செவ்வாய், நவம்பர் 16, 2010

கனடாகாரரின் அமெரிக்கக்காரி!

அ.முத்துலிங்கம் பயில்வது சுவாரஸ்யமான அனுபவம். ஏற்கெனவே இவரைப்பற்றி ஒரு தரம் சொன்னதுபோல இவருடைய எழுத்துகளில் அறிவியல், புவியியல், அரசியல், கணிதவியல், மொழியியல்.. இப்படி இன்னும் சில இயல்கள் கலந்து கட்டி இருக்கும். தமிழில் சிந்தித்து எழுதக் கூடிய ஒரு ஆங்கிலேய இலக்கியவாதியைப் போல இருப்பது இவருடைய நடை. சிறுகதை தொகுதி என்ற பொது அடையாளத்தோடு வெளிவந்திருக்கும் அ.மு.வின் அமெரிக்கக்காரி, அப்படித் தன் அடையாளத்தைச் சுருக்கிக் கொள்ள முடியாத நூலாகவே இருக்கிறது. இதில் சில கதைகள் "உண்மை கலந்த நாட்குறிப்பி'ல் இடம்பிடிக்க வேண்டியவை.

குறிப்பாக "உடனே திரும்ப வேண்டும்', "சுவருடன் பேசும் மனிதர்', "தாழ்ப்பாள்கனின் அவசியம்' ஆகிய கதைகள் கற்பனைகலக்காத நாட்குறிப்புகளாகவே தோன்றுகின்றன. மேலும் அந்தக் கதைகளில் உள்ள தன்மை முன்னிலை தொனியும் நம்மை அப்படி எண்ண வைக்கிறது. அதையும் மீறி அவை அவருடைய கற்பனையில் மட்டுமே உதித்ததாக இருந்தால் அது அவருடைய மிகப் பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதுவதைவிட தான் அனுபவிக்காததை சுவாரஸ்யமாக எழுதுவது பெரும் சாதனைதானே?

முத்துலிங்கத்துக்கு சோதனையான ஒரு சிறுகதை ஒன்று இதிலே இடம் பெற்றிருக்கிறது. அதன் தலைப்பு "பத்தாவது கட்டளை'.

லெற்றீஸியா என்ற தன் காதலிக்குக் காதலன் எழுதும் கடிதம் அது. அவளுடைய வயதை இரண்டால் பெருக்கினாலும் அதில் அடங்காத வயது காதலனுக்கு.

லெற்றீஸியா என்ற பெயரையே அப்படி நேசிக்கிறார் காதலன். அது ஒரு பெண்ணின் பெயர் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. "14 வயதிலிருந்தே அந்தப் பெயரில் எனக்குக் காதல் இருந்தது; அந்தப் பெயர் நான் பிறப்பதற்கு முன்னரே என் மரபணுவில் கலந்திருக்க வேண்டும். இத்தனை வயதுக்குப் பிறகு அப்படியொரு பெயர் தரித்த பெண்ணை காண்பேன், பேசுவேன், தொடுவேன் என்றெல்லாம் நான் நினைக்கேவேயில்லை' என்று தொடங்குகிறார்.

முத்துலிங்கத்தின் "உண்மை கலந்த நாட்குறிப்பி'ல் "பூங்கொத்து கொடுத்த பெண்' தலைப்பிட்ட அத்தியாயத்தைப் படித்தீர்களானால் அதில் ûஸராவை வர்ணிப்பதின் மிச்சத்தை இங்கே லெற்றீஸியாவுக்குத் தந்திருக்கிறார் என்பது புரியும்.

ûஸரா பாதிக்கால் தெரியும் செருப்பை அணிந்திருந்ததாகவும் பாதம் ஒளிவீசுவதை அன்றுதான் பார்த்ததாகவும் கண்டதாகவும் அவள் பேரழகி.. அதிலே துயரம் என்னவென்றால் அவளுக்கு அது தெரியாது என்றும் எழுதியிருப்பார்.

லெற்றீஸியாவுக்கு வருவோம்...

"நீ ஒரு தூக்கவியல் நிபுணி. சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அவர்கள் மூச்சு சில நிமிடங்கள் நின்றுவிடுவதுண்டு. அதுபற்றிய ஆராய்ச்சியில் இருப்பதாகச் சொன்னாய். உன்னைப் பார்க்கும் கணங்களில் என் மூச்சு பல நிமிடங்கள் நின்று போனதை நான் சொல்லலாம், நீ நம்பவா போகிறாய்?'

அவளோ குழந்தைத்தனமானவளாக இருக்கிறாள். ஒருநாள் அவளை எச்சரிக்கை செய்வதற்காக "உடனே திரும்பிப் பார்க்காதே. உனக்குப் பின்னால் பத்துமணி கோணத்தில் ஒருவன் உட்கார்ந்து உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்கிறார். அவளோ காலை பத்துமணியா, இரவு பத்துமணியா? என்கிறாள்.

"திடீரென்று ஆப்பிள் குவியலின் மணம் எழுந்தது. நீ எலுமிச்சை பச்சை ஆடையில் நின்று கொண்டிருந்தாய். நான் திரும்பிய வேகத்தைப் பார்த்தோ என்னவோ நீ சிரித்தாய். கதவைத் திறந்துவிட்ட கிழவருக்கு கொடுத்த அதே சிரிப்பு. டொரான்டோ மாநகரத்தில் அதுவே ஆகச்சிறந்த சிரிப்பு. (கிழவருக்காக அந்தச் சிரிப்பை வீணாக்கிவிட்டதற்காக வருத்தம் வேறு.)அப்போதுதான் உன்னுடைய பெயர் லெற்றீஸியா என்றாய். நான் ஏற்கெனவே தெரியும் என்று சொன்னதை நீ நம்பவில்லை. உன்னுடைய உடல் உருவத்துக்கு வேறு என்ன பெயர் பொருத்தமுடியும், அதை யோசித்துப் பார்.' காதல் பித்து மூச்சு முட்டுகிறது.

பிறகு அவர் செய்த நல்லூழ் அவரை அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க வைக்கிறது. வீட்டுக்கு அழைக்கிறாள். அவளுடைய ஒரே மகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்கிறாள். தனிமை. சந்தோஷமாக இருக்கிறார்கள். தினத்தந்தி பாஷையில் உல்லாசமாக இருக்கிறார்கள்.

உன்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதாக அந்தக் கடிதம் முடிகிறது.

கடிதம் முடிந்துவிட்ட அடுத்த பாராவில் கதை முடிகிறது.

"இந்தக் கடிதம் டொராண்டோ நூலகம் ஒன்றின் பைபிள் பிரிவில் ஒரு பைபிளின் பத்துக்கட்டளைகள் பகுதியில் இருக்கிறது. "காதலனோ, காதலியோ கைமறதியாக வைத்திருக்க வேண்டும். கடிதத்தைப் படித்துவிட்டு காதலி வைத்தாளோ, கடிதத்தைக் கொடுக்கும் முன்னர் அதை காதலன் வைத்து கொடுக்க மறந்தானோ என்ற புதிர் விடுபடவில்லை...' என்று முடிகிறது கதை.

அ.மு. இந்தக் கடிதத்தை பைபிளில் இருந்து எடுத்தவர் மாதிரி தெரியவில்லை, வைத்தவர் மாதிரி தெரிகிறார்.

இதைத்தான் அவருக்கான சோதனை என்றேன். ஒரு சிறுகதையை இத்தனை நம்பகத் தன்மையோடு எழுதினால் இப்படித்தான் சந்தேகப்படுவார்கள்.

'மயான பராமரிப்பாளர்' என்றொரு சிறுகதை. உலகத்தை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றியபடி வந்து ஆஸ்திரேலியாவில் இறங்கும் பயணத்தையும் பயணிகளையும் விவரிக்கும் கதை. கிரீன்விச்சைக் கடக்கும்போது ஒரு முழுநாள் எப்படி காணாமல் போகிறது என்பதையும் அதனூடே ஒரு சிறுமியின் ஏக்கத்தையும் சொல்லும் அற்புதமான கதை.

'49வது எல்லைக் கோடு'ம் இதே போல புவியியல் சம்பந்தப்பட்டது. இப்படியெல்லாம் யோசிக்க செயல்பட அவருடைய பரந்துபட்ட பட்டறிவு துணை நிற்கிறது. வேறு கதையும் களமும் தமிழுக்கு இதனால் அறிமுகமாகிறது. உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து இப்போது கனடாவில் வசிப்பவர் அ.மு. பல நாடுகளையும் பலநாட்டு மனிதர்களையும் வாழ்க்கையையும் நுணுக்கமாகப் பார்ப்பவர். உலகத்தை இவரைவிட அதிகதரம் வலம் வந்தவர்கள் இருக்கலாம். ஆனால் படைப்பாளியின் பார்வையில் கிடைக்கும் பலனை இந்த நூலில் தரிசிக்க முடிகிறது.

"சுவருடன் பேசும் மனிதன்' கதையில் மனிதன் தன் மொழிக்குத் தரும் முக்கியத்துவம் அலசப்படுகிறது. தனக்கென தனியே தேசமில்லாத மொழிகள் அழிந்துபோவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார் அராமிக் மொழியாளன் ஒருவன். டொராண்டாவில் அந்த மொழி பேசிக் கொண்டிருந்தவர் இருவர். ஒருவன் அவன். இன்னொருத்தி அவன் மனைவி. மனைவி கொஞ்ச நாளுக்குமுன் இறந்து போய்விட்டாள். இப்போது அந்த மொழி தெரிந்தவன் அவன் ஒருத்தன்தான். அதனால் அவன் சுவருடன் தினமும் அராமிக் மொழியில் பேசுகிறான். இந்த மொழி அழிந்து போய்விடாதா என்று தன் அச்சத்தைத் தெரிவிக்கிறார். அவன் நம்பிக்கையோடு சொல்கிறான். யேசு பேசிய மொழி ஆயிற்றே என்கிறான்.

"பத்துநாட்கள்' கதையில் இந்த உலகில் அஞ்சி நடுங்கிக் கூழைகும்பிடு போட்டு வாழும் லட்சோப லட்சம் மக்களில் ஒருவனைப் பற்றி விவரித்திருக்கிறார். ஊசியை பல்லால் கடித்தபடி பேசும் தையல்காரனைப் போல பற்கள் பிரியாமல் பேசினார் என்று அந்த அதிகாரியை வர்ணித்திருப்பார்.

"மன்மதன்' கதையில் சாணை பிடிப்பவன் மாதிரி வேறு பக்கம் திரும்பிக் கொண்டு பேசினாள் என்று ஒரு உவமானம் வரும். மிகவும் ஆச்சர்யப்படவைக்கும் இத்தகைய உவமைகளுக்கு பஞ்சமே இல்லை இவருடைய படைப்பில்.

"மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள்', "புவியீர்ப்பு கட்டணம்' ஆகியவை மனிதன் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டிய வேடிக்கையான சுவையைத் தரும் கதைகள். இதில் மட்டுப்படுத்தப்பட்ட வினைச் சொற்கள் இப்போதைய சூழலில் நடக்கும் கதை, புவியீர்ப்பு கட்டணம் இனிமேல் நடக்கப் போகிற கதை.

"தாழ்ப்பாள்களின் அவசியம்', "லூஸியா', "பொற்கொடியும் பார்ப்பாள்', "அமெரிக்ககாரி' ஆகிய கதைகள் இலங்கை பின்னணியை நெருப்புபோல உரசிச் செல்கின்றன. ஏதோ ஒரு வரியில் உள்ளத்தை உலுக்கிப் போட்டுவிடும் தன்மை கொண்டவை. குறிப்பாக "பொற்கொடியும் பார்ப்பாள்' கதை. அதில் இறந்து போன ஈழத்துப் போராளி பெண்ணின் கையில் சிங்கள ராணுவத்தினர் கிரேனெட் இருந்ததைச் சொல்லி முடித்திருப்பார். அது எப்படி அவள் கைக்கு வந்தது என்பது நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நமக்குள் வேறு ஒரு கதையைத் திறக்கிறது.

புகைக்கண்ணர்களின் தேசமும் லூஸியாவும் தரும் சரித்தர புனைவும் மெல்ல திறந்து காட்டும் ரகஸ்யங்களும் அலாதியும் அதிர்ச்சியும் மனத்துக்குள் நிகழ்த்தவல்லன.

இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. எல்லா கதையிலும் ஏதாவது ஓரிடத்தில் அவர் ஒளித்து வைத்திருக்கும் அங்கதச் செறிவு வாய்விட்டுச் சிரிக்கும்படி செய்யும். "உடனே திரும்ப வேண்டும்' மற்றும் 'வேட்டை நாய்' போன்ற கதைகள் பதற்றமும் நகைப்பும் கலந்தவை. ஒவ்வொரு வரிக்கும் உரை எழுதி சிலாகிக்கலாம். அப்படி எழுதினால் அமெரிக்ககாரி புத்தகத்தைப் போல இரண்டு பங்கு நூலாகிவிடும் இந்த விமர்சனம்.

அமெரிக்ககாரி,
அ.முத்துலிங்கம்,
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை,
நாகர்கோவில்-1.
போன்: 4652- 278525
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.இன்


முத்துலிங்கம் எழுதிய பிற நூல்கள் பற்றி :

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

வியத்தலும் இலமே



LinkWithin

Blog Widget by LinkWithin