செவ்வாய், ஜூன் 30, 2009

யாகவா முனிவர் சுனாமியை அறிந்திருந்தாரா?





சமீபத்தில் ஜெயக்குமார் என்ற நண்பர் கடலில் படகில் சென்று வருவதற்கு அழைத்தார். அவர் என் ‘மீனவ நண்பர்'. கடலையும் சினிமாவையும் இணைத்து வைத்ததில் அவருடைய பங்கு ஏராளம். சினிமாவில் தமிழகக் கடல் சம்பந்தப்பட்டிருக்குமானால் அதில் அவர் சம்பந்தப்பட்டிருப்பார். ‘தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசனைப் படகில் கட்டி, கடலில் தூக்கி எறியும் காட்சியில் அவருடைய படகுதான் பயன்படுத்தப்பட்டது. சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் அவர். ஓர் இழையில் உயிர் தப்பியவர். அவரைச் சார்ந்திருந்த பலரும் உயிரையும் உடமையையும் இழந்தனர். இனிக் கடல் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார் போலத்தான் நினைத்தேன். சில நாள்களிலேயே அவர் மீண்டும் கடலுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்.

அவர்களின் வாழ்க்கை கடலால் ஆனது. அதற்கு முன்னால் தேவாரம் காவல் அதிகாரியாகப் பணியாற்றியபோது மீனவக் குடியிருப்புகளை அகற்ற முனைந்த போதும் மீனவர்கள் துப்பாக்கிக்கு அஞ்சாமல் உயிரைக் கொடுத்தார்களே அன்றி கடலைவிட்டு அகலவில்லை. நிலத்தையும் நீரையும் படகால் பாவு பின்னிக் கொண்டிருக்கும் தீரமிக்க வாழ்க்கை அவர்களுடையது. கால் பங்கு நிலத்தைச் சுற்றி எப்போதும் சூழ்ந்திருக்கும் கடலின் ஆபத்து, ஒரே ஒரு டாடாவையும் அவரைச் சுற்றியிருக்கும் அவருடைய ஒரு லட்சம் தொழிலாளர்களையும் போன்றது.

நண்பரின் கடல் உலா அழைப்புக்கு இன்னும் நான் செவி சாய்க்கவில்லை. காரணம் மேற் சொன்ன ஆபத்தின்பால் அல்ல. சுனாமிக்கு முன்பு இருந்தே அவர் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார், நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி, தவிர்த்து வந்திருக்கிறேன். அதற்கு நிஜமான காரணம், நான் கடற்கரையில் காற்று வாங்காமல் வெற்றிடம் வாங்குபவனாக இருப்பதுதான்.

கடற்கரைக்குச் செல்வதற்கு எனக்குத் துணிச்சல் இருந்ததில்லை. மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதும் தினமும் ஜன்னல் வழியாகவே பார்க்க முடிகிற கடலை, நெருங்கிச் சென்று பார்த்தது ஓரிரு முறையாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து கடற்கரை ஓரக் கல்லூரியில் படித்தும் ஒட்டு மொத்தமாக இருபது அல்லது முப்பது முறைதான் கடற்கரைக்குச் சென்றிருப்பேன். கடற்கரைக்குச் சென்று மணலில் விளையாடுவதோ, பஜ்ஜி சாப்பிட்டு பலூன் சுடுவதோ, காற்று வாங்குவதோ, வாக்கிங் செல்வதோ கடலை ‘மிஸ் யூஸ்' செய்வதாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இது ஒரு வகை மன நோயாக இருக்கலாம்; அல்லது ஒருவகை மரியாதையாகவும் இருக்கலாம்.

உதாரணத்துக்கு பாரதியாரைப் பார்க்கச் சென்று "கொஞ்சம் வத்திப் பெட்டி இருந்தா கொடுப்பா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? பெரிய மனிதரை ஒரு தகுந்த காரணத்துடன் சந்திக்க வேண்டும் என்பது போன்றதொரு தயக்கம். கடலுடனான நெருக்கம் அப்படி ஆகிவிடக்கூடாதென்று பயப்படுகிறேன். நான் இப்படி நினைப்பதெல்லாம் கடலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கடல் எதிரில் நிற்கும்போது எதிரில் இருக்கும் பிரமாண்ட பரப்பைப் போல மனதுக்குள் ஒரு மகா வெற்றிடம் ஏற்படுகிறது. சொல்லப் போனால் அது கடலைவிடப் பெரியதாக இருக்கிறது. மனதில் உருவாகும் சுனாமி, வலிக்காமல் விழுங்குகிறது. கொஞ்ச நஞ்ச அகந்தையும் அழிந்து போய் கடல் துளி போல அங்கே கிடக்க வேண்டியதாக இருக்கிறது. சுற்றியிருப்பவர்களை எல்லாம் மறந்து கடலே பிரதானமாக ஆக்கிரமித்துவிடுகிறது. கடற்கரையிலிருந்து வீடு திரும்பிய பின்னும் அந்த வெறுமை, நிரப்ப வசதியின்றி அப்படியே இருக்கிறது. கடலின் பிரமாண்டம் அத்தகையது. சிலரைச் சந்தித்து கோடி விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று யோசித்துவைத்து, நேரில் பார்க்கும்போது வெறுமனே வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவதில்லையா அத்தகைய நிறைவுறா ஏக்கம்.

இந்த எண்ணம் மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் சிறுவயதில் குடும்பத்தினருடன் அண்ணா சமாதி பார்த்துவிட்டு கடற்கரைக்குச் சென்ற தருணத்தில் நான் பார்த்த கடல், வேறு யோசனையை முன் வைத்தது.

நான் பணக்காரனாவது இந்தக் கடலின் கையில்தான் இருக்கிறது என்பதுதான் அந்த யோசனை. கடல் நீரில் இருந்து உப்பு தயாரிக்கப்படுவது பற்றிப் படித்திருந்தாலும் கடலைப் பார்த்தபோது, அதை வற்றச் செய்தால் ஏகப்பட்ட உப்பு தயாரிக்க முடியும் என்று தெரிந்தது. கடல் நீரை உப்பாக்கி விற்றுப் பணக்காரர் ஆகாமல் மக்கள் ஏன் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன்.

வயதுக்கு ஏற்ப கடலை அனுபவிக்க முடிவது சாத்தியமாக இருக்கிறது. காலம் இன்னொரு அனுபவத்தைத் தரலாம்.

இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னால் இந்தக் கட்டுரை நிறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது.


90களின் ஆரம்பத்தில் யாகவா முனிவர் என்று ஒருவர் உலக நடப்புகளை முன் கணித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். எதைப் பற்றிக் கேட்டாலும் அவர் யோசிக்காமலேயே பதில் சொல்பவர் போல சொல்லுவார். சந்தித்துவிட்டுத் திரும்பியவர்கள் சிரித்துச் சிரித்துச் சொல்லுவார்கள். சதா சிகரெட்டைப் பிடித்தபடி இனன்ய மொழி என்ற இலக்கணத்துக்கு அடங்காத பாஷையைப் பேசுவார். காக்கா, குருவி பாஷையெல்லாம் தெரியும் என்பார். அவர் கணித்துச் சொன்னதில் சில..

கலைஞர் அடுத்த ரவுண்டு ஆட்சிக்கு வருவார். டெல்லியே இவர் பேச்சுக்குக் கட்டுப்படும் என்றார். தேவையான அளவுக்குக் கட்டுப்பட்டதாகத்தான் தெரிகிறது.

2007க்குப் பிறகு இந்தியாவிடம் அமெரிக்கா கடன் கேட்கும் நிலைமை வரும் என்று சொல்லியிருந்தார். அங்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவு இதையும்கூட பலிக்க வைக்கலாம்.

கடல் பொங்கி மயிலாப்பூர் வரைக்கும் பாயும் என்று அவர் சொன்னது சுனாமி உருவான அன்று ஞாபகம் வந்தது.

அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ எனப் பேதலித்துத் தவித்தேன்.

இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு இன்னொன்றைச் சொல்லியிருந்தார். அதை வைத்து உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

"எனக்கு இப்போது இரண்டாயிரம் வயசாகிறது... இன்னும் இரண்டாயிரம் வயசு இருப்பேன்.''

வியாழன், ஜூன் 25, 2009

பல நேரங்களில் பல மனிதர்கள்!




தவறு செய்யாமல் இருப்பதுதான் மனிதப் பிறவியின் நோக்கமாக இருக்கமுடியும். அதற்கு நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு நாம் சில தவறுகள் செய்ய வேண்டியிருக்கிறது.. எண்ணிறந்த மனித விசித்திரங்களின் சுழற்சி இது.

ஒரு சிலர் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்; அதாவது தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதாக. சிலர் சில தவறுகளைக் கடந்த அனுபவங்களில் இனி இது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். பலர் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள், திருத்திக் கொள்வதற்கு நேரம் இருப்பதில்லை. சிலருக்கு திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தெரிவதில்லை. தெரிந்தாலும் ஏன் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமானவர்களும் இருக்கிறார்கள். மொத்தத்தில் தவறு தவிர்க்க முடியாத உலக இயல்பாக இருக்கிறது. பொது அர்த்தத்தில் தவறு என்பது அறியாமல் செய்யப்படுவது எனப்படுகிறது. அல்லது அவசரத்தில். புத்துயிர்ப்பு நாவலின் அடிநாதமாக இருப்பது தவறுக்கு வருந்தி அதற்கு பிராயசித்தம் தேடுவதுதான்.

உண்மையில் தவறு தனியாகவும் பிராயசித்தம் தனியாகவும் இருக்கிறது. பிராயசித்தத்தின் மூலம் தவறை சரி செய்துவிட முடிவதில்லை என்பது நாவல் நம் மன ஆழத்தில் குருதிக் கசிவோடு உணர்த்தும் பாடம்.

டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு நாவலின் கதாநாயகன் நெஹ்லூதவ், பெரிய பணக்காரர். பெரும் பண்ணையார். அவருக்கு ஒரு நாள் காலை நீதி மன்ற வழக்கு ஒன்றில் ஜூரியாகப் பங்கேற்பதற்கு அழைப்பு வருகிறது. நகரின் முக்கியமான பிரஜைகளை வழக்கை விசாரிக்கும்போது உடனிருந்து கேட்க வைத்து தீர்ப்புக்கு முன் அபிப்ராயம் கேட்கும் வழக்கம் அப்போது இருக்கிறது. நெஹ்லூதவ் போலவே இன்னும் சிலரும் நீதிமன்றத்தில் இருக்கிறார்கள்.

மாஸ்லவா என்ற விபச்சாரி விசாரணைக்கு அழைக்கப்படுகிறாள். அவள் பணத்துக்காக ஒருவனைக் கொன்றுவிட்டதாக வழக்கு. அவளைப் பார்த்த மாத்திரத்தில் நெஹ்லூதவ் நிலை குலைந்து போகிறார். ஏனென்றால் அவள் தன் அத்தை வீட்டில் வேலைபார்த்து வந்த கத்யூஷா என்ற கள்ளம்கபடமற்ற சிறுமி. இளைஞனாக ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு ஈஸ்டர் தினத்தில் அவளை வலுக்கட்டாயமாக இணங்க வைத்து உறவு வைத்துக் கொள்கிறார். காமப் பித்து தலைக்கேறி ஆடுகிறது. உயிருக்குயிராகக் காதலிப்பதாக, திருமணம் செய்து கொள்வதாகப் பிதற்றுகிறார். செலவுக்கு நூறு ரூபிளைத் திணித்துவிட்டுச் செல்கிறார். ஆனால் அவர் ராணுவப் பணி முடிந்து அடுத்த ஆண்டுகளில் வந்த போது அங்கே கத்யூஸூ இல்லை. அவள் கர்ப்பம் தரித்து, பிரசவித்து, குழந்தையை நோய்க்குப் பறிகொடுத்துப் பிழைப்புக்கு வழியில்லாமல் ஆசை நாயகியாக அவதாரமெடுக்கிறாள். அப்படித்தான் இப்போது கைதியாகி, விசாரணைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.

தீர்ப்புக்கு அபிப்ராயம் சொல்வதற்கு வந்த பெரிய மனிதரான நெஹ்லூதவ், எங்கே அவள் தம்மைப் பார்த்துவிடுவாளோ என்று பதட்டமாகிறார். அவள் எல்லா ஜூரிகளையும் ஏதேச்சையாகப் பார்க்கிறாள். ஆனால் நெஹ்லூதவ் பதைக்கிறார். இதோ இவன்தான் என் வாழ்க்கை சீரழிந்ததற்குக் காரணம் என்று கத்தி விடுவாளோ என்று நடுங்குகிறார். ஆண்டுகள் பல ஆகிவிட்டதால் அவளுக்கு நெஹ்லூதவ்வின் முகம் நினைவில் இல்லை.

விசாரணை பிறிதொருநாள் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது. சிறையில் கத்யூஸூவைச் சந்திக்க ஓடுகிறார். சிறைக் கைதிகளைப் பார்க்க வந்த பலரும் கம்பிச் சட்டங்களுக்கு மறுபக்கத்தில் இரைச்சலாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். கத்யூஷா வுக்கு அந்தச் சத்தத்தில் நெஹ்லூதவ் சொல்லும் எதுவும் சரியாகக் கேட்கவில்லை. உன்னை இந்த அளவுக்கு ஆளாக்கினவன் நான்தான் என்பதை எடுத்துச் சொல்கிறான். ஞாபகம் வந்தாலும் அவளுக்கோ அவன் மீது கோபம் ஏதும் வரவில்லை. பெரிய பணக்காரன் சிக்கியிருக்கிறான். ஆன வரைக்கும் பணத்தைக் கறந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானிக்கிறாள். செலவுக்கு ஏதாவது பணம் கொடுத்துவிட்டுப் போ என்கிறாள். குறுக்கும் நெடுக்குமாகக் காவல்காரன் சுற்றுவதால் அவன் மறு முனைக்குச் சென்று திரும்புவதற்குள் கொடு என்கிறாள். அவரோ குற்ற உணர்வால் அவளையே மணந்து கொண்டுவிட வேண்டும் என்பதாகத் துடிக்கிறார். மாஸ்லவாவாக பெயரை மட்டும் மாறிவிடவில்லை, அவளே மாறிப் போய் இருக்கிறாள். அவளுக்குப் பணம்தான் குறிக்கோளாக இருக்கிறது.

ஆனால் அவளுக்கு சிறை தண்டனை உறுதியாகிறது. சைபீரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். குற்ற உணர்வுக்கு ஆட்பட்ட நெஹ்லூதவ்வும் அவளுடனேயே சைபீரியாவுக்குப் பிரயாணிக்கிறார். கைதிகள் ஆடு மாடுகள் போல சைபீரியாவுக்கு ஓட்டிச் செல்லப்படுகிறார்கள். இவரும் அவர்களுடன் சேர்ந்து வதைபடுகிறார். ஜெயிலுக்குப் பக்கத்திலேயே தங்கியிருந்து சிரமங்களை ஏற்றுக் கொள்கிறார். கடைசிவரை கத்யூஷா வுக்கு நெஹ்லூதவ்மீது காதல் ஏற்படவே இல்லை. அவரை கணவராக ஏற்றுக் கொள்ளவும் அவளுக்கு விருப்பமே இல்லை.

எனக்காக குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம். நீங்கள் என் வாழ்க்கையைப் பாழாக்கவில்லையென்றாலும் வேறு யாராவது இப்படித்தான் என்னை ஆளாக்கியிருப்பார்கள் என்கிறாள். ஏதோ ஒரு கட்டத்தில் என் போன்ற ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கை அப்படித்தான் ஆகும். அதற்கு நீங்கள் பொறுப்பேற்று வருந்த வேண்டாம் என்கிறாள். சிறையிலேயே வேறு ஒருவரை அவள் விரும்ப ஆரம்பிக்கிறாள். ஏதோ ஒரு புள்ளியில் அவருக்குத் தன் குற்றத்துக்கான தண்டனை பூர்த்தியடைந்துவிட்டதாக மனம் தேறுகிறார்.

சுமார் 850 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் துன்பியல் காவியச் சுவையை அளிக்க வல்லது. மனிதர்களின் குற்ற உணர்வை ரணச் சிகிச்சை செய்து ஆற்றும் திறம் படைத்தது இந்த நாவல். செய்த தவறுகளுக்காக வேதனைப்படும் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தருவதாக இருக்கும். அல்லது செய்த தவறுக்கு வருந்த செய்யும் மாயவித்தையை இந்த நாவல் செய்யும். அதனாலேயே உலகம் முழுதும் உள்ள பல இன, மத, மொழியினரையும் வாசகராக பெற்ற மகத்தான நாவலின் பட்டியலில் இது இருக்கிறது.

ஈஸ்டர் தினத்தன்று அந்த அதிகாலைப் பொழுதில் கத்யூஷாவையும் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்படும் நாளின் நெஹ்லூதவ்வின் காலைப் பொழுதையும் மிக அற்புதமான ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் பிரபல ஓவியர் பாஸ்தர்னாக். நாவல் படிக்கும் வாசகனுக்குக் கிடைக்கும் மனச்சித்திரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தவல்லது அது.

துன்பியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவலாக இருப்பினும் டால்ஸ்டாய்க்கே உரிய நகைச்சுவையும் ஆங்காங்கே இதில் உண்டு. அது மேட்டுக்குடி மனப்பான்மையைக் கிண்டலடிக்கும் வகையைச் சேர்ந்தது.

உதாரணத்துக்கு நீதிமன்றத்துக்கு வரும் நீதிபதி கோர்ட் அரங்கத்துக்குள் வரும்போது வாசலில் நின்று இப்படியோசிப்பார். தாம் சாப்பிட்டு வரும் வயிற்றுக்கடுப்புக்கான சூரணம் நல்ல குணம்தருமா? வாசலில் இருந்து தம் இருக்கைக்குச் செல்லும் வரை தாம் எத்தனை அடிகள் வைக்கிறோமோ அது மூன்றால் முழுதுமாக வகுபடும் எண்ணாக இருந்தால் தம் வயிற்றுக்கடுப்பு நீங்கும் என்று வரையறுத்துக் கொள்வார். கோர்ட்டில் இவருடைய தீர்ப்புக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கைதிகள் இருப்பார்கள். இவருக்கோ இப்படி ஒரு யோசனை. ஒவ்வொரு அடியாக எண்ணிக் கொண்டே வருவார். இருபத்தாறு அடிகள்தான் வரும். அது மூன்றால் வகுபடாத எண். அவசரமாக இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு சிறிய அடியை எடுத்து வைத்து 27 அடியாக மாற்றிவிடுவார்.
இந்த மாதிரியான மனித குணங்களின் அரிய படப்பிடிப்பு இதில் நிறையவே உண்டு. அது வேடிக்கையாகவும் வேதனையாகவும் வியப்பாகவும் இது எப்படி இவருக்குத் தெரியும் என்று ஆச்சர்யப்படுவதாகவும் இருக்கும்.

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் எனக்குத் தென்பட்டன. ஆனால் புத்துயிர்ப்பைப் பொறுத்தவரை பல நேரங்களில் பல மனிதர்களை பாதிப்பதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லோரும் வாழ்வில் ஒரு தரமாவது படிக்க வேண்டிய நாவல்.

புத்துயிர்ப்பு,
லியோ டால்ஸ்டாய்,
என்.ஸி.பி.எச். வெளியீடு,
41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரீஸ்,
அம்பத்தூர்,
சென்னை- 98.
போன்: 26359906, 26251968.
ரூ. 275

செவ்வாய், ஜூன் 23, 2009

பங்கு ஆட்டோ பயணம்!




சென்னையில் ஷேர் ஆட்டோவில் பிரயாணிக்கிற மனிதர்களுக்கு சொந்த பந்தத்தோடு இன்பச் சுற்றுலா வந்தது மாதிரி ஒரு உணர்வு இருக்கும். அப்படி ஒரு நெருக்கம். பஸ்ஸில் நாம் ஒரு பெண்ணின் அருகில் அமரத் தயங்குவோம். அல்லது நம் அருகில் ஒரு பெண் வந்து அத்தனை சுலபத்தில் அமர்ந்துவிட மாட்டாள். ஷேர் ஆட்டோவில் இந்த இலக்கணம் இல்லை.

ஒருவரோடு ஒருவர் இணக்கமாக அமர்கிறார்கள். எதிரே அமர்பவரின் கால் முட்டி நம் காலின் மீது படும். ஒரு சிலர் மட்டும் "சாரி" சொல்கிறார்கள். பலர் சொல்வதில்லை. அது தேவைப்படுவதும் இல்லை. "இந்தப் பையைக் கொஞ்சம் அப்படி வையுங்களேன்'' என்று நம்மிடம் கொடுத்து பாரத்தை இறக்கி வைக்கிறார் ஒரு பெண்மணி. "ப்ளூ ஸ்டார் வந்தா நிறுத்தச் சொல்லுங்களேன்'' என்கிறார் ஒரு பெண்மணி நம் முதுகைத் தொட்டு. ஐந்து பேர்தான் அதில் ஏற்றப்பட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது போலும். அதைப் பின்பற்றுவதை பார்க்கவே முடியாது. ஒன்பது பேர் வரை ஏறிக் கொள்கிறார்கள். ஒருவர் மூச்சை மற்றவர் பெற்றுக் கொள்ளாமல் எந்த ஷேர் ஆட்டோ பயணமும் முடிவுக்கு வருவதில்லை. எல்லாவற்றையும் ஷேர் செய்து கொள்வதால் இதற்கு இந்தப் பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

எதிரே வரும் ஷேர் ஆட்டோக்காரர் "பார்த்துப்பா ரவுண்டானாவுல போலீஸ் நிக்கிறான்'' என்று தகவல் கொடுக்கிறார். நம் ஆட்டோக்காரர் சில பல சந்துகள் வழியாக நுழைந்து ரவுண்டானாவைத் தவிர்த்து வேறு பக்கமாகச் செல்கிறார். ஆட்டோவில் இருப்பவர்கள் மார்க்கம் எதுவாக இருந்தாலும் அடையப் போகும் இலக்கு ஒன்றுதான் போன்ற ஒரு சரணாகதி தத்துவத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். ஆட்டோக்காரர் தடம் மாறிப் போவதை அவர்கள் தட்டிக் கேட்பதில்லை.

பாயிண்ட் டு பாயிண்ட் பயணிப்பவர்களாக இருந்தால் வார இதழை மடக்கிப் பிடித்துப் படித்துக் கொண்டு வருகிறார்கள். சிலர் செல் போனில் எஃப்.எம். வைத்து காதில் ஹெட் போன் செருகி பாடலில் கண் சொருகி வருகிறார்கள். சிலருக்கு எஸ்.எம்.எஸ். பணிகளை முடிக்க ஷேர் ஆட்டோ பயணம் தோதாக இருக்கிறது. சிலர் ஏறி உட்கார்ந்த மறுவினாடி போனைப் போட்டு ஒன்பது பேருக்கும் கேட்க சப்தமாகப் பேசுவோரும் உண்டு. சிலர் பக்கத்தில் இருப்பவர்க்கும் கேட்காதவாறு பேசுவார்கள். ட், ச் போன்ற சில வல்லின ஒற்றெழுத்துகள் மட்டும் கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைத் தவிர்க்க விரும்புபவர்களுக்குச் செல்போன்தான் சிறந்த ஆயுதம். தானுண்டு தன் செல்போனுண்டுபோல இருப்பார்கள்.

முகப்பேரில் இருந்து ஜெமினி போகிற ஆட்டோ. எனக்குப் பக்கத்தில் நாமம் போட்ட ஒருவர் ஏறி அமர்ந்தார். "எபோவ் சிக்ஸ்டிலாம் ட்ரெய்ன்ல பாதி டிக்கெட்தான் தெரியுமோல்யோ?'' என்று கேட்டார் ஆட்டோ ஓட்டுநரிடம். அவர் "தெரியாது சாமி'' என்றார் ஆரம்பத்தில். "ஷேர் ஆட்டோவில மட்டும் அநியாயமா வாங்றேளே. நான் பாதிக் காசுதான் தருவேன்.''

சட்டென்று எல்லோரும் முன்னே உந்தப்பட்டோம். ஆட்டோவை அப்படியே சரக்கென பிரேக் போட்டு நிறுத்தி "காசே தரவேணாம். நீ இங்கியே எறங்க்கோ.. சாவுகிராக்கி. காலங்காத்தால'' என்றார்.

"ஏடாகூடமா பேசப்படாது.. எப்படி சாவுகிராக்கினு சொல்லலாம்? திருப்பதியிலேயே வயசானவாளுக்கு தனிக் க்யூல பிரியாரிட்டி கொடுத்து அனுப்பறா... நீ என்னடானா லோகத்தில எதுக்கும் கட்டுப்படமாட்டேன்னு சொன்னா எப்படி?''

"ஐயரே.. நீ எறங்கப் போறீயா, இல்லையா?'' - ஆட்டோவின் கியர் லிவரை மூர்க்கமாகப் பார்த்தபடி கேட்டார் ஓட்டுநர்.

டயம் ஆகுதுப்பா என்று அதற்குள் ஆட்டோவில் குரல்கள். "அங்க வந்து தகராறு பண்ணே.. அவ்வளவுதான்'' என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஆட்டோவைக் கிளப்பினார்.

முழுக்கட்டணத்தையும் கொடுத்துவிடுவாரா, பாதிக் கட்டணம்தான் தருவாரா? சேரும் இடத்தில் இது எப்படி முடியும் என்று எனக்கு ஆர்வமாகிவிட்டது.

"நீங்க எங்க போறேள்?''- இது என்னைப் பார்த்து. எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதற்குள் நான் பதிலைச் சொல்லிவிட்டிருந்தேன்.

"நீங்க என்ன பண்ணுங்க. ஸ்டெர்லிங் ரோட் கார்னர்ல எறங்கி அங்கிருந்து 47 புடிங்க... ஏ,பி,சி எதுவாக இருந்தாலும் போவும். பச்சையப்பாஸ் காலேஜ் கேட்டு இறங்கிடுங்க'' கேட்காமலேயே வழி சொன்னார்.

"இல்லை சூளை மேட்ல இறங்கி நடந்து போயிடுவேன்'' என்றேன்.

"சூளைமேட்ல இறங்கி எப்படிப் போவீங்க?''

வலிந்து வழி சொல்ல வந்தவர் என்னிடம் வழி கேட்டுக் கொண்டார். ஆனாலும் இது அவர் எனக்கு உதவி செய்த லிஸ்டில்தான் அடங்கும் போல் இருந்தது.

"என்னைப் போய் ஐயருங்கிறான்.. அவன் கிட்ட என்ன பேசறது?'' என்றார் இறுக்கிப்பிடித்த தடித்த குரலில். அது ஆட்டோக்காரருக்கு நிச்சயம் கேட்டிருக்கும். என்னையும் ஐயங்காரரின் உடந்தையாக நினைத்துவிடுவான் போல பயமாக இருந்தது. அந்த இடுக்கான இடத்தில் சற்றே தள்ளி உட்கார முயன்றேன்.

ஆட்டோக்காரர் சட்டைசெய்யவில்லை. அவர் ‘சிவனே' என்று வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார், வண்டியில் இருக்கும் வைணவரை மறந்து.

"குடும்பத்தில பையன், பொண்ணு, பேரன், கொள்ளுப் பேரன் எல்லாரையும் ஆட்சியில கொண்டாந்து வுக்கார வெச்சுட்டான். ஜனங்க அவனுக்குத்தான் ஓட்டுப் போடுது. ஒண்டிக்கட்டையா ஒருத்தி இருக்கா அவளுக்குப் போடமாட்டேங்கிறா'' என்ன தைரியத்திலேயோ சத்தமாகச் சொன்னார். திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். "வளர்ப்பு மகனும்கூட இல்லையே..'' எனக்கு அதில்தான் சந்தேகம் போல தெளிவுபடுத்தினார்.

எதைச் சொன்னாலும் பெருத்த விவாதமாக மாற்றுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். தலையசைத்தால்கூட அதைப் பெரிய வாய்ப்பாக்கிக் கொண்டு பேசுவார் என்று அசையாமல் இருந்தேன். உறங்கும் நேரம் தவிர எல்லா நேரத்திலும் பேசுவார் போல. நானும் என் செல் போனைத் துணைக்கு எடுத்தேன். அவர் என்ன விலை? என்று ஆரம்பித்தார். "நான் செல் வைச்சுக்கறதில்லே'' என்றார் தொடர்ந்து.

நான் சூளைமேட்டுக்கு முன்னாடியே இறங்கிவிட்டேன், "இங்க ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருக்கிறது'' என்று வாய் உளறலோடு ஒரு பொய்க் காரணத்தைக் கூறிவிட்டு.

ஜெமினியில் ஜெயித்தது ஆட்டோக்காரரா? ஐயங்காரா? என்பது மட்டும் எனக்கு பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது இன்றுவரை

ஞாயிறு, ஜூன் 21, 2009

குடும்ப எண் 18!



ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மீண்டும் ஒரு தரம் மனிதனாவது என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். புக்கர் டி வாஷிங்டன் சுயசரிதையைப் படிக்கும் போது ஆறறறிவு ஆடு மாடு போல நடத்தப்பட்ட ஒருவர் எப்படி மனிதராகப் பரிணமிக்கிறார் என்பதை உணரமுடிகிறது. கரியால் ஒரு கோடு போடுவதற்குக்கூட தெரிந்திருக்காத அந்தக் குடும்பச் சூழலில்} சமூக சூழலில் இருந்துதான் புக்கர் வாஷிங்டன் தஸ்கேஜீ பல்கலைக் கழகத்தை உருவாக்கி மாமனிதனாக உருவாகிறார்.
பார்ப்பதற்கு மனிதர்கள் போல இருப்பதனால் மட்டும் ஒருவரை இன்னொரு மனிதன் என்று மனிதனென்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆப்ரிக்காவில் இருந்து "ஓட்டிச்' செல்லப்பட்ட ஒரு மனிதக் குழு அமெரிக்காவில் எப்படி விலங்குகள் போல நடத்தப்பட்டது என்பதைச் சொல்லி ஆரம்பிக்கிறது "அடிமையின் மீட்சி' என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நூல்.

ஆடு மாடுகளுக்காவது ஓரளவுக்குப் பாதுகாப்பான இடம் இருக்க முடியும், அவற்றின் விலைக்காக. ஆடு மாடுகள் சித்திரவதைக்குப் பயந்து பணிந்து போகத் தெரியாதவை. மனிதனுக்கோ அது தாங்க முடியாத உயிரின் வலி. நம் குழந்தையை சுட்டுவிடுவார்கள், தம்மைச் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் மனிதனுக்கு இருப்பதால் அவனைப் பணியவைப்பது சுலபம். எந்தவித உரிமை குறித்தும் தெரியாமல் கொட்டடியில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களில் ஒருவராக வளர்ந்த புக்கர் டி வாஷிங்டனுக்கு மனிதர்களுக்குப் பெயர் இருப்பதுகூட அதிசயமாக இருக்கிறது. இவர்கள் குடும்பத்துக்கென்று பண்ணையில் ஒரு எண் உண்டு. அது 18. சிறுவயதில் அந்த எண்ணை எங்கு பார்த்தாலும் தன்னால் அடையாளம் கண்டுவிட முடிந்தது என்று அவர் கூறுவதில் இருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.

பள்ளியில் சேரும் ஆர்வம் இவருள் தீயாய் பெருகிக் கொண்டிருக்கிறது. பள்ளியிலோ எல்லோருக்கும் இரண்டு பெயர்கள் அல்லது மூன்று பெயர்கள் இருக்கின்றன. இவரை எல்லோரும் புக்கர் என்று மட்டுமே அழைத்துக் கொண்டிருந்ததால் தனக்குப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடுமோ என்னும் அளவுக்கு அஞ்சுகிறார். ஆசிரியர் ஒவ்வொருத்தராக பெயர் கேட்டுக் கொண்டே வருகிறார். திடீரென்று புக்கர் வாஷிங்டன் என்கிறார். நெடுநாளாக தனக்கு அந்தப் பெயர்தான் போல அவருக்கே அப்போது தோன்றுகிறது. அந்தப் பெயரே அவருக்கு இறுதி வரை நிலைத்துவிட்டது. ஏனென்றால் புக்கருக்கு அவருடைய தந்தையைத் தெரியாது. பின்னாளில் தன் தாய்க்கும் ஒரு வெள்ளையருக்கும் தாம் பிறந்ததாகத் தெரிந்து கொள்கிறார். உள் நாட்டு அரசியல் போர்கள் முடிந்து ஆபரகாம் லிங்கன் ஆட்சிக்கு வந்து சுதந்திரப் பிரகடனம் அறிவிக்கும் வரை நீக்ரோக்கள் அங்கு விலங்குகள் போலத்தான் வாழ்கிறார்கள்.

வெர்ஜினியாவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் இருக்கும் ஹாம்டன் கல்வி மன்றத்துக்கு இவர் கல்வி கற்கப் பிரயாணிப்பதை விவரிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களை, நம் கண்ணீர் திரையிட்டு மறைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சரியான துணி மணி இல்லை. மரநாரில் இருந்து பின்னி தயாரிக்கப்பட்ட ஆடை, மரப்பட்டையும் பதப்படுத்தாத தோலும் சேர்ந்து உருவாக்கப்பட்ட மடங்காத காலணி, சாக்குப் பை சகிதம் 800 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து போகத் துணியும் ஒரு கறுப்பின சிறுவன், இனவெறி தலைதூக்கி ஆடிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் எத்தனைத் துன்பங்கள் அனுபவத்திருப்பான் என்பதை கற்பனை செய்து பாருங்கள். வண்டியில் ஏற்றிக் கொள்ள மறுக்கிறார்கள், ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை, தங்குவதற்கு அனுமதிக்கவில்லை... ஏறத்தாழ முக்கால் வாசி தூரத்தை நடந்தே கடக்கிறான். பசியிலும் பனியிலும்.

அவ்வளவு தூரம் கடந்து ஹாம்டன் கல்வி மன்றத்தை அடைந்து அங்கு படிப்பதற்கு அனுமதி கேட்கிறார். பஞ்சத்தாலும் பசியாலும் வாடிப் போய் அழுக்காக கோணிப் பையுடன் நின்று கொண்டிருக்கும் புக்கரை யாரும் ஏறிட்டும் பார்க்கவில்லை. இவருக்குப் பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போய்விடுமா என்று பதறுகிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த ஆசிரியருக்கு வழிபாட்டுக் கூடம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஞாபகம் வருகிறது. அங்கே நின்று கொண்டிருந்த புக்கரை சுத்தம் செய்ய பணிக்கிறார்.

"இதுதான் வாய்ப்பு என எனக்குப் பட்டது. அது போன்ற ஓர் உத்தரவை அத்தனை குதூகலத்துடன் நான் ஏற்றது இல்லை. கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை மிகத் திறமையாகச் செய்பவன் நான். வழிபாட்டுக் கூடத்தை மூன்றுமுறைக் கூட்டினேன். பழந்துணி பெற்று நான்கு முறை துடைத்தேன்' என்கிறார்.

இந்த செய் நேர்த்திக்காகத்தான் அங்கு அவருக்குப் படிக்க அனுமதி கிடைக்கிறது. அந்தக் கறுப்புச் சிறுவன் அங்கே இருக்கும் உப்பளத்தில் காலையும் மாலையும் வேலை பார்த்து இடையே படிப்பைத் தொடர்கிறான். உப்பளத்தில் வேலை பார்த்து அதே ஆடையில் படிப்பது சிரமமாக இருக்கிறது. சாமுவேல் ஆம்ஸ்ட்ராங் என்ற ஆங்கிலேயர் அவருக்கு ஆடை கொடுத்து உதவுகிறார். (அந்த நெருக்கம் வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது.) அங்கு அவருக்கு இரண்டு போர்வைகள் தருகிறார்கள். அது நாள் வரை அந்த மாதிரி ஒரு ஆடம்பரத்தை அவர் அனுபவித்திராதவர். சுதந்திரம் பெறும் வரை படுக்கை என்பது கூட அவருக்குத் தெரியாது. தரையில் தூசியிலும் தும்பிலும் ஈரத்திலும் ஒரு பன்றியைப் போலவோ மாட்டைப் போலவோதான் உறங்கி வந்தவர். அதனால் இரண்டு போர்வைகளை எப்படிப் பயன்படுத்துவதென்று அவருக்குத் தெரியவில்லை. முதல் நாள் இரண்டு போர்வைகளையும் தரையில் போட்டு அதன் மேல் படுத்துக் கொள்கிறார். இரண்டாம் நாள் இரண்டு போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார். மூன்றாவது நாளில்தான் அதை கீழே ஒன்றும் போர்த்திக் கொள்ள ஒன்றுமாகப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்.

இப்படியாகப் படித்து ஆசிரியர் பயிற்சி மேற் கொண்டு தன் கிராம மக்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் போதிக்கிறார். இத்தனை துன்பத்திலும் அவர் ஒரு இடத்திலும் வெள்ளை இனத்தவரின் முரட்டுக் குணத்தைப் பழிக்கவே இல்லை. படிப்பின் மூலமாக அவர் எல்லோரையும் விட சிறந்தவராக மாறுகிறார். ஜனாபதி ரூஸ்வெல்ட் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கெüரவிக்கிறார். உலகம் முழுக்க அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் திரள்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவருடைய சுற்றுப் பயணமும் பேச்சும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

இறுதி வரி இப்படி முடிகிறது...

எந்த மாநிலத்தில் நான் பிறந்தேனோ, அந்த மாநிலம் என்னை வரவேற்று உபசரித்ததற்காக இரு இனத்தவர்க்கும் என் இதயபூர்வமான நன்றி.
என வரவேற்பளித்த வெள்ளை இனத்தவருக்கும் சேர்த்தே நன்றியைத் தெரிவிக்கிறார். வன்முறையைக் கையில் எடுக்க மிக நேர்மையான காரணம் இருந்தாலும்
ம.ந.ராமசாமியின் இயல்பான மொழி பெயர்ப்பில் நெஞ்சைத் தைக்கும் நூல் இது.

அடிமையின் மீட்சி
புக்கர் டி. வாஷிங்டன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா,
14, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை- 14

விலை: ரூ.120

வியாழன், ஜூன் 18, 2009

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரை




தினமணிக்கு ஒரு சினிமா நிருபரின் தேவை இருந்தபோது சுகுமாரனை ராஜமார்த்தாண்டனும் என்னைப் புகழேந்தியும் சிபாரிசு செய்தனர். இறுதியில் நான் சேருவதாக முடிவானபோது, சுகுமாரனை சிபாரிசு செய்வர் என்ற காரணத்துக்காக அவரிடம் பேச சிறு தயக்கம் இருந்தது. ஆனால் தினமணியில் எனக்கு முதல் நண்பர் அவர்தான். வண்ணத்திரை போன்ற சினிமா பத்திரிகைகளை அவர் ஆர்வத்தோடு வாங்கிப் படிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் வண்ணத்திரையில் இருந்து வேலைக்கு வந்தவன் என்பதால் என் மீது அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. அதற்காக என்னை அவர் கூடுதலாக மதித்தார். கேன்டீனிலும் அலுவலகத்தின் பின் பக்க மொட்டை மாடியிலும் பிரபு, சிவாஜிகணேசன் பற்றி பேச எங்களுக்கு நிறைய விஷயமிருந்தது. நான் அவரை உரிமையாகக் கிண்டல் செய்பவனாக இருந்தேன். சிவாஜியையும் பிரபுவையும் கிண்டல் செய்தால் அதை அவர் பொறுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும். சண்டைக்கு வராமல் அவர் நாகர்கோவிலில்தான் பிரபுவுக்கு அதிகமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரத்தைப் பதிலாகத் தருவார்.

அதே நேரத்தில் என் கதைகளைப் படித்துவிட்டு வெகுகாலமாக ஒரு அபிப்ராயமும் சொல்லாமல் இருந்தார். எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதிக்காக அவரிடம் முன்னுரைக்கு அணுகியபோது அவர் மிகவும் காலம் தாழ்த்தியபோது எனக்கு சந்தேகம் வந்தது அவருக்கு விருப்பமில்லையோ என. நான் அதை அவரிடம் கொண்டிருந்த உரிமையும் கிண்டலுமான நட்புடனே தெரிவித்தேன். ஏதாவது விளக்கம் தர முற்படும்போது சீரியஸôன குரலில் பேசுவார். "உங்க கதைகள் ஏதும் மோசமா இல்லை... உங்க கதைக்கு ஒரு இடம் இருக்கு... எனக்கு வேலை அப்படி...'' மீண்டும் தன் வழக்கமான குரலில் "இன்னும் ஒரு வாரம் டயம் கொடுங்க வோய்... முடிச்சுத் தந்திட்றேன். ஆபீஸ்ல ஜி.பி.எஃப். பணம் வராம இருக்கு சீக்கிரம் சொல்லி ஏற்பாடு செய்யுங்க வோய்'' என்று முடித்தார்.

"நீங்க முன்னுரை எழுதி அனுப்புங்க. ஜி.பி.எஃப். வேலையை முடிக்கிறேன்''

வெளிப்பார்வைக்கு பலவீனங்கள் நிறைந்தவராகவும் நெருங்கிப் பார்க்கும் போது விட்டுக் கொடுக்க விரும்பாத தீவிரமான இலக்கியக் கோட்பாடும் கொண்டவராக இருந்தார் ராஜமார்த்தாண்டன். முன்னுரை எழுதி அனுப்பி வைத்தார், அது என் ஜி.பி.எஃப். மிரட்டலுக்காக இல்லை. கடைசி கொஞ்ச நாளில் என்னிடம் அடிக்கடி பேசினார். பென்ஷன் பணம் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக. அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்கு அலுவலக நண்பர் சூரிய நாராயணனுடன் சென்று அவர் வீட்டுக்கும் போய் வந்தேன். மாடியில் அவருக்கு மரத்தாலான அழகான அறை. அங்கே அமரச் செய்தார். எனக்குச் சரியான தலைவலி. தைலம் கொண்டு வரவும் மாத்திரை கொண்டு வரவும் ரசம் சாதம் கொண்டு வரவும் ஸ்பைரைட் கொண்டுவரவும் என ஐந்தாறு முறை மாடிக்கும் கீழுக்கும் ஓடியலைந்தார். விடைபெறும்போது எங்களைப் போலவே அவரும் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ஒரு விருந்தாளிபோலவே ஒட்டமால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருடைய தம்பியும் ராஜமார்த்தாண்டனின் மனைவியும் அடுத்து குடும்பத்தோடு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருந்தார்கள். ராஜ மார்த்தாண்டன் புன்னகையுடன் கண்கள் மின்ன விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு அவர் பென்ஷன் விஷயமாக சென்னை வந்திருந்தார். அலுவலகத்துக்கும் பென்ஷன் ஆஃபிஷுக்குமாக இரண்டு மூன்று முறை அலைந்தபோது "உன்னை ரொம்பத் தொல்லை பண்றேன்'' என்றார். விடைபெறும்போது "அடுத்த மாசம் ஒண்ணாந்தேதி உங்களுக்குப் பென்ஷன் கிடைத்துவிடும்'' என்று உறுதிகூறி அனுப்பி வைத்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வேலை பார்க்கும் சாஜி என்பவரின் செல் நம்பரைக் கேட்டிருந்தார். நண்பர் அரவிந்தன் யாரையோ பிடித்து அவருடைய நம்பரைக் கொடுத்து அதை ராஜமார்த்தாண்டனிடம் சேர்த்துவிடும்படி சொல்லியிருந்தார். சனிக்கிழமை காலை அந்த நம்பரை அவருக்குக் கொடுக்க போன் செய்ய நினைத்தேன். வேறு வேலைகள் காரணமாக சற்றே தாமதமாகிவிட்டது. ராஜமார்த்தாண்டனின் மரணச் செய்தி முந்திக் கொண்டது.

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரையிலான எண்களுக்குள் அவருடைய செல்போன் எண் இருக்கிறது. இப்போது அவற்றை அழுத்தினால் யாரெடுத்துப் பேசுவார்கள் என்று தெரியவில்லை. நான் உரிமையோடு கிண்டல் செய்தால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.

புதன், ஜூன் 17, 2009

படித்தேன் ரசித்தேன் -1

உலக மனிதர்களின் வீடியோ ஆல்பம்



மிக சுவாரஸ்யமான நாற்பத்தியாறு சிறுகதைகளை படிக்கிறீர்கள். ஒவ்வொரு சிறுகதையும் மலைக்க வைக்கின்றன. அதில் இடம் பெறும் சம்பவங்களும் அதை விவரித்திருக்கும் முறையும் இப்படியெல்லாம் நாம் வாக்கியங்கள் அமைக்கவில்லையே என்று ஏங்க வைக்கின்றன. படைப்பின் பிரமிப்பே இதுபோல் நாம் ஏன் உருவாக்கவில்லை என்ற ஏக்கத்தை உருவாக்க வைப்பதுதானே? இந்த நூல் அதைச் செய்கிறது.

ஆனால் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுதி அல்ல. எல்லா அத்தியாயங்களுக்குள்ளும் இழையாக ஒரு தொடர்பு இருக்கிற போதும் இது நாவலும் அல்ல. இது சுயசரிதை. எல்லோருக்குமே பிறந்து, வளர்ந்து, சாதித்து, தவறி வீழ்ந்து, எழுந்து என்று எத்தனையோ அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நாற்பத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட சுயசரிதை என்று தெரிந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒருபோதும் ஞாபகத்தில் தங்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான ஆரம்பமும் அதன் பிறகு திருப்பங்களும் ஒரு எதிர்பார்க்காத முடிவும் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

சூடானில் ஒரு இரவு விருந்துக்குப் போய் வந்ததை எழுதியிருக்கிறார்.

ஒரு சோறு பதம்போல அதை இங்கே பார்ப்போம்.

"இடம் சூடான். வருடம் 1989. மாதம் ஞாபகமில்லை. ஒரு சனிக்கிழமை இரவு. நேரம் 7.58." முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது.

சம்பவம் நடந்த இடம் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். அதிலும் ஒரு நாட்டில் வேலை பார்த்தபோது நடந்த சம்பவமென்பதால் அதில் பிசகு இருக்காது. ஆண்டும் அப்படித்தான். இவர் அங்கு பதவி ஏற்ற ஆண்டு அது. மாதம் ஞாபகமில்லை ஆனால் கிழமை ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் ஒரு வார இறுதி நாளின்போதுதான் அந்த விருந்து நடைபெற்றது. இரவு என்பதும் ஓ.கே. நேரம் 7.58..? அவருக்கு முன்னால் கடிகாரம் ஒளிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். எவ்வளவு நம்பகத்தன்மையோடும் நுட்பமாகவும் இருக்கிறது பாருங்கள்.

புதிதாக குடிவந்த நாட்டில் வழக்கம் போல அவருடைய மனைவிதான் இந்தப் புதிய நட்பை உருவாக்கக் காரணமாக இருக்கிறார்.

ஒரு பெரிய பிளேட்டில் உணவு அவருக்கு வைக்கப்பட்டிருந்தது. அவர் சாப்பிடப் போவதை மூன்று ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன என்கிறார். ஒன்று அவருடன் வந்த அவருடைய மனைவியினுடையது. இரண்டாவது விருந்துக்கு அழைத்த எலேனாவின் கண்கள். மூன்றாவது கண்களுக்குச் சொந்தக்காரர் யாரென்று அவர் சொல்லவில்லை.

எலேனா சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்பதையும் சொல்லிச் செல்கிறார். நடந்து வருவதைப் பார்த்தாலே அவர் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பது தெரிந்துவிடும் என்கிறார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை அவருக்கு ஞாபகம் வருகிறார். அவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற டென்னிஸ் வீராங்கனை. "209 வாரங்களுக்கு டென்னிஸ் உலகத்தில் பெண்களுக்கான முதலாம் இடத்தைக் கைப்பற்றியவர் அவர். அவரைப் போலவே தோற்றம் எலேனாவுக்கும்' என்கிறார்.

எலேனாவின் கணவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ள ஒரு என்ஜினியர். இவர்கள் விருந்துக்குப் போன போதும் அவர் ஏதோ நாட்டுக்குப் போயிருக்கிறார்.

இரண்டு முறை எலேனா இவர்கள் வீட்டிக்கு விருந்துக்கு வந்திருக்கிறார். இது இவர்கள் முறை. மரக்கறிக்குப் பழகியிருந்த முத்துலிங்கம் புதுப்புதுவிதமான கற்பனைகளை ஜோடித்து விருந்துகளில் இருந்து தப்பித்து வருகிறார். ஆனால் எலேனா பிடிவாதக்காரியாக இருக்கிறார். இவருடைய வீட்டுக்குத் தொலைபேசி வருகிறது. இவருக்கு என்னென்ன காய்கறிகள் பிடிக்கும், என்னென்ன பிடிக்காது என்று இவருடைய மனைவியிடம் புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர் பியர் குடிப்பாரா என்பது அதில் ஒரு கேள்வி. பதில் ஆம் என்று தெரிவிக்கப்படுகிறது.

விருந்துக்குக் கிளம்புகிறார்கள். ஒம்டுர்மான் நகரத்தில் நைல்நதிக் காற்றி வீசும் தூரத்தில் எலேனாவின் வீடு இருக்கிறது. எலேனா வாசல் வரை வந்து வரவேற்கிறார். அவருடைய புஜங்கள் வசீகரமானவை. ஆனால் அன்று அவர் அணிந்திருந்த பட்டு ஆடை, புஜங்களை மறைத்ததோடு அல்லாமல் அவருடைய அழகிய பாதங்களையும் மறைத்து தரையில் தவழ்ந்து கிடக்கிறது. அவர் கடந்து போன சில வினாடிகள் கழித்து அவர் அணிந்திருந்த ஆடையின் கடைசி நுனி கடந்து போகிறது.

முகமன் கூறும் முன்னரே பாதையில் அவர்கள் பார்த்த வயலட் பூ கன்றுகள் பற்றி பேச்சு ஆரம்பமாகிவிடுகிறது. உலகத்தில் காணப்படும் அத்தனை வண்ணங்களிலும் அவரிடம் பூச்செடிகள் இருப்பதாகக் கூறுகிறார் எலேனா.

இப்போது மூன்றாவது ஜோடி கண்ணுக்குச் சொந்தக்காரர் அறிமுகமாகிறார். அவர் பீட்டர். அந்த வீட்டின் வேலைக்காரன். கென்யா நாட்டைச் சேர்ந்தவன். யாரோ பொருத்திவிட்டது போல தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி எல்லா வேலைகளையும் செய்கிறான். பூப்பபோட்ட சட்டையும் கண்களைக் கூச வைக்கும் நீலநிற பேண்டும் சாலையோரத்தில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். வசதி குறைந்தவர்களுக்கு அங்குதான் வியாபாரம். எத்தனையோ விருந்தினருக்குப் பணிவிடை செய்த அனுபவம் அவனிடமிருக்கிறது. எலேனாவின் உபசாரம் சற்றே சுணங்கும் இடங்களில் அதை நிவர்த்தி செய்பவனாக இருக்கிறான்.

தான் உணவு தயாரிக்க எடுத்த முயற்சியை விவரிக்கிறார் எலேனா. சுவிஸ் உணவில் பியர், முட்டை, தக்காளி, காளான் போன்ற கூட்டுப் பொருள்கள் கலக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதன் இறுதி வடிவம், பதம் தப்பிப் போன உளுத்தம் களி போல தென்படுகிறது.

அப்போது அங்கு சாதிக் அல் மாஹ்டியின் ஆட்சி நடக்கிறது. மது வாங்க, விற்க, குடிக்க தடை. சுவிஸ் உணவைப் பரிமாற வேண்டும் என்ற ஆசையில் எங்கிருந்தோ இருபது மடங்கு விலை கொடுத்து பியர் வாங்கி அதைத் தயாரித்திருக்கிறார். முதல் துண்டை வாயில் போட்டதும் அம்மா மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயில் ஊற்றிய ஆமணக்கு எண்ணெய்யின் மணம் ஞாபகம் வருகிறது. உணவை உண்ணும் கஷ்டத்தோடு வாயில் புன்னகையைத் தவழவிடுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது அவருக்கு. மனைவியைக் கடைக்கண்ணால் பார்க்கிறார். அவர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைப் போலவே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

வயிற்றுக்குள் செலுத்தப்பட்ட உணவு திரும்பி வருவதற்கு விருப்பம் காட்டுகிறது. நல்ல சிந்தனைகளையும் நல்ல வாசனைகளையும் நினைத்து அதைக் கட்டுப்படுத்துகிறார். தக்காளி கிச்சப்பையும் கோக்கையும் குடித்து சமாளிக்கப் பார்க்கிறார். முடியவில்லை. குமட்டல் அபாயகரமான கட்டத்தைத் தாண்டுகிறது. தன்னுடைய நாட்டவர், மூதாதையர், வேலை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மனைவி, பிள்ளைகள் எல்லோருடைய கௌரவமும் வாயின் நுனியில் அந்தக் கணம் நிற்கிறது. இனி எழுந்து கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில் பீட்டர் தோன்றுகிறான். சொர்க்கத்தின் கதவின் சாவியை யேசுவிடம் பெறுவதற்கு ஓடியவரின் வேகத்தோடு ஓடிவந்து மீதி உணவையும் முத்துலிங்கத்தின் தட்டில் பிரியத்தோடு பரிமாறுகிறான். எலேனாவின் உபசாரம் சுணங்கிய தருணங்களில் பீட்டர் அதை இட்டு நிரப்புவான் என்றாரே, அதுதான் இது.

தாம் ஆசையாகச் சாப்பிட்ட உணவை பார்சலும் செய்து தருகிறார் எலேனா. பியர் ஊற்றி தயாரிக்கப்பட்ட அந்த உணவு புளிக்கப் புளிக்க சுவை கூடும் என்கிறார். அதை ஒரு கையிலும் ஆப்ரிக்க வயலட் செடிக் கன்று மறுகையிலுமாக காரை நோக்கி நடக்கிறார். கார் சாவி அவருடைய வாயிலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

அன்றைய விருந்தில் அவருடைய வாயின் உச்சபட்ச பயன்பாடு அதுதான்.... இப்படி முடிகிறது அந்த அத்தியாயம்.

இதிலே நாம் கவனிக்க வேண்டியது அவருடைய நகைச்சுவை உணர்வு. அதை அவர் பிரத்யேகமான ஒரு நடையில் சொல்வது அடுத்தது. மூன்றாவது நைல் நதிக்காற்று வீசும் வீடு போன்ற நுணுக்கமான கவனிப்பு.

இது மூன்றும் இவருடைய மிகப் பெரிய பலம். அவருடைய நண்பர் ஒருவரை டொராண்டோவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வைத்தியம் பார்க்கக் கொண்டு செல்கிறார்கள். அற்பக் காரியத்துக்காகவும் வேறு ஒருவருடைய உதவியை எதிர்பார்க்கும் நிலைமை. கண்கள் மட்டுமே இப்படியும் அப்படியும் அசைகின்றன. அங்கே சென்று வைத்தியம் பார்த்த பிறகும் இறந்து போகிறார். டொரான்டோவுக்கும் கலிபோர்னியாவுக்கும் மூன்று மணி நேர வித்தியாசம். அன்றைக்கு அவர் சாதித்ததெல்லாம் ஒரே நாளில் மூன்று மணிநேரம் அதிகமாக வாழ்ந்ததுதான் என்கிறார்.

ஆப்ரிக்காவில் இவர் தலைமையில் நடந்த பஞ்சாயத்து வேடிக்கையானது. ஆழ்ந்து யோசித்தால் அது நம் கற்பு பற்றிய கற்பிதங்களைத் தூள் தூள் ஆக்குகிறது.

முயலைப் பார்க்க வரும் பெண்ணை ஒரு ஆப்ரிக்கன் விரட்டி அடிக்கிறான். கொஞ்ச நாளில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. அவள் தாய்மை அடைந்ததற்கு விரட்டி அடித்த ஆப்ரிக்கன்தான் காரணம்.

எப்போது அவளை நீ கர்ப்பமாக்கினாய் என்று விசாரிக்கிறார் முத்துலிங்கம். அவனோ அவளை விரட்டும் போது அவள் சிக்கிக் கொண்ட போதெல்லாம் அப்படிச் செய்தேன் என்கிறான். போததற்கு அவளாகவே சில நேரம் சிக்கிக் கொண்டதாகவும் சொல்கிறான்.

எங்கே உறவு வைத்துக் கொண்டாய்? என்று கேட்கிறார். ஆனால் இது அவசியமற்ற கேள்வி என்பது அ.மு.வுக்குத் தெரிகிறது. அங்கேதான் நிற்கிறார் முத்துலிங்கம். அவருடைய ஆப்ரிக்க அனுபவங்கள் வேறெங்கும் படித்திருக்க முடியாதவை. ஏரோப்ளேனில் துண்டு போட்டு சீட்டு பிடிக்க முடியுமா? நடக்கிறது. பாஸ் போர்ட்டை ஒருத்தனிடம் கொடுத்துவிட்டு அதற்கான ரசீதாக ஏதோ தினசரியின் ஒரு துண்டு மூலையில் பெற்றுக் கொண்டு திண்டாடுவது, மலேரியா காய்ச்சல் என்று ஆப்ரிக்கா அனுபவங்கள் அனைத்தும் படிக்கத் திகட்டாதவை.

தஸ்தயேவஸ்கியின் சூதாடி நாவலில் வரும் கதாநாயகன் பற்றிய குறிப்பு, சினுவா ஆச்சுபியின் சிதைவுகள் நாவலில் வரும் கதாபாத்திரம் பற்றிய குறிப்பு என அனைத்து விதத்திலும் ஆச்சர்யம் தருகிறார். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்கா, கனடா என அவருடைய அனுபவப் பரப்பு விரிந்து கொண்டே போயிருப்பது அனைவருக்கும் கிடைக்க முடியாத சிறப்பம்சம்.

மனிதர்களையும் சம்பவங்களையும் ஒரு விடியோ ஆல்பம் போல மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிற இவர், தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம்.

நூல்: உண்மை கலந்த நாட்குறிப்புகள்
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

உயிர்மை வெளியீடு,
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராம புரம்,
சென்னை- 18.
விலை: 170

www.thamizhstudio.com இல் இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்.

செவ்வாய், ஜூன் 16, 2009

காந்தமுள்

மு.க. அழகிரி திருமணம்!





பெரியார் திடலுக்குள் முதல் முறையாக நான் சென்றது என்னுடைய ஏழாவது வயதில். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது. 72}ஆம் ஆண்டு. மிகச் சரியாக தேதியோடு சொல்ல வேண்டுமானால் மு.க. அழகிரியின் திருமணநாளில். அங்குதான் அவருக்குத் திருமணம் நடந்தது. முகப்பிலேயே வரவேற்க நின்றிருந்தார் கலைஞர். பெரிய கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அவருக்குப் பக்கத்தில் காவலுக்கு ஒரு போலீஸ்காரர் நின்றிருந்ததாக ஞாபகம்.

என் தாத்தாவோடு இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்லும்போது பெரியவர்களைப் பார்க்கும்போது காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருந்ததால் அவரைப் பார்த்ததும் அப்பாவின் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு அவர் காலை நோக்கி ஓடினேன். கலைஞர் என்னைத் தடுத்தது ஞாபகமிருக்கிறது. அதற்குள் அப்பா ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டார். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் தமிழ்நாடு மின்வாரிய செயலக சங்கத்தின் 5-ஆம் ஆண்டுவிழாவை அதன் தலைவராக இருந்த என் தந்தை க.பாலகிருஷ்ணன், அன்றைய முதல்வரான கலைஞரின் தலைமையில் நடத்தியிருந்தார். இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

அன்றைய விழா என் வாழ்வில் மறக்க முடியாததாக பின்னாளில் மாறியது. நாங்கள் அரங்கத்தின் ஓரத்தில் ஓர் இருக்கையில் இருந்தோம். வந்த பிரபலங்கள் எல்லோரும் எங்களை ஒட்டியே கடந்து போயினர். பெரியார் நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். பாபு ஜெகஜீவன்ராம், காமராஜர் போன்றவர்கள் என்னைக் கடந்து போன போது மிக அருகில் அவர்களைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அப்பாவுக்குப் பக்கத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர் வருவாரா என்று கேட்டுக் கொண்டிருந்தார். "கட்சியிலிருந்து பிரிஞ்சு போனா என்ன, கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவாரு'' என்று என் தந்தை அவருக்கு மட்டுமன்றி தனக்காகவும் ஆறுதலாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பிரபலம் உள்ளே நுழையும்போதும் மக்கள் பின்னால் திரும்பி ஆரவாரக்குரல் எழுப்பினர். எம்.ஜி.ஆர்.தான் வந்துவிட்டதாக ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் அங்கு மேடையில் இருந்தவர்கள் எல்லோரையும்விட எம்.ஜி.ஆர்தான் எனக்கும் முக்கியமானவராக இருந்தார்.



சிறை வாழ்க்கைக்குப் பிறகு எம்.ஆர்.ராதா அந்தத் திருமணத்துக்கு வந்தார். "ராதா வந்துட்டாரா... போச்சு. அப்ப எம்.ஜி.ஆர். வரமாட்டாரு'' என்று ஒருவர் குண்டைத் தூக்கிப் போட்டார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுப் பிரிந்திருந்தாலும் உதிர்ந்த இலையின் தழும்பு ஆறாத நிலைமை அது என இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோரும் வாழ்த்திப் பேச ஆரம்பித்தனர். இனிமேல் எம்.ஜி.ஆர் வரமாட்டார் என்று சமாதானமாகிவிட்டனர். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆர். வருவார் என்றுதான் என்னை அழைத்து வந்திருந்தார் என் தந்தை. பெரியவர்களைப் போல என்னால் சட்டென மாறிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக ரிக்ஷாக்காரன் மற்றும் நல்லநேரம் ஆகிய எம்.ஜி.ஆரின் படங்களை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் முறையே பாலாஜி, மேகலா திரையரங்குகளில் பார்த்ததோடு சரி. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துச் சென்றதில்லை. என்னையும் பார்க்க அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர். மீது கடும்கோபம் இருந்தது என் தந்தைக்கு. எம்.ஆர்.ராதாவையும் திட்டினார், சரியாகச் சுடவில்லை என்பதற்காக. பிஜு பட்நாயக் எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியபோது என் தந்தைக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மிக அற்ப காரணத்துக்காக அது நிறைவேறாமல் போய்விட்டதும் அவர் உடைந்து போய்விட்டார். கலைஞரையும் எம்ஜிஆரையும் நேசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்த மிகப் பெரிய மனப் போராட்டத்தை நான் கண்கூடாகப் பார்த்தேன். எந்த நேரத்திலும் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு ‘மலைக்கள்ளனை'யோ, ‘அரசிளங்குமரி'யையோ, ‘புதுமைப்பித்தனை‘யோ இணைந்து வழங்குவார்கள் என்று தவித்தனர். பலருக்கு எம்.ஜி.ஆர் இறந்த பின்னர்தான் இனி அது நடக்காது என்ற உண்மை உறைத்தது என்பது எனக்குத் தெரியும். அத்தகையவர்களின் பாசத்தை எம்.ஜி.ஆரும் கலைஞரும் கண்டு கொள்ளாதது ஏன் என்ற துயரம் தோய்ந்த கேள்வி அந்தப் பாசக்காரர்களின் பிள்ளைகளாக இருந்த என் போன்ற சிறுவர்களின் புரிந்து கொள்ள முடியாத பிரச்சினையாக இருந்தது.



அழகிரியின் திருமணத்துக்கு வந்தவர்களுக்குச் சாப்பாடு போடவில்லை. கலைஞர் இறுதியாக மைக்கைப் பிடித்து "கையில் கொண்டு வந்திருக்கும் மொய்ப் பணத்தை தமிழகத்தின் எந்த ஓட்டலிலும் செலுத்தலாம். அங்கேயே சாப்பிடலாம்'' என்று கூறி அரங்கத்தில் சிரிப்பொலியை எழுப்பினார். அப்பா என்னை எழும்பூரில் இம்பாலா ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். அழகிரிக்கான மொய்ப் பணத்தை நாங்கள் அங்குதான் செலுத்தினோம். எம்.ஜி.ஆர் வராத வருத்தம் பாசந்தி சாப்பிடும் போது மறைந்தது.

சமீபத்தில் அழகிரி, தமக்கு வருத்தமாக இருக்கும் சமயங்களில் எம்.ஜி.ஆர். பாடல்களைக் கேட்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எனக்கு அழகிரியை நினைக்கும்போது எம்.ஜி.ஆரைப் பார்க்க முடியாத வருத்தம் வந்து போகும்.

திங்கள், ஜூன் 15, 2009

காந்தமுள்

ஹலோ ‘பைக்' டெஸ்ட்டிங்!




புதுக்கருக்குக் குறையாத பாத்திரம் போலவும் அப்போதுதான் நெய்து மடித்த துணியைப் போலவும் இருந்தது என் புதிய பைக். முழுசாக ஒரு மாசம்தான் ஆகியிருந்தது அதை வாங்கி. அத்தனை நாளாக ஸ்கூட்டரில் திரிந்து கொண்டிருந்தவனுக்கு பைக்கில் இருந்த சொகுசு திளைத்துத் தீர முடியாத சந்தோஷமாக இருந்தது.

ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். எழும்பூர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் காவல்துறை இணை இயக்குநர் அலுவலகம் அருகே இருந்தது எங்கள் பத்திரிகை அலுவலகம். நீதிமன்றமும் காவல்துறையும் பத்திரிகையும் சூழ இருந்த இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் புதிய பைக், நிமிட நேரத்தில் திருடு போய்விட்டது. அலுவலகம் இருந்த மூன்றாவது மாடிக்குப் போய்விட்டு திரும்ப வருவதற்குள் காணவில்லை. முதலில் நாம் இன்று பஸ்ஸில் வந்தோமா என்று நினைத்தேன். வண்டியை வேறு எங்கோ நிறுத்தினோமா, பக்கத்தில் பார்க் செய்திருந்த பைக் காரர் வண்டியை எடுக்க வசதி இல்லாமல் நம் பைக்கை வேறு இடத்தில் இழுத்துப் போய் நிறுத்திவிட்டாரா என்று நல்லவிதமாகத்தான் நினைத்தேன். என் அனைத்து நல்லவிதமான யோசனைகளையும் நிராகரித்துவிட்டு பைக் காணாமல் போயிருந்தது.

பிரக்ஞையே இல்லாமல் மீண்டும் மாடிக்கு ஓடினேன். யாரிடம் இதைச் சொல்வதென்று தெரியவில்லை. அங்கே எம்.ஆர்.ராதாவுக்கு நினைவு நாளோ, பிறந்தநாளோ வரப்போவதை ஒட்டி ஆவேசமான ஒரு கட்டுரை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கே புகுந்து என் பைக்கைக் காணவில்லை என்று சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. என் முக லட்சணத்தைப் பார்த்து அவர்களாகவே ""என்னாச்சு உங்களுக்கு'' என்றனர். இதற்காகவே காத்திருந்தது போல் பதட்டத்துடன் விஷயத்தைச் சொன்னேன். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்கச் சொன்னார்கள். நான் அதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதில்லை. தலைகீழாகக் கட்டி வைத்து அடிக்கும் இடம் என்பதாக எனக்கு போலீஸைப் பற்றிப் பதிந்திருந்தது. துணைக்கு ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குப் போனேன்.



ஆண்ட்ரூஸ் என்று நினைக்கிறேன். அவர்தான் வரவேற்றுப் பேசினார். அவர் ஏட்டா, எஸ்.ஐ.யா என்றெல்லாம் தெரிந்து கொள்வதற்கும் பயமாக இருந்தது. பத்திரிகை என்பதால் உட்கார வைத்து பொறுமையாகக் கேட்டார். யாரையாவது கட்டி வைத்து அடிக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன். டீ வந்தது. எனக்கு ஒரு டம்ளரை நீட்டினார். பயத்தில் வாங்கிக் கொண்டேன். அடுத்து "டீ குடிக்கிறியாடா?'' என்றார் ஏகவசனமாய். மறுபடியும் பயந்து போய் டீயை டேபிளில் வைத்துவிட்டேன். ""குடிக்கிறன் சார்'' என்று என் காலுக்குக் கீழே டேபிளுக்கு அடியில் இருந்து சன்னமாய் ஒரு குரல் வந்தது. அலறி எழுந்துவிட்டேன். ஒருவன் என் காலுக்கு அருகில் டேபிள் காலோடு விலங்கிடப்பட்டு வெறும் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான். ஆண்ட்ரூஸ் "அவன் கிடக்கிறான் நீங்க உக்காருங்க சார்'' என்றார்.

எனக்குக் கீழே, மேலே என எல்லா பக்கமும் பயமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரி வாங்க என்று என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அது புதுப்பேட்டைக்குள் அவர் சொல்கிற சந்துகள் வழியாக நுழைந்து அவர் நிறுத்தச் சொன்ன வீட்டின் முன்னால் நின்றது. வெளியே இருந்தபடியே "டேய் ரியாஸ்'' என்றார்.

ரியாஸ் என்பவர் வெளியே வந்தார். "டேய் இன்னிக்கு பைக் எதுவும் எடுத்தியா? சார்

பத்திரிகைல இருக்காரு. பைக் காணமாம்..''

"எங்க ஸார்?'' என்றார் ரியாஸ்.

"கமாண்டர் இன் சீஃப் ரோட்ல''

"ஐயோ.. அங்க நான் எடுக்கல ஸார்''

வேறு எங்கு, யார் வண்டியை எடுத்தாய் என்பதை போலீஸ்காரர் விசாரிக்கவில்லை. "உண்மையைச் சொல்லுடா டேய்'' போலீஸ்காரர் விசாரிக்கிறாரா, கெஞ்சுகிறாரா என்று புரியாத தொனி.

"சொல்றனே ஸார்..'' என்று அலுத்துக் கொண்டான். இப்படி நம்பிக்கை இல்லாமல் துருவித் துருவிக் கேட்பது அவனுக்கு வருத்தமாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் திருடன் போலீஸ் விளையாட்டுதான் ஞாபகம் வந்தது.

"பொய் சொல்ல மாட்டான் ஸார்.. '' என்றார் போலீஸ் என்னைப் பார்த்து.

விசாரணை முடிந்துவிட்டது. இப்போது மூவருமாக சேர்ந்து "பைக் எங்கே போயிருக்கும்" என்று வருந்தினோம். மூன்று வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மூவர் ஒரு விஷயத்துக்காக ஒன்றாக வருந்தியது அந்த நேரத்தில் அது மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது.

கிளம்பும் போது "இன்னா பைக் ஸார்'' என்றார் ரியாஸ்.

டி.வி.எஸ். மேக்ஸ் 100 ஆர் என்ற என் வண்டியின் தயாரிப்பின் பெயரைச் சொன்னேன்.

"ஸார் அது இன்னேரம் கடல்ல இருக்கும் ஸார்...''

"கடல்லயா?''

"போட்ல மாட்டினா ஈரமா இருந்தாலும் ஓடுறது டி.வி.எஸ். ஒண்ணுதான்... அதுக்குத்தான் ஸார் இப்ப கிராக்கி. கிடைக்கவே கிடைக்காது ஸார்'' என்று தீர்மானமாகச் சொன்னான்.

நாளைக்கே திருடப் போவது போல நானும் ஆண்ட்ரூஸும் "அப்படியா?'' என்று கேட்டுக் கொண்டோம்.

செவ்வாய், ஜூன் 09, 2009

மெஹர்

"நீங்கள் மதராஸியா?' என்று அவள் கேட்டபோது, "இல்லை நான் தமிழ்நாடு' என்று சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றியது. இப்படியொரு விளக்கம் கொடுத்து அவளுடைய கேள்வியை மறுத்துவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சலீமுடன் காஷ்மீர் வருவது உறுதியானதும் இங்கே எனக்கான ஒரு காதலி பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்று என்னால் எப்படி யோசித்திருக்க முடியும்? ஒரு தேசத்தின் இரு எல்லையில் பிறந்தவர்களுக்கு ஏற்படப் போகும் பிணைப்பை நினைத்தபோதே சிலிர்த்தது. ஒருவாரம் கல்லூரி விடுமுறை என்ற காரணத்தால்தான் வந்தேன். இங்கு வருவதற்கு வேறு ஒரு காரணமும் எனக்கு இருக்கவில்லை. சலீமுக்கு மிகப்பெரிய பூ வனம் சொந்தமாக இருந்தது. அதில்தான் நான் மெஹரைச் சந்தித்தேன். கை நிறைய பூக்களோடு அவள் அந்தப் பூவனத்தில் இருந்தாள். சலீம் என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். செக்கச் சிவந்த அவளுடைய முகத்தில் கரிய இமைகளோடு அந்த விழிகளைப் பார்த்தேன். வியப்பும் வினாக்களும் பொதிந்து கிடந்த அபூர்வமான கண்கள்.
பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் மிகச் சிறந்த யோசனை ஒன்று அப்போது தோன்றியது. நாம் இங்கேயே தங்கிவிடலாமா, அல்லது அவளை அழைத்துச் சென்றுவிடலாமா?.. படபடவென அவள் இமைச் சிறகு அடித்துக் கொண்ட அந்த நொடியில் மிக இயல்பாக ஏற்பட்ட யோசனை அது.
காஷ்மீரில் சம்பிரதாயமான சில நடவடிக்கைகளை செய்ய வேண்டியிருந்தது. அங்கிருக்கிற தால் ஏரி, ரோஜா தோட்டம், அரசு வனப் பூங்கா, படகு சவாரி, ஹூக்கா என.. ஆனால் எனக்கு மெஹர் இருக்கும் இடத்தைவிட்டு அதிகதூரம் விலகியிருக்கும் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. சலீம் காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் எனக்குச் சாதாரணமாக இருந்தன. பனித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், ஸ்வெட்டர் போட்ட மனிதர்கள், ஆவி பறக்கும் ஆனால் சூடாக இல்லாத டீ... எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தது. "மோதிலால் நேரு படித்த பள்ளி இதுதான்' என்றான்.
எல்லோரும் எங்காவது படிக்கத்தானே செய்கிறார்கள்? நானும் சலீமும் இப்போது தில்லிக்கு வந்து படிப்பதுமாதிரி. "இது எந்தப் பிரபலமும் படிக்காத பள்ளிக்கூடம்' என ஒன்றைக் காட்டினாலாவது ஆச்சர்யப்பட்டிருப்பேன். புத்தி பேதலித்துதான் போய்விட்டது எனக்கு. அவன் மெஹர் படித்த பள்ளியைக் காட்டியபோது அதை ஆச்சர்யமாகவும் தவிப்புடனும் பார்க்கத் தவறவில்லை. "தினமும் இந்தப் பள்ளிக்குத்தான் போவாளா?' என்ற அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு சலீம் பார்த்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வெட்கத்தால் திக்கிப் போனேன். மேற்கொண்டு இது போன்ற உளறல்களைத் தவிர்க்க நான் அங்கிருந்த அத்தனை நாளும் படாத பாடுபட்டேன்.
எனக்கு ஏற்பட்ட மாதிரி மெஹருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவளை வசீகரிக்கக் கூடிய சிறந்த அம்சம் எதுவும் என் தோற்றத்தில் இல்லை. அவளுடைய அழகின் முன்னால் எனக்கு இவ்வளவு நாளாய் இருப்பதாக நினைத்திருந்த திறமையும்கூட துச்சமாக இருந்தது. சலீம் என்னை அறிவாளியாகப் போற்றிப் பழகி வருகிறான். அதற்காக நான் அவள் தங்கைக்கு அறிவாளியாகத் தோன்ற வேண்டுமா என்ன? அவள் மீது காதல் கொள்வதற்கு என்னிடம் என்னதான் தகுதி இருக்கிறது என்று தத்தளித்தேன். அவளோ தேவதையாகத் தோன்றினாள். கவிஞர்கள் பொய்யாக வர்ணிக்கவில்லை என்பதைச் சத்தியமாக இதோ என் இருபத்தி இரண்டாவது வயதில்தான் முதல் முறையாக ஏற்றுக் கொள்கிறேன். அவளைச் சுற்றி எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. பெரும்பாலும் எனக்கு எதிர்பட்ட நேரங்களில் அவள் கருப்பு அங்கி அணிந்திருந்ததால் நான் அவள் விழிகளை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் துடித்தேன். ஆனால் ஒரு வினாடியில் பத்தில் ஒரு பகுதி நேரம்கூட அவள் விழியை நான் பார்க்க முடிந்ததில்லை.
பூர்வீகமான பழைய வீடு. பூந்தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்தது. மெஹர், அவளுடைய அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் பின் கட்டில் இருந்தனர். சலீமின் அறை முகப்பிலேயே இருந்தது. அதிலேதான் நானும் இருந்தேன். வந்த மூன்றாம் நாள்தான் அவள் "நீங்கள் மதராஸியா?' என்று கேட்டது. ஆனால் நான் அந்த வாய்ப்பை அப்படியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? ஏதாவது முக்கியமான ஒரு சொல்லை அந்த நேரத்தில் நான் பதிலாகத் தந்திருக்க வேண்டாமா? எனக்கு அறிவு அவ்வளவுதான். காதலின் தெய்வீகத்தைச் சுருக்கமாகச் சுண்டக் காய்ச்சிய "ஒரு சொல் கவிதை' ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். தமிழ்நாடு என்று திருத்துவதுதான் அத்தனை முக்கியமா? அவளுக்குத் தமிழ்நாடு எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூட அத்தனை உறுதியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. சரி என்று தலையசைத்து... தலையசைத்தாள் என்று சொல்ல முடியாது.
சரி என்றது போல ஏதோ ஒரு எதிர்வினை அவளிடம் வெளிப்பட்டது. "பேச்சுக்குக் கேட்டேன்... இவ்வளவு உறுதியாக எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்ற எள்ளல் பாவனை போலவும் இருந்தது. அடுத்த நாள் அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் காலடி ஓசையை நான் சுலபமாகக் கணிக்கக் கூடியவனாக மாறியிருந்தேன். அவளது குரலும்கூட எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. மொழி புரியவில்லை. ஆனால் அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். அது இசையின் ஒரு வடிவம்.
நீங்கள் மதராஸியா என்பதை அவள் எனக்காக இன்னொருதரம் சொல்வதாக இருந்தால் அதை ஒலி நாடாவில் பதிவு செய்து வைத்துக் கொள்ளச் சித்தமாக இருந்தேன். அல்லது அது போல ஏதாவது வேறு ஒரு வார்த்தை என்னிடம் பேச வேண்டியிருந்தால் அதை...
ஐந்தாவது நாள் அவளைத் தோட்டத்தில் பார்த்தேன். பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். பூக்கள் அவளால் பறிக்கப்படுவதை எதிர்பார்த்துக் கிடப்பதை நான் பார்த்தேன். அந்த விரல்கள் பூக்கள் பறிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவானவை போல இருந்தன. மிக நளினமான, மென்மையான விரல்கள். அது அசைவது வழக்கமாக எல்லோரது விரல்களின் அசைவு போல இல்லை. பூக்களுக்கும் அந்த விரல்களுக்குமிடையே சிறிய உடன்பாடு இருப்பதாகத் தோன்றியது. இல்லையென்றால் அத்தனை மென்மையான விரல்களால் அந்தப் பூக்களைப் பறித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். பூக்கள் தானாகவே தங்களை அவளிடம் வழங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய விரல்களை நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிற வாய்ப்பு கிடைத்தது. சலீம் கடைக்குப் போயிருக்கிறான் இப்போது வந்துவிடுவான் என்ற தகவலை இந்தியில் சொன்னபடி அவனுடைய அம்மா தேநீர் கோப்பையை என்னிடம் கொடுத்தார். ""உன் அம்மா, அப்பால்லாம் மதராஸ்லதான் இருக்காங்களா?'' }இதுவும் இந்தியில். மற்றபடி அவர்கள் வீட்டில் எப்போதும் உருது பேசினார்கள். சாப்பிடும்போதும் அவர்கள் வரை உருதிலும் சப்பாத்தி வேண்டுமா என்பது போன்றவற்றை என்னிடம் இந்தியிலும் பேசினார்கள்.
ஆறாவது நாள்...
அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று பார்த்து தூர்தர்ஷனின் மதிய ஒளிபரப்பாக ஒரு பாடாவதி தமிழ்ப் படத்தைப் போட்டிருந்தார்கள். ஆனாலும் அப்போது அதை நான் இப்போது போல பாடாவதி படம் என்று நினைக்கவில்லை. 80 களில் அதை வரம் போல பார்த்தேன். அசாமி படம் போட்டாலும் அதை நகராமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.
மெஹர் வந்து அண்ணன் இல்லையா என்று கேட்டுவிட்டு அதற்கான பதிலை அறையில் தேடித் தெரிந்து கொண்டு புறப்பட்டாள். அண்ணன் வந்ததும் சொல்கிறேன் என்ன விஷயம் என்றேன்.
"இல்லை எழுதுவதற்கு பேனா வேண்டும், அதற்காகத்தான்'' என்றாள்.
அவளுடைய சிவந்த உதடுகள் அந்த வார்த்தைகளை எப்படித் தயாரிக்கின்றன என்று ஆழ்ந்து பார்த்தேன்.
"என்னிடம் கேட்டால் தரமாட்டேனா?'' என்று என் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொடுத்தேன்.
பெண்கள் நாணத்தால் கால் விரல்களால் தரையில் கோலமிடுவது பொது அம்சம் போலிருக்கிறது. அவள் பாதங்களில் மிளகாய்ப் பழச் சிவப்பில் மிளகாய் போலவே மருதாணி அலங்காரம். பேனாவை வாங்கிக் கொண்டு "ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றாள்.
என்னால் தகுந்த பொய்யைத் தயாரிக்க முடியவில்லை. உண்மையையும் சொல்ல முடியவில்லை. தலையிறங்கி நின்றேன். நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லையே... சாதாரணமாகத்தான் பார்த்தேன் என்று சொல்ல நினைத்தேன். அதைச் சொல்வதற்கு எனக்கு இந்தியில் புலமை போதாது என தயங்கினேன்.
காஷ்மீரில் இருந்து ஏழாம் நாள் நானும் சலீமும்தான் புறப்படுவதாக இருந்தோம். மதப் பிரச்சினை முற்றிக் கொண்டிருப்பதாகக் கூறி என்னை மட்டும் பாதுகாப்பாக டாக்ஸி பிடித்து அனுப்பி வைக்க முடிவெடுத்தான்.
தயாராக இருக்கச் சொல்லிவிட்டு டாக்ஸிக்கு ஓடினான். அவனுடைய அம்மா அந்த நேரத்திலும் குங்குமப் பூ, ஸ்வெட்டர், பாதாம் இருந்தால் வாங்கி வா என்றார்கள். சலீம் சற்று நேரம் நின்றான். "கடையெல்லாம் அடைத்துவிட்டார்கள்' என்ற தகவலைச் சொன்னான். "எங்காவது இருக்கிறதா பார்' என மெஹரும் "எதற்கு அதெல்லாம்?' என நானும் ஒரே நேரத்தில் சொன்னோம். எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.
மெஹர் என்னைவிட மூன்று வயதாவது இளையவளாக இருக்கக் கூடும். ஆனால் அவள் பார்வையில் என்னைப் பணிய வைத்துவிடும் மிடுக்கு இருந்தது. "மெஹர் சொல்கிறபடியே செய்' என்று சலீமை அழைத்துச் சொல்லிவிடுவேன் போல இருந்தது. நல்லவேளையாக அப்படி நான் சொல்வதற்குள் சலீம் அங்கிருந்து போய்விட்டான்.
நான் துணிகளை எல்லாம் சுருட்டி பைக்குள் சொருகிவிட்டு, தோட்டத்தில் போய் நின்றேன். காஷ்மீரையும் மெஹரையும் அப்படியே மனதுக்குள் பருகிவிடவேண்டும் என்று பரபரத்தது.
உடனே ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல இருந்தது. புகையோடு சேர்த்து நினைவுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் அரிய அனுபவம். பாக்கெட்டைத் துழாவிய போது சிகரெட் மட்டும் இருந்தது. தீப்பெட்டி? அடடா... சலீம் வருவதற்குள் சிகரெட் குடித்தால்தான் நான் மெஹரையும் காஷ்மீரையும் மனதுக்குள் பருக முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. ஐயோ நான் எங்கே போவேன்? சாலைக்கு மறுபுறம் ஓடி தீப்பெட்டி வாங்கிக் கொண்டு வந்து புகைக்கலாம் என்றாலும் கடைகளை அடைத்துவிட்டார்கள் என்கிறார்களே? சலீம் வந்துவடுவானோ என்ற பயமும் சூழ்ந்தது. பதட்டம்... என் நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம். ஆனால் சிகரெட்டின் மூலம் அது சாத்தியமாகும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவறவிடக் கூடாதல்லவா?
யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி அப்போது என் வாழ்வில் நடந்தது. வாயில் சிகரெட்டுடன் நான் பாக்கெட்டுகளைத் துழாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளே வந்தாள். அவள் கையில் தீப்பெட்டி இருந்தது.
"ஒரு நாளைக்கு எத்தனை?'' என்றாள் கிண்டலாக. நியாயமான உண்மையான பதிலைச் சொல்வதற்காக நான் மனதில் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் பதில் சொல்வதற்குள் அவள் "உங்களுக்குத் தங்கை இருக்கிறாளா?'' என்றாள். தலையசைத்தேன். "எத்தனை பேர்?'' என்றாள். "மறுபடியும் எண்ண ஆரம்பித்துவிடாதீர்கள்'' என்று சிரித்துக் கொண்டே ஓடினாள்.
வாழ்நாளெல்லாம் நான் காதலித்து மகிழ எனக்கான முகம் அது என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் கேமிரா இல்லாமலேயே அவள் முகத்தை என் கண்களால் விழுங்கிக் கொண்டேன். டேப் ரிக்கார்டர் இல்லாமலேயே அவளுடைய குரலை என் காதுகளால் பதிவு செய்து கொண்டேன். கண்களும் காதுகளும் எவ்வளவு முக்கியமானவை என்பது அந்தக் கணத்தில் எனக்கு வலுவாகப் புரிந்தது. என்னுடைய கண்களும் காதுகளும் தவம் செய்தவை என்று தோன்றியது. முக்கால் நிமிட நேரம் நாங்கள் இருவரும் பேசியிருப்போம். ஆனால் அது பொக்கிஷ நிமிடமல்லவா? யோசித்துப் பாருங்கள்.. நமக்குச் சற்றும் தேவையற்ற பேச்சை நாம் நாளெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிரில் இருப்பவர் பேசுகிறாரே என்பதற்காக நாமும் பேசுகிற பேச்சா இது? ஒரு நாளில் நாம் ஆத்ம சுத்தியோடு எத்தனை வார்த்தை பேசுகிறோம்? தினம் ஒரு வார்த்தையாவது தேறுமா? எல்லாமே யாரையோ வசை பாடுவதற்காக, தேவைக்கு அதிகமாகப் புகழ்வதற்காக, ஒருவர் பேச்சை ஒருவர் விஞ்சி நிற்பதற்காக, கூழைக் கும்பிடு போடுவதற்காக... எல்லாமே குப்பை வார்த்தைகள்.
மெஹர் என்னிடம் பேசியவை இரண்டு ஆத்மாக்களின் கோடி வாக்கியங்களின் சுருக்கம். அதை வேறு வார்த்தைகளால் விவரித்து இட்டு நிரப்பவும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் கோடி வாக்கியங்களை விஸ்தரிப்பது மொழிகள் சொல்லும் சொற்களால் சாத்தியமில்லை என்று தோன்றியது. அது மனதின் மொழி. அதாவது சம்பந்தபட்ட எங்கள் இருவரின் மனதின் மொழி. ஒருவேளை மெஹரால்கூட இது முடியுமா என்று தெரியவில்லை. என் ஒருவனுக்கான மொழி. அதே போல அந்த முகம். அது என் வாழ்நாளுக்கெல்லாம் போதுமானதாக இருந்தது.
டாக்ஸி புறப்படும்போது சலீமின் அப்பாவுக்குப் பின்னால் அவளுடைய முகம் வழியனுப்பியது. அதில் இன்னும் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ வார்த்தைகள் ஏக்கத்தோடு நின்றன.

சனி, ஜூன் 06, 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் இன்று காலை நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்குச் சென்றுவந்தேன். இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்தபோது தினமணி அலுவலகத்தில் என்னைச் சந்தித்துவிட்டுப் போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவசர அவசரமாக இரண்டு முறை சந்தித்துக் கொண்டது நிலையாமையை வலிக்க வலிக்க உணரவைக்கிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.

வெள்ளி, ஜூன் 05, 2009

தகவல்

வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது. இதுவும்கூட வழக்கமான ஒன்றுதான். இது எல்லாமே முருகனுக்கான வழக்கம் பற்றியது. அவன் அலுவலகத்தில் கெடுபிடி அதிகம். ஒரு ஜெர்மன் நிறுவனத்துடன் முருகன் வேலை பார்க்கும் அலுவலகம் ஒப்பந்தத்தில் இருந்தது. அதற்காக அதனுடைய வேலை நேரம் முதற் கொண்டு எல்லாமே சராசரி இந்த அலுவல் நேரங்களுக்கு மாறுபட்டிருந்தது. காலை ஏழு இருபத்தெட்டுக்கு அவனுக்கான அலுவல் நேரம் தொடங்கும். நான்கு முப்பத்திரண்டுக்கு வெளியே அனுப்புவார்கள். ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்று பணியாளர்களுக்குச் சுட்டிக் காட்டத்தான் இந்த ஏற்பாடு.

"உச்சி வெயில்ல எங்கடா கிளம்பிட்டே?', "விளக்கு வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்'.. என நேரத்தைக் குத்து மதிப்பாகச் சொல்கிற குடும்பச் சுழலில் அவன் இந்த ஏழு இருபத்தெட்டு விஷயத்தை காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் என்றுதான் சொல்ல முடிந்தது. அவர்களும் அதை எட்டு மணிக்குள் என்று புரிந்து வைத்துக் கொண்டு சாப்பாடு தயார் செய்வதையோ, முருகனை தயார் செய்வதையோ செய்து வந்தனர். வீட்டுக்கு நிலைமையை விளக்குவது சிரமம் என்று முருகனுக்குத் தெரியும். அதனால் ஆபிஸில் புரிந்து கொள்வார்கள் என்று அவனாக எதிர்பார்த்தான். அதாவது அவன் ஐந்து- பத்து நிமிடங்கள் தாமதமாக வருவது காலப் போக்கில் அவர்களுக்குக் குற்றமாகத் தெரியாமல் போய் பரிதாபத்துக்குரியவனாக எண்ணுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவனைப் பொருட்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஒரு மின்னணு எந்திரத்திடம் இருந்தது. அவனுடைய கட்டைவிரல் ரேகையின் மூலம் அவனுடைய வருகைப் பதிவேற்றம் நிகழ்த்தப்பட்டது. விநாடி சுத்தமாக இருந்தது அந்தப் பதிவு. நான்கு தாமதங்களுக்கு ஒரு முறை அவனுக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்தது அது. இப்படியாக அவனுக்கு மாதத்துக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டபோது அம்மட்டில் பிரச்சினைகள் ஓய்ந்தது என்று சந்தோஷம்தான்பட்டான். வீட்டில் சம்பளமே அவ்வளவுதான் என்று சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பொறுத்தவரை முருகனுக்கு அவ்வளவுதான் சம்பளம் தரமுடியும் என்று நம்பினார்கள். அலுவலகத்திலும்தான்.

அன்றும் முருகன் தன் இடது கட்டை விரலைப் பதித்தபோது இரண்டு நிமிடம் தாமதம்தான். நாளையில் இருந்து ஆறே கால் மணிக்கு வரும் பேருந்தைப் பிடித்தால்தான் சரி பட்டு வரும் என்பதையும் வழக்கம்போல நினைத்துக் கொண்டான்.

மூன்றாவது மாடியில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட டிபன் பாக்ஸ் ஸ்டேண்டில் சாப்பாட்டை ஒழுக ஒழுக வைத்துவிட்டு, சில்லென்று தண்ணீர் பிடித்துக் குடித்தான். அவனுக்கான பிரத்யேக ஆடையை எடுத்து அணிந்து கொண்டான். மஞ்சள் நிற பருத்தித் துணியில் எல்லார் மேசை, நாற்காலி, கணினிகளைத் துடைக்க வேண்டும். எட்டு மணிக்கு இவன் துடைத்து வைத்தவற்றை அழுக்காக்குபவர்கள் வருவார்கள். அதனால் மேஜையைத் துடைக்கும்போது அதற்கான நாற்காலியில் அமர்ந்து கொள்வது, அப்படியே கிர்ர் என ஒரு சுற்று சுற்றுவது எல்லாம் செய்வான். அறையில் கேமிரா பொருத்தியிருப்பதைச் சொன்ன பிறகு அப்படி செய்வதில்லை. கேமிரா எதிரில் வரும்போது சட்டென அடக்கமான- ஒழுக்கமான- பரிதாபமான முகத்தை எதேச்சையாக காட்டுவதுபோல காட்டுவான். யாரோ உயர் அதிகாரியின் பார்வையில் பட்டு தன் அடக்கத்துக்கும் பரிதாபகரமான தோற்றத்துக்கும் இரக்கம் சுரந்து அது சம்பள உயர்வாக மாறும் என்பது அவன் ஐந்தாண்டு கனவு. தன் விசுவாசம் கேட்பாரற்றுக் கிடப்பதாக அவனுக்கு வருத்தம் இருந்தது. மேஜையைத் துடைக்கும் போது அதிலிருந்த துண்டுக் காகிதங்களைத் தன் பிரத்யேக ஆடையில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பேப்பர்களைப் பச்சைக் கூடையிலும் பிளாஸ்டிக் உறைகளை மஞ்சள் கூடையிலும் போட வேண்டும்.

அடுத்து என்ன செய்வது என்று கிழக்கு பக்க ஜன்னலோரத்தில் நின்று யோசித்தான். அங்குதான் பெரிய மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. கொஞ்ச நேரம் நின்றாலும் தெரியாது. ஜன்னலை ஒட்டிய தெருவில் ஒரு பையன் இரண்டு கையையும் மேலே தூக்கியபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். கைகளை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஓட்டுவதைவிட சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்து ஓட்டுவதுதான் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் கஷ்டப்பட்டு அப்படி செய்வது யாருக்கும் பலனின்றி போவதோடு மற்றவர்களுக்கு உபத்திரவமாகவும் போய்விடும் போலவும் இருந்தது. அதாவது அவன் யார் மீதாவது இடித்துவிடக் கூடும். போன வாரத்தில் ஒருநாள் அந்தப் பையன் இதே போல வந்தான். அவனைத் திடுக்கிட வைத்து அனுப்பினான் முருகன். திடுக்கிட வைத்த பின்பு அந்தப் பையன் சைக்கிளை ஒழுங்காக ஓட்டிச் செல்ல ஆரமம்பித்தான். அந்தப் பையன் தெருமுனை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தான். முருகன் போன வாரம் போலவே சட்டென அவனைசலனப்படுத்த ஆசைப்பட்டான். பாக்கெட்டில் துழாவிய கையில் கிடைத்த பேப்பரைச் சுருட்டி பையனை நோக்கி எறிந்தான். அது பையன் தலைமீது விழுந்ததா என்று எட்டிப் பார்த்தான். பையன் காகிதம் வந்து விழுந்த திசையை திடுக்கிடலோடு பார்த்துவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான். முருகனுக்கு தன் பொருட்டு உலகில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மகிழ்ச்சி பொங்கியது. அப்படி இருந்தவனை இப்படி ஆக்கிய சந்தோஷம். கீழே வந்து அந்தந்த அறைக்கான டேபிள் டாப் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு போய் வைக்கத் தொடங்கினான்.

நாள் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருந்தது.

பதினோரு மணி வாக்கில் அவனுடைய ஹவுஸ் கீப்பிங் துறை கண்காணிப்பாளர் அழைத்தார். இடுக்கான ஒரு அறை. வெளிச்சம் குறைவு. அங்கிருந்த பீரோவுக்கு சில ஃபைல்களும் ஏராளமான டாய்லட் கிளினிங் அமில பாட்டில்களும் வாசனை தரும் பொருள்களும் பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறைமுழுதும் அவற்றின் கலவையான மணம் சூழ்ந்திருந்தது. பெரும்பாலும் அந்த அறையிலேயே இருப்பதால் அவர் மீதும் அந்த வாடை பரவியிருந்தது.

"எத்தனை மணிக்கு வந்தாய்?'' என்றார்.

முருகன் தலையைச் சொறிந்தான். சரியான நேரத்துக்கு வரவில்லை என்பதை அப்படித் தெரியப்படுத்தினான். கண்காணிப்பாளர், கடுமையான முகத்தோடு இருந்தார்.

"வந்ததும் என்ன செய்தாய்?''

"எல்லா அறை மேஜை, நாற்காலியையும் துடைத்தேன்''

"அப்புறம்?''

"தண்ணீர் குடுவைகளை...''

"அதற்கப்புறம்?''

எந்த மேஜையாவது சுத்தமாக இல்லை என்று புகார் வந்திருக்கக் கூடுமோ? கணினி விசைப்பலகையின் கீழே எங்காவது தூசு தப்பித்திருந்திருக்கக் கூடும்.

"உங்கள் வீடு எங்கிருக்கிறது?''

சொன்னான். முழு முகவரியையும் எழுதிக் கொண்டார்.

"போன் நம்பர் இருக்கிறதா?''

"இல்லை. தம்பியிடம் இன்னொரு செல் போன் இருக்கிறது''

அந்த நம்பரை முகவரிக்குக் கீழே குறித்துக் கொண்டார்.

"எல்லாத்தையும் சுத்தமாகத்தான் துடைத்தேன்'' முருகன் சொன்னதைக் கவனித்தில் கொள்ளாது, ""நீ வேலை எதுவும் செய்ய வேண்டாம். ஓய்வறையில் இரு'' என்ற கண்காணிப்பாளரின் குரலில் அவனுடைய ஓய்வு முக்கியமானதாகத் தெரியவில்லை.

டாய்லட்டுகளுக்கு பெனாயில் உற்ற வேண்டிய நேரத்தில் எப்படி ஓய்வெடுப்பது என்று முருகனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது.

ஓய்வறை என்பது பணியாளர்கள் திடீர் சுகவீனம் அடைந்தால் சற்றே படுத்திருக்க சில மரப் பலகைகள் அடிக்கப்பட்ட கூடம். அங்கே கிடந்த பழைய தினத்தாளை மரப் பலகை மீது விரித்துப் படுத்தான். ஒரே ஓரு மின் விசிறி தலைக்கு மேல் இருப்பதை வெகு நேரம் கழித்தே கவனித்தான். அதைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்த கணத்தில் ஒரு பணியாள் வந்து மனிதவள அதிகாரி அழைப்பதாகச் சொன்னான். அவர் இருப்பது இரண்டாவது மாடி. அந்த அறையைத்தான் தாம் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்று தீர்மானித்து போனதும் மன்னிப்பு கேட்கத் தயாராக அவர் அறைக்குள் நுழைந்தான்.

"காலையில் வந்ததும் என்ன செய்தாய்?'

"இனிமே சுத்தமா துடைச்சுவிட்டிர்றேங்க''

"கேட்டதுக்கு பதில் சொல்''

கண்காணிப்பாளரிடம் சொன்ன தகவலை மறுபடி சொன்னான். கண்காணிப்பாளர் போலவே இவரும் திரும்பத் திரும்பக் கேட்டார். அவர்கள் தாம் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதைத் தெளிவுபடுத்தினால் அந்தச் சரியான வாக்கியத்தைச் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்பதுதான் முருகனின் சிந்தனையாக இருந்தது.

"உன் தம்பிக்கு நீதான் செல் போன் வாங்கித் தந்தாயா?''

இந்தக் கேள்விக்கு "எப்படித் தெரியும் என்பதா?, ஆமாம் என்பதா' என்பதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது முருகனுக்கு. அந்த முகக் குறிப்பு மனித வள அதிகாரிக்கும் புரிந்தது.

"சரி. என்ன விலை'' அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.

அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை என்று கருதுபவன்தான் முருகன். ஆனால் அதிகாரிகளுக்கு இப்படியெல்லாம் கேட்பதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று தத்தளித்தான். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்பதற்கு அவனுக்கு நா எழவில்லை. அதனால் அதிகாரி கோபமடைந்துவிடக்கூடும் என்பது அவன் யூகம்.

அந்த யூகத்தினூடே அதிகாரிக்குக் கட்டுப்படவில்லையாயின் அது நம் வேலையைப் பாதிக்குமா என்பதையும் யோசித்தபடியே விலையைச் சொன்னான்.

"உன் சம்பளத்துக்கு இந்த விலை கட்டுபடியாகுமா? வீட்டில் வேறு யார் சம்பாதிக்கிறார்கள்?''

"நானும் இந்த மாதத்திலிருந்து தம்பியும்''

"அப்படியானால் போன மாதம் வரை நீ மட்டும்தான்'' }இப்படித் தெளிவாகக் கேட்பதின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமும் அதைத்தானே சொன்னோம், நாம் சொன்னதை அவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி ஏன் திரும்பச் சொல்கிறார்கள் என்பதும் முருகனுக்குப் புரியவில்லை.

"பைக் வாங்கியிருக்கிறாயா?''

"மாதத் தவணை... அம்மா வளையலை வைத்து... தம்பிதான்... '' அதிகாரி அனைத்தையும் குறித்துக் கொள்வதைப் பார்த்து ஓர் அசட்டு தைரியத்தில் "எதுக்கய்யா கேட்கிறீங்க?'' என்றான் மெதுவாக. அது அதிகாரியின் காதில் விழாமல் இருந்தால் நல்லது போல இருந்தது அந்தக் குரலின் வலிமை. அதிகாரியும் அவன் கேட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது முருகனுக்கு. ஏசி அறை அதிக குளிர்ச்சியுடன் இருந்தது. அதிகாரியிடம் அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்டுவிட்டது சரியா, தவறா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மணிக்கு மேல் பொது மேலாளரைப் பார்க்கும்படி கூறிவிட்டு வெளியே செல்லச் சொன்னார். பொதுமேலாளரைப் பார்க்கும்வரை வேலை செய்யலாமா கூடாதா என்று யாரும் கட்டளையிடவில்லை. என்ன நடக்கிறது, எல்லா பணியாளரையும் இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாரிப்பது வழக்கம் என்று பதில் சொல்வார்களா? நம் வேலையில் ஏதாவது குற்றம் கண்டார்களா? ... அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் தம்மால் யோசிக்க முடியாது என்பது தெரிந்திருந்தாலும் நாம் நினைப்பதில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கும் போல தோன்றியது அவனுக்கு. சாப்பாட்டுக்கூடையில் கொட்டிய நிலையிலேயே இருந்த சாப்பாட்டைப் பக்குவமாக வெளியே எடுத்து சாப்பிட்டான். டிபன் பாக்ûஸக் கழுவி பைக்குள் திணித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால், இன்னும் இரண்டு மணி ஆவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டிருக்க வேண்டாமோ?.. ஆனால் அதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது என்பது தெரியாமல்தான் பசியே எடுக்காத நிலையிலும் அவன் சாப்பிட்டான். காத்திருக்கும் நேரம் விரைவாகவும் கடிகார ஓட்டம் மெதுவாகவும் இருந்தது. ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தான். சாலை மரங்களின் இடைவெளியில் வெயில் இருந்தது. ஆள் நட மாட்டம் இல்லை. திரும்பி பணியாளர் ஓய்வறையில் சென்று அமர்ந்தான். பல மணி நேரங்களுக்குப் பிறகே இரண்டு மணி நேரம் கடந்தது.

இப்போது பொது மேலாளரின் கேள்வி நேரம்.

முதல் இரண்டு பேர் கேட்ட கடுகடுப்பும் இல்லாத தொனியில் ஆனால் கூர்மையான பார்வையோடு அவர் கேட்டார். அவருடைய கேள்வி மிக இயல்பான விசாரிப்பாக இருந்தது. அவருக்குத் தமிழும் தெரிகிறதே என்ற ஆச்ச்ர்யம் முருகனுக்கு. அவர் அறையில் இருந்து யாருடனாவது பேசியபடியே வெளியே வரும்போதும், யாருடனோ லிப்ட்டுக்காகக் காத்திருக்கும்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதைப் பார்த்திருக்கிறான். சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது மேனேஜருக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரிவதை பழனியிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான். பழனியைக் காலையிலிருந்தே பார்க்க முடியவில்லை. காலையில் இருந்தே யாரையும் பார்க்க முடியவில்லை. யாரையும் பார்க்காமல் இப்படி அரை நாளை எப்படிக் கழிக்க முடிந்தது? ஏன் யாரும் தம்மைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை?

"திடீர் என்று உங்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது?'' மேலாளரின் கேள்வி வெளியே அலைந்து கொண்டிருந்த முருகனை இறுக்கிப் பிடித்தது.

இரண்டு நாளுக்கு முன் சம்பளம் வாங்கியதால்.. என்ற பதில் மேலாளருக்கு முருகனின் தெனாவட்டு போல இருந்திருக்க வேண்டும். ஏறிட்டுப் பார்த்துவிட்டு குனிந்தார்.

"ஏன் அடிக்கடி ஜன்னல் பக்கம் போனாய் என்ற காரணத்தை மட்டும் உண்மையாக ஒப்புக் கொண்டால் உன்னை விட்டுவிடுவோம்'' என்றார்.

முருகன் உறைந்த நிலையில் இருந்தான். "விட்டுவிடுவதென்றால் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?'

"எதற்கு?'' என்ற வார்த்தை அவனுடைய பயம் காரணமாக உரக்க வெளியானது.

தன் மேஜை அறையில் இருந்து ஒரு கசங்கிய தாளை வெளியே எடுத்தார். அதை மேஜை மீது வைத்து நீவிவிட்டுக் கொண்டே முருகனின் முகத்தைப் பார்த்தார். அந்தக் கசங்கிய தாள் அவருடைய அறையின் மதிப்பைக் குறைத்து விட்டதாகத் தோன்றியது. மேலாளரின் கோட்டுக்கும் தங்க பிரேம் போட்ட கண்ணாடிக்கும் பளபளக்கும் கிரானைட் மேஜை மேற்பரப்புக்கும் அது பொருத்தமில்லாமல் இருந்தது. அந்தக் காகிதத்தை அவன் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருடைய பார்வையில் தெரிந்த காரணத்தால் சுய காரணம் இல்லாமல் பார்த்தான்.

இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்ட வினாடியில் "இது என்ன தெரிகிறதா?'' என்றார்.

அவன் அப்போதும் உண்மையைச் சொன்னான். "தெரியவில்லை''

"இதைக் காலையில் நீ தெருவில் எறிந்திருக்கிறாய்''

"ஓ.. அதுவா சார்..?''

"நீதானே எறிந்தாய்?''

"எப்பவுமே பச்சைக் குப்பைக் கூடையில்தான் போடுவேன். இது வந்து ஒரு பையனை...''

"எத்தனை முறை இப்படி எறிந்தாய்?''

"இரண்டு.. மூன்று தடவை... ''

"உண்மையைச் சொல்.. எத்தனை வருடமாக இது நடக்கிறது?''

மேலாளரின் குரல் மாறிவிட்டது. "போலீஸோடு போய் காலையில் உங்கள் வீட்டில் தேடிப் பார்த்தோம்... வேறு எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்?''

"என்ன சார் சொல்றீங்க?'' ரொம்ப தாமதமாக இந்தக் கேள்வியைக் கேட்டான்.

மேலாளர் பதில் சொல்லவில்லை. காலால் ஏதோ பட்டனை அழுத்தினார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். எப்படி சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது.

முருகனை ஏற இறங்க பார்த்துவிட்டு அமர்ந்தனர்.

"இவன்தானா?'' போலீஸ் அதிகாரி தீர்மானமாகக் கேட்டார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் விளக்க ஆரம்பித்தார். முருகனுக்கு ஆங்கிலம் புரியாது. அதிலும் மேலாளரின் ஆங்கிலம் மிகுந்த வேகம் கொண்டது. பின் தொடர முடியாதது. ஓரிரு வார்த்தையாவது புரியுமா என்று கவனித்தான். தன்னைப் பற்றி தவறாக எதையோ புரிந்து கொண்டு அதை உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.

இந்த நாள் தன் வழக்கமான நாளாக இல்லாமல் போனதற்காக முருகன் வருந்திக் கொண்டிருந்த வேளையில் மேலாளர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான்... "எங்களின் எல்லா அறையும் கண்காணிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் நாங்கள் உடன்படிக்கைப் போட்டிருக்கும் ஜெர்மன் நிறுவனத்துக்கும் அந்த பதிவுகளை அனுப்புகிறோம். அப்படி ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. அவர்கள்தான் இவனின் நடவடிக்கையை எங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சில டெண்டர்கள் எங்களுடைய போட்டியாளர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இவனுடைய சில ஆயிரம் ரூபாய் பேராசைக்காக நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். எப்படி விசாரிப்பீர்களோ, ஆனால் எவ்வளவு ஆவணங்கள் கடத்தப்பட்டுள்ளன, யார் யாருக்கெல்லாம் போயிருக்கிறது என்பது தெரியவேண்டும். இப்போது இவனை விசாரிப்புக்குக் கூட்டிச் செல்லலாம்''

போலீஸ் அதிகாரிகள் விடைபெறும்போது முருகனை நோக்கி "சரி, வா'' என்றனர்.

மேலாளரின் மேஜை கடிகாரத்தைப் பார்த்தான் சரியாக நான்கு முப்பத்திரண்டு.




நன்றி வார்த்தை மே மாத இதழ்

செவ்வாய், ஜூன் 02, 2009

காந்த முள் -1 புதிய தொடர்



சொல்லுங்க சிவகாமி எப்படி இருக்கீங்க?


யாரோ ஒரு பெண்மணி முன் பின் பழகி இருக்காத ஒரு ஆணிடம் "உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்று சொல்வது விபரீதமாகத் தோன்றலாம். நடக்கவே நடக்காத கற்பனை என்று சொல்கிற அப்பாவிகளும் இருப்பார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் அது ஏதோ காதல் விவகாரமாக இருக்கும் என்று நினைப்போம்.



அது காதல் அல்லது காமம் சம்பந்தப்பட்டது இல்லை என்றால் வேறு எப்படி சாத்தியம்?

டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராக இருந்தால் இது சாத்தியம் என்பது புரிந்திருக்கும்.

தொலைக்காட்சியில் சில சினிமாப் பாடல்களையோ காமெடி நிகழ்ச்சிகளையோ விரும்பிக் கேட்க நினைக்கும் பெண்கள், டி.வி. அறிவிப்பாளராகத் தோன்றும் ஆண்களிடம் இப்படி வெளிப்படையாகத் தெரிவிப்பது கலாசாரமாக மாறிவருகிறது.

பாடல் ஒளிபரப்பும் சானல் ஒன்றில் காலையில் நிகழ்ந்த உரையாடல் இது.
"ரொம்ப நாளா உங்கக் கிட்ட பேசணும்னு ட்ரை பண்ணேங்க.. இன்னைக்குத்தான் லைன் கிடைச்சது''
"கிடைச்சுடுச்சில்ல.. உங்க பேரைச் சொல்லுங்க''

"எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஹீ..ஹி''

"உங்க பேரைச் சொல்லுங்க''

"சிவகாமி''

"சொல்லுங்க சிவகாமி, எப்படி இருக்கீங்க?''

"நீங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஹி..ஹி..ஹிக். என் தங்கச்சி பேசணுமாம்.''

"கொடுங்க''

"என் பேர் பானுமதி''

"எங்க இருந்து பேசறீங்க, பானுமதி?''

"வீட்ல இருந்து''

"கடிக்காதீங்க பானுமதி.. எந்த ஊர்ல இருந்து பேசறீங்க?''

"அரக்கோணம்''

"அரக்கோணத்தில விவசாயம்லாம் எப்படி நடக்குது. மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?''

மறுமுனையில் தங்களை விவசாயிகள் என்று நினைத்துவிட்டதில் ஏற்பட்ட பதற்றம்.

"ஐய்யய்யோ நாங்க விவசாயம் பண்ணலை... சர்பத் கடை வெச்சிருக்கோம்''

டி.வி. வர்ணனையாளருக்குத் தாம் செய்த தவறு புரிந்து "ஐ ஆம் சாரி'' எனத் துடிக்கிறார்.

"எங்களுக்கு என்ன பேசறதுன்னே தெரியலை''

"வீட்ல என்ன சமையல்?''

"கிச்சன்..''

"ஓ.. சிக்கனா?''

"இல்ல கிச்சன்''

"சரி அ,தை விடுங்க.. உங்களுக்கு என்ன பிடிக்கும்.. பொழுது போக்கு என்ன?''

"என்ன பேசறதுன்னே தெரியலை.. உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசை''

"உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க?''

"எனக்கு மியுசிக் பிடிக்கும். எங்க அக்காவுக்கு செக்ஸ் ஆடுறது பிடிக்கும்.''
டய்யங்.. டய்யங்.

டி.வி.நிலையத்தில் விபரீதம் புரிந்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள்.

தொலைபேசியில் பேசிய சகோதரிக்கு செஸ் விளையாட்டு பிடிக்கும் என்பது நமக்குப் புரிகிறது. உச்சரிப்பில் நேர்ந்த பிழை.

இந்த மேற்படி உரையாடலைத் தொடர்ந்து ஒரு காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து வேறு ஒரு சிவகாமி (பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளது.) பேசினார்.

மேற்படி பேச்சு உலகமெலாம் பரவும் வகை செய்யப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சு பேசிய அந்த மூவருக்கும் ஏதேனும் பயனளித்திருக்குமா? வர்ணனையாளருக்கு சம்பளம் தருகிறார்கள்.

அதற்காக அவர் பேசுகிறார். மறுமுனையில் பல மாதமாகப் போராடி தம் சொந்தச் செலவில் போன் செய்து என்ன பேசுவதென்றே தெரியாமல் தவித்த சகோதரிகளுக்கு? அது ஒரு உளவியல் திருப்திதான். அவர்கள் மூளைக்குள் நிகழ்ந்த பெருமகிழ்ச்சி விளைவைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினம்தான். உலகமெலாம் இந்த உரையாடலைக் கேட்டார்களே அவர்கள் அடைந்த பயன்? போனில் பேசிய சகோதரிகளின் உளவியலைப் புரிந்து கொண்டபின் அணுக வேண்டிய அடுத்த கட்டம் இது. ஏனென்றால் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற பலர் அடுத்து தம் சமையல் அறை விஷயத்தையும் படுக்கை அறை விஷயத்தையும் (கணவன் மனைவிக்கான நிகழ்ச்சி
தனி) பகிர்ந்து கொள்வதற்காகப் போன் செய்து லைன் கிடைக்காதவர்கள். அல்லது பார்வையாளராக மட்டும் இருந்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள். நிகழ்ச்சியால் யாருக்கு லாபம் என்று யோசிப்பதோ, கேட்பதோ பலருக்குப் பிடிக்கவும் இல்லை. ஏனென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போகிற போக்கில் சானலுக்குப் போன் செய்து பேசினால் வீடு தேடி வந்து உருட்டுக்கட்டையால் அடிப்போம் (வடிவேலுவோ, செந்திலோ அடிவாங்குவதைத்தானே மக்கள் காமெடி என்ற பெயரில் பார்த்து ரசிக்கிறார்கள்?)

என்று ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாகலாம். இன்ட்ராக்டீவ் காமெடி நிகழ்ச்சியாக இருக்கும்.

ஒரு சலிப்பில்தான் இப்படி நான் சொல்கிறேன். ஆனால் அது உண்மையாகிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பழைய முத்தாரம் இதழில் முரசொலி மாறனிடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்.

‘எம்ஜிஆருக்கு நாடாள வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து?'

இது வாசகர் கேட்ட கேள்வி.

முரசொலி மாறன் சலிப்புடன் பதில் சொல்லியிருந்தார்..

‘இப்படியே போனால் ஜெயலலிதாவும்கூட அரசியலுக்கு வந்து நாடாள நினைப்பாரோ என்னவோ?'

சலிப்பின் காரணமாக நாம் தரும் யோசனை எப்படிப் பலிக்கிறது பாருங்கள்?

புதிய தொடர் உயிரோசை.காம் -இல் வெளியாகிறது

LinkWithin

Blog Widget by LinkWithin