சனி, ஆகஸ்ட் 27, 2011

திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு -வெங்கட் சுவாமிநாதன்



தமிழகத்தின் மிக முக்கியமான இலக்கிய விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன். வெட்டுப் புலி நாவல் குறித்த அவருடைய விமர்சனம் இது.
கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.


குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.


ஒன்று விலகி இருந்து சாட்சி பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு

கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.


ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.


தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.

வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.


இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப் படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.


எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்பு லிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.


வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டிதான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்வத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலெயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சிதான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.


பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.


ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .


ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும் நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது.


தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.


“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.


அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”


இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.

பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.


“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”


மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”


இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.


இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில்
“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா


“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”


அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி.


“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”


பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.


“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”


“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”


இது ஒரு காட்சி.


இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.


இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங் களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார் தமிழ்மகன்.


இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.


பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.


இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.


ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.


இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.

நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.

“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.


வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.

அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?


அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.

”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..


லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.


முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.


லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.


இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.


ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.

வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.


நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.


அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:


நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?


(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).


எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.


இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”


அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.


“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.


“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.


“அப்படியாடா? “ என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.


நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.


இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.


பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.


“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.


கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.


தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.


அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.


”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?”


எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.


இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.


“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?


இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”


“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?


பிரேமா இங்கே வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.


”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.


”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”


பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…


எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.


திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.


தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.


நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.


தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.


திராவிட இயக்கத்தைப் பர்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.


எல்லா புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.




வெட்டுப்புலி: தமிழ் மகன் (நாவல்) உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை- 600018 ப..374 விலை ரூ. 220

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

நல்லதோர் அடையாளம்


சாகித்திய அகாதமி உறுப்பினர் முனைவர் திரு. ராமகுருநாதன் வெட்டுப்புலி நாவல் குறித்து எழுதிய அனுப்பிய பாராட்டுரை.

நாவல்களைப் படிப்பது என்பது அருகிவரும் காலமாகிப் போகிவிட்டதோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்குமாறு இன்றைய கால கட்டம் இருக்கிறது. மிக அதிகமான பக்கங்களைக் கொண்ட படைப்புகளுக்குத் தொடக்க காலத்தில் இருந்த வரவேற்பினை இன்று காணுமாறு இல்லை. வரலாற்று நாவல்களைப் படித்து மனசைப் பரவசத்திற்கு உள்ளாக்கிய காலம் அன்று இருந்தது. இன்றும் ஒரளவே இருக்கிறது. அன்று பிரபலமான நாவலாசிரியர்கள் சிலரின் சில படைப்புகளைப் படித்து ரசிப்போர் இன்றும் இருக்கவே செய்கின்றனர்.
காட்சி ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு புனைகதையைப் படிப்பதற்கான சூழ்நிலை குறைந்து வருவதைக் கணக்கெடுக்கவேண்டும். இருப்பினும் இன்றைய நாவல் உலகில் தேர்ந்தெடுத்துப் படிக்கக்கூடிய அளவிற்கு வாசகர்கள் இருக்கின்றனர். அவர்களிடையே தீவிர வாசிப்புத் தன்மை கூடுதலாக இருப்பது வரவேற்புக்கும். நல்ல இலக்கியம் வளர்ந்துவருவதற்கும் உரிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்று தமிழ் மகனின் வெட்டுப்புலி என்னும் நாவலாகும்.
வெட்டுப்புலி என்ற தலைப்பே ஓர் குறியீட்டு உத்தியைக் கொண்டிருப்பதாகக் கருத இடமுள்ளது. அது நாவலாசிரியரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகலாம். அதற்குரிய போதிய தடயங்களைக் காணமுடிகிறது.
ஓரு நூற்றாண்டு கால வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெறும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல், கதைமாந்தரின் குணங்களில் கலந்தும் கரைந்தும் கதைப்பின்னலாக நகர்த்திச் சென்றிருப்பது ஆசிரியரின் திறத்தைக் காட்டுகிறது.
வரலாற்று நாவல்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவது தவறான பிரயோகம். தமிழில் வரலாற்று நாவல்கள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் வரலாற்றுப் புனைகதைகள் உண்டு. உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புனைவுடன் எழுதுவதையே வரலாற்று நாவல்கள் என்கின்றனர். இது தவறு. வரலாற்றுப் புனைகதை என்ற சொற்பிரயோகம்தான் சரியானது. பொன்னியின் செல்வன் தொடங்கி இதுகாறும் வெளிவந்துள்ளவற்றை அவ்வாறுதான் அழைக்கவேண்டும். அலையோசை போன்ற நாவல்கள் ஓரளவு கற்பனை கலந்த சமகால வரலாற்றுணர்வுடையது.
வெட்டுப்புலி முற்றிலுமாக வேறுபட்ட, மிகைப்படுத்தப்படாத சமகால வரலாற்றைக் கூறுகிறது. நாற்பதுகள் தொடங்கிப் புத்தாயிரம் வரையிலான நீண்டதொரு காலத்தில் நாவல் பயணிக்கிறது. ஆசிரியர் சொல்லியிருப்பது போல, இது நூறுவயது பயணம். கடந்த கால நிகழ்வுகளோடு மட்டுமன்றி, நிகழ்கால உண்மைகளையும் மூடிமறைக்காமல் எழுதப்பட்டதாக உள்ளது.
ஆசிரியரின் முன்னுரையாக, 'நாவலுக்குள்' என்ற பகுதியிலிருந்து சில உண்மைகளை அறிகிறோம்.
'இந்த நாவலைத் திராவிட இயக்க நாவலாக வடிக்கவேண்டியிருக்கிறது; திராவிட கண்ணாடி அணிந்துபடிப்பது அவசியமாக இருக்கிறது'
என மனந்திறந்து பேசுகிறார். திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மௌனசாட்சியாக இருப்பதை வெட்டுப்புலியைப் படமாகக் கொண்ட தீப்பெட்டி உணர்த்திவிடுகிறது. ஒரு தீப்பெட்டியில் அடங்கியுள்ள குச்சிகளைப் போலவே நாவலிலும் எண்ணிக்கை அதிகமான கதைமாந்தர்கள்!. அவர்களின் அகமன வெளிப்பாடுகள் ஒருபுறம்! தீக்குச்சியின் தலையில் இருக்கும் கந்தகக் கொண்டைகளாகக் கதைமாந்தர்களின் உணர்வுகளை-உறவுகளை - உரசல்களை - உரசிப் பார்க்கத் தீப்பெட்டியின் வெளிப்புறத்தில் இருக்கும் கந்தகப் பட்டை!
இப்படி அகமும் புறமுமாகக் கொழுந்து விட்டு எரியும் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ஆசிரியர். உரசிலில்தானே எதுவும் பற்றி எரியும். கதைமாந்தரின் குணாதிசயங்களும் அப்படிப்பட்டவையே.
கதைமாந்தர்கள் பட்டவர்த்தனமாகப் பேசும் உரையாடல்கள் நாவலுக்கு வலுசேர்த்திருக்கிறது. இந்த நாவலில் யாரும் நிழல் மனிதர்களாக இல்லாமல், நிசமனிதர்களாக்கி இருப்பதும் நாவலுக்கு வலிமை சேர்த்துள்ளது.
நாற்பதுகளின் மையப்பகுதியில், சிறுத்தையைக் கொன்ற கொள்ளுத்தாத்தாவின் படம் வெட்டுப்புலித் தீப்பெட்டியில் காட்சி அளிக்கவும், தாத்தா பற்றிய வரலாற்றுண்மையை அறிந்துகொள்வதற்காக நண்பர்களோடு ( பிரபாஷ், பெர்ணான்டஸ்) கிராமப்புறம் நோக்கிப் பயணிப்பதாகக் கதைக்களத்தினெ தொடக்கம் அமைந்திருப்பது தமிழுக்குப் புதியது.
ஆசிரியர் சார்ந்துள்ளள ஜெகநாதபுரத்தையும், ரங்காவரத்தையும் குளோசப் ஷாட், மிட்டில் ஷாட் என்ற வகைகளில் காட்டியிருப்பது கதைக்கு ஒரு நம்பகத்தன்மை அளிப்பதோடு, ஆசிரியரின் சுயவரலாற்றையும் உணர்த்திவிட்டுள்ளது. நாவலுக்கு ஒரு 'நேட்டிவிட்டி'யைத் தந்துவிடுகிறது.
நாவலில் கதாநாயகனோ, வில்லனோ புகுந்துவிடாது, யாவருக்கும் சம்பங்கு அளித்திருப்பது உண்மையின் உலகம் என்பதனை உறுதி செய்கிறது. நாவலில் பேராசிரியர்கள் சிலரும், கவிஞர்கள் சிலரும், மாவீரன் பிரபாகரனும் இடம் பெற்றிருப்பது ஒரு வகையில் நாவலாசிரியரைப் பாதித்த பெயர்களாக- அவர்கள் 'மின்னல்' வருகையாக வந்துபோவது இயல்பாக உள்ளது. லட்சுமணன் தொடக்க முதல் இறுதி வரை நாவலில் உலாவந்தாலும் அவனை ஆசிரியர் கதாநாயகனாக ஆக்கிவிடவில்லை.
வெள்ளையர் குதிரையில் சவாரி செய்துபார்த்துவிடுவது என்ற லட்சுமணின் எண்ணம் கதையைத் தொடங்குவதற்கும், தொடர்வதற்குமுரிய எதிர்பார்ப்பைத் தருகிறது. வெள்ளைக் காரனின் குதிரையைச் சவாலாக ஏற்றுக்கொண்டு சவாரி செய்வது கூட நம்மை அடக்கி ஆண்ட வெள்ளையரை நாம் அடக்கிவிடவேண்டும் என்ற ஆதங்கத்தை அவன்பால் காணலாம்.
நாற்பதுகளில் தசரத ரெட்டியின் சகலை சிறுத்தையை வெட்டியது இயல்பான வருணனையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. முப்பதுகளில் சின்னா ரெட்டி சொக்கலிங்க ரெட்டியின் உடலில் ஏற்பட்ட கட்டிக்கு வைத்தியம் பார்த்ததும் அவ்வாறே இயல்பான நிகழ்ச்சியாக வந்துபோகிறது. தசரத ரெட்டி முத்தம்மா மீது கொண்டிருந்த சபல எண்ணம் பிராய்டின் உளவியல்படி அழுத்தமானதோர் அகமனப்பதிவு. நாற்பதுகளில் லட்சுமணன் குணவதி மீதுள்ள விருப்பமும் அப்படிப்பட்டதே. முத்தம்மாள் கணவன் ருத்ரா ரெட்டி ஒரு வித்தியாசமான படைப்பு. இன்றும் கூடக் கிராமப் புறங்களில் அவனைப் போலவே சிலர் இருப்பது நிசம். ஆறுமுக முதலியார்- சுந்தராம்பாள் குடும்ப உணர்வு யதார்த்தம். அவர்கள் உரையாடலும் இயல்பான வெளிப்பாடு. கணேசன் பெரியார் மீது கொண்டுள்ள தீவிரப் பற்றும், பிராமணர்கள் மீது கொண்டிருந்த தீவிர வெறுப்பும் நாவலுக்கு இன்னொரு பரிமாணம் தருகிறது. இந்த அளவிற்குத் தமிழ் நாவல்களில் துணிச்சலாக இவ்விரண்டையும் அலசியவர்கள் யாருமில்லை. தியாகராசன்-ஹேமலதா வாழ்க்கை முரண்கள் சற்றே வித்தியாசமானவை. தியாகராசனிடம் நிலவி வந்த பிராமண வெறுப்பு ஒரு சிறு நிகழ்ச்சியால், மாறிவிடுகிறது. அவன் தன் போக்கையும் எண்ணத்தையும் மாற்றிக் கொண்ட பின், அவனது பண்பு சற்று மாற்றுக் குறைவாகவே உள்ளது. சினிமா எடுக்க முயன்று சீரழிவைத் தேடிக் கொண்ட சிவகுரு வாழ்வு ஒரு நல்ல படப்பிடிப்பு.
திராவிட இயக்கம் பெரியாரால் சாதித்தது பற்றிய கண்ணோட்டம்- அவர் வாழ்வின் இறுதிப் பயணத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது, சௌந்திரபாண்டிய நாடார் லட்சுமண ரெட்டிக்கு, பெரியார் காங்கிரஸில் இருந்த கால கட்டத்தில் அதாவது, ஆயிரத்து இருபத்தி நான்கில், நாடார் குல மித்திரனில் வெளிவந்த பெரியார் பேச்சை வெளியிட்டிருப்பதைப் படித்துக் காட்டுவதும். அதனை லட்சுமண ரெட்டி நம்ப மறுப்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
கன்னிமரா நூலகத்தில் நடராசன், பிராமணப் பெண்ணான கிருஷ்ணப்பிரியாவைச் சந்தித்துப் பேசுவது நாவலின் முக்கிய கட்டம். அவள் பேச்சு நாவலுக்கு ஓர் இறுதித் தீர்ப்பை வழங்குவது போல உள்ளது. அவள் வினாத் தொடுப்பது தமிழன் என்பவனுக்கு ஒரு சாட்டை அடியாகத்தான் இருக்கும். அவள் கேட்கிறாள் :
''அவன் கிட்ட( செத்த மாட்டைச் சாப்பிட்டு வாழறவன்) மொதல்ல விரோதம் பாராட்னது யாரு? அவனை மாடு தண்ணி குடிக்கிற குளத்திலே தண்ணி குடிக்கக்கூட அனுமதிக்காம ஒதுக்கிவெச்சது யாரு.....உங்க ஊர்ல இருக்க கோயில் குருக்கள்தான் அப்படி ஒதுக்கி வெச்சாரா? எல்லா ஊர்லயும் குருக்கள் ஆட்சிதான் நடக்குதா? மனசாட்சி தொட்டு சொல்லுங்க?
கிருஷ்ணப்பிரியாவின் இந்தக் கேள்வி விஷமத்தனமானதில்லை. விஷயத்தனமாகத் தெறிக்கிறது. நாவலை முடிப்பதற்கு உரிய சூழல், அவள் வழியாகவே - ஒரு சமரசத் தீர்வுக்கு உள்ளாகுவதாகவே தோன்றுகிறது. அவளது பேச்சு இன்றைய சமுதாயத்திற்கு ஓர் அறைகூவலாகவே தெரிகிறது.
நாவலாசிரியர் யாரும் சொல்லத்துணியாத அரசியல் தலைவர்களைப் பற்றித் துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார். அதனை நாவலில் எடுத்தாள்வதே பெரிய விஷயம். அதனைக் கச்சிதமாக இடம் நோக்கிச் செருகியுள்ளார்.
ஒரு நாவலைப் படிக்கிறோம் என்ற உணர்வில்லாமல். ஓர் உண்மை உலகை- ஒரு நடப்பியல் உலகை நம்முன் காண்கிறோம் என்ற மனநிலையைத் தோற்றுவிக்குமாறு நாவல் அமைந்துள்ளது. அன்று கிராமங்களில் இருந்த மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் நடை உடை பாவனை, வட்டார மொழி வழக்கு, சாதிய ஆதிக்கம் முதலானவை ஒரு நடப்பியல் உலகை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.
சென்னையில் அன்றிருந்த சினிமா தியேட்டர்கள், அந்தக்காலத்தில் கோலோச்சியிருந்த நடிகர்கள், வெலிங்டன் தியேட்டரில் அந்தக் காலத்திய திரைப்படங்கள் வெளியிட்டப்பட்டமை. ஒற்றைவாடை தியேட்டர், கொப்பூருக்கு இராமனுசர் வருகை தந்தது, பாய்ஸ் கம்பெனி, தினத்தந்திக்காக ஆதித்தனார் சென்னையில் இடம் தேடியது, சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்யம் நாடகம் பற்றிய கருத்து, ஸ்ட்ராபோர்ஃடு கிரிப்பன் மிஷன் பற்றிய தகவல், பெரியார். அண்ணா, சஞ்சய்காந்தி. இராஜீவ் பெரியார். எம்.ஜி. ஆர் மரணம் முதலானவற்றை ஆங்காங்கே இடம்நோக்கிப் பதிவு செய்திருப்பது நாவலை ஓர் உண்மைகளின் உலகமாக்கியிருக்கிறது.
ஒரு நல்ல நாவலுக்குரிய அனைத்து அடையாளங்களும் இதில் தென்படுவதனை மறுக்கமுடியாது. இந்த நூலைப் படைத்தளித்தமைக்குப் பாராட்டுகள்.




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

கலந்துரையாடல்

வெட்டுப்புலி கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. நாவலின் நுட்பம் குறித்து பேராசிரியர் ராமகுருநாதன், கவிஞர் மனுஶ்யபுத்திரன், கேபிள் சங்கர், நடிகர் எழுத்தாளர் பாரதிமணி, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் மிகச் சிறப்பாக பேசினர். அனைவருக்கும் என் நன்றி.
அலுவலக வேலை காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
படங்கள் பார்வைக்கு...





வியாழன், ஆகஸ்ட் 11, 2011

அழைப்பிதழ்

டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன் வெட்டுப்புலி நாவல் குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான அழைப்பிதழ் இது.


ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல்
“வெட்டுப்புலி”
குறித்த கலந்துரையாடல்.
__________________________​_______________

... நாள் : 13/08/2011 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்
6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78
( பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
_________________
தலைமை
பேராசிரியர்.இராமகுருநாதன்

பங்குபெறுவோர்

கவிஞர் மனுஷ்யபுத்திரன்
எழுத்தாளர் நடிகர் பாரதிமணி
பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ)
கேபிள் சங்கர்

ஏற்புரை
எழுத்தாளர் தமிழ்மகன்

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

களப்பிரர்கள் செய்த தவறு

களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன.
களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏறத்தாழ ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ஆண்டுக்கு மேலான தொன்மையுடையது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக கண்டங்கள் யாவும் ஆரம்பத்தில் கோக்வாண்டா கண்டமாக இணைந்திருந்து, பல லட்சம் ஆண்டுகளாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியிருப்பினும் ஆஸ்திரேலியா பிரிந்து சென்றது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. காரணம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினர். அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதற்கு அவர்களிடம் மிச்சமிருக்கும் சில ஒலிக்குறிப்புகளும் சில ஆதி நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக அவர்கள் நாக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் எருது இலச்சினைகளையும் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். இன்னமும் அவர்கள் பயன்படுத்தும் ஓரசை, ஈரசைச் சொற்கள் தமிழ் மொழியை ஒத்திருக்கின்றன. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதைத் தெளிவுபடுத்த இந்த சிறிய உதாரணத்தை முன் வைக்கிறேன்.
இந்தியாவில் பரவலாக வசித்து வந்த இந்த இனம் சிந்து சமவெளியிலும் தென்னிந்தியாவிலும் வசித்து வந்த தடயங்கள் கிடைத்துள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த இனக்குழு ஈரான், ஆப்கானிஸ்தான், மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம். தெற்கே கடல் கொண்டுவிட்ட குமரியில் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி உருகல் காலத்தில் சுமார் 300 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தபோது இலங்கை பரப்பு தனித்துப் போனதோடு, குமரி கண்டத்தின் கடைசி நிலப்பரப்பும் மூழ்கிப் போனது தெரிகிறது.
அதற்கு முன்பு உலக கடல் மட்டத்தில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது. பனி உருகல் காரணமாக ஏற்பட்ட அந்த இரண்டு கடல் ஊழியில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த குமரிப்பரப்பு சுத்தமாகவே அழிந்து போனது. கடல் கொண்டுவிட்ட அந்த நிலப்பகுதியில்தான் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டதாக அதன் பின்னர் வந்த புலவர்களின் பாக்களில் இருந்து அறிய முடிகிறது.
இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடுகள் கடலில் மூழ்கியிருப்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கடற்கோள், பனி ஊழி, அயலவர் படையெடுப்பு என தமிழினம் ஏராளமான நசிவுகளை காலம்தோறும் சந்தித்தாலும் அது ஸ்பினிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுவதுபோல மீண்டும் மீண்டும் எழுந்துவந்திருப்பதைப் பார்க்கிறோம். ஐரோப்பிய மொழிகளோ, கிரேக்க, எகிப்து மொழிகளோ இத்தனைச் சிரமங்களை எதிர் கொள்ளாமலேயே மறைந்து போயிருப்பதைப் பார்க்கும்போது தமிழுக்கு இருக்கும் தொன்மையும் பலமும் விளங்கும்.
இவ்வளவு தொன்மையான மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பலமாகவும் அமைந்திருக்கிறது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பதாகவே சொல்லலாம்.
தமிழ்மொழி சுமார் பத்தாயிரம் ஆண்டுகளில் செழுமையடைந்து, தழைத்து தென்னிந்திய லப்பரப்பில் பிரதான தொடர்பு மொழியாகவும் இலக்கியத்தில் மிக உயர்ந்த லையிலும் செயல்படத் தொடங்கியது. மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்-டதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. உலகில் வேறெந்த மொழியிலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இங்கு தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை இயம்பப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு தமிழகத்தில் நிலைபெற்றிருந்த ஆட்சியே களப்பிரர் காலம்.
கி.பி. 250க்குப் பிறகும் கி.பி. 550க்கு முன்புமான இக்காலகட்டத்தில் தமிழில் இலக்கியச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் பிராகிருதம், பாலி மொழிகளே நிலைநாட்டப்பட்டன. அதே சமயம் அவர்கள் தமிழை வளர்த்தார்கள் என்று விவாதிப்போரும் உண்டு. நாலடியார், சீவகசிந்தாமணி, காரைக்காலம்மையார் நூல்கள், இறையனார் களவியல் ஆகிய நூல்கள் இக்காலத்தைச் சேர்ந்தவைதான் என்பது ம.சீ.வேங்கடாமி நாட்டாரின் கருத்து. முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இக்காலத்தைச் சேர்ந்தவை என்கிறார் பண்டாரத்தார். ஆனால் இந்த நூல்கள் பலவும் அறத்தை முன்னிறுத்திப் பாடியதாகவே இருந்தன. மு.ரா.நல்லபெருமாள் முதலியார் சொல்வது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து பார்க்க வைக்கிறது. "களப்பிரர்கள் என்பரோர் தமிழரே. அவர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் தம் ஆதிக்கத்தை இழந்திருந்தனர். அதனால்தான் அந்தக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்.' என்கிறார். நாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஆதிசங்கரரும் ராமானுஜரும் தோன்றி சமணத்துக்கு எதிராக சைவத்தையும் வைணவத்தையும் முன்னெடுத்துச் சென்றனர். பதினாயிரம் சமணர்களை கூன்பாண்டியன் கழுவேற்றினான் என்ற குறிப்பின் மூலம் சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதோடு அவர்களின் சமய நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன என யூகிக்க முடிகிறது.
பார்ப்பனர்கள் ஆதிக்கம் மீண்டும் உருவானதால் அந்தத் தமிழர் ஆட்சிக்காலம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருண்டகாலம் என்று ஆகிப்போனது என்பாரும் உண்டு. மயிலை சீனி. வேங்கடசாமி, தேவநேயப் பாவாணர் போன்ற பலர் இந்தக் கருத்துக்கு உடன்பட்டவரே. களப்பிரர் காலத்துக்குப் பிறகு சைவமும் வைணவமும் தழைத்தது என்பது உண்மை. கி.பி. 600க்குப் பிறகு தமிழில் சைவமும், வைணவமும் பக்தி இலக்கியத்தை ஆவேசத்தோடு வளர்த்திருப்பதைப் பார்க்கலாம். வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை களப்பிரர்கள் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலேயே இங்கு நூல்கள் இயற்ற முயன்றதையும் சமண மதத்தை வளர்க்க முற்பட்டதையும் ஆராய்கிறார்.
பாண்டி நாட்டில் சமண கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்ததாக சீன பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 600 நூற்றாண்டு வாக்கில் அவர் தமிழகம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. களப்பிரர்கள் காலத்துக்கு பின்னர் தோன்றிய திருநாவுக்கரசர் சமணர்களோடு வாதாடியதையும் அவரைச் சுண்ணாம்புக் காலவாயில் போட்டு சித்தரவதை செய்ததையும் தமிழிலக்கியங்கள் விவரிக்கின்றன. ஆக, களப்பிரர்கள் காலம் என்பது சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் என்பதில் ஐயம் யாருக்கும் இல்லை. அவர்கள் தங்களின் சமய நூல்களையும் தங்களின் மொழியையும் இங்கே பரப்புவதில் பெரும் வேகம் காட்டினர். தமிழகத்தில் சித்தன்ன வாசல் குடைவரைக் கோவில்களும் சிலப்பதிகாரத்தைப் போலவே, சமண, பௌத்த சமயத்தை போதிக்கும் சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய நூல்களில் அச் சமயத்தினர் இங்கே செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.மொழி ஆராய்ச்சியாளர் ப. சிவனடி இக் கருத்தை வலியுறுத்துகிறார். தமிழ் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டிலேயே செழிக்கத் தொடங்கிய சமணமும் பெüத்தமும் பிறகு ஏன் தமிழர்களுக்கு எதிராக மாறியது என்பது யூகிக்க உகந்தது. அவர்கள் சமண சமயத்தைப் புகுத்தினர் என்பது காரணமாகத் தெரியவில்லை. சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமண சமயத்தைத் தழுவுகிறார். கவுந்தி அடிகள், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்கள் சமண சமயத்தைத் தழுவியதாக படிக்கிற நாம் எப்போது அதன் எதிரியாக மாறினோம் என்பது யோசித்தல் முக்கியம்.
அவர்கள் நம் மொழியின் மீது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியதில் இருந்துதான் களப்பிரர்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடுகள் பெருகத் தொடங்கியிருக்க வேண்டும்.இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது அன்று துவங்கப்பட்ட திராவிட சங்கம். பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி. 470). அவருடைய நோக்கமே சமண சமய நூல்களை தமிழில் இயற்ற வேண்டும் என்பதே. பதினென் கீழ் கணக்கு நூல்கள் பலவும் இச் சங்கத்தின் முயற்சியினால் தோன்றியிருக்கலாம் என்பது கே.கே. பிள்ளையவர்களின் வாதம். பாலி பிராகிருத மொழியில் நூல்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்று தமிழகத்துக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டதே தமிழுக்கு நேர்ந்த சோதனைக் காலத்தைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி தமிழர்களை ஒருங்கிணைக்க முயன்றது. இதனால் தமிழர்கள் தமிழில் தமிழுக்கு நெருக்கமான இறைநூல்களைப் பாடுவதில் இயல்பாகவே ஈடுபட்டிருக்கலாம்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக சொல்வது உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. அதே போல பக்தி இலக்கியத்தின் காலத்தையும் தமிழ் வளர்ச்சியின் பங்களிப்பாகக் கொள்ள முடியும். சமணத்துக்கு மாற்றாக மட்டுமின்றி பாலி மொழிக்கு மாற்றாகவும் தமிழ் செயல்பட்டது. தமிழர்களுக்கு மொழி மிகவும் முக்கியமானதாக இருந்ததை பல்வேறு கால கட்ட நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. மொழிக்காக உயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக அவர்கள் இருந்தனர். சைவம், வைணவ பாடல்களில் தமிழைச் சிறப்பித்துப் பாடுவதை நாம் பார்க்கிறோம். "மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர்'-என தேவாரத்தில் சமணரைப் பழிக்கிறார் ஞான சம்பந்தர்.
- இத் தகவல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தமிழர் வரலாறு நூலில் பி. இராமநாதன் தெரிவிக்கிறார்.1938 இந்தித் திணிப்பின் போது தாளமுத்து, நடராசன் உயிர்த் தியாகமும், 1965 ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமும் உயிரிழப்புகளும் தமிழீழத்துக்காக உயிர் நீத்தவர்களும் தமிழர்கள் மொழிமீது அதீத பாசம் கொண்டிருந்ததற்கு சமீபத்திய உதாரணங்கள். இதற்கு முன்னர் சைவர்களும் வைணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு சமயத்தை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்ததை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். சுண்ணணாம்புக் காலவாயில் சுட்டெரித்தபோதும் சைவத்தை மட்டுமின்றி அவர்கள் தமிழையும் நேசித்ததை அறிய முடிகிறது. அதற்கும் முந்தைய காலங்களில் அவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் இறைவனையே அதற்கு தலைவனாக்கியதும் இலக்கியம் தரும் தகவல்கள்.
புதிதாக வேறு ஒரு சமயத்தைப் புகுத்தியதோடு மட்டுமின்றி வேறொரு மொழியையும் புகுத்தியதே தமிழர்கள் முற்றாக அவர்களை அழிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.களப்பிரர்கள் ஏந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. களப்பிரர்கள் என்பார் கர்நாடகத்திலிருந்து தமிழர் மீது ஆக்ரமிப்பு செய்தவர்கள் என்று பரவலாக அறியப்படுகிறது.
இக்கருத்தில் ஆய்வாளர்கள் பலருக்கும் ஒத்த கருத்து உண்டு. மைசூர் ராச்சியத்தின் பேலூர் கல்வெட்டு ஒன்று அங்கு களப்போரா எனும் பெயரில் ஒரு வம்சத்தினர் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறது. (கே.கே. பிள்ளையின் தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் ( பக்.185) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.) களப்பிரர்கள் தெற்கு ஆந்திரப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பார் சிலர். வேங்கடத்தை ஆண்டுவந்த களவர் என்னும் இனத்தவரே பல்லவரின் கை ஓங்கியதாலும் சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் தென் தமிழகத்துக்கு பெயர்ந்து தமிழகத்தை ஆக்ரமித்ததாக அதே நூல் தகவல் தருகிறது. இது தவிர களப்பிரர் தமிழரே என்ற கருத்து ஒன்று உண்டு. பாவாணர், க.ப. அறவாணன் போன்றோர் இக் கருத்து உடையவர்கள். களப்பிரர் என்ற தமிழர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு இழந்து இருந்ததால் அக் காலகட்டத்தை இருண்ட காலமாக வர்ணிக்கின்றனர் என்கின்றனர்.
வரலாற்றை யூகிப்பது ஒரு சுவையான அம்சம். எது உண்மையாக இருக்கும் என்று அலசுவதும் தேவை.

வியாழன், ஜூலை 28, 2011

எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து

அன்பு தமிழ்மகன்


விருது பெற்றதற்கு வாழ்த்துகள்,


உங்கள் நாவலை இரண்டு மாதங்களுக்கு முன்பே வாசித்துவிட்டேன், சமகால தமிழக சூழலை மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள்,
நாவலின் ஊடாக வெளிப்படும் பகடியும் உள்ளார்ந்த கோபமும் அசலானவை


எனக்கு நாவலை மிகவும் பிடித்திருந்தது,


மிக்க அன்புடன்
எஸ்ரா

புதன், ஜூலை 27, 2011

வெட்டுப்புலி' நாவலுக்கு ரங்கம்மாள் விருது



கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய "வெட்டுப்புலி' நாவல் தேர்வாகியுள்ளது.
÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி:
÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய "வெட்டுப்புலி' நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.
÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், இந்த நாவலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
÷தமிழ்மகனின் "வெட்டுப்புலி' நிகழ்கால சரித்திரத்தை பதிவு செய்யும் முறையில் அமைந்த நாவல். சமூக வரலாறை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 1910-2010-க்கு இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளைச் சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது.

புதன், ஜூலை 06, 2011

வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு

காலை(6.7.11)யில் கவிஞர் மனுஷ்யபுத்திரனைச் சந்தித்தேன்.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் எழுதிய வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது என்றார்.

வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் ஒரு ஆண்டுக்குள் ஒரு நூல் இரண்டாம் பதிப்பு வெளியாவது இதுவே முதல்முறை என்றும் சொன்னார்.
ரொம்ப பெருமையாக இருந்தது.
பிளாகில் எழுதிவரும் இளம் எழுத்தாளர்களின் பங்களிப்பே இந்த நூலின் விற்பனைக்குப் பெரும் பங்கு வகித்தது.
யுவகிருஷ்ணா, ஆதிஷ, கிருஷ்ண பிரபு, கேபிள் சங்கர், தனிமையின் இசை அய்யனார், ரோமியோ, சுரேஷ், சிவராமன், கிழக்கு ஆர். முத்துக்குமார், சொல்வனத்தில் எழுதிய க.குணசேகரன், புத்தகம் பேசுது இதழில் எழுதிய ஆய்வு மாணவர் ஐ. சிவகுமார், தமிழ் ஸ்டூடியோ அருண் போன்ற பலர் வெட்டுப்புலி நாவல் குறித்து தங்கள் விமர்சனங்களை, பாராட்டுகளை பகிர்ந்து கொண்டார்கள்

யுகமாயினியில் கவிஞர் மதுமிதா எழுதிய நீண்ட ஆய்வும் வடக்கு வாசலில் பேராசிரியர் எம்.ஏ. சுசீலா ஆய்வும் பெருமை சேர்ப்பவை. புதுச்சேரி பேராசிரியர் ராஜ்ஜா, எழுத்தாளர் பாரதிவசந்தன், நாடகக் கலைஞர் பாரதி மணி, விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் போன்றோரும் நாவலைப் படித்துவிட்டு பாராட்டிப் பெருமைப்படுத்தினர்.
எழுத்தாளர் ஜெயந்தன் நினைவுப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த எழுத்தாளர் பிரபஞ்சனிடம் என் நன்றியைத் தெரிவித்தபோது இத்தனை அரிய நாவலைத் தந்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியது பெருமையிலும் பெருமை.
நாவலை வெளியிட்டுச் சிறப்பித்ததோடு நாவல் எழுதவதற்கு முன் பேசியிருந்தால் இன்னும் நிறைய தகவல்களைச் சொல்லியிருப்பேன் என நெகிழ வைத்த எங்கள் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அண்ணாவின் வாழ்க்கை வரலாறை பென்குவின் பதிப்பகத்துக்காக எழுதிய கண்ணன் என ஊக்கமளித்தவர்களை பட்டியல் இட்டால் பெரிய பெயர் பட்டியலாகிவிடும்.
பாதிநாவல் படித்தேன். அண்ணன் படிப்பதற்காக வாங்கிச் சென்றார்.. முழுதும் படித்துவிட்டு எழுதுகிறேன் என்று சொன்ன எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன், உங்கள் நாவல் பற்றி கேள்விப்பட்டேன்.. விரைவில் படிக்கிறேன் என்று சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தினத்தந்தி, இந்து, தினமணி, தினமலர், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளியான விமர்சனமங்கள் நாவலை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின.
காலச்சுவடு இதழில் கவிஞர் பெருந்தேவி விமர்சனம் எழுத இருக்கிறார்... பெரும்பாலும் அடுத்த இதழில் வெளியாகலாம் என்று சொன்னதற்காக அதன் பொறுப்பாசிரியர் தேவிபாரதிக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், ஜூலை 04, 2011

துமரியா

இந்த வார கல்கி(10.7.11)யில் என் சிறுகதை










இ‌ந்​த‌க் க‌தை எ‌ந்த ஆ‌ண்​டி‌ல் நட‌க்கிற‌து, எந்த நாட்டில் நடக்கிறது எ‌ன்​ப‌து என‌க்கு அ‌த்த‌னை ‌து‌ல்லியம‌ாக‌த் ‌தெரியவி‌ல்‌லை. இ‌ப்போதிரு‌க்கிற அரசிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் பலர் அ‌ப்போது சி‌லையாக‌வோ, பு‌கை‌ப்படமாகவோ ம‌ட்டு‌மே எ‌ஞ்சியிரு‌ந்தன‌ர்.

பாராளும‌ன்ற‌த்தி‌ன் ம‌ாடி அறையி‌ல் ஒரு ‌பொறு‌ப்ப‌ான பதவியி‌ல் இ‌த்த‌னை அவ ந‌ம்பி‌க்கையோடு நி‌ன்று ‌கொண்டிரு‌ப்பத‌ற்கு வரு‌த்தம‌ாக‌த்த‌ான் இரு‌ந்த‌து. அரசிய‌ல் ‌நெரு‌க்கடி. எ‌தை‌க் ‌கே‌ட்ட‌ாலு‌ம் என‌க்கு‌த் ‌தெரிய‌ாது எ‌ன்பதை‌யே பதில‌ாக‌ச் ‌சொல்ல ‌வே‌ண்டிய நி‌ர்ப‌ந்த‌ம். கூ‌ட்டணி‌க் க‌ட்சிகளி‌ன் ‌தொல்‌லை அதிகமாகிவி‌ட்ட‌து. எ‌ல்ல‌ாவ‌ற்று‌க்கு‌ம் பணி‌ந்‌து ‌போக ‌வே‌ண்டிய க‌ட்ட‌ாய‌ம். பிரதம‌ர் த‌ன் தொப்பியை‌க் கழ‌ற்றி ‌வை‌த்துவி‌ட்டு க‌ண்ண‌ாடி வழி‌யே பாராளும‌ன்ற ஜ‌ன்னலு‌க்கு ‌மே‌ல் இரு‌ந்த சூரியத் தடு‌ப்பை‌ப் பார்‌த்த‌ார். அ‌ந்த‌ப் புற‌ாக்க‌ள் இன‌ப் ‌பெரு‌க்க ‌வே‌ட்கையோடு ஒ‌ன்‌றை ‌நோக்கியெ‌ன்று மூ‌ச்‌சை இழு‌த்துவி‌ட்டபடி உ‌க்கு‌ம் ‌கொட்டி‌க் ‌கொண்டிரு‌ந்தன.
அறைக்குள் இருக்கும் குளிரைவிட வெளியே அதிகமாக இருக்கும் என்ற சிந்தனையை ஜன்னலோரத்திலேயே முடித்துவிட்டு இருக்கைக்கு வந்தார்.
குடியாட்சி பெற்று 12- வது பிரதமர் வரை நாடு ஓரளவுக்கு ‌ஸ்திரம‌ாக‌த்த‌ான் இரு‌ந்த‌து. குறிப்பாக 13-வது பிரதமர் எதிர்க் கட்சிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளுக்கும் பணத்தாலேயே பதில் சொன்னார். அது ஒரு விபரீத ருசியை ஏற்படுத்திவிட்டது. எதிர்க்கட்சிகள் தினம் குற்றம் கண்டு பிடித்தனர். அதுவுமின்றி அவர்களுக்கு சிரமம் வைக்காமல் நாட்டில் அத்தனைக் குற்றங்கள் இருந்தன. கமிஷன் வாங்காமல் எந்த ஒப்பந்தத்தையும் போட முடிவதில்லை. எவ்வளவு கமிஷன் வாங்கினாலும் எதிர் கட்சிகளுக்கு அதில் பாதிக்கு மேல் செலவிட வேண்டியிருக்கிறது. கமிஷன் வாங்கவில்லையென்றால் உடனே ஆட்சியைக் கலைத்துவிடுகிறார்கள். சரியானபடி கமிஷன் வாங்காததால்தான் கடந்த முறை ஆட்சியிலிருந்த கட்சி கலைக்கப்பட்டது என்பது கடைகோடி பிரஜைக்கும் தெரியும். இந்த சாதுர்யம்கூட இல்லாத இவனெல்லாம் எதற்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஹேலோகிராமில் கார்ட்டூன் போட்டார்கள்.
அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க வேண்டியிருந்தது. ​ ஆ‌ட்​சி‌க் க‌ôல‌ங்​க​ளி‌ல் பிர​த​ம​ரு‌க்​க‌ôன பிடி​ம‌ô​ன‌மே இ‌ல்​ல‌ô​ம‌ல் ‌பே‌ô‌ய்​வி‌ட்​ட‌து.​ பண‌ம் ‌பேசி​ய‌து.​ ல‌ஞ்​ச​மு‌ம் ஊழ​லு‌ம் ‌பேசி​ய‌து.​ பிர​த​ம‌ர் ‌பேசு​வ​த‌ற்கு ஒ‌ன்​று​ஒன்​று​மில்​லா​மலா​கி​விட்​டது.​
தகா​ரி​லும் புரி​சா​வி​லும் நிலைமை கட்​டுப்​பாட்​டில் இல்லை.​ இன்னமும் அந்தப் பகுதிகளில் கம்யூனிஷ முழக்கங்கள் இருந்தன. மூன்று மணிக்கு ராணுவ அதி​கா​ரி​க​ளு​டன் முக்​கி​ய​மான கூட்​டம்.​ இது​வரை அங்கு மூன்று ரயில்​கள் கொளுத்​தப்​பட்​டு​விட்​டன.​ பாலங்​கள் பல தரை​மட்​ட​மா​கி​விட்​டன.​ ராணு​வத்தைக் கள​மி​றக்​கு​வதைத் தவிர வேறு வழி​யில்லை.​
நட​வ​டிக்கை​கள் எப்​படி அமைய வேண்​டும் என்று திட்ட வரையறை செய்ய வேண்​டி​யி​ருந்​தது.​ இரண்டு முப்​பது ஆகி​விட்​டது.​ உத​வி​யா​ளர் ராணுவ அதி​கா​ரி​கள் வந்து​விட்​டதை​யும் உள்துறை அமைச்​சர் இன்​னும் சில நிமி​டங்​க​ளில் வந்து​வி​டு​வார் என்று கூறி​விட்​டுச் சென்​றார்.​ தன்​னிறை​வைான கிரா​மங்​க​ளின் அவ​சி​யத்​தைப் பற்றிய புத்தகத்தின் பக்​கங்​களை மீண்​டும் படிக்க ஆரம்பித்தார் பிரதமர். நாட்டின் குடியாட்சிக்காகப் பாடுபட்ட மகத்தான தலைவர் எழுதிய நூல் அது. அவருடைய நிறைய கொள்கை​கள் நடை​முறை சாத்​தி​ய​மில்​லா​மல் போய்​விட்​டன.​ மனச் சோர்வான நேரத்தில் அதைப் படிக்கும்போது நகைச்சுவை ஊற்றெடுக்கும்.
உத​வி​யா​ளர் மீண்​டும் வந்​தார்..​ ​
"வந்​தாச்சா?'' பிர​த​ம​ரின் குரலைக்​காட்​டி​லும் சைகை​யால் கேட்​டதை வைத்துத்​தான் உதவியாளர் ஆமோ​தித்​தார்.​​ உள்ளே வரச்​சொல்​லுங்​கள் என்​பதை​யும் மெல்​லிய தலை​ய​சைப்​பில் உணர்த்​தி​விட்டு தொப்பியைத் தலை​யில் பொருத்​திக் கொண்​டார்.​
மொத்​தம் ஆறு​பேர் உள்ளே வந்து பிர​த​ம​ருக்கு வந்​த​னம் சொல்லி,​​ இருக்கையை நோக்கி அவர்​கை​காட்​டி​யதும் அமர்ந்​த​னர்.​ ஒரு துண்டு அமை​திக்​குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் தொண்டையைச் செறு​மி​னார்.​ அறை​யில் இருந்த மீதி அனை​வ​ரும் அவரை நோக்க ஆரம்​பித்​த​னர்.​ அவர் ஆரம்​பிக்​கட்​டும் என்ற வழி​வி​டல் அது.​
"மக்​கள் நிறைய பலி​யாவதைத் தவிர்க்க முடியாது.​ ஆனால் அதைப் பற்றி கவலைப்​ப​டாமல் தீவி​ர​வா​தி​களை ஒடுக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ மூன்று ரயில்​கள் இந்த இரண்டு மாதத்​தில் தட​ய​மில்​லா​மல் எரிந்து போயி​ருக்​கின்​றன.​ அதி​லி​ருந்த மக்​களோடு.​ காவல்​துறை​யி​னர் யாரும் அந்​தப் பிராந்​தி​யத்​தில் இனி இருக்க முடி​யாது.​ உயிர் பிழைத்து இருக்க வேண்​டு​மா​னால் காக்கி அணிந்த தாவ​ரம்​போல இருக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ மக்​க​ளின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​ மருத்து​வம் இல்லை,​​ கல்வி இல்லை,​​ நல்ல குடி​நீர் இல்லை,​​ உணவு இல்லை...​ மக்​கள் செத்துக்கொண்​டி​ருக்​கி​றார்​கள்...​ அல்​லது அலை அலை​யாக பஞ்​சம் பிழைக்க வெளியே தப்​பிச் செல்​கி​றார்​கள்.​ நம்​மு​டைய ஆபரே​ஷ​னில் சிலர் மடிய வேண்​டி​யி​ருப்​பது அவர்​க​ளின் நன்​மைக்​காக....​ அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.​''
பிர​த​மர் உள்​துறை அமைச்​சரை நோக்​கி​னார்.​ "என்ன செய்​ய​லாம்?'
"மக்​க​ளுக்​குப் பாதிப்பு ஏற்​ப​டா​மல் செய்ய முடி​யாதா...​ அதா​வது முடிந்த அள​வுக்கு...​'' அமைச்சரின் தொனி​யில்​ நம்​பிக்கை​யில்லை.​ ஒரு கடமைக்​கா​கத்​தான் கேட்​டார்.​
"முடிந்த அள​வுக்கு என்​பதை நீங்​கள் சொல்ல வேண்​டி​யதே இல்லை.​ தேவை​யில்​லா​மல் ஒரு உயி​ரும் பிரி​யாது.​''
பிர​த​மர் நாட்​டின் நிலையை விளக்க எதி​ரில் இருந்த குறிப்​புக் காகி​தங்​களை கையில் எடுத்து வைத்துக்கொண்டுபேச ஆரம்​பித்​தார்.​ "நாம் செய்து கொண்​டி​ருக்​கும் ஒப்​பந்​தப்​படி ஆண்​டுக்​குக் குறைந்​த​பட்​சம் எட்​டா​யி​ரம் டன் யுரே​னி​யத்தை துமரியாவுக்கு ஏற்​று​மதி செய்ய வேண்​டும்.​ இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன்பு நாம் மகத்​தான சாதனை​யைச் செய்​தோம்.​ ஆஸ்​திரே​லி​யாவே அதிர்ந்து​போ​னது.​ அவர்​க​ளுடைய யுரே​னிய சாம்​ராஜ்​ஜி​யம் பற்றி உங்​க​ளுக்​குத் தெரி​யும்.​ அந்த ஆண்​டில் மட்​டும் பனிரெண்​டா​யி​ரம் டன் அனுப்பி வைத்​தோம்.​ புரட்சியாளர்​கள் தீவி​ரம் அதி​க​மா​ன​தும் கடந்த ஆண்​டில் அது பாதி​யா​கக் குறைந்தது.​இந்த ஆண்டு சுத்​த​மாக வேலையே நடக்​க​வில்லை.​ யுரே​னி​யம் மொத்​த​மும் பிரச்னை​யாளர்​கள் இருக்​கும் அந்த இடத்​தில்​தான் இருக்​கி​றது.​ இனி ஒரு கிராம் யுரே​னி​யத்தை எடுக்க வேண்​டு​மா​னா​லும் எங்​கள் எல்​லோரை​யும் கொன்​று​விட்​டுத்​தான் எடுக்க முடி​யும் என்று சூளு​ரைக்​கி​றார்​கள்.​"
"அவர்கள் நமக்கு எவ்​வ​ளவு காலம் அவ​கா​சம் தரு​வார்​கள்?'' ஜென​ரல் கேட்​டார்.​
"சொல்​லப்போனால் அவர்​கள் கெடு முடிந்து​விட்​டது.​ அவ​கா​சமே கொடுக்​க​வில்லை.​ கொடுக்​க​வும் மாட்​டார்​கள். கேட்​க​வும் முடி​யாது'' அவ​கா​சத்தைப் பற்​றியபேச்​சுக்கே இட​மில்லை என்​பதைத்​தான் பிர​த​மர் அப்​படி உணர்த்து​வ​தற்கு முயற்சி செய்​தார்.​
"ஒப்​பந்​தத்தை முறித்துக்கொள்​வ​தற்கு ஏதா​வது வழி இருக்​கி​றதா?'' ஒப்​பந்த ஷரத்து​கள் பற்றி நன்​றா​கத் தெரிந்த அமைச்சரே இப்​ப​டியொரு கேள்​வியைக்கேட்​பது அனை​வ​ருக்​குமே ஆச்​சர்​ய​மா​கத்​தான் இருந்​தது.​ அமைச்சரே தொடர்ந்​தார்..​ "அணு ஒப்​பந்​தத்தோடு நம்​முடைய இரு​நாட்டு நல்​லு​ற​வும் சம்​பந்​தப்​பட்​டி​ருப்​பது தெரி​யும்.​ இரு​நôட்டு வர்த்​தக உற​வு​கள் பல​வும் பாதிக்​கும்.​ நம் சொந்த மக்​களேயே நாம் பலி​யாக்​கு​வதை​விட அந்த பதிப்பு குறை​வு​தானே?''
"இல்லை மினிஸ்​டர்.​ துமரியாவைப் பற்றி அப்​படி எடை​போ​ட​தீர்​கள்.​ அமெரிக்காவைவிட மோசமானவர்கள். பெட்ரோல் இருந்​தது வரை வளை​குடா நாடு​களுக்கு ராணு​வத்தை அனுப்பி வைக்க ஏதா​வது நொண்டி சாக்​கு​கள் சொன்னார்​கள் நினைவிருக்கிறதா? ஆப்​கா​னிஸ்​தான்,​​ ஈரான்,​​ ஈராக், எகிப்து...​ வரி​சை​யாக எல்லா நாட்​டி​லும் தள​வா​டங்​களைக் கொண்டு போய் நிறுத்​தி​யது போல இங்கும் நடக்கும்.​ அமைதி குலைந்து போய்​விட்ட நாடு​க​ளில் அவர்​கள்​தான் அமைதி ஏற்​ப​டுத்து​வார்​கள். புரிகிறதா? அவர்களின் அகராதியில் இருக்கும் அமைதி. நாடே ரண​க​ள​றி​யா​கும்.​ மறு​படி எழுந்​தி​ருக்க நூறு வரு​ஷம் ஆகும்.​ அல்​லது எழுந்​தி​ருக்​கா​மலே​யே​கூட போக​லாம்.​ சாம் மாமா மூக்கை நுழைக்க கார​ணங்​களே தேவைப்​ப​ட்டதில்லை. துமரியா அவர்களையே மிஞ்சிவிட்டார்கள்.​ அவர்​கள் ஏற்​ப​டுத்​தும் அமை​தியைத்​தான் எதிர்​பார்க்​கி​றீர்​களா?''
பிர​த​மர் கையை உயர்த்தி ஜென​ரலைக் கட்​டுப்​ப​டுத்தி,​​ "அவர்​கள் உள்ளே வந்து அமை​திப்​ப​டுத்து​கிறவரை நாம் சும்மா இருக்​கப் போவ​தில்லை.​ நம்முடைய போர் சாதனை​கள் எல்​லாம் எங்​க​ளுக்கு நினை​வி​ருக்​கின்​றன'' என்​றார்.​
அது​தான் பிர​த​ம​ரின் சாதுர்​யம்.​ ராணு​வத்​தின் பெருமையை ராணு​வத் தள​ப​தி​யி​டமே சொல்​லு​வது அவரை சட்டென கட்​டுப்​ப​டுத்த உத​வி​யது.​ "போர் என்​றால் தயங்​கு​ப​வர்​கள் இல்லை.​ ரிஸர்வ் ட்ரூப்பை​யும்சேர்த்து இரண்டு கோடிக்​கும் அதி​க​மான சிப்​பாய்​கள் எந்த நேர​மும் தயா​ரக இருக்​கி​றார்​கள்.​ ஆனால் அதற்​குத் தேவை​யி​ருக்​கு​மா​னல் அது நாம் இப்​போது திட்​ட​மிட்​டி​ருக்​கும் ஆபரே​ஷனை​விட அதிக பாதிப்​புடை​ய​தா​கத்​தான் இருக்​கும்.​ முதல்​கட்​ட​மாக நாம் தீவிரவாதி​களை சரிக்​கட்​டு​வது உத்​த​மம்'' உப தள​பதி முதல்​முறை​யா​கப் பேசி​னார்.​
"நிலைமை போருக்கு உகந்​த​தாக இல்லை.​ ஏற்கெனவே ஆயுதம் வாங்குவதில் கமிஷன் வாங்கி எதிர் கட்சியாளர்கள் அத்தனைப் பேருக்கும் பலமுறை கொடுத்தாகிவிட்டது. நம்பிக்கை தராத ஆயுதங்கள். நாம் கட்​டுப்படுத்தவேண்​டி​யது உள்​ளூர் பிரச்​னை​யா​ளர்​க​ளைத்​தான்.​ அவர்​க​ளுக்கு ஆரம்​பம் முதலே யுரே​னிய சுரங்​கங்​கள் அமைப்​ப​தில் எதிர்ப்பு இருந்​தது.​ பூமிக்​குள் இருக்​கும் மிகப் பெரிய பொக்​கி​ஷம்.​ நாட்​டின் வளமே அதில்​தான் புதைந்து கிடந்​தது.​ நாடு அதை வெளிக் கொண​ரு​வ​தில் உறு​தி​யாக இருந்​தது.​ மக்​க​ளுக்கு பெரும் வேலை வாய்ப்பை ஏற்​ப​டுத்​திக்கொடுத்தோம்.​ ஒட்​டு​மொத்த மாநி​லத்​தின் வறட்​சியை,​​ வறுமை​யைப் போக்க இரு​ப​தா​யி​ரம் பேருக்கு வேலை கொடுத்து​விட்​டால் மட்​டும் போதாது.​ விரை​விலேயே புதி​தாக வேலை​யில்​லா​த​வர்​கள் உற்​பத்​தி​யா​கி​விட்​டார்​கள்.​ சொற்​பம் பேர் வேலை​தேடி வெளி​மா​நி​லத்துக்​குச் சென்​றார்​கள்.​பெரும்​ப​குதி காட்​டுக்​குள் இருக்​கி​றார்​கள்,​​ ​ தலை​மறைவு பயிற்சி எடுத்துக்கொண்டு.​ நிலைமை கையை மீறிப்போய்​விட்​டது.​ அதன் பிறகு அங்கு வளர்ச்​சித் திட்​டங்​கள் அமைப்​பதும்​கூட இய​லா​த​தா​கி​விட்​டது.​ முக்​கி​ய​மாக "பசுமை தகார் திட்​டம்'.​ அதை அவர்​கள் நம்ப மறுத்து​விட்​டார்​கள்.​''
அவர்​களை நம்​பிக்கை இழக்​கச் செய்​ததுயர் குற்​றம் என்ற சந்தே​கம் பேசிக்கொண்​டி​ருந்த பிர​த​மர் உற்​பட ஏழு​பே​ருக்​கும் ஒரே நேரத்​தில் உதித்​தது.​
"முதல் கட்​ட​மாக ஐம்​பது பட்​டா​லி​யன் கள​மி​றங்கவேண்​டி​யி​ருக்​கும்..​ ஆரம்​பமே அவர்​களை கதி​க​லக்​கச் செய்ய வேண்​டும்.​ மிரட்​டலே போதும் பாதி உயி​ரி​ழப்​பைத் தவிர்க்க செய்​யும்.​ அவர்​கள கட்டை விட்டு வெளியே ஓட ஆரம்​பித்​து​வி​டு​வார்​கள்.​''
மார்​ஷல் தனது போர்​தந்​தி​ரங்​களை விவ​ரிக்க ஆரம்​பித்​தார்.​ ஜன்​ன​லுக்குவெளியே அமை​திக்​கான சின்​ன​மான புறாக்​கள் இரண்டு குதூ​க​ல​மா​கக் கொஞ்​சிக் கொண்​டி​ருப்​பதை​யும் பார்த்​தர்.​ இனிய முரண்​பாட்டை ரசித்​தா​லும் அவ​ருடைய இஸ்​தி​ரி​போட்ட முறுக்​கிய மீசைக்​குக் கீழே புன்​னகை தவ​ழ​வில்லை.​
​விளக்கு வெளிச்​சத்​தில் கூட்​ட​மாக உறங்​கிக் கொண்​டி​ருந்​த​னர்.​பெரிய குடி​லில் தோரா​ய​மாக இரு​பது முதல் நாற்​பது வய​தி​னர்.சிறிய கட்டி​லில் தலை​வர் அமர்ந்​த​படி பேசிக் கொண்​டி​ருந்​தார்.​ அவ​ருக்கு அருகே மூவர் மட்​டும் மரத் துண்​டின் மீது கூர்மை​யான கவ​னத்து​டன் செவி​ம​டுத்துக் கொண்​டி​ருந்​த​னர்.​ நடு​நிசி. வனப்பூச்​சி​க​ளின் ரீங்​கா​ரங்​கள் கேட்​டுக் கொண்​டி​ருந்​தன.
"நம்மை ஒடுக்க ராணு​வம் வரப்​போ​வ​தாக தகவல் வந்​தி​ருக்​கி​றது​.
பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடிதான் காரணம். அரசு எந்திரத்தின் மக்கள் விரோதபோக்குக்கு இன்னுமொரு அடையாளம்'' என்றார் தலைவர்.
"நாம் இங்கிருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர வேண்டியிருக்குமா?'' ~ஒருதோழர் கேட்டார்.
"விலைமதிப்பில்லா தியாகத்துக்குத் தயாராகவேண்டிய கட்டாயம். போராட வேண்டிய களத்தில்தான் நிற்கப் போகிறோம். ஆனால் காட்டுக்குள் இருக்க வேண்டியதில்லை. நாட்டுக்குள் இருப்போம். மக்களோடு மக்களாக. அதிகபட்சம் மூன்று பேருக்கு மேல் ஓர் இடத்தில் யாரும் இருக்கக் கூடாது. காட்டுக்குள் நம்மைத் தேடிவரும் ராணுவத்துக்கு ஒரு தடயமும் கிடைக்கக் கூடாது. பிரிந்து இருப்போம். உணர்வுகள் இணைத்துவைத்திருக்கும். ஆயுதங்களைப் பதுக்கி வைக்க இடம் தேர்வு செய்தாகிவிட்டது.''
மொத்தம் 40 குழுக்களாக தகாரின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களுக்கும் தகவல்கள் அனுப்ப வேண்டும். பல இடங்களில் குழந்தைகளும் சிறுவர்களும் இருந்தனர். பெண்கள் பெரும் அவதியிலும் உடல் பிணியிலும் குழந்தை பராமரிப்பையும் ஆயுதப் பயிற்சியையும் மேற் கொள்ள வேண்டியிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போதிய மருத்துவ வசதியும் போஷாக்கும் இல்லாமல் பதினாறு குழந்தைகள் இறந்துபோய்விட்டன. நகருக்குள் சென்று வருவது ஒவ்வொரு முறையும் சில உயிரிழப்புகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
மூவரில் தலைவருக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தவன் புரட்சிக் கூட்டத்தின் முக்கிய போராளி. கடந்த சில தினங்களாக அவனுக்குத் தொடர்ச்சியான இருமல். சளியோடு ரத்தமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
"நாம் நம் கோஷத்தைச் சற்று தளர்த்திக் கொண்டால் ராணுவ முற்றுகையை அவர்கள் ஒத்தி வைப்பார்ர்கள் அல்லவா?''​ இருமலின் ஊடே அவன் சொன்னான்.
"நம் அச்சம் அவர்களை மேலும் ஆவேசமாக ஒடுக்குவதற்குத்தான் உதவும். இது நாம் உறுதியாக நம் நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டிய நேரம். செர்னோபிள், ஃபுகுஷிமா என்று எத்தனை ஆபத்துகள் வந்தாலும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனைப் பற்றி ஒருபோதும் அக்கறை இருப்பதில்லை. லாபத்தை மட்டும் குறிவைக்கும் கேவலமான தரகர்களுக்கு நிகராக மாறிவிட்டார்கள். தமிழ்நாடு என்ற பிராந்தியத்தில் இரண்டாவது முறையாக சுனாமி வந்தபோது என்ன பயங்கரம்? அந்த மாநிலத்தின் இரண்டு பக்கமும் அணுக்கரு உலை. இரண்டும் அந்த நேரத்தில் நொறுங்கிவிடப் போகிறது உலகமே பதறியது... அப்படியாகியிருந்தால் அங்கு யாராவது மிஞ்சியிருப்பார்களா? அதன் பிறகும் புத்தி வரவில்லை... அந்த மாநிலத்திலேயே மூன்றாவது அணுக்கரு உலை துவங்கப் போகிறார்களாம். லாபம், அதைக் கொண்டு மேலும் லாபம்.. மனிதர்கள் அத்தனை பேரையும் கொன்று முடித்தப் பின்னும் அந்த வெறி அடங்காது. லாபம் முக்கியமா மனிதர்கள் நலன் முக்கியமா என்பதை தீர்மானிப்பதில் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் தடுமாற்றம் இருக்கிறது. அவர்கள் செய்கிற முட்டாள்தனத்தால் சாவதைவிட நாமே தேர்ந்தெடுக்கும் இந்த மரணம் மகிழ்ச்சியானது?''
விளக்கம் கேட்டவன் அமைதியாக இருந்தான்.
"நாம் எந்த ரயிலையும் எரிக்கவில்லை. பழியை நம்மீது போட்டு போராளிகளைத் தீர்த்துக் கட்டும் பணியை முடுக்கிவிடுவதற்காகத்தான்... மக்களிடம் நமக்கான விரோதத்தை வளர்ப்பதற்கு. பத்திரிகைகளும் அதை பூதாகரமாக்குகின்றன. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அனுபவப் பாடங்கள் ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். இன்று நம் ராணுவம்.. ஆட்சிகள் மாறும், காட்சிகளும் மாறும். மக்கள் நலன்தான் முக்கியம். நாளை ஐ.நா. ராணுவம் வரும்... அப்போது நம்நாடும் சேர்ந்து புழுங்க வேண்டியதுதான்.. ஸ்திரத் தன்மையில்லாத நாடு. உலக அமைதிக்கே பங்கமாக இருக்கிறது என்பார்கள்... மக்களுக்கான உண்மையான ஊழியர்களாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உயிரிழப்பைக் குறைத்துக் கொள்ளத்தான் நாம் பிரிகிறோம்... உரிமைகளைக் குறைத்துக் கொள்வதற்காக அல்ல. உலக நாடுகளையெல்லாம் தம் காலடியில் போட்டுக் கொள்ள நினைப்பவர்களுக்கு அப்போது ஆளுவதற்கு மண் இருக்கும். மனிதர்கள் இருக்க மாட்டார்கள்'' தலைவரின் பேச்சு கிரீச் கிரீச் என்ற சுவர் கோழியின் சப்தத்துக்கு இடையே கேட்டுக் கொண்டே இருந்தது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன.


ஃபீல்ட் மார்ஷல் உறுதியாக இருந்தார். மலை முகட்டில் இருந்தது அந்த ராணுவ தலைமையகம். பெரிய சுருட்டை வாயில் வைத்திருந்தார். ஜன்னல் கண்ணாடியை இறக்கி சாம்பலைத் தட்டும்போது பரவசமாகப் பார்த்தார் மார்ஷல் . மக்காக் குரங்கு ஒன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தபோது பதிலுக்குச் சிரிப்பது போல இருந்தது. மிக அழகான குரங்கு. இத்தனை நாள் இந்தப் பிராந்தியத்தில் மக்காக் எதையும் பார்த்ததில்லை. மிக தூரத்தில் நுரையால் செய் மாலை போல அருவி தெரிந்தது. காட்டுத் தீ பூக்கள் கிழக்குப் பள்ளத்தாக்கு முழுதையும் செக்கச் சிவப்பாக்கியிருந்தன. இன்னும் இரண்டு மாதங்கள் சிவப்பாக இருக்கும் அந்தப் பகுதி, பின் பச்சைப் பசேலென மாறிவிடும். ஆண்டுக்கு ஒரு புத்தாடை.
ஜன்னலருகே இன்னஉம் ஐந்து நிமிடம் நின்றால் கவிஞனாகிவிடுவோமோ என்று அவருக்கு பயமாக இருந்தது.மீண்டும் அறைக்குள் நடந்து மறு எல்லைக்கு வந்தார்.
உள்ளூர் கலவரத்தை அடக்க உலக தாதா வந்துவிடாமல் அமர்க்களம் இல்லாமல் காரியமாற்ற வேண்டும். பிரச்னை கை மீறிப் போனால், போக வேண்டியதே இல்லை} அப்படிச் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் தந்தாலே போதும் உள்ளே நுழைந்துவிடுவார்கள். ஆற்றல் உற்பத்திக்கான ஒரே சாதனம் அணுக்கரு உலை என்று ஏற்றுக் கொண்டாகிவிட்டது. புரட்சியாளர்கள் இல்லை என்கிறார்கள். உலகில் பல நாடுகள் அணுக்கரு உலையை மூடிவிட்டன. துமரியாவிடம் குடுமியைக் கொடுத்தாகிவிட்டது. அப்படித்தான் ஆட்டுவான்.
பொறுப்பாக சமாளிக்க வேண்டியிருந்தது. முதல் கட்டமாக காட்டுக்குள்தான் வேட்டையை ஆரம்பிக்க வேண்டும்.
"பிரதமர் லைனில் இருக்கிறார்''
டெல் திரையில் செயற்கை குரல் அறிவிப்புடன் பிரதமர் அலுவலக எண் ஒளிர்ந்தது.
"சொல்லுங்கள் திரு. பிரதமர் ..''
"அங்கிருந்து கேட்கிறார்கள். ராணுவ உதவி வேண்டுமா என்று..''
"நாம் நடவடிக்கை எடுக்கப் போவது அவர்களுக்கு எப்படித் தெரியும்?''
"நம்முடைய நடவடிக்கை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.. யுரேனியம் கிடைப்பது தாமதமாவதால் உதவி வேண்டுமா என்கிறார்கள். ஆனால் உளவுத்துறையில் சில சந்தேகங்கள் தெரிவித்தார்கள். நாம் பேசும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகிறதாம். ''
"எதை வைத்துச் சொல்கிறார்கள்?''
"நாம் அன்று பேசியது ஒரு அட்சரம் பாக்கியில்லாமல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது''
"நம் ஆறு பேரில் ஒன்று கருப்பாடு?''
"எனக்கு யார் மீதும் சந்தேகமில்லை. யாரை நம்புவதென்றும் தெரியவில்லை... இந்த மாதிரி நேரத்தில் பிரதமராக இருப்பது தண்டனை போலத்தான்.. அடுத்த முறையாவது எதிர்கட்சி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை'' பிரதமரின் பேச்சில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.
மீண்டும் சாம்பலைத் தட்ட ஜன்னலுக்கு வந்த போது மக்காக் மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. மரக்கிளை ஒன்று முதுகில் கிழித்திருக்க வேண்டும். காயம் இரண்டு அங்குலத்துக்குக் கிழிந்து... பக்கு கட்டிப் போய் இருந்தது. இதுவரை ஒருமுறையும் அது சொறிந்து கொள்ளவில்... சட்டென்று தன் மேல் பாக்கெட்டில் இருந்த "பென்மென்' ரிவால்வரை எடுத்து குரங்கை நோக்கிச் சுட்டார். குரங்கின் மேல்பாகம் பஞ்சுபோல பறக்க, சொத்தொன்று ஓர் எலக்ட்ரானிக் டிவைஸ் கீழே விழுந்தது.
துமரியாவுக்கு அடுத்த நாட்டை நோட்டம் பார்ப்பதில் அத்தனை ஆர்வம்... பிரதமருக்குப் போன் செய்து அந்த ஜன்னல் புறாக்களைச் சுட்டுவிடும்படி சொன்னார் மார்ஷல்.


செவ்வாய், மே 31, 2011

அறிவியல் அறிவோம்

அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய இணைய தளம். அறிவியல் செய்திகளை அத்தனை எளிமையாக தருகிறார். அறிவியல் அறிவோம்.

ஞாயிறு, மே 29, 2011

என் விகடன் என் பேட்டி


கடந்த வார என் விகடனில் என் பேட்டி வெளியானது. என்னுடைய ஊரைப் பற்றிய சுருக்கமான நினைவுத் தொகுப்பு. என்னுடை எல்லா கதைகளுக்கும் ஏதோ கதாபாத்திரத்தையாவது இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கும் கிராமம் அது. சுருக்கமாக சொல்லியிருப்பினும் அதற்கு விகடன் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சி பிரமிப்பானது. என்னுடைய ஊருக்கு நிருபரும் போட்டோ கிராபரும் வந்திருந்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததையும் ஊரைப்பற்றி அக்கறையோடு விசாரித்தையும் பத்திரிகையாளனாக இருந்தும்கூட வியப்பாக எதிர் கொண்டேன்.

நடிகை ரேவதி முதன் முதலாக தன்னை திரையில் பார்த்தபோது அத்தனை பெரிய சைஸிஸ் தன்னைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டதாக அவர் ஆரம்பத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.
லே அவுட்டில் காட்டியிருக்கும் கவனத்தைப் பார்க்கும்போது அதற்கு சற்றே குறைவான ஓர் அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.






25.5.11 vikatan

வெள்ளி, மே 27, 2011

முகவரி மாறிவிட்டது

அ.முத்துலிங்கம் அவர்களின் வலைதள முகவரி மாறிவிட்டது. கீழ்கண்ட முகவரியை சொடுக்கவும்.

அ.முத்துலிங்கம்

ஞாயிறு, மே 01, 2011

கவர்னர் மாளிகையில் ஜெயந்தன் விருது!



எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செயல்படும் செந்தமிழ் அறக்கட்டளையின் முதலாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஜெயந்தனின் அனைத்து கதைகளையும் தொகுத்து வெளியிடும் நிகழ்ச்சியும் சென்னை ராஜ்பவனில் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது.
பாதுகாப்பு கருதி நிறைய கட்டுப்பாடுகள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அசைந்தாலும் ஆபத்துபோல அமர்ந்திருந்தனர் பலரும். செல் போனை ஆப் செய்துவிடுங்கள், கையில் டிஜிடல் கேமிரா வைத்திருந்தால் அதை பாட்டரியை கழற்றிவிட்டு பைக்குள் வைத்துவிடுங்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். தடவிப் பார்க்கும்போது என் பாக்கெட்டில் இருந்த ஹோமியோபதி மாத்திரை குப்பிகளைப் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசித்தார்கள். நான் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.
பொதுவாக இலக்கிய நிகழ்ச்சி என்றால் விழா தொடங்கிய அடுத்த வினாடி முதல் எல்லோரும் வெளியே செல்லத் தொடங்கி, உள்ளே அரங்கத்துக்குள் இருப்பவரைக் காட்டிலும் அதிக அளவில் மக்கள் வெளியே புகைப் போக்கியபடி பேசிக் கொண்டிருப்பார்கள். இங்கே கவர்னர் எழுந்து போகும் வரை யாரும் எழுந்திருக்கவில்லை.
விழாவில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரது பேச்சுகள் சமூகமும் இலக்கியமும் என்பதைத் தொட்டுப் பார்த்துத் திரும்பின. தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ம.ராசேந்திரன் ஜெயந்தனின் சிறுகதைகளையும் கவிதைகளையும் குறிப்பி்ட்டுப் பேசினார். இளம்பிறை தாம் தேர்வு செய்த கவிதைத் தொகுப்புகளை
உதயசந்திரன் தமிழர்கள் நிலைமை பற்றி குறிப்பிட்டார். நறுக்கென்று சுடுவதுபோன்ற பேச்சு அது. வெட்டுப்புலி நாவலை கடந்த ஆண்டே படித்ததாகக் குறிப்பிட்டு நாவலில் வரும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மக்களுக்கு நன்மை விளைவித்ததா, சீர்குலைத்ததா என்ற அடிப்படையான கேள்வி இருப்பதாகச் சொன்னார். 380 பக்க நாவலை ஒருவரியில் சொல்லச் சொன்னால் இதைச் சொல்லிவிடலாம். அவருடைய வாசிப்பு பிரமிக்க வைத்தது.
வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்கள். தோல்வியடைந்தவர்களின் வரலாற்றை இலக்கிய வாதிகள் எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னதுகூட என் நாவலுக்கு நெருக்கமாக இருந்தது.

பிரபஞ்சன்.. நாலரை நிமிடம்தான் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் நாவலைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். காலையில் கூட மீண்டும் ஒரு தரம் படித்துக் கொண்டிருந்தேன் என்றார்.
நாலரை நிமிட உரையில் என் நாவலைப் பற்றி மூன்றரை நிமிடம் பேசினார். நாவலில் வரும் பல பத்திகளை அப்படியே சொல்லிக் கொண்டு போனது ஆச்சர்யமாக இருந்தது.
கவர்னர் பர்னாலா தமிழின் தொன்மையை பல மொழிகளில் தமிழின் ஆதிக்கத்தைப் பற்றி கூறினார்.
நாடகத்துக்கு வேலு சரவணனும் மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் முனுசாமியும் கவிதைக்கு கடற்கரய், அ.வெண்ணிலா, பொன். இளவேனில், பா.சத்தியமோகன் ஆகியோரும் சிறுகதைக்கு விஜயமகேந்திரன், ஜனநேசன் உயிர்வேலி ஆலா ஆகியோரும் விருது பெற்றனர்.
வரவேற்புரையை கவிஞர் தமிழ்மணவாளனும் நன்றியுரையை ஜெயந்தன் சீராளனும் நிகழ்த்தினர்.
சிறுகதை விருதுகளைத் தேர்வு செய்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசன் விழாவுக்கு வரவில்லை.

வியாழன், ஏப்ரல் 28, 2011

எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது




தகுதியான எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்திருப்பதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

விருதுகுறித்த விவரம்:

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் எஸ். ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.



விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

•••

திங்கள், ஏப்ரல் 11, 2011

காதுகள் : காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.





எம்.வி. வெங்கட்ராம்



"என்ன வேலை செய்கிறீர்கள்?"

"எழுத்தாளரா இருக்கேன்.''

"அதுசரி சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?''

ராஜாஜி ஒரு எழுத்தாளரிடம் நடத்திய உரையாடலின் ஒரு பகுதியாக இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எழுத்தாளராக இருப்பது ஒரு வேலையல்ல. சொல்லப்போனால் எழுத்து எழுதுபவனைக் காப்பதைவிட அவனுடைய உயிரை வதைப்பதாகத்தான் இருக்கிறது. ஜெயகாந்தன் போன்ற வெகுசிலரே எழுத்தின் மூலமே போராடி வாழ்ந்து காட்டியவர்கள். எழுத்தாளனாக வாழலாம் என்று நினைத்த பலர் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களால் புறக்கணிக்கப்பட்டு மனத்தாக்குதலுக்கு ஆளானவர்கள்தான். குறிப்பாக தமிழில் இதற்கு தடுக்கி விழுந்தால் உதாரணங்கள் உண்டு.

புதுமைப்பித்தன் தொடங்கி ஜி.நாகராஜன், பிரமிள், நாரண. துரைக்கண்ணன், கோபி கிருஷ்ணன் என்று நிறையபேரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தை நம்பியே ஜீவிதம் நடத்தியவர்களில் மிக முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். எழுத்து ஒரு மனிதனை எப்படி விழுங்கும் என்பதற்கு ஒரு சாதனை உதாரணம் அவர்.

படைப்பிலக்கியத்தின் மூலம் வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் அறிஞர்களின் வாழ்க்கைக் கதை, சுயமுன்னேற்ற நூல்கள் என எழுதி வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. (இதை சமீபத்தில் அறம் என்ற சிறுகதையாகப் படைத்திருந்தார் ஜெயமோகன்.)

ஓயாத மன உளைச்சல். அவருக்குள்ளேயே வேறு குரல்கள் கேட்க ஆரம்பித்தன. காதுக்குள் எந்நேரமும் யார் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். உறங்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. எதிலும் கவனம் கொடுக்க முடியவில்லை. குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. எதையுமே கவனிக்க முடியவில்லை என்பதுதான் சரி.

இந்த அனுவபத்தை அவர் காதுகள் என்ற நாவலாக்கினார். எழுத்தாளன் தன்னை வருத்தி அந்த அனுவபத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகச் செய்யும் மாபெரும் தியாகம் அது. உன்னை யார் கேட்டார்கள் என்று வெளியிலிருந்து ஒரு நபர் சுலபமாகக் கேட்டுவிட முடியும். ஆனால் எழுத்தாளன் அப்படியொரு அனுபவத்தைத் தருவதற்காகத்தான் தவமிருக்கிறான். யாருடைய எதிர்பார்ப்பையும் பலனாக எதிர்பார்க்காமல் அதைச் செய்கிறான். அவனுக்காக எங்கோ, எப்போதோ கிடைக்கப் போகிற வாசகனுக்காக அதைச் செய்கிறான். இந்த தியாகத்துக்கு எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகாதமி கிடைத்தது.

காதுக்குள் எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் சப்தம் தரும் ஹிம்சையை வாசகனுக்கு இறக்கி வைப்பதில்தான் வெங்கட்ராமின் முழு ஆளுமையும் வெளிப்பட்டிருக்கிறது. நாவலில் பார்வதியும் பரமசிவனும் சண்டை போட்டுக் கொள்ளுவார்கள். பச்சை பச்சையான வார்த்தைகள்.. கெட்ட வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சரமாறித் திட்டிக் கொள்வார்கள். பராசக்தி அந்த நாவலின் கதாநாயகன் மீது காம இச்சை கொண்டு புலம்புவாள். தன் காமத்துக்கு இணங்கும்படி ஏங்குவாள், மிரட்டுவாள், அழுவாள்...

திடீரென்று வேறுசில நபர்களும் குறுக்கிட்டுக் கத்துவார்கள். நாயகனால் சாப்பிட முடியாது, தூங்க முடியாது. சொந்தமாகத் தொழில் செய்ய பணம் ஈட்ட கிளம்புவான் வழியிலேயே காதுக்குள் இருக்கும் நபர்கள் விவகாரம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

நாயகனுக்கு நிறைய குழந்தைகள். மனைவி கர்ப்பமாக இருப்பாள். அவளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க முடியாது. குழந்தைகள் பசியிலும் பட்டினியிலும் துவளும். குடும்பத்தைக் காக்க வேண்டிய நாயகனுக்கு இப்படியொரு பிரச்சினை. குழந்தைகள், மனைவியின் நிலைமை புரியும். ஆனால் அதை மாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாது.

மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள். மனைவி பலவீனமாக இருப்பாள். குழந்தையோ மனைவியோ இறந்து போய்விடுகிற நிலை. சைக்கிள் எடுத்துக் கொண்டு போவார். குழந்தை இறந்துபோய்விடும். அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய மருத்துவமனையில் காசு கேட்பார்கள். காசு இருக்காது. நாவலின் பரிதாபத்தின் உச்சம் இது.

குழந்தையைத்தானே அடக்கம் செய்து கொள்வதாக வாங்கி வருவார். சைக்கிளில் கேரியரில் குழந்தையை வைக்க முடியாது. முன் பக்க ஹாண்டில் பாரில் ஒரு பையில் போட்டு மாட்டிக் கொண்டு வீடு வந்து சேருவார். சைக்கிள் ஹாண்டில் பாரில் காய் காறி வாங்கிவருவதுபோல இறந்து போன தன் குழந்தையைத் தூக்கி வரும் அந்தக் காட்சி அதிர்ச்சியானது.

வறுமையின் கையாலாகத்தனத்தின் வறட்சியான சித்திரம். அங்கே குழந்தை, பாசம், நாகரிகம், பழக்க வழக்கம், மரபு, சடங்கு போன்ற அத்தனைச் சொற்களும் பொருளிழந்து தொங்கும்.

வீட்டுக்கு வந்து சேருவார். வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைப்பார். அப்போது பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு பெண் அதைப் பார்த்துவிடுவாள். எங்கள் வீட்டின் பக்கம் ஏன் புதைக்கிறாய் என்று கூப்பாடு போடுவாள். அவர் பால்மாறாமல் மீண்டும் தோண்டி எடுத்து தன் வீட்டுக்கு நெருக்கமாக இன்னொரு குழியைத் தோண்டி குழந்தையை மீண்டும் புதைப்பர். இந்தக் காட்சிகளின் போது நாம் பேசி வருகிற சமூக கோட்பாடுகள் அத்தனையும் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி எதிரில் வந்து நிற்கும்.

இறுதியில் அவர் காதுகளின் குரலில் இருந்து விடுபட்டு மீள்வதோடு கதை முடியும்.

இந்த நாவல் இப்போது என்னிடம் இல்லை. படித்த ஞாபகத்தில் இருந்துதான் எழுதியிருக்கிறேன். நாவலை மறுபடி புரட்டிப் பார்த்துவிட்டு எழுதுவதைவிட மனதில் வடுவாக பதிந்திருக்கும் காட்சியை எழுதுவது மேலும் உண்மையாக இருக்கும் என்றே நினைத்து இதை எழுதியிருக்கிறேன்.

பியூட்டிபுல் மைண்ட் என்றொரு உண்மைக் கதை நூல். ஒரு எகனாமிஸ்ட்டின் உண்மைக் கதை அது. அவருக்கும் காதுக்குள் குரல்கள் கேட்கும். பொருளாதார பெரிய மேதையான அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டு வருவதுதான் கதை. அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. எம்.வி.வெங்கட்ராமின் வாழ்க்கையேப் போலவே மிக லேசான ஒற்றுமை அந்த உண்மை மனிதனின் கதையிலும் காணக்கிடைத்தது. பியூட்டிபுல் மைண்ட் சினிமாவாகவும் வந்து ஏராளமான ஆஸ்கர் பரிசுகளையும் வென்றது.

உலுக்கி எடுக்கும் உண்மைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இது.

காதுகள்
எம்.வி. வெங்கட்ராம்
அன்னம் அகரம் பதிப்பகம்
பிளாட் 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007.
தொ.பே.: 04362-279288


ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

இடம் மாறியது (2011-04-01)

பிரபஞ்சன் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவருடைய கனடா பயணம் பற்றி எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதியுள்ள அனுபவ குறிப்பு இது. படித்த போது இருவருமே என்னை நெகிழசெய்துவிட்டனர். அ.முத்துலிங்கத்துக்கு நன்றி.



பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை வர்களிடம் செல்கிறார். பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். தான் வரும் வழியில் கவனம் செய்த பாடல் ஒன்றை பிள்ளையின் முன் பாடி அதற்கு பொருளையும் சொல்கிறார். கவிராயருக்கு யாசகம் கேட்டு பழக்கமில்லை. கூச்சத்துடன் நிலத்தை பார்த்தபடி நிற்கிறார்.
பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். கவிராயர் முகம் பரவசமடைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவரை பரிசுகளுடன் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கிறபோது பிள்ளை சொல்வார் ‘இப்போதைக்கு ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது. கவலைப்படாதீரும்.’
பிரபஞ்சன் படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவலைத்தான். அது படித்து இன்றைக்கு 15 வருடம் ஆகியிருக்கும். அந்த நாவலில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான். இன்றுவரை ஞாபகத்தில் நிற்கிறது. ‘ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது.’ உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஓர் இடத்தில் ஒழித்தால் இன்னொரு இடத்தில் முளைத்துவிடும். இடம் மாற்றத்தான் முடியும். John Steinbeck என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Grapes of Wrath நாவலிலும் இப்படி ஓர் இடம் வரும். இந்த உலகில் செல்வந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் நிரந்தரமானவர்கள். அவர்களை ஒழிக்க முடியாது. இந்த இரண்டு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமை என்னை வியப்படைய வைத்தது.
பிரபஞ்சனைப் பற்றி அந்தக்காலம் தொட்டு எனக்குள் பெரிய மதிப்பிருந்தது. ஆனால் புத்தக அட்டையில் காணப்படும் அவருடைய சதுரக் கண்ணாடி படத்தை பார்க்கும்போது ஓர் அச்சம். கடுமையானவராக இருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைச் சந்தித்தது கிடையாது. சமீபத்தில் உதயன் விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்க முடிந்தது. ஸ்டைலாக தொப்பி அணிந்து, கறுப்புத்தோல் அங்கி மாட்டி வந்த அவர் அப்படியே என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். இருபது வருடமாக பிரிந்திருந்த நண்பர்கள் சந்தித்ததுபோல அது இருந்தது. இரண்டு நிமிட நேரத்துக்கு பிறகு அவர் பேசப் பேச நானும் நண்பர்களும் நிறுத்தாமல் சிரித்தபடியே இருந்தோம். அவர் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வெளியேபோய் சிகரெட் பிடித்துவிட்டு வருவார். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுப்போம். மறுபடியும் உள்ளே வந்து அவர் பேசத் தொடங்கியதும் சிரிக்கத் தொடங்குவோம்.
பேச்சு ’வானம் வசப்படும்’ நாவலைப்பற்றி திரும்பியது. அது சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சரித்திர நாவல். அதை எழுதுவதற்கு எப்படி தூண்டுதல் கிடைத்தது. சரித்திர நாவல் என்றால் வரலாறு படிப்பதில் நிறைய நேரம் போய்விடும். ஆராய்ச்சிக்குறிப்புகள் எழுதி வைக்கவேண்டும். எப்படி அந்த நாவலை எழுதி முடித்தார் எனக் கேட்டோம். அவர் ஆனந்தரங்கம்பிள்ளை நாட் குறிப்பை படித்திருக்கிறார். அப்போதே விதை விழுந்துவிட்டது. அந்த நாட்குறிப்பு வித்தியாசமானதாக இருக்கும். 18ம் நூற்றாண்டு பேச்சுத் தமிழுக்கு ஒரே உதாரணம் அந்த டைரிதான். பல இடங்களில் தமிழா அல்லது வேறு மொழியா என ஐயம் தோன்றிவிடும். அந்த டைரியை முழுக்கப் படித்து, புரிந்து அது சம்பந்தமான வரலாற்று நூல்களையும் ஆராய்ந்து முடித்த பின்னரே நாவல் சாத்தியமானது. பத்து வருடத்து உழைப்பு என்று கூறினார்.
அந்த நாவலில் பானு என்றொரு தாசி வருவாள். விருந்து ஒன்றில் அலாரிப்பு ஆடிய பின்னர் பதம் ஆடுவாள். ‘ஆறுதலாரடி? அந்த மாதொருபாகனைத் தவிர’ என்று தொடங்கும் அருமையான பாடல். இதை யார் எழுதினார்கள் என்று கேட்டதற்கு அவர் தானே அதை எழுதியதாகக் கூறினார். பல வருடங்களாக என் மனதில் கிடந்த சந்தேகத்தை அன்றுதான் என்னால் போக்க முடிந்தது.
பிரபஞ்சனிடம் எழுத்து துறைக்கு எப்படி வந்தீர்கள்? எந்த வயதில் எழுதத் தொடங்கினீர்கள்? என்று கேட்டேன். நண்பர் ஜேசுதாசன் வீட்டு இரவு விருந்துக்கு அவர் வந்திருந்தார். அதே விருந்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். பிரபஞ்சன் வெளியே சென்று சிகரெட் பிடித்துவிட்டு திரும்பினார். பெரிய கதை பிறக்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது. விருந்துக்கு வந்திருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.
பிரபஞ்சனிடம் காணப்பட்ட முக்கியமான வித்தியாசம் அதுதான். அவர் ஓர் எழுத்தாளரைப் போலவே இல்லை. அந்த வீட்டு செல்ல நாய்களுடன் விளையாடினார். குழந்தைகளை இழுத்து வைத்து பேசினார். பெண்களுடன் சினிமா பற்றியும், புதுமுக நடிகைகள் பற்றியும் தொலைக்காட்சி தொடர்கள் பற்றியும் பேசினார். அவர்கள் எல்லோரும் ஒருவர் தவறாமல் அவர் பேச்சில் மயங்கியிருந்தது தெரிந்தது. என்னுடைய மனைவி அடுத்தநாள் காலை சொன்னார். ‘பிரபஞ்சன் பெரிய எழுத்தாளர். ஆனால் என்ன நல்ல மனுசன். அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சுவாரஸ்யமாக வேறு பேசுகிறார். பெரிய அறிவு ஜீவிபோல முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பயமுறுத்தவில்லை. எல்லோரையும் சக மனுசராகப் பார்க்கிறார்.’ என் மனைவி தன் மனதில் தொகுத்து வைத்திருந்த எழுத்தாளர் பிம்பத்தை பிரபஞ்சன் போட்டு உடைத்துவிட்டார். என் மனைவியிடமிருந்து ஒரு நற்சான்றிதழ் லேசாகப் பெறக்கூடியது அல்ல. நாற்பது வருட காலமாக நான் அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்டை முடித்துவிட்டு பிரபஞ்சன் உள்ளே நுழைந்தார். அவருடைய மதுக் கோப்பையை யாரோ நிறைத்திருந்தார்கள். ‘எனக்கு பதினாறு வயதானபோது அப்பா ஒரு நல்ல நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதன் பளபளப்பான ஒற்றைகளைக் கிழித்து காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். அப்படி காதல் கடிதங்கள் எழுதியே அரைவாசி நோட்டுப் புத்தகம் முடிந்து போனது. காரணம் நான் அப்பொழுதெல்லாம் ஒரு கொள்கை வைத்திருந்தேன். எந்தப் பெண்ணை பார்த்தாலும் ஒரு காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று. ஒரு பெண் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கோயிலை ஒருதரம் சுற்றிவிட்டு வீட்டுக்கு போவாள். இவளை எப்படியோ தவறவிட்டு விட்டேன். இவளிடம் கடிதம் கொடுப்பதற்கு சரியான இடம் கோயில்தான் என்று தீர்மானித்தேன். நோட்டுப் புத்தகத்தில் பக்கங்களை கிழித்து ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஐந்தே முக்கால் பக்கம் அவளை வர்ணித்தது. மீதியில் என் காதலைச் சொல்லியிருந்தேன்.
கோயிலில் அவள் சுற்றியபோது நானும் சுற்றினேன். முதல்நாள் கடிதம் கொடுப்பதற்கு போதிய தைரியம் வரவில்லை. இரண்டாவது நாள் அவள் பின்னாலேயே போய் பின்னுக்கு நின்றபடி கடிதத்தை நீட்டினேன். அவள் பெற்றுக்கொண்டாள். அதுவே பெரிய வெற்றி. வழக்கம்போல என்னுடைய முகத்தில் எறியவில்லை. துணிச்சலாக கடிதத்தை பெற்றுக் கொண்டவளுக்கு அதை ஒளித்து வைக்கும் சாமர்த்தியம் இல்லை. பிடிபட்டுப் போனாள். கடிதத்தை தூக்கிக்கொண்டு அவளுடைய அப்பா என் வீட்டுக்கு வேகமாக வந்ததை நான் பார்த்துவிட்டேன். நான் அதே வேகத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி முதல் வந்த பஸ்ஸை பிடித்து காசு தீருமட்டும் பயணம் செய்து கடைசி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நின்றேன். இருட்டிக்கொண்டு வந்தது, போக இடமில்லை. எப்படியோ சித்தப்பா தேடி அங்கே வந்து என்னை பிடித்து திரும்ப வீட்டுக்கு அழைத்துப் போனார்.
என்னை நிற்கவைத்து ஆறுபக்க கடிதத்தையும் அப்பா வாசித்து முடித்தார். இந்த பூலோகத்தில் நான் அனுபவித்த அவமானத்தில் அதனிலும் கீழான ஒன்று என் வாழ்கையில் பின்னர் நடக்கவில்லை. கடிதத்தை வாசித்து முடித்த பிறகு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அவர் சொன்னார், ‘இவ்வளவு நல்லாய் எழுதுறாயே. இதுவெல்லாம் உனக்கு தேவையா?’ அவ்வளவுதான். என்னை தண்டிக்கவில்லை, என் எழுத்து திறமையை பாராட்டினார். எனக்குள் ஏதோ படைப்பாற்றல் இருக்கிறது என்று என்னை உணரவைத்த தருணம் அதுதான்.
’உங்களுடையது காதல் திருமணம்தானா?’ இது அடுத்த கேள்வி. ‘எனக்கு வீட்டிலேதான் பெண் பார்த்தார்கள். சொந்தத்துக்குள்ளே. அப்பா இதுதான் பெண் என்றார். நான் சரி என்றேன். உடனேயே மணமுடித்து வைத்துவிட்டார்கள். எனக்கு வேலை இல்லை. நானா கல்யாணம் வேணும் என்று கேட்டேன். திருமணம் ஆன பின்பு அப்பா என் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டார். நான் எழுத்து வேலையில் மும்முரமானேன்.’
கனடா வந்த பின்னர் அவருடைய மனைவியிடம் பேசினாரா என்று கேட்டேன். வந்த மறு நாளே தொலைபேசியில் அழைத்ததாகவும், மறுபடியும் அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) பேசப் போவதாகவும் சொன்னார். இரவு நடுநிசியாகிவிட்டது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினார்கள். நானும் மனைவியும் விருந்துக்கு அழைத்த தம்பதியினரிடம் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். பிரபஞ்சனிடம் மூன்று நாட்கள்தான் பழகியிருந்தேன். ஆனால் நீண்ட வருடங்களாக அவரை தெரியும் என்பதுபோல ஓர் உணர்வு. அவரிடம் விடை பெற்றோம். இரண்டு கைகளையும் விடாமல் பற்றிக்கொண்டு விடை தந்தார்.
விருந்து நடந்தது வெள்ளிக்கிழமை இரவு. ஒரு நாள் கழித்து பிரபஞ்சனுக்கு ஒரு தொலைபேசி வந்தது. பிரபஞ்சனின் மனைவி பாண்டிச்சேரி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டார். பிரபஞ்சன் அந்தச் செய்தியை யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தச் செய்தியுடனே முழு இரவையும் கழித்தார். தன்னை ரொறொன்ரோவுக்கு அழைத்தவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். அது அவருடைய பெருந்தன்மை. திங்கள் காலை ரொறொன்ரோவிலிருந்து புறப்படும் விமானத்தை பிடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தியை அழைத்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இடிபோல வந்திறங்கிய மரணச் செய்தியை கேட்டு அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும். விமானத்தில் பயணம் செய்த அந்த நீண்ட தூரத்தை எப்படி அவர் தனிமையில் கழித்திருப்பார்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்தில் பிரபஞ்சனை சுற்றியிருந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் அவர் மனைவி என்ன செய்திருப்பார். அவர் உடல் நலமாக இருந்தாரா அல்லது அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதியாகிவிட்டாரா? தான் மனைவியிடம் சனிக்கிழமை காலை பேசப்போவதாக பிரபஞ்சன் சொன்னார். ஆனால் பேசினாரா என்பது தெரியவில்லை. நான் அவருக்கு என்ன ஆறுதல் கூறமுடியும். முதன்முதல் சந்தித்தபோது அவர் என்னை ஆரத் தழுவி கட்டிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன். அதையே அவருக்கு திருப்பி தருகிறேன்.
பிரபஞ்சனின் நாவலில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை சொன்னதுபோல உலகத்தில் நிச்சயமானது ஏழ்மைதான். அதை ஒழிக்க முடியாது, இடம் மாற்றி வைக்கலாம். மரணமும் அப்படித்தான், நிச்சயமானது. ஆனால் ஒரே இடத்தில் தங்காது. இடம் மாறிக்கொண்டே இருக்கும்.

LinkWithin

Blog Widget by LinkWithin