சனி, ஜூலை 18, 2009

கையேடுகளின் நிரந்தர ஆட்சி!





உலகின் எத்தனையோ தத்துவம மரபைப் போலவே திராவிட இயக்க சிந்தனைக்கும் ஆழமான ஒரு தத்துவ தரிசனம் உண்டு. அது இப்போது தடம் மாறி சாதீய மதவாத கட்சிகளோடு தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீர்த்துப் போயிருப்பதாகக் கூறினாலும் அதன் ஆரம்ப குறிக்கோள்கள் வீரியத்தோடுதான் இருந்தன.

"பரத்தியாவதேதடா பனத்தியாவதேதடா' போன்ற சித்தர் சித்தாந்தமும் "சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் சோதியைக் கண்டேனடி' என்ற வள்ளலாரின் சிந்தனையும் பெüத்த சிந்தனை மரபும் ஊறித் திளைத்து விளைந்த ஒரு இயக்க ரீதியான செயல் தத்துவம் இது.

பெண் விடுதலை, தன்மான உணர்வு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, நாத்திகவாதம், இன உணர்வு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுத்தன்மையோடு திராவிட இயக்கம் உருவானது.

மேடைப் பேச்சு, பிரசுரங்கள் மூலமே கட்டப்பட்ட ஒரு இயக்கமாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். உரம் ஏறிப் போயிருந்த இன்னொரு எழுச்சியைப் பிளந்து கொண்டு பிறந்த இந்த இயக்கத்தின் பெரும் பலம் பிரசுரங்கள்தான். சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் எழுச்சி பெற்றிருந்த மக்கள் மத்தியில் தன்னந்தனியராக எழுந்தவர் பெரியார். மிகவும் உண்மையானவராகவும் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும் இருந்ததால்தான் சுதந்திரத்துக்கு மாற்றாகவும் அல்லது சுதந்திரத்தைவிட உடனடிதேவையாகவும் "மக்கள் இழிவு இன்றி வாழ வேண்டும்' என்பதை முக்கியம் என்று அவரால் வலியுறுத்த முடிந்தது.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவருடைய பேச்சில் மக்களுக்கு இன்னமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. சுதந்திர வேட்கைக்கு சமமான ஒரு ஆதரவோடு, எழுச்சியோடு திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய உழைப்பும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்த துணிச்சலும் பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கை உயர்த்தியது.

அவருடைய மிக நேர்மை தொனிக்கும் எளிமையான பேச்சில் மக்கள் ஈர்க்கப்பட்டனர். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அவரே இருக்க முடியாத சூழலைத் துண்டுப் பிரசுரங்கள் தீர்த்து வைத்தன. அவருடைய பேச்சும் எழுத்தும் சிறிய சிறிய பிரசுர நூல்களாக வந்தன. அது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் படிப்பவரைத் தூப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டாக்களின் நிலைக்குத் தள்ளியது.

அவருடைய சுயமரியாதை பிரசார வெளியீடுகள் மிக மலிவான விலையில் வெளியாகின. மக்களுக்குப் புதிய சிந்தனையை -மாற்று சிந்தனையை - ஊற்றெடுக்க வைப்பதாக அவை அமைந்தன.

"சோதிடப் புரட்டு' என்ற நூலில் சோதிடம் கணிப்பவர்கள் பூமியை மையமாக வைத்து சூரியன் அதைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத ஒரு விஷயத்தை மக்கள் நம்புவது முட்டாள்தனமாக இல்லையா? என்ற நுணுக்கமான கேள்வியை பெரியார் முன் வைத்தார்.

கைரேகை பார்த்து சோதிடம் சொல்வதென்றால் குரங்குகளுக்கும் கையில் ரேகை இருக்கின்றதே, அதற்கும் வேலை வாய்ப்பு, சொத்து வரவு எல்லாம் உண்டா? என்பார்.

மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியை, அவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை கல்வியின் அவசியத்தை அந்தத் துண்டுப் பிரசுரங்கள் செய்தன. ஒரேயடியாக மூடநம்பிக்கை புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் சாதி, மத பிரிவினையால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பிரசுரங்கள் அதிரடி வைத்தியமாக இருந்தன. வேதங்கள் பெண்களை ஐந்தாம் வர்ணமாக பிரிவினை செய்திருப்பதை அவை தோலுரித்துக் காட்டின. திருமண மந்திரங்கள் என்ற பெயரில் உச்சரிக்கப்படும் பிற்போக்குத்தனங்களை மக்கள் அறிந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் வேகமாக நடந்தன.

கலப்பு மணம் என்ற வார்த்தையையே அவர் கிண்டல் செய்கிறார். "நான் என்ன மாட்டுக்கும் மனுஷனுக்குமா திருமணம் செய்கிறேன். மனிதனுக்கும் மனிஷிக்கும்தான் திருமணம் செய்கிறேன். இது எப்படி கலப்பு மணம் ஆகும்' என்ற நியாயமான கேள்வியில் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மறுமணங்களை ஆதரித்தும் தாலி என்ற லைசென்ஸ் அடையாளத்தை நீக்கியும் அவர் மறுமலர்ச்சி செய்தார். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த சடங்குகளை சில ஆண்டு பிரசாரத்தின் மூலம் அவர் ஆட்டம் காணவைத்தார்.

தத்துவவிளக்கம் என்ற அவருடைய சிறிய துண்டு பிரசுரம் வேதங்களும் மதகுருமார்களும் என்னென்ன சொல்லி வந்திருக்கிறார்கள். அதில் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று தோலுரித்தன. அவர் இசை, கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பேசுவதினும் முக்கியமாக சமத்துவத்தைப் போற்றியதால் இவற்றை அவர் தன் வாழ்நாளில் இருந்து தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அன்னா கரீனினாவையோ ஆன்டன் செகாவையோ படிக்காமல் போனது தமிழகத்துக்கு நேர்ந்த இலக்கிய இழப்புதான். ரத்தமும் சதையுமாக உண்மை சொட்டும் அவருடைய நடையில் அவருடைய ஆர்வம் இன்றியே இலக்கியத் தன்மை இருந்தது. எழுத்தாளர் க.நா.சு இவருடைய எழுத்து நடையைச் சிலாகித்திருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.

சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் - மூட நம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்; என்று விமர்சிக்கிறார்.

ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் போன்ற தமிழின் தலைசிறந்த நூல்களாக எண்ணுகின்ற அனைத்தைப் பற்றியும் அவருக்கு இப்படியான கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. மனிதன் சாதி வாரியாக கேவலப்பட்டுக் கொண்டிருப்பதையும் புரோகிதர்களின் புரட்டுகளையும் கண்டிக்காமல் என்ன ரசனை வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். இது குறித்து "தமிழர், தமிழ் இலக்கியங்கள்' என்ற வெளியீடு ஒன்று வெளியாகியுள்ளது.

அவருடைய அறிவு விருந்து என்ற பிரசுரத்தில் "கடவுளும் தண்டிக்கிறான், மனிதனும் தண்டிக்கிறான். கடவுளும் பழி வாங்குகிறான், மனிதனும் பழி வாங்குகிறான். இவையெல்லாம் மனிதன் கற்பித்தவை என்பதாலேயே இப்படி மனித குணத்தோடு இருக்கின்றன' என்கிறார்.

"புரட்டு இமாலய புரட்டு', "நீதி கெட்டது யாரால்?', "காந்தியாரின் படத்தை எரிப்பது ஏன்?', "புரட்சி அழைப்பு', "சுதந்திர தமிழ்நாடு ஏன்?', "பாரத ஆராய்ச்சி' போன்ற பல தலைப்புகளில் வெளியீடுகள் வந்துள்ளன. இந்த வெளியீடுகள் 1930-களின் துவக்கத்தில் இருந்து இப்போதும் .. இன்றைய பிரச்னைகளான இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற தலைப்புகளில் வெளியீடுகள் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடாக வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் தவிர கைவல்ய சாமி, குத்தூசி, அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களின் பேச்சுகள்- எழுத்துகளும் இத்தகைய பிரசார வெளியீடுகளாக வந்திருப்பதைக் காண முடிகிறது.
அறிஞர் அணண்ணாவின் "தீபரவட்டும்', "ஆரிய மாயை' போன்ற பேச்சு வெளியீடுகள் அன்றைய இளைஞர்களுக்கு ஆவேசத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பல பல்வேறு ஆட்சிச் சூழல்களில் தடைசெய்யப்பட்ட நூல்களாகவும் அதனாலேயே அதிகம் பரபரப்புக்கு ஆளான நூல்களாகவும் விளங்கின.

பகுத்தறிவு பிரசார வெளியீடு, திராவிடப் பண்ணை, நாத்திகம் வெளியீடு, பெரியார் மையம், சிந்தனையாளன் வெளியீடு போன்ற பல அமைப்புகளும் இத்தகைய துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன.

ரேடியோ, தொலைக்காட்சி, அலை பேசி, தொலைபேசி, வாகன வசதி, சாலை வசதி, கமம்ப்யூட்டர் தொழில்மமநுட்பம், இண்டர் நெட் போன்றவை அறவே õல்லாத நிலையிõல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில் இந்தத் துண்டுப் பிரசுரங்களின் பங்கு மகத்தானது.

தமிழரின் பேச்சில் எழுத்தில் வாழ்வில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தியிருக்கும் மகத்தான மாற்றம் என்ன வென்றால் இப்போது பக்கத்து மாநிலங்களான ஆந்திரத்திலும் கேரளத்திலும் கர்நாடகத்திலும் நாயுடு என்றும், நாயர் என்றும் ராவ் என்றும் ஆட்சியாளர்களேகூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் சகலருக்கும் கூச்சம் இருக்கிறது. மறைவில் சாதி அதன் வன்மத்தோடு தயாராகக் காத்திருப்பதை மறுக்கவில்லை. ஓட்டுக்கு ஏங்கிகளால் அது எப்படியெல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சாதியை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் காட்டுகிற தயக்கம், சாதி மறுப்பு, மறுமணம் போன்றவற்றில் ஏற்பட்ட சிறிய வெற்றியை இந்த பிரசுரங்கள் சாத்தியமாக்கின. ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த சில மாற்றங்களுக்குப் பின்னும் இந்த காலணா கையேடுகளின் உத்வேகம் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இக் கையேடுகளின் ஆட்சி நிரந்தமானது.

சமரசம் செய்ய வேண்டிய இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெரியார் உதறித்தள்ளியதற்கான கணிப்பையும் இப்போது தெளிவாகவே உணர முடிகிறது.

புத்தகம் பேசுது சிறப்பு மலர்- 2009

LinkWithin

Blog Widget by LinkWithin