புதன், ஜூலை 30, 2008

தேடல்

தமிழ்மகன்

கிழவி அநாவசியத்துக்குப் பயந்தாள். நகரத்தின் வேகம் அவளை மூச்சுத் திணற வைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு நெரிசலையும் வாகனங்களின் அடர்த்தியையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
குருவியூர் நகரத்தைப் பற்றி சமீபத்தில் தான் குப்பம்மா மூலம் கேள்விப்பட்டிருந்தாள்.
"ஏண்டியம்மா உம்புள்ள அங்கதான் காய்கறிக் கடை வெச்சிருக்கான்... என்னடா எப்படியிருக்கேன்னு விசாரிக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே டபாஞ்சிட்டான்''
கிழவிக்கு ஜெயராமனை நேரிலேயே பார்த்துவிட்டது போல் இருந்தது. "நெசமாவா?'' என்றாள்.
"ஐய... உங்கிட்ட பொய் சொல்லித்தான் மெத்த வூடு கட்டப்போறேன்... மெய்தான்றேன்...''
"எங்க இருக்குது அந்தக் குருவியூரு?'' என்று விசாரித்தாள் கிழவி.
குப்பம்மாள் வழித்தடம், இறங்க வேண்டிய ஸ்டாபóபிங் எல்லாவற்றையும் அக்கறையாகச் சொல்லி பஸ் ஸ்டாண்ட் வரை வந்து வழியனுப்பியும் வைத்தாள்.
பஸ்ûஸ விட்டு இறங்கியதும் நகரத்து நெரிசலைப் பார்த்து மிகவும் குழம்பிப் போனாள். யாரை, எப்படி விசாரிப்பது என்று புரியாமல் இரண்டு முறை குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டு பிரமித்து நின்றாள். முதல் அடியை எந்தத் திசை நோக்கி வைக்கலாம் என்பது அவளுக்குப் புரியவில்லை.
வாகனங்களின் புயல் வேகங்களுக்குப் பயந்து பின் வாங்கி, ஒரு டீக்கடை ஓரம் அடித்துச் செல்லப்பட்டாள். அங்கே அனல் பறக்க டீ குடித்துக் கொண்டிருந்தவனை விவரம் கேட்க எத்தனித்தாள்.
அவன் ஒரே வாயாக டீயைச் சாய்த்துக் கொண்டு, "சில்ற இல்ல...'' என்று சொல்லிவிட்டு, வேகமாக ஒரு பஸ்ûஸ நோக்கி ஓடினான்.
கிழவிக்கு அவன் சொன்னது கொஞ்ச நேரத்துக்குப் புரியவே இல்லை.
"ஜெயராமா நா உனக்கு என்ன பாவம்டா செஞ்சேன்.... 'என்று ஹீனமாக முனகிக் கொண்டு ஏதோ தீர்மானத்தோடு நடக்க ஆரம்பித்தாள்.
காலும், கண்ணும் துவண்டு போகும் வரை நடந்தாள். அவளுக்கு எல்லாமே ஜெயராமனாகத் தெரிந்தது. சிலரைச் சற்றே திடுக்கிட்டு "டேய்' என்று கூப்பிட்டு விடும் கடைசித் தருணத்தில் சுதாரித்தாள். அவர்களெல்லாம் ஜெயராமன்கள் இல்லை.
பசி மயக்கம் கீழே தள்ளப் பார்த்தது. இருக்கிற கொஞ்சம் சில்லறையில் எதையாவது வாங்கிச் சாப்பிடத் துணிவில்லை.
சாப்பிடலாமா? வேண்டாமா? என்று யோசித்து யோசித்தே சோர்ந்து போனாள்.
சுருண்டு, ஒரு இடத்தில் உட்கார்ந்தே விட்டாள். உச்சி வெய்யில் பிளந்தது. காலையில் ஒரு வாய் கூழாவது குடித்திருந்தால் அவளால் சமாளித்திருக்க முடியும்.
மரத்து நிழலில் அரைமணி நேரம் உட்கார்ந்ததில் கொஞ்சம் சாப்பிட்ட திருப்தி.
புடவையிலிருந்த கிழிசலைப் பார்த்து அலுத்துக் கொண்டு, கிழிந்த இரு பகுதியையும் சேர்த்து முடிப் போட்டுக் கொண்டாள். இந்தக் கோலத்தில் பையன் நம்மைப் பார்த்தால் துடித்துப் போய் விடுவான்.
"தேய்... கட்டிக்கிறதுக்கு வேற புடவையே கிடைக்கலையா உனக்கு?''
"நீ போயிட்டதுக்கப்புறம் நெலம ரொம்ப மோசமாயிடுச்சு நைனா.''
"இந்தப் புடவை புடிச்சிருக்குதா பாரு.''
"ம்...''
"இந்த டிசைன்ல ரெண்டு புடவ குடுப்பா''
மரத்தின் நிழல் நழுவி வேறு பக்கம் போயிருந்தது.
கிழவி மீது வெயில்... கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள்.
ஜெயராமனைப் பார்த்துவிட்டால் நமக்கு ஒரு குறைவும் இல்லை. அந்தச் சிறுக்கியும் கூடதான் இருப்பாள்.... அவளாலதான் எல்லாமே... அடியோட மாத்திப்புட்டா... ச்
எழுந்து பக்கத்திலிருந்த டீக்கடைக்குப் போய், ""பன்னு ஒண்ணு குடுக்குறியாப்பா?'' என்றாள்.
"போ...போ... வேற வேலையில்ல'' என்று விரட்டினான் கடைக்காரன்.
அவன் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து, அவசரமாக, "துட்டு இருக்குதுப்பா' என்று முந்தானை முடிச்சை அவிழ்த்தாள்.
கடைக்காரன் ஒரு மாதிரியாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பெரிய கண்ணாடி புட்டியைத் திறந்து பன்-ஐ எடுத்த போது அதிலிருந்து ஈயொன்று அவசரமாகத் தப்பியது.
ஞாபகமாகப் பன்னீர்ப் புகையிலை வாங்கி கடைவாய்ப் பற்களில் இடுக்கிக் கொண்டாள். அதுதான் வைத்தியம். பசிக்கிறதே என்று அடிக்கடி பன் சாப்பிட முடியுமா?
கிழவி புதுத் தெம்புடன் தேட ஆரம்பித்தாள். லாரிகள் ஏடாகூடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தயங்கி நின்றாள். ஜெயராமன் இங்குதான் எங்கோ ஒளிந்திருப்பதாக நினைத்து லாரிகளுக்கு இடையில் கூர்மையாகத் தேடினாள். லாரி எடை தளத்தில் நின்று கிழநரி மாதிரி சுற்றிலும் பார்த்தாள்.
கண்ணாடி அறையில் இருந்து ஒருவன் அதட்டினான். "ஏய்... கெழவி... இன்னா? உன்னை எடை போடணுமா?'' என்றான்.
கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. "எம்புள்ள ஜெயராமன ஒரு மாசமா காணலப்பா...'' என்றாள்.
ஒரு கிளீனர் பையன் ஆவேசமாக வெளியே வந்து, "இது நாப்பது டன் எடை போடற மிஷின்... கொஞ்ச தூரம் போனா நடராஜா தியேட்டர் வரும். அங்கே போய் நாலணா போட்டு உன் எடையைக் கண்டுக்கலாம்...'' என்று சொல்லிவிட்டு ஓஹோவென்று சிரித்தான்.
கிழவி பதிலுக்கு, "காய்கறிக்கடை வெச்சிருக்கான் தம்பி... ஜெயராமன்னு பேரு...'' என்றாள்.
"த்தேய்... போன்னா போவியா, உன்னை மாதிரி ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பார்க்கறேன்... பிச்சை எடுக்கறதுல இதுலாம் ஒரு தினுசு'' என்றபடி கிழவியைத் தரதரவென்று இழுத்து வந்து நடு ரோட்டில் தள்ளினான்.
ஆத்திரமும், இயலாமையும் சேர்ந்து கிழவி அழ ஆரம்பித்தாள். ரோட்டில் போய்க் கொண்டிருந்த ஒருவனை நிற்க வைத்து, "என்னைப் போய் பிச்சைக்காரினு சொல்றானுங்களே... அவனுக்கென்ன கண்ணு அவிஞ்சிப் போச்சா? எம் மூச்சியப் பாரு நா பிச்சைக்காரியா? என் காதைப் பாரு... ம் தெரிதில்லை...?'' என்றாள்.
அவள் காதில் கம்மல் மாட்டும் இடத்தில் இருந்த பிரம்மாண்டமான துளையைப் பார்த்துவிட்டு, அவன் சற்றே திகைத்தாற்போல், "என்னது?'' என்றான்.
"எங் காதைப் பார்த்தா தெரியலை? எவ்வளவு ஓட்டைக் கிடக்கு... கொப்பு போட்டிருந்தேன். நடுக்காது போட்டிருந்தேன். தண்டட்டி போட்டிருந்தேன். மூக்குல ரெண்டு பேஸ்ரி... எல்லாந்தா போட்டிருந்தேன். குடிகார ஆம்பளை எல்லாத்தையும் அழிச்சிட்டு சேர வேண்டிய எடத்துக்குப் போய் சேர்ந்துட்டான்'' என்றபடி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பிக்கவே, "எனக்கு டயமாச்சி'' என்று அவளிடமிருந்து கையை உதறிக் கொண்டு நழுவினான் அவன்.
கத்தரிக்காய் கூடையைத் தூக்கிக் கொண்டு, நடையில் கட்டுப்படாத ஒருவித மாரத்தான் ஓட்டத்தில் போய்க் கொண்டிருந்தான் ஜெயராமன். அவனை ஒட்டி கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை என்று மாறி, மாறி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி. ஜெயராமனை முதுகில் சீண்டி, "அங்க பாருங்க உங்கம்மா...'' லாரி ஷெட் பக்கம் கையைக் காட்டினாள்.
ஜெயராமன் திரும்பிப் பார்த்து "தெரியும்... பேசாம வா'' என்றான்.

tamilmagan2000@gmail.com

இரக்கம்

தமிழ்மகன்

ஏற்கெனவே ஒருவன் செத்துப் போயிருந்தான்.

எத்தனையோ பேர் செத்துப் பிழைத்திருந்தார்கள்.

இப்பேர்பட்டவர்களைப் பிழைக்க வைப்பதற்காகவே எங்கோ வேலை செய்து வந்த கம்பவுண்டர்கள் எல்லாம் கூட்டு ரோட்டில் "டாக்டர் கடைகள்' வைக்கத் துவங்கியிருந்தார்கள். எவனாவது ஒரு டாக்டரின் பெயரை போர்டில் போட்டுவிட வேண்டியது. சற்றே விவரமான ஆள், டாக்டரையெல்லாம் விசாரித்தால், "வெளியே போயிருக்கார்...' என்று என்னமோ அப்பத்தான் வெளியே போனது மாதிரி சொல்வார்கள்.

தலைவலி, வயிற்றுவலி, சேற்றுப்புண், சீதபேதி இத்யாதி விஷயங்களுக்குத் தயாராய் சில ஊசி மருந்துகளை வைத்துக் கொண்டு, வெறியோடு குத்துவதற்குக் காத்திருந்தார்கள். பூச்சி மருந்து அடித்து மயங்கி விழுந்தவனென்றால் லட்டு மாதிரி. எழுநூறு ரூபாய் வசூலிக்கிறார்கள்.

" எங்க காலத்துல எப்ப இப்பிடியாகியிருக்கும்? அப்ப இல்லாத பூச்சில்லாம் இப்ப எங்கிருந்து வந்தது? எல்லாம் கலி கலி'' என்று தலையில் அடித்துக் கொண்டார் சரவணரெட்டி.

களை எடுத்துக் கொண்டிருந்ததால் இடுப்பு பிடித்துக் கொண்டதை நிவர்த்தி செய்யும் பொருட்டு, "அப்பல்லா பூச்சே அடிக்காதா?'' என்று கேட்டபடி நிமிர்ந்து நின்றான் ஒருவன்.

"வெறப்பாடு முடிஞ்சா, வேலை முடிஞ்சாப்பல'' என்றார். ஆறு மாசம் கழிச்சு வந்து அறுக்க வேண்டியதுதான்.

"இப்ப மூணுமாசத்துல இல்ல அறுக்கிறம்...? அதுக்கேத்த, செவரெட்சணை செய்றோம்...''

"இன்னொருத்தன், ரெட்டியாரே நெறைய பூச்சி...'' என்றபடி கொத்தாகப் பயிரைப் புடுங்கிக் காண்பித்தான்.
நன்றாய் முளைத்திருந்த பயிர், கதிர் விடும் நேரத்தில் பழுத்துத் கருகியிருந்தது.

"எல்லாத் தலைவயல்லயும் அப்படிதான்'' என்று இன்னொருவன் எழுந்து நிற்க, ரெட்டியார் உஷாராகி, ""பேச்சுக் குடுத்தா போதுமே... கத பேசிக்கிட்டே கூலி வாங்கிடுவீங்களே'' என்றார்.

அந்தப் பக்கமாய் போய்க் கொண்டிருந்த ஆறுமுகரெட்டி, "வேலையைக் கவனிங்கடே'' என்றபடி அருகில் வந்தார்.

சரவண ரெட்டி, "பரவால்யா பயிறு?'' எனóறார்.

"எங்க?'' என்று சப்புக் கொட்டினார் ஆறுமுகம்.

"எவ்ளோ நட்டுருக்கே?''

"தெரியாத்தனமா ஏழு ஏக்கர் நட்டுப்புட்டேன் பூச்சி ஏறிங்கியிருக்குது. போட்ட நெல்லு வருமான்னுருக்குது.''

" என்னமோ மருந்து சொல்றாங்களே அடிச்சியா?''

"எக்காளக்ஸ்... செவின்... பூச்சி என்னமோ சாவுது... அடிக்கிற ஆளும்ல சேந்து செத்துப் போறான்?''

"நானும் அதாம் பாக்றேன்... நேத்து அப்டி நான் இங்கிருந்து பாக்றேன்... அதோ முதலியார் தலைல சிங்காரம் ஸ்பிரேயர்ல மருந்தடிக்கிறான். ரெண்டாவது ரவுண்ட்ல தண்ணியடிச்வனாட்டம் இப்படியும் அப்படியும் ஆடினான். அப்புறம் பாத்தா... மிஷினையெல்லாம் அப்படியே போட்டுட்டு வரப்ல போóய்ப் படுத்துட்டான்.''

"ஐயோ, அப்புறம்...? இவ்ளோ நடந்திருக்கு. எனக்குத் தெரியாதே.''

"நா ஒரே ஓட்டமா ஓடுறேன். அதுக்குள்ள என்னடாது திடீர்னு சத்தத்தையும் காணம். ஆளையும் காணம்னு பாதி பேர் ஓடியாற...''

" ஆ...ங்''

"ஆளு வரப்ல மூச்சு பேச்சில்லாம கிடந்தான். தூக்கிப் போய்க் களத்து மேட்ல போட்டு, மூஞ்சில தண்ணிய அடிக்கவும், ஆளு அப்பிடி இப்பிடி எழுந்து குந்தினான்.''

"அப்ப பொழச்சிட்டான்?''

"பொழச்சிட்டான், பொழச்சிட்டான்... நம்ம மாணிக்கம் என்ன சொன்னான் தெரியுமா?''

"எந்த மாணிக்கம்?''

"அட! நம் புளிமூட்டை...''

"ஆங்...ஆங்...''

"டே சிங்காரம் அப்படியே காலைப் பரப்பிக்குனு படுடா.. கண்ணைத் தெறக்காதே... முதலியார் கிட்ட ஆயிர் ரூப் கறந்திடலாம்ன்றான்...''

"óஅதிலியும் முதலியார்தாங் குடுப்பாரு...''

"பண்ணன கலாட்டால முதலியார் ஆடிப் போயிட்டான் பர்ஸ்டு... அப்புறம் உஷாராயி பத்ரூபா செலவுக்குக் குடுத்து விட்டான்...''

ஆறுமுக ரெட்டி ""கிக், கிக்'' என்று சிரித்தார். "கல்லுல நாறு உரிப்பானே முதலி'' என்றார்.

"ச்செரி... அதாம் பயமாயிருக்கு. எங்க நம்ப நெலத்தில பூச்சி மருந்து அடிக்கப் போயி மண்டையப் போட்டான்னா... போனாப் போகுது ரெட்டியாரே ரெண்டு ஏக்கரா அவங்க குடும்பத்துக்கு எழுதி வெச்சிடுன்னு சுளுவா சொல்லிடுவானுங்களே?''

"ஏன்... இதே மாணிக்கமே ஆரம்பிச்சி வெப்பான்.''

மொத்தத்தில் மருந்தடிக்கத் தோதாய் ஒருவனும் இல்லை. ஒரு நாளெல்லாம் ஒரு ஏக்கர் அடிக்கிறவன்தாóன். அதுவும் நான்கு நாள் சேர்ந்தாற்போல் அடித்தால் ஒருநாள் மயங்கி விழுந்தார்கள். குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் நமக்கு வேலை செய்யும்போது செத்துப் போய்விடக் கூடாதே என்பது ஒவ்வொருவரின் அந்தரங்கப் பிரார்த்தனையாய் இருந்தது.

ஆத்தூர் செல்வத்தைப் பற்றி, அதோ அவதாரம் எடுத்து வந்தவன்போல் பேசிக் கொண்டார்கள். இவ்விஷயம் சரவண ரெட்டி காதிலும் அவ்வப்போது விழுந்தது. படியாளை அனுப்பி அழைத்து வரும்படி சொன்னார். வந்தான்.

செல்வம் என்பவன் இஸ்திரி போட்டது மாதிரி பட்டையாய் உயரமாய் இருந்தான். இத்தனை முறை புயல்கள் வந்தும் அவன் ஒடிந்து விழாதது ஆச்சரியமாய் இருந்தது.

சரவண ரெட்டி இப்படித் துவங்கினார்.

"ஆத்தூரா நய்னா நீ?'' என்றார்.

அவன் பணிவாய்ப் பதில் சொல்ல விரும்பி சதா நேரமும் கூன் போட்டவன் மாதிரி நின்றிருந்தான்.

"ஒரு நாளிக்கு எத்தினி ஏக்கர் அடிப்பே?''

"உங்களுக்கு எவ்ளோ அடிக்கணும் சொல்லுங்க?'' என்று திருப்பிக் கேட்டான்.

"இன்னா ஒரு பத்து ஏக்கர்னு வெச்சுக்கயேன்.''

"அப்ப ரெண்டு நாளு'' என்றான்.

"அடேங்கப்பா சாமர்த்தியகாரன்... ஏன் நய்னா... உனக்கு மயக்கம், கியக்கம் வராதில்ல?'' என்று கேட்டு வைத்தார்.

"நமக்கு அதெல்லாம் வராதுங்க'' என்றான் பன்மையில்.

"செரி... எப்ப வர்ரே சொல்லு..?''

சற்றே யோசனையாய் கன்னப் பகுதியில் தேய்த்து விட்டுக் கொண்டான்,

"முக்யமா ரெண்டு பேருக்கு அடிக்க வேண்டியிருக்கு. காவனூர்ல செல்லமுத்து நாயகர்க்கும். வரத நாயகருக்கும். பொண்டாட்டி செத்து போனதால எல்லாம் டிலே ஆயிட்ச்சி''

"ஐய்யய்யோ எப்ப?'' என்றார் சரவண ரெட்டி.

"கிர்த்திகை வந்துதே... அன்னைக்கு மறுநாள்...'' இதைச் சொல்லும்போது அவன் குரல் கம்மிப் போய் விட்டது.

"முழுகாம இருந்தா...'' என்று ஆரம்பித்தவன், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு , லூங்கியால் கண்களைத் துடைத்துக் கொண்டான். திடீரென்று இப்படி அழுகை வந்துவிóட்டது அவனுக்கே சங்கடமாக இருந்திருக்க வேண்டும்.

கிருத்திகை போய் பத்து நாள் கூட ஆகியிருக்கவில்லை. தாஜா பண்ணி நாறைக்கே மருந்தடித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்த சரவண ரெட்டிக்கும் அதிர்சóசியில் என்ன பேசுவதெனóறு யோசனையிலாழ்ந்தார். உண்மையில் இருவருமே இப்படி ஒரு சூழல் ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

"...ம்... என்ன ஒடம்புக்கு?'' என்றார் சரவண் ரெட்டி.

"மஞ்ச்க் காமலைன்ட்டு பொன்னேரிக்கு போய் செம்புக் கம்பில சூடு வெச்சுக்குனு வந்தா, வெரல்ல...''

"வெரல்லியா?''

விரலில் சூடு வைத்துக் கொண்டால் அதன் வழியே உடலில் இருக்கிற மஞ்சள் எல்லாம் வெளியே வந்து மஞ்சட் காமாலை போய் விடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதுவும் ஆள்காட்டி விரலில்தான் சூடு வைப்பார்கள். இதெல்லாம் சரவண ரெட்டிக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை. ஏதோ அவன்ó திருப்திக்காகக் கேட்டார்.

"ஆமா..'' என்றான்.

"மஞ்சக் காமாலன்னா கீழாநெல்லிதான் அதுக்கு வைத்தியம்...'' என்று ஒரு மாதிரியாய் விஷயத்தைத் திருப்பினார். "அப்போ... அவங்க ரெண்டு பேருக்கும் முடிச்சிட்டு வரேன்றியா?''

"ரெண் நாள்ல முடிச்சிடுவேன்.''

"முடிச்சுட்டே வா'' என்று அனுப்பி வைத்தார்.

செல்வம் போனதும் படியாளைக் கூப்பிட்டு, " ஏண்டா, கூமூட்டை... பொண்டாட்டி செத்துப் பத்து நாள் தா ஆகுதுன்றான், சொன்னியாடா?'' என்றார்.

"அப்படியா...? இன்னாவாம் ஒடம்புக்கு?'' என்றான்.

"அடிங்... போடா, நாள கழிச்சு வரேன்னு சொல்லியிருக்கேன்... போயீ... சேடóடு கிட்ட பத்து ஏக்கருக்குத் தேவையான மருந்துனு கேளு... அவனே குடுப்பான். எவ்ளோ தண்ணில கலக்கணும். என்னம்மா அடிக்கணும்னு விசாரிச்சுக்குனு வா'' என்றார்.

"துட்டு கேட்டா?''

"கணக்ல எழுதச் சொல்லுடா... அடுத்த வாரத்ல வரேன்னு சொல்லு... ரசீது வாங்க்கினு வா''

"சரி.'' சரவண ரெட்டியார் யோசனையாய் ""ஏண்டா'' என்று போய்க் கொண்டிருந்தவனை நிறுத்தினார்.

"நம்மகிட்ட வேல பார்க்கும்போது செத்துத் தொலையப் போறாண்டா.''

"ஒண்ணும் சாவ மாட்டான்... ஒரு கிளாஸ் ஊத்திக்குனு வன்óட்டான்னா, உயிர் போனா கூட அவனுக்குத் தெரியாது. அதும்பாட்டுக்கு வேல நடக்கும்'' என்றான் தீர்மானமாய்.

உடம்பே குலுங்கச் சிரித்தார் ரெட்டியார்.

நிழலும், பேச்சுத்துணையும் நாடி வந்த ஆறுமுக ரெட்டியார். "செல்வம் செத்து போயிட்டானாமல்?'' என்றபடி சரவண ரெட்டி பக்கத்தில் உட்கார்ந்தார்.

''அடடே... எப்ப?''

"நேத்து''

"நெனச்சேன்... நெனச்சேன்... செல்லமுத்து நாயக்கருக்கில்ல அடிக்றாப்ல சொன்னான். நாயகர் வசமா மாட்டினாரா?''

"அட நீ ஒண்ணு... ஆளு தூக்குமாட்டி செத்துப் போயிருக்கானó.''

சரவண ரெட்டி திருப்தி அடைந்தவராய் "அப்போ மருந்தடிச்சதால சாகலே...?'' என்றார்.
பின்னர், திடீரென்று ஞாபகம் வந்தவராய் "ஐய்யய்யோ... எதுக்குச் செத்துப் போயிட்டானாம்?'' என்று விசாரித்தார் வருத்தமாய்.

tamilmagan2000@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin