புதன், நவம்பர் 12, 2008

புண்ணியவதி

தாத்தா பழம்போல இருந்தார். மரக் கட்டிலில் அமர்ந்து கிண்ணத்தில் பொரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எண்பத்தைந்தாவது வயதிலும் அவருக்கு சில பற்கள் இருந்தன. பார்வை மங்கிவிட்டதால் குத்துமதிப்பாக ஓரிடத்தை நோக்கியபடி பேசினார்.

"'ஹலோ யங் கேர்ள்... பொரி சாப்பிடு'' என்று பொரியேந்திய கையோடு காற்றில் துழாவினார். நான் அவர் கையைப் பற்றி அதை வாங்கிக் கொண்டேன். ஏனோ எனக்குக் கண்களில் நீர் துளிர்த்தது.

"இங்கிலீஷ் நல்லா பேசுவியா?''

"பேசுவேன் தாத்தா...''

"வந்ததிலிருந்து பேசலையே?''

"நீங்களும்தான் பேசலை''

மடக்கிவிட்டதை ரசிப்பதுபோல் சிரித்தார்.

"இந்தக் காலத்துப் பசங்களுக்கு இங்கிலீஷ் அறிவு கம்மிதான். அவன் என்னமா பேசுவான் தெரியுமா?.. அவன் பேரு.... அட என்னம்மா இது என் பேரையே மறந்து போய்விட்ட மாதிரி... "சி.எம்." ஆகூட இருந்தானே ரெண்டு வருஷம்? ''

"அறிஞர் அண்ணாவா?''



"ஆங்... எங்க காலேஜ் ஸ்டூடண்ட்தான். இங்கிலீஷ்ல அடுக்கு மொழி பேசுவான். பிற்காலத்தில் அண்ணா ரொம்ப பிரபலமாகி காலேஜ் ஃபங்ஷன்ல பேசுவதற்கு வரும்போதெல்லாம், புரொபஸர் ராவ் சாகேப் ஆர்.கிருஷ்ணமூர்த்தில்லாம் "மை பாய்'னு அண்ணாவைக் கூப்பிடுவார். இத்தனைக்கும் கிருஷ்ணமூர்த்தி பிராமின். அண்ணா பெரியார் கட்சி'' ஞாபகப்பின்னல்கள் அறுந்துவிடாமல் இருக்க அவசர அவசரமாகக் கூறுவது மாதிரி இருந்தது.

தாத்தா மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து தனியாக் எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்தவர். படிப்பு வாசனையை தன் குடும்பத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்.

"என்னமோ என்மேல உங்க அப்பனுக்குக் கோபம். நீ இங்க வந்திருப்பது அவனுக்குத் தெரியுமா?''

"தெரியாது. ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டார் தாத்தா.''

"உடம்பு எப்படி இருக்கு அவனுக்கு?''

"அப்படியேதான் இருக்கு.''

"இருமலும் சளியுமா இருக்கிறதா சொன்னாங்க. இப்பவும் சிகரெட் பிடிக்கிறானா?''

"இல்ல தாத்தா''

அவ்வளவு பெரிய வீட்டில் தாத்தா மட்டும்தான் இருந்தார். சாப்பாடெல்லாம் மாதக் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒரு அம்மா சமைத்துக் கொண்டு வருகிறார். துணிமணி துவைத்துப் போடுவது, தண்ணீர் பிடித்து வைப்பது இத்யாதி வேலைக்கெல்லாம் சேர்த்து அந்த அம்மாவுக்குச் சம்பளம். பீரோவைத் திறந்து செலவுக்கான பணம் எடுப்பதுவரை அந்த அம்மாவுக்கு உரிமையிருந்தது.

"தேவகி செத்து பத்து வருஷமாச்சு. அவ கூட வாழ்ந்ததே கனவு மாதிரி ஆகிடுச்சு'' என்று பாட்டியைப் பற்றி நினைவுக் கூர்ந்தார்.

"உங்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா. எப்ப உங்கப்பனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாளோ அப்பத்தலர்ந்து என்கிட்ட தாம்பத்தியம் வெச்சுகிட்டதில்ல. என்னமோ அப்படியொரு "பிரின்ஸிபிள்' அவளுக்கு. இருபத்தஞ்சு வருஷம் சன்யாசி மாதிரிதான் வாழ்ந்தா.''

தாத்தா எதைப்பற்றிப் பேசினாலும் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் இருந்தது.

வீராப்பும் தொனியும் அற்று அலங்காரம் இல்லாமல் வந்து விழும் அனுபவ உண்மைகளை, சும்மா செவி சாய்த்துக் கொண்டிருப்பதே நிம்மதியளிப்பதாக உணர்ந்தேன்.

"ஏம்மா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே? இப்ப என்ன ஏஜ் உனக்கு?'' என்றார்.

"இல்லை தாத்தா. நான் படிக்கப் போறேன்.''

"அதுக்கும் இதுக்கும் என்னம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டுகூடத்தான் படிக்கலாம்? நா படிக்கலையா?''

"உங்க காலம் வேற. இப்பக் கூட படிக்கிறவங்களலாம் கிண்டல் பண்ணுவாங்க''

"எது நல்லதோ அது எல்லாம் கிண்டலாப் போச்சு ''

பொரிக்கிண்ணத்தை வைத்துவிட்டு "போதும்மா. கொஞ்சம் தண்ணிகுடு'' என்றார்.

பானையில் இருந்த தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.

"ஹாட் வாட்டர் இருக்குமே?... சரி பரவால்ல'' அதையே குடித்தார்.

"உங்கப்பன் மேல எனக்குக் கோபம்லா இல்லம்மா. இன்னொரு பொண்ணுகூட தொடர்பு வெச்சிருக்கான்னு தெரிஞ்சதும் "இனிமே என் முகத்தில முழிக்காதடா, போயிடு'ன்னு சொல்லிட்டேன். ரோஷக்காரன். அப்ப போனவன்தான். அந்தப் பொண்ணுக்குக் குழந்தைக் குட்டி எதுவும் கிடையாதாமே?...''

"ஒரே ஒரு குழந்தை பொறந்து இறந்துடுச்சு தாத்தா. அப்புறம் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணிக்கிட்டாங்களாம். போன வருஷம் அவங்களும் இறந்துட்டாங்க''

"ச்சோ.. தெரியாதே'' என்றார் தாத்தா.

"அதுக்கப்புறம் உங்கப்பா என்னைப் பார்க்க வந்ததில்ல. முப்பது வருஷமாச்சு அவனைப் பார்த்து. "முகத்தில முழிக்காதடா'னா என்ன அர்த்தம்னு இப்ப யோசித்துப் பார்த்தா வேடிக்கையா இருக்கு. ஒரே வார்த்தைக்கு அத்தனை வலிமை. என்னமோ அது வலிமை மாதிரிகூட தெரியல. "முழிச்சா' என்னன்னு நினைக்கும்போது அதற்கு அவசியம் இல்லாமப் போயிருக்கும். தயக்கம் இருந்திருக்கும். அப்புறம் அதுவே பழக்கமாயிடும். வாழ்க்கையே ஒரு பழக்கம்தானேம்மா?''

வார்த்தை ஜோடனைக்காக ரொம்ப சிரமப்படாமல் இதைச் சொன்னார். ""கல்யாணம் பண்ணி வெச்சு அஞ்சு வருஷமா குழந்தை பொறக்காம இருந்தது. குழந்தை பெத்துக்கணும்னு இப்படி கல்யாணம் பண்ணக்கிட்டான். இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். ஏதோ தாத்தா சொல்றார்னு கேட்டுக்கிட்டு இருக்கே. இல்லையா மீனா?'' என்றார்.

நான் முதலில் தலையசைத்தேன். தாத்தா பார்வைக்கு நான் ஆமோதித்தது தெரிந்திருக்காது என்பதை உணர்ந்து, "ஆமா'' என்று சிரித்தேன்.
"என் தங்கம். கிழவன் சொல்றதைச் சொல்லட்டும். கேட்டு வைப்போம்னு கேட்டுக்கிற?''


"இல்லை தாத்தா. இது வரைக்கும் அப்பா சொன்னதைத்தான் கேட்டிருக்கேன். நீங்க எப்படிச் சொல்றீங்கனு பார்க்கிறேன்.''

"யார் பக்கம் நியாயம் இருக்கு?'' குழந்தைத்தனமான குதூகலத்துடன் சவால் விடுவதுமாதிரி கேட்டார்.

"இதில இரண்டு பக்கம் இருக்கிற மாதிரியே தெரியலை. இரண்டும் ஒரே பக்கம்தான்""

"பிரில்லியண்ட் கேர்ள். அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் புரிஞ்சுக்க முடியும்'' என்றார். "இதில் காலத்தையும் இடைவெளியையும் மறந்துவிடக்கூடாது'' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

ஆழ்ந்த யோசனையில் சிறிது நேரம் இருந்தார். நான் அவர் கட்டிலில் இருந்த திருமூலர் நூலை எடுத்து மெல்ல இங்கும் அங்குமாகப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன்.

கண்தான் தெரியவில்லையே அப்புறம் எதுக்கு புத்தகத்திலேயே வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.

"உன்னோட சித்தி இறந்து போனது தெரியவே தெரியாதும்மா. புண்ணியவதி... அவ முகத்தை ஒரு தடவைக்கூட பார்த்ததில்லை'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.

மூடிய மேல் துண்டுக்குள் அவர் உடல் குலுங்குவது தெரிந்தது.

ஒளவை

ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதை நான் அமுதாவிடம் விளக்கியிருக்கிறேன். அவற்றை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவில்லை.
அமுதா என் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தாள். ஆரம்பித்தில் அதை நான் உணரவே இல்லை.

ரயில் சினேகம் போல இதை ஆபிஸ் சினேகம் என்று நினைத்திருந்தேன். அவள் அப்படி நினைக்கவில்லை. அவள் மீது மரியாதை செலுத்திக் கொண்டிருந்ததை எல்லாம் நான் ரொம்ப நாளாகக் கவனிக்காமல் இருந்துவிட்டது இப்போது வருத்தமாக இருக்கிறது.

நான் சுழலில் சிக்கிய சிறிய மரத்துண்டு போல அவளுடைய நட்பில் இழுத்துச் செல்லப்பட்டேன்.

"சார்... யுனிவர்சிட்டி வரைக்கும் போயிட்டு வரலாமா?''என்றாள். அவளுடைய வண்டியில் இருந்த மழைக் கோட்டை எடுத்துக் கொண்டு என்னுடைய ஸ்கூட்டரிலேயே வந்தாள்.

அவளுடைய ஹெட் ஆப் த டிபார்ட்மென்ட் வகுப்பெடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். வகுப்பு முடிந்து அவர் வரும்வரை நீண்ட படிக்கட்டுகளில் அமர்ந்து காத்திருந்தோம். மழைத் தூறிக் கொண்டிருந்தது. மழைக் கோட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

எதிர்பார்க்காத தருணத்தில் "சொல்லுங்கோ சார்'' என்றாள்.




எதைப் பற்றியாவது சொல்லிக் கொண்டே வந்து அதைப் பாதியில் நிறுத்திவிட்டேனா என்று நான் அவசரமாக நினைவுபடுத்திப் பார்த்தேன். நான் அப்படி நினைப்பதைப் புரிந்து கொண்டவள் போல "ஏதாவது சொல்லுங்க சார்'' என்றாள் கன்னத்தில் கையூன்றி என்னைக் கூர்மையாகக் கவனித்தபடி.

""நிகலாய் கோகலின் "ஓவர் கோட்' மாதிரி நாமே ஆளுக்கு ஒண்ணு மாட்டிக் கிட்டு இருக்கோம்'' என்றேன்.

""அது யாரு நிகலாய் கோகல்?''

நான் நிகலாய் கோகலின் எழுதின "மேல் கோட்டு' சிறுகதை பற்றிச் சொன்னேன். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

பெண்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டும்தான் இப்படி மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். இங்கிதம் பார்க்காமல் நாசுக்குக்கான முனைப்பில்லாத சிரிப்பு அது. சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு "அப்புறம்?'' என்று ஆர்வமாகக் கேட்டாள்.

மேல் கோட்டு பற்றியில்லாமல் அங்கு பட்டாணி விற்றுக் கொண்டிருப்பவனைப் பற்றிச் சொன்னாலும் அமுதா ஆர்வமாகக் கேட்டாள். இது அமுதாவின் சுபாவம்.

நேரமாகிக் கொண்டிருந்தது. அவளுடைய மேடம் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த இடத்துக்கே சென்றோம். பெண்பால் புலவர்கள் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் அவர்.

"ஒளவையார் என்ற பெயரில் பல பெண்பால் புலவர்கள் இருந்தார்கள். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவை வேறு. முருகனிடம் சுட்டப் பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒüவை வேறு. சங்க காலத்தில் காதலைப் பற்றிப் பாடிய ஒளவைகளே அதிகம். ஆக, ஒளவைகள் என்றால் பாட்டி என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய இளம் ஒளவைகள் இருந்திருக்கிறார்கள்...''

வகுப்பு நடந்து கொண்டிருந்த அறையின் வராண்டாவில் நடை போட்டவாறு இருந்தோம்.

""நிஜமாகவா சார்?''

"ஆமா'' என்றேன்.

"நான் என்ன கேட்டேன். நீங்க எதற்கு ஆமா'னு சொன்னீங்க?'' என்று சிரித்தாள்.

"ஒளவைதானே?''

""சாரி சார். நான் ஏதோ நச்சரிக்கறதால சும்மாவாவது "ஆமா'னு சொல்லிட்டீங்களோன்னு நினைச்சேன்.''

""உங்களைப் போய் நச்சரிக்கறதா நினைப்பேனா?''

"நினைக்க மாட்டீங்க. ஆனா நான் நச்சரிக்கிறேன்னு எனக்கே தெரியும்.''

"அமுதா, ஒளவை நல்லா இருக்கணும்ணு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் கதையில ஒளவையை சின்னப் பெண்ணா கற்பனை செய்து பாருங்களேன்''

""நல்லா இருக்குல்ல?'' என்று வியந்தாள்.

"சங்க காலத்தில் இவ்வளவு பெண்பால் புலவர்கள் வேறு மொழிகளில் இருந்தார்களா'னு தெரியல. இங்க இவ்வளவு பேர் இருந்ததிலே இருந்தே பெண்கள் ரொம்ப சுதந்திரமா இருந்தாங்கன்னு தெரியுது. ஒளவையும் அதியமானும் இன்டலக்சுவல் ஃப்ரண்ட்ஸô இருந்திருக்க வாய்ப்பிருக்குனு தோணுது''

""இன்னைக்கு இங்கு வராம போயிருந்தா. இந்த அருமையான விஷயம் பத்திப் பேசாமப் போயிருப்போம் இல்லையா?''

நான் சொல்லுகிற விஷயத்தைக் கேட்டு அளவுக்கு அதிகமாகவே வியந்தாள் அமுதா. அவள் என் மீது வைத்திருக்கிற அன்பும் மரியாதையும் என்னைக் கவனத்துடன் பேசவைக்கும். ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்ட மாதிரி அஞ்சவும் செய்கிறேன் சில நேரம். அவளுடைய வியப்புக்கு உகந்த விஷயங்களைப் பேச வேண்டும் என்றும் அவள் என் மீது நம்பிக்கைக்கு உரியவனாக என்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் ஓயாமல் போராடுகிறேன்.

சட்டென்று மேகம் கவிழ்ந்து வடிகட்டிய சூரிய ஒளி வளாகம் முழுதும் சூழ்ந்தது. அமுதா மேடத்தைப் பார்த்து பட்ட மேற்படிப்பு முடித்து பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிப்பது குறித்துப் பேசிவிட்டு வந்தாள்.

அவளை ஹாஸ்டலில் கொண்டுபோய்விடும்போது நன்கு இருட்டிவிட்டது.

திடீரென்று அவளுக்கு மாப்பிள்ளை தேர்வாகிவிடவே, ஆபிûஸவிட்டும் ஹாஸ்டலைவிட்டும் அவள் விலகிக் கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு அந்தத் திடீர் தனிமை உலுக்கிவிட்டது ஆறுமாதம் ஹாஸ்டல் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் என்கூட நிழல்மாதிரி வியாபித்திருந்தவள் ஏற்படுத்தியிருந்த தாக்கம்.

இடையில் ஊரில் இருந்து அவள் "எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு சார்'' என்று போன் செய்த போது ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சலைப் பற்றி விசனப்பட்டேன்.

அவள் வருத்தப்பட்டது எனக்கு மேலும் வருத்தமாகிவிட்டது.

"அதனால என்ன சார். நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்''

எனக்குக் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

"அமுதா நீ ஏன் ஆம்பளையா பிறக்காமப் போனே? என்ன இருந்தாலும் நாம முன்னமாதிரி பேசிக்க முடியும்னு நினைக்கிறியா?''

கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் நான் உணர்ச்சிவசப்படுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"முடியும் சார். நாம எப்பவும் போல இருக்கலாம் சார்... கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்''


அமுதா அவளுடைய திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கணவராகப் போகிற அதிர்ஷ்டசாலியும் கூட வந்திருந்தார்.

என் மகளுக்குக் கரடி பொம்மை, ஸ்வீட் என்று வாங்கிவந்திருந்தாள்.

அவர் என்னுடன் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.

"என்னுடைய ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு இவங்க வரணும்னும் இவங்களோட ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு நான் வரணும்னும் ஒப்பந்தம். என்னுடைய ஒரே ஒரு ஃப்ரண்ட் இவர்தான்னு சொன்னாங்க. அதான் உங்களை இன்வைட் பண்ண நானும்கூட வந்தேன்'' என்றார்.

"ஹாஸ்டல் வெறுப்புக்கெல்லாம் சார்தான் ஒரே ஆறுதல்'' என்றாள் அமுதா குறுக்கிட்டு.

என் கண்கள் கலங்கின. என் நல்ல தோழிக்கு நல்ல கணவர் கிடைக்கப் போகிறார் என்று பூரித்தேன்.

என் மனைவி டீ எடுத்துக் கொண்டு வந்தாள். எங்கள் வீட்டில் உபசரிப்பு என்றால் டீ தான். இரண்டுபேருமே டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்று எனக்குத் தெரியுமாதலால் நான் அதைத் தடுத்துப் பார்த்தேன்.

அமுதா "இருக்கட்டும் சார், நான் சில வேளைகளில் டீ குடிப்பேன்'' என்றபடி "சொல்லுங்க சார்'' என்றாள்.

நான் எதை எங்கிருந்து தொடங்குவது என்று புரியாமல் ""கார்ட்டூன் படங்கள்ல டாம் அண்ட் ஜெர்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும். சி.டி. இருக்கு பாக்றீங்களா?'' என்றேன்.

"போடுங்களேன்'' அதிர்ஷ்டக்காரர்தான் சொன்னார்.

பூனையை எலி தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். மனம்விட்டுச் சிரித்தாள். "பிரில்லியண்ட் காமெடி..'' என வியந்து கொண்டே அமுதா தன் ஹான்ட் பேகிலிருந்து எதையோ எடுத்து என் கையில் திணித்தாள்.

நெல்லிக்காய்.


(ஆனந்தவிகடன் - 2003)

LinkWithin

Blog Widget by LinkWithin