வியாழன், ஜூலை 31, 2008

ஒரு தேர்தல்.. ஒரு பசு..

இரண்டு பின்னங்கால் மட்டும் வெளியே தெரிவதை நான்தான் முதலில் பார்த்தேன். பசு கன்று போடப் போவதை ஓடிப்போய் தங்கச்சி வீட்டுக்காரரõடம் சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில் விஷயம் வீடு முழுவதும் பரவி, ஓடி வந்து பசு கன்று போடப் போவதை வேடிக்கைப் பார்த்தார்கள். தங்கையின் மாமியார், "தலைச்சன் கன்னுனா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்' என்று ஆசுவாசமாகப் புறப்பட்டு வந்தாள்.

அதற்குள் அக்கம்பக்கத்துப் பசங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். மாமியார்க்காரி முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டு பசங்களை விரட்டினாள். பசங்கள் சற்று தூரம் ஓடிப்போய் நின்று கொண்டு மறுபடியும் பார்த்தார்கள்.

"ஆம்பளைங்க கூடத்தான் ஏன் இங்க நிக்கிறீங்க? வீட்டுக்குள்ள போங்க'' என்றாள்.

"சரி, சுந்தரம் நீங்க வீட்டுக்குள்ள போங்க. நானும் சேரóமனும் இன்னைக்கு வேலூர் வரைக்கும் போறோம். நம்ம ஊருக்கு பஸ் வர்றதுக்காக ஏற்பாடு பண்றதுக்குத்தான்... நா வர்றவரைக்கும் இரு. போயிடாதே'' என்றார்.
சுந்தரத்தோட தங்கை கல்யாணியைத்தான் முருகேசன் ஆறு மாதத்துக்கு முன்பு கல்யாணம் பண்ணினார். ஊர் பிரசிடண்ட் எலக்ஷனில் சுடச்சுட ஜெயித்திருக்கிறார். முருகேசன் கும்பிடுகிற மாதிரி படங்கள் இன்னும் சுவர்களில் வெளுத்துப் போய் இருக்கின்றன.

"ஊருக்கு பஸ் வருமா? எப்போ?'' இவ்வளவு மகிழச்சியாகச் சுந்தரம் கேட்டதற்குக் காரணம், இப்போது கூட பத்து கிலோ மீட்டர் நடந்தேதான் வந்திருந்தார்.

"எல்லாம் உங்க தங்கிச்சி வந்த ராசிதான்.'' முருகேசன் புன்சிரித்தார்.

"நீங்க பிரசிடென்டா ஆனதாலே இதெல்லாம் நடக்குது'' என்றார் சுந்தரம். தம்மை இன்னும் கொஞ்சம் புகழ்வார் என்று முருகேசன் எதிர்பார்த்தார்.

சுந்தரம் அதற்குமேல் பாராட்டுவதாக இல்லை.

"சரி. எனக்கு டயம் ஆவுது. நா போயிட்டு வந்துட்றேன்'' என்று முருகேசன் கிளம்பினார்.

கல்யாணி வந்து, "வாண்ணா சாப்பிடு'' என்று அழைத்தாள்.

சுந்தரம் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால், பசுவைப் பார்த்தார். உட்கார்ந்து கொண்டிருந்த பசு எழுந்து நின்றது.

"அகைன்ஸ்ட்டா நின்னது யாரு?'' இட்லி சாப்பிட்டுக்கொண்டே கேட்டார் சுந்தரம்.

"நம்ம முருகேஷுதான் ஜெயிச்சிது'' என்றாள் ஆதிலக்ஷ்மி.

சுந்தரத்துக்குச் சங்கடமாகப் போய்விட்டது.

"அப்படியா...? ஆமா, எதிர்த்து நின்னது யாரு?'' என்றார்.

அவ்வளவுதான். எப்படித்தான் அந்த அம்மாளின் முகத்தில் திடீரென்று அப்படி ஒரு விகாரம் ஏற்பட்டதோ தெரியவில்லை.

"அவன்தான்... சிங்காரம்'' என்றாள்.

"நம்ம சிங்காரமா?''

"நம்ம சிங்காரம்... கழுதை ஜாதி புத்திய காமிச்சிடுச்சி பாத்தியா?'' என்றாள்.

சிங்காரம் சேரியைச் சேர்óந்தவன். ஒன்றாவது முதல் பி.யு.சி வரை முருகேசனும், சிங்காரமும் ஒன்றாகவே படித்தார்கள். முருகேசனுடய படிப்பு சம்பந்தமான அத்தனை சந்தேகங்களையும் சிங்காரத்திடம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப் பிராய்ச்சித்தமாக அவ்வப்போது பீஸ்கட்டும் போதெல்லாம் சிங்காரத்துக்குக் கடனுதவி செய்ய வேண்டியிருந்தது.

படிப்பு முடிந்ததும் நட்பெல்லாம் முருகேசனுக்கு அவ்வளவாக அவசியம் இல்லாமல் போனது. அப்படியே பழக வேண்டும் என்று நினைத்தாலும் ஊர்க் கட்டுமானங்களை மீற வேண்டியிருந்தது.

ஊரைப் பகைத்துக் கொண்டு சிங்காரத்திடம் பேசி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் முருகேசன் நினைத்தான். இவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டு.

"என்னடா வேலை உனக்கு, அவன்கிட்ட?'' என்று ஊர்ப் பெரியவர்கள் யாராவது கேட்டால், சிங்காரம் என்னோட ஃப்ரண்ட் என்று சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. "சும்மாதான்... படிச்சிக்குனு இருந்தோம்' என்று எதையாவது சொல்லிச் சமாளித்து வந்தான்.

இந்த மாதிரி சமயத்தில்தான் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் வந்தது.

பத்து மணிக்கு ஒருமுறை பசுவைப் போய்ப் பார்த்தார். இன்னமும் அப்படியேதான் இருந்தது. வெளியே தெரிந்த முன்னங்கால் குளம்புகள் லேசாக ஆடின.

செய்திகல் முந்தித் தருகிற ஒரே நாளிதழான அதுஇந்த ஊருக்குப் பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தது. சுந்தரம் செய்திகளைப் புரட்டினார். தமிழ்ச்சினிமா மாதிரி நான்கு கொலை, இரண்டு கற்பழிப்பு , ஒரு எம்.எல்.ஏ. ஊழல்.... அதற்குள் மதியச் சாப்பாடு, சாப்பிட்டுவிட்டு தனõயாக மாடியில் போய்ப் படுத்தபோது, கல்யாணி ஒரு தம்ளர் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மிகவும் ரகசியமாக அவளுடைய நாத்தனார் எப்படிக் கொடுமைப்படுத்துகிறாள் என்று விளக்கினாள்.

கொஞ்ச நாளானால் சரியாகிவிடுவாள். நாமொன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே உறங்கிப் போனார்.

நான்கு மணிக்கு எழுப்பி காபி கொடுத்தார்கள். (மண்ணெண்ணெய் வாசனை) முருகேசன் வரவில்லை என்று தெரிந்தது. இனி பொறுப்பதிóல்லை என்று ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்தார்.

கல்யாணி தனியாக வந்து அம்மாவை ஒருமுறை வரச் சொன்னாள். நாத்தனார் கொடுமைகளை அம்மாவிடம் சொன்னால் நல்ல விளைவுகள் ஏற்படும் என்று நம்பினாள்.

"முருகேசன் வர்ற வரைக்கும் இரேம்பா'' என்றாள் ஆதிலக்ஷ்மி.

"அவசரமா வேலை... இன்னொருமுறை வந்து...'' என்று சொல்லிக்கொண்டே வந்துபோது... அந்தப் பசு.
காலையில் பார்த்த அதே மாதிரியை அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது.

"இன்னுமா போடலை?''

பசங்கள் யாரும் காணவில்லை. வெறுப்படைந்து போய்விட்டிருக்கிறார்கள்.

"இது கிடேரி பசு... அதான் கஷ்டபடுது'' என்றாள் ஆதிலக்ஷ்மி.

"கிடேரின்னா?''

"அப்படின்னா இதான் பர்ஸ்ட்டு கன்னு போடுதுன்னு அர்த்தம்.''

தூண் மறைவிலிருந்து கல்யாணியின் நாத்தி சொன்னாள். அவளுக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் செய்துவிட வேண்டும் என்றும் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

"இப்ப என்னா பணóறது?'' என்றார் சுந்தரம்.

"டேன்ஜர்}தான்'' என்றாள் மறுபடியும் அவள். எது எடுத்தாலும் ஒரு ரூபா'' மாதிரி கட்டையான குரல். எதற்காகவோ அவளுக்கு மணிமொழி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பக்கத்தில் எங்காவது வெர்ட்டினரி ஹாஸ்பிடல் இருக்கிறதா என்று தெரியவில்லை.

"கன்னு உள்ளயே செத்துடுச்சி போல இருக்குது'' என்றாள் ஆதி.

யோசிக்க யோசிக்கப் பசுவுக்குக் கஷ்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தார் சுந்தரம்.

"மாட்டாஸ்பித்திரி பக்கத்தில் எங்கயாவது இருக்குமா?''

மறுபடியும் மணிமொழிதான் "ம்'' என்றாள்.

"எங்கே?'' என்ற சுந்தரம் பதட்டத்துடன் கேட்கவும், அவள் வெட்கப்பட்டுக் கொண்டு உள்ள ஓடினாள். அவள் அம்மா உள்ளே போய் விசாரித்துக் கொண்டு வந்து,

"சோழவரத்தில் இருக்குதாம்பா... இப்ப டயமாயிடுச்சே, போறதுக்குள்ள மூடிடுவான்'' என்றாள்.

"பின்னே எப்படி?''}இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் முண்டங்களே? என்று கேட்பதற்குப் பதில் இப்படிக் கேட்டார்.

"....மாட்டு வைத்தியமெல்லாம் அவன்தான் செய்வான்'' என்று மெதுவாக முனகினாள்.

"யாரு?''

"யாரு.... அந்த நாகன்தான்''

"எங்க இருக்கு அவர் வீடு''

"அட வேணாம்ப்பா அவன் வரமாட்டான்.''

"பரவால்ல சொல்லுங்க.''

"இனிமே என் வீட்டுப் பக்கமே வராதடான்னு நாக்க பிடுங்கிக்கினு சாகற மாதிரி கேட்டுட்டேன். அவன் வர மாட்டான்.''

"எதுக்கும் நா கூப்பிட்டுப் பாக்கறேன்.''

"நம்ம சிங்காரத்தோட அப்பன்தான்.''என்றாள்.

சிங்காரத்தின் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். சேரியில் நுழைந்ததும் ஐந்தாவது வீடோ? ஆறோ?
ஆறுதான். நல்லவேளை நாகன் வீட்டில் இருந்தார்.

"வாப்பா, வாப்பா'' எனóறு திண்ணையைத் துடைத்து உட்கார வைத்தார்.

"நாங்க இன்னாப்பா பாவம் பண்ணோம்? எங்களை இந்தப் பேச்சு பேசிபுட்டாங்களே'' என்றார்.

"சிங்காரம் இóல்லையா?''

"இப்போ அம்பத்தூர்ல வேலை செய்றான்'' என்றார் மெதுவாக.

"óமாடு ஒண்ணு கன்னு போட முடியாம அவஸ்தை படுது... நீங்க கொஞ்சம் வந்து பாருங்க'' என்றார் சுந்தரம்.

"பாத்தாப் போச்சு... நம்மகிட்ட இன்னா இருக்குது? நம்ம முருகேஸý எல்கஷ்ன்ல நிக்குதுனு தெரிஞ்சிருந்தா நாங்க ஏம்பா நிக்கப் போறோம்? பர்ஸ்ட்டு சாமிப்பிள்ளைதான் நிக்கறதா சொன்னாங்க. உனக்குத் தெரியாதா அவரப்பத்தி? ஆளு பணம்னா கொலைகூடப் பண்ணுவாரு''

"முருகேஸýம் நா நிக்க மாட்டேன்னு சொல்லிடுச்சி. சரிதான்னு சேரில இருக்கவங்கெல்லாம் ஒண்ணா சேந்து சிங்காரத்தை நிக்கச் சொன்னாங்க... அப்புறம் பாத்தா முருகேஸý எதிர்த்து நிக்குது... இன்னா... பண்றது? போஸ்டர்லாம் அடிச்சாச்சி. போனா போது... வாபஸ் பண்ணிலாம்னு பாத்தா சேரி ஆளுங்கவுடலை.... ஊரை விட்ட சேரிலதான் ஜனம் தாஸ்தி அந்தத் தைரியம்....''

"அந்தக் கதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சீக்கிரம் வாங்க காலைல இருந்து...''

"சரி சரி'' என்று எழுந்து வெளியே வந்தார்.

"நாங்க உங்க உப்பத் தின்னு வளர்ந்தவங்க... உங்களுக்குக் கேடு நினைப்பமா? யாரோ முருகேûஸக் கெடுத்துட்டாங்கப்பா. அதுவே வூட்டுக்கு வந்து ஜாதி, கீதில்லாம் பாக்காம மோர் இருந்தா எடுத்தான்னு கேட்குமே...'' என்று நொந்து கொண்டே நடந்தார்.

"யாரும் கெடுக்கலை முருகேசன் சரியாயிடுவான்'' என்றார் சுந்தரம்.

"எலக்ஷன் நெருங்க, நெருங்க சேரி ஆளுங்களுக்கெல்லாம் சாராயம் வாங்கியாந்து ஊத்திக்கினு பொம்பளைங்களுக்கு ஜாக்கெட் துண்டு வாங்கியாந்து குடுத்து...ம்...வாபஸ் பண்றதுக்கும் முடியாம போச்சி. நேரா முருகேஸýகிட்ட போய், நாங்களும் உனக்கே பிரச்சாரம் பண்றோம். ஏன் "டேய்... தோத்தறப் போறோம்னு பயந்துட்டியா?'னு கேட்குதுப்பா'' கண்களைத் துடைத்துக் கொண்டார்.

வீடு நெருங்கியதும்.
"ஒரு நாலணாவுக்கு விளக்கெண்ணெய் வாங்கியாறச் சொல்லு. ஒரு தாம்புக்கயிறு இருந்தா எடுத்துக்குனு வா...'' துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு துரிதகதியில் இயங்கினார்.

பசுவின் பின்கால், முன் கால் இரண்டையும் கயிற்றில் இறுக்கிக் கட்டி மெதுவாகப் பசுவைக் கீழே தள்ளினார். விளக்கெணóணெய்யை எடுத்து கன்று சுலபமாக வெளியே வருவதற்காகக் துவாரத்தில் நன்றாகப் பூசினார்.

"பொன்னியம்மா நல்லபடியா ஆயிட்டா கற்பூரம் கொளுத்தரண்டி'' என்று வேண்டிக்கொண்டார். கையை உள்ளே நுழைத்து... ப்பா... சுந்தரத்துக்கு உடம்பெல்லாம் தகித்து வியர்வை கொட்டியது. பசுவின் கழுத்தைப் பலமாகப் பற்றிக் கொண்டிருப்பது சுந்தரத்தின் வேலை.

கன்றின் தலையை வெளியே இழுத்தாகிவிட்டது. கன்று சப்புக்கொட்டியது.

"கன்னுக்கு உயிரு இருக்குதுப்பா. நல்லபடியா முடிஞ்சுது...'' வெளியே இழுத்து அதன் நாக்கை நீரால் நனைத்தார். ஆண் மகவு.

பசுவை அவிழ்த்து விட்டதும் துள்ளியெழுந்து கன்றை நக்க ஆரம்பித்தது. நாகனிடம் யாரும் பேசவில்லை.
""ஏம்மா, மூத்திரப்பை விழுந்ததும் பின்னால கொஞ்சம் சுடு தண்ணி ஊத்துங்கோ'' என்றார்.

பதóது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் சுந்தரம்.

"என்னங்கோ இது...ச்சும்'' என்று மறுத்தார். "ஊருக்கு வரும்போது வந்து பாருப்பா'' என்றார்.
போய்விட்டார்.

சுந்தரத்துக்கும் நேரமாகிவிட்டது. அவசர அவசரமாகக் கிளம்பி தெருப்பக்கம் வந்து வேகமாக நடந்தபோது சண்முக நாடார் கடையில்,

"நாலணாவுக்குக் கற்பூரம் குடு நாட்டாரே'' எனறு நாகன் சந்தோஷமாகக் கேட்டது சுந்தரத்தின காதில் விழுந்தது.


அமரர் கல்கி நினைவுப் போட்டி 1985

அக்கா

தமிழ்மகன்

மனசு கூடத் திரிந்து போய்விடுகிற அளவுக்குக் குப்பென்று அடிக்கிற புளித்த வீச்சத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேலையில் சேர்ந்த அன்று பயங்கரமாக வாந்தி எடுத்தேன்.

முதலாளி கூப்பிட்டு "ஒத்துக்கலைனா வீட்டுக்குப் போயிருப்பா'' என்றார்.

வாந்தி எடுத்ததற்காக வேலையிலிருந்து அனுப்பி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. என்னுடன் இன்னும் மூன்று பேர் அந்தச் சாராயக் கடையில் வேலை செய்து வந்தார்கள். அவர்கள் எல்லாம் இலவசமாகக் குடிக்க முடிவதையே ஒரு பாக்கியமாகக் கருதிக் கொண்டிருந்தார்கள்.

எனக்குத்தான் அந்தப் புளித்த நாற்றமே பெரிய போதையாகவும், தாள முடியாத தலைவலியாகவும் இருந்தது.
போதாத குறைக்கு 24 மணி நேரக் குடிகாரன் நாராயணன் வந்தால், சாராயத்தைவிட அதிகமாகவே நாற்றமடிப்பான்.
இன்னொரு சங்கடமும் உண்டு. எங்கப்பா வேலை செய்யறே? என்று யாராவது கேட்டுவிட்டால், இந்த எட்டாம் நம்பர் கடையை எடுத்துச் சொல்லி விளக்குவதற்குள் உடம்பும் உள்ளமும் தத்தளித்துப் போகும்.

அக்கா சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கையில் இது எவ்வளவோ மேல்தான். சின்ன வயசில் தனபாக்கியத்தோடு (அப்போதெல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) நானும் சாப்பாட்டுக் கூடை தூக்கிக் கொண்டு போயிருக்கிறேன்.

சாப்பாட்டுக் கூடை என்றால் பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். சந்தடிச் சாக்கில் ஏற்றிவிட்டாலும் விசலடித்துக் கீழே இறக்கி விடுவார்கள். அக்கா பல்லைக் காட்டி, அப்படி இப்படிச் சோக்கெல்லாம் காட்டி, பஸ் பிடிப்பாள். கண்டக்டர்களின் கிண்டல்களைச் சகித்துக் கொள்வாள்.
லேட் ஆனதால் ஆபீஸர்களிடம் திட்டு வாங்கி, அவர்கள் வைக்கிற மிச்ச மீதியைத் தின்று சே... எட்டாம் நம்பர் கடை கிட்டத்தட்ட கோயில். நாற்றம்தான் நகர வேதனையாக இருக்கிறது. மற்றபடி ஒரு டீக்கடையில் வேலை செய்வது மாதிரிதான்.


குடிகாரர்களைக் கிண்டல் செய்வது முதலாளிக்குப் பிடிக்காது. எவ்வளவு போதையில் இருந்தாலும், அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்.

இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை. போதை ஏற, ஏற அவர்கள் வேறொரு மனுசனாக மாறுவதைப் பார்த்து ஒரு புன்முறுவலாவது வராமல் போகாது. ஆறுமுகம் போதை ஏறிவிட்டால், ஏதோ சொல்லப் போவது போல் கையையும் காலையும் உதறிக் கொண்டே வந்து ஆள் காட்டி விரலை நீட்டி, சிறிது யோசனைக்குப் பிறகு "பச்' என்று அலுத்துக் கொண்டு போய் விடுவான். அவனால் ஒரு வாக்கியம்கூட அமைக்க முடியாது. பச் என்பதைக் கூட ஏதோ ஏப்பம்போல விடுவான்.

அப்பா ஒரு தினசு. " எங்கடா போனே?' என்று கேட்க ஆரம்பித்தாரானால், அதையே வெவ்வேறு வகையாகக் கேட்டு உயிரை வாங்கி விடுவார். அக்காதான் எப்படியோ சமாளித்துத் தூங்க வைக்கும்.

மில் சம்பளம் அவருக்குப் போதுவதில்லை. மாதா மாதம் லோன் போடுவார். எனக்கு டி.பி. என்று சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய்க் காண்பித்து லோன் வாங்கியிருக்கிறார். டி.பி.தான் என்று சர்டிபிகேட் கொடுக்கும் வரை என்னை இருமச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றும் தெரியாத வயசு. அப்பா தன் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது. டி.பி.யா? அதைவிட மோசமான வியாதியா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருமினேன்.

அக்காவுக்குக் கல்யாணம் என்று கூட சொல்லி லோன் வாங்கிவிட்டார். லோன் அப்ளிகேஷனோடு கல்யாண அழைப்பிதழ் ஒன்றையும் இணைக்கச் சொல்லியிருந்தார்கள். யாரோ ஒருத்தன் பெயரை மணமகன் என்று போட்டு ஒரு பத்து அழைப்பிதழ் அடித்துக் கொண்டு வந்தார்.
மில்லில் சமர்ப்பித்த ஒரு அழைப்பிதழ் போக மீதி அழைப்பிதழெல்லாம் வீட்டில் இங்குமங்குமாக இறைந்து கிடந்தது. பிறகு ஒன்றையும் காணவில்லை. ஒருமுறை அகஸ்மாத்தாக அக்காவோட பெட்டியில் அவற்றைப் பார்த்தேன்.

அக்காவுக்குக் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து எட்டு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. கல்யாணம்தான் இன்னமும் ஆகவில்லை. மூன்று வருஷத்துக்கு முன்னால் அம்மா சீக்கில் விழுந்து செத்துப் போன போது அப்பா அவசரமாய் டெத் சர்டிபிகேட் வாங்கி லோன் போட்டார். அக்காதான் எல்லாமாக இருந்து கவனித்துக் கொண்டாள். விடாப்பிடியாக என்னைப் பத்தாவது வரை படிக்க வைத்ததும் அக்காதான்.
காலை முதல் இரவு வரை மாடாக உழைத்தாள். ஒரு சீக்கென்று படுத்தவில்லை. திடீரென்று அவளுக்கு ஒன்றானால், வீடு அதோ கதிதான். இப்படி பத்து மணிக்கு ஷிப்ட் முடிந்து வீட்டுக்குப் போனதும், திடுக்கென்று விழித்து சாப்பாடு போட வருவாள்.

மணி பத்தாகப் பத்து நிமிடம் இருந்தது. குடிகாரர்கள் தீவிரமாக வர ஆரம்பித்தார்கள்.

ராமலிங்கம், "டேய் கணேசா, சினிமாவுக்குப் போலாம் வரியா?'' என்றான்.

"என்ன படம்?''

"ரஜினி...''

"பச்... எனக்குத் தூக்கம் வருது.''

பழனியும், சுரேந்தரும் வந்ததும், கடையை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். நாற்றமின்றித் தூங்க வேண்டும் என்று வெறியாக இருந்தது.

தெரு வெறிச்சோடி போயிருந்தது. கார்ப்பரேஷன் விளக்குகள் ஆர்வமின்றி ஒளி வீசின. தெரு நாய் ஒன்று குரைத்துக் கொண்டே ஓடிவந்து வாலாட்டியது.

திடீர் பாசம். நாய்க்கு ஒரு பொரையாவது வாங்கித் தர வேண்டும் என்று தோன்றியது. கடைதான் ஒன்றுகூடத் திறந்திருக்கவில்லை. வீட்டின் அருகே டீக்கடை ஒன்று திறந்திருக்கும். நாய் கொஞ்ச தூரம் என்னைப் பின்பற்றிவிட்டு, நம்பிக்கையிழந்து திரும்பிவிட்டது.
ஜூþ என்று கூப்பிட்டாலும், அது அவநம்பிக்கையோடு திரும்பிப் பார்த்துவிட்டு எதிர்திசையில் போய்க் கொண்டிருந்தது.

வீட்டுத் திண்ணையில் அப்பா படுத்திருந்தார். அவரிருந்த கோலத்தைப் பார்த்து அவர் நிதானத்தில் இல்லை என்பது புரிந்தது.

"சாப்டாச்சாப்பா?'' என்றேன்.

எங்கேயோ கேட்ட குரல் போல பார்த்தார். திடுதிப்பென்று என்னிடம் பேச வேண்டும் போல் சிரமப்பட்டார்.
""உங்க அக்கா வன்ட்டாளா?'' எனóறார்.

"எங்க போயிருக்குது?'' என்றபடி வீட்டைப் பார்த்தேன். விளக்கேற்றப்படாமல் இருந்தது. இவ்வளவு வயசில் இதுதான் முதல்முறையாக, வீட்டில் விளக்கெரியாமல் இருப்பதைப் பார்க்கிறேன்.

அப்பா எதுவும் சொல்லாமல் இமைக்காமல் பார்த்தார். முறைத்தார் போலவும் இருந்தது. கண்களிரண்டும் குங்குமமாய்ச் சிவந்திருந்தது. திண்ணையைச் சுற்றிலும் பீடித்துண்டுகளாக இறைந்து கிடந்தன.

"எங்க போயிருப்பா...?'' போயிருக்கிற இடம் அவருக்குத் தெரியும் போல கேட்டார். ""உடம்பு திமிரெடுத்தா சும்மா இருக்குமா... கெடந்து அலையறா... எங்க போவா...? போவட்டும்''

திகைத்துப் போனேன். பயம் பரவியது. என்ன சொல்கிறார்?
"அவ கிடக்றா வுட்றா'' என்றார். "அவ போனா போறா. சனியன் ஒழிஞ்சிதுன்னு வுடு''

அப்பா சொல்வது எந்த அளவுக்கு உண்மையென்று உணர முடியவில்லை. அக்கா இப்படிச் செய்திருப்பாள் என்று நம்ப முடியவில்லை. அக்கா செய்தது சரியா...?

"நீ போய் சாப்புடு'' என்றார்.

அங்கிருந்து அகன்றால் போதும் என்றிருந்தது. உள்ளே நுழைந்து ட்ரங்க் பெட்டியின் மீது சாய்ந்து உட்கார்ந்தேன்.
".... தப்பா?' என்று தீர்மானிக்க முடியவில்லை. அக்கா யாரிடமாவது ஏமாந்துவிட்டாளா? யாருடன் போனாள் என்று தெரியவில்லை. அதைப் பற்றியெல்லாம் முடிவெடுப்பதற்குக்கூட அவளுக்கு யாருமில்லாமல் போய்விட்டது. திரும்பி வந்து விட்டால் நன்றாக இருக்குமே என்று இருந்தது.

அவளுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வக்கில்லாமல் போய் விட்டது. எனக்கு இருபத்தி நாலு என்றால்.. என்னைவிட அஞ்சு வயசு பெரியவள் என்று அம்மா சொல்லியிருக்கிறாள்... அப்படியென்றால் இருபத்தி ஒன்பது. அக்கா வயசுப் பொண்ணுங்களெல்லாம் மூன்று குழந்தை பெற்றுவிóட்டார்கள். பவானியோட பையன் ஆறாவது படிக்கிறான்.

மணி பத்தரைக்கு மேல் இருக்கும் போல் தோன்றியது. சினிமா விட்டுப் போகிற ஜனங்களின் பேச்சுக் குரல்கள் கேட்டன.

கருவாட்டுக் குழம்பும், கொஞ்சம் சோறும் மட்டும் இருந்தது. அப்பா சாப்பிட்டாரா? என்று தெரியவில்லை. இருமிக்க கொண்டிருந்தார். தற்கொலை முயற்சி மாதிரி பீடி பிடித்துக் கொண்டு இருந்தார்.

பசித்தது. சாப்பிட பிடிக்கவில்லை. வயிற்றுக்குள் திராவகத்தை ஊற்றியதுபோல எரிந்தது. திடீரென்று அக்கா வந்து "ஏண்டா இன்னும் சாப்பிடாம இருக்கறே?'' என்று கேட்டால்...
இனி எப்படி வாழ்வதென்று குழப்பமாக இருந்தது. அக்கா வரவே மாட்டாள் என்று நினைப்பது பக்கென்றிருந்தது. கண் கலங்கியது. என்கிட்ட கூட சொல்லிக்காம போறதுக்கு எப்படித்தான் மனசு வந்திச்சோ?

பாயை விரித்துப் போட்டேன். தலையணை காணவில்லை. ட்ரங்க் பெட்டிக்கு அந்தப் பக்கம் இருக்கலாம். அக்காவின் துணிமணிகள் எதையும் காணவிóல்லை.

எங்க போனேக்கா?

"கணேசா...'' என்று சத்தமாகக் கூப்பிட்டார் அப்பா. எதிரில் போய் நின்றேன்.

"சாப்டியா?'' என்றார்.

"ம்...''

அபபாவும் நிலை குலைந்து போயிருந்தார்.

"சாப்டியா நீ?'' என்றார்

"சாப்டம்பா''

"அப்ப எனக்கும் போட்றா... நீ சாப்ட்டாதான் நானும் சாப்புடுவேன்...''

"......''

"நமக்கு யார்றா இருக்கறாங்க'' என்று கலங்கினார். எனக்கும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. உள்ளே நுழைந்து, சட்டியில் சோற்றைப் போட்டு குழம்பூற்றிக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தேன்.

"உண்டை புடிச்சித் தரேன் சாப்ர்றியா...?''

"நா சாப்ட்ம்ப்பா...''

"உங்க அக்கா...'' என்று ஆரம்பித்து எதுவும் முடிக்காமல் விட்டுவிட்டார். சோற்றைப் பிசைந்து கொண்டே இருந்தார்.

"நா போறேம்ப்பா...''

"எங்கடா வேலைக்கா...?''

"ஆமா... நைட் ஷிப்டு...''

"சரி இதை உள்ளே எடுத்துப்போய் வெச்சிடு'' என்று சாப்பிடாமலே கை கழுவிக்கொண்டார்.

சாராயக்கடை நோக்கி நடந்தேன். பாலாஜி டீ ஸ்டாலில் நின்று டீ குடித்தேன். நாளையிலிருந்து யார் சமைப்பார்கள் என்று தெரியவில்லை. அக்கா நிஜமாகவே வரமாட்டாளா?

டீ சாப்பிட்டு விட்டு வெளியேறும்போது இரண்டு பொரைகள் வாங்கிக் கொண்டேன்.

புதன், ஜூலை 30, 2008

தேடல்

தமிழ்மகன்

கிழவி அநாவசியத்துக்குப் பயந்தாள். நகரத்தின் வேகம் அவளை மூச்சுத் திணற வைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு நெரிசலையும் வாகனங்களின் அடர்த்தியையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
குருவியூர் நகரத்தைப் பற்றி சமீபத்தில் தான் குப்பம்மா மூலம் கேள்விப்பட்டிருந்தாள்.
"ஏண்டியம்மா உம்புள்ள அங்கதான் காய்கறிக் கடை வெச்சிருக்கான்... என்னடா எப்படியிருக்கேன்னு விசாரிக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே டபாஞ்சிட்டான்''
கிழவிக்கு ஜெயராமனை நேரிலேயே பார்த்துவிட்டது போல் இருந்தது. "நெசமாவா?'' என்றாள்.
"ஐய... உங்கிட்ட பொய் சொல்லித்தான் மெத்த வூடு கட்டப்போறேன்... மெய்தான்றேன்...''
"எங்க இருக்குது அந்தக் குருவியூரு?'' என்று விசாரித்தாள் கிழவி.
குப்பம்மாள் வழித்தடம், இறங்க வேண்டிய ஸ்டாபóபிங் எல்லாவற்றையும் அக்கறையாகச் சொல்லி பஸ் ஸ்டாண்ட் வரை வந்து வழியனுப்பியும் வைத்தாள்.
பஸ்ûஸ விட்டு இறங்கியதும் நகரத்து நெரிசலைப் பார்த்து மிகவும் குழம்பிப் போனாள். யாரை, எப்படி விசாரிப்பது என்று புரியாமல் இரண்டு முறை குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டு பிரமித்து நின்றாள். முதல் அடியை எந்தத் திசை நோக்கி வைக்கலாம் என்பது அவளுக்குப் புரியவில்லை.
வாகனங்களின் புயல் வேகங்களுக்குப் பயந்து பின் வாங்கி, ஒரு டீக்கடை ஓரம் அடித்துச் செல்லப்பட்டாள். அங்கே அனல் பறக்க டீ குடித்துக் கொண்டிருந்தவனை விவரம் கேட்க எத்தனித்தாள்.
அவன் ஒரே வாயாக டீயைச் சாய்த்துக் கொண்டு, "சில்ற இல்ல...'' என்று சொல்லிவிட்டு, வேகமாக ஒரு பஸ்ûஸ நோக்கி ஓடினான்.
கிழவிக்கு அவன் சொன்னது கொஞ்ச நேரத்துக்குப் புரியவே இல்லை.
"ஜெயராமா நா உனக்கு என்ன பாவம்டா செஞ்சேன்.... 'என்று ஹீனமாக முனகிக் கொண்டு ஏதோ தீர்மானத்தோடு நடக்க ஆரம்பித்தாள்.
காலும், கண்ணும் துவண்டு போகும் வரை நடந்தாள். அவளுக்கு எல்லாமே ஜெயராமனாகத் தெரிந்தது. சிலரைச் சற்றே திடுக்கிட்டு "டேய்' என்று கூப்பிட்டு விடும் கடைசித் தருணத்தில் சுதாரித்தாள். அவர்களெல்லாம் ஜெயராமன்கள் இல்லை.
பசி மயக்கம் கீழே தள்ளப் பார்த்தது. இருக்கிற கொஞ்சம் சில்லறையில் எதையாவது வாங்கிச் சாப்பிடத் துணிவில்லை.
சாப்பிடலாமா? வேண்டாமா? என்று யோசித்து யோசித்தே சோர்ந்து போனாள்.
சுருண்டு, ஒரு இடத்தில் உட்கார்ந்தே விட்டாள். உச்சி வெய்யில் பிளந்தது. காலையில் ஒரு வாய் கூழாவது குடித்திருந்தால் அவளால் சமாளித்திருக்க முடியும்.
மரத்து நிழலில் அரைமணி நேரம் உட்கார்ந்ததில் கொஞ்சம் சாப்பிட்ட திருப்தி.
புடவையிலிருந்த கிழிசலைப் பார்த்து அலுத்துக் கொண்டு, கிழிந்த இரு பகுதியையும் சேர்த்து முடிப் போட்டுக் கொண்டாள். இந்தக் கோலத்தில் பையன் நம்மைப் பார்த்தால் துடித்துப் போய் விடுவான்.
"தேய்... கட்டிக்கிறதுக்கு வேற புடவையே கிடைக்கலையா உனக்கு?''
"நீ போயிட்டதுக்கப்புறம் நெலம ரொம்ப மோசமாயிடுச்சு நைனா.''
"இந்தப் புடவை புடிச்சிருக்குதா பாரு.''
"ம்...''
"இந்த டிசைன்ல ரெண்டு புடவ குடுப்பா''
மரத்தின் நிழல் நழுவி வேறு பக்கம் போயிருந்தது.
கிழவி மீது வெயில்... கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள்.
ஜெயராமனைப் பார்த்துவிட்டால் நமக்கு ஒரு குறைவும் இல்லை. அந்தச் சிறுக்கியும் கூடதான் இருப்பாள்.... அவளாலதான் எல்லாமே... அடியோட மாத்திப்புட்டா... ச்
எழுந்து பக்கத்திலிருந்த டீக்கடைக்குப் போய், ""பன்னு ஒண்ணு குடுக்குறியாப்பா?'' என்றாள்.
"போ...போ... வேற வேலையில்ல'' என்று விரட்டினான் கடைக்காரன்.
அவன் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து, அவசரமாக, "துட்டு இருக்குதுப்பா' என்று முந்தானை முடிச்சை அவிழ்த்தாள்.
கடைக்காரன் ஒரு மாதிரியாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பெரிய கண்ணாடி புட்டியைத் திறந்து பன்-ஐ எடுத்த போது அதிலிருந்து ஈயொன்று அவசரமாகத் தப்பியது.
ஞாபகமாகப் பன்னீர்ப் புகையிலை வாங்கி கடைவாய்ப் பற்களில் இடுக்கிக் கொண்டாள். அதுதான் வைத்தியம். பசிக்கிறதே என்று அடிக்கடி பன் சாப்பிட முடியுமா?
கிழவி புதுத் தெம்புடன் தேட ஆரம்பித்தாள். லாரிகள் ஏடாகூடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தயங்கி நின்றாள். ஜெயராமன் இங்குதான் எங்கோ ஒளிந்திருப்பதாக நினைத்து லாரிகளுக்கு இடையில் கூர்மையாகத் தேடினாள். லாரி எடை தளத்தில் நின்று கிழநரி மாதிரி சுற்றிலும் பார்த்தாள்.
கண்ணாடி அறையில் இருந்து ஒருவன் அதட்டினான். "ஏய்... கெழவி... இன்னா? உன்னை எடை போடணுமா?'' என்றான்.
கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. "எம்புள்ள ஜெயராமன ஒரு மாசமா காணலப்பா...'' என்றாள்.
ஒரு கிளீனர் பையன் ஆவேசமாக வெளியே வந்து, "இது நாப்பது டன் எடை போடற மிஷின்... கொஞ்ச தூரம் போனா நடராஜா தியேட்டர் வரும். அங்கே போய் நாலணா போட்டு உன் எடையைக் கண்டுக்கலாம்...'' என்று சொல்லிவிட்டு ஓஹோவென்று சிரித்தான்.
கிழவி பதிலுக்கு, "காய்கறிக்கடை வெச்சிருக்கான் தம்பி... ஜெயராமன்னு பேரு...'' என்றாள்.
"த்தேய்... போன்னா போவியா, உன்னை மாதிரி ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பார்க்கறேன்... பிச்சை எடுக்கறதுல இதுலாம் ஒரு தினுசு'' என்றபடி கிழவியைத் தரதரவென்று இழுத்து வந்து நடு ரோட்டில் தள்ளினான்.
ஆத்திரமும், இயலாமையும் சேர்ந்து கிழவி அழ ஆரம்பித்தாள். ரோட்டில் போய்க் கொண்டிருந்த ஒருவனை நிற்க வைத்து, "என்னைப் போய் பிச்சைக்காரினு சொல்றானுங்களே... அவனுக்கென்ன கண்ணு அவிஞ்சிப் போச்சா? எம் மூச்சியப் பாரு நா பிச்சைக்காரியா? என் காதைப் பாரு... ம் தெரிதில்லை...?'' என்றாள்.
அவள் காதில் கம்மல் மாட்டும் இடத்தில் இருந்த பிரம்மாண்டமான துளையைப் பார்த்துவிட்டு, அவன் சற்றே திகைத்தாற்போல், "என்னது?'' என்றான்.
"எங் காதைப் பார்த்தா தெரியலை? எவ்வளவு ஓட்டைக் கிடக்கு... கொப்பு போட்டிருந்தேன். நடுக்காது போட்டிருந்தேன். தண்டட்டி போட்டிருந்தேன். மூக்குல ரெண்டு பேஸ்ரி... எல்லாந்தா போட்டிருந்தேன். குடிகார ஆம்பளை எல்லாத்தையும் அழிச்சிட்டு சேர வேண்டிய எடத்துக்குப் போய் சேர்ந்துட்டான்'' என்றபடி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பிக்கவே, "எனக்கு டயமாச்சி'' என்று அவளிடமிருந்து கையை உதறிக் கொண்டு நழுவினான் அவன்.
கத்தரிக்காய் கூடையைத் தூக்கிக் கொண்டு, நடையில் கட்டுப்படாத ஒருவித மாரத்தான் ஓட்டத்தில் போய்க் கொண்டிருந்தான் ஜெயராமன். அவனை ஒட்டி கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை என்று மாறி, மாறி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி. ஜெயராமனை முதுகில் சீண்டி, "அங்க பாருங்க உங்கம்மா...'' லாரி ஷெட் பக்கம் கையைக் காட்டினாள்.
ஜெயராமன் திரும்பிப் பார்த்து "தெரியும்... பேசாம வா'' என்றான்.

tamilmagan2000@gmail.com

இரக்கம்

தமிழ்மகன்

ஏற்கெனவே ஒருவன் செத்துப் போயிருந்தான்.

எத்தனையோ பேர் செத்துப் பிழைத்திருந்தார்கள்.

இப்பேர்பட்டவர்களைப் பிழைக்க வைப்பதற்காகவே எங்கோ வேலை செய்து வந்த கம்பவுண்டர்கள் எல்லாம் கூட்டு ரோட்டில் "டாக்டர் கடைகள்' வைக்கத் துவங்கியிருந்தார்கள். எவனாவது ஒரு டாக்டரின் பெயரை போர்டில் போட்டுவிட வேண்டியது. சற்றே விவரமான ஆள், டாக்டரையெல்லாம் விசாரித்தால், "வெளியே போயிருக்கார்...' என்று என்னமோ அப்பத்தான் வெளியே போனது மாதிரி சொல்வார்கள்.

தலைவலி, வயிற்றுவலி, சேற்றுப்புண், சீதபேதி இத்யாதி விஷயங்களுக்குத் தயாராய் சில ஊசி மருந்துகளை வைத்துக் கொண்டு, வெறியோடு குத்துவதற்குக் காத்திருந்தார்கள். பூச்சி மருந்து அடித்து மயங்கி விழுந்தவனென்றால் லட்டு மாதிரி. எழுநூறு ரூபாய் வசூலிக்கிறார்கள்.

" எங்க காலத்துல எப்ப இப்பிடியாகியிருக்கும்? அப்ப இல்லாத பூச்சில்லாம் இப்ப எங்கிருந்து வந்தது? எல்லாம் கலி கலி'' என்று தலையில் அடித்துக் கொண்டார் சரவணரெட்டி.

களை எடுத்துக் கொண்டிருந்ததால் இடுப்பு பிடித்துக் கொண்டதை நிவர்த்தி செய்யும் பொருட்டு, "அப்பல்லா பூச்சே அடிக்காதா?'' என்று கேட்டபடி நிமிர்ந்து நின்றான் ஒருவன்.

"வெறப்பாடு முடிஞ்சா, வேலை முடிஞ்சாப்பல'' என்றார். ஆறு மாசம் கழிச்சு வந்து அறுக்க வேண்டியதுதான்.

"இப்ப மூணுமாசத்துல இல்ல அறுக்கிறம்...? அதுக்கேத்த, செவரெட்சணை செய்றோம்...''

"இன்னொருத்தன், ரெட்டியாரே நெறைய பூச்சி...'' என்றபடி கொத்தாகப் பயிரைப் புடுங்கிக் காண்பித்தான்.
நன்றாய் முளைத்திருந்த பயிர், கதிர் விடும் நேரத்தில் பழுத்துத் கருகியிருந்தது.

"எல்லாத் தலைவயல்லயும் அப்படிதான்'' என்று இன்னொருவன் எழுந்து நிற்க, ரெட்டியார் உஷாராகி, ""பேச்சுக் குடுத்தா போதுமே... கத பேசிக்கிட்டே கூலி வாங்கிடுவீங்களே'' என்றார்.

அந்தப் பக்கமாய் போய்க் கொண்டிருந்த ஆறுமுகரெட்டி, "வேலையைக் கவனிங்கடே'' என்றபடி அருகில் வந்தார்.

சரவண ரெட்டி, "பரவால்யா பயிறு?'' எனóறார்.

"எங்க?'' என்று சப்புக் கொட்டினார் ஆறுமுகம்.

"எவ்ளோ நட்டுருக்கே?''

"தெரியாத்தனமா ஏழு ஏக்கர் நட்டுப்புட்டேன் பூச்சி ஏறிங்கியிருக்குது. போட்ட நெல்லு வருமான்னுருக்குது.''

" என்னமோ மருந்து சொல்றாங்களே அடிச்சியா?''

"எக்காளக்ஸ்... செவின்... பூச்சி என்னமோ சாவுது... அடிக்கிற ஆளும்ல சேந்து செத்துப் போறான்?''

"நானும் அதாம் பாக்றேன்... நேத்து அப்டி நான் இங்கிருந்து பாக்றேன்... அதோ முதலியார் தலைல சிங்காரம் ஸ்பிரேயர்ல மருந்தடிக்கிறான். ரெண்டாவது ரவுண்ட்ல தண்ணியடிச்வனாட்டம் இப்படியும் அப்படியும் ஆடினான். அப்புறம் பாத்தா... மிஷினையெல்லாம் அப்படியே போட்டுட்டு வரப்ல போóய்ப் படுத்துட்டான்.''

"ஐயோ, அப்புறம்...? இவ்ளோ நடந்திருக்கு. எனக்குத் தெரியாதே.''

"நா ஒரே ஓட்டமா ஓடுறேன். அதுக்குள்ள என்னடாது திடீர்னு சத்தத்தையும் காணம். ஆளையும் காணம்னு பாதி பேர் ஓடியாற...''

" ஆ...ங்''

"ஆளு வரப்ல மூச்சு பேச்சில்லாம கிடந்தான். தூக்கிப் போய்க் களத்து மேட்ல போட்டு, மூஞ்சில தண்ணிய அடிக்கவும், ஆளு அப்பிடி இப்பிடி எழுந்து குந்தினான்.''

"அப்ப பொழச்சிட்டான்?''

"பொழச்சிட்டான், பொழச்சிட்டான்... நம்ம மாணிக்கம் என்ன சொன்னான் தெரியுமா?''

"எந்த மாணிக்கம்?''

"அட! நம் புளிமூட்டை...''

"ஆங்...ஆங்...''

"டே சிங்காரம் அப்படியே காலைப் பரப்பிக்குனு படுடா.. கண்ணைத் தெறக்காதே... முதலியார் கிட்ட ஆயிர் ரூப் கறந்திடலாம்ன்றான்...''

"óஅதிலியும் முதலியார்தாங் குடுப்பாரு...''

"பண்ணன கலாட்டால முதலியார் ஆடிப் போயிட்டான் பர்ஸ்டு... அப்புறம் உஷாராயி பத்ரூபா செலவுக்குக் குடுத்து விட்டான்...''

ஆறுமுக ரெட்டி ""கிக், கிக்'' என்று சிரித்தார். "கல்லுல நாறு உரிப்பானே முதலி'' என்றார்.

"ச்செரி... அதாம் பயமாயிருக்கு. எங்க நம்ப நெலத்தில பூச்சி மருந்து அடிக்கப் போயி மண்டையப் போட்டான்னா... போனாப் போகுது ரெட்டியாரே ரெண்டு ஏக்கரா அவங்க குடும்பத்துக்கு எழுதி வெச்சிடுன்னு சுளுவா சொல்லிடுவானுங்களே?''

"ஏன்... இதே மாணிக்கமே ஆரம்பிச்சி வெப்பான்.''

மொத்தத்தில் மருந்தடிக்கத் தோதாய் ஒருவனும் இல்லை. ஒரு நாளெல்லாம் ஒரு ஏக்கர் அடிக்கிறவன்தாóன். அதுவும் நான்கு நாள் சேர்ந்தாற்போல் அடித்தால் ஒருநாள் மயங்கி விழுந்தார்கள். குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் நமக்கு வேலை செய்யும்போது செத்துப் போய்விடக் கூடாதே என்பது ஒவ்வொருவரின் அந்தரங்கப் பிரார்த்தனையாய் இருந்தது.

ஆத்தூர் செல்வத்தைப் பற்றி, அதோ அவதாரம் எடுத்து வந்தவன்போல் பேசிக் கொண்டார்கள். இவ்விஷயம் சரவண ரெட்டி காதிலும் அவ்வப்போது விழுந்தது. படியாளை அனுப்பி அழைத்து வரும்படி சொன்னார். வந்தான்.

செல்வம் என்பவன் இஸ்திரி போட்டது மாதிரி பட்டையாய் உயரமாய் இருந்தான். இத்தனை முறை புயல்கள் வந்தும் அவன் ஒடிந்து விழாதது ஆச்சரியமாய் இருந்தது.

சரவண ரெட்டி இப்படித் துவங்கினார்.

"ஆத்தூரா நய்னா நீ?'' என்றார்.

அவன் பணிவாய்ப் பதில் சொல்ல விரும்பி சதா நேரமும் கூன் போட்டவன் மாதிரி நின்றிருந்தான்.

"ஒரு நாளிக்கு எத்தினி ஏக்கர் அடிப்பே?''

"உங்களுக்கு எவ்ளோ அடிக்கணும் சொல்லுங்க?'' என்று திருப்பிக் கேட்டான்.

"இன்னா ஒரு பத்து ஏக்கர்னு வெச்சுக்கயேன்.''

"அப்ப ரெண்டு நாளு'' என்றான்.

"அடேங்கப்பா சாமர்த்தியகாரன்... ஏன் நய்னா... உனக்கு மயக்கம், கியக்கம் வராதில்ல?'' என்று கேட்டு வைத்தார்.

"நமக்கு அதெல்லாம் வராதுங்க'' என்றான் பன்மையில்.

"செரி... எப்ப வர்ரே சொல்லு..?''

சற்றே யோசனையாய் கன்னப் பகுதியில் தேய்த்து விட்டுக் கொண்டான்,

"முக்யமா ரெண்டு பேருக்கு அடிக்க வேண்டியிருக்கு. காவனூர்ல செல்லமுத்து நாயகர்க்கும். வரத நாயகருக்கும். பொண்டாட்டி செத்து போனதால எல்லாம் டிலே ஆயிட்ச்சி''

"ஐய்யய்யோ எப்ப?'' என்றார் சரவண ரெட்டி.

"கிர்த்திகை வந்துதே... அன்னைக்கு மறுநாள்...'' இதைச் சொல்லும்போது அவன் குரல் கம்மிப் போய் விட்டது.

"முழுகாம இருந்தா...'' என்று ஆரம்பித்தவன், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு , லூங்கியால் கண்களைத் துடைத்துக் கொண்டான். திடீரென்று இப்படி அழுகை வந்துவிóட்டது அவனுக்கே சங்கடமாக இருந்திருக்க வேண்டும்.

கிருத்திகை போய் பத்து நாள் கூட ஆகியிருக்கவில்லை. தாஜா பண்ணி நாறைக்கே மருந்தடித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்த சரவண ரெட்டிக்கும் அதிர்சóசியில் என்ன பேசுவதெனóறு யோசனையிலாழ்ந்தார். உண்மையில் இருவருமே இப்படி ஒரு சூழல் ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

"...ம்... என்ன ஒடம்புக்கு?'' என்றார் சரவண் ரெட்டி.

"மஞ்ச்க் காமலைன்ட்டு பொன்னேரிக்கு போய் செம்புக் கம்பில சூடு வெச்சுக்குனு வந்தா, வெரல்ல...''

"வெரல்லியா?''

விரலில் சூடு வைத்துக் கொண்டால் அதன் வழியே உடலில் இருக்கிற மஞ்சள் எல்லாம் வெளியே வந்து மஞ்சட் காமாலை போய் விடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதுவும் ஆள்காட்டி விரலில்தான் சூடு வைப்பார்கள். இதெல்லாம் சரவண ரெட்டிக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை. ஏதோ அவன்ó திருப்திக்காகக் கேட்டார்.

"ஆமா..'' என்றான்.

"மஞ்சக் காமாலன்னா கீழாநெல்லிதான் அதுக்கு வைத்தியம்...'' என்று ஒரு மாதிரியாய் விஷயத்தைத் திருப்பினார். "அப்போ... அவங்க ரெண்டு பேருக்கும் முடிச்சிட்டு வரேன்றியா?''

"ரெண் நாள்ல முடிச்சிடுவேன்.''

"முடிச்சுட்டே வா'' என்று அனுப்பி வைத்தார்.

செல்வம் போனதும் படியாளைக் கூப்பிட்டு, " ஏண்டா, கூமூட்டை... பொண்டாட்டி செத்துப் பத்து நாள் தா ஆகுதுன்றான், சொன்னியாடா?'' என்றார்.

"அப்படியா...? இன்னாவாம் ஒடம்புக்கு?'' என்றான்.

"அடிங்... போடா, நாள கழிச்சு வரேன்னு சொல்லியிருக்கேன்... போயீ... சேடóடு கிட்ட பத்து ஏக்கருக்குத் தேவையான மருந்துனு கேளு... அவனே குடுப்பான். எவ்ளோ தண்ணில கலக்கணும். என்னம்மா அடிக்கணும்னு விசாரிச்சுக்குனு வா'' என்றார்.

"துட்டு கேட்டா?''

"கணக்ல எழுதச் சொல்லுடா... அடுத்த வாரத்ல வரேன்னு சொல்லு... ரசீது வாங்க்கினு வா''

"சரி.'' சரவண ரெட்டியார் யோசனையாய் ""ஏண்டா'' என்று போய்க் கொண்டிருந்தவனை நிறுத்தினார்.

"நம்மகிட்ட வேல பார்க்கும்போது செத்துத் தொலையப் போறாண்டா.''

"ஒண்ணும் சாவ மாட்டான்... ஒரு கிளாஸ் ஊத்திக்குனு வன்óட்டான்னா, உயிர் போனா கூட அவனுக்குத் தெரியாது. அதும்பாட்டுக்கு வேல நடக்கும்'' என்றான் தீர்மானமாய்.

உடம்பே குலுங்கச் சிரித்தார் ரெட்டியார்.

நிழலும், பேச்சுத்துணையும் நாடி வந்த ஆறுமுக ரெட்டியார். "செல்வம் செத்து போயிட்டானாமல்?'' என்றபடி சரவண ரெட்டி பக்கத்தில் உட்கார்ந்தார்.

''அடடே... எப்ப?''

"நேத்து''

"நெனச்சேன்... நெனச்சேன்... செல்லமுத்து நாயக்கருக்கில்ல அடிக்றாப்ல சொன்னான். நாயகர் வசமா மாட்டினாரா?''

"அட நீ ஒண்ணு... ஆளு தூக்குமாட்டி செத்துப் போயிருக்கானó.''

சரவண ரெட்டி திருப்தி அடைந்தவராய் "அப்போ மருந்தடிச்சதால சாகலே...?'' என்றார்.
பின்னர், திடீரென்று ஞாபகம் வந்தவராய் "ஐய்யய்யோ... எதுக்குச் செத்துப் போயிட்டானாம்?'' என்று விசாரித்தார் வருத்தமாய்.

tamilmagan2000@gmail.com

ஞாயிறு, ஜூலை 27, 2008

மனக்குகை

தமிழ்மகன்


நினைவுக் குழப்பங்களில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார் சாமிக்கண்ணு. சங்கராச்சாரியார் கடவுள் இல்லை என்று பிரசங்கம் செய்ததாகக் கூறுவதும் போப் ஆண்டவர் கம்யூனிஸம்தான் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு என்று அறிக்கை வெளியிட்டதாகக் கூறுவதும் கடவுளை நம்பிக் கொண்டிருக்கும் உலக மக்களுக்கு எத்தகைய மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் சாமிக்கண்ணுவுக்கு ஓரளவுக்குப் புரிந்தது. "கடவுள் இல்லை என்பவர்களைவிட சதாநேரமும் அதையே நம்பி ஏமாந்து கொண்டிருப்பவர்களுக்குத்தான் கடவுள் என்று ஒன்று இல்லை என்று மிகத் துல்லியமாகத் தெரியும். ஆனால் ஒருபோதும் சங்கராச்சாரியும் போப்பும் அந்த உண்மையைச் சொல்வதே இல்லை. அப்படிச் சொல்லிவிட்டால் ஒரு நொடியில் உலகம் உருப்பட்டுவிடும்'' என்று தான்தோணி (அந்தோணி என்ற பெயரை அப்படி மாற்றிக் கொண்டவர்.) பேசும்போது உடம்பெல்லாம் சிலிர்த்துக் கைதட்டியவர்தான் சாமிக்கண்ணு. ஆனால் அந்த இரண்டுபேர் கடவுள் இல்லை என்று சொல்வதால் மக்கள் எப்படி நிலைகுலைந்து போவார்கள் என்று அஞ்சினார். இன்று நமக்கு ஏற்பட்ட நிலைதானே அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்ற கசப்பான உண்மையில் பரிதாபப்பட்டார்.

பெரியார் ரகசியமாக வெள்ளைப் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார் என்று ஒருவன் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். அது ஒரு மதம் சார்ந்த அரசியல் கட்சியின் கூட்டம். அந்தக் கூட்டத்தில் பெரியார் குறித்து அப்படித்தான் பேசுவார்கள் என்பது அவர் அறிந்ததுதான். இந்த மாதிரி அத்தகையவர்கள் பேசும்போது 'எவனாவது வீட்டில் ரகசியமாக சாமி கும்பிட்டுக் கொண்டு 95 வயசுவரை சாமி கிடையாது பூதம் கிடையாது என்று சொல்லுவானா.. அப்படி ஆசையாக இருந்தால் ஆமாம்பா சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டேன் என்று தைரியமாகத் சொல்லிவிட்டுப் போகிறார். வீட்டில் ஒன்றும் வெளியில் ஒன்றும் செய்வதால் அவருக்கு என்ன லாபம்?' என்று பதிலடி கொடுத்துவிட்டு வேலை பார்த்தவர்தான். சாமிக்கண்ணு.

மனது ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு அதீத தருணத்தில் அவருடைய தத்துவக் கோட்டையை அந்தப் பேச்சு ஆட்டம் காண செய்துவிட்டது. பெண் ஏன் அடிமையானாள்?, ஆரியமாயை, சோதிடப் புரட்டு, பெரியார் சிந்தனைகள், பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம், பெரியார் பெயரை உச்சரித்தபடி தீமிதித்து நாக்கில் வேல் குத்தி முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து எல்லாம் பார்த்தாகிவிட்டது. 15 வயதில் தேங்காய்க்குப் பிள்ளையார் உடைப்பதில் ஏற்பட்ட ஆர்வம் 50 வயசு வரைக்கும் வாழ்வின் சகல இடுக்குகளிலும் புகுந்து லட்சிய மனிதனாக நடைபோட வைத்தது. தாலி மறுப்பு- சாதி மறுப்புத் திருமணம் செய்து, சொந்த பந்தங்களுக்கு விரோதமாக செயல்பட்டார். வீட்டில் ஒரு தீபாவளி, அமாவாசை, கிருத்திகை, பெயர் ராசி, நல்ல நேரம் ராகுகாலம், முகூர்த்தம், பெற்றவர்களுக்குத் திதி, திவசம் எதுவும் கிடையாது. ஒரே மகள் ஓவியாவை பையனைப் போலத்தான் வளர்த்தார். கிராப் வெட்டி, சட்டை பேண்ட் போட்டு, விளையாட்டு வீராங்கனையாக வளர்த்தார். தடகள போட்டியில் மாநில அளவில் சாம்பியன். ஓவியா சக்தியின் வடிவம் - பராசக்தி, அடுத்த பி.டி. உஷா என்று தினமானியின் இலவச இணைப்பு வார சஞ்சிகையில் பாராட்டி எழுதியிருந்தார்கள்.

35 ஆண்டுகள் நாத்திக வெளியில் குங்குமம், விபூதி தீண்டாமல் வாழ்ந்த வாழ்க்கை. கையில் கறுப்புக் கயிறு, நெற்றியில் விபூதி என்று யாராவது எதிரில் தென்பட்டாலே ஒன்று அவன் அயோக்கியனாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உலகம் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த சாமிக் கண்ணுவுக்கு இது இரண்டாம் பிறவி போல இருந்தது.

நேற்று கபாலிசுவரர் கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிடுகிற அளவுக்கு அவருக்கு ஒரு ஆவேசம் வந்ததுவிட்டது. கோயிலுக்கு அருகே செல்லும்போதே ஒரு அருவருப்பு ஏற்பட்டு பக்கத்துத் தெருவில் புகுந்து தப்பித்து வந்தவர் மாதிரி நின்றார். பிறன்மனை நோக்கியதுபோல் படபடவென்று அடித்துக் கொண்டது. வேறு திசையில் செயல்பட்டு யாராவது பார்த்துவிட்டிருப்பார்களோ என்று பயந்து போய் அங்கும் இங்கும் வெறித்தார். என்ன இருந்தாலும் கோவிலுக்குள் நுழைகிற தைரியம் தமக்கு எப்படி வந்ததென்று பதறினார்.

வாழ்வில் எப்போதும் ஏற்படாத இடர்.. ஒருவேளை பெரியாரே சாமி கும்பிட்டிருந்தால்? "என்னுடைய கருத்தைச் சொல்லிட்டேன். உங்க பகுத்தறிவைப் பயன்படுத்தி உங்களுக்கு எது சரீன்னு படுதோ அதன்படி வாழுங்க'' என்று வாழ்நாளெல்லாம் சொன்னவர் அவர் எப்படி... சேச்சே... ஒருவேளை வாழ்நாளெல்லாம் சொல்லிவிட்டதாலேயே அதிலிருந்து முரண்பட முடியாமல் போயிருக்குமோ அவருக்கு?

மனசு படபடவென அடித்துக் கொண்டது. தெருவெல்லாம் சுற்றிச் சுற்றி ஆயாசமாக அவர் வந்து நின்ற இடத்தில் ஒரு பிள்ளையார் கோவில். அதற்குப் பெயர் கோவிலா என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. மூன்று தெரு கூடுகிற இடத்தில் தெருக் குத்தான இடத்தில் ஒரு பிள்ளையாரை நிறுவுவார்களே... பிளாட்பாரத்திலேயே ஒரு ஓரமாக.. அந்த வகைப் பிள்ளையார். தன் அம்மா மாதிரியே பெண் வேண்டும் என்று ஒவ்வொரு முச்சந்தியிலும் பிள்ளையார் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். 'இப்படி சொல்லி வெச்சு சைட் அடிக்கிற ஆசாமிய ஈவ் டீஸிங்ல உள்ள போட வேணாமா?' என்று கூட்டத்தில் கிண்டலடித்து யாரோ பேசிய போது குலுங்கிக் குலுங்கிச் சிரித்திருக்கிறார்.

நாமா அப்படிச் சிரித்தோம் என்று ஒரு நிமிடம் சந்தேகமாக இருந்தது. போன பிறவியில் சிரித்தது மாதிரி இருந்தது அவருக்கு. ஐயோ போன பிறவியா? மறுபடி பதறினார். அதுவும் நிஜமா? கடவுள் என ஒன்று இல்லாமலா எல்லாரும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதிகாலம் தொட்டு சாமி கும்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு ஒரு ஆதாரமுமா இல்லாமல் போகும். எல்லோருமா காட்டுமிராண்டிகள். ஒருவருமா சுயபுத்தி இல்லாதவர்கள்? பிள்ளையாரைப் பார்த்தார். உடைக்காமல் முதல் முறையாக உற்றுப் பார்த்தார். அவர் சாந்தமாக உட்கார்ந்திருந்தார். உலகையே ரட்சித்து போஷிக்கும் கடவுளா... எல்லாருக்கும் புரிந்தது நமக்கு மட்டும் புரியாமல் போய்விட்டதா?

கற்பூர வாசனையும் ஊதுபத்தி வாசனையும் அவருக்குத் தாங்க முடியாத நெடியாக இருந்தது. இது நாள் வரை அவ்வளவு பக்கத்தில் இந்த வாசத்தை நுகர்ந்ததில்லை. அறியாமையின் வீச்சமாக இருந்தது அது. இதையும் பக்தியின் பகுதியாக நினைக்க வேண்டும், பழக வேண்டும் என்றும் அடிமனதில் ஏதோ ஓர் ஆணை பிறந்தது. தானாக நினைத்தோமா, மனசில் வேறு யாரோ சொல்கிறார்களா? பிள்ளையாரின் முன்பாகவே வெகுநேரம் நின்றார். பார்வதி குளிக்கும்போது அழுக்கை உருட்டி காவலுக்கு செய்த உருவம்தான் பிள்ளையார் என்று பெரியார் திடலில் பேசக் கேட்டதும் ஒரு சேர ஞாபகம் வந்தது. யாரடா நீ புதியவன் என்று வெளியே போயிருந்த சிவபெருமான் பிள்ளையாரின் தலையைச் சீவிவிட்டாராம். அடடா இது நம் மனைவியின் அழுக்கில் உருவானவன் என்று தெரிந்து வேறோரு தலையைத் தேடித் திரிந்த போது எதிரே வந்த யானையின் தலையை வெட்டி பிள்ளையாருக்குச் சூட்டினாராம். இப்படி ஒரு கதை.

அயன்புரம் மணிவண்ணன் இந்தக் கதையைச் சொல்லிவிட்டுக் கேட்கிற சந்தேகங்கள்... ஒரு பெண்ணுக்கு எவ்வளவு நாள் குளிக்காமல் இருந்தால் இவ்வளவு அழுக்கு சேரும்? உலகத்தையே காத்து ரட்சிக்கிற கடவுளும்கூட மனிதனைப் போலவே குளிக்க வேண்டுமா? கடவுள் குளிப்பதை அவர் தயவு இல்லாமல் யார் வந்து வேடிக்கை பார்த்துவிட முடியும்? சிவபெருமான் என்ன வேலையாக வெளியே போய்விட்டு வந்தார்? ஏழெழு லோகத்தையும் அண்ட சராசரத்தையும் அளந்து கொண்டிருப்பவருக்கு தன் வீட்டில் இப்படி காவலுக்கு ஒரு பையன் உருவாக்கப்பட்ட விஷயம் தெரியாதா? குளியல் அறைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னதற்காக ஒரு சிறுவனின் தலையை வெட்டி எறியக் கூடவர்தானா கடவுள்? மீண்டும் ஒட்டுவதென்றால் அதே தலையை ஒட்டித் தொலைக்க வேண்டியதுதானே? அதற்காக எதிரே வந்த ஒரு யானையைக் கொல்லுவது எத்தனை பெரிய குற்றம்? மனிதன் தலையும் யானையின் தலையும் சேருமா? இவ்வளவு முட்டாள்தனமான ஒரு காட்டுவாசிக்கதையை கம்யூட்டர் யுக மனிதன் நம்பலாமா? ஒரு கையில் சாப்ட்வேர் புரோகிராம், இன்னொரு கையில் களிமண் பிள்ளையார் எப்படிச் சாத்தியம்... திருந்துமா இந்த சமுதாயம்? நெத்தியடியாக கேள்விகள் போடுவார்.

ஒருவேளை மணிவண்ணன் சொன்ன இந்தக் கதையே பொய்யோ? விநாயகருக்கு நிஜமாகவே வேறு ஒரு சரித்திரம் இருக்குமா?

கடவுளுக்கு ஏது சரித்திரம்? அவர் சரித்திரத்துக்கு அப்பாற்பட்டவராக அல்லவா இருப்பார்? சரித்திரம் என்ன... மனிதன் பிறப்பதற்கு முன்னால் அல்லவா கடவுள் பிறந்திருப்பார்? மனிதர்கள் பிறப்பதற்கு முன்னால் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்? அவரைப் பற்றி யோசிக்கவோ அவருடைய இருப்பு பற்றிய புரிதல் கொள்ளவோ ஆள் இல்லாத இடத்தில் அவர் இருந்தார் என்பதற்கு என்ன பொருள்?

இன்னும் கிண்டல் போகவில்லையே? ஜீவாத்மா, பரமாத்மா, துவைதம், அத்வைதம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் லட்சம் பாதையில் ஒன்றில் மட்டும் பயணம் செய்துவிட்டு மற்ற வழிகள் எல்லாமே நேர்வழிகள் அல்ல என்று கூறிவந்தது என்ன நியாயம்? கடவுளை தரிசிக்கும் மனசு வாய்ப்பிப்பதே ஒரு கொடுப்பினைதான். அதை நாம் இழந்துவிட்டோம். யாரோ ஒரு பெண் விளக்குக்குக்கு எண்ணெய் ஊற்றிவிட்டு கற்பூரம் ஏற்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அதுமாதிரி நாமும் செய்ய முடியுமா என்று பார்த்தார். முதலில் வணங்கிவிட்டு பிறகு கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமா அல்லது கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்க வேண்டுமா? அந்தப் பெண் செய்த போது அவர் கவனிக்கவில்லை. அடுத்து யாராவது வருகிறார்களா என்று காத்திருந்தார். இந்த வயதுக்குப் பிறகு யாரிடமாவது இதைக் கேட்க முடியுமா? கேட்டால் நையாண்டி செய்வதாக நினைப்பார்களா?

நிஜமாகவே ஒரு கடவுள் இருந்தால் அவர் ஏன் பெட்ரான் ரஸ்ஸல், இங்கர்சால், பெரியார், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் புத்திக்குப் புலப்படாமல் போனார்? இப்போது பெரியார், சாமி கும்பிட்டு வந்ததாகக் கூறப்படுவதுபோல இவர்கள் எல்லோருமே கும்பிட்டு வந்திருந்தால்? ஐயோ... சாமிக்கண்ணுவின் துவண்டுபோனார். நாத்திகம் பேசுவோர் அனைவருமே பொய்யர்களோ? சூது நிறைந்த குயுக்தியான கதைகளைச் சொல்லி மனிதர்களைக் குழப்பிவிட்டு அவர்கள் மட்டும் ரகசியமாக வழிபட்டவர்களோ? ஆத்திகர்களில் கற்பழிப்பவனும் போலிச் சாமியாரும் பித்தலாட்டக்காரனும் இருப்பதாகச் செய்தித்தாளில் பார்க்கிறோம். நாத்திகர்களில் மட்டும் அயோக்கியர்களும் ஊரை ஏமாற்றுகிறவர்களும் இருக்க மாட்டார்களா என்ன?

தெரு இருண்டுவிட்டது. பிள்ளையாரும் சரியாகத் தெரியவில்லை. அங்கே கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்த குங்குமத்தையும் விபூதியையும் ஒரு பேப்பரில் கொட்டி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். அவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. குபீர் உஷ்ணத்தால் தாக்குண்டு வியர்த்துக் கொட்டியது. நாம் செய்கிற இந்த காரியத்தை தோழர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கவ்வி நாவரண்டு போனது. கால்கள் துவள அங்கேயே உட்கார்ந்துவிடலாமா என்று நினைத்தார். ஆனால் அவரையும் மீறி அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து கொண்டிருந்தார்.

ஸ்பார்ட்டகஸின் தோல்விதான் ஏசுவைக் கொண்டுவந்தது. ஏசுவின் தோல்வியில்தான் காரல் மார்க்ஸ் வந்தார்... உண்மையாக இருக்குமா?
சற்று உரக்க 'காரல் மார்க்ஸ்' என்றார். யாரோ இவர் சொன்னதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனார்கள். இவருக்குத் தான் சத்தமாகச் சொன்னோமா என்று தெரியவில்லை. ஏசுவுக்கு பதிலா புத்தர்... மார்க்ஸுக்குப் பதிலா பெரியார்... இல்ல. இல்ல. என்று வேகமாகத் தனக்குத் தானே தலையாட்டி மறுத்துக் கொண்டார்.

வீட்டுக்கு வந்த பின்னும் யாருடனும் அவர் பேசவில்லை. தனது அறையில் உள்புறம் தாளிட்டுக் கொண்டு உலவினார். சாப்பிட அழைத்துக் கதவைத் தட்டிய மகளிடமும் மனைவியிடமும் அவர் எரிச்சலடைந்தார். சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்றார். அவருக்கே அவருடைய நடவடிக்கைப் புதிதாக இருந்தது. இவ்வளவு ஆவேசமாக வாழ்க்கையில் தாம் ஒருமுறையும் இருந்ததில்லை என்று நினைவு வந்தது. கடந்த ஆறுமாதமாக தாம் பிள்ளையாரைப் பெரியார் வழிபட்டாரா என்ற குழப்பத்தில் இருந்ததை ஒவ்வொரு கட்டமாக நினைத்துப் பார்த்தார்.

முதலில் எவனோ வெத்து வேட்டுப் பயல் பெரியாரைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தார். பிறகு அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார். நெருப்பில்லாமல் புகையுமா ரக சிந்தனை... ஏன் பெரியார் மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா என்று நினைத்தார். அப்படி நினைக்கிற தைரியத்தையும் பெரியாரே தமக்கு வழங்கியிருப்பதாகச் சமாதனம் சொல்லிக் கொண்டார். குடம் பாலில் விழுந்த துளி விஷம். நியாயம் கிடைக்க வேண்டுமானால் சார்பு நிலை இன்றி யோசிக்க வேண்டும் என்றும் முன் முடிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். தோழர்களிடமிருந்து விலகி நின்றார். ஆனால் அவருக்கு ஐம்பது ஆண்டு முடிவுகள் ஆணிவேராக இருந்தது. அசைக்க முடியாத ஆணிவேர் என்ற தைரியத்தில் அதன் அடி மரத்தை ரம்பம் கொண்டு அறுத்துப் பார்த்தார். படிப்படியாக தாம் தமக்குத் தாமே பேசிக் கொள்ள ஆரம்பித்திருக்கும் நிலைக்கு வந்திருப்பதை அறிந்தார். ஆனால் இது வருத்தப்படும் விஷயமாக அவருக்குத் தோன்றவில்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தது. மனது லேசாக பாரமற்று இருந்தது. தொடர்ந்து இப்படியே இருக்கவே அவர் விரும்பினார். போதையின் மனப் பிரளயம்போல ஓயாத சிக்கல் மனதில் புரண்டு கொண்டிருந்தது. ஆனால் அதை யாராவது சரி செய்து பழையபடி ஆக்கிவிடுவார்களோ என்ற சந்தேகம் வந்தது. ஆதலால் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அவரை உற்று நோக்கினால் தம்மை சரி செய்யத்தான் அப்படி பார்க்கிறார்கள் என்று பயந்தார். உடனே சகஜமாக இருக்கவோ, அல்லது அவர்களை மிரட்டும் தோரணையில் கத்தவோ செய்தார்.

வெளியில் இருந்து வந்ததும் தாம் இயல்பாக இருப்பதாகவே வெளியில் காட்டிக் கொள்ள வேண்டும் என்று சிரமப்பட்டார். யாரையும் சந்திக்காமல் தனியாக இருப்பதே அதற்கு சிறந்த வழி. வெளியில் இருந்து கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தார்கள். கதவைத் திறந்து இவர் போட்ட கூச்சலில் அனைவரும் படுக்கைக்குப் போய்விட்டார்கள். சட்டைப் பையில் இருந்த விபூதியையும் குங்குமத்தையும் எடுத்து நெற்றி நிறைய அப்பிக் கொண்டார். முதல் முறையாக குங்குமம் வைக்கப்பட்ட தன் முகம் அவருக்கு விநோதமாக இருந்தது. சிறிய தோல் பையைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தார். புரோக்கர் என்று சொல்லிக் கொண்டார்.

சாப்பிடாமல் இருந்ததில் கைகால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. திடீரென்று பயமாக இருந்தது. கதவைத் திறந்து சாரதாவையும் ஓவியாவையும் பார்த்தார். மகள் கட்டிலின் மீது தூங்கிக் கொண்டிருந்தாள். கீழே சாரதா.
மனைவியின் அருகே சென்று படுத்துக் கொண்டார். அதை வரவேற்பவள் போல அவளும் அவரை மார்போடு அணைத்து முந்தானையால் அவரைப் போர்த்திக் கொண்டாள்.

"என்ன ஆச்சுங்க... ஏன் இப்படி மனசைப் போட்டு குழப்பிக்கிறீங்க. நாங்கல்லாம் உங்களை நம்பித்தானே இருக்கோம்'' என்றாள்.

சட்டென சுதாரித்தார் சாமிக்கண்ணு. அவள் அழுதழுது தலையணையை ஈரமாக்கி வைத்திருப்பது தெரிந்தது. இப்போதும் அழுது கொண்டிருக்கிறாள். இவள் நம் மன சஞ்சாரத்தை நிறுத்தி நம் நிம்மதியைக் கெடுக்கப் பார்க்கிறாள். இனி இவளை நம்ப முடியாது. நாலு பேரிடம் புலம்பியோ, டாக்டரை அழைத்து வந்தோ நம்மை சரி செய்ய நினைப்பாள். அதாவது சரி செய்வதாக நினைத்து நிம்மதியைக் கெடுப்பாள்.நிலைகொள்ளாமல் மூளையின் புயலில் தத்தளிக்கும் இந்த உலகின் லௌகீகத்திலிருந்து பிரித்துக் கொள்ளும் நிம்மதி இவளால் கெடப்போகிறது. இவள் அழ ஆரம்பித்துவிட்டாள். நாம் இயல்பாக இல்லை என்பதை இவள் உணரத் தொடங்கிவிட்டாள். ஆபத்து நெருங்கிவிட்டது. சாமிக்கண்ணு சரேல் என அவளிடமிருந்து உருவிக் கொண்டு எழுந்தார்.

"இனிமே ஓவியா காலேஜ் போக வேண்டியதில்லை... வீட்டைவிட்டு எங்கயும் அனுப்பாதே.''

சப்தம் கேட்டு ஓவியா திடுக்கிட்டு எழுந்தாள்.

"அப்பா என்னாச்சுப்பா?''

"உனக்கு ஒண்ணுந்தெரியாது. நீ நாளையிலிருந்து வெளிய போகாதே..''

"அப்பா'' ஓடிவந்து அவரை அணைத்துக் கொண்டு கலங்கினாள்.

"வேணாம்மா... உன்ன பராசக்திங்கிறான்... அப்புறம் புள்ளையார்தான் எனக்கு மருமகனா வருவான்... அதெல்லாம் வேணாம்... நான் சொன்னா சொன்னதுதான்... நீ வீட்டைவிட்டு வெளிய போக வேணாம்... சொல்லிப்புட்டேன்'' உருமியபடியே குறுக்கும் நெடுக்கும் நடந்தார் சாமிக்கண்ணு.

வீட்டுக்கு டாக்டரை அழைத்து வந்திருந்தார்கள். டாக்டர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்.

"சார் நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். என்னை சரி பண்ணனும்னா ஒரே வழிதான் இருக்கு. காஞ்சிபுரத்துக்கும் ஈரோட்டுக்கும் கூட்டிட்டுப் போங்க''

"போய் அண்ணா, பெரியார் வீடெல்லாம் பாக்கணுமா?''

"ஈரோட்ல பெரியார் வீடு. வீட்டைப் பார்த்தா அவர் சாமி கும்பிட்டாரான்னு எனக்குத் தெரிஞ்சு போய்டும். காஞ்சிபுரம் போறது அண்ணா வீட்டுக்கு இல்ல. சங்கர மடத்துக்கு அவனுங்க அவ்வளவு அயோக்கியனுங்களான்னு நேர்ல பார்க்கணும்.''

டாக்டர் வெளியே வந்து சிரித்துக் கொண்டே, "சரியான பெரியார் பைத்தியம்'' என்றார்.

பாதிப்பு

தமிழ்மகன்

என்னைப் போலவே அப்பாவுக்கும் தூக்கம் பிடிபடவில்லை என்று தெரிந்தது. அடிக்கடி இருமிக் கொண்டிருந்தார்.
ஊரிலிருந்து வந்த தம்பியின் மாமனார்விடும் குறட்டைச் சத்தம் யாரைத்தான் தூங்கவிட்டது?
வந்ததும் வராததுமாக அப்பாவிடம் என்னைப் பற்றித்தான் அதிகம் விசாரித்தார் அவர்.
"என்னங்க இன்னும் கததான் எழுதிகிட்டு இருக்கானா? வயசுபாட்டுக்கு ஆகுது. இன்னும் பொறுப்பு வரலைன்னா எப்படி?''
"..............''
"கல்யாணத்தப்ப பெரியவனுக்கு வேலை கிடைச்சதும் நிதானமா பண்ணப் போறேன்னு சொன்னீங்க. பையன் போற போக்கப் பாத்தா வேலைக்குப் போற உத்தேசமே இல்லை போலத் தோணுதே?''
"..............''
"செலவுக்கு என்ன பண்றான்..?''
"நான்தான் கொடுப்பேன்... சின்னவனும் கொடுப்பான்.''
"நல்லாருக்கா.. எவ்வளவு நாளைக்கு இப்படிக் குடுக்க முடியும்?''
அப்பாவுக்கு மேற்கொண்டு இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கப் பிடிக்கவில்லை. அதுவும் நானும் அங்கே இருக்கிறேன் என்று தெரிந்தும் இப்படியெல்லாம் பேசுவது அவருக்கு எரிச்சலாகக் கூட இருந்திருக்கும். கேள்வி கேட்கிறவர் என் மனசு புண்படுமே என்று யோசித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்தவர் விஷயத்தில் எந்த அளவுக்குத் தலையிடலாம் என்ற இங்கிதமாவது இருந்திருக்க வேண்டும்.
அப்பா பேச்சைத் திருப்புகிற உத்தேசமாக ""அவன் விதி.. ஊர்ல எல்லோரும் செüக்கியமா?'' என்றார்.
நான் சுவற்றுத் தடுப்புக்கு மறுபக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கு உறைக்க வேண்டும் என்றுதான் தம்பியின் மாமனார் அப்படிப் பேசினார் என்பது புரிந்தது. "இத கேட்க நீ யார்யா?'' என்று சட்டையைப் பிடிக்கிற கோபம் வந்தது. அப்பா எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எங்கிருந்து ஆதரவுக் குரல் கொடுப்பது... கூட சேர்ந்து திட்டாமல் இருக்கிறவரை சந்தோஷம்.
சங்கரின் கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு நெருக்கடி.
ஆயிரம் பேர் துக்கம் விசாரித்தார்கள்.
உரிமையுள்ளவர்கள், "தம்பிக்குக் கல்யாணத்தைப் பண்ணிட்டு இப்படி வெட்டியா ஊர் சுத்திட்டு வர்றியே வெக்கமா இல்ல உனக்கு?' என்றார்கள்.
அக்கறை உள்ளவர்கள், "முதல்ல ஒரு வேலை தேடிக்கோ. சைட்ல கதை எழுது' என்றார்கள்.
சிலர் கணக்குப் பிள்ளை மாதிரி கேட்டார்கள்.
"ஒரு கதைக்கு எவ்வளோ குடுப்பான்?''
சொன்னேன்.
"வீட்ல சும்மா தானே இருக்கே? அப்போ மாசத்துக்கு அம்பது அறுவது கதை எழுதித் தள்ள வேண்டியதுதானே? உன் தம்பியவிட உனக்கு வருமானம் அதிகமாயிடும். எந்தப் பய உன்ன கேள்வி கேட்பான்?''
நான் பாப்கார்ன் மிஷின் இல்லை. மாதத்துக்கு அம்பது கதையை என்னால் பொரிக்க முடியாது.கதையைப் பிரசவிப்பதும் அதை பத்திரிகை ஆபிஸýக்கு அனுப்பி வைப்பதும், போன வேகத்தில் திரும்பிவருவதும்... திரும்பி வராமலும் போவதும்... வந்தாலும் பணம் அனுப்ப தாமதமாவதும் வந்த செக்கில் இனிஷியலை மாற்றிப் போட்டுவிடுவதும் அதை மாற்ற அலைந்து திரிவதும்... யாருக்கும் புரிய வாய்ப்பில்லை. சிறுபத்திரிகையில் எழுதுவது தனி கண்ணீர் கதை. நாம் பார்த்து அவர்களுக்கு ஏதாவது சகாயம் செய்தால்தான் பத்திரிகையே வெளிவரும்.
கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடியவில்லை. அரவானி ஆனவன் வீட்டில் தங்க முடியாமல் தவிக்கிற தவிப்பு புரிந்தது எனக்கு.
கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி, கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஒற்றைக் காலில் நின்ற போது அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எழுதிய கதைகளைப் புத்தகமாகப் போட ஆர்வம் காட்டினார். பெரிய எழுத்தாளனாய் ஆவேன் என்று ஆசைப்பட்டார். "கரித்துண்டு படிச்சிருக்கியா?.. மு.வ. எந்த பத்திரிகையிலும் எழுத மாட்டார். ஸ்ட்ரெய்ட்டா புக்கா போட்டுடுவாரு.. நாரண. துரைக்கண்ணன் மாதிரி யார் எழுதுற இந்தக் காலத்தில?... தமிழ்ல ஞானபீடம் வாங்கின ஒரே ஆளு அகிலன்தான்...'' என்று எனக்குப் பிடிக்குமே என என்னிடம் அவரறிந்த இலக்கியம் பேசினார். இதோ இதோ என்று எட்டு வருடம்.. நான் எழுத்தாளன் என்பது தபால்காரனையும் சேர்த்து இருபது பேருக்குத் தெரிந்தால் அதிகம்.
சங்கர் எனக்கு முன்னால் படித்ததும், வேலைக்குச் சேர்ந்தது கல்யாணம் பண்ணிக் கொண்டதும்கூட அப்பாவைக் கவலை அடையச் செய்யவில்லை. புதிய உறவினர்கள் கேட்கிற கேள்வியில் அப்பா என் எதிர்காலம் குறித்துப் பயந்து போனார்.
தம்பிக்குத் திருமணம் ஆனதிலிருந்துதான் சிக்கல் அதிகரித்தது. அம்மா இறந்தபோது வீட்டுக்கு ஒரு சமையல்காரியின் அவசியம் இருந்தது. அப்பா ஏனோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காய் என் கல்யாணப் பேச்சை எடுத்தார்.
வினோவை அப்போது நான் காதலித்துக் கொண்டிருந்தேன். வருவாய் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள யோசனையாக இருந்தது. வேலை இல்லை என்று எவ்வளவு நாளைக்குத் தள்ளிப் போடமுடியும்? சங்கர் நல்ல வேலையில் இருந்தான்.
சங்கரின் திருமணம் நடந்தது. கீதா ஆரம்பத்தில் மிகவும் பணிவாக இருந்தாள். நான் எழுதிய கதைகளைக் கேட்டு வாங்கிப் படித்தாள். எப்படிக் கதை எழுத வேம்டும் என்று எழுத்தாள ஆசையோடு கேட்டாள். (வெள்ளை பேப்பரில் எழுத வேண்டுமா கோடு போட்ட பேப்பரில் எழுத வேண்டுமா?)
சீக்கிரத்திலேயே அநியாயத்துக்கு வித்தியாசம் காட்டினாள்.
எனது கதைகளை, பேப்பர்களை, சஞ்சிகைகளை மூட்டையாகக் கட்டி பரண்மேல் போட்டுவிட்டாள். ஏதாவது வேலையாக நான் அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில் படுத்தவாறே என்ன வேண்டும் என்றாள். இதையெல்லாம் சங்கரும் கண்டு காணாமல் இருப்பது தெரிந்தது.
பிறகு ஒரு வழியாக அவள் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அவளின் இன்ப வாழ்வுக்கு நானொரு நந்தி. என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. முன் வாசலில் அப்பா பொழுதெல்லாம் தந்தி பேப்பரைப் படித்துக் கொண்டிருப்பார். உண்பதற்கும் உறங்குவதற்கும் வீட்டுக்குள் செல்வோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சாப்பிட்டு முடித்ததும் எங்கே போவது என்று யோசிக்க வேண்டியிருந்தது. சங்கரை நான் அட்டையாக உறிஞ்சுவதாகப் புரளி நிலவியது.
சமயத்தில் எழுதுவதை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு ஏதாவது செக்யூரிட்டி வேலைக்காவது முயற்சி பண்ணலாமா என்று தோன்றும்.
"இந்த மாசம் இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் உன் கதையைப் பத்திதான் ரொம்ப நேரம் பேசினாங்க. கடைசியில வேற ஒருத்தருக்குப் பரிசு கொடுத்துட்டாங்க. விடாம எழுது. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு'' எக்மோர் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிரில் வந்தவர் உசுப்பேத்திவிட்டுப் போய்விட்டார். இப்படித்தான் யாராவது சொல்லி சொல்லி என்னை எழுத்தாளனாகவே தக்க வைக்கிறார்கள்.
படிக்கப் போனால்.. வேலைக்குப் போனால்.. காதலித்தால்.. அதில் தோற்றால்.. கல்யாணம் செய்தால்.. குழந்தை பிறந்தால்.. பிறக்கவில்லை என்றால்.. எல்லா விஷயங்களிலும் கதைகள் இருக்கின்றன. எழுதலாம். அது யாரையாவது பாதிக்கிறதா என்பது தெரிந்தால் எழுதுகிற ஆர்வம் பூர்த்தியாகிறது. முன்பெல்லாம் அப்பா என் கதை பற்றி ஏதாவது சொல்லுவார். என் எதிர் காலம் அவரை அச்சுறுத்திவிட்டது. இப்படி உற்சாகப்படுத்துவது என்னை நரகத்தில் தள்ளிவிடுவதாக அச்சம். கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டுவிட்டார். பையனின் வாழ்க்கை இப்படி ஆனதற்கு தானே ஒரு காரணம் என்று குற்ற உணர்ச்சி ஆட்கொண்டுவிட்டது. பாராட்டுவது குறைந்து போய்... நிறுத்தியேவிட்டார். எப்போது முதல் அறிவுரைகளை ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை.
அப்பா திரும்பிப் படுத்து இருமினார். அவர் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் இருமல் தணியும். தண்ணீர் வேண்டுமானால் சமையல் அறைக்குச் செல்ல வேண்டும். படுக்கையறையையே பாதி தடுத்து சமையலுக்கு விட்டிருந்தார்கள். லைட்டைப் போட்டதும் கட்டிலில் இருப்போர் வாரி சுருட்டிக் கொண்டு தூங்குவார்கள்(!). படுக்க வரும்போதே ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. மறந்து போகிறது.
எனக்கு இன்று தூக்கமே வராது போல் தெரிந்தது. வினோ பாவம். எனக்காகவே, காத்திருந்து காத்திருந்து, "நான்தான் வேலைக்குப் போறேனே' என்றுகூட சொல்லிப் பார்த்தாள்.
கடிகாரம் கரக் என்ற முன்னறிவிப்புக்குப் பின் பனிரெண்டு மணியடித்தது. அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி எழுந்து போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்தேன்.

எனக்கு
யாருமில்லை
நான்கூட..

நகுலன் கவிதை ஞாபகத்துக்கு வந்தது.
அப்பாவின் இருமல் இம்முறை வெகுநேரம் நீடித்தது. மார்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
"தண்ணி கொண்டுவரட்டுமாப்பா?''
"வேணாம்...'' கூடவே கையசைத்தார்.
என்னிடம் ஏதோ பேச விரும்புகிறவராக உற்று நோக்கினார். நான் அவரைப் பார்த்தபடி அருகில் அமர்ந்தேன்.
"போனமாசம் நிஜம் பத்திரிகையிலே ஒரு கதை எழுதியிருந்தியே''
"சில அடிப்படைகள்..''
ஆமாம் என்ற தலையசைப்பு. மெல்ல தோளைத் தட்டி, "ரொம்ப நல்லா இருந்ததுடா'' என்றார்.

tamilmagan2000@mail.com

LinkWithin

Blog Widget by LinkWithin