ஞாயிறு, மார்ச் 27, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-5

"காந்தளூர் வசந்தகுமாரன் பற்றி பேச்சு வந்ததால் சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... அதில் சரித்திரக் கதைக்கான அத்தனை தரவுகளையும் பெற்றிருந்தார். சில வாக்கியங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருந்தன. நிறைய பழைய தமிழ் வார்த்தைகளைச் சொல்லியிருந்தார்... உதாரணத்துக்கு குதிரை என்பதற்கு சுமார் பத்து தமிழ் வார்த்தைகள்.. இரவு என்பதற்கு.. என்ன மாதிரியான அளக்கும் முறைகள் இருந்தன என்பதற்கு...'' வசந்த் விளக்கிக் கொண்டிருப்பதைப் பாதியில் அறுத்து கணேஷ் தொடர்ந்தான்: "பொலிசை என்றால் கடன், தொய்யான் என்றால் துணி தைப்பவன், இவுளி என்றால் குதிரை, திருட்டு என்றால் கரவடம்... தவிர கழிஞ்சு, அரைக்காணி, நாழிகை என்று பழந்தமிழர்களின் அளவீட்டு முறைகளைச் சொல்லிக் கொண்டே போவார்... அதற்கென்ன இப்போது?''
"ஆசானே அவசரப்படாதீர்கள்... சரித்திரக் கதைக்காகத் திரட்டிய அத்தனை வார்த்தைகளையும் ஆவணங்களையும் படபடவென்று சொல்லிக் கொண்டே போவது சரியா? பக்கம் 156}ல் ஒரு உரையாடல்...
"கோயிலுக்கு மொத்த வருவாய் எத்தனை வேண்டுமாம் என்று கணக்கிட்டிருக்கிறீரா?'
"இறை கட்டின நிலம் முப்பத்தொன்றரையே மூன்று மாக்காணி. அரைக்காணிக் கீழ் முக்கால் நான்கு மா. முக்காணிக்கீழ் முக்காலே ஒரு மா, பொன் காணி...'
"விளங்கவில்லை'
"இத்தனை நுட்பமாகக் கணக்கிட்டிருக்கிறோம் என்ற சொல்ல வருகிறேன்'
இந்த விவரங்கள் பிரமிப்பானவை... ஆனால் இந்த விவரத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தின் காரணமாக உரையாடல் இயல்பாக இல்லாமல் போய்விடுகிறது...
இன்னொரு இடத்தில்,
"இரவு மிச்சமிருக்கிறது. கன்னியர் கொங்கைகளில் மச்சமிருக்கிறது. கால்களில் கெச்சமிருக்கிறது. கண்களில் அச்சம்.. கன்னங்களில் ஒச்சம்'
"ஒச்சம் என்றால்?'
"வெட்கம்'
இன்னொரு இடத்தில் பொய் என்பதற்கு என்னென்ன வார்த்தைகள் உள்ளன என்ற அவசப்பட்டியல்... கைதவம் பகர்ந்தான் என்கிறார், பொய் சொன்னான் என்பதற்கு...'' வசந்த் அடுக்கிக் கொண்டே போவதை கணேஷ் விரும்பவில்லை.
"வசந்தகுமாரன் சதி செய்தான் என்ற குற்றச்சாட்டு வரும்போது, கணேச பட்டர் சதி என்ற சொல்லுக்கு மனைவி என்ற பொருள் மட்டும்தான் தெரியும் இவனுக்கு' என்றாரே..''
"அதை நானும் ரசித்தேன். எத்தகைய அவசரத்திலும் அவரால் எழுத்தை ஆள முடிந்ததற்குச் சான்று அது. அதே நேரத்தில் சரித்திர நூலுக்கான உழைப்பை அவர் அவசர கோலத்தில் எழுதியிருக்கிறார்... காரணம் அவர் எல்லாவற்றையுமே வாரத் தொடர்களாக எழுதியதுதான். ஒரே நேரத்தில் ஆறேழு தொடர்கதைகள்... போதாதற்கு அலுவலகத்திலும் முக்கியப் பொறுப்பு.. ''
தமிழாசிரியர் கனைத்துக் கொண்டு, ""இவ்வளவு எழுதுவதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பது அவர் கையில்தானே இருக்கிறது?'' என்றார்.
"பத்திரிகை அதிபர்களின் வேண்டுகோள்கள்.. இவர் பணம் சம்பாதித்தார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அவரிடம் இருந்த திறமையை அவர் குறைந்த விலைக்கே விற்றார்.. கடைசியாக ஷங்கரிடம் சம்பளம் வாங்கியதுதான் ஓரளவுக்கு நியாயமான தொகை.. ஆகவே அவர் அன்புக்குக் கட்டுப்பட்டார். ஒரு பக்கம் சாவி, இன்னொரு பக்கம் எஸ்.ஏ.பி., இன்னொரு பக்கம் ஆனந்தவிகடன் பாலசுப்ரமணியன், கலைஞரின் குங்குமம், கல்கி... எந்தப் பத்திரிகையையும் நிராகரிக்க முடியவில்லை.. அவரைப் பிழித்தெடுத்துவிட்டார். இதற்கிடையில் கணையாழிக்கு இலவசமாகவும் எழுதிக் கொண்டிருந்தார்.'' கணேஷ் பட்டியலிட்டான்.
"ஒரு பத்திரிகை ஆசிரியர் சொன்னார்.. அக்கதையின் நாயகி ஒருத்தி காரில் கிளம்பினாள் என்று கதையை ஆரம்பித்திருந்தார். வீடு வந்துவிடவே ஆட்டோவைவிட்டு இறங்கினாள் என்று காரை நடுவே ஆட்டோ என்று மாற்றி எழுதிவிட்டார்... என்று. அதை சுஜாதாவுக்குச் சுட்டிக் காட்டியபோது, காரிலிருந்து இறங்கினாள் என்று மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே? இதற்கெல்லாம் போன் செய்ய வேண்டுமா என்றாராராம்....''
"அதானே?'' விழித்துக் கொண்டது போல குரல் கொடுத்த பிரியா, ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டாள்.
"கணேஷ் என்னை இப்போ மெகா சீரியல்ல நடிக்க கூப்பிடறாங்க. ஜெயிக்கப் பிறந்தவள்னு பேர் வெச்சிருக்காங்க.. நான்கு தலைமுறைக்கு முன்னால அவங்க கொள்ளுத்தாத்தாவின் மரணத்துக்கான காரணம் ராஜேஸ்வரியின் குடும்பம்தான்னு தெரிய வருது. அதனால பழிக்குப் பழி வாங்கறேன். அந்தக் குடும்பத்தையே தீர்த்துக் கட்டி, அதை நாகதோஷத்தால் அழிந்து போனதாக சாதிக்கிறேன்... ''
"இதை வைத்து நானூறு வாரங்கள் ஓட்டலாமே? சினிமா சான்ஸ் குறைஞ்சுட்டா டி.வி.யில் வந்து பழி வாங்கறாங்க. அல்லது குலுங்கிக் குலுங்கி அழறாங்க... நீங்க குலுங்கிக்கிட்டே சாதிக்க வாழ்த்துகள்''
வசந்தை செல்லமாக அடித்தாள் பிரியா.
"தேங்க்ஸ்'' என்றான் வசந்த்.
"சுஜாதா நாடகம்லாம் எழுதலையா?'' பிரியா அடுத்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தாள்.

(தொடரும்)

LinkWithin

Blog Widget by LinkWithin