வெள்ளி, டிசம்பர் 13, 2013

ஒரு ஊதாப்பூ கண் மூடியது


எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பற்றிய நினைவுகள்...

புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையில் ஒரு காட்சி.
கடையில் ஒருவர் சோடா குடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால் அவருடைய நீண்ட நாள் நண்பர் நின்றுகொண்டிருப்பார். அட என ஆச்சர்யம் அடைந்து இருவரும் பேச ஆரம்பிப்பார்கள். பாதி பேச்சின் நடுவே, ‘ஏவ்’ என்று எழுதியிருப்பார் புஷ்பா தங்கதுரை. கதை விவரிப்பில் இப்படிச் சின்னச் சின்ன கவனங்கள் இருக்கும். அது அவருடைய கடைசி எழுத்துவரை இருந்தது. ‘ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது’ போன்ற புதுமையான தலைப்புகள் பிரயோகங்கள் அன்றைய இளைஞருக்கு ஈர்ப்பாக இருந்தன.
அவருடைய சில கதைகள் சினிமாவாகின. பல கதைகளின் காட்சிகள் அனுமதியில்லாமலேயே சினிமாவில் பயன்படுத்தப்பட்டன. அவர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்திரிகையில் எதைப் பற்றி எழுதச் சொன்னாலும் எழுதித் தர வேண்டியது தன் கடமை என்றே இருந்தார். சிவபெருமானா, சிவப்பு விளக்குச் சிங்காரியா என அவர் கவலைப்பட்டது இல்லை. நிறைய ஆலயங்களைப் பற்றி எழுதினார். திருவரங்கன் உலா என்ற சரித்திரப் புனைவு மிகச் சுவாரஸ்யமானது. 14&ம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்கள் கோவிலில் புகுந்து ஆபரணங்களைக் கொள்ளையடிக்க எத்தனித்தபோது, வைணவர்கள் திருவரங்கத்தின் உற்சவர் விக்ரகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள். பல்வேறு வைணவத் தலங்களுக்கு மதுரை, நெல்லை என ஊர் ஊராகத் தூக்கிக்கொண்டு சென்று பாதுகாக்கிறார்கள். திருப்பதியிலும் சிலகாலம் அந்த விக்ரகம் பாதுகாக்கப்படுகிறது. நெருக்கடி முடிந்து சிலை கோயிலுக்கு வந்து சேர்வதுதான் அந்தச் சரித்திர நாவலின் பின்னணி.
16& நூற்றாண்டில் வாழ்ந்த அனந்தரங்கம் பிள்ளை எழுதிய டைரிக் குறிப்பு அன்றைய புதுச்சேரியில் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அறிய உதவியது. அந்த டைரியின் சில பக்கங்கள் ப்ரெஞ்சு மொழியில் வெளியாகி இருப்பதை அறிந்து 40 ஆண்டுகளுக்கு முன் அதை தமிழில் மொழிபெயர்த்தவர் புஷ்பா தங்கதுரை. அதை சிறு புத்தகமாக ஆசிரியர் சாவி வெளியிட்டார். கணிதத்தின் மீது அவருக்குத் தீராத காதல் இருந்தது. பெருக்கல், கூட்டல்களை வேகமாக செய்வதற்காக அந்தக் காலத்து இந்திய கணித மேதைகளின் செய்முறைகளை அவர் ஆய்வு செய்துவந்தார்.
வீட்டில் பல லட்சம் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்த அவர், சிங்கப்பூரில் உள்ள பொது நூலகத்தை தன் 80&வது வயதில்கூட போய் பார்த்துவிட்டு வந்தார்.
புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் துப்பறியும் கதைகள், சிவப்பு விளக்குக் கதைகள், காமம் துரத்தும் காதல் கதைகள், விஞ்ஞான கதைகள் என எழுதியவருக்கு ஸ்ரீவேணுகோபாலன் என்ற இன்னொரு முகமும் இருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். அதையும் கடந்து அவருக்கு இன்னும் சில முகங்கள் இருந்தன. அதை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீவிர இலக்கிய இதழ்களில்தான் அவர் தன் எழுத்துப் பணியை ஆரம்பித்தார். சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழில்தான் புஷ்பா தங்கதுரையும் எழுத ஆரம்பித்தார். வேலையை உதறியதும் அவர் எழுதுவதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த ஆசைக்கு அவர் கொடுத்த விலைதான் ‘இலக்கியவாதி பட்டம்’.
நன்றி: ஆனந்த விகடன்

LinkWithin

Blog Widget by LinkWithin