திங்கள், நவம்பர் 30, 2009

வருகிறது வெட்டுப் புலி!



இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தில் நிறைய மாற்றங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இந்தியச் சுதந்தரம், தமிழகத்திலும் தடயங்களை ஏற்படுத்தியது. திராவிட இயக்கங்கள் தொடர்ந்து உருவாகின. சினிமா உருவானது. இவற்றையெல்லாம் வைத்து ஒரு நாவல் உருவாக்க நினைப்பது ஒரு வகை. ஒரு தீப்பெட்டியை ஆராய முனைந்த போது சுதந்தரம், சினிமா, திராவிடம் ஆகியவை தவிர்க்க இயலாத துணைப் பாத்திரங்களாகிவிட்டன. என் வெட்டுப் புலி நாவல் உருவானது இப்படித்தான்.

இருபதாம் நூற்றாண்டில் வெட்டுப் புலி தீப்பெட்டி நிறுவனம் உருவானது. அதனுடைய சரித்திரத்தை ஆராய்ந்த போதும் மேற்படி சினிமாவும் திராவிட சிந்தனையும் தவிர்க்க முடியாததாக இருந்தது. திராவிட உணர்வு சராசரி மக்களின் வாழ்வில் எப்படி பங்கெடுத்துக் கொண்டது என்பது உருக்கமான கதை. சினிமாவில் சவாரி செய்பவர்களை தெரியும்; சினிமா யார் மீதெல்லாம் சவாரி செய்தது என்பதும் உருக்கமான இன்னொரு கதை. இந்த இருதரப்பு மனிதரிடத்து மடிகளிலும் பாக்கெட்டுகளிலும் ஒரு மவுன சாட்சியாக மறைந்திருந்தது வெட்டுப் புலி தீப்பெட்டி.

கடந்த நூற்றாண்டு முழுக்க சட்ட நகலை எரித்த போதும் சினிமா பூஜையில் குத்து விளக்கு ஏற்றிய போதும் தீப்பெட்டி அங்கே இருந்தது.

எழுதுவதற்கு மூன்றாண்டுகள் ஆகின. இதை எழுத வேண்டும் என்று நினைத்தது பத்தாண்டுகளுக்கு முன்.

டிசம்பர் 25 அன்று சென்னை எல்.எல்.ஏ. கட்டடத்தில் வெளியாக இருக்கும் வெட்டுப்புலி நாவல், சினிமா- திராவிடம்- தீப்பெட்டி இந்த மூன்றையும் ரத்தமும் சதையுமாக இணைத்திருக்கிறது.

சுமார் நானூறு பக்க நாவல்... விலை? விலை தீர்மானம் ஆகும்போது நாவல் குறித்து இன்னும் சில தகவல்களைச் சொல்கிறேன்.

வெளியீட்டு விழா அறிவிப்புக்கு சொடுக்கவும்.
http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2258

LinkWithin

Blog Widget by LinkWithin