சனி, மார்ச் 31, 2012

மூன்று முறை ஜே போடலாம்

இந்த மாத அம்ருதா இதழில்...‘வெட்டுப்புலி’ நாவல் குறித்து


ராஜ்ஜா






பள்ளிப் பருவத்திலே தபால் தலைகள் சேகரித்து வைத்துக் கொண்டு ஏதோ உலகமே என் மேசை கவயத்துக்குள் அடங்கிவிட்டதைப் போன்ற ஒரு பிரம்மை இருந்தது. அதே போல வத்திப்பெட்டி படங்கள். இரட்டைக்கிளி, புறா, சிங்கம், புலி, ஒட்டகம், காண்டா மிருகம், குள்ள வாத்து, ஓடும் ரயில், பஸ், சைக்கிள், கார், விமானம் என்று பல படங்கள் கட்டு கட்டாக, வங்கியி;ல் வைக்கப்பட்டிருக்கும்; பணத்தைப்போல கவயத்துக்குள் வைத்து அழகு பார்த்த காலம் அது. எல்லாம் கோலிகுண்டு விளையாடி ஜெயித்தவைதான்.
இந்த வத்திப்பெட்டி படங்கள் எல்லாவற்றையும் தூக்கி ஓரங்கட்டுவதைப்போல வெட்டுப்புலி படம் இருக்கும். அவ்வளவு அழகு. அவ்வளவு நேர்த்தி. அத்தோடு நம்மைப் போன்ற மானுடன் ஒருவன் கொடூரமான சிறுத்தை ஒன்றை தன்னந்தனியாக (ஒரே ஒரு வளர்ப்பு நாய் துணையோடு என்றும் சொல்லலாம்) பனங்காய் சீவும் அரிவாளால் வெட்டிச் சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது உடம்பு புல்லரிக்கும். வீரத் தமிழன் அவன்.
வீரத் தமிழச்சி ஒருத்தி ஒரு புலியை முறத்தால் அடித்து விரட்டியது பற்றி தெரிந்து கொள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் முடிந்தது. ஆக இந்த வெட்டுப்புலி வீரனின் பராக்கிரமங்களைப் பற்றி நானும் என் சகாக்களும் பள்ளிப் பருவத்திலேயே வியந்து பாராட்டியிருக்கிறோம். எங்களின் பாராட்டுதல்கள் வெட்டுப்புலி படத்திற்கு மதிப்பையும் அதற்குரிய அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கின்றன.
கோலி குண்டு விளையாட்டில் வத்திப்பெட்டி படங்களை வைத்து விளையாடும்போது, மற்ற பத்து படங்களுக்கு ஒரு வெட்டுப்புலி படம் சமம் என்று டமாரம் அடித்து சொல்லிவிட்டோம். எவனிடம் அதிக வெட்டுப்புலி படங்கள் இருக்கின்றனவோ அவன் ஒரு சின்ன ஜமீன்தாராகவே கருதப்பட்டான். ம்…அந்தப் பருவம் மீண்டும் கனவிலாவது வருமா?! இருந்தும் பழைய நினைப்பில் மிதந்து செல்வதில் கிடைக்கும் சந்தோ~ம் வேறு எதில் கிடைக்கும்?
இந்த மாதிரியான எழுதி சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி தமிழ் மகனின் ஐந்தாவது நாவலான ‘வெட்டுப்புலி’ கொடுக்கிறது. இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் ஏதோ நம் வாழ்வில் நடந்தது போலவே இருப்பதுதான் காரணம்.
“குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தான்;டி சட்டம் போடச் சொல்றாங்க,” (ப.92) என்று வெட்டுப்புலி நாவலில் வரும் பல கதாபாத்திரங்களில் ஒருவரான தசரத ரெட்டி சொல்கிறார். நான் சிறுவனாய் இருந்த காலத்தில் என் அப்பா என் அம்மாவிடம் மேற்சொல்லப்பட்ட கருத்தை சொல்லியிருக்கிறார். பின்பு நான் படித்து வளர்ந்து அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலையில் அமர்ந்த பிறகு இந்த நாவலின் இன்னொரு கதாபாத்திரமான ஆறுமுக முதலி தனக்கு புரியாத வி~யமாக சொல்கிறாரே “பார்ப்பான்கள் எல்லா வேலையிலும் சேர்ந்துவிட்டதாகவும், நூறு பேர் டாக்டருக்கு படித்தால் அதில் பார்ப்பான் அற்றவர்கள் இரண்டு பேர்தான் டாக்டர் படிக்;கிறார்கள் என்கிறார்களே இவர்களை யார் படிக்க வேண்டாம் என்றது? பார்ப்பான் எல்லாம் அரசு உத்யோகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வக்கீலாகவும் நீதிபதியாகவும் டாக்டராகவும் மாறிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் எதற்கு?” (ப.121) இதேபோல என் அப்பாவும் சொல்லியிருக்கிறார்.
பெரியார் கட்சி ஆரம்பித்தபின் பாவம் இந்த பார்ப்பனர்கள், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவனுக்கு அவுல் கிடைத்ததைப்போல, யார் யார் வாயிலோ மாட்டிக் கொண்டு எப்படி எல்லாம் மென்று துப்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை மிகத் துள்ளியமாக தீட்டியிருக்கிறார் தமிழ்மகன்.
நாவலின் இறுதியில் பிரபா~pன் அப்பா தமிழ்ச்செல்வனிடம் சொல்கிறாரே “ஜெயலலிதா பிராமின்தானேனு சொல்லலாம். அந்தம்மாவே ‘நான் ஒரு பிராமின்’னு சொல்லிக்கலாம். பெருமையா. ஆனா சங்கராச்சாரிய அரெஸ்ட் பண்ண முடியுதே…கலைஞரால முடியுமா? எதுக்குச் சொல்றேன்னா கம்யூனலா யோசிக்கிறது போய் இப்ப சுயநலமா யோசிக்கிறாங்க…இல்லையா?” (ப.367). இந்த காலகட்டத்தில் என் அப்பா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இதே வார்த்தைகளை செல்லியிருப்பார்.
நான் கோடிட்டுக் காட்டியதையெல்லாம் படித்துவிட்டு தமிழ்மகனின் வெட்டுப்புலி ஏதோ ஒரு ஜாதியை வைத்து எழுதப்பட்டது என எண்ண வேண்டாம். எல்லா ஜாதிக்காரர்களும் இங்கு கதாபாத்திரங்கள்தான். அவரவர்களுக்குத் தகுந்தாற்போல வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு பஞ்சமே இல்லை. லியோ டால்ஸ்டாயின் நாவலான போரும் அமைதியும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
பார்ப்பனர்கள் தலித் மக்களை எவ்வளவு கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்! மற்ற ஜாதிக்காரர்களும் இவர்களின் மனதினை எப்படி எல்லாம் புண்படுத்தியிருக்கிறார்கள். “ஒர்த்தனுக்கு தம் மேலயே மரியாதை இல்லாம போய்டுமா? ஜெகநாதபுரத்திலயும் இப்படித்தான் இருப்பாங்களா? இத்தனை நாளா எட்டாம போச்சே? அது சரி. பெரி வேப்ப மரத்தில காக்கா கூடு கட்டுது. நாய் குட்டி போடுது…காட்டு கலாக்கா காய்க்குது… அந்த மாரி லிஸ்ட்லதான் நாம இவனுங்களையும் பாக்குறோம். யாரு இதெல்லாத்தையும் நெனப்பு வெச்சி கவனிக்கிறாங்க? பறையனுக்கும் சீக்கு வரும். சக்கிலியனுக்கும் நம்மள மாரியே புள்ள பொறக்கும்னு அத்தனை நாளா யோசிக்கல. அவன் ஏதோ குடிசை போடத் தெரிஞ்ச மிருகமாட்டம் நினைக்கிறாங்க எல்லாரும். இயற்கையே அப்படித்தானா? பறையனுங்கன்னா பன்னிங்க மெரியாவா? இன்னாங்கடா இது அநியாயம்?” (ப.179) என்று கேட்பதிலாகட்டும், “வன்னியன் எவனுக்கும் சுயபுத்தி கெடையாது. சொல்புத்தி மட்டும்தான். ~த்திரியன்தான? அவன வெட்டுடான்னா வெட்டுவான். ஒரு தொழில் தெரியுமா அவனுக்கு சொந்தமா? ஆசாரிக்கு ஒரு தொழில் இருக்குது…செட்டியாருக்கு ஒரு தொழில். நாடானுங்க கடை வெக்கிறானுங்க…பாப்பானுங்க ஒடம்பு நோகாத வேலை எதுவோ அதை செய்வானுங்க…வெள்ளாளனுக்கு வௌசாயம்…நம்மளவனுக்கு கூலி வேலை செய்யறது புடிக்கும். எவனாவது ஆணையிட்டா அத செஞ்சு முடிப்பான்…ஒண்ணு, ரெண்டு இதல தப்பியிருக்கலாம்…சேரி ஆளுக்கு அடுத்த படியா உருப்படாம இருக்கிற கூட்டம் இதுதான்” (ப.365) என்று சொல்வதிலாகட்டும், தமிழ்மகன் என்ன புதிதாகச் சொல்லிவிட்டார் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதெல்லாம் காலம் காலமாக மக்கள் மக்களைப் பற்றி சொன்னதுதானே என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் நம் தமிழ் நாட்டின் சரித்திரத்தை கோர்வையாக எழுத்து மூலம் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன என்று எண்ணும்போது, அதை இந்த நாவலின் மூலம் பதிவு செய்த தமிழ்மகனின் தில்லுக்கு மூன்று முறை ‘ஜே‘ போடலாம்.
சில நாவலாசிரியர்கள் சரித்திரக் கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் சமூகக்கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் விஞ்ஞானக் கதை எழுதுவார்கள். தமிழ்மகன் போன்ற ஒரு சிலரால்தான் சரித்திரத்தோடு சமூகத்தையும் விஞ்ஞானத்தையும் கைகோர்க்க வைத்து “ரிங் ஆப் ரிங் ஆப் ரோசஸ்” என்று பாட்டுப்பாடி ஆடவைக்கவும் முடியும்.
கதை என்னவோ மிகச் சிறிய கதைதான். சென்னா ரெட்டி என்பவர் சிறுத்தை ஒன்றை அரிவாளால் தாக்கியே கொல்கிறார். கூட இருந்தது அவரது நாய் மட்டும்தான். இதை வைத்துக் கொண்டு 375 பக்கத்திற்கு ஒரு தமிழ் நாவல் வந்திருக்கிறது. எங்கேயும் தொய்வில்லாமல் போகிறது என்பதால்;…ஒரு நூற்றாண்டு செய்திகள் வாசகனுக்கு கிடைக்கிறது என்பதால்…இந்த கதாபாத்திரம் எங்க அப்பா, இந்த கதாபாத்திரம் எங்க தாத்தா, இதோ இது நான் தான் என்று சொல்லி புலகாங்கிதம் அடையவைக்கிறது என்பதால்…நம்முள் ஒரு எழுத்தாளன் இருந்து ‘அட! இதை நாமே எழுதியிருக்கலாமே’ என்று சொல்ல வைக்கிறது என்பதால்…தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையிலே சேர்க்கப்படவேண்டிய ஒன்று என்று சொல்லி பெருமைப்பட முடிகிறது.
இந்த நாவலுக்கு அடித்தளமாக அமைவது வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதைதான் என்றாலும் ஒரு நூற்றாண்டு தமிழக அரசியலையும், அரசியலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் சேர்த்து உன்னதமான படைப்பிலக்கியமாக உருவாக்கப் பட்டுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது. கதை நடக்கும் காலகட்டம் 1910-லிருந்து 2010-வரையாக இருந்தாலும், முப்பதுகளில் இருந்துதான் கதை கலைகட்ட ஆரம்பிக்கிறது. ஆக கடந்த முக்கால் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பெட்டகம் இது.
தமிழன்தான் எப்படியெல்லாம் பிரிந்துபோய் கிடக்கிறான் இந்த பாழாய்ப்போன சுயநலமிக்க அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு! நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீப்பெட்டியின் மீது அச்சடிக்கப்பட்ட ஒரே தமிழனின் படம் வெட்டுப்புலி தாத்தாதான் என்று நினைக்கும் போது எவ்வளவு பெருமை கொள்ள முடிகிறது. உலகிலேயே எந்த தமிழனுக்கு இவ்வளவு பெருமை இருந்தது? வேறு யாருடைய படத்தை இப்படி கோடிக்கணக்கில் அச்சடித்திருக்க முடியும்? தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும், முதலமைச்சரின் இருக்கையையே தங்களது லட்சியக் கனவாக கண்டு கொண்டிருக்கும் ‘கூத்தாடிகளும்’, தமிழனின் வாழ்வையே நாசப்படுத்தி, கொளுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நாவல் சொல்கிறது. தொடரும்; இந்த பேராபத்துக்களில் இருந்து தமிழனையும் தமிழையும் காப்பாற்ற மீண்டும் ஒரு வெட்டுப்புலி தாத்தா, ‘இந்தியன்’ பட தாத்தா போல, ஜென்மம் எடுத்து வர வேண்டும் என்பதையே நாவல் சொல்லாமல் சொல்கிறது.
வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்றவாறே நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு “சிதம்பரம் புள்ளை வெள்ளக்காரனை எதிர்த்து கப்பல் வுட்றேன்னாரு. அவரைத் தூக்கி ஜெயில்ல போட்டானுங்க. வாஞ்சிநாதன்னு ஒருத்தன் வெள்ளக்கார துரையைச் சுட்டுட்;டு அவனும் சுட்டுகிட்டு செத்தான். இதோ பகத்சிங்னு ஒருத்தன். தூக்குல கொண்டு போய் போட்டாங்க. காந்தி வந்துருக்காரு. பாவம்…கோட்டு போட்டுக்கிட்டிருந்தவர கோவணாண்டி ஆக்கிட்டாங்க,” (ப.23) என்று புலம்பித் தள்ளுகிறது ஒரு கதாபாத்திரம். இன்னொரு கதாபாத்திரமோ “வெள்ளைக்காரன் வேணாம்னும் சொல்றானுங்க. அவனைப்போலவே கிறாப் வெட்டிகிறானுங்க. அவன் பேசற பாi~யெ கத்துக்கிறானுங்க. அவன் சாப்பிடறத சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அவனை மட்டும் எங்க ஊரைவிட்டு போடாங்கிறானுங்க” (ப.61) என்று திட்டித் தீர்க்கிறது.
ஒரு காலத்தில், அதாவது பள்ளிப்பருவத்தில் “எம்.ஜி.ஆர். வாழ்க…சிவாஜி ஒழிக” என்று சகாக்களோடு தெருவில் சப்தம் போட்டுக் கொண்டு போனதுண்டு. கல்லூரி நாட்களிலே திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி துவங்கியபோது சகமாணவர்களோடு “மலையாளத்தான் ஒழிக…தமிழன் வாழ்க” என்று கூச்சலிட்டுக் கொண்டு போனதும் உண்டு. இரண்டு சமயங்களிலும் என் அப்பாவிடம் நான் உதை வாங்கியதுண்டு. முதலில் உதை…அப்புறம்தான் பேச்சு வார்த்தை. இது அப்பா நீதி. “ஏண்டா நாயே! அவனவன் வயித்துக்கு கூத்தடறான். அரசியல் பண்றான். எங்கேயாவது ஓரமா நின்னுகினு வேடிக்கை பார்ப்பியா…அதெவுட்டுட்டு வாழ்க ஒழிக கோ~மா போடற? படிச்சி மேல வர்ற வேலைய பாரு…போ…போ” என்று என் அப்பா சொன்னதை இன்றும் என் இரு கன்னங்களும் முதுகும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதேதான் நாவலிலும் நடக்கிறது. என்னைப் போன்று பலருக்கும் பூசை கிடைத்திருக்கும். தமிழ்மகனையும் சேர்த்துத்தான். நமக்கு நடப்பதைத்தானே நாம் திறம்பட பதிவு செய்ய முடியும்.
தமிழ்மகனிடம் எனக்கு அதிகம் பிடித்ததே அவர் கதை சொல்லும் திறனும் அவரது மொழிநடையும்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய ‘எட்டாயிரம் தலைமுறை’ என்ற சிறுகதையைப் படித்துவிட்டு, அற்புதமானதொரு தமிழ்ச் சிறுகதை என்று வியந்து அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து நான் தொடர்ந்து எழுதி வரும் ‘காண்டெம்பரரி வைப்ஸ்’ (ஊழவெநஅpழசயசல ஏiடிநள – ழுஉவ-னுநஉ. 2009) என்ற இலக்கிய பத்திரிகையில் வெளியிட்டேன். உலகத்து தலை சிறந்த கதைகளில் அதுவும் ஒன்று என்பதை வாசகர்கள் எனக்கு அனுப்பியிருந்த பல ஈமெயில் கடிதங்கள் சொல்லின.
வித்தியாசமான படைப்புலகம்…அதி வித்தியாசமான மொழிநடை. இதுவே தமிழ்மகனிஸம். கல்லூரி நாட்களிலே இர்விங் வாலேஸ் (ஐசறiபெ றுயடடயஉந) எழுதிய நாவல்களை ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். படுக்கையறைக் காட்சிகளை தேவைக்கேற்ப அமைப்பதிலே வல்லவர் அவர். ‘வெட்டுப்புலி’யிலும் இரண்டு முறை தேவை ஏற்பட்டிருக்கிறது. ஒரு மூன்று பக்கங்களுக்கு (ப.125-127) ஒரு காட்சி -- ருசிகரமானதொரு காட்சி வருணிக்கப்படுகிறது. எந்த வித விரசமும் இல்லாமல் வார்த்தை ஜாலங்களாலேயே கிரங்கடித்திருக்கிறார். ஒரு செக்ஸ் காட்சியை இவ்வளவு துள்ளியமாக, நாசூக்காக வேறு எந்த தமிழ் எழுத்தாளராவது சொல்லியிருக்கிறாரா என்பது சந்தேகத்திற்குரியதே.
ஊர்வம்பு எழுதினாலும், சினிமா கொட்டகை பற்றி எழுதினாலும், குதிரை சவாரி பற்றி எழுதினாலும், புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையைப் பற்றி எழுதினாலும் தமிழ்மகனின் நடை தனி நடைதான்.
நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் ‘எண்டர் தி டிராகன்’ படம் பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் வரும் சண்டைகளை கேலிப் பொருளாகப் பார்க்க ஆரம்பிக்கிறது. பென்ஹர், சாம்சன் அண்ட் டிலைலா, டென் கமாண்ட்மென்ட்ஸ், காட் பாதர் போன்ற ஆங்கிலப் படங்கள் அவனுடைய ரசனைக்கு மெருகூட்டி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜனி, கமல் போன்றவர்கள் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த பிரமைகளை வேகமாக விலக்குகின்றன. இதேபோல் நமக்குள் அரசியலும், சினிமாவும் ஏற்படுத்தியிருந்த பல பிரமைகளை தமிழ்மகனின் வெட்டுப்புலி உடைத்தெறிகின்றது. “மாறிக்னே இருக்குதுபா ஒலகம்…ஒவ்வொரு பத்து வரு~த்துக்கு ஒருதரம் பாக்கறதுதான் பளிச்சுனு தெரியுது…செகண்டுக்கு செகண்டு மாறிக்னு இருக்குது தெரியுமா? ஜெர்மன் தாடிக்காரன் அதான் சொல்றான்…மாற்றம்தான் நிலையானதுனு” (ப.335) என்று நறுக்குத் தெறித்தாற்போல ஒரு கதாபாத்திரம் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை ‘ஏக் தம்மில்’ படிக்கக்கூடிய இந்த நாவலில் காணலாம்.

ராஜ்ஜா
னு-88, புவேன்கரே வீதி,
உழந்தை கீரைப்பாளையம்
புதுச்சேரி – 605 004
செல்: 9443617124

வெள்ளி, மார்ச் 30, 2012

100 ஆண்டுகளுக்குப் பிறகு...



தாதா சாகேப் பால்கே 1912- &ல் அரிச்சந்திரா என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். இந்தியாவின் முதல் திரைப்படம். முதல் மவுனப் படம். முதல் கறுப்பு வெள்ளைப் படம் என்ற பல் முதல்கள் இருந்தாலும் அந்தப் படத்துக்கு அவர் ‘முதல்’ போட்டதுதான் பெரிய விஷயம். படத்தின் வியாபாரம் எப்படி இருக்கும் என்ற எந்த சாதக பாதகங்களும் தெரியாத நிலையில் அதில் பணத்தை போடுவதற்குப் பலரும் தயங்கினர். அந்தப் படத்துக்காக அவர் முயன்று செலவிட்டார். அப்படியும் அதில் நடிப்பதற்கு நடிகர்கள் கிடைக்கவில்லை. தன் குடும்ப உறுப்பினர்களை நடிகர்களாக்கினார்.
அதன் பிறகு 100 ஆண்டுகள் கழித்து தமிழில் வெளியான ஒரு படத்துக்கும் அதே சிரமம்.
சங்ககிரி ராசுகுமார் இயக்கிய ‘வெங்காயம்’ படம்தான் அது. தன் வீடு, தன் உறவினர்கள் வீடுகள், தன் தந்தை, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, மாமா, அத்தை, பாட்டி, தம்பிகள், தங்கைகள் அனைவரையும் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தில் முற்போக்குக் கருத்துகளைச் சொன்னார். சிறுவர்களை வைத்து அதைச் சாதித்திருக்கிறார் என்பதையெல்லாம்விட முக்கியமானது அவருடைய முயற்சி. பத்து கோடி, நூறு கோடி என்று பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தயங்கித் தயங்கி நுழையக்கூடிய சினிமா உலகம் ஒரு சாமானியனின் குடிசைத் தொழிலாக மாறியிருப்பது அசாதாரணமான முரண். படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா, விக்கிரமன், சேரன், ஆர்.கே.செல்வமணி, ரோகிணி போன்ற பல இயக்குநர்கள் இந்த அரிய முயற்சியை மனம் திறந்து பாரட்டியதோடு, தகுந்த விளம்பரத்தோடு வெளியிடலாம் என்று படம் வெளியான இரண்டாவது நாளே படத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். சொல்லியபடியே இயக்குநர் சேரன் இப்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

எப்படி இந்தத் துணிச்சல் வந்தது? -சங்ககிரி ராச்குமாரைச் சந்தித்த போது கேட்டேன்.
‘‘துணிச்சல் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. இயலாமைதான் காரணம். என்னிடம் ஒரு கதை மட்டும் இருந்தது. அதுதான் என் மூலதனம். அதில் எந்த நடிகரையும் நடிக்க வைக்க என்னிடம் பொருளாதாரம் இல்லை. கதையில் மொத்தம் 105 பேர் நடிக்க வேண்டியிருந்தது. நாயகன், நாயகிக்கு மட்டும் இரண்டு பேரை வெளியில் இருந்து தேர்வு செய்தேன். மீதி 103 பேரும் என்னுடைய உறவினர்கள்தான். நானே க்தை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய பொறுப்புகளை செய்தேன். ஒரு கேரக்டரில் நடிக்கவும் வேண்டியிருந்தது. மேக் அப், சமையல் போன்ற பொறுப்புகளும்கூட எங்கள் குடும்பத்தினரே செய்தனர்.
ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு ஒரு போட்டோ எடுப்பதே ஆடம்பரமான விஷயமாக இருக்கும்போது ஒரு சினிமாவை எடுப்பதற்கான துணிச்சலைத் தந்தவர்கள் என் குடும்பத்தினர்தான். பத்தாயிரம், இருபதாயிரம், என்று கடன் வாங்கித்தான் படத்தை தயாரித்தேன். எப்போதெல்லாம் ரெட் ஒன் கேமிராவை வாடகைக்கு எடுக்க காசு கிடைக்கிறதோ அப்போதொல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அன்றைக்கு வயல் வேலைகளை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு எனக்கு உதவி செய்ய வந்து விடுவார்கள் என் குடும்பத்தினர். எல்லோரும் அவரவர் உடையில் வந்து நடித்தனர். அவர்களுடைய லுங்கிகள், டவுசர்கள், பாவாடைச் சட்டைகள்தான் காஸ்ட்யூம். நடிகர் சத்யராஜை அணுகி என் முயற்சியைச் சொன்ன போது அவர், அவராகவே ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடிக்க சம்மதித்தார்.
குடும்பத்தினர் யாருக்கும் சினிமா அனுபவமோ, நடிப்பில் அனுபவமோ இல்லை. படத்தில் கூத்துக் கலைஞனாக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றவர் என்னுடைய தந்தை’’ என்றார்.
படத்தில் பலரும் வெகு இயல்பாக நடித்திருந்தனர். குறிப்பாக ராச்குமாரின் அப்பா. கண்கலங்க வைத்துவிட்டார்.
சர்வதேச விருது பெறும் பல திரைப்படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரானவைதான். நியூஸிலாந்தில் பாடல் காட்சி, தேவையில்லாத பிரம்மாண்டம், போன்றவற்றில் இருந்து தமிழ் சினிமாவை மீட்க முடியும் என்பதற்கு என்னால் முடிந்த நிரூபணம் இது’’ என்கிறார் ராசுகுமார்.
வெங்காயம்... உரிக்க உரிக்க பல உண்மைகளைச் சொல்லுகிறது.

சனி, மார்ச் 10, 2012

வெண்ணிற இரவுகள்

"இத்தனை நிர்மலமான வானத்தின் கீழ்தான் முட்டாள்களும் முசுடர்களும் இருக்கிறார்களா?' என்ற ஆச்சர்யத்தோடு தொடங்குகிறது இந் நாவல். அந்த முதல்வரியேகூட படிப்பதற்கான மனநிலையைத் தந்துவிடும் பலருக்கு. வெண்ணிற இரவுகளை வாசிப்பது என்பது வெண்ணிற இரவுகளில் வசிப்பது என்று பொருள். வாசிப்பது, வசிப்பது என்பது ஏதோ வார்த்தை ஜோடனை என்று நினைப்பவர்களுக்கு அதற்கான தாகத்தோடு இன்னும் அந்தக் குறுநாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.


உண்மையில் ஒரு நாவலைப் படிப்பதற்கான மனநிலையும் தாகமும்கூட தேவையாகத்தான் இருக்கிறது. நான் முதன் முதலில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அதைப் பற்றிச் சிலாகித்துத்துச் சொல்ல ஒருத்தரும் இல்லை எனக்கு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தபோதும் என்னை அது ஈர்த்துக் கொண்டது. இருப்பினும் மொத்தமாக இது என்ன மாதிரியான கதை என்ற ஆர்வம் மட்டும்தான் அது.

சுமார் 20... 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம். 5 ரூபாய் விலையுள்ள அந்த அழகிய புத்தகத்தை என்.சி.பி.ஹெச். நண்பர் ஒருவரின் அறிமுகம் காரணமாக 20 சதவீதம் விலைக் கழிவுடன் வாங்க முடிந்ததில் அத்தனைத் திருப்தி. அப்போது ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும் கார்க்கியும் மட்டுமே அறிமுகமாகியிருந்தார்கள். "புத்துயிர்ப்பு'ம் "தாயு'ம் படித்திருந்தேன். கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் மனதில் நிறுத்துவது சிரமமாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது. கத்யூஸô, மாஸ்லவா, நெஹ்லூதவ், குருஷேவ், ப்ரஷ்னெவ், ஆந்த்ரபோவ் என்று அந்தப் பெயர்கள் மீது ஒருவித தூரத்துச் சொந்தங்கள் போல ஒரு பாசம் வந்திருந்தது எனக்கு.

தூரம் என்றால் பீட்டர்ஸ்பெர்க் தூரம்.

தொகுப்பில் வெண்ணிற இரவுகள் தவிர வேறு சில கதைகளும் இருந்தாலும் வெண்ணிற இரவுகளைத்தான் முதலில் படித்தேன். படித்துப் பார்த்த போது ஏற்கெனவே படித்திருந்த ரஷ்யக் கதைகளுக்கான அடையாளங்களோடு ஒரு தீவிரமான காதல் கதையாக மனதில் பதிவானது. செகாவ், துர்கேனிவ், நிகோலய் கோகல், ஷோலகவ், ஐத்மாத்தவ், வஷிலியேவிச், போன்ற பலருடைய கதைகளையும் படிக்க ஆரம்பித்து மாஸ்கோ நகரில் சுற்றித் திரிகிற மாதிரி பழகியிருந்தது மனசு.

இத்தகைய தருணத்தில் மீண்டும் ஒரு முறை வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அப்போது பலரும் என்னிடம் இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா என்று விசாரிப்பு வகையிலான சிபாரிசு செய்திருந்தார்கள். இந்த முறை சற்று நிதானமாகப் படித்தேன். முதல்முறை மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று மட்டுமே பார்த்தேன். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பது மட்டுமே கதையென்று முடிவு செய்து படித்úது ஞாபகம் இருந்தது. இந்த முறை வரிகளில் கவனம். நம் கதாநாயகன் எப்படி தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறான், நாஸ்தென்கா எப்படி தன் கதையைச் சொல்கிறாள் என்பதை கவனமாகப் பார்த்தேன். இப்படியெல்லாம் உணர்வுச் சிக்கல்கள் இருக்குமா என்ற வியப்பு. மனிதர்கள் இப்படியெல்லாம் ஏங்குவார்களா என்று ஆச்சர்யம். இரவு வெண்மையாக இருக்குமா என்ற சந்தேகம். பரிச்சயம் இல்லாத ஆணிடம் ஒரு பெண் நள்ளிரவில் சந்தித்து தன் சொந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வாளா என்ற தர்க்க நியாயம்... இப்படியெல்லாம் சின்னச் சின்னத் தயக்கங்களும் நானும் தஸ்தயேவஸ்கி படித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதும் பழக்கமாகியிருந்தது எனக்கு.

புதுவசந்தம் என்றொரு சினிமா வந்தது. டைரக்டர் விக்ரமன் இயக்கியது. அதில் ஒரு பெண் தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா, எங்கிருக்கிறான் என்ற குழப்பங்கள். அவன் வரும் வரை அவளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறார்கள் நான்கு நண்பர்கள். காதலன் வருகிறான். காதலனோடு செல்வதா? நண்பர்களோடு இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ""அட அப்படியே வெண்ணிற இரவுகள் கதைப்பா இது'' படம் பார்த்துவிட்டு வந்து நான் பெருமையாக நண்பர்களிடம் சொன்னேன். ரஷ்யக் கதையை தமிழ்நாட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சினிமாவோடு ஒப்பிட்டுப் பேச முடிந்தபோது பெருமிதமாக இருந்தது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை வேகமாகப் புரட்டினேன். சொன்னது சரிதானா என்று சரிபார்த்துக் கொள்கிற தற்காப்புக்காக.

அதன் பிறகு இரண்டு பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கிற மாதிரியோ, இரண்டு பெண்கள் ஒரு பையனைக் காதலிக்கிற மாதிரியோ வந்த சினிமாக்களில் இந்தச் சாயல் தெரிவதை கவனித்தேன். இறுதியாக இயற்கை படம் வந்தபோது வெண்ணிற இரவுகளின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக சினிமா ஆக்கியிருக்கிறார்கள் என்று வியந்து அந்தப் படத்தை பல முறை பார்த்தேன். நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் எத்தனைக் கதைகள். இதன் அடிப்படையில் எத்தனை நாவல்கள்? எல்லாமே வெண்ணஇற இரவுகளை நினைவுபடுத்தும் சந்தர்ப்பங்களாகவே இருந்தன.

இப்போதெல்லாம் வெண்ணிற இரவுகளை மிகநிதானமாகப் படிக்கிறேன். சில நாட்களில் வெண்ணிற இரவுகளின் ஒரு இரவை (ஒரு அத்தியாயம்) மட்டும் படித்துவிட்டு மூடிவிடுகிறேன். படித்த நேரத்தைவிட அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஏதோ ஒரு விஷயம் என்னை அந்த நாவலோடு பின்னிப் பிணைத்திருப்பதை அதைப் படிக்கிற அல்லது நினைக்கிற ஒவ்வொரு முறையும் கவனிக்கிறேன். இதயம்விட்டு இதயம் பாய்ந்து நம்மையும் அந்தக் கதாநாயகனாக்கிவிடுகிற பலம் அந்த நாவலுக்கு இருக்கிறது. 160 ஆண்டுகளாக ஒரு நாவல், அதைப் படிக்கிறவர்கள் எல்லோருக்குமான சொந்த அனுபவமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதன் வெற்றி என்ன? எத்தனையோ சினிமாக்களாக, வேறு வேறு கதைகளாக இது மாறிக் கொண்டே இருந்தாலும் தனித்துவமான மூலநதியாக பிரவகித்துக் கொண்டிருக்கிறது வெண்ணிற இரவுகள், காரணமென்ன?

இத்தனை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை நம்மால் பிரயோகிக்க முடியுமா, இப்படியொரு உணர்வை நாம் சினிமா ஆக்கிவிடமுடியுமா என்ற முயற்சிகள்தான் இத்தனை கதைகளும் சினிமாக்களும் என்று தோன்றுகிறது எனக்கு.

தம்மிடம் பேசும் பழகும் பெண்கள் அனைவரையுமே நாஸ்தென்காவாக நினைத்துப் பாதுகாக்கிற குணம் கொண்டவர்களே வெண்ணிற இரவுகளை வாசிக்க உகந்தவர்களோ என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு. எனக்கான சில நாஸ்தென்காக்கள் நினைவுக்கு வருகிறார்கள். என்னைப் போல தஸ்தயேவஸ்கிக்கு உலகம் முழுக்கப் பல வாசகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி.

பலமுறை படித்திருந்தாலும் இப்போது வாசிக்கும்போது இரண்டு வரிகளுக்கு நடுவே புதைந்திருக்கும் உணர்வுகளை அசைபோட ஆரம்பித்திருக்கிறது மனம். முதல் முறை படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் நடுவே இருபது ஆண்டுகள். இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்து என்ன கண்ணா மூச்சி காட்டுமோ? என்று எதிர்பார்ப்பும் பயமும் இருக்கிறது எனக்கு.

நூல் : வெண்ணிற இரவுகள்
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிட்கோ
அம்பத்தூர் எஸ்டேட்,
சென்னை

புதன், மார்ச் 07, 2012

மௌனமே காதலாக..







காலத்தை ரீ வைண்ட் செய்து கண்முன் நிறுத்தியிருக்கிறது ‘தி ஆர்டிஸ்ட்’ திரைப்படம். இனி திரும்பவே முடியாத, கடந்து மறைந்துவிட்ட அன்றைய திரைக்கலைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் அகனாவிக்கியஸ். சற்றேறத்தாழ சதுரமான திரை (1.33:1 திரை), நொடிக்கு 22 ஃப்ரேமில் வேகமான சலன ஓட்டம், அந்தக் காலத்தைய அலங்கார எழுத்தில் சப்& டைட்டில், பியானோவில் வாசித்தது போன்ற பின்னணி இசை.. என மௌனப் படத்துக்கான சகல லட்சணங்களையும் கவனமாகக் கையாண்டு ஒரு காதல் காவியத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர்.
1920 &களில் மௌனப்படத்தில் நடிக்கும் கதாநாயகனை மையப்படுத்தியே கதையைப் பின்னியிருப்பதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்.
ஜார்ஜ் வாலண்டைன் மௌனயுகத்தின் பிரபல கதாநாயகன். சாகஸ ஹீரோ. அவர் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகை பெப்பி மில்லர், அவரை இடித்து விடுகிறாள். திடுக்கிடும் நாயகன், பின்னர் சுதாரித்து, ரசிகையின் தோளில் பாந்தமாக கைபோட்டு போஸ் கொடுக்கிறார். அந்த அசந்த நேரத்தில் பெப்பி அவருடைய கன்னத்தில் முத்தமிட, மறுநாள் வெரைட்டி இதழில் ‘யார் அந்தப் பெண்?’ என்று படத்துடன் பிரசுரமாகிறாள். அந்தப் படமே ஹாலிவுட்டின் கினோகிராப் ஸ்டூடியோவில் நுழைவதற்குத் துருப்புச்சீட்டாக மாறுகிறது. ஜார்ஜ் அவளுக்குச் சிபாரிசு செய்கிறார். அந்தப் படத்தில் துணை நடிகையாக இடம்பெறுவதுடன், ஜார்ஜுடன் ஒரு காட்சியில் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் ஜார்ஜின் ஒப்பனை அறையில் தயங்கித் தயங்கி நுழைகிறாள் பெப்பி. அங்கு ஜார்ஜ் இல்லை. அங்கிருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் மைதீட்டும் பென்சிலால் தாங்க் யூ என்று எழுதுகிறாள். அவளுக்குப் பரவசமாக இருக்கிறது. அங்கு மாட்டியிருக்கும் ஜார்ஜின் கோட்டின் வலது கையில் தன் இடது கையை நுழைத்து அவளையே அவள் அணைத்துக்கொண்டு மெய்மறந்து நிற்கிறாள். காதலிப்பது எத்தனை அரிய கலை? அந்த நேரத்தில் ஜார்ஜ் அங்கே வர, உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன் என்று தெரிவிக்கிறாள்.
‘‘ஜெயிக்க வேண்டுமானால் எல்லோரும் செய்வதையே நீயும் செய்யக்கூடாது.. பிரத்யேகமாக ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று ஆலோசனை சொன்னபடியே அந்த மைதீட்டும் பென்சிலால் அவளுடைய உதட்டுக்கு மேலே செயற்கையாக ஒரு மச்சத்தை உருவாக்குகிறார். அந்தப் புள்ளி அவளுக்கு மேலும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. அந்தச் செயற்கைப்புள்ளிதான் அவளுடைய நிரந்தர அடையாளமாகிற்து. அவளுடைய வாழ்க்கையே மாறுகிறது. துணை நடிகை என்று திரையில் பெயர்களின் நெரிலில் இடம்பெற்ற அவளுடைய பெயர் மெள்ள மெள்ள முதல் வரிசைக்கு நகர்ந்து முன்னணி நடிகையாகிறாள்.
இந்த நேரத்தில் கினோகிராப் முதலாளி ஜிம்மர் இனி மௌனப்படம் எடுக்கப்போவதில்லை என்ற முடிவை அறிவிக்கிறார். அதிர்ச்சியடைகிறார் ஜார்ஜ். ‘மௌனப்படம் இல்லையென்றால் வேறு என்ன படம் எடுக்க முடியும்?’ என்று கேட்கிறார். சப்தங்கள் கொண்ட சினிமாவைக் கற்பனை செய்யமுடியாமல் தானே சொந்தமாக ஒரு மௌனப் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார் ஜார்ஜ். பெப்பி நாயகி.
படம் வெளியாகிறது. அதே நாளில் பெப்பி நாயகியாக நடித்த பேசும்படம் சக்கைபோடு போட, ஜார்ஜ் தயாரித்தப்படம் காற்றாடுகிறது. அந்த நேரத்தில் தன்னுடைய பிரபலத்துக்குக் காரணம், தான் பேசும்படத்தில் நடிக்க ஆரம்பித்ததனால்தான் என்ற அர்த்தத்தில் பெப்பி பேசுவதைக்கேட்டு அவள்மீது கோபமாகிறார் ஜார்ஜ். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத ஜார்ஜ் புழுங்குகிறார். கடனாளியாகி, குடிப்பழக்கத்தால் தன் மேல் கோட்டையும் அடகு வைக்கும் நிலைக்குப் போகிறார். அவரும் அவருடைய நாயும் மட்டும் சிறிய வீட்டில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். அந்த நாய்க்கும் ஒரு விருது கொடுக்கலாம்.
எந்த விஞ்ஞான வளர்ச்சியும் அந்தத் துறை சம்பந்தப்பட்ட கலைஞனை வாட்டி வதைப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கமுடிகிறது. சினிமா வந்தபோது, நாடகக் கலைஞர்களையும் வினைல் போர்டு வந்தபோது சைன் போர்டு எழுதுபவர்களையும் கம்ப்யூட்டர் அனிமேஷன் வந்தபோது செல் அனிமேஷன் வரைந்தவர்களையும் விசைத்தறி வந்தபோது கைத்தறியாளர்களையும் காலம் மனரீதியாக ஏற்படுத்திய வலியை, மௌனத்தின் மூலம் காதல் நாடகமாகச் சொல்லியிருப்பது வித்தியாசமான முயற்சி.
பிரிட்டீஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு கமிட்டியின் ஏழு விருதுகளைத் தட்டிச்சென்ற ‘தி ஆர்ட்டிஸ்ட்’ இப்போது ஆஸ்கார் விருது பரிந்துரையில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்த வார விருது அறிவிப்பில் கணிசமான விருதுகளை அள்ளப்போவதும் அதுதான் என்று ஹாலிவுட் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. (இது விருது அறிவிப்புக்கு முன் எழுதியது... ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது) நாயகி பெப்பியாக நடித்திருக்கும் பெரினிஸ் பெஜொ, அர்ஜென்டீனாவில் பிறந்தவர். அவருடைய தந்தை சினிமா தயாரிப்பாளர். ஆனால் உள்நாட்டு யுத்தம் காரணமாக மூன்று வயதிலேயே பிரான்ஸ§க்கு வந்துவிட்டவர். அங்குதான் இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் அகனா விக்கியஸை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள். இப்போது வயசு 35. சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். அப்படியரு துறுதுறு. என்னமாக நடிக்கிறார்? ஜார்ஜ் ஏலம்விட்ட அவருடைய பொருட்களையெல்லாம் ரகசியமாக வாங்கி வந்து பாதுகாப்பதில் தொடங்கி, தீ விபத்தில் சிக்கிவிட்டார் என்ற செய்தியறிந்து பதைக்கும்போதுவரை ஒலியின் அவசியம் இல்லாமலேயே நெகிழ வைத்துவிடுகிறார்.
ஜார்ஜ் வாலன்டைனாக நடித்திருக்கும் ழான் டுஜார்டின், பிரான்ஸ் டி.வி.களில் நகைச்சுவை நடிகராக பிரபலமான இவர், உலக சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகிவிட்டார். படத்தின் மௌனகுருவான ஹீரோ ஜார்ஜ் பேசும் ஒரே ஒரு வசனம் படத்தின் இறுதியில் இடம்பெறுகிறது.
நாயகி பெப்பி தன் அன்பாலும் அக்கறையாலும் தற்கொலைக்குத் துணிந்துவிட்ட ஜார்ஜை மீட்டு மீண்டும் நடிக்க வைக்கிறாள். இருவரும் ஆடும் நீண்ட நடனக் காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆகிறது. இருவருக்கும் மூச்சிறைக்கிறது. ஜார்ஜ் முதல் முறையாக தன் மூச்சின் சப்தத்தைத் திரையின் மூலமாகக் கேட்கத் தயாராகிறார்.
‘கட்’ என்கிறார் டைரக்டர். அதுதான் படத்தில் ஒலிக்கும் முதல் வசனம். காட்சி ஓகே என்றாலும் நடனத்தை மீண்டும் பார்க்கும் ஆவலில் இன்னொருதரம் ஆடமுடியுமா என்று இயக்குநர் கேட்கிறார்.
‘‘மகிழ்ச்சியாக’’ என்ற முதல் வசனத்தை ஜார்ஜ் பேசுகிறார். மாற்றத்தை ஏற்றுக் கொள்வதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.



நன்றி: விகடன் பிப்ரவரி/ 2012

ஞாயிறு, மார்ச் 04, 2012

நிழலின் தனிமை


தேவிபாரதியின் நிழலின் தனிமை மிக அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்த நாவல்.
கதை என்ன என்று கேட்பவர்களுக்கு எளிமையான ஒரு பதில் உண்டு.
முப்பது ஆண்டுகளுக்கு முன் தன் சகோதரியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய ‘பெரிய மனுஷனை’ சந்திக்கிறான் அவளுடைய சகோதரன். அவன் வீட்டிலேயே வேலைபார்க்கும் வாய்ப்பு கிடைத்து அவனைத் தீர்த்துக்கட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன.
அவனைக் கொல்வதற்காக தினம் தினம் அவன் எடுக்கும் பிரயத்தனங்கள் நாவலுக்குத் தரும் விறுவிறுப்பு அலாதியானது. அந்த விறுவிறுப்பைக் கடைசி பக்கம் வரைக்கும் கொண்டுவரும் அந்த மொழி நடை..
ஜான் பால்வின்னின் ‘கடல்’ நாவலும் மார்க்வெஸ்ஸின் ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட சாவின் சரித்திரமும்’ தஸ்தயேவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற நாவல்களைப் படித்தபோது நான் அடைந்த பரவசம் இந்த நாவலின் சில இடங்களில் கிடைத்தது. காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிப்பார்த்து தவிப்பை விவரிக்கும் விதம் மனத்திரையில் திகில் பரப்புகிறது.
சகோதரியை துன்புறுத்தியவனின் மகளை பாலியில்ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாவலின் நாயகன் ஒரு குற்றச்சங்கிலியைத் தொடங்கி வைக்கிறான். அது சகோதரிக்கு நேர்ந்த துன்பத்துக்குப் பிராயசித்தமாக இல்லாமல் குற்றத்துக்குப் பதிலாக இன்னொரு குற்றத்தை வைப்பதாக இருக்கிறது, ஆனால் பெரும்பான்மையினரின் பழி வாங்கல் அப்படித்தான் அமைந்து தொடர்கதையாக மாறிவிடுகிறது. ஆறப்போடப்பட்ட வன்மம், பழிவாங்கும் எண்ணத்தில் ஏற்படுத்தும் தடுமாற்றம்... காலம் நடத்தும் பாடம்.
பழைய துணி விற்பவன், அப்பாவிக் கணவன் என்ற சில பிரயோகங்கள் மனதில் ஏற்படுத்தும் சித்திரம் நீண்ட வர்ணனைகளைவிட வலிமையானவை.

2011&ல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நாவல் இது.

LinkWithin

Blog Widget by LinkWithin