வியாழன், அக்டோபர் 03, 2013

இந்திய சினிமாவுக்கு வயது 100 தமிழ் சினிமாவுக்கு வயது 97



தாதா சாகேப் பால்கே மராட்டியத்தில் சினிமா எடுக்கத் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் சென்னையில் தமிழ் சினிமாவுக்கான அச்சாரம் போடப்பட்டது.
சென்னையில் முதல் படப்பிடிப்பை நடத்தியவர் நடராஜ முதலியார். சென்னை வேப்பேரியில் ஸ்டூடியோ. கீசக வதம் என்பது படத்தின் பெயர். மகாபாரதத்தில் கிளைக்கதை அது. 1916&ல் படம் தயாரிக்கப்பட்டது. அது ஒரு மௌனப்படம்.படத்தின் கதாபாத்திரங்கள் வாயசைக்கும் அதில் இருந்து ஒரு குரலும் வராது. ஊமைப்படம் என்பார்கள் கொச்சையாக.
பாஷையற்ற படம் என்றாலும் ஒரு தமிழர், தமிழ் நாட்டில் எடுத்த படம் என்பதால் தமிழ்ப்படம் என்றே அதைச் சொல்ல வேண்டும். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மூன்பு பாபா சாகேப் பால்கே மராட்டியத்தில் இதே போன்ற பாஷைகளற்ற படங்களை 1913 முதல் தயாரிக்க ஆரம்பித்தார். அந்த நினைவைப் போற்றித்தான் இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாக தமிழகத்தில்தான் இந்தியாவின் இரண்டாவது படம் தயாரிக்கப்பட்டது.
பொதுவாக தமிழில் வசனங்கள் உச்சரிக்கப்பட்ட படத்தையே முதல் தமிழ்ப்படம் என்று சொல்லி வருகிறோம். அந்த வகையில் 1931&ம் ஆண்டு வெளியான காளிதாஸ் படத்தை முதல் தமிழ்ப் படம் என்றோம். ஆனால் அதற்கு முன்னதாக மௌனப் படத்துக்கும் பேசும் படத்துக்கும் இடையில் 26 தமிழர்கள் சினிமா தயாரித்தார்கள். சுமார் 30 படங்கள் தயாரிக்கப்பட்டன. கீசகவதம் படத்தில் கிருஷ்ணன் அரக்கனை வதம் செய்யும்போது ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றன. இன்றைய சினிமாவில் வெளிப்படும் ரத்தத்தில் லட்சத்தில் ஒரு பங்குகூட அதில் இருந்திருக்காது என்றாலும் அன்று அப்படத்தின் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்துக்கு அந்த ரத்தக்காட்சிதான் காரணம் என்று ஸ்டூடியோவையே மூடியது தனிக்கதை.இன்றும் இருக்கும் சினிமா சென்டிமென்டுகளுக்கு பிள்ளையார் சுழி அதுதான்.
அது ஒரு காலகட்டம். மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் ஒருவர் திரையின் முன் நின்றுகொண்டு படத்தின் கதையையோ, கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையோ நாடக பாணியில் சொல்லிக்கொண்டு இருப்பார்.
திரையரங்கங்கள் இல்லை. ஆங்காங்கே கொட்டகைகள் ஏற்படுத்தப்பட்டு மின்விசிறிகளோ, காற்று வசதியோ இல்லாமல் படம் திரையிடப்படும். படம் தெளிவாக தெரிவதற்காக வெளிச்சம் வராமல் இருப்பதற்காக எல்லா வெளிச்ச வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிடும். இப்போது போல படத்தைத் திரையில் காட்ட கார்பன் ஆர்க் எலக்ரோடுகளோ, படு சமீபத்தில் வந்த ஷார்ட் ஆர்க் ஷீனான் எலக்ட்ரானிக் ஒளிஉமிழ் சாதனங்களோ அன்று இல்லை. அன்று பயன்படுத்திய எலக்ரோடுகள் அதிக புகைகக்குபவையாகவும் மனிதன் சுவாசிக்கக் கூடாததாகவும் இருந்தது. படம் பார்க்கும் பலர் மயக்கமடைவார்கள். வாந்தி எடுப்பார்கள். ஆனால் தொடர்ந்து படம் பார்ப்பதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். மனிதன் கண்டுபிடித்த ஆகச் சிறந்த கலைவடிவமாக சினிமா மாறியது. இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம் அனைத்தையும் ஒருங்கிணைத்த கலை வடிவமாக சினிமா இருந்ததால் உயிரைக் கொடுத்தாவது அதை ரசிக்க தயாரானான். இன்றும் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளும் ரஜினி ரசிகர்களையோ, தலைவா படம் ரிலீஸ் ஆகாத துக்கத்தில் தூக்குப் போட்டுக்கொள்ளும் விஜய் ரசிகர்களையோ நாம் பார்க்கிறோம்.
அதற்கான ஆரம்ப ஆதாரங்களை நாம் ஊமைப் படக் காலத்திலேயே பார்க்க முடிகிறது.
ஆன் லைனில் புக்கிங் முடித்துவிட்டு ஐனாக்ஸின் சில் ஏஸியில் பெப்ஸி உறிஞ்சியபடி திரி டி படம் பார்க்கும் இன்றைய இளைஞனுக்கு அன்றைய முதல் சினிமாக்களில் இருந்த வலிகள் தெரிய வேண்டியதில்லை. தெரிந்தால் தாங்க மாட்டான்.. அல்லது நம்ப மாட்டான்.
இருந்தாலும் அடுத்த மூன்றாண்டுகளில் நாமும் கொண்டாடுவோம் தமிழ் சினிமா நூற்றாண்டு. 

LinkWithin

Blog Widget by LinkWithin