பத்தாயிரம் தாவரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். விலங்குகள், பறவைகள் பற்றிய அறிவு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. பூகம்பம், புயல் பற்றிய நுண்ணுணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாரம்பர்யமிக்க கலையம்சங்கள் அவர்களிடம் இருக்கிறது. பல பழங்குடியினர் சிமெண்ட், கம்பி, ஆணி போன்றவற்றைப் பயன்படுத்தாமலேயே வீடுகள் கட்டுகிறார்கள். உறுதியானவையாகவும் கடும் குளிரைத் தாங்கக் கூடியவையாகவும் இருக்கின்றன அவர்களுடைய தொழில் நுட்பங்கள். அவர்களின் ஆயுதங்களும் எந்த விலங்குகளிடத்தும் போராடும் உறுதி படைத்தவை.

அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது?

இந்தியாவில் மொத்தம் 624 பழங்குடி பிரிவினர் இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இருக்கிறார்கள். பழங்குடியினர் என்றாலே ஒன்றும் தெரியாதவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது மக்களுக்கு. ஏதோ கை நிறைய வளையல் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பவர்கள் என்பதாகத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள். அணைக்கட்டுகள் கட்டுவதற்காகவும் பாக்சைட், அலுமினியம், வைரச் சுரங்கம், இரும்புத் தாது சுரங்கம் போன்றவற்றுக்காகவும் அவர்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துகிறார்கள். மாத ஊதியம் செய்தோ, பணத்தைச் சேமித்தோ பழக்கமில்லாதவர்கள் அவர்கள். பலர் பணத்தின் தேவையே இல்லாமல் வாழ்பவர்கள். நம்முடைய நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அவர்களுக்குத் தேவையற்ற வாழ்க்கையை அவர்களை வாழச் செய்கிறோம். அவர்களுக்குத் தேவையற்ற கல்வியைத் திணிக்கிறோம். அவர்களை அல்ஜீப்ரா படிக்கச் சொல்வதும் ஆர்கமிடிஸ் கோட்பாடு படிக்கச் சொல்வதும் பொருத்தமாக இல்லை.

உதாரணத்துக்கு ஒரிசாவில் உள்ள கோண்டு இன மக்கள் அவர்களின் மொழியைத் தாண்டி ஒரிய மொழியையும் இந்தி மற்றும் ஆங்கில மொழியையும் பயில வேண்டியிருக்கிறது. இத்தனை மொழிகள் அவர்களுக்கு எதற்கு?

அஸ்ஸôமில் நான் பார்த்தவர்கள் பழங்குடிகள் சேமித்த உணவுப் பொருட்களை எல்லாம் ஒரு பொதுவான இடத்தில்தான் வைக்கிறார்கள். ஒரு முக்கியமான விழாநாளில் அந்த உணவுப் பொருட்கள் எல்லாருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அந்தச் சமத்துவ வாழ்க்கை முறையும் நம்மால் பாதிக்கப்படுகிறது இப்போது.





மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோட்டை


அப்படியானால் அவர்கள் அப்படியே இருக்க வேண்டியது தானா?

அவர்கள் 90}100 வயது வரை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மாலை நேரங்களில் ஒன்றாகக் கூடி அவர்களின் பாரம்பர்யக் கதைகளைப் பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தேவை, உணவு, சடங்குகள் குறித்து விவாதிக்கிறார்கள். ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதை விடுத்து நாம் வாழ்கிற வாழ்க்கைதான் சிறந்தது என்று நாமாகவே முடிவு செய்து அதைத்தான் அவர்களும் வாழ வேண்டும் என்பது சரியில்லை. உதாரணத்துக்கு கோண்டு இன மக்களின் 52 கோட்டைகள் இப்போதும் இருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அந்த அரசர்களின் சரித்திரங்கள் கற்பிக்கப்படுவதில்லை. ராஜ்புத் அரசியாக ராணி துர்காவதியைச் சொல்கிறார்கள். ஆனால் அவர் கோண்டு இன அரசன் தல்பத்ஷாவை மணந்தவர் என்பது பாடங்களில் இல்லை. மத்திய பிரதேசத்தில் ராணி துர்காவதி பெயரில் பல்கலைக் கழகம் இருக்கிறது. ஆனால் அவருடைய கணவர் பழங்குடி இனத்தவர் என்பதால் இந்த இருட்டடிப்பு. எதற்காகச் சொல்கிறேன் என்றால் அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. கோட்டையும் கொத்தளங்களோடு தொழில்நுட்பத் திறன் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டு அவர்கள் எதும் அறியாதவர்கள் என்பது எப்படி நியாயம்? அவர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்கும் பணியைச் செய்வதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாக இருக்க முடியும்.




கிக்ரி இசைக் கருவியுடன் பர்கானியா


80 பழங்குடி கிராமங்களுக்கு ஒரு பர்கானியா (மதகுரு போன்றவர்) இருக்கிறார். அந்த 80 கிராம மக்களின் வீட்டுச் சடங்குகளுக்கு அவர்தான் மதகுரு போல. சடங்குகளின் போது தம் இனத்தின் சரித்திரத்தை அவர் இசைப் பாடலாகச் சொல்கிறார். அவர் கையில் கிக்ரி என்று ஒரு இசைக் கருவியும் உண்டு. ஆனால் இப்போது இந்த வழக்கங்கள் எல்லாம் வழக் கொழிந்து வருகிறது. பலருக்கு அவர்களின் மொழியே பழக்கத்தில் இல்லை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடிகள் பலர் கிருத்துவ மிஷினரிகளில் பயிற்சியின் காரணமாக ஆங்கிலத்தைத் தாய் மொழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி மொழியைத் தொலைத்துவிட்டு நிற்கிற பழங்குடிகளுக்குப் பெண் தராத பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். மொழியையே காப்பாற்ற முடியாதவன் பெண்ணை எப்படிக் காப்பாற்றுவான் என்பது அவர்களின் வாதம். இத்தனைச் சூழல்களிலும் அவர்களில் யாரும் பிச்சை எடுக்காதவர்களாகவும் உழைத்துப் பிழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதுதான் பழங்குடி மக்களின் பிரதான அடையாளமாக இருக்கிறது. சமூக வளர்ச்சி என்ற பெயரில் அந்த இயற்கையின் அரசர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் வருத்தத்துக்குரிய அச்சம்.

தமிழ்மகன்

வெள்ளி, அக்டோபர் 26, 2007

தொட்டனைத்தூறும் "மன'ற்கேணி

தமிழ்மகன்

"இத்தனை நிர்மலமான வானத்தின் கீழ்தான் முட்டாள்களும் முசுடர்களும் இருக்கிறார்களா?' என்ற ஆச்சர்யத்தோடு தொடங்குகிறது இந் நாவல். அந்த முதல்வரியேகூட படிப்பதற்கான மனநிலையைத் தந்துவிடும் பலருக்கு.
வெண்ணிற இரவுகளை வாசிப்பது என்பது வெண்ணிற இரவுகளில் வசிப்பது என்று பொருள். வாசிப்பது, வசிப்பது என்பது ஏதோ வார்த்தை ஜோடனை என்று நினைப்பவர்களுக்கு அதற்கான தாகத்தோடு இன்னும் அந்தக் குறுநாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். உண்மையில் ஒரு நாவலைப் படிப்பதற்கான மனநிலையும் தாகமும்கூட தேவையாகத்தான் இருக்கிறது.
நான் முதன் முதலில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அதைப் பற்றிச் சிலாகித்துத்துச் சொல்ல ஒருத்தரும் இல்லை எனக்கு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தபோதும் என்னை அது ஈர்த்துக் கொண்டது. இருப்பினும் மொத்தமாக இது என்ன மாதிரியான கதை என்ற ஆர்வம் மட்டும்தான் அது.

சுமார் 20... 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம். 5 ரூபாய் விலையுள்ள அந்த அழகிய புத்தகத்தை என்.சி.பி.ஹெச். நண்பர் ஒருவரின் அறிமுகம் காரணமாக 20 சதவீதம் விலைக் கழிவுடன் வாங்க முடிந்ததில் அத்தனைத் திருப்தி. அப்போது ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும் கார்க்கியும் மட்டுமே அறிமுகமாகியிருந்தார்கள். "புத்துயிர்ப்பு'ம் "தாயு'ம் படித்திருந்தேன். கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் மனதில் நிறுத்துவது சிரமமாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது. கத்யூஸô, மாஸ்லவா, நெஹ்லூதவ், குருஷேவ், ப்ரஷ்னெவ், ஆந்த்ரபோவ் என்று அந்தப் பெயர்கள் மீது ஒருவித தூரத்துச் சொந்தங்கள் போல ஒரு பாசம் வந்திருந்தது எனக்கு. தூரம் என்றால் பீட்டர்ஸ்பெர்க் தூரம்.

தொகுப்பில் வெண்ணிற இரவுகள் தவிர வேறு சில கதைகளும் இருந்தாலும் வெண்ணிற இரவுகளைத்தான் முதலில் படித்தேன். படித்துப் பார்த்த போது ஏற்கெனவே படித்திருந்த ரஷ்யக் கதைகளுக்கான அடையாளங்களோடு ஒரு தீவிரமான காதல் கதையாக மனதில் பதிவானது. செகாவ், துர்கேனிவ், நிகோலய் கோகல், ஷோலகவ், ஐத்மாத்தவ், வஷிலியேவிச், போன்ற பலருடைய கதைகளையும் படிக்க ஆரம்பித்து மாஸ்கோ நகரில் சுற்றித் திரிகிற மாதிரி பழகியிருந்தது மனசு.

இத்தகைய தருணத்தில் மீண்டும் ஒரு முறை வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அப்போது பலரும் என்னிடம் இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா என்று விசாரிப்பு வகையிலான சிபாரிசு செய்திருந்தார்கள். இந்த முறை சற்று நிதானமாகப் படித்தேன். முதல்முறை மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று மட்டுமே பார்த்தேன். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பது மட்டுமே கதையென்று முடிவு செய்து படித்úது ஞாபகம் இருந்தது. இந்த முறை வரிகளில் கவனம். நம் கதாநாயகன் எப்படி தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறான், நாஸ்தென்கா எப்படி தன் கதையைச் சொல்கிறாள் என்பதை கவனமாகப் பார்த்தேன். இப்படியெல்லாம் உணர்வுச் சிக்கல்கள் இருக்குமா என்ற வியப்பு. மனிதர்கள் இப்படியெல்லாம் ஏங்குவார்களா என்று ஆச்சர்யம். இரவு வெண்மையாக இருக்குமா என்ற சந்தேகம். பரிச்சயம் இல்லாத ஆணிடம் ஒரு பெண் நள்ளிரவில் சந்தித்து தன் சொந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வாளா என்ற தர்க்க நியாயம்... இப்படியெல்லாம் சின்னச் சின்னத் தயக்கங்களும் நானும் தஸ்தயேவஸ்கி படித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதும் பழக்கமாகியிருந்தது எனக்கு.

புதுவசந்தம் என்றொரு சினிமா வந்தது. டைரக்டர் விக்ரமன் இயக்கியது. அதில் ஒரு பெண் தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா, எங்கிருக்கிறான் என்ற குழப்பங்கள். அவன் வரும் வரை அவளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறார்கள் நான்கு நண்பர்கள். காதலன் வருகிறான். காதலனோடு செல்வதா? நண்பர்களோடு இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ""அட அப்படியே வெண்ணிற இரவுகள் கதைப்பா இது'' படம் பார்த்துவிட்டு வந்து நான் பெருமையாக நண்பர்களிடம் சொன்னேன். ரஷ்யக் கதையை தமிழ்நாட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சினிமாவோடு ஒப்பிட்டுப் பேச முடிந்தபோது பெருமிதமாக இருந்தது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை வேகமாகப் புரட்டினேன். சொன்னது சரிதானா என்று சரிபார்த்துக் கொள்கிற தற்காப்புக்காக.

அதன் பிறகு இரண்டு பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கிற மாதிரியோ, இரண்டு பெண்கள் ஒரு பையனைக் காதலிக்கிற மாதிரியோ வந்த சினிமாக்களில் இந்தச் சாயல் தெரிவதை கவனித்தேன். இறுதியாக இயற்கை படம் வந்தபோது வெண்ணிற இரவுகளின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக சினிமா ஆக்கியிருக்கிறார்கள் என்று வியந்து அந்தப் படத்தை பல முறை பார்த்தேன். நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் எத்தனைக் கதைகள். இதன் அடிப்படையில் எத்தனை நாவல்கள்? எல்லாமே வெண்ணஇற இரவுகளை நினைவுபடுத்தும் சந்தர்ப்பங்களாகவே இருந்தன.

இப்போதெல்லாம் வெண்ணிற இரவுகளை மிகநிதானமாகப் படிக்கிறேன். சில நாட்களில் வெண்ணிற இரவுகளின் ஒரு இரவை (ஒரு அத்தியாயம்) மட்டும் படித்துவிட்டு மூடிவிடுகிறேன். படித்த நேரத்தைவிட அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஏதோ ஒரு விஷயம் என்னை அந்த நாவலோடு பின்னிப் பிணைத்திருப்பதை அதைப் படிக்கிற அல்லது நினைக்கிற ஒவ்வொரு முறையும் கவனிக்கிறேன். இதயம்விட்டு இதயம் பாய்ந்து நம்மையும் அந்தக் கதாநாயகனாக்கிவிடுகிற பலம் அந்த நாவலுக்கு இருக்கிறது. 160 ஆண்டுகளாக ஒரு நாவல், அதைப் படிக்கிறவர்கள் எல்லோருக்குமான சொந்த அனுபவமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதன் வெற்றி என்ன? எத்தனையோ சினிமாக்களாக, வேறு வேறு கதைகளாக இது மாறிக் கொண்டே இருந்தாலும் தனித்துவமான மூலநதியாக பிரவகித்துக் கொண்டிருக்கிறது வெண்ணிற இரவுகள், காரணமென்ன?

இத்தனை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை நம்மால் பிரயோகிக்க முடியுமா, இப்படியொரு உணர்வை நாம் சினிமா ஆக்கிவிடமுடியுமா என்ற முயற்சிகள்தான் இத்தனை கதைகளும் சினிமாக்களும் என்று தோன்றுகிறது எனக்கு.

தம்மிடம் பேசும் பழகும் பெண்கள் அனைவரையுமே நாஸ்தென்காவாக நினைத்துப் பாதுகாக்கிற குணம் கொண்டவர்களே வெண்ணிற இரவுகளை வாசிக்க உகந்தவர்களோ என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு. எனக்கான சில நாஸ்தென்காக்கள் நினைவுக்கு வருகிறார்கள். என்னைப் போல தஸ்தயேவஸ்கிக்கு உலகம் முழுக்கப் பல வாசகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி.

பலமுறை படித்திருந்தாலும் இப்போது வாசிக்கும்போது இரண்டு வரிகளுக்கு நடுவே புதைந்திருக்கும் உணர்வுகளை அசைபோட ஆரம்பித்திருக்கிறது மனம். முதல் முறை படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் நடுவே இருபது ஆண்டுகள். இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்து என்ன கண்ணா மூச்சி காட்டுமோ? என்று எதிர்பார்ப்பும் பயமும் இருக்கிறது எனக்கு.


.


நூல் : வெண்ணிற இரவுகள்
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிட்கோ
அம்பத்தூர் எஸ்டேட்,
சென்னை

புதன், அக்டோபர் 24, 2007

மறுபடியும் ஆரம்பிக்கலாம், வழக்கம் போல...!




நோபல் பரிசு பெற்ற டோரிஸ் லெஸ்ஸிங் நேர்காணல்!


வடக்கு லண்டன் பகுதியில் சிறிய வரிசை வீட்டில் உளவியல் அறிஞர் சிக்மெண்ட் ஃப்ராய்டின் கல்லறைக்கு அருகே அமைந்திருக்கிறது டோரிஸ் லெஸ்ஸிங்கின் பறவைசூழ் இல்லம். 25 ஆண்டுகளாக அதே வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார். 87 வயது நோபல் பரிசு வெற்றியாளரான அவர் ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு கண்விழிக்கிறார். பிறகு பலநூறு பறவைகளுக்குத் தீனியிடுகிறார். பிறகு வீடு திரும்பியதும் காலை உணவு.... பெரும்பாலும் அப்போது காலை ஒன்பது மணி ஆகியிருக்கும். பிறகு எழுதுகிறார்... மிகவும் எளிமையாக சாதாரணமாக... ""நான் செய்வதெல்லாம் இவைதான்'' என்கிறார்.


கடந்த ஆண்டு கடுமையான பனி பொழிந்து கொண்டிருந்த மதிய வேளை. வானியல் அறிஞர்கள் சொன்னது போல இங்கிலாந்தின் மிகக் கடுமையான குளிர்காலமாக அது இருந்தது. லெஸ்ஸிங் தன் சமீபத்திய நாவலான "தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் அண்ட் மாராஸ் டாட்டர், கிரியோட் அண்ட் த ஸ்நோ டாக்' பற்றி பேசுவதற்குச் சம்மதித்திருந்தார். எதிர் காலத்தின் பனிக்கால (ஐஸ் ஏஜ்) பயங்கரம் பற்றி சொல்லப்பட்டிருந்த அந்த நாவலின் நாயகன் டேன், இவருடைய "மாரா & டேன்' நாவலிலும் இடம்பெறுகிறான். அதில் டேனும் அவனுடைய சகோதரியும் ஆப்ரிக்க வறட்சியில் இருந்து தப்பிப்பதை கதை விவரிக்கிறது.

தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன்... படிக்கத்தூண்டும் நாவல். யூகத்தின் அடிப்படையில் பின்னப்பட்ட அதே சமயம் நம்காலத்துக்கான நீதியைச் சொல்வதாகவும் இருக்கிறது. ஆனால் இந்த உள்ளுணர்வை நீங்கள் கடந்த காலத்தோடு கட்டுப்படுத்திக் கொள்வதாகத் தெரிகிறது. நீங்கள் இப்போதும் அது சரிதான் என்று உணர்கிறீர்களா?

நான் "மாரா & டேன்' என்று ஒரு புத்தகம் எழுதினேன். பரிதாபத்துக்குரிய டான்}ஐ சார்ந்துதான் கதை நகர்கிறது. சிலர் அவனை வெறுக்கிறார்கள். வன்முறையைத் தூண்டக் காரணமாக இருந்தவன் என்கிறார்கள். ஆனால் நான் அவனை நேசித்தேன். அதற்கான சம்பவங்களைக் கோர்வைப்படுத்தினேன். நான் பாதி அளவு மூழ்கிய உலகத்தை உருவகித்திருந்தேன். அதனால் அதற்கான புவி அமைப்பைக் கதைக்குள் கொண்டு வருவதும் எனக்கு கடினமாக இல்லை. "மாரா & டேன்' முழுவதுமே வறட்சி காலத்தில் நடக்கும் கதை. அதாவது நான் பார்த்த ஆப்ரிக்காவின் பின்னணியில். என்னுடைய மகன் ஜானும் காப்பித் தோட்ட விவசாயி ஒருவரும் அங்கே இருந்தார்கள். நீங்கள் எப்போதாவது வறட்சியை அனுபவித்திருக்கிறீர்களா?

இல்லை.

கொடுமையானது அது. மக்கள் மடிந்து கொண்டு இருப்பார்கள். தண்ணீர் வறண்டபடி இருக்கும். மரங்கள் காய்ந்து மரணத்தைத் தழுவும். தாளமுடியாத பயங்கரம். அதைக் கற்பனை செய்யக்கூட விரும்பவில்லை.

அகதிகளைப் பற்றிய விவரணைகள் எனக்கு எண்பதுகளில் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தை நினைவுபடுத்தின. அதாவது அப்போது பெஷாவருக்குத் தப்பி ஓடிக் கொண்டிருந்தவர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதை .

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றவர்கள் அனைவருமே அகதிகள்தான் என்பது வெகுகாலம்வரை எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மக்கள் எல்லோரும் வறட்சியின் காரணமாகவோ, வெள்ளம், போர்கள் காரணமாகவோ வேறு இடம் தேடி ஓடுகிறார்கள். ஆனால் இந்த எல்லா வகையான அகதிகளும் வந்து சேருவது ஒரே சாலையில்தான். அவர்களில் பலதரப்பட்ட திறமைசாலிகள் இருப்பார்கள். பலர் அங்கு சென்று மரவேலை செய்பவரையோ, குழாய் ரிப்பேர் செய்பவரையோ வேறு வகையானவர்களையோ தேடி எடுத்துக் கொள்கிறார்கள். என் தோழி ஒருத்தி அவளுக்கு எதாவது தேவையென்றால் அங்கு சென்றுவிடுவாள். அவர்கள் எல்லாம் திறமையானவர்கள்.

நீங்கள் 1949}ல் லண்டனுக்கு வந்தீர்கள். லண்டன் அப்படியேதான் இருக்கிறதா?

இல்லை. அப்போது நான் சந்தித்தவர்கள் எல்லோரும் ராணுவ வீரர்களாகவோ, கடற்படை ஆசாமிகளாகவோ இருந்தார்கள். ஆகவே அவர்கள் பேச்சும் எப்போதும் போர் பற்றியதாகவே இருந்தது. 50}களின் நடுப்பகுதி வரை அவர்கள் பேச்சு அப்படியே தொடர்ந்தது. அப்புறம் என்ன... புதிய தலைமுறைக்குப் போரில் விருப்பமில்லை. சடாரென்று ஒரு நாள் போர் பேச்சுகள் ஓய்ந்து போயின. அதை அந்த வகையில் வலியான விஷயமாகத்தான் பார்க்கிறேன். அந்த மோசமான கடந்த காலத்தின் தடயங்கள் தெரியாமல் உங்களால் வாழ்ந்துவிட முடிவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன். முடியுமா உங்களால்?

வித்தியாசமானதுதான். அதன்பிறகு அதைப் போலவே பாழாக்கியதில் சில கம்யூனிஸ சிந்தனையாளர்களுக்கும் பொறுப்பிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இன்றோ ஒருத்தருக்கும் மதத்தைத் தாண்டி மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

யாரும் எல்லாக் காலங்களிலும் ஒன்றையே நம்பிக் கொண்டிருப்பதில்லை. உங்களுக்குத் தெரியும் வியட்நாம் போரைப்பற்றிப் புளித்துப் போகும் அளவுக்கு எத்தனை சினிமாக்களும் டி.வி. படங்களும் வெளிவந்தன என்று. அது அமெரிக்கா என்றுதான் நினைத்தோம். இப்போது என்ன ஆனது?

காதல் கதை எழுத வேண்டும் என்று நீங்கள் எப்போதும் நினைத்ததில்லையா?

ஒன்று தெரியுமா? காதலைப் பற்றி குற்றம் குறை காண்பது போல எழுத முடியாது. எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படி எழுதுகிறார். அவர் தீவிரமான சோஷலிசவாதி. ""நினைவு வைத்துக் கொள் டோரிஸ். இந்த விஷயத்தை நீ தமாஷாக எழுதிவிட முடியாது. கடவுளுக்கு நன்றி... எனக்கு அதற்கான பிரத்யேக உணர்வுபூர்வமான நரம்புகள் இருக்கின்றன'' என்றார். நல்லவேளை அவர் மற்றவர்களைவிட நன்றாகவே எழுதுகிறார்.

1950}களில் நீங்கள் எழுத ஆரம்பித்த காலங்களில் எதார்த்த நாவல்கள் தவிர வேறு எந்த உத்திகளும் இருந்ததில்லை அல்லவா?

இல்லை. இப்போது எல்லா எல்லைகளையும் உடைத்துவிட்டார்கள். நான் எழுத ஆரம்பித்த நேரத்தில் விஞ்ஞான புனைகதைகள் எழுத ஆரம்பித்திருந்தார்கள். வெகுசிலரே அதைப் படிக்கவும் செய்தார்கள். இப்போதோ... சல்மான் ருஷ்டியை எடுத்துக் கொள்ளுங்கள்... அல்லது தென் அமெரிக்க எழுத்தாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் மாயாவாத எதார்த்தவாதிகள் என்று சொல்லப்படுகிறார்கள்.

பல்வேறு நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்களிடம் மக்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் புத்தகம் எத்தகையவை?

என்னுடைய விஞ்ஞான கதைகள்தான். 'கனோபஸ் இன் அர்கோஸ்" பெரிய அளவில் வாசகர்களைப் பெற்றது. அது ஒரு மதத்தையே உருவாக்கும் அளவுக்குப் போனது. சிகாஸ்தா (அந்த வரிசையில் முதலாக வந்த நாவல்) அதை அப்படியே எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் ஒரு கூட்டுவாழ்க்கை முறையாகவும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் எனக்கு எழுதும் கடிதங்களில் ""எப்போது கடவுள் எங்கள் முன் தோன்றுவார்?'' என்று கேட்கிறார்கள். ""இது மேல் லோகம் சம்பந்தமானது இல்லை... இது என் கண்டுபிடிப்புதான்'' என்று பதில் எழுதுகிறேன். ஆனால் அவர்களோ ""நீங்கள் எங்களைச் சும்மா சோதிக்கிறீர்கள்'' என்று மறுபடி கடிதம் எழுதுகிறார்கள்.

இன்று இப்படியெல்லாம் நடக்கிறதா என்று என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.

அப்போது வேறுமாதிரி இருந்தது. நான் சான்பிரான்சிஸ்கோவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். பெரிய மக்கள் கூட்டத்தின் முன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, ""இனிமேல் நீங்கள் இந்த மாதிரியான வறண்ட எதார்த்தவாத நாவல்களை எல்லாம் எழுதமாட்டீர்கள் என்று நம்புகிறேன்'' என்றார். இன்னொருவரோ ""டோரீஸ் இனிமேல் கத்துக்குட்டித்தனமான விஞ்ஞானப் புனைகதைகளை எழுதி நேரத்தை வீணாக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்'' என்றார். மொத்தக் கூட்டமும் விவாதத்தில் இறங்கிவிட்டது. இப்போது இப்படியெல்லாம் நடக்குமா என்று எனக்குத் தோன்றவில்லை.

60 களுக்குப் பிறகு கலாசாரப் புரட்சி ஏற்பட்டதாக நம்புகிறீர்களா?

கடுமையான போதை வஸ்துகளின் நடமாட்டம் நின்றுவிட்டது. மரிஜோனாவோடு நிறுத்திக் கொண்டார்கள், அதுதான் நடந்தது.
பாலியல் புரட்டி எனப்படுவதும் ... அதைப் புரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த சிரமம் இருக்கிறது... ஏனென்றால் அதற்கு முன்னால் பாலியல் புரட்சி எதுவும் ஏற்பட்டதில்லை போல பேசுகிறார்கள். போர்க்காலங்களில் செய்யப்படாத பாலியல் புரட்சிகளா? போர் காலத்தில் எல்லா பாலியல் புரட்சிகளையும் ராணுவத்தினர் செய்து முடித்துவிட்டனர்.

தி கோல்டன் நோட் புக் மிகவும் பிரபலமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பெண்ணிய சிந்தனை குறித்த என் முதல் நாவல் என்பதால் இருக்கலாம். அதே சமயத்தில் அதற்காக நான் நிறைய சக்தியைச் செலவிட்டேன். 50}களின் கடைசியில் என்னுடைய சொந்த வாழ்க்கை பெரும் குழப்பத்தில் இருந்தது. கம்யூனிஷம் உங்கள் கண் முன்னால் கிழிபட்டுக் கொண்டிருந்தது. இவை எல்லாம் என் நாவலின் கருப் பொருளாகின. என் மொத்த சக்தியையும் இதற்காகச் செலவிட்டேன். இப்படிப் பிரபலமாகும் என்றும் எதிர்பார்த்தேன்.

தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் நாவலிலும் போதுமான சக்தியைச் செலவிட்டிருப்பது தெரிகிறது... உங்கள் 86 வயதிலும்!

ஆனால் இதில் எந்தச் சித்தாந்தத்துக்கும் சவால்விடவில்லை. தி கோல்டன் நோட் புக் எழுதும்போது அதை ஒரு பெண்ணிய நாவலாக்கும்படியாக எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. பெண்களின் சமையல் அறைப் பேச்சுகளை அதில் எழுதியிருந்தேன். எழுதப்படும் சிலவற்றைப் போல சொல்லப்படும் சிலவற்றுக்கு ஆற்றல் இருப்பதில்லை. நான் ஏதோ பிரமாதமாக எழுதிவிட்டதாகச் சொல்கிறார்கள். நான் பெண்கள் பேசிக் கொள்வதைத்தான் எழுதினேன்.

முந்தைய பேட்டியின் போது இனி வரப்போகும் பனி யுகம், நியுக்ளியர் பயங்கரத்தை சிறிய நாய்க்குட்டியாக மாற்றிவிடும் என்று கூறியிருந்தீர்கள். தி ஸ்டோரி ஆஃப் ஜெனரல் டேன் அதற்கான எச்சரிக்கையா?

நான் அப்படித்தான் நினைக்கிறேன். நாம் பல பனி யுகங்களைச் சந்தித்திருக்கிறோம். மிகச் சீக்கிரத்தில் இன்னொன்றைச் சந்திக்கப் போகிறோம். இதில் எனக்கு வருத்தமான விஷயம் என்னவென்றால் மனித சமுதாயம் உருவாக்கியவை என்று சொல்லப்படுபவை எல்லாமே கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில்தான் உருவானவைதான். அதில் பெரும்பான்மையானவை சமீப காலங்களில் உருவாக்கப்பட்டவை. அதை எல்லாவற்றையும் வரப்போகும் பனியுகம் துடைத்தெறிந்துவிடும். நாம் மறுபடியும் ஆரம்பிக்கலாம், வழக்கம்போல.

}தமிழ்மகன்

நன்றி: நியூல்டே.காம்

திங்கள், அக்டோபர் 22, 2007

எட்டாயிரம் தலைமுறை

(காதல் கதை)

தமிழ்மகன்



எட்டாயிரம் தலைமுறைக்கு முன்னால் எங்கள் பரம்பரையில் நிகழ்ந்த கதை இது. வெளியில் சொல்ல வெட்கப்பட்டோ, இதையெல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் என்றோ, எங்கள் குடும்ப வாரிசுகள் அன்றி வேறு யாருடனும் இதைப் பகிர்ந்து கொள்வதில்லை.

ஏறத்தாழ எட்டாயிரத்து ஒன்றாம் தலைமுறையில் இது வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. ராமானுஜர் தனக்குப் புண்ணியம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொர்க்கத்துக்குப் போகும் மந்திரத்தை கோபுரத்தில் ஏறி மக்களுக்குச் சொன்னதுபோல நானும் சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டேன்.


முந்தாநாள் நடந்த இந்திய சுதந்திரத்தைப் பற்றியே ஆளுக்கொரு முரண்பாடுகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த எட்டாயிரம் தலைமுறைக் காதலில் எத்தனை கண்கள் காதுகள் மூக்குகள் ஜோடிக்கப் பட்டிருக்கும் என்று பயப்பட வேண்டாம். இதில் என் மூதாதையரின் சொந்தக் கற்பனைகளோ சொந்தச் சரக்கோ வந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதோடு நான் அறிந்தவரை என் தாத்தா என் அப்பாவிடம் சொல்லியதைத்தான் சத்தியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.


ஓர் உண்மை இந்த சயநல யுகத்தில் மூன்று தலைமுறையாக ஒரேமாதிரியாக இருப்பதே அசாதாரணம் எனும் பட்சத்தில் இதற்க முந்தைய அப்பழுக்கற்ற மனிதர்களின் புயத்திலும் அதற்கு முந்தைய மொழியே உருவாகாத காலத்திலும் எந்தக் கற்பனையும் கலப்படாகியிருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது.


விஷயத்துக்கு வருவோம்.


என் தாத்தா ஏழாயிரத்தித் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்று ஒன்பதாவது தடவையாக இந்தக் கதையை என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் ஒட்டுக் கேட்டுவிட்டேன். ஒவ்வொரு புதிய வாரிசு உருவாகும்போதும் நெல்லைப் பரப்பி அதில் வாரிசு எண்ணை எழுதும் வழக்கம் எங்கள் மரபில் இருந்து வருகிறது. ஒரு தலைமுறைக்கு முப்பது ஆண்டுகள் என்று கணக்கிட்டாலும் இருபத்தி நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.


சொல்லப்போனால் அப்போது தமிழ்மொழிகூட எழுத்துக்களை உருவாக்கி யிருக்கவில்லை. எழுத்து என்ன எழுத்து ? தமிழன் ஒரு கோடு போடுவதற்குக் கூட அறிந்திருக்கவில்லை. காட்டெருமை ஒன்றைக் கல்லால் அடித்து வீழ்த்தி ரத்தம் சொட்டச் சொட்ட அதை குகைக்கு இழுத்து வந்தபோது மண்புழுதியில் ரத்தத்தால் ஏற்பட்ட கோடு அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. விரலால் காட்டெருமையின் ரத்தத்தைத் தொட்டு குகையிலும் இங்கும் அங்கும் கோடுகள் போட்டான். அவனுக்கு பிரமிப்பு தாளவில்லை. திகைத்துப் போய் அந்தக் கோடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ரத்தத்தை இப்படி விரயமாக்குவதற்காக சக கூட்டாளிகளின் கோபமான கர்ஜனைக்கு ஆளானான் அவன். அந்த கர்ஜனையைத் தமிழ் கர்ஜனை என்றுதான் இன்று நினைக்கத் தோன்றுகிறது.


மொழியோ ஆடையோ கலாபூர்வமான சிந்தனைகளோ இன்றி அந்தக் கூட்டத்தினர் வாழ்ந்த பிரதேசமே கூட எது என்று இன்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதியா, அதற்கும் மேலே இருக்கும் பிராந்தியமா என்று தெரியவில்லை.


நல்ல நிலவொளியில் காட்டெருமை இறைச்சியைப் புசித்துவிட்டு குகைவாசலில் ஆளுக்கொரு தினுசாய் மல்லாந்திருந்த வேளையில், எதிர்ப்பாறையில் சாய்ந்திருந்த இளம்பெண் நிலவொளியின் பிரதிபலிப்பில் ஒளிவிளிம்பாகத் தெரிந்தாள், ரத்தக்கோடு போடும் நம் கதாநாயகனுக்கு.


ஆரம்பத்தில் எதேச்சையாகப் பார்த்த அவனுக்கு அந்தப் பெண்ணின் ஒளிவளைவுகளில் எதோ வசியம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் பார்த்தான். இதற்கு முன்பெல்லாம் பசிநேரத்தில் அகப்படும் ஏதோ கிழங்குவகையோ முயலோ அவளை அப்படிப் பார்க்கத் துாண்டியிருந்தாலும் இது வித்தியாசமான பார்வை என்பது அவனுக்குப் புரிந்தது. மற்றவர் யாரும் தன்னுடைய நடவடிக்கையை வித்தியாசமாகப் பார்க்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் அவன். இனப்பெருக்க வேட்கை போன்ற வழக்கமான உணர்வுகள்போல் அவள்மீது தாவாமல் வெறுமனே ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவனது நோக்கமாக இருந்தது.


இது என்னமாதிரியான உணர்வு என்பதை அவனது மூளையால் இனம்காண முடியாமல் மகா அவஸ்தையோடு திடாரென்று கத்தினான். ஒருவிதமான ஊளை. காலைப் பின்னிக்கொண்டு பாறைமீது சாந்திருந்த பெண்ணுக்கு இந்த ஊளைச்சத்தம் தன்பொருட்டு எழுந்ததுதான் என்பது புரிந்து சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.


அவளுடைய தோரணையும் நிலவொளி அவள்மீது ஏற்படுத்தி யிருக்கும் ஒளித்தடயமும் நம் கதாநாயகனைப் பரிதாபமான நிலைக்குத் தள்ளியது. அவளை... அவள் இருக்கும் காட்சியை எப்படியாவது பதிவுசெய்ய வேண்டும் என்ற பொருள்படும் படியான ஒன்று அவன் மூளையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. சிந்தனையின் அழுத்தத்தால் திணறினான்.


அவளை எழுதுகோலால் கவிதையாக வடிக்கவோ, இசைக்கருவி கொண்டு சங்கீதமாக வாசிக்கவோ, ஒரு துாரிகைகொண்டு ஓவியமாக்கவோ அவன் நினைத்திருக்கக் கூடும்!


ஆவேசமாக ஒரு கூரான கல்லை எடுத்தான். மிகுந்த சிரமப்பட்டு அவன் அமர்ந்திருந்த பாறையின்மேல் பெருக்கல் குறி போன்ற ஒன்றைக் கீறினான். அந்தப் பெருக்கல் குறிக்கு மேலே ஒரு வட்டம் போட்டான். அவள் அமர்ந்திருக்கும் காட்சியைத்தான் அப்படிப் பதிவாக்கினான்.


அவன் அடைந்த பூரிப்பில் தலை, நாடி, வயிறு என்று பல இடங்களில் தானே பிறாண்டிக் கொண்டான்.


ஒரு பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி மனிதன் படைத்த முதல் படைப்பு அது. மனிதன், கல் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரிந்த தொழிலாளியாகி, இப்போது கலைஞனாகவும் மாறிவிட்டான் என்பதைக் கொண்டாடத் தெரியாத அவனுடைய சகக் கூட்டம் மிதப்பான குறட்டையில் அயர்ந்து கிடந்தது.


நம் கதாநாயகனின் படைப்புசார் பூரிப்பால் ஏற்பட்ட குதியாட்டம் நம் நாயகிக்கு 'இது என்னடா இம்சை ' என்பது போன்ற கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவள் அப்படியே முட்டிபோட்டு நகர்ந்தவாறே நம் நாயகனை நெருங்கி, அவன் பாறையில் ஏற்படுத்தி யிருந்த படைப்பை, சித்திரத்தை, அவனது கிறுக்கலைப் பார்த்தாள். அவள் கண்களில் திகைப்பு. அவன் படைத்தது என்ன என்று புரிந்துவிட்டது அவளுக்கு. முதல் வாசகி, முதல் ரசிகை, முதல் விமர்சகி.


எத்தனையோ இஸங்களாக, இலக்கியச் சர்ச்சைகளாக, காப்பியங்களாக தமிழும், அதன் இலக்கியங்களும் காலவோட்டத்தில் செய்யவிருக்கிற அதியற்புதமான மாற்றங்களை யூகிக்கமுடியாத ஆதிமனித ஆச்சர்யம் அது. பாராட்டும் விதத்திலோ நன்றி தெரிவிக்கும் பொருட்டோ பூனைபோல அவனை உரசினாள் அவள்.


மறுநாட் காலை முட்புதர்களை அகற்றிக் கொண்டிருந்தான் நாயகன்.


அந்த மனிதக் கூட்டம் வசித்துவந்த குகைப் பகுதியில் நிரந்தரமான ஒரு பெருந்தொல்லை நிலவி வந்தது. விலங்குகளிடமிருந்து ஏற்பட்ட தொல்லையைவிட கொடுமையானதாக இருந்தது அது. எந்த விலங்கும் ஒருமுறை கல்லால் அடித்துக் கொன்றபின் மீண்டும் உயிர்கொண்டு வருவதில்லை.


அந்த இனம் பாடுபட்டுக் கொண்டிருந்தது முட்செடிகளால். குகையைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கும் அந்த முட்செடிகளால் நாம் வசிப்பிடம் இன்றி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக சைகைகளால் தீர்மானமாகச் சொல்லி யிருந்தாள் அவர்களின் குழுத்தலைவி. அப்போது தாய்வழி சமூகஅமைப்பு நிலவியது. ஆகவே பசியாறுதல், இனப்பெருக்கம் செய்தல், ஓய்வெடுத்தல் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு, தீ மூட்டுதல், முட்செடிகளை அழித்தல் போன்ற கடமைகளும் அவலர்களுக்கு இருந்தது. இந்த இனக்கரிசனம் காரணமாக உந்தப்பட்டு புதர்களை வேரடிமண்ணாக அழித்துக் கொண்டிருந்தான் நாயகன்.


நம் நாயகியும் அங்கே வந்துசேர்ந்தாள். அந்தப் பெருக்கல்குறி ஓவியம் அவன்மீது அவளுக்கு மரியாதையை ஏற்படுத்தி யிருந்தது. எதிர்பார்க்காத வண்ணம் அவனைநோக்கிப் பற்களைக் காட்டினாள். நம் நாயகனுக்கு அது ஓநாயின் சீற்றத்தை ஞாபகப் படுத்தியது. பயந்துதான் போனான். ஆனால் அது சீற்றம் இல்லை என்று உடனடியாக விளங்கி விட்டது. காலையில் புதிதாகப் பார்ப்பதற்கு அடையாளம் போல அப்படிச் செய்தாள். பதிலுக்கு நாயகனும் அப்படிச் செய்தான். பிற்காலங்களில் இந்த வழக்கத்துக்கு 'பு ன் ன கை ' என்று பெயரிட்டனர்.


நாயகன் வெட்டியெறிந்த செடிகளில் வண்ணமயமான ஒரு பகுதி அவளை வசீகரித்தது. அது அந்தத் தாவரத்தின் பூ என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் இன்னும் சற்று நெருங்கிவந்து அந்தப் பூக்களை மட்டும் தனியே கிள்ளி எடுத்தாள் கைநிறையப் பூக்களோடு அவள் நிற்பது அவனுக்குப் பயங்கரமான.கிளர்ச்சியை உண்டுபண்ணியது. மீண்டும் ஒரு சித்திரம் தீட்டும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். உடனே அவளை அந்தப் பூக்களோடு குகைவாசலுக்கு இழுத்துவந்தான். ஒரு கூரான கல்லை எடுத்து சித்திரம் கீறத் தொடங்கினான். குச்சி உருவ சித்திரம். அவனுடைய படைப்புத் தவிப்பின் நேர்த்தி அதில் மிளிர்ந்தது. கீறி முடியும் தறுவாயில்தான் தங்களைச் சுற்றி தம் இன மக்கள் சூழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது அவர்களுக்கு.


தலைவி மிகுந்த ஆவேசத்தோடு ஒரு கல்லை எடுத்து நாயகன்மீது எறிந்தாள். சுற்றி நின்றிருந்த மற்றவர்களும் உடனே ஆளுக்கொரு கல்லை எடுத்தனர். தங்கள் குல எதிரியாகக் கருதிவந்த முட்செடியின் ஒரு பகுதியை ஒரு பெண் கையில் சுமந்து கொண்டிருப்பதும் அதை ஒருவன் குகையில் சித்திரமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும் ஒரு பேராபத்தின் முன்னறிவிப்பாகத் தோன்றியது அவர்களுக்கு.


எல்லோரும் சொல்லிவைத்தது மாதிரி கற்களை எறியத் தொடங்கினர். உருட்டுக்கட்டை கொண்டு அவர்களைக் கொன்றுவிடும் நோக்கத்தில் சிலர் பாய்ந்தனர். பூக்களை வைத்திருந்த நாயகனுக்கும் நாயகிக்கும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து புரிந்தது. இருவரும் ஓட ஆரம்பித்தனர்.


தங்கள் கூட்டத்தை விட்டு வெகுதுாரம் ஓடினர். வேறொரு குகையில் வாழ்க்கையைத் தொடங்கினர். முட்செடிகளைப் பயிரிட்டு மகிழ்ந்தனர். பின்னாட்களில் அது ரோஜா என்று பெயர்பெற்றது. இப்போதும் காதலின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகிறது.


புதுக் குகையில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு (8000 - 1 தலைமுறைக்கு முன்) ஏகப்பட்ட சைகைகளின் மூலமாகவும், சித்திரக் கோட்டோவியங்கள் மூலமாகவும் தங்கள் கதையைச் சொன்னான் நம் நாயகன். இந்தக் கதையின் அடையாளமாகத்தான் எங்கள் வீட்டுத் தொட்டியில் ஒரு ரோஜாச்செடி இருக்கிறது இப்போதும்.


(காதலர் தின சிறப்புக் கதை)

செவ்வாய், அக்டோபர் 16, 2007

வனமும் இனமும்!







"ஆட்டோ சங்கர்' நெடுந்தொடருக்குப் பிறகு சந்தனக் கட்டை வீரப்பன் கதை(சந்தனக்காடு)யை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. இந்த இரண்டுத் தொடர்களையும் இயக்கியிருப்பவர் வ. கெüதமன். சர்ச்சைக்குரிய மனிதர்களை கதாநாயகர்களாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவருக்கு வாடிக்கையாகியிருக்கிறது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, "இத் தொடர் வெளிவந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்' என்று கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் இயக்குநர் கெüதமனைச் சந்தித்தோம்.

ஆட்டோ சங்கர், வீரப்பன் என்று நிஜ மனிதர்களின் கதையையே தொடர்களாக்கிக் கொண்டிருப்பதற்குப் பிரத்யேகக் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?

அது நிஜக் கதையாகவோ, புனைகதையாகவோ இருப்பதுபற்றி எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஜெயகாந்தனின் "சினிமாவுக்குப் போன சித்தாளு' கதையை குறும்படமாகத் தயாரித்தேன். அது புனைகதைதான். ஆனால் நிஜமாகவே தமிழகத்தில் அப்படியொரு சூழல் இல்லையென்று சொல்ல முடியுமா? சொல்லுங்கள், அது ஒரு புனைகதை மட்டுமேதானா? படைப்பு நிஜ உலகை பிரதிபலிப்பதாக இருப்பதைப் போலவே நிஜக்கதையை படமாக்குவதையும் நான் அதே பார்வையில்தான் பார்க்கிறேன்.


இது சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளாகப் பார்க்கப்பட்ட வர்களை ஹீரோக்களாக்குவதாக அமையாதா?

கதைக்கு ஹீரோ என்பது ஒரு வசதிக்காகச் சொல்கிற வார்த்தைதான். என்னைப் பொறுத்தவரை அவர்கள் நமக்கு அறிமுகமான அளவுக்கு வில்லன்கள் இல்லை என்பதுதான். ஆட்டோ சங்கரோ, வீரப்பனோ முதலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளாலேயே ஊக்குவிக்கப்பட்டவர்கள்தான். பிரச்சினை என்று வந்தபோது கைவிடப்பட்டவர்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களின் பிரச்சினைகளை அவர்களே எப்பாடு பட்டேனும் சமாளிக்க வேண்டியதாகவும் ஆனது. அவர்கள் தள்ளப்பட்ட சூழல்தான் முக்கியமே தவிர அதில் இடம் பெறும் ஹீரோக்கள் அல்ல.



சந்தனக்காடு தொடரில்....


"சந்தனக்காட்டை' எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தினீர்கள்?

ஏறத்தாழ சந்தனக் காட்டுப் பகுதியில்தான். வீரப்பன் படுத்த, நடந்த, ஓடிய இடங்களில்தான் முழுபடப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ரத்தமும் சந்தனமும் மணந்த காட்டுப் பகுதிகளில் படம் பிடித்திருக்கிறோம். இதுவரை மேட்டூர், மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம், ஏமனூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். வீரப்பன் பிறந்த கிராமமான செங்கம்பாடி (இது கர்நாடகாவில் இருக்கும் தமிழ் கிராமம்)யிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.


படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி?

காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு என்பதால் தினமும் அதிகாலை 4 மணிக்கு தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து புறப்பட்டால்தான்

விடியற்காலையில் படப்பிடிப்பைத் தொடங்க முடிகிறது. அடர்த்தியான காட்டுப்பகுதி. திக்கு திசை தெரியாமல் போய்விடும் ஆபத்துகள் அதிகம் இருக்கிறது. வனவிலங்குகள் அதிகம் கண்ணில்படுகின்றன. கரடிகள், குரங்குகள், மான்கள், பாம்புகள், விஷப் பூரான்கள், காட்டு எருதுகள் பல வற்றைப் பார்த்தோம். படமாக்கியிருக்கிறோம்.


வீரப்பனைப் பற்றிய தகவல்களை எங்கே சேகரித்தீர்கள்?

வீரப்பனைப் பற்றி மற்ற யார் சொல்வதையும்விட அவனை பார்த்த அவனுடன் பேசிய மக்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு. நான் சந்தித்த சில பெண்கள் கர்நாடக, தமிழக காவல்துறையினரால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். "நாங்கள் தாயும் மகளுமாகக் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டோம். எங்களுக்கு நேர்ந்த வேதனையைக் கேட்டு நாங்கள் கற்பழிக்கப்பட்ட ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷனை தரைமட்டமாக்கிய எங்கள் அண்ணன் அவர்' என்கிறார்கள்.



படப்பிடிப்பில் சந்தனக்காடு...

அதே போல சுள்ளி பொறுக்க வந்து வழி தவறிவிட்ட பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டு கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து, "ஆடு வாங்கி ரெண்டை நாலாக்கிப் பொழைச்சுக்கோ' என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். இப்படி மனிதநேயம் பாராட்டும் விஷயங்கள் ஏராளம் வீரப்பன் வாழ்க்கையில் இருக்கின்றன. ஏற்கெனவே மீடியா மூலமும் காவல்துறை மூலமும் தெரிந்த விஷயங்களும் உண்டு.


வீரப்பனின் மனைவி இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து?

நான் டேப்பில் பதிவு செய்துவிட்டேன் என்று கூறுவதெல்லாம் வீணான கற்பனை. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன் என்று கூறியிருக்கிறார். நான் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேசினேன். அவர் பயப்படும் அளவுக்கு எதுவும் இத் தொடரில் இல்லை என்பதை பலமுறை தொலைபேசியில் விளக்கிவிட்டேன். டி.வி.டி. ஒன்றும் கொடுத்தனுப்பினேன். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். வழக்கு முடிவும் எங்களுக்குச் சாதகமாகத்தான் வந்திருக்கிறது.


"சந்தனக்காடு' தொடர் மூலம் சொல்லவிரும்பும் செய்தி?

உண்மையை உடைத்துச் சொல்ல முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறோம். வனமும் இனமும் சிதைந்த வரலாறு இது. மனித நேயம் நிறைந்த வீரப்பனுடைய பிற்காலத்தையும் இன்னொரு பக்கத்தையும் சொல்ல விரும்புகிறோம்.

தமிழ்மகன்

சர்ச்சை: கற்றது தமிழ்..! பெற்றது?






கற்றது தமிழ் என்றால் பெற்றது என்னவாக இருக்கும்?

இவனுக்கென்ன பைத்தியமா என்ற பட்டப் பெயரும் குறைந்த சம்பளமும் அவமானங்களும்தான் அவனுக்கு வாய்க்கும் விஷயங்களாக இருக்கும் என்கிறது "கற்றது தமிழ்' திரைப்படம்.


"தமிழ் எம்.ஏ.' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் இப்போது வரிச்சலுகை கிடைக்காதோ என்ற கவலையில் "கற்றது தமிழ்' என வெளியாகி, தமிழ் பேசும் நல்லுலகை உலுக்கியிருக்கிறது.

படத்தின் இயக்குநர் ராம், ""நான் எந்த ஊர் என்பது அத்தனை சரியாகச் சொல்ல முடியாது. வணிகவரித் துறையில் அப்பாவுக்கு வேலை. இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் ஊர் என்று நிறைய மாறிவிட்டேன். நான் ஊர்களில் இருந்ததைவிட ரயில் பெட்டிகளில்தான் அதிகம் வசித்திருப்பதாகச் சொல்வேன். மதுரையில் இளங்கலை தமிழும் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முதுகலை தமிழும் படித்தேன்.




பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், ராஜ்குமார் சந்தோஷி போன்றவர்களின் திரைப் படங்களுக்குப் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் படிப்பவர்கள் நிலை எப்படியிருக்கிறது என்பதைப் படத்தின் மையமாக வைத்து தமிழ் படித்தவனின் வாழ்க்கைத் தரம் சார்ந்த பார்வையைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். நான் சந்தித்த ஒருவனின் கதை அல்ல இது. பலரின் கதை... பலரின் அனுபவம்.

சொல்லப்போனால் இது தமிழ் படித்தவனின் கதை மட்டுமல்ல, இது கலைத்துறை படிப்பு படித்தவர்களின் கதையாகவும்தான் சொல்லியிருக்கிறேன்.

பிறதுறை மாணவர்களுக்கும் கலைத்துறை மாணவர்களுக்குமான மனவியல் சிக்கல் இது. கோவிந்த் நிகிலானி என் ஆதர்ஷ இயக்குநர். "ஒவ்வொரு செய்தியிலிருந்தும் ஒவ்வொரு வசனத்திலிருந்துமே ஒரு படத்தை உருவாக்கிவிடமுடியும்' என்பார் அவர். அப்படியான ஒரு படைப்புதான் "கற்றது தமிழ்'.

படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா பூரித்துப் போனார். ""ஆசியாவின் முதல் ஐந்து படங்களைச் சொல்ல வேண்டுமானால் அதில் "கற்றது தமிழ்' நிச்சயம் இடம் பிடிக்கும். டப்பிங் செய்திருக்கும் உத்தி, திரைக்கதை உத்தி எல்லாமே தமிழ் சினிமாவுக்குப் புதிது'' என்றார். பார்த்திபன் பார்த்துவிட்டு இந்தியாவின் சிறந்த இயக்குநர் என்ற இடம் இவருக்கு உண்டு என்றார். தனுஷ், ""இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடிக்காமல் போய்விட்டேனே'' என்கிறார். பெயர் தெரியாத எத்தனையோ பேர் போன் செய்து பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் இயக்குநர் ராம்.

படத்தில் ஒரு காட்சி:

""நீ ஏன் தமிழ் படிக்க வந்தாய்? என்று கேட்கிறார் பேராசிரியர். ஏதாவது டிகிரி இருந்தா லோன் தருவாங்க''னு படிக்கிறேன்.

இன்னொரு மாணவனைக் கேட்கிறார்.

வேற கோர்ஸ் சேருவதற்கு மார்க் இல்லை என்கிறான்.

நாயகன் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துவிட்டு தமிழ் படிக்க வந்திருப்பது தெரிகிறது. ""ஏதாவது என்ஜீனியரிங் காலேஜில் சேராமல் இங்கு ஏண்டா வந்தாய்'' என்கிறார். தமிழ் படிக்கும் ஆசையில் வந்தேன் என்கிறான்.

-இப்படி ஆரம்பிக்கிறது கதை.




ஆனால் படித்து முடித்ததும் இரண்டாயிரம் வருஷமா இருக்கிற தமிழைப் படித்த படத்தின் நாயகனுக்கு இரண்டாயிரம் சம்பளம்தான் கிடைக்கிறது. பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படிப்புக்கு 2 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இந்த வித்தியாசம் அதிர்ச்சியூட்டுகிறது. கூடவே அவனுடைய வாழ்வின் சிக்கல். நேசித்த படிப்பும் அவனைக் காப்பாற்றவில்லை. காதலும் கை கூடவில்லை... மனநலம் பாதிக்கப்படுகிறது... மரணத்தை நோக்கிப் போகிறான் இப்படி முடிகிறது படம்.

படமாக்கியிருக்கும் நேர்த்தியும் திரைக்கதையின் வலிமையும் இழுத்துப் பிடித்து உட்கார வைத்தாலும் விமர்சனங்களும் படத்துக்கு உண்டு. பொழுது போக்குக்குக்கான படங்களுக்கு இல்லாத சிக்கலை இது போன்ற சீரியஸ் படங்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது வாடிக்கைதான்.

""தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. பெரிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்'' என்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன். தமிழ் படித்தால் மூன்று விதங்களில் வேலை வாய்ப்பு உண்டு. தமிழாசிரியர் ஆகலாம். கல்லூரியில் பேராசிரியராகலாம். பண்பாடு- கலாசாரத் துறைகளில் பணியாற்றலாம். செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு நிறைய நூல்கள் பதிக்கப்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லாக் கல்விக்கும் போல இதிலும் மேற்படிப்புகளுக்கு ஏற்பதான் வேலை வாய்ப்பு. இது இல்லாமல் அரசு நடத்தும் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள் எழுதலாம். 40 ஆயிரம் இடங்களுக்கான சர்வீஸ் கமிஷன் தேர்வு நடைபெறுகிறது. இதில் தமிழ் படித்தவர்கள் எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே?


எழுத்தாளர்கள், வசனகர்த்தாக்கள் இருக்கிறார்கள். வைரமுத்து, மு.மேத்தா, கபிலன், முத்துக்குமார் தமிழில் பட்டம் வாங்கியவர்கள்தானே? மு.வ. எழுதி சம்பாதித்தவர்தானே? அகிலன் எழுதி சம்பாதித்தவர்தானே? கல்கி, ஜெயகாந்தன் என்று எத்தனை எழுத்தாளர்கள்... எத்தனை துணை வேந்தர்கள்? படத்தை எடுத்த டைரக்டரே தமிழ் எம்.ஏ. படித்தவர் என்கிறார்கள். இப்போது அவர் டைரக்டராக உயர்ந்திருக்கிறாரே... தெரியாத்தனமாக தமிழ்படித்தவர்கள் எல்லாம் உயர்ந்திருக்கிறார்கள். தமிழ்தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் ஏன் உயர முடியவில்லை என்று தெரியவில்லை.

என்ஜீனியரிங் படித்துவிட்டு 2000 ரூபாய் சம்பளம்கூட கிடைக்காதவர்கள் இருக்கிறார்களே... பொதுவாக வேலை வாய்ப்பு இன்மையும் சம்பளம் குறைவாக இருப்பதும் வேறு சமூக பிரச்சினைகள்... அந்தப் பிரச்சினை தமிழுக்கும் இருக்கிறது, கெமிஸ்ட்ரிக்கும் இருக்கிறது'' என்கிறார் பெரியார்தாசன் உறுதியாக.

வெள்ளி, அக்டோபர் 12, 2007

பால்- சைவமா? அசைவமா?

குடியரசுத் தலைவராவதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சைவ- அசைவ உணவு குறித்துப் பேச்சு எழுந்தது.

பாலும் அசைவம்தான் என்றார் காந்திஜி. பால் சாப்பிடுவது மாட்டின் இறைச்சியைச் சாப்பிடுவது போலத்தான் என்பது அவருடைய வாதம்.

""நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தாய்ப் பாலும் அசைவம்தான். அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே நர மாமிசம் சாப்பிடுபவர்கள்தான்'' என்றார் ராதாகிருஷ்ணன்.

சமயோசிதமான பதில் காந்திஜியை மிகவும் கவர்ந்து விட்டது.

சிஸ்டர்ஸ் ஃப்ரம் 'செவன் சிஸ்டர்ஸ்'!





இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸôம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மலை மாநிலங்கள் நமக்கு லாட்டரி சீட்டு வகையில்தான் பழக்கம். ஆனால் இன்று இந்த ஏழு மாநிலங்களிலிருந்தும் புறப்பட்டிருக்கும் இளைஞர்கள் இப்போது உலகமெங்கும் பணியாற்றுகிறார்கள். சென்னையிலும் இப்போதெல்லாம் தடுக்கி விழுந்தால் இந்த "ஏழு சகோதரி' பிரதேசத்தில் இருந்து வந்த சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். என்ன காரணம்?
பெங்களூரில் உள்ள ஒரு பிபிஓ நிறுவனத்தின் தலைவர் நாகராஜன், தங்கள் நிறுவனத்தில் கணிசமான அளவு வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதாகக் கூறுகிறார். ""அவர்களைத் தேர்வு செய்ததற்குக் காரணம் நிஜமாகவே அவர்கள் பேசும் நல்ல ஆங்கிலத்துக்காகத்தான். நல்ல தரமான ஆங்கிலம் அவர்களுக்குக் கால் சென்டர், பிபிஓ சென்டர், ஃபிரண்ட் ஆபிஸ் போன்ற வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய துறையில் அவர்களுக்குப் பிரகாசமான வரவேற்பைத் தந்திருக்கிறது. இப்போது புதுதில்லி, பெங்களூர் நிறுவனங்களில் இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக இருக்கிறது. சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இன்னும் பெருக வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் நாகராஜன்.

பெங்களூரில் இருக்கும் சன்னிஸ் நிறுவன அதிபர் அர்ஜுன் சஜ்ஜானி, ""ஆங்கிலம் ஒரு காரணம். கூடவே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். வேலை செய்வதற்காக வெகு தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பதால் இவர்கள் அடிக்கடி தங்கள் பாட்டிமார்களையும் உறவினர்களையும் நோய்வாய்ப்படுத்துவதோ, சாகடிப்பதோ இல்லை. ஒழுங்காக வேலைக்கு வந்துவிடுகிறார்கள்'' என்கிறார்.

வடகிழக்கு மாகாணத்தவர்களுக்கு எப்படி இந்தத் திடீர் மவுசு?

""வடகிழக்குப் பிராந்திய இளைஞர்களுக்கு அவர்களின் தாய்மொழியைவிட ஆங்கிலம் நன்றாகத் தெரிவதற்கு கிருஸ்துவ மிஷினரிகள்தான் காரணம்'' என்கிறார் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தின் நூலகரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ரெங்கையா முருகன். வடகிழக்கு மாநில பழங்குடியினர் பற்றிய மிக முக்கியமான கள ஆய்வை நிகழ்த்தியிருப்பவர் இவர்.

""கிருஸ்துவ அமைப்புகள் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவது ஆங்கிலத்தைத்தான். பழங்குடியினருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிப்பதை முக்கிய செயல்பாடாக வைத்திருக்கிறார்கள். சென்ற தலைமுறையினர்தான் அங்கெல்லாம் அவர்களின் தாய் மொழியில் பேசுகிறார்கள். இளைய தலைமுறையின் பரிவர்த்தனை எல்லாம் ஆங்கிலத்தில்தான். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் வெளிமாநிலத்துக்குச் செல்கிறார்கள். அதே போல் அங்குள்ள இளைஞர்களுக்குத் தென்னிந்தியாவில் படிப்பதும் வேலைபார்ப்பதும் மிகப் பெரிய கனவாக இருக்கிறது. காரணம், இங்கே படித்த இளைஞர் என்றால் அவர்களுக்கு வரதட்சணையே பிரம்மாண்டமாக இருக்கும்.

பிறந்ததிலிருந்தே ஆங்கிலத்தில் பேசுவதாலும் மங்கோலிய முகத்தோற்றத்தாலும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அடையாளம் கிடைக்கிறது. கொஞ்சகாலம் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றுகிறவர்கள் உடனே வெளிநாட்டுக்குத் தாவிவிடுகிறார்கள்'' என்கிறார் ரெங்கையா முருகன்.

சென்னையில் அஜுபா சொல்யூஷன் என்ற பிபிஓ நிறுவனத்தின் பைனான்ஸ் இயக்குநராக இருக்கும் ஷங்கர் நரசிம்மன், ""தில்லியோடு ஒப்பிடும்போது சென்னையில் வடகிழக்கு இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் எஸ்.ஐ.ஈ.டி., இந்துஸ்தான் கல்லூரிகளில் இருந்து இதுவரை 15 பேர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றனர். இது அவர்களின் வருகையைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இருப்பதாகத்தான் உணர்த்துகிறது'' என்கிறார்.

எங்கோ மலை முகட்டில் பிறந்தவர்களுக்கு ஆங்கிலம் என்ற மொழி இத்தனை பெரிய அங்கீகாரத்தைத் தந்திருப்பது ஆச்சர்யம்தான். கூடவே சிறிய வருத்தம். தங்கள் மொழி, கலாச்சார அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது.

-தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin