திங்கள், நவம்பர் 12, 2007

சர்ச்சை: அட்வான்ஸ் நிகழ்ச்சிகள்... ஆட்டம் கண்ட திரைத்துறை!








விருதுகள் என்பவை சாதனை படைத்தவர்களைக் கெüரவிக்கவா, வேறு ஆதாயங்களை எதிர்பார்க்கவா என்பது காலம் காலமான கேள்வி.

ஃபைன் ஆர்ட்ஸ்- சபாக்கள் வழங்கும் விருதுகளில் இருந்து நோபல்- ஆஸ்கர் விருதுகள் வரை இந்த சர்ச்சை பொருந்தும்.

விருது அறிவிப்பு விஷயத்தில் சர்ச்சை என்ன தெரியுமா?

""ஒரு சமூக அவலத்தை எதிர்த்துப் போராடும் போராளியாக- நாயகனாக "ஈ' படத்தில் நடித்திருந்தார் பசுபதி. அந்தப் படத்தில் அவருக்கு எதற்கு வில்லன் விருது என்று விருது கமிட்டிக்கு எப்படிப் புரியாமல் போனதோ? அதே போல் ஒவ்வொரு தேர்விலும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதிலே இருப்பதால் விருது பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி விருதின் கெüரவத்தை நீர்த்துப் போகவைப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆடல் பாடல் கச்சேரியாகவும் டி.வி. சானல்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் வணிகரீதியான போக்கும் விருது வழங்கும் விழாவில் கலந்து விட்டதால் பலருக்கு விருது வழங்குகிறார்கள் என்றால் ஒரு ஆயாசம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

சர்ச்சைக்குள் ஒரு சர்ச்சையான விஷயம் ஒன்று தமிழக திரைப்பட விருது சம்பந்தமாக நடந்தது. சர்ச்சை பற்றிய சிறுகுறிப்பு இதுதான்: கடந்த ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் வழங்கியபோது அதை ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் டி.வி. பெற்றிருந்தது. தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாவதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டி.வி.யில் தமிழ்த் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான போது பலருக்கு அதிர்ச்சி. அடுத்த அதிர்ச்சி கலைஞர் டி.வி.யில். விஜய் நடித்த "கில்லி' படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது, தீபாவளிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்புவதாக இருந்தது.

சரியாக அரைமணி நேரத்துக்கு இந்தச் சானலில் வெளியாக வேண்டிய நிகழ்ச்சி அந்தச் சானலிலும் அந்தச் சானலில் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சி இந்தச் சானலிலும் ஓடிக் கொண்டிருக்க, "கில்லி' படத்தைத் தயாரித்த ஏ.எம். ரத்னம், தயாரிப்பாளர் சங்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சானலுக்கு ரைட்ஸ் கொடுத்திருக்க இன்னொரு சானலில் படம் ஓடிக் கொண்டிருந்தால்... ஓடமாட்டாரா பின்னே? பிறகு சட்டு புட்டென்று இரண்டு சானல் தரப்பும் சமரசமாகி, வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால் "அப்ரூட்டாக' அடுத்த நிகழ்ச்சிக்குத் தாவினர்.

சன்னில் பூவெல்லாம் உன் வாசம் படமும் கலைஞரில் பைரவி படமும் சடாரென்று ஒளிபரப்பாகத் தொடங்கியது. மக்களும் கண நேர குழப்பத்துக்குப் பிறகு அந்தப் படங்களைப் பார்க்கத் தொடங்கினர்.

இது குறித்துப் பேச இரண்டு தரப்புமே தயாரில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனிடம் ""கில்லி திரைப்படம் ஒளிபரப்பானது குறித்தும், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது குறித்தும் சங்கத்தின் நிலைப்பாடு என்ன, ஏ.எம். ரத்னம் தரப்பு புகார் குறித்து நடவடிக்கையில் இறங்குவீர்களா?'' என்றோம்.

""இது குறித்துக் கருத்து கூற வேண்டியது நானல்ல, சானல்களிடம் பேசுங்கள். நான் கருத்துகூற விரும்பவில்லை'' என்றார் சுருக்கமாக.

எது எப்படியோ தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருவாரம் முன்னதாகவே மக்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்.

தமிழ்மகன்

30 செகண்ட் சவால்!









ஒரு பழைய சம்பவம். லண்டன் சுரங்க ரயில் பாதையில் புகைப்பிடிப்பதற்குத் தடை. பல இடங்களில் சர் ள்ம்ர்ந்ண்ய்ஞ்பலகைகள் இருக்கும். டர்க்கி சிகரெட் கம்பெனி சுரங்கப் பாதையில் தங்கள் சிகரெட்டை யாரும் புகைக்க வேண்டாம் என்று விளம்பரப்படுத்த விரும்புவதாக அரசிடம் அனுமதி வாங்கியது. அவர்கள் செய்திருந்த விளம்பர வாசகம் என்ன தெரியும்? அரசாங்கம் வைத்திருந்த சர் ள்ம்ர்ந்ண்ய்ஞ் பலகைக்குக் கீழே உஸ்ங்ய் பன்ழ்ந்ண்ள்ட் என்று போட்டிருந்தார்கள். (புகைப்பிடிக்காதீர்கள்- டர்க்கீஸ் சிகரெட்டாக இருந்தாலும்)

உஸ்ங்ய் என்ற நான்கே எழுத்துக்கள்தான். இதை வைத்து எப்படி விளையாடி இருக்கிறார்கள் பாருங்கள்? டர்க்கீஸ் போன்ற சிறந்த சிகரெட்டாக இருந்தாலும் இந்த இடத்தில் புகைக்காதீர்கள் என்பதுதான் அதில் இருக்கும் விளம்பரம்.

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்று ஓர் உதாரணத்துக்குச் சொல்லுவோம். இனிமேல் அந்த உதாரணம் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. பத்திரிகைகளிலும் இன்டர் நெட்டிலும் டி.வி.யிலும் பொக்கே ஷாப் விளம்பரங்கள் நிறைய வருகின்றன.

சினிமா மட்டுமன்றி விளம்பரப் படத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து வருபவரில் ஒருவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். "அந்நியன்', "வேட்டையாடு விளையாடு' படங்களுக்குப் பிறகு "தசாவதார'த்தில் பணியாற்றி வருகிறார். அவரைத் தொடர்பு கொண்டோம்.

இரவெல்லாம் "தசாவதாரம்' படப்பிடிப்பு. காலை வந்து படுத்தவர் பிற்பகல் 3 மணிக்குத்தான் எழுந்ததாகச் சொல்கிறார். படு சீக்ரெட்டாக நடைபெற்று வரும் "தசாவதாரம்' படம், நேற்று இரவெல்லாம் நடந்ததாகச் சொன்னதே அரிய தகவல்தான். அவரை அதற்கு மேல் சங்கடப்படுத்தாமல் விளம்பரப் படங்கள் பற்றி மட்டும் கேட்டோம். பேச ஆரம்பித்தார்.

""ரீஜினல் படங்கள், நேஷனல் படங்கள், இன்டெர் நேஷனல் படங்கள் என பல விளம்பரப் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். உதாரணத்துக்குப் பட்டுச் சேலை என்றால் ரீஜினல் வேல்யூதான். பைக் விளம்பரம், பவுடர், சோப்பு விளம்பரம் போன்றவை நேஷனல் வேல்யூ





உள்ளவை. வெளிநாட்டுக் கார், சாக்லெட் போன்றவை சர்வதேச விளம்பரங்கள். தமிழ்நாட்டில் ஏராளமான விளம்பர ஏஜென்ஸிகள் உள்ளன. இருப்பினும் வட இந்தியர்கள்தான் விளம்பரத்துறையில் சக்கைபோடு போடுகின்றனர். இப்போது நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் மும்பை தயாரிப்புகள்தான்.

ஆனால் அதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் முதல் பத்துபேரை எடுத்தால் அதில் ஆறுபேர் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதுதான் மகிழ்ச்சியான விஷயம்.

பி.சி. ஸ்ரீராம், ரவி.கே. சந்திரன், ராஜீவ் மேனன், கே.வி. ஆனந்த், நட்ராஜ் சுப்ரமணியன் போன்ற பலரும் தமிழகத்தைச் சேர்ந்த கேமிரா மேன்கள்தான். விளம்பரப் படங்களில் இயக்குநருக்கு இணையாக ஒளிப்பதிவாளர்களுக்கு முக்கியத்துவம் உண்டு.

நேஷனல் விளம்பரங்கள் என்றால் இந்திய அளவில் தெரிந்த பிரமுகராகத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள். இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் அல்லது கிரிக்கெட் பிளேயர்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். அல்லது இந்திய முகமாகத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. லொகேஷன் தேர்வு செய்வதில் ஒளிப்பதிவாளரின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

கான்செப்டைப் பொறுத்தவரை விளம்பர ஏஜன்ஸிகள் முடிவு செய்கிறார்கள். சிலர் இயக்குநர்களிடம் கலந்து கான்செப்ட் பிடிப்பார்கள். நான் எடுத்த ஒரு பவுடர் விளம்பரத்துக்கு "ரன் ரோலா ரன்' என்ற ஜெர்மன் படத்தில் வருவது போல விளம்பரமே ஓட்டமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

காலை பரபரப்பில் ஒரு பெண்ணின் கையில் பவுடர் டின் இருக்கிறது. பிறகு வேறொருவர் கையில். மதியம் வேறொருவர் கையில். மாலை ஒரு குழந்தையின் கையில்... என்று ஒருநாளில் பவுடர் கை மாறுவதை எடுத்துக் கொடுத்தேன்.

நேஷனல் லெவல் விளம்பரங்களில் சில ப்ராடக்ட் சில மாவட்டங்களில் எடுபடாமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சில ப்ராடக்டின் பெயர்களே பிற மொழிகளில் வேறு அர்த்தம் தருவதாக அமைந்துவிடும். அதே போல் இந்தியில் பேசும் வசன உச்சரிப்புக்கு ஏற்ற மாதிரி தமிழில் வசனம் எழுத வேண்டியிருக்கும். தொலைக்காட்சியில் வெளிவந்த "ஜுனூன்' இந்தி தொடர், தமிழில் வெளியான போது அதைத் தமிழ்ப்படுத்தியபோது ஜுனூன் தமிழ் என்ற பிரயோகமே உருவானது. அதை மக்கள் ரசித்தார்கள். அப்படித்தான் சில தமிழ்ப்படுத்தப்பட்ட விளம்பரங்களும் ரசிக்கப்படுகின்றன.

இந்தி விளம்பரத்துறையில் அசோக் மேத்தா, வினோத் பிரதான், பரூன் முகர்ஜி ("ராஜபார்வை' பட ஒளிப்பதிவாளர்), கிரண் தியோன் போன்றவர்கள் தயாரிக்கும் விளம்பரப்படங்கள்தான் இந்திய அளவில் பேசப்படுகின்றன.

அதே போல் இந்தியில் பிரபலமான கான்ùஸப்ட் நிபுணர்கள் இருக்கிறார்கள். ப்ரூசூன் பாண்டே (டைரக்டர்), ப்யூஸ் பாண்டே (கான்செப்ட் ரைட்டர்) போன்றவர்கள் முக்கியமானவர்கள். உதாரணத்துக்கு ஃபெவிகால் டப்பாவில் கோழித் தீவனத்தைத் தின்ற கோழியின் முட்டை, உடைக்கவே முடியாத அளவுக்குக் கடினமாக மாறிவிட்டதாகச் சொன்னது அவருடைய விளம்பரம்தான். சில விளம்பரங்களில் உண்மையை மிகைப்படுத்திச் சொல்வதை மக்கள் ரசிக்கிறார்கள்.

முப்பது செகண்டுக்குள் ஒரு சிறுகதை போல சொல்லும் விளம்பரங்களும் உண்டு. ஒரு செல்போன் விளம்பரம். தாத்தா பாட்டியைப் பார்க்க மாட்டு வண்டிப் பிரயாணம் எல்லாம் செய்து பேரன் வருகிறான். தாத்தாவுக்குக் கோபம். "20 வருஷமா பேசாதவனோட பையன் இப்ப எதுக்கு வந்தான்?' என்கிறார். "அப்பாவைக் கூட்டிகிட்டு வந்திருக்கேன் தாத்தா' என்கிறான் பேரன். தாத்தா முகத்தில் சின்ன எதிர்பார்ப்பு. பேரன் செல் போனை நீட்டுகிறான். "என்னை மன்னிச்சுடுங்கப்பா' என்கிறது செல்போன் குரல். "அட அதனால என்னடா' என்று தாத்தா அவரது மகனிடம் செல்போனில் சமாதானமாகிறார்.

இதுதான் விளம்பத்தின் விந்தை. இரண்டரை மணிநேர சினிமாவை 30 செகண்டில் சொல்ல வேண்டிய சவால்.

விளம்பரப் படம் எடுத்தவர்கள் சினிமாவுக்கு வரும்போது ரொம்ப நுணுக்கமாகக் காட்சிகளை வைப்பதைப் பார்க்கலாம். தேவையில்லாமல் ஒரு ஷாட் கூட இருக்காது. ராஜீவ் மேனன், பி.சி. ஸ்ரீராம் படங்களில் இதை உணரலாம்.

டி.வி. வந்ததால் சினிமா பாதித்ததாகக் கருத்துகள் உண்டு. ஆனால் டி.வி. வந்தபிறகு விளம்பரப் படங்கள் எடுப்பவர்கள் அதிகரித்தார்கள்.

என் குழந்தை டி.வி.யில் வருகிற விளம்பரங்களைப் பார்த்துவிட்டுத்தான் என்ன ஐஸ் கிரீம் வேண்டும், எந்தக் கடையில் துணி எடுக்க வேண்டும் என்கிறாள். சமூகத்தின் மீது விளம்பரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பிரமிக்க வைக்கிறது. அது நல்லதா என்பது வேறு விஷயம்.

டி.வி.யில் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் விளம்பரப் படங்களின் ஆட்சிதானே?'' என்று முடித்தார் ரவிவர்மன்.

டி.வி.யை மட்டுமல்ல, வாழ்க்கையின் பாதியையும் விளம்பரம்தானே ஆக்கிரமித்திருக்கிறது?

தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin