வெள்ளி, மார்ச் 04, 2011

சுஜாதாவின் சிருஷ்டி-2

எதிர்பார்த்தது மாதிரியே ஏகப்பட்ட குறிப்புகளும் பழைய சிற்றிதழ் கட்டுகளுமாக வந்தான் வசந்த்.
"கன்னிமராவுல சுட்டியா?''
"ஒரு ஏழை எழுத்தாளர் கிட்ட அப்படியே கிரயம் பேசிட்டேன். போறவன் வர்றவன் எல்லாம் திட்டியிருக்காங்க பாஸ்... திட்டினவன் எல்லாம் என்ன ஆனானுங்கன்னே தெரியல. மகளிர் அமைப்பு, மத அமைப்பு, சாதி அமைப்பு, சிற்றிதழ் எழுத்தாளர்கள், பெரிய இதழ் எழுத்தாளர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள்.. ஒருத்தர் பாக்கியில்லை. எப்படித்தான் மனுஷன் இவ்வளவையும் தாங்கிக்கிட்டாரோ தெரியவில்லை... அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேயில்லை என்று தெரிகிறது. நான் அவர் சார்பாக வாதாடுகிறேன். நீங்கள் அவருக்கு எதிராக வாதாடினால் நன்றாக இருக்கும்.''
கணேஷ் சற்றே சீரியஸôக "உம்ம்!'' என்றான்.
வசந்த் தோளை குலுக்கிக் கொண்டு தயார் என்பதுபோல சிறிய பாக்கெட் நோட்டை எடுத்து வைத்துக் கொண்டான்.
"முதல் விஷயம் இவர் எழுத்தில் அழுத்தமில்லை.. எல்லாம் நுனிப்புல் மேய்ந்தவை...''
கணேஷ், மானுக்கருகில் வந்து பாய்வதற்கு ஆயத்தமாகியிருக்கும் சிறுத்தையென பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்படி பார்க்காதீங்க பாஸ்... என் முதல் கேள்விக்கு பதில்...?''
"உன்னுடைய முதல் கேள்வியில் ஏராளமான துணைக்கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது... முதலில் எழுத்து என்றால் என்ன? இரண்டாவது அழுத்தம் என்றால் என்ன? மூன்றாவது நுனிப்புல் என்பது எத்தனை செ.மீ.வரை?''
வசந்த் ஒரு மைக்ரோ செகண்ட் பிரயத்தனத்திலேயே எதற்கு வம்பு என்ற முடிவுக்கு வந்து "நீங்களே சொல்லிவிடுங்கள் பாஸ்'' என்றான்.
"முதலில் எழுத்தை எடுத்துக் கொள்வோம்'' வாணலியை எடுத்துக் கொள்வோம் மாதிரி ஆரம்பித்தான். "உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பிடித்த எழுத்தை ஆண்டவனால்கூட உருவாக்க முடியாது. எங்களுடைய கடவுள் சொன்னதுதான் சரி என்பதை நிலை நாட்டுவதற்காக துப்பாக்கியும் வெடி குண்டும் உருட்டுக்கட்டையும் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதிலிருந்தே இது நிரூபணம் ஆகிவிட்டது. ஒரு குழுவுக்கு ஆண்டவன் சொன்னது இன்னொரு குழுவால் புறம் தள்ளப்படுகிறது. அடுத்து மனிதனுக்கு வருவோம். ஷேக்ஸ்பியர் எழுதியதெல்லாம் குப்பை என்று சொல்வதற்கெல்லாம் கழகங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். டால்ஸ்டாய் எழுதி அவருக்கே மிகவும் பிடித்த புத்துயிர்ப்பு நாவல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கம்பரை எதிர்த்துக் கலவரமே வெடித்தது. கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என்றார்கள். ஆக, எல்லோருக்குமான எழுத்து என்று உலகில் ஒன்று இல்லை.''
அடுத்த கேள்வியைக் கேட்கும் அவசரத்தில் பாக்கெட் நோட்டை நோட்டம்விட்ட வசந்தை அடக்கி, "இன்னும் உன் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிக்கவில்லை'' என ஞாபகப்படுத்தினான்.
"நாம் எழுதியது நல்ல எழுத்தா என்பதை அதை எழுதிய ஆசிரியரே தீர்மானிக்க முடியாது என்பது நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை ஏற்கெனவே சொல்லிவிட்டேன்''
வசந்து முந்திக் கொண்டு "டால்ஸ்டாய்... புத்துயிர்ப்பு''


"ரைட்.. சொந்த எழுத்தையே தீர்மானிக்க முடியாமல் போவது பக்கத்துவீட்டு எழுத்தாளனின் எழுத்துக்கும் பொருந்தும்... எழுத்தை எழுத்தாளர்களைவிட மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.. சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் என்ன விமர்சனம் எழுதினார் என்று தெரியுமில்லையா?''
"தெரியும். ஆயிரம் பக்க அபத்தம் என்றும் யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம் என்றும் இரண்டு அத்தியாயமாக கிழிகிழி என்று கிழித்தார்.. படிக்கும்போது எனக்கே கிழிகிற சத்தம் கேட்டது பாஸ்''
"ஜெயமோகன் எழுதியதையும் படித்தாயல்லாவா?''
"பின்னே?.. தமிழில் வெளியான முதல் வரலாற்று நாவல் என்றார்... விறுவிறுப்பான மொழியின் சிறப்பையும் பாராட்டியிருந்தார்.. இறுதிப் பகுதியை டால்ஸ்டாயின் இலக்கியத்துக்கு ஈடாக ஒப்பிட்டிருந்தார்''
"இவர் எத்தனை அத்தியாயம் எழுதியிருந்தார்?''
"நான்கு அத்தியாயம்..'' வசந்த் கூடவே விரல்களையும் காட்டினான்.

"குட்... இப்போது யார் எழுதியது சரி என்பது கோர்ட் விடுமுறைக்குப் பிறகு வாய்தாவுக்கு ஓட வேண்டிய நமக்குத் தேவையில்லாத வேலை... இரண்டு பக்கம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். "ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்ததும் நல்லவேளை நான் தப்பித்தேன். அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை' என்றார் சாருநிவேதிதா. வந்த வேகத்தில் மூன்று முறை படித்துவிட்டேன் என்றார் தமிழ்ச் செல்வன்... ஒருநூலை வாசிப்பதில் அரசியல், புவியியல், சமூக விஞ்ஞானம், அவரவர் ரசனை.. எல்லாம் இருக்கிறது. அடுத்தது அழுத்தம்.. எதையும் எளிமையாக ஜாலியாக சொன்னால் அது அழுத்தமானது இல்லை என்று நினைக்கிறார்கள்..''

"பாஸ் ஒன்று சொல்லவா? ப்ரியாவில் "இவன் செய்கிற ஒரே எக்ஸர்சைஸ் வாட்சுக்கு சாவி கொடுப்பதுதான்' என்று சொல்லியிருந்தார். இதையே.. அவன் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. தண்டால் எடுப்பதோ, ஜாக்கிங் போவதோகூட இல்லை. உடற்பயிற்சிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை.... இப்படியெல்லாம் விவரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... நான் சொல்வது சரியா பாஸ்?''
கணேஷ் எதற்கு வாயை விடுகிறாய் என்பதாக "உன்னிடம் வந்து சொன்னார்களா?'' என்றான். "இப்படி ஏதாவது உதாரணம் சொன்னால் நாம் மாட்டிக் கொள்வோம்.. எளிமையாக சொல்ல முடிவது வாசகனுக்கு நெருக்கமானது. அதை அவர் செய்தார். ஆறு லட்சம் பிரதி போய்க் கொண்டிருந்த குமுதத்தில் ஐந்து லட்சம் பேர் அவருடைய எழுத்தை இதழ் வந்ததும் படித்தார்கள். அதுவும் ஒரே நேரத்தில் அவர் ஆறு பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார், அலுவலகத்திலும் சின்சியராக வேலை பார்த்துக் கொண்டே. அது அவருடைய சாமர்த்தியம். அவருடை வாசகனை அவர் அப்படியொன்றும் ஏமாற்றிவிடவில்லை. ஜனரஞ்சக பத்திரிகை தாங்கும் அழுத்தத்துக்கு அதிகமாகவே அழுத்தியிருக்கிறார்...''
"எரிகா ஜங், எரிக் பிராம், சிக்மண்ட் பிராய்ட், ராபர்ட் பிராட் பரி, ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்று போகிற போக்கில் நிறைய அறிமுகங்களைத் தட்டிவிட்டுப் போவோர். அவர்களில் இருந்து ஒரு நறுக்கை மட்டும் எடுத்துப் போடுவார். மீதியைக் கண்டெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்புபோல.. அடுத்தது நுனிப்புல்லுக்கு வந்துடுங்க பாஸ்..''
கணேஷ் சிரித்தான். உதடுகள் அதை முடிப்பதற்குள் காலிங் பெல் சப்தம் கேட்டது. வசந்த் எழுந்து சென்று வாசலில் பார்த்தான். "ஓ... பிரியா... வாட் எ சர்பிரைஸ்... இப்பத்தான் உங்களைப் பத்தி பேசிக் கொண்டிருந்தோம்...'' வசந்த், நடிகை பிரியாவைப் பார்த்த பரவசத்தில் வழிவிட்டு வரவேற்பறைக்கு அழைத்தான்.
"நீங்க என்னைப் பற்றி என்ன பேசினீர்கள் என்று நான் சொல்லவா?''
"உங்கள் யூகம் சரியா என்று பார்க்கிறேன், சொல்லுங்கள்.."'
"லண்டனில் நான் ஓடிவந்து கணேஷிடம் "இங்கே யாரும் பிரா அணிவதில்லை' என்று சொன்னேனே அதைத்தானே?''
"அதற்கு கணேஷ், "தெரியும்' என்றார். நீங்கள் "நானும்தான்' என்றீர்கள். கணேஷ் உடனே "தெரிகிறது' என்றார்''
"சரியாக யூகித்தேன் பார்த்தீர்களா?'' என்றாள் பிரியா.
"நாங்கள் இதைப் பற்றிப் பேசவில்லை"
"பின்பு விலாவரியாக சொல்கிறீர்கள்..?'' அவளுடைய கேள்விக் குலுங்களில் இப்போதும் அணியவில்லை என்று தெரிந்தது.
"மறக்க முடியுங்களா?''
கணேஷ் உள்ளேயிருந்து "யாரது?'' என்றபடி வெளியே வந்தான்.
பிரியா பவ்யமாக எழுந்து "போனவாரம் சுஜாதா சிருஷ்டி படிச்சேன்... உடனே புறப்பட்டு வந்துட்டேன். நானும் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்றேனே?'' என்றாள்.
"ஆமாம் பாஸ். இருக்கட்டும்''- வசந்த் அனுமதி கேட்டானா, அறிவித்தானா என்பது தெரியவில்லை.
(அடுத்த வாரம்)

LinkWithin

Blog Widget by LinkWithin