சனி, மார்ச் 16, 2013

கோவை... கோவை ஞானி.. குற்றச்சாட்டு




கோவையில் வனசாட்சி நாவலுக்கு அறிமுக விழா நடத்துவதாக அறிவித்த நண்பர் நந்தகுமார் பத்தாயிரம் பரிசும் தந்து பெருமைப்படுத்தினார். விழாவில் கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, மலையக்த் தமிழர் இயக்க அமைப்பாளர் மு.சி.கந்தையா மூவரும் விமர்சனத்தோடு கூடிய அறிமுகத்தை நடத்தினார்கள்.
விஜயா வேலாயுதம், திலகபாமா, சுப்ரபாரதி மணியன், நிர்மால்யா, பால.நந்தகுமார் ஐவ‌ரும் நாவலின் நிறைகளை நிறையவே சொன்னார்கள்.
விழாவில் எழுந்த விமர்சனத்துக்கு என்னுடைய ஏற்புரையில் பதில் சொன்னேன்.
நாவல் சொல்லும் காலகட்டத்தில் ஹட்டனுக்கும் நுவரெலியாவுக்கும் ரயில்பாதை போடப்பட்டுவிட்டதாக மு.சி கந்தையா சொன்னார்.

நாவலில் கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலமாகவே காலகட்டத்தை உணர்த்த முயன்று இருக்கிறேன். வேலூரில் சிப்பாய் போராட்டம் நடந்து எண்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் வெள்ளைக்காரனை விரட்ட முடியவில்லையே என்று பேசுவார்கள். ஹட்டனில் ரயில்பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் பணி முடிந்துவிடும் என்றும் பேசுவார்கள்.
வேலூரில் சிப்பாய் போராட்டம் நடந்தது 1807‍ல் அப்படியானால் 1890 களில் அவர்கள் பேசிக்கொள்வதாக வைத்துக்கொள்ளலாம். 1890களின் கடைசியில்தான் ஹட்டனில் ரயில்பாதைப் பணி முடிந்தது.
வரலாறு கதாபாத்திரங்களின் உரையாடல் மூலமாக நகர்வதால் சில வரலாற்றுச் சம்பவங்களை ஆண்டு, தேதி வாரியாக எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றேன்.

நாடு சுதந்திரம் அடைந்ததும் நாவல் ஒரு பாய்ச்சலாக அறுபதுகளுக்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார்.

நாவலின் முதல்பகுதி இங்கிருந்து மக்கள் இலங்கையின் தோட்டத்தை அடைவதைச் சொல்கிறது. இரண்டாவது பாகம் அங்கிருந்து அவர்களில் பாதிபேர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பட்டதைச் சொல்கிறது. அதாவது 1964‍ல் சீறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் விலைவாக ஒரு பகுதி மக்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவதைச் சொல்கிறேன். முழுவரலாறையும் சொல்வது என் நோக்கம் அல்ல. அப்படிச் சொல்வதானால் நான் ஒரு வரலாற்று நூலையே எழுத ஆரம்பித்திருக்கலாம். வரலாற்றுப் புனைவு வரலாற்றை சிதைக்காமல் அதனுடைய அனுமதியோடு அதைக் கதைப்படுத்துவதுதான் என்று நான் நினைக்கிறேன் என்பதைச் சொன்னேன்.


எஸ்.வி.ராஜதுரை பேசும்போது சிறீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி மக்களைப் ப்ரித்தபோது குடும்பங்கள் எதுவும் ப்ரிக்கப்படவில்லை என்றார். என் நாவலில் ஒரு குடும்பம் இந்தியாவுக்குக் கிளம்பும்ப்போது அந்தக் குடும்பத்தின் மூத்தமகளுக்குக் கடவுச் சீட்டு வரவில்லை என்பதால் நிறுத்திவைக்கப்படுவாள். இப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.
இலங்கையில் இப்படி பிரிந்துபோன குடும்பங்கள் பற்றி ஈராஸ் அமைப்பினர் வெளியிட்ட 20ம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் நூலில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாவைச் சந்திரன் எழுதிய ஈழப் போராட்ட வரலாறு நூலிலும் இணையத்தில் பல ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கட்டுரைகளிலும் இலங்கையில் எம்.பி.யாக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதிய நாடற்றவர் கதை நூலிலும் இலங்கை எழுத்தாளர் சாரல் நாடன் நூலிலும் தகவல்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்தத் தகவல்களுக்கு இதுவரை யாருமே மறுப்பு சொன்னதில்லை. அந்தத் தகவல்கள் தவறு என்றால் அதை இனிமேல்தான் மறுக்க வேண்டியதாக இருக்கும்.

கோவை ஞானி வைத்தது விமர்சனம் அல்ல, குற்றச்சாட்டு.
நாவலின் மூன்றாம் பாகம் நாவலுக்கு தேவையே இல்லாதது என்றார்.
'அந்தப் பகுதியில் மூன்று கோமாளிகள் வருகிறார்கள். இந்த நாவலுக்கு அந்தக் கோமாளிகளுக்கும் என்ன சம்பந்தம்' என்றார்.
இந்த உலகமே கோமாளிகளின் கூட்டமாக இருக்கும்போது நாவலில் மூன்றே மூன்று கோமாளிகள் வருவது தவறில்லை என்று நினைக்கிறேன் என்றதோடு டால்ஸ்டாய், நிகலோய் கோகல், ஆன்டன் செகாவ் கதைகளில் சீரியஸான விஷயங்கள் கோமாளிகளைக்கொண்டு நகர்த்தப்படுவதைச் சொன்னேன். அதுவுமில்லாமல் அவர் சொல்வதுபோல என் மூன்றாவது பாகத்தில் மூன்று கோமாளிகள் இடம்பெறவில்லை. ஒரே ஒரு கோமாளிதான். மற்ற இருவரும் அவனிடம் சிக்கிக்கொண்டு இருக்கும் அப்பாவிகள்.
நாவலின் கடைசி பகுதியில் இலங்கையில் நடந்த இறுதிப்போர் (இன்னொரு போர் வராதா என்ன? ப‌லரும் இறுதிப் போர் என்றே முடிவாக எழுதுகிறார்கள்.)காட்சிகள் சிலவற்றை எழுதினேன். அதை அவர் ரசிக்கவில்லை. மலையக மக்களுக்கும் இறுதிப்போரில் பெரும்பங்கு இருந்தது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்பியே நாவலை அப்படி நகர்த்தினேன் அன்று விளக்கம் கொடுத்தேன்.

நான் பத்திரிகையாளனாக இருப்பதால்தான் இப்படி கதை நீர்த்துப்போனது என்றார்.பத்திரிகையா, எழுத்தா என்று அவர் விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்றார் முத்தாய்ப்பாக.
பத்திரிகையாளனாக இருந்து எழுதியதுதான் வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால் நாவல்கள்.. அவையெல்லாம் மிக அற்புதமானவை என்று அவர் பாராட்டினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பத்திரிகையாளந்தான். வாழ்வின் பெரும்பகுதி இது. இதில்தான் நான் இத்தனையும் எழுதினேன்.
தவிர, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா போன்ற பலரும் பத்திரிகையாளர்களாகவும் இருந்தவர்கள்தான்.
‍இந்தக் குற்றச்சாட்டை அவர்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மலையக் மக்களின் துயரத்தைப் பற்றி 70 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் துன்பக்கேணி என்ற கதையை எழுதினார். அதன் பிறகு தமிழ்மகன்தான் வனசாட்சி என்று ஒரு பதிவைச் செய்திருக்கிறார் என்று ஆரம்பத்தில் மு.சி. கந்தையா சொன்னார்.
''இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் யார் எழுத வருவார்கள்? என்று வேடிக்கையாக சொல்லி முடித்தேன்.





சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் செய்திக்குறிப்பு

செவ்வாய், மார்ச் 05, 2013

அழைப்பு

வணக்கம் நண்பர்களே,
வரும் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கோவையில் என் வனசாட்சி நாவலை அறிமுகப்படுத்த முக்கியமான படைப்பு ஆளுமைகள் இசைந்துள்ளார்கள். கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், திலகபாமா, மு.சி.கந்தையா, பால நந்தகுமார் போன்ற பலர் அதில் பேசுகிறார்கள்.
பால நந்தகுமார் எனக்குக் கிடைத்த அரிய வாசகர். அவருடைய முயற்சியில்தான் அங்கு விழா ஏற்பாடுகள் நடக்கின்றன. தன் மகளுக்குத் திருமணம் செய்யும் கவனத்துடன் அவர் விழா ஏற்பாடுகளை செய்கிறார்.
அவர் தொடங்கியிருக்கும் மலைச் சொல் என்ற கலை, பண்பாட்டு சமூக அமைப்பின் முதல் நிகழ்வு இது.
வந்து வாழ்த்தி, விவாதிக்க வேண்டுகிறேன்.
இடம்: மெட்ரோ பார்க் இன், ராஜவீதி.

LinkWithin

Blog Widget by LinkWithin