திங்கள், ஜனவரி 26, 2009

திரைக்குப் பின்னே- 17

சவுந்தர்யாவின் திருமணம்!

மைசூரை ஒட்டியுள்ள ஒரு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு. வெள்ளை நாகம் (மதுமதி என்று பெயர் மாற்றினார்கள்) என்று படத்துக்குப் பெயர். சவுந்தர்யா கதாநாயகி. வெள்ளை நாகம் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளியான வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிக் கொண்டிருந்த படம். அவரைத் தவிர அங்கு கர்ணாஸ் இருந்தார். கர்ணாஸ் பஸ் கண்டக்டர் போலவும் சவுந்தர்யா அங்கு பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்காக வரும் மாணவியாகவும் நடித்தனர். என் ஞாபகத்தில் அவர் விஜயகாந்துடன் இணைந்து "தவசி' படத்தில் நடித்ததோடு சரி. "வெள்ளை நாகம்', ரீ எண்ட்ரி. அதுவுமில்லாமல் சவுந்தர்யாவின் நூறாவது படமாகவும் அதை அறிவித்தார்கள்.

பஸ் நிறுத்தத்தை ஒட்டிய சிறிய ஒட்டு வீட்டின் திண்ணையில் செüந்தர்யாவும் அவருடைய அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். பேட்டி என்றில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம்.
வெள்ளை நாகம் நாவலை தாம் படித்திருப்பதாகவும் அதன் விறுவிறுப்புக்காகவே நடிக்க சம்மதித்ததாகவும் சொன்னார். திருமணமாகி குழந்தை பிறந்திருப்பதனால் இடையில் சில காலம் நடிக்காமல் இருந்ததாகவும் இனிமேல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார். பிறகு பொதுவாக நாட்டு நடப்புகள், பொதுவாக சினிமாத் துறையின் சிக்கல்கள் என்று பேச்சு தொடர்ந்தது.

திருமணமாகி குழந்தை பிறந்தபின்னும் நடிகைகள் தங்களின் புகழ் உச்சி காலகட்ட கனவுகளோடு மிதப்பது அல்லது அதை விட்டு இறங்குவதில் தயக்கம் காட்டுவது உளவியல் பூர்வமாக அணுக வேண்டிய விஷயம். நடிகர்கள் தங்கள் மகன்கள் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கும்போதும் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருப்பதும் நடிகைகள் மட்டும் திருமணமான அடுத்த நாளில் இருந்து அக்கா வேடத்துக்கும் அண்ணி வேடத்துக்கும் தள்ளப்படுவதும் கலாசார ரீதியானதாகவும் தெரிகிறது. ரசிகன், தன் கனவுக் கன்னியை சகோதரியாக, தாயாக, அண்ணியாகத்தான் பார்க்க விரும்புகிறானோ என்னவோ?

ஆனால் அவர் மீண்டும் கதாநாயகியாக அவர் பெரிதும் விரும்பினார். தனக்கு மவுசு குறையவேயில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். தமிழில் சரியான மேனேஜர் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.

சில நாள்களில் சவுந்தர்யா பி.ஜே.பி.யில் இணைந்ததாக அறிவிப்பும் அதைத் தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்குச் சென்ற போது விபத்தில் மரணமடைந்ததாகவும் செய்திகள் வந்தன.

அவர் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பு அதிகமாக வந்திருந்தால் அவர் ஒருவேளை அரசியலில் இறங்காமல் இருந்திருக்கலாம். அதன் பிறகு மதுமதி (வெள்ளைநாகம்) அவருடைய கடைசி படம் என்ற பிரசாரத்தோடு வெளியானது.




யானைக்கே இந்த கதி!

முதன்முதலில் பாண்டியராஜனை திருநீர் மலை கோவிலின் அடிவாரத்தில் பார்த்தேன். அவருடைய படங்களின் தலைப்புகளிலேயே இருக்கும் ஜனரஞ்சகத்தை வெகுவாகப் புகழ்ந்தேன். நெத்தியடி, காக்கா கடி, வாய்க் கொழுப்பு என்ற தலைப்புகளில் இருக்கிற மக்களுக்கு நெருக்கமான தன்மையைச் சொல்லி விட்டு ஆனால் போக,போக அந்த வலையில் நீங்களே சிக்கிக் கொண்டீர்கள் போல இருக்கிறது. உங்களையே கேலி செய்வதுபோல காட்சிகள் வைக்கிறீர்கள். இது திரும்பத் திரும்ப வருகிறதே என்றேன்.

"நம்ம முகம் ஹீரோவுக்கான முகம் இல்லைனு நல்லா தெரியும். ஆனா ஹீரோவா நடிச்சாகணும். ஹீரோனா நாலு பேரை அடிச்சு வீழ்த்த வேண்டியிருக்கு. அதுவும் இல்லாம நமக்கு ஜோடியா நடிக்கிற நடிகை நம்மைவிட உயரமா இருக்காங்க. தியேட்டர்ல ஆடியன்ஸ் பார்த்துட்டு இவனுக்கெல்லாம் ஹீரோ ஆசைய பாருப்பானு சொல்றதுக்கு முன்னாடி நாமளே படத்தில அப்பப்ப ஞாபகப்படுத்திட்டா பிரச்சினை இல்ல பாருங்க'' என்று எதார்த்தமாக பதில் சொன்னார்.
கூடவே இன்னொரு தகவலைச் சொன்னார்.

இந்தியில் "ஆத்தி மேரா சாத்தி' என்றொரு படம் வந்தது. பிறகு அது தமிழில் "நல்ல நேரம்' என்று வந்தது. பிறகு அதை இந்தியில் "மா' என்ற பெயரில் உல்டா செய்தார்கள். அது நன்றாக இருப்பதாக தமிழில் "அன்னை ஓர் ஆலயம்' என்று எடுத்தார்கள். ஆனானப்பட்ட யானைக்கே இந்த கதின்னா நாமல்லாம் எம்மாத்திரம்? ஒரே மாதிரி கதைல நடிக்கக் கூடாதா?

லாஜிக் சரிதான். எந்த வேலையும் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால்தான் அந்த வேலையைத் தொடர முடியும்.



ஒரு 'இந்தியன்' கனவு!


"இந்தியன்' திரைப்படம் வெளியான மறுநாள் என்று ஞாபகம் கமல்ஹாசனை அவருடைய அலுவகத்தில் பேட்டிக்காகச் சந்தித்தேன்.

50 ரூபாய், 100 ரூபாய் ஊழல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு எத்தனை பெரிய தடையாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். உலக அரசியல், பல நூற்றாண்டுக்கு முந்தைய அரசியல் என தொட்டு ஒரு ரவுண்டு வந்தோம்.

"இத்தகைய சினிமாக்கள் வந்தால் நாட்டில் ஊழல் குறைய வாய்ப்பிருக்கிறது. மனித மனங்களில் இந்தச் சிறிய ஊழல்களால் பிரச்சினை இல்லை என்ற எண்ணம் வளரும் இல்லையா?'' என்று கேட்டேன்.

"இருக்கலாம். ஆனால் அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சத்யம் தியேட்டர் வாசலில் இந்தியன் படத்தின் 100 ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டுதான் பாதி பேர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

ஒரு ஜனரஞ்சகப்படம் அதன் விஸ்தாரமான எல்லைக்குள் இருக்கும் கோடி பேரில் எத்தனை பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்த இயலும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதையும் மீறித்தான் அவர் "ஹேராம்', "குணா', "குருதிப் புனல்' போன்ற பரீட்சார்த்தங்களையும் செய்கிறார்.

வியாழன், ஜனவரி 22, 2009

அதிகாரி ஸார்

அவரால் ஒரு ஆபத்தும் இல்லை என்று நன்றாகத் தெரிந்தும் அனைவருக்கு அதிகமாகவே பயப்பட வேண்டியிருந்தது. சொல்லப் போனால் இன்று இரவுக்குள் அவர் நரகத்துக்குப் போய்விட்டால் (அங்குதான் போவார் என்பதில் உறுதியாக இருந்தனர்) தங்கள் வாழ்க்கையின் பெரும் தொல்லையெல்லாம் ஓர் நாளில் ஒழிந்ததென்று கொண்டாடவும் தயாராக இருந்தனர்.
அவர் மரணம் எப்படி அமைய வேண்டும் என்று சகலருக்கும் ஒரு தனித்தனியே ஆசைகள் இருந்தன.
அவர் போகிற கார் குப்புற கவிழ்ந்து பாழுங்கிணற்றில் விழுந்து ஒருவாரம் கழித்துதான் அவரை கண்டெடுக்க வேண்டும் என்பது ஃபோர்மேன் சதாசிவத்தின் கனவாக இருந்தது.
ஆஸ்திரேலியா போகும்போது விமானம் ஹைஜாக் செய்யப்பட்டு தீவிரவாதிகளால் இவர் முதல்பலியாக வேண்டும் என்பது மானேஜர் பிரகாஷின் ஆசை.

"கத்தி எடுத்துக் குத்திட்டு ஜெயிலுக்குப் போறேன்டா.. மத்தவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்'' என்பான் மிஷின் ஆபரேட்டர் செல்வராஜ்.

பாதைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லோருடைய இலக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. அவரவர் நிலைமைக்கு ஏற்பத்தானே நினைவுகளும் இருக்கும்....? வெள்ளத்தனையது மலர் நீட்டம்.

அந்த மனிதர் மீது அப்படியென்ன கோபம்? என்னதான் மன வருத்தம் இருந்தாலும் ஒரு மனிதன் தான் விரோதித்த மனிதன் இறந்து போய்விட வேண்டும் என்று நினைப்பானா? மனித நாகரீகம் இதுகாரும் கற்பித்த சகிப்புத்தன்மையும் நேயமும் இதைத்தானா? என்று பதறுபவர்கள் மட்டும் மேற்கொண்டு இக்கதையைப் படியுங்கள்.

நீங்கள் பார்க்கத் துடிக்கும் அந்த நபரின் பெயர் பஞ்சாபகேசன். தென்னிந்தியாவில் பெயிண்ட் தயாரிக்கும் மிகவும் பெயர் பெற்ற நிறுவனத்தின் ஐந்து டைரக்டர்களில் மூத்தவர். சொத்து சமாசாரத்துக்காக வயதில் மூத்த அவரையும் ஒரு டைரக்டராகச் சேர்த்து அவருக்கும் பிரம்மாண்டமாய் ஒரு அறையும் அட்டண்டரும் சமத்துவமான அந்தஸ்தும் கொடுத்திருந்தாலும் மற்ற நான்கு பேர் எடுக்கிற முடிவுதான் முடிவு. இவர் ஒப்புக்குச் சப்பாணி மாதிரிதான்.

பெயிண்ட் தயாரிப்பு பற்றியோ, அது எங்கெல்லாம் அனுப்பி வைக்கப்படுகிறதென்றோ, ஷேர் நிலைமை எப்படி இருக்கிறதென்றோ, ஆண்டு வருமானம் எவ்வளவு என்றோ அவர் கிஞ்சித்தும் அறிந்தவர் இல்லை. அப்படியிருக்கும் ஓர் அப்பிராணியை எதற்காக எல்லோரும் இப்படி நிந்திக்க வேண்டும்?

தினமும் அவர் அலுவகத்துக்கு வருவார். வந்ததும் வராததுமாக அழைப்பு மணியை ஆவேசமாக அழுத்தி தலைமுழுகிப் போகிற காரியம்போல அட்டண்டரை அழைப்பார்.
""அவனைக் கூப்பிடு'' என்பார். அட்டண்டர் ஒரு போதும் "எவனை?' என்று எதிர் கேள்வி கேட்டதில்லை. அப்படி கேட்டவன் எல்லோரும் ஒருவாரம் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். சஸ்பென்ட் என்பதைத்தான் அவர் டிஸ்மிஸ் என்பார்.

"என்னையே எதிர்த்து கேட்கிறீயா நீ? உனக்கு நான் சம்பளம் தர்றேனா... இல்லை எனக்கு நீ சம்பளம் தர்றீயா? கூப்படச் சொன்னா கூப்பிட வேண்டியதுதானேடா மடையா. நீ என் கண் முன்னாடி நிக்கக் கூடாது. ஒருவாரம் டிஸ்மிஸ்... நீ போய் அவனைக் கூப்பிடு''
மீண்டும் "எவனை?' என்று கேட்டு இன்னொரு வாரம் டிஸ்மிஸ் ஆகும் தைரியமில்லாமல் சின்ன முதலாளியைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி இரண்டொரு நாள் அவர் கண்ணில் படாமல் வேறு ஒரு டிபார்ட்மண்டில் வேலை பார்ப்பான் அட்டண்டர்.
ஆகவே "கூப்பிடு அவனை' என்றால் எவனையாவது எதிரில் போகிறவனைக் கூப்பிட்டு "சார் கூப்பிட்டாரு'' என்பதுஅட்டண்டரின் வழக்கம்.

அன்றொரு நாள் சிக்கியவன் அக்கவுண்ட்ஸ் மேனேஜர்.

அட்டண்டர் சொன்னதின்பேரில் உள்ளே போனவனை, "நீ ஏன் உள்ள வந்தே?'' என்றார். அக்கவுண்ட் மேனஜர் புதிதாக வேலைக்கு வந்தவர். "நீங்கதான் கூப்பிட்டீங்கன்னு அட்டன்டர் சொன்னான்'' என்றான்.

"எவனாவது சொன்னா உள்ள வந்திட்றதா? சரி.. சரி .. நீ என்ன வேலை செய்யறே?''

"அக்கவுண்ட்ஸ் மேனேஜர்''

"கணக்கு வழக்கெல்லாம் நல்லா தெரியுமா?''

"தெரியும்.''

"சரி. நான் ஒரு கணக்கு சொல்றேன்... அஞ்சு ரூபா குடுத்தா மீதி எவ்வளவு?''

"......''

"தெரியும்னா தெரியும்னு சொல்லு. தெரியாதுனா தெரியாதுனு சொல்லு. இந்த முழி முழிக்கிறே?''

ஆசாமி கிண்டல் செய்கிறாரா, கிறுக்கனா, நமக்குத்தான் கேள்வி புரியவில்லையா என்ற பல்வேறு வாய்ப்புகளையும் யோசித்து முடிப்பதற்குள் "முட்டாப் பயலையெல்லாம் வேலைக்கு எடுத்திருக்காம்பா'' என்று சகட்டுமேனிக்கு ஏறி அடிக்க ஆரம்பித்தார்.

"அஞ்சு ரூபா கொடுத்து என்ன வாங்கச் சொன்னீங்கன்னே சொல்லையே சார்...''

"நீ என்ன கம்பெனிக்கு சேமிக்க வந்தியா? செலவழிக்க வந்தியா? சரி போ.. நீ போய் அவனை வரச் சொல்லு.''

அக்கவுண்ட்ஸ் மேனேஜர் இதை ஒரு புகாராக ஜெனரல் மேனேஜரிடம் சொல்ல... ""அவர் அப்படித்தாம்பா. நீ கண்டுக்காதே'' என்றார்.

அப்படி கண்டு கொள்ளாமல் விட்டவர்கள் இங்கு நெடுங்காலமாகப் புலம்பியபடியே வாழ்ந்துவந்தனர். கண்டு கொண்டவர் வேறு வேலைக்குப் போய்விட்டனர்.
அன்றொரு நாள் பஞ்சாபகேசன் ரவுண்ட்ஸ் வரும்போது, லாரிக்காரன் கிடங்கின் வாசலிலேயே எண்ணெய் ட்ரம்மை இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்றார். "டேய் இதை ஓரமாகத் தள்ளி வைடா'' என்றார் எதிர்பட்டவனை.

அந்த எண்ணெய் ட்ரம்மின் மூடியைக்கூட தள்ளும் திராணியற்றவன் அவன்.
அவன் அனுபவப்பட்டவன். அடுத்த வினாடி அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டு தம் பிடித்து ட்ரம்மைத் தள்ள முயற்சி செய்தான். அதாவது ஒரு கோழியின் இறகைத் தள்ளும் அளவுக்குக்கூட அழுத்தம் கொடுக்கவில்லை. வெறும் பாவனை மட்டும் செய்தான்.
இப்படியான விசுவாசமான ஊழியனை அவர் மனதார நேசித்தார். தன்னால் முடியாவிட்டாலும் சிரமப்பட்டு முயற்சி செய்கிறானே என்று பூரித்துப் போனார். "ஏண்டா மடையா, ஒரு ஆளால தள்ள முடியுமாடா... போய் நாலு பேரைக் கூட்டிக் கிட்டு வாடா''
போனவன், அந்தப் பக்கம் இருந்த நாலுபேரை "ஐயா கூப்பிட்றாரு' என்று அனுப்பிவிட்டு வேறு பக்கம் கம்பி நீட்டினான்.

உண்மையில் இந்த மாதிரி ட்ரம்முகளை லாவகமாக நகர்த்து வைப்பதற்கென்றே லிஃப்ட் வாகனங்கள் அங்கு இருந்தன. அதைப் பயன்படுத்தலாம் என்று கருத்து சொன்னால் என்ன பின் விளைவுகள் ஏற்படுமோ என அந்த நால்வரும் சொந்த சக்தியாலேயே நகர்த்தி முடித்தனர்.

யோசித்துப் பார்த்தால் அவருக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் எல்லோரையும் வேலை வாங்க வேண்டுமென்று அவர் விரும்பினார். நாம் ஒரு நாள் கம்பெனிக்குள் செல்ல வில்லையென்றாலும் எல்லாமும் குட்டிச் சுவராகிவிடும் என்று அவர் நம்பினார். ஊழியர்களுக்கு அவர் ஒரு நாள் வரவில்லையென்றாலும் தீபாவளியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு நபரை மற்ற டைரக்டர்கள் எதற்காக கம்பெனிக்குள் அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்த மாதிரி ஒரு அதட்டலுடன் ஒரு பெருசு உலாவிக் கொண்டிருப்பதும் நல்லதுதான் என்று அவர்கள் விட்டுவிட்டார்கள் போலும்.
ஏதோ கிறுக்கன் என்று அவரை உதாசீனப்படுத்திவிடவும் முடியாது. அவர் உணரும் விதமாக அவரை அவமானப்படுத்திவிட்டால் போச்சு. அதோடு சீட்டைக் கிழித்துவிடுவார்கள். தான் அவமானப்படுவதை அவர் எந்தச் சந்தர்ப்பத்தில் உணர்வார் என்பது தெரியாது. மேலே சொன்ன சம்பவத்தில் முதலில் அந்த ட்ரம்மை தள்ளியவன் சொல்லிக் கொள்ளாமல் கம்பி நீட்டி விட்டது அவரை அவமானப்படுத்திய செயல் என்று நினைத்தால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஐந்து ரூபாய்க்கு என்ன வாங்க வேண்டும் என்று திருப்பிக் கேட்டவன் அவமானப்படுத்தியவன் ஆகிறான். அவர் அவமானப்படும் மையம் மற்றவர்களின் இயல்பில் இருந்து மாறுபட்டிருந்தது.

இந்தக் கம்பெனியில் பணியாற்றுவதற்குப் பெயிண்ட் தயாரிப்பு முறை தெரிந்திருந்தாலோ, கம்பெனி நிர்வாகம் தெரிந்திருந்தாலோ, வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தாலோ போதுமானதாக இல்லை. பஞ்சாபகேசனின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது முக்கியமானதாக இருந்தது.

மனித மனம் எப்போதும் சுதாரிப்போடு இருக்க முடியுமா?
ஒரு சில நேரங்களில் "அவர் பார்வையில்' எதிர்த்துப் பேச வேண்டியதாகவும் அவரை அவமானப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. குறைந்த பட்சம் இந்த டிபார்ட்மென்டில் இருந்து இன்னொரு டிபார்ட் மென்டுக்குத் தூக்கி எறிவது முதல் அல்லது நாமாக வேலையை விட்டுப் போவது வரை நடந்துவிடுகிறது. அதனால் எப்போதும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசு நிலை. இந்தக் கிறுக்குப் பயலுக்காக வேலையை விட்டுவிட வேண்டுமா என்று நினைப்பவர்கள், வேறு போக்கிடம் இல்லாதவர்கள், எந்த கம்பெனிக்குப் போனாலும் இப்படி ஒரு லூஸýப் பயல் இருக்கத்தான் செய்வான். இப்படியெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டவர்கள் மட்டும்தான் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இச் சூழல் நிமித்தமாகத்தான் பஞ்சாபகேசன் இந்த பூமியில் இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஊழியர்கள் எண்ணுவதற்குக் காரணம்.

செல்லமுத்துவுக்கு ஒரு குறைந்த பட்ச ஆசை இருந்தது. பஞ்சாபகேசனை ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் சட்டென செருப்பைக் கழற்றி அடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தான். தனியாக இருக்கும் நேரத்தில் அப்படி செய்துவிட்டால் பதிலுக்குத் திருப்பி அடிப்பானா, அல்லது வேலையைவிட்டு நீக்குவானா? அல்லது கழுத்தை வெட்டி விடுவானா, போலீஸில் சொல்லி ஜெயிலில் தள்ளுவானா என்று நீண்ட நாள்களாக யோசித்து வைத்திருந்தான்.

இரவு எட்டு மணி வாக்கில் தாமதமாகப் புறப்பட்டார் பஞ்சாபகேசன். கம்பெனி இருந்த வளாகத்திலேயே பின் பக்கத்தில் அவருக்கு வீடு. நடந்துதான் போவார். வெளிச்சம் கொஞ்சம் இருந்தால் அந்த தூரத்தையே இரண்டு நடையாக நடந்து வாக்கிங் பயிற்சி போலவும் செய்வார்.

தொந்திக்கு மேல் அரிசி மூட்டைக்கு பட்டை கட்டியது மாதிரி பெல்ட் கட்டியிருந்தார் பஞ்சாபகேசன். கம்பெனிக்கு வருவதற்கு மட்டும்தான் பேண்ட், சட்டை. மற்ற நேரங்களில் எப்போதும் முழங்கால்வரை தூக்கிக் கட்டிய நாலூ முழம் வேட்டி மட்டும்தான்.
கிளம்பி வெளியே போனவர் இருட்டைப் பார்த்துவிட்டு திரும்பினார். மனிதருக்குப் பேய் பயம் அதிகம். "டேய் யாருடா?'' அங்கே என்றார்.

செல்லமுத்து இந்த மாதிரி தருணத்துக்காகத்தான் காத்திருந்தான். பேச்சு கொடுத்தபடியே நடந்தார்.

"இந்த ஷிப்ட்ல எத்தனை பேரூ?''

"12 பேர் இருக்கோம்யா''

"உம் பேர் என்ன சொன்னே?''
பார்க்கும் போதெல்லாம் கேட்கிற வழக்கம்தான். சொன்னான். பின்பக்கமாகவே அடித்துவிடலாமா என்று யோசித்தான். கிழம் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்தது. நின்று செருப்பைக் கழற்றுவதற்குள் திரும்பிவிட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கொக்கி வைத்த செருப்பு. சட்டென்று அவசரத்துக்குக் கழலுமா என்பதே சந்தேகமாக இருந்தது. செருப்பையும் அவருடைய பின் மண்டையையும் பார்வையால் அளந்து கொண்டான்.

"என்னடா கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்?''

"என்னங்கய்யா?''

"எத்தனை பசங்க உனக்குன்னேன்? இந்த உலகத்திலேயே இல்ல போல...''

"ரெண்டு. பையன் ஒண்ணு. பொண்ணு ஒண்ணு.''

செல்லமுத்து குனிந்து செருப்பை...

"என்னடா... செருப்பு அருந்துப் போச்சா'' என்பது மாதிரி நின்றார். வீடு கிட்டத்தில் வந்துவிட்டது. இனி பயமில்லை அவருக்கு.

"நீ என்டா என்கூட வந்தே? வேலை நேரத்தில என் பின்னாடி அலையறே?''

"ஐயா நீங்க பேசிக்கிட்டு வந்தீங்க. நானும் பதில் சொல்லிக்கிட்டு வந்துட்டேன்யா''

"அடப் பயித்தியக்காரா... உனக்கு எத்தனைக் குழந்தைங்கங்கிறது அவ்வளவு முக்கியமா... நாளைக்குப் பொழுதோட கேட்டுத் தெரிஞ்சுக்க மாட்டனா? சரி.. ஓடு.''

பேச்சுத் துணைக்கு இழுத்து வந்துவிட்டு இப்படி பழி போடுகிறானே என்ற ஆத்திரமும் சேர்ந்து கொண்டது செல்லமுத்துக்கு. அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த பஞ்சாபகேசனை விரட்டிச் சென்று செருப்பால் ஒரு போடு போட்டுவிடவேண்டும் என்ற சிந்தனை உடலில் உஷ்ணத்தைக் கிளப்பியது. வினாடியில் ஜுரம்போல கொதித்தது உடம்பு. கண்கள் ஜிவ்விடுவது தெரிந்தது. செருப்பைக் கழிற்றிக் கொண்டான். இந்த லூஸýப் பயலை எதற்காக அடிக்க வேண்டும். அப்படி என்ன கெட்டது பண்ணிவிட்டான் நமக்கு என்றும் தோன்றியது. அவரை நோக்கிப் போகலாமா, வேலையைப் பார்க்கப் போகலாம் என்ற மனக் குழப்பம். கால்கள் முன்னும் பின்னுமாக நடைபோட்டுப் பின்னிக் கொண்டது. கையில் செருப்போடு மாயக் கயிறு கொண்டு கட்டப்பட்டவன் மாதிரி தத்தளித்தான்.

"டேய் என்னடா இன்னும் நிக்கிறே....?''
இந்த நேரத்தில் பின் வாங்குவது மிகப் பெரிய கோழைத்தனமாக இருந்தது அவனுக்கு. சட்டென பஞ்சாபகேசனை நோக்கி வேகமாக நகர முற்பட்டான். நிலை தடுமாறி பொத்தென்று கீழே விழுந்தான். கால் இடறியதா? நினைவு தப்பியதா? கல் எதுவும் தட்டியதா ? சட்டென உணரமுடியவில்லை. "என்னடா ஆச்சு... பாத்து வரப்படாது'' என்று ஓரடி நெருங்கி வந்தவர், செல்லமுத்து தலையைப் பிடித்துக் கொண்டு துடிப்பதைப் பார்த்து பதறினார். கல் பாய்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

"டேய் யாருடா அங்கே?'' என உரத்துக் குரல் கொடுத்தார்.
காக்கிச் சட்டை பேண்டுடன் ஒருவன் ஓடிவந்தான்.

"யாருடா நீ?''

"செக்யூரிட்டி''

"செக்யூரிட்டியா நீ..? அப்பிடித்தான் சொல்லிக்கிட்டு திரியறயா..? செக்யூரிட்டினா என்ன மீனிங் தெரியுமாடா உனக்கு..? யாராவது என்னைச் சுட வந்தா நீ முன்னாடி வந்து உயிரைக் கொடுக்கணும். நீ எனக்காக உயிரைக் கொடுப்பியா..? சும்மா ஒரு பேச்சுக்காகவது சொல்லேன் பாக்கலாம். ம்... சரி.. சரி. ஓடு. அதோ அங்க ஒருத்தன் மயக்கம் போட்டு விழுந்துட்டான். மானேஜர் கிட்ட சொல்லி அவனை அஸ்பித்திரில சேக்கிற வழிய பாரு. அவன் உயிரையாவது காப்பாத்துவியான்னு பார்க்கிறேன்'' உலகத்தின் அத்தனை தொழிலாளர்கள் மீதும் சலிப்புற்று வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

வாசலில் ''செவிட்டுக் கிழம்... எத்தனைவாட்டி கூப்பிட்றது? அங்க என்ன செக்யூரிட்டிகிட்ட பேச்சு'' - அது அவருடைய மனைவியின் குரல்.

"வேலையெல்லாம் முடிச்சுட்டு வரணுமில்ல?'' என்று இரண்டடி ஓர் அடியாகத் தாவி ஓடினார் பஞ்சாபகேசன்.

புதன், ஜனவரி 21, 2009

திரைக்குப் பின்னே -16

திரையுலகின் தடயங்கள்

காணாமல் போன ஆட்டுக்குட்டி கேள்விபட்டிருக்கிறோம். காணாமல் போன குழந்தைகள் கேள்விபட்டிருக்கிறோம். குங்குமத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். காணாமல் போய்விட்ட நடிகர் நடிகைகள் பற்றி எழுதுங்கள். அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதுங்கள் என்றார்.

சிறு பட்டியல் தயாரானது. சிலர் நடிகர்கள், பலர் நடிகைகள். அன்றாடம் ஸ்டூடியோக்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், ஆயிரம் வாட்ஸ் பல்புகளுக்கு முன் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்கள், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் போஸ்டர்களாக ஒட்டியிருந்தவர்கள், பிலிம் சுருள்களாகப் பயணித்தவர்கள்... என் கண் முன்னால் அப்படித் துடைத்துவிட்டது மாதிரி காணாமல் போனவர்கள் இரண்டு பேர். நாங்கள் தயாரித்த பட்டியலில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சரியாக விவரிக்க முடியாமல் போனவர்கள் அவர்கள்.

ஒருவர் ஹீரா. `இதயம்' படத்தில் அறிமுகமாகி "காதல்கோட்டை', "தொடரும்' படங்கள் வரை தொடர்ந்தவர். திடீரென ஒரு நாள் அவர் எந்தப் படத்திலும் இல்லாமல் போனார். தொலைக் காட்சித் தொடர்களில் இல்லை, ஒரு விழாவில் தலைக் காட்டவில்லை, அம்மா, அண்ணி என்று வேடமெடுக்கவில்லை. அவருடைய தொலைபேசியில் வேறு யாரோ பேசுகிறார்கள், அவர் இருந்த முகவரியில் வேறு யாரோ வசிக்கிறார்கள். இன்றைய தேதியில் அவர் காணாமல் போய் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. சாதாரணமாக கடைத்தெருவில், தியேட்டரில், ஹோட்டலில் எங்கும் யார் கண்ணிலும் அவர் படவில்லை.

இரண்டாவது அபிராமி.

'வானவில்', 'பட்ஜெட் பத்மநாபன்', 'விருமாண்டி' என அவருடைய நடிப்புக்கு நல்ல உதாரணங்களைக் காட்டலாம். 'விருமாண்டி' போன்றதொரு படத்தில் நடித்தவர் அந்தப் படம் வெளியான சில தினங்களுக்குப் பிறகு அவரைப் பேட்டி எடுக்கவும் முடியாமல் மாயமானார்.

செல்போன், வீட்டு போன், முகவரி, இ மெயில் எதிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு பத்திரிகை தொடர்பாளராக இருந்தவர், அவர் உடன் நடித்தவர்கள், அவர் படத்தை இயக்கிய இயக்குநர்கள் யாருக்கும் அவர் என்ன ஆனார் என்று தெரிந்திருக்கவில்லை. அவருடைய கேரளத்து முகவரியையும் மாற்றிக் கொண்டார் என்றார்கள்.

இப்படி தூங்கி எழுந்த மறுநாள் எல்லா தொடர்பையும் துண்டித்துக் கொண்டற்கு நியாயமான ஆழமான காரணங்கள் இருக்கக்கூடும். அவர்களைத் தேடுபவர்களுக்கோ அல்லது தேடாதவர்களுக்கோ அது தெரிய வேண்டும் என்ற நியாயம் இல்லைதான்.

கொஞ்ச நாளைக்கு முன் சன் டி.வி. 'நேருக்கு நேர்' வீரபாண்டியன் யாருக்காகவோ விசாரித்தார்.. "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த நடிகை காஞ்சனா இப்போது எங்கே இருக்கிறார் என்று. மாதவி என்ன ஆனார் என்பார் சிலர். ரவளி, சுவலட்சுமி எல்லாம் இப்போது எங்கே என்பார்கள்.

ஒரு சினிமா ஆரம்பிக்கப்படும் போது மும்பையில் இருந்து ஒரு நடிகை வருகிறார், கேரளத்தில் இருந்து வில்லனை அழைத்து வருகிறார்கள், ஆந்திரத்தில் இருந்து அப்பா நடிகர், கர்நாடகத்தில் இருந்து ஒரு குணசித்திர நடிகர்... வேடந்தாங்கல் பறவைகள் போல கூடுகிறார்கள். படம் முடிந்ததும் கலைகிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான தடயம்போல படம் மட்டும் அவ்வப்போது டி.வி.யில் ஓடிக் கொண்டிருக்கிறது.



கூல்...!

கார்கில் நிதி திரட்டப்பட்ட நேரத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதற்குப் பின் புலமாக இருந்து உதவியவர்களில் அரவிந்த்சாமி முக்கியமானவர். மிக அமைதியாக அலுங்காமல் குலுங்காமல் பேசுகிறவராக அவரைப் பார்த்திருக்கிறேன். கலெக்டர், சாஃப்ட்வேர் என்ஜினீயர், கோடீஸ்வரர், அதிகாரி போன்ற வேடங்களுக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்திருந்தார்கள். பெண்களைப் பார்த்து "நீ என்ன ஐஸ்வர்யா ராயா' என்பது மாதிரி ஆண்களில் "நீ என்ன அர்விந்த்சாமியா' என்று கேட்கிற வழக்கமிருந்தது. அந்த நேரத்தில் அர்விந்த்சாமியை பட்டிக்காட்டு வேடத்தில் நடிக்க வைக்க ஏற்பாடானது.இளையராஜா கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம். என் ஆசை ராசாவே, ராசா கைய வெச்சா, ராசய்யா என்ற படத்தின் டைட்டிலும் பாடலும் ராசா மயமாக இருந்தது. அவர் இசையமைப்பதாக ஒத்துக் கொண்டால் அவர் படத்தை போஸ்டரில் போட்டு படத்தை விற்றுவிடுவார்கள் அப்படியொரு நிலைமை. இந்த நேரத்தில் அரவிந்த்சாமியின் இந்தக் கிராமிய படத்துக்கு ராஜா இசையமைப்பதாக முடிவானது.அது தாலாட்டு. அதில் கிராமத்தான் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். அந்தப் படத்தின் பூஜைக்கு ராஜா வந்தார்.

ராஜா அந்தப் பக்கம் வருகிறார் என்றாலே எதிரில் வருகிறவர்கள் சுவர் ஓரமாக ஒட்டிக் கொண்டு நிற்பார்கள். இளையராஜா வந்து கொண்டிருந்தார். அரவிந்த்சாமியிடம் அப்படி எந்தப் பதட்டமும் இல்லை. அவர் பாட்டுக்குச் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். ராஜா நெருங்க நெருங்க சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது. சம்பந்தபட்ட இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பூஜையை முடித்துக் கொண்டு ராஜா போனார். அரவிந்த்சாமி இன்னொரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு காரில் புறப்பட்டார். கூல்.

இன்னொரு சம்பவம்.

"மெட்டி ஒலி' தொடரில் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக நடித்தவர்தான் அர்விந்த்சாமியின் அப்பா என்ற தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. குங்குமத்தில் பணியாற்றிய அய்யனார் ராஜனிடம் அவரிடம் ஒரு பேட்டி எடுக்கச் சொன்னேன். அவரும் தம் மகனைப் பற்றி அப் பேட்டியில் சொல்லியிருந்தார். 73}ல் அவரை வேறொருவருக்குத் தத்து கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அய்யனார் ராஜன் தொடர்ந்து அர்விந்த்சாமியிடம் பேசினார். உங்கள் தந்தையார் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.. நீங்கள்

அவரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

அரவிந்த்சாமி அமைதியாகச் சொன்னார்: "என்னுடைய அப்பா 73-லேயே இறந்து போயிட்டாரே....''

உச்சரிப்பு கூலாகத்தான் இருந்தது. மனதின் வலி அப்படி தெரியவில்லை.

வில்லன் விவேக்

கொஞ்சம் எம்.ஆர்.ராதா, கொஞ்சம் என்.எஸ்.கே. இரண்டும் கலந்த கலவை. நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். தனக்கான காட்சிகள் வசனங்கள் போன்றவற்றில் அதீத கவனம் எடுத்துக் கொள்பவர். படத்தில் மட்டுமல்ல, பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும்போதும் அதே அளவு கவனமாக இருப்பார். விவேக் எனக்கு வில்லனாகிப் போன ஒரு சம்பவம் இது.

சிவாஜியை இமிட்டேட் செய்து நடிப்பது பற்றி நிருபர் ஒருவர் விவேக்கிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் சிவாஜியை வைத்து பெருமை தேடிக் கொள்கிற விஷயம் அது என்று சொன்னார். எழுதிய நிருபர் என்னால் "சிவாஜிக்குப் பெருமை' - விவேக் அதிரடி பேட்டி!.. என்று எழுதிவிட்டார். வார இதழின் அட்டை மற்றும் டி.வி. விளம்பரத்திலும் அதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார்கள். "சிவாஜியால் எனக்குக் கிடைத்த பெருமை' என்ற விஷயம் "என்னால் சிவாஜிக்குப் பெருமை' என்று வந்து கொண்டிருப்பதைப் பார்த்து வெகுண்டெழுந்தார் விவேக். எவ்வளவு சொல்லியும் விளம்பரம் நின்றபாடில்லை.

சிவாஜிக்குப் பதில் சொல்வதா? வீட்டுக்கு வரும் கண்டன போன்களுக்குப் பதில் சொல்வதா என்று தவித்துப் போனார். அதன் பிறகு அந்த இதழுக்கு மட்டும் பேட்டி கொடுக்கவே மாட்டேன் என்று கடும் கோபத்தில் இருந்த அவரை, நான் அந்த இதழுக்குப் பொறுப்பேற்றதும் சமாதானக் கொடியோடு சந்தித்தேன். அவரை ஒரு தொடர் எழுத வைக்கச் சம்மதிக்க வைத்தேன். வாரம் ஒரு வி.ஐ.பி. பற்றி எழுதுவதாக பேச்சு. அவர் சொல்ல, சொல்ல எழுதிக் கொண்டு வந்து அதை அவர் சொல்வதுபோலவே எழுதி, அச்சுக்குச் செல்வதற்கு முன் அதை ஒருமுறை அவரிடம் காட்டி ஒப்புதல் வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார். எல்லாவற்றுக்கும் சம்மதித்து அந்தத் தொடர் வெளியானது. எட்டாவது வாரம் மீண்டும் பிரச்சினை. அச்சுக்குப் போவதற்கு முன்னர் அவர் படித்துத் தருவாரே அந்தப் பிரதி வருவதற்கு முன்னரே அச்சுக்குப் போனது. அந்த வார இதழ் வந்ததும் ""சாரி தமிழ்.. நான் எதிர்பார்த்தது நடந்துடுச்சு. இந்த வாரத்தோட நிறுத்திக்குவோம்'' என்றார்.

அதன் பிறகு அந்தத் தொடர் தொடரப்படவில்லை. எவ்வளவு மன்னிப்புகளுக்குப் பின்னரும். எந்த மொழியிலுமே அவருக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

திங்கள், ஜனவரி 19, 2009

புத்தக விமர்சனம்

ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்
புத்தகத்தின் பெயர் : ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்
விலை : ரூ.60
எழுத்தாளர் : தமிழ்மகன்
பதிப்பகம் : முற்றம்
17/9, சாமி ஆச்சாரி தெரு,
புதுப்பாக்கம், ராயப்பேட்டை, சென்னை-14.




தமிழ்மகனின் 'ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்' நாவல் சினிமா உலகத்தை கழுகுக் கோணத்தில்(Eagle's eye view) பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் தமிழ்மகன். சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்', ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு', சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை', ஜெயமோகனின் 'கன்யாகுமரி' போன்ற முக்கிய நாவல்கள் வரிசையில் தமிழ்மகனின் 'ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவதுதளம்' நிச்சயம் இடம்பெறும்.


கவிஞர் நா.முத்துக்குமார்

http://tamilcinema.com/general/books/AVMStudio.asp

வியாழன், ஜனவரி 15, 2009

தினமணி கதிரில் என் சிறுகதை

மணமகள்

பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.
எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.
நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.
உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.
அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.
யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.
பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.
விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.
ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.
"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.
"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.
அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.
கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.

வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'
இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.
"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.
ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.
முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.
அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.
"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.
"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார். பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.
கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.
யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.
மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.

திரைக்குப் பின்னே -15

காமெடி... கீமெடி..!

‘என் ராசாவின் மனசிலே' படத்திலேயே தன் தனித்துவமான மதுரைத்தனங்களோடு பெயரெடுத்தவர் வடிவேலு. நண்பர் புவி. உமாசந்திரன் இணைத் தயாரிப்பாளராக இருந்த 'ஒருவழிப் பாதை’ படத்திலேயே அவரை நடிக்க வைத்தார். சொல்லப் போனால் வடிவேலு ஆரம்பத்தில் மிகவும் வயதானவராக இருந்து மெல்ல, மெல்ல இளைஞரானதுபோல இருக்கிறது. தோற்றத்தில் அந்த மாற்றம்.

நான் அவரை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரியேஷன் நிறுவனத்தில் முதன் முதலாகச் சந்தித்தேன். வடக்கு உஸ்மான் சாலையில் அந்த அலுவலகத்துக்குச் செல்லும் படியில் அவர் நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வாரம் வெளியாகியிருந்த ‘தேவர் மகனி'ல் அவர் நடிப்பு பிரமாதம் என்று சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார். அண்ணே ரொம்ப சந்தோஷம்ணே... நம்மளப் பத்தி ஏதாச்சும் செய்தி போடுங்கண்ணே..'' என்று ஆசையாகக் கேட்டார். "உங்கள் புகைப்படம் ஒன்று தாருங்கள்'' என்றேன். "அதாண்ணே கையில இல்ல... நீங்க... இதோ இங்கிட்டு நேரா போனீங்கன்னா... ஒரு ஸ்டுடியோ வரும். எம் பேரைச் சொல்லி ஒரு போட்டோ வாங்கிக்கங்க... நீங்க காசு எதுவும் கொடுக்க வேணாம்'' என்று ரெட் சன் அலுவலகத்துக்கு எதிரில் இருந்த தெருவைக் காட்டினார். அவர் சொன்ன இடத்தில் ஒரு போட்டோ ஸ்டுடியோ இருந்தது. நான் இவர் பெயரைச் சொல்லி போட்டோ கேட்டேன். "என்ன சைஸ்'' என்றார். "ஃபைவ் பை செவன் போதும்'' என்றேன். "இருபது ரூபாய் ஆகும்" என்றார். என்னிடத்தில் அப்போது காசு இல்லை. அதுவும் இல்லாமல் வடிவேலுதான் சொன்னார் என்று நான் சொன்னதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வேண்டுமானால் அவரை வந்து சொல்லச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். ‘தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசனோடு அவர் இருந்த படத்தையே வெட்டி எடுத்து வண்ணத்திரையில் பயன்படுத்தினேன். ‘மகராசன்' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தபோது "பார்த்தேண்ணே... ரொம்ப சந்தோஷம்'' என்று நெகிழ்ந்தார்.

அந்தக் கிராமத்து மனசு அவருக்கு இப்போதும் இருப்பதால்தான் அவர் தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டிய வண்ணம் இருக்கிறார். ‘அன்பு' என்ற படத்தின் படப்பிடிப்பு. ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களில் சிலர் அவரை நெருங்கி, ”விவேக் காமெடியைவிட உங்க காமெடிதாண்ணே சூப்பர். டி.வி.யைக் கிண்டல் பண்றது. போலீஸ் கான்ஸ்டபிளை வைத்துக் கிண்டல் பண்றதெல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காதுண்ணே'' என்றனர். வடிவேலு பூரித்துப் போவார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர், "விவேக்கை அப்படிச் சொல்லாதீங்கண்ணே... அவனைப் போல வருமா... ரசனைக்காரண்ணே அவன்... பெரிய ரசனைக்காரன்'' என்றார் வடிவேலு.

நகைச்சுவை நடிகராக மிக உச்சத்துக்கு வந்த பின்னும் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார் என்று வியப்பாக இருந்தது.
இந்த விஷயத்தில் அவரை வைத்து காமெடி, கீமெடி பண்ணிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.

பானுப்ரியம்!

தினமணி அலுவலகத்துக்கு பானுப்ரியா வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது.
அவருடைய பத்திரிகை தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் பேசினார். "மேடம் பேசணும்னு சொன்னாங்க'' என்றார். ரிஸீவர் பானுப்ரியாவின் கைக்கு மாறுகிறது.

"வணக்கம் சார்... இந்த வருஷம் வந்த தீபாவளி மலர் எனக்கு ஒண்ணு கிடைக்குமா? அதில சிவாஜி சார் என்னைப் பத்தி சொல்லியிருக்கறதா சொன்னாங்க. எனக்கு இங்க எங்கயும் பத்திரிகை கிடைக்கல'' என்றார்.

"கொடுத்தனுப்புகிறேன்'' என்றேன்.

"என்னைப் பத்தி என்ன சொன்னார்னு சொல்ல முடியுமா?'' என்றார்.

"இப்போது நடிக்கும் நடிகையரில் திறமையான நடிகையாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள் என்று கேட்டோம். அவர் உங்களைச் சொன்னார்'' என்றேன்.

"அது சரி. என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?'' என்றார் ஆர்வமாக.

"புத்தகமே அனுப்புகிறேன்'' என்றேன் மறுபடியும்.

"அனுப்புங்கள். என்ன சொன்னார் என்று சொல்லுங்கள்'' மீண்டும் ஆர்வம்.

"விஸ்வாமித்ரா' படத்தில் நீங்கள் அவருடன் நடித்தபோது உங்கள் நடிப்பை மிகவும் வியந்ததாகச் சொல்லியிருக்கிறார்'' என்றேன்.

ஆனால் அது அவருக்கு முக்கியமில்லை. அவர் வார்த்தையால் என்ன சொன்னார் என்று மீண்டும் கேட்டார்.

விஸ்வாமித்திரர் வாயால்(?) பிரம்மரிஷி பட்டம் வாங்குகிற தவிப்பு.

நான் தீபாவளி மலரை எடுத்து அந்தப் பகுதியை அப்படியே வாசித்துக் காண்பித்தேன். அவருக்குச் சந்தோஷம் தாளவில்லை.
அப்போது இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது.

நண்பர் ஒருவர் அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற போது கேள்விக்குத் தான் சொன்ன பதிலை திரும்பச் சொல்லுமாறு கேட்டிருக்கிறார். அது அப் படத்தில் அவர் பேசிய வசனம் பற்றியது. அவர் சொன்னதைக் குறிப்பெடுத்து வைத்திருந்த நிருபர் தோராயமாக அதைத் திருப்பிச் சொல்லியிருக்கிறார். பானுப்ரியா அவருக்குப் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார். "இப்போதுதான் சொன்ன ஒன்றையே ஒழுங்காகக் குறிப்பெடுக்காத நீங்கள், இந்தப் பேட்டியை எப்படியெல்லாம் திரித்து எழுதுவீர்களோ.. மன்னிக்கவும்'' என்று சொல்லிவிட்டார். சிவாஜி என்ன சொன்னார் என்பதில் அவர் எடுத்துக் கொண்ட பிரியம் சரிதானே?

கவுண்டமணி... செந்தில்!


கவுண்டமணி - செந்தில் காமெடி சினிமாவுக்கு மிகவும் தொன்மையான பாணி. லாரல்- ஹார்டி, டாம் அண்ட் ஜெர்ரி டைப். வலுத்தவர் இளைத்தவர்... ஒருவருக்கு விஷயம் தெரிந்தவர் என்ற அடையாளம்.. இன்னொருவருக்கு அப்பாவித் தோற்றம். இந்த இருவருக்கும் ஓயாமல் அடிநாதமாக ஒரு விரோதம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இருவரும் பிரிவதே இல்லை.
செந்திலை கவுண்டமணி எல்லை மீறிப் பேசுகிறார் என்றுகூட பத்திரிகையில் எழுதினார்கள். கவுண்டமணி கண்டு கொள்வதாக இல்லை. அவர் சுமார் நூறு படங்களுக்கு மேல் செந்திலை விதம்விதமாகத் திட்டித் தீர்த்தார். செந்திலும் அவரை எடக்கு மடக்காக மாட்டிவிட்டுக் கொண்டிருந்தார். மக்களும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எட்டி உதைப்பதும், பன்றி, ஆமைத் தலையன், சொறி நாய் என்றெல்லாம் செந்திலை விளிக்க ஆரம்பித்தார். பத்திரிகை கண்டிப்பது இருக்கட்டும். செந்தில் வீட்டில் இதைத் தடுக்க முனைய மாட்டார்களா? இப்படியெல்லாம் நடிக்காமல் இவர் தவிர்க்கலாமே என்றும் தோன்றியது.
‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' படத்தின் படப்பிடிப்பில் நானும் இன்னொரு பத்திரிகையாளரும் தைரியமாக கவுண்டமணியிடம் இதைப் புகாராகவே சொன்னோம்.

"அவரை ஏன் அப்படியெல்லாம் திட்டுகிறீர்கள்?''
சற்று தூரத்தில் நாற்காலியிலேயே உட்கார்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்த செந்திலைக் காட்டி கவுண்டமணி சொன்னார்: "இவனைப் பாருங்க. இவன் தலையைப் பாருங்க. நான் சொல்றது சரியா... தப்பா? நீங்களே சொல்லுங்க '' என்றார் சலிப்புடன். கவுண்டமணி ஏற்கெனவே செந்திலைப் பற்றி ஏற்படுத்தி வைத்திருந்த சித்திரத்தின் காரணமாகவோ, செந்தில் அப்படி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சாய்ந்திருந்த நிலையைப் பார்த்தோ எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

"சிரிப்பு வருதில்ல... போய்ட்டு வாங்க'' அனுப்பிவிட்டார்.

செந்திலை அவர் சினிமாவில் மட்டும் கிண்டல் செய்யவில்லை, நிஜத்திலும்தான். அவரும் அதை ஏற்றுக் கொண்டுதான் அண்ணே... அண்ணே என்று அவரிடம் பழகிக் கொண்டிருந்தார்.

எப்படி சுயமரியாதை பற்றி யோசிக்காமலேயே அவரால் இருக்கமுடிகிறது என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

புதன், ஜனவரி 07, 2009

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

ஆனந்த விகடனில் என் சிறுகதை

நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால் அதன் பிறகு அவரை நான் பார்க்கவில்லை. தொடர் வண்டியின் எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும் போதும் அதிக மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் போல என் வயதுக்குமான முகமாக இருக்கிறது மஞ்சு அக்காவின் முகம். அந்த முகத்துக்கு மட்டும் முதிர்ச்சியே இல்லை. பளிச்சென்று துறு துறு முகம் அது. அந்தக் கண்களும் உதடுகளும் இன்றும் பிரகாசமாகவே இருக்கின்றன. தேவைப்பட்ட போதெல்லாம் மனதின் ஆழத்தில் இருந்து மிதந்து மிதந்து மேற்பரப்புக்கு வந்து பரவசமூட்டுவதாக அது இருக்கிறது.

சொல்லப் போனால் அக்கா என்று அவரை நான் அழைப்பது அத்தனை சரியில்லை. அது அந்த உறவின் பெயரைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கும்.

நான் மீன் வரைவதற்குக் கைபிடித்துச் சொல்லித் தந்தவர் மஞ்சுளா அக்காதான். அவர் மிகச் சுலபமாக மீன்களை வரைந்தார். பென்சிலை இப்படியும் அப்படியும் சுழற்றினால் அது மீனாக மாறிவிடுவதாக நான் ஆச்சர்யப்பட்டேன். அவர் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். புதிதாகத் திருமணமாகி நாங்கள் இருந்த வீட்டுக்குக் குடிவந்திருந்த மஞ்சு அக்காவுக்குக் குழந்தைகள் இல்லாததால் எனக்கு அவர்கள் வீட்டில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. சுரேஷ் அங்கிள் எனக்காக என்றே கேக்கும் சாக்லெட்டும் வாங்கி வர ஆரம்பித்திருந்தார். நான்காம் வகுப்பு படித்தபோது எனக்கு வேறென்ன தேவை இருக்க முடியும்? சாப்பிட சாக்லெட், ஹோம் ஒர்க் செய்ய ஒரு ஆள்.

சுரேஷ் அங்கிள் என்னை "மயங்குகிறாள் ஒரு மாது' என்ற படத்துக்கு அழைத்துச் சென்றார். அது என் வயதின் ருசிக்கு ஏற்ற படம் அல்ல. அதில் கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து தத்தளிக்கிற படம். மனைவி வேறொருவனுடன் பழகியதைத் தெரிந்து கணவன் அவனைச் சந்தேகிப்பதுகூட ஓரளவுக்குப் புரிந்தது; ஆனால் அதற்காகக் கணவனும் மனைவியும் ஏன் அவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பதுதான் அப்போது புரியாததாக இருந்தது.

""படம் பிடிச்சிருக்கா?'' ரிக்ஷாவில் வீடு திரும்பும்போது சுரேஷ் அங்கிள் கேட்டார்.

செலவு செய்து அழைத்துச் சென்றவரின் மனம் நோகக்கூடாது என்பது போன்ற ஒரு காரணத்தால் பிடித்திருக்கிறது என்று சொன்னேன்.
கொஞ்ச நேரம் சைக்கிள் ரிக்ஷாவின் செயின் சுழலும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவர் ""சந்தேகம் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டா வீடு அவ்வளவுதான்'' என்றார்.

ஒரு அதிகாலைப் பொழுதில் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து "மஞ்சுவைக் காணலை'' என்றார். வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர் எப்படிக் காணாமல் போய்விட முடியும் என்று குழம்பிப் போய் நான் பதறினேன்.

"நைட் எனக்கும் அவளுக்கும் சண்டை... அடிச்சுட்டேன். ராத்திரி முழுக்க தூங்காம உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா. மூணு மணிக்குக் கொஞ்சம் அசந்துட்டேன். நாலு மணிக்குப் பார்க்கிறேன்... காணோம்'' என்றார்.

அதன் பிறகு என்னை அவர்கள் அங்கே இருக்க அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்கள் தனியாகப் பேசிக் கொண்டிருந்த அடுத்த சில மணி நேரத்தில் அந்த வீட்டின் குடித்தனக்காரர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் விஷயமாக இருந்தது. வீட்டின் எதிரில் இருந்த லாண்டரி கடை, பக்கத்தில் இருந்த தையல் கடை எல்லாவற்றிலும் அந்தப் பேச்சு ஓடியது.

மஞ்சு அக்கா இதே வீட்டில் இருக்கும் மனோகரிடம் தொடர்பு வைத்திருந்ததால்தான் அந்தச் சண்டை என்று அப்போது காதில் வாங்கிக் கொண்டு அடுத்த பத்தாண்டுகளில் அந்த விவகாரத்தைப் புரிந்து கொண்டேன்.
வீட்டை விட்டுப் போன மஞ்சு அக்கா கங்காதீஸ்வரர் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடக்க யாரோ காப்பாற்றி வீடு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அடுத்த சில நாட்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போய் குடியேறினார்கள். எங்கள் தெரு வாய்களுக்கும் சில நாள்களில் மெல்லுவதற்கு வேறு அவல் கிடைத்தது. அக்கா திடீரென்று ஊரைவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பெரிய வருத்தமாக இருந்தது. அக்காவைப் பற்றி யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும் எனக்குக் கண்களில் நீர் துளிர்ப்பது வழக்கமாக இருந்தது. சமயத்தில் அவர்கள் அக்காவைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நான் ஒரு மெüன சாட்சியாக அழுது கொண்டிருந்தேன்.

மஞ்சு அக்காவின் முதல் முகம் இதுதான்.

நான் கல்லூரிக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த வேளை. வேறு ஒரு புரிதலில் நான் அவரைப் புரிந்து கொண்டது அப்போதுதான். நான்கைந்து குடித்தனக்காரப் பெண்கள் உள்ளறையில் உட்கார்ந்து கதையளந்து கொண்டிருந்தார்கள். விஷயம் மஞ்சுவைப் பற்றி.
இ} மெயில், இண்டெர் நெட், செல் போன் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இத்தகைய விஷயங்கள் எப்படி விநியோகமாகின என்பது இப்போது நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

"அவன் அப்பவே செத்துப் போயீ... இவ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணக்கிட்டுப் போயிட்டாளாம்'' இதுதான் சட்டென ஈர்த்தது.
அவர்களின் பேச்சில் அடுத்த அரை மணி நேரத்தில் என்னால் கிரகிக்க முடிந்தது இதுதான்... இங்கிருந்து சென்ற மூன்றாம் ஆண்டிலேயே அதிக குடிப் பழக்கம் காரணமாக சுரேஷ் இறந்துவிட்டார் என்பதும் அடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சு அக்கா வேறு யாரையோ கல்யாணம் செய்து கொண்டதாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் அப்போதுதான் மனத் தடாகத்தில் மிதக்கத் தொடங்கியது.

அன்றொரு நாள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் ஓடிப் போய் மஞ்சு அக்காவின் மடியில் விழுந்தேன். மஞ்சு அக்கா தன் வீட்டு வாசப்படியை ஒட்டி உட்கார்ந்திருந்தார். நான் இப்படி வந்து விழுவேன் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பதறிப்போனார். அக்கம் பக்கத்துப் பெண்கள் எல்லாம் அதைவிட பதறினார்கள். ""ஐயோ... ஐயோ'' என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு என்னை அவர் எழுந்து செல்ல விடவில்லை. ""நீயும் அக்காகூடவே குளிச்சுட்டு வந்து வேற ட்ரஸ் போட்டுக்க'' என்றார்கள். நான் யாருடன் குளிக்க வேண்டும் என்று குடித்தனக்காரப் பெண்கள் முடிவு செய்தது அநீதியாக இருந்தது. அம்மாவும் நான்கு குடித்தனத்துக்கும் பொதுவாக இருந்த குளியல் அறையில் எனக்கான வேறு ட்ரஸ்ûஸ கொண்டு போய் வைத்துவிட்டு வந்தார்கள்.

மஞ்சு அக்கா தன் கைகள் ஆரம்பிக்கும் இடம் வரைக்கும் பாவாடையை இழுத்துக் கட்டிக் கொண்டு என் பள்ளிக் கூட ஆடைகளைக் கழற்றிக் குளிப்பாட்டினார். எனக்கு அழுகை பீறிட்டது. கதறி அழுதேன். ""இப்ப ஏன் அழறே?... நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?'' என்று கன்னத்தைக் கிள்ளினார். குளியல் என்ற பெயரில் இரண்டு சொம்பு தண்ணீரைத் தலையில் ஊற்றிக் கொண்டு நான் வெளியில் தப்பி ஓடி வந்தேன். மஞ்சு அக்காவே என் டிரஸ்ûஸ துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். ""அக்காவைத் தொட்டுட்டுக் குளிக்காம வந்தா தேள் கொட்டிடும்'' என்றாள் அம்மா.

மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் உண்மையில் கொட்டும் தேளாக இருந்தது. அது என் நினைவின் தகிப்புக்கு ஏற்ற ஜோடியாக இருந்தது. மஞ்சு அக்கா சுகத்துக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் படிமமாக நெஞ்சில் நிலைகுத்தியது. மஞ்சு அக்காவுடன் தொடர்பு படுத்தப்பட்ட மனோகர் என் நினைவுக்கு வந்தார். பருவம் தரும் புதிய பாடமாக இருந்தது எல்லாமும். அவரைப் பற்றி நினைத்துப் பார்க்க நேர்ந்தது சற்று ஏன் என்பது மெல்ல புரிந்தது. அவர் மீது சற்று பொறாமை கொள்ள பழகிக் கொண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. என்னை பிறந்த மேனியாகப் பார்த்த வேற்றுப் பெண் என்றால் அது மஞ்சு அக்கா மட்டும்தான். "நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?' என்ற வாக்கியம் எனக்குப் போதையூட்டும் வாக்கியமானது. மஞ்சு, அக்கா இரண்டும் சேர்ந்து ஒரு பெயர்ச் சொல்லாக மாறிவிட்டது. அது உறவின் பெயராக இல்லை. என் கனவுப் பெண்ணாக, காதலியாக, எண்ணி உருகும் தகிப்பின் வடிகால இருந்தார். அதனால்தான் அந்த உறவைக் கொச்சைப்படுத்துவதாகச் சொன்னேன்.

அதன் பிறகு அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என் மன பிம்பத்தை நிஜத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தவித்தேன். நேரில் சென்று பார்ப்பதற்கு ஒரு புள்ளி அளவு தயக்கம் மட்டுமே இருந்தது. ஆனால் அந்தப் புள்ளியின் வலிமை என்னை கடைசி வரை தடுத்துவிட்டது. நான் பார்க்க முடியாத ஏக்கம் என்னை வாட்டியது. வாடுவது மனதின் வடு போல நீக்கமற இருந்தது. அவரைத் தேடிச் சென்று பார்த்து அந்த வடிவத்தைச் சிதைத்துக் கொள்ள வேண்டியிருக்குமோ எனவும் இருந்தது. இச்சைக்குக் நான் கொடுத்துக் கொண்ட வடிவமாகவும் இருந்தார் மஞ்சு அக்கா.

அவரோடு எனக்கிருந்த மிகச் சில நினைவுகளைத் தூசு தட்டி ஊதிப் பெரிதாக்கி அசைபோட ஆரம்பித்தேன்.
ஒரு நாள் இரவு என்னை மஞ்சு அக்கா வீட்டின் ஓட்டுக் கூரை மீது ஏற்றிவிட்டு பக்கத்துவீட்டு மாமரத்தில் காய்த்துத் தொங்கிய மாம்பழத்தைப் பறிக்க வைத்தது ஞாபகம் வந்தது. அது விசேஷமான மரம். அதன் ஒரு கிளையில் புளிப்புச் சுவை உள்ள மாம்பழமும் இன்னொரு கிளையில் இனிப்புச் சுவையுள்ள மாம்பழமும் காய்த்தது. எங்கள் வீட்டுக் கூரையின் பக்கம் புளிப்புச் சுவைக் கிளை. அது எங்கள் வீட்டு ஓட்டின் மீது ஓய்வாகப் படுத்திருப்பதுபோல இருந்தது. திருடித்தின்றதால் மாற்றான் தோட்டத்து மாம்பழம் எங்களுக்கு அது இனிப்பாகவே தெரிந்தது.

"மயங்குகிறாள் ஒரு மாது' படம் மீண்டும் திரையிட்டால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்தப் படம் மீண்டும் எங்கும் திரையிட்டதாகத் தெரியவில்லை. மஞ்சு அக்கா என்றதும் மஞ்சள் நிறத்தில் சிறிய சிறிய பூ போட்ட புடவை அணிந்து அவர் குறு குறுவென பார்க்கிற பார்வை ஞாபகத்துக்கு வருகிறது. அவர் நல்ல உயரம் என்றும் கச்சிதமான உடல் வாகும் சிவந்த மேனியும் உள்ளவர் என்றும் மனச்சித்திரம் பதிந்திருந்தது.

என் இரண்டு குழந்தைகள் வளர்ந்து நிற்கும் இந்த வயதில் மஞ்சு அக்கா நினைவின் ஆழத்தில் நிறம் மங்கி, சாயம் இழந்த மயில் தோகைபோல இருந்தார். எங்கள் குடும்பமும் குடித்தன வீடுகளுக்கு நடுவே புழங்கும் நிலை மாறிவிட்டது.

ஓட்டலுக்குக் காய்கறி சப்ளை செய்யும் அவருடைய கணவர் நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டதாகவும் ஒரே ஒரு பையன் இருப்பதாகவும் அவனைப் படித்து ஆளாக்க ரைஸ் மில்லில் உமி அள்ளும் வேலை செய்துவருவதாகச் சொன்னார்கள். இந்தமுறை எங்கள் வீட்டுடெலி போனுக்குத்தான் தகவல் வந்தது. பிறந்த வீட்டு உறவும் அறுந்து புகுந்த வீட்டு உறவும் பொருந்தாமல் மஞ்சு அக்கா நிராதரவாகிப் போனதாகப் புரிந்து கொண்டேன். ஏனென்றால் தகவல் தந்தவர்கள் ""அவன் எவன்கூடவோ ஓடிப்போய் உருப்படாமப் போயிட்டாளாம்'' என்பதாகத்தான் சொன்னார்கள். உண்மையில் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு வசதியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள். புரிந்து கொள்கிறவர்களும் அவரவர் வசதிக்கு ஏற்பத்தான் புரிந்து கொள்கிறார்கள். மொழியின் சூட்சுமம் அது.
தொடருமா எனச் சந்தேகித்த எத்தனையோ மனிதத் தொடர்புகள் இப்படியாகத் தொட்டுத் தொடர்ந்து கொண்டிருப்பதில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மஞ்சு அக்காவின் ஞாபகத்தடங்கள் எனக்குள் அழுந்தப் பதிந்து ஒற்றையடி பாதையாக ஓடிக் கொண்டிருப்பதால்தான் அந்தத் தொடர்பு காப்பாற்றப்பட்டு வருகிறது. ஞாபகச் சங்கிலிகளின் கண்ணிகள்.

என் மகளின் திருமணத்துக்காக பட்டுப்புடவை எடுக்கக் காஞ்சிபுரம் போயிருந்தபோது நடுவே குளிர் பானத்துக்காகக் காரை நிறுத்தினோம்.

"ஏம்பா மொத்தம் ஏழு நாளு... '' என்று அந்தப் பெண்மணி முறையிட்டுக் கொண்டிருந்தாள்.

"கெழ்வி சும்மா இருக்க மாட்டே... நாலு நாளுதான் கணக்கு வருது... செவ்வா ஒண்ணு, புதன் ரெண்டு, வியாயன் மூணு, வெள்ளி நாலு...''

"இல்ல கண்ணு... சனிக்கிழமலேர்ந்துப்பா''

எனக்குப் பகீரென்றது. அது மஞ்சு அக்காதான். புகையிலைப் போட்டு காவி ஏறிய பற்கள்... முகத்துச் சுருக்கம் உலர்ந்து போன உதடுகள், குங்குமம் தடம் மறைந்து போன நெற்றி, கணுக்காலுக்கு மேலே சுருங்கி தூக்கிக் கிடந்த எட்டுகஜம் புடவை. மஞ்சு அக்காவின் மூன்றாவது முகம். மனச்சித்திரம் நொறுங்கிய கணத்தில் நான் நிர்கதியாக நின்றேன்.

"மஞ்சு அக்கா?''

அவரை யாரும் அப்படி அழைத்திருக்க வாய்ப்பில்லை. கண்களை இடுக்கி நெருங்கி வந்து பார்த்தாள். கிழவிக்கு எல்லாமே சொல்ல சொல்ல நிதானமாக ஞாபகத்துக்கு வந்தன. ஆனால் அந்த ஞாபகங்கள் அவளுக்குச் சுவையூட்டுவதாகவோ, பெருமிதமானதாகவோ இருந்ததாகத் தெரியவில்லை. என் அம்மாவின் பெயரைச் சொன்னபோது சற்றே நினைவு துளிர்த்து ""உம் பேரென்ன மறந்தே போயிட்டேனே'' என்றார்.

அது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஏதாவது ஒரு கட்டத்தில் மாங்காய் திருடியதையோ, குளிப்பாட்டியதையோ சொல்லுவாள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. என் தடயம் சற்றும் அவரிடத்தில் இல்லை. தன் மகன் வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பதாகவும் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதாகவும் சொன்னாள். அது மகனின் புரிதலையும் மருமகளின் மனதையும் பொறுத்தது. ஒரு பெண் தன் அறுபதைக் கடந்த வயதில் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதின் சுமை அழுத்தியது.
புடவை எடுக்க வந்தவர்கள் அவசரப்பட்டார்கள். அவளிடம் என் ஒரு முகம்கூட இல்லை என்ற வலியை ஏற்றுக் கொள்ள முடியாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். முற்றிலும் வேறு சுவையுடைய வேறு கிளை.







tamilmagan2000@gmail.com

ஞாயிறு, ஜனவரி 04, 2009

புதிதாக வெளியான என் சிறுகதை தொகுதி

புதிதாக வெளியான என் சிறுகதை தொகுதி




எட்டாயிரம் தலைமுறை
சிறுகதைகள்
நியூ செஞ்சிரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை- 98.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: 91-44-26251968, 91-44- 26359906.
ரூ.65

LinkWithin

Blog Widget by LinkWithin