சனி, மார்ச் 19, 2011

வெங்கட் சாமிநாதன் கடிதம்


அன்புள்ள வெங்கடேசன்,

தமிழ்மகன் என்ற பெயர் அச்சுக்கே இருக்கட்டும். என்னவோ ஒரு மாதிரியாக இருக்கிறது.

உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அநியாயம் செய்கிறேன். உங்களுக்கும் மிக மன வருத்தம் இருக்கும். கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டியது தான். இது உங்களுக்கு மாத்திரம் செய்யும் அநியாயம். நீங்கள் இதில் புது வரவு. பத்து வருஷமாக என் அந்நியாயத்தை சகித்துக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு தோழமையோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

உங்கள் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் ஃநினைப்பில் கடந்த 70 வருட காலமாக திராவிட கழகம் அதன் கிளைக் கழகங்களும் தமிழ் வாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டு நல்லதற்கோ கெடுதலுக்கோ விளைவுகளுக்கு தமிழ் நாட்டை இரையாக்கிக் கொண்டிருப்பதை உங்களைத் தவிர வேறு யாரும் பேசவில்லை தம் நாவல்களில்/சிறு கதைகளில் ஒரு வேளை பேசுகிறார்கள் தான். ஆனால் அவை பொருட்படுத்தத் தக்கதல்ல. நீங்கள் தான் முதல் தடவையாக ஒரு இலக்கிய கவன்ம் பெறவேண்டிய எழுத்தைத் தந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நான் இது பற்றிப் பேசும் போது இது ஒரு முக்கிய விஷயமாக இருக்கும்.

உங்கள் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிறைய. யார் எப்போது வருகிறார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன உறவு. அவர்களுடைய எண்ணங்கள் என்ன என்பதை மனதில் இருத்திக் கொள்வது மிகக் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் உங்களிடம் அந்த விவரங்கள் கேட்டேன். நீங்களும் கொடுத்தீர்கள். நான் மறுபடியும் அந்த விவரப் பட்டியலை உடன் வைத்துக்கொண்டு நாவலைப் படித்து, பட்டியல் உதவியில்லாமலே என்னுள் வாங்கிக்கொண்டு எழுத வேண்டும் என்று இருக்கி?றேன். கட்டாயம் எழுத வேண்டிய எழுத்து உங்களது. ஆனால் கொஞ்சம் எனக்காகக் காத்திருங்கள்.

உங்கள் எழுத்தோ நீங்களோ அலட்சியப்படுத்தப் படவில்லை என்பதைச் சொல்லவே இந்தக் கடிதம்.

அன்புடன்,

வெ.சா.

LinkWithin

Blog Widget by LinkWithin