சனி, ஏப்ரல் 19, 2008

சிறுகதை கன்று

தமிழ்மகன்
ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸýம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.

அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண பார்வையில் எனக்குச் சிறுமியாக இருப்பதுதான் சரி என தோன்றினாள். மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் இருந்தது. பிச்சைக்காரியாக இருந்தாலும் வலிந்து பரிதாபத்தைக் கண்ணில் தேக்கி வைத்துக் கொண்டு அழுக்காக இருக்க வேண்டும் என்று விரும்பாதவளாக இருந்தாள். சாப்பிடுவதற்கு நிறைய பேர் காத்திருந்தார்கள். ஒரு சில ஓட்டலுக்கு இப்படி ஒரு ராசி. க்யூவில் நின்று காத்திருந்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடுவதற்காகக் காத்திருக்கும் தருணத்தில் இப்படியான ஓர் ஆர்வமூட்டும் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பது மற்றெல்லாவற்றையும்விட சுலபமான திசைதிருப்பலாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு வெளியேறுபவர்களில் ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அதிகம் கெஞ்சாத தொனியில் அவள் "சார் சார்'' என்றாள். பெரும்பாலும் அதற்குப் பலன் இருந்தது. ஏதோ டைம் கேட்பதற்காகக் கூப்பிடுகிறாள் என்று திரும்பி பின் சுதாரித்து அவர்கள் பிச்சை போடுவது தெரிகிறது. தட்டில் விழும் காசுகளை அவள் உடனடியாக பர்ஸில் எடுத்துப் போட்டுக் கொண்டாள். ஏதோ மீன்காரியும் காய் கறி விற்பவளும் காசை வாங்கி சுருக்குப் பையில் போட்டுக் கொள்வது போல ஒருவித வியாபார மிடுக்கு அதில் தெரிந்தது. பிச்சை எடுப்பதை அவள் ஒரு தொழில் போல நினைத்திருக்கக் கூடும். இடுப்பில் கையூன்றி அவள் ஒய்யாரமாக நிற்பது அவளுக்கு இது கேவலமான தொழில் என்பது போன்ற உலக நியாயங்கள் தெரியாது என்பதை உணர்த்தியது. இன்று புதிதாய் பிச்சைக்காரி ஆனவளோ? என்னைப் போலவே எல்லோரும் அவளிடம் இயல்பு தவறிய ஈர்ப்பு இருப்பதைக் கவனித்தனர். ஆனால் என்னைப் போல இப்படி நேரம் எடுத்து கவனிக்கவில்லை.

அவளுடைய மலர்ந்த விழிகளாலோ, கூரிய நாசியோலோ நான் மேலும் ஈர்க்கப்பட்டதோடு, இரந்து பிழைக்கக் கூடிய தன்மை இவளிடம் இல்லையே எப்படி இந்த பூமியில் அவளால் தொடர்ந்து பிச்சை எடுத்துப் பிழைக்க முடியும் என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. மாற்று யோசனையாக இவளுக்கு என்ன வேலையைக் கொடுத்தால் இவளுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் "சார் 3}வது டேபிள் காலி'' என்ற குரல் கேட்டது. உட்கார வைத்து விடுகிறார்களே தவிர சாப்பாடு வடிக்கவில்லை, அப்பளம் ரெடியாகவில்லை என்ற தாமதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

சாப்பிட உட்கார்ந்த ஐந்து நிமிடத்தில் சர்வருக்கும் சாப்பிட வந்தவருக்கும் சண்டை வராத டேபிள்கள் எத்தனை எண்ணிக் கொண்டிருந்தேன்.

ரேஷன் கடை ஊழல், பெனிபிட் பண்டு மோசடி, போன ஆண்டு கட்டிய பாலம் இடிந்து 100 பேர் பலி, கன்னா பின்னாவென்று கணக்குக் காட்டும் எலக்ட்ரிசிட்டி மீட்டரை சரிபார்த்துத் தருவதற்கு லஞ்சம், டிரைவிங் லைசென்ûஸக் காட்டிய பிறகும் பைக் சாவியை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஏடாகூடமாக விசாரிக்கும் போலீஸ்... இப்படி கோபப் படவேண்டிய எத்தனையோ இடங்களில் மக்கள் காட்டும் பொறுமைகள் எல்லாம் ஹோட்டல் டேபிள்களில் வந்த பின்புதான் ஆவேசமடைகின்றனபோலும்.

இந்த ஒரு பிறவியை மக்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று கவனிப்பதற்கு ஒதுக்கிவிட்டு அடுத்தப் பிறவியில் இருந்து வாழலாமா என திடீரென நினைத்தேன். ஏதோ ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அடுத்த பிறவி என ஒன்று இல்லாமல் போனாலும் பெரிய பாதகம் இல்லை போலத்தான் தோன்றியது. அந்தப் பெண் போன பிறவியில் இளவரசியாக இருந்திருப்பாளோ? வெறும் சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து என் கை மேலேயே ரசத்தை ஊற்றிவிட்டுப் போனான் சர்வர். சாம்பார் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டோமா என்று திடீரென சுரணை வந்து, அதன் மீதே கொஞ்சம் சாம்பாரையும் ஊற்றச் சொல்லி சாப்பிட்டேன்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு ஒரே வருடத்தில் இரண்டாவது வேலை இது. காலை ஆறுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பினால்தான் பத்துமணிக்காவது ஆபிஸýக்குப் போகமுடியும் என்ற இடைவெளி. அப்புறம் அம்மா தந்த சாப்பாடாக இருந்தாலும் மத்தியானத்தில் சாப்பிடவா முடியும்?

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பக்கத்துக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி புகைப்பதில் இருக்கும் ஈடுபாடும் இன்பமும் எனக்குச் சாப்பாட்டில் இருந்ததில்லை. சாப்பிட்ட பிறகு ஒரு தம் போடலாம் என்பதற்காகச் சாப்பிடுகிறேன். எழுந்தால் ஒரு தம் அடிக்கலாம் என்பதற்காகவே காலையில் நான் கண் விழிக்கிறேன். இனி சிகரெட் கடையெல்லாம் மூடியிருப்பார்கள் என்பதற்காகவே இரவு படுக்கப் போகிறேன். சொல்லப் போனால் சிகரெட் புகைப்பதற்காகச் சம்பாதிப்பதாகவே ஆகிவிட்டது.

சற்று தொலைவில் அந்தச் சிறுமி. வெய்யிலுக்காக கண்களை இடுக்கிக் கொண்டு நிற்பதிலும் உலகப் பரபரப்பில் இருந்து ஒதுங்கி நிற்கிற நிதானமும் அலட்சியமும் என்னை மீண்டும் ஈர்த்தது. நாம் வெளியே வந்த போது எங்கே போயிருந்தாள்? இவளைப் படிக்க வைத்தால் மிகச் சிறந்த விஞ்ஞானியாகவோ, விளையாட்டு வீராங்கனையாகவோ வந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாள். அவள் மீது நம்பிக்கையோ, இரக்கமோ தோன்றியது.

சாப்பிட்ட களைப்பு நீங்குவதற்காக அருகே இருந்த பெட்டிகடையில் அவரவர் ரசனைக்கேற்ப பீடியோ, சிகரெட்டோ, வெற்றிலையோ போட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் கிளிப்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சஞ்சிகைகளை ஆனவரைக்கும் குனிந்து நெளிந்து படித்தார்கள். படிப்பதில் இவ்வளவு ஆர்வமா எனப் பெருமையாக இருக்கும். பத்திரிகையைக் கையில் கொடுத்தால் அப்படி படிப்பார்களா என்று தெரியவில்லை. காசு கொடுத்து வாங்கி இவர்கள் கையில் திணித்துப் பரீட்சித்துப் பார்க்க எனக்கு வசதியில்லை. இவர்களில் யாருக்குமே அவள் குறித்து அக்கரை ஏற்படாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

சூரியன் ஓட்டலுக்கு நேர் மேலே இருந்தது. எந்தப் பக்கத்திலும் நிழலே இல்லை. ஓட்டலின் சுவரில் நிழலாலேயே பெயிண்ட் அடித்த மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தது. இப்படியான தருணத்தில் ஆல்பெர் காம்யூவின் அந்நியன் கதையில் வருவது போல சுட்டுவிட முடியுமா நம்மால் என்று இருந்தது. யோசனை வேறு பக்கம் திரும்பியது. துப்பாக்கியை ஒருமுறை தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பமாவது கிட்டுமா? துப்பாக்கி இல்லாவிட்டால் போகிறது. உருட்டுக்கட்டையை எடுத்து ஒருத்தன் நடுமண்டையில் அடிக்க முடியுமா?...

அந்தச் சிறுமியை மீண்டும் பார்த்தேன். அவள் நடைபாதை மேடையில் அமர்ந்து காலை சாலையில் தொங்கவிட்டபடி வெயிலில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த சிறிய மணிபர்ûஸத் திறந்தாள். அதன் உட்புறத் திறப்பில் சிறிய கண்ணாடி. அதில் அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உலர்ந்து போன சிக்கடைந்த சிகையை விரல்களால் பின்பக்கம் தள்ளிவிட்டாள். பின்னர் முன் நெற்றியில் சிறிய முடிக் கற்றையை விரல்களால் சுருட்டிவிட்டுக் கொண்டாள். அவளுடைய முகம் அவளுக்கு வியப்புக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். தன் மூக்குத்தியைத் திருகி அதில் பொறித்த உருவத்துக்கு ஏற்ப இப்படித்தான் இருக்க வேண்டும் போல நிலைப்படுத்தினாள். மெல்ல தன் நுனி நாக்கால் அக்கண்ணாடியைத் தொட்டாள்.

கண்ணாடியிலிருந்த நாக்கும் அவளுடைய நாக்கைத் தொட்டது. அவள் பூரிப்பான புன்னகையோடு அதை உள்வாங்கிக் கொண்டு அதே வேகத்தில் இதை யாராவது பார்த்துவிட்டார்களா என்று கவனித்தாள். என்னையும் என் கண்கள் அவள் மீது நீண்ட நேரமாய் ஊடுருவி இருந்ததையும் அவள் கணித்தாள். நான் கவனித்துவிட்டேன் என்பது அவளுக்கு அதிர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது. சட்டெனத் திரும்பிக் கொண்டாள். வித்தியாசமாக எதுவும் நடந்துவிடவில்லை என காட்டிக் கொண்டு இயல்பாக பர்ûஸ மூடினாள்.

நான் அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குப் புரிந்துபோனது. ஆனால் நான் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ளாமல் கவனக் குவிப்பு எதுவும் இன்றி சும்மா வெறித்துக் கொண்டிருந்ததாகத்தான் இருக்கும் என அவள் எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது உண்மைதானா என்பதைச் சரிபார்த்துக் கொள்வதில் அவளுக்குத் தவிப்பு இருந்தது. மீண்டும் நான் அவளைக் கவனிக்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்தாள். அதை நான் என்னவென்று விவரிப்பது. மிக நாசூக்கான அவதானிப்பு அது. நான் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அது அவளுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே அவள் அங்கிருந்து எழுந்து ஓட்டலின் மறு முனைக்குப் போய் அனிச்சையாக கையேந்தி நின்றாள். அவள் செய்யக் கூடாத வேலை என்று உறுதியாகிவிட்டது எனக்கு. நாமே அழைத்துச் சென்று வளர்க்கலாமா என்று ஆவேசம் ஏற்பட்டு, பிறகு ஏதாவது அனாதை ஆசரமத்தில் வைத்து படிக்க வைக்கலாம் என்று மாறியது.

அதிகபட்சம் 13 வயசு இருக்கலாம். சரியான ஆகாரம் சாப்பிடாதவளாக உணர்ந்து 14 வயதாகவும் இருக்கலாம் என்று கணித்தேன். போதிய கவனிப்பு இருந்தால் அவளுடைய நிறத்துக்கு இன்னும் அழகாகவே இருப்பாள். யாருடைய இரக்கம் காரணமாகவோ வழங்கப்பட்டிருந்த அந்த பாவாடை- சட்டையும்கூட அவளுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது. அவள் அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்க்கிறாள் என்று தெரிந்தது. கன்றுக்குட்டிக் காதல் என்பார்களே அதற்குச் சற்று முந்தைய உணர்வு என்று சொல்லலாம் அதை. அந்த உணர்வு எனக்கானதா? அவளுக்கானதா? என்பது அவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமில்லை. இருந்தாலும் அதை இருவருக்குமானதாகத்தான் நான் நினைத்தேன். ஒருவரை ஒருவர் கவனிக்கிறோம் என்ற பால் ஈர்ப்பு. வெட்கம் தடவிய உணர்வு. ஒரு பையனாக இருந்தால் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்காது என நினைத்தேன்.

வெயில் உக்கரமாக இருந்தது. கூட்டமும் கடை வாசல் பக்கமாகவே குழுமிவிட்டது. கடையில் தொங்கவிடப்பட்டிருந்த படுதாவும் புகைப்பிடிப்பு வஸ்துகளும் மக்களை இந்தப் பக்கமாக நகர்த்திவிட்டது. அந்தச் சிறுமி இருந்த இடத்தில் யாருமே இல்லை. யாருமில்லாத இடத்தில் அவளால் பிச்சையும் எடுக்க முடியாதே. ஆனால் அவள் இந்தப் பக்கம் வராமல் இருப்பதற்கு நான் இருப்பதுதான் காரணமா என்பதை அறிந்த போது வருத்தமாக இருந்தது.

நான் அவள் கண்ணாடியில் பார்த்து அலங்காரம் செய்து கொள்வதைக் கவனித்து விட்டதற்காக இப்படி நடந்து கொள்கிறாளா? ஒருவேளை நாம் இருக்கும்வரை இந்தப் பக்கம் வரவே மாட்டாளோ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நான் இன்னொரு சிகரெட்டை வாங்கிக் கொளுத்திக் கொண்டேன்.

மனசின் பனிமூட்டம் மெல்ல விலக ஆரம்பித்தது. இவள் அம்பிகா போல அல்லவா இருக்கிறாள் என்று பதறிப் போய் சுதாரித்தேன். அவள் முகத்தை நெருங்கிச் சென்று பார்க்கவோ, அல்லது பட்டை வெயிலில் கருகிக் கொண்டிருக்கும் அவளுக்கு ஓடிப் போய் குடை பிடிக்க வேண்டுமென்றோ தோன்றியது. கிராமத்தில் கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்த போது ஊரில் இருந்த இன்னொரு பாட்டியின் வீட்டுக்கு என்னைப் போலவே விடுமுறைக்காக வந்திருந்தவள்தான் அம்பிகா.இருவருமே ஐந்தாம் வகுப்பு என்பதைத்தவிர எங்களுக்குள் வேறெந்த சிறப்பு ஈர்ப்புகளும் இல்லை. ஆனால் அவள் விடுமுறை முடிவதற்குள்ளாகவே திடீரென்று அவளுடைய ஊருக்குப் புறப்பட்டுவிட்டபோது ஏதோ இருந்தது என்று தெரிந்தது. அவள் போனதும் எனக்கும் அங்கு கொண்டாட எதுவுமில்லாததுபோல் ஆனது. அதன் பிறகு வேறு எந்த கோடைவிடுமுறைக்கும் வராமலே போய்விட்ட அம்பிகாதான் இப்போது ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி போல் என் முன் நிற்பதாக மகிழ்ந்தேன். அவள் இப்படித்தான் பாவாடை சட்டை போட்டிருந்தாள். இடுப்பில் கை வைத்து நிற்பதும் இப்படித்தான்.

நான் அவள் முகத்தைப் பார்த்து அம்பிகா ஜாடைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கு அம்பிகாவின் முகம் அத்தனைத் தெளிவாக நினைவில் இல்லை. பாவாடை, சட்டை, ரிப்பன், நடை} பாவனை என்று மொத்தமான அபிப்ராயமாக அவள் இருந்தாள். நான் சிகரெட் புகையை ஊதுவதற்காகத்தான் அந்தப் பக்கம் திரும்பியதாகச் செயல்பட்டேன். உண்மையில் அவளும் என்னை அடிக்கொருதரம் ரகசியமாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். நான் இருக்கும் பகுதிநோக்கி வருவதில் தயக்கமும் இருந்தது. அவள் அடுத்த முறை பார்த்தபோது அவளுடைய இத்தனை செய்கையையும் உளவாங்கிக் கொண்டதன் அடையாளமாக ஒரு புன்னகையைச் சிந்தினேன்.

அவளுக்கு அது தன்னை நோக்கித்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. திடுக்கிட்டு வேறுயாருக்கானதோ என்று விழித்தாள். என்ன சந்தேகம் இந்தப் புன்னகை உனக்குத்தான் என்பதாக மீண்டும் சிரித்தேன். திகைத்தே போனாள். அது எனக்கு மேலும் சிரிப்பை ஏற்படுத்தியது. தன் மீதான இப்படியொரு கவனத்தை அவள் பெரிதும் விரும்பினாள்போல தெரிந்தது. இதற்கு முன்னால் இப்படியொரு நிகழ்வு அவளுக்கு எற்பட்டிருக்குமா தெரியவில்லை. அது அவளுக்குப் பெருமையாகவும் கூச்சமாகவும் இருந்திருக்க வேண்டும். சில்லறைகள் இல்லாதத் தட்டில் விரலால் கிறுக்கி, எந்த பாதிப்பும் ஏற்படாதவளாகக் காட்டிக் கொண்டாள்.

அவள் இப்போது மேலும் அழகாகத் தெரிய ஆரம்பித்தாள். முகம் பழக ஆரம்பிப்பதும் மனசு அதற்கு ஒரு பிரத்யேக வடிவம் கொடுக்க ஆரம்பிக்கிறது. ரஜினிகாந்த் கண்டக்டராகவே இருந்திருந்தால் அவருடைய போட்டோவை சலூனில் ஒட்டி வைப்பார்களா? கருணாநிதி ஒரு ஆரம்ப பள்ளிக்கூட வாத்தியாராக இருந்திருந்தால் அவரைப் பார்க்க இப்படியொரு கூட்டம் கூடுமா? அவர்கள் செய்த சாதனை, அதனால் எற்பட்ட புகழ் இதையெல்லாம் மீறி முகம் பழகிப் போய் அந்த முகத்தை நேரில் பார்க்கிற ஆர்வம் என ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

பிச்சை எடுப்பதற்கான ஒரு தகுதியும் அவளிடம் இல்லை போல தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு. ஒரு பெரிய நகைக்கடை அதிபரின் மகளாக ஏசி அறையில் இருப்பதுதான் அவளுக்குப் பொருத்தமான வாழ்க்கையாக இருக்கும் போலவும் நினைத்தேன்.அவள் மனதால் கோடீஸ்வரி போல இருந்தாள். வரவர எனக்கு இந்த எண்ணம் வலுத்துக் கொண்டே போனது.

முனிவரின் நிஷ்டையைக் கலைத்த பாவத்துக்காக இளவரசிக்கு இப்படியொரு சாபம் வழங்கப்பட்டு, மிகவும் கதறி அழுது விமோசனம் வேண்டினாள் அவள். முனிவரும் மனமிரங்கி "இந்தப் பிறவியில் நீ மணக்க வேண்டிய இளவரசன், அடுத்த பிறவியில் வசந்தா பவன் வாசலில் சிகரெட் பிடித்தபடி இருந்து உனக்குப் பிச்சை இடுவான். அப்போது இருவரும் இளவரச ரூபம் கொள்வீர்கள்'' என்று கூறியிருந்தாள் நன்றாக இருக்குமே என நினைவுகள் குமிழிட்டது.

ஆவேசமாக வந்த ஒரு பெண்மணி, அந்தச் சிறுமியின் கையில் இருந்த தட்டைப் பிடுங்கி அதாலேயே அவளுடைய தலையில் ஒரு அடி போட்டுவிட்டு ""இன்னாடீ பண்ணீங்கீறே இம்மா நேரமா இங்க?'' என்றாள்.

இப்படியொரு அவமானத்தை என் எதிரில் எதிர்கொண்டது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும் அவளுக்கு. ஆனால் செம்மையான உணர்வுகளையெல்லாம் வெளிப்படுத்திப் பழக்கமில்லாதவளாக அவள் இருந்தாள்.

"கூட்டம் அங்க நிக்குது.. இங்க இன்னா பண்றே?'' என்றபடி முடியைப் பிடித்து இழுத்து கடை இருந்த பக்கம் நோக்கித் தள்ளினாள்.

அவள் ஆவி புகுந்தவள் போல நானிருந்த பக்கம் நோக்கித் தட்டேந்தி எந்திரத்தனமாக வந்தாள். இருந்தாலும் ஒரு இளவரசியின் நடைதான் அது. என் எதிரே வந்து தயக்கமில்லாம் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். நானும் நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன். காசு போடுவதா, கையைப் பிடித்து அனாதை இல்லத்துக்கு அழைத்துச் செல்வதா? சட்டென்று அங்கிருந்து அகன்றுவிடுவதா?... அந்தக் கணத்தில் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவள் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தேன்.

பாக்கெட்டில் இருந்த காசும் அதற்குக் கீழே இருந்த இதயமும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தன.

வெள்ளி, ஏப்ரல் 11, 2008

பொறாமைப்பட வைக்கும் புத்தகம்

வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)

தமிழ்மகன்



தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., கருணாநிதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என பலரும் படைப்பிலக்கியங்கள் மூலம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் படைப்புக்கும் பின்னணியில் ஏதோ நோக்கமும் கொள்கையும் இருந்தன. பக்தியை வளர்த்தார்கள், தேசியத்தை வளர்த்தார்கள், தமிழினத்தை வளர்த்தார்கள், மனித நேயத்தை வளர்த்தார்கள், கலையை வளர்த்தார்கள் போன்ற ஒன்றில் இவர்களில் பலர் பொருந்திவிடுகிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் தமிழைத் தக்க வைக்கிற வேலையைச் செய்தார்கள் என்பதும் பொருந்தும்.

ஓலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி தமிழருக்கு அறிமுகம் செய்த தமிழ்த் தாத்தா உ.வே.சா, பிறமொழி இலக்கியங்களைத் திரட்டித் தந்த க.நா.சு. போன்ற பலர் இந்த மொழியின் சுறுசுறுப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

பல ஆங்கில எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆங்கில எழுத்தாளர்கள் பலரை, அவர்களை நேர்காணல் செய்து அவர்கள் வார்த்தைகளாலேயே அவர்களை அறிமுகம் செய்யும் ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார் அ.முத்துலிங்கம். காலச்சுவடு வெளியீடான "வியத்தலும் இலமே' அந்த விதத்தில் தமிழில் புது முயற்சி. இதுவரை இத்தனை விஸ்தாரமாகச் செய்யப்படாத சாதனை.

இவர் நேர்காணல் செய்திருக்கும் பலர், நம்மில் பலருக்கு அவர்களின் ஒரு சில படைப்புகள் மூலமாகவோ, அல்லது பெயரளவிலோதான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால் முத்துலிங்கமோ அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து அவர்களின் இலக்கியக் கொள்கைகள், சிறுகதைக் கோட்பாடுகள், அவர்களுடைய படிப்பு ரசனை, அவர்களின் எழுத்து பாணி என்று இங்கு எழுதும் இளம் படைப்பாளிகளின் விருப்பத்தை உணர்ந்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்று எழுதியிருக்கிறார். இவ்வளவு பேரையும் நேரிலேயே சந்தித்திருக்கிறாரே எனப் பொறாமையாக இருக்கிறது.


"எத்தனை தடவை வேண்டுமானாலும் திருத்தி எழுத தயங்க மாட்டேன். நீங்கள் பார்ப்பது செதுக்கப்பட்ட சிலையின் இறுதி வடிவம்தான்' என்கிறார் டேவிட் செடாரீஸ். இவர் துப்பரவு பணியாளராக வேலை செய்தவர். எதற்காக பிரபலமான பின்னும் வேலை . செய்தீர்கள் என்ற கேள்விக்கு நான் இரவில்தான் எழுதுகிறேன். பகலில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அதனால் வேலைக்குப் போனேன் என்கிறார். அகில் சர்மாவோ "வாழ்வது ஒரு முறைதான். இப்போது எழுதவில்லை என்றால் வேறு எப்போது எழுதுவது' என்று பல லட்ச ரூபாய் சம்பாத்தியம் செய்யும் வேலையை உதறிவிட்டு இந்த நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் எழுதியவர்.

""ஒரு எழுத்து ஒருமுறை எழுதிவிட்டால் எழுதியதுதான் திருத்தி எழுதுகிற பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார் டெவிட் பெஸ்மாஸ்கிஸ்.

இளம் எழுத்தாளர் நஸீகு அலி முதல் 80 களில் இருக்கும் ஆலீஸ் மன்றோ வரை பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிக்கான நேரம் கொடுத்துவிட்டோம் என்ற நியாயத்தில் மனைவியின் பிரசவ நேரத்தையும் பொறுத்துக் கொண்டு இயல்பாக பேசிய கிறிஸ் ஃபிலார்டி. வெறுப்பும் சலிப்புமாகப் பேசும் ஃப்ராங்க் மக்கோர்ட் எல்லோரையும் தேடித் தேடி பேட்டி கண்டிருக்கிறார்.

ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற சினுவ ஆச்சிபிக்கு பெரிய அளவில் விருது கெüரவங்கள் கிடைக்கவில்லை ஆனால் அவரைப் பார்த்து மலைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு மகத்தான கெüரவங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நஸீகு அலியிடம் கேட்கிறார். முப்பது பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதும் 28 வயதில் அவர் எழுதிய "திங்ஸ் ஃபால் அபார்ட்' என்ற முதல் நாவல் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பிரமிக்கிறார் நஸீகு. சினுவா அச்சுபி மீது அப்படியொரு மரியாதை. அவர் படிப்பதற்காக நஸீகு ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தாராம். படிக்க நேரமில்லை என்பதை விளக்கி ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தாராம். பொக்கிஷம் போல அந்தக் கடிதத்தைப் பாதுகாத்து வருகிறாராம். அப்படி மதிக்கிறார்.

அதே போல் ஒரு எழுத்தாளரை மதிப்பதில் சிகரம் தொட்ட இன்னொரு எழுத்தாளர் டேவிட் செடாரிஸ். இவர் போற்றுவது டோபையாஸ் வுல்ஃப் அவர்களை. "நான் இன்னும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமே நான் இறந்த பிறகு டோபையாஸ் எழுதும் கதையை படிக்க முடியாமல் போய்விடுமே என்பதால்தான்' என்கிறார் செடாரிஸ்.

ஆலிஸ்மன்றோவின் சிறுகதைகள் 40லிருந்து 70 பக்கங்கள் இருக்கும். இங்கே சிலர் அதை நாவல் என்றோ குறுநாவல் என்றோ சொல்கிறார்கள். (பிப்.11 - 2008 நியூ யார்க்கர் இணைய இதழிலும் அவருடைய "ஃப்ரீ ராடிகல்' என்ற சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.)

சிறுகதையின் வடிவம் குறித்த அவர்களின் பார்வை, தரிசனம் அனைத்தும் நம்முடைய கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும்கூட பொருந்தி வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அது மனித வாழ்வின் பரந்துவிரிந்த பொதுத் தன்மையையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.

கலிபோர்னியாவின் பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் (hart) சொல்லும் தமிழ் சாதிய நடைமுறைகள் ஆச்சர்யமான புதிய சந்தேகங்களை விதைக்கின்றன. ஆர்யர்களின் வருகைக்குப் பின்னர்தான் சாதி முறை ஏற்பட்டதென்றால் அது அவர்களின் சமூகத்தில் இல்லையே என்கிறார். அவர்களின் வருகைக்கு முன்பே இந்திய சமூகத்தில் சாதி முறை இருந்தது என்பதும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு அந்த வர்ண பேதங்கள் வளர்ந்தற்குக் காரணம் அந்த வாழ்வுமுறை ஏற்கெனவே இருந்ததன் காரணத்தால்தான் என்பது அவருடைய கூற்று. ரஷ்யன், லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் என பூமிப் பந்தின் பிரபல மொழிகள் பலவற்றை அறிந்தவராக இருக்கிறார் ஜார்ஜ் எல் ஹார்ட். அவருடைய கருத்துகளை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாததாகவும் உள்ளது. வேதங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வர்ண பேதங்களுக்கான இலக்கணங்களும் சாதி ரீதியாக மனிதர்களை இழிவுபடுத்தியிருப்பதும் தெளிவாகிற அளவுக்கு பண்டைய தமிழ்நூல்களில் குறிப்படப்படவில்லை. தமிழ் சமூதாயத்தில் இப்படியொரு வாழ்வியல் முறை இருந்திருப்பின் அவை தமிழ்நூல்களில் வலியுறுத்தப்படாமல் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதும் கேள்வி.

களவு ஒழுக்கம் குறித்து அகப் பாடல்களில் வருகிறது. ஆனால் கர்ப்பமான பெண்கள் சம்பந்தமாகவோ, கர்ப்பிணி பெண்ணின் பாடலாகவோ எதுவும் இடம்பெறவில்லையே என்ற முத்துலிங்கத்தின் கேள்வியே புதிய கோணத்தைத் தருகிறது. அதற்கு ஹார்ட் தரும் பதில் இது: "சங்க காலத்தில் இன்று போல அன்றும் பழமையான சம்பிரதாயங்களையே கடைப்பிடித்தனர். ... கவிகள் சமூகம் ஏற்காத ஒன்றையே வர்ணித்தனர், இப்போதைய தமிழ் சினிமா போல.'

அவருடைய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை உருவாவதற்கு பாடுபட்டவர் ஹார்ட். 9 ஆண்டுகாலமாக அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.

இதில் இரண்டொரு "ஒரு பால்' எழுத்தாளர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருக்கிறார் முத்துலிங்கம். அதில் ஒருவர் ஷ்யாம் செல்வதுரை. "சினமன் கார்டன்' என்ற அவருடைய பரபரப்பான நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பித்திலும் பொருத்தமான திருக்குறளைக் கையாண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஒருவார்த்தையும் தெரியாது என்பது வெளிநாட்டில் குடியேறிய தமிழர்களுக்கேயான வேதனை. காம இலக்கியம் படைக்கும் இலங்கையைப் பூர்வீகமாகமாகக் கொண்ட மேரி ஆன் மோகன்ராஜ் என்பரை பேட்டி கண்டிருக்கிறார். அவருக்கும் தமிழ் மறந்தே போய்விட்டது.

மார்க்ரெட் அட்வூட், பிரிஸ்கி, எலெய்ன் பெய்லின், டேவிட் ஓவன், வார்ரென் கரியோ போன்ற பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மிகவும் எளிமையான கேள்விகள் மூலம் ஆச்சர்யமான விஷயங்களைக் கொண்டுவருவது முத்துலிங்கத்தின் பாணியாக இருக்கிறது. உங்கள் சிறுவயது ஞாபகங்கள் என்ன? இப்போது என்ன எழுதுகிறீர்கள்? போன்ற கேள்வியைக் கேட்கிறார். அதே போல் நம் புதுமைப்பித்தன், பாரதி, நம்முடைய பழமொழி போன்றவற்றை அவர்களிடம் நினைவூட்டுகிறார். பெருமையாக இருக்கிறது.

இந்தப் பேட்டிகளில் (சற்றே) விலகி நிற்பது மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜெனிவீவ் கெல்லியின் பேட்டி. அந்தப் பெண்ணே ஒரு ஓடும் இலக்கியமாக இவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறாள். முத்துலிங்கத்தின் வீட்டுக்கு விருந்தினராக வந்து தங்குகிறார். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தேனில் கலந்ததுபோல மிருதுவாக இருந்தது என்று வர்ணிக்கிறார் முத்துலிங்கம். கனடாவை இரண்டுநாளில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். உலகின் மூன்று மகா சமுத்திரத்தால் சூழப்பட்ட கனடாவை மூன்றுநாளில் சுற்றிப் பார்க்க நினைப்பது அவளுடைய அறியாமையா, பேராசையா என்று இவருக்கு விளங்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.

நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உடம்புதான். அதை பத்திரமாக பேண வேண்டும். 26 மைல் ஓட வேண்டுமானால் 30 மைலோ, 35 மைலோ ஓட வேண்டும் அப்போதுதான் மாரத்தானில் ஓடுவதற்குச் சுலமாக இருக்கும் என்பது ஜெனிவீவ் கருத்து.

வியப்பூட்டும் பெண். நிச்சயம் இந்த ஆண்டு மாரத்தானில் வெல்லப் போவது அவள்தான்.. அல்லது வெல்ல வேண்டியவள் அவள்தான்.

விடைபெறும்போது ஏர்போர்ட்டில் முத்துலிங்கத்துக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றாள். ஏதோ முத்தம் கொடுப்பதற்கு நாளைமுதல் தடைவிதித்துவிட்டதுபோல் அந்த முத்தம் மிக நீண்டதாக இருந்தது என்கிறார் அ.மு. இப்படி பலவிதங்களில் நம்மை பொறாமைப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஆங்கில பாணியில் சிந்திக்கும் ஒரு தமிழர் என அவரை நினைத்தேன். பிறகு அதை மாற்றிக் கொண்டேன்.

அவருக்கு முதன்முதலாக எழுதிய கடிதத்தில் "நீங்கள் பழந்தமிழ் ஆர்வம் கொண்ட ஓர் ஆங்கிலேயரைப் போல சிந்திக்கிறீர்கள்' என்று எழுதியிருந்தேன்.

"எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள், எனக்கு சிரிப்புதான் வருகிறது' என்று பதில் அனுப்பியிருந்தார்.

அவருடைய வெட்கமும் பொறாமையாகத்தான் இருக்கிறது.


வியத்தலும் இலமே

அ.முத்துலிங்கம்

காலச்சுவடு வெளியீடு.

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

என்னுடைய இரண்டு படங்கள்




இந்த இரண்டு படங்களில் ஒன்றில் என் புத்தகத்தை படிக்கிறார் மருத்துவர். இன்னொன்றில் என் தோள்மீது கை போட்டபடி விஜயகாந்த்.

பொறாமைப்பட வைக்கும் புத்தகம் - நூல்விமர்சனம்

தமிழ்மகன்


தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., கருணாநிதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என பலரும் படைப்பிலக்கியங்கள் மூலம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் படைப்புக்கும் பின்னணியில் ஏதோ நோக்கமும் கொள்கையும் இருந்தன. பக்தியை வளர்த்தார்கள், தேசியத்தை வளர்த்தார்கள், தமிழினத்தை வளர்த்தார்கள், மனித நேயத்தை வளர்த்தார்கள், கலையை வளர்த்தார்கள் போன்ற ஒன்றில் இவர்களில் பலர் பொருந்திவிடுகிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் தமிழைத் தக்க வைக்கிற வேலையைச் செய்தார்கள் என்பதும் பொருந்தும்.
ஓலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி தமிழருக்கு அறிமுகம் செய்த தமிழ்த் தாத்தா உ.வே.சா, பிறமொழி இலக்கியங்களைத் திரட்டித் தந்த க.நா.சு. போன்ற பலர் இந்த மொழியின் சுறுசுறுப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
பல ஆங்கில எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆங்கில எழுத்தாளர்கள் பலரை, அவர்களை நேர்காணல் செய்து அவர்கள் வார்த்தைகளாலேயே அவர்களை அறிமுகம் செய்யும் ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார் அ.முத்துலிங்கம். காலச்சுவடு வெளியீடான "வியத்தலும் இலமே' அந்த விதத்தில் தமிழில் புது முயற்சி. இதுவரை இத்தனை விஸ்தாரமாகச் செய்யப்படாத சாதனை.
இவர் நேர்காணல் செய்திருக்கும் பலர், நம்மில் பலருக்கு அவர்களின் ஒரு சில படைப்புகள் மூலமாகவோ, அல்லது பெயரளவிலோதான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால் முத்துலிங்கமோ அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து அவர்களின் இலக்கியக் கொள்கைகள், சிறுகதைக் கோட்பாடுகள், அவர்களுடைய படிப்பு ரசனை, அவர்களின் எழுத்து பாணி என்று இங்கு எழுதும் இளம் படைப்பாளிகளின் விருப்பத்தை உணர்ந்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்று எழுதியிருக்கிறார். இவ்வளவு பேரையும் நேரிலேயே சந்தித்திருக்கிறாரே எனப் பொறாமையாக இருக்கிறது.

"எத்தனை தடவை வேண்டுமானாலும் திருத்தி எழுத தயங்க மாட்டேன். நீங்கள் பார்ப்பது செதுக்கப்பட்ட சிலையின் இறுதி வடிவம்தான்' என்கிறார் டேவிட் செடாரீஸ். இவர் துப்பரவு பணியாளராக வேலை செய்தவர். எதற்காக பிரபலமான பின்னும் வேலை . செய்தீர்கள் என்ற கேள்விக்கு நான் இரவில்தான் எழுதுகிறேன். பகலில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அதனால் வேலைக்குப் போனேன் என்கிறார். அகில் சர்மாவோ "வாழ்வது ஒரு முறைதான். இப்போது எழுதவில்லை என்றால் வேறு எப்போது எழுதுவது' என்று பல லட்ச ரூபாய் சம்பாத்தியம் செய்யும் வேலையை உதறிவிட்டு இந்த நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் எழுதியவர்.
""ஒரு எழுத்து ஒருமுறை எழுதிவிட்டால் எழுதியதுதான் திருத்தி எழுதுகிற பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார் டெவிட் பெஸ்மாஸ்கிஸ்.
இளம் எழுத்தாளர் நஸீகு அலி முதல் 80 களில் இருக்கும் ஆலீஸ் மன்றோ வரை பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிக்கான நேரம் கொடுத்துவிட்டோம் என்ற நியாயத்தில் மனைவியின் பிரசவ நேரத்தையும் பொறுத்துக் கொண்டு இயல்பாக பேசிய கிறிஸ் ஃபிலார்டி. வெறுப்பும் சலிப்புமாகப் பேசும் ஃப்ராங்க் மக்கோர்ட் எல்லோரையும் தேடித் தேடி பேட்டி கண்டிருக்கிறார்.
ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற சினுவ ஆச்சிபிக்கு பெரிய அளவில் விருது கெüரவங்கள் கிடைக்கவில்லை ஆனால் அவரைப் பார்த்து மலைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு மகத்தான கெüரவங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நஸீகு அலியிடம் கேட்கிறார். முப்பது பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதும் 28 வயதில் அவர் எழுதிய "திங்ஸ் ஃபால் அபார்ட்' என்ற முதல் நாவல் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பிரமிக்கிறார் நஸீகு. சினுவா அச்சுபி மீது அப்படியொரு மரியாதை. அவர் படிப்பதற்காக நஸீகு ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தாராம். படிக்க நேரமில்லை என்பதை விளக்கி ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தாராம். பொக்கிஷம் போல அந்தக் கடிதத்தைப் பாதுகாத்து வருகிறாராம். அப்படி மதிக்கிறார்.
அதே போல் ஒரு எழுத்தாளரை மதிப்பதில் சிகரம் தொட்ட இன்னொரு எழுத்தாளர் டேவிட் செடாரிஸ். இவர் போற்றுவது டோபையாஸ் வுல்ஃப் அவர்களை. "நான் இன்னும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமே நான் இறந்த பிறகு டோபையாஸ் எழுதும் கதையை படிக்க முடியாமல் போய்விடுமே என்பதால்தான்' என்கிறார் செடாரிஸ்.
ஆலிஸ்மன்றோவின் சிறுகதைகள் 40லிருந்து 70 பக்கங்கள் இருக்கும். இங்கே சிலர் அதை நாவல் என்றோ குறுநாவல் என்றோ சொல்கிறார்கள். (பிப்.11}2008 நியூ யார்க்கர் இணைய இதழிலும் அவருடைய "ஃப்ரீ ராடிகல்' என்ற சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.)
சிறுகதையின் வடிவம் குறித்த அவர்களின் பார்வை, தரிசனம் அனைத்தும் நம்முடைய கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும்கூட பொருந்தி வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அது மனித வாழ்வின் பரந்துவிரிந்த பொதுத் தன்மையையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.
கலிபோர்னியாவின் பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் (ட்ஹழ்ற்) சொல்லும் தமிழ் சாதிய நடைமுறைகள் ஆச்சர்யமான புதிய சந்தேகங்களை விதைக்கின்றன. ஆர்யர்களின் வருகைக்குப் பின்னர்தான் சாதி முறை ஏற்பட்டதென்றால் அது அவர்களின் சமூகத்தில் இல்லையே என்கிறார். அவர்களின் வருகைக்கு முன்பே இந்திய சமூகத்தில் சாதி முறை இருந்தது என்பதும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு அந்த வர்ண பேதங்கள் வளர்ந்தற்குக் காரணம் அந்த வாழ்வுமுறை ஏற்கெனவே இருந்ததன் காரணத்தால்தான் என்பது அவருடைய கூற்று. ரஷ்யன், லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் என பூமிப் பந்தின் பிரபல மொழிகள் பலவற்றை அறிந்தவராக இருக்கிறார் ஜார்ஜ் எல் ஹார்ட். அவருடைய கருத்துகளை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாததாகவும் உள்ளது. வேதங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வர்ண பேதங்களுக்கான இலக்கணங்களும் சாதி ரீதியாக மனிதர்களை இழிவுபடுத்தியிருப்பதும் தெளிவாகிற அளவுக்கு பண்டைய தமிழ்நூல்களில் குறிப்படப்படவில்லை. தமிழ் சமூதாயத்தில் இப்படியொரு வாழ்வியல் முறை இருந்திருப்பின் அவை தமிழ்நூல்களில் வலியுறுத்தப்படாமல் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதும் கேள்வி.
களவு ஒழுக்கம் குறித்து அகப் பாடல்களில் வருகிறது. ஆனால் கர்ப்பமான பெண்கள் சம்பந்தமாகவோ, கர்ப்பிணி பெண்ணின் பாடலாகவோ எதுவும் இடம்பெறவில்லையே என்ற முத்துலிங்கத்தின் கேள்வியே புதிய கோணத்தைத் தருகிறது. அதற்கு ஹார்ட் தரும் பதில் இது: "சங்க காலத்தில் இன்று போல அன்றும் பழமையான சம்பிரதாயங்களையே கடைப்பிடித்தனர். ... கவிகள் சமூகம் ஏற்காத ஒன்றையே வர்ணித்தனர், இப்போதைய தமிழ் சினிமா போல.'
அவருடைய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை உருவாவதற்கு பாடுபட்டவர் ஹார்ட். 9 ஆண்டுகாலமாக அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.
இதில் இரண்டொரு "ஒரு பால்' எழுத்தாளர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருக்கிறார் முத்துலிங்கம். அதில் ஒருவர் ஷ்யாம் செல்வதுரை. "சினமன் கார்டன்' என்ற அவருடைய பரபரப்பான நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பித்திலும் பொருத்தமான திருக்குறளைக் கையாண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஒருவார்த்தையும் தெரியாது என்பது வெளிநாட்டில் குடியேறிய தமிழர்களுக்கேயான வேதனை. காம இலக்கியம் படைக்கும் இலங்கையைப் பூர்வீகமாகமாகக் கொண்ட மேரி ஆன் மோகன்ராஜ் என்பரை பேட்டி கண்டிருக்கிறார். அவருக்கும் தமிழ் மறந்தே போய்விட்டது.
மார்க்ரெட் அட்வூட், பிரிஸ்கி, எலெய்ன் பெய்லின், டேவிட் ஓவன், வார்ரென் கரியோ போன்ற பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மிகவும் எளிமையான கேள்விகள் மூலம் ஆச்சர்யமான விஷயங்களைக் கொண்டுவருவது முத்துலிங்கத்தின் பாணியாக இருக்கிறது. உங்கள் சிறுவயது ஞாபகங்கள் என்ன? இப்போது என்ன எழுதுகிறீர்கள்? போன்ற கேள்வியைக் கேட்கிறார். அதே போல் நம் புதுமைப்பித்தன், பாரதி, நம்முடைய பழமொழி போன்றவற்றை அவர்களிடம் நினைவூட்டுகிறார். பெருமையாக இருக்கிறது.
இந்தப் பேட்டிகளில் (சற்றே) விலகி நிற்பது மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜெனிவீவ் கெல்லியின் பேட்டி. அந்தப் பெண்ணே ஒரு ஓடும் இலக்கியமாக இவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறாள். முத்துலிங்கத்தின் வீட்டுக்கு விருந்தினராக வந்து தங்குகிறார். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தேனில் கலந்ததுபோல மிருதுவாக இருந்தது என்று வர்ணிக்கிறார் முத்துலிங்கம். கனடாவை இரண்டுநாளில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். உலகின் மூன்று மகா சமுத்திரத்தால் சூழப்பட்ட கனடாவை மூன்றுநாளில் சுற்றிப் பார்க்க நினைப்பது அவளுடைய அறியாமையா, பேராசையா என்று இவருக்கு விளங்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.
நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உடம்புதான். அதை பத்திரமாக பேண வேண்டும். 26 மைல் ஓட வேண்டுமானால் 30 மைலோ, 35 மைலோ ஓட வேண்டும் அப்போதுதான் மாரத்தானில் ஓடுவதற்குச் சுலமாக இருக்கும் என்பது ஜெனிவீவ் கருத்து.
வியப்பூட்டும் பெண். நிச்சயம் இந்த ஆண்டு மாரத்தானில் வெல்லப் போவது அவள்தான்.. அல்லது வெல்ல வேண்டியவள் அவள்தான்.
விடைபெறும்போது ஏர்போர்ட்டில் முத்துலிங்கத்துக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றாள். ஏதோ முத்தம் கொடுப்பதற்கு நாளைமுதல் தடைவிதித்துவிட்டதுபோல் அந்த முத்தம் மிக நீண்டதாக இருந்தது என்கிறார் அ.மு. இப்படி பலவிதங்களில் நம்மை பொறாமைப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஆங்கில பாணியில் சிந்திக்கும் ஒரு தமிழர் என அவரை நினைத்தேன். பிறகு அதை மாற்றிக் கொண்டேன்.
அவருக்கு முதன்முதலாக எழுதிய கடிதத்தில் "நீங்கள் பழந்தமிழ் ஆர்வம் கொண்ட ஓர் ஆங்கிலேயரைப் போல சிந்திக்கிறீர்கள்' என்று எழுதியிருந்தேன்.
"எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள், எனக்கு சிரிப்புதான் வருகிறது' என்று பதில் அனுப்பியிருந்தார்.
அவருடைய வெட்கமும் பொறாமையாகத்தான் இருக்கிறது.

வியத்தலும் இலமே
அ.முத்துலிங்கம்
காலச்சுவடு வெளியீடு.

புதன், ஏப்ரல் 02, 2008

கடவுள் தொகை - சிறுகதை

தமிழ்மகன்

"கடவுள் இருக்கிறாராப்பா?'' என்றான் மகன்.

பொதுவாக இந்த வயசில் இப்படியான எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில்தான் எனக்கும் அப்படியான சந்தேகம் எழுந்தது.

பால் போடாமல் போய்விட்ட பால்காரனிடம் சண்டை போட்டுவிட்டு அப்படியே இன்றைக்கான பாலை வாங்கிக் கொண்டு வருமாறு சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியின் எரிச்சல் இந்தக் கடவுள் சர்ச்சையால் மேலும் அதிகமாகும் என்று தோன்றியது. பையன் கேட்ட கேள்விக்கும் நான் அதற்கு பதில் அளிப்பதற்குத் தயாராவதையும் அவள் கவனித்துவிட்டாள். அந்த கவனிப்பில் "ஆரம்பிச்சிட்டீங்களா?' என்ற முறைப்பும் இருந்தது.

"பால் வாங்கிட்டு வரலாம் வர்றீயா?'' - பையனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

"கடவுள் இப்ப என்னப்பா செய்வாரு?'' என்றான் ஆர்வமாக.

"நிச்சயமா பால் வாங்கிட்டு வர போய்க்கிட்டு இருக்க மாட்டாரு'' சிரித்தான்.

"எப்ப கேட்டாலும் கடவுள் பத்தி சரியாகவே சொல்ல மாட்டேங்கிறியேப்பா... அவர் காபி சாப்பிடுவாரா?'' குரலில் அலுப்பு தெரிந்தது.

"எனக்கும் சரியா தெரியலைப்பா... காபி சாப்பிடுவாரா? வெண் பொங்கல் சாப்பிடுவாரா? பிட்சா சாப்பிடுவாரான்னுலாம் கேட்கக் கூடாது. சாமியை நீ உன்னை மாதிரி ஸ்கூல் போய்ட்டு வர்றவர்னு நினைச்சியா? அவரை நம்ம ஸ்கேல்ல அளக்கக் கூடாது... புரியுதா? அது நம்ம கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது''

"எல்லாரும் கும்பிட்றாங்களே?.. ''

"நீயும் கும்பிடேம்பா''

"எதுக்கு கும்பிடணும்?''

"நல்லா படிப்பு வரணும்னு கும்பிடு''

"அப்ப படிக்க வேண்டியதில்லையா?''

பால்காரனிடம் விவரத்தைச் சொல்லி பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு திரும்ப ஆரம்பித்தோம்.

"ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறியேப்பா''

"என்னடா?''

"சாமி கும்பிட்டா பாஸ் ஆகிட முடியுமா? படிக்க வேண்டியதில்லையா?''

"நம்ம முயற்சியும் இருக்கணும். கடவுள் நம்பிக்கையும் இருக்கணும்''

"சாமி கும்பிடாமயே நல்லா படிச்சா பாஸôக முடியாதா?''

"பெசாம வாடா... இதப்பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்றதுக்கு இன்னும் அனுபவம் வேணும்.''

பையன் போட்ட அதட்டல் காரணமாகவோ, பதிலில் சற்றே சமாதானமாகியோ அமைதியாக வந்தான். அடுத்து அவன் ஏதோ யோசித்து கேள்வி ஆரம்பிக்கும் போது நல்லவேளையாக வீடு வந்துவிட்டது.

"அப்பாவும் புள்ளையும் இப்படி அன்ன நடை போட்டுகிட்டு வந்தா நேரமாகுதில்ல'' என்று மனைவிகாட்டிய வெறுப்பில் அவனும் அல்ஜீப்ரா படிக்கப் போய்விட்டான். ஏதோ அவள் போடுகிற இப்படியான அதட்டிலில்தான் குடும்பமே நடப்பதாக எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இல்லாவிட்டால் நானும் குழம்பி, குடும்பத்தையும் குழப்பி விடுவேனோ என்று பயம் வந்துவிட்டது எனக்கு.

எதிலும் தீர்மானமான அபிப்ராயம் ஏற்படுவதில்லை. எது நல்லது என்பதில் ஏகப்பட்ட குழப்பம். இருக்கிறதா இல்லையா குழப்பம். வேண்டுமா வேண்டாமா என்பதில் குழப்பம். அதிகமா கம்மியா என்பதில் குழப்பம்.

போன வாரம் இருந்திருந்து சட்டை எடுக்கப் போய் எந்த நிறம் எடுப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பம்.

வெளிர் நீல சட்டை விரும்புபவர்கள் உண்மையை நேசிப்பவர்களாக இருப்பார்கள் என்று படித்திருந்ததால் நான் அந்த நிறத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டேன். மனைவியோ "அழுக்குத் தாளாது வீட்டில மஞ்சள் கலர்ல தண்ணி வருது... ஒரு தடவை துவைத்ததும் இந்தக் கலரே இருக்காது. பெசாம நம்ம தண்ணி ஏத்தா மாதிரி செம்மண் கலர்ல எடுத்துக்கங்க'' என்றாள்.

அவள் சொல்வதில் நியாயம் இருந்தது. அதிலும் வெளிர் நீலத்தில் செம்மண் நிறமும் கலந்து என்னை வேறொரு குணவானாகக் காட்டுவதையும் தவிர்க்கலாம். செம்மண் நிறம் என்பது ஏறத்தாழ நரேந்திர மோடியை ஞாபகப்படுத்த, "இன்னும் கொஞ்சம் டார்க்கா இருந்தா நல்லது'' என்றேன்.

அவன் சிவப்பு நிறத்தை எடுத்துப் போட்டான். அது கம்யூனிஸ்ட் அடையாளமாக இருந்தது. இது பரவாயில்லை. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் தோரணையில் அதை நான் என் மீது போர்த்திப் பார்த்த போது, "இதையா எடுத்துக்கப் போறீங்க?'' என்ற மனைவியின் கேள்வியில் எதிர்ப்பு வெளிப்பட்டது.

"ஏதோ ஒண்ணு...'' எந்தவித நோக்கமும் இல்லாமல்தான் இதை நான் தேர்வு செய்தேன் என்பதைப் போல் அலட்சியமாகச் சொன்னேன்.

"ஏதோ ஒண்ணுனு சொல்லாதீங்க... காசு என்ன மரத்திலா காய்க்குது?... ஆள் பாதி... ஆடை பாதி. ட்ரஸ்ஸýதான் முக்கியம். உங்க நிறத்துக்கு ஏத்ததா எடுத்துக்கங்க'' ஆடைவிஷயத்தில் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கக் கூடாது என்று நானே ஒரு கணம் வருத்தப்பட்டேன். அவளுடைய பேச்சில் பொதிந்திருந்த அக்கறைதான் அதற்குக் காரணம்.
கடைக்காரன் வேறொரு உத்தி சொன்னான். "பேண்டுக்கு மேட்சா எடுத்துக்கங்க சார்...''

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஏனென்றால் நாங்கள் எடுக்கப் போனது ஒரே ஒரு சட்டை மட்டுமே. வெறும் சர்ட் மட்டும் எடுப்பது நாகரீகமற்ற செயலோ? இப்போது இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது. தரமான துணியாக இல்லை என்று சாக்கு போக்கு சொல்லி வெளியேறி விடலாமா? இல்லை போனால் போகிறது என்று ஒரு பேண்டையும் எடுத்துவிடலாமா? உண்மையில் நம்மிடம் உள்ள பேண்டுகள் எல்லாம் கேசவன் கல்யாணத்துக்கு முந்தையவை. கடைசியாக கேசவன் கல்யாணத்துத்தில்தான் சம்பந்தி சீர் என்று எனக்கும் ஒரு பேண்ட் சர்ட் எடுத்துத் தந்தார்கள். கேசவனுக்குக் கல்யாணமாகி என்ன ஐந்து வருஷம் இருக்குமா? அதற்கு மேலேயே இருக்கலாம். அவனோட பையனே இப்ப மூணாவது படிக்கிறானே... அஞ்சு வயசுல ஒண்ணாவது சேர்ந்திருந்தாக்கா இப்ப... எட்டு வயசு... இப்பல்லாம் நாலு வயசிலயே ஒண்ணாவது போட்டுட்றாங்க. என்னோட கணக்கு வாத்தியாருக்கு சர்க்கஸ் புலினு பேரு. எப்பப் பார்த்தாலும் ஆ..ஆ...ஆ...வ்வ்வ் கொட்டாவி விடுவாரு. சர்க்கஸ்ல புலி வாயைத் திறந்து காட்டச் சொல்லி ரிங் மாஸ்டர் குத்தும் போது அப்படித்தான் திறக்கும். பாவம் புலிகள். முண்டந்துறைல ஒரு தரம்...

"பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி? ஏதாவது ஒரு கலர் எடுங்க''
நான் சட்டென்று பச்சை நிறத்தில் பெரிய பெரிய கட்டமாகப் போட்ட சட்டையைத் தேர்ந்தெடுத்தேன்.

"இது என்ன லுங்கி மாதிரி''

நமக்கு சட்டை எடுக்கக்கூடத் தெரியவில்லையே என்ற வருத்தமும் மனைவி என்னை மிகவும் ஆட்சி செய்வதாக ஏற்பட்ட எரிச்சலும் சேர்ந்து கொண்டது. இத்தகைய உணர்வுகளால் நான் மேலும் அமைதியாகிவிட்டேன்.

"இதப் போட்டுக்கங்க'' கருப்புச் சட்டையில் கிளிப்பச்சை நிறத்தில் பூப் போட்ட சட்டையை எடுத்துத் தீர்மானமாக என் முன் நீட்டினாள். அது மாதிரி சட்டையை நான் என் வாழ்நாளில் போட்டதே இல்லை. நமக்குப் பழக்கமே இல்லாத சட்டைப் பொருந்துமா என்று தெரியவில்லை. இப்படித் திடீர் என்று வித்தியாசப்படுத்திக் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றியது.

இவ்வளவு கதையும் எதற்காகச் சொல்கிறேன் என்றால் எனக்கு எதிலுமே தீர்மானமான முடிவுகள் இருந்ததில்லை., கடவுள் உட்பட.
சட்டையைத் தேர்ந்தெடுப்பதிலாவது ஏதோ ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கடவுள் விஷயத்தில் அவர் இல்லாமலேயே இருப்பதிலும் சங்கடம் எதுவும் இல்லாததால் சட்டையைவிட மேலும் ஒரு வாய்ப்பு அதிகரித்துவிட்டது.

மனித நாகரீகத்தில் மனிதர்களைவிட அதிகமான கடவுள் தொகை இருந்திருப்பதாகப் படிக்கிறோம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் விதம்விதமான கடவுள்கள். ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு கடவுள். கொஞ்சமாவது மனிதன் மனசாட்சிக்குப் பயப்படுகிறான் என்றால் அது கடவுள் என்ற சித்தாந்தம் இருப்பதால்தான் என்றார் என் நண்பர். அப்படியானால் அப்படி ஒரு சித்தாந்தம் இருப்பது நல்லதுதான் என்று நான் முடிவெடுத்திருந்த நேரத்தில்தான் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் எங்கள் கடவுளே சிறந்தவர் என்பதை நிரூபிக்கும் பொருட்டு குண்டு வெடிப்புகளும் ரயில் எரிப்புகளும் நடந்தது. கடவுள் சித்தாந்தம் இருப்பதால்தான் வன்முறைகள் நடப்பதாக நான் நண்பரிடம் வாதிட்டேன்.

"இது பரவாயில்லை. மதம் மட்டும் மக்களை இப்படி ஆவேசமாகக் கட்டி வைக்கவில்லையென்றால் பொம்பளைக்காகவும் பொருளுக்காகவும் அடிச்சுக்கிட்டு மனித இனமே அழிஞ்சு போயிருக்கும். பரவால்ல சார்.. ஒரு பாபர் மசூதி... இரட்டை கோபுரம்னு சின்னச் சின்ன விஷயத்தோடு முடிஞ்சிடுது ...'' என்றார். சரி கடவுள் சித்தாந்தமும் ஒரு பக்கம் இருந்துட்டுதான் போகட்டுமே நமக்கென்ன என்று விட்டுவிட்டேன்.

இப்போது மகன் ஆரம்பிக்கிறான்.

இரவு படுக்க வந்த பிறகு "கடவுள் தூங்குவாரா? அவருக்கும் கனவு வருமா? அப்துல் கலாம் கனவு காண சொல்றாரே... கடவுளும் காணுவாரா?''

"மனிதர்கள் மாதிரியே கடவுளைப் பொருத்திப் பார்க்கக் கூடாதுனு சொன்னேனா இல்லையா''

"பின்னே?''

"அவருக்கு உருவமில்லை, பெயரும் இல்லை. அவர்னு சொல்றதே இல்லை. அதாவது அவர் என்பதே இல்லை. ஆணல்லன், பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்னு பாடி வெச்சிருக்காங்க''

"பார்க்க முடியுமா?''

"கண்டவர் விண்டிலர்.. விண்டவர் கண்டிலர்... பார்த்தவர்கள் சொல்வதில்லை... பார்த்ததாகச் சொல்றவங்க பார்த்ததே இல்லை''

"அதனாலதான் நீ பார்த்ததா சொல்ல மாட்டறீயா?''

"......''

இந்த முறையும் மனைவிதான் என்னைக் காப்பாற்றினாள். "ஏய்... பெசாம தூங்குங்க... குழந்தைங்க குழந்தைங்களா பேசணும். முன்னேர் சரியா போனா பின்னாடி வர்ற ஏரும் சரியா வரும்''

அதன் பிறகு யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் தூங்கிவிட்டோம் என்று சொல்வதற்கில்லை. மகன் வெகு நேரம் புரண்டு கொண்டிருந்தான். குழந்தையை நாம் சரியாக வளர்க்கத் தெரியவில்லையோ என்று கவலையாக இருந்தது.

அவன் குட்டி சாமியாராகவோ, குட்டி நக்ஸலைட்டாகவோ ஆவது பொருத்தமில்லாததாக இருந்தது.

பத்தாவதில் நல்ல மார்க் எடுத்தால்தான் ப்ளஸ் ஒன் சேர்த்துக் கொள்வேன் என்று பள்ளியின் தாளாளர் சர்க்குலர் அனுப்பியிருந்தார்.

தினமும் பிள்ளையார் பூஜை செய்யச் சொல்லி, திருப்பாவை முப்பதும் ஒப்பிக்கச் சொல்லலாமா? மகன் மீது கடவுளைத் திணிப்பது சரியா? சின்னக் குழந்தையை இப்படி இம்சைக்கு ஆளாக்கிவிட்டோமே... மற்ற குழந்தைகள் மாதிரி கிரிக்கெட் பேட் கேட்டு அடம்பிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நானும் புரண்டு கொண்டிருந்தேன்.

காலையில்தான் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்த என் மனைவிதான் இரவெல்லாம் ஆடாமல் அசையாமல் மனதுக்குள்ளாகவே புரண்டு கொண்டிருந்தது புரிந்தது.

"என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க மனசுல... இதென்ன வீடா மடமா?... ராத்திரியெல்லாம் குழந்தைகிட்ட என்ன பேசறீங்க... பைத்தியக்காரனாக்கிடுவீங்க போலருக்கே... நாளையிலிருந்து நீங்கதான் குழாய்ல போய் தண்ணி புடிச்சுகிட்டு வரணும். ரேஷன் கடைக்குப் போகணும்... கரெண்ட் பில் கட்டணும்... காய்கறி வாங்கியார்றது... கேபிள் டி.வி. சரியா தெரியலைனா போய் சொல்லிட்டு வர்றது... ஒட்ரை அடிக்கிறது எல்லாம் நீங்க ரெண்டு பேரும்தான் செய்யணும்... சும்மா இருந்து இருந்து கொழுப்பேறிப் போச்சி ரெண்டு பேருக்கும். கடவுள் ஆராய்ச்சி பண்றீங்களா? கடவுள் ஆராய்ச்சி...'' ... பொரிந்து தள்ளினாள்.

நான் கிணற்றில் இருந்து தண்ணீர் சேந்துகிற வேலையைச் செய்தேன். அவன் பிஸிக்ஸ் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பள்ளிக் கிளம்பியவனின் நெற்றியில் விபூதி வைத்து "கண்டதையும் நினைச்சு மனசைக் குழப்பிக்காதடா... நல்லா படி'' என்று தலைவாரிவிட்டாள்,

நான் அவன் பேனாவில் இங்க் இருப்பது தெரியாமல் மேலும் இங்க் ஊற்றி... தரையைத் துடைக்கத் துணியைத் தேடினேன்.

"நான் துடைச்சுக்கிறேன் விடுங்க... இந்த மாதிரி விதண்டா வாதம் பேசிக்கிட்டிருந்தா நான் எங்க போவேன்'' என்றாள்.

அவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். சைக்கிளில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு "நல்லா படிப்பா'' என்றேன். என் குரலே எனக்கு வேறு மாதிரி கேட்டது. அவன் என்னை ஏற இறங்க பார்த்தான்.

"சரிப்பா''

"இப்போதைக்குக் கடவுள் இருக்கார்னு வெச்சுக்கோ. அதுக்கு மேல கேட்காதே... யோசிக்காதே''

பரிதாபமாகப் பார்த்தான்.

"நல்ல மார்க் எடுத்தாத்தான். நல்ல வேலை கிடைக்கும். நீ சம்பாரிச்சாத்தான் வீட்டு மேல வாங்கின கடனை அடைக்க முடியும். அம்மாவுக்கு அந்தக் கஷ்டம்தான்''

"சரிப்பா'' என்று பள்ளிக்குள் நுழைந்தான். குழந்தையின் கழுத்தில் நுகத்தடி சுமத்திய வலி.
தெருமுனை முருகனுக்குச் சந்தனாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்ணீர் வந்தது. சுலபத்தில் அடக்க முடியவில்லை.


tamilmagan2000@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin