புதன், நவம்பர் 04, 2009

நாளைய தீர்ப்புக்குப் பிறகு இன்றைய தீர்ப்பு!

ஒரு முகம் தமிழர்களின் ரசனைக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படுவது சிக்கலான உளவியல் முடிச்சுகள் கொண்டது.
விஜய் முகம் ரசிகப்பட்டாளத்தால் தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு முன்னால் இதற்கு முன்னால் மக்களின் மனத்தில் குடியிருந்த வேறு முகங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும். பி.யூ. சின்னப்பா பாட்டால் எட்டமுடியாத உச்சத்தைத் தன் ஸ்டண்ட் நடிப்பால் தாக்குப்பிடித்தார்.
தியாகராஜ பாகவதர் பயணம் செய்த ரயிலை நிறுத்தி தரிசித்த மக்கள், மூன்று தீபாவளிகளைக் கடந்து அவருடைய தேவகானத்தில் மயங்கித் திளைத்தனர். இன்னமும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது அது. பாகவதரின் அழகான முகமும் பாடும் திறமையும் குறிப்பிட்ட சதவீதத்தில் இணைந்து தமிழர்களின் மனங்களை வசப்படுத்தி வைத்திருந்தது. பாடும் திறமையற்றவரை நடிகராகக் கருத முடியாத காலம், எம்.ஜி.ஆர். சிவாஜி வருகைக்குப் பிறகு மறைந்தது.
எம்.ஜி.ஆரின் சிவந்த கட்டுடல் தோற்றத்துக்கு மயங்கினர். நடிகர்கள் சிவப்பாக மழுமழு முகத் தோற்றத்தோடு சுருள் முடியோடு இருப்பது நடிகராவதற்கான முதல்தகுதியாக இருந்தது. சிவாஜி கணேசன் வசனம் நன்றாகப் பேசுவதைச் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். வாள் சண்டை, கம்புச் சண்டை, மான் கொம்புச் சண்டை என்று எம்.ஜி.ஆர். தன் ஸ்டண்ட் திறமைகளை எடுத்து வீசிக் கொண்டிருந்த போது "கணேசன்' தாய் தந்தையரைச் சுற்றி வந்து பழத்தைத் தானே பெற்றுக் கொண்ட புத்திசாலித்தனமும் நடந்தது. சிவப்பாகவும் சண்டைபோடும் திறமையும் கொள்கைப் பாடல்களும் ஒரு பக்கம் என்றால் மாநிறக் கலைஞன் தன் மிடுக்கான வசன உச்சரிப்பினாலும் தத்துவப் பாடல்களால் ஈடுகட்ட முடிந்தது.
கமல்}ரஜினி காலகட்டம்..
சிவந்த, நாட்டியத்திறமை கொண்ட, திரைக்கதை வசனம் கவிதை எழுதி இயக்கிப் பாடி நடித்து படம் தயாரிக்கும் திறமை கொண்ட கட்டுடம்பு கமல் ஒரு பக்கம். கறுத்த, சிறிய கண்கள் கொண்ட, தமிழ் உச்சரிப்பு துல்லியமில்லாத ரஜினி இன்னொரு பக்கம்.
இவர்கள் தங்கள் ஐம்பதாம் வயதை நெருங்கிய தருணத்தில் அடுத்த முகத்துக்கான அவசியம் ஏற்பட்டபோது விஜய்க்காக ஒரு கர்ச்சீப்பை போட்டவர் எஸ்.ஏ.சி.
எஸ்.ஏ.சி. நாளைய தீர்ப்பு என்றார். சலனம் எதுவும் இல்லை. தேவா, விஷ்ணு போன்ற அவருடைய படங்களில் விஜய் நடிகையரின் பாதுகாப்போடு நடித்ததாக குற்றச்சாட்டுகள் உண்டு. அவருடன் நடித்த சங்கவி, சுவாதி, யுவராணி போன்றவர்களின் கிளுகிளுப்புக்கு நடுவே அவர் துறுதுறுப்பாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தை ஏற்க தமிழ் ரசிகர்கள் தயங்கிக் கொண்டிருந்தனர். ஒரு முகம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக மாறுவதற்கு அதைத் தொடர்ந்து பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்தக் கடமையைத் தந்தையாகிய எஸ்.ஏ.சி. மிகச் சிறப்பாகச் செய்தார். விஜய்காந்தின் தம்பியாக நடிக்க வைத்தும் அதைப் பழக்க அவர் முயற்சி எடுத்தார். அவருடைய ஒவ்வொரு அடியும் பைல் பவுண்டேஷன் அடி போல இறங்கியது. ஒரு முகம் கமல், ரஜினிக்கு மாற்றாக.. அல்லது அதன் தொடர்ச்சியாகப் பழக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் அவருடைய முகம் கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்த முகத்தோடு ஒருவர் எப்படி நடிக்க வரலாம் என்பது அந்தக் கேள்வியில் இருந்த ஆவேசம்...
ஆனால் அதன் பிறகுதான் விஜய்யின் முகம் தமிழர்களுக்குப் பரிச்சயப்பட்டது. அதற்கு ஆதாரம் அவர் எதற்காக நடிக்க வந்தார் என்ற பத்திரிகைதான். அவர்கள்தான் விஜய் வாழ்க்கைத் தொடர் வெளியிட்டார்கள். அதே தொடரை இன்னொரு முறை இன்னொரு வார இதழில் வெளியிட வேண்டியிருந்தது. ஒரு நடிகரின் வாழ்க்கைத் தொடர் அடுத்ததடுத்த ஆண்டுகளில் இரண்டு முறை வெளியிடப்பட்டது உலக சினிமா நடிகர் வரலாற்றிலேயே விஜய் வாழ்க்கை ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
அவர் வாழ்க்கைத் தொடர் வெளியானால் பத்திரிகை சர்குலேஷன் ஏறும் என்பதும் அவருடைய அட்டைப் படம் வெளியானால் அந்த வாரம் ரிடர்ன் இருக்காது என்பதும் பத்திரிகையில் உலகில் உறுதி செய்யப்பட்டது. அவர் நடித்த படங்கள் என்றால் நம்பி வாங்கலாம் என்பது திரையுலகில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒரே நேரத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் சென்னையில் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது.
வசந்த் இயக்கத்தில் நடித்த நேருக்கு நேர் படமும் பாசில் இயக்கத்தில் நடித்த கண்ணுக்குள் நிலவு படமும் அவர் அடக்கி வாசித்தபடங்கள். ஆனால் இந்த இரண்டிலும் அவருக்கு வசூல் அமையவில்லை. இந்த அளவோடு அவருடைய பரீட்சார்த்தங்களை நிறுத்திக் கொண்டார்.
சூப்பர் குட் பிலிம்ஸின் மூன்று படங்களில் அவர் தொடர்ந்து நடித்தார். அது அவர் நடித்த பட்ஜெட் படங்களாக இருந்தும் வசூல் சாதனையான படங்களாக அமைந்தன. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் நடிகர் என்ற இந்த அந்தஸ்த்தை ஏற்படுத்தியது. இது அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம்.
ரஜினி போல குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஏற்றுக் கொள்ளும் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் போன்ற கதாபாத்திரங்களை ஏற்கலாமா? அல்லது சொந்தப் பணத்தைப் போட்டு குருதிப் புனல், ஹேராம் என்று பரீட்சித்துப் பார்க்கலாமா என்று முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம்.
ஒரு நடிகரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றவுடன் உருவாகும் தலைவலி இது.
சிவாஜியா? எம்.ஜி.ஆரா?
கமல்ஹாசனா? ரஜினியா?
எதாவது ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இங்கு நடிகர்கள் இரண்டுவதமாக இருப்பதுபோல ரசிகர்களும் இரண்டுவிதமானவர்களாக இருக்கிறார்கள்.
இந்தத் தீவிர இரண்டு போக்குகளுக்கு நடுவே பிரயாணிக்க விரும்புகிறவர்கள் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெயசங்கர் போல பதட்டமில்லாத ஒரு பாதையைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். விஜய் போன்ற துடிப்பு மிக்க இளைஞர் குணச்சித்தித்திரமான அத்தகைய பாதையை தேர்ந்தெடுக்க விரும்ப வேண்டியதில்லை. அவருடைய தந்தையும் அதற்கு உடன்பட மாட்டார்.
விஜய் ஒரு முடிவுக்கு வந்தார். அவர் ரஜினியைப் போல கல்யாண மண்டபம் கட்டினார். அதுவும் அடுத்தடுத்து இரண்டு கல்யாண மண்டபங்கள்.
ரஜினியைப் போலவே எந்த ஆபத்துக்கும் நிலை குலையாத அலட்சியப் போக்கு அவருக்குத் தேவைப்பட்டது. விஜய்யின் கோயமுத்தூர் அண்ணா வழக்குத் தமிழில் அந்தத் தொனி சுலபமாகக் கிடைத்தது. ரஜினி பாணியின் இன்னொரு ஆபத்துக்கும் அவர் அடிபணிய வேண்டியதாகிவிட்டது. அவர் எல்லாரையும் சுலபமாக அடித்து வீழ்த்துபவராகவும் எல்லா அநீதிகளையும் சடுதியில் தரைமட்டமாகிறவராகவும் மாறினார். வீராவேசமான வசனங்களை அவர் பேச வேண்டியதாக இருந்தது. நான் ஒரு தடவை சொல்லிட்டா அப்புறம் என்னாலேயே என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாது என்ற வசனம் அவருக்குத் தேவைப்பட்டது. அவருக்காக ஜனாதிபதி ஸ்டாம்ப் வெளியிடுவதாகக் காட்ட வேண்டியிருந்தது. ரஜினிக்குத் தன் 140}வது படத்தில் ஏற்பட்ட நெருக்கடி, விஜய்க்கு தன் 40}வது படத்திலேயே ஏற்பட்டுவிட்டது.
தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களைத் தமிழ்ப்படுத்திப் பார்ப்பதில் ஈடுபட்டார். பத்ரி, ஆதி போன்றவை விஜய்க்கு மொழி வாரி ரசனை வேறுபாட்டைப் பற்றி பாடம் நடத்தின.
தமிழிலேயே அழுத்தம் திருத்தமாக வணிக ரீதியில் கதை பண்ண முடியாதா என்ன?
திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களின் வெற்றி அதே போல கமர்ஷியல் அம்சங்கள் இருந்த போக்கிரி, குருவி போன்ற படங்களின் ரிசல்ட்டை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. என்னடா இது இப்படி ஏறினால் அப்படி சறுக்குகிறது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ரஜினி பார்மூலாவில் ரஜினி நடிப்பதே சிரமமாக இருக்கும் வேளையில் இவரும் அந்த பாணியில் தொடர முடியுமா என்பது சோதனைதான்.
இனி அவர் கமல் போலவும் அவ்வப்போது முயற்சி செய்து பார்க்கலாம்!

LinkWithin

Blog Widget by LinkWithin