ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

அரேபிய இரவுகளும் பகல்களும்

எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற "
அரேபிய இரவுகளும் பகல்களும்" புத்தகம் பற்றிய கலந்துரையாடல் 

ஒரு புத்தகம் குறித்து இரண்டு மணிநேரம் ஒருவர் தொடர்ந்து பேச முடியும் என்பதும் அதை மக்கள் அத்தனை தீவிரமாகக் கேட்பார்கள் என்பதும் ஆச்சர்யம்தான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் வெஸ் எக்ஸ்டென்ஷனில் உள்ள பொக்கிஷம் புத்தக அங்காடியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை ஓர் மகத்தான வாசிப்பு அனுபவத்துக்கு நம்மைத் தயார்படுத்தியது.
நோபல் பரிசு பெற்ற நாகிப் மாஃபஸ் எழுதிய  “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தக கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 
நிகழ்வின் போது நூலைப் பற்றி திரு.எஸ்.ரா அவர்கள் கூறிய சில தகவல்கள் உங்களுக்காக “1001 அரேபிய இரவுகள் என்ற அராபிய இதிகாச நூல். 1001 இரவுகளைப் பற்றிச் சொல்கிறது. அராபிய மன்னன் ஒருவன் பக்கத்து தேசத்தை ஆளும் தன் அண்ணன் ஷாக்கியரைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் செல்கிறான். பாதி தூரம் சென்றதும் தன் அண்ணனுக்கு வாங்கிவைத்த பரிசுப் பொருளை மறந்துவிட்டது நினைவுக்கு வருகிறது. மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி வருகிறான். மன்னன் சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பதைப் பார்க்கிறான். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.
அந்தச் சோகத்தோடு அண்ணனைப் பார்க்க வருகிறான். தம்பியின் முகம் வாடி இருப்பதற்கான காரணத்தைக் கேட்கிறான். தம்பிக்கு நேர்ந்த அவமானத்தை அறிகிறான். எல்லா பெண்களும் அப்படி இருப்பார்கள் என்று நினைக்காதே என்று அறிவுரை கூறுகிறான்.
நாம் இருவரும் இப்போது வேட்டைக்குச் செல்வதாக உன் மனைவியிடம் கூறிவிட்டு வா. சிறிது நேரம் கழித்துவந்து பார்ப்போம் என்கிறான் தம்பி.
அதன்படியே இருவரும் வேட்டைக்குச் செல்வதாக நாடகம் ஆடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து திரும்பி வருகிறார்கள். அண்ணனின் மனைவியும் முறை தவறுகிறாள். அண்ணனுக்கு ஆத்திரம் தாளவில்லை. மனைவியைச் சிரச்சேதம் செய்கிறான். 
அன்று முதல் தினம் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து மறுநாள் அவளை சிரச்சேதம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்கிறான்.

இப்படியாக அந்த நாட்டில் உள்ளக் கன்னிப் பெண்கள் எல்லோரையும் சிரச்சேதம் செய்கிறான் ஷாக்கியர். மன்னர்  ஷாக்கியரின் அமைச்சரின் மகள் மன்னரை மணக்க முடிவு செய்கிறாள். மன்னரோடு இரவு அந்தப்புரத்தில் இருக்கும்போது அவருக்கு ஒரு கதையைச் சொல்கிறாள், கதையின் முடிவில் புதிராக ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறாள். அந்தக் கதையின் முடிவைத் தெரிந்துகொள்வதற்காக அடுத்த நாள் இரவுக்கு மன்னர் அவளை விட்டு வைக்கிறார். அடுத்த நாள் கதையிலும் அப்படியே ஒரு முடிச்சு போடுகிறாள். இப்படியாக-1000 இரவுகளை நகர்த்துகிறாள். அதனால் பெண்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது.
தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும் பெண்களின் உயிரைக் காப்பாற்றவும் அவள் தினம் கதைகளை புனைகிறாள். தினம் ஒரு சுவாரஸ்யமான கதையை உருவாக்குகிறாள். 1001-வது இரவில் மன்னன் மனம் மாறி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்வதோடு, இனி யாரையும் கொல்லமாட்டேன் என்றும் உறுதி கூறுகிறான்.
இதுதான் 1001 அராபிய இரவின் கதை.
நாகிம் மாஃபஸ் எழுதிய அராபிய இரவுகளும் பகல்களும் கதை. 1001 இரவுக்குப் பிந்தைய கதைகளைச் சொல்கிறார். மன்னர் மனம் மாறி மனைவியை ஏற்றுக்கொள்ள நினைக்கும்போது மனைவி மன்னரை ஏற்க மறுக்கிறாள்.
மன்னரின் ரத்த வாடையை நான் விரும்பவில்லை என்கிறாள். இந்த நாவலில் அராபிய பகல்கள் இடம்பெறுகின்றன" என விவரமாக நாவலின் வாசிப்பு அனுபவத்தை நிறைவாக பகிர்ந்துகொண்டார்.
பெர்ஷிய கதையான 1001 இரவுகள் நமக்கு முற்றிலும் புதிதானவை அல்ல. அலிபாபாவும் 40 திருடர்களும் கதை நமக்கு நன்கு பரிச்சையமான கதைதான். 1001 கதையில் இதுவும் ஒன்று. தினத்தந்தியில் நாம் படித்துவரும் சிந்துபாத் கதையும் அதில் ஒன்றுதான். பாக்தாத் பேரழகி கதை... அதுவும் தான். 
அந்த 1001 கதையின் முடிவின் தொடர்ச்சியாக இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரேபிய இரவுகள் பற்றியும் அதை சார்ந்த மற்ற கதைகள் பற்றியும் அதிக தரவுகளும்,கதைகளும் இங்கே கிடைக்கின்றன.ஆனால் அரேபிய இரவில் கதை சொல்லும் பெண்ணின் பகல் பொழுது எப்படியாக இருந்தது என்பதை விவரிக்கிறது இந்த நூல்.” என்று பல அறிய விஷயங்களை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நூலின் மொழிப்பெயர்ப்பாளர் சா.தேவதாஸ் திடீர் விஜயம் செய்து எல்லோரையும் அச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

உலக தலை சிறந்த புத்தகங்கள்,உலக திரைப்படங்கள் என புத்தகத்தை தாண்டியும் பல செய்திகளை கூறினார்.
மேலும் சா.தேவதாஸ் மொழிப்பெயர்ப்பின் போது தான் சந்தித்த சவால்களை பற்றி பேசினார்.

நிகழ்ச்சியின் நிரைவாக எஸ்.ராமகிருஷ்ணனிடம் வாசகர்கள் அவருடைய எழுத்துகள் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன.இனிமையான நிகழ்வு, எழுத்து அனுபவம் அண்ணா நகர்வாசிகளுக்கு வாய்க்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

LinkWithin

Blog Widget by LinkWithin