வியாழன், ஏப்ரல் 11, 2013

ஒரு இந்திய கிராமத்தின் கதை





இன்றைய முதல்வரும் சூப்பர் ஸ்டாரும் வசிக்கும் கேளம்பாக்கம், நான்கு தலைமுறைகளுக்கு முன்பு எப்படி இருந்தது? கூத்தாடிகளும் பாம்பாட்டிகளும் குறிசொல்லிகளும் மோடிவித்தைக்காரர்களும் கடந்து செல்லும் ஒரு எளிமையான கிராமமாக இருந்தது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு நம் இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்வதற்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது. இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்வதற்கு இத்தகைய புத்தகங்களை நாடினர். ஆங்கிலம் தெரிந்தவர்களை வைத்து அந்தந்தப் பகுதியின் நம்பிக்கைகளை, கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை, பொழுதுபோக்கு அம்சங்களைப் புத்தகங்களாகப் பெற்றே மெள்ள மெள்ள புரிந்துகொள்ள முயன்றனர்.
தமிழக கிராமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எழுதப்பட்டப்புத்தகமே இது. கேளம்பாக்கம் கிராமம்.
தோட்டக்காடு ராமகிருஷ்ணப் பிள்ளை பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இவர் ஆங்கிலத்தில் நூல்கள் படைக்கும் திறமைபெற்றவர். பத்மினி: டேல் ஆஃப் இந்தியன் ரொமான்ஸ் என்ற நாவல் இந்திய அளவில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல். ஆனால் பதிவு செய்யப்படாத எத்தனையோ ஆவணங்களில் ஒன்றாக இதுவும் காலவெள்ளத்தில் ஓரங்கட்டப்பட்ட உண்மையாக நிற்கிறது என்கிறார் இதன் பதிப்பாசிரியர் ரெங்கையா முருகன். இந்திய அளவில் முதலில் ஆங்கிலத்தில் நாவல் எழுதியவர். கிருபாபாய் சத்தியானந்தன் எழுதிய கமலா என்ற நாவலை முதல் நாவலாகக் குறிப்பிடுபவர்கள் ஒரு தமிழர் எழுதிய இதை இரண்டாவது நாவலாகக் குறிப்பிடுவதில்லை.
நூலில் மந்திரத்தால் மாங்காய் செடி உருவாக்கி, அதில் மாம்பழமும் காய்க்க வைக்கும் மேஜிக் காட்சியை நூலாசிரியர் விவரிப்பது விறுவிறுப்பானது. பிய்ந்துபோன ஒரு மாங்கொட்டையைக் கூடைக்குள் கவிழ்த்துவைத்து அது துளிர்க்க ஆரம்பித்து, வளர்ந்து, காய்த்துப் பழுக்கிற வரைக்கும் படிப்படியாக மக்களுக்குக் காட்டி ஆர்வம் ஊட்டுவார்கள் மோடிவித்தைக்காரர்கள். விறுவிறுப்பான சிறுகதைபோல அதை விவரித்து இருக்கிறார். கிராமத்தில் நடைபெறும் கூத்துபற்றி விஸ்தாரமான ஒரு பகுதி நூலில் வருகிறது. மகாபாரதக் கிளைக் கதை ஒன்றை முழுதுமாகவே சொல்லி இருக்கிறார்.
பாம்பாட்டிகள் விஷம் உள்ள பாம்புகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு முத்தம் கொடுப்பதும் அதைக் கையில் கொத்த வைத்து விஷத்தை முறித்துக்காட்டுவது அச்சமூட்டும் ஆபத்தான விளையாட்டாக இருந்தது என்கிறார் ராமகிருஷ்ண பிள்ளை.



தோட்டக்காடு ராமகிருஷ்ணன்
பதிப்பாசிரியர் ரெங்கையா முருகன்
தமிழில்: ச. சரவணன்

விலை: 110
பக்.160
சந்திய பதிப்பகம்
புதிய எண்: 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை- 83.
தொலைபேசி:044-24896979.


LinkWithin

Blog Widget by LinkWithin