வெள்ளி, ஜூலை 10, 2009

நாகரீகம் உடையும் விளிம்பு!





சுதந்திரம் மட்டுமே மனிதனின் ஆதார பிடிமானமாக இருக்கிறது. சொல்லப் போனால் அது உயிரினங்கள் அனைத்தின் அடிப்படை கூறாக இருக்கிறது. அந்தச் சுதந்திரம் ஏற்படுத்தும் நேரமாறான விளைவு பக்கத்தில் இருப்பவரின் சுதந்திரத்தைப் பறிப்பதில் வந்து முடிகிறது. யாரையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அலாதி ஏற்படுகிறது. அது ஒரு பயத்தின் வெளிப்பாடுதான். எங்கே தன் பாதுகாப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். மனிதர்களுக்குள் என்றும் மறைந்திருக்கிற அவநம்பகத்தன்மை இறுதியில் தன் சுதந்திரத்தை கூட அனுபவிக்க விடாமல் பிறர் சுதந்திரத்தையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது.


ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதும் ஒரு நாடு இன்னொரு நாட்டை அடக்க முனைவதும் ஒரு மதம் இன்னொரு மதத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதும் ஒரு மொழி இன்னொரு மொழியின் மீதி ஆதிக்கம் செலுத்துவதும்.. அவநம்பிக்கையினால்தான். நம்பிக்கை இல்லாதவனும் நிறைவடையாதவனும் பேராசை கொள்கிறார்கள். ஹிட்லர் தன் நாஜி படையின் மூலம் இந்தப் பேராசையை விரிவுப்படுத்தினார். எதிர்ப்பவர்களையெல்லாம் கொல்வதும், வதைப்பதும் அந்தப் பேராசையின் தேவையாக மாறி இருந்தது. குறிப்பாக யூதர்கள் மீது அவர் நடத்திய வன்முறை அட்டகாசங்கள் இன்னுமொரு நூற்றாண்டுக்கு அழுது அழிக்க முடியாத களங்கமாக வரலாற்றின் மீது படிந்து கிடக்கிறது. 1986ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் எழுதிய சுயசரிதை நூல் "இரவு'.

ஹங்கேரியில் பிறந்த இவர் தன் பன்னிரெண்டாம் வயதில், சிகெட் நகரத்தில் உள்ள மோசே என்பவனிடம் நெருங்கிப் பழகுகிறான். அவன் யாருமற்றவனாகவும் பிறருக்கு உதவி செய்து வாழ்பவனாகவும், பார்த்ததும் இரக்கம் சுரக்க வைக்கக் கூடியவனாகவும் இருந்தான். யூதமத நம்பிக்கைகள், தெய்வக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சொல்பவனாக இருக்கிறான். 1942ம் ஆண்டின் இறுதியில் ஒரு நாள் சிகெட் நகரத்தில் வாழும் வெளிநாட்டு யூதர்களை போலிசார் அப்புறப்படுத்துகிறார்கள். வேன்களில் அடைத்து ஏற்றிச் செல்லப்பட்ட அவர்கள், வேறு ஒரு நகரத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள். சிறிது நாளில் கோவில்கார மோசே திரும்பி வருகிறான். உயிர் பிழைத்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேருகிறான். வந்தவன் கூட்டிச் சென்ற எல்லோரையும் போலிசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்கிறான். சரியாக சாகாதவர்களைத் திரும்பத் திரும்பச் சுட்டதாகவும் குற்றுயிரும் குலையுயிருமாக வீசப்பட்டவர்கள் இரண்டு மூன்று கதறியபின் இறந்ததாகவும் சிலர் தங்கள் குழந்தைகளைக் கொல்லுவதற்கு முன் தங்களைச் சுட்டுவிடுமாறு கெஞ்சியதாகவும் சொல்கிறான். தனக்குக் காலில் குண்டடிப்பட்டு மயங்கிப் போனதால் செத்துப் போய்விட்டதாக விட்டுவிட்டார்கள் என்கிறான். ஊர் அவனைப் பைத்தியக்காரன் என்கிறது. இப்படியும் ஒரு கட்டுக் கதையைச் சொல்ல முடியுமா என்று எள்ளி நகையாடுகிறது. யாரும் நம்பவில்லையே என்று அழுதுப் புலம்புகிறான். அவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டதாக நினைக்கிறார்கள்.



ஆனால் கோயில்கார மோசேவைப் பைத்தியக்காரன் என்றவர்கள் எல்லாம் கற்பனையிலும் நடக்க முடியாதென்று நினைத்த அந்தச் சித்திரவதைகள் கூடிய சீக்கிரமே சிகெட் நகர மக்களுக்கு ரத்தமும் சதையுமாக உணர்த்தப்பட்டது. சுற்றி வளைத்த நாஜி படையினர் மூன்று நாள் அவகாசத்தில் எல்லோரும் அங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று பணிக்கப்படுகிறார்கள். பணம், நகை, பொக்கிஷங்கள் எல்லாம் நாஜிக்கள் ஆக்கிரமிக்கிறார்கள். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர், சிறிது ரொட்டியோடு எல்லோரும் விரட்டிச் செல்லப்படுகிறார்கள். பெண்கள் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆண்கள் தனிக் கொட்டடிக்கு. பிரிக்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும் சித்திரவதைகளுக்குப் பிறகு உடனடியாகவே கொல்லப்பட்டுவிட்டனர் என்று ஆண்கள் தாமதமாகவே உணருகிறார்கள். எலீ வீஸலின் சகோதரியும் அம்மாவும் பிரித்துச் செல்லப்பட்ட பின்பு என்ன விதமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதைக்கூட தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. ரயிலுக்குள் திணித்து ஏற்றப்பட்டவர்களில் முதியவர்கள், நோயாளிகள் மூச்சுதிணறல்காரணமாக இறக்கிறார்கள். அப்படி இறக்கவில்லையாயினும் அவர்கள் உடனடியாக நாஜிக்கள் கொன்றுத்தள்ளுகிறார்கள். கொஞ்சம் ரொட்டியும் தண்ணீரும் சாப்பிட்டாலே உயிர்பிழைத்து உழைக்க உகந்தவர்களாக இருப்பவர்கள் மட்டும்தான் அவர்களுக்குத் தேவை. மற்றவர்கள் அவர்களுக்கு மனிதக் குப்பைகளாக இருக்கிறார்கள். அறையும் குறையுமாக எரித்துப் போடுவதன் மூலம் அவர்கள் உலகத்தினடமிருந்து எதையும் எதிர்பார்க்காத நிலைக்கு மாற்றப்படுகிறார்கள்.

தான் சிறுவன் இல்லை என்பதை நிலை நாட்டுவதும் தன் தந்தை முதியவர் இல்லை என்பதை நிலை நாட்டுவதும் எலீ வஸீலுக்குப் போராட்டமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் சிறுவர்களையும் முதியவர்களையும் பயனற்றவர்கள் பட்டியலில் சேர்த்து அவர்களை தினம், தினம் கொன்று வருகிறார்கள். இந்த நேரத்தில் அவனுடைய அப்பாவுக்கு சீதபேதி கண்டு உயிருக்குப் போராடுகிறார். அவர் துடிப்பாக இருப்பதாகக் காட்டுகிறான் எலீ. அவனுடைய முழு சக்தியையும் திரட்டி அவருக்காகப் போராடுகிறான். தன் கண் முன்னாலேயே மனித நேயம் நிலைகுலைவதைப் பார்த்து பேதலிக்கிறான்.

ஒரு வயதான தந்தை சிறு ரொட்டித் துண்டை மறைத்துவைத்துச் சாப்பிடுவதைப் பார்த்த அவருடைய மகனே, அவரை அடித்துக் கொன்றுவிட்டு அவருடைய இறுகிய கைவிரலுக்கிடையில் இருந்து ரொட்டியைப் பிய்த்துத் தின்பதைப் பார்க்கிறான். ஆனால் ரொட்டி அவன் கைக்கு வந்ததும் இன்னும் சிலர் அவன் கையில் இருந்து ரொட்டியைப் பறிக்கப் போராடுகிறார்கள். தந்தை, மகன் இருவருமே ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவருர் பலியாகிறார்கள். சாப்பாடும், தண்ணீரும் கண்ணில் படுவதே அரிதாக இருக்கிறது. இத்தனைக்குப் பின்னால் கடவுள் என்றொருவர் இருக்க வாய்ப்பில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். புதிய வகை முகாம்களுக்குச் செல்லும்போது அங்கே சீவிப் போட்ட உருளைக்கிழங்கு தோல் போன்றவைதான் மகத்தான உணவாக அவர்களுக்குக் கிடைக்கிறது. தந்தையைப் பாதுகாக்க இறுதிவரை சிரமப்படுகிறான்.

நாஜி படையின் துப்பாக்கிகளிடம் இருந்து காப்பாற்றும் மரண ஒத்திகைகள் நடக்கின்றன. ஆனால் குளிரும் பசியும் நோயும் அவரை உருக்குலைக்கிறது. இரவு அவரைப் பார்த்துவிட்டு உறங்குகிறான். காலையில் அவர் படுத்திருந்த படுக்கை காலியாக இருக்கிறது. எரிப்பதற்காக அவர் கொண்டு செல்லப்பட்ட போது ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறான் அவனால் அழக்கூட முடியவில்லை. அவனிடம் அன்புக்காக அழுவது போன்ற ஆடம்பரத்திற்கெல்லாம் திராணியில்லை. மூச்சுவிடுவது, நகர்வது போன்ற முக்கியமான செயல்களுக்கு சக்தி தேவையாக இருக்கிறது. ஹிட்லர் வீழ்ந்தான் என்ற செய்தி கிடைக்கிறது. மிஞ்சி உயிருடன் இருந்தவர்களை வதை முகாமிலிருந்து மீட்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர்கள் சாப்பிடுகிறார்கள். விலங்குகள் போல வெறித்தனத்துடன் பிடுங்கித் தின்கிறார்கள். எலீ வீஸல் போல பல அனாதைகள்.. குடும்பம், வீடு, சொத்து இழந்தவர்கள்.. அன்பு, ஆதரவு இழந்தவர்கள். வயிறு நிரம்பிய பின் அதற்கெல்லாம் வருத்தப்படுவதற்கு அவர்களுக்கு பிரக்ஞையும் நேரமும் கிடைத்தது. இப்போது அமெரிக்காவில் இதழாளராக இருக்கிறார். 150 பக்க அளவிலேயே அமைந்த இந்தச் சிறிய நூல் மனிதத் தன்மையை மிகப் பெரிய கேள்விக்குறி ஆக்குகிறது.

போற்றுகிற அத்தனை நாகரீகமும் கலாசாரமும் பண்பாடும் போர்க்கால அச்சுறுத்தலின் முன்பு எப்படி ஆட்டம் காண்கிறது என்று இதயத்தில் குத்தி உணர்த்தச் செய்கிறது. ரவி இளங்கோவன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல் மூலநூலின் அவலத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்ட வதைமுகாம் சித்திரவதை அனுபவங்கள் கிடைக்கும், அது இலங்கைத் தமிழர்கள் எழுதியதாக இருக்கும். மனிதர்கள் அனைவரும் வெகு சீக்கிரமே ஒருத்தரை ஒருத்தர் மதித்துக் கொண்டும் நம்பிக்கையோடும் வாழ ஆரம்பித்து இந்த மாதிரி நூல்கள் வராமல் இருக்க வழி ஏற்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய கோரிக்கையாக நிற்கிறது.

பதிப்பகம்:
யுனைட்டட் ரைட்டர்ஸ்,
எலீ வீஸல்,
தமிழில்: ரவி இளங்கோவன்,
130/2 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை- 86.
ரூ.70

LinkWithin

Blog Widget by LinkWithin