திங்கள், அக்டோபர் 17, 2011

நியாயச் சங்கிலி


ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென வித்தியாசம் காண இயலாத மங்கோலிய பெண் தரத்தில்தான் வைத்திருந்தேன்.
அவளுடைய பல்வரிசை அலாதியானது. அவளை அருகே அழைத்து கொஞ்ச நேரம் சிரிக்கச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்போல இருந்தது. அடுத்தகட்டமாக அந்தச் சிறிய நாசிக்குள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எப்படி சென்று உருமாறித் திரும்புகிறது என்ற ஆச்சர்யமும் உடன் சேர்ந்து கொள்ளும்.
சிரிக்க எத்தனிக்கும்போது முன் இரண்டு செவ்வக பற்கள் மட்டும் கார்ட்டூன் முயலுக்கானது போல வெளியே தெரியும். அவளைப் பிடித்துப் போக அதுவே போதுமானது. முழு அழகையும் தரிசிக்க வேண்டுமானால் அவளுக்குப்பிடித்தமாதிரியான நல்ல ஜோக்கைச் சொல்ல வேண்டும். ஜோக்கைவிட அவளுக்குப் பிடித்தமானதாக அது இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
"பழனிச்சாமி இன்னும் வரவில்லையா?'' என்று நான் ஒரு தரம் அவளைக் கேட்டபோது சிரித்தாள். இது ஒரு ஜோக்கா என்று கேட்கக்கூடாது. அவளுக்குப் பிடிக்க வேண்டும் என்று அதனால்தான் முதலிலேயே சொன்னேன். அப்படிச் சிரிக்கும்போது அவள் முகம் சட்டென தேவதையின் முகமாக மாறிவிடும். வடகிழக்கு தேவதை.
பழனிச்சாமி அந்த மூன்று நட்சத்திர ஓட்டலின் ரெஸ்டராண்ட் மேனேஜர். எம்.பி.ஏ. படித்தவன் என்பது அவனுடைய நடவடிக்கையில் சுத்தமாகத் தெரியாது. அவன் வந்துவிட்டால் ஓட்டல் ஊழியர்கள்அவனுடைய கட்டுப் பாட்டுக்குள் இயங்குவார்கள். அவனுக்கு அடிமை போல நடிப்பார்கள். நான் ஜூலியாவிடம் கேட்டபோது அவன் வந்திருக்கவில்லை.
இந்த ஓட்டலில் நடக்கும் ஊழலை வேவு பார்க்க அனுப்பியிருப்பதால் முதலில் என் கவனம் அவன் மீதுதான் இருந்தது. அவன் பெண்களைப் பணிய வைப்பதில் கவனமாக இருந்தான். என்னைப் பணித்திருப்பது இந்த மாதிரி செக்ஸ் ஊழல்களைக் கண்காணிக்க அல்ல. ஓட்டலின் லாபம் அதனாலும் குறைந்திருந்தது வேறுவிஷயம்.
ஓட்டலின் லாபம் பலவிதங்களில் கணிசமாக குறைந்திருந்தது. அதற்கான காரணத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்கு அங்கேயே ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்து கேட்கும்போதெல்லாம் காளான் சூப், இறால் பிரியாணி... எனக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து நிறைய பெண்கள் அங்கே ஹவுஸ் கீப்பிங், சமையல் எடுபிடி வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். நாளெல்லாம் பாத்திரங்கள் கழுவிக் கொண்டும் காய்கறிகளை நறுக்கிக் கொண்டும் அறைகளைச் சுத்தம் செய்து கொண்டும் இருந்தார்கள். எப்போதும் ஈரத்தில் அவர்கள் எப்படித் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பது புதிராக இருந்தது. அவர்கள் யாருக்கும் ஐந்தாயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை. அங்கு வேலை பார்க்கிற பெண்கள் எல்லோரும் கொட்டி வாக்கத்தில் ஒரு வீடு எடுத்துக் குழுவாக தங்கியிருக்கிறார்கள் என்றார்கள். சாப்பாடு ஓட்டலில். சம்பளத்தில் பெரும்பகுதியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு அன்றலர்ந்த மலர்கள் போல எப்போதும் கலகலப்பாகவும் இருந்தார்கள்.
அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் அட்மின் மேனேஜர் தரப்பில் சிறிய அளவுக்கு ஊழல் நடப்பதை அறிந்தேன்.
இணக்கமானவர்களுக்கு சில சலுகைகள் இருந்தன. அதிகார துஷ்பிரயோகம்தான். அதற்கு ஊழல் என்ற பெரிய வார்த்தையை பிரயோகிக்காமல் தவிர்த்தேன். பழனிச்சாமி அதற்கு ஒரு படி அதிகம். சிலரை பயன்படுத்திக் கொள்வதும் தெரிந்தது.
பாலுக்குப் பூனையைக் காவல் வைத்தது போல செக்யூரிட்டி மேனேஜர் அலெக்ஸôண்டர். ஸ்டோர்ஸ் அவனுடைய கண்ட்ரோலில் இருந்தது.
இந்த மூன்று பிரிவும் தனித்தனி ராஜாங்கமாக இருந்தது. ஒருவர் தயவு இல்லாமல் ஒருவர் தவறு செய்ய முடிந்தது. அல்லது ஒருத்தர் தவறை மற்றவர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இதைக் கண்காணிக்கத்தான் நான் வந்திருக்கிறேன் என்பது தெரிந்ததும் என் முப்பதுக்கும் குறைந்த வயதைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மூவருமே இறங்கி வந்து வழிந்தனர்.
காபி ஆர்டர் செய்வதற்கே யோசனையாக இருந்த என்னை "வொய் டோன்ட் யு பிரஃபர் மஸ்ரூம் சூப்?' என பழனிச்சாமி விசாரித்ததில் கொஞ்சம் ஐஸýம் பெருந்தன்மையும் இருந்தது.
"வீட்டுக்கு பிரியாணி பார்ஸல் பண்ணி வெச்சிருக்கேன்' என்கிறார் அலெக்ஸôண்டர்.
இந்த சூப்புக்கும் பிரிஆணிக்கும் பணியாத மனம் ஜூலியாவின் புன்னகைக்குப் பணிந்தது. தினமும் என்னுடைய டேபிளைத் துடைத்து தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குடுவையில் அழகான மலர் ஒன்றை சொருகி வைத்துவிட்டுப் போவாள். நான் பேசவில்லை என்றால் அவளும் பேச மாட்டாள். அதனால் நான் எப்படியும் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அவளுடன் பேசுவதற்கு விஷயமே இல்லாததால் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அதற்காக யோசித்து வைக்க வேண்டியிருந்தது.
"மஞ்சள் நிறம்தான் உனக்கு பிடிக்குமா? நீயும் மஞ்சள்.. உன் உடையும் மஞ்சள்'
நான்கைந்து நாட்களாக இதை யோசித்து வைத்திருந்து இன்றுதான் அவள் மஞ்சள் உடையில் வந்திருந்ததால் சொன்னேன். சிரித்தாள். ஜென்ம சாபல்யம்.
அவள் ஜீன்ஸ் பேண்டும் களங்கம் இல்லாத மனதோடு கை வைக்காத பனியனும் அணிந்து வந்தாள்.
ஒருமுறை அவள் கம்ப்யூட்டரைத் துடைத்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக என்னுடைய விரல்கள் அவளுடைய விரல்களோடு பட்டபோது மின்தாக்குதல்போல உணர்ந்தேன்.
அன்று நான் சாரி என்று சொன்னதற்காகச் சிரித்தாள்.
பரவாயில்லை என்றது அந்தச் சிரிப்பு.
"உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்?''
அவள் மூன்று விரலைக் காட்டிவிட்டு ஒருவிரலை உடனே மடித்துவிட்டாள். ""அண்ணனை மிலிட்டரிக்காரர்கள் சுட்டுவிட்டார்கள். இரண்டு தங்கைகள்.. திரிபுராவில் படிக்கிறார்கள். நான்தான் வேலைசெய்து பணம் அனுப்புகிறேன்'' என்றாள் ஆங்கிலத்தில். அவளுடைய தமிழ் உச்சரிப்பில் இருந்த பிழைகளும்கூட அழகாகத்தான் இருந்தன.
"எதற்காக சுட்டார்கள்?''
அவள்கண்கள் அதற்குள் சிவந்து போயிருந்தது. ""என் அண்ணன் நல்லவன். நியாயம் பேசுபவன்'' அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி உள்ளே வரவே எதுவுமே பேசிக் கொள்ளவில்லைபோல துரிதமாக மாற்றிக் கொண்டாள். நான்தான் சுதாரித்துக் கொள்ளமுடியாமல் தடுமாறினேன்.
எம்.டி. அழைப்பதாகச் சொன்னான் பழனிச்சாமி.

ட்டலின் டைரக்டர் கிருஷ்ணதாஸ் உடுப்பிக்காரர். ரோஸ் திரவத்தால் நிரப்பப்பட்ட பலூன் மாதிரி இருந்தது அவருடைய முகம்.
வந்த ஒரு மாதம் கழித்துத்தான் இப்போதுதான் அவரைப் பார்த்துப் பேச முடிந்தது. அவருக்கு பெங்களூரில், மும்பையில், டெல்லியில் என்று ஓட்டல்கள் இருந்தன. பறந்து கொண்டே இருப்பவர்.
"ஏதாவது தெரிந்ததா?'' என்றார்.
கே.ஓ.டி. யில் நடக்கும் ஊழலைச் சொன்னேன்.
கிச்சன் ஆர்டர் டோக்கன். சாப்பிட வருபவர்களிடம் ஆர்டர் எடுப்பவர்கள் இரண்டு கார்பன் காப்பி வைத்து மொத்தம் மூன்று ரசீது தயாரிப்பார்கள். ஒன்று கிச்சனுக்குப் போகும். இன்னொன்று அக்கவுண்ட் டிபார்ட்மெண்டுக்கு இன்னொன்று கஸ்டமருக்கு. பெரும்பாலும் கார்பன் வைக்காமல்தான் ஆர்டர்கள் எடுக்கப்படுகிறது என்றேன். சாப்பிட வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவு பரிமாறப்பட்டுவிடும். அதற்கான பில்லும் கொடுக்கப்படும். ஆனால் சமையல் கூடத்தில் இருக்கும் பில்லும் அக்கவுண்டுக்கு வரும் பில்லும் அதைக்காட்டாது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அதில் இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னேன்.
கிருஷ்ணதாஸ் உஷ்ணமாவது தெரிந்தது. அமைதியாக தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் டை கட்டி ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்த பத்து பதினைந்து பையன்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். புதுப்பையன்கள் டை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். எல்லாம் ஒரே நாளில். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவசரப்பட்டுவிட்டோமோ, அவசரப்பட்டுவிட்டாரா என்று குழம்பினேன். அடுத்து அவரைச் சந்தித்து வேலையைவிட்டு அவர்களை நீக்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்கு முயன்றேன். எம்.டி. டெல்லி போய்விட்டார் என்றார்கள்.
முதன் முறையாக எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சியதைப் பார்த்தேன். மானேஜர்களின் அச்சம்கூட பாதிக்கவில்லை. ஜூலியா மழையில் நனைந்த பூனைபோல ஒடுங்கிப் போய் என் அறைக்குள் வந்தாள். என்னை நேர் கொண்டு பார்க்கவும்கூட பயந்தாள். அதிகார வர்கத்து ஆசாமிபோல பார்த்தாள். அவளுடைய புன்னகையை கொலை செய்த குற்றம் என்னை உறுத்த ஆரம்பித்துவிட்டது.
அதே நாளில் தொழிலாளர் கணக்கெடுப்பு அதிகாரிகள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஓட்டலுக்குப் பெரிய சிக்கல்தான். நிறைய பேர் கணக்கில் வராத தொழிலாளர்கள்தான். பலரும் தினக்கூலி போலத்தான் இருந்தார்கள். நிர்வாக மேலாலாளரைப் பார்த்துவிட்டு, மத்தியான சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டுக் கிளம்ப இருந்த அவர்கள் தொழிலாளர்கள் விஷயத்தில் நியாயமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அன்று இரவே அவர்களுக்கு ஐந்தாவது மாடியில் ரூம் போட்டு கவனித்ததையும் அறிந்தபோது எரிச்சலும் வருத்தமும் அதிகமானது. அன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டவள்... வேண்டாம் அது உண்மையாக இருக்கக் கூடாது.
போதாதா? தொழிலாளர் நலன்கள் மிகச் சிறப்பாகப் பேணப்படுவதாக சான்றிதழ் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
நான் என்னுடைய பாûஸ சந்தித்து ஓட்டலில் இப்படியெல்லாம் நடப்பதைச் சொன்னேன். என்னுடைய முதலாளி சென்னையின் முக்கியமான ஆடிட்டர். அவர் பார்வைக்கு பல நிறுவனங்களின் வரவு செலவுகள் வரும். கேரட் வில்லைகளை சுவைத்துக் கொண்டே பதற்றமில்லாமல் ராட்சஷத்தனமாக வேலை பார்ப்பார்.
நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, சிறிய ஏப்பத்தோடு ""நம்ம வேலையே எல்லா ஊழலையும் நேர்மையாக செய்ய வைப்பதுதான்'' என்றார்.
"மிகக் குறைந்த சம்பளத்துக்குப் பெண்களை வேலை வாங்குவதோடு எதற்கெல்லாமோ பயன்படுத்துகிறார்கள். பாவம் அந்த வெளியூர் பெண்கள்.. நம்மால் எதுவுமே செய்ய முடியாதா?''
ஆடிட்டர் செல்போனில் யாருக்கோ போன் போடுவதில் தீவிரமாக இருந்தார். அவருடைய அலட்சியம் என்னை மேலும் குரலை உயர்த்த வைத்துவிட்டது.
"கோடி கோடியாக ஊழல் செய்கிறவர்கள் ஆயிரக்கணக்கில் ஊழல் செய்கிறவர்களை வேலையைவிட்டு அனுப்புவது என்ன நியாயம் சார்?''
"உன் வேலையை மட்டும் பார்''ஆடிட்டர் கோபமாக செல்போனை டேபிளின் மீது வீசினார். அது மூடி தனியாக பேட்டரி தனியாக கழன்று தொடர்ந்து வேலைசெய்யுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
"ஒரு ஓட்டல் நடத்தணும்னா எவ்வளவு பேருக்குக் கப்பம் கட்டணும் தெரியுமா? எத்தனை அரசியல்வாதி, எத்தனை அதிகாரி, எத்தனை போலீஸ்காரன்... நேர்மையா இருந்தா சைக்கிள்ல ட்ரம் டீ கூட விக்க முடியாது தெரியுமா?.. உன்னை அங்க எதுக்கு அனுப்பினேன்?... முதலாளிக்கு யாரெல்லாம் துரோகம் பண்றான்னு பாக்கச் சொன்னேன்... முதலாளி என்ன துரோகம் பண்றான்னா பாக்கச் சொன்னேன்? நீ என்ன பெரியண்ணாவா... நாட்டையே கண்காணிக்கிறதுக்கு?''
எதிர்பாரா தாக்குதலால் நிலைகுலைந்து போனேன்.
"ஒவ்வொரு மட்டத்தில ஒவ்வொருவிதமா ஊழல் நடந்துகிட்டு இருக்கு. நம்ம எல்லையோட நாம நின்னுடணும்.. தொடர்ந்து போய்க்கிட்டே இருந்தா அது அமெரிக்க ஜனாதிபதி வரைக்கும் போகும்.. முடியுமா?'' அறிவுரை போல சொன்னார்.
நான் பொறுமையாக டேபிளில் கிடந்தவற்றை ஒன்று சேர்த்து அவரிடம் கொடுத்துவிட்டு மெத்தென்று அடியெடுத்து வைத்து வெளியேறினேன். "செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என சம்பந்தமில்லாமல் திருக்குறள் ஒன்று நினைவுக்கு வந்தது.
ஒரு ஓட்டல் நிர்வாகம் உலகையே புரிய வைத்துவிட்ட ஞானோதயம். அவரவர் தரப்பில் குற்றங்களும் அதற்கான நியாயங்களும் கற்பிக்கப்பட்டன.
கன்னிமரா நூலகத்துக்கு எதிரே பைக்கை நிறுத்தி இரண்டு "வில்ûஸ' ஒரே நடையில் புகைத்துவிட்டுக் கிளம்ப இருந்த நேரத்தில் ஜூலியா அவர்கள் ஊர் பையனோடு வருவதைப் பார்த்தேன்.
"அண்ணனை எதற்காகக் கொன்றார்கள்' கேள்வி அப்படியே உறைந்துபோய் இருந்தது மனத்தில்.
பையன் தன் ஒல்லியான கால்களுக்குக் கச்சிதமாக ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தான். ஜூலியா என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் அதைத் தவறவிடவில்லை. அவனைக்காட்டி, "நான் மணக்க இருப்பவர்.. என் அண்ணனோட நண்பர்' என்றாள்.
இருவர் மீதும் ஒரே நேரத்தில் பரிதாபம் ஏற்பட்டு, வேகமாக அவர்களின் முகங்களைப் பார்த்தேன். அவன் என்னோடு கைகுலுக்க தயாராகியிருந்தான்.

தினமணி தீபாவளி மலர்-2011- இதழில் வெளியான சிறுகதை

வயசு

சபரிமலைக்குப் போவதற்கு மாலை போட்டிருந்தான் பீட்டர். அது எனக்கு
வினோதமாக இருந்தது.
விபூதியிட்டு கழுத்திலே கருப்புத் துண்டு சுற்றிக் கொண்டு செருப்பு போடாமல் இருந்தான். பீட்டர் எங்கள் வங்கியின் அட்டண்டர். குழந்தைக்கு ஜுரம் வந்தால் தர்காவுக்குப் போய் தண்ணீர் தெளித்துக் கொண்டு வருகிற பழக்கமும் அவனுக்கு இருந்தது. அவனுடைய சர்வமத நல்லிணக்கத்தைக் கண்டு பூரிக்க முடியாதபடி அவனுடைய செருப்பு போடாத கால் என் கவனம் பற்றிக் கொண்டது.
எனக்கு மாணிக்கம் ஞாபகத்துக்கு வந்துவிட்டான். வாழ்நாள் முழுதும் ஒரு கேள்விக்குறியாக மனதில் தங்கிவிட்டவன். திருமணத்தன்று காசியாத்திரை செல்லும் சடங்கின்போதும்கூட மாணிக்கம் நினைவுக்கு வந்துவிட்டுப் போனதுகூட கல்யாணமாகி இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனபின்பும் மறக்கவில்லை. சரண்யாவின் தம்பி என் கால்களைக் கழுவி மஞ்சள், குங்குமமிட்டு புதுச் செருப்பை மாட்டிவிட்டு கையில் குடையைக் கொடுத்தான். செருப்பை மாட்டிய தருணத்தில் மூளையில் ஏதோ ஒரு பகுதியில் மின்னல் போல மின்னிவிட்டுப் போனான். இப்போது பீட்டரைப் பார்த்தபோது மின்னியது போல.
மாணிக்கத்துக்குப் பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு. ஆனால் அவன் என்னுடன்
பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதற்காக இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த என் வீட்டுக்கு வருவான். என்னை வந்து அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்துக்குச் செல்வான். மாலையிலும் என்னை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போவான். அவ்வளவு பிரியமா என்ற கேள்வி இன்னேரம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். என் மீது அவனுக்குப் பிரியம் இருந்தது உண்மைதான். அவனுடைய இந்தச் சுற்றுப் பயணத்துக்கு வேறொரு முக்கியமான காரணம் இருந்தது, என் செருப்பு.
முதல் முறை வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்ல ஆரம்பித்தபோதே செருப்பு போட்டு நடப்பவர்கள் பாதங்கள் மெத்தென்று இருக்கும் என்று பேசிக் கொண்டு வந்தான். தனக்கும் செருப்பு போட்டுக் கொண்டு நடந்து செல்வதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகச் சொன்னான். அவனுடைய அபிப்ராயத்தை அவன் சொல்லிக் கொண்டுவருகிறான் என்பதாகத்தான் என் பிஞ்சு மனம் அப்போது நினைத்திருக்கக் கூடும். அன்றைய தினம் என் காலில் இருந்த செருப்பையும் அவனுடைய வெறும்காலையும் திரும்பத் திரும்ப ஒப்பிட்டுவிட்டு வேறொன்றும் சொல்லாமல் போய்விட்டான்.
அது அவனுடைய ஆசையோ அபிப்ராயமோ இல்லை; விண்ணப்பம். இரண்டாவது நாளில்
மாணிக்கம் நன்றாகப் புரிகிறமாதிரியே சொன்னான்: "உன் செருப்பைத் தாடா. எனக்கு செருப்பு போட்டு நடக்கணும்னு ரொம்ப ஆசைடா''
அதுவரை என்னிடம் யாரும் செருப்பை கடனாகக் கேட்டதில்லை. ஒரு நான்காம் வகுப்பு மாணவனிடம் வேறு எந்தக் கடனைத்தான் கேட்டிருக்கப் போகிறார்கள்?
ஞாபகத்தில் அது ஒருவேளை முதல் கடனாகவும் இருக்கலாம். யாராவது கடன் கேட்டால் இப்போதும் தவிர்க்க முடியாமல் தவிப்பதுபோலவே அப்போதும் தவித்துப் போனேன். மாணிக்கத்தின் கண்களில் நான் ஒரு பரிதாபத்தை உணர்ந்திருக்க வேண்டும். நட்ட நடு மார்க்கெட் சாலையில் செருப்பைக் கழற்றிவிட்டு தரையில் நின்றேன். அது சொத சொதவென ஈரமான தரையாக இருந்தது.
ஆரம்பத்தில் காலை வைக்கக் கூச்சமாக இருந்தது. மாணிக்கம் கொஞ்ச தூரம் செருப்பு போட்டு நடந்துவிட்டு செருப்பைத் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன்.


பள்ளிக்கு அருகே வந்த பிறகு தந்துவிடுவான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அவன் தரவில்லை. உள்ளே நுழைந்ததும் பிரேயருக்கு கிரவுண்டுக்குப் போக வேண்டும். அப்போதும் தரவில்லை. மீண்டும் வகுப்பில் வந்து அமர்ந்தபோதும் தரவில்லை.
எப்போது தரப்போகிறான் என்ற யோசனை படிப்பில் சிந்தனையைச் செலுத்தவிடாமல் இம்சிக்க ஆரம்பித்துவிட்டது.
இடையில் ரீஸஸ் பெல் அடித்தபோதும் மத்தியானம் சாப்பாட்டு மணி அடித்தபோதும் அவன் செருப்பு சரசரக்க என் முன்னால் நடந்து கொண்டே இருந்தான்.
என்றுமில்லாத அளவுக்கு நடப்பது மாதிரி இருந்தது. எனக்கு செருப்பைத் திருப்பிக் கேட்பதில் அப்படி என்ன தயக்கமோ.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேனே ஒழிய திருப்பிக் கேட்கவில்லை. எப்போதாவது நான் அவனையே கவனிக்கிற எண்ணம் மோலோங்கிவிட்டால் ஒருதரம் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்துவான். செருப்பு உன்னுடையதுதான்.. எனக்கு ஞாபகம் இருக்கிறது என்ற அர்த்தம் அதில் புதைந்திருக்கும்.
மாலை வீட்டுக்குப் போவதற்கான நீண்ட மணியும் அடித்தாகிவிட்டது. அப்போது அவன் நிச்சயம் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. செருப்பை அணிந்து கொண்டிருப்பதில் அவனுக்கு இருக்கும் ஆசையெல்லாம் தீரும் வரை அவன் அதைத் தரமாட்டானோ என்ற பயம் கவ்வியது நினைவிருக்கிறது.
வீட்டுக்குப் போய் செருப்புக்கு என்ன பதில் சொல்வது என்ற அச்சமும் இப்படி ஏமாந்துவிட்டோமே என்ற தன்னிரக்கமும் உலுக்க ஆரம்பித்துவிட்டது.
மாணிக்கம் என்னுடன் என் செருப்பைப் போட்டுக் கொண்டு என் வீடு வரை வந்தான். வீட்டுக்குப் பத்தடி தூரம் இருக்கும்போது தெரு ஓரத்தில் செருப்பைக் கழற்றிவிட்டு அதை என்னை அணிந்து கொள்ளுமாறு சைகையில் சொன்னான். இப்படி ஒருவர் செருப்பை இன்னொருவர் மாற்றிக் கொள்வது வெட்கப்படும்படியாக இருந்தது. நான் அவசரமாக செருப்பைப் போட்டுக் கொண்டேன்.
ஒருவித நிம்மதி மனதில் குடியேறியது. செருப்பு மிகவும் சூடாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. கைக்கு கிடைத்த திருப்தியில் வீட்டை நோக்கி ஓடினேன்.
மறுநாள் காலை பள்ளிக்குப் புறப்படும்போது மாணிக்கம் வந்தபோதே தயக்கம், பயம், லீவு போட்டுவிடலாம் போன்ற மன உணர்வு எல்லாம் சேர்ந்து கொண்டது.
மாணிக்கம் வழக்கத்துக்கு மாறாக உற்சாகமாக இருந்தான். அவன் பார்வை சுவர் ஒரம் கிடந்த செருப்பின் மீதே இருந்தது.
தினமும் மாணிக்கம் என்னை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வர ஆரம்பித்தான். தினமும் என் செருப்பின் மீதுதான் அவன் சவாரி செய்தான். எதற்காகவோ அவனுக்குத் தரமறுப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. மறுக்க இயலாதவாறு அவன் என்னைக் கேட்டிருப்பான் என்று நினைக்கிறேன்.
மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை வாங்கிக் கொள்வான். அன்று முழுதும் அவனே போட்டிருப்பான். மாலையில் திருப்பித் தந்துவிடுவான். தெருவில் பிள்ளையார் கோவிலைப் பார்த்தால் நடந்தபடியே புத்தி போட்டுக் கொள்வதுமாதிரி மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை கழற்றிவிடுவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறை செருப்பை அணியும்போதும் "ரொம்ப ஆசைடா'' என்பான். பக்கத்துவீட்டு மாமா நெய் தோசையும் துவையலும் சாப்பிடும்போது கண்களில் வெளிப்படுத்தும் பிறவிப் பயனை மாணிக்கத்தின் ஆர்வத்தில் கண்டதை இப்போது ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
வீட்டில் அடம்பிடித்து வாங்கிய செருப்பை இப்படி ஒருவன் அனுபவித்துக் கொண்டிருப்பதை என் பிஞ்சு நெஞ்சம் எப்படித்தான் தாங்கிக் கொண்டதோ?
கார்த்திகேயன் "உன் செருப்பைக் கேட்டு வாங்குடா' என்று ஆவேசப்பட்டான். அவனுக்கு நான் படும்பாடு நன்றாகத் தெரிந்திருந்தது.
"எப்படி கேக்கறதுன்னு தெரியலை''
"நான் கேட்டு வாங்கித் தரட்டா?''
"வேணாம்.. வேணாம்.. இருக்கட்டும்''
கார்த்திகேயன் ஒரு லூஸýபையனா இவன் என்பதாக என்னைப் பார்த்தான்.
இப்படியாக இது தினசரி நிகழ்ச்சியாகிவிட்டது.
ஒருவாரம் போனதும் நான் துணிச்சலாக "நீ ஏன் உனக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொள்ளக்கூடாது?'' எனக் கேட்டேன்.
"நானா?'' இப்படி கேட்டுவிட்டு, கொஞ்ச தூரம் மெüனமாக வந்தான். என் கேள்வியில் ஏதோ பிழை இருந்துவிட்டது போல நானும் பேசாமல் நடந்துவந்தேன்.
"எனக்கு அப்பா இல்லைடா. அம்மாதான் வீட்டு வேலை செஞ்சி காப்பாத்தறாங்க. இதையெல்லாம் வாங்கித் தரமாட்டாங்க'' தெரு முடிவுக்கு வந்ததும் இப்படி முடித்தான்.
நாங்கள் குடியிருந்த வீட்டில் எல்லா பையன்களுக்குமே அப்பா இருந்தார்கள்.
அம்மா மட்டும் உள்ள வீட்டை நான் அறியாதவனாக இருந்தேன். மாணிக்கம் இதைச் சொன்னபோது வருத்தப்படவும்கூட தெரியவில்லை. செருப்பை அவனே அணிந்து வரட்டும் என்று விட்டுவிட்டேன்.
அதன் பிறகு அந்தச் செருப்பு, என் பாத அழுத்தத்துக்குப் பொருந்தாத இடத்தில் குழியாகி யாருடைய டவுசரையோ போட்டுக் கொண்டிருப்பது மாதிரி ஆகிவிட்ட நேரத்தில் அவன் வேறு வீட்டுக்கு மாறிப் போய்விட்டான்.
பள்ளிக்கூடமும் மாறிவிட்டான். இருந்தாலும் செருப்புப் பள்ளம் ஆறாத வடுவாக எனக்குள் தங்கிவிட்டது.
பரதன் பாதரட்சையைக் காட்டுக்கு வந்து பெற்றுச் சென்றுவிட்டான் என்ற போது ராமன் காட்டில் செருப்பில்லாமல் எப்படி அவதிப்பட்டிருப்பான் என ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் மாணிக்கம் உருவில் பரதன் தோன்றி மறைந்தான்.
மாணிக்கம் ஏறத்தாழ இரண்டு வருஷம் என் செருப்பின் மீது இருந்தான் என்பதோடு அவன் நினைவு செருப்போடு சேர்ந்து போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

அதன் பிறகு அவனைப் பல வருடங்களுக்குப் பார்க்கவேயில்லை. குடும்பத்தோடு படம் பார்க்கப் போயிருந்தபோது தியேட்டரில் அவனைப் பார்க்க முடிந்தது. அவனும் அவனுடைய மனைவி, குழந்தையுடன் வந்திருந்தான்.
அவனுடைய குழந்தை செருப்பு போட்டிருக்கிறதா என்று அவசரமாகப் பார்த்தேன். என் வன்மத்தை அவன் உணர்ந்து கொள்வானோவென சட்டென்று சுதாரித்ததை அவன்
பார்த்துவிட்டான்.
"எப்படி போகுது லைஃப்?'' இயல்பாக பேச்சைத் துவங்கினேன். ஆனால் அது செயற்கையாக இருந்தது.
"செருப்பு கம்பெனில சூப்பர்வைஸரா வேலை பாக்கறேன். ஜெயிலுக்குப் போய் வந்ததில அந்தத் தொழிலையாவது ஒழுங்கா கத்துக்குனு வந்தேன்''
"ஜெயிலுக்கா?'' பதறியபடி கேட்டேன். அவன் மெதுவாக தெரிவித்ததை என்னையும் அறியாமல் போட்டு உடைத்துவிட்டேன். என்னுடைய நண்பர்களில் உறவினர்களில்
யாருமே ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் இல்லை. ஜெயிலை பஸ்ஸில் போகும் போது
பார்த்ததோடு சரி. அவனை புதிய ஜீவராசி போல எதிர் கொள்ளும் பிரமிப்பு என்னிடம் இருந்தது.
"நிஜமாவே தெரியாதா?'' என்னை ஊடுருவிப் பார்த்தான். எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை என தெரிந்து கொண்டான்.
"சரி நம்பர் குடு. போன்ல சொல்றேன்''

அவன் சொன்னது எனக்கு ஒரு காட்சியாக பதிவாகியிருந்தது.
துணைப்பாடப் புத்தகத்தை மறந்து வைத்துவிட்டிருந்ததால் அன்றைக்கு மத்தியானம் புத்தகத்தை எடுத்துச் செல்ல வீட்டுக்கு வந்திருக்கிறான் மாணிக்கம்.
வீட்டு வாசலில் ஒரு ஜோடி செருப்பு இருந்திருக்கிறது. அது ஆண்கள் அணியும் செருப்பு. கதவு தாழிடப்பட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறான் மாணிக்கம். கொஞ்ச நேரத்தில் கதவு திறந்து கொண்டு கணேச மேஸ்திரி வெளியே வந்தார். பையனைப் பார்த்ததும் தடுமாற்றம். அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் வேகமாகப் போய்விட்டார்.
மாணிக்கம் வீட்டுக்குள் போனான். அங்கே அவன் அம்மா.. அவளும் இவனை எதிர்பார்க்காமல் தடுமாறினாள். ஆறாம் வகுப்பு படிக்கும் பையனாக இருந்தாலும் அவனுக்கு இதில் இருக்கும் தவறு புரிந்திருக்கும் என்பதை உணர்ந்திருந்தாள்.எதுவும் பேசாமல் டி.வி.க்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையைமுட்டிக்காலுக்கு மேல் சாய்த்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்திருக்கிறாள். மாணிக்கம் வேறு எதுவும் விசாரிக்க
வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அடுப்புக்கு மேலே பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டில் காய்கறி நறுக்கும் கத்தி பளபளத்துக்கொண்டிருந்தது. அதை உறுதியாகப் பிடித்துக் கொண்டான்.
அம்மா தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தாள். கத்தியை கழுத்துக்குக் கீழே சொருகி தீவிரமாக ஒரு இழுப்பு இழுத்தான். குபுக்கென ரத்தம் பீச்சியடித்தது. தலை மட்டும் முட்டிக்காலில் இருந்து நழுவி தொங்கியது.
அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வலியைவிட அதிர்ச்சிதான் அதிகமாகத் தெரிந்ததாக மாணிக்கம் சொன்னான்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் செருப்பு தைக்கக் கற்றுக் கொண்டு வெளியே வந்ததும் ஜெயிலரின் ஆதரவில் செருப்பு கம்பெனி வேலையில் சேர்ந்ததாகவும் சொன்னான்.
அதே கம்பெனியில் வேலை பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை
ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்.
எல்லோரிடமும் சொல்வது போல உடனே "ஃபேமலியோட ஒரு தரம் வீட்டுக்கு வாடா' என்று அழைக்க யோசனையாக இருந்தது. அவன் எதை எதிர்பார்க்காமல் மேற்கொண்டு பேசிக் கொண்டு போனான்.
கடைசியாக அவன் சொன்னான்: "ஜெயில்ல இருந்து வந்ததும் கணேச மேஸ்திரி என்னை பார்க்கறதுக்கு வந்தாரு. "உங்க அம்மாவும் நானும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம். பையன் என்ன சொல்வானோன்னு பூங்காவனத்துக்கு யோசனை. நானே கூப்புட்டுப் பேசிப் பாக்கறேன்னு சொல்லியிருந்தேன்... அன்னைக்குத்தான் இந்தமாரி ஆய்டுச்சி'ன்னு சொன்னாரு.'' மாணிக்கம் அதற்கு மேல் பேச முடியாமல் அழுதான்.
நான் ரிஸீவரை காதில் வைத்துக் கொண்டு அவன் மீண்டும் பேசும் வரை பொறுமையாக
இருந்தேன்.
"அம்மாவுக்கு ஒரு ஒடம்பும் மனசும் இருந்தது தெரியாம போச்சுடா.. அந்த வயசுல தெரியல. இந்த வயசுல தெரியுது.''
"ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு பாடம். பத்தாங்கிளாஸ் பாடத்தை ரெண்டாங்கிளாஸ்ல படிக்க முடியுமா? கவலைப்படாதே மனச சந்தோஷமா வெச்சிக்கோ'' என்றேன்.
"இந்தமாதிரி அவசரப்பட்டு எவ்வளவு தப்பு பண்ணிட்டமோன்னு இருக்குடா... நீ ரொம்ப பொறுமைசாலிடா'' சிறிய கனைப்புக்குப் பிறகு பெருமையாகச் சொன்னான்.

கல்கி தீபாவளி மலர் 2011

LinkWithin

Blog Widget by LinkWithin