வியாழன், அக்டோபர் 06, 2011

வேலைவெட்டி இல்லாத ஹீரோக்கள்!


"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். "படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.
அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!
"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.
"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.
"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.
"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.
"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.
"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.
"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா. "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.
படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை

2 கருத்துகள்:

Dr. J. Raj Kumar சொன்னது…

மிகவும் நியாயமான வருத்தம். என் உள்ளத்தில் பட்டதை பிரதிபலிக்கும் எழுத்துக்கள். இதனை நம் இனிய தமிழ் பட இயக்குனர்கள் கவனத்தில் கொண்டால், படம் ஒவ்வொன்றும் பாடமாகும், நாடும் நலமாகும்.

Dr. J. Raj Kumar சொன்னது…

மிகவும் நியாயமான வருத்தம். என் உள்ளத்தில் பட்டதை பிரதிபலிக்கும் எழுத்துக்கள். இதனை நம் இனிய தமிழ் பட இயக்குனர்கள் கவனத்தில் கொண்டால், படம் ஒவ்வொன்றும் பாடமாகும், நாடும் நலமாகும்.

LinkWithin

Blog Widget by LinkWithin